Tag: விசாலம்

  • கிருஷ்ண பக்ஷ லீவு

    — விசாலம்.

     

    pitru-tarpanam

    பித்ரு லோகத்தில்  பல பித்ருக்கள் மிக  ஆவலுடன் தங்கள் தலைவர் வரும் நேரத்தை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

    “என்ன  நம்ம யமராஜரை இன்னும் காணுமே” என்று ஒருவர் கேட்க, “அவரா, அவர்தான் காலன் ஆயிற்றே. நேரத்தை மிகச் சரியாக … ஒரு நொடி கூட அங்கும் இங்கும் போகாதபடி அல்லவா  தன் கடமைகளைச்  செய்வார்” என்று வேறு ஒருவர் பதிலளிக்க, அவர் பதில் அளித்து முடியுமுன்னே கருத்த நிறத்துடன் வாட்டசாட்டமாக
    யமதர்மராஜன் நுழைந்தார்.

    அவர் நுழைந்தவுடன் பவ்யமாக எல்லா பித்ருக்களும் வணங்கினர் .

    “பித்ருக்களே சூரியன் கன்யா ராசிக்கு வந்துவிட்டது. இன்னும் சில நொடிகளில் கிருஷ்ணபக்ஷமும் தொடங்கப்போகிறது. உங்கள் லீவு இன்றைய தினத்திலிருந்து ஆரம்பம். ஒரு பதினைந்து நாட்கள் பூலோகத்திற்குச்  சென்று உங்கள் சந்ததிகளைப் பார்த்து மகிழ்ந்து  அவர்களுக்கு ஆசிகள் வழங்கி விட்டு வாருங்கள். அவர்களும் உங்களுக்கு தகுந்த மரியாதை செய்து உணவும் படைப்பார்கள்.  உங்கள் யாவருக்கும் என் நல் வாழ்த்துகள்”  என்று கம்பீரமாக அமர்ந்தபடி வாழ்த்தினார்.

    புதிதாக வந்த பித்ரு ஒருவர்  தன் நண்பர்களிடம் “அன்பர்களே நான் இப்போது தான் முதல் தடவையாக பூலோகம் போகிறேன். என் பையன்கள் இருவர். ஒருவன் அமெரிக்காவில் இருக்கிறான். இன்னொருவன்  சென்னையில் இருக்கிறான். நான் எங்கு போகவேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் ” என்றார்.

    அதற்குள் இன்னொரு பித்ரு “ஆமாம் நான் என்ன செய்ய? எனக்கு குழந்தைகள் இல்லை. எனக்கு யார் மரியாதை செலுத்தி சாப்பாடு போடப்போகிறார்கள். மூத்தவரே நீங்கள் இதைப்பற்றி விளக்குங்களேன்” என்றார்.

    நன்கு அனுபவப்பட்ட பித்ரு  பேச ஆரம்பித்தார்.

    “கவலைப்படாதீர்கள். இந்த பதினைந்து நாட்களில் ஒரு நாள் ‘காருண்யக பித்ரு’  என்று  வரும். அந்த நாளில் உங்களுக்கு பிடித்த ஒருவர் உங்களுக்கென்று இதை செய்யலாம். உங்கள் நண்பர் கூட இதில் பங்கு பெறலாம். அதனால் குழந்தைகள் இல்லையே என்று வருத்தம் அடையாதீர். தவிர நம்மைப்போல் இருப்பவர்கள் எங்கும் ஒரு நொடியில் போக முடியும். ஆகையால் அமெரிக்காவுக்கும் போகலாம். சென்னைக்கும் போகலாம். செய்பவர்களின் சிரத்தையைப்பொருத்து தான் பலன் கிடைக்கும். இந்த பதினைந்து நாட்களில் சதுர்தசி  திதியன்று  துர்மரணம் அல்லது விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு  மட்டும் திதி செய்வார்கள்.. அமாவாசையன்று விதவையோ அல்லது பிரம்மசாரியோ இந்த சம்ஸ்காரத்தை செய்வார்கள்.”

    “நம்முடன் வேறு யாரோ வருவது போல் தெரிகிறதே?”

    “ஆமாம், நம்முடன் விஸ்வதேவர்களும் வருவார்கள். அவர்களும் நடப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். சரி இப்போது   நாம் பிரியலாம் அவரவர்கள் போக வேண்டிய இடத்திற்குப் போய் வரலாம். நவராத்திரி அமாவாசையின் போது இந்த இடத்தில் சந்திக்கலாம் . சரி தானே?”

    “ரொம்ப நன்றி. நாம் வந்து சேர்ந்த பின்  நடந்தவற்றை தெரிந்துக்கொள்ளலாம். இப்போது  கிளம்பலாமா?”

    காட்சி 1:

    ஒரு பித்ரு தான் வரவேண்டிய   இடத்திற்கு வந்து வாசலில் நிற்கிறார். உள்ளே தம்பதிகள் பேசும் சத்தம் கேட்டது .

    “ஏன்னா..  எங்கே கிளம்பறேள்? இன்னிக்கு லீவுக்கு   சொல்லலையா?  ஹிரண்ய சிராத்தம் செய்யணும்னு சொன்னேனே?”

    “ஆமாம் நீ சொன்னே ! எனக்கு அர்ஜண்ட்டா ஒரு மீட்டிங் வந்துடுத்து. அதை அட்டெண்டு செய்யலைனா ரொம்ப லாஸ் ஆயிடும் . நீயே வாத்தியார் வந்தா வாழைக்காய் , அரிசி கொடுத்துடு. தெரிஞ்சுதா?”

    “அப்படி கொடுத்தா  பலனில்லைனா. நீங்க கொஞ்சம் லேட்டா போங்களேன்”

    “மேலுக்கு மேலே பேசாதே சொன்னத்த செய்”

    பித்ரு இதைக்கேட்டப்பின் அங்கே நிற்கவில்லை. மேலே நடையைக் கட்டினார் .

    காட்சி 2:

    இன்னொரு பித்ரு தான் போகும் வீட்டைக்கண்டு பிடித்து அங்கு உள்ளே நுழைந்து பார்க்க, அங்கே  மாம்பலத்தில் இருக்கும்  அவரது  மூத்த பையன் வாத்தியார் சொல்லும் மந்திரங்களைச்சொல்ல,  அவன் கூட  அவனது   தம்பியும் அமர்ந்து சொல்ல  பார்க்கவே மிக அழகாக இருந்தது. அந்தப்பித்ருவுக்கு ரொம்ப திருப்தி. தனது இரு மக்களும் மிக அழகாக  அமர்ந்து  சொல்வதைப்  பார்க்கவே   அவர்களுது சிரத்தை தெரிந்தது.  “ஆஹா, இந்தக்காலத்தில் இரு மருமகள்களும் அழகாக மடிசார் புடவையில் நிற்கிறார்களே. தவிர பாத்திரங்களும் எவர்சில்வர் எல்லாமல் வெள்ளியாக இருக்கின்றதே.  சாஸ்திரம் நன்றாக படிச்சிருப்பார் போலிருக்கு. நான் ரொம்ப கொடுத்துவைத்தவன் , எனக்கு ரொம்ப திருப்தி ” என்று சொல்லியபடி நகர்ந்தார்.

    காட்சி 3:

    வேறொரு பித்ரு தன் குழந்தைகளைப்பார்க்க  மிக ஆசையாக அவரது இடம் போய் நின்றார். அவரது பேரன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்க பேத்தி  டிவி பார்த்தபடி இருந்தாள். எங்கே  வேறு ஒருவரையும் காணோம். இன்னிக்கு என்னோட திதி ஆயிற்றே! என்றவர் நினைத்துக் கொண்டிருக்கையில் அந்த வீட்டுப் பணிப்பெண் வந்தாள்.

    “என்ன அம்மாவைக்காணோம்  எங்கிட்டு போயிருக்காங்க  லதா?”

    “பொன்னம்மா எங்க அம்மாவும் அப்பாவும் பிளைண்ட் ஸ்கூலுக்குப்போயிருக்கா.”

    “அது என்னாத்துக்கு அங்கிட்டு போயிருக்காங்க. எங்கிட்ட ஒன்னும் சொல்லலை”

    “அவங்க திடீரென்னு நினைச்சு அங்க போயிருக்கா, இன்னிக்கி தாத்தாவோட திதியாம். அதுக்கு பிராம்மணாள் கூப்பிடறதுக்கு பதிலா அன்னதானம் செஞ்சுடலாம்ன்னு யோசிச்சாங்க அதான் அங்கே போயிருக்காங்க.”

    “அது என்ன புள்ள!   ஐயர் வீட்ல திதி  செய்யாம எப்படி விட்டுடறாங்க? ஐயோ, எனக்கென்ன இத பத்தி. இது எல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். எனக்கு எதுக்கு இந்த வம்பு.”

    “அட போ பொன்னம்மா, இத்தன தூரம் பேசிட்டு இப்ப என்ன வம்புன்னு ஏன் சொல்றே? சரி சரி போய் உன் ஜோலியைப் பாரு”

    இத்தனையும் கேட்டு நின்ற பித்ரு “சரி ஏதோ நல்லது பண்றான் பிள்ளை. சினிமா பீச்சுன்னு சுத்தாம ஏதோ அன்னதானமாவது பண்றானே! ஆனாலும் அது என் பசிக்கு வராது. ஹிரண்ய சிரார்த்தம் செய்தால்தான்  அந்தப்பொருள் எனக்கு வரும். அதுதான் என்னைச்சேர சரியான பாஸ்வேர்டு. பரவாயில்லை, என் பசி இருக்கட்டும்  அவனுக்கு புண்ணியம் சேருமே அது போதும் எனக்கு. குழந்தைகள் எல்லாம் என் ஆசிகளோட நன்னா வாழட்டும்,”    என்றபடி அங்கிருந்து நடையைக் கட்டுகிறார்.

    காட்சி 4:

    இந்த சீனில் நடப்பது என்ன?  வாசலில் வந்து நிற்கிறார் ஒரு பித்ரு.

    மருமகள் கத்துகிறாள் “வாட் அ ஸில்லி திங்க் ?  எப்பவோ செத்து போனவர்  இப்ப வந்து நாம  கொடுக்கறதை வாங்கிண்டு  பிளஸ் பண்ணுவாராம், எனக்கு இதெல்லாம் நம்பிக்கை இல்லை. ஸ்டுப்பிட் திங். நான் ஆபீஸ் போகப்போறேன். “

    “அடி சுசீ, இன்னிக்கி ஒரு நாள் கோவாப்ரேட் செய்ய மாட்டாயா? இப்படி பேண்டும்  ஷர்ட்டும் போட்டுண்டு கிளம்பறே.”

    ” எஸ்  வாட்ஸ்  ராங் இன்  திஸ்? என் ஆபீஸ்ல எனக்கு   என்ன மாதிரி போஸ்ட்ன்னு உனக்கு தெரியாதா? நீ எப்படியோ இன்னிக்கி  மேனேஜ் பண்ணிக்க. யூ டூ வாட்டெவர்  யூ லைக்  ஐ வோன்ட் இன்டர்பியர், அண்டர்ஸ்டுட் ?”

    “சரி  என்ன குக் செய்திருக்கே ?”

    “வெங்காயம் போட்டு மஸாலா தோஸா? வெஜ் பர்கர் …தென்..     நூடுல்ஸ்”

    கணவானான முரளி பரிதாபமாக அவளைப்பார்க்க,  அவள் கதவை டபார் என்று சாத்தியபடி வெளியேறுகிறாள் .

    காட்சி  5:

    இதையெல்லாம் பார்த்த பித்ரு அங்கிருந்து கிளம்பி வரும் போது அவரது அண்ணாவைப் பார்த்தார். அண்ணா  அடையார் பக்கம் போய்க்கொண்டிருக்க தம்பி பித்ருவும் அவருடன் சேர்ந்துக்கொண்டார். இருவரும்  அடையார் வீட்டில் நுழைந்தனர். அங்கு  வயதான சுமங்கலி அமர்ந்து ஒரு அமெரிக்கப்பெண்மணிக்கு மஹாளயம் பற்றி விவரித்துக்கொண்டிருந்தார்.விவரித்த விதம் பார்த்தாலே அவர் பெரிய புரபஸர் போல் தெரிந்தது. அந்தப்பெண்மணியும் லில்லி என்ற தன்  பெயரை லீலா என்று ஆக்கிக்கொண்டிருந்தாள்.  அவளது முடி பொன் நிறமாக இருக்க அதைக்கொண்டைப்போட்டுக்கொண்டிருந்தாள். அவள் உடலுக்கு நீலப்புடவை  அவள் சோபையை இன்னும் கூட்டியது. அவளது கணவன் சியாம்   நியூ ஜெர்ஸியிலிருந்து சிரார்த்தம் செய்ய தன் புது அமெரிக்க மனைவியுடன் வந்திருந்தான். அவனும் பஞ்சகச்ச வேஷ்டியுடன் வாத்தியாரை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தான். அவனது மனைவி லீலா மிகவும் சிரத்தையாக எல்லாவற்றுக்கும் விளக்கம் கேட்டபடி அன்றைய காரியங்களில் கைக்கொடுத்தாள். வீட்டில் எல்லோரும் படித்தவர்கள் ஆனதால் அங்கு ஆங்கிலம் மொழி நிலவினாலும் நடைமுறையெல்லாம் தமிழ் நாட்டு பண்பாட்டைப்பின் பற்றியதாகவே இருந்தன. வாத்தியார் வந்தார். காரியம் செய்து வைக்கும்போது வேறு யாராவது பெயர் இதில் சேர்க்க வேண்டுமா என்று கேட்க “ஆமாம் என் சித்தப்பாவும் இறந்து விட்டார். அவர் பெயரும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றார்.  இதையெல்லாம் பார்த்தபடி  அண்ணா பித்ரு தம்பியை பெருமையாகப்பார்த்தார். தம்பிக்கும்  தன் அண்ணண்  குடும்பம் மூலம்  தனது பெயருக்கும் ஒரு மரியாதை இருப்பதைக்கண்டுக்கொண்டார்.

    காட்சி 6

    “ஏண்டா ராமு.. உன் அப்பாவுக்கு மஹாளய தர்ப்பணம்   பண்ணியாச்சா?’

    “நேத்திக்கி தான் பண்ணினேன்.”

    “பின்ன என்ன உம்ம்ன்னு  சோகமா உட்க்கார்ந்திருக்கே”

    “பின்ன  என்ன மாமா. என் அண்ணா தம்பி எல்லோரும் வெளியூரிலே  நன்னா சம்பாதிச்சிண்டிருக்கா. நான் மட்டும் என் அப்பாவோட சேர்ந்து அப்பாவோட ஆசைக்கு மந்திரம் சொல்ல கத்துண்டேன். அவ்வளவுதான்  அதே என் வாழ்க்கை ஆயிடுத்து. என் அப்பா எனக்கு ஒரு கல்யாணம் கூட பண்ணி வைக்கலை. என்னவோ ஜாதகத்ல தோஷமாம்.  அவர் ஒரு சுயநலவாதி. அவரால் தனியா வைதீகம் செய்ய முடில, அதனாலே என்னை உபயோகிச்சுண்டார். அவரும் போய்ச்  சேர்ந்தார்  ஐந்து வருஷம் ஆயிடுத்து. இப்போ ஆயிடுத்து எனக்கும் 45 வயசு. ஒரு வருஷத்து மூணு தெவசம் செய்யறேன். இதே போல செஞ்சு செஞ்சு எனக்கே இப்போ ஒன்றும் பிடிக்கலை.”

    “நல்லதுதானே ராமு. எத்தனை பேரை நீ கரை சேர்க்கறே. உனக்கு நிறைய புண்ணியம் கிடைக்கும்டா.”

    “மாமா நான் இப்போ ஒண்ணு தீர்மானம் செஞ்சுட்டேன். நான் சன்யாசம் வாங்கிக்கலாம்ன்னு … அப்போ எனக்கு இது மாதிரி ஒன்றும் செய்யவேண்டாமே!”

    மாமா பரிதாபமாக அவனைப்பார்த்தார். இதெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த  பித்ரு ரூபத்தில் இருந்த ராமுவின் அப்பா அங்கிருந்து வருத்தமாக வெளியேறினார் .

    பதினைந்து நாட்கள் ஓடிவிட்டன. பல பல அனுபவங்களுடன்  எல்லா பித்ருக்களும் வந்த இடத்திற்கே கிளம்பினர் எல்லோருடைய அனுபவத்திலும் கலி முற்றுகிறது என்ற உண்மை மட்டும் தெரிந்தது.

    ***

    மேலே குறிப்பிட்ட   சம்ஸ்கார நிகழ்சிகள்  யாவும் நான் பார்த்த உண்மைச் சம்பவங்கள் அடிப்படையில் எழுதப்பட்டவை.  இவற்றையெல்லாம் பார்க்க  ஹிந்து  சம்ஸ்காரம் தேவையா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் அதை சரியாக புரியவைக்க ஒருவருமில்லையோ என்ற ஐயப்பாடு உண்டாகிறது. அதைப்புரிந்துக்கொண்டால் எல்லாம் ஒழுங்காக நடக்கலாம் .   பல பெரியவர்கள் கருத்தின் படி நம் வருங்கால சந்ததிகள்   அவர்களது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கர்மாக்களை  செய்ய வளமாக வாழ்ந்து  நன்றாக இருப்பார்கள்  என்று தெரிய வருகிறது. அதனால் இந்த சம்ஸ்காரத்தை செய்ய ஏன் தயங்க வேண்டும்?  இதற்கென்று அதிக சிலவுமில்லை. இரண்டு வாழைக்காய். கொஞ்சம் அரிசி, பருப்ப , வெற்றிலை பாக்கு, கொஞ்சம் தக்ஷிணை… அவ்வளவுதான். ஒரு  முப்பது நிமிடங்களில் எல்லாமே முடிந்துவிடும். டிவி முன்னாடி பல மணி நேரங்கள்  கழிக்கிறோம். இதற்கென்று கொஞ்சம் சமயம் அர்ப்பிக்கலாமே .

    படம் உதவிக்கு நன்றி:  http://www.maalaimalar.com/2014/05/09151209/pitru-tarpanam-to–provide-eka.html

    Share
  • சிருஷ்டி

    விசாலம்.

    பல்லாண்டுகளுக்கு முன் தவ  வலிமை மிக்க ரிஷிகள், முனிவர்கள் இருந்தனர். அவர்கள் தங்கள் தவ வலிமையினால் செய்யமுடியாததையும் மிக எளிதாகச் செய்துக்காட்டினர்.  அதில் சிருஷ்டியும் ஒன்று, ஆனால் அந்த  சிருஷ்டி  அவர்களது   சங்கல்பத்தினால்,  தர்சனத்தினால், ஸ்பர்சத்தினால்  உண்டாயிற்று.   உடல் சேர்க்கையினால் அல்ல … தெய்வீக ஆற்றல் பெற்ற மகரிஷிகள்  தேவர்கள், ஈசனின் அருளையும் பெற்றதால்  இது போன்ற சிருஷ்டியைச் செய்ய முடிந்தது.

    Lord-Hanumanசங்கல்பம் மூலம் உண்டான  சிருஷ்டி
    இதற்கு இராமயணத்தைக் கொஞ்சம் பார்க்க வேண்டும். இராவணன் ஒரு நாள்  வருணனின் மகள் புஞ்சிதஸ்கலை என்ற அழகு ஓவியத்தைப் பார்த்து விட்டான். அவளை அடைய முற்பட்டு அதில் வெற்றியும் கண்டான். புஞ்சிதங்கலை மனம் ஒடிந்துப் போய் பிரம்மாவிடம் நியாயம் கேட்கச் சென்றாள். பிரும்மதேவன் அவளுக்கு ஆறுதல் கூறி குரு பகவானின் மந்திர தீர்த்தத்தினால் அவள் புனிதமாகிவிடுவாள் என்றும் பின்னால் நடக்கப்போகும் ஒரு சம்பவத்திற்காகத்தான் காலம் இது போல் செய்துள்ளது என்றும் கூறி விளக்கினார். ராம அவதாரத்தின் நோக்கம் இராவணனை வதைப்பது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் இராவணனின் பாபம் அதிகரிக்கும் இதனால் அவனது அழிவும் ஏற்படும் என்றும் கூறினார்.

    ருசி கண்ட பூனைப்போல் இராவணின் காம இச்சை மேலும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. ஒரு நாள் அவன் ரம்பை என்ற அப்ஸரஸைப் பார்த்துவிட்டான். அந்த ரம்பையோ குபேரனின் மகனான நளகூபனின் மனைவி. குபேரன் இராவணனுக்கு ஒருவிதத்தில் சகோதரன். ஆனாலும் காமம் அவன் கண்ணை மறைத்தது. சற்றும் சிந்திக்காமல்  ரம்பையைக் கெடுத்து விட்டான். நளகூபனுக்கு வந்தது  கோபம். ” நீ எந்தப்பெண்ணைத் தீண்டினாலும்  உன் சிரம் ஏழாய்ப் பிளக்கும்” என்று கடுஞ்சாபம் கொடுத்தான்.

    இராவணன் இதைப்பொருட்படுத்தவேயில்லை. பிரஹஸ்பதியிடம் சேவை செய்து வந்த பெண்ணைக்கண்டான். அவளையும் விடவில்லை. பிரஹஸ்பதிக்கு கோபம் வந்து பிரம்மாவிடம் சென்று இதைப்பற்றி  முறையிட்டார். பிரும்மா இராவணனுக்கு சாபம் கொடுத்தார்.

    “உனக்கு நல்ல தனமாக சொல்லியும் நீ பல பத்னிகளை கெடுக்கிறாய். திரும்ப திரும்ப அதே தவறை செய்கிறாய். ஆகையால் இதுபோல் இனி நீ செய்தால் உன் சிரசு சுக்கு நூறாக வெடித்துவிடும். அந்தப்பெண்கள் சபிக்க மறந்தாலும் என் சார்பில் இது நடந்துவிடும். ஜாக்கிரதை.”

    ஒரு தடவை புஞ்சிதஸ்கலை  தெய்வ ஆராதனைக்கு பூக்கள் பறிக்க நந்தவனம் சென்ற போது  பல தம்பதிகள் மிக நெருக்கமாகவும் அன்னியோன்னியமகவும் இருப்பதைப்பார்த்து  உணர்ச்சி வசப்படலாயினாள். இதனால் பிரஹஸ்பதியை அவள் அழைக்க அவர் கோபம் கொண்டு அவள் ஒரு பெண்குரஙகாக மாற சபித்துவிடுகிறார். கௌதம ரிஷியின் தர்மபத்னி அஹல்யா  சில காரணங்களினால்  தனக்கு பிறக்கும் குழந்தை அழகில்லாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தாள். அதன் படியே குரங்காய் சாபமுற்ற புஞ்சிகஸ்தலை அஹல்யாவுக்கு குரங்கு ரூபமாக பிறந்து அஞ்சனை என்ற பெயர் பெற்றாள். புஞ்சிகஸ்தலை ஆசைப்பட்டது போல் சிவஸ்வரூபமாக ஒரு குழந்தையை சங்கல்பவசமாக அஞ்சனைக்கு பரமேஸ்வரன் அருளினார். பரமேஸ்வரன் பார்வதி இருவரது உணர்ச்சிகளும் சேர்ந்து உண்டாக்கப்பட்ட  சக்தி  வாயுவுடன் கலந்து தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று தவம் செய்துகொண்டிருந்த அஞ்சனையின் வாய் வழியே உள்ளே நுழைந்தது.  அதே நேரம்  தசரதர் புத்திரகாமேஷ்டியாகம் செய்திட, யாகதேவன் மழலைச்செல்வம்  உண்டாகும் பலனைக் கொடுக்க கனி அமுதைக் கொண்டு செல்ல, அதிலிருந்து ஒரு துளி கீழே விழுந்து அஞ்சனையின் உதட்டில் அமர்ந்தது. அஞசனையும் தன் உதட்டில்  ஏதோ ஒன்று இனிக்கறதே என்று அதைச்சுவைக்க அதுவும் உள்ளே போய் கலந்தது. இராமயணத்தில் முக்கிய அம்சமாக வரும் அனுமன் பிறந்தது இப்படித்தான்.

    ராமாயணத்தில் சுந்தரகாண்டம்  66வது சர்க்கம் மூலம் இதைப்பற்றி அறியமுடிகிறது. இதில் புஞ்ஜிகஸ்தலை என்ற அப்சரஸ்  அஞ்சனை என்ற  பெயரில் ஒரு வானரப்பெண்ணாகப் பிறந்தாள். அவளுக்குப் பல ரூபங்கள் எடுக்கும் சக்தி இருந்தது.  ஒரு நாள் ஒரு பெண்ணாக ரூபம் எடுத்து மலை உச்சியில்  உல்லாசமாக இயற்கையை ரசித்தபடி உலாவினாள்.  அப்போது வாயுபகவான் அவளைத் தழுவிச்சென்றார். உடனே தழுவியதை அந்தப்பெண் உணர்ந்து “யார் என்னைத் தழுவிச்செல்வது?” என் வினவ  “நான் தான் வாயு, நான் உன்னைத் தழுவ உனக்கு ஒரு விதமானப்பிரச்சனையும்  இல்லை. நான் தழுவிச்சென்றதின் பலனாக ஒரு வீர சூரபுத்திரன் பிறப்பான் அவனால் புகழுண்டாகும்” என்றார். இது  அனுமனின் பிறப்பு.

    சங்கல்பத்தினால் ஏற்பட்டது வாக்கினால் பிறந்த  வேதவதி
    ராவணன்  பல இடங்களுக்குச்சென்று ஜயித்து வெற்றி பெற்று வந்தான்.  பின் திக்விஜயத்திற்கு கிளம்பினான். அப்போது ஒரு பேரழகி  கண்களை மூடியபடி   தன்னை மறந்து தியானம் செய்துக்கொண்டிருந்தாள். ராவணன் அவள் அழகில் மயங்கிபோனான்.

    “நீ யார் ? உன்  அழகில் நான் என்னை மறந்தேன்” என்றான்.

    “நான் வேதவதி “

    “உன்  தந்தை  யார் ?”

    “என் தந்தை பிரஹஸ்பதியின் புத்திரர் சத்வஜர் என்னும் பிரும்மரிஷி. அவர் வேதாப்பியாசம்  செய்ய ஆரம்பித்தவுடனே அவர் வாக்கிலிருந்து நான் தோன்றினேன், வரும் போதே நான் கன்னியாகத்தான் வந்தேன்  இதனால்தான் என் பெயர் வேதவதி“.

    பின்னால் இவள் தான்  கர்ப்பம் இல்லாமலே மீண்டும் சீதையாக பூமியில் வந்தபோது ஜனகரால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள். வேதவதியின் மேல் வைத்த ஆசையை இராவணன் மறக்கவில்லை அவள்தான் சீதை எனக் கண்டுக்கொண்டு அவள் மேல் திரும்பவும் ஆசைப்பட்டான். இதுவும் இராமயணத்தில்  உத்தர காண்டத்தில் வருகிறது.

    மனசினால் வந்த சிருஷ்டி
    விசுவாமித்தரருடன் ஸ்ரீராமர் செல்லும் போது விசுவாமித்திர ரிஷி தன் குலத்தைப்பற்றிச்சொல்கிறார். ஒரு முனிவர் தவம் செய்தபோது ஒரு கந்தர்வப்பெண் அவருக்குப் பணிவிடைச்செய்தாள். அவள் பணிவிடையில் மனம்  மகிழ்ந்து முனிவர் அவளிடம் வேண்டியதைக் கேள் என்று கூறுகிறார். அவளும் தனக்கு மிகச்சிறந்த தர்மப்பிரபுவாக ஒரு மகன் வேண்டும் என்கிறாள். அவர் மனம் அறிந்து  முனிவர் தன் மனதிலேயே அதே மாதிரி மகனைப்படைத்து  “பிரும்மதத்” என்ற பெயரும் அளித்தார். அந்தப்பிரம்மதத்தின் பரம்பரையில் வந்தவர்தான் விசுவமித்திரர். இராமயணத்தில் பாலகாண்டம் 33ம் சர்க்கம்

    இப்போது சிருஷ்டியில் வாக்கினால் வந்தவள் வேதவதி
    மனசினால் வந்தவர் பிரும்மதத்தர்
    ஸ்பர்சத்தினால் வந்தவர் ஆஞ்சநேயர்  …
    என்று மூன்று நிலைகளையும் நாம் இங்கு பார்க்கிறோம். இப்போது நினைத்துப்பார்த்தால் இப்படியெல்லாம் அந்தக்கால ரிஷிகள் எப்படி செய்தார்கள்?அவர்களிடம்  இது போல் செய்ய எத்தனை சக்தி இருந்திருக்க வேண்டும் என்று  நினைக்க  நினைக்க மிகவும்  வியப்பாக இருக்கிறது.

     

     

     

    படம் உதவி:  http://www.oknation.net/blog/banarashindu/gallery/39404

    Share
  • நீ ஒரு கற்பகத் தரு!

    -விசாலம்

    நிலவாக உன்னை நினைத்தாலோ,
    காலை காணாமல் போய்விடுவாய்
    மலராக உன்னை நினைத்தாலோ
    ஒருநாளில் நீ உதிர்ந்து விடுவாய்,
    வானவில்லாக உன்னை நினைத்தாலோ
    கணநேரத்தில்  நீ  மறைந்துவிடுவாய்,
    பனித் துளியாக  உன்னை நினைத்தாலோ
    வெயில்பட  மறைந்து  விடுவாய்,
    அலைகளாக உன்னை  நினைத்தாலோ
    காலை முத்தமிட்டு ஓடிவிடுவாய்,
    மலையாக உன்னை நினத்தாலோ
    கல்மனம் போல்  நீ  மாறிவிடுவாய்.
    நீராக உன்னை  நினைத்தாலோ
    பனிக்கட்டி போல் உறைந்து விடுவாய்,
    உன்னை நான் ஒன்றும் நினைக்கவில்லை
    எனக்கு நீ நீயாகவே இரு…
    என்றும்போல் நீ ஒரு கற்பகத் தரு!

     

    Share
  • காதலுக்குப் பச்சைக்கொடி

    — விசாலம்.

     

     

    titwala ganesh2
    சாதாரணமாகக் காதலர்கள் சந்திக்கும் இடம் ஒரு பார்க்கோ, பீச்சோ அல்லது  மாலோ  என்று இருக்க,  ஒரு வித்தியாசமான  இடத்தில் சந்திப்பை  மும்பையில் நான் பல தடவைகள் கண்டிருக்கிறேன்.

    ஒரு பிள்ளையார் ஆலயம் … எப்போதும் அங்கு  சில இள வட்டங்களின் கூட்டம்.  ஆண்கள்,  பெண்களின் கூட்டம். அதுவும் எல்லோரும் காலேஜ் போகும்  நேரம் புஸ்தகமும் கையுமாய்   காலையிலும், மாலையிலும்  தங்கள்  காதலனுடன்  இந்தக்கோயிலுக்கு வந்து வணங்குகிறார்கள்.  கோயிலில் இருந்து அருள் புரிபவர் யாரென்றால்  அட ! நம்ம பிள்ளையார்தான். இதிலிருந்தே தெரிகிறது காதலுக்கும் அந்தப் பிள்ளையாருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று, நானும் அங்கு போயிருந்தேன். அட, எனக்கும் ஏதாவது காதலா என்ன? இந்த வயதில் காதல் கேட்கிறதா என்றக் குரல் கேட்கிறது. அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் மும்பைவாசி. பிறந்ததிலிருந்து திருமணம் ஆகும் வரை ஆணி அடித்தாற்போல் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததில்லை. என் வீடும் இந்தப்பிள்ளையார் கோயில் அருகில் தான் இருந்தது. ஆகையால் எப்போது மும்பய்க்கு  விஜயம் செய்தாலும் இந்த கணபதி பப்பா  என்னை அழைத்துவிடுவார். அவரைப்பார்க்காமல் இருக்க மாட்டேன். இவருக்கும் காதலுக்கும் ஒரு புராண சம்பந்தம் இருப்பதைப் பற்றிச் செவி வழியாகக்  கேட்ட செய்தி இது. சகுந்தலையும் துஷ்யந்தனும் தங்கள்  திருமணத்தை இந்தப் பிள்ளையார் சன்னதியில் தான் செய்து கொண்டனராம்.  கண்வ முனிவர் ஆசிரமத்தில் முதலில் அவர்கள் காந்தர்வ விவாகம் செய்து கொண்டார்கள்.  ஆனால் துர்வாசரின் சாபத்தினால் அரசன் துஷ்யந்தன்  சகுந்தலையை  மறந்து போனான். சகுந்தலையும் இந்தக்கணபதியை சதா சர்வகாலமும்  நினைந்து நினைந்து உருகி வேண்டிக்கொள்வாள்.

    “அப்பா தும்பிக்கை கணபதியே, என் கணவர் துஷ்யந்தன்  என்னை  காந்தர்வ்  மணம்  புரிந்துக்கொண்ட பின்  தனது ராஜ்ஜியத்திற்குப் போய் உடனே தகுந்த மரியாதைகளுடன்  என்னை அழைத்துப்போவதாகச்சொல்லிவிட்டு  போனாரே. ஆனால் இன்னும் வரவில்லையே! அவரை எப்படியாவது என்னை வந்து அழைத்துப்போக அருள் செய் கணேசா.” என்று வேண்டிக்கொள்வாள்.

    இது ஒரு நாள், இரண்டு நாள் செய்த வேண்டுதல் இல்லை. தினமும் மனமுருகி கண்கள் கலங்கி நின்ற வேண்டுதல். ‘சோக வினாச காரணம்’ என்றும்  ‘விக்ன ஹரண வினாயகா’ என்றும் பெயர் பெற்ற அந்தக் கருணாமூர்த்தி இவளுடைய வேண்டுகோளை தனது பெரிய முறம் போன்ற காதில் போட்டுக்கொண்டார்.  சகுந்தலையை அவளது கணவருடன் சேர்க்க வேலைகள் செய்ய ஆரம்பித்தார்.  சகுந்தலையை தான் மணந்துக்கொண்ட  செயலை  முற்றிலும் மறந்திருந்த துஷ்யந்தனுக்கு   இந்தக்கணபதி   பழைய ஞாபகத்தை வரவழைக்க   காரணமாயிருந்தார்.  பின் துஷ்யந்தன் தன் தவறுக்கு வருந்தி சகுந்தலையைப்பார்க்க ஓடோடி வந்தார். சகுந்தலையின் மகன் பரத் இருக்க    சகுந்தலையைத் திரும்ப இந்தப்பிள்ளையார் கோயிலில்   மணந்தார்  என்று இந்த ஆலயத்தில் கூறப்படுகிறது. அதனால் இவர் காதலுக்கு வெற்றி தரும் கணபதி ஆனார்.

    titwala ganesh1மும்பையில்  தாதர் ஸ்டேஷன் அருகில்   இருக்கும்  இந்த ‘டிட்வாலா கணபதி’  ஒரு  வரப்பிரசாதி, கேட்டதை வழங்குவார். நான்கு கைகள் கொண்டவர்.  மேல் இரண்டிலும் பாசமும்   அங்குசமும் கீழ் இரண்டில் ஜபமாலையும்  மோதகமும்  கொண்டுள்ளார்,  பாம்பு பூணலாகிறது. கண்கள் அப்படியே மின்னி பளபளக்கின்றன.  ஏன் என்றால் கண்களில் வைரக்கற்கள். பதிக்கப்பட்டிருக்கின்றன. அதே போல் நாபியிலும் வைரக்கற்கள், பார்க்கப் பார்க்க பரவசம்தான்,  நம்முடன் பேசுவது போலவே  இருக்கிறார். அவர் அமர்ந்திருக்கும் பீடம் நாகபந்தனத்திலான பீடம்.  அங்கு எல்லா பூஜை பாத்திரங்களும் தங்கமும் வெள்ளியுமாக  காணமுடிகிறது.

    மும்பையில்   பலர் வீட்டில் இந்த  டிட்வாலா  கணபதியின் படம் இருக்கும். நிஜ  குடுமியுடன்  இருக்கும் தேங்காய் ஓட்டின்  நடுவில் இந்த  கணபதியின் சிலையை வைத்து   வியாபாரம் செய்கின்றனர்.

    அதற்கு நல்ல டிமேண்ட்! என்னிடம் ஒன்று அதுபோல் இருக்கிறது. செவ்வாய்கிழமை அன்று வரும் அங்காரக சதுர்த்திக்கு இங்கு ஒரு கியூ வரிசை நிற்கும் பாருங்கள்!!! திருப்பதியை ஞாபகப்படுத்திவிடும்.

    தவிர கணேச சதுர்த்தி அன்று இங்கு பெரிய விழாவே நடக்கும். கூட்டம் தாங்காது. எங்கும் டெலிவிஷன் அமைக்கப்பட்டு மக்களுக்காக அங்கு நடக்கும் அபிஷேகம் ஆராதனைகள் காட்டப்படும். மக்கள்  இங்கும் மட்டைத்தேங்காய் வாங்கி தங்கள் கோரிக்கைகளை வேண்டிக்கொண்டு பூஜாரியிடம் கொடுக்க, அவர் அதை கணபதி பாதங்களில் வைத்து  அதை அவர்களிடமே திருப்பிக்கொடுப்பார். அதை ஒரு இடத்தில் கட்டிவைக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய் அன்று அங்குப்போய் பூஜை செய்து வரவேண்டும். இது போல் ஐந்து செவ்வாய் செய்ய வேண்டும். ஐந்து வாரம் முடிவதற்குள் நினைத்தது நடந்து விடுவதை நான் பலரிடம் பார்த்திருக்கிறேன்.

    வினாயகருக்கு  வழிபட 21 பச்சிலைகள் உண்டு எனப் புஷ்ப சாஸ்திரம்  சொல்லுகிறது……..

    அருகு, நொச்சி, மாசி, கையாந்தரை, வில்வம், ஊமத்தை, கத்திரி, நாயுருவி, தேவதாரு, வன்னி, நெல்லி, மருவு, அலரி, சிறுசெண்பகம், எருக்கு, மருதம், விஷ்ணுக்ரந்தை, மாவிலை, பாதிரி, செந்தாழை, காட்டகத்தி.

    கணேச சதுர்த்திக்கு என் நல்வாழ்த்துகள்… ஒரு பாடல்  அவர்மேல் பாடி அருளை வேண்டுகிறேன்…

    ராகம்: கல்யாணி   
    தாளம்: ஆதி

    பல்லவி
    ஆதி முதல்வனே ஓம்கார ரூபனே
    அனைத்து வினைகளும் தீர்ப்பவனே
    {ஆதி முதல்வனே}

    அநுபல்லவி:
    வேழ முகத்தோனே ஞானம் தருபவனே
    சிவனின் மைந்தனே அழகனின் சோதரனே
    உந்தன் நாமம்  சொல்லச்சொல்ல
    கிடைக்கும்  ஒரு   பரமானந்தம்
    {ஆதி முதல்வனே}

    சரணம்:
    தாய் தந்தையே உலகம் என்றாய்
    தரமான மாம்பழம்  வெற்றி பெற்றாய்
    பற்பல தலங்ளில் பற்பல வடிவங்கள்
    பற்பல பெயருடன் பற்பல கதைகள்
    அருகம்புல்லில் குளிர்ப்பவனே
    அனைத்து பூஜைக்கும் தலைவனே
    மூஷிக வாஹனனே  மோதகப்பிரியனே
    மதி எங்குச் சென்றாலும் மனம் உன்னை நாட
    அருள் புரிவாய் பார்வதி பாலகனே
    {ஆதி முதல்வனே}

    படம் உதவிக்கு நன்றி:
    https://abhishekkisla.wordpress.com/tag/titwala-ganesh-mandir/
    http://blessingsonthenet.com/indian-temple/photo-gallery/261/titwala-temple-photos

    Share
  • எல்லாம் விட்டல், எங்கும் விட்டல்

    — விசாலம்.

    தன் கண்களை மூடியபடி  அந்த விட்டலைக்கண்டு ரசித்துக்கொண்டிருந்தார் அவர். அந்தப் பேரானந்தம் அவர் முகத்தில் நன்றாகத் தெரிந்தது. அவருடைய அழகான முகம் இன்னும் சுடர் விட்டுப் பிரகாசித்தது. அவரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் ஒரு பெண். . அவர் அழகிலும் அவர் இசையிலும் மனதைப்பறிக்கொடுத்த அவள் அவரது பஜனை சத்தம் கேட்டு அந்தப்பக்கம் நடந்து வந்தாள். அவரது சாந்த முகம் அவளை மேலும் கவர்ந்தது. அவரையே ரசித்தபடி காம இச்சையினால் அங்கேயே  அவர் எப்போது கண் திறந்து  பார்ப்பார் என்று பொறுமையாக அமர்ந்திருந்தாள். கொஞ்சநேரம் கழிந்தது அவர் தன்  கண்களைத் திறந்தார்.  எதிரில் ஒரு பெண் அவரையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவருக்கு அவள் ருக்மிணியாகத்  தென்பட அப்படியே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.

    “என்ன ரகுமாயி ஏன் நீங்கள் தனியாக வந்திருக்கிறீர்கள்? என் விட்டல் வரவில்லையா,  என் விட்டல் எங்கே? “என்றுப் பல கேள்விகளை அடுக்கினார். அந்தப்பெண்ணின் கண்கள் திறந்தன. தன் நிலையைக்கண்டு வெட்கத்தில் தலை குனிந்தாள். அப்படியே அவரை நமஸ்கரித்து “நான் தவறான எண்ணத்தில் இங்கு வந்தேன். என்னை மன்னித்து உங்கள் சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று அவர் காலில் விழுந்தாள். அவர் யார் ?   அவர்தான் ஸ்ரீதுகாராம்.

    வைசிய குடும்பத்தில் பிறந்ததால் ஒரு மளிகைக்கடையும் வைத்திருந்தார்.  ஆனால் அதில் லாபம் வரவில்லை. எப்படி லாபம் வரும்? அவர்தான் “ராதா கிருஷ்ண ஹரே”  என்று யார் சொல்லிக்கொண்டு வந்தாலும் இலவசமாகக்    கேட்கும் பொருளைக்கொடுத்துவிடுவாரே!

    விட்டல் மேல் அத்தனை பக்தி. அவரது ஒவ்வொரு மூச்சிலும் விட்டலனே பரவி இருந்தான். அவரது கடை வாசலில் யாராவது சாது வந்தால் போதும் அவரை உள்ளே அழைத்து அவரது வயிறை நிரப்பி அனுப்புவார். அவரது மனைவி பாவம்! கடையிலிருக்கும் பொருட்கள் எல்லாம் இப்படிப் போகிறதே!  குடும்பத்தை எப்படி நடத்துவது என்று   வருத்தப்படுவாள். அவரது கடை பஜனை மண்டபமாக இருக்கும். அவர் கையில் எப்போதும் தம்பூரா இருக்கும் சிலசமயம் பஜனையுடன் நடனமும் ஆடத்தொடங்கிவிடுவார்.

    அவரது தெரு வழியாக எதாவது கூட்டம் பண்டரிபூர் போனால் தானும் சொல்லாமல் கொள்ளாமல் கடையைத்திறந்து போட்டபடி அவர்களுடன் போய்விடுவார். இதுதான் சந்தர்ப்பம் என்று திருடர்களும் பல பொருட்களை திருடிக்கொண்டு போவார்கள்.  இதைப்பற்றிக் கேட்டால், எல்லாம்  விட்டல் பார்த்துக்கொள்வான்..அவனுக்கு எப்படி காப்பாற்ற வேண்டும் என்று தெரியாதா என்று சொல்லிவிடுவார். இதுவே பூரண சமர்ப்பணம் . .

    tukaramதுகாராம் ஶ்ரீ நாமதேவரின் மறு பிறவி என்று கருதப்படுகிறது.   துகாராம்  சிறுவயது முதலே ஹரிகீர்த்தனங்கள் இயற்றி  வந்தார். அவைகளைக் கையில் வீணை மீட்டியபடி  பாடியும் வருவார்.  சில சமயம் காலில்  சலங்கையைக்கட்டிக்கொண்டு நர்த்தனமும்  ஆடுவார்.    அவர்  வாயில்  “விட்டல் விட்டல்” என்ற ஒலி வர  அவ்வளவுதான்  தன்னையே மறந்துவிடுவார். மிகவும் கருணை உள்ளம் கொண்டவராதலால்  ஏழைகளிடத்தில் மிகக்கருணைக்காட்டி தான்யங்களைத் தானம் செய்து விடுவார்.

    எந்தப்பெண்மணியைக்கண்டாலும்  அவருக்கு  ஒரு தாயைப்பார்ப்பது போலவே தோன்றும். அவர்  ஹரிகீர்த்தனங்கள் பாட ஆரம்பித்தாலோ  அந்தப்பண்டரிநாதனைத்தவிர  வேறு சிந்தனை  இருக்காது .  சத்தியம்  தவிர வேறு ஒன்றும் பேசமாட்டார். தன்னிடமிருப்பதை அவர் தானம் செய்தாலும்  தனக்கென்று  ஒன்றும் யாசித்து வாங்கவும்  மாட்டார்.

    வீட்டில் குடும்பம்  சில நேரம் பசியால் வாடும் போது  அவர் கிருஷ்ணலீலையைச்சொல்லி அவர்கள்   மனதை  மாற்றிப் பசியை மறக்கடிக்கச் செய்வார் . . அவர் வீட்டில்  பக்தர்களின்  கூட்டம்  வந்தபடியே இருக்கும். பஜனை நடந்தபடியே இருக்கும் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களும் அவருக்கு அப்படியே மனப்பாடம் தான். அவர் வாயில் ‘அபங்” என்ற மராட்டிமொழியில் பக்தி சங்கீதம் அடுக்கடுக்காக  வந்த வண்ணம் இருக்கும் . இதனால் பலர் அவரைக்காணச்சென்றனர். அவர் தரிசனத்தினால் நல்ல பலன் கிட்டுவதாகவும் சொன்னதால்  அவரது புகழ் ஓங்கத்தொடங்கியது .

    இவர்  இப்படி அசாத்தியப் புகழைப்பெற்று வந்ததைக்காண இயலாமல்  பொறாமையால் சில பண்டிதர்கள் இவரை நிந்திக்க  ஆரம்பித்தனர்.

    “என்னய்யா  இவன்.  எதாவது சாஸ்திரம் இவனுக்குத்  தெரியுமா? வைசியக்குலத்தில் பிறந்து  ஏதோ பாடல்களைப்புனைகிறான்.   சுதந்திரமாகப்பாடியபடி   இஷ்டபடி   திரிகிறான்”

    “ஆம்!  இவனுக்குலௌகீக  கர்மாக்கள் ஒன்றும் தெரியாது.   எதோ பைத்தியம்  போல் அலைகிறான்.  எதோ அபங்காம்.  அதைப்பாடியபடியே  அலைகிறான் “

    “இவன் எப்படிப்போனால் என்ன? இந்தக்கேடு கெட்ட மக்களும் அவன் பின்னாலேயே சுற்றி  பஜனை செய்கிறார்களே!”

    tukaram2இப்படிப்பல  நிந்தனைகள் அவர் காதிலும் விழுந்ததில்  துகராம்  மிகவும் மனமுடைந்து போனார். பின் ஒரு நிமிடம் யோசித்து  வேகமாக  இந்திராயணி நதிப்பக்கம் நடந்தார். தான் இதுவரையிலும்  எழுதி வைத்த  கீர்த்தனைகள் அடங்கிய புத்தகத்தை  நதியில்  வீசி எறிந்தார்.  எறிந்துவிட்டாரே தவிர மனமெல்லாம்   அந்தப்பாடல்களின் மேலேயே இருந்தது. அவர்  அவைகளை வெறும்  புகழுக்காகவும், பணத்திற்காகவும்   இயற்றவில்லை. எல்லாம் அந்த விட்டலனுக்காகவல்லவா செய்யப்பட்டன. அத்தனைஅபங்குகளும்  அவனுக்காகச் செய்யப்பட்ட  மலர்கள் அல்லவா?  கண்களிருந்து தாரைத்தாரையாக நீர் கொட்டியது.   சாப்பாடும் இறங்கவில்லை, தூக்கமும் வரவில்லை.

    அவரைத்தேடியபடி  அவரது  மனைவி  மக்கள் வந்தனர்.    அவர்களும்  பட்டினி கிடந்தனர். இத்தனை வைபவங்களையும் பார்த்தார் அந்தப் பாண்டுரங்கன். தன் பக்தனின் துக்கத்தைத் தாங்கிக்கொள்வாரா அவர்? தாங்கிக்கொள்ளத்தான் முடியுமா?  கருணாசிந்து அல்லவா அவன்! கிருபாநிதியல்லவா  அவன்! தீனாநாத் அல்லவா  அவன்! நதியில் விழுந்து அலைகளுடன்  ஓடிய அபங்குகள் அடங்கிய புத்தகத்தை எடுத்துவைத்துக்கொண்டார்.

    மறுநாள் ஆதவன் மெல்ல எட்டிப்பார்க்க வானம் அப்படியே  சிவப்பு நிறத்தால் தன்னை அழகுப்படுத்திக்கொண்டது.   காலை வேளை, மரங்களில் குயிலின்  ஒலியும்      காகங்களின் “காகா  கா கா ” சத்தமும்   கேட்க  நடுவே பண்டரிபுர   கோயிலில் நடைத்திறக்க  மெள்ள சுப்ரபாதம் ஒலி வந்துக்கொண்டிருந்தது.  துகராமும் அங்கு வந்து பாண்டுரங்கனின் அழகை அள்ளிப்பெற அவன் முகத்தைப்பார்த்தார். என்ன ஆச்சரியம்!   விட்டலின் தலைமேல்  துகாராமின் அபங்க புத்தகம்  வீற்றிருந்தது. துகாராம் அதனை எடுத்துப்பார்க்க,   சந்தேகமேயில்லை, அதில் இருந்தது அவருடைய கையெழுத்துக்கள் தான்  மனம் நெகிழ “பரந்தாமா  என்னே உன் கருணை? நீரில் வீசியதை நீ எடுத்து எனக்குத் திருப்பிக்கொடுத்திருக்கிறாயே  என் அபங்குகள் உனக்கு அத்தனைப்பிடித்ததா? என் மேல் அத்தனை அன்பா உனக்கு” என்றுக் கதறினார்.

    அவரது அன்புக்கண்ணீரரைப் பார்த்த  பக்தர்களும் அங்குக்கூடிவிட்டனர். இந்த விவரம் பண்டிதர்கள் காதிற்கு எட்டியது. அந்தப் பண்டிதர்களும்  தங்கள் தவறுக்கு துகாராமிடம்  மன்னிப்பு  கேட்டுக்கொண்டார்கள். பலர் அவரைத் தங்கள் குருவாகவும்  சிலர்  தெய்வமாகவும்  ஏற்றுக்கொண்டனர். அவரது அபங்கங்களை சிலர்  கச்சேரியில் பாட ஆரம்பிதிருக்கின்றனர். திரு ஓஸ் அருண், திருமதி அருணா சாயிராம், திருமதி ரஞ்சனி, திருமதி காயத்திரி முதலியவர்கள் இவைகளை பிரபலப்படுத்திவருகின்றனர்.

     

     

     

     

     

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி:  http://antaryamin.wordpress.com/2010/03/31/the-easy-sadhana-by-sri-swami-chidananda/

    Share
  • ஆடி பதினெட்டு பெரு விழா

    –விசாலம்.

    தலைக்காவேரியில்  ஒரு வெள்ளிக்கம்பிப்போல் ஆரம்பிக்கும் காவேரி ஒரு சிறு குளம்போல் தோற்றம் கொடுத்த வண்ணம் பூமிக்கடியில் இறங்கி  பின் சிறிது தூரம் பயணித்தப்பின் பெரிய ஆறாக பெருக்கெடுத்து ஓட ஆரம்பிக்கிறது. ஆரம்பநிலையில் உள்ள காவிரி எல்லோருக்கும் காவேரி அம்மனாக விளங்குவதால் இந்த இடத்திற்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை, ஆடி பதினெட்டாம்பெருக்கு போன்ற நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

    காவேரிஅம்மனின் கோயில்  பூம்புகார், காவிரிப்பாக்கம், சேலம், கும்பகோணத்தில் மேலக்காவேரி, திருச்சேரை  போன்ற இடங்களில் காணமுடிகிறது. திருச்சேரையில் காவேரி அம்மனும் ஸ்ரீ மார்க்கண்டேயரும் விஷ்ணுவைப்பூஜித்தாக புராணம் சொல்கிறது.  இங்கு விஷ்ணு  சாரநாதன் என்ற பெயரிலும் தாயார்  சாரநாயகி என்ற பெயரில் அருள் புரிகின்றனர். சேலம் ஏற்காடு பகுதியில் கடல்மட்டத்திலிருந்து 342 உயரத்தில் சர்வராயன் மலையில் காவேரிஅம்மனின் கோயில் இருக்கிறது. அந்த அம்மன் பல மலைஜாதி மக்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறாள்.

    சமீபத்தில் நான் பார்த்து மகிழ்ந்த காவேரி அம்மன் கோயில் திருச்சியில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு வடக்கில் அமைந்துள்ளது. இங்கு நாங்கள் போன காரணம் என்னவென்றால் எங்கள் வீட்டில் சமீபத்தில் தோண்டிய ஆழ்குழாயில் தண்ணீர் வற்றாமல் வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யத்தான். எங்கள் அன்பர் ஒருவர் இந்தக்கோயிலைப்பற்றி இந்த அருமையான தகவலைத்தெரிவித்தார். அதாவது வீட்டில் கிணறு, குழாய் போன்றவை என்றும் நீர் வளத்துடன் இருக்க இந்தக்காவேரி அம்மனுக்கு வேண்டிக்கொண்டு காவேரி நதி தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்து பின் அந்த நீரை வீட்டிற்கும் எடுத்துப்போய் கிணற்றில் ஊற்ற வேண்டும். இது போல் செய்ய தண்ணீர்ப்பஞ்சமே இருக்காது என்ற நம்பிக்கை பலருக்கு இருக்கிறது. ஆடிபதினெட்டாம் பெருக்கு திருவிழா இங்கு மிக விமரிசையாக நடக்கிறது. நீர் வளம் அதிகம் பெருக இந்த அம்மனிடம் வந்து வேண்டிக்கொண்டு கிணறு வெட்ட, கிணறு என்றும் நிரம்ப்பி இருக்குமாம். காவேரி அம்மனுக்கு எதிரில் அதிகார நந்தி இருப்பது மிக விசேஷமாக கருதப்படுகிறது. முன் காலத்தில் இந்தக்கோயில் சோலைகள் சூழ்ந்து மிகப்பசுமையாக இருந்ததாம். முன்பு மிகவும் ஆக்ரோஷத்துடன்  அங்கும் இங்குமாக பாய்ந்து
    ஓடிய காவேரிக்கு சோழமன்னனான  கரிகால சோழன் வாய்க்கால் அமைத்து அதை ஒழுங்கு செய்தானாம். இதிலிருந்தே தெரிகிறது இது எத்தனை பழமையான கோயில் என்பது. ஆனால் நாகரீகம் வளர அந்தச்சோலைகள் அழிந்து தற்போது பல அடுக்கு மாடிக் கட்டடங்கள் வந்து அதன் அழகை குறைந்து விட்டனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

    aadi perukkuஐம்பது வருடங்கள் பின்னோக்கி என் நினைவு செல்கிறது. கும்பகோணத்தில் மேலக்காவேரி அருகே சில மாதங்கள் என் பாட்டி வீட்டில் இருக்க நேர்ந்தது.

    அப்போது ஆடி மாதம் பிறந்து எல்லா கோயில்களிலும் சரியான கூட்டம். என் அம்மா என்னிடம்  ” இதப் பாரு, பதினெட்டாம் பெருக்கு வரது,  அதுக்கு முறம் வேணும். அடுத்த தெருவுக்குப் போய் ஒரு முறம் வாங்கிண்டு வா.”

    “முறமா ? அது எதுக்கு அம்மா?ஆத்தில் தான் ஒரு முறம் இருக்கே “

    “அதில்லேடி இந்த முறம் காவேரி ஆத்தில விடணும். அதப் பத்தி அப்பறம் சொல்றேன்,  நீ கடைக்கு இப்பவே போ. ஒரு முறமாக வாங்காதே. இரண்டு முறமாகத்தான் வாங்கணும், சரியா?” என்றபடி  சில  நயா  பைசாக்கள்  கொடுத்தாள்.   அப்போதெல்லாம் ஒரு நாலணாவுக்குக்கூட  சாமான்கள்   வாங்கமுடியும். நான் அப்போது  பாலும் பழமும் என்று சொல்லும் டிசைனில் பாவாடையும்  பஃப் வைத்த சட்டையும் போட்டிருந்தேன். பாலும் பழமும் டிசைன்  என்பது  மஞ்சள், பச்சை, சிவப்பு போன்ற நிறங்களுடன் பல கட்டங்கள் நிறைந்து   இருக்கும். என்  தலையையும் படியப்படிய வாரி பின்னி  தலையில்  பூச்சரமும்  வைத்துவிடுவார் என் பாட்டி. பதினெட்டாம் பெருக்கு  திருவிழாவும் வந்தது. நாங்கள்  காவேரி ஆற்றங்கரைக்குச் சென்றோம். என் தாய் முறத்தில் வெற்றிலை,  பாக்கு, வாழைப்பழம், காதோலை, கருகமணி, மஞ்சள் சரடு வைத்து பின் தேங்காயையும் உடைத்து அதில் வைத்தாள். பின்னர் ஒரு வாழைமட்டையில் தீபங்களை ஏற்றி வைத்து அதையும் முறத்தில் வைத்து  காவேரி அம்மனின் பல ஸ்லோகங்களைச்சொல்லியபடியே ஆற்றில் விட்டாள். அது கொஞ்ச நேரம் மிதந்து பின் கவிழ்ந்து எல்லா பொருட்களும் ஆற்றில் கலந்து சிதறியபடியே போகும் அழகு இருக்கிறதே அதைப்பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது.  பின் பல சுங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது.  பின் குடும்பத்தில் பல அங்கத்தினர்களுடன் புளியஞ்சாதம், தேங்காய் சாதம், அவியல், தயிர் சாதம், வடாம், வற்றல் என்று காவிரி அம்மனுக்கு நைவேத்தியம் செய்துவிட்டு பின்  எல்லோரும் ஒரு வெட்டு வெட்டியதும் ஞாபகம் வருகிறது. அன்று ரசம் தள்ளுபடி. ஏன் என்று தெரியவில்லை. வடக்கில் கங்கை கரையோரத்தில் இதேபோல் மாலையில் கங்கா ஆர்த்தி நடைப்பெறும். அங்கேயும் இதேபோல் அகல் விளக்குகளை ஏற்றி மட்டைகளில் வைத்து மிதக்கவிடுகிறார்கள். எல்லா விளக்குகளும் ஒரே நேரத்தில் கங்கையில் மிதக்கும் காட்சி ஒரு கண்கொள்ளாக் காட்சிதான்.

    விவசாயிகளுக்கு இன்று மிக சிறப்பான நாள். ஆடிப்பட்டம் தேடி விதை என்பதை ஒப்ப  இவர்கள் புது விதைகள் வாங்கி பிரார்த்தனை செய்து அதைத்தூவி வரப்போகும் பொங்கல் திருநாளில் அமோகமான விளைச்சல் காண வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறார்கள்.  அவர்கள் அன்று காலை எழுந்ததும் காவிரித்தாயிடம் நீர்வளம் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார்கள்.  நீர்வளம், நில வளம் இருந்தால் தான் பயிர் விளைச்சல். பயிர் விளைச்சல் இருந்தால்தான் நாடு சுபீட்சம் , இதை அவர்கள் நன்கு உணர்ந்துக்கொண்டு இந்த நன்னாளில் பிராத்தனையுடன் நிலம் உழுதலல், விதை விதைத்தல் போன்றவைகளை செய்வது மிகவும் பாராட்டப்பட வேண்டியது. “நம் எல்லோருக்கும் ஓர் இறைவன் ” நாமும் அவர்களுடன் சேர்ந்து காவேரி அம்மனை நாமும்  பிரார்த்திப்போம் …

    படம் உதவிக்கு நன்றி:
    http://www.kamakoti.org/kamakoti/details/aadi1.jpg
    http://media.webdunia.com/_media/ta/img/article/2014-07/21/full/1405954896-2474.jpg

    Share
  • வேதவியாசர் கோயில்

    –விசாலம்

    வடக்கில் கங்கை கங்கோத்திரியிலிருந்து  ஒரு வெள்ளிக்கம்பி போல ஆரம்பித்து  சில இடங்களில் அமைதியாகவும் சில இடங்களில் ஆக்ரோஷமாகவும்  பாய்ந்து ஓடுகிறது. புனித கங்கை ரிஷிகேசத்திலிருந்து ஏழு கிளைகளாகப் பிரிந்து  மிக வேகமாக சீற்றத்துடன்  பிரவாகமாக ஓடி வருகின்றது. இந்த  கங்கை கரையில்  இருப்பது ஹரிதுவார் என்ற  ஒரு க்ஷேத்திரம். ஹரியின் வாசல் என்று தமிழில் பொருள் வருகிறத. இந்த ஹரிதுவாரிலிருந்து சுமார் எட்டு கிமீ சென்றால் ஸ்ரீ வேதவியாசர் கோயில் வந்துவிடும். இந்த இடத்தின் பெயர் சப்தசரோவர் .. அதாவது, ஏழு ஏரி என்ற பொருள். இந்த இடத்திற்கு நான் பள்ளி மாணவர்களுடன் வந்திருக்கிறேன். ஸ்ரீ சுதீந்திர தீர்த்த மகாசுவாமிகள் இந்தக்கோயிலை சுமார் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் மிக அழகாகக் கட்டியிருக்கிறார்.

    யார் இந்த வேதவியாசர்? அவருக்கு ஏன் கோயில் கட்ட வேண்டும் ?

    ஒரு சமயம் பராசர முனிவர் சிவனை நோக்கி தவம் இருநதார்.  சிவனும் அவர் முன் தோன்றி “உன் சிவபக்திக்கு மெச்சினேன் உன்னுடைய குமாரன்  வேதங்களில் நன்கு தேர்ச்சி பெற்று உலகமக்களின் நன்மைக்காக வேதங்களைத் தொகுத்து அளிப்பார்”  என்று கூறி மறைந்தார்.

    பராசர முனிவருக்கும்  சத்யவதிக்கும்  ஒரு மகன் பிறந்தான். பெற்றோர்   அவருக்கு கிருஷ்ண துவைபாயனர்  என்று பெயரிட்டனர். அந்த  பரமேஸ்வரன் கூறியபடி  அவர் தன் தகப்பனார் மகரிஷி பராசரரிடத்தில் வேதம் பயின்றார். பின்னர் பதஞ்சலியிடமிருந்தும் ஆழமாக சென்று சிறந்த பாண்டித்யம் பெற்றார்.  பின் தேசயாத்திரை தொடங்கி பல இடங்களிலிருந்தும் வேதங்களைச் சேகரித்தார். பின்னர் அதை நான்காகப்பிரித்தார். அவையே ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம். பின்னர் தன்னுடைய நான்கு சீடர்களுக்கு அளித்தார்.

    ரிக்வேதத்தை  பைல முனிவருக்கும், யஜூர் வேதம் வைசம்பாயனருக்கும்,  சாம வேதத்தை  ஜைமினி முனிவருக்கும், சுமந்து முனிவருக்கு  அதர்வணவேதத்தையும் கற்றுக்கொடுத்தார். இப்படி வேதத்தைப்பிரித்துக்கொடுத்ததால்  இவருக்கு வேத வியாசர் என்ற பெயர் வந்து  சேர்ந்தது.

    பின் இவர் பிரும்ம சூத்திரம் என்ற அரிய நூலை எழுதி நமக்கெல்லாம் ஒரு பொக்கிஷமாக அருளியிருக்கிறார். மேலும் நமக்கு வேதம், உபநிஷதம், புராணங்கள் போன்று பல பொக்கிஷங்கள்  அவர் மூலம் கிடைத்திருக்கின்றன.

    மகாபாரதத்தில் போர் கடுமையாக நடந்து அதில் பலர் மடிந்தனர். மகாபரதப்போரை கண் தெரியாமல் இருந்த திருதாஷ்டிரர் பார்க்க விரும்பினார். யுத்தபூமியில் நடக்கும் எல்லா காட்சிகளையும் அரண்மணையில் இருந்தபடியே வர்ணிக்கும் சக்தியை சஞ்சயனுக்கு அளித்து திருதாஷ்டிரரது ஆசையைப்பூர்த்தி செய்தவர் ஸ்ரீ வேதவியாசர் தான். அவரிடம் அத்தனை சக்தி  இருந்தது. போர் முடிந்த பின் குந்தி தேவியுடனும் மன்னர் திருதிராஷ்டிரனுடனும் சில நாட்கள் வியாசமுனிவர் தங்கினார். அப்போது மன்னர் போரினால் தனது செல்வங்கள் அனைவரும் அழிந்து  அத்துடன் பல உறவினர்ளையும் இழந்து விட்டேனே என்று வருந்தி, மறுபடியும்  அவர்களைப்பார்க்க மிகவும் ஆசையாக உள்ளது என்று வியாசமுனிவரிடம் தன் ஏக்கத்தைத் தெரிவித்தார் , வியாசமுனிவரும் அவரை கங்கைக்கரைக்கு  அழைத்துபோனார்  மகா பாரதப்போரில் இறந்தவர்களை வரச்சொன்னார். இறந்தவர்களும் அரச உடைகளுடன், அலங்காரமாக தங்களது தேரில்  வந்து காட்சியளித்தார்கள். இதனால் திருதாஷ்டிரரின் ஏக்கம் தீர்ந்ததாம்.  இந்தச்சம்பவம் ஒரு கதாகாலட்சேபத்தில் கேட்டது.

    தவிர  மஹாபாரதத்தை ஸ்ரீ வியாசர் சொல்லிக்கொண்டு வர ஸ்ரீ மகாகணபதியே  அதை எழுதினார் என்பதை நாம் புராணங்கள் வாயிலாக தெரிந்துக்கொள்கிறோம். இத்தனைச்சிறப்பு பெற்ற ஸ்ரீவியாசபகவானுக்கு ஒரு கோயில் இல்லையே என்ற ஏக்கம் ஸ்ரீ சர்தார்வல்லப பாய் பட்டேலுக்கு இருந்தது இதற்காக அவர்  ஸ்ரீ வியாசபகவானுக்கு ஒரு ஆறடி சிலை  தயார் செய்து அதை யமுனை நதிக்கரையில் “குல்பீ” என்னும் இடத்தில் பிரதிஷ்டை செய்தார்.ஆனால் அங்கு நித்தியப்படி பூஜை . புனஸ்காரம் நடத்தப்படவில்லை .

    ஒரு நாள்  காசியில்  காசிமட சமஸ்தானத்தின் முதல் ஆச்சாரியார் ஸ்ரீ யாதவேந்திர தீர்த்த சுவாமிகள் கங்கையில் ஸ்னானம் செய்ய இறங்கினார். அவர் காலில் ஏதோ ஒன்று பளுவாக தட்டுப்பட்டது. முதலையாக இருக்குமோ என்று எண்ணினார். ஆனால் அது கற்போல் காலில் தட்டுப்பட்டதால் குனிந்து அதை எடுத்தார். அது ஒரு அழகான விக்கிரகம். அதுவும் ஶ்ரீ வேத வியாசரின் விக்கிரகம். அதை தன் மடத்தில் எடுத்துக்கொண்டு  போய் தினமும் பூஜை செய்யலானார். வரிசை வரிசையாக அது பலரால் பூஜிக்கப்பட்டது, பின்னர் காசி மடத்து  சமஸ்தான இருபதாவது பட்டத்தில் அருளப்பட்ட ஸ்ரீ சுதீந்திர தீர்த்த மகா சுவாமிகள் இவருக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று கடும் முயற்சியில் இறங்கி  வெற்றியும் கண்டார்.

    Veda Vyas templeஇனி கோயிலைப் பார்ப்போம். கோயிலின் முகப்பில் அஷ்டதிக்கு பாலகர்கள் இல்லை. அதற்கு பதிலாக இரண்டு முனி குமாரர்கள் நின்றபடி இருக்கின்றனர். பிரகார சுவர்களில் பல சித்திரங்கள் காணப்படுகின்றன. இதில் ஸ்ரீராமர், சீதாதேவி, ஸ்ரீ நரசிம்மர்,  ஸ்ரீ பாலாஜி,  கீதாநாயகன் கண்ணன், ஸ்ரீ வியாசபகவானின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைக்  காணமுடிகிறது. கர்ப்பகிரகத்தில் ஸ்ரீ வியாசபகவான் எழந்தருளியுள்ளார். அவரின் நான்கு பக்கங்களிலும் நான்கு சீடர்களான பைலமுனிவர், வைசம்பாயனர், ஜைமினி முனிவர், சுமந்து முனிவர்  ஆகியோர் தனித்தனி சன்னிதியில் அருள் புரிகின்றனர்.

    தவிர சப்தரிஷிகள் ஸ்ரீ காச்யபர், கௌதமர் , ஜமதக்னி , அத்ரி ,பரத்வாஜர், விஸ்வாமித்ரர் ,வசிஷ்டர் இவர்களின் உருவங்கள்  நான்கு பக்கச்சுவர்களிலும் பெரிய அளவில் மிக அருமையாக  வரையப்பட்டுள்ளன.

    கோயிலின் கோபுரம் சுமார் அறுபது அடியாகும் கோயிலில் தங்க விடுதிகளும் சமையல் செய்யும் கூடங்களும் உள்ளன. தவிர ஆயுர்வேத மருத்துவம், பெரிய நூலகம், வேதபாடசாலை  என்று பல பாகங்களைப் பார்க்கமுடிகிறது . உத்திரபிரதேசத்திற்கு இந்தக்கோயில் மேலும் பெருமை சேர்க்கிறது என்றால் மிகையாகாது.

     

     

     

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி: http://arundathiga.blogspot.com/2008/08/badrinath-to-bangalore-may-2008.html

    Share
  • மன இருள் நீக்கி

    விசாலம்

    குரு பூர்ணிமா என்றாலே என் மனதில்  வந்து நிற்பது அந்த   தத்தாத்ரேயர்தான். சம்ஸ்கிருதத்தில் பூர்ணிமா என்பது நமது மொழியில் பௌர்ணமி  என்கிறோம். சூரியனின் ஒளி சந்திரன் மேல் விழுகிறது . சந்திரனுக்கு தனக்கென்று ஒளி ஒன்றும் இல்லை. சூரியன், பூமியின் நிழல்  சந்திரன் மேல் விழ  நம் கண்களுக்கு சந்திரன் பல பிறைகளாக  தோற்றமளித்து பின் பௌர்ணமி நிலவாக தெரிகிறது.

    ஜோசியத்தில் சூரியன் ஆத்மாவாகவும் சந்திரன் மனமாகவும் சொல்லப்படுகிறது. இனி இதை நம் உடலில் வைத்துப்பார்க்கலாம். உடலில் இருக்கும் ஆன்மா எப்போதும் ஒளிவீசிக்கொண்டே இருக்கிறது.  அந்த ஒளியை உணர்ந்து கொள்பவர்கள்தான் மகானாகத் திகழ்கிறார்கள். சாதாரண மனிதன் இதைக்காணமுடிவதில்லை, ஏனென்றால் மாயை அந்த ஒளியை மறைத்துக்கொண்டிருக்கிறது. அந்த மாயையை அகற்றி உள்ளிருக்கும் ஆன்மாவைக்கண்டுக்கொள்ள ஒரு குரு தேவைப்படுகிறது.  மாயை என்பது ஒரே  இருட்டாக சரியான இடம்  போகத்தெரியாமல்  ஒருவனை திண்டாட வைக்கிறது. இதனால் அவன் அந்த மாயவலையில் மாட்டிக்கொண்டு வெளியே மீண்டுவரமுடியாமல்  தத்தளிக்கிறான். மனதுக்குள் இருக்கும் இந்த இருளைப்போக்கி ஒளியை நமக்குக் காட்டி சத் .சித் ஆனந்தத்தை  அனுபவிக்கச்செய்பவர் தான் குரு.

    நாம் பல கலைகளைக் கற்றுக்கொள்கிறோம். அவைகளைப் போதிப்பவர் ஆசிரியர்கள். சம்ஸ்கிருதத்தில் ஆசார்யா என்று வரும்.  ஒவ்வொருவருக்கும் ஒரே குரு தான் இருக்க முடியும் ஆனால் ஆசார்யார்கள் பலர் இருப்பார்கள். ஒருவருக்கு இரண்டு மூன்று குருமார்கள் இருந்தால் அவர்கள் கொடுக்கும் தீட்சை வேறுபடும். .மந்திரம் வேறுபடும்.  அணுகுமுறையும் மாற வாய்ப்புண்டு. ஆகையால் ஒரே குருவைத்தேடி கடைசிவரை அவரையே ஆராதிக்க வேண்டும். ஆனால் சரியான குரு கிடைத்து  அவரால் பல நன்னமைகள் அடைந்து சத்சித் ஆனந்தம் அனுபவிக்கும் பாக்கியம் உடையவர் மிகச்சிலரே .

    நான் முதலில் சொன்ன ஸ்ரீ தத்தாத்ரேயர் தனக்கென்று தனி குருவைத்தேடவில்லை. அவர்    இயற்கையிலிருந்தே  பல குருவைத் தேர்ந்தெடுத்தார். மும்மூர்த்திகளின் சங்கமமாக அத்ரி முனிவரின் தர்மபத்தினி அனுசுயா மூலம் அவதரித்த தத்தாத்ரேயர் சிறு வயதிலிருந்தே பெரிய ஞானியாக திகழ்ந்தார். அவரைச்சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். தத்தாத்ரேயர் அவர்களைத் தவிர்க்க முயற்சிப்பார். ஒரு தடவை அவர்  ஒரு நதியில் ஸ்னானம் செய்ய இறங்கினார். ஆனால் அவர் நதியிலே மூழ்கி இருந்து மூன்று நாட்கள் வெளியில் வரவில்லை. மூன்றாவது நாள் அவர் வெளியில் வந்ததும் பார்த்தால்  அந்தக்கூட்டம் அப்படியே நின்றபடி இருந்தது. திரும்பவும் மூழ்கி தனது சக்தியினால் ஒரு கையில் மது புட்டியும் இன்னொரு பக்கம் ஒரு மாதுவை அணைத்தபடி  வெளியே வந்தார். அந்தக்கூட்டம் அவர் யோகா சக்தியிலிருந்து மாறி மாயையின் வலையில் விழுந்து விட்டதாக நினைத்து அவரை விட்டு விலகியது. அதன் பின் தத்தாத்ரேயர் தன்னுடைய உடலில் இருந்த ஒரு துண்டையும் வீசிப்போட்டுவிட்டு அவதூதராக மாறினார். பின் வேதாந்தத்தைப்பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். அவருடைய கீதை  “அவதூத கீதை” என பிரசித்தி பெற்றது . இதைப் படிக்க ஆத்மஞானம் பற்றி அநேக விஷ்யங்கள் தெரிய வரும் .

    thathathreyarஒரு தடவை மன்னர் யது  தத்தாத்ரேயரைப் பார்த்தார்…,

    “சுவாமி  நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் காரணம் என்னவோ? அந்த ரகசியத்தை எனக்கும் சொல்ல வேண்டும். தங்கள் குரு யார் ?”

    “என் குரு என் ஆன்மாதான். அந்த ஆன்மாவை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன் அதுதான் என் ஆனந்தத்தின் காரணம். தவிர குரு என்று சொல்லப்போனால் இருபத்தினாலு குரு உள்ளனர். அவர்கள் மூலம் என் அறிவு வளர்ந்தது”

    “அவர்கள் யார் யார் என தெரியப்படுத்துங்கள் “

    “அவை  பூமி,  தண்ணீர், காற்று,  நெருப்பு,  ஆகாயம், நிலா, சூரியன், புறா , மலைப்பாம்பு, கடல் , விட்டிற்பூச்சி, வண்டு , தேன்  ,ஆண்யானை, மான், மீன், பிங்கலை ,  பறவை, குழந்தை , மாது , பாம்பு,  அம்பு செய்பவன், சிலந்தி , குளவி”

    இவைகளிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களையும் விளக்கமாக சொன்னவுடன் மன்னர் யதுவும்  எல்லாம் துறந்து தவம் நாடிச்சென்றார்.

    குரு பிரும்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர:
    குரு சாட்சாத் பரப்பிரும்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம 

    படம் உதவிக்கு நன்றி:  http://santhipriyaspages.blogspot.com/2011/10/blog-post_05.html

    Share
  • புலிக்கொடியின் மாட்சி

    –விசாலம்.
    சோழன்

    முன்னுரை:
    என் பூர்வீகம் தஞ்சாவூர். நான் அங்கு அடிக்கடி போய் அமரும் இடம்   தஞ்சை  பெரிய கோயில்.   அருள் மிகு பிரகதீஸ்வரர் கோயில். கல்லிலே கலை வண்ணம் கண்டேன்  என் மனதில் அழியா இடம் பெற்ற பேரரசர் திரு ராஜராஜ  சோழன். அவரது சரித்திரத்தை ஒரு கவிதை போல எழுத வேண்டும் என்ற ஆவலால் இதை எழுதினேன். எழுதும் போது என் கண் முன் அந்த மன்னரையே கண்டேன். அவர் பின்னால் தஞ்சைப்பெரிய கோயிலும் கம்பீரமாக நின்றது.

    அது  ஒரு பொற்காலம் ………….

    சோழ வள நாடாம், அதில் உயர் தஞ்சைக் கண்டு,
    தூயத்தமிழ் நாட்டின் தலைமை அதைக் கொண்டு,
    புகழ்  உச்சி  ஏணியில்  புலிக் கொடி நாட்டி,
    “அருள் மொழி வர்மனாம்” அருளைக் காட்டி,
    சிவனுடைய அருள் முழுமை பெற்று,
    ஒவ்வொரு மூச்சிலும்  சிவனே நின்று,
    கண்டறியாத அற்புதமாய்  நின்றது தஞ்சைக்  கோவில்
    ஆயிரம் வருடங்கள் ஆனாலும் அழியாத கற்கோவில்,
    கலை நுட்பம் சிறந்த அழகுத்திருகோயில் ,
    கண்டவர் பரவசம், காண்பவர் வியக்கும் கோவில்
    பிரும்மாண்ட சிவலிங்கம் அருள்  புரியும் கோயில்
    அவனைப்பார்க்கும்  நந்தியோ மனதை அள்ளும் கோயில்
    மலர் மணக்கும் கோவில்கள்
    மா பெரும்  விழாக்கள்.
    ஒன்றுபட்ட மனத்தாலே உழைத்திடும்  கரங்கள்,
    சாலை இரு புறமும் நிழல் கொடுக்கும் மரங்கள்.

    அது ஒரு பொற்காலம், மக்கள் மகிழ்காலம்
    அருள்மொழிவர்மன் திரு ராஜராஜன் வாழியவே

    ராஜகேசரி வர்மன்   நீதானே
    மும்முடி சோழன்  நீதானே,
    சிவபாத சேகரா நீதானே
    ஸ்ரீ ராஜராஜனும்  நீதானே
    சிவனருள் பெற்றவன்  நீதானே
    தமிழ் நாட்டின்  பெருமையும் நீதானே

    அது ஒரு பொற்காலம் மக்கள்  மகிழ்ந்தக்  காலம்
    அருள்மொழி வர்மன்  திரு ராஜ ராஜன் வாழியவே !

    எங்கும்  புலிக்கொடியின்  மாட்சி கொடிக்கட்டி பறந்தது ஆட்சி
    அருளோங்க, ஒளியோங்க   மகிழ்வோங்க, வாழ்வோங்க
    பொருள் வளம் ஓங்க, புலமை எழில்  ஓங்க  சிவ நாமம்  ஓங்க
    மாவீரன் எனப் பெயரோங்க சோழவளநாடு புகழோங்க
    நாற்றிசையும்  வெற்றிப் பேரிகையும்  ஓங்க சீரும் சிறப்புமோங்க,
    சொற்சுவையும் பொருட்சுவையும்  ஒருங்கே ஓங்க
    அயல்  நாட்டிலும் செந்தமிழ்   ஓங்க,
    வேற்றுமை நீங்கி  ஒற்றுமை  ஓங்க
    கலைகளும் சுடர் விட  காவியமும்  பெருகிட,
    தாயின் அன்பில் கோவிலும் எழும்பிட,
    அரசில் புதுமைகள்  தின்ந்தோரும் தோன்றிட,
    வைணவமும்  மதித்து  திருமால் கோவிலும் எழுப்பிட,
    ‘சூடாமணிவிஹாரா” என்ற புத்தக் கோவிலும்  வந்திட,
    கங்கைக் கொண்ட சோழபுரமாம் வானளாவ

    அது ஒரு பொற்காலம் மக்கள்  மகிழ்ந்தக்  காலம்
    அருள்மொழி வர்மன்  திரு ராஜ ராஜன் வாழியவே !

    தஞ்சை திருச்சி  முதல் ஆட்சி ,
    வட ஆற்காட்டிலும் புலிக்கொடி மாட்சி,
    பாஸ்கரவர்மனும்  தோல்வி கண்டான்,
    அமரபுஜங்கனும்  மாட்டிக் கொண்டான்,
    கண்டலூரிலும் புலிக்கொடி பறக்க
    கப்பற்படைகள்   தோல்வி அடிக்க,
    வில்லினம்  துறைமுகம்  சோழன்  கையில்
    எல்லா துறைமுகம்  அவன்  வசத்தில்
    கங்குவர்  நொலம்பர்   யாவரும்  பணிய,
    வேங்கி, குடகு  எல்லாம்  அவன்  கீழ்,
    தக்கிணத்திலும் “சாலுக்யா
    தோல்வி் கண்டான்  “சத்யஸ்ரயா ‘
    சேர பாண்டியன்  உடன்படிக்கை,
    இலங்கை  அரசனுக்கு உதவும் கை,
    சீறி எழுந்தது புலிக்கொடி
    எங்கும்  பறந்தது  வீரக்கொடி ,
    அரசன் மஹீந்தரன்  தோல்வி,
    சோழனின்   கொடிக்கு வெற்றி

    அது ஒரு பொற்காலம் மக்கள்  மகிழ்ந்தக்  காலம்
    அருள்மொழி வர்மன்  திரு ராஜ ராஜன் வாழியவே !

     

    படம் உதவிக்கு நன்றி: https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcTn3wClbq7QjvXHtP1Jkdg8zjtoqlUZz7brRnmxb2T5wnpBqCFF

    Share
  • ஜெய் ஜெய் ஹரி போல்!

    -விசாலம்

    radhakrishnaமணிப்பூர் மக்களுக்குப் பங்குனி மாதப் பௌர்ணமி  வந்தாலே கொண்டாட்டம்தான். இந்த மாதத்தில்தான் இரண்டு விழாக்கள் மிகவும் கோலாகலமாக நடக்கும். நம் தீபாவளியின்போது  நாம், ’இருள் நீங்கி ஒளி பரவி நாடு நலமாகட்டும்! நாட்டு மக்கள் வளமாகட்டும்!’ என்று வாழ்த்துவதுபோல்  மணிப்பூர் மக்களும் இந்த விழாக்களால் இருள் நீங்கி ஒளி பரவி பல நன்மைகளும் சுபிட்சங்களும் கிடைக்கும் என நம்புகிறார்கள். அதுவும் வானத்தில் முழு நிலவு ஒளி வீசப்  பௌர்ணமி நிலவின் ஒளி எல்லா இடங்களிலும் பரவ ஆட்டமும் கொண்டாட்டமும் களைக்கட்டும். மணிப்பூர் இருக்கும் இடமும் கொள்ளை அழகு. இயற்கை அன்னை அங்கு நன்கு வியாபித்திருக்கிறாள்.

    இந்தியாவின் வடகிழக்குப்பகுதியில்  இருக்கும் மலைப்பிரதேசத்தின் பள்ளத்தாக்குப் பகுதியில் நதி ஓடும் அழகைச் சொல்வதா? மலைச்சரிவில் வெள்ளிக் கம்பிப்போல் வழியும் நீரின்  அழகைச்சொல்வதா? மலைப்பிரதேச ஊசி இலைக்காடுகளின் அழகைச்சொல்வதா? அங்கு ஆடும் மணிப்புரி நடனத்தின் அழகை ரசிப்பதா? இத்தனைக்கும் மேலாக அங்கு கொண்டாடப்படும் ‘யவொசாங்‘  என்ற திருவிழா மறக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது.

    மணிப்பூர் பாமன் என்ற பிராம்மண  மக்களுக்குத் தெய்வமாக விளங்குவது கீதை நாயகன்  கிருஷ்ணர்தான். இவர்கள் ராதா கிருஷ்ண பிரேமையை ‘ராஸ்லீலா’  என்ற நடனம் மூலம்  வெளிப்படுத்துவார்கள். ‘யவொசாங்’ என்றால் பக்தியுடன் கூடி ஆடிப்பாடுவது  என்று பொருள் கொள்ளலாம். இந்த விழாவுக்கென்று பெரிய கொட்டகை அமைக்கப்படும்; இது நதிக்கரை அருகில் அமைந்திருக்கப் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். நாம் பந்தல் வாயிலைத் தோரணங்கள் கட்டி அலங்கரிப்பது போல் அவர்களும் கொட்டகையைக் காய்கறிகளாலும் தோரணங்களாலும் அலங்காரிப்பர்.

    கொட்டகையில் ஒரு மேடை அமைப்பார்கள்.  பின் அருகில் இருக்கும் கோயிலுக்குச்சென்று  அங்கிருக்கும் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் சிலையை ஒரு ரதத்தில் வைத்து மேளதாளத்துடன்  ஷெனாய் ஒலி மங்களகரமாக ஒலிக்க  ஊர்வலம் வருவார்கள். பின் அதை அந்த மேடையின் மேல் வைப்பார்கள். பின்னர் மக்கள் நலமாக வாழவும் முன்னாள்  மணிப்பூர் மன்னரின் சுபிட்சத்திற்காகவும்  பிரார்த்தனை நடக்கும். பின் “தஸ்டா” என்ற இசை நாடகம் தொடங்கும். இதில் அரசரின் வீர தீரங்களின் பெருமையைச் சில கலைஞர்கள் நடித்துக்காட்டுவார்கள்.

    அதன்பின் நாம் நிகழ்த்தும் கதாகாலட்சேபம் பாணியில் அவர்களும் ‘கதாவாசகம்” எனக் ’கண்ணனின்  அவதாரம், பால லீலைகள், பூதனை வதம்’ என்று தொடங்கி  நடத்துவார்கள். இதைக்கேட்கப் பலர் கூடுவார்கள். பின் மாலை நிகழ்ச்சிகள் தொடங்கும். பல ஆண்கள் கிருஷ்ணன் வேஷத்தில் வந்து புல்லாங்குழலை இசைப்பார்கள். பெண்களும் நெற்றியில்  சூடாமணி அணிந்து தங்களை கோபியர்களாக  வேடமணிந்து வட்டமாக  நின்றபடி சுழன்று சுழன்று நடனமாடுவதைப்பார்க்க உடலில் ஒரு  ஆன்மீக அனுபவம் ஏற்படுவதை உணரமுடியும். நாமும் அங்கு ராதையாகவோ அல்லது கிருஷ்ணனாகவோ  மாறிவிடுவோம். இது வசந்தகாலத்தில் நடப்பதால் ’வசந்த ராஸ்’ என்று சொல்வார்கள்.

    பின் வருவது கோலாட்டம்.  நல்ல நீளமான கோலாட்டங்கள் கைகளில் இருக்க எந்தக் கை எங்கு போய் லாவகமாக ஒலி எழுப்பி வருகிறது என்று புரிந்துக்கொள்ள முடியாதபடி அத்தனை வேகமான நடனம். கால்களோ பஞ்சு போல் தரையில் படிகிறதா இல்லையா என்று புரிந்துக்கொள்ள முடியாதபடி துள்ளித்துள்ளி ஒரு நடனம். சலங்கை ஒலியுடன் கோலாட்ட ரிதமுடன் மான் துள்ளி ஓடுவது போல்  இந்த நடனத்தைப் பார்க்க மனதில் ஒரு கிளுகிளுப்பு உண்டாகிறது. இந்த நடனத்தை  ‘சிருங்கார ராசா ‘  என்கிறார்கள்.

    பின் ஆரம்பமாகிறது ஜெய் ஜெய் ஹரி போல்’ முழக்கம். மேடையில் அமர்ந்து அருள்பாலிக்கும் சைதன்ய மகாபிரபுவுக்கு அர்ச்சனையும் மங்கள ஆரத்தியும் ஆரம்பமாகிறது. ஆரத்தி முடிந்தப் பின்னரும் ’ஜெய் ஹரி போல்’ என்ற முழக்கம் தொடர்ந்து கேட்கிறது. பின் பிரசாதமாக இனிப்பு வழங்கப்படுகிறது.

     பின்னர் சைதன்ய சுவாமியின் சிலைப் பழையபடி கோயிலுக்குச்சென்று விடும். இதெல்லாம் முடிந்தபிறகு நடக்கும் வைபவம் மனதை எதோ செய்கிறது. இத்தனை அழகாகக்   கட்டப்பட்ட, அலங்காரம் செய்யப்பட்ட கொட்டகைக்கு அக்னி வைத்து எரிக்கப்படுவதைப் பார்த்தால் அது தேவையா எனத் தோன்றுகிறது. ஆனால் இது போல் செய்தால் தங்களின் மனக் கஷ்டங்கள், வியாதிகள் தீர்ந்து விடும் என மக்கள் நம்புகிறார்கள். ஆனால் அந்தச்சூழ்நிலை புகையினால் எத்தனைக் கெட்டுப்போகிறது என்று யோசிப்பதில்லை. நாம்  ஹோமம் முடிந்தபின் பூர்ண ஆஹூதி என்று ஒரு சிறு மூட்டையைப் புடவையுடன் ஹோமத்தில் இடுவது வழக்கம். அதேபோல் இதையும் அவர்கள் “பூர்ண மாஷி ‘என்கிறார்கள் .

    இனி இரண்டாவது விழாவைப் பார்க்கலாம். இந்த விழா பார்க்க நாம் மணிப்பூரின் தலைநகரமான இம்பாலாவுக்கு வரவேண்டும் . நேராக கிருஷ்ணன் ராதா இருக்கும் ஸ்ரீ கோவிந்தாஜி ராதேஸ்வரி என்ற கோயிலுக்கு வர வேண்டும். இங்கு இருக்கும் ராதா கிருஷ்ணனுக்கு வண்ணப் பொடிகளால் பூஜை நடக்கும்.ஹோலியின் போது வண்ணப் பொடிகளைத் தூவுவதுப்போல்  இங்கும் சிவப்பு, பச்சை, நீலம் என்று பல வண்ணக் கலவைகளைத் தூவி பூஜிக்கப் பார்க்க மிக அழகாக இருக்கும். பலர் பலவிதமான பக்தி பாடல்களைப் பாடுவார்கள்.  கோயில் வாசல் மண்டபத்தில் கிருஷ்ண பஜனையும் நடக்கும். அவர்கள் அடிக்கும் டோலும் அதை அடித்தபடியே சுழன்று சுழன்று ஆடும் நடனமும் காணக்கிடைக்காத ஒன்று. விழாக்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொருவிதமாக நடந்தாலும் அது ஆன்மாவைத்தொட்டு ஆன்மீக வழியைக் காட்டுவது என்பது என்னவோ உண்மைதான்!

     

    Share
  • அன்பு

    –விசாலம் .

    அன்பே கடவுள்  என்கிறோம்.  இதிலிருந்து அன்பு,வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய  பங்கு வகிக்கிறது என  தெரிகிறது. ஒருவருடைய கோபத்தால் அவரது  குடும்பம் முழுவதும் நிம்மதி இழந்து   தவிப்பதைப்பார்த்திருக்கிறோம். அதேபோல் ஒருவருடைய அன்பினால் எப்படிப்பட்ட குடும்பத்தையும் கட்டிப்போட முடியும்  அரவணைத்துக்கொண்டு போக முடியும்.

    “அன்புஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
    நண்பு என்னும் நாடாச்சிறப்பு ” என்கிறார் திருவள்ளுவர் .
    அது உலகத்தாரையே நட்பாக்கும். சிறப்பாக்கும் என்கிறார் .

    “அன்பு என்பதே தெய்வமானது
    அன்பு என்பதே இன்பமானது
    மதத்தின்  மேல் வைத்த அன்பு பக்தியானது
    மனிதன் மீது வைத்த அன்பு  பாசமானது
    இதய மீது வைத்த அன்பு உண்மையானது
    ஏழை மீது வைத்த அன்பு கருணையானது”

    என்ற மிக அழகான பாடலை நமது கவியரசர் திரு கண்ணதாசன் அவர்கள்   கொடுத்திருக்கிறார். அன்பு  இருக்கும் இடத்தில் முகம் மலர்ந்திருக்கும். முகத்தில் ஒரு புன்னகை இருக்கும். அங்கு மன்னிப்பு இருக்கும். பணிவு இருக்கும் மரியாதை இருக்கும். அன்புக்கு மிருகங்களும் கட்டுப்படும். அன்பு எனும் சொல் ஒன்றுதான் ஆனாலும் அதை வெளிபடுத்தும் விதத்தில் வித்தியாசம் ஏற்படும் . தாய் தந்தையிடம் காட்டும் அன்பு, காதலியிடம் காட்டும் அன்பு , குழந்தைகளிடம் காட்டும் அன்பு ,  நண்பர்களிடம் காட்டும் அன்பு ,  இறைவனிடம் கட்டும் அன்பு என்று பலவகை இருந்தாலும் இறைவனிடம் காட்டும் அன்பே நிரந்தரமானது, இதைப்புரிந்துக்கொள்ள ஒரு சின்னக் கதை ….

    Lakshmi On Lotusஒரு செல்வந்தர் விடாமல் லட்சுமி பூஜை செய்து வந்தார்  ஒரு நாள்   அவர் கனவில் லக்ஷ்மி   தோன்றினாள்.  ” சேட்ஜி  நான் இன்னும் சில தினங்களுக்குள்  உன்னை விட்டுப்போய்விடுவேன்  நீ செய்த புண்ணியச்செயல்களால் தான் உன்னுடன் இருந்தேன். உன் புண்ணியங்கள் முடிந்து விட்டன ஆகவே நான் வீட்டை விட்டுப்போகப்போகிறேன் அதற்குள்  ஏதாவது வரம் கேட்க விரும்பினால்  கேட்டு வாங்கிக்கொள் ” என்றாள்.

    “அம்மா திருமகளே நான் என் குடும்பத்தில் இதைப்பற்றிக் கேட்டப்பின்  வரம் கேட்கிறேன்  நீ என்னை  விட்டுப்போவது எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது ” என்று மனமொடிந்துக் கூறினார். மறு நாள் கனவைப்பற்றி தன் குடும்பத்தாருக்குத் தெரிவித்தார் மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று எல்லோரிடமும் கேட்டார் .

    “வைரம் முத்து மரகதம் மாணிக்கம் என்று கேளுங்கள்”  என்று முந்திக்கொண்டாள் மனைவி.

    பொற்குவியல்களைக் கேளுங்கள் அப்பா ” என்றான் மூத்த  மகன்.

    “உணவு பண்டங்கள் கேட்கலாமே” என்றான் இரண்டாவது மகன்.

    வேறு சிலர் வீடு வாகனங்கள் என பல கேட்கச்சொன்னார்கள் .

    பின் வந்தாள் அவரது கடைசி மருமகள்.  ” அப்பா   எல்லோரும் பலவிதமானப் பொருட்களைக் கேட்டனர் அவைகள் எல்லாம் வந்தாலும் கூட எப்போ லட்சுமி போகப்பாவதாகச்சொன்னாளோ அப்போதே இந்தப்பொருட்களும்  அழிந்து விடும்.  இவைகள் ஒன்றும் நிலைத்திருக்காது.   ஆகையால் தாங்கள் நம் குடும்பத்தில் பரஸ்பர அன்பு நிலைத்திருக்கட்டும்   என்ற வரம் கேளுங்கள் எத்தனைக்கஷ்டங்கள் வந்தாலும் பரஸ்பரம் அன்பு இருந்தால் அங்கு நிம்மதி நிலைக்கும். வாழ்க்கை நிம்மதியாகக் கழிக்க முடியும் ” என்றாள்

    எல்லோருக்கும் இது சரியென்றே பட்டது.

    மறுநாள் கனவில் திருமகள் தோன்றினாள் ”  என்ன சேட்ஜி என்ன கேட்க நினைத்தாய்?”

    “̀தேவி தாங்கள் என்னைவிட்டுப்போவதில் வருத்தமே, ஆனாலும் நீங்கள் சொன்னபடி எனக்கு ஒரு வரம் தர வேண்டும்.   என் குடும்பத்தினரிடையே பரஸ்பர  அன்பும் பாசமும் ஒற்றுமையும் நிலைக்க வேண்டும்இந்த வரத்தை அளிக்க  வேண்டும்.

    புன்னகைப்பூத்தாள் திருமகள். “மகனே  இந்த வரம் கேட்டு என்னை இங்கயே கட்டிப்போட்டு விட்டாய். எங்கு சண்டையில்லையோ  அன்பு இருக்கிறதோ அங்கு நான்  நிரந்தரமாக இருக்க விரும்புவேன்.குடும்பத்தில் அன்பு நிலவ வேண்டும் என்று நீ கேட்டு விட்டாய்.     உன் குடும்பத்தை விட்டு எப்படி  நான் செல்ல முடியும் ?  என்று சொன்னபடியே அங்கேயே நிலைத்து விட்டாள்.

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    படம் உதவி: http://www.oldindianarts.in/2011/07/goddess-lakshmi-on-lotus-1940s-vintage.html

    Share
  • என் பார்வையில் கண்ணதாசன்

    விசாலம்

    என் பார்வையில் கண்ணதாசன் . {கற்பனையில் உண்மை} 

    இரவு மணி எட்டு. நான் என் வேலைகளை முடித்துக்கொண்டு ‘அப்பாடி ‘ என்று அமர்ந்தேன்..என் மனம் “ என் பர்வையில் கண்ணதாசன் என் பார்வையில் கண்ணதாசன்” என்று ஜபம் செய்தது..இரு வாரங்களாக இந்த ஜபம் தான் . அது அப்படியே ஆழ் மனதில் போய் அமர்ந்து கொண்டது .சுமார் ஒன்பது மணி இருக்கும் வாசல் கதவு திறந்தாற்போன்று ஒரு உணர்வு .தலை நிமிர்ந்து பார்த்தேன் . ஆ என்னையே என்னால் நம்ப முடியவில்லை. என் எதிரே கவியரசர் . அழகிய முகம். நெற்றியில் அழகு குங்கமப்பொட்டு .மேலே விபூதியின் சிறு கீறல் .முகத்தில் புன்னகை . “வாருங்கள் வாருங்கள் நீங்கள் இங்கு வர நான் என்ன தவம் செய்தேனோ . என் பார்வையில் கண்ணதாசன் என்று பல தடவை நான் சொன்னதால் நீங்கள் நேரே வந்துவிட்டீர்கள். இல்லையா ?. என்றபடி என் கையை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன் .பின் “அமருங்கள் “என்று ஒரு கட்டிலைக்காட்டினேன் . அவர் எப்போதும் கட்டிலில் சாய்ந்தபடியே பல முத்துக்களை நமக்குத்தந்திருக்கிறார். அவரும் அதில் அவர் அமர்ந்தார் பௌர்ணமி நிலவின் .நிலாவும் கவிஞரைப்பார்க்க ஆவல் கொண்டு சன்னல் வழியாக எட்டிப்பார்த்தது .நான் அவரிடம் நிலவைக்காட்டி

    “கவியரசரே அதோ பாருங்கள் நிலா. . எனக்கு நீங்கள் பாடிய “வான் நிலா” பாடல் ஞாபகம் வருகிறது. ஆஹா அது என்ன பாட்டு ! என்ன லயம்,எல்லாமே “லா, லா என்று முடிகிறதே ! இது போல் எப்படி செய்ய முடிந்தது? அவர் முகம் பிரகாசமானது

    “வான் நிலா ,நிலா அல்ல உன் வாலிபம் நிலா, என்று என் வாய் முணுமுணுத்தது.

    “வாழ்க்கை வழியிலா ஒரு மங்கை ஒளியிலா .ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா ,அவள் நெஞ்சம் ஏட்டிலா” 

    ஆமாம் இந்தப்பாடலை ஒரு 15 நிமிடத்தில் முடித்துவிட்டீர்களாமே! வெரி கிரேட் கவிஞர் சார். “பட்டின பிரவேசம் ‘படத்திற்காக எம் எஸ் வி அவர்கள் ஒரு டூயூனை முனகிக்கொண்டு வர அதை திரு பாலசந்தர் கேட்க அதற்கு ஒரு பாடலை உங்களிடமிருந்து வாங்கி வரச்சொன்னார் இல்லையா? அவரும் உங்கள் வீடு தேடி வந்து அந்த இசையை . ஹார்மோனியத்தில் வாசித்தவுடனேயே இந்த முத்தைத் தந்துவிட்டீர்கள் நீங்கள்…என் பார்வையில் நீங்கள் எங்கேயோ போய் விட்டீர்கள் . என்ன நிதரிசனம் “ .

    கவிஞர் இதைக்கேட்டு புன்னகை புரிகிறார் .

    “கவியரசரே உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ? உங்களால் தான் என் மகனும் பேரக்குழந்தைகளும் தமிழ் பேசுகின்றனர்.உங்கள் பாடல் தான் என்னையும் மாற்றியது ,உங்கள் வாழ்க்கையின் கடைசி நேரம் நீங்கள் சிகாகோவில் இருந்தீர்கள்..அப்போது அங்கிருக்கும் தமிழர்களின் குழந்தைகள் ஆங்கிலத்திலேயே பேசின. .அதைக்கண்டு நீங்கள் மனம் வருந்தினீர்கள்.. அப்போது ஒரு பாடல் பிறந்தது.

    “மனதில் ஒன்று பட்டு சேர்ந்திடுவீர். ,
    மழலைகள் தமிழ் பேச செய்திடுவீர்,
    தமக்கென கொண்டுவந்தேதுமில்ல, –பெற்ற
    தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை.”

    இதனால் என்வீட்டுக் குழந்தைகளும் என் முயற்சியால் தமிழ் பேச ஆரம்பித்தன. தவிர உங்கள் பாடல் ஒன்று என் தந்தையின் நிலையையே மாற்றியது.அப்போது நான் உங்கள் பாடலின் சக்தியை நன்கு உணர்ந்தேன்.”
    .”அது எந்த பாடல்? உங்கள் தந்தைக்கு என்ன ஆயிற்று?”

    அந்த ஒரு நாள். மறக்கமுடியாத நாள் . இரவில் படுத்த என் தாய் காலையில் . எழுந்திருக்கவில்லை. என் அப்பா நிலைக்குலைந்து போனார்.. அவருக்கு உலகமே என் தாய்தான். கேவிக்கேவி அழுதார். பின்னர் ஏதோ இயந்திரம் போல் ஆனார்.தினமும் என் தாயின் போட்டோ வைத்து மாலை அணிவித்து பூஜை செய்வார்.இரவில் தூங்கமாட்டார். எத்தனை வைத்தியம் செய்தும் பலனில்லை. ஆனால் உங்கள் பாடல் என் தந்தையின் நிலையை மாற்றியது.. அவர் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு பெற்றார்.டாக்டர் மருந்து செய்யாதது உங்கள் பாடல் செய்தது . என்ன சக்தியான பாடல் !

    “ நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.
    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி ஏதுமில்லை
    முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே,
    தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே .

    எங்கே வாழ்க்கை தொடங்கும் .அது எங்கே எவ்விதம் முடியும் ?
    இது தான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.
    பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும்
    மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும் “

    இதேபோல் தான் திரு வாலி அவர்கள் தன் வருமையின் காரணமாக மனம் ஒடிந்து தற்கொலை செய்துக்கொள்ளும் முடிவுக்கே போய்விட்டார். அவரையும் உங்கள் பாடல் மாற்றியது. ஞாபகம் இருக்கிறதா?”

    இருக்கிறது என்றபடி கவிஞர் தலையை ஆட்டுகிறார்.

    “ஆம் அந்தப்பாடல் “ மயக்கமா.தயக்கமா? மனதிலே குழப்பமா,
    வாழ்க்கையில் நடுக்கமா?
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு”

    இந்தப்பாடல் திரு வாலி அவர்களைக் காப்பாற்றியதுமல்லாமல் அவருக்கு ஒரு புது வாழ்வும் கொடுத்து விட்டது,தவிர அவர் சினிமாவில் பல பாடல்களை எழுத நீங்கள் மனதார அவரைப் பாராட்டினீர்கள் . அவருடைய “ கடல் மேல் பிறக்க வைத்தான் “ என்ற பாடலைக்கேட்டவுடன் அவரைப்பாராட்ட அவர் வீடு தேடி போனீர்கள். அங்கு அவர் ஒரு சிறிய அறையில் இருந்தார். அந்த அறையிலும் ஏழ்மை தெரிந்தது .நீங்கள் அவரைப்பாராட்டி உங்கள் கழுத்திலிருந்த தங்கச்சங்கலியை கழட்டி அவருக்கு அணிவித்தீர்கள். என்ன பரந்த உள்ளம் ! கவியரசர் ஐயா .என் பார்வையில் நீங்கள் மிக உயர்வான இடத்தில் இருக்கிறீர்கள்..

    கவிஞர் அவர்களே, வேதம் சொல்கிறது .
    “ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் ,பூர்ணமுதச்யதே
    பூர்ணஸ்ய பூர்ணமாதாய, பூர்ணமேவாயா சிஷ்யதே “ ஓம் சாந்தி ……

    . பூர்ணத்திலிருந்து எத்தனை எடுத்தாலும் குறைவதில்லை. எத்தனைச்சேர்த்தாலும் வளர்வதில்லை . ’
    இதையே எத்தனை எளிமையாக பாடலின் மூலம்சொல்லியிருக்கிறீர்கள்..

    “பூஜ்ஜியத்தினுள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுக்கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் .
    அவனைப்புரிந்துக்கொண்டால் அவன் தான் இறைவன் “ {Infinity }

    முழு சமர்ப்பணம், செய்ய அவன் நம்மைக் காப்பாற்ற ஓடி வருவான் என்கிறது கீதை.அதையே நீங்கள் எவ்வளவு அழகாக காட்டியிருக்கிறீர்கள்.!
    ஸ்ரீரமணர் “நான் யார்” என்று தேடி உள்ளொளி கண்டார் .இதையே நீங்கள்

    “தெளிவாகத்தெரிந்தாலே சித்தாந்தம் .
    அது தெரியாமல் போனால் வேதாந்தம் .
    மண்ணைத்தோண்டி தண்ணீர் தேடும் அன்பு தங்கச்சி,
    என்னைத்தோண்டி ஞானம் கண்டேன் ,இதுதான் என்கட்சி” என்று பாடலில் சொல்லி விட்டீர்கள். .
    “மருதமலை மாமணியே முருகய்யா” என்ற பாடலில் மருதமலை முருகனே கண்முன் வந்து நிறுத்தி விட்டீர்கள். கடவுள் யார் என்பதற்கு

    “பற்று அறுத்துக்கொண்டு வந்தவர்க்கு சுற்றம் என்று நின்றிருப்பான் ஒருவன்,
    அவனைத் தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன் “என்று எழுதி அசத்திவிட்டீர்கள். ‘இது போல் நிறைய நான் படித்தேன். .என் பார்வையில் நீங்கள் ஒரு மகானாக தோன்றுகிறீர்கள். சரி நான் மட்டும் பேசிக்கொண்டே போகிறேன் .குடிக்க பால் தான் இருக்கிறது எடுத்து வருகிறேன் .
    “ இல்லை வேண்டாம் .நான் பேரானந்த அலையில் மூழ்கி இருக்கிறேன் அந்த போதைக்கு ஈடு வேறு ஒன்றுமில்லை. இபோதெல்லாம் என்னுள்ளேயும் வெளியேயும் ஒளிமயமாக இருப்பதை உணர்கிறேன் “

    என் கைகளைக்கூப்பி அவரை வணங்குகிறேன் பின் மேலே தொடருகிறேன் .
    “ கவிஞர் அவர்களே எப்படி நீங்கள் நாஸ்திகத்திலிருந்து ஆஸ்திகத்தில் குதித்தீர்கள்?
    “ நான் குதிக்கவில்லை அது என் ரத்தத்திலேயே ஊறிய ஒன்று. ,.ஆரம்பத்தில் தான் . கொஞ்சம் திசை கெட்டுப்போனேன்’ பலவிதமான கூடாத பழக்கங்கள் “

    “ ஆம் நான் கூட படித்தேன் உங்கள் வம்சத்தில் எல்லோரும் பல புண்ணிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள். நாட்டுக்கோட்டை செட்டியார் பிரிவில் வந்த அவர்கள் கோயில் திருப்பணிக்கே பிறந்தவர்கள் .ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணி , வரதராசர் கோயில் திருப்பணி ,காமாட்சிஅம்மன் கோயில் திருப்பணி என்று பட்டியல் நீளும்.அப்படியிருக்கும் போது நீங்கள் எப்படி நாஸ்திகராக இருக்க முடியும் ? ஆரம்பத்தில் இராமாயணத்தை நெருப்பு வைத்துக்கொளுத்தவும் துணிந்தீர்கள் அல்லவா?

    “ ஆம் உள் இருந்த இராமன் என் மனதை மாற்றிவிட்டான் .இராமன் எத்தனை ராமனடி பாடலில் பல ராமன்களைப் பார்க்கலாம் “

    ஆம் இராமயணப்பாடல்கள் உங்கள் மனதையே மாற்றிவிட்டன. அது போல் திருப்பாவையில் கோதை நாச்சியாரின் திருப்பாசுரங்கள் உங்களை மாற்றிவிட்டன .ஸ்ரீ அரவிந்தருக்கு கண்ணன் தெரிந்தான் .அதுபோல் உங்கள் முன்னும் கண்ணன் தரிசனம் தந்திருப்பான் .கண்ணதாசன் என்ற பெயர் என்ன பொருத்தம் !

    “ கவிஞர் அவர்களே,

    “புறத்தூயமை நீரான் அமையும் அகம் தூய்மை
    வாய்மையால் காணப்படும்”

    என்ற திருக்குறளுக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கையில் உண்மையே பேசுவதே ஒரு கொள்கையாக இருந்தது. மஹாத்மாஜிக்குப் பிறகு நீங்கள் உண்மைப்பேசுவதைக் கடைப்பிடித்துள்ளீர்கள். எப்படி சொல்கிறேன் என்றால் அது மிகையாகாது. உங்கள் படைப்புகளை ஒளிமறைவு இல்லாமல் எழுதி அதை ஒரு திறந்த புத்தகமாக ஆக்கியிருக்கிறீர்கள். .ஒருவர் தன்னுடைய பலகீனத்தை உண்மையாக ஒப்புத்துக்கொண்டு அதை எழுத்திலும் காட்டுவது மிக அபூர்வம் .
    என் பார்வையில் நீங்கள் எட்டாத உயரத்துக்குச்சென்று விட்டீர்கள். .உங்களுடைய மது ,மாது ,சூது போன்ற வேண்டாத பழக்கங்கள் வாய்மை என்ற தீயில் விழுந்து சாம்பலாகி விட்டன..சத்தியமே கடவுள் இல்லையா? “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்” என்ற பாடல் எவ்வளவு உண்மை !

    எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீ காஞ்சி பெரியவாள் உங்களை ஆசீர்வதித்து
    “அங்கிக்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஞான சூரியனாம் நம் மதத்தைப் பற்றி எழுது “ என்று சொன்னார் இல்லையா? அதனால் பிறந்தது “அர்த்தமுள்ள இந்துமதம் “ சரிதானே.”

    ஆம் என்பது போல் தலையை ஆட்டுகிறார்,.

    “ நீங்கள் திரு சின்னப்பதேவருடன் வரும் போது நடந்த கார் விபத்து ஒரு நல்ல காரணத்திற்காகத்தான் இருக்க வேண்டும்.” பிளெஸ்ஸிங் இன் டிஸ்கைஸ் “ என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே ! அந்த விபத்தால் நீங்கள் ஆஸ்பத்திரியில் இருக்க தேவர் அவர்கள் காஞ்சி பெரியவாள் முன் நின்று கண்களை மூடிக்கொண்டார். அந்த மகானும் “கண்ணதாசன் எப்படி இருக்கிறான் ? என்று கேட்ட தேவர் அப்படியே பிரமித்துப்போய் நின்றார். பின் பெரியவாள் அவருக்கு விபூதி கொடுத்து அதை நெற்றியில் இடச்சொல்லி அனுப்பினார். ஆனால் பூனைக்கு மணி கட்டுவது எப்படி?

    நீங்கள் நாஸ்திக அலைகளில் அல்லவா நீந்திக்கொண்டிருந்தார். இருந்தாலும் தேவர் உங்கள் உயிரைக்காக்க நீங்கள் மயக்கமாக இருக்கும் போது நெற்றியில் இட்டுவிட்டார்.. காலையில் நீங்கள் கண்முழித்துப்பின் முகத்தைப்பார்க்க கண்ணாடி கேட்டீர். பின் அதைப்பார்த்தீர்கள். தேவரோ பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தார். ஆனால் என்ன ஆச்சரியம் ! நீங்கள் அமைதியாக விவரங்களைக்கேட்டு நேரே வீடு செல்லாமல் நேரே காஞ்சி மகானைப்பார்க்க அவர் இடத்திற்குச் சென்றீர்கள். அந்த கருணாமூர்த்தியைப் பார்த்து கண் கலங்கி பாவமன்னிப்பு கேட்டு வணங்கினீர்கள். “

    “ ஆம் நான் அப்போது அவருக்காக ஒரு கவிதையும் சொன்னேன்.

    “ பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகிற தீர்த்தம் பெருக்கு ,
    திருவாசகத்தின் உட்கருத்து .

    கூர்த்த மதியால் மெய்ஞானக்கருத்துணர்த்தும் முழு மூர்த்தம்.
    கலி மொய்க்கும் இவ்வுலகைக் காக்க வந்த கண் கண்ட தெய்வம் .
    எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத்தலைவனென
    தொழுதேத்தும் தெய்வக்கமலக் கழல் தொழுவோம் வாரீர்.”

    “ ஆஹா! என்ன அழகு பாடல் ..காஞ்சி மகானின் ஆசிகளுடன் அவருடைய கருணாகடாட்சம் பெற்ற நீங்கள் என் பார்வையில் மிகப்பெரிய இடத்தைப்பிடித்து விட்டீர்கள் “தோன்றின் புகழோடு தோன்றுக “ என்ற குறளுக்கு உதாரணம் நீங்கள் தான் ஆன்மீகத்தில் உங்கள் சாதனை மிகப்பெரியது . அளவிடமுடியாது .”

    நீங்கள் சுவாமி விவேகானந்தருக்காக பாடிய பாடல் “ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு “ இல்லையா? அதில் வரும் இந்த வரிகள் மிக மிக உண்மையான வரிகள் .

    ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
    அன்பு, நன்றி ,கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் “

    நீங்கள் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதை வெளியில் காட்டிக்
    கொள்ளாமல் கடமையைப் பூர்த்தி செய்திருப்பதை தெரிந்துக்கொண்டேன்” . .
    “ ஆம் . ஒன்று ஒப்புக்கொண்டால் அதை செய்துமுடிக்கவேண்டாமா?”

    “ சரிதான் . ஒரு தடவை திரு எம் .எஸ் வி அவர்களுடன் பாடல் எழுதும் போது ஒரு போன்கால் வந்தது. அதைக்கேட்டப்பின் உங்கள் முகம் மாறியது .முகத்தில் ஒரு கவலை . ஆனாலும் அதை வெளியில் காட்டாமல் ஒன்றுமே நடக்காதது போல் பாடல் புனைந்தீர்கள். அந்தப்பாடல் தான் “ சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் அழுதுக்கொண்டே சிரிக்கின்றேன் “ ஏன் கவிஞர் சார் உங்கள் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக வந்த போன் காலை எப்படி சாதாரணமாக எடுத்துக்கொண்டு பாடலும் செய்ய முடிந்தது. ? “

    “ அதுதான் பாடலில் காட்டிவிட்டேன் . அழுதது போன் காலுக்கு .சிரித்தது பாடலுக்காக வரும் பணத்திற்கு”
    “ அப்பப்பா சொல்ல வார்த்தைகளே வரவில்லை. கண்ணதாசன் அவர்களே என் பார்வையில் நீங்கள் மிக உயர்ந்து நிற்கிறீர்கள். .

    நீங்கள் எம் ஜி ஆர் அவர்களையும் பாடலில் புகழ்ந்திருக்கிறீர்கள். .

    “தேக்கு மரம் உடலை தந்தது. சின்ன யானை நடையைத் தந்தது,
    பூக்களெல்லாம் சிரிப்பை தந்தது .,பொன்நிலவே நிறத்தை தந்தது,

    என்றும்

    சேரனுக்கு உறவா, செந்தமிழின் நிலவா? பாரி வள்ளல் மகனா என்றும்
    அவரை விவரித்திருக்கிறீர்கள். எம் ஜி ஆர் நீங்கள் எழுதிய பாடல் “ “அச்சம் என்பது மடமையடா “ பாடி தான் மனமொடிந்துப்போனால் தன்னை தேற்றிக்கொள்வாராம். நீங்கள் திரு காமராஜரையும் விட்டுவைக்கவில்லை. திரு காமராஜரை ஐக்கிய நாடுகள் அழைத்த போது

    சென்று வா மகனே வென்றுவா “
    அறிவுலகம் உன்னை அழைக்கின்றது – ஏதும்
    அறியாதவன் என்றே நினக்கின்றது “
    உண்மையைச்சொல்ல படிப்பெதற்கு.
    உணர்ந்தவர் போல் நடிக்கும் நடுப்பெதற்கு …. என்று பாடல் போகிறது

    .அவர் திரும்ப முக்கிய மந்திரியாக வர பாடல் மூலம் வாழ்த்து தெரிவித்தீர்கள்.. இதே போல அவர் தான் படிக்கவில்லையே என்ற ஏக்கத்தை பாடல் மூலம் போக்கினீர்கள்.

    “ படிப்பதினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு ,ஆனால் படிக்காத மேதையெல்லாம் பாரினில் உண்டு “ சினிமாவின் பெயரும் படிக்காத மேதை என நினைக்கிறேன் . எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைந்த பாடல் “ சட்டி சுட்டதடா” “

    “ ஆம் நான் அரசியலை விட்டுவிட தீர்மானித்தேன் அப்போது எழுதியதுதான் இந்தப் பாடல் “ நான் அரசியலை விட்டப்பின் தான் என்னை ஆட்டிப்படைத்த மிருகம் விலகிப்போயிற்று “ .
    “ சூப்பர் பாடல் “ என்று சொல்லியபடி அந்தப்பாட்டை முனகுகிறேன்

    சட்டி சுட்டதடா ,கை விட்டதடா, .
    “புத்தி கெட்டதடா ,நெஞ்சை தொட்டதடா,
    நாலும் நடந்து முடிந்த பின்னால்
    நல்லது கெட்டது தெரிந்ததடா”

    : “ அது சரி கவியரசரே .நீங்கள் எந்த சொல்லைக்கொடுத்தாலும் அதில் பாடல் எழுதி அசத்துகிறீர்கள். திரு எம் .எஸ் வி சார் உங்களுக்கு “தேன் “
    என்று முடியும்படி பாடல் செய்ய சவால் விட்டவுடன் உங்கள்பேனாவால்

    “பார்த்தேன் . சிரித்தேன் ,பக்கம் வர அழைத்தேன் “ என்று ஒரே தேனாகவே ஒழுக விட்டீர்களே எப்படி சார் .இந்த மேஜிக் ! மிக அருமை சார். என் பார்வையில் நீங்கள் ஆகாயத்தை தொட்டுவிட்டீர்கள் .மேலும் எல்லா மதமும் சம்மதமே என்ற உங்கள் கொள்கை எத்தனை உயர்ந்த கொள்கை. ராமன் .ஏசு. அல்லா எல்லோருமே ஒரே கடலில் கடக்கும் புண்ணிய நதிகள் என்ற பொருள் கொண்ட பாடலும் . “எல்லோரும் கொண்டாடுவோம் .அல்லாவின் பெயரைச்சொல்லி” என்று பாடலும் . ஏசு காவியமும் உங்கள் நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்த அணுகுமுறையில் நீங்கள் என் பார்வையில் மிக உயர்ந்த இடத்தைப்பிடித்து விட்டீர்கள். “

    “நீங்களும், இசை மன்னர் திரு எம் எஸ் வி அவர்களும் நகமும் சதையும் போல் இருந்தீர்கள். .
    “கங்கை .யமுனை .இங்குதான் சங்கமம் .” சிப்பி இருக்குது முத்து இருக்குது “ போன்ற பாடல்கள் இதைத் தெரிவிக்கின்றன.

    ஆமாம் நீங்கள் காமெடி செய்து உங்கள் நண்பர்களை அழ வைத்தீர்களாமே! அந்த சம்பவத்தை நானே ஞாபகப்படுத்துகிறேன் . நீங்கள் உங்கள் குரலை மாற்றிக்கொண்டு டெலிபோனில் உங்கள் இணைப்பிரியா நண்பரிடம் “கவிஞர் இறந்துவிட்டார்.” என்று சொல்ல பாவம் மெல்லிசை மன்னர் அலறி அடித்துக்கொண்டு தன் நண்பர்களுடன் அழுதபடி உங்கள் இடத்திற்கு ஓடி வந்தால் நீங்கள் சிரித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தீர்கள். ஏன் இப்படி செய்தீர்கள் கவிஞர் அவர்களே?”

    “ ஓ அதுவா. நான் இறந்தால் யார் முதலில் என்னைப்பார்க்க வந்து அழுவார் என்று எனக்கு பார்க்க ஆசை .அதனால் தான் ……….”

    ‘ஐயோ பாவம் மெல்லிசை மன்னர்.. கவிஞர் அவர்களே உங்கள் முதல் பாடல் “கலங்காதிரு மனமே “ கடைசி பாடல் “கண்ணே கலைமானே” இரண்டும் ‘க’ வில் ஆரம்பம் உங்கள் பெயரும் ‘க’ வில் ஆரம்பம் நீங்கள் பிறந்த ஊர் சிறுகூடல்பட்டி வாழ்க்கை பயணம் முடிந்த ஊர் சிகாகோ . இரண்டும் “சி’ யில் ஆரம்பம் .எங்கே வாழ்க்கை பயணம் அது எங்கே எவ்விதம் முடியும்?” என்ற கேள்விக்கு பதில் ஒருவருக்கும் தெரிவதில்லை . உங்கள் வனவாசம், மனவாசம் இரு புத்தகங்கள் உங்கள் வாழ்க்கையின் திறந்த புத்தகங்கள்.. நீங்கள் எழுதிய பாடல் உங்களுக்காகவே எழுதியது போல் இருக்கிறது . நீங்கள் கண்ணன் காட்டிய கீதையின் பல அம்சங்கள் பாடலில் கொணர்ந்து வந்திருக்கிறீர்கள்.

    இது போல் கவிதைகள் செய்ய இனி ஒருவர் பிறக்க வேண்டும் . கவிஞர் அவர்களே என் பார்வையில் நீங்கள் ஒரு புடம் போட்ட தங்கமாக ஒளி வீசுகிறீர்கள் .எனக்கு ஒரு வருத்தம் . உங்களுக்கு பத்மபூஷன் பட்டம் கண்டிப்பாக கிடைத்திருக்க வேண்டும் நீங்கள் மட்டும் சிறுகூடல்பட்டியில் பிறக்காமல் அமெரிக்காவில் பிறந்திருந்தால் உங்களுக்கு மிக எளிதாக நோபல் பரிசு கிடைத்திருக்கும் .”

    அருகில் இருக்கும் கோயிலின் மணி இரவு பூஜை முடியும் சமயம் “டண் டண். என்று ஒலித்தது “ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் என்று நான் முனக “ஏன்டி இன்னும் அந்த ரூமில் தனியாக உட்காந்து என்ன செய்யறே? என்று என் கணவர் கத்த என் கவியரசரும் ஆலயமணி ஓசையுடன் மறைந்து போனார் .

    Share
  • பாண்டுரங்கனின் சேவை

    –விசாலம்.

     

    பாண்டுரங்கனின் சேவை

    கும்பகோணம் அருகில் இருக்கும் கோவிந்தபுரத்தில் மிக அழகாக அமைந்த விட்டலனது கோயிலைப் பார்த்து பரவசமானேன் நான். எனக்கு மஹாராஷ்ட்ராவில் இருக்கும் பண்டரிபுரம் போக வாய்ப்பே வரவில்லை. ஆனால் கும்பகோணம் போகும் வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு கட்டப்பட்டிருக்கும் கோவிந்தபுரத்தைப் பார்க்க ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. நம் கஷ்டத்தைப்பார்த்து உடனே ஓடோடி வந்து உதவும் பாண்டுரங்கனை மிகவும் எளிதாக நாமஸ்மரணையினால் நாம் அடைந்துவிடலாம். பண்டரிபுரம் போனால் ஆகாயம் முழுவதும் ‘விட்டல விட்டல’ என்ற நாமமே எதிரொலிக்கும். அதுவும் ஆஷாட ஏகாதசியன்று கேட்கவே வேண்டாம். நாம் அந்த நாமத்திலேயே மூழ்கிவிடுவோம். கோவிந்தபுரத்தில் இருக்கும் பண்டரிநாதனைப்பார்க்கும் போது பண்டரிபுரம் போனதாகவே இருக்கிறது என்று அங்கு வந்த ஒரு பக்தர் என்னிடம் சொன்னார்.

    அந்த விட்டலனை நினைக்கும் போது எனக்கு ஜனாபாயி என்ற பக்தையின் ஞாபகம் வருகிறது. பண்டரிபுரத்தில் வசித்து வந்த அவளுக்கு உறவினர் என்று ஒருவருமில்லை, பெற்றோர்களுமில்லை. அவளுக்கு நாமதேவர் தன் வீட்டில் இடம் கொடுதிருந்தார். அவள் அங்கு வரும் பக்தர்களுக்கும் சாதுக்களுக்கும் சேவை செய்து வந்தாள். சேவை செய்யும் நேரம் போக மற்ற நேரங்களில் விட்டலனைக்குறித்து பல ‘அபங்க்’ பாடி அவனையே மனதுக்குள் நிறுத்திக்கொள்வாள். அவள் உடல், மனம் எல்லா இடத்திலும் பாண்டுரங்கனே வியாபித்திருந்தான்.

    ஒருநாள் சாதுக்களின் துணிகளைச் சந்த்ரபாகா நதிக்கரையில் தோய்க்க எடுத்துபோனாள். உடைகள் அதிகமாக இருந்தது. ஜனாபாயி உடலில் அத்தனை சக்தியுமில்லை. பார்த்தான் பாண்டுரங்கன். தன் பக்தை கஷ்டப்படுவதைப்பார்க்க இயலாமல் தானும் ஒரு பெண்போல் தோய்க்குமிடத்தில் வந்து அவளுக்குத்தோய்த்து உதவினான்.

    சாதுஜன சேவை பாண்டுரங்கனுக்கு மிகப்பிடித்த ஒன்று. ஜனாபாயி தன் வாழ்க்கை முழுவதும் சேவைக்காகவே அர்ப்பித்துக்கொண்டதால் அந்தப்பரந்தாமன் மனமகிழ்ந்து அவளுக்குச்சேவை செய்கிறான் பாருங்கள். என்ன கருணை !

    மற்றொரு சம்பவம்……. பாண்டுரங்கன் பிரசாதத்திற்காக அரிசியை மாவாக்க வேண்டியிருந்தது. அந்தக்காலத்தில் மிக்சி இல்லை. கையினால் அரைக்கும் கல் இயந்திரம் தான் இருந்தது. அதன் கைப்பிடியைப்ப்டித்துக்கொண்டுஅதைச் சுற்ற வேண்டும். ஒவ்வொரு பிடியாக அரிசியையும் உள்ளே போட்டு அரைக்க வேண்டும். பொறுப்பானா பாண்டுரங்கன்! ஓடோடி வந்தான் தானும் அந்த மர கைப்பிடியைப்பிடித்தபடி மாவு ஆட்டினான். ஜனாபாயின் இந்த்சேவையினால் மனம் மகிழ்ந்துப்போனான் அவன். தன் மார்பில் அலங்கரித்த கௌஸ்துபமணி மாலையை அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான்.

    மறுநாள் காலை கோயில் கதவு திறக்கப்பட்டது . அர்ச்சகர் உள்ளே நுழைந்து…
    ” ஐயோ இது என்ன சோதனை ? பண்டரிநாதனின் கௌஸ்துபமணி மாலை காணவில்லையே! யார் எடுத்து சென்றார்?” என்று பதட்டத்துடன் கத்தினார் .
    அங்கிருந்த பலரைச்சோதனையிட்டனர்.
    “இதோ இங்கிருக்கிறது. வாருங்கள், ஜனாபாயிடம் இந்த மாலை இருக்கிறது.” என்று ஒருவர் செய்தி சொல்ல எல்லோரும் அவள் அருகில் ஓடினர்.

    ஜனாபாயின் கழுத்தை அந்தக்கௌச்துபமாலை அலங்கரித்திருந்தது. கண்ணன் தான் கொடுத்தான் என்று சொன்னால் யார் நம்புவார்கள்?

    ‘ஜனாபாய் தான் திருடிவிட்டாள்’ என்று அவளை மன்னர் முன் அழைத்துபோனார்கள். அவள் குற்றவாளி என்று தீர்ப்பாகி அவளை கழுமரத்தில் ஏற்றும்படி கட்டளைப்பிறந்த்து.
    ஜனாவும் சந்தோஷமாக அதை ஏற்றுக்கொண்டாள். ஆனால் நடந்தது என்ன? கழுமரத்தில் ஏற்றும் சமயத்தில் கழுமரம் தீப்பற்றி எரிந்து சாம்பலாகியது.

    ஜனாபாய் நிரபராதி என நிதரிசனமாகத் தெரிய எல்லோரும் இது அந்த விட்டலனின் லீலை என்று புரிந்துக்கொண்டு எல்லோரும் ஜனாபாயை வணங்கினர்.

    ஜனாபாய் பாடிய ‘அப்ங்க்’ பஜனைகளை பாண்டுரங்கன் எழுதிவைத்துக்கொண்டது பாண்டுரங்கன் மேல் அவளின் தீவிர பக்தியை எடுத்துக்காட்டுகிறது .

    சரி. நாம் இப்போது கோவிந்தபுரம் திரும்பவும் வருவோம்.

    கோவிந்தபுரத்தில் வசந்த மண்டப விதானத்தில் பல ஓவியங்கள் மிக அற்புதமாக வரையப்பட்டு விட்டலின் மகிமைகளையும் விட்டலனின் பக்தர்களைப்பற்றியும் விவரிக்கின்றன. தூண்களே இல்லாமல் வசந்தமண்டபத்தைக் கட்டி இருப்பது மிகவும் ஆச்சரியம் தான். இங்கு சுமார் 2000 பேர் அமர முடியுமாம்.

    கோயிலின் முகப்பு மிக பிரம்மாண்டமாக அமைந்து எல்லோரையும் உள்ளே “வா வா ” என்று அழைத்து விடுவதை நான் உணர்ந்தேன். கோயிலின் கோபுரம் சுமார் 132 அடி உயரம். அதன் மேல் ஒரு பெரிய கலசம் அலங்கரிக்கிறது. அது 18 அடி உயரம் என்று தெரிய வந்தது. உள்ளே அக்கம் பக்கத்தில் பச்சை பசேலென வயல்கள். அதன் மண் வாசனை, மலர்கள் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டம் எல்லாம் மனதுக்கு மிகவும் ரம்யமாக இருக்கிறது. கோயிலினுள் கண்ணனின் பலவித லீலைகள் மரப்பலகையில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக்கோயிலில் போனால் முதலில் தியான மண்டபம் சென்று கொஞ்சம் நேரம் தியானம் செய்தப்பின் மனதை ஒருமுகமாக்கியப்பின் விட்டலன் அருகில் வந்து அவனைத்தொட்டு பூஜிக்கலாம். பாண்டுரங்கனுடன் ரகுமாயியும் சேர்ந்து இருந்து அருள் புரிகின்றனர்.
    இங்கு வந்து தங்கவும் தனி அறைகள் உண்டு. தவிர குளிக்க ஒரு குளமும் இருக்கிறது. கோயில் மராட்டியபாணியில் தான் கட்டப்பட்டிருக்கிறது. இந்தக்கோயில் கட்ட நிதி மக்களின் காணிக்கையினாலேயே சேர்ந்தது. அப்படிச்சேர முக்கியகாரணமாக இருந்தவர் ஸ்ரீ விட்டல்தாஸ் தான். அவரின் உண்மை பெயர் திரு ஜெய கிருஷண தீக்ஷதர். சேங்காலிபுரம் பிரம்ம ஸ்ரீ அனந்தராமதீக்ஷதர் வம்சத்தில் வந்தவர். அவருடைய பேரன் எனலாம் இவரது தந்தை பிரும்மஸ்ரீ ராமதீக்ஷதர். 2004ல் ஸ்ரீவிட்டல்தாஸ் தனது குருவான ஸ்ரீகிருஷ்ணப்ரேமி அவர்களுடன் இந்த இடத்தில் பூமிபூஜை செய்தார். ஸ்ரீவிட்டல்தாஸ் ஸ்ரீவிட்டல் ருக்மணி சமஸ்தானத்தை ஏற்று நடத்தி வருகிறார்.

    இங்கு இன்னொரு விசேஷம் என்னவென்றால் இங்கிருக்கும் கோசாலாவில் 400 பசுக்கள் உள்ளன. எல்லாம் ஆஸ்ட்ரேலியா பசுக்களைப்போல் நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றன. அங்கே போனால் எங்கே நாம் துவாரகைக்கு வந்து விட்டோமோ என்ற பிரமை ஏற்படுகிறது. கண்ணன் புல்லாங்குழலின் இசைதான் பாக்கி. மாட்டுக்கொட்டில் போல் சாணம் வாடை அங்கு வீசவில்லை. சாதாரணமாக பசு மாடு தன் மேல் அமரும் ஈக்களை தனது வாலால் விரட்டியபடி இருக்கும். ஆனால் இந்த மாட்டுக்கொட்டிலில் ஒரு ஈயைக்கூட காணமுடியாது. அத்தனை சுத்தம். மாட்டு மூத்தரத்தையும் சாணத்தையும் அப்பப்போது அப்புறப்படுத்தி அந்த இடத்தை உடனே குழாய் வழியாக தண்ணீர் பீய்ச்சி அலம்பி விடுகிறார்கள்.

    மாடுகளுக்கு ஆகாரமும் சரியான நேரத்தில் அட்டவணைபோட்டு அதன் பிரகாரம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாடுக்கும் நல்ல விஸ்தாரமாக இடம் ஒதுக்கி இருக்கின்றனர். பல வரிசைகளில் மாடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவர்களது ஆகாரமான புல்லும் இதற்கென்றே வளர்கப்படுகிறது. தவிர வயதான மாடுகளையும் கடைசிவரை வைத்து ரக்ஷிக்கிறார்கள். அடிக்கடி டாக்டரும் வந்து தேவைப்பட்டால் வைத்தியமும் செய்து தருகின்றனர். இந்த இடமே ஒரு கோயிலாக எனக்குப்பட்டது. இதில் வரும் பாலை. அன்னதானத்திற்கும் மற்றும் வெண்ணெய், நெய் போன்று தயாரிக்கவும் உபயோகிப்பார்கள் என நினைக்கிறேன். கோமாதா சேவை மிகவும் உயர்ந்த சேவை ஆயிற்றே.

    இந்த கோவிந்தபுரத்தில் தான் காஞ்சி காமகோடி 59 வது பீடாதிபதி பகவான் போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜீவ சமாதி உள்ளது .

    ”விட்டல விட்டல , பாண்டுரங்க விட்டல ” என்ற பஜனை என் காதில் ஒலிக்க நான் அங்கிருந்து விடைப்பெற்றேன்.

     

     

     

     

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி: http://temple.dinamalar.com/ & http://www.veethi.com/ & http://www1.sulekha.com/

    Share
  • முகுந்தா, எனக்கு அருள்தா!

     

    — விசாலம்

    2012-03-04-YoganandawithAYமகா அவதார புருஷர் பாபாஜியை அறியாதவர் யார்? அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் அவர்களின் குரு என்றால் கேட்கவும் வேண்டுமா? தவிர விஜய் டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜனி அவர்கள் இமாலய பகுதியில் இருக்கும் குகைக்குள் செல்லும் காட்சியும் அங்கு அவரது அனுபவங்களும், அவர் தவத்தில் அமர்ந்திருக்கும் காட்சியும் கண்டு பலர் அந்த பாபாவை குருவாக நினைத்து கிரியா யோகத்தைக் கற்றுக்கொண்டனர். மகாஞானியும் மகா அவதார புருஷரும் ,பல நூற்றாண்டுகள் கழிந்தும் இன்றைக்கும் உயிருடன் இருந்தபடி அருள் புரிவதாகவும் கருதப்படும் ஸ்ரீ பாபாஜியின் சீடர் ஸ்ரீ லஹரி மகாசாயா அவர்கள். இவரின் அன்புச்சீடர் ஸ்ரீ யுக்தேஷ்வர்கிரி ஜி.

    ஒரு நாள் இவர் முன் பதினெட்டு வயதான முகுந்தன் என்பவன் வந்து நின்றான். குரு யுக்தேஷ்வர்ஜியும் தன் கண்களால் அவனை உற்று நோக்கினார்.அவருடைய அருள் பார்வை கிடைக்க முகுந்தனின் தேகம் சிலிர்த்தது. அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து எல்லாவற்றையும் சமர்ப்பணம் செய்தான். “இறைவனைத் தரிசித்தவர் இந்த மகான். அவரது நற்பாதங்களைப்பிடித்து கொண்டால் நமக்கு நல்வழி காட்டுவார் “என நினைத்தபடி தன் இரு கண்களையும் மூடிக்கொண்டு வணக்கம் செலுத்தினான்.

    “வா முகுந்தா. நீ வருவாய் என எனக்குத்தெரியும். உன்னை நானே ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இது எப்படி தெரியும் என யோசிக்கிறாயா? எனக்கு அந்த பாபாவே உன்னை என்னிடம் அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்,” எனக்கூறி அவனை அன்புடன் அழைத்து ஆசீர்வதித்தார். யார் இந்த முகுந்தன்? உத்திரப்பிரதேசத்தில் கோரக்பூரில் ஒரு வங்காள குடும்பத்தில் க்ஷத்ரியனாக பிறந்தான் முகுந்தன். சிறு வயதிலேயே அவனுக்குள் ஒரு தேடல் இருந்தது. இறைபக்தியுடன் வளர்க்கபட்டான் அவன். தனக்கென்று ஒரு குருவைத்தேடி மடம் மடமாக, பல ஆஸ்ரமங்களாகத் தேடி அலைந்து பின் பதினேழாவது வயதில்தான் பாபாஜியின் சீடர் வழி வந்த யுக்தேஷ்வரர்ஜியை தனது குருவாக ஏற்றுக்கொண்டான். சிறு வயதிலிருந்தே அவனுக்கு கடவுள் பக்தி அதிகம். தினமும் ஒரு கோயில் செல்லுவான். அத்துடன் இல்லாமல் பல வேத வித்தகர்கள், சன்யாசிகளையும் பார்த்து வணங்குவான்.

    “அண்ணா உன்னைப்பார்க்க ஆவலாக இந்த ஆக்ராவுக்கு வந்து விட்டேன். இங்கிருந்து எனக்கு மதுரா,பிருந்தாவன் எல்லாம் போக வேண்டும் “

    “என்ன முகுந்தா. உனக்கு இதே வேலையா போச்சு. எப்பொழுது பார்த்தாலும் கோயில், குளம் என சுற்றுகிறாய்..நன்கு படித்து ஆக வேண்டிய காரியத்தைப்பார்”

    “இல்லை அண்ணா. என்னை மன்னித்துக்கொள். எனக்கு அந்தக்கோயில் போக வேண்டும். கண்ணன் என்னை அழைக்கிறார்.”

    “நீ இப்படிக்கோயில் கோயிலென்று ஊர் சுற்ற அப்பாவின் சொத்தில் ஒரு நயா பைசா கூட உனக்குக் கிடைக்காமல் போய்விடும். தெரியுமா உனக்கு?”

    “அண்ணா, கடவுள் எனக்குத் தேவையானதை தருவார். “

    “ஹாஹாஹா அப்படியா? சரி உனக்கும் உன் நண்பனுக்கும் மதுரா போக மட்டும் டிக்கட் எடுத்து தருகிறேன், மற்றபடி ஒரு செல்லிக்காசு கூட தரப்போவதில்லை . நீங்கள் மதுரா போங்கள். பிருந்தாவனம் போங்கள். வயிறார சாபிடுங்கள். அங்கும் இங்கும் சுற்றிப்பாருங்கள். ஆக்ரவுக்கு திரும்பி வாருங்கள். ஆனால் ஒருவரிடமும் பணம் கேட்காமல் என்னிடம் திரும்பி வாருங்கள். திருடவும் கூடாது . இது போல் நடந்து விட்டால் நான் என்ன செய்வேன் தெரியுமா?”

    “அண்ணா என்ன செய்யப்போகிறீர்கள்?”

    “தம்பி நானே உனக்குச் சீடனாகி விடுவேன்.”

    “சரி அண்ணா, என்னை வாழ்த்தி அனுப்பி வை’

    முகுந்தன் அந்தச்சவாலை ஏற்றான். தனது நண்பன் ஜிதேந்திராவுடன் கிளம்பினான். ரயில் ஓடிக்கொண்டிருக்க மதுராவின் ஒரு ஸ்டேஷன் முன்பாக நின்றது. அங்கு இரு பெண்மணிகள் ஏறினர் . முகுந்தனுக்கு எதிரில் அமர்ந்தனர். பின் மதுரா ஸ்டேஷன் வந்தது. இருவரும் இறங்கினர். அந்த இடத்தில் முகுந்தனும் தன் நண்பனுடன் இறங்கினான். அந்தப்பெண்மணிகள் இவர்கள் இருவரையும் அழைத்து ஒரு குதிரை வண்டியில் அமரச்சொன்னார்கள். பின் அவர்களை ஒரு ஆஸ்ரமத்திற்கு அழைத்துச்சென்றனர்.

    உள்ளிருந்து ஒரு குரல் வந்தது.

    “என்ன ,கௌரிம்மா, வந்துட்டயா ? போன காரியம் என்ன ஆச்சு?’

    அதற்கு அந்தப்பெண்மணி ,”அம்மா அந்த இளவரசியால் வர முடியவில்லை. ஆகையால் நாம் செய்த விருந்து ஏற்பாடுகள் வீணாகி விடக்கூடாதே என்று இரண்டு இறை பக்தர்களை அழைத்து வந்து விட்டோம்.”

    “நல்ல காரியம் செய்தாய் கௌரிம்மா. அவர்களுக்கு எல்லா உபசாரங்களும் நடக்கட்டும்.”

    அவ்வளவு தான் கடவுள் கிருபையினால் அவர்களுக்கு பல வகை பண்டங்களுடன் விருந்து படைக்கப்பட்டது. பின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தபடி மேலே நடந்து நடந்து ஒரு மரத்தடியின் கீழ் இளைப்பாறினர். அப்போது ஒருவன் அவர்களை நோக்கி ஓடி வந்தான். நேராக முகுந்தனைக்கண்டு வணங்கினான்.

    “நான் தான் பிரதாப். நான் நேற்று இரவில் கண் மூடிய போது கனவில் கண்ணன் தோன்றினார். உங்கள் இருவரையும் காட்டி உங்களுக்கு பிருந்தாவனத்தைச் சுற்றிக்காட்டும்படி கட்டளையிட்டார்..இது என் கிருஷ்ணன் இட்ட கட்டளை. ஆகையால் தயவு செய்து என்னுடன் வாருங்கள்” என்றபடி அவர்கள் இருவர் கைகளை தன் கையில் இழுத்துக்கொண்டான் .

    “இங்கு என்னதான் நடக்கிறது” என்று பிரமித்துப்போய் அவனுடன் நடந்தான் முகுந்தன். பின் என்ன! பிருந்தாவனத்தில் ஓடும் நதி. கண்ணன் விளையாடிய இடம் , என்று பல பார்த்து ரசித்து தன்னையே மறந்தான். பின் இரவு ஆனதும் அவர்களை அழைத்துப்போன பிரதாப் திரும்பி ஆக்ராவுக்கு ரயில் டிக்கெட்டும் வாங்கிக்கொடுத்து அவர்களை வண்டி ஏற்றிவிட்டான் . ஆக்ராவும் வந்தது தன் வீடு திரும்பிய முகுந்தனையும் அவனது தோழன் ஜிதேந்தராவையும் கண்ட அவனது அண்ணா கேலியாக “என்ன ! எல்லா தரிசனமும் கிடைத்ததா?’ என்று கேட்க ஜிதேந்திரா கடவுளின் கிருபையை நினைத்து அழுதேவிட்டான். பின் நடந்த எல்லாவற்றையும் அண்ணனுக்கு விளக்க அண்ணன் தம்பி முகுந்தனின் தெய்வ கடாக்ஷம் கண்டு அவனது சீடரானார்.

    இந்த முகுந்தன் தான் இன்று எல்லோராலும் போற்றப்படும் ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் அவர்கள். நம்பிக்கை கடவுளைவிட மேலான சக்தி என்பதை நிரூபித்த மகான். இவரது தாய் இட்ட பெயர் முகுந்தலால் கோஷ். இவர் தனது இருபத்திரண்டாவது வயதில் சன்யாசியாக ஆனார். அன்றையதினத்திலிருந்து முகுந்தன் என்ற பெயர் போய் யோகானந்தகிரி என்று ஆனது. அவரது குருவும் அவரது வருங்காலத்தை ஓரளவு அறிந்துக்கொண்டதால் அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருப்பது அவசியம் என்பதை உணர்ந்தார். இதனால் அவர் கொல்கத்தா காலேஜில் ஆங்கிலம் எடுத்து படித்து வெற்றி பெற்று பட்டமும் பெற்றார். ஒவ்வொரு அவதாரபுருஷரும் அவரது கடமையை ஆற்ற கடவுளால் அனுப்பப்படுகிறார். இவருக்கும் அந்தக்காலம் வந்தது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உலக சமய மகாநாடு நடக்க இருந்தது. அதற்கு இந்தியப்பிரதிநிதியாக ஸ்ரீயோகானந்தகிரி தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஸ்டன் நகரில் அவர் இந்திய கலாச்சாரம், யோகக்கலை, தியானம் இந்து சமயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

    அந்நாட்டு மக்கள் அப்படியே அசையாமல் அமர்ந்து தங்களை மறந்து யோகியின் மேதாவிலாசத்தைக்கண்டு வியந்துப்போயினர். அந்த நாட்டிலேயே அவர் ‘கிரியா யோகம் என்கிற அற்புத யோகக்கலையை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். இது மனித உடலின் இயக்கமும் உள்ளத்தின் ஓட்டமும் இணைந்து ‘மனிதனென்பவன் தெய்வமாகலாம் ‘என்ற கவியரசர் திரு கண்ணதாசன் பாடலுக்கேற்ப உண்மையாகவே தெய்வ நிலைக்கு வரமுடியும் .

    இந்த சூட்சுமகலையினால் மனிதன் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தை அடைய முடியும். இந்த யோகப்பயிற்சி மகாவதார் பாபாவிடமிருந்து சீடருக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். இந்தக்கலையை அவர் பலருக்கு படிப்பிக்க ‘தன்னிலை உணருவோர் சங்கம்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.வெளி நாட்டவர்கள் வாழும் விதத்தில் டென்சன் நிறைய உண்டு. இயந்திரமே உலகம் என்று அவர்கள் வாழ்க்கை இருக்கும். அதனால் தான் வாரக்கடைசியில் ‘வீக் என்டு’என்று வெளியில் சுற்ற போய்விடுவார்கள். ஆனாலும் அதில் கேளிக்கைகளும் உடல் சுகமும் முக்கிய இடத்தைப்பிடிப்பதால் அங்கு மன நிறைவு சில மணி நேரம் தான் கிடைக்கிறது. நிரந்திர நிம்மதியோ, மன அமைதியோ, ஆத்ம திருப்தியோ கிடைப்பதில்லை . ‘மெடீரியல் ஹேப்பினஸ்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். வெளிப்பொருட்களால் அடையும் சிற்றின்பம் நிலைக்காதது, அழியக்கூடியது. பேராசை ஒரு பேய் போல் நம்மையே அழிக்க வல்லது. மானிடப்பிறவியுடன் அஹங்காரமும் கூடவே வந்துவிடுகிறது. மனிதனின் துன்பங்களுக்குக் காரணம் அவன் பொறாமை. ஆசை, வெறுப்பு , தன்முனைப்பு என்று பல தன்னுள் கொண்டிருப்பதால் தான்.

    அவன் ஏற்ற உடல் ஒரு நாள் அழியக்கூடியது என்று அவன் உணருவதில்லை. பல தவறுகள் செய்கிறான். நிம்மதியை இழக்கிறான், இதிலிருந்து விடுபட இறையுணர்வு மிகவும் இன்றியமையாதது. ‘காயிலே புளிப்பதென்ன கண்ணப்பெருமானே, கனியிலே இனிப்பதென்ன கண்ணப்பெருமானே’ என்று மகாகவி பாரதி இறையுணர்வை வெளிபடுத்துகிறார். இறையுணர்வால் பலர் பலவிதமான வியப்பான அனுபவங்களைப் பெற்றிருக்கின்றனர்.

    இறைவன் அமைத்த நாடக மேடையில் நாமெல்லாம் நமக்கு கொடுத்த பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கிறோம். நாடகம் முடிந்து திரை விழுந்ததும் நம் பாத்திரமும் முடிந்துவிடும். ஆனால் பலரும் அந்தப்பாத்திரம் நிலையானது என்று எண்ணி அந்தப்பாத்திரத்துடன் ஒன்றிப்போய்விடுகின்றனர். வாழ்க்கை ஒரு நாடக மேடை. இறைவனே அதன் சூத்ரதாரி. அவன் தாள் பணிந்தால் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு தெரியும். அந்த இறைவனை அணுகும் எளிய வழி மஹாவதார் பாபா ஆசிகளுடன் வந்த “கிரியா யோகம்.” இந்தக்கிரியா யோகத்தை தியானம் தீக்ஷை மூலம் கற்றுக்கொள்ள பல அமெரிக்கர்கள் வந்தனர். பாஸ்டன் மகா நகர மக்கள் யோகானந்தகிரியின் போதனைகளாலும், கிரியா யோகப்பயிற்சியினாலும் மிகுந்த பலனை அடைந்தனர்.

    சுமார் பதினைந்து வருடங்களுக்குப்பிறகு அவர் தனது குருவைப்பார்க்க இந்தியாவுக்கு வந்தார். மேலும் தனது இந்தப்பணியை இந்தியாவிலும் பரப்ப ஆசை கொண்டார். தனது குருஜி ஸ்ரீ யுக்தேஷ்வர்ஜியை சந்தித்தார். குருஜி அவரைப்பார்த்து மிகவும் பெருமிதத்துடன் அவரை அணைத்துக்கொண்டார்.

    “யோகானந்தா, உன் ஆன்மீக வளர்ச்சி என்னைப்பெருமைக்கொள்ளச்செய்தது. இன்றைய தினத்திலிருந்து உனக்கு “பரமஹம்ஸ” என்னும் பட்டத்தையும் அளிக்கிறேன். இனி நீ “பரமஹம்ஸ யோகானந்தர்” என்று அழைக்கப்படுவாய்.”

    இதுவே அவர்களது கடைசி சந்திப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். பின் சில நாளில் ஸ்ரீ முக்தேஷ்வர்ஜி முக்தியடைந்தார். அதன் பின்னர் பரமஹம்ஸ யோகானந்தர் திரும்பவும் அமெரிக்கா சென்றார். தன்னுடைய ஆன்மீக அனுபவம் பற்றி ” ஆட்டோபயாகிரபி ஆப் யோகி ” அதாவது ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ என்ற புத்தகத்தை எழுதினார். இன்று உலகத்திலேயே மிக அதிகமாக விற்பனையான புத்தக வரிசையில் இது இடம் பெற்றுவிட்டது. தவிர பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிறப்பென்றான்றால் இறப்பும் உண்டே ! அந்த நாளும் வந்தது, 1952ம் வருடம் மார்ச் மாதம் ஏழாம் தேதி லாஸ் ஏஞ்சலீஸில் நடக்கப்போகும் ஒரு விருந்துக்கு அவரும் அழைக்கப்பட்டார். அதில் அமேரிக்காவின் இந்திய தூதரும் அவரது மனைவியும் கலந்துக்கொண்டனர். அந்த விருந்தில் பரமஹம்ஸ் யோகாநந்தருக்கு உடல் நிலை ஒரு மாதிரி ஆனது . அவரது முடிவு அவருக்குத்தெரிந்தது.

    “கங்கை நீர் இமயமலைக்குகைகள் இறைவனைத் தொழுது வாழும் மக்கள் எனக்கொண்ட பாரத புனித மண்ணை ஸ்பரிசித்ததே பெரும் பேறு” என்று சொல்லியபடி அப்படியே சரிந்தார். இறைஜோதியுடன் கலந்து ஐக்கியமானார். இறந்தப்பின் ஸ்ரீ அரவிந்த மஹரிஷிக்கு ஏற்பட்ட நிலை இவருக்கும் ஏற்பட்டது. ஸ்ரீ அரவிந்த மகரிஷியின் உடல் தங்க மயமாக அப்படியே உயிருடன் இருப்பது போலவே இருந்தது. ஒரு விதமான துர்நாற்றம் வீசவில்லை. உடல் நல்ல நிலையில் இருந்ததை பலர் வந்து தரிசித்தனர். அதேபோல் பரமஹம்ஸ் யோகானந்தரின் திருமேனி இறந்து இருபது நாட்கள் ஆன பின்பும் கெடவில்லை . உடல் கட்டைப்போல் ஆகவில்லை. இந்த மிரகிளைப்பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் வந்தனராம். இந்த அதிசயத்தைக்கண்டு வியந்தனர். பின்னர் அவரது திருமேனியை கலிபோர்னியாவில் அடக்கம் செய்தனர். இதை நான் எழுதிக்கொண்டிருந்த போது நான் கேட்ட பாடல் “முகுந்தா முகுந்தா ,வரம் தா வரம் தா” என்ன பொருத்தமான பாடல். வியந்துப்போய் அதையே தலைப்பாக வைத்தேன் .

    குருவுஜிக்கு என் பணிவான வணக்கங்கள்.

    Share
  • சாம கானம்

    -விசாலம்

    Ravanan_-_King_of_Lanka

    இராவணணின் அப்பா யார் தெரியுமா? அவர் தான் ’விஸ்ரவஸ்’ என்ற முனிவர்; சிறந்த சிவ பக்தர். இராவணனுக்குக் கும்பகர்ணன், விபீஷணன் என்று இரண்டு இளைய சகோதரர்கள். இராவணின் தங்கைதான் சூர்ப்பனகை. இராவணனும் மிகுந்த சிவ பக்தன். கடுந்தவங்கள் புரிந்தவன். இதனால் சிவ பெருமானே நேரே தோன்றி  அவனுக்கு வரங்களையும் கொடுத்தார். இலங்கையை ஆண்டு,  தன் வரங்களால் மூவுலகையும் வென்று இலங்கேஸ்வரன் ஆனான்.

    இதனால் அவன் செருக்கு  அதிகரித்தது. நாம் ஏரோப்பிளேனில் பறப்பது போலவே அவனும் தன் புஷ்பக விமானத்தில் அடிக்கடிப் பறப்பான். புஷ்பக விமானத்தில் பறவை போல் இரு இறக்கைகள் இருக்கும். அதில் ஜம்மென்று அமர்ந்து ஓட்ட  எங்கு வேண்டுமானாலும் வானத்தில் பறக்கமுடியும்!

    ஒரு நாள்  இராவணன்  தன் புஷ்பக  விமானத்தில்  பறக்க,  ஓர்  இடத்தில் விமானம்  மேலே பறக்க முடியாமல்  நின்றுவிட்டது. இது எதனால் இருக்கும் என்று எண்ணி அவன்  அந்த விமானத்திலிருந்து இறங்கினான்.

    அவன் முன்பு நந்திதேவர் தோன்றினார். “இராவணா!  நீ வந்திருக்கும்  இடம் கயிலயங்கிரி; இது ஈசனிருக்குமிடம்.  ஆகையால்  கர்வம் கொண்டவர் எவருமே இதைத் தாண்ட இயலாது; அதனால் திரும்பிச்செல்!”

    இதைக்கேட்ட இராவணனுக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது!

    “நீ யார் என்னைத் தடுக்க! குரங்குபோன்று முகம் உனக்கு!  நீயா என்னைத் தடுக்கிறாய்? நான் யார் என்று தெரியுமா? என்  பராக்கிரமம் என்னவென்று உனக்குத் தெரியுமா? என்னைத் தடுத்து நிறுத்திய நீ யார் சொல்லு முதலில்?”

    “இராவணா என்னைக் குரங்கு என்று இகழ்ந்து பேசுகிறாயா? நீயும்  உன் இலங்கையும் அழிய  ஒரு குரங்கே காரணமாக இருப்பார்! நான் நந்திதேவர் தெரியுமா உனக்கு?”

    இராவணன் கண்கள் சிவந்தன. மேலும் கோபம் கொண்டு “இந்த மலையா ஹா..ஹா..ஹா…இதை நான் பிடுங்கி எறிந்து விடுகிறேன்!” என்று அடியோடு பெயர்க்க ஆரம்பித்தான். திடீரென்று இமயம் பூகம்பம்போல் ஆடியது. அந்த நடுக்கத்தில் உமையவள்  நடுங்கிப்போனாள். நீரில் வாழும் ஜந்துக்கள்,   பறவைகள், விலங்குகள் எல்லாம் கலவரப்பட்டுக் கத்தின. முனிவர்களின் தபசு கலைந்து போனது. இதையெல்லாம் கண்ட பரமசிவன், இராவணனின் செருக்கை உணர்ந்து அவனுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க எண்ணித் தன் கட்டைவிரலால்  மலையை ஓர் அமுக்கு அமுக்கினார். அப்போது இமயமலை சாதாரண நிலை அடைந்தது; கலவரமும் நின்றது. சிவபெருமானின் கட்டைவிரலின்  பலத்தைத் தாங்க முடியாமல் இமய மலையின் கீழே இராவணன் நசுங்கிப்போனான். அவன் ஆற்றலும் மறைந்தது!

    சுமார் ஆயிரம் ஆண்டுகள் அந்த நிலைமையில் இருந்தான். நசுங்கியபடியே வருந்தினான். பின்பு, தான் செய்ததற்குப் பிராயச்சித்தமாகத் தன் ஒரு தலையைக் கொய்து குடமாக்கித்  தன் நரம்பை வீணைத்தந்தி போல் அதிலே பொருத்தி  இனிய  நாதத்துடன் இசையை எழுப்பினான். அதுவே சாம கானமாக வந்தது. சிவபெருமான் சாம கானத்தில் உருகிப்போனார். அவனை மன்னித்து விட்டார். பின்பு அவனுக்கு ’இராவணேஸ்வரன்’ என்ற பட்டமும் வந்தது.

    Share