Tag: துஷ்யந்தி

  • பாதை தவறிய பயணங்கள்!

    -துஷ்யந்தி, இலங்கை

    மண்ணிலே பிறந்தோம்
    மனிதர்களாய் வளர்ந்தோம்
    மனதிலே இறைவனை
    மறவாமல் நினைத்தோம்!

    மதங்களை ஆக்கினோம்
    மனிதனாய் வாழ்வதற்கே!
    மரணித்து மரணித்து தினம்
    மடிந்திடவா மதங்கள் எமக்கு?

    மனித உடலிலே இறைவனவன்
    மாறாத நிறமாய்க் குருதி தந்தானே…
    மானிடா அதை மறந்ததேனோ?
    மண்ணிலே பிறந்ததெல்லாம்
    மண்ணுக்கே உரிமையல்லவா?
    மாறாக அதைக் கையில் எடுக்க
    மனம் வந்தது எப்படி மனிதா?

    மாற்றங்கள் நம் மனதில் வரட்டும்
    மனிதம் நம்மில் குடிகொள்ளட்டும்
    மதங்களில் பிரிவுகள் அழிந்திடட்டும்
    மக்களெல்லாம் இன்பத்திலே
    மகிழ்ந்திடட்டும்!!

     

    Share
  • மதுபானம்!

    -துஷ்யந்தி, இலங்கை

    இதுவே உலகம்
    பலருக்கு…
    இதனால் துன்பம்
    இருப்போர்க்கு!

    இரவும் பகலும்
    உழைத்திடுவோர்
    உடலின் களைப்பைத்                                       liquor
    தீர்ப்பதற்காய்
    மதுவை நாடிப்போகின்றார்
    அதிலே களைப்பை
    தீர்க்கின்றார்!

    உழைப்புமின்றித்
    தொழிலுமின்றிப்
    பொழுதைப் போக்கி
    அலைவோரும்
    மறக்காமல் போகின்றார்
    மதுவுக்கடிமையாகின்றார்!

    உடல் கெட்டு மனங்கெட்டு
    நற்குணங்கள்
    யாவும் கெட்டு
    உற்றார் உறவினர்
    அனைவரையும் இழந்து
    தெருவிற்கு வருகிறார்!

    கையிலே பணமின்றித்
    தவிக்கும் தருணம்
    கையிலே கிடைத்ததை
    அடகு வைத்து விற்றுப்
    பையை நிறைத்துத்
    தண்ணீரில் கரைக்கிறார்!

    எண்ணிலே எட்டாத
    பொய்யெல்லாம்
    கற்கின்றார்
    மண்ணறை
    காண்பதற்கு வழி
    தோண்டிக் கொள்கிறார்!

    மதிகெட்டுப் போவதும்
    முறைதானோ?
    மதுவால்,
    குடிகெட்டுப் போவதும்
    சரிதானோ?
    வீணாய்
    இறைத்திடும் பணத்தை
    உங்கள் வாழ்வில்
    இறைத்தால்
    நன்மையல்லவா?

    மதுக்கரங்களே
    கேளுங்கள்!
    தீயதெல்லாம்
    சுட்டுப் பொசுக்குங்கள்!
    இல்லத்தை
    மதுரமாக்கிப் பாருங்கள்!
    மதுவிலே இவை
    கிடைத்ததா சொல்லுங்கள்!?

     

    Share
  • புதிய வார்த்தைகள்

    -துஷ்யந்தி, இலங்கை

    மாயையெனும்
    போர்வை போர்த்தி
    மனதில் நுழைந்த
    காதல் பற்றி…

    கற்பனை உலகில்
    பறந்திடும் பொழுது
    அற்பமாய் தோன்றும்
    ஆசைகள் பற்றி…

    உலாவரும் மேகம்
    மலைகளின் முகட்டை
    முத்தமிடுகின்ற
    மோகம் பற்றி…

    பள்ளந் தேடி
    பாதை வகுத்துப்
    பாலாய்ச் சொரியும்
    அருவிகள் பற்றி…

    எழுதிய தாள்களை
    எரித்து விடுவோம்!
    கறள் பிடித்த வார்த்தைகள்
    இருள் படிந்த சிந்தனைகள்
    தடம் பதித்த சுவடுகள்
    நடம் பயிலும் பாதங்கள்
    போதும் என்றெழுதுவோம்!

    அலுத்துச் சலித்த
    எழுத்துக்களுக்குக்
    கட்டாய ஓய்வென்றும்
    சட்டம் இயற்றுவோம்!

    அழுக்காய்ப் படிந்த
    அறிவின் தேக்கம்
    நகர மறுக்கும்
    ’அடிமைத் தழிழன்’ எனும்
    நரகம்
    அறியாமை அவலங்கள்
    அடிமைத்துவ எச்சங்கள்!

    எழுதுவோம்
    புத்துயிர் ஊட்டும்
    புத்துணர்வூட்டும்
    புதிய வார்த்தைகள்
    வேண்டுமென் றெழுதுவோம்!

    தனியொரு மனிதன்
    தனியொரு இளைஞன்
    தன்னம்பிக்கையுடன்
    தாழ்வுணர்வின்றி
    முன்னேறி வாழும்
    எண்ணம் எழுதுவோம்!

    புயலைப் போல,
    புற்றீசல் போல,
    புதிய வார்த்தைகள்
    புறப்பட்டு வருக!

    இளமை கொஞ்ச
    அறிவு மிஞ்ச
    மடமை ஓட்டி
    வலிமை ஊட்ட
    சிந்தனைத் தீயுடன்
    புதிய வார்த்தைகள்
    புறப்பட்டு வருக!!

     

    Share
  • வெளிநாட்டு வாழ்க்கை!

    -துஷ்யந்தி, இலங்கை

    வாசல் வரை வந்த
    துன்பமெல்லாம் வழியனுப்ப
    வான்பறவை மேலேறி
    அயல்தேசம் காணப்
    பணங்கட்டிப் படியேற
    விடை கொடுக்கும் நிலையம்
    விமான நிலையம்…!

    புதிய தேசம் போனதும்
    புதிரான மனிதர்கள்…
    இவர் மொழிதனைப் பயின்று
    குணந்தனை உணர்ந்து
    கொடுத்திடும் தொழிலைக்
    கண்விழித்துச் செய்திட
    உறுதிகொண்டு நுழைபவன்
    சாதிப்பது நிச்சயம்…!

    அன்பான அன்னையின்
    அரவணைப்பும் இல்லை
    ஆசை மனைவியின்
    தலைகோதலும் இல்லை
    பெற்றெடுத்த மக்களின்
    ஸ்பரிசமும் இல்லை
    ஓடிவந்து உதவும் உயிர்
    நண்பனும் இல்லை..!

    அன்னமில்லை ஆகாரமில்லை
    அன்புக்கு யாருமில்லை
    பண்டிகைக் கொண்டாட்டமில்லை
    விடுமுறை நாட்களில்லை
    உணர்வுகள் அத்தனையும்
    வெறுமையாய் மாற்றிக்கொண்டு
    வேதனை நிலை வெளிக்காட்டாது
    இயற்கையோடு இயந்திரமாய்
    வெளிநாட்டில்  நாம்…!

    பணமிருக்கும் நாட்டிலே
    நல்ல மனதிற்கிடமில்லை
    குணமிருக்கும் தாய்நாட்டில்
    பணத்திற்கு வழியில்லை
    வாழ்க்கையெனும் ஓடத்திலே
    வந்தொட்டும் தடைகளாய்
    வந்ததெல்லாம் ஏற்றுக்கொண்டு
    வாழ்கின்றோம் மனிதர்களாய்…!!

     

    Share
  • முதிர்கன்னி

    -துஷ்யந்தி, இலங்கை

    பெண்ணென்று பிறத்தல்
    பெரும் பாக்கியமாம் பூமியிலே
    நானும் பிறந்தேன் பெண்ணாக…

    ஆசைகளோடு மலர்ந்தேன்
    அரும்புகளாக எண்ணங்களை
    என்னுள்ளே வளர்த்தேன்…
    புரிந்துகொள்ள இப்பூமி
    ஏன் தவறிப்போனதோ…?

    பெண்பார்க்கும் படலங்கள்
    எத்தனை என் வாழ்விலே…!
    வந்தவரெல்லாம் என்
    வதனத்தைப் பார்த்தார்களா?
    சீர்வரிசைக்கான பண
    அடுக்குகளையே பார்த்தார்கள்
    பணத்திற்காய் விற்கப்படும்
    பொருளாகினாளா பெண்..?
    இல்லை சீர்வரிசை கொண்டுவரும்
    லொத்தர் சீட்டாகவே பெண்..!

    காலங்கள் என்னைக்
    கனியவைத்ததால் முதிர்கன்னியாய்
    முழுமையடையாப் பெண்ணாய்!

    பணத்தைப் பார்க்கும் ஆண்களோ
    அழகிய மனத்தைப் பார்க்கவில்லையே!
    குணம் இருக்கும் பெண்களும்
    இன்று மணம் இல்லாப் பூக்களாய்..!

    தேனாய்ப் பேசி தேநீர் சுவைத்து
    வேண்டாம் என்று வார்த்தை சொல்லி
    ஊரார் மத்தியில் தாழ்த்தும்
    முறைமாறா ஆடவர் உலகிலே
    நடமாடும் வரையில் பெண்கள்
    வலியை ஏற்பது விதி
    காலம் செய்த சதி
    அதுவே மரண வலி..!!

     

    Share
  • கஞ்சாவும் கல்லூரி வாசலும்!

    -துஷ்யந்தி, இலங்கை

    தீயென்று தெரிந்தும்
    தொட்டுப் பார்க்கும் வயது
    கல்லூரி வாழ்வில்
    எல்லோர்க்குமான துடிப்பு!

    வீணான எண்ணங்களை                          kanja
    வாசல் வரை வந்து
    தேனாகக் காட்டுவதில்
    தீயோர்க்கு இன்பம்!

    சரியென்றும் பிழையென்றும்
    தேடிப் பார்க்காது
    பிழைகளில் நுழைவது
    பலரது பழக்கம்!

    நோயாகப் போதையை
    நுழைவித்து வாசலில்
    நோக்கத்தை ஈடேற்றும்
    சதிகாரர் எண்ணம்!

    சிலந்தி வலையிலே
    மாட்டிக்கொண்ட வண்டாய்
    வெளிவர வழியில்லா
    மாணவர் எத்தனை?

    விழிப்பொன்றை ஏற்படுத்தி
    விளக்கத்தைச் சொன்னால்
    கல்லூரி வாசலும்
    பூங்காவனமாய் மாறிடுமே!

    பெற்றோரின் பொறுப்பும்
    ஆசிரியரின் போதனையும்
    மாணவப்பூக்களை வழிதவற
    நிச்சயம் விடுவதில்லை!

    அறிவைத் தேடும்
    சிறியோர் மனதில்
    அபாயத்தை விதைக்கத்
    தடையென்று மொழிவோம்!

    சட்டங்கள் இயற்றுவோம்
    சதிகாரரை வெல்லுவோம்
    சமுதாயச் சீர்கேடுகளை
    வளர விடாது தடுப்போம்!!

     

    Share
  • அர்த்தம் கண்டேன் உன்னாலே!

    -துஷ்யந்தி, இலங்கை

    காந்தத்தின் ஈர்ப்பினிலே
    கறள் பிடித்த தகரமொன்று
    கணப்பொழுதும் தாமதிக்காது
    கண்டவுடன் கவர்வதைப் போல்
    கைப்பிடியில் உணர்வொன்று
    உன் கைப்பட்டதும் தோன்றுதடா…

    வயற்காட்டில் அந்நாளில்
    சிந்திய வியர்வையை இன்றும்
    நினைவூட்டிச் செல்லுதடா…
    இன்னும் உழைத்துவாழ
    எண்ணம் என்னில் தோன்றுதடா…

    முதுமையின் தனிமையில்
    உன் முகம் பார்த்து வருகையில்
    பல கோடி இன்பங்கள் என்
    மனதெங்கும் ஓடுதடா…
    பிறப்பின் அர்த்தமும் உன்
    செல்லப் பார்வையில்
    தெரியுதடா…

    கண் மூடும் தருணத்தில்
    உன் கைப்பிடி மண்பட
    என்னுயிர் உன்னோடு
    உண்டென்று தோன்றுதடா…
    உன் கைப்பட்ட மண்
    என்மீது படுகையில்
    என்னுயிர் நிச்சயம்
    சொர்க்கத்தைக் காணுமடா…!

    வெறுமையாய்க் கிடந்த
    வார்த்தைகள் எல்லாம்
    கவிஞனின் பேனைபட
    அழகுக் கவியாவதுபோல்
    நீ தொட்ட இன்பம்
    என் வாழ்க்கைக்கு அர்த்தம்
    சொல்லிப் போகுதடா
    அளவில்லா இன்பத்தை
    என்னிலே பாய்ச்சுதடா…!!

    Share
  • எத்தனை நிலவுகள்!

    -துஷ்யந்தி, இலங்கை

    இரவோடு உறவாட
    தினந்தோறும் மறவாமல்
    வான் பரப்பில் ஜாலமிட
    வாராயோ…
    வட்ட நிலவே…!

    வார்த்தையின்றிக் காத்திருக்கும்                    moon
    கவிஞனுக்கும் பார்த்தவுடன்
    பல நூறு சொல்லெடுத்துத்
    தரமான கவிபடைக்க,
    கவியோலை கொண்டிங்கு
    வாராயோ…
    காவியநிலவே…!

    இருமனங்கள் இணைந்துள்ள
    காதலுக்கு தூது சென்று
    துன்பமெல்லாம்
    வாங்கிக்கொண்டு
    இன்பங்கள் கொண்டுசேர்க்க
    வாராயோ…
    காதல் நிலவே…!

    பால்மணக்கும்
    குழந்தைக்கெல்லாம்
    நட்பென்னும் நூல் கொண்டு
    பல வர்ணப் பட்டமாய்
    வானமெங்கும் பறக்கவே
    நித்தமும் முற்றத்திலே
    வாராயோ…
    பால் நிலவே…!

    சூரியனுக்கு ஓய்வு தந்து
    உலகெல்லாம் குளிர வைக்க
    இரவென்னும் படலம் கொண்டு
    பனிப்படலப் போர்வை செய்து
    பூமியை மெத்தையாக்க
    வாராயோ…
    பனி நிலவே…!

    வண்டெல்லாம்
    உறங்கும் நேரம்
    உன் வதனத்தின் எழில்
    அல்லியின் மேல் படவே – அவள்
    மெல்லத் திறக்கும் அழகைக்
    கொஞ்சிப்போகத் தினம்
    இருளிலே ஒளி கொண்டு
    வாராயோ…
    அல்லி நிலவே…!

    மனங்களெல்லாம் மகிழ்வித்தாய்
    உலகெல்லாம் குளிரவைத்தாய்
    உயிர்களெல்லாம் உறங்கவைத்தாய்
    தென்றலோடு கீதம் தந்தாய்
    நதியிலே ஓவியமானாய்…!

    நாளையென்ற சொல்லுக்கு
    ஒளியேற்றி மறைகின்றாய்
    நாளைகள் உனக்காகக் காத்திருக்கு
    மறவாமல் உன் வதனத்தைக்
    காட்டிவிட்டுச் சென்றிடு வானத்து
    வெண்ணிலவே…!

     

    Share
  • வலிகளோடு வாழ்க்கை!

    -துஷ்யந்தி, இலங்கை

    விதியென்னும் நூலிலே
    விளையாடும் பொம்மையாய்ச்
    சுமக்கின்றோம் சுமைகளைச்
    சூழ்நிலைக் கைதிகளாய்…!

    பூங்காவன வாழ்க்கையதைத்
    தினம் தாக்கும் புயலாய்க்
    கற்றுக்கொண்ட பாடங்கள்
    கண்ணீரின் பல சுவடுகள்..!

    கண்விழிக்கா மழலைகளும் – உன்
    கைப்பிடியில் மாற்றமில்லை
    கண்ணீரின் பாடங்களை- நீ
    கற்பிக்கவும் மறக்கவில்லை..!

    வையகத்தில் நாம் வாங்கிய
    வரமென்று நினைப்பதா..?
    இறைவனால் வையப்பட்ட
    மனித இனமென்று நினைப்பதா..???

    இன்முகத்தோடு எல்லாமும்
    ஏற்கவே பழகிவிட்டோம்
    புதிதான உலகத்தைக்
    காணவே துடிக்கின்றோம்..!

    பணமில்லா நம் உலகதைப்
    பார்ப்போர் இங்கே யாருமில்லை
    குணம் இருக்கும் சிலரையும்
    உலகம் செய்ய விடுவதில்லை..!

    பிறருக்குத் தினம் தொந்தரவாய்
    இருக்க நாமும் விரும்பவில்லை
    உடல் மண்ணில் மறையும் வரை
    உழைக்க  நாமும் மறப்பதில்லை..!

    இவையனைத்தும் இருந்தாலும்
    இயற்கை நம்மை விடுவதில்லை
    வெயிலுக்கும் மழைக்கும்
    பயந்து நாமும் இருப்பதில்லை..!

    ’நம்பிக்கை’ஒளிவிளக்காய்
    நம்வாழ்வில் இருந்தாலும்,
    வரவேற்பு விடுக்காத
    விருந்தாளியாய் தினம் நம்மை
    வாழ்த்திவிட்டுச் செல்கிறது
    வஞ்சகமில்லா வலிகள்…!!

     

    Share
  • வாழ்வது ஒரு சாண் வயிற்றுக்கே!

    -துஷ்யந்தி, இலங்கை

    வாழ்க்கைச் சக்கரம் இயங்க
    வழிகாட்டியும் இதுவே…
    வாழ்க்கைச் சக்கரத்தை முடிக்க
    குழி தோண்டுவதும் இதுவே..!

    அளவாய் உணவு கொடுக்க
    உண்டு தினம் இன்பம்…
    அளவுக்கதிமானால் தரும்
    நமக்கே வீண் சோகம்..!

    வறுமையின் நிறந்தனைக்
    காட்டுவதும் இதுவே…
    வாழ்வில் பிறர்க்குச் சேவையெனச்
    செய்யவேண்டியதும் இதற்கே..!

    ஈயாது சேர்ப்பான் பெரு
    வயிறு கொண்டு இருப்பான்…
    இறப்பின் பின் அவனோ
    இடமில்லாது திரிவான்…!

    நாடாளும் மன்னனுக்கும்
    ஒரே அளவு பசிதான்…
    நாட்டின் சிறு சேவகனுக்கும்
    அதே அளவு பசிதான்..!

    வீணான எண்ணம் கொண்ட
    மனிதனுக்கே பிரிவினை…
    பசியென்று வந்துவிட்டால்
    வயிற்றுக்கில்லை வேற்றுமை…!

    வாழ்க்கையில் உண்மைகள்
    பலவுண்டு கேளுங்கள்….
    வாழும்வரை நாமெல்லாம்
    செய்யவேண்டும் பல சேவைகள்..!

     

    Share
  • நிலைமாறாத் தண்ணீர்!

    -துஷ்யந்தி, இலங்கை

    இரு மூலக்கூறுகள் ஐதரசனும்
    ஒரு மூலக்கூறு ஒட்சிசனும்
    இணைந்த ஒரு திரவமாய்
    உலகைக் குளிர்மையாக்கும்
    திரவ ஊடகமே தண்ணீர்…!

    உயிர்களின் தோற்றத்தில்                     water
    முக்கியப் பங்கெடுத்து
    உடலிலே ஓடும் குருதியாகிக்
    கருவைச் சூழ்ந்த பன்னீர்க் குடமாகிக்
    கடலிலே உடல் சாம்பல்
    கரையும் வரைத் தொடர்ந்திடும்
    வாழ்வில் தண்ணீர்.!

    கற்பாறைகளுக்கிடையே
    தோற்றமாகி மலையன்னையின்
    மடியிலே தவழ்ந்து கடலன்னையின்
    பாதங்களை அடையும்வரை
    பல்வேறு பெயர்களுடன்
    உலகை வலம் வரும் தண்ணீர்!

    அன்றாடம் மனிதனின்
    அத்தியாவசியத் தேவையாகி
    காலநிலைக் கோலங்களின்
    முக்கியப் பங்காளியாகி
    மழைத்தாயின் தாய்ப்பாலாகி
    மண்ணில் விழும் தண்ணீர்!

    நீ வற்றிப் போனால்
    எத்தியோப்பியா…
    நீ வளமானதால்
    செழிப்பான மண்ணீர்…
    நீ இன்றி இறப்பு
    உன்னாலே பிறப்பு…
    அளவாய்ப் பாவித்தால் சிறப்பு…
    அதனால் இன்னொருவருக்குத்
    தண்ணீர் கிடைப்பு…!!!

    Share
  • கனவான அந்த நாட்கள்!

    -துஷ்யந்தி, இலங்கை

    கனவான அந்த நாட்கள்
    கேள்வி இருந்தும்
    விடை தேவைப்படாத – நம்
    உண்மை உள்ளம்!

    கையுடன் கைகோர்த்தும்
    கை மீறத் தோன்றாத
    நட்பின் புனிதம்!

    பொய்ம்மைத் தொலைவிருந்து
    வேடிக்கைப் பார்த்த
    கறை(ப்)படா மனங்கள்!

    கல்வியெனும் தூண் பிடித்துப்
    பள்ளிப் பருவத்தை ஏறிப்பார்த்த
    துணிந்த நாட்கள்!

    ஆயிரம் சகோதரங்கள்
    ஒன்றாய்க் கூடியிருந்த
    அழகிய குடும்பம்!

    பேனைகளும் புத்தகங்களும்
    பொக்கிஷமாய்ச் சேர்த்திட்ட
    பொற்காலம்!

    சான்றிதழ்கள் வாங்கிச்
    சமூகத்தில் நிலைகொள்ள
    அத்திவாரமிட்ட  அறிவு!

    போட்டிகளைச் சவால்களாய்
    வென்றெடுத்த தைரியம்!

    அழகிய நிறங்களால்
    வர்ணம் தீட்டிய மனவானில்
    பறந்து திரிந்த அந்த
    நாட்கள்!

    கவலைகள் துளியளவும்
    கைவைக்காத
    பிள்ளையுள்ளம்!

    இழந்துவிட்டேன் – அந்த
    இனிய நாட்களை…
    வளர்ந்துவிட்டேன் – ஆனால்
    சுயநலம் உள்ளிருக்கு…
    சுவடுகளான நினைவுகள் மட்டும்
    நிலைத்திருக்கு என்னுடன்…
    தேடினாலும் கிடைக்குமா…?
    கனவுகளோடு தொடர்கின்றேன்
    கனவான அந்நாட்களை!!

     

    Share
  • கலங்கரை விளக்கமே!

    -துஷ்யந்தி, இலங்கை

    காரிருள் நீளுகையில்
    கரைகாட்டுவதும் நீயே…
    கதியற்று நிற்போர்க்கு
    ஒரு வழிகாட்டுவதும் நீயே…!                            lighthouse

    எட்டுத்திக்கும் பார்க்கும்படி
    எழில் காட்டுவதும் நீயே….
    ஏழை மீனவனுக்கு வாழ்வில்
    ஒளியேற்றுவதும் நீயே….!

    தீவொன்று உண்டென்று
    திசை காட்டுவதும் நீயே….
    ’ஓ’வென்று அழுவோர்க்கு
    மனக்குறை நீக்குவதும் நீயே….!

    கடலன்னைக்கு நீ
    அழகிய நிலவானாய்….
    அதனால் உயர்ந்த
    கலங்கரை விளக்கானாய்….!

    வணிகனும் உன்னால்
    தேசம் வந்தபோனான்
    வளங்களை இங்கே
    வற்றாது வைத்துப்போனான்…!

    குறைவில்லா செல்வம்
    தினம் இங்கே கொழிக்க,
    இரவெல்லாம் நீ ஒளிகாட்டினாய்
    இன்னும் காட்டுவாய் ஒளிநீயே
    தேன் தமிழ் எட்டுத் திசையும்
    வான்பாடுமளவு முழங்கிடவே…!

     

    Share
  • ஏன் இந்தக் கவலை?

    -துஷ்யந்தி, இலங்கை

    மருத்துவத்தில் உள்வாங்கப்படாத
    மனிதனால் அடையாளம்
    காணமுடியாத அனைவரிலும்
    இருக்கக்கூடிய மிகப்பெரிய
    ஆட்கொல்லி நோய்…!

    இல்லாதது ஒன்றையே
    தினமும் சிந்திக்கவைத்து,
    இருக்குமனைத்தையும் மறைத்து,
    ஏதோ ஒன்றைத் தினம் தேடும்
    நாடகமேடையின் திரை…!

    ரசனைமிக்க வாழ்வின்
    ரகசியங்கள் பலதையும்
    ரசிக்கமுடியாதாக்கி,
    நம்மைச் சூழ்ந்த நல்லோரை
    நாடவிடாமலாக்கும் – ஒரு
    வாழ்வின் தடைக்கல்…!

    முயற்சிகளுக்கு எதிரியாய்
    முற்றுப்புள்ளி வைத்து,
    முன்னேற்றத்தைத் தடையாக்கி
    மனதிலே சுமையாகும்
    முகத்திலே மூடிக்கொள்ளும்
    புன்னகையை மலரவிடாதாக்கும்
    மாயையான முகமூடி…!

    ஆன்மீக வழிகாட்டலும்
    அன்பான நட்புக்களும்
    அழகான சூழலும் நாம்
    என்றும் அமைத்துக்கொண்டால்,
    கவலையெனும் நோய்
    வாழ்வில் ஓர் பனிக்கட்டியே!!

     

     

    Share
  • மனதில் உறுதி வேண்டும்!

    -துஷ்யந்தி, இலங்கை

    உடலின் நிறமதை பார்த்து – அதில்
    உயர்வென்றும் தாழ்வென்றும் கொண்டு
    உலகில் பிரிவினை செய்தே – என்றும்
    வேற்றுமை காண்பவன் மனிதன்!

    திடமாய் உடலது இருக்க – அதில்
    தெளிவாய் மனமது இயங்க,
    கைநீட்டுவதில்லை மண்ணில் – பிறர்
    தயவென்று போவதுமில்லை!

    வாழ்கின்ற காலத்தில் என்றும் – நாம்
    செய்திடவேண்டும் நல்ல சேவை
    நாளைய தலைமுறைக்கு நாமும் – ஒரு
    பாடமாய் வாழ்ந்திட வேண்டும்!

    ஊனம் உடலிலே இருந்தும் – நித்தம்
    உழைத்து வாழ்ந்திட வேண்டும்
    பாடம் சொல்லிடும் வாழ்வை – நாம்
    பரிசாய் ஏற்றிட வேண்டும்!

    படிப்பில் வருவதில்லை பண்பு – உயர்
    குணத்தால் வருவதே பண்பு
    பண்டிதர் வேடம் பூண்டு – பிறர்
    காலில் கிடப்பதும் முறையோ?

    மண்ணிலே பிறந்தவர்க்கெல்லாம் – இறைவன்
    அழகிய வாழ்வைத் தந்தான்
    கடலிலே கிடக்கும் முத்தாய் -அதை
    தேடுதல் தானே கடமை…!

    தடைகள் வந்தபோதும் – அவை
    படிக்கற்கள் என்று எண்ணி
    திடமாய் முடிவெடுத்திட்டால் – வாழ்வு
    நிச்சயம் வெற்றியாய் மாறும்…!

    உறுதியுடன் போராடு நண்பா – நித்தம்
    ஊருக்காய் உழைத்திடு நண்பா
    இன்று விதைத்திடும் நன்மை – உனக்கு
    நாளை பயன்தரும் நண்பா…!

     

    Share