நிர்மலா ராகவன்

மதிப்பெண்கள் மட்டும் போதுமா?

லாவண்யா வகுப்பில் எப்போதும் முதலாவதாக வருவாள். பேச்சுப்போட்டியில் அவளை யாராலும் வெல்ல முடியாது. `பள்ளிக்குப் பெருமை சேர்க்கிறாள்,’ என்று ஆசிரியைகளும், தலைமை ஆசிரியையும் அவளைக் கொண்டாடுவார்கள். பெற்றோரும் அப்படித்தான்.

விளைவு: அவள் செய்வதை யாராவது கண்டித்தால், கோபம் தலைக்கேறும். எவராக இருந்தாலும் – அது ஆசிரியையாகவே இருந்தாலும், மரியாதை இல்லாது பேசுவாள். அவர்களும் அடங்கிப்போவார்கள்.

எங்கு தவறு நேர்ந்தது?

ஓயாது புத்தகங்களைப் படித்து, அதன்வழி பல விஷயங்களையும் தெரிந்துகொண்டால் புத்திசாலித்தனம் வளரலாம். ஆனால், தனது சொந்த உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் நுண்ணறிவு வளரவில்லை லாவண்யாவுக்கு.

பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியே வந்தபின், பாடங்களில் வாங்கிய மதிப்பெண்களை மட்டும் வைத்துக்கொண்டு உலகைச் சமாளிக்க முடியுமா? பிறருடன் எப்படிப் பழகவேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டாமா?

எப்போதும் சிறுபிள்ளைத்தனமாக, தன் உணர்வுகளுக்கு மட்டுமே மதிப்பு கொடுத்து நடந்தால், சிறு விஷயங்களுக்குக்கூட ஆத்திரம் எழும்.

தலைவனாக வேண்டுமா? உணர்ச்சியைக் கட்டுப்படுத்து!

தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு இந்தத் தன்மை இல்லாவிட்டால் மதிப்பை இழக்க நேரிடும்.

கதை

`இவனுக்குத் தெரியாததே இல்லை!’ என்று பிறர் மெச்சும்படி இருந்தான் அக்கல்லூரி மாணவன். விரிவுரையாளர்கள் மட்டுமின்றி, ரங்கனுடன் பேசுவதே தமக்குப் பெருமை என்பதுபோல் சகமாணவிகளும் நடந்துகொண்டதில், அவனுக்குக் கர்வம் தலைக்கேறியது. அவனுக்குப் பயந்தோ, இல்லை மதித்தோ, எல்லாரும் விட்டுக்கொடுத்தே பழகிவிட்டதால், தான் நினைத்தது நடக்காவிட்டால் எளிதில் கோபம் எழ ஆரம்பித்தது.

கடினமான சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது என்று புரியாது எதிர்ப்பட்டவர்களின்மீது தன் இயலாமையைக் காட்டுவான். ஆத்திரமே அவனது தலையாய குணமாகியது.

நல்ல படிப்பு, பெரிய உத்தியோகம் என்றான பின்னரும், `நானே ராஜா,’ என்பதுபோல் நடக்க, விரைவில் எல்லாரும் விலகிப்போனார்கள்.

கல்லூரி நாட்களில் அவனுடைய சிறப்புகளைக் கண்டு மணந்த காதல் மனைவியும், `இது நான் பார்த்து மயங்கியவர் இல்லை!’ என்று கண்டவர்களிடம் எல்லாம் புலம்பினாள். மனைவி மட்டுமின்றி, அவனுடைய குழந்தைகளுக்கும் அவனைப் பிடிக்காமல் போயிற்று.

ரங்கனுக்குத் தன் உணர்வுகள் புரியவில்லை. அதனாலேயே பிறரையும் புரிந்துகொள்ள இயலவில்லை. பிறருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டால்தானே அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதும் விளங்கும்?

ரங்கனுக்கு இதெல்லாம் புரியாததால், நாளடைவில், உத்தியோகத்தில் அவனுக்குக் கீழே வேலை பார்த்தவர்களுக்கு பதவி உயர்வும், பரிசுகளும் கிடைக்க, தன்மேலேயே பரிதாபம் எழுந்தது.

வீட்டிலோ, வெளியிலோ, தனது உரிமை என்று அவன் எதிர்பார்த்த மரியாதை கிடைக்காததால் ஆத்திரம் அதிகரித்தது. தீய பழக்கங்களுக்கு அடிமையானான்.

நம் உணர்வுகளை எப்படிப் புரிந்துகொள்வது?

கதை

கடைக்குட்டியான அந்த மூன்று வயதுச் சிறுவனை அவனுடைய சகோதர சகோதரிகளுடன் ஒப்பிட்டுத் தாய் சிலாகிக்கும்போது அவனுக்கு மகிழ்ச்சி தாங்காது. அதை வெளிக்காட்டாது மறைக்க, தலையைக் குனிந்து, வாயை உப்பிக்கொள்வான்.

“யாருக்கோ ரொம்ப பெருமை!” என்று தாய் அறிவிக்க, எல்லாரும் அவன் பக்கம் திரும்பி, பாசத்துடன் புன்னகைப்பார்கள்.

அடிக்கடி இந்த வாக்கியத்தைக் கேட்டு, அடுத்த முறை எதற்காவது மகிழ்ச்சி ஏற்படும்போது, “அம்மா! நான் பெருமை!” என்று தெரிவிப்பான். யாராவது புகழ்ந்தால், மகிழ்ச்சி பெருகுகிறது. சிறுவனுக்குத் தன் மனம் புரிந்தது.

(புகழ்ச்சி மனதுக்கு உகந்ததாக இருப்பதால்தான் பலரும் அதை உபயோகப்படுத்தி தம் காரியத்தைச் சாதித்துக்கொள்கிறார்கள். முக்கியமாக, சிறுமிகளையும் இளம்பெண்களையும் கவர முயற்சிக்கும் கயவர்கள்.

யார் எதையும் நாடாது புகழ்கிறார்கள் என்பதை ஆராயும் அறிவு இருந்தால், வெற்றுப்புகழ்ச்சியில் மயங்கமாட்டோம்).

மாறாக, நம்மிடம் யாராவது குறை கண்டுபிடித்துவிட்டாலோ ஆத்திரம் எழுகிறது.

`மற்றவர் அவர் வழியில் யோசிக்கிறார். நமக்கு உகந்த வழியில் நாம் போவோமே!’ இந்த சிந்தனை எழுந்தால், கோபம் எழுந்த வேகத்தில் அடங்கிவிடும்.

என் சிநேகிதி ஜூலியான், “நான் எப்போது கடைக்குப் போய் தலைமுடி வெட்டிக்கொண்டாலும், என் கணவர் கத்துவார்,” என்றாள், பேச்சுவாக்கில்.

அவளுடைய கணவர் பலமுறை கோபித்தபோது, உடனே ஆத்திரப்பட்டவளுக்கு, சற்று நிதானமாக யோசித்தபோது அவரது போக்கின் காரணம் பிடிபட்டது.

அலுப்புடன், “உங்களுக்கு முடியெல்லாம் கொட்டிப்போய் வழுக்கையாகி விட்டதால் என்னிடம் குறை காண்கிறீர்களோ?” என்று ஒரு முறை இவள் கேட்க, அவரது குறுக்கீடு நின்றுபோயிற்று.

தன்னம்பிக்கை உள்ளவர்கள் தம்மை உணர்ந்தவர்கள். இவர்களே தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவர்களாக இருப்பார்கள். சிபாரிசில் வருபவர்கள்…

கதை

அரச வம்சத்தில் வந்தவள் என்பதால் தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டவள் ஆஸ்மா. தன் சாதனைகளால், புத்திகூர்மையால், அப்பெரிய பதவிக்கு வந்திருப்பதாக எண்ணிக்கொண்டாள். அந்த எண்ணத்தால் விளைந்த கர்வத்தில், தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயன்றாள்.

கட்டுக்கடங்காத சூழ்நிலை ஏற்பட்டபோது, அதை எப்படி சமாளிப்பது என்று ஆஸ்மாவுக்குப் புரியவில்லை. திரும்பவும் அப்படி எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாதே என்று பயந்தவளாக, தன்கீழ் வேலை பார்த்தவர்களை ஓயாது விரட்டினாள். அவளுக்குப் பின்னால் அவர்கள், `ரொம்பத்தான் காட்டாதே!’ என்று பரிகசித்தது அவளுக்குத் தெரியாது!

“சிலபேர் ஏன் இப்படி ஆடுகிறார்கள்?” என்று என்னைக் கேட்டார்கள்.

“தகுதி இல்லாதவர்களுக்கு அவர்களுக்கு மீறிய பொறுப்பைக் கொடுத்தால் இப்படித்தான்!” என்றேன், சிறிதும் யோசியாது. ஆதாயத்தை எதிர்பார்த்து அவள் பக்கம் சார்ந்திருந்தவர்களுக்கு முகம் சுண்டிப்போயிற்று.

மற்றவர்களுக்கோ, ஆஸ்மா ஏதாவது தவறு செய்தால், அதைப் பெருந்தன்மையுடன் மன்னிக்க முடியவில்லை. ஏளனமாகப் பேச ஆரம்பித்தார்கள். அவளிடம் ஏற்பட்ட அவநம்பிக்கையால், தம் வேலையிலும் முழுமனதுடன் ஈடுபடத் தோன்றவில்லை.

தன் குறை நிறைகளைப் புரிந்திருந்தால், ஆஸ்மாவுக்குப் பிறரது உணர்வுகளையும் மதிக்கத் தெரிந்திருக்கும். அவர்களது மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருப்பாள்.

அமைதிப்படுத்த ஒரு பயிற்சி

`உங்கள் குழந்தை புத்திசாலியாக வளர..’ என்று பாலர் பள்ளிகளில் விளம்பரப்படுத்துவார்கள்.

குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு வந்தாலும், பல விஷயங்கள் கற்பிக்கப்பட்டாலும், நல்ல சுற்றுச்சூழலில் வளர்ந்திருந்தால்தான் முன்னுக்கு வரமுடியும் என்பது எவ்வளவு தூரம் உண்மை?

கதை (படித்தது)

வன்முறைக்குப் பெயர்போன பகுதி அது. அருகிலிருந்த ஆரம்பப் பள்ளியில் படித்த குழந்தைகள் அனைவருமே கொலையைக் கண்ணால் பார்த்தவர்கள். முதலில் அச்சமோ, வருத்தமோ எழுந்திருந்தாலும், அவ்வுணர்ச்சிகளிலேயே மூழ்கிவிடவில்லை.

அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து வந்த சிறுவர்கள் பாடத்தில் கவனம் சிதறாது இருந்ததைக் கண்டு வியந்த சிலர் ஆராய்ச்சி செய்தபோது, ஓர் உண்மை தெரியவந்தது: தினமும் காலையில், தங்களுடைய அபிமான பொம்மையை வயிற்றின்மேல் வைத்து, படுத்த நிலையில் மூச்சை உள்ளிழுக்கும்போதும், வெளியே விடும்போதும் மூன்றுவரை எண்ண வேண்டும் என்று அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் உன்னிப்பாக எந்த விஷயத்திலும் கவனம் செலுத்த முடிந்தது. ஒரு நாள் அந்தப் பயிற்சி செய்யாவிட்டாலும், அமைதி குலைய, அவர்களைக் கட்டுப்படுத்தவே முடியாமல் போய்விடுமாம்.

சூழ்நிலை நமக்குச் சாதகமாக இல்லாவிடினும், திறமையை வெளிக்காட்ட நம் உணர்வுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

ஒத்துப்போவது வெற்றிக்கு அறிகுறி

தனியார் நிறுவனம் ஒன்றின் தலைவி என்னிடம் கூறினார், “எங்களிடம் தற்காலிகமாக வேலைக்கு வருகிறவர்களின் மதிப்பெண்கள் இரண்டாம்பட்சம்தான். (உலகளாவிய எல்லா கம்பெனிகளிலும் இப்படித்தான்). அவர்களுடைய ஆடை, மரியாதையாகப் பேசும் தொனி முக்கியம். பல விஷயங்களையும் புரிந்து வைத்திருப்பதோடு, பிறருடன் எப்படி இணைந்து பழகுவது என்றும் அவர்களுக்குத் தெரிந்திருந்தால்தான் நிரந்தரமாக ஆக்குவோம். வேலையில் சிறந்து, ஆனால் பிறருடன் சண்டை பிடித்துக்கொண்டே இருந்தால், யார் அவர்களுடன் ஒத்துப்போவார்கள்?”

எந்த துறையானாலும், பிறருடன் ஒத்துப்போகிறவர்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும். கிடைக்கும் வெற்றியும் நிலைக்கும்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "நலம் .. நலமறிய ஆவல் _ 117"

  1. வலுவான செய்தியை இனிய நடையில், எளிமையாக எடுத்துச் சொல்கிறீர்கள். பாராட்டுகள் நிர்மலா ராகவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.