–விசாலம்

வடக்கில் கங்கை கங்கோத்திரியிலிருந்து  ஒரு வெள்ளிக்கம்பி போல ஆரம்பித்து  சில இடங்களில் அமைதியாகவும் சில இடங்களில் ஆக்ரோஷமாகவும்  பாய்ந்து ஓடுகிறது. புனித கங்கை ரிஷிகேசத்திலிருந்து ஏழு கிளைகளாகப் பிரிந்து  மிக வேகமாக சீற்றத்துடன்  பிரவாகமாக ஓடி வருகின்றது. இந்த  கங்கை கரையில்  இருப்பது ஹரிதுவார் என்ற  ஒரு க்ஷேத்திரம். ஹரியின் வாசல் என்று தமிழில் பொருள் வருகிறத. இந்த ஹரிதுவாரிலிருந்து சுமார் எட்டு கிமீ சென்றால் ஸ்ரீ வேதவியாசர் கோயில் வந்துவிடும். இந்த இடத்தின் பெயர் சப்தசரோவர் .. அதாவது, ஏழு ஏரி என்ற பொருள். இந்த இடத்திற்கு நான் பள்ளி மாணவர்களுடன் வந்திருக்கிறேன். ஸ்ரீ சுதீந்திர தீர்த்த மகாசுவாமிகள் இந்தக்கோயிலை சுமார் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் மிக அழகாகக் கட்டியிருக்கிறார்.

யார் இந்த வேதவியாசர்? அவருக்கு ஏன் கோயில் கட்ட வேண்டும் ?

ஒரு சமயம் பராசர முனிவர் சிவனை நோக்கி தவம் இருநதார்.  சிவனும் அவர் முன் தோன்றி “உன் சிவபக்திக்கு மெச்சினேன் உன்னுடைய குமாரன்  வேதங்களில் நன்கு தேர்ச்சி பெற்று உலகமக்களின் நன்மைக்காக வேதங்களைத் தொகுத்து அளிப்பார்”  என்று கூறி மறைந்தார்.

பராசர முனிவருக்கும்  சத்யவதிக்கும்  ஒரு மகன் பிறந்தான். பெற்றோர்   அவருக்கு கிருஷ்ண துவைபாயனர்  என்று பெயரிட்டனர். அந்த  பரமேஸ்வரன் கூறியபடி  அவர் தன் தகப்பனார் மகரிஷி பராசரரிடத்தில் வேதம் பயின்றார். பின்னர் பதஞ்சலியிடமிருந்தும் ஆழமாக சென்று சிறந்த பாண்டித்யம் பெற்றார்.  பின் தேசயாத்திரை தொடங்கி பல இடங்களிலிருந்தும் வேதங்களைச் சேகரித்தார். பின்னர் அதை நான்காகப்பிரித்தார். அவையே ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம். பின்னர் தன்னுடைய நான்கு சீடர்களுக்கு அளித்தார்.

ரிக்வேதத்தை  பைல முனிவருக்கும், யஜூர் வேதம் வைசம்பாயனருக்கும்,  சாம வேதத்தை  ஜைமினி முனிவருக்கும், சுமந்து முனிவருக்கு  அதர்வணவேதத்தையும் கற்றுக்கொடுத்தார். இப்படி வேதத்தைப்பிரித்துக்கொடுத்ததால்  இவருக்கு வேத வியாசர் என்ற பெயர் வந்து  சேர்ந்தது.

பின் இவர் பிரும்ம சூத்திரம் என்ற அரிய நூலை எழுதி நமக்கெல்லாம் ஒரு பொக்கிஷமாக அருளியிருக்கிறார். மேலும் நமக்கு வேதம், உபநிஷதம், புராணங்கள் போன்று பல பொக்கிஷங்கள்  அவர் மூலம் கிடைத்திருக்கின்றன.

மகாபாரதத்தில் போர் கடுமையாக நடந்து அதில் பலர் மடிந்தனர். மகாபரதப்போரை கண் தெரியாமல் இருந்த திருதாஷ்டிரர் பார்க்க விரும்பினார். யுத்தபூமியில் நடக்கும் எல்லா காட்சிகளையும் அரண்மணையில் இருந்தபடியே வர்ணிக்கும் சக்தியை சஞ்சயனுக்கு அளித்து திருதாஷ்டிரரது ஆசையைப்பூர்த்தி செய்தவர் ஸ்ரீ வேதவியாசர் தான். அவரிடம் அத்தனை சக்தி  இருந்தது. போர் முடிந்த பின் குந்தி தேவியுடனும் மன்னர் திருதிராஷ்டிரனுடனும் சில நாட்கள் வியாசமுனிவர் தங்கினார். அப்போது மன்னர் போரினால் தனது செல்வங்கள் அனைவரும் அழிந்து  அத்துடன் பல உறவினர்ளையும் இழந்து விட்டேனே என்று வருந்தி, மறுபடியும்  அவர்களைப்பார்க்க மிகவும் ஆசையாக உள்ளது என்று வியாசமுனிவரிடம் தன் ஏக்கத்தைத் தெரிவித்தார் , வியாசமுனிவரும் அவரை கங்கைக்கரைக்கு  அழைத்துபோனார்  மகா பாரதப்போரில் இறந்தவர்களை வரச்சொன்னார். இறந்தவர்களும் அரச உடைகளுடன், அலங்காரமாக தங்களது தேரில்  வந்து காட்சியளித்தார்கள். இதனால் திருதாஷ்டிரரின் ஏக்கம் தீர்ந்ததாம்.  இந்தச்சம்பவம் ஒரு கதாகாலட்சேபத்தில் கேட்டது.

தவிர  மஹாபாரதத்தை ஸ்ரீ வியாசர் சொல்லிக்கொண்டு வர ஸ்ரீ மகாகணபதியே  அதை எழுதினார் என்பதை நாம் புராணங்கள் வாயிலாக தெரிந்துக்கொள்கிறோம். இத்தனைச்சிறப்பு பெற்ற ஸ்ரீவியாசபகவானுக்கு ஒரு கோயில் இல்லையே என்ற ஏக்கம் ஸ்ரீ சர்தார்வல்லப பாய் பட்டேலுக்கு இருந்தது இதற்காக அவர்  ஸ்ரீ வியாசபகவானுக்கு ஒரு ஆறடி சிலை  தயார் செய்து அதை யமுனை நதிக்கரையில் “குல்பீ” என்னும் இடத்தில் பிரதிஷ்டை செய்தார்.ஆனால் அங்கு நித்தியப்படி பூஜை . புனஸ்காரம் நடத்தப்படவில்லை .

ஒரு நாள்  காசியில்  காசிமட சமஸ்தானத்தின் முதல் ஆச்சாரியார் ஸ்ரீ யாதவேந்திர தீர்த்த சுவாமிகள் கங்கையில் ஸ்னானம் செய்ய இறங்கினார். அவர் காலில் ஏதோ ஒன்று பளுவாக தட்டுப்பட்டது. முதலையாக இருக்குமோ என்று எண்ணினார். ஆனால் அது கற்போல் காலில் தட்டுப்பட்டதால் குனிந்து அதை எடுத்தார். அது ஒரு அழகான விக்கிரகம். அதுவும் ஶ்ரீ வேத வியாசரின் விக்கிரகம். அதை தன் மடத்தில் எடுத்துக்கொண்டு  போய் தினமும் பூஜை செய்யலானார். வரிசை வரிசையாக அது பலரால் பூஜிக்கப்பட்டது, பின்னர் காசி மடத்து  சமஸ்தான இருபதாவது பட்டத்தில் அருளப்பட்ட ஸ்ரீ சுதீந்திர தீர்த்த மகா சுவாமிகள் இவருக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று கடும் முயற்சியில் இறங்கி  வெற்றியும் கண்டார்.

Veda Vyas templeஇனி கோயிலைப் பார்ப்போம். கோயிலின் முகப்பில் அஷ்டதிக்கு பாலகர்கள் இல்லை. அதற்கு பதிலாக இரண்டு முனி குமாரர்கள் நின்றபடி இருக்கின்றனர். பிரகார சுவர்களில் பல சித்திரங்கள் காணப்படுகின்றன. இதில் ஸ்ரீராமர், சீதாதேவி, ஸ்ரீ நரசிம்மர்,  ஸ்ரீ பாலாஜி,  கீதாநாயகன் கண்ணன், ஸ்ரீ வியாசபகவானின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைக்  காணமுடிகிறது. கர்ப்பகிரகத்தில் ஸ்ரீ வியாசபகவான் எழந்தருளியுள்ளார். அவரின் நான்கு பக்கங்களிலும் நான்கு சீடர்களான பைலமுனிவர், வைசம்பாயனர், ஜைமினி முனிவர், சுமந்து முனிவர்  ஆகியோர் தனித்தனி சன்னிதியில் அருள் புரிகின்றனர்.

தவிர சப்தரிஷிகள் ஸ்ரீ காச்யபர், கௌதமர் , ஜமதக்னி , அத்ரி ,பரத்வாஜர், விஸ்வாமித்ரர் ,வசிஷ்டர் இவர்களின் உருவங்கள்  நான்கு பக்கச்சுவர்களிலும் பெரிய அளவில் மிக அருமையாக  வரையப்பட்டுள்ளன.

கோயிலின் கோபுரம் சுமார் அறுபது அடியாகும் கோயிலில் தங்க விடுதிகளும் சமையல் செய்யும் கூடங்களும் உள்ளன. தவிர ஆயுர்வேத மருத்துவம், பெரிய நூலகம், வேதபாடசாலை  என்று பல பாகங்களைப் பார்க்கமுடிகிறது . உத்திரபிரதேசத்திற்கு இந்தக்கோயில் மேலும் பெருமை சேர்க்கிறது என்றால் மிகையாகாது.

 

 

 

 

 

 

 

படம் உதவிக்கு நன்றி: http://arundathiga.blogspot.com/2008/08/badrinath-to-bangalore-may-2008.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.