-துஷ்யந்தி, இலங்கை
கனவான அந்த நாட்கள்
கேள்வி இருந்தும்
விடை தேவைப்படாத – நம்
உண்மை உள்ளம்!
கையுடன் கைகோர்த்தும்
கை மீறத் தோன்றாத
நட்பின் புனிதம்!
பொய்ம்மைத் தொலைவிருந்து
வேடிக்கைப் பார்த்த
கறை(ப்)படா மனங்கள்!
கல்வியெனும் தூண் பிடித்துப்
பள்ளிப் பருவத்தை ஏறிப்பார்த்த
துணிந்த நாட்கள்!
ஆயிரம் சகோதரங்கள்
ஒன்றாய்க் கூடியிருந்த
அழகிய குடும்பம்!
பேனைகளும் புத்தகங்களும்
பொக்கிஷமாய்ச் சேர்த்திட்ட
பொற்காலம்!
சான்றிதழ்கள் வாங்கிச்
சமூகத்தில் நிலைகொள்ள
அத்திவாரமிட்ட அறிவு!
போட்டிகளைச் சவால்களாய்
வென்றெடுத்த தைரியம்!
அழகிய நிறங்களால்
வர்ணம் தீட்டிய மனவானில்
பறந்து திரிந்த அந்த
நாட்கள்!
கவலைகள் துளியளவும்
கைவைக்காத
பிள்ளையுள்ளம்!
இழந்துவிட்டேன் – அந்த
இனிய நாட்களை…
வளர்ந்துவிட்டேன் – ஆனால்
சுயநலம் உள்ளிருக்கு…
சுவடுகளான நினைவுகள் மட்டும்
நிலைத்திருக்கு என்னுடன்…
தேடினாலும் கிடைக்குமா…?
கனவுகளோடு தொடர்கின்றேன்
கனவான அந்நாட்களை!!

Leave a Reply