Tag: நிர்மலா ராகவன்

  • உன்னையறிந்தால் ….. (26)

    நிர்மலா ராகவன்

    புகழ்ச்சியும், துணிவும்

     

    உனையறிந்தால்3

    கேள்வி: நான் ரொம்ப சமத்து, இல்லே?’ என்று என் மூன்று வயதுக் குழந்தை அடிக்கடி கேட்கிறான். ஏன் இப்படி? கர்வமா?

    விளக்கம்: குழந்தைகளின் இயல்பு நம்மிலிருந்து வேறுபாடானது. அதைப் புரிந்து கொள்ளாமல், அவர்களை நம் கோணத்திலிருந்து பார்த்தால் எப்படி!

    நாம் ஒரு கதை சொன்னால், மறுநாளும் அதே கதையைச் சொல்லச் சொல்வார்கள் குழந்தைகள். அப்படிச் செய்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு என்ற அர்த்தமில்லை. இம்முறையால் ஞாபகசக்தி நன்கு வளரும் என்று இயற்கையாகவே அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

    வீட்டிலிருக்கும் பெரியவர்கள் குழந்தையைப் புகழ்வது அவசியம். `நீ எவ்வளவு சமர்த்து!’ என்று அடிக்கடி கூறி வளர்த்தால், அவனும் அதை அப்படியே ஏற்று, பிறர் மெச்சும்படி நடக்க முயல்கிறான். அடிக்கடி கேட்டு, உறுதிப்படுத்திக் கொள்கிறான். இது கர்வம் என்று அர்த்தமில்லை.

    சிலர் அந்த முயற்சியைத் தவறாகப் புரிந்துகொண்டு, `உனக்கு ரொம்பத்தான் தலைக்கனம்!’ என்று திட்டுவார்கள். தனக்கு ஏதோ வேண்டாத குணம் இருக்கிறது என்று குழந்தையின் மனம் நொந்துவிடும்.

    பெரியவர்களுக்கே தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிவதில்லை. குழந்தைகளுக்கு மட்டும் எப்படித்தெரியும்? பெரியவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறார்கள். அதனால்தான், குழந்தைகளை அசடு, முட்டாள், சோம்பேறி, கறுப்பு என்று பலவாறாகப் பழிக்கக்கூடாது. அவர்கள் முகம் வாடினால், என்னமோ வேடிக்கை என்று நினைத்துச் சிரிப்பவர்கள் இங்கிதம் தெரியாதவர்கள். நாம் `வேடிக்கை’ என்று நினைத்துச் செய்யும் காரியங்கள் பிறரை வருந்தச் செய்தால், அதில் என்ன வேடிக்கை இருக்கிறது?

    குழந்தைகளைப் புகழ விஷயங்களா இல்லை!

    குளித்துவிட்டு வரும்போது, `பளபளன்னு இருக்கியே!’ சாப்பிட்டு முடித்தவுடன், `தொப்பை அழகா, குண்டா இருக்கே!’ அழுது அமர்க்களம் செய்து, கடையில் முடியை வெட்டிக்கொண்டு வந்த சிறுவனிடம், `யாரிது! அழகா இருக்கு, அடையாளமே தெரியலியே!’ — இப்படி வயதுக்கேற்றபடி பாராட்டினால், குழந்தையும் மகிழும், அடுத்த தடவை நம் வேலையும் சுலபமாகும்.

    சிறு வயதில் பாராட்டுக்கும், புகழுக்கும் ஏங்கியவர்கள் காலம் பூராவும் அதைப் பெறத் துடிப்பார்கள்.

    `பெரிய பதவியிலிருக்கும் பெண்களிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால், அவர்களைக் கொஞ்சம் புகழ்ந்தால் போதும். நாம் நினைத்ததைச் சாதிக்கலாம்!’ என்று ஆண்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள்.

    அதாவது, ஒருவர் செய்ய யோசிக்கும் காரியத்தைச் புகழ்ச்சியால் செய்ய வைப்பது பிறரது சூழ்ச்சி.

    இது தெரிந்தாலும், இன்னொரு முறை ஏமாறாது இருக்க முடியாது இவர்களால். பிறர் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே அமையும் அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும்.

    பாவம்! போலிப் பாராட்டை எதிர்க்கும் துணிவு இவர்களிடமில்லை. துணிச்சல் பெற ஒரு வழியை எங்கள் ஆசிரியையிடமிருந்து கற்றேன்.

    சொந்தக்கதை: அப்போது எனக்குப் பதின்மூன்று வயது . எங்கள் ஆசிரியை கண்டிப்புக்குப் பெயர்போனவர். அவர் சிரித்தே யாரும் பார்த்ததில்லை.

    `எனக்கு இந்தக் கணக்கு வரவில்லை, மிஸ்!’ என்று எங்கள் வகுப்பில் யாராவது சொன்னால், `நான் வரமாட்டேன்னு கணக்கு ஒன்கிட்ட வந்து சொல்லிற்றா?’ என்று ஏசுவார்.

    நான் ஒரு முறை துணிந்து, `எனக்கு இந்தக் கணக்கைப் போட வரவில்லை,’ என்று சொல்லிவிட்டேன்.

    எனக்குப் புத்தி மட்டு என்று ஒத்துக்கொள்ள அவமானமாக இருந்தாலும், எனக்குச் சவாலாக அமைந்த ஒன்றை எப்படியாவது புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்திருந்தது.

    வகுப்பிலிருந்த அனைவரும் பயத்துடன் என்னையே பார்த்தார்கள். எல்லாவற்றிற்குமே திட்டும் ஆசிரியை மிஸஸ். லீலா மேனன்! இதை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்?

    ஆசிரியை முகத்தில் சிறு புன்னகை. என்னை அவரருகே அழைத்து, தனியாகச் சொல்லிக்கொடுத்தார்.

    அதன்பின், மற்ற மாணவிகளைப்போல, நான் அந்த ஆசிரியையைக் கண்டு அஞ்சவில்லை. பல முறை ஆசிரியைகளின் பொது அறைக்குச் சென்று, கணக்கில் சந்தேகம் கேட்பது வழக்கமாயிற்று. ஒரே ஒரு வரியைக் கோடிகாட்டிவிட்டு, `அப்புறம் என்ன?’ என்று கேட்டுக் கேட்டு, முழுவதையும் என் வாயிலிருந்தே வரவழைத்துவிடுவார். முடிந்ததும், மகிழ்ச்சியுடன் நான் நன்றி தெரிவிக்கையில், அவர் முகத்தில் சிறு புன்னகை அரும்பியிருக்கும்.
    நான் கற்று வந்து, சகமாணவிகளுக்குப் போதிப்பேன். ஏனெனில், வேறு யாருக்கும் அவரருகே செல்லத் துணிவிருக்கவில்லை!

    அன்று கற்ற பாடம்: தவறு செய்வதோ, ஒரு விஷயம் புரியாமலிருப்பதோ அப்படி ஒன்றும் அவமானத்துக்குரியது அல்ல! தோல்வியால் மனம் துவளாமல், எந்த வயதிலும் புதிய காரியங்களில் ஈடுபட அது பெரும் உதவியாக இருந்திருக்கிறது.
    `எனக்குத் தெரியவில்லை. சொல்லிக் கொடுங்களேன்!’ என்று கேட்பதில் என்ன வெட்கம்?

    சில சமயம், மாணவர்கள் கேட்கும் ஏதாவது கேள்விக்கு ஒரு ஆசிரியருக்குப் பதில் தெரியாமல் இருக்கலாம். `என்னைச் சோதிக்கப் பார்க்கிறாயா?’ என்றுதான் பலரும் ஆத்திரப்படுவார்கள். பொறுமையைக் கைவிடாது, `எனக்குத் தெரியாது. படித்துத் தெரிந்துகொண்டு, இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கிறேன்,’ என்று சொல்லிப் பாருங்கள். ஆனால், அடிக்கடி அல்ல! அவர்கள் கணிப்பில் உங்களுடைய மதிப்பு உயர்ந்து போகும்.

    Share
  • உன்னையறிந்தால் …… (25)

    நிமிர்ந்து நில்லுங்கள்

    நிர்மலா ராகவன்

    உனையறிந்தால்3

    கேள்வி: தாய்நாட்டைவிட்டு அயல்நாடுகளில் வாழ்பவர்களில் பலர் ஏன் சுலபமாகக் கோபம் அடைகிறார்கள்?

    விளக்கம்: `இந்தியாவை விட்டு வெளியேறினால், நாம் இரண்டாந்தாரப் பிரஜைகள்தாம் (SECOND CLASS CITIZENS). இந்த உண்மையை ஏற்றுக்கொண்டால்தான் நிம்மதியாக இருக்க முடியும்,’ என்று ஒரு விமானி என்னிடம் பல ஆண்டுகளுக்குமுன் கூறினார்.

    அயல்நாடுகளில் வாழ நேரிடும்போது நமது கலாசாரத்துக்கு மாறுபட்ட பிறரைப் பார்க்கும் நிலை ஏற்படுகிறது. அதனால் அச்சமும், அவர்களுடன் நெருங்கிப் பழக தயக்கமும் வருகிறது, எங்கே நம்மிடையே அவர்கள் காணும் வித்தியாசங்களில் குறை கண்டுபிடித்து விடுவார்களோ என்று.

    சாதி, இனம் முதலிய பாகுபாடுகள் ஒருவரது தகுதியைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யாது. அப்படி எண்ணுபவர்கள் சிறுபிள்ளைத்தனமானவர்கள்.

    ஒவ்வொரு மனிதனும், `நான் உயர்ந்தவன்!’ என்று ரகசியமாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறான். இதனால் பாதிக்கப்பட்டவர்களோ தாழ்வு மனப்பான்மைக்கும், அது விளைவிக்கும் பொறாமைக்கும் ஆளாகிறார்கள். நம்மை ஒத்தவர்கள் மேலே போய்விட்டால், நாம் கீழேயே தங்கிவிடுவோமோ என்ற பயத்தில், ஒரே இனத்தைச் சார்ந்தவருக்கே குழி பறிக்கும் அவலமும் இதனால்தான் விளைகிறது.

    பிற நாட்டில் வாழ்பவர்கள் சிறுபான்மையினர். `நமக்கு பிரத்தியேகமான சலுகைகள் இல்லையே!’ என்று மறுகி, அதைப்பற்றிப் பேசிப் பேசியே காலத்தைக் கடத்தினால், பலம் தான் குறைந்துபோகும்.

    நிறைய சலுகைகள் கொண்ட அந்நாட்டு மக்களைப்பற்றி அவதூறாகப் பேசினால், அதைக் கேட்டு ஆமோதிக்க நாலு நண்பர்கள் கிடைக்கலாம். இதனால் என்ன பயன்? நேரமும், சக்தியும்தான் விரயம். அதிருப்தி அடைய நிறைய காரணங்கள் இருப்பினும், நம்மால் மாற்ற முடியாததை ஏற்பதுதான் விவேகம்.

    ஒரு எச்சரிக்கை: பொறுக்க முடியாத எல்லாவற்றையும் `விதி,’ `பொறுமை’ என்று ஏற்கக்கூடாது. இது கையாலாகாதவர்கள், அல்லது பயங்கொள்ளிகளின் வீண் பேச்சு. பொறுமையும் ஒரு நாள் மீறும். அப்போது, வன்முறை பிறக்கும்.

    நம்மையே அலசிப் பார்த்து, நமது நல்ல குணங்களை வரிசையாக எழுதி, அவைகளில் நிலைத்திருத்தல் வேண்டும். `வேண்டாதவை’ என்று நாம் கருதும் குணங்களையும் எழுதி வைத்துக்கொண்டு, ஒவ்வொன்றாகக் கழித்தால், மனோதிடம் பிறக்கும். நாளடைவில், இருக்குமிடத்தில் முன்னேற்றம் மட்டுமின்றி, நிம்மதியும், மகிழ்வும் உறுதி.

    பிற நாட்டில் கல்வி பயிலும், அல்லது வேலை பார்க்கும் இடங்களில் நம் மனதை நோகடிக்கவேயென பலர் காத்திருப்பார்கள். நம் தன்மானத்தைப் போக்கும் வழியில் எவராவது ஏதேனும் சொன்னால், அசட்டுச் சிரிப்புடன் அதை ஏற்றுக் கொண்டுவிட்டு, அவர் தலைமறைந்ததும் அடுத்தவரிடம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகாதீர்கள். எதிர்த்துச் சண்டை போடுங்கள். உடனுக்குடன்! அதன்பின், அவரைக் கண்டால் ஒதுங்கிவிடுங்கள்.

    ஒரு கதை

    `உன் பெண்களுடன் எந்த மொழியில் பேசுகிறாய்?’ கேட்டது என்னுடன் வேலைபார்த்த சீன ஆசிரியை.

    நான், `தமிழ்! அதுதானே என் தாய்மொழி!’ என்றதும், `You are so chauvinistic! (’வெறித்தனமானவள்’) என்று பழித்தாள்.
    நான் எதுவும் பதிலளிக்கவில்லை. தான் வெற்றி பெற்றதாகவே அவள் நினைத்திருக்கட்டும் என்று அப்போதைக்கு விட்டுவிட்டேன்.

    சில நாட்கள் பொறுத்து, `உன் பெண்களுடன் என்ன மொழியில் பேசுகிறாய்?’ என்று தற்செயலாகக் கேட்பதுபோல் கேட்டேன்.

    `சீனம்தான். IT IS NATURAL! வேறு எப்படிப் பேசுவதையும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது,’ என்று கனப் பெருமையுடன் கூறினாள்.

    `அது என்ன, நான் என் தாய் மொழியில் பேசினால் chauvinistic, நீ பேசினால் மட்டும் natural?’ என்று தாக்கினேன்.
    அவள் முகம் `செத்துவிட்டது’. அதன்பின், என்னுடன் மோதமாட்டாள்.

    `இப்படியெல்லாம் எதிர்ப்பேச்சுப் பேச பயமாக இருக்கிறதே! இது அவமரியாதை இல்லையா?’ என்கிறீர்களா?

    மரியாதை கொடுக்கத் தெரிந்தவரிடம்தான் அன்புடன் பணிந்து போகவேண்டும். `ஒருவன் உன் கன்னத்தில் அடித்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டு!’ என்பதெல்லாம் இந்தக் காலத்திற்கு உதவாது. நட்பையோ, அதிகாரத்தையோ காட்டி, தெரிந்தே நம்மை அவமதிப்பவர்களிடம் அவர்களைப்போலவே நடந்தால்தான் அவர்களுக்கு உறைக்கும்.

    நிமிர்ந்த நடையுடன், வளையாத உடலும், நேர்ப்பார்வையுமாக, நீங்களே உங்களை மதிப்பதைக் காட்ட வேண்டும். அப்போதுதான் பிறர் உங்களை அவமதிக்கத் தயங்குவர். ஒருக்கால் உங்களை அவமரியாதையாக நடத்தினாலும், நீங்கள் பொறுத்துப் போகமாட்டீர்கள்.

    எவருக்குமே, `உன் ஒவ்வொரு சொல்லும், செயலும் இப்படித்தான் இருக்க வேண்டும்!’ என்று பிறரது போக்கைத் தீர்மானிக்கும் அதிகாரம் கிடையாது. இது மனப்புழுக்கத்தில் கொண்டுவிடும்.

    பிறர் சொல்வதை அப்படியே கேட்டு நடக்க வேண்டுமென்றால், நமக்கெல்லாம் எதற்கு தனித் தனியாக மூளை?
    பிறர் சொல்வது அவர்களைப் பொறுத்தவரை நல்ல அறிவுரையாக இருக்கலாம். நாம் புழங்கும் சூழ்நிலை, பழகும் மனிதர்கள் இவற்றுக்கு ஏற்ப, நாமே நம் அனுபவத்திற்கு ஏற்ப முடிவெடுப்பதுதான் சரி.

    இதனால் தவறுகள் ஏற்படலாம். அதனால் என்ன! அதே தவற்றை மறுமுறை செய்யாதிருந்தால், தானே அது நல்ல அனுபவமாகி விடுகிறது!

    உங்கள் சுதந்திரமான போக்கையும், அதனால் விளையும் தன்னம்பிக்கையையும் பொறுக்காது, நீங்கள் எப்போதோ செய்த தவற்றையே திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டலாம் சிலர். `பொறாமை பிடித்தவர்களின் பிதற்றல்’ என்று அவர்கள் பேச்சைப் புறக்கணியுங்கள். பிறருடைய பாராட்டையும், மதிப்பையும் எப்போதுமே பெறவேண்டும் என்று நாம் மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டு, போட்டி போடுவது ஆரோக்கியத்திற்குக் கேடு.

    உங்களுடனேயே நீங்கள் போட்டி போடுங்கள். ஒரு முறை செய்ததை அடுத்த முறை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். அப்போதுதான் உங்களை யாராலும் அசைக்க முடியாது.

    தொடருவோம்

    Share
  • ஒரு எழுத்தாளர் மனைவி ஆகிறாள்

    நிர்மலா ராகவன்

    அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்திருந்தார் நடராஜன்.

    “என் நாடகத்தைப்பத்தி எல்லாரும் என்ன சொன்னாங்க?” எரிச்சலூட்டும் கேள்வி, மனைவியிடமிருந்து.

    “அதான் ரேடியோக்காரங்க ஏத்துக்கிட்டு, பணமும் குடுக்கறாங்கல்ல? அப்புறம் என்ன? சும்மா தொணதொணத்துக்கிட்டு..!”
    கணவர் களைப்புடன் வீடு திரும்பியவுடன் தான் சுயநலத்துடன் பேச்சுக்கொடுத்தது தவறுதான் என்று, உடம்பைக் குறுக்கிக்கொண்டு உள்ளே போனாள் வசந்தா.

    சிறிது நேரத்தில் அவள் கொண்டுவைத்த தேத்தண்ணீரை வெறித்துப் பார்த்தார் நடராஜன். அவர் உள்ளம் அதைவிட சூடாக இருந்தது.

    மனைவி நாடகம் எழுத, அவளுடைய கற்பனையில் உருவான ஐந்து பாத்திரங்களில் தானும் ஒரு சிறிய அங்கமாக நடித்ததுகுறித்து அவமானம் ஏற்பட்டது.

    அவளுடைய பெயர்மட்டும் சற்று உரக்க அறிவிக்கப்பட்டதோ?

    `என்னங்க, நடராஜன்! பேருக்கு ஏத்தமாதிரி, சக்திக்கு அடங்கின சிவனா ஆயிட்டீங்களே! இனிமே நீங்கதான் பேரை மாத்தி வெச்சுக்கணும் — மிஸ்டர் வசந்தா அப்படின்னு!’ வேடிக்கையாகச் சொல்வதுபோல், சகநடிகர்கள் உசுப்பேற்றினார்கள்.

    அந்தக் கைலாய பரமசிவன் தன் உடலில் பாதியை பார்வதியுடன் பகிர்ந்துகொண்டு, அவளுடன் ஒன்றாக இயங்கினாராம். யாரோ புராண காலத்துக்குப் போய் பார்த்தமாதிரிதான்!

    அட, அந்தக் காலத்திற்கு அது சரியாக இருந்திருக்கலாமோ, என்னவோ! இப்போதோ, ஆணுக்கு நிகராக உரிமை கொண்டாடும் வசந்தா போன்ற பெண்களால்தான் குடும்ப நிம்மதியே போய்விடுகிறது. நண்பர்களுக்குத்தான் எத்தனை கேலிப்பொருளாக ஆகிவிட்டோம்!

    கோலாலம்பூரில், அங்காசாபுரி (ANGKASAPURI) என்ற பெரிய வளாகத்துள் எதிரெதிரே இருந்தன மலேசிய தொலைகாட்சி, வானொலி நிலையங்கள். நாடகத்தில் நடித்து முடித்ததும், எப்போதும்போல் காண்டீனில் அமர்ந்து, அரட்டையே முக்கிய குறிக்கோளாய், ஆனால் மீ பிரட்டலை (நூடுல்ஸ்) சாப்பிடுவதுபோல் பாவனை செய்ய இன்று அவர் மனம் ஒப்பவில்லை. பிறரது தலையை உருட்டும்போது இருக்கும் சுவாரசியம், `நான் அவர்களைவிட மேலானவன்!’ என்று அப்போது எழும் கர்வம், தானே பிறரது வாய்க்கு அவலாக மாறும்போது கிடைப்பதில்லையே!

    அவர்களிடமிருந்து கத்தரித்துக்கொண்டு வந்தாலும், தன்னையும், வசந்தாவையும்பற்றித்தான் பேசுவார்கள் என்று நன்றாகவே தெரிந்திருந்தது நடராஜனுக்கு.

    என்ன பேசுவார்கள்?
    `இவரும்தான் முப்பது வருஷமா `நடிகன்’னு பேரை வெச்சுக்கிட்டு காலந்தள்ளறாரு! பளபளப்பான சட்டையும், அதிலே எக்கச்சக்கமா செண்டும் போட்டுக்கிட்டு, நாலுபேர் கூடற எல்லா எடத்துக்கும் தப்பாம வந்து, ஏதாவது சண்டை இழுத்து, அதனாலேயே எல்லாருக்கும் தன்னைத் தெரியறமாதிரி செய்துக்கிட்டிருந்தா ஆச்சா?’ என்று பழித்துவிட்டு, அதே மூச்சில், `அதுவே, அந்தம்மா இருக்காங்களே! குடத்துக்குள்ளே இருக்கிற விளக்கு!’ என்று வசந்தாவை எங்கோ கொண்டு வைப்பார்கள்.

    அவர்கள் பேசுவதை இவர் ஒன்றும் கற்பனை செய்து பார்க்கவேண்டி இருக்கவில்லை. சாடைமாடையாக, இவர் எதிரிலேயே பல முறை பேசி வந்ததுதானே!

    வசந்தா முதன்முதலாக எழுத ஆரம்பித்தபோது, `இவள் என்ன பெரிசா கிழிச்சுடப்போறா!’ என்று தான் அசிரத்தையாக இருந்தது தப்பு என்று இப்போது, காலங்கடந்து யோசனை வந்தது.

    அப்போதெல்லாம் அவரிடமே பிறர் அவளைப் பாராட்டிப் பேசியபோது, பெருமையாகத்தான் இருந்தது. நண்பர்களுடையதைவிட விலை அதிகமான விளையாட்டுச் சாமான் தன்னிடம் இருப்பதற்காகப் பெருமை கொள்ளும் சிறுவனது மனநிலைக்கு ஆளானார். மனைவி தன் உடைமை. ஆகவே, தான் அவளைவிட மேலானவன் என்பதுபோல் நடந்துகொண்டார். அதுவும் பொறுக்கவில்லை பிறருக்கு. பலவாறாகத் தூபம் போட்டார்கள்.

    `உன் மனைவி பேரும் புகழுமாக இருந்தால், அதில் அவளுக்குத்தான் பெருமை. உனக்கென்ன வந்தது?’
    `நீ இப்படியே அவளை வளரவிட்டால், நாளைக்கு உன்னையே மதிக்கமாட்டாள், பார்!’
    நடராஜனுக்குப் பயம் வந்தது.

    இப்போது இவள் எழுதி என்ன ஆகவேண்டும்? அலுவலக உத்தியோகத்துடன், அவ்வப்போது மேடை, வானொலியில் நடிப்பதாலும் தனக்குக் கிடைப்பதே போதாது?

    அட, பணத்தைப் பெரிதாக எண்ணியா தான் நடிக்கப் போனோம்?

    எல்லாரையும்போல, `கலைக்குத் தொண்டு செய்கிறேன்!’ என்று வெளியில் மிதப்பாகச் சொல்லிக்கொண்டாலும், செய்யும் தொண்டு தனக்கேதான்; தன் பெயர் பிரபலமாக வேண்டும் என்ற சுயநலத்தால்தான் என்று அவருக்கும் தெரிந்துதான் இருந்தது. இதில் என்ன கேவலமாம்? எல்லாம் வல்ல இறைவனே புகழ்ச்சிக்கு அடிமை! கடவுளைப் புகழ்ந்து வேண்டுபவருக்குத்தான் நல்லது நடக்கிறது. அவனுடைய படைப்பான தான் மட்டும் எப்படி வித்தியாசமாக இருக்க முடியும் என்று தன்னைத்தானே சமாதானமும் செய்துகொண்டார்.

    அபூர்வமாக, எவளாவது, `நான் உங்கள் விசிறி!’ என்று இளிச்சவாய்த்தனமாக சொல்லும்போது, என்னவோ கடவுள் ஸ்தானத்துக்கே உயர்ந்துவிட்டமாதிரி பிரமை ஏற்படும் நடராஜனுக்கு. மெனக்கெட்டு வருவித்துக்கொண்ட பெரியமனிதத்தனத்துடன், தலையைச் சற்றே அண்ணாந்து, எங்கோ பார்த்தபடி ஓரிரு வார்த்தைகள் பேசுவார்.

    வீட்டுக்கு வந்ததும், வாய் ஓயாமல், தன்னைப்பற்றி தன் ரசிகைகள் என்ன நினைக்கிறார்கள், என்னவெல்லாம் சொன்னார்கள் என்று ஒன்றைப் பத்தாக்கி மனைவியிடம் கூறுவார். அவர் எது சொன்னாலும், புன்னகையுடன் கேட்டுக்கொள்வாள் வசந்தா.

    இப்போதும், நண்பர்கள் தன்னை ஓயாது மட்டந்தட்டுவதைச் சொன்னார், மிகுந்த ஆற்றாமையுடன் — `விழுந்துட்டேம்மா!’ என்று தாயிடம் வந்து அழும் குழந்தையைப்போல.

    “விட்டுத் தள்ளுங்க!” என்றாள் வசந்தா.

    “நானும் அதான் நினைச்சேன். அவங்க பெண்டாட்டி எல்லாம் ஒரே மக்கு. அதான் அவங்களுக்கு வயத்தெரிச்சல்!” என்றவர், “எனக்கு அதிர்ஷ்டம்! ஒன்னைமாதிரி புத்திசாலியான பெண்டாட்டி வாய்ச்சிருக்கு!”

    வசந்தாவுக்கும் பூரிப்பாக இருந்தது. இன்னும் நிறைய எழுதி, கணவனுடைய பெருமையை உலகுக்குக் காட்ட வேண்டும் என்று நிச்சயித்துக்கொண்டாள்.

    வேலை முடிந்து, அப்போதுதான் வீடு வந்திருந்தார் நடராஜன்.

    “பிளாஸ்கில் டீ வெச்சிருக்கேன்,” என்ற குரல் அசரீரியாகக் கேட்டது. தன்னைக் கவனிக்காது, தன்பாட்டில் எழுதிக்கொண்டிருந்த மனைவியின் போக்கு உறுத்தியது. கட்டின கணவனைவிட இவளுக்கு எழுதுவதால் கிடைக்கும் பெயரும், புகழும்தானே பெரிதாகிவிட்டன என்ற ஆத்திரத்துடன், “அந்த டீயை நீ வந்து எடுத்துக் குடுத்தா கொறைஞ்சு போயிடுவியோ?” என்று கத்தினார்.

    எதுவும் பேசாது, பேனாவை மூடி வைத்துவிட்டு எழுந்தாள் வசந்தா. அன்றையிலிருந்து அவர் பார்க்க அவள் எழுதவில்லை. ஆனால், அவளுடைய எழுத்துப் படிவங்கள் என்னமோ வெளியாகிக்கொண்டுதான் இருந்தன.

    நடராஜன் தன் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

    “வீணா ஒடம்பைக் கெடுத்துக்காதேம்மா. இந்த தள்ளிப்போன நாட்டில, எழுதறதுக்கு ஒரு பயல் காசு குடுக்கறதில்ல. அப்புறம் எதுக்காக எழுதறது? கண்ணுக்குக் கீழே எப்படிக் குழி விழுந்துபோச்சு, பாரு!” என்றார், அன்பு சொட்டச் சொட்ட.
    அவருடைய கரிசனம் வசந்தாவுக்கு வேண்டியிருந்தது. ஆத்திரப்பட்டவர் இப்படி மாறி விட்டாரே!

    “பொழுது போகணுமே!” என்றாள் அப்பாவித்தனமாக.

    “சினிமா, கச்சேரின்னு நாலு எடத்துக்குப் போயிட்டு வா. இல்லே, ஓய்வா, வீட்டிலேயே வீடியோ பாரு!”
    சில நாட்கள் கணவர் சொன்னதுபோல் செய்துபார்த்தாள் வசந்தா. மனதில் ஏதோ வெறுமை. எதையோ இழந்ததுபோல் இருந்தது. என்னவாக இருக்கும் என்று யோசித்து, மீண்டும் எழுத முயன்றாள்.

    இப்போது ஏதேதோ பயம் எழுந்தது. கணவர் வீடு திரும்புவதற்குள் எழுதி முடிக்கவேண்டும். அவருக்குச் சுடச்சுட தேநீர் போட்டால்தான் பிடிக்கும். இல்லையேல், மௌனமாக அமர்ந்து, பெருமூச்சாலேயே தான் கவனிப்பாரின்றி வாடுவதை உணர்த்துவார். அவளுக்கு அவரை அப்படிப் பார்க்க பரிதாபமாக இருக்கும். தான் தன் கடமையிலிருந்து தவறிவிட்டோம் என்ற உறுத்தல் உண்டாகும்.

    இப்போது ஒவ்வொரு வரி எழுதியபிறகும், கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள். உருப்படியாக எதுவும் எழுத முடியவில்லை.

    இரவில் அவர் தூங்கியபின் எழுதினால், இந்தக் குழப்பங்கள் எழாது என்று தீர்மானித்தாள்.

    தூக்கக் கலக்கத்தில் கையை விசிறிப் போட்டபோதுதான் அவள் தன் பக்கத்தில் இல்லாததை உணர்ந்தார் நடராஜன். தூக்கம் கலையாமலேயே, அசைந்து அசைந்து அவளைத் தேடி வந்தார்.

    “இப்படித் தனியா படுக்கிறதுக்கா வசந்தி, ஒன்னைக் கட்டிக்கிட்டேன்?” என்று அவர் கேட்டது அவள் காதில் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

    வசந்தாவுக்கு இப்போது குழப்பமில்லை. அவளுக்குப் புரிந்தது.

    `ஆண்’ என்பவன் உருவத்தில் மட்டும் பெரிதாக வளர்ந்திருக்கும் குழந்தை! சிறு வயதில் அம்மாவின் ஏகபோக கவனிப்புக்காக தம்பி, தங்கைகளுடன் போட்டி போட்டதைப்போல, இப்போது மனைவியின் பரிபூரண கவனிப்பும், அக்கறையும் தன் ஒருத்தனுக்காகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் புத்தி அவனுக்கு!

    அத்துடன், ஒரு பெண் தனக்கு அடங்கி இருப்பதைத்தான் சராசரி ஆண் விரும்புகிறான். இது கற்காலத்திலிருந்து வரும் நியதி. கொடிய விலங்குகளைத் தனியே எதிர்க்கும் சக்தியின்றி, தன்னைப் பாதுகாக்கும் பொறுப்பை ஆணிடம் ஒப்படைத்தாளே, பெண்! அப்போது அவனுக்கு ஏற்பட்ட பெருமிதம் இன்றும் அவனுக்குத் தேவைப்படுகிறது.

    தன்னை நாடாது, தன்னை மீறி அவள் ஏதாவது செய்ய ஆரம்பித்தால், அடிப்படை ஆண்மையிலேயே சந்தேகம் தோன்ற, அந்த எண்ணத்தின் பயங்கரத்தில் அவள் வீழ்ச்சி காண வழி வகுக்கிறான்.

    இப்போதெல்லாம் யாராவது வசந்தாவை, “ஒங்க கதைகளைப் பாக்க முடியறதில்லியே?” என்று உள்ளூர மகிழ்ச்சியுடன், ஆனால் வார்த்தைகளில் கரிசனம் சொட்டக் கேட்கும்போது, `ஆமா! ஒரு காசுக்குப் பிரயோசனம் இல்லை இதால! (100 ஸென் (காசு) = 1 மலேசிய ரிங்கிட்). நேரம்தான் தண்டம்,’ என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறாள்.

    வெளியே, “எங்கே! வீட்டு வேலையே சரியா இருக்கு. அதோட, எங்க வீட்டுக்காரர் கைப்பிள்ளை மாதிரி. அவருக்குத் தேவையான ஒவ்வொரு காரியத்தையும் நான்தான் பாத்துப் பாத்து செய்யணும்!” என்று பெருமை பேசுகிறாள்.

    தன்னைப்போன்று, `குடும்பமே பெண்ணாகப் பிறந்ததின் லட்சியம்’ என்ற கொள்கையுடைய மற்ற பெண்களுடன் சேர்ந்து வெளியே போகிறாள், அரட்டை அடிக்கிறாள். அவர்களைப்போல் இல்லாது, கணவரை மீறிக்கொண்டு புகழ்ப் பாதையில் பீடுநடை போடும் யாராவது அபூர்வமான பெண்ணைப்பற்றி மட்டந்தட்டிப் பேசுகையில், ‘நல்ல வேளை, எனக்குப் புத்தி வந்ததே!’ என்று திருப்திப்பட்டுக் கொள்கிறாள்.

    Share
  • உன்னையறிந்தால் ….. (24)

    நிர்மலா ராகவன்

    தனித்து வாழும் தாயும் மகனும்

    உனையறிந்தால்
    கேள்வி: ஒரு பெண்ணும், கணவரும் நான்கு வருடங்களுக்குமுன் சட்டப்படி பிரிந்துவிட்டார்கள். பணப்பிரச்னை கிடையாது. ஆனாலும், தாயுடன் இருக்கும் மகன் (14) யாருக்கும் அடங்காது வளர்கிறானே, அவனை எப்படித் திருத்துவது?

    விளக்கம்: வீட்டில் முன்போல் சண்டை பூசல் இல்லாது அமைதி நிலவினாலும், தாய் தந்தையர் ஒருவரை ஒருவர் விட்டு நிரந்தரமாகப் பிரிந்தது தாங்கள் ஏதோ தவறு செய்துவிட்டதால்தான் என்று பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக் கலங்குவார்கள்.

    என் மாணவன் ரித்வான் அந்தப் பையனைப்போல்தான். தானே வந்து, வெவ்வேறு சமயங்களில் அவன் என்னிடம் கூறியது:

    1 நான் பிறந்திருக்கவே கூடாது.
    2 நான் ஏன் அப்பாவுடன் சேர்ந்து வாழக்கூடாது?
    3 `இந்தச் சட்டையைத்தான் நீ இன்று போட்டுக்கொள்ள வேண்டும்’ என்று வற்புறுத்தும் அம்மா மாறவே மாட்டார்கள்!

    அவன் கூறியதில் கசப்பு, சுயவெறுப்பு, இயலாமை, ஏமாற்றம், கேலி எல்லாம் இருக்கின்றன.

    ஆண்களும், பெண்களும் குழந்தைகளை வளர்க்கும் விதமே வேறு.

    உதாரணம்: ஒரு எட்டு வயதுப் பையனிடம் தாய்,`குளிக்கப் போ!’ என்றால், `ஏன்?’ என்று கேட்பான். அதற்கு அவள் நீளமாக ஏதாவது சொல்வாள். அனேகமாக, அது அவனை மட்டம் தட்டுவதுபோல் இருக்கும். அப்பாவோ, தந்தையோ, `கேள்வி கேட்காதே, போ!’ என்று அதிகாரமாகச் சொன்னால், குளியலறைக்கு ஓடுவான்!

    பதின்ம வயதுப் பையன்களுக்குத் தம் உடலில் ஏற்படும் மாறுதல்களையும், அதனால் எழும் உணர்வுகளையும் இன்னொரு ஆணிடம்தானே பகிர்ந்துகொள்ள முடியும்! தந்தையுடன் வாரம் ஓரிரு நாட்கள் கழிக்கும் பையன் அவர் கட்டுப்படுத்தாது, தன்னைப் புரிந்து, அனுசரணையாக நடத்துவதை விரும்புவதில் என்ன அதிசயம்! (எப்போதும் கூடவே இருக்கும் தந்தைமார்கள் இப்படி இருக்கிறார்களா என்பது யோசிக்கத்தக்க விஷயம்).

    ஒரு குழந்தை வழக்கமாக, தந்தை மிரட்டினால் தாயிடமும், தாய் திட்டினாலோ, தொணதொணத்தாலோ தந்தையிடமும் ஆதரவு நாடுவான். தாயுடன் தனித்து வாழும் பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்பு இல்லையே! போதாக்குறைக்கு, கணவனை எக்காரணத்திலோ பிரிந்து வாழும் தாய் அவருக்குப் பிறந்த மகனும் அவரைப்போல் ஆகிவிடக்கூடாது என்று பெரும் முயற்சி எடுத்துக்கொள்வாள்.

    `இவனாவது கடைசிக்காலத்தில் தன்னை மீண்டும் தனியாக விட்டுப் போய்விடக்கூடாதே!’ என்று அவளே அறியாது ஒரு பயம் உண்டாகிறது. அதனால் அவன் தன்னை எப்போதும் நாடப் பெருமுயற்சி எடுத்துக்கொள்கிறாள். அவனுடைய அத்தியாவசிய தேவைகளைத் தானே பார்த்துக்கொள்ளும் வயது அவனுக்கு வந்திருந்தாலும், குழந்தையாகவே அவனைப் பாவித்து, ஒவ்வொன்றையும் கவனமாகச் செய்கிறாள்.

    `நான் செய்வது எல்லாமே அவனுடைய நன்மைக்குத்தான்!’ என்று எல்லாரிடமும் சொல்லிக்கொள்கிறாள். தான் இவ்வளவு அருமையாக நடத்தியும், மகன் ஏன் நன்றியில்லாமல் எதிர்ப்புக் காட்டுகிறான் என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

    சிறு விஷயங்களில்கூட ஒருவரின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினால், அதனால் விளையும் ஆத்திரத்தில் எல்லா விதிகளையும் மீறுவது மனித சுபாவம்.

    பதின்ம வயதினரிடம் அவர்கள் எதை எப்படிச் செய்யவேண்டும் என்று பெற்றவள் ஓயாமல் கூறினால், `எனக்கு எதற்குத் தனியாக மூளை?’ என்ற ரீதியில் எண்ணத் துவங்குவார்கள்.

    ஒருவர் தமக்கு இழைத்த பாதிப்பை எக்காலத்திலும் பெண்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். இது அவர்களது இயல்பான குணம். (அதனால்தான் கணினி பெண்ணினம் என்று சொல்லப்படுகிறது!)

    கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார், இல்லை, குடித்துவிட்டு அடிக்கிறார், சம்பாத்தியம் எல்லாவற்றையும் சூதாடியே அழிக்கிறார் — இப்படி ஏதோ ஒரு காரணத்தினால் தம்பதிகள் பிரிய முடிவு செய்யும்போது, தம் கோபத்திலேயே உழன்று கொண்டிருக்காது, தம் செய்கையால் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளும்தான் என்று உணரத் தவறி விடுகிறார்கள்.

    `உன் அப்பாவால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறேன், தெரியுமா?’ என்று சொல்லிச் சொல்லி மகனை வளர்க்கிறாள் தாய்.

    மகனோ, தந்தைமேல் கொண்டுள்ள பாசம் ஒரு புறம், தன்னை வளர்க்கும் தாயின் மனதையும் நோக அடிக்கக்கூடாது என்ற தீர்மானம் மறுபுறம் என்று அலைக்கழிக்கப்பட்டு, யார்பக்கம் சாய்ந்தாலும் மற்றவருக்குத் துரோகம் செய்வதுபோல் ஆகிவிடுமே என்று குழம்புகிறான்.

    சகநண்பர்களிடம் தன் வேதனையைச் சொன்னால் புரிந்துகொள்வார்களோ, இல்லை, பரிதாபப்படுவார்களோ என்று இப்படிப்பட்ட சிலர் தனித்திருக்க முற்படுவார்கள்.

    பொதுவாகவே, தாமடைந்த துயரத்தை, தம் மனக்குழப்பங்களைப் பகிர்ந்துகொள்ள முயலுபவர்களின் மனநிலையில் நம்மைப் பொருத்திக்கொண்டு, அதிகம் குறுக்கே பேசாது, வேண்டாத அறிவுரையும் கூறாது கேட்டுக்கொள்வது அவர்கள் ஓரளவு நிம்மதி பெற, தம்மைத்தாமே புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

    `என்னால் அப்பாவுடன் ஒத்துப்போக முடியவில்லை. நாங்கள் பிரியப்போகிறோம். எனக்கு அவர் கணவராக இல்லாது போனாலும், உனக்கு என்றும் அவர் அப்பாதான்!’ என்பதுபோல் முதலிலேயே குழந்தைகளிடம் விளக்கிவிட்டால், அவர்களுடைய குழப்பம் ஓரளவு தீரும்.

    வயது முதிர்ந்தவர்கள் தவறே செய்ய மாட்டார்கள் என்றுதான் எல்லாக் குழந்தைகளும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களும் தவறு செய்வார்கள், அதை அவர்கள் வழியில் திருத்திக்கொள்வார்கள் என்று புரிந்துகொண்டால், நடந்ததில் தனக்குப் பங்கில்லை என்ற தெளிவு பிறக்கும். எல்லாரையும் எதிர்க்கும் குணமும் மறையும்.

    தொடருவோம்

    Share
  • உன்னையறிந்தால் …….. (23)

    நிர்மலா ராகவன்.

    நல்லவனாக இரு

    உனையறிந்தால்

     

    நல்லவனாக இரு …

    ஒரு மாணவன் என்னிடம் கேட்ட கேள்வி: `நல்லவனாக இரு! (BE GOOD) என்று எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால், நல்லவனாக இருப்பதென்றால் எப்படியென்று தெரியவில்லையே!’

    விளக்கம்: எது நல்லது என்பது வீட்டுக்கு வீடு மாறுபடும்.

    உதாரணம் 1: பிள்ளைச் செல்வத்தில் சிறந்து, ஆனால் பொருட்செல்வமின்றி வாடும் குடும்பத்தில் பெற்றோர் இருவரும் கடுமையாக உழைக்க வேண்டிய நிலை. அதனால், மூத்த குழந்தை வீட்டு வேலைகளைச் செய்வதுடன், தன் தம்பி தங்கைகளையும் பார்த்துக்கொண்டால், `நல்ல, பொறுப்பான பிள்ளை’.

    இவன் பெரியவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு, அத்துமீறாமல் நடக்கிறான். சுயநலனைப்பற்றி நினைத்தும் பாராது, பிறருக்காக உழைக்கிறான். பள்ளியிலும் பிறருக்கு உதவுவானே தவிர, தான் முன்னுக்கு வரவேண்டும் என்ற வெறியோ, சுயநலமோ கிடையாது. இத்தகைய மாணவர்களால் நிறைய மதிப்பெண்கள் பெறமுடியாது. சிலர் அதைப் பெரிது பண்ணாமல் ஏற்பார்கள். வேறு சிலருக்குத் தம் பெற்றோர்மீது ஆத்திரம் எழும் — தம்மை இப்படி வளர்த்ததற்காக.

    இப்படிப்பட்டவர்களில் ஒருவன் என்னைக் கேட்டான்: `நாங்கள் நிறைய மதிப்பெண்கள் வாங்குவதில்லை என்று ஆசிரியர்கள் எங்களைக் கேலி செய்கிறார்கள், திட்டுகிறார்கள். அதெப்படி மற்றவர்கள் நிறைய மார்க் வாங்குகிறார்கள், டீச்சர்?’

    ஒரு முறை, நான் உடல்நிலை சரியில்லாதபோது அந்த வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தேன். ஏதோ எழுத்து வேலை கொடுத்தபோது, பலரும் அதைச் செய்யாது, உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். `டீச்சருக்குத்தான் குரல் கம்மி இருக்கிறதே! எப்படித் திட்ட முடியும்!’ என்ற மிதப்புடன். ஒரு மாணவன், அவர்களைவிட உரக்க, `ஹேய்! டீச்சருக்கே, பாவம், உடம்பு சரியாக இல்லை. நீங்கள் எல்லாம் சத்தம் போட்டு, அவர்களை இன்னும் கஷ்டப்படுத்துகிறீர்களே!’ என்று இரைந்தான். அதன்பின், வகுப்பில் அப்படி ஒரு நிசப்தம்! உரக்கப் பேசியவர்களின் தலை குனிந்தது.
    (அதுவே `சிறந்த’ மாணவர்களின் வகுப்பில் ஆசிரியைகளுக்கு மைக்ரெய்ன் தலைவலியோ, காய்ச்சலோ, `பாடம் நடத்துங்கள்!’ என்று பிடிவாதம் பிடிப்பார்கள். அவர்களுக்கு மார்க்கு குறைந்துவிட்டால் என்ன செய்வது!)

    இப்போது, நான்: வாழ்க்கையில் கல்வியும், பெரிய உத்தியோகமும் அனைத்துமில்லை. மனிதாபிமானம் என்று ஒன்று இருக்கிறது. அது உங்களிடம் நிறைந்திருக்கிறது. வருங்காலத்தில் உங்கள் குடும்பம் உங்களால் மகிழ்ச்சியாக விளங்கும்!

    உதாரணம் 2: பணக்காரக் குடும்பத்தில் பிறந்த ஒரே பிள்ளையாக இருந்தால், தாய் கரிசனமாக, வயிறு கொள்ளாத அளவுக்கு உணவு போட்டு, எல்லாவற்றையும் அவன் சாப்பிட்டு முடித்தால், மகிழ்ந்து பாராட்டுகிறாள்: `நல்ல பிள்ளை!’

    ஆனால், பார்ப்பவர்கள் `குண்டு!’ என்று கேலி செய்வதால் ஒடுங்கிப் போகிறான். பிறருடன் கலந்து பழகத் தெரியாது போகிறது. இப்படியெல்லாம் வித்தியாசமாக வளர்க்கப்பட்டுவிட்டு, பள்ளிக்கூடத்துக்குப் போனால், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு வேறு விதமாக இருக்கும். புத்தகங்களைக் கரைத்துக் குடித்த மாணவன் பாராட்டுக்கு உரியவனாகிறான். ஏனெனில், அவன் பரீட்சைகளில் நிறைய மதிப்பெண்கள் பெற்றால், நாளிதழ்களில் போடுவார்கள். அதனால் பள்ளியின் மதிப்பும், ஆசிரியர்களின் மதிப்பும் உயருமே!

    கதை: நான் குறுகிய காலம் வேலை பார்த்த பள்ளியில் ஒரு மாணவி (16) வகுப்பறையில் மின்விசிறியைச் சுழலவிட்டால், உடனே எழுந்துபோய் நிறுத்தி விடுவாள். ஒரு முறை எங்கள் வகுப்பிற்கு வந்திருந்த மேலதிகாரிக்காக நான் மின்விசிறியைச் சுழலவிட்டபோதும் அப்படியே செய்தாள்.

    நான் கேட்டபோது, `எனக்குப் பிடிக்காது!’ என்றாள் திமிராக. `பிடிக்காவிட்டால், இடத்தை மாற்றிக்கொள்!’ என்றேன். அவள் முகத்தில் ஒரே ஆத்திரம் — தன் விருப்பு வெறுப்பை மீறி ஒருவர் நடக்கலாமா என்பதுபோல். பிற ஆசிரியைகளிடம் விசாரித்தபோது, `அவள் பள்ளியிலேயே மிகச் சிறந்த மாணவி!’ என்றார்கள் சர்வ சாதாரணமாக. அதனால், எல்லாரும் அவளுக்கு விட்டுக்கொடுத்தே பழகிவிட்டார்கள்.

    நான் தலைமை ஆசிரியையிடம், `உங்கள் பள்ளி சிறந்தது என்று பெயர் வாங்கியிருக்கலாம். ஆனால், குணமில்லாமல், கல்வி இருந்து பயனில்லை. யாராக இருந்தாலும், தவறு செய்தால் திருத்தியாக வேண்டும்,’ என்று சொன்னேன். தலைமை ஆசிரியை என்னை எதிர்க்கவில்லை. தானும் பிற ஆசிரியைகளும் செய்த தவற்றை ஒத்துக்கொண்டாள் போலும்! முகத்தில் ஆழ்ந்த வருத்தம் தெரிந்தது.

    சில குழந்தைகள் சிறு வயதிலிருந்தே புகழப்பட்டு வளர்ந்திருப்பார்கள். தம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் கொண்டு, எந்தக் காரியத்தையும் பிறரைவிட மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைத்துச் செயல்படுவார்கள். இவர்களால் தோல்வியை ஏற்கவே முடியாது. உடைந்து போய்விடுவார்கள்.
    மாணவ மாணவிகளின் திறமைக்கு ஏற்ப, வெவ்வேறு வகுப்புகளில் பிரிக்கப்பட்டால், அத்தகைய வகுப்பில் நுழையும்போதே ஒரு வித பதற்றத்தை உணரமுடியும்.

    நான் காரணத்தைக் கேட்டபோது, `எல்லா ஆசிரியர்களும், `உங்களைத்தான் இந்தப் பள்ளி பெரிதும் நம்பி இருக்கிறது. நீங்கள் எல்லா பாடங்களிலும் 80%-க்குமேல் வாங்கவேண்டும்! என்று சொல்கிறார்கள். பயமாயிருக்கிறது!’ என்றார்கள். இந்தமாதிரி எதிர்பார்ப்பே அவர்களை சராசரிக்குச் சற்றுக் குறைவாகவே தேர்ச்சி பெற வழிவகுக்கும். வேறு சிலர் அறிவாளிகளாக இருந்தாலும், எல்லாவற்றிலும் பிறரைத் தோற்கடிப்பதை விரும்ப மாட்டார்கள். போட்டி மனப்பான்மை வெறியாக மாறிவிடும்போது நட்பு கிடைப்பது துர்லபம் என்று அறிந்தவர்கள் இவர்கள்.

    `எனக்கு வகுப்பில் முதல் மாணவியாக ஆகப் பிடிக்காது. தலையை நிமிர்த்திக்கொண்டு, எல்லாரையும் அலட்சியப் பார்வை பார்த்துக்கொண்டு! ஐயே!’ புத்திகூர்மையான மாணவ மாணவிகள் இப்படிக் கூறுவதைக் கேட்டுச் சிரித்திருக்கிறேன்.

    பிறருக்கு உதவினால் நல்லவர் என்று பெயர் வாங்கலாம். ஆனால், நாம் உடலில் வலுவின்றி இருக்கும்போது, `பிறர் கேட்கிறாரே!’ என்று உதவ முற்படுவது அறிவீனம். நம்மை நன்றாகக் கவனித்துக்கொண்டால்தானே பிறரைக் கவனித்துக்கொள்ள சக்தி இருக்கும்! அது சுயநலம் என்று அர்த்தமில்லை.

    `நீங்கள் யாரைப்போல் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?’ என்று என்னை ஒரு பேட்டியில் கேட்டிருக்கிறார்கள். `என் போட்டி என்னுடன்தான்!’ என்று பதிலளித்தேன். போட்டி வெறி, அதனால் உண்டாகும் பதற்றம், பகைமை இவையெல்லாம் இன்றி நாம் வாழ்வில் முன்னேற முடியாதா, என்ன! இம்மாதிரியான எதிர்மறைக் குணங்களுக்கு ஆளாகும்போதுதான் நோய்வாய்ப்படுகிறோம்.

    சமையலோ, எழுதுவதோ, சித்திரம் வரைதலோ, எதுவாக இருந்தாலும், எப்போதையும்விட நாம் இன்று செய்வது இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று உறுதி செய்து கொள்ளுங்கள். இது நம்முடனேயே போட்டி போடுவது. நாம் விரும்பியபடியே நடந்தால், நிறைவாக இருக்கும்.

    Share
  • தோழமையுடன் ஒரு பயணம் – 4

    ஸ்ரீலங்கா (பகுதி 4)

    நிர்மலா ராகவன்

    அடுத்து கண்டியில் இரு தினங்கள்.

    போகும் வழியில் ஸீக்ரி என்ற சிவந்த மலையைக் கண்டோம். 180 மீட்டர் உயரம். நான்கு புறமும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருந்தது. மேலே அரண்மனை இருந்ததாம்.

    anir
    கண்டி மலைப்பாங்கான ஊர். சாமான்கள் கொழும்புவைவிட மிக மலிவாகக் கிடைக்கின்றன. உள்ளூர் பருத்தித் துணி அழகாக இருக்கிறது. யாரும் `வாங்கிப் போங்கள்,’ என்று கட்டாயப்படுத்தவில்லை. விலை கூறிவிட்டு, மரியாதையாக ஒதுங்கி நிற்கிறார்கள்.

    பெண்கள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட நைலக்ஸ் அல்லது பருத்திப் புடவைகளை அணிகிறார்கள். புடவையின் முன்தலைப்பு ஆறுபோல் மார்பகத்தின் நடுவில் செல்கிறது. தோளுக்குப் பின்னால் தொங்கும் தலைப்பு தெருவில் இடிக்கும் நீளம்! மூன்றங்குல அகலமாக விட்டிருக்கிறார்கள். பார்க்க மிக அழகாக இருந்தது. சிலரது ஜாக்கெட் பின்னால் ஓரிரு அங்குலம்தான். முன்னாலும் கழுத்துப்பகுதி தாராளமாக இறங்கியிருந்தது. அது அவர்கள் பாணியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததாலோ, என்னவோ, ஒரு ஆணும் அவர்களை விறைத்துப் பார்க்கவில்லை என்பதை மகிழ்வுடன் கண்டோம்.

    ஒரு துணிக்கடையில், நான் பேச ஆரம்பித்ததும், `தமிழா?’ என்று பலர் ஓடி வந்தார்கள். பார்க்க வேண்டிய இடங்களைப்பற்றி நிறைய தகவல் கொடுத்தார்கள். அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களாம். தமிழ்ப்பள்ளியில் படித்தவர்கள். தினமும் அருகிலிருந்த கோயிலுக்குப்போய் நெற்றியில் குங்குமம் தரித்துக்கொண்டுதான் வேலைக்கு வருவதாக ஒருவர் கூறினார்.

    akoi
    அவர்கள் வழி சொல்ல, அக்கோயிலுக்குப் போனேன். அதன் பின்னால், அதே வளாகத்தில் ஒரு புத்தர் கோயிலும் இருந்தது.
    நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகேயே புத்தருடைய பல் இருக்கும் பிரசித்தி பெற்ற கோயில் (Temple of the tooth relic) இருந்தது. அது தெரியாது, ஒரு ஆட்டோக்காரரிடம் எங்களை அங்கே கொண்டுவிடும்படி கேட்க, `வாக்!’ என்றார்! கோயிலுக்கு முன்னாலிருந்த பூக்கடைக்காரர் புன்சிரிப்புடன், அவருடைய அன்பளிப்பாக ஒரு ஊதா நிற அல்லிப் பூவை என் கையில் கொடுத்தார்.

    அந்தக் கோயிலுக்கு சீனர், ஜப்பானியர் போன்ற அயல் நாட்டு பௌத்த மதத்தினர் பெருவாரியாக வருகிறார்கள். என் மகள் கையில்லாத சட்டை அணிந்திருந்தாள். இரு விரல்களை தோளுக்குக் கொஞ்சம் கீழே வைத்து, `உள்ளே நுழைய முடியாது,’ என்று காட்டினார் டிக்கட் கொடுப்பவர்.

    தேயிலைத் தோட்டங்கள் எங்களுக்கு அபூர்வமில்லை என்பதால், அதை விடுத்து, தாவரவியல் தோட்டத்திற்குப் (botanical gardens) போனோம். பார்த்து ரசிக்க எவ்வளவோ இருந்தன. நாலாயிரம் வகை தாவர வர்க்கங்கள்.

    எங்களை அங்கு கொண்டுவிட்ட ஆட்டோக்காரர், `காத்திருக்கட்டுமா?’ என்று கேட்டார்.
    எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று சொல்லத் தெரியாததால், மரியாதையாக மறுத்தேன். அவர் எனக்கு ஆதரவாக, `இங்ஙன வண்டி பிடிக்கலாம்,’ என்று சொல்லிச் சென்றார்.

    மொழி தெரியாது நாங்கள் திண்டாடப் போகிறோமோ என்ற கவலையுடன் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி போனவரைப் பார்த்துக் கையாட்டிச் சிரித்தேன். அப்பப்பா! அவர் முகத்தில்தான் எவ்வளவு மகிழ்ச்சி!

    திரும்பம் வழியில், கொழும்புவிலிருந்து ஏழு மைல் தொலைவிலிருந்த களனி (Kelaniya) கோயிலுக்குப் போனோம். இங்குதான் ராமர் விபீஷணனைச் சந்தித்தாகச் சொல்லப்படுகிறது.

    இந்நாட்டில் ஆட்டோக்காரர்கள் மீட்டருக்குமேல் கேட்காததுடன், மீட்டர் இல்லாவிட்டாலும் அதே கட்டணத்தையே கேட்டது வியப்பூட்டியது. தமிழ் தெரியாதவர்கள் சைகையிலேயே விளக்கினார்கள். `Coconut tree!” என்று சுட்டிக் காட்டினார் ஒரு ஆட்டோக்காரர்! தலையாட்டி வைத்தேன்.

    தெருக்களைக் கூட்டுபவரிலிருந்து, எந்தத் தொழில் புரிபவர்களாக இருந்தபோதும், ஆன்மதிருப்தியுடன், குறுக்கு வழி தேடாது செய்ததைப் பார்க்க முடிந்தது. இவர்களுக்குத் தம் உழைப்பில் பெருமை இருக்கிறது. மனித நேயம் அதிகம்.

    கம்போடியாவிலும் இப்படிப்பட்டவர்களைச் சந்தித்து இருக்கிறேன். `எங்கள் தந்தை, மாமா எல்லாரும் போரில் மடிந்துவிட்டார்கள். நீங்கள்தாம் எங்கள் உறவினர்!’ என்று எங்களை ஏற்ற ஒரு வழிகாட்டியின் நினைவு வந்தது.

    இயல்பான நமது மனிதத் தன்மையை நம்முள்ளிருந்து வெளிக்கொணர யுத்தமும், இனக்கலவரமும் அவசியமோ?

    முற்றும்

    Share
  • உன்னையறிந்தால் …….. (22)

    நிர்மலா ராகவன்.

    தவற்றைத் தவற்றால் திருத்த முடியுமா?

    உனையறிந்தால்

    கேள்வி:
    ஒரு குழந்தை செய்யும் தவற்றை இன்னொரு தவற்றால் திருத்த நினைப்பவர்களைப்பற்றி..?

    விளக்கம்:
    குழந்தைகளுக்குத் தாம் செய்வதில் சரி எது, தவறு எது என்றெல்லாம் ஆராயத் தெரியாது. தவற்றுக்குத் தண்டனை கிடைத்தாலும், எங்கே தவறு செய்தோம் என்றும் புரியாது. சற்று பெரிய குழந்தைகளானால், தாம் செய்தது குற்றமே இல்லை என்று அவர்கள் நினைக்கும்போது தண்டனை அளித்தல் எதிர்மாறான விளைவைத்தான் அளிக்கும்.

    உண்மைக் கதை:
    இரண்டு வயதான அந்தக் குழந்தை தெருவில் தனது மூன்று சக்கர சைக்கிளில் போய்க்கொண்டிருந்தான். பக்கத்திலேயே அவனுடைய தாய். எதிரே அவனைவிடச் சற்றுப் பெரிய நண்பன், சாங், தனது சைக்கிளில் வர, வேடிக்கை என நினைத்துச் சிரித்தபடி, குறுக்கே போய், `ஆக்சிடெண்ட்!’ என்று கத்தினான். அவனும், சைக்கிளும் விழுந்தார்கள். (தொலைகாட்சி விளம்பரங்களில் பார்த்து ரசித்தது). தாய் சிரித்தபடி அவனைத் தூக்கிவிட்டாள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த சாங்கின் தந்தை ஆக்ரோஷமாக அங்கு வந்தார். `அவன் எவ்வளவு சின்னப் பையன்! உன்னால் கீழே விழுந்துவிட்டான், பார்!’ என்று பையனின் காதைப் பிடித்தார். ` ஸாரி சொல்லு!’

    பையன் முறைத்தான். அவன்தானே திடீரென்று குறுக்கே வந்தான்? தான் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்! `இப்போ கேக்கறியா, இல்லே..,’ தான் கொடுக்கும் தண்டனை என்னவாக இருக்கும் என்று சொல்லாமலே விட்டார். அதற்கும் சாங் மசியவில்லை. ஆத்திரத்துடன், மகனை ஒரு கையால் தூக்கினார். அவனது வாகனத்தை இன்னொரு கையால் இழுத்தபடி வீட்டுக்குள் நுழைந்தார். வயதுக்குரிய வளர்ச்சி இல்லாதிருந்த அந்தப் பையன் இன்னும் சுருங்கிப்போனான் — கிடைக்கப்போகும் தண்டனையை நினைத்து. வீட்டுப் பாடம் பண்ணாவிட்டாலோ, எதிர்த்துப் பேசினாலோ அடிக்கடி கிடைப்பதுதானே!

    அடுத்த ஒரு மணி நேரம் அவனை வீட்டின் ஒரு மூலையில் நிற்க வைப்பார். அசையக்கூடாது. வாயே திறக்கக்கூடாது. என்ன அவசரமானாலும், நகரக்கூடாது. அன்று சாப்பாடு வாயிலும் மண். `YOU ARE GROUNDED! ‘ என்று கொக்கரிப்பார் தந்தை. அப்பாவின் தண்டனை சரியா, தப்பா என்று ஆராயும் வயதில்லை அவனுக்கு. அவர் செய்ததுபோல், தான் சொன்னதையெல்லாம் கேட்டு நடக்க வேண்டும் என்று நண்பர்களை அதிகாரம் செய்ய ஆரம்பித்ததில், அவனுக்கு நண்பர்களே இல்லாமல் போனார்கள். அவனுடைய சிறிய உருவத்தைப் பிறர் கேலி செய்ய ஆரம்பித்தனர்.

    தெருவில் பலர் பார்க்க நடந்த `விபத்தை,’ `ஏதோ சிறு பிள்ளைகளின் விளையாட்டு!’ என்று விட்டிருந்தால், சமாசாரம் அத்துடன் முடிந்திருக்கும். வயதானவர் ஒருவரின் அதிகாரப் போக்கால், மகனை இன்னும் தனிமைப்படுத்திவிட்டார். தாயையாவது தன் வழிக்குக் கொண்டுவருவதற்கு அவனுக்கு ஓர் உபாயம் புலப்பட்டது. எல்லாவற்றிற்கும் சிறுபிள்ளைபோல் சிணுங்கி, மூக்கால் அழுவான். சாப்பிடப் படுத்த, அம்மா தனது கவனிப்பை அதிகரித்துக்கொண்டாள், `குழந்தை ஏனோ வளரவே இல்லையே!’ என்ற தாபத்துடன். (இதெல்லாம் இந்தத் தாய் என்னுடன் பகிர்ந்துகொண்டது).

    சாங்கின் பெற்றோர் இருவரும் வெளி உத்தியோகத்திற்குப் போகிறவர்கள். சுமார் பன்னிரண்டு மணி நேரம் வீட்டில் இருக்கவிடாது செய்யும் வாகன நெரிசல், மற்றும் வேலை. அவனை இந்தக் காலத்து நாகரீகத்தின் சின்னம் என்று கூறலாம். அதாவது, தான் மகனுடன் அதிக நேரம் கழிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி பெற்றவளுக்கு. அதை ஈடுகட்ட, அவனுக்கு விலையுயர்ந்த விளையாட்டுச் சாமான்கள், மற்றும் கார்ட்டூன் வீடியோக்கள் பரிசளிப்பாள். தந்தையோ, ஒரே மகன் எங்கே கெட்டுவிடுவானோ என்ற அச்சத்துடன், தனக்குத் தோன்றிய விதத்தில் அவனுக்கு ஒழுக்கம் கற்பிக்கிறார்!

    அம்மா வாங்கி வந்ததிலேயே சாங்கிற்கு மிகவும் பிடித்த கார்ட்டுன் படம் டாம் அண்டு ஜெர்ரி. ஜெர்ரி என்ற குட்டி எலியானது, டாம் என்ற பூனைக்குப் பைத்தியம் பிடிக்கும் அளவுக்குப் பிராணனை வாங்கும். இது குழந்தைகளுக்குப் பெரிய வேடிக்கை. எலியுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இந்தப் பாடத்தால், பெரியவர்களை தம்மால் இயன்றவரை துன்புறுத்துவது விளையாட்டு என்று தோன்றிப்போகிறது. தம்மையும் அறியாது, தண்டனையைக் கேட்டு வாங்குகிறார்கள்.

    தப்பு செய்தால், உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பாடத்தைப் புகட்ட நினைத்திருக்கலாம் சாங்கின் தந்தை. ஆனால், கீழே விழுந்த குழந்தையோ, அதன் தாயோ அவன் விழுந்ததைப் பொருட்படுத்தவுமில்லை, காயம் எதுவும் படவில்லை என்ற பட்சத்தில், சாங்கிற்குக் கிடைத்த தண்டனை அதீதம்தான். நடந்ததில் தன் தவறு ஏதுமில்லை என்று புரிந்ததால், சாங் ஒரு முடிவுக்கு வருகிறான்: இந்தப் பெரியவர்களே நியாயமற்றவர்கள்!

    மணிக்கணக்காக மூலையில் நின்று, சிறுநீர் கழிக்கக்கூட நகரமுடியாதபடி செய்வது என்ன கொடுமை! ஒரு சிறுவன் தன்னைப்பற்றி மட்டமாக நினைக்கவும், பெற்றோரை அலட்சியப்படுத்தவும் இம்முறை வழிவகுக்கிறது. பெற்றோரிடம் தோன்றிய அவமரியாதையும், வெறுப்பும் பள்ளியில் ஆசிரியர்களிடமும் பரவுகிறது. பிறர் குறைகூறும்போது, `நாங்கள் அவனை எவ்வளவோ கண்டிப்பாகத்தான் வளர்த்தோம்!’ என்று காலங்கடந்து புலம்புவதில் என்ன பயன்!
    திட்டோ, ஒரே ஒரு அடியோ அவ்வளவு பாதிப்பை உண்டாக்காது.

    அதுகூட எதற்கு!
    `அவன்தான் சின்னப் பையன்! இன்னொரு முறை, அவன் குறுக்கே வந்தால், நீ சைக்கிளை ஒடித்துக்கொண்டு வேறு பக்கம் போய்விடு!’ என்ற அறிவுரையே போதுமே!
    `மன்னிப்பு கேட்க முடியாதா! உனக்கு மரியாதை தெரியவில்லை!’ என்று திரும்பத் திரும்ப வலியுறுத்திக்கொண்டே இருந்தால், அதன்படியேதான் ஆவார்கள் சிறுவர்கள்.
    தவறு செய்தால், ஏன் அக்காரியம் தவறு என்று விளக்கலாம். இரண்டு வயதுக் குழந்தைகூடப் புரிந்துகொள்ளும்.

    நான் லட்சணமாக குழந்தை வளர்த்த கதை:
    என் பேரன் கைதவறி தன் பானத்தைக் கீழே கொட்டிவிட்டான். பெரிதாக அழ, `போனால் போகிறது!’ என்று நான் சமாதானப்படுத்தினேன். `ஓ, இது செய்யக்கூடிய காரியம்தானா!’ என்று நினைத்தவன்போல், மறுநாள் மெனக்கெட்டு அதைக் கொட்டினான். ஆள்காட்டி விரலை நீட்டி, `நோ!’ என்ற ஒரே வார்த்தையில் என் எதிர்ப்பைப் புலப்படுத்தினேன். மூன்றாவது நாளும் அப்படியே செய்ய, பொத்தென்று முதுகில் ஒன்று வைத்தேன்.

    அவன் அழவில்லை. என்னையே பார்த்தான். அன்பைக் கொட்டி, கதைகள் சொல்லி சாதம் ஊட்டும் பாட்டி அடிப்பதென்றால், அது செய்யக்கூடாத காரியம் என்று புரிந்திருக்க வேண்டும். அன்றுடன் அந்த விஷமம் நின்றது. புரியாத குழந்தையாக இருந்தால், (உ-ம்: உங்களுக்குப் பிடித்தமான கண்ணாடிப் பொருளை உடைத்தல்) பெரிதுபடுத்தாமல் விடுவதுதான் குழந்தையின் எதிர்காலத்துக்கு நல்லது. ஏனெனில், இந்த வயதிலிருந்துதான் தான் எவ்வளவு நல்லவன், புத்திசாலி என்றெல்லாம், பெரியவர்களின் பாராட்டிலிருந்து உணர ஆரம்பிக்கிறது குழந்தை.

    பொருளை மீண்டும் வாங்கலாம். ஆனால் உடைந்துவிட்ட மனத்தை..?

    தொடருவோம்

    Share
  • தோழமையுடன் ஒரு பயணம் – 3

    ஸ்ரீலங்கா (பகுதி 3)

    நிர்மலா ராகவன்

    சிங்கள மொழியில், வில்பட்டு என்றால் ‘இயற்கை ஏரிகள்’ என்று பொருள். பெயருக்கேற்ப, அறுபது ஏரிகள். அவைகளில் வெள்ளை நிற அல்லிப்பூக்கள் அழகாக மலர்ந்திருந்தன. வடமேற்குக் கடற்கரையை ஒட்டிய இதில் வரட்சியான நிலமும் உண்டு. அலையடிக்கும் கடல் பகுதியும் இருந்தது.

    alli
    ஜீப் ஓட ஆரம்பித்தது. கடல் காற்றில் அசைந்த மரக்கிளைகளிலிருந்த முட்கள் என் முகத்தைக் கீறாதிருக்க அவ்வப்போது முகத்தைத் திருப்பிக்கொள்ள வேண்டியிருந்தது. மல்லிகை, மருதாணி — இரண்டு மரங்களைத் தவிர, மரங்கள் அடர்ந்திருந்த அக்காட்டில் வேறு எதன் பெயரும் தெரியவில்லை.

    வழி நெடுகிலும் பாம்புப் புற்றுகள். தெருவின் குறுக்கே ஓடிய கீரி, மரத்தடியில் விழித்துக் கொண்டிருந்த மான் கூட்டம். தன் கூட்டத்திலிருந்து விலகி, எங்கள் வாகனத்திற்கு முன்னால், அதன் ஒலி கேட்டு பயந்து குடுகுடுவென ஓடி சிரிப்பு மூட்டிய குட்டி மயில் `தனியாப் போகாதேன்னு சொன்னா, கேட்டியா?’ என்று தாய் மயிலிடம் டோஸ் வாங்கியிருக்கும்). ஆடி அசைந்தபடி, நிறைய புகைப்படங்கள் எடுக்க வசதி செய்து கொடுத்த கரடி. சில ஏரிகளில் முதலைகள். விதவிதமான நீர்ப்பறவைகள்.

    அக்காடு மிருகங்களுக்குச் சொந்தமான இடம். மனிதர்கள் அவைகளுக்கு மதிப்பு கொடுத்து, எந்த சப்தமும் போடாது, பார்த்து ரசிப்பதுடன் நிறுத்திக் கொண்டதால் அவை பயப்படுவது கிடையாது. எங்கள் பக்கத்திலேயே ஒரு புலியின் கால்தடங்கள். நல்லவேளை, இரவிலேயே உலவிவிட்டுப் போய்விட்டதோ, இதை எழுத உயிர் இருக்கிறதோ!

    நான்கு மணி நேரம் போனதே தெரியவில்லை. தலைமுடியை முகத்தில் பறக்கவிட்ட கடல்காற்றும், மனித நடமாட்டமேயற்ற காட்டுப் பகுதியும்! ஆகா! பல தருணங்களில் கண்ணை மூடிக்கொண்டு, நான் எங்கேயிருக்கிறேன் என்பதை நினைவுபடுத்திக்கொண்டேன். அந்த அனுபவம் ஓர் ஆன்மிக உணர்வை அளிப்பதாக இருந்தது.

    எங்கள் இருப்பிடத்துக்கு வந்ததும், எலுமிச்சை சாறு அளிக்கப்பட்டது. மொழிப் பிரச்னை இருந்ததால், வீட்டுச் சொந்தக்காரரை நான் தலை குனிந்து வணங்கி, விடைபெற்றேன். `ஆயு போவன்!’ (ayu bovan) என்றும் சொல்லி வைத்தேன். சிரித்துவிட்டு, அதையே திருப்பிச் சொன்னார்.

    ‘உங்களுக்கு நீண்ட ஆயுள் வாய்க்கட்டும்!’ என்ற பொருளானாலும், ஒருவரை வரவேற்கத்தான் அத்தொடரைப் பயன்படுத்துவார்களாம். ஏதோ, முயற்சித்து நம் மொழியில் ஒரு வார்த்தையாவது கற்று வைத்திருக்கிறாளே என்று அவர் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும்!

    வழியில், தெருவை ஒட்டி இருந்த சாப்பாட்டுக் கடையில் மதிய உணவு. மீண்டும் சைகைதான். உள்நாட்டில் விளையும் சிவப்பு அரிசியில் இடியாப்பம் லேசாக, சுவையாக இருக்கிறது. எல்லா இடத்திலும் விரும்பிச் சாப்பிட்டோம். துருவிய தேங்காயுடன் உப்பு, ஊசி மிளகாய் சேர்த்து, coconut sambol என்ற ஒரு பதார்த்தம் எல்லா உணவுடனும் அளிக்கப்படுகிறது. (மலாயில் sambal என்றால் துவையல்). காரமாக இருந்தாலும் நல்ல ருசி. கட்டை விரலை உயர்த்தி என் பாராட்டைத் தெரிவித்தேன்.

    அடுத்து, அனுராதபுரத்தில் சில மணி நேரங்கள். இது ஒரு யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளம் (world heritage site). பரந்த இடம். மரங்கள் அடர்ந்த பகுதியில் பல ஸ்தூபிகள். உள்ளே கார்கள் போக வசதியில்லாததால், ஆட்டோ வைத்துக்கொண்டோம்.

    கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பித்து, இதுநூறு வருடங்களுக்குப்பின் கட்டி முடிக்கப்பட்ட இந்த ஊர் ஒரு காலத்தில் இலங்கையின் தலைநகராக விளங்கியது. இந்தியா மற்றும் ஐரோப்பாவுடன் வர்த்தகத் தொடர்பு இருந்ததற்கான சான்றுகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. 10,000 புத்த பிக்குகள் இவ்விடத்தில் தங்கிப் படித்தார்களாம். அங்குள்ள ஒரு தொல்பொருள் காட்சிசாலையில், புத்தருடைய கால்தடங்களை வைத்திருக்கிறார்கள். சரித்திரப் பிரசித்தி வாய்ந்த இடம் அனுராதபுரம்.

    தொடரும்

    Share
  • உன்னையறிந்தால் …….. (21)

    நேர்மையும் வாய்மையும்

    நிர்மலா ராகவன்

    உனையறிந்தால்
    கேள்வி: என் தந்தை என்னைப்பற்றி (வயது 17) புகழ்ச்சியாகப் பிறரிடம் கூறுகிறார். அது எல்லாமே உண்மையாக இருக்காது என்று தெரிந்தும், அவர்களும் ஏன் அதை நம்புவதுபோல் நடிக்கிறார்கள்?

    பதில்: உங்கள் தந்தைக்குத் தன் குடும்பத்தைப்பற்றி எல்லாரும் நல்லவிதமாக நினைக்கவேண்டும் என்ற ஆதங்கம். அனேகமாக அவரது நண்பர்களும் இப்படி இருப்பதால், மற்றவருக்குத் தலைகுனிவு ஏற்படாதவகையில், அவர் கூறும் பொய்யைப் பெரிதுபடுத்துவதில்லை.

    இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், தாயோ, தந்தையோ இப்படி ஒன்றைப் பத்தாக்கிப் பெருமைப்பட்டுக் கொள்ளும்போது, `நம் பெற்றோர் சொல்வதெல்லாம் பொய்யாகத்தான் இருக்கும்,’ என்று பிள்ளைகள் நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். பொய் பேசுவது தவறில்லை என்ற குணம் பெரியவர்களிடமிருந்து படிந்துவிடும். பெற்றோர் எவ்வழி, பிள்ளைகள் அவ்வழி.

    குழந்தைகள் உண்மையே பேசவேண்டும், நேர்மை தவறாது நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அவர்களுக்குப் பெரியவர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டாமா? பெற்றோரை நம்ப முடியாதவர்கள் அவர்களிடம் தங்கள் அந்தரங்கத்தைப் பகிர்ந்துகொள்ள மட்டும் வருவார்களா?

    சில பெற்றோர், `நான் உன் வயதாக இருந்தபோது..,’ என்று அளப்பார்கள், ஏதோ தாம் பெரிய ஹீரோவாக இருந்ததுபோல். பிள்ளைகளுக்கு அறிவும், உற்சாகமும் ஊட்டுவதாக நினைத்துக்கொண்டு.

    `அப்பாவோட கட்டுக்கதையையெல்லாம் யார் நம்புவார்கள்! சும்மா எங்களை ஏமாத்தற வேலை! மரியாதைக்காகக் கேட்டுவைப்போம்,’ என்று என் மாணவர்கள் என்னிடம் சொன்னபோது, எனக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

    (நான் முதன்முதலில் அவர்கள் வகுப்புக்குள் நுழைந்ததும், மலாய் இனத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயத்துடன் என்னைப் பார்த்தார்கள். அது எனக்குப் புதிய அனுபவம். நான் சீன மாணவிகளுக்குத்தான் பெரும்பாலும் ஆசிரியையாக இருந்து வந்திருந்தேன்.

    அவர்களது பயத்தைப்போக்க, நான் நிறைய பேசினேன். மூன்றாம் நாள், `நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்கள்!’ என்றான் ஒரு மாணவன். அது பாராட்டுதல்பொல் ஒலிக்கவில்லை. அவனுடைய கணிப்பு. அவ்வளவுதான். அவன் பிற ஆசிரியைகளின் வகுப்பில் வாயே திறக்கமாட்டானாம்.
    அதன்பின், தாமே வந்து, வந்து, தங்களைப் பாதிக்கும் விஷயங்களை என்னுடன் பகிர்ந்துகொள்வார்கள் அவர்கள். நான் படித்து அறிந்ததைவிட, என்னிடம் பயின்ற மாணவ மாணவிகளிடம் கற்றது அதிகம்).

    கலிகாலத்தில் நல்லவர்கள் அதிக இன்னல்களுக்கு ஆளாக, பொய்யும் பித்தலாட்டமும் செய்பவர்கள்தாமே செல்வந்தர்களாக இருக்கிறார்கள்? பிள்ளைகளை எதற்கு நல்லவர்களாக நடக்கப் பழக்க வேண்டும் என்று சில பெற்றோர் கேட்க நினைப்பது புரிகிறது.

    போலியாக வாழ்பவனுக்குள் எப்பவும் ஒரு பயம், நிம்மதியின்மை இருக்கும் — தன் செல்வம், பதவி, அதிகாரம், ஏதோ ஒன்று கைவிட்டுப் போய்விடுமோ என்று. Being good is its own reward.

    இருப்பினும், சிறு குழந்தைகளிடம் அவ்வப்போது பொய் சொல்லாதவர் யார்! நன்றாக அலங்கரித்துக்கொண்டு முக்கியமான ஓர் இடத்துக்குப் புறப்படுகையில், `நானும் வருவேன்,’ என்று அழும் குழந்தையிடம், `டாக்டரைப் பார்க்கப் போகிறேன்,’ என்று சொல்கிறாள் தாய். `நாளைக்கு உன்னையும் அழைத்துக்கொண்டு போகிறேன்,’ என்று சமாதானமும் சொல் கிறாள். எப்படியும், சிறிது நேரத்தில் குழந்தை அதை மறந்து விளையாட ஆரம்பித்துவிடும். இப்படிப் பொய் சொல்வதால் எந்த தீங்கும் விளைவதில்லை என்றே தோன்றுகிறது.

    தாம் ஏதாவது விஷமம் செய்துவிட்டு, குற்ற உணர்ச்சி பெருக, பெற்றோரிடம் வருவான். `தப்பு என்று புரிந்து, பயமும் உண்டானபின், தண்டனை எதற்கு!

    `போனால் போகிறது! தெரியாமல் செய்துட்டே!’ என்று அனுதாபம் காட்டினால், மனத்தளர்ச்சி ஏற்படும்போதெல்லாம் பெற்றோரை நாடத் தயங்கமாட்டார்கள்.

    எந்த வயதாக இருந்தாலும், பிள்ளைகள் செய்த செய்கையைப் பிறர்முன் அம்பலப்படுத்துவது கூடாது. அது அவர்களை அவமானப்படுத்துவதாகும். தனியாக அழைத்து, கண்டனம் இல்லாமல், அவர்கள் செய்தது ஏன் தவறு என்று சொல்லலாம்.
    சிறு, சிறு குற்றங்களையும் உடனுக்குடன் கண்டித்து, தண்டிக்க வேண்டும் என்று நினைத்து நடப்பார்கள் சில பெற்றோர். பெரிய குற்றங்கள் செய்யாதிருக்கும் வழியாம்!

    தாம் எதற்காகத் தண்டிக்கப்படுகிறோம் என்பதே புரியாத வயதில், `அப்பா அம்மாவிடம் சொன்னால்தானே அடி விழப் போகிறது!’ என்று.எதையும் மறைக்கப் பார்ப்பார்கள் சிறுவர்கள்.`

    ஆறு வயதுக்குமேல் ஆன குழந்தைகளிடம் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டும். வாரம் பூராவும் நன்றாகப் படித்தால், ஞாயிறன்று கடற்கரைக்கோ, மிருகக்காட்சி சாலைக்கோ அழைத்துப்போவதாக ஆசை காட்டியிருந்தீர்களா? அதன்படி நடந்தால்தான், நீங்கள் அடுத்தமுறை ஏதாவது சொன்னால் நம்பத் தோன்றும்.

    ஆனால், அன்று பேய்மழை என்று வைத்துக்கொள்வோம். காரணத்தை விளக்கி, ஒத்திப் போடுங்கள். இது சிறுவர்களுக்கும், அவர்களுடைய உணர்வுகளுக்கும் நீங்கள் கொடுக்கும் மரியாதை.

    ஒரு தாய், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த தன் மகன் ஹாஸ்டலிலிருந்து விடுமுறைக்கு வீடு திரும்பியதும், அவனுடைய உடைமைகளைச் சோதனையிட்டு, அங்கு தட்டுப்படும் சிகரெட் டப்பாக்களை தூக்கி எறிவதாகப் பெருமையுடன் என்னிடம் சொல்லிக்கொண்டாள்.

    `வாராவாரம் இப்படி நடக்கும். அவனும் என்னை எதுவும் கேட்கமாட்டான். நானும் ஒன்றும் சொல்ல மாட்டேன்!’
    இப்படிப்பட்ட தாயை மகனால் மதிக்க முடியுமா என்று என் யோசனை போயிற்று. பெற்றோரின் நேரிடையான, அல்லது இத்தாய் செய்ததுபோல் மறைமுகமான எதிர்ப்பே தீய பழக்கங்கள் தொடர உந்துதலாக அமைகிறது. பெரியவர்கள் எதிர்த்தால், தாம் அவர்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெருமை பிள்ளைகளுக்கு எழும். தொடர்ந்து அதையே செய்வார்கள்.

    இன்னொரு பிள்ளை, `அம்மா! நான் சிகரெட் பிடிக்கிறேன்!’ என்று கூறினானாம், மனசாட்சியின் தொல்லை தாங்காது.
    தான் செய்வது தவறு என்ற உறுத்தலால்தானே அன்பான தாயிடம் அதைச் சொல்கிறான்! இது புரிந்து, நீண்ட பிரசங்கம் செய்யாது, `சரி. ஆனா, போதைப்பழக்கம் வேண்டாம்! பத்திரம்!’ என்றபடி அவள் நகர்ந்துவிட்டாள்.

    பல ஆண்டுகள் கழித்து, `நீங்க ரொம்ப மோசம்மா. அன்னிக்கு சிகரெட் பிடிக்கிறதா நான் சொன்னபோது நீங்க திட்டல. எனக்கு சுவாரசியமே போயிடுச்சு. விட்டுட்டேன்!’ என்றான் மகன் குறும்புச் சிரிப்புடன்!

    பதின்ம வயதினர் சிறுவர்களிலும் சேர்த்தியில்லை, வளர்ந்த பெரியவர்களும் இல்லை. பொருளாதார சுதந்திரம் கிடையாதுதான். இருந்தாலும், தம் உடலில் ஹார்மோன்களினால் ஏற்படும் மாற்றங்களைப்புரிந்துகொள்ள முடியாத நிலையில், `நான் இன்னும் சிறுகுழந்தை இல்லை!’ என்று முரண்டு பிடிப்பார்கள். அவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக சுதந்திரம் கொடுத்து, தீய பழக்கங்கள், கெட்ட நண்பர்கள் ஆகியவற்றால் விளையக்கூடும் அபாயத்தை, வருமுன் காப்பது போன்று சொல்லித் தருவது நல்லது. எந்தப் பழக்கமும் முற்றியபின் மாற்றுவது கடினம்.

    நீங்கள் சிறு வயதிலிருந்தே அவர்களுக்குச் சரியாகப் பேசி, விளையாடிச் செய்திருந்தால், எதிர்த்துப் பேசாமல் கேட்டுக்கொள்வார்கள். பரஸ்பர அன்பும், மரியாதையும் நிலைத்திருக்கும்.

    Share
  • தோழமையுடன் ஒரு பயணம் (2)

    நிர்மலா ராகவன்

    55707832

    கொழும்பிற்கு வடக்கே 180 கி.மீ தொலைவில், வில்பட்டு என்னும் தேசிய பூங்கா உள்ளது. நாட்டில் மிகப் பெரிய பூங்கா அது. அங்கு செல்ல காட்டினுள் இருவழிச் சாலை அமைத்திருந்தார்கள்.

    இருபுறமும் அடர்ந்த முட்செடிகளையும் மீறி, சில சமயம் பதினைந்து யானைகள் ஒன்றாக வருமாம். ஆகவே, `யானைகள் கடக்குமிடம்’ என்று, படத்துடன் அறிவிப்புப் பலகைகள் ஆங்காங்கே.

    ae

    பிரதான சாலையிலிருந்து ஏழு மைல் சென்றால் காட்டை அடைய முடியும். தெருவின் ஒரு பக்கத்தில் நெல்லைக் காய வைத்திருக்கிறார்கள். ஜூலை மாதம் அரபு நாட்டிலிருந்து வரும் பயணிகள் மட்டும்தாம் (அங்கு காயும் வெயிலுக்குத் தப்பித்து வருகிறார்களாம்).

    apar

    காட்டைச் சுற்றி வேலி. அதன் வெளியே இருந்த ஒரு வீட்டில் ஓரறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். அந்தத் தெருவைக் கடக்க கார் ரொம்பவே சிரமப்பட்டது. அவ்வளவு மேடுபள்ளங்கள். ஆனாலும், கட்டில், மெத்தை, கொசுவலை, மின்விசிறி ஆகிய எல்லா வசதிகளும் இருந்தன.

    மறுநாள் காரில் காட்டுக்குள் எங்களை அழைத்துப்போய், சஃபாரிக்கு டிக்கட் வாங்கினார் ரிஸ்மீர். காரை ஓட்டிப்போவதோடு நிறுத்திக் கொள்ளாது, பல இடங்களிலும் சிங்களத்திலிருந்து எங்களுக்கு மொழிபெயர்த்து, பார்ப்பதையெல்லாம் விளக்கி, `இங்க போட்டோ எடுத்தால் சூபரா இருக்கும்,’ என்று அவ்வப்போது காரை நிறுத்தி, ஆட்டோக்காரர்களிடம் பேரம் பேசி — இப்படி பெரும் உதவியாக அமைந்தார் அவர்.

    `நீங்கள் சரித்திரம் படித்திருக்க வேண்டும், ரிஸ்மீர்!’ என்று பாராட்டினேன். பள்ளியில் சிங்கள மொழியில் படித்திருந்தார். ஏழு வகுப்பிற்குப் பிறகு, நாட்டில் கலவரம் அதிகமானதால், படிப்பு அரைகுறையாக நிறுத்தப்பட்டுவிட்டது.

    வழிகாட்டிகள், வாடகைக் காரோட்டிகள் ஆண்டுதோறும் அரசாங்கப் பரீட்சைக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு நாட்டின் சுற்றுலாத் தளங்களைப்பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அத்துடன், அவைகளின் சிறப்பு அம்சங்கள் என்ன, எதையெல்லாம் தவிர்க்கலாம் என்று சுற்றுலாப் பயணிகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, தெரிவிக்க வேண்டும்.

    நான் ஜீப்பின் முன்னிருக்கையில் டிரைவர் பக்கத்தில் உட்காரப்போனேன்.

    `அங்க ஒண்ணும் தெரியாதும்மா. இங்க வா!’ என்று அழைத்தாள் மகள்.
    செங்குத்தான ஏணியில் ஏறி பின்னால் உட்கார வேண்டுமாம்!

    எப்போதுமே வெளிநாடுகளுக்குப் போனால், சாதாரணமாக நான் செய்யத் தயங்குவதையெல்லாம் (கற்பனையை ஓட விடாதீர்கள். நான் குறிப்பிடுவது — ஏறி, குதித்து, தாண்டி என்று பல சர்க்கஸ் வித்தைகள்) செய்துவிட்டு, நடக்கக்கூட முடியாது நாடு திரும்புபவள் நான். இம்முறை வீட்டிலிருந்தவர்களின் எச்சரிக்கையுடன்தான் புறப்பட்டிருந்தேன்.
    `ஐயோ! என்னால முடியாது!’ என்று மறுத்தேன்.

    `அரைமணி ஆனாலும் பரவாயில்ல. அமைதியா ஏறுங்க, மேடம்!’ என்று ரிஸ்மீர் ஊக்குவிக்க, `இங்க ஒரு கை, அங்க ஒரு கை,’ என்று மகள் வழிகாட்ட, ஒரு படியில் ஏறும்போது மூச்சை இழுப்பது, அடுத்த படியில் கால் வைக்கும்போது அதை விடுவது என்று முறைப்படி செய்தேன். இரு நிமிடங்களுக்குள் ஒரு வழியாக அமர்ந்ததும், பெருமையாக இருந்தது: `இருபது வயதில் பேரன் இருந்தாலும், நமக்கு அப்படி ஒன்றும் வயதாகவில்லை போலிருக்கிறதே!’

    தொடரும்

    Share
  • உன்னையறிந்தால் . . . . . . (20)

    வாழ்க்கைத் துணையுடன் ஒத்துப்போவது

    உனையறிந்தால்

    நிர்மலா ராகவன்

    கேள்வி: நான் பள்ளிப்படிப்புடன் என் கல்வியை நிறுத்திவிட்டேன். அது தெரிந்தே என் அழகுக்காக என்னைக் காதலித்து மணந்தவர், இப்போது `மேலே படி,’ என்று உயிரை வாங்குகிறார். எனக்கு விருப்பமில்லை. முதலிலேயே ஒரு பட்டதாரியைத் தேடிப் பிடித்திருக்க வேண்டியதுதானே?

    விளக்கம்: பெரும்பான்மையான திருமணங்களில் ஏற்படும் பிரச்னையே இதுதான். எல்லா வேலைகளுக்கும் முன் அனுபவம் தேவைப்படுகிறது. ஆனால், வாழ்நாள் முழுவதும் இருவர் இணைந்து குடும்பம் நடத்த மட்டும் கிடையாது.
    சில வருடங்கள் காதலித்திருந்தாலும், ஒரே வீட்டில், இரவு பகலாக சேர்ந்திருந்தால், பிரச்னைகள் வரத்தான் செய்யும். ஒன்றாக வளர்ந்த அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகளுக்குள்ளேயே சண்டை பூசல் வருவதில்லையா? அதுபோல்தான்.
    தனக்கு வரப்போகும் மனைவி வாளிப்பான உடலழகுடன், படிப்பு, செல்வம் எல்லாவற்றிலும் சிறந்திருக்க வேண்டும் என்று ஆண் கனவு காண்கிறான். பெண்ணுக்கோ, பெரிய உத்தியோகம், ஆடம்பரமான வாழ்க்கை இதெல்லாம் கொண்ட ஆண்தான் கணவனாக வரவேண்டும் என்ற ஆசை.

    அழகான பெண் மனைவியாக அமைந்தால், அத்துடன் திருப்தி அடைய முடிவதில்லை. `நண்பருடைய மனைவி இன்னும் அதிகமாகப் படித்திருக்கிறாளே! புத்திசாலித்தனமாகப் பல விஷயங்களை விவாதிக்கிறாளே!’ என்ற போட்டி மனப்பான்மை எழுகிறது.

    தன் கனவுப்படியே பெரிய உத்தியோகஸ்தனை மணந்தவளோ, அவருக்குத் தன்னைக் கவனிக்கவோ, கொஞ்சவோ நேரமே இல்லையே என்று ஏங்கி வாடுகிறாள். ஓயாமல் குறை கூற, அவர் பயந்து, நண்பர்களை அதிகமாக நாடுகிறார். ஆனால் எப்போதும்போல, விளையாட்டு, அரசியல், பெண்கள் என்று கலகலப்பாகப் பேச முடிவதில்லை. `பெண்’ என்றாலே மனைவி ஞாபகம் வர, வாயடைத்துப்போகிறது!

    `கலகலப்பான பெண்’ என்று மகிழ்ந்து ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் மௌனச்சாமியான ஒருவன். அவளை மனைவியாக்கிக் கொண்டதும், `என்ன இவள், வாய் ஓயாமல் பேசுகிறாளே!’ என்ற அலுப்பு தோன்றும். பொதுவாக, முதலில் ஈர்த்த குணமே பிறகு வெறுப்பை விளைவிக்கும். இதனால், கல்யாணத்துக்குமுன் ஏற்படும் அனுபவங்களை வைத்து, பிறகு நடக்கப்போவதை கணிக்க முடியாது.

    கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மாற்ற முயற்சிப்பார்கள். இதைவிட ஒரு நாயைப் பூனையாக்குவது எளிது.
    இந்த முயற்சி ஒரு மாரத்தான் பந்தயம் போலத்தான். முதலில் மெதுவாக ஆரம்பிக்கும். சிறிது பொறுத்து, தன் பலமும், `எதிரி’யின் பலகீனமும் புரிந்துபோக, வேகம் அதிகரிக்கும். எப்படியும் மாற்ற முடியாது என்று புரிந்தவுடன் ஏமாற்றம் எழ, அதுவே ஆத்திரமாக மாறுகிறது.

    மிகச் சிலரே தமக்கு என்ன வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

    `எனக்குப் பிடித்தவைகளில் (இசை, நாட்டியம், சித்திரம் வரைதல், இலக்கியம் — எவ்வளவு இல்லை!) அவருக்கும் நாட்டம் இருக்க வேண்டும். என்னை ஊக்குவித்து, பக்கபலமாக இருப்பவரையே நான் மணக்க விரும்புகிறேன்’ என்று கூறும் பெண் புத்திசாலி. தான் மகிழ்ச்சியாக வாழ என்ன தேவை என்று புரிந்து வைத்திருக்கிறாள்.

    (இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரே துறையில் இருக்கும் இருவருக்குமிடையே போட்டி எழாதா? அடுத்தவரின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிடாமல், விட்டுக்கொடுக்க எத்தனை பேர் முன்வருவார்கள்?)

    `கூட்டுக் குடும்பத்தில் என் பெற்றோரை அன்பாகப் பராமரிக்கும் பெண்தான் வேண்டும். மற்ற தகுதிகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்!’ என்று நிபந்தனை விதிக்கும் ஆண் அபூர்வம்.

    இவர்களைப் போன்றவர்களுக்குத் தெரியும், எப்படிப்பட்ட துணையால் தங்களது வாழ்க்கையில் அதிகமான பிரச்னைகள் எழாது என்று. பரஸ்பர மதிப்புடன், ஒருவருக்கொருவர் எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்பார்கள்.

    ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே உள்ள உடலமைப்பின் வித்தியாசத்தால் ஆரம்பத்தில் ஈர்ப்பு ஏற்படலாம். ஆனால், இருவருடைய உளவியலும், உணர்ச்சிபூர்வமான நடத்தைகளும் வெவ்வேறு. அது புரியாததால்தான் கோபமோ, பயமோ ஏற்படுகிறது.

    நண்பர்களுக்கிடையே புரிந்துணர்வும், அதனால் மற்றவரை ஏற்பதும் எளிது. தம்பதிகளுக்கு ஏனோ இது கைவரவில்லை. ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த முயலுகிறார்கள். ஒருவரைப் புரிந்துகொள்ள இயலாதபோது, அவரை ஏற்பது மட்டும் இயலுமா?

    திருமணமான புதிதில் இருந்ததுபோல் யாரும் இருப்பதில்லை, பத்து, இருபது வருடங்களுக்குப்பின். இதனால் ஏமாற்றம் அடையாது, `தானும் ஒன்றும் அப்படியே நிலையாக இருந்து விடவில்லையே!’ என்ற ஞானோதயம் பெறவேண்டும். உங்கள் கணவர் பூதம் மாதிரி இருந்தாலும், அவரை நீங்கள் ஆணழகர் என்று நினைத்தால், அதுதான் உண்மை அன்பு.

    நான் பார்த்த தம்பதிகளிலேயே மிக ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக இருந்தவர்கள் என் பள்ளித்தோழியின் பெற்றோர். தந்தை உயரமாக இருப்பார். பெரிய உத்தியோகம், நல்ல அழகர். தாய்க்குக் கூனல், முகம் சற்று கோணலாக இருக்கும். அடிக்கடி சமையலறைக்குள் நுழைந்து, மனைவியின் தோளைக் கட்டிக்கொண்டு ஏதாவது கேட்பார். தான் செய்வது எல்லாவற்றையும் அவளைக் கலந்து ஆலோசிப்பார். பிறருக்காக ஆடும் நாடகமாகத் தெரியவில்லை. அவருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு, அதற்கு மதிப்பு கொடுத்து நடந்ததாலோ, என்னவோ, மனைவியைக் கண்டால் உயிர் அவருக்கு. அறுபது வருடங்களுக்கு மேலாகியும், இவர்கள் என் மனதில் நிற்கிறார்கள்.

    Share
  • தோழமையுடன் ஒரு பயணம் (1)

    நிர்மலா ராகவன்

    anirmal
    `நீங்கள் இந்தியாதானே?’ சிங்களர்கள், தமிழர்கள் எல்லாரும் என்னைக் கேட்ட கேள்வி. நான் தலையாட்டியதும், `இந்தியா, ஸ்ரீ லங்கா ஸேம்-ஸேம் (same same)!’ என்றார்கள். பார்ப்பவர்களெல்லாம் புன்னகைத்தார்கள். நான் தெருவில் நின்றுகொண்டிருந்தபோது, பேருந்துக்குள்ளிருந்து ஒரு மாது தோழமையுடன் புன்னகைத்தார். (அவர் தமிழரில்லை. தமிழர்கள் முன்பின் தெரியாதவர்களைப் பார்த்து சிரிப்பது அபூர்வம்).

    கடந்த ஜூலை மாத இறுதியில் நானும், என் மகளும் ஆறு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தோம். கோலாலம்பூரிலிருந்து மூன்றரை மணி நேர விமானப் பயணம்.

    biaபண்டாரநாயக விமானதளம் சௌகரியமாக, நாகரிகமாக இருந்தது. புதுப்பிக்கச் செய்தவர் மாஜி பிரதமர். தெருக்களையும் நன்கு அமைக்கச் செய்திருக்கிறார். ஆனால், ‘தமிழர்களின் ஆதரவும், முஸ்லிம்களின் ஆதரவும் எனக்குத் தேவையில்லை!’ என்று தேர்தலுக்குமுன் கூறியதாலோ என்னவோ, அண்மையில் அவருடைய பதவியே பறிபோய்விட்டது.

    மலேசியாவில், பிற மதத்தைச் சேர்ந்த ஆணோ, பெண்ணோ ஒரு இஸ்லாமியரை மணந்தால், அவரும் முஸ்லிமாக மதமாற்றம் செய்ய வேண்டும். ஸ்ரீலங்காவில் அப்படியில்லை. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் மணக்க விரும்பினால், முதலிலேயே ஏதாவது ஒரு மதத்தைப் பின்பற்ற ஒப்பினால்தான் மணக்க முடியும். வீட்டிலுள்ள மரத்தை வெட்டுவதற்கும் அரசாங்க ஒப்புதல் தேவை.

    தன் சொந்த டாக்சியில் எங்களை அழைத்துச் சென்ற ரிஸ்மீர், தான் ஒரு ஒரு மலாய் முஸ்லிம் என்று தெரிவித்தார். ‘எண்ட அப்பாவும், அம்மாவும் மலாயில கதைச்சுகொள்ளுவாங்க. எனக்குப் புரியும். ஆனா பேச வராது!’ என்றார். தாத்தா காலத்திலேயே இந்நாட்டில் வந்து குடியேறியவர்கள்.

    தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதாம். ஆனால் நான் ஆச்சரியப்பட்ட வகையில் தமிழில் பிளக்கிறார். நிறைய தமிழ்ப்படங்கள் பார்ப்பாராம். ‘கொலம்புவில்’ (கொழும்பு) சிங்கள நண்பர்களும் இவரும் உரையாடுவது தமிழில்! எனக்குத் தமிழில் இருக்கும் வெவ்வேறு வட்டார வழக்குகளை அறிய மிகுந்த ஆர்வமானதால் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தேன். காரில் போன அந்த நான்கு நாட்களில் நானும் என் பயண அனுபவங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டேன்.

    அவர் பேசியது அமெரிக்காவில் வாழும் என் மகளுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. `வேண்டிகொண்டு’ என்றால் வாங்குவது, `பேசுவது, கேட்டு வருவது என்று நாம் சொல்வதை கதைச்சுகொண்டு என்கிறார்,’ என்றெல்லாம் நான் தமிழைத் தமிழில் (?) மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன்.

    இலங்கையில் கால் வைத்த மறுநாள், கொழும்புவிலிருந்து 137.8 கிலோமீட்டர் தொலைவிலிருந்த கண்டிக்குச் செல்வதாக ஏற்பாடு. பஸ்ஸிலும், ரயிலிலும் கும்பலோ கும்பல்! காரில் போனால், சுமார் நான்கு மணி நேரப் பயணம்.

    வழியிலிருக்கும் சுற்றுலா தளங்களையும் பார்க்க வேண்டும் என்று விரும்பினோம்.

    நான் பார்த்த ஊர்களிலெல்லாம் தெருக்களிலோ, குடியிருப்புப் பகுதிகளிலோ பூனைகளே காணப்படவில்லை. பூனைக்கு யாரோ சாபம் கொடுத்ததுபற்றி தொலைகாட்சி கதாகாலட்சேபத்தில் கேட்டது நினைவு வந்தது.

    ஓர் ஊரிலிருந்து இன்னொன்றுக்குப் போகும் வழியில், பார்க்குமிடங்களிலெல்லாம் பனை, தென்னை (ஒரு தேங்காய் பெரிய மண்டை அளவு!), மா, பலா (எல்லா இடத்திலும் `பிலாக் கூட்டு’ உண்டு), வாழை, டூரியன் மரங்கள் — நெருக்கமாக. (டூரி (duri) என்றால் மலாய் மொழியில் முள் என்று பொருள். பலா இனத்தைச் சேர்ந்த, ஒரேயடியாக வாசனையடிக்கும் இப்பழத்தின்மேல் முட்களாக அமைந்திருப்பதால் வந்த காரணப்பெயர்).

    நல்ல விளைச்சல் இருப்பதால், உணவுக்குப் பஞ்சமே இல்லை. எல்லா சாப்பாட்டுக் கடைகளிலும் உணவைத் தாராளமாகக் கொடுக்கிறார்கள். முதலிலேயே, `இவ்வளவு சாப்பிட முடியாது!’ என்று தனியாக எடுத்து வைக்க வேண்டியிருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

    பழச்சாறு விற்ற கடைகளில் எப்போதுமே நல்ல கூட்டம். Rock apple juice என்று கொடுத்த ஒரு பானத்தை நான் முகர்ந்துவிட்டு, `விளாம்பழம்!’ என, சிங்கள கடைக்காரருக்குப் பரம சந்தோஷம் — தான் மறந்திருந்த வார்த்தையை நினைவுபடுத்தியதற்கு!

    தொடரும்

    Share
  • உன்னையறிந்தால் . . . . . (19)

    நிர்மலா ராகவன்

    பெற்றோரின் அங்கமல்ல

    உனையறிந்தால்1-1111111

    கேள்வி: பல சிறுவர்கள் வகுப்பறையில் பதில் சொல்லத் தடுமாறுகிறார்களே, ஏன்?

    விளக்கம்: அவர்கள் பெற்றோரின் ஒரு அங்கமாக வளர்க்கப் பட்டிருப்பார்கள். பிள்ளைகளுக்கும் தனித்துவம் உண்டு என்று ஒப்புக்கொண்டு, அவர்களது திறமைகளை ஊக்குவிக்க பெற்றோர் முன்வர வேண்டும்.

    கதை 1: `புத்திசாலியான மாணவர்கள்’ என்று பெயரெடுத்த மலாய் பையன்கள் ஒரு வகுப்பில் இருந்தார்கள். ஆனால், நான் என்ன கேள்வி கேட்டாலும், அவர்கள் வாயே திறக்க மாட்டார்கள். போட்டிகளில் கலந்துகொள்ளவும் அஞ்சுவதாகத் தெரிவித்தார்கள்.

    காரணத்தையும் அவர்களே தெரிவித்தார்கள்: `நாங்கள் ரொம்ப ஒடுக்கப்பட்டுவிட்டோம்!’
    அவர்கள் குறைந்த மதிப்பெண்கள் வாங்கினாலோ, போட்டிகளில் வெற்றி பெறாவிட்டாலோ பெற்றோர் வருந்துவார்களாம். தம்மிடம் பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோரை ஏமாற்ற விரும்பாது, தோல்வி அளிக்கக்கூடிய எதையும் தவிர்க்கிறார்களாம்!

    கதை 2: `என் பெண் தானே நீச்சல் பழகிவிட்டாள். எங்கே, `கோச்’சிற்குக் காட்டு!’ என்று ஒரு சீன மாது தன் மகளிடம் கூறினாள். சோனியாக இருந்த அப்பெண் தன் உடம்பை குறுக்கிக்கொண்டாள்.

    இடம்: கோலாலம்பூரிலுள்ள ஒரு நீச்சல் குளம்.
    தாய் விடுவதாயில்லை. இன்னும் கொஞ்சம் புகழ்ச்சி. பின், வற்புறுத்தலில் இறங்கினாள். பெண் மேலும் விறைத்துப்போனாள்.

    சிறிது பொறுத்து, பெண்களது குளியலறையில், தாயின் குரல் மட்டும் உரக்க ஒலித்தது. `நீ ரொம்ப புத்திசாலின்னு நினைப்போ? அம்மா சொன்னபடி கேக்க முடியாதோ?’ என்று பலவாறாகத் திட்டி, சிறுமியை அடிக்க ஆரம்பித்தாள். அவளோ, அழாமல் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டாள்.

    அங்கிருந்த சிலர் தலைகுனிந்தபடி, விரைந்து வெளியேறிவிட்டோம். எல்லாம் நாகரீகம் கருதிதான்!
    இத்தாய் செய்த தவறென்ன என்று பார்க்கலாமா?

    தன் மகளுடன் தன்னை அடையாளப் படுத்திக் (IDENTIFY) கொண்டிருக்கிறாள். அந்த சின்னப் பெண்ணுக்கும் உணர்ச்சிகள் உண்டு, அவளுடைய வெட்கமான சுபாவத்தைச் சட்டைசெய்யாது, அவளை தனக்குப் பெருமை தேடித் தர முடுக்குகிறோம் என்று அவளுக்குப் புரியவில்லை. நீண்டகால விளைவு: பெண் மேலும் மேலும் ஒடுங்கிப்போவாள்.

    தாயின் கை ஓங்க, `எவ்வளவு திட்டினாலும், அடித்தாலும், இவள் உருப்படவில்லையே !’ என்ற நிராசையும் எழும்.
    இன்னொரு தாய் தன் மகளை அறையில் வைத்து பூட்டிவிட்டாள், இரண்டு நாட்கள். சாப்பாடும் கிடையாது. எல்லாம் அவள் தாய் எதிர்பார்த்தபடி மதிப்பெண்கள் வாங்கிவில்லையென்றுதான்! பெண் தன் பள்ளித்தோழிகளிடம் சொல்லி அழுதது என் காதுகளுக்கு எட்டியது.

    தாய்மார்கள் தாம் பெற்ற பெண்கள் தங்களை மிஞ்சவேண்டும் என்று பேராசையுடன் அவர்களைப் பிடித்துத் தள்ளினால், தாயையும் எதிர்க்கத் துணிவில்லாது, தம்மையும் குறைவாக மதிப்பிட்டுக்கொண்டு, அதனால் மனமுடைந்து போகிறார்கள், அந்த பரிதாபத்துக்குரியவர்கள். பதினாறு வயதான சீனப் பெண்கள் பலர் மனநிலை லேசாகப் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சில காலம் கழிப்பதாக ஒரு சமூக சேவகி என்னிடம் தெரிவித்தாள்.

    நல்ல விதமாகச் சொல்லியோ, திட்டியோ, அல்லது மனம் போனபடி தண்டித்தோ தாம் பிறரிடம் பெருமையாகப் பேசிக்கொள்வதற்குத் தம் குழந்தைகளைக் கருவியாகப் பெற்றோர் உபயோகப்படுத்தினால் எதிர்மறையான விளைவுகள்தான் உண்டாகும்.

    எல்லாக் குழந்தைகளும் படிப்பிலும், பலவிதமான கலைகளிலும் கண்டவர் மெச்சும்படி விளங்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நடக்கிற காரியமா! வயதில் பெரியவர்கள் அப்படித்தான் இருக்கிறோமா? பின், குழந்தைகள் மட்டும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

    தப்பித் தவறி ஒரு குழந்தை முன்னுக்கு வந்துவிட்டால், அது அவனுடைய பெற்றோரின் ஊக்குவிப்பால் மட்டும்தான் என்று பலரும் கருதி, பெற்றோரைப் பாராட்டுவார்கள். அப்படிச் செய்வதால், சிறுவர்களுக்கும் ஆற்றல் இருக்கிறது என்று ஒப்புக்கொள்ள மறுப்பதாக ஆகாதா? இதனால் சிறுவயதினருக்குச் சற்று ஏமாற்றம் எழ, எதையும் முனைந்து செய்யும் ஆர்வம் குறைந்துவிடுகிறது.

    இல்லையேல், `இதைச் செய்தால், எனக்கு என்ன பரிசு கிடைக்கும்?’ என்ற ரீதியில் அவர்களது எண்ணம் போகிறது. பொழுதுபோக்காக இருந்தாலும், அதனால் என்ன ஆதாயம் கிடைக்கும் என்று வர்த்தக ரீதியில்தான் கணக்கு பார்ப்பார்கள். (`உங்களுக்கு எழுத்தில் நிறையப் பணம் வருவதில்லையா? பின் ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்பவர்களை இந்த ரகத்தில் சேர்த்துக்கொள்ளலாம். ஆத்ம திருப்தி என்பது அவர்களுக்குப் புரியாத சமாசாரம்.).

    சிறுவயதினர் பெற்ற வெற்றியை மனமாரப் பாராட்டும் வகையில், `வாழ்த்துகள்! நீ புத்திசாலி!’ என்று புன்சிரிப்போடு சொன்னால்கூடப் போதும். மேலும் துணிந்து புதிய முயற்சிகளில் ஈடுபட ஊக்கம் பிறக்கும்.

    கதை 3: நான் இடைநிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, பெங்களூர் நகரெங்கும் நடைபெறும் பேச்சுப் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் செல்வார் என் தலைமை ஆசிரியை. தமிழ் பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் வாங்கியிருந்தேன். ஆனால், அப்போது என் ஆங்கிலம் அரைகுறை. சில பெரிய வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கத் தெரியாது, தமிழில் எழுதிவைத்திருப்பேன்.

    போட்டிக்குப் பிற பள்ளிகளிலிருந்து வந்த பெண்கள், `எங்க பள்ளிக்குப் பரிசு கிடைக்கலே. டீச்சர் ரொம்பத் திட்டுவாங்க. பயமாயிருக்கு!’ என்று என்னிடம் கூறியபோதுதான், வெற்றி பெறாதது திட்டு வாங்கக்கூடிய சமாசாரம் என்றே எனக்குப் புரிந்தது.

    நானும் அன்று வெற்றி பெறவில்லை. அதற்காக மனமுடைந்து போகவோ, பயப்படவோ இல்லை. என்னை அழைத்துப்போயிருந்த எனது தலைமை ஆசிரியை, மிஸ்.கோகுல் தாஸ், என் தோளில் கைபோட்டு அணைத்து, `நீ நேருமாதிரி குரலை மாற்றிப் பேசினாயே! அதை எல்லாரும் ரசித்தார்கள். எப்படி கைதட்டினார்கள்!’ என்று என் பேச்சிலிருந்த ஒரு சிறு நல்ல விஷயத்தைப் பாராட்டினார். பிறகு, மெள்ள, `உன் குரலே பெரிது. நீ மைக்கில் உரக்கப் பேசி இருக்கக்கூடாது!’ என்றார். ஒலிபெருக்கி எனக்கு அன்றுதான் முதல் அனுபவம்.

    வயதேற, ஏற, பிறர் என்ன சொல்வார்கள் என்று யாரும் கவலைப் படுவதில்லை. உடல் வலிமை குன்றிய அந்த பிராயத்தில் அவர்களுக்கு அன்பும் அரவணைப்பும்தான் முக்கியமாகப் படுகிறது. ஏனோ, இவைகளுக்காகத்தான் அவர்களது குழந்தைகளும் ஏங்குவார்கள் என்பது அப்போதும் புரிவதில்லை!

    கதை 4: திருமணமாகி சில மாதங்களே ஆகியிருந்த ஒருவர் தன் அந்தரங்கத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டார்: `என் பெற்றோரும், என் மனைவியின் பெற்றோரும் சீக்கிரமே குழந்தை பெற்றுக்கொள்ளச் சொல்லி எங்களை வற்புறுத்துகிறார்கள். அதனால் நானும், என் மனைவியும் தனித்திருக்கும் தருணங்களில் உற்சாகமோ, ஆர்வமோ, மகிழ்ச்சியோ எதுவுமில்லை. `இன்றாவது ஒரு குழந்தையை உற்பத்தி செய்ய முடியுமா?’ என்பதுபோல் யோசிப்பதில் அலுப்புதான் மிஞ்சுகிறது!’

    இந்த விஷயத்திலாவது தாம் பெற்ற பிள்ளைகளை அவர்கள் போக்குப்படி நடக்க விடுவோம் என்று ஏன் சிலருக்குத் தோன்றுவதில்லை?

    தொடருவோம்

    Share
  • மானசீகக் காதல்

    நிர்மலா ராகவன்

    பெரியசாமி தினசரியின் ஞாயிறு பதிப்பைப் பிரித்தார். கொட்டையெழுத்தில் காணப்பட்ட அந்தப் பெயர் அவரை அலைக்கழித்தது. யார் இந்த டி.எஸ்.விஜயலட்சுமி?

    நிச்சயம் ஒரு பெண் இவ்வளவு வெளிப்படையாக எழுதமாட்டாள்.

    ஒரு வேளை, அவளுடைய கணவன் எழுதி, பிரச்னை எதிலும் மாட்டிக்கொள்ள விரும்பாத கோழையாக இருந்ததால், மனைவியின் பெயரில் தனது எழுத்துப் படிவங்களை அனுப்பிவிடுகிறானோ?
    எழுத்துத் துறையில் ஒரு ஜாம்பவான் என்று தன்னைப்பற்றி ஒரு கணிப்பு உண்டு பெரியசாமிக்கு. தான் அறியாத ஓர் எழுத்தாளர் இவ்வளவு பிரபலமாக ஆவதா!

    வழக்கம்போல, `நானும் ஒரு எழுத்தாளன்!’ என்று சொல்லிக்கொள்ளும் நாலுபேரைப் பார்த்துப் பேசும்போது, `டி.எஸ்.வியைத் தெரியாதா! நமக்கு ரொம்ப வேண்டியவங்களாச்சே!’ என்று பெருமை பேசிக் கொள்ளவாவது அவளுடைய அறிமுகம் வேண்டாமா?

    சுறுசுறுப்பாக காரியத்தில் இறங்கினார் பெரியசாமி.

    எப்பவும்போல, கோப்பிக்கடையில் அவர்களுடையஅரட்டை ஆரம்பித்தது. அங்கிருந்த நால்வரில் பெரியசாமி மட்டும்தான் இன்னும் உத்தியோகத்தில் இருந்தார்.

    “இப்போ பத்திரிகையில அடிக்கடி எழுதறாங்களே, டி.எஸ்.விஜயலட்சுமின்னு! அவங்களைத் தெரியுமோ ஒங்களுக்கு?” தன்னை யாராவது கேட்டு அவமானப்படுவதற்குள் முந்திக்கொண்டார் அவர்.

    “அவங்களா! ஆம்பளைங்க சொல்லக் கூசறதைக்கூட பச்சை பச்சையா எழுதுவாங்களே!” நமட்டுச் சிரிப்புடன் ஒரு குரல் எழுந்தது.

    “நல்லாச் சொன்னீங்க! நாம்பளும்தான் இருபது, முப்பது வருஷமா எழுதிக்கிட்டு இருக்கோம். இப்படியா வித விதமா, ஆண்-பெண் உறவு, கவர்ச்சி, மனக்கிலேசம்னு பிட்டுப் பிட்டு வெச்சோம்?”

    தொடர்ந்து அந்த எழுத்தாளினியின் அங்க லட்சணங்கள் விமர்சனத்திற்கு உள்ளாயின. அவளுடைய முகம் தோள்வரையே போட்டோவில் காணப்பட்டாலும், அதை ஆதாரமாக வைத்துக்கொண்டே மிகுந்ததை அவரவர் மூளைக்கு எட்டியபடி கற்பனை செய்து வர்ணிக்க ஆரம்பித்தார்கள்.

    “போட்டோவைப் பாத்தா, முப்பது வயசுக்குள்ளேதான் இருக்கும்னு தோணுது!” என்றார் ஏகாம்பரம்.

    “நீங்க ஒண்ணு! எந்தப் பொண்ணுதான் `எனக்கு வயசாகிடுச்சு’ன்னு ஒத்துக்கும்? அட, நம்ப வீட்டிலேயே பாக்கலியா? நான் சொல்றேன், இது பத்து, பதினஞ்சு வருஷத்துக்கு முந்தி எடுத்ததா இருக்கும். பாக்க சுமாரா இருக்கேன்னு அனுப்பி இருக்காங்க!” அடித்துப் பேசினார் சாமி.

    டி.எஸ்.வி எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. அது வேறு நம்ப முடியாததாக இருந்தது அந்த நண்பர் குழாத்துக்கு.

    எண்ணி, இரண்டு கதைகள் எழுதிவிட்டு, அதன்பின் தமது கதைகளைத் தாங்கும் பேறு பெற்ற சிறுகதைத் தொகுப்பை எங்கு போனாலும் எடுத்துக்கொண்டு போய், எதிர்ப்படுபவர்களிடமெல்லாம் தமது பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருந்ந்தவர்களுக்கு, இப்படி `எழுத்தாள லட்சண’த்திற்கு முரணாக ஒருவர் அமைந்து இருந்தது நம்ப முடியாததாக இருந்தது. தனது வித்தியாசமான போக்காலேயே அந்த ஒருவர் தம்மைத் தட்டிக்கேட்பதுபோல் பயம் உண்டாயிற்று.

    `நம் பெயர் நாலுபேருக்குத் தெரியவேண்டும் என்றுதான் எழுதுகிறோம். இதில் அடக்கம் ஒரு கேடா!’ என்ற எரிச்சல் எழுந்தது.

    “நான் நினைக்கிறேன், இவங்களுக்கு ஒடம்பிலே ஏதோ குறை இருக்கணும்னு. திக்குவாயாக்கூட இருக்கலாம். அதான் சுயமதிப்பைக் கெடுத்துக்க வேணாம்னு ஒதுங்கியே இருக்காங்க!” சின்னக்கண்ணு தன் அனுமானத்தைத் தெரிவித்தார்.
    அதை ஏற்பதுபோல் பெரியசாமி தலையாட்டி ஆமோதித்தார். தன்கூடப் பள்ளியில் படித்த சாங்கின் நினைவு வந்தது அவருக்கு.

    பிறவியிலேயே ஒரு கால் இன்னொன்றைவிட சற்றுக் குட்டையாக இருந்ததால், விந்திதான் நடக்க முடியும் என்ற பரிதாபகரமான நிலை அவனுக்கு. தன்னையே ஏற்றுக்கொள்ள முடியாது, அதனால் கிளர்ந்த ஆத்திரத்தில், எந்த ஓட்டப் பந்தயமானாலும் கலந்துகொண்டு, அதில் முதலாவதாக ஜெயிப்பானே!

    இப்படி டி.எஸ்.வியிடமும் நிவர்த்தி செய்ய முடியாத ஏதோ குறைபாடு இருக்கிறது. அதையே எண்ணி, ஓயாது மறுகாமல் இருக்கவே இப்படி எழுதுவதை வடிகாலாக வைத்துக்கொண்டிருக்கிறாள் என்று உறுதியாகத் தோன்றிப்போயிற்று. சற்று பச்சாதாபம் ஏற்பட்டது.

    அவர்களது விவாதம் தொடர்ந்தது.

    இவள் ஏன் ஆண்-பெண் உறவைப்பற்றியே எழுதுகிறாள்? அட, ஏதோ உள்ளத்தில் புதைந்து கிடக்கும் கனவுகளை வெளிப்படுத்திக் கொள்கிறாளோ, என்னவோ! அப்படியே இருந்தாலும், எல்லார் கண்ணிலும் பட்டு, அவர்கள் வாயிலும் புகுந்து வரும்படி எப்படித்தான் பிரசுரத்திற்கு அனுப்புகிறாளோ!

    “இன்னிவரைக்கும், `ஆம்பளைங்க தப்பு செய்யறாங்க, அவங்களாலேயும் தப்பு செய்ய முடியும்னு ஒருத்தராவது துணிஞ்சு எழுதி இருப்பாங்களா? இது தலையரட்டை!” அவர்களுள் மூத்தவரான ஏகாம்பரம் பொருமினார்.

    “புருஷன்காரன் பாடுதான் பாவம்! எப்படித்தான் இதை சகிச்சுக்கிட்டுப் போறானோ!” என்று ஒருவர் தன் பங்குக்குச் சொல்ல, அந்த நண்பர்களின் கவனம் பூராவும் அந்த அப்பாவி ஆண்மேல் திரும்பியது.

    ஒரு வேளை, குறை அவனிடம்தானோ?

    தாம்பத்திய உறவில் தான் எதிர்பார்த்த சுகம் கிடைக்காதுதான் டி.எஸ்.வி அதை எழுத்தில் தேடுகிறாளோ?

    குறை தன்னிடம் இருக்க, மனைவியைக் கோபிப்பது என்ன நியாயம் என்றுதான் கணவன் அவளை அவள் இஷ்டத்துக்கு விட்டு வைத்திருக்கிறான் என்று முடிவு செய்தார்கள்.

    பெரியசாமி அந்த உரையாடலில் கலந்துகொள்ளாது மௌனமாக இருந்தார். அவளைப்பற்றி நண்பர்கள் தோற்றுவித்த இரக்கம் அவரை ஓயாமல் சிந்திக்க வைத்தது.

    `வேலையிலிருந்து அடுத்த வருடம் கட்டாய ஓய்வு பெறவேண்டுமே!’ என்று அவ்வப்போது தோன்றிய பயமும், குழப்பமும், போதாத குறைக்கு, `உடம்பும் முன்போல இல்லை. கீழே சற்று உட்கார்ந்து எழுந்திருந்தால் தலை சுற்றிப்போகிறது!’ என்று வேறு பல கவலைகளும் அவரை ஆட்டுவித்துக் கொண்டிருந்த நிலையில், ஓயாது தன்னைப்பற்றியே எண்ணிக் கொண்டிராமல், வேறு ஒருவரின் நினைப்பில் மூழ்கி இருப்பது சுகமாக இருந்தது.

    தன்னை இவ்வளவு தூரம் ஆட்டுவிக்கும் அந்த டி.எஸ்.வியின் துயரத்தில் தானும் பங்குகொண்டு, அதைக் குறைக்க முடியவில்லையே என்று துக்கம் பீறிட்டது.

    அந்த வருத்தம், “ராத்திரிக்கு ஒங்களுக்கு என்ன டிபன் செய்யணும்?” என்று கேட்டுக்கொண்டு வந்த நின்ற பார்வதியின்மேல் ஆத்திரமாக மாறியது.

    “நீயும்தான் முப்பது வருஷமா என்னோட குப்பை கொட்டறே! தினமும் என்ன கேள்வி இது! எதையோ பண்ணித்தொலையேன்!” என்று எரிந்து விழுந்தார்.

    சற்று விழித்துவிட்டு, அவள் உள்ளே போனாள்.

    பார்வதி தோசை வார்த்தால், `எப்பவும் தோசைதானா இந்த இழவு வீட்டில்? தாகத்தாலேயே ஆள் செத்துடணும்னு பாக்கறியா?’ என்பார்.

    சரிதான் என்று உப்புமா பண்ணுவாள், மறுநாள்.

    `இது என்ன உப்புமா, களிமண்ணிலே கையை விடறமாதிரி! இட்லி, தோசை எதையாவது செய்யறதுக்கென்ன? அரிசி, உளுந்தை ஊறப்போட்டு அரைக்க நேரம் இல்லியோ மகாராணிக்கு? ஒக்காந்து ஒக்காந்து என்னதான் கிழிக்கறே?’ என்று அதற்கும் வசவு விழும்.

    அவர் என்ன சொன்னாலும் வாயே திறக்கமாட்டாள் தர்மபத்தினி. பதிபக்தி என்றில்லை. பொதுவாகவே ஆண்களின் மனவக்கிரம் புரிந்துபோனதால், `நமக்குக் கொடுத்துவைத்தது இவ்வளவுதான்!’ என்ற விவேகம்.

    சமீப காலமாக கணவர் ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது அவள் அறிந்ததுதான். ஒரு வேளை, தான் அவருக்கு அலுத்துவிட்டோமோ?

    நான்கு பிள்ளைகள் பெற்று, உரிய காலத்தில் உடலைப் பழைய நிலைக்குக் கொண்டுவர எந்தவித முயற்சிகளும் செய்யாததில், பார்வதி ஒரு நிரந்தர கர்ப்பிணித் தோற்றம் அமைந்தவளாக இருந்தாள். ஓயாமல் வீட்டு வேலை செய்ததில், சற்று கூன்வேறு.

    பெரியசாமியும் அப்படியொன்றும் இளமை குன்றாது இருந்துவிடவில்லை. `எனக்கென்ன! வயசானவன்!’ என்று அடிக்கடி கூறிக்கொள்வார். அவ்வார்த்தைகளில் விரக்தி கிடையாது. எல்லாரும் மரியாதையாக, தன் சொற்படி நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புதான் வெளிப்படும்.

    மனைவியின் உயிரை வாங்கி, வித விதமாக அவளைச் சமைக்கவைத்துச் சாப்பிட்டதன் விளைவு பருத்த உடலில் தெரிந்தது. அதனால், வயதுக்கு மீறிய தள்ளாமைவேறு.

    இதையெல்லாம் நன்றாக உணர்ந்திருந்தாலும், பார்வதிக்கு இப்போது அச்சம் ஏற்பட்டது.

    வயதானால் பால்யம் திரும்புமாமே ஆண்களுக்கு? தன் போதாத காலம், யாராவது இளம்பெண்ணைப் பார்த்து மயங்கிவிட்டாரோ?

    பார்வதி அதிகம் குழம்ப வேண்டியிருக்கவில்லை.

    பெரியசாமியே ஒருநாள், சாப்பாட்டுக்குப் பிறகு ஆரம்பித்தார்: “இந்தக் கதையெல்லாம் எழுதறாங்களே, டி.எஸ்.விஜயலட்சுமின்னு..,” மேலே என்ன சொல்வது என்று புரியாமல் அவள் முகத்தையே பார்த்த்தார்.

    என்றும் இல்லாத வழக்கமாக, தன்னையும் ஒரு பொருட்டாகக் கணவர் மதித்துப் பேசிய உற்சாகத்தில், “அவங்களா! என்னமா எழுதறாங்க! ஆபாசம் இல்லாம, ஆனா, உணர்ச்சிபூர்வமா.. ஆம்பளையோ, பொம்பளையோ, அவங்க மனசிலே இருக்கிறதை என்னமோ தானே பாத்துட்டு வந்தமாதிரி..,” என்று பேசிக்கொண்டே போனாள்.

    ஆனால், `உன்னுடைய அபிப்ராயத்தை யார் கேட்டார்கள்?’ என்கிறமாதிரி பொறுமை குன்றிப்போய் அவர் மூக்கைச் சுளிக்கவும், உசிதம்போல் வாயை மூடிக்கொண்டு, அவர் பேசுவதைக் கேட்கத் தயாரானாள்.

    “என்னமோ தெரியல. எனக்கு அவங்கமேல ஒரு.. ஒரு..,” என்றவர் சட்டென நிறுத்தினார்.

    `காதல்’ என்று சொல்லப்போய், இந்த அறிவுகெட்டது எங்கேயாவது அழுது ஆர்ப்பாட்டம் செய்து, ஊரைக் கூட்டி நியாயம் கேட்கப் போய்விட்டால், தன் கௌரவம் என்ன ஆவது!

    “எனக்கும் அவங்க எழுத்துமேல ஒரே இது!” என்று அசடு வழிந்தார்.

    நிம்மதியையும் மீறி பார்வதிக்குச் சிரிப்பு வந்தது. என்னமோ, பதின்மூன்று வயதுப் பையன் தன்னைவிட மூன்று மடங்கு வயதான ஆசிரியையைப் பார்த்து அதீத மோகம் கொண்டு, கற்பனை உலகிலேயே சஞ்சரித்து இன்பம் காண்பதுபோல் அல்லவா இந்த `முக்கால்’ கிழவர் நடந்துகொள்கிறார்!

    காதல் வயப்பட்ட ஒருவர் தன் மனதில் இருப்பவரைப்பற்றிய எண்ணங்களை எவருடனாவது பகிர்ந்துகொண்டால்தான் அமைதி கிட்டும் என்ற மனித இயல்புக்கு ஏற்ப, டி.எஸ்.வியைப்பற்றி மனைவியிடமே ஓயாது பேசலானார் பெரியசாமி.
    இந்தவரைக்கும் நம்மிடம் பிரியமாக நடந்துகொள்கிறாரே என்று அவளும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
    இந்நிலையில், உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்காக பெரியசாமி வெளியூர் போகவேண்டி வந்தது.

    “அங்கதான் ஒங்க டி.எஸ்.வி இருக்காங்க இல்ல?” நினைவுபடுத்தினாள் பார்வதி. “பாத்துட்டு வாங்களேன்!”
    நீண்ட ரயில் பிரயாணம் செய்துகொண்டிருந்தபோது, ` ஒங்க டி.எஸ்.வி’ என்ற வார்த்தைகள் காதில் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருந்த்தில், அவருக்கு அலுப்பே தெரியவில்லை.

    “இவங்கதான் கல்யாணப் பொண்ணோட அக்கா!”
    கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தமாதிரி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார் பெரியசாமி. “நீ.. நீங்க.. டி.எஸ்.விஜயலட்சுமிதானே?”
    ஒரு சிறு முறுவலுடன் அவள் அதை ஆமோதித்தாள்.

    அவளைப் பார்த்தால் ஏதேதோ கேட்கவேண்டும் என்று யோசித்து வைத்திருந்ததெல்லாம் மறந்தே போயிற்று. அவளையே பார்த்தபடி நின்றார்.

    “நீ இங்கேயா இருக்கே, விஜி?” என்று கேட்டபடி வந்தான் ஓர் இளைஞன். பெரியசாமியின் கண்களில் இருந்த சொக்கிய பாவனையைக் கவனித்துவிட்டு, “ஓ! ஒனக்கு ஒரு புது விசிறி கிடைச்சிருக்காருன்னு சொல்லு!” என்றான் உற்சாகமாக.

    “அங்கிள்! இவர்தான் என் ஹஸ்பண்ட்!” அவள் குரலில் ஒலித்த பெருமையும், உரிமையும் பெரியசாமிக்குள் பொறாமையைத் தூண்டிவிட்டது.

    தன்னையும் அறியாமல், ஒரு கணம் அவனோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டார்.

    தொந்தியும், தொப்பையும், வழுக்கைத் தலையுமாக தான் எங்கே, பனியன் விளம்பரத்துக்குப் போஸ் கொடுப்பவன்மாதிரி அகன்ற மார்பும், புஜபலமும், அடர்ந்த முடியும் கொண்ட இவன் எங்கே!

    அவனுடைய உயரத்துடன் ஈடுகொடுக்க, சற்று நிமிர்ந்து நிற்க முயற்சித்தார். இடுப்பில் ஏதோ ஓர் எலும்பு இடக்குப் பண்ண, வலியில் முகம் சுளித்த்து.

    “நின்னுக்கிட்டே இருக்கீங்களே, அங்கிள்!” என்று பரிதாபப்பட்டவளாய், “டியர்! அங்கிளுக்கு ஒரு நாற்காலி கொண்டுவாங்களேன்!” என்று கணவனைப் பணித்தாள் டி.எஸ்.வி.

    “ஒன்னால நிக்க முடியலேன்னு வெளிப்படையா சொல்றது!” கொஞ்சலாக அவளைப் பார்த்துச் சிரித்தபடி, அந்த நிறைமாதக் கர்ப்பிணியின் உத்தரவை நிறைவேற்ற அவன் விரைந்தபோது, பெரியசாமிக்கு ஏதோ புரிந்தமாதிரி இருந்தது.
    மனைவியை விரட்டி, விரட்டி, அதனால் பலம் அடைந்துவிட்டதாக தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் ஆண் இல்லை இவன். விட்டுக்கொடுக்க வேண்டிய சமயத்தில் விட்டுக்கொடுத்து, தன் கௌரவத்தையும் இழக்காமல் இருப்பவன். அதனாலேயே மனைவியின் அன்புடன் தோழமையையும் பெற்றிருக்கிறான். அந்த சுதந்திரம்தான் அவளுடைய எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது.

    வீடு திரும்பிய கணவரிடம் எடுத்த எடுப்பிலேயே, “டி.எஸ்.வியைப் பாத்தீங்களா? என்று கரிசனத்துடன் விசாரித்தாள் பார்வதி.

    அது காதில் விழாதமாதிரி, “நாலு நாளா கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டு, வயிறே கெட்டுப்போச்சு. ஒன் கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சு! பூண்டு, மிளகு, சீரகம் எல்லாத்தையும் தட்டிப்போட்டு நீ ரசம் வைக்கிறமாதிரி யாரால முடியும்!” என்றார்.

    மனக்கண்முன் தோன்றிய `பனியன் அழக’னிடம், `ஒனக்குத்தான் பொண்டாட்டிகிட்டே அருமையா நடந்துக்கத் தெரியுமோ?’ என்று சவால் விட்டார் பெரியசாமி.

    Share
  • உன்னையறிந்தால் ………! (18)

    நிர்மலா ராகவன்

    பாராட்டும், கண்டனமும்

    உனையறிந்தால்1-111111

    கேள்வி: குழந்தைகள் தவறு செய்தால் திட்டவோ, அடிக்கவோ கூடாதா?

    விளக்கம்: எத்தனை வயதுக் குழந்தை, என்ன தவறு என்ற கேள்வி எழுகிறதே!

    எட்டு மாதமேயான குழந்தை எந்த சாமானையும் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளும். அடித்தால் அதற்கு என்ன புரியப் போகிறது? ஒரு விரலால் நாம் அதன் கையில் தட்டினாலே போதுமானது. அதற்கே ஏதோ உயிர் போகிறாற்போல் கதறும்.
    பண்டைக்கால வளர்ப்புமுறை ஒருவரின் முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுப்பதல்ல என்று உளவியல் கூறுகிறது. எதற்கெடுத்தாலும் பிறர்முன் திட்டுவதும், குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதும் ஒருவர் கூனிக் குறுகவோ, அல்லது எதிர்ப்பு மனப்பான்மையை வளர்க்கவோதான் செய்யுமே தவிர, அவர்கள் மேலும் சிறப்பாக எதையாவது செய்ய வழிவகுக்காது.

    உதாரணமாக, ஒரு பெண் சுறுசுறுப்பாக வீட்டு வேலை செய்தாலும்கூட, `இவளுக்கு ஒரு வேலையும் செய்யத் தெரியாது. எப்பவும் கண்ணாடிமுன்னால உட்கார்ந்து அழகு பார்த்துக் கொண்டிருப்பா!’ என்று சொல்வது, பெரியவர்களைப் பொறுத்தமட்டில் அவள் இன்னும் அதிகமாக வேலை செய்யத் தூண்டுவதாக இருக்கலாம். ஒரு வேளை, தம் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காகக்கூட இருக்கலாம்.

    அப்பெண்ணுக்கோ, `எவ்வளவு செய்தாலும் இவர்களுக்குத்தான் திருப்தி இல்லையே! எதற்காக வேலை செய்ய வேண்டும்!’ என்றுதான் தோன்றிப்போகும்.

    ஓயாமல் திட்டப்படும் குழந்தை பிறருடன் கலகலப்பாகப் பேசுவதற்கோ, அல்லது எந்தக் காரியம் செய்வதற்கோ ஒரேயடியாகத் தயங்கும். `ஏற்கெனவே எல்லாவற்றிற்கும் வசவுதான்! எதற்கு இன்னும் திட்டு வாங்க வேண்டும்?’ என்றுதானே எண்ணம் போகும்!

    அப்படி ஒரு குழந்தை எதுவும் செய்யத் தயங்குவதும் பெற்றோரின் கணிப்பில் பெரிய தவறாகிவிடும். `என் பிள்ளை எல்லாவற்றிற்கும் வெட்கப்படுவான்!’ என்று பார்ப்பவரிடமெல்லாம் கூறுவார்கள், அது சிலாகிக்க வேண்டிய குணம் என்பதுபோல்.

    `இப்படித்தான் இருக்க வேண்டுமோ?’ என்று எண்ணம் போக, ஒருவர் அப்படியே நடக்கத் தலைப்படுவர். தன்னம்பிக்கை குறைவதால்தான் இளைஞர்கள் பலவித சமூகக் கேடுகளுக்கும் ஆளாகின்றனர் என்பது தெரிந்த விஷயம்.
    பொதுவாக, தவறு செய்தால் திட்டுபவர்கள் ஒரு குழந்தை அல்லது சிறுவன் நல்லவிதமாக ஏதாவது செய்தால் புகழ்வது கிடையாது. புகழ்ந்தால், தன்னைவிட சிறப்பானவன் என்று கர்வம் கொண்டு, தன்னை மதிக்காமல் போய்விடுவானோ என்ற பயம்தான் காரணம். இதனாலேயே, சில பெற்றோர் புகழவேண்டிய தருணங்களில்கூட இகழ்வதைப்போலப் பேசுவார்கள்.

    கதை: ஆலிஸ் (சீனப் பெண்) காரணமில்லாமலே அம்மாவிடம் அடி வாங்குவாள். கையால் அல்ல, இரும்புத் தடியால். எல்லாம் கல்வியில் இன்னும் சிறக்க வேண்டும் என்றுதான்.

    (தான் எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கினாலும் திருப்தி அடையாது, தந்தை தண்டித்துக்கொண்டே இருந்ததால், தானே அவருடைய கையெழுத்தைப் போட்டு விடுவாராம்; பின் நன்கு படித்து, பெரிய உத்தியோகம் கிடைத்தபோது அவருடன் பேசுவதையே தவிர்த்துவிட்டதாகவும் ஒரு அன்பர் என்னிடம் கசப்புடன் தெரிவித்தர்).

    மீண்டும் ஆலிஸ் கதை. பதின்மூன்று வயதுவரை காரணமின்றி அடித்துவிட்டு, அதன்பின் தோழமையுடன் பழக ஆரம்பித்தாளாம் அவள் தாய். இப்போது மகள் அவள் எதிர்பார்த்தபடியே பள்ளியில் சிறந்திருப்பது அவளுக்குத் தன் வளர்ப்புமுறை சரிதான் என்ற எண்ணத்தைக் கொடுத்திருந்தது.

    தன்னைப்பற்றி நினைப்பதே தகாது என்று வளர்ந்திருப்பதால், ஆலிஸ் போன்ற பெண்கள் தனிமையில் மட்டும் சிறிது யோசிக்கிறார்கள். தமக்குள் பார்ப்பது — தன்னம்பிக்கை இல்லாமல், எதற்கும் பயப்படும் ஒரு பெண். அதற்கு நேர்மாறாக இருப்பதாக, அலட்டலாக, வெளியில் காட்டிக்கொள்வார்கள்.

    அடுத்த முறை ஆலிஸ் பெருமையுடன் தன் மதிப்பெண்களைக் காட்டியபோது, புகழாமல் வளர்த்ததால்தான் மகள் நல்ல விதமாக வளர்ந்திருக்கிறாள் என்ற பெருமை எழுந்தது தாய்க்கு. `நீயெல்லாம் வகுப்பில் முதல் மாணவியா! ரொம்பத்தான் கர்வப்பட்டுக் கொள்ளாதே!” என்று ஏசிவிட்டு, “உன் வகுப்பில் மற்றவர்களெல்லாம் எவ்வளவு மக்கு என்று இப்போதுதான் புரிகிறது!’ என்றாளாம்!

    தன் திறமையில் கர்வப்பட்டுக் கொள்வது தகாது என்று சிறு வயதில் தாய் சொல்ல, அம்மா சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி, இயற்கையாக எழுந்த பெருமையை அடக்கக் கற்கிறார்கள் சிறுவர்கள்.

    நான் சிலரைப் புகழ்ந்தால், அவர்களிடமிருந்து ஏதாவது ஆதாயம் பெறலாம் என்ற எண்ணத்துடன் இல்லை. உண்மையாகப் பாராட்டப்பட வேண்டியது என்று எனக்குத் தோன்றியதைச் சொல்வேன். அப்போது அவர்களது கைகள், முகம் எல்லாம் இறுகுவது ஏன் என்று யோசித்திருக்கிறேன். புகழ்ச்சியால் எழும் பெருமையை அடக்கும் முயற்சியோ?
    அப்படி இல்லையேல், நாம் புகழ்ந்ததை மறுப்பார்கள். ஒரு பெண்மணி ஏதோ விசேடத்திற்காகத் தேடி அலைந்து மிக உயர்ந்த பட்டுப்புடவை வாங்கினாள். அன்று பலரும் அவள் புடவையைப் புகழ, `ஏதோ பழசு! எடுத்துக் கட்டிக்கொண்டேன்!’ என்றாளே பார்க்கலாம்! அடக்கமாம்!

    புகழ்ச்சியை ஏற்பது தற்பெருமை அல்ல. கௌரவமாக ஏற்று, `நன்றி!’ என்று சொல்லிவிட்டுப் போனால் ஆயிற்று. அதற்கு ஏன் இவ்வளவு சுயக்கட்டுப்பாடு?

    சில ஆசிரியைகளும் இம்முறையைப் பின்பற்றுகிறார்கள். முதல் வகுப்புப் படிக்கும் ஒரு குழந்தையிடம், `உன் மூக்கு அழகாக இருக்கிறது. உன் கண்ணும் அழகாக இருக்கிறது. உன் கையெழுத்து மட்டும் ஏன் அழகாக இல்லை?’ என்று தினமும் கேட்டாள் ஓர் ஆசிரியை. ஆசிரியை என்ன சொல்ல வருகிறாள் என்பதே சிறுமிக்குப் புரியவில்லை. அன்புடன் வளர்க்கப்பட்டிருந்ததால், `டீச்சருக்குப் பைத்தியம்!’ என்று தன் தாயிடம் சொல்லிச் சிரித்தாள்.

    `கையெழுத்தைத் திருத்திக்கொள்!’ ஆரம்பப்பள்ளிச் சிறுவர்களின் நோட்டுப் புத்தகங்களிலும், விடைத்தாள்களிலும் காணப்படும் ஒரு வாசகம்.

    எப்படித் திருத்திக்கொள்வது என்பதை விளக்கினால்தானே பலன் கிட்டும்? `நடுக்கோட்டில் எழுதாது, கோட்டின் மேலேயே எழுது. எழுதியதை அடிக்கடி அடிக்காதே. சற்று யோசித்து, நிதானமாக எழுது’ — இப்படி ஆக்ககரமாக அறிவுரை கூறினாலாவது பலன் கிடைக்கும்.

    ஆசிரியர்கள் தம் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதிலேயே குறியாக இருந்தால், மாணவர்களும் மாறப்போவதில்லை, ஆசிரியர்களுக்கும் நிராசைதான், தம் உத்திகள் பலிக்கவில்லையே என்று.

    குழந்தைகள் தாங்கள் செய்வதன் விளைவுகளைப் புரிந்துகொள்ளாமல் செய்யும். அது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது. எதையும் நகைச்சுவையுடன் அணுகினால், அவர்கள் சிரிப்பார்கள். திரும்பச் செய்ய மாட்டார்கள்.

    குழந்தைகள் எப்படியெல்லாம் பெரியவர்களை மீறலாம் என்று ஆழம் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். சிறு பிழை என்றால், கவனிக்காமல் விட்டு விடலாம். தண்டித்தே ஆக வேண்டுமென்றால், செய்யும் பிழைக்கு ஏற்றார்போல் இருக்க வேண்டும். செய்த தவற்றையே மீண்டும் செய்யும்போது, கவனிக்காமல் விடுவதும் சரியல்ல. பிள்ளைகளுக்கான எல்லைகளை வகுத்துக்கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

    தொடருவோம்

    Share