அன்பு

–விசாலம் .

அன்பே கடவுள்  என்கிறோம்.  இதிலிருந்து அன்பு,வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய  பங்கு வகிக்கிறது என  தெரிகிறது. ஒருவருடைய கோபத்தால் அவரது  குடும்பம் முழுவதும் நிம்மதி இழந்து   தவிப்பதைப்பார்த்திருக்கிறோம். அதேபோல் ஒருவருடைய அன்பினால் எப்படிப்பட்ட குடும்பத்தையும் கட்டிப்போட முடியும்  அரவணைத்துக்கொண்டு போக முடியும்.

“அன்புஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பு என்னும் நாடாச்சிறப்பு ” என்கிறார் திருவள்ளுவர் .
அது உலகத்தாரையே நட்பாக்கும். சிறப்பாக்கும் என்கிறார் .

“அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது
மதத்தின்  மேல் வைத்த அன்பு பக்தியானது
மனிதன் மீது வைத்த அன்பு  பாசமானது
இதய மீது வைத்த அன்பு உண்மையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது”

என்ற மிக அழகான பாடலை நமது கவியரசர் திரு கண்ணதாசன் அவர்கள்   கொடுத்திருக்கிறார். அன்பு  இருக்கும் இடத்தில் முகம் மலர்ந்திருக்கும். முகத்தில் ஒரு புன்னகை இருக்கும். அங்கு மன்னிப்பு இருக்கும். பணிவு இருக்கும் மரியாதை இருக்கும். அன்புக்கு மிருகங்களும் கட்டுப்படும். அன்பு எனும் சொல் ஒன்றுதான் ஆனாலும் அதை வெளிபடுத்தும் விதத்தில் வித்தியாசம் ஏற்படும் . தாய் தந்தையிடம் காட்டும் அன்பு, காதலியிடம் காட்டும் அன்பு , குழந்தைகளிடம் காட்டும் அன்பு ,  நண்பர்களிடம் காட்டும் அன்பு ,  இறைவனிடம் கட்டும் அன்பு என்று பலவகை இருந்தாலும் இறைவனிடம் காட்டும் அன்பே நிரந்தரமானது, இதைப்புரிந்துக்கொள்ள ஒரு சின்னக் கதை ….

Lakshmi On Lotusஒரு செல்வந்தர் விடாமல் லட்சுமி பூஜை செய்து வந்தார்  ஒரு நாள்   அவர் கனவில் லக்ஷ்மி   தோன்றினாள்.  ” சேட்ஜி  நான் இன்னும் சில தினங்களுக்குள்  உன்னை விட்டுப்போய்விடுவேன்  நீ செய்த புண்ணியச்செயல்களால் தான் உன்னுடன் இருந்தேன். உன் புண்ணியங்கள் முடிந்து விட்டன ஆகவே நான் வீட்டை விட்டுப்போகப்போகிறேன் அதற்குள்  ஏதாவது வரம் கேட்க விரும்பினால்  கேட்டு வாங்கிக்கொள் ” என்றாள்.

“அம்மா திருமகளே நான் என் குடும்பத்தில் இதைப்பற்றிக் கேட்டப்பின்  வரம் கேட்கிறேன்  நீ என்னை  விட்டுப்போவது எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது ” என்று மனமொடிந்துக் கூறினார். மறு நாள் கனவைப்பற்றி தன் குடும்பத்தாருக்குத் தெரிவித்தார் மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று எல்லோரிடமும் கேட்டார் .

“வைரம் முத்து மரகதம் மாணிக்கம் என்று கேளுங்கள்”  என்று முந்திக்கொண்டாள் மனைவி.

பொற்குவியல்களைக் கேளுங்கள் அப்பா ” என்றான் மூத்த  மகன்.

“உணவு பண்டங்கள் கேட்கலாமே” என்றான் இரண்டாவது மகன்.

வேறு சிலர் வீடு வாகனங்கள் என பல கேட்கச்சொன்னார்கள் .

பின் வந்தாள் அவரது கடைசி மருமகள்.  ” அப்பா   எல்லோரும் பலவிதமானப் பொருட்களைக் கேட்டனர் அவைகள் எல்லாம் வந்தாலும் கூட எப்போ லட்சுமி போகப்பாவதாகச்சொன்னாளோ அப்போதே இந்தப்பொருட்களும்  அழிந்து விடும்.  இவைகள் ஒன்றும் நிலைத்திருக்காது.   ஆகையால் தாங்கள் நம் குடும்பத்தில் பரஸ்பர அன்பு நிலைத்திருக்கட்டும்   என்ற வரம் கேளுங்கள் எத்தனைக்கஷ்டங்கள் வந்தாலும் பரஸ்பரம் அன்பு இருந்தால் அங்கு நிம்மதி நிலைக்கும். வாழ்க்கை நிம்மதியாகக் கழிக்க முடியும் ” என்றாள்

எல்லோருக்கும் இது சரியென்றே பட்டது.

மறுநாள் கனவில் திருமகள் தோன்றினாள் ”  என்ன சேட்ஜி என்ன கேட்க நினைத்தாய்?”

“̀தேவி தாங்கள் என்னைவிட்டுப்போவதில் வருத்தமே, ஆனாலும் நீங்கள் சொன்னபடி எனக்கு ஒரு வரம் தர வேண்டும்.   என் குடும்பத்தினரிடையே பரஸ்பர  அன்பும் பாசமும் ஒற்றுமையும் நிலைக்க வேண்டும்இந்த வரத்தை அளிக்க  வேண்டும்.

புன்னகைப்பூத்தாள் திருமகள். “மகனே  இந்த வரம் கேட்டு என்னை இங்கயே கட்டிப்போட்டு விட்டாய். எங்கு சண்டையில்லையோ  அன்பு இருக்கிறதோ அங்கு நான்  நிரந்தரமாக இருக்க விரும்புவேன்.குடும்பத்தில் அன்பு நிலவ வேண்டும் என்று நீ கேட்டு விட்டாய்.     உன் குடும்பத்தை விட்டு எப்படி  நான் செல்ல முடியும் ?  என்று சொன்னபடியே அங்கேயே நிலைத்து விட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

படம் உதவி: http://www.oldindianarts.in/2011/07/goddess-lakshmi-on-lotus-1940s-vintage.html

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *