Tag: கே. ரவி

  • காற்று வாங்கப் போனேன் – (41)

    கே. ரவி

    பாடல் பதிந்தும், பதியாத கதை சொல்கிறேன். ஆனால், அதற்குமுன், ஒரு செய்தி, அதைச் செய்தி என்று கூடச் சொல்ல முடியாது, ஒரு கருத்து அல்லது நோக்கு, அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    வரலாற்று நிகழ்ச்சிகளை விட, அவை நமக்கு உணர்த்தும் கருத்து அல்லது கதை முக்கியம் என்று பல முன்னணி வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ளார்கள். எனவே, என் கவிதையின் வரலாறாகவே அமைந்து விட்ட என் வாழ்க்கையின் நிகழ்ச்சிகளைக் காட்டிலும், அந்த நிகழ்ச்சிகளின் உந்து சக்தியாகவும், அவற்றை முந்து சக்தியாகவும் அமைந்த அக நெகிழ்ச்சிகள் மிக முக்கியம். அதைக் கருத்தில் கொண்டு, நான் சில எண்ணங்களை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    அலையலையாய் விரிந்த கூந்தல் மேகக்கூட்டம் போல் இருப்பதாகச் சொல்லும் உவமை புதியதில்லை. ஆனால், வானத்தைப் பார்த்ததும், அதன் சுருள்சுருளான மேகங்களுக்கிடையில் நிலாப்பிறையைக் கண்டதும், அப்போது மின்னல் வானத்திரையைப் பிளந்து கொண்டு பளிச்சிட்டதும், இவையெல்லாம் பிறைசூடிய பித்தனை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது வெறும் உவமையாகவோ, உருவகமாகவோ மட்டும் இல்லை. அது ஓர் அனுபவக் களம். ஆகாசத்தையே பிறவா யாக்கைப் பெரியோனாகப் பார்த்த பிரமிப்பில்தான், போன பகுதியில் படித்த “நிலவை அணிந்து கொண்டு” என்று தொடங்கும் கவிதையின் உயிர்வீச்சே இருக்கிறது. “விழிநிறைந்தது வானம்” என்ற சொற்றொடரே அதன் ஜீவ நாடி. நிலவும், மேகமும், மின்னலுமாக இரவில் தொடங்கி, பனிப்புகையின் நடுவே வெள்ளி முளைத்துச் சிவன் கையில் காயழலாய்க் கதிரவன் உதிக்கும் காலை வரை அந்தக் கவிதை நகர்ந்து அல்லது படர்ந்து செல்வதே அந்தக் கவிதை வெறும் அசையாப் பொருள் இல்லை, அதற்கு இயக்கம் உண்டு என்று அதன் உயிர்மூச்சை அடையாளம் காட்டுகிறது. “மெல்லப் படர்ந்தது வெள்ளி” என்ற வரியில், ‘மெல்ல’ என்ற சொல்லின் ஆதிக்கமே அதன் இயக்க நிலைக்குத் தக்க சான்று. அண்டமெல்லாம் ஜனிக்கும் மஹாசூன்யமே, ப்ரளயமாகி உலகைப் புசிக்கும் காலதேவனாகவும் அமைந்து, கடைசியில் சலனமற்ற சதாசிவமாகவும் நிலைத்து விடும் அனுபவம், ஆங்கிலத்தில் ‘மிஸ்டிக் எக்ஸ்பீரியன்ஸ்’ என்று சொல்லப்படும் ஒரு புதிரான அனுபவம். நாம் சிற்றறிவால் சட்டெனப் புரிந்து கொள்ள முடியாத பேருண்மையை, ஏன், பேரழகை, அல்லது பேரானந்தத்தை உள்ளுணர்வில் ஏற்படுத்தும் அனுபவம். இப்படிப்பட்ட அகநெகிழ்ச்சியே அந்தக் கவிதையின் அனுபவக் களம் அல்லது சூழல். அந்தக் கவிதையைக் கேட்கும் போது, அதுவும் இன்னிசையோடு எஸ்.பி.பி. போன்ற நல்ல குரலுடையவர் அதைப் பாடக் கேட்கும் போது, கேட்பவரையும் அந்த அனுபவக் களத்திற்குக் கடத்திச் செல்லும் ஆற்றல் அந்தச் சொற்களுக்கு இருந்தால், அதுவே மந்திரமாகி விடுகிறது. ஒரு கவிதையில் இந்தச் சொல் நன்றாக உள்ளது, அந்த உவமை அற்புதம், என்றெல்லாம் நயம் வியப்பது பேச்சாளர்களின் பணி. ஆனால், ஒரு கவிதை எந்த அனுபவக் களத்துக்குப் படிப்பவனை அல்லது கேட்பவனைக் கடத்திச் செல்கிறதோ, அந்தக் களத்தில் ஆழ்ந்து அதை அனுபவிப்பதோ ஒரு ரசிகனின் பணி. ஒரு கவிதை வாசகனை அனுபவக் கடத்தல் செய்வதற்கு நல்ல இசை எப்படி உதவுகிறதோ, பாடகர் எப்படி உதவுகிறாரோ, அப்படியே கவிதையின் நயம் வியக்கும் பேச்சாளர்களும் அதே விதத்தில் உதவக் கூடும். ஆனால், மிக முக்கியம், அல்லது இலக்கு என்ன தெரியுமா? களமும் அதில் மூழ்கித் திளைக்கும் ரசனையும் மட்டுமே.

    ஒரு கவிஞன் தன் கவிதையையே வியந்து, விரித்துரைக்கலாமா என்ற கேள்வியும், அப்படிச் செய்வது அதிகப்பிரசங்கித் தனம் இல்லையா என்ற கேலியும் எழக்கூடும். என் படைப்புகளை நானே ரசிக்கவில்லை என்றால், யார் ரசிப்பதற்கு நான் அதை வெளியிடுவது? ரசிக்கத் தக்கதுதான் என்று நான் ஒரு முடிவுக்கு வராமல், மற்றவர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்ள முன்வரலாமா? விருந்தினர்களுக்குப் படைக்கும் முன், உணவை நாம் சோதித்துச் சுவை பார்ப்பதில் தவறில்லையே. சபரி மூதாட்டி சொல்லிக் கொடுத்த பாடம் இல்லையா? என் கவிதை என்பது என் குழந்தை போன்றது. என் குழந்தையின் படைப்புக்கு நானே முழுப்பொறுப்பா? நான் அதன் படைப்புக்கு ஒரு கருவியானேன். ஆனால், அதன் கர்த்தாவோ, கடவுளாகிய இயற்கை அல்லது பிரபஞ்ச சக்தி இல்லையா? என் குழந்தையை நான் ரசித்துக் கொஞ்சுவது தவறா? மற்றவர்கள் அதை மெச்சிப் புகழும் போது என் மேனி சிலிர்ப்பது இயற்கைதானே? பாரதி பாடவில்லையா:

    உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருதடி

    மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி

    இந்தக் கவிதை பிறக்க என்னைக் கருவியாகத் தேர்ந்தெடுத்த இறைவனுக்கு நான் செலுத்தும் நன்றியில்லையா அது!

    “தன்னைப் புகழ்தல் தகும் புலவோர்க்கே” என்று ஓர் இலக்கண சூத்திரம் உண்டு. என் ஆசான் தண்டமிழ்க் கொண்டல் அதைத் தம் இல்லத்தின் சுவரில் பெரிதாக எழுதி மாட்டியிருப்பார். அதன் மெய்ப்பொருள் இப்பொழுதுதான் விளங்குகிறது. ஒரு புலவனாக நீயிருக்கும் பட்சத்தில், நீ உன்னைப் புகழ்ந்து கொள்ளலாம். ஏனென்றால், நீ எப்பொழுதும் உன் உள்ளத்தில் பொங்கிவரும் கவிதையையே சுவைத்துக் கொண்டிருப்பாய். அந்தக் கவிதை வெள்ளத்தை மற்றவர்களும் பருகத் தருவதற்கு உனக்கு அனுமதியுண்டு என்பதோடு, அப்படிப் பருகத் தருவது உன் கடமையும் ஆகும் என்பதை நினைவிற்கொள். அப்போது நீ உன்னைப் புகழ்வது என்பது உனக்குள் ஊற்றெடுக்கும் கவிதையை, அதைத் தரும் பிரபஞ்ச சக்தியை, இறைவனைப் புகழ்வதாகத்தான் பொருள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

    சரி, இப்பொழுது நான் சொன்னது ஏதோ என் கவிதையில் மட்டுமே கிட்டும் அனுபவம் என்று எண்ணிவிட வேண்டாம். போன பகுதியில் ரமணன் எழுதிய சிவாஷ்டகத்தையும் படித்துக் கேட்டோம் இல்லையா? அதில் வரும் ஒரு வரி, அமர வரி, அதுவே போதும். “புஜம் போன்ற மெளனத்தில் ஆரங்கள் கீதம்”. அடாடா, அதைப் பற்றி வியப்பதற்கு முன், அந்த வரியையே நாலைந்து முறை படித்துச் சொல்லி அனுபவிக்க வேண்டும். புஜம் அல்லது தோள், மலை போல் இருந்தது, மூங்கில் போல் இருந்தது என்றெல்லாம் உவமை சொல்வதுண்டு. புஜத்தையே வேறொன்றுக்கு உவமை சொல்ல முடியுமா? முடியலாம், அந்த வேறொன்று தோள் போல ஒரு பருப்பொருளாக அல்லது திண்பொருளாக, வடிவமுடையதாக இருந்தால். சரி, மெளனம் போன்ற வடிவற்ற ஒரு கருத்தீட்டுக்கு புஜத்தை எப்படி உவமை சொல்ல முடியும்? இது என்ன குழப்பம்? கொஞ்சம் உள்ளுக்குள் போய் உற்றுப் பாருங்கள். மெளனம் என்பதன் வடிவம் மெல்ல ஒரு திரைக்குப் பின்னால், பனித்திரைக்குப் பின்னால் வானம் போல் தெளிவின்றிப் புலப்படக் கூடும். அது மிகப் பெரிதாகத் தோற்றம் கொடுக்கும். அம்மாடியோவ், மெளனம் என்பது இவ்வளவு பெரிசா? வானம் எவ்வளவு விரிந்து, பரந்ததோ, அவ்வளவு விரிந்து, பரந்த பெரிய விஷயம் மெளனம்! சிவனுடைய தோள்களைப் போல! “தோள்கண்டார் தோளே கண்டார்” புரிகிறதா? “தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின் நாள்பலக் கழியுமாம்” என்ற கம்ப சூத்திரத்தின் மர்ம முடிச்சு அவிழ்கிறதா? துயரமோ, கவலையோ மனத்தை அழுத்தும் போது, மனம் சாய்ந்து கொள்ளத் தோள்கொடுப்பது அல்லது தோளாகவே அமைவது மெளனம்தானே! மெளனத் தோளில் மனம் சாய்ந்து கொண்டு ஆறுதல் காணும் அற்புதமான அகக்காட்சியை உள்ளுக்குள் தரிசிக்க முடிகிறதா?

    பாரதி எந்த ஞான ஆகாசத்தில் நின்று கொண்டு யாரும் பேசாப் பொருளைப் பேசத் துணிந்தானோ, அந்த ஆகாசத்தின் சமாச்சாரங்கள் இல்லையா இதெல்லாம்!

    ‘புஜம்போன்ற மெளனம்’ என்ற சொற்றொடர் ஏற்படுத்தும் மலைப்பிலிருந்து நாம் மீள, மெல்ல விசிறி விசிறிக் காற்று வரவழைக்கும் சொற்களே, “ஆரங்கள் கீதம்”. அது சாதாரண விசிறி இல்லை. சபரி மலைக்குச் செல்பவர்களுக்கு, அதுவும், பெரிய பாதையில் செல்பவர்களுக்குத் தெரியும். மிகவும் சிரமப்பட்டுக் கரிமலை ஏறி வருபவர்களுக்கு முன்னால் நின்று கொண்டு, ஏற்கனவே உச்சியை அடைந்தவர்கள், துண்டால் விசிறும் போது கிடைக்கும் ஆசுவாசம்; நிம்மதி; ஆனந்தம்! அதை அனுபவித்து உணர வேண்டும். அப்படியொரு காற்றை வீசும் விசிறியே அந்த ஆரங்களின் கீதம். மன்னிக்கவும், ஆரங்களின் கீதம் இல்லை, “ஆரங்கள் கீதம்”. ஆரங்களில் இருந்து, அவற்றின் அசைவுகளில் இருந்து உண்டாகும் கீதம் இல்லையாம். ஆரங்களே கீதமாம். மெளனம் என்ற தோளில் கீதம் கூட ஒலியெழுப்பக் கூடாது. வெறும் அசைவுதான். உஸ்….! கீதம், இசை கூட அங்கே நிசப்தம்தான்.

    விட்டு விடுங்கள், இதற்குமேல் தாங்காது. இதைவிட ஒரு போதை, இதைக் காட்டிலும் உடற்சிறையை உடைத்துக் கொண்டு உயிர் திமிறிக் கொண்டு வரும் ஒரு பாதை உண்டா? சொல்லுங்கள். நான் ஏன் கவிதைப் பித்துப் பிடித்துத் திரிகிறேன் என்று புரிகிறதா? தலையாட்டிப் பயனில்லை, என்னோடு பயணம் செய்ய, இல்லை, இல்லை, என்னோடு எனக்குள் ஊடுருவிச் செல்ல, அங்கே கண்டறியாதன காண, கேட்டறியாதன கேட்கத் துணிய வேண்டும். தயாரா?

    அது எப்படி ஒருவருக்குள் இன்னொருவர் செல்வது? இதெல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதோ? அட, ஒதுக்கி வையுங்கள் அறிவை. புத்தி சிகாமணி, ஓர் ஓரமாகக் கைகட்டிக் கொண்டு நில்.

    1970-களில் வந்த ஒரு கவிதை இப்பொழுது உள்ளத்தில் ஒலிக்கிறது:

    தென்றலே சற்று நில் – நீ

    சென்றிடும் பாதையை மாற்றிக் கொள்

    கனவிதழ் கூப்பிக் கவிதை மலராள்

    கடுந்தவம் செய்கின்றாள் – நீ

     கவனம் இழந்து மோதி விடாதே

    கண்ணீர் உகுத்திடுவாள்

    ஞானமே எச்சரிக்கை – உன்

    ஆணவப் பேச்சை நிறுத்திவை

    ஸ்வரங்களின் தேவி சுடர்ரதம் ஏறி

    ஊர்வலம் வருகின்றாள் – நீ

    அவசரப் பட்டுப் பரபரக் காதே – உன்

    சிறகை முறித்திடுவாள்

    மெளனமே இதழ்விரி – பனி

    மகுடங்கள் அசைய நீசிரி

    மானஸ தேவதை ஊர்வலம் வரும்வழி – பொன்

    மகரந்தங்க ளால்நீ மழைபொழி – அவை

    பொலபொல வென்று விழும் ஒலியே – அவள்

    புன்னகையாம் கோயில் மணி

    அப்படியானால் ஒருவருக்குள் ஒருவர் நுழைந்து பார்க்க முடியுமா? ஏன் முடியாது? நான் வேறு, நீ வேறு என்ற பிரிவினைத் தோற்றத்தைப் புலப்படுத்தும் உடற்கூடுகள் வெறும் குறுக்குச் சுவர்களே. பானைக்குள் இருக்கும் வெளியும், பானைக்கு வெளியில் உள்ள வெளியும் வேறு வேறா? ஒரே வெட்ட வெளியை, உள்ளென்றும், வெளியென்றும் பிரிக்கும் மண் ஓடுதானே பானை?

    1984-85 என்று நினைக்கிறேன். சபரி மலைக்கு எங்கள் குழுவினரோடு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ஒரு நிகழ்ச்சி நடந்ததாம். போன பகுதியில், என் கனவுப் பாடலைத் தொலைபேசியில் எனக்கு டாக்டர் ஞாபகப் படுத்திய செய்தியை வல்லமை இதழில் படித்து விட்டு, நண்பன் சு.ரவி எனக்கு அந்த நிகழ்ச்சியை நினைவூட்டினான். அதை இப்பொழுது சொல்கிறேன். அந்தப் பேருந்துப் பயணத்தின் ஒரு கட்டத்தில், சு.ரவியும் நானும் பாடிக் கொண்டே இருந்தோம். மற்றவர்கள் உறங்கிவிட்ட பிறகும் சிறிது நேரம் பாடி விட்டு நாங்கள் இருவரும் அப்படியே மெளனத்தில் ஆழ்ந்தோம். நான் த்யானத்தில் ஆழ்ந்து விட்டேன். சு.ரவியும் அப்படியே. என் த்யானத்தில் சாயிபாபா ஒளி வடிவமாகக் காட்சி தந்து என்னைப் பேரானந்தத்தில் மூழ்கச் செய்தார். சுமார் ஒருமணி நேரம் இந்த நிலை நீடித்தது. த்யானத்தில் இருந்து புறவுணர்வு நிலைக்கு நான் திரும்பியதும், சு.ரவியிடம், யாராவது காயத்ரி மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்களா என்று கேட்டேன். அவன் ஆச்சரியப் பட்டான், அவன் அந்த ஒரு மணி நேரமும் காயத்ரி மந்திரத்தை மனத்துக்குள்ளேயே ஜெபித்துக் கொண்டிருந்த செய்தி எனக்கு எப்படித் தெரிந்தது என்று. அப்போது அவனுடைய புருவ மத்தியில் சாயி பாபா அமர்ந்திருந்த தரிசனத்தையும் சொன்னான். நான் அந்த ஒரு மணி நேரம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று அவன் கேட்டதும் நானும் த்யானத்தில் இருந்ததாகவும், சாயி தரிசனமே பெற்றதாகவும் சொன்னேன். த்யானத்தில் எப்படி எனக்குள் அவனும், அவனுக்குள் நானும்…?

    எங்கள் உரையாடல் த்யான நிலை பற்றித் தொடர்ந்தது. நான் முதன் முதலாக டாக்டர் முன்னிலையில் த்யானம் செய்ய நேர்ந்த கதையைச் சொன்னேன். அப்போது பனிமலையுருகி வழிவது போல் என் தலை குளிர்ந்து போனதைச் சொன்னேன். உடனே சு.ரவி, செளந்தர்ய லஹரியிந் 20-ஆவது செய்யுளைச் சொல்லிக் காட்டினான்.

    கிரந்திமங்ஞேப்யஹ கிரண நிகுரும்பம்ருத ரஸம்aravi

    ஹ்ருதித்வா மாதத்தே ஹிமகரசிலா மூர்த்திம் இவ யஹ

    ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் சமயதி சகுந்ததிப இவ

    ஜ்வர ப்லுஷ்டான் த்ருஷ்ட்ய சுகயதி சுதாதாரஸிரய

    இந்தக் கவிதையின் பொருள் த்யானத்தில் பனிமலை உருகுவது போல உள்ளுக்குள் அமுதம் பொழியும், அப்போது மாயையின் சின்னங்களான பாம்புகள் பட்சிராஜனைக் கண்டது போல் ஓடி மறையும் என்பதாம். “ஹிம கர சிலா மூர்த்திம்” என்பது பனிப்பாறையில் செதுக்கப் பட்ட அல்லது அமர்நாத்தில் தெரிவது போல் பனியில் தானே தன்னை வடித்துக் கொண்ட மூர்த்தி அல்லது வடிவம் என்று பொருள்படுகிறது. “கிரண நிகுரும்பம்ருத ரஸம்” என்ற சொற்றொடர் அமுதப் பெருக்கையும், “சகுந்ததிப” என்பது பறவைகளின் ராஜனான கருடனையும் குறிக்கின்றன. கருடனே த்யான அனுபவத்துக்குக் காரணகர்த்தாவாக இருக்கிறான் என்று சு.ரவி சொன்னதுமே எனக்கு மெய் சிலிர்த்தது. காரணம், டாக்டரின் முன்னிலையில் நான் முதன்முறையாக த்யானம் செய்த போது எனக்குள் பனிமலை உருகி அமுதம் பொழிந்த அனுபவத்தை அவரிடம் சொன்னேன். அதை அவர் கண்டு கொள்ளாமல், அருகில் இருந்த இன்னொரு நபரிடம், “இன்று காஞ்சிபுரத்தில் கருட சேவை இல்லையோ?” என்று கேட்டார். அதன் உட்பொருளை அன்று நான் உணரவில்லை என்றாலும், பிறகு மேற்சொன்னவாறு பேருந்தில், செளந்தர்ய லஹரியின் 20-ஆவது ஸ்லோகத்தை சு.ரவி விளக்கியதும் புரிந்து கொண்டு சிலிர்த்தேன்.

    யாருக்குள் யார்? நான் எழுதிய கவிதையொன்றின் சில வரிகள் இப்போது நினைவுக்கு வருகின்றன:

    யார்மாயை யார்நிஜம் யார்சாயை யார்நிழல்

    என்மாய வட்டத்தில் நீமாயையா – அல்லது

    என்மாய வட்டமே உன்சாயையா

    கவிதையும், மந்திரமும் வேறு வேறு இல்லை. வேத மந்திரங்கள் சிலவற்றைத் தமிழில் பாரதி எழுதி வெளியிட்ட போது, அதற்கு, “வேத ரிஷிகளின் கவிதை” என்றுதான் பெயர்சூட்டினான்.

    என் கனவுக்குள் நுழைந்து அங்கே என்னைப் பாட வைத்து, நான் அதை மறந்து விட்ட போது மீட்டுத் தந்த குருவின் அருளை நினைந்து நெகிழ்கிறேன்.

    அந்தப் பாடலை வெகு நாட்கள் பதிவே செய்யவில்லை. அது வந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடந்து, என் நண்பர், இசையமைப்பாளர் ரெஹான் தான் இசையமைத்து ஒரு கேஸட், (அப்படியொரு பொருள் ஒரு காலத்தில் வழக்கில் இருந்தது, தம்பி!), அதாவது, இசைநாடா தயாரிக்கப் போவதாகவும், அதுவும் திருவேங்கடநாதன் பற்றிய பாடல்களாக இருக்க விரும்புவதாகவும், அதற்கு என் பாடல்களைத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். நானும் சில பாடல்கள் தந்தேன். அதில் அந்தக் கனவுப் பாடல், “ஆதி சேஷன் ஆகவா” என்ற பாடலும் ஒன்று. பாடல்களைப் பதிவு செய்து கொண்டு வந்து ரெஹான் போட்டுக் காட்டியதும், பாட்டின் சொற்களுக்கும், மெட்டுக்கும் ஒரே போராட்டமாக இருந்ததை அவனிடமே சொல்லி விட்டு, அதே மெட்டுகளுக்கு ஏற்ப வேறு பாடல்களும் அப்போதே எழுதித் தந்தேன். குரல் இழை மட்டும் புதிய வரிகளோடு மாற்றிப் பதிவு செய்யப்பட்டு, “திருவேங்கடநாதன்” என்ற பெயரில் அந்த இசைநாடா வெளியானது. “ஆதி சேஷன் ஆகவா” பாடல், “ஏழு மலை ஏறவா” என்று மாறிய கதை இதுதான்.

    அந்தப் பாடலை இங்கே படிக்கலாம், கேட்கலாம்:

    ஏழுமலை ஏறவா கேட்கலாம் இங்கே:

    ஏழு மலை ஏறவா கோவிந்தன் புகழ் கூறவாasr

    ஓ மாதவா ஶ்ரீ ராகவா

    என்றிங்கு நான்பாடவா

    பாட்டுப்பாடி பஜனை செய்து பக்தியோடு தேடவா

    பாரிஜாத மாக நெஞ்சைப் பாதங்களில் போடவா

    கூட்டமாகக் கூடிவந்து சன்னிதிக்குள் சேரவா

    கோடியிலே நானொருவன் குரெலெடுத்துப் பாடவா

    ஓ மாதவா ஶ்ரீ ராகவா

    என்றிங்கு நான்பாடவா

    நான் உருகிப் பாடுவதுன் காதில் விழவில்லையா

    நான் ஒருவன் தேடுவதுன் கண்ணில் படவில்லையா

    கானமழை முடிவிலுந்தன் ஞானவொளி தோன்றுமே

    காண வேண்டும் என்று நெஞ்சம் மீண்டும் மீண்டும் ஏங்குமே

    ஶ்ரீநிவாஸா கோவிந்தா வெங்கட ரமண கோவிந்தா

    ஶ்ரீதர கேஸவ கோவிந்தா ஶ்ரீஹரி நாதா கோவிந்தா

    ஓ மாதவா ஶ்ரீ ராகவா

    என்றிங்கு நான்பாடவா

    புரிந்ததா? பதிந்தும் பதியாத பாடல்! பள்ளியில் படித்த பாடப் புத்தகத்தின் பக்கங்களைப் போல் ……! குருநாதனால் தீட்சை பெற்ற பிறகும், மீண்டும் உலக விவகாரத்தில் உழன்று திரியும் பேய்மனம் போல் ……! ஏன், வேண்டுதல் வேண்டாமையிலாத நிலையடைந்த பிறகும், சில காலம் உடற்கூட்டில் இருந்தாக வேண்டிய ஜீவன் முக்தனைப்போல் …! அப்பப்பா, எத்தனைப் போல், போல், போல்! கவிதைக்கு அழகே உவமைதானே சாமீ! புரிந்ததா, இல்லை புரிந்தும் புரியாதது போல்.. !

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் (40)

    கே.ரவி

    ஆன்மிகப் பாதையில் நான் அடியெடுத்த வைத்த பிறகு ஒருநாள் மாலை மீண்டும் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்திருந்தேன். வெளிச்சம் மறைந்து, இருட்டு மெல்லத் தலைகாட்டத் தொடங்கியிருந்தது. வானத்தில் அலையலையாய் மேகச் சுருள்கள்; நடுவே பிறை நிலவு. திடீரென்று ஒரு மின்னல் மின்னி மூன்றாகக் கிழித்துச் சென்றது, வானத் திரையை! என் மனம் சற்றுப் பின்நோக்கிச் சென்றது. 1983-ஆம் ஆண்டு நான் குடும்பத்தோடு கஷ்மீர் சென்றிருந்த போது …..!

    மன்னிக்க வேண்டும், அது கஷ்மீர்தான். அதை நிறுவதற்காகத் தொலைக்காட்சியில் ஷோபனா போராட வேண்டியிருந்தது. தஞ்சாவூர் என்ற தமிழ்ச்சொல் சரியாக உச்சரிக்க முடியாதவர்கள் அதைத் ‘டேஞ்சூர்’ என்று மாற்றியதை எண்ணி நான் வருந்தியது போலவே, கஷ்மீர் என்ற பெயரைக் ‘கேஷ்மீர்’ என்று சொல்லக் கேட்டும் வருந்தினேன். சரி, கதைக்கு வருவோம்.

    aravi

    நாங்கள் கஷ்மீர் சென்று ஒரு படகு வீட்டிலேயே நாலைந்து நாட்கள் தங்கியதையும், 7 வயதும், 3 வயதும் ஆகியிருந்த என் மகள் மதுமதியும், ஐஸ்வர்யாவும் அங்கே ரசம் சாதம் வேண்டுமென்று கேட்டதும், அந்தப் படகு வீட்டை நடத்தி வந்த இஸ்லாமியர் வீட்டுச் சமையலறைக்குள் சென்று, என் வளர்ப்பு அன்னை அலங்காரவல்லி என்ற அலாப்பாட்டி, பர்தா அணிந்த மகளிர் புடைசூழத் தானே ரசமும், சாதமும் பண்ணி எடுத்து வந்து என் பெண்களுக்கு ஊட்டி விட்ட கதையையும் நான் இப்பொழுது நீட்டிச் சொல்லப் போவதில்லை. அதேபோல், கஷ்மீர் சென்றதும் அந்த மாநில மக்கள் எங்களை இந்தியர்களா என்று கேட்ட வருத்தத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை. ஆனால், கஷ்மீர் பள்ளத்தாக்கிற்குள் எங்கள் பேருந்து நுழைந்த போது, பாதித் தூக்கத்தில் இருந்த என்னைத் தட்டியெழுப்பி ஷோபனா காட்டிய காட்சியை மட்டும் இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும். நெடிதுயர்ந்த பனிமலை, உடலெங்கும் வெண்ணீறு அணிந்து கொண்டு சிவபெருமானே தவக்கோலத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறாரோ என்பது போல் காட்சி தந்த மலைப்பு நீங்க வெகுநேரம் ஆயிற்று. வியப்பதா, கைகுவித்து வணங்குவதா என்ற குழப்பம்! ஆனால் அப்போது நான் இன்னும் மேலே சொன்னவாறு ஆன்மிகப் பாதைக்கு வரவில்லை. பிரமிப்பூட்டிய அந்தக் காட்சி என் மனத்தைக் கொஞ்ச நேரம் சலனமற்றதாகச் செய்ததனால், கவிதை எதுவும் வரவில்லை. ‘புதிய வானம் புதிய பூமி’ என்று பாடியாடத் தோன்றவில்லை.

    aravi1

    முதலில் சொன்னேனே, நான் ஆன்மிகப் பாதையில் அடியெடுத்து வைத்த பிறகு மொட்டை மாடியில் சுருள் மேகங்கள், அவற்றுக்கிடையே நிலாப்பிறை, மின்னல் வெட்டு, மூன்றாய்க் கிழிந்த வானத்திரை என்றெல்லாம்! அந்தக் காட்சியிலிருந்து நான் மீண்டும் கஷ்மீருக்கு மானசீகமாகச் சென்றுவிட்டேன். கஷ்மீரில் பேருந்து நுழைந்த போது ஷோபனா என்னை எழுப்பிக் காணச் செய்த காட்சியை, மலைத்தொடரே சிவனோ என்று மலைக்க வைத்த அனுபவத்தை மீண்டும் நினைத்துக் கொண்டேன். அப்போது நெஞ்சின் ஆழத்தில் ஒரு கவிதை உயிர்த்துக் கொண்டு புரளும் சப்தம் கேட்டது. அதற்குள், யாரோ வந்து என் த்யானநிலையைக் கலைத்ததால், நான் வாய்ப்பேச்சில் ஈடுபட வேண்டியதாயிற்று. பிறகு உறங்கி விட்டேன். மறுநாள் காலையில் கவிதையுடன்தான் கண்விழித்தேன். மாலையும், இரவும், காலையும் கலந்த காட்சியாய் அதில், ஆகாசமாகவே விரிந்தபடி, அதோ அந்தப் பரமசிவம்…….!

    கவிதையைப் படிப்பதோடு, என் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அந்தக் கவிதையைப் பாடியுள்ளதையும் கேட்கலாமே!

    பாடலைக் கேட்டு மகிழ இங்கே சொடுக்கலாமே

    நிலவை அணிந்து கொண்டு – சடைlord shiva

    புரளப் புரளவிழி நிறைந்தது வானம்

    மின்னல் த்ரிசூலம் – எட்டுத்

    திசையும் அதிரநகை குலுங்கிய தேகம்

    புலரும் போது சாம்பல் – பனிப்

    புகையப் புகைய மெல்லப் படர்ந்தது வெள்ளி

    காயழல் ஏந்தும் கைகள் – ஒளிக்

    கதிர்கள் விரியுமொரு கனக விதானம்

    ஆகாசம் சிவம் – உயிர்

    ஆதாரம் சிவம்

    தேஜோ மயம் சிவம்

    இருள் ஒளி எனும் பகை அறும் நிழல் சிவம்

    புயல் வடிவம் பூத கணங்கள்

    கோள்களாய் விண் மீன்களாய்

    சுழல் நடனம்

    அண்டமெல்லாம் ஜனிக்கும் மஹாசூன்யம்

    ஆனந்தமயம் மஹாதேவம்

    ஆனந்தமயம் மஹாதேவம்

    ஆகாசம் சிவம் – உயிர்

    ஆதாரம் சிவம்

    தேஜோ மயம் சிவம்

    இருள் ஒளி எனும் பகை அறும் நிழல் சிவம்

    ப்ரணவ ஸ்வரூபம் – கங்கை

    ப்ரவாகமாய் அருள்மழை பொழியும் ஜடாதரம்

    ப்ரளையமாகி உலகைப் புசிக்கும் காலதேவம்

    ஆனந்தமயம் மஹாதேவம்

    ஆனந்தமயம் மஹாதேவம்

    மங்கலம் சிவம் – சுப

    மந்திரம் சிவம்

    சங்கல்பம் சிவம்

    சலனமில் லாதது சதாசிவம்

    அந்தப் பாடலின் அனுபவக் களத்தை நினைத்தால், இன்னும் மெய்சிலிர்க்கிறது! இப்படிப்பட்ட சிலிர்ப்புகளும், சிறகடிப்புகளும் இல்லாத வரண்ட பாலைவனம் போன்ற தர்க்கப் பாதையில், சிற்றறிவுப் பட்டறையில் எத்தனைக் காலம் வீணடித்து விட்டேன்!

    ஒருநாள் ரமணன் என் வீட்டில் ஏதோ ஒரு கவிதை உதிக்கப் போகிறது என்று கட்டியம் கூறும் வெறித்த பார்வையோடு மெளனமாக அமர்ந்திருந்தான். திடீரென்று பாடினான். அப்போது, எஸ்.பி.பி. பாடி மிகவும் பிரபலமாகியிருந்த ஆதிசங்கரரின் சிவாஷ்டகம் மெட்டிலேயே ரமணனின் தமிழ்ப்பாட்டு வந்தது.

    images (3)

    இசைக்கவி ரமணன் பாட அதைக் கேட்கலாமே:

    மனம் கொன்ற பாவம் தனைக் கண்ட கோலம்

    மலர் மாலை யாகிப் பதம் சூடும் காலம்

    விசித்ரம் வினோதம் விளங்காத போதம்

    சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

    அசைவற்ற கண்கள் அகண்ட ப்ரபஞ்சம்

    அமைதித் தடாகம் அலைகள் சுநாதம்

    சினத்தோடிருக்கும் தனித்தேன் தரங்கம்

    சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

    துரும்பாகி நெஞ்சில் துளிர்க்கின்ற கண்ணீர்

    அரும்பாத முன்வந் தணைக்கின்ற தெய்வம்

    கரங்கள் விசாலம் வரங்கள் சுபாவம்

    காருண்யமே ஈசன் காட்டும் ப்ரபாவம்

    சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

    அவன்தந்த வார்த்தை அவன்வைத்த போதை

    அவன்செய்த மாயை அகந்தைப் பதாகை

    சிவன்சொந்தம் என்கின்ற போதே வசந்தம்

    சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

    அலுக்காது நாமம் அடங்காது தாகம்

    கணம்தோறும் நெஞ்சத்தில் காபாலி நடனம்

    நடுங்கித் துகள்போல் நொறுங்கட்டும் காலம்

    பயங்கள் விதிப்பேய்கள் யாவும் நிர்மூலம்

    சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

    புயல்வீசும் பாதம் நிழல்தேடும் வேதம்

    புஜம்போன்ற மெளனத்தில் ஆரங்கள் கீதம்

    கணங்கள் யுகங்கள் மயங்கும் ஸ்வரங்கள்

    சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

    சிரம்தாழ்த்தி எங்கள் சிவன்வெற்றி சொல்ல

    கரம்பற்றி மெல்லக் கரைசேர்க்கும் செல்வன்

    கபாலன் தயாளன் கனல்மின்னும் சூலன்

    அருள்தேடும் கைக்குள் அமர்கின்ற பாலன்

    சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

    உயிர்நின்ற போதும் உணர்வாக மோதும்

    அருள்வீசும் தீபம் அகண்ட ப்ரகாசம்

    பதம்கண்ட நெஞ்சில் கணம்தோறும் தில்லை

    சிவன் சங்கரன் தங்கும் ஈசானம் ஈதே

    அவன் பாடி முடித்ததும், உடுக்கைச் சத்தம் கேட்டது போல் ஓர் ஓசை எழுந்தது. சிவபெருமானே வந்து விட்டாரோ? ரமணனே திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அப்புறம்தான் புரிந்தது, என் வீட்டில் வளர்ந்து கொண்டிருந்த ‘ரோமுலஸ்’ என்ற நாய் தன் வாலை இருபுறமும் சுழற்றிச் சுழற்றி உடுக்கடித்துக் கொண்டது. என்ன புரிந்தது? அந்த வேளையில் உடுக்கடிக்கும் சத்தம் கேட்டதற்கு என்ன பிரபஞ்ச காரணம் என்று புரிந்து கொண்டோமா? அறிவு திகைக்கும் தருணத்தில், சிந்தனை ஸ்தம்பித்துவிடும் கணத்தில் என்ன புரியும், என்ன புரியாது?

    இப்படியாகக் கவிதை ஜனித்த கணங்களில், மெய்மறந்த நிலையில், ரிஷிகள் போல், பூத கணங்கள் போல், இந்திராதி தேவர்கள் போல், அட, எத்தனை அனுபவச் சுழல்களில் நாங்கள் சிக்கித் திக்குமுக்காடி எக்களித்திருக்கிறோம்! அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது என்று திருவிளையாடலில் சிவனாக வந்து சிவாஜி பேசிய வசனத்தைத்தான் பேச வேண்டும். என்னத்தைப் புரிந்து கொண்டோம் போங்கள்!

    கவிதையின் ஜனன ரகசியத்தைக் கொஞ்சம் புரிந்து கொண்டு விட்டேனோ என்று மலைக்க வைத்த இன்னொரு சம்பவம் நடந்தது.

    1986-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். தூக்கத்தில் நான் பாடுவதாக ஒரு கனவு. கனவு என்று சொல்லக் கூடக் கூச்சமாக இருக்கிறது. எது நிஜம், எது கனவு என்று சொல்ல முடியுமா? வ.வே.சு.வின் ஒரு பல்லவி நினைவுக்கு வருகிறது:

    கனவுக்குள் நானொரு கனவினில் ஆழ்ந்திருந்தேன்

    கனவு மறைந்திடக் காட்சிகள் மாறியும்

    கனவு தொடர்கிறது – வேறொரு

    நனவாய்ப் படர்கிறது

    1970-களிலேயே நானும் ஒரு பாடல் எழுதியிருந்தேன், ஆபோகி ராகத்தில்:

    உனக்கொரு சிலைநான் செய்வதற்குள் – நீ

    உருவம் மாறி விட்டாய்

    கணப்பொழு தெந்தன் கலைப்பொரு ளாகிக்

    கனவாய் ஓடி விட்டாய்

    தூக்கத்திலே ஒரு பாடல் எழுதி

    துயில்கலைந்ததும் அதை மறந்து விட்டேன் – பனித்

    துளிகளிலே ஒரு மாலை தொடுத்துச்

    சூரியன் வந்ததும் தோற்று விட்டேன்

    நீரில் வரைந்த கோலத்தைப் போலென்

    நிழலின் வடிவம் கலங்குவதை

    யாரிடம் சொல்வேன் எப்படித் தடுப்பேன்

    இதுதானோ மனச் சித்ரவதை

    மீண்டும் 1986 நிகழ்ச்சிக்கு வருவோம். தூக்கத்தில், சரி, கனவில், நான் பாடுகிறேன். தூக்கம் கலைந்து எழுந்ததும் அந்தப் பாடல் மறந்துவிட்டது. ஷோபனாவிடம் கனவு பற்றிச் சொல்லிவிட்டுப் பாடல் மறந்து போனதையும் சொல்லி அங்கலாய்க்கிறேன். சற்று நேரத்துக்கெல்லாம் தொலைபேசி மணியடிக்கிறது. அதை எடுக்கிறேன். எடுக்கும் போதே, நான் கனவில் பாடிய பாடல் முழுதும் அப்படியே நினவுவர, அதை மனத்துக்குள் பாடிக் கொண்டே தொலைபேசியை, அப்போதெல்லாம் செல்பேசி கிடையாது ஓய், காதில் எடுத்து வைத்துக் கொண்டு, ஆனால் எதுவும் பேசாமல் ஏறக்குறைய ஒரு நிமிடம் இருந்து விட்டேன். அடுத்த முனையிலிருந்த நபரும் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தது வியப்பாக இருந்தது. அந்த மெளனத்தை எனக்கு நன்கு தெரிந்த ஒரு சிரிப்பொலி கலைத்தது. தொலைபேசியின் எதிர்முனையில் டாக்டர்தான் சிரித்தார். சிரித்துவிட்டுக் கேட்டார், “என்னப்பா பாட்டுப் பாடி முடித்தாகி விட்டதா?” நான் வாயடைத்துப் போய் விட்டேன். யார் கனவில் யார் நுழைந்து ‘எப்படிப் பாடினரோ!’

    krishna

    ஆதி சேஷன் ஆகவா – ஓர்

    ஆலிலை என்றாகவா

    மாதவா ஶ்ரீ ராகவா – என்

    தாகம் தீர்க்க வா

    பார்த்தசாரதி உனக்குப் பாஞ்சசன்ய ம் ஆகவா

    கீதைசொன்ன பாதையோரம் வேணுகானம் ஆகவா

    அரிதுயில் கலைப்பதற்குக் கோதையாகிப் பாடவா – நீ

    ஆலிங்கனம் செய்யும் ராதையாக மாறவா

    மாதவா ஶ்ரீ ராகவா – என்

    தாகம் தீர்க்க வா – ஓ

    மாதவா ஶ்ரீ ராகவா – என்

    தாகம் தீர்க்க வா

    முதலைவாய் விழுந்த நெஞ்சின் கதறல் கேட்க வில்லையா – என்

    இதயத் தூணை இரணியன் உதைப்ப தறிய வில்லையா

    சார்ங்கமென்று சாற்றுகின்ற சத்தியத்தின் வில்லையா

    சார்வதிந்தச் சஞ்சலங்கள் தர்மவீரம் இல்லையா

    சங்குச் சக்ரம் ஏந்தி வா – என்

    சங்க டங்கள் நீங்க வா

    தர்ம வீரம் ஆனவா

    சர்வ லோக நாயகா

    கனவில் உதித்துக் கண்விழித்ததும் மனத்துக்கு வெகுதொலைவில் சென்று மறைந்த பாடல், தொலைபேசியில் டாக்டர் அழைத்ததும், மேலெழும்பி மலர்ந்த கதையைச் சொல்லி விட்டேன். அதைக் கனவில் நான் பாடிய மெட்டு மட்டும் நினவு வரவில்லை. பிறகு, அமீர்கல்யாண் ராகத்தில் பல்லவி தொடங்க, ராகமாலிகையாக இசையமைத்து ஷோபனா அதைப் பாடிக் காட்டினாள்.

    மறந்துபோய், மனத்தில் மீண்டும் பதிவான இந்தப் பாடல், ஒலிவடிவில் பதிவாகவே இல்லை. பதிவு ஆனது, ஆனால் ஆகவில்லை. ‘அட, நான் இந்த விளையாட்டுக்கு வரலப்பா’ என்கிறீர்களா? எல்லாம் விளையாட்டுத்தானே. அவனே அலகிலா விளையாட்டுடையான்; தீராத விளையாட்டுப் பிள்ளைதானே!

    மலர்ந்தும் மலராத பாதிமலர் போலப் பதிந்தும் பதியாத பாடலின் கதையை அடுத்த முறை சொல்கிறேன்.

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – 39

    கே.ரவி

    போன பகுதியில் சொன்னேனே, ஷோபனாவின் தம்பி தன் வாழ்வைத் தானே முடித்துக் கொண்டான் என்று, அந்தச் சம்பவம் நடப்பதற்கு முதல்நாள், 1981-ஆம் ஆண்டு ஜூன் மாதம், என் மனத்தில் ஒரு கவிதை உதித்தது. அந்தக் கவிதைக்கும் அந்தத் துயர நிகழ்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், உதித்த போதே, ஏனோ, அந்தக் கவிதை எனக்கு ஒரு நடுக்கம் தந்தது. அதைத் தாளில் எழுதவில்லை. மறுநாள், மாலை அதை ஒரு தாளில் எழுதத் தொடங்கினேன். எழுதி முடிக்கும் போதே வாசலில் ஓர் அழுகுரல் கேட்டு ஓடினேன். ஷோபனாவின் சித்தி மகள் ப்ரீத்தி அழுது கொண்டே தன்னுடைய அண்ணன் தன்வாழ்வைத் தானே முடித்துக் கொண்டுவிட்டான் என்ற துயரச் செய்தியைச் சொல்லி என் தோள் மேல் சாய்ந்து கொண்டு கதறினாள். இதை இங்கே குறிப்பிடக் காரணம் உண்டு. அன்று நான் எழுதி வைத்த கவிதையைப் பிறகு வெகு நாட்கள் பிரித்துப் படித்துப் பார்க்கத் துணிவின்றி வைத்து விட்டேன். போன பகுதியில் சொன்னதுபோல், 1983-ஆம் ஆண்டு சாயி பாபா கோயில்; சபரிமலைக்கு வர ஒப்புதல்; டாக்டர் நித்யானந்தம் காட்டிய ஆன்மிகப் பாதை; இப்படி ஒரே சமயத்தில் என் மனத்தில் ஒரு மாற்றம் உருவான பிறகே, ஒருநாள் அந்தக் கவிதையை எடுத்துத் துணிந்து படித்துப் பார்த்தேன். வியப்பாக இருந்தது. ஆன்மிக நாட்டம் என்னுடைய மனத்தின் மேல்தளத்தில முளைவிடும் முன்பே, ஏதோ ஓர் இனம் தெரியாத, உடல் கடந்த உன்மத்தம், ஓர் உள்ளுளைச்சல், ஓர் ஆழ்மன வேதனை என்னை உலுக்கி இருக்கிறது என்பதை அந்தப் பாடல் எனக்கு உணர்த்தியது. தெய்வ நம்பிக்கை இல்லை என்று நான் கற்பித்துக் கொண்டது கூடச் சரியில்லையோ?

    சரி, அந்தக் கவிதையை இப்போது சொல்கிறேனே, நீங்கள் படிக்கவும்,

    கேட்கவும் (சொடுக்கினால் கேட்கலாம்):

    உள்ளே

    இருந்து கொண்டே சிரிப்ப தென்றால்

    இலக்கியம் என்பார் – என்னைப்

    பிளந்து கொண்டு வெளியே வந்தால்

    பிச்சி என்பாரோ

    சொற்களுக்குள் அடைபடாதே சூலமேந்திப் புறப்படு

     

    அந்தி வானச் செந்தழல்போல் விழிசிவந்திடு

    அர்த்த ஜாமக் காரிருள்போல் குழல்விரித்திடு

    நீலம்பாய்ந்த அலைகடல்போல் வடிவெடுத்திடு

    பிச்சியென்றும் பேதையென்றும் பேரெடுத்திடு

    சொற்களுக்குள் அடைபடாதே சூலமேந்திப் புறப்படு

     

    நிச்சயத்தை நிர்ணயத்தை நீயுடைத்திடு

    அச்சமென்ற திரைவிலக்கி ஆர்ப்பரித்திடு

    உச்சிவெய்யில் துச்சமென்று புன்னகைத்திடு

    பிச்சியென்றும் பேதையென்றும் பேரெடுத்திடு

    சொற்களுக்குள் அடைபடாதே சூலமேந்திப் புறப்படு

     

    மெளனமென்ற கானகத்தில் மூண்டுவிட்ட தீ

    மூங்கிலோடு மோதவந்த காற்றுமோகி னீ

    மொழிச்சதங்கை சிதறிப்போக நடனமாடு நீ

    விழியெதற்கு மொழியெதற்குன் உலகமே தனி

    உன்னைப்

    ப்ரதிபலிக்கக் காத்திருக்கும் சிறிய பனித்துளி

    நானுன்னைப்

    ப்ரதிபலிக்கக் காத்திருக்கும் சிறிய பனித்துளி

    இப்பொழுதும் ஏனோ இந்தக் கவிதையைச் சொல்லும் போதும், எண்ணும் போதும் உள்ளுக்குள் ஒரு நடுக்கம் வருகிறது. எல்லாவற்றுக்கும் நமக்குக் காரண, காரியம் தெரிந்து விடுகிறதா என்ன?

    as2அப்படியானால், ஆன்மிகத் தாகம் என் நெஞ்சின் ஆழத்தில் எப்பொழுதுமே பொதிந்திருந்ததோ? அந்தக் கவிதை வருவதற்கு வெகு நாட்களுக்கு முன்பே வந்த இன்னொரு கவிதை நினைவில் நிழலாடுகிறது. ஆம், ஆன்மிக நாட்டமே எப்பொழுதும் என் ஆழ்மனத்தின் அடிநாதமாக இருந்திருக்கிறது என்பதை அந்தப் பழைய கவிதை உறுதி செய்கிறது.

    அந்தக் கவிதை உதித்தது 1978-ஆம் ஆண்டு மார்ச் மாதம். தொலைக்காட்சியில், நந்தனாராகத் தண்டபாணி தேசிகர் தோன்றி, “ஐய்யே மெத்தக் கடினம்” என்று பாடியதைப் பார்த்துக் கேட்டு ரசித்த அன்று இரவே அக்கவிதை உதித்தது. அதை இப்பொழுது நீங்கள் படிக்கத் தருகிறேன்.

    (சொடுக்கினால் கேட்கலாம்):

    நந்தன் வந்துவிட்டேன் – இன்னும்

    நந்தி விலகவில்லை

    அனுபவத்தின் முன்னே – எந்தன்

    அறிவு பெருந்தொல்லை

     

    உலக வீதியில் ஓடியாடியே

    ஓய்ந்து போனதென் மனம் – இன்று

    உண்மை வீதியில் உனது வாசலில்

    உருகி நிற்பதென் தவம்

    தெய்வம் என்றுநான் தேடவில்லை – வெறும்

    தீபம் ஒன்றுதான் தேடி நிற்கிறேன்

    நந்தன் வந்துவிட்டேன் – இன்னும்

    நந்தி விலகவில்லை

     

    கண்கள் கூப்பிக் காத்து நிற்கிறேன்

    கவிதையாகவே அழுகிறேன்

    எண்ணம் என்பதே ஏக்கமாக – நான்

    இருப்ப தென்பதே மறந்து போக

    நந்தன் வந்துவிட்டேன் – இன்னும்

    நந்தி விலகவில்லை

     

    உன்

    நகலை மட்டும் ஏந்திக் கொண்டு

    மனிதர் கூட்டம் போவதுண்டு

    நிழலும் தெரியவில்லை – என்

    நினைவு தெளியவில்லை

    தேகம் என்பதே தேய்ந்து போக – ஒரு

    தாகம் என்பதே வடிவம் ஆக

    நந்தன் வந்துவிட்டேன் – இன்னும்

    நந்தி விலகவில்லை

     

    கண்கள் பார்ப்பதாம் – செவிப்

    பறையர் கேட்பதாம்

    ஜாதி பேதங்கள் செய்கிறார் – இவை

    யாவும் ஒன்றிடும் ஞான மன்றில் நீ

    ஒளிந்திருப்பதை அறிந்துதான்

    ஐந்து வாசல் தாண்டி – நானும்

    ஆர்வத்தோடு வந்தேன் -உன்

    ஞான வாசல் முன்னே – த்வஜ

    ஸ்தம்ப மாகிவிட்டேன்

    இந்தப் பாடல்கள் சொல்லும் கதையென்ன? அந்தக் காலக் கட்டத்தில் எனக்குள் ஒரு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த கதையைத்தான் இவை சொல்கின்றன. என்ன போராட்டம்? யாருக்கும் யாருக்கும் போராட்டம்?

    கடவுள், தெய்வம், உயிர்நிலையாகிய ஆன்மா! இவற்றைப் பற்றிய போராட்டம். அறிவுக்கும் ஆழ்மனத்துக்கும் இடையில் போராட்டம்! நம்ம புத்தி சிகாமணிக்கும், மனோன்மணிக்கும் நடுவில் நடந்த கணவன்-மனைவி பூசல்தான் அது என்று புரிந்து கொண்டேன். இந்தப் பூசலைத்தான் டாக்டர் நித்யானந்தம் மூலமாக ஷிர்டி சாயிபாபா தீர்த்து வைத்தாரோ? இந்தக் கதையைத்தான் இப்படித் திக்கித் திணறிச் சொல்ல முற்பட்டேனோ? சொல்லி விட்டேனா? புரிந்து விட்டதா?

    ஆன்மிக நாட்டம் ஏற்பட்டதற்குச் சில மாதங்களுக்கு முன், 1982, ஆகஸ்ட் மாதம், ஒருவழியாக, ‘ஸ்பரிசம்’ திரைப்படம் வெளியானது. அது எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அது நல்ல முறையில், நல்ல திரையரங்கங்களில் வெளியிடப்படாததும், மலையாள டப்பிங் படமோ என்று எண்ண வைத்த தலைப்புமே அதன் தோல்விக்குப் பெரிதும் காரணமாயின. ஆனாலும் அதன் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. எனக்கு ஒரு குறை, அதில் இடம் பெற்ற ஓர் அருமையான பாடல் அதிகம் கவனிக்கப் படாமல் போனதே. ஆம், பெற்றோர்களின் கண்டிப்பால் கதாநாயகனைக் கதாநாயகி சந்திக்க முடியாமல் தனிமையில், வீட்டுச் சிறையில் வாடிய துயரத்தை, எனக்குத் தெரிந்த வரை இவ்வளவு அழகாகவும், சுருக்கமாகவும் வேறு எந்தப் பாட்டின் பல்லவியும் சொல்லி யிருக்க முடியாது.

    உறக்கமிலா இரவுகள் இரக்கமிலா உறவுகள்

    (சொடுக்கினால் கேட்கலாம்)

     

    நச்சென்று, பொட்டில் தெறித்தாற் போல் இருக்கிறதா? இது பொன்னெழுத்தில் பொறிக்கப் பட வேண்டிய பல்லவி என்பதைக் காவிரி மைந்தன் போன்ற திரைப்படப்பாடல் ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். நான் கேட்டவுடன் அந்த அருமையான பாடலை எழுதித் தந்தவர் நண்பர் வ.வே.சு.தான்.

    படம் வெற்றி பெறாத ஏமாற்றத்திலிருந்தும், அதனால் ஏற்பட்ட பண நெருக்கடியிலிருந்தும் நான் சில மாதங்களிலேயே சற்று விடுபட்டேன். அப்படி விடுபட்டு, மீண்டும் அமைதி திரும்பிய நிலையில்தான் ஆன்ம விடுதலை நோக்கி என் மனம் திரும்பியது என்று கூடச் சொல்லலாம்.

    நான் ஆன்மிகப் பாதைக்கு ஆற்றுப் படுத்தப் பட்டதற்கு இன்னொரு திசையிலிருந்து நான் பெற்ற தெளிவும் உதவியது. மேற்கத்திய நாடுகளில் தோன்றிய தத்துவ மேதைகளில், ரெனே டேகார்ட், இம்மானுவெல் கன்ட் ஆகியோருக்குப் பிறகு என்னை மிகவும் பாதித்த தத்துவ மேதைகளில், சோரென் கீர்க்ககார்ட் என்ற டேனிஷ் சிந்தனையாளரும், ஹென்ரி பெர்க்ஸன் என்ற ஃப்ரெஞ்ச் தத்துவ மேதையும், விட்ஜன்ஸ்டைன் என்ற ஆஸ்ட்ரிய சிந்தனையாளரும் குறிப்பிடத் தக்கவர்கள். அதே போல் இந்தியச் சிந்தனையாளர்களில், ‘மாண்டூக்ய காரிகா’ என்ற பெயரில், மிகச்சிறிய, ஆனால் மிக ஆழமான, நூலின் ஆசிரியர் கெளடபாதர் என்னை மிகவும் பாதித்தார். அவர், ஆதிசங்கரரின் குருநாதர் என்று சுட்டப்படும் கோவிந்த பாதரின் குருநாதர் என்று சொல்லப்படுகிறது. இவர்களுடைய சிந்தனைகளை 1975-78 ஆண்டுகளில், விவேகானந்தா கல்லூரியில், தத்துவத் துறையில், முதுகலை, எம்.ஃபில். வகுப்புகளில் பயின்ற போது படித்து ஓரளவு புரிந்து கொண்டேன். இதனால் ஏற்பட்ட தெளிவும் என் மனமாற்றத்துக்குப் பெரிதும் உதவியது. அவர்களுடைய வாதங்களையும், சிந்தனைகளையும் எடுத்துச் சொல்ல இது இடமில்லை. ஆனால் அவர்கள் மூலம் நான் பெற்ற தெளிவுகளையும், டாக்டர் நித்யானந்தம் அவர்களால் ஊக்குவிக்கப் பட்ட மெய்யனுபவங்களையும், கொஞ்சமேனும் இங்குக் கோடிட்டுக் காட்டாவிட்டால், உங்களுடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால், என் கவிதை வரலாறு முழுமையடையாது. ஆனால் அவற்றையெல்லாம் ஒரே மூச்சில் சொல்லிவிட முடியாது. அடுத்துவரும் பகுதிகளில், அந்தத் தெளிவுகளும் அனுபவங்களும் எப்படி என் கவிதை வாழ்க்கையுடன் சம்பந்தப் பட்டு, அதை நெறிப்படுத்தின என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்கிறேனே.

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 38

    கே. ரவி

    கடவுள் நம்பிக்கை எப்படி என் நெஞ்சில் நுழைந்தது என்றா கேட்டேன்? எனக்கு 6 அல்லது 7 வயது இருக்கும் போதே, தினமும் கந்தர் சஷ்டிக் கவசம் சொன்னது நினைவு வந்தது. நான் எழுதிய முதல் கவிதையே “அகத்திய முனிவரின் அகத்தினில் உதித்தவள்” என்றுதானே தொடங்கியது? அதை அடுத்து நான் எழுதிய கவிதை, “வேலவனின் வேலினிலே விளங்கி நிற்கும் செந்தமிழே” என்றுதானே அமைந்தது? அப்படியென்றால், அப்பொழுதே என் நெஞ்சில் கடவுள் நம்பிக்கை வேரூன்றியிருந்ததே! நடுவில் நான் சிறிது தடுமாறி விட்டேனோ?

    இப்பொழுது நினைத்துப் பார்த்தால், அதன் காரணம் சற்று விளங்குகிறது. தமிழ் சரியாக எழுதத் தெரியாத காரணத்தால் வகுப்பில் நேர்ந்த அவமானம், என்னைச் சில மாதங்களுக்குள் தமிழில் கவிதை எழுதும் அளவுக்கு வளர்த்துவிட்ட கதையை முன்பே சொல்லி விட்டேன். இதனால், தமிழ், தமிழ் என்று ஒரு தாகம் என்னுள் ஊற்றெடுத்தது. அதே சமயத்தில் பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளில் மிகவும் ஈடுபட்டேன். அந்த காலக்கட்டத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர் கிளர்ச்சி எழுந்த அரசியல் வரலாறு நமக்குத் தெரிந்ததுதான். அந்தக் கிளர்ச்சியின் போது அதில் ஈடுபட என்னை ஊக்குவித்தவர் என் தமிழாசான் தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன். வகுப்பில் அவர் ஆற்றிய வீர உரையால் தூண்டப்பட்டு, எங்கள் பள்ளி மாணவர்களைத் திரட்டிக் கொண்டு இந்தித் திணிப்பை எதிர்த்து ஊர்வலம் போனதும், கைவிரலைக் கீறி ரத்தக் கையெழுத்திட்டதும் நினைவுக்கு வருகிறது. அந்த ஈடுபாட்டின் காரணமாக, மொழிப்பற்றின் காரணமாக, அந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய அரசியல் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டேன். 1967-ஆம் ஆண்டுத் தேர்தலில் அண்ணாவின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் பெரிதும் மகிழ்ந்தேன். பாவேந்தர் கவிதைகளும், பகுத்தறிவுப் பாசறை என்று பறைசாற்றிக் கொண்ட அரசியல் இயக்கமும் என் கடவுள் நம்பிக்கையைப் பின்னுக்குத் தள்ளி மறைத்து விட்டன என்பதே சரி. அத்துடன், எதையும் தர்க்க ரீதியாக ஆராய்ந்து பார்க்கும் தீவிரமும் சேர்ந்து கொண்டது. ஆனால், நான் எப்பொழுதும், கடவுள் மறுப்பு என்ற நிலைப்பாட்டை எடுத்ததில்லை. கடவுள் உண்டு என்று நிறுவ முடியாத நிலையில், எந்த அனுபவமும் எனக்கு அதற்கு உதவாத நிலையில், கடவுள் உண்டா இல்லையா என்று எனக்குத் தெரியாது, அப்படியே இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும் என்ற நினைப்புடன் சில காலம் இருந்து விட்டேன்.

    இந்த காலக்கட்டத்தில்தான், சிந்தனைக் கோட்டத்தில் மாஸ் பிரேயர் என்ற கூட்டு வழிபாடு நடத்தத் தொடங்கியிருந்தோம். அதில் பக்திப் பாடல்கள் பாடுவோம். தெய்வம் உண்டா, இல்லையா என்று தெரியாது என்று சொல்லிக் கொண்டே நானும் அந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் தவறாமல் கலந்து கொண்டு, மிகவும் சிரத்தையோடு மற்றவர்கள் பாடல்களைப் பாடுவதோடு நானும் பக்திப் பாடல்கள் எழுதிப் பாடிக் கொண்டிருந்தேன். அது ஒரு வினோதமான நிலை.

    அதன் பிறகு நான் தத்துவப் பாடம் படிக்கத் தொடங்கிய கதையை முன்பே சொல்லி விட்டேன். தத்துவ மேதைகளின் தர்க்கமும், வாதங்களும் என்னை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்தின. தெளிவான விடை கிட்டவில்லை. ஒருபுறம் இம்மானுவெல் கன்டின் வாதம், மறுபுறம் சங்கரரின் அத்வைதக் கொள்கை! நடுவில், ஏனென்றே தெரியாமல் என்னை ஈர்த்த விவேகானந்தரின் எழுச்சியூட்டும் எழுத்துகள்! ஒரே போராட்டம்தான்! எல்லாவற்றையும் விட, மஹாகவி பாரதியாரின் அதிதீவிரமான பக்திப் பாடலகளும், சக்திப் பாடல்களும் எனக்குள் ஏற்படுத்திய கிளர்ச்சி!

    அப்போதுதான், என் வாழ்வில் சில சம்பவங்கள் நிகழ்ந்தன.

    as2

    ஷோபனாவின் தம்பி, அதாவது, அவளுடைய சித்தியின் மகன், அவளுடனேயே வளர்ந்தவன், 1981-ஆம் ஆண்டு திடீரென்று தன் வாழ்வை முடித்துக் கொண்டான். இன்றளவும் அதன் காரணம் தெரியவில்லை. இதனால், ஷோபனா மிகவும் ஆழ்ந்த துயரத்தில் இருந்தாள். துயரம் ஒருபுறம் இருக்க, ஏன் இப்படி நடந்தது, என்ன காரணம் என்ற கேள்விகள் அவளை மிகவும் பாதித்தன. விடை கிடைக்காதா, இறந்த தன் தம்பிக்கு என்ன ஆயிற்று, யாராவது வந்து வெளிச்சம் காட்ட மாட்டார்களா என்று அவள் குழப்பத்திலும், விரக்தியிலும் மூழ்கியிருந்த போது, தொலைக்காட்சியில் விளையாட்டுத் துறை வர்ணனையாளராக இருந்த முரளி என்பவர் ஷோபனாவின் நிலையை அறிந்து, தனக்குத் தெரிந்த ஒருவரை மனோவசிய நிபுணர் என்று சொல்லி அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்தான் டாக்டர் நித்யானந்தம். அறிமுகம் ஆன சில நாட்களிலேயே அவரைத் தன் ஆன்மிக குருவாக ஷோபனா ஏற்றுக் கொண்டதோடு என்னையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தாள். கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்த எனக்கு உடனே ஆன்மிக நாட்டம் ஏற்படவில்லை. இருந்தாலும், ஷோபனாவின் உள்ளூக்கத்தில் எனக்கு மிகவும் நம்பிக்கை இருந்தது. அவள் சொன்ன செய்திகளை அலட்சியம் செய்யாமல் கேட்டு உள்வாங்கிக் கொண்டேன். ஷோபனா டாக்டரிடம் தீட்சை பெற்று விட்டதை என்னிடம் சொன்னாள். அவளுடன் சேர்ந்து தொலைக்காட்சி நிலையத்தில் பணி செய்து கொண்டிருந்த எழுத்தாளர் சு.சமுத்திரம், அனந்த பத்மனாபன் இருவருக்கும் டாக்டர் தீட்சை வழங்கியதை அறிந்தேன். எனக்கும் அப்படி ஓர் அனுபவம் நேரிடாதா என்ற எண்ணம் ஏற்பட்டது.

    அன்று மாலையே, எப்பொழுதும் போல், வீட்டு மொட்டை மாடியில் சென்று காற்றாட அமர்ந்தேன். அப்படித்தான், காற்று வாங்கப் போய் நிறைய கவிதைகள் அவ்வப்போது வாங்கி வந்திருக்கிறேன். அன்று எப்பொழுதும் போல் அமர்ந்திருந்த என் கண்கள் தாமாக மூடிக் கொண்டன. ஏதோ ஒரு தியான நிலைக்கு யாரோ என்னை அழைத்துச் செல்வது போல் உணர்ந்தேன். சிறிது நேரத்தில், இதெல்லாம் வெறும் பிரமை என்று ஒதுக்கி விட்டுக் கண்களைத் திறந்த போதுதான் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அதைச் சொல்வதற்கு முன், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் நடந்த இரண்டு சம்பவங்களைச் சொல்லியாக வேண்டும்.

    as3என் அண்ணன், அதாவது, என் சித்தியின் மகன், ஶ்ரீதர், மிகவும் தெய்வ பக்தி உள்ளவன். அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆண்டுதோறும் சபரி மலைக்குச் சென்று கொண்டிருந்தான். நான் அப்போது சபரிமலைக்குச் சென்றதில்லை. என் குடும்பத்திலேயே, என் உடன்பிறந்த சகோதரர்களைக் காட்டிலும் ஶ்ரீதரிடம் எனக்கு நெருக்கமும் பாசமும் அதிகம். 1983-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், ஒருநாள் அவன் என்னை மயிலையில் உள்ள ஷீர்டி சாயிபாபா கோவிலுக்குப் போகலாமே என்று அழைத்தான். பாபாவைப் பற்றிப் படித்திருந்தேன். அவருடைய எளிமைத் தோற்றம் என்னை ஓரளவு கவர்ந்திருந்தது. சரி போகலாம் என்று சொல்லி அவனுடன் சாயிபாபா கோவிலுக்குச் சென்றேன். அங்கே நான் எதுவும் பிரார்த்தனை செய்யவில்லை. வெளியே வந்து தெருவில் நடந்து கொண்டிருந்த போது, ஶ்ரீதர் என்னிடம் சாயிபாபா பற்றி ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டான். பார்க்கலாம் என்றேன். அத்துடன் விடாமல், “சங்கம்” என்ற ஹிந்திப் படத்தில் முகேஷ் பாடிய “தோஸ்த் தோஸ்த் நா ரஹா” என்ற பாடல் மெட்டிலேயே பாபா பற்றிய பாடல் அமைய வேண்டும் என்ற ஒரு விசித்திரமான விண்ணப்பத்தையும் வைத்தான். அவன் சொல்லி முடிக்கும் முன்பே, நான் மெல்லப் பாடத் தொடங்கி விட்டேன்: “சாயிராம் சாயிராம்” என்று, அதுவும் அவன் கேட்டுக் கொண்ட மெட்டிலேயே.

    சாயி ராம் சாயி ராம் சாயி ராம் சாயி ராம்

     

    தாயின் கருணை சாயி ராம் – ஒளிas4

    தவழும் வதனம் சாயி ராம்

    நேய உணர்வு சாயி ராம் – என்றும்

    நிலைக்கும் உறவு சாயி ராம்

     

    தூய மனமுன் ஆலயம்

    தீப ஒளியுன் ஆசனம்

    தேகம் எடுக்கும் ஆணவம் – அதைத்

    தடுக்கும் உன் அருட்கரம்

     

    நீரும் நெருப்பும் சேருமோ – உன்

    நிழலில் துயரம் தோன்றுமோ – உன்

    பார்வை அழைக்கும் போது – மனம்

    பாதை மாறிப் போகுமோ

     

    சாயி ராம் சாயி ராம் சாயி ராம் சாயி ராம்

    இந்தப் பாடலைப் பாடும் போது என் கண்களிலிருந்து என்னை அறியாமல் கண்ணீர் கசிவதை உணர்ந்தேன். அதில் உள்ள சொற்கள் மெட்டுக்காகக் கோக்கப்பட்ட சொற்கள் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.

    அடுத்த நாள், மீண்டும் ஶ்ரீதரும் நானும் சாயி பாபா கோவிலுக்குச் சென்றோம். திரும்பி நடந்து வரும்போது, ஶ்ரீதர் தன்னுடன் சபரி மலைக்கு வர முடியுமா என்று கேட்டான். யோசிக்கவே இல்லை. சரியென்று சொல்லி விட்டேன். நடந்து வரும் போதே, இன்னொரு பாடலையும் பாடினேன். ஆபோகி ராகத்தில் அமைந்த அந்தப் பாடலின் பல்லவி, பம்பை நதியில் விளக்குகள் மிதந்து செல்லும் காட்சியைப் பற்றி இருந்தது. சபரி மலைக்கு நான் சென்றதில்லை; பம்பை நதியைப் பார்த்ததில்லை; அதில் பக்தர்கள் விளக்குகள் மிதக்க விடும் செய்தியும் எனக்குத் தெரியாது. எப்படியோ பாடல் வந்தது:

    பம்பையிலே செல்லும் தீபங்களே – எங்கள்AYYAPPA

    நம்பிக்கையின் ஒளி ஓடங்களே

    பம்பையிலே செல்லும் தீபங்களே

     

    செந்தழல் போல்மேனி சீறும் புலியேறிக்

    கைகளில் வில்லேந்திக் காவல்செய் யும்தீரம்

    பந்தள ராஜன் மைந்தனைக் காண

    வந்தவர் பிணிதீர்க்கும் புண்ய நதி தீர்த்தம்

    பம்பையிலே செல்லும் தீபங்களே

     

    நெய்யபிஷேகத்தில் நெஞ்சுருகாதா

    கற்பூர தீபத்தில் கண்பனிக்காதா

    ஐய்யனைக் காணும் தருணம் வராதா

    ஆவலைத் தீர்த்து வைக்கும் ஆனந்த க்ஷேத்ரம்

     

    பம்பையிலே செல்லும் தீபங்களே – எங்கள்

    நம்பிக்கையின் ஒளி ஓடங்களே

    பம்பையிலே செல்லும் தீபங்களே

    [இந்தப் பாடலை என்னிசையில் நண்பர் ராஜகோபால் பாடியதைக் கேட்கச் சொடுக்கவும் —–]

    அந்தப் பாடல் வந்த அடுத்த நாள்தான், டாக்டர் நித்யானந்தத்தின் ஆன்மிகப் பாதையில் சேரலாமோ என்ற நினப்பு எனக்கு ஏற்பட்டது. அன்றுதான், நான் மொட்டை மாடியில் சென்று அமர்ந்து கொண்டேன். த்யான நிலைக்கு யாரோ என்னை அழைத்துச் செல்வது போன்ற உணர்வை பிரமை என்று அலட்சியம் செய்துவிட்டுக் கண்ணைத் திறந்தால், அந்த மொட்டை மாடியின் சுவரின் மேல், ‘4’ என்ற வடிவில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு, ஒரு கிழவர் அமர்ந்திருந்தார். கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தால் அவர் அங்கே இல்லை. மாலை மயக்கமோ? திரும்பினேன், பின்னால் சுவரில் அதே கிழவர், வெள்ளைத் தாடி! மீண்டும் மறைந்தார். திரும்பினால், முன்னால் சுவர் மேல் மீண்டும் அவர், சாயி பாபாவேதான்! எனக்குச் சற்று பயமாக இருந்தது. ஆனால் உற்றுப் பார்த்தேன். அவர் முகம் மட்டும் கருப்பாக, டாக்டர் நித்யானந்தத்தின் முகச்சாயலில் தெரிந்தது. விரைந்து மாடியில் இருந்து இறங்கி வந்து விட்டேன். அது நடந்த சில நாட்களிலேயே நானும் டாக்டரின் ஆன்மிகப் பாதையில் சேர்ந்து விட்டேன்.

    எப்படியோ, கடவுள் பற்று இல்லாமல் இருந்த நான், சபரி மலைக்கு வருவதாக ஶ்ரீதரிடம் வாக்களித்ததும், டாக்டரின் ஆன்மிகப் பாதையில் சேரும் முடிவுக்கு வந்ததும் ஒரே சமயத்தில் நடந்துவிட்டன. என் வாழ்வில் ஓர் அதிசயமான திருப்புமுனையாக அந்த நிகழ்ச்சிகள் அமைந்தன! அதன்பின் காற்றில் அடித்துச் செல்லப்படும் இலவம் பஞ்சு போல நான் வேகமாகப் பறந்து கொண்டிருந்தேன்.

    (தொடரும்)

    Share
  • பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

    கே. ரவி

     

    ஆதிசங்கரர்இன் பஜகோவிந்தம் பாடல் எப்பொழுதும் என் மனத்துக்கு நெருக்கமான பாடல். அதன் ஈர்ப்பில் நான் எழுதிய ஒரு தமிழ்ப்பாடலை, ரெஹான் இசையில், சுஜாதா குரலில் கேட்கலாமே:

     

    பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

     

    Meerabai_1

     

    பஜகோவிந்தம் பஜகோவிந்தம்

    பாடல்களில் உயர் பாடலிதே

    நிஜமும் நிழலும் நிதர்சன மாகும்

    நித்யா னந்த கீதமிதே

     

    உடலும் உயிரும் உறவென் றெண்ணும்

    மடமை அழிக்கும் மார்க்கமிதே

    கடவுள் நாமம் கடவுள் த்யானம்

    கதிவே றில்லை மானிடனே

     

    ஆசைகள் ஆகும் ஓசைகள் யாவும்

    அடங்கிடும் தேவ மந்த்ரமிதே

    பாசச் சுழலில் மோகத் தழலில்

    பரிதவிக் காதே மானிடனே

     

    மறுபடி ஜனனம் மறுபடி மரணம்

    மதியில்லை யாசொல் மானிடனே

    உறுதுணை அவனே உயிர்நிலை அவனே

    உணர்ந்திடு வாயா நீயுடனே

     

     

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் (37)

    கே.ரவி

    கடவுள் நம்பிக்கை பற்றி கேட்டதற்குத் தர்க்கம் பற்றி ஒரு பேருரையாற்றிவிட்டுக் குரல் தழுதழுக்க ஒரு கவிதை சொல்லிப் போன பகுதியை முடித்து விட்டேனோ? தர்க்கத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா? உண்டு, இல்லை. இது என்னப்பா பதில்?

    கவிஞர் கண்ணதாசனே பாடவில்லையா: “உண்டென்றால் அது உண்டு; இல்லை என்றால் அது இல்லை”.

    கவிச்சக்ரவர்த்தி கம்பர் தம் காவியத்தில் ஒரு புதுமை செய்தார். காவியத்தின் நுழைவாசலில் மட்டும் கடவுள் வாழ்த்துப் பாடி முடிக்காமல், காவியத்தின் ஒவ்வொரு காண்டத்துக்கும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடினார். பாரதி கம்பரை ஆழ்ந்து கற்றவன். அதனால் அவனும் ‘பாஞ்சாலி சபதம்’ காவியம் படைத்த போது, அதன் ஒவ்வொரு சருக்கத்துக்கும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல் வைத்தான்.

    கண்ணதாசனும் கம்பரை நன்கு கற்றுத் தோய்ந்தவர். கம்பர் பாடிய ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல்தான் கண்ணதாசனின் மேற்சொன்ன வரிகளுக்கு உள்ளூக்கம் தந்திருக்க முடியும். கம்பர் பாட்டைப் பார்ப்போம்:

    ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்

    அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம்

    இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம்

    நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!

    எப்படியோ தர்க்கத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் உண்டு என்று தர்க்க ரீதியாக நிறுவி விட்டேன். சரிதானே?

    தர்க்கத்தால் கடவுள் இருப்பை நிறுவவே முடியாது என்ற தீர்மானத்தைத் தர்க்கத்தால் நிறுவியவன் ஜெர்மானிய தத்துவ மேதை, இமானுவெல் கன்ட்.

    கவிச்சக்கரவர்த்தியின் முதல் கடவுள் வாழ்த்துப் பாடலின் அர்த்தப் பொதிவு, இமானுவெல் கன்டைப் படித்துணர்ந்த பிறகே, எனக்கு மெல்லப் புரியத் தொடங்கியது:

    உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

    நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா

    அலகிலா விளையாட்டு உடையார் அவர்

    தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

    kambarஅதாவது, இந்த உலகத்தை ஒருவன் படைத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அது தானாகவே இருப்பது. தானே தோன்றி, விரிந்து, வளர்ந்து கொண்டிருக்கிறது. பிக்பேங் (Big Bang) எனப்படும் ஒரு புள்ளி வெடிப்பில் சிதறுண்டு, விரிந்து கொண்டே இருக்கும் புதிர் அது. இப்படியெல்லாம் விஞ்ஞானம் பேசுகிறது. அந்தப் பகுத்தறிவுக் குழந்தையின் மழலைப் பேச்சின்படி இந்த உலகெலாம் தாமே, அதாவது, படைத்தவன், காப்பவன் என்பதாக யாரும் தேவைப்படாமல் தாமே இருக்கின்றன என்று நம்மை நினைக்க வைக்கும் வகையில் இந்த உலகெலாம் ஆக்கி, அவை தாமாகவே விரிந்து வளரச் செய்து, அவற்றை நீக்கி, இப்படியாக ஓர் ஓயாத விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் அவர் தலைவர். இதைத்தானே கம்பன் சொல்கிறான்.

    அப்பொழுது இவ்வளவுதான் புரிந்து கொண்டேன். ‘தாமுளவாக்கல்’ என்பதற்குள்ள வேறு பரிமாணங்கள் பற்றியும், ‘நிலைபெறுத்தலும்’ என்ற சொற்றொடரில் ‘று” என்ற வல்லின எழுத்து உள்ளது பற்றியும், ‘அலகிலா’ எந்ற சொல்லின் அடர்ந்த கருத்துச் செறிவு பற்றியும் அப்பொழுது நான் ஆய்வு செய்து பார்க்கவில்லை. அதை இங்கே இப்போது விவரிக்க இடமில்லை. அப்போது இந்த அளவாவது கம்பரின் கடவுள் வாழ்த்துப் பாடலை எனக்குப் புரிய வைத்தவன் மேற்சொன்ன ஜெர்மானிய தத்துவ மேதைதான்.

    ஒருநாள், மயிலை கபாலி கோயில் எதிரில் உள்ள ஒரு மண்டபத்தில் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்.A.sa கூர்மையான பார்வையோடும், கணீரென்ற குரலோடும் தாடிக்காரர் ஒருவர் அந்தச் சொற்பொழிவில் கம்பனின் மேற்சொன்ன கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றைப் பற்றி ஒன்றரை மணி நேரம் பேசினார். மெய்மறந்து அமர்ந்திருந்தேன். அப்போதுதான், இமானுவெல் கன்ட் எனக்குப் புரிய வைத்ததையும் கடந்த, ஆழ்ந்த பொருள் அந்தப் பாடலில் பொதிந்திருப்பதை உணர்ந்தேன். அந்தத் தாடிக்காரர்தான், ‘இலக்கியக் கலை’ என்ற அருமையான நூலின் மூலம் என் இலக்கிய ரசனையை நெறிப்படுத்திய மேதை அமரர் அ.ச. ஞானசம்பந்தம். அதற்குப் பிறகு இரண்டு முறை அவர் வீட்டுக்குச் சென்று கம்பராமாயணத்திலும், பெரியபுராணத்திலும் நான் சில விளக்கங்கள் கேட்ட போது நேரம் ஒதுக்கி அவர் அன்புடன் எனக்குப் பாடம் சொன்னதை என்னால் மறக்க முடியாது.

    இவ்வளவுக்குப் பிறகும், அனுபவ ரீதியாகக் கடவுள் நம்பிக்கை என்னைப் பற்றவில்லை.

    நான் 1981-ல் மதுரைக்குப் போய் ரமணனைச் சந்தித்தேன். அவனிடம் ‘ஸ்பரிசம்’ படத்துக்கு ஒரு காதல் பாடல் தரச் சொல்லிக் கேட்டேன். அவனும் தந்தான். அந்தப் பாடலைப் பிறகு, தீபன் சக்கரவர்த்தியும், எஸ்.பி.ஷைலஜாவும் பாட நான் இசையமைத்துப் பதிவு செய்து, அந்தப் பாடல் காட்சியும் படத்தில் இடம்பெற்றது. அந்தப் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    [அந்தப் பாடலை நீங்களும் கேட்டு மகிழச் சொடுக்கவும்:

    http://www.inbaminge.com/t/s/Sparisam/Aayiram%20Malargal%20Paniyil.eng.html]

    [எஸ்.வி.சேகரும், ஶ்ரீலட்சுமியும் ஆடிப்பாடும் காட்சியைக் கண்டும், பாடலைக் கேட்டும் மகிழச் சொடுக்கவும்: https://www.youtube.com/watch?v=ntAyp79sYVU]

    ஆயிரம் மலர்கள் பனியில் நனைந்து

    ஆனந்த வெளியில் முகில்கள் திரிந்து

    பாவையென் மனதில் நுழைந்து தவழ்ந்து

    மேனியில் ஆயிரம் மின்னலை வெள்ளம் அம்மோய் … ஸ்பரிசம்

     

    மனமோ உடலோ மயக்கங்களின் வடிவோ

    கனவில் பவனி வரும் – கண்கள்

    கார்த்திகை தீபங்களோ

    காலக் கதவினை மெல்லத் திறந்து

    கடந்த பாதையை மறந்து – இந்தக்

    கணத்தில் நாம் பிறந்து வளர்ந்து

    தவழ்ந்தோம் … ஸ்பரிசம்

     

    வைரப் படைக்கெலாம் நடுவே நாம்

    கைகள் இணைக்கலாம் நடக்கலாம்

    தென்றல் திகைக்கலாம் அதற்குமேல்

    தேவர் இருக்கலாம் அவர்க்கெல்லாம்

    பாடல் கொடுக்கலாம்

    இந்த்ரப் பதவி கிடைக்கலாம் உடனேநாம்

    அதையும் மறுக்கலாம்

    பறக்கலாம் சிரிக்கலாம் வா … ஸ்பரிசம்

     

    இந்தப் பாடலைப் பாடிக் காட்டிவிட்டு, ரமணன் என்னிடம் மதுரை மீனாட்சி கோவிலுக்குப் போகலாமா, நான் வருவேனா என்று கேட்டான். நான் என்ன பதில் சொன்னேன் தெரியுமா?

    ” வந்தால் போச்சு. அந்தக் கோவிலில் நல்ல சிற்பக் கலையம்சம் மிக்க வேலைப்பாடுகள் உண்டாமே. பார்த்துவிட்டு வரலாம்.”

    எப்படி இருக்கிறது என் பதில்? அதில் எவ்வளவு அலட்சியம்! ஆணவம் என்று கூடச் சொல்லலாமோ? நினைத்தாலே கூச்சத்தில் இப்பொழுது உடல் நடுங்குகிறது.

    ஷோபனாவும், என் சகவாச தோஷத்தால் கிட்டத்தட்ட அந்த மனநிலையில் தான் இருந்தாள். ஆனால், அதில் அறிவின் ஆணவத்தைக் காட்டிலும், குழந்தைத் தனமான அறியாமையே தெரிகிறது. 1977-ல் அவள் ஓர் ஆங்கிலக் கவிதை எழுதியிருந்தாள்:

    I wish there were a God somewhere

    That I can bow and plead – Then

    My tears will bring the Grace of care

    They’ll die a death of need

     

    Tear after tear, year after year

    They’ve rolled and gone awaste – When

    My fate evades a thought too dear

    They die for me in haste

     

    I do not ask of them to die

    I know not that they come

    But when they die I only sigh

    “What fruitless martyrdom!”

     

    I wish there were a God somewhere
    That I can bow and plead
    Then my tears would bring the Grace of care
    They’ll die a death of need

    என்

    விருப்பமெல்லாம் எங்கேனும் – நான்

    வணங்கி இறைஞ்ச ஒரு கடவுள்

    இருக்க வேண்டும் என்பதே – இருந்தால்

    பரிவின் கருணையை வரவழைத்துப்

    பொழியும் கண்ணீர்த் துளிகளெல்லாம் – ஓர்

    அவசியத்தாலே மறைந்துவிடும் – அந்த

    மரணத்துக்கொரு பயனிருக்கும்

    பிறகு கடவுள் நம்பிக்கை எப்படி என் நெஞ்சில் நுழைந்தது? அந்தக் கேள்விக்கு அடுத்த சந்திப்பில் பதில் சொல்கிறேன்.

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன்! (36)

    கே. ரவி

    சமூகப் பிரக்ஞை இன்றி எழுதப்படும் கவிதைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றொரு கருத்து நிலவுகிறதே! அதற்கு என் பதில் என்ன?

    சூழலின் தாக்கமின்றி எந்தப் படைப்பும் வருவதில்லை. ஆனால், ஒரு கவிஞனின் கவிதைகள் எந்தச் சூழலில் பிறக்க வேண்டும் என்பதை அவனே எப்படி முடிவு செய்ய முடியும்?

    என் உடனடிச் சூழலில் உள்ள சிக்கல்கள் எல்லாம் மனிதனால் தீர்வு காணக் கூடிய பிரச்சினைகளே. அந்தப் பிரச்சினைகள் பற்றி நானும் பலவாறு சிந்தித்து, அவற்றுக்குத் தக்க தீர்வுகளையும் முன்மொழிந்திருக்கிறேன். நான் என்னுடைய தத்துவத் துறை எம்.ஃபில். பட்டத்துக்கான ஆய்வுரைக்கு எடுத்துக் கொண்ட பொருள், “நல்வாழ்வுச் சிந்தனைகள்” (Philosophy of Welfare). அதில் தத்துவம் அதிகமா, பொருளாதாரச் சிந்தனைகள் அதிகமா, சமூகவியல் சிந்தனைகள் அதிகமா என்ற குழப்பமும், தடுமாற்றமும் நேர்முகத் தேர்வுக் குழுவினர்க்கு ஏற்பட்டதில் வியப்பில்லை. அந்தக் குழுவில் மேற்சொன்ன மூன்று துறை வல்லுநர்களும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எப்படியோ நல்ல மதிப்பீடுகள் தந்து என்னைத் தேர்ச்சி பெறச் செய்தனர். அந்த ஆய்வுரையில் நல்வாழ்வுச் சமுதாயம் எப்படி அமைய வேண்டும் என்று ஒரு மாதிரிப் படிமமே, ஆங்கிலத்தில் சொல்வதென்றால், ஒரு ப்ளூ ப்ரிண்டே கொடுத்திருந்தேன். அதில் முக்கியமான, ஆனால், புதுமையான ஒரு பரிந்துரையைச் செய்திருந்தேன். பணத்துக்குக் குறைந்த பட்சம் இரண்டு பரிமாணங்கள் இருக்க வேண்டும் என்பதே அந்தப் பரிந்துரையின் சாரம். ரூபாய், அல்லது டாலர் தாளுக்கு அதன் மதிப்பு, 1, 10, 100 என்று குறிப்பிடப்படுவது போல், அதன் ஆயுளும், அதாவது அது எந்த நாள் வரை செல்லுபடியாகும் என்ற தேதியும் குறிப்பிடப்பட வேண்டும். அந்தத் தேதிக்கு ஒரு வாரம் முன்பிலிருந்து காலாவதியாகப் போகும் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்திப் புதுப்பணம் அதற்கு பதிலாகப் பெற்றுக் கொள்ளலாம். இதனால் எல்லாப் பணமும் வங்கிக் கணக்குக்குள் வந்தே ஆக வேண்டும்; கருப்புப் பணம் அறவே இல்லாமற் போகக்கூடும்.

    என் உரை நடைப் படைப்புகளில் சமூகச் சிந்தனைகளும், சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் விரவியிருந்தும், என் கவிதை மட்டும் சற்றுத் தனித்தே இருந்தது.

    நம் நல்வாழ்வுக்குத் தேவையான தளவாடங்களையும், சூழ்நிலைகளையும் இயற்கையிலிருந்து உருவாக்கிக் கொள்ளும் பொறுப்பு நமதே. அந்தப் பொறுப்பைக் கவிதை எழுதித் தட்டிக் கழிக்க முடியாது. சுதந்திரம் கிடைத்த பிறகு எத்தனை ஆயிரம் கவிதைகள் சமூகக் கொடுமைகள் பற்றிய குமுறல்களைக் கொட்டித் தீர்த்திருக்கின்றன! அவற்றால், அந்தக் கொடுமைகள் ஒழிந்து விட்டனவா? இல்லையே. எதைச் சிந்தித்துச் செயல்படுத்திச் சரிசெய்ய வேண்டுமோ அதை வெறும் புலம்பல்களால் தீர்க்க முடியாது. சிந்திக்க வேண்டிய விஷயங்களில் சிந்தித்துத் தான் ஆகவேண்டும். சிந்தனை ஒதுங்கியிருக்க வேண்டிய கவிதைக் கணங்களில் சிந்திப்பதே இடர்ப்பாடாகிவிடும். இதுவே என் தன்னிலை விளக்கம்.

    பாரதியிடம் ஆழ்ந்த பற்றுக் கொண்ட நான் இப்படிச் சொல்லலாமா? பாரதி வாழ்ந்த காலத்தில், மக்களை உணர்வுப் பூர்வமாகத் தட்டி எழுப்ப வேண்டியிருந்தது. அது அவன் வாழ்ந்த காலத்தின் கட்டாயம். இன்றைய சூழ்நிலையில், நம்மை நாமே ஆண்டுகொள்ளும் சுதந்திரம் பெற்றுவிட்ட பிறகும், சிந்தித்துத் திட்டங்கள் தீட்டிச் செயல்படாமல், இன்றும் உணர்ச்சி பொங்கப் பேசிக் கொண்டிருந்தால் பயனில்லை. வெறும் வாய்ச்சொல் வீரர்களாக மக்களின் உணர்ச்சிகளைப் பற்ற வைத்து, அதன்மூலம் ஆட்சியைப் பிடித்துப் பின் நாட்டையே ஊழற் காடாக்கிவிட்ட அரசியல் வாதிகளே இதற்குச் சான்று. இதற்கு மேலும் இதுபற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

    சில சமயங்களில் நானே இந்தக் கேள்வியை மனத்துக்குள் எழுப்பியிருக்கிறேன். நம் எழுத்து என்ன சாதிக்கப் போகிறது?

    அப்படியொரு நாள், 2000-ஆம் ஆண்டு, என் அலுவலக அறையில் தனியாக, நெஞ்சு நிறைய கேள்விகளுடன் அமர்ந்திருக்கிறேன். மேஜை மேல் இருந்த வெற்றுத் தாள்கள் காற்றில் படபடக்கின்றன. எழுதுகோலை எடுத்து ஏதாவது எழுதலாமா? ஒரு தயக்கம். அப்போது சடாரென்று வந்து கதவைத் தட்டுகிறது, ஒரு கவிதை; மனக்கதவைத்தான்!

    எழுதுகோல் என்னெதிரே ஏளனம் செய்கிறது

    எழுதி எழுதிநீ என்னதான் சாதித்தாய்

    பழுதுகளைச் செப்பனிடப் பாதை அமைத்தாயா

    எழுதுகோல் என்னெதிரே ஏளனம் செய்கிறது

     

    வெற்றுத்தாள் படபடத்து வெடிச்சிரிப்(பு) உதிர்க்கிறது

    மற்றவர்க் காகநீ மனம்திறந்து பேசுகிறாய்

    சற்றேனும் உன்மனத்தைச் சரிபார்த்துக் கொண்டாயா

    வெற்றுத்தாள் படபடத்து வெடிச்சிரிப்(பு) உதிர்க்கிறது

     

    ஏளனத்தை வெடிச்சிரிப்பில் ஏற்றிவைத்(து) ஒருகணத்தில்

    காலத்தை நிறுத்துகிறேன் காகிதமும் பேனாவும்

    ஓலத்தை நிறுத்தியென்முன் ஓருருவாய்க் கலந்துவிடச்

    சூலுடைத்து வருகிறதே சொப்பனமாய் ஒருகவிதை

    மீண்டும், மீண்டும் சொல்கிறேன், கவிதை என் கைவாள் இல்லை; என் கேடயம் இல்லை; என் ஆயுதமோ, கருவியோ, சாதனமோ இல்லை. நானே கவிதையின் கருவி, ஆயுதம், சாதனம். கவிதையே என்னை ஆட்டி வைக்கும் பிச்சி, பேய், பெருந்தெய்வம்!

    யாருக்கும் என் கவிதை பயன்படப் போவதில்லை என்றால் நான் ஏன் கவிதை எழுத வேண்டும்? இந்தக் கேள்விக்கான விடை, ‘பயன்’ என்ற சொல்லின் அர்த்தத்தைப் பொறுத்தது. 1980-ல் இப்படித்தான் ஒரு கவிதை வந்தது:

    ன்கவிதை எந்நாளும் பயன்படாது

    எற்றத்துக்(கு) இன்பத்துக்(கு) இடம்தராது

    மின்னல் போலத் துள்ளியெழும்

    அடுத்த கணமே தடுக்கிவிழும் – ஆனால்

    எண்ண அலைகள் எழுப்பிவிடும்

    ஏகாந்தத்தில் வளையவரும்

    நின்று வரவேற்றால்

    நிச்சயம் உங்கள் தளையவிழும்

     

    நேற்று பெய்த மழைத்துளிகள் – என்

    நெஞ்சக் கதவை இடிப்பதும்

    காற்றில் அசையும் மலர்கள்போல்

    கனவுத் தளிர்கள் துளிர்ப்பதும்

    இன்றிப் பொழுதை என்றைக்கும்

    இருக்க வைக்க நினைப்பதும்

    நினைவுக் குள்ளே நழுவிக் கொண்டே

    நிற்ப தைப்போல் நடிப்பதும் – அட

    இருட்டைத் தேட வெளிச்சம் போடும்

    அறிவீ னம்தான் கவிதைகளா – இதைக்

    கேட்ப தற்கு வாய்திறந் தாலும்

    தாளம் போடும் வார்த்தைகளா

     

    என்கவிதை எந்நாளும் பயன்படாது – அது

    எல்லைகளை ஏற்காத மாயச் சூது

    “நின்று வரவேற்றால் நிச்சயம் உங்கள் தளையவிழும்” என்பதை ஒரு பொருட்டாக எண்ணாதவர்க்கு என் கவிதை எந்நாளும் பயன்படாது.

    அப்படியானால், என் கவிதைகளைப் படித்துவிட்டு யாராவது முக்தி அடைந்திருக்கிறார்களா என்று கேட்டுவிடக் கூடாது.

    கூட்டத்தில் என் கவிதையைக் கேட்பது, ரசிப்பது வேறு; அதையே தனிமையில், மனத்துக்குள் மெல்ல அசைபோட்டு, அசைபோட்டு, அதன் த்வனியாகிய வாகனத்தில் ஏறிக்கொண்டு அது கூட்டிச் செல்லும் உயரத்துக்கோ, ஆழத்துக்கோ துணிச்சலாகப் பயணித்து, அதன் அனுபவக் களத்தில் நின்று வரவேற்றால், கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால், நிச்சயமாகத் தளையவிழும். “ஏகாந்தத்தில் வளையவரும்” என்ற வரி புரிகிறதா? “நின்று வரவேற்றால்” என்ற வரியில் நின்று கொண்டிருக்கும் “நின்று” என்ற சொல்தான் இந்தக் கவிதையையே நிற்க வைக்கும் சொல் என்பதும் புரிகிறதா?

    “வா வா நயினா ஒண்ணா சேந்து வாரவதிக்கே போயிடலாம்”. இப்படித்தான் என் கவிதை உன்னை அழைக்கும் தோழா! வரத் தயாரா? அந்த வாராவதி, யாரும் எளிதில் வாரா பதி. மூட்டை முடிச்சுகள் வேண்டாம். தூக்கியெறி. அணிந்திருக்கும் சட்டையைக் கூடக் கழற்றியெறி. ஏன், உன் உடம்பே உனக்கு பாரமாகப் போகிறது. வள்ளுவக் கிழவனின் எச்சரிக்கைக் குரல் கேட்கிறதா?

    மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்

    உற்றார்க்(கு) உடம்பும் மிகை

    “அதெல்லாம் சரி நயினா. நீ என்னமோ கடவுள் நம்பிக்கை இல்லாம இருந்தே, அப்புறம் சடார்னு மாறிட்டேன்னு ஒரு வார்த்தை முன்னே சொன்னியே, அந்தக் கதையைக் கொஞ்சம் எடுத்து வுடுப்பா.”

    சொல்கிறேன். உயர்நிலைப் பள்ளியில் படித்த நாட்களில், கடவுள் நம்பிக்கை இல்லாதவனாகத்தான் இருந்தேன். எதையும் தர்க்கம் செய்துதான் ஒப்புக் கொள்வது என்ற தீர்மானத்தோடு நான் இருந்த நாட்கள் அவை. ஹிந்தி வகுப்புகளில், அந்த மொழியின் இலக்கணம் பற்றி நான் கேட்ட கேள்விகளில் திக்குமுக்காடி, எங்கள் ஹிந்தி ஆசிரியர் வகுப்பில் எல்லார் முன்னிலையிலும் எனக்குச் சாபமிட்டார்: “உனக்குத் தர்க்கமே தொழிலாகக் கடவது”. அந்த நல்ல உள்ளத்தின் வாழ்த்துப் பலித்து விட்டது. நீதி மன்றங்களில் தர்க்கம் செய்வதே என் தொழிலாகிவிட்டது.

    டாக்டர் சீனி சுந்தரம்ஒருநாள், ஹிந்தி வகுப்பில் உட்கார்ந்து கொண்டு ஹிந்தி ஆசிரியரை ஓவியமாக வரைந்தான் என் வகுப்புத் தோழன் சீனி. சுந்தரராஜன். அதைப் பார்த்து விட்டு அவர், அப்போது தலைமை ஆசிரியராக இருந்த சகோதரர் ஆன்ஸலம் அவர்களிடம் புகார் செய்ய, அவர் சுந்தரராஜனைத் தம் அலுவலக அறைக்கு வரச்சொன்னார். அடிவிழப் போகிறது என்று பயந்து கொண்டே போன அவனிடம் அவன் வரைந்த ஓவியத்தைப் பாராட்டிச் சாக்லேட் கொடுத்து யாரிடமும் சொல்லாதே என்று சொல்லி அவனை அவர் அனுப்பி வைத்தார். அப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் பயின்றதால்தான் நாங்கள் சுதந்திர உணர்வோடு வளர்ந்தோம். வீடு திரும்ப மாலை ஆறு மணிக்கு மேல் ஆனால் சுந்தரராஜன் வீட்டில் அவனுக்கு உதைவிழும். அப்படிக் கட்டுப் பெட்டியாக வளர்க்கப்பட்ட அவன் பிறகு ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது தன் தந்தையையே எதிர்த்து வீட்டை விட்டுச் சென்றதும், பிறகு டாக்டராகி, இப்பொழுது உலக வங்கியின் நிர்வாகத்தில் உயர்ந்த பதவியில் பணியாற்றி வருவதும், திருமணம் செய்து கொள்ளாமல் சுதந்திரமாக வாழ்ந்து வருவதும், தான் சேர்த்த பணத்தில் இருந்து தான் பயின்ற சாந்தோம் உயர்நிலைப் பள்ளி, விவேகானந்தா கல்லூரி, ஜிப்மர் ஆகியவற்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து சூரிய ஆற்றல் கருவிகள், அதாவது, சோலார் ப்ளாண்ட், வாங்கித் தன் தாய் தந்தையர் பெயரில் கொடை வழங்கியதையும் நினைத்துப்பிரதர் ஆன்சலம் பார்க்கிறேன். இதையெல்லாம் சாத்தியமாக்கியவர்கள், சுதந்திரமாகவும், கலையுணர்வோடும் எங்களை வளர்த்த ஆசிரியப் பெருமக்களே. தலைமையாசிரியர் ப்ரதர் ஆன்ஸலம், தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன், தமிழாசிரியர் கிருஷ்ணராமானுஜம் பிள்ளை, குப்புசாமி வாத்தியார், ஹிந்திப் பண்டிட் போன்ற நல்லாசிரியப் பெருமக்கள் கிடைத்தது எங்கள் பேறு. பதினோராம் வகுப்பு முடித்து நாங்கள் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் இருந்து விடைபெறும் போது நடந்த நிகழ்ச்சியில் நான் படித்த ஒரு வெண்பாவின் இறுதி வரிகள் நினைவுக்கு வருகின்றன:

    கல்வியெனும் சீரேந்திக் கண்களிலே நீரேந்திச்

    செல்கின்றோம் சேவிக்கின் றோம்.

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் (35)

    கே.ரவி

    1976-77. இந்தக் காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையில், நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ் நாடக உலகின் பொற்காலம் என்றே அதைச் சொல்லலாம். அப்போது நாமும் ஒரு நாடகம் போட்டால் என்ன என்று தோன்றியது. என்னதான் கல்யாணராமன் மாமாவிடம் வளர்ந்தாலும், லேடி விஸ்வத்தின் மகன் இல்லையா? நடிப்பு என் ரத்தத்தில் ஊறியிருந்தது.

    ஆனால், நடிப்பைக் காட்டிலும், நாடக ஆவலைக் காட்டிலும், கவிதை வெறியே என் உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும் பதிந்து கிடந்தது. எனவே, நாடகம் என்று யோசித்த போதும் கவிதையே முன்னின்று வழிகாட்டியது. ஆம், நானும் ஷோபனாவும் இணைந்து நாடகக் கதை ஒன்றை உருவாக்கினோம். என் தந்தை விஸ்வம்தான் நாடக இயக்குநர்.

    அதன் கதாநாயகன் அரவிந்தன் ஒரு கவிஞனாக இல்லாமல் வேறெப்படி இருக்க முடியும்? அவன் தன் நிஜ வாழ்க்கையில் பார்த்திராத ஒரு பெண் அவனுடைய கனவுகளில் மட்டும் அடிக்கடித் தோன்றி அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தாள். கனவில் அரவிந்தனோடு கவிதையாகவே அளவளாவுவாள். கவிதைச் சுவையில் இருவரும் மூழ்கிக் களிப்பார்கள். இதைப் பற்றி அவன் தன் நண்பனிடம் சொல்கிறான். அந்த நண்பன் ஓர் ஓவியன். அரவிந்தன் அவளை நன்றாக வர்ணித்தால் தான் அவளை அப்படியே வரைந்து காட்டுவதாகச் சொல்கிறான் ஓவிய நண்பன். அரவிந்தனின் வர்ணனைகளுக்கு வர்ணம் தீட்டிக் காட்டுகிறான் நண்பன். அப்படியே தத்ரூபமாகத் தன் கனவுக் காதலியை நண்பன் வரைந்து விட்டதைச் சொல்லி வியந்து மகிழ்கிறான் அரவிந்தன். அவளுக்குக் கல்பனா என்று பெயர் சூட்டுகிறார்கள். ஓவியம் வரைந்து முடித்த பிறகு, ஏனோ அரவிந்தன் கனவில் கல்பனா வருவதில்லை. அவனுக்குக் காரணம் புரியவில்லை. மிகவும் சோகத்துக்கு ஆளாகிறான். அப்போது ஒரு நாள் தெருவில் சென்று கொண்டிருக்கும் போது, கல்பனாவையே நேரில் பார்த்து விடுகிறான். சென்று பேசுகிறான். தான் கல்பனா இல்லை, தன் பெயர் ரூபா, தனக்குக் கவிதையிலெல்லாம் துளிக்கூட ஆர்வம் கிடையாது என்று அவள் எவ்வளவோ சொல்லியும், விடாமல் அவளை அரவிந்தன் தொடர்ந்து சந்தித்துப் பேசப் பேசப் அவர்களிடையே காதல் மலர்கிறது. ஆனால், கொஞ்சம், கொஞ்சமாக அரவிந்தனுக்குப் புரியத் தொடங்குகிறது, உருவத்தில் மட்டுமே ரூபா தன் கல்பனாவைப் போல் இருப்பது. மற்றபடி அவளுடைய எண்ணம், செயல், பேச்சு எதுவுமே கல்பனாவை நினைவு படுத்துவதாக இல்லை. இதனால் வருத்தம் அடைந்து அரவிந்தன் கல்பனாவின் ஓவியத்தின் முன் அமர்ந்து கொண்டு அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில், ரூபா ஏதோ முக்கியமாகப் பேசியதை அவன் கவனிக்காததால் ஆத்திரம் கொண்ட ரூபா, அந்தக் கல்பனா ஓவியத்தை உடைத்துக் கிழித்து எறிகிறாள். அரவிந்தனும் தான் இனிமேல் கல்பனாவை மறந்துவிட்டு ரூபாவுடன் சாதாரண மனிதனைப்போல் சந்தோஷமாக வாழ்வதாக உறுதியளிக்கிறான். ஆனால், அன்றிரவே மீண்டும் அவன் கனவில் கல்பனா வருகிறாள். நிலைமை மாறுகிறது. தினமும் அவன் கனவில் கல்பனா வரத் தொடங்கியதும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி அரவிந்தன் தடுமாறிக் கிட்டத்தட்ட ஒரு மனநோயாளியாவே மாறி விடுகிறான். எப்படியாவது கல்பனாவை மறந்தால் மட்டுமே அவன் நிம்மதியாக இயல்பு வாழ்க்கை வாழ முடியும் என்ற தெளிவு ஏற்படுகிறது. ஒரு மனோதத்துவ நிபுணரின் யோசனைப்படி அரவிந்தன் கனவில் கல்பனா வரும் போது அவளைக் கனவிலேயே கொன்றுவிட வேண்டும் என்று முடிவாகிறது. அன்றிரவு ஒரு கத்தியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அரவிந்தன் படுக்கிறான். மறுநாள் அவன் பிறந்ததினம். காலையில் ரூபா கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து விட்டுப் பிரசாதத்துடன் வருகிறாள். அப்போது, கனவில் கல்பனாவைக் கண்டு, “போய்விடு ராட்சஸி. உன்னைக் கொன்று விடுகிறேன்” என்று தூக்கத்தில் அரவிந்தன் அலறும் சத்தம் கேட்கிறது. ரூபா படுக்கை அறைக்குள் ஓடுகிறாள். ஒரே இருட்டு. அலறல் சத்தம் …. அரவிந்தன் கத்தியில் ரத்தம் சொட்டச் சொட்ட வெளியே வருகிறான். “கல்பனாவைக் கொன்று விட்டேன்” என்று உரக்கக் கூவுகிறான். ஆனால் அவன் உண்மையில் கொன்றது ரூபாவை.

    அவனுடைய கவிதைகளுக்கு ஞான பீட விருது வழங்கப் பட்டதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமல், விழிப்பு நிலையிலும் கல்பனாவுடனேயே பேசிக் கொண்டும், கவிதைகள் சொல்லிக் கொண்டும் ஒரு மனநோயாளியாக அரவிந்தன் வாழ நேரிடுகிறது.

    தலை சுற்றுகிறதா? நாடகத்தில் நான்தான் அரவிந்தன், ஷோபனாதான் கல்பனா-ரூபா ஆகிய இரட்டை வேடங்கள். முதலில், “கனவுக்கும் நிழல்கள் உண்டு” என்று நாடகத்துக்குக் பெயர் வைத்தோம். பிறகு அன்றைய நாடக உலகத்தின் போக்குக்கு ஏற்பப் “பார்வைக்கு என்ன பொருள் ” என்று அதை மாற்றினோம். 1976 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், ஶ்ரீ கிருஷ்ண கான சபாவில் நாடகம் அரங்கேறியது. முதல் பாதி வெற்றி. சுகி சிவம் கூட அதில் திரைக்குப் பின்னால் இருந்து குரல் தரும் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. ஆனால், இடைவேளைக்குப் பின்னால், கல்பனா-ரூபா மாறிமாறி வரும் காட்சிகளில் ஒளியமைப்பு ஒத்துழைக்காமல் போய் நாடகம் குழப்பமாகியது. எங்களுடன் நடித்த ராகவன், ராமச்சந்திரன் உட்பட எல்லாருமே நன்றாக நடித்திருந்தும், என் சிந்தனைகளைப் புரிந்து கொண்டு என் நண்பர்கள் ஶ்ரீதர்-சாமா நன்றாக வசனம் எழுதியும், எடுத்த எடுப்பிலேயே நிறைய தந்திரக் காட்சிகள் கொண்ட ஒரு கதையைத் தேர்ந்தெடுத்ததாலும், அதைச் சரிவர நிகழ்த்திக் காட்ட முடியாமற் போனதாலும், நாடகம் அரங்கேறிய பிறகு அதைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. பல ஆயிரங்கள் நஷ்டமானதுதான் மிச்சம். 1976 ஆம் ஆண்டில் அது பெரிய தொகைதானே!

    நாடகமே இந்த உலகம்! இதில் ஆடுவதோ பொம்மலாட்டம் என்று மனோன்மணி மெல்லிய குரலில் பாடுகிறாள்.

    அந்தக் காலக் கட்டத்தில்தான், 1977-ஆம் ஆண்டில் இப்படி ஒரு கவிதை நான் எழுத நேர்ந்தது:

    கவிதையைக் கேட்டு மகிழ இங்கே சுட்டுங்களேன்…

    உள்ளக் கதவை மெல்லத் திறந்துநான் உற்றுப் பார்க்கிறேன்images (1)

    உருத்தெரியாமல் நான்தான் அங்கே உதிர்ந்து கிடக்கிறேன்

    என்

    உள்ளக் கதவை மெல்லத் திறந்துநான் உற்றுப் பார்க்கிறேன்

    உருத்தெரியாமல் நான்தான் அங்கே உதிர்ந்து கிடக்கிறேன்

    தாபத் தோடு சுடரும் எந்தன் தீபக் கனவுகள்

    நடுங்கி னாலும் நடுநடு வேயொளி நடனம் செய்வதால்

    என்

    உள்ளக் கதவை மெல்லத் திறந்துநான் உற்றுப் பார்க்கிறேன்

    உருத்தெரியாமல் நான்தான் அங்கே உதிர்ந்து கிடக்கிறேன்

    காலைப் பனியின் காதற் பொழிவில் கண்வி ழித்ததும்

    கதிரவ னுடைய க்ரணங்களை அருந்தி வளர்ந்தி ருந்ததும்

    மாலையில் வண்டு மழலையில் தாய்மை சுரந்தி ருந்ததும்

    மாயையா இல்லை வாழ்க்கையா என்று மனம்வெ தும்பிடும்

    ரோஜா மலரின் இதழ்க ளாகப் படப டக்கிறேன்

    ஊதற் காற்றில் உடம்பு நடுங்க முடங்கிக் கிடக்கிறேன்

    என்

    உள்ளக் கதவை மெல்லத் திறந்துநான் உற்றுப் பார்க்கிறேன்

    உருத்தெரியாமல் நான்தான் அங்கே உதிர்ந்து கிடக்கிறேன்

    ஆடித் திரிந்த கால்களில் நாதம் அள்ளித் தெறித்ததும் – ஓர்

    ஆரணங் கென்னைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டதும்

    பாடிக் களித்த பண்களெல் லாமென் நெஞ்சிற் பதிந்ததும்

    பாழும் கனவா பழமை நினைவா என்ற பதைப்புடன்

    உதிர்ந்து கிடக்கும் சதங்கை மணிகளாய் ஒடுங்கிக் கிடக்கிறேன் – மனம்

    அதிர்ந்த போதும் அசைவே இன்றிப் புழுங்கித் தவிக்கிறேன்

    அருவித் துகிலை அணிந்த வண்ணம் அமர்ந்திருந்ததும்

    யாரோ ஒருவன் சிற்றுளியாலே வளைந்து நெளிந்ததும்

    வருவோர் எல்லாம் வணங்கித் துதிக்க வாழ்ந்தி ருந்ததும்

    வாழ்க்கையா இல்லை மாயையா என்று மனம் வெதும்பிடும்

    தூள்தூள் ஆன பாறைத் துகள்களாய்த் துடிது டிக்கிறேன்

    நாளொவ் வொன்றும் நானே பலவாய்ப் பிரிந்து தேய்கிறேன்

    அறிவில் பூத்த அரவிந் தங்களின்

    நறுந்தேன் அள்ளிப் பருகிய நாட்கள்

    உலகு திருத்தும் உணர்ச்சி வேகத்தில்

    உன்மத்த னாகவே ஓடிய கால்கள்

    அழகுப் பசியின் அசுர போதையில்

    கனல்வயப் பட்ட என் காவியப் பார்வைகள்

    மெழுகாய் உருகி மெலிந்த நினைவுகள்

    மீண்டும் மீண்டும் மீண்ட ஸ்வர்கங்கள்

    தனிமை இருட்டில் தவித்த படியோர்

    அச்சத் தாலே அதிர்ந்த நரம்புகள்

    இனிய இசையில் என்னை மறந்துநான்

    இதய மாகவே அலைந்த பொழுதுகள்

    அணுக்க ளாகச் சிதறிச் சிதறி

    அழுது முடித்த ஆயிரம் கணங்கள்

    எல்லா மாகி இருந்த பின்னும்

    எதுவும் முழுமை பெறாத நிலையில்

    என்

    உள்ளக் கதவை மெல்லத் திறந்துநான் உற்றுப் பார்க்கிறேன்

    உருத்தெரியாமல் நான்தான் அங்கே உதிர்ந்து கிடக்கிறேன்

    இதை உருக்கம் என்பதா, விரக்தி என்பதா, வேதாந்தம் என்பதா? என் இல்லற வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. பொருளாதாரமும் மோசம் இல்லை. பின் ஏன் இந்தப் பாடல்? யாரைக் கேட்பது? எந்த அனுபவக் களத்தில் இருந்து நான் இந்தப் பாடலை எடுத்து வந்தேன்?

    நிஜ வாழ்க்கை என்று நாம் சொல்கிறோமே, அதில் நடக்கும் சம்பவங்களைக் காட்டிலும் என் மனம் சென்று சஞ்சரிக்கும் வேறு நிலைகளில் நிகழும் அல்லது நிகழ்ந்த சம்பவங்களே என் கவிதைகளின் கருப்பொருள்கள் ஆகியிருக்கின்றன. அந்தச் சம்பவங்கள் இன்னவை என்று என் மேல் மனத்துக்குப் பல சமயங்களில் தெரியக் கூடத் தெரியாது.

    எனக்குத் தோழர்களை விடத் தோழிகளே அதிகம். “என்னப்பா கங்கைக் கரைத் தோட்டம்” என்றுதான் ராஜகோபால் என்ற என் நண்பன் என்னை அழைப்பான். ஒருமுறை, சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன், ஷோபனா, அவளுடைய தாயார், என் தோழி ஒருத்தி ஆகியோருடன் ஓரூருக்குச் சென்றிருந்தேன். அங்கே, விடியற்காலையில், மலை மேல் அமர்ந்தபடி அந்தத் தோழியிடம் கவிதை ஒன்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஷோபனாவின் தாயார் அதைக் கேட்டிருக்க வேண்டும். நான் அந்தத் தோழியிடம் ஏதோ காதல் கவிதை சொல்லிக் கொண்டிருந்ததாகவும், எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்றும் மறுநாள் அவர் ஷோபனாவிடம் சொல்லிப் புலம்பினாராம். ஷோபனாவும் நானும் சிரித்துக் கொண்டோம். உண்மையில் அது ஒரு பராசக்தி கவிதை. ஆனால் என் கவிதைகளில்தான் பக்தி எது, காதல் எது; பராசக்தி எது, ஷோபனா எது என்று புரியாதே!

    உலக நடப்புகள் என் சிந்தனையை பாதித்த அளவு என் கவிதை மூலத்தை உசுப்பவில்லை என்பதை நான் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். நாட்டில் நடக்கும் அநியாயங்களை எண்ணிக் கோபப் பட்டிருக்கிறேன். கொந்தளித்துப் பேசியிருக்கிறேன். ஏன், ஊழலை எதிர்த்து, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது, நானும் உண்ணாவிரதம் இருந்தேன். அவருடைய போராட்டத்தை அலட்சியப் படுத்தி, ஆணவத்தோடு ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் பேசியதைக் கேட்டு, சிவம் வீட்டுக்குச் சென்று உட்கார்ந்து சீற்றத்தோடு, கண்கலங்கிப் புலம்பியிருக்கிறேன். ‘குடிமக்களாகிய நாம்’ (We The People) என்ற அமைப்பை நிறுவி ஊழல் எதிர்ப்புக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். என் மீது உள்ள அன்பு மிகுதியால், என்னுடைய ஊழலெதிர்ப்பு நடவடிக்கை பற்றி அமுதசுரபி இதழில் ஒரு தனித் தலையங்கமே எழுதி விட்டார், அதன் ஆசிரியர், திரு. திருப்பூர் கிருஷ்ணன்.

    அந்த அளவு சமூக உணர்வு இருந்தும், இப்படிப்பட்ட உலக நடப்புகள் என் கவிதையி ஊற்றுக்கண்ணை ஏனோ அணுக முடியவில்லை. உலகத்தின் அன்றாட மானுட நிகழ்ச்சிகள் என் கவிதைப் பொறியைத் தூண்டிவிடவில்லை. என் கவிதை வேறெங்கெங்கோ சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது.

    (தொடரும்)

    Share
  • அண்ணாச்சி

    கே. ரவி

     

    [ஒரு சொல் போதும் ஒரு பாடல் பிறக்க. ‘உலகெலாம்’ என்று இறைவனே ஒரு சொல் எடுத்துக் கொடுக்க, அதிலிருந்து பெரியபுராணக் காவியமே உதித்தெழவில்லையா? அப்படிப் பலமுறை ஒரே சொல் என் நெஞ்சில் பாடல் ஊற்றெடுக்க வைத்துள்ளது.

    பல ஆண்டுகளுக்கு முன்னால், சபரி மலையில் இருந்து இறங்கிப் பம்பைக் கரையில் என் குழுவினரோடு நடந்து வரும் போது, ஒலிபெருக்கியில் யாரோ இருவர் பேசிக் கொண்டது சத்தமாகக் கேட்டது. “என்ன நராஜகோபால் அண்ணாச்சி வரலியா?” “சாமி, அண்ணாச்சி பழனிலே இருக்கார்.சாயந்தரம் புறப்பட்டு வரார்.”

    அண்ணாச்சி பழனியிலே என்ற சொல் போதும். அப்பொழுதே, என் குழுவினரோடு பாடிக் கொண்டே திரிவேணி பாலத்தை அடைந்தேன். நீங்களும் இங்கே சொடுக்கிக் கேட்கலாம்.]

    download

    அண்ணாச்சி பழனியிலே தம்பி அத்வானக் காட்டினிலே

    ஒண்ணாக வைத்துக் கொண்டாடுவோம் ரெண்டு கண்ணாக வீட்டினிலே

    புள்ளி மானத் தேடி வேட்டைக்குப் போயி

    வள்ளிமானக் கொண்டுவந்தான் – அண்ணங்காரன்

    வள்ளிமானக் கொண்டுவந்தான்

    புலிப்பால் தேடிக் காட்டுக்குப் போயி

    புலிமேல் ஏறிவந்தான் – சின்னத்தம்பி

    புலிமேல் ஏறி வந்தான்

    கோவத்தி லேவெறுங் கோவணத் தோடே

    குன்றேறி நின்று கொண்டான் – அண்ணங்காரன்

    குன்றேறி நின்று கொண்டான்

    யோகத்தி லேதவக் கோலத்தி சபரி

    மலைமேல் அமர்ந்துகொண்டான் – மணிகண்டன்

    மலைமேல் அமர்ந்துகொண்டான்

    காமனை எரித்த கண்ணில் இருந்து

    கனல்வடி வாயுதித்தான் – கந்தசாமி

    கனல்வடி வாயுதித்தான்

    மோகினி சுதனாய் அவதரித் தேநம்

    மோகம் எரித்திடுவான் – ஐய்யப்பன்

    மோட்சம் அளித்திடுவான்

    ‘சரவண பவ’வெனும் மந்திரத் தில்வேத

    சாரம் உரைத்திடுவான் – வேதாந்த

    சாரம் உரைத்திடுவான்

    சரணமென் றேமனம் உருகி யழைத்தால்

    தரிசனம் தந்திடுவான் – ஐய்யப்பன்

    ‘தத்வமஸி’ என்பான்.

    Share
  • காற்று வாங்கப் போனேன் (34)

    கே.ரவி

    கவிதையை வரவேற்க இயற்கையே கைகட்டிக் காத்திருக்கும் என்பதுபோல் பேசிவிட்டாயே! யாரோ முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. ஏன் அப்படி நடக்காதா அல்லது நடக்கக் கூடாதா? கவிதையே பராசக்தியின் ஊஞ்சல்; அவள் அமர்ந்து உலாவரும் சிவிகை அல்லது பல்லக்கு. இது உண்மையானால், அவளே கவிதையின் ஊற்றுக்கண் என்பது சரியென்றால், ஒரு கவிதை வரும் போது இயற்கை கைகட்டிக் கொண்டு நின்று வரவேற்றுத்தானே ஆக வேண்டும். என் இனிய நண்பன், கவிஞன் பா.வீரராகவன் எந்த அரங்கத்தில் என்ன கவிதை படித்தாலும், அதற்கு முன்னால் தன் கவிதை ஒன்றைக் கட்டாயம் சொல்லுவான்.

    மனமாரச் சொன்னகவி எல்லாம்ar
    மன்றத்தில் புகழ்கொள்வ தில்லை
    எனதானால் இக்கணமே வீழும் – அன்றி
    உனதானால் எந்நாளும் வாழும்
    எனதில்லை உனதென்றே அர்ப்பணித்தேன்
    நின்னருள் நின்செயல் நின்கடனே

    கவிதைகளைச் செய்பவளும், கவிதைக்காக ஏங்கும் நெஞ்சங்களில் கவிதை வெள்ளம் பெய்பவளும், சில காதல் நெஞ்சங்களைத் தோட்டங்களாக்கி அங்கே கவிதை மலர்கள் கொய்பவளும், கனவுத் தறியில் கவிதை இழைகள் நெய்பவளும் …..! எல்லாம் அவளே. அவள்தானே இயற்கையன்னை, பராசக்தி.

    அவள் கவிதைச் சிவிகையில் அமர்ந்து வரும் நேரம், கவிதை வரும் நேரம் …..!

    கவிதைவரும் நேரம் இது கவிதைவரும் நேரம்
    கனவுகளும் நினைவுகளும் கலந்துதடு மாறும்
    கவிதை வரும் நேரம் இது கவனம்மிக வேண்டும்
    கருத்தில் ஒரு நெருப்புமலர் கட்டவிழும் நேரம்
    கவிதைவரும் நேரம் இது கவிதைவரும் நேரம்

    மலருதிரும் ஓசையிலும் மனமதிரும் நேரம்
    மதகுடைய வேண்டியொரு நதிபுரளும் வேகம்
    மண்மரகதங்களும் விண்ணதிசயங்களும்
    பண்வடிவம் ஏற்கத் தவம் செய்யும் கோலம்
    கவிதைவரும் நேரம் இது கவிதைவரும் நேரம்

    சுவர்க்கோழி சில்வண்டு ஸ்ருதிசேர்ப்ப தைக்கண்டு
    சிரக்கம்பம் செய்யும் சிறுதென்னம் பாளை
    புதிதாக வருகின்ற பூந்தென்றல் காற்றுக்குச்
    சதகோடி விண்மீன்கள் மாலை மரியாதை
    கவிதைவரும் நேரம் இது கவிதைவரும் நேரம்

    தவிக்கின்ற நெஞ்சத்தில் தணலாய் எழுந்து – பசுந்
    தளிர்க் கரங்களில் பனித் துளியாய்ப் படர்ந்து
    கவிழ்கின்ற மேகங்க ளுக்குள் கலந்து
    சிரிக்கின்ற தேயொரு கவிதைக் கொழுந்து
    கவிதைவரும் நேரம் இது கவிதைவரும் நேரம்

    கவிதையைச் சுமந்து வரும் பூந்தென்றல் காற்றுக்குச் சதகோடி விண்மீன்கள் மாலையிட்டு மரியாதை செய்யுமாமே!

    இதற்குக் காரணம் என்ன? கவிதை உதிக்கும் கணத்தில், ஓர் அதிசயம் நடக்கிறது. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் அந்த அதிசயம் நடக்கும் போதுதான் கவிதை உதிக்கிறது. அது என்ன அதிசயம்?

    இந்த உடற்கூட்டுக்குள் அடங்க மறுத்து, இந்த உலக எல்லைகளையும் ஏற்க மறுத்து, எல்லையற்ற வானமாய்த் தானே விரியத் துடிக்கும் ஆதங்கம், பிடிவாதம், வெறி, நெஞ்சில் உண்டாகி, அது மிகும் போது, அதன் கனம் தாங்காமல், நினைவுக்குமிழ் வெடித்துச் சிதற, அதனால் மிக லேசாகி, ஒரு விடுதலை உணர்வோடு அந்த உயிர்த்துடிப்பு உயர உயரப் பறந்து செல்கிறது. ஏதோ ஓர் உயரத்தில், முன்பு யாரோ ஒரு மஹாகவியின், அல்லது, மஹரிஷியின் சங்கல்பத்தில் உருவாகி, ஏதாவது ஓர் உயிர்த்துடிப்பு வந்து தன்னைப் பற்றிக் கொள்ளாதா என்று காத்துக் கொண்டிருக்கும் சலன அலைகளை அது சந்திக்க நேரிடலாம். அந்தச் சந்திப்பே ஒரு யுகசந்திப்பு. அந்தச் சந்திப்பே ஒரு சங்கமம் ஆகும் போது, அந்தச் சங்கமத்தில் ஜனிப்பதுதான் உயர்கவிதை. அப்படியோர் யுகசந்திப்பின் சங்கமத்தில் ஜனித்து வரும் ஒரு மகத்தான கவிதையின் பிறப்பை உலகமே, இயற்கையே ஒரு மாபெரும் வைபவமாகக் கொண்டாடுகிறது. இதுதான் கவிதையின் ஜனன ரகசியம்.

    என்னய்யா கதையளக்கிறாய்? இதை யார் சொன்னது. யாரா? கவிதைதான். கவிதையே தன் ஜனன ரகசியத்தை எனக்கு அறிவுறுத்தியது.

    வெறிகொண்டு விட்டேன் கவிதை வெறி கொண்டு விட்டேன்
    நர்த்தனச் சொற்களில் நானுலா போகவும்
    நடனமே நடையாகவும் – விழி
    மத்தளம் கொட்டி வியப்பிலே மூழ்கவும்
    மீண்டும் மீண்டும் பாடவும்
    வெறிகொண்டு விட்டேன்
    துரிதகதியில் மனம் துணிவு பெறவும் நடை
    துவளாத லயம் சேரவும்
    பரிதியுதயம் வெண் பனியில்நிகழும் தனிப்
    பரவசம் உருவாகவும்
    சிறிதுசிறிதாய் இழை பிரியுமுணர்வே ஒரு
    சித்திரத் தறியாகவும்
    சிந்தனைக் குள்ளே சிறகடிக்கும் வண்டுயிர்ச்
    சங்கிலே நின்றூதவும்
    வெறிகொண்டு விட்டேன்
    வானைப் பிளக்கும் வைரக் கரங்கள்
    இடிமுழக்கம் செய்வதாய் – அலை
    வாரித் தெறிக்கும் கடல்திகைக் கும்படி
    வார்த்தைப் பிரளயம் நிகழ்வதாய்த்
    தேன்பிலிற்றும் சொற்களுக்குள் – ஒளித்
    திகிரியே உருகி விழுவதாய் – அண்டக்
    கோளமெல்லாம் குலைநடுக்கத்துடன் நேர்க்
    கோட்டிலே வந்து நிற்பதாய்ப்
    பாட்டிலே என்மனக் கூட்டிலே பலகோடி
    வீணைகள் தாமே ஒலிசெய்வதாய்
    ஒவ்வொன்றிலும் ஒரு ஸ்வரமாகவே விண்
    மீன்களெல்லாம் நின்றதிர்வதாய்த்
    திமிர்பிடித்த யானை சிறகெடுத்துப் பறக்கும்
    தினவிலே எக்காளக் கனவிலே
    சுக்கு நூறாக வெடித்துச் சிதற
    வெறிகொண்டு விட்டேன்
    கனவுகளாய் மனவாசல் தோறும்
    சிதறிக் கிடக்கிறேன்
    படிக்க முயன்றால் பறந்து விடுவேன்
    பணிந்து கேட்கிறேன்
    காலடி ஓசை கேட்டால் கூட க்
    கலைந்து போய்விடுவேன் – மூச்சுக்
    காற்றில் பாதை அமைத்தால் உள்ளே
    நுழைந்து வளர்ந்திடுவேன்

    எப்படியிருக்கிறது கதை! புத்தி சிகாமணி எதுவுமே பேசாமல் உம்மென்று இருக்கிறானே! அவன் கூட தியானத்தில் இருக்கிறானோ!

    இப்படிக் கவிதை வெறி ஒருபுறம். வக்கீல் தொழில், குடும்பம், காதல் மனைவி, மறுபுறம். இழுபறிதான். ஆனால், ஷோபனா அடிக்கடி ஒன்று சொல்வாள். அவள் மேல் எனக்குள்ள காதலே, என் அக எழுச்சிக்கு, அதாவது, கவிதை வானில் மென்மேலும் சிறடித்துப் பறப்பதற்கு ஒரு தடையாகி விடக் கூடாது என்பதே அவள் கவலை. மேலே கண்ட கவிதையை நான் எழுதுவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன், என்னுடைய 25-ஆவது பிறந்த நாளன்று, சரியாகச் சொல்வதென்றால், அதற்கு முதல்நாள் மாலை, 12-01-1978 மாலை, அவள் இந்தக் கவலையை ஒரு கவிதையாகவே ஆங்கிலத்தில் வடித்துத் தந்தாள்:

    It’s a long time since I wrote to you
    In the words of song and honey dew
    But now my Love lends to my words
    The lilt of life and song of birds

    In the rush of time I wonder most
    What made me worth your heart as host;
    Though I may stumble, every time
    You straighten me with thoughts sublime

    What bade you bear my wounds and woe?
    What shade of rest do I give you?
    For every frown upon my face,
    Why should your heart pound twice apace?

    Let not Love be your tragic flaw
    As blessed muse I speak this law
    The gale of Life may lash me down
    You stay away, do not be blown

    You wear a halo round your crown
    Don’t crowd it with a worldly frown
    As blessed Muse I speak this law
    Let not Love be your tragic flaw

    இந்தக் கவிதையை நான் எப்படித் தமிழாக்கம் செய்வேன்?

    உனக்குநான் எழுதி வெகு நாட்களாயின
    பாடற் சொற்களைத் தேனில் நனைத்து
    இன்றென்
    காதலே சொற்களுக்குக் கொடை வழங்கியது
    உயிர்த்துடிப்பும் பறவையின் கானமும் குழைத்து
    இப்படித் தொடங்கி வளர்ந்த அந்தக் கவிதையில் இரண்டு வரிகள் அமர வரிகள்.

    “காதலே உன் வீழ்ச்சிக்குக் காரணம் ஆகிவிட வேண்டாம்; அருள்பெற்ற வாணியாய் இந்த விதிசெய்கிறேன்”

    மன்னிக்கவும். அந்த ஆங்கிலக் கவிதையை அப்படியே மொழிபெயர்க்க முடியவில்லை. தோற்றுவிட்டேன். வேறு சொற்களில் அடைபட மறுக்கும் அதன் ரெளத்திரத்தை நான் மதிக்கிறேன். கவித்திறத்தை மிஞ்சிய அதன் பவித்திரத்தை நான் வணங்குகிறேன்.

    அடாடா, எனக்கு எல்லாமே கவிதைதானா? ஆம், பள்ளியில் கவிதை, பத்திரிகை நடத்தினால் கவிதை, காதலில் கவிதை, களித்தால் கவிதை, கவலைப் பட்டாலும் கவிதை, திரைப்படம் எடுத்தால் கவிதை, நாடகம் போட்டால் கவிதை ….

    “இரு, இரு! கொஞ்சம் பொறு அப்பா. நாடகம் போட்டால் என்று பள்ளி நாடகத்தைத்தானே சொல்கிறாய்?” கேள்வி எழுகிறது.

    பள்ளியில் போட்ட நாடகத்தைச் சொல்லவில்லை. திருமணம் ஆன பிறகு ஒரு நாடகம் போட்டோம். அந்தக் கதையை அப்புறம் சொல்கிறேன்.

    (தொடரும்)

    Share
  • சுதந்திரம்!

     

    கே.ரவி

    1959363_1524648954434992_6619161968674812884_n

    இந்தியச் சுதந்திரம் வீர சுதந்திரம். பலருடைய உயிர்த்தியாகத்தில் வளர்ந்தது நம் சுதந்திரப் போராட்ட வேள்வி. அவர்களுடைய தியாகத்தைக் குறைத்து மதிப்பிடுவது சரியில்லை.

    கத்தியின்றி ரத்தமின்றி வந்த சுதந்திரம் என்பது ஒரு நோக்கில் சரிதான். நாம் ஆயுதப் புரட்சியால் விடுதலை பெறவில்லை. நம்மை அடக்கியாண்ட வெள்ளைப் பரங்கியரின் ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடச்செய்து சுதந்திரம் வாங்கவில்லை. ஆனால் நம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் ரத்தத்தைச் சிந்திப்பெற்ற சுதந்திரம் இது என்பதை மறந்து விடக் கூடாது. மீண்டும் பாரதி வரியை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்:

    “வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்பு

    வேறொன்று கொள்வாரோ”

    இது வீர சுதந்திரம். விண்ணப்பச் சுதந்திரம் இல்லை. மிதவாதிகளைப் பெட்டிஷன் காங்கிரஸ், அதாவது, வெள்ளைக்காரனிடம் விண்ணப்பம் போட்டே சுதந்திரம் வாங்கி விடலாம் என்று மனப்பால் குடிக்கும் நிதானக் கட்சியினர் என்று பாரதி கடுமையாக விமர்சித்தான்.

    எனவே, வாங்கிய சுதந்திரத்தின் மதிப்பைக் குறைக்கும் எதையும் நாம் சொல்லத் தேவையில்லை; சொல்லத் தேவையில்லை. ஆனால், என் இனிய கவிதைச் சகோதரர்களே அப்படிச் சொல்லும் போது என் மனத்தில் ஒரு வலி உண்டாகிறது.

    “நள்ளிரவில் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை” என்ற வரி மேடைகள்தோறும் முழங்கப் படும் வரி. இன்னும் வாழ்க்கையில் வளம் பெற முடியாத ஏழைகளின் இதயத் துடிப்பை அந்த வரி எதிரொலித்தாலும், சுதந்திரத்துக்குப் பிறகு நம் நாடு எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை நாம் ஒரேயடியாக மறுக்க முடியாது. பல முட்டுக்கட்டைகளைக் கடந்து, சோதனைகளை எதிர்கொண்டு, எதிர்நீச்சல் போட்டபடி நாம் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறோம். நம்பிக்கை இழக்கத் தேவையே இல்லை.

    பொருளாதார மேடு பள்ளங்கள் பெருமளவில் சமன் செய்யப் படுகின்றன. ஜாதி, மத துவேஷங்கள் பெருமளவு குறைந்துள்ளன. அன்றாட வாழ்க்கையில் இந்தக் கூற்றுகளை நிரூபிக்கும் சான்றுகள் ஏராளம்.

    இன்று அன்னதானம் என்று உணவு வழங்கினால், அடிதடியாகக் கூட்டம் அலைமோதுவதில்லை. அழைத்து அழைத்துக் கொடுக்க வேண்டும். பட்டினிச் சாவுகள் இல்லை. என் வீட்டில், என் பாட்டிக்கு நடந்த திவசம் என்ற திதி விருந்தில், தலித் வகுப்பைச் சேர்ந்த என் சக வழக்கறிஞர் என்னோடு அமர்ந்து விருந்து அருந்திய நிகழ்ச்சி முப்பது ஆண்டுகளுக்கு முன்பே எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடந்தது. என் ஒரு மறுமகன் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவன்.

    இப்படியெல்லாம் சொல்வதால், நம் பொருளாதாரம் மிகச் சிறந்த நிலை அடைந்து விட்டதென்றோ, நம் நாடு ஒரு சமத்துவச் சமதர்மப் பூங்கா என்றோ, இங்கே ஜாதி, மத பேதங்களே இல்லை என்றோ நான் சொல்ல வரவில்லை. சுதந்திரத்துக்கு முன் இருந்ததைக் காட்டிலும் நாம் எவ்வளவோ மேம்பட்டிருக்கிறோம் என்பதுதான் என் கருத்து. நம் வளர்ச்சியை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ள வேண்டியதில்லை.

    பொதுவாக மனிதர்களுக்கு, எல்லா நாட்டினர்க்கும், இருக்கும் சில மனோபாவங்கள், சில சுயநலங்கள் நம் மக்களுக்கும் இருக்கின்றன என்பதை நாம் பெரிது படுத்தத் தேவையில்லை. நாம் பார்க்க உலகின் முக்கால் பங்கை ஒருகுடைக்கீழ் ஆண்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இன்றைய நிலையென்ன? அவர்களுடைய பொருளாதாரம் சரிந்த நிலையில்தான் இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன் வரை எதற்கெடுத்தாலும், ‘ஜப்பானைப் பார்’ என்று சொல்லி வந்தோம். இன்று ஜப்பானின் பொருளாதார நிலை கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. ஆனால், நாம் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறோம்.

    இன்று இஸ்ரேல், பாலஸ்தீனம் இடைப்பட்ட காஜா முனையில் ஆயிரக்கணக்கானவர்கள் குண்டுமழையில் கொன்று குவிக்கப் படுகின்றனர். நம் நாட்டில், அல்லது நம் எல்லையில் அப்படி நடக்கவில்லையே!

    பொருளாதாரம் அவ்வப்போது பின்னடைவு கொள்வதும், பிறகு சீராவதும் எல்லா நாடுகளிலும் நடக்கத்தான் செய்கிறது. அமெரிக்காவில் கூடச் சென்ற நூற்றாண்டின் முதற் பகுதிய்ல் ‘த கிரேட் டிப்ரஷ்ன்’ எனப்படும் பொருளாதார பாதாளநிலை ஏற்பட்டது. உண்பதற்கு உணவின்றி மக்கள் தெருக்களில் அடித்துக் கொண்ட நிலை அங்கே ஏற்பட்டது. சில ஆண்டுகளில் நிலைமை சீர்படவில்லையா? இப்பொழுது அமெரிக்கா மீண்டும் பாதாள நிலைக்குப் போய்க் கொண்டிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதெல்லாம் சகஜம். எப்படி ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் உண்டோ அப்படித்தான் ஒவ்வொரு நாட்டுக்கும்.

    பொதுவாழ்வில், குறிப்பாக நிர்வாக மேலாண்மையில் ஊழல் அதிகரித்து விட்டது என்ற குற்றச் சாட்டில் ஓரளவு உண்மை இருக்கிறது. எப்போதுமே, மேல் பதவிகளில் இருந்தவர்கள் ஊழல் புரிந்திருக்கிறார்கள். ஆனால், அவற்றைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தும் சாதனங்கள் இப்போது இருப்பது போல் அப்பொதெல்லாம் இல்லை. மேலும் ஆயிரங்களாக இருந்த ஊழல் மதிப்பு இப்பொழுது நினைத்துப் பார்க்க முடியாத அளவு பல பூஜ்யங்களைச் சேர்த்துக் கொண்டு லட்சோப லட்சம் கோடிகளாக மாறியதற்கு ஒரு காரணம், பணத்தின் மதிப்புக் குறைந்து விட்டது; இன்னொரு காரணம், ஊழலுக்கு ஏற்ற களங்களின் சந்தை மதிப்பு மிகவும் அதிகரித்து விட்டது. ஒரு பொது காண்டிராக்ட், ஒப்பந்தம் முன்பெல்லாம் லட்சங்களில் இருந்தது. இப்போது பல்லாயிரம் கோடிகளாக உயர்ந்து விட்டது. 2 ஜி ஊழலே சாட்சி.

    ஊழலை ஒழிக்க வேண்டுமென்றால், இன்னும் இருக்கும் ஜாதி, மத துவேஷங்களை அழிக்க வேண்டுமென்றால், நாடு மேலும் வளம் பெற்று உயர வேண்டும் என்றால் இன்னின்ன செய்ய வேண்டும் என்று பல பட்டியல்கள் பலர் கொடுக்கலாம். எனக்குத் தெரிந்தவரை ஒரு முக்கியமான மனமாற்றம் மக்களுக்கு, அதுவும், கல்வியில் பின்தங்கியுள்ள மக்களுக்கு, ஏற்பட்டால் அது ஓரளவுக்கு ஊழல் குறையவும், ஜாதி, மத, இன பேதங்களால் ஏற்படும் பூசல்கள் குறையவும், வளம் பெருகவும் உதவக் கூடும் என்று நம்புகிறேன்.

    அது என்ன மனமாற்றம்? பாரதி சொன்ன, “நாம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்ற தாரக மந்திரத்தின் முழுப் பொருளையும் நன்கு உணர்வதே அந்த மனமாற்றம். நாம் இன்னும் தலைவர்கள் என்றொரு தனி ஜாதியை வைத்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் ‘நிரந்தரத் தலைவனே/தலைவியே’ என்று வேறு புகழாரம் சூட்டுகிறோம்.

    இந்த மனோபாவம் மாற வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பிரதம மந்திரி எல்லாருமே மக்களுடைய பணியாளர்கள். அவர்கள் யாருமே தலைவர்கள் இல்லை; நம்மால் பணியில் அமர்த்தப்பட்ட நம் வேலைக்காரர்கள். அவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என்று தட்டிக் கேட்கும் உரிமை பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. தேர்தலில் வாக்குக் கேட்டு வரும் வாக்காளர்களிடம், உங்கள் தலைவர்கள் மக்களே, உங்கள் கட்சியின் நிர்வாகிகள் தலைவர்கள் இல்லை என்பதைச் சொல்லி அதை வெளிப்படையாகவும், தேவைப்பட்டால் எழுத்து மூலமான உறுதிமொழியாகவும் அவர்களிடம் பெற வேண்டும் இந்த விழிப்புணர்ச்சி எல்லா மக்களுக்கும் வந்துவிட்டால் அதுவே பெருமளவு பொதுவாழ்க்கைத் தூய்மைக்கு வழிகோலும் என்பது என் நம்பிக்கை.

    காங்கிரஸிலோ, திரினாமூல் காங்கிரஸிலோ, மாயாவதி கட்சியிலோ, தமிழ்நாட்டுத் திராவிடக் கட்சிகளிலோ, தே.மு.தி.க., பா.ம.க. போன்ற மாநிலக் கட்சிகளிலோ, தலைமையை எதிர்த்துக் குரல் கொடுத்துவிட்டு யாரும் கட்சியில் நீடிக்க முடியாது. தலைமைக்கு எதிராகக் கருத்துச் சொல்லும் சுதந்திரம் இந்தக் கட்சிகளில் இல்லை. தன் கட்சித் தலைவர்/தலைவி எதிரில் தைரியமாக உட்காரும் சுதந்திரம் கூட இந்தக் கட்சிக்காரர்களுக்குக் கிடையாது. இவர்களையெல்லாம் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு நாம் சுதந்திரம் பற்றிப் பேசுவதே தவறு.

    எனக்குத் தெரிந்தவரை இந்தக் குறைபாடு இல்லாத கட்சிகள் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி, இன்னொன்று பாரதிய ஜனதா கட்சி. சாதாரண நிலையில் இருந்து எந்தப் மரபுப் பின்னணியும் இல்லாத நரேந்திர மோடி, அந்தக் கட்சியின் பழம்பெறும் தலைவர்களை எல்லாம் ஒதுக்கி விட்டுத் தலைமை நிலைக்கு வரமுடிந்ததே அந்தக் கட்சியின் வலிமை என்று கருதுகிறேன். ஆனால், இதே நிலை நீடிக்குமாற மோடி அவர்கள் செயல்பட வேண்டும். அதாவது, தம்முடன் கருத்து வேறுபடும் நபர்களைத் தள்ளிவிடாமல், கட்சிக்குள் கருத்துப்போர் நடத்திக் கருத்துத் தெளிவு ஏற்படும் சூழலைப் பாதுகாக்க வேண்டும். மாற்றுக் கருத்தைக் கருத்து வலிமையால் மட்டுமே சந்திக்க வேண்டும். தேவைப்பட்டால் தன் கருத்தை மாற்றித் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை வலிமையாலும், பண, அதிகார வலிமையாலும் மாற்றூக் கருத்துகளை அடக்க நினைக்கும் சரிவுக்கு அந்தக் கட்சி ஆளாகாமல் இருக்கும் வரை, கட்சியின் உள்கட்சி ஜனநாயகம் சிதையாமல் இருக்கும் வரை நாட்டுக்கு நல்லது.

    நம்பிக்கை இழக்க வேண்டாம், சகோதர, சகோதரிகளே. நம் முன்னோர்கள் நமக்கு நல்ல நாட்டைத்தான் விட்டுச் சென்றிருக்கிறார்கள். நாம் மேலும் நல்ல நாடாக நம் பிள்ளைகளுக்கு இதை விட்டுச் செல்வோம் என்பது உறுதி. பாரதி நம் நாட்டைப் பற்றிச் சொன்னதை மறக்கவே வேண்டாம்:

    “பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு.”

    எப்பொழுதும் நல்ல நாடாகவே இருப்போம்.

    வந்தே மாதரம்!

    Share
  • காற்று வாங்கப் போனேன் (32)

    கே.ரவி

    arvதிடீரென்று போன பகுதியில் நண்பன் கண்ணன் என்றொரு புதுமுகத்தைச் சந்தடி சாக்கில் நுழைத்து விட்டேனே. அவனைப் பற்றிச் சொல்ல வேண்டாமா? சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் நான் பதினோராம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, அதே பள்ளியில் எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த என் ஜூனியர்தான் கண்ணன். அவனுக்கும் உள்ளுக்குள் கவிதையார்வம் இருந்ததைக் காலப் போக்கில் நான் தெரிந்து கொண்டேன். நானும், நண்பர்களும் சிந்தனைக் கோட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, அவன் தான் எழுதிய “சொர்க்கச் சுழல்” என்ற கவிதைக் குறுங்காவியத்தை என்னிடம் காட்டினான். அதில் நல்ல கவிதையோட்டம் தென்பட்டது. அதை அச்சடிக்கப் போதிய பணம் இல்லாத நிலையில், 50 பிரதிகள் சுழற்பதிவு (ஸைக்லோஸ்டைல்) செய்து சென்னை, மத்திய நூலக அரங்கில் அதற்கு ஒரு வெளியீட்டு விழாவும் நடத்தினோம்.

    அந்த விழாவில் எங்கள் ஆசான் தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன் கண்ணனுக்கு எழுதிய வாழ்த்து வெண்பா இப்பொழுது கிடைத்தது:

    கவிகண்ணன் வாழ்வில் கவிக்கண்ண னாகச்

    செவிக்கினிய செம்பாடல் சேர்த்தான் – புவிப்புகழைப்

    பற்றுகவே இன்றமிழில் இத்தொண்டு கற்கண்டு

    சுற்றுகவே சொர்க்கச் சுழல்

    A_perfect_sunrise_by_jchanders

    அதன் பிறகு, பல ஆண்டுகள் கழித்து, நான் ஐ.ஏ.எஸ்., அதாவது இந்திய அரசுப் பணிக்கான தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த போது எனக்கு அவன் பொருளாதாரப் பாடம் சொல்லிக் கொடுத்துத் நான் தேர்ச்சிபெறத் துணை செய்தான்.
    1980-ஆம் ஆண்டு ஒருநாள் மந்தைவெளி நார்ட்டன் தெருவில் இருந்த வீட்டின் மொட்டை மாடியில் விடியற்காலைப் போதில் நான் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தேன். மெல்லச் சூரியன் தலைக்காட்டத் தொடங்கியதும், கண்ணை மூடிக் கொண்டு கதிரவன் உதயக் காட்சியில் மனத்தைப் பறிகொடுத்து, ஏறக்குறைய ஒரு தியான நிலையில் அமர்ந்திருந்தேன். என்னைச் சுற்றி யாரும் இல்லை. எனக்குள் இருந்து ஒரு கவிதை பீறிட்டுக் கொண்டு வந்தது. அது வந்த வேகத்திலேயே, பித்துப் பிடித்தவன் போல், அந்தக் கவிதை வரவர, அதைச் சத்தமாக சொன்னேன்.

    இதுதான் சமயம் இதயம் திறக்க

    இருவிழி களிலும் தீப்பொறி பறக்கப்

    பாடிக் கொண்டே ஓசை இழக்க

    உதயம் என்ற பெயரில் இங்கே

    பிடறி சிலிர்த்தொரு சிங்கப் பறவை

    பிறந்து விட்டது பார்

    சிதறிக் கிடந்த சிறுவிண் மீன்கள்

    ஓடி ஒளிந்தன பார்

    புதுமை வெள்ளம் புனலா வதுபார்

    புதைந்து கிடக்கும் நினைவுக் குள்ளே

    தங்கச் சூலம் தைப்பத னாலே

    தகதக வெனவொரு கனலா வதுபார்

    புதுமை வெள்ளம் புனலா வதுபார்

    உற்றுப் பாரொரு கணமே போதும்

    வெட்ட வெளியும் பற்றி எரியும்

    புரண்டு படுக்கும் பூமித் தாய்க்குப்

    புதிய கனவுகள் தோன்றும் நேரம்

    உற்றுப் பாரொரு கணமே போதும்

    வெட்ட வெளியும் பற்றி எரியும்

    புலரப் போகும் பொழுதுக் குள்ளே

    புகுந்து பார்த்துவிடு – நீ

    சுமந்தி ருக்கும் ஜோதியை அங்கே

    கொண்டு சேர்த்துவிடு – முடிந்தால்

    நீயே இங்கொரு காலைப் பொழுதாய்

    நீண்டு படுத்துவிடு

    நீயே இங்கு நிரந்தர மாகி

    இருட்டைத் தடுத்துவிடு

    இதுதான் சமயம் இதயம் திறக்க

    இருவிழி களிலும் தீப்பொறி பறக்கப்

    பாடிக் கொண்டே … பாடிக் கொண்டே …

    பாடிக் கொண்டே … ஓசை யிழக்க

    முடிக்கும் போது எனக்கு வியர்த்து விட்டிருந்தது, ஒரு மைல் தொலைவு ஓடிவிட்டு வந்ததுபோல். சற்று நேரம் நான் கண் மூடியபடியே உட்கார்ந்திருந்தேன். கண்திறந்ததும், என் பின்னால் யாரோ நிற்பது போல் நிழலாடியது. திரும்பிப் பார்த்தேன். கண்ணன் நின்று கொண்டிருந்தான். அவன் எப்பொழுது வந்தான் என்று கேட்டேன். “நீ வெறி பிடித்தவன் போல் கவிதை சொல்லிக் கொண்டிருந்த போதே வந்து விட்டேன்” என்றான்.

    இந்த நிகழ்ச்சியை நான் இங்குக் குறிப்பிடக் காரணம் உண்டு. ஒரு கவிதைப் பிரசவம் நிகழும் போதே, அதை அருகில் இருந்து பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எல்லாருக்கும் அந்தப் பேறு கிட்டாது. கண்ணனுக்கு அன்று அது வாய்த்தது. எனக்கு அந்த வாய்ப்பைப் பலமுறை வழங்கியவன் ரமணன். அவனுடைய பல கவிதைகள் உதயம் ஆகி வெளிப்பட்ட தருணத்தில் நான் அருகில் இருந்து பார்த்துக், கேட்டுப் பரவசப் பட்டிருக்கிறேன்.

    மேலே உள்ள கவிதை என் கவிதை வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம். அதற்கு முன்பு நான் நிறைய கவிதை எழுதியிருக்கிறேன். ஆனால் முதன் முதலாக அந்தக் கவிதையைத்தான், அது வரும் போதே, வரவர எழுதாமல் அப்படியே சுடச்சுட வாய்விட்டுச் சொன்னேன். கவிதை எப்படி அறிவின் பெருமுயற்சியின்றிக் கவிஞனை மீறி வெளிப்படுகிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்து கொண்டேன். புத்தி சிகாமணி கனைத்துக் கொள்ளும் சத்தம் கேட்கிறது.

    மேலே குறிப்பிட்ட கவிதையைச் சில நாட்களுக்குப் பிறகே தாளில் எழுதி வைத்தேன். எழுதிய போது எழுதிய நாளைக் குறிப்பிடாமல், அந்தக் கவிதை உதித்த நாளை மறக்காமல் குறிப்பிட்டேன். இந்த வழக்கமே பிறகு தொடர்ந்தது. அதற்குப் பிறகு நிறைய கவிதைகள் உதித்து வெகுநாட்களுக்குப் பிறகே தாளேற்றம் கண்டன. ஆனால் மேற்சொன்ன கவிதையைப் போல் வரும் பொழுதே உரக்கச் சொல்லப்பட்ட கவிதை அது மட்டுமே. அதற்குச் சாட்சியான கண்ணன் இந்தக் கவிதை வரலாற்றில் இடம்பிடித்தது நியாயம்தானே!

    “நீயே இங்கொரு காலைப் பொழுதாய் நீண்டு படுத்துவிடு” என்ற வரி என்னை அவ்வப்போது உலுக்கிக் கொண்டிருந்தது. அது சாத்தியமா? நடக்க முடியாத ஒன்றைக் கவிதையில் உயர்வு நவிற்சியாகச் சொல்லி விட்டேனோ? ஒன்று புரியத் தொடங்கியது. அறிவு நிலையில் நம்ப மறுக்கும் விஷயங்கள், நடக்கவே முடியாது என்று தோன்றும் விஷயங்கள் கவிதை நிலையில் அனாயசமாகச் சொற்களில் வந்து விழக்கூடும் என்பதைப் புரிந்து கொண்டேன். கை, கால், தசை, எலும்பு, குருதி, நரம்புகளால் ஆன இந்த உடல்தான் நான் என்ற நினைப்பின் ஆணி வேரை அசைக்கும் கவிதைகள் வரத் தொடங்கின. நான் வெறும் உடற்கூடு இல்லை. அதையும் கடந்து எங்கும் பரவ முடிந்த ஆன்மசக்தி. நானே இந்தப் பிரபஞ்சம். நானே அனைத்தும். காலங்களில் நான் மார்கழியாகவும், பொழுதுகளில் நான் உஷஸ் எனப்படும் வைகறையாகவும் இருக்கிறேன் என்று கீதாச்சாரியன் சொன்னதுபோல் என்னாலும், ஏன், எல்லாராலும் சொல்ல முடியும். ஒவ்வொரு துளியுமே எல்லையற்ற கடல் என்ற உணர்வு பெருகி வரலாயிற்று. தாகூரின் கீதாஞ்சலியின் வரிகளில் பொதிந்திருந்த மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கின. பூமண்டலத்தில் அன்பும் பொறையும் வளர்ந்து, புல், பூண்டு, பூச்சி, மரம், செடிகொடிகள், விலங்குகள் என எல்லா உயிர்களும் இன்புற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திட, ஞான ஆகாசத்தின் நடுவே நின்று தான் வாழ்த்த வேண்டும் என்று பாரதி விரும்பினானே, அந்தப் பேசாப் பொருளைப் பேசும் துணிச்சல் வந்தது.

    ஒருபுறம், இந்த உடம்பின் உபாதைகளையும், அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டே, இந்த வாழ்க்கையின் இழுபறிகளுக்கு ஆளாகி அத்தனை இடர்ப்பாடுகளையும் முக்கல், முனகல்களோடும், அம்மா, அப்பா என்று அரற்றிக் கொண்டே, தாங்கிக் கொண்டு வாழும் என் அகங்கார வாழ்க்கை!

    மறுபுறம், இதில் எதிலும் பட்டுக் கொள்ளாமல், தொலைவில் இருந்து வேடிக்கை பார்த்தபடி உலகம் முழுவதையும், அதன் ஒவ்வோர் அணுவையும், அதில் நிகழும் ஒவ்வோர் ஆச்சரியத்தையும் வியந்து, ரசித்துக் கொண்டு எனக்குள் பாடல்களாகப் பாடிக் கொண்டே இருக்கும் கவிதை வாழ்க்கை. இப்படி இரட்டை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது புரியத் தொடங்கியது.

    பல துன்பங்களுக்கு நடுவிலும், “எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்” என்று பாரதியால் எப்படிப் பாட முடிந்தது என்று புரிந்தது. “வையத் தலைமை கொள்” என்ற பாரதி மஹாவாக்கியம் அரசியல் தலைமை பற்றியில்லை என்பதும், தானே இந்தப் பிரபஞ்ச சக்தி என்ற தெளிவு பெறுதலே அத்தலைமையின் சாரம் என்பதும் புரியத் தொடங்கியது.

    இதெல்லாம் புரிந்து விட்டதாலேயே, உடல் வாழ்க்கை, உலக வாழ்க்கை மாறிவிடுவதில்லை. அதில் உழல்வதும், அதன் மேடு பள்ளங்களில் விழுந்தெழுந்து சுழல்வதும், சின்ன சின்ன இழப்புகளை எண்ணி உள்ளுக்குள் அழுவதும், அற்ப சந்தோஷங்களில் ஆழ்ந்து மகிழ்வதும், எதுவும் மாறவில்லை. இவற்றை மாற்றுவது கவிதையின் பணி இல்லை. ஆனால், இவற்றிலிருந்து அவ்வப்போது விடுபட வைத்தும், சிறகு தந்து பறக்க வைத்தும், தான் பறந்து திரிவதற்காகவே விரிந்து கிடக்கும் வானம் தானே என்ற விரிவை உணர வைத்தும் கவிதை ஏதோ ஒரு வழியில் நம் ஆன்மப் பயணத்தின் இலக்கோடு ஒரு தொடர்பை உருவாக்கித் தருகிறது என்று தெரிந்து கொண்டேன்.

    மேலே நான் குறிப்பிட்ட ‘இதுதான் சமயம்’ கவிதையைப் பற்றி இரண்டு குறிப்புகள் சொல்ல வேண்டும்.

    வானவில் பண்பாட்டு மையம் பாரதி விழா நடத்தத் தொடங்கிய கதையை முன்பே சொல்லிவிட்டேன். முதல் ஆறு வருடங்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்திலும், நாரத கான சபாவிலும், ம்யூஸிக் அகாடமியிலும் பாரதி விழா நடத்திக் கொண்டிருந்த வானவில் பண்பாட்டு மையம் 2000-ஆம் ஆண்டிலிருந்து திருவல்லிக்கேணியில், துளசிங்கப் பெருமாள் கோவில் தெருவில் பாரதி தன் இறுதி மூச்சை விட்ட பாரதி நினைவு இல்லத்தில் அதைக் கொண்டாட முன்வந்தது. இதற்குக் காரணம் கவிமாமணி குமரிச் செழியன். அவர்தான் அந்த யோசனையைச் சொன்னார். அந்த யோசனைப்படி அந்த ஆண்டிலிருந்து பாரதி விழாவை பாரதி நினைவு இல்லத்திலேயே ஆண்டுதோறும் மூன்று அல்லது நாலு நாட்கள் கொண்டாடி வருகிறோம். எட்டையபுர ஜமீந்தாருக்கு பாரதி எழுதிய சீட்டுக் கவியில், “சொற்புதிது பொருள்புதிது சுவைபுதிது ஜோதிமிகு நவகவிதை எந்நாளும் அழியாத மாக்கவிதை” தந்த தன்னை ஜமீந்தார் ஊரெல்லையில் எதிர்கொண்டழைத்துத் தனக்குச் சாலுவை, பொற்பை, வயப்பரிவாரங்கள் தந்து ஜதிபல்லக்கில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மிகவும் கம்பீரமாகக் கேட்டிருந்தான். அவன் வாழ்நாளில் அது நடக்கவில்லை. அதனால், அவன் தனக்கென்று கண்ட அந்த ஒரே கனவை அவனுக்குப் பிறகாவது நிறைவேற்றி வைக்க, அவனுடைய பிறந்தநாளான டிசம்பர் 11-ஐக் கவிஞர் திருநாளாகக் கொண்டாடி, அன்று அவனுடைய உருவச் சிலையைப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, அதற்குச் சால்வை போர்த்தி, பொன்முடிப்புக் காணிக்கை வைத்துச் சிறுவர், சிறுமிகள் ஜதிசொல்லிக் கொண்டு நடனமாடிவர, கவிஞர் கூட்டம் புடைசூழ, அவனை யானை மிதித்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இருந்து பாரதி இல்லத்திற்குக் கொண்டுவரும் ஜதிபல்லக்கு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம்.

    as

    உவமைக் கவிஞர் சுரதா உயிருடன் இருந்த வரைக்கும் ஆண்டுதோறும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஜதிபல்லக்கைத் தம் தோளில் சுமந்த காட்சியையும், சில ஆண்டுகள் ஒருபுறம் இலக்கியச் செல்வர் குமரி அனந்தனும், மறுபுறம் என் உடன்பிறவாச் சோதரர் திரு.இல.கணேசனும் ஆக நாட்டின் இருப்பெறும் தேசிய இயக்கங்களின் தலைவர்கள் ஜதிபல்லக்கைச் சுமந்து வந்த காட்சியையும் என்னால் மறக்கவே முடியாது.

    இசைக்கவி ரமணன் பாடியது போல, “இதுபோதும் அம்மா இதுபோதும் ஈரேழு ஜென்மத்துக் கிதுபோதும்” என்று பாடிக் கொண்டே இருக்கத் தோன்றுகிறது.

    ஜதிபல்லக்கு முடிந்ததும் பாரதி இல்லத்தில் முழுநாள் கவிப்பொழிவு நிகழ்ச்சி நடைபெறும். சுமார் 200 கவிஞர்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாமல், உணவு இடைவேளை கூட இல்லாமல், கவிதை சொல்லும் நிகழ்ச்சி அது. இந்தக் கவிப்பொழிவு நிகழ்ச்சியைக் கவிமாமணி குமரிச்செழியனும், ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தின் செயலாளராக நாற்பதாண்டுகளுக்கு மேல் நற்பணியாற்றி வரும் திரு.கெ.பக்தவத்சலம் அவர்களும் ஒருங்கிணப்பாளர்களாக இருந்து ஆண்டுதோறும் நல்ல முறையில் நடத்தித் தருகிறார்கள்.

    a1

    ஒவ்வோர் ஆண்டும் கவிப்பொழிவில் நான் கலந்து கொண்டு கவிதை சொல்வேன். அந்த அரங்கின் ஓர் ஓரத்தில் எங்கிருந்தோ “பலே பாண்டியா” என்று பாரதி குரல் கொடுத்துப் பாராட்டுவதாக அவ்வப்போது உணர்ந்திருக்கிறேன். 2000-ஆம் ஆண்டுக் கவிப்பொழிவில், “இதுதான் சமயம்” என்ற கவிதையைச் சொன்னேன். சொல்லி முடித்துவிட்டு வந்ததும், அரங்கில் அமர்ந்திருந்த ஒளவை நடராஜன் அவர்கள் என்னைப் பாராட்டிவிட்டு சொன்னார்: “அது சரி ராஜா, நீ கவிதை படித்த போது ‘சிங்கப் பறவை’ என்ற சொல் காதில் விழுந்தது. தமிழில் சிம்புட் பறவை என்று சொல்வதுண்டு. அப்படி நீ எழுதியிருக்கலாமோ?” அவருடைய அந்தக் கேள்விக்கு நான் எதுவும் பதில் சொல்லவில்லை. ஆனால், பிடறி சிலிர்த்துக் கொண்டு ஒரு சிங்கம் பறக்கத் தொடங்கினால் எப்படியிருக்குமோ, அப்படிச் சூரியன் தன் கிரணங்களை விரித்துக் கொண்டு எழுந்த பிரும்மாண்டமான காட்சிச் சிறப்பைச் சிம்புட் பறவை என்ற சொற்சிமிழுக்குள் அடக்கிவிட முடியுமா என்ற பதில் கேள்வி என் மனத்தில் எதிரொலித்தது. அறிவைக் கடந்த மேற்பரப்புகளில் கவிதை சஞ்சாரம் செய்யும் நுட்பம் தெளிவாகியது. கவிதையை வெறும் அறிவுத் துலாக்கோல் வைத்து அளக்க முடியாது என்பது புரிந்தது. அறிவுக்கு முரணாகக் கவிதை அமையக் கூடாது என்று பாடம் சொன்ன ஒளவை நடராஜன் அவர்களுக்கு, அறிவே கவிதைக்கு எல்லையாகிவிடக் கூடாது என்று நான் பதில் பாடம் நடத்த முடியுமா? அவருக்குத் தெரியாதா என்ன? என் சிந்தனையைத் தூண்டுவதற்காகவே அவர் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கிறார் என்று எனக்குத் தெரியும்.

    “இதுதான் சமயம்” கவிதை பற்றிய இன்னொரு குறிப்பைச் சொல்ல இதுதான் சமயம்.

    கடந்த சில மாதங்களாகக் குரல் எழுப்பிப் பேசவும் சிரமப்படும் நிலை எனக்கு உண்டானது. கணீர் என்ற குரலில் சத்தமாகப் பேசியும், பாடியும் வந்த எனக்கு இது ஒரு பெரிய சோதனையாகியது. நீதிமன்றத்தில் வாதாடுவதிலும் மிகுந்த சிரமம் உண்டானது. நாலைந்து நாட்களுக்கு முன்பு என் முதல் மகளின் கணவன் ஷெளகத் என் வீட்டிற்கு வந்த போது ‘உன்னோடுநான்’ என்ற என் கவிதை நூலைப் புரட்டிப் பார்த்துவிட்டு, ‘அங்கிள், இந்த புக் எப்போ எழுதினீங்க?’ என்று கேட்டான். ஏறக்குறைய பதினந்து ஆண்டுகளுக்கு முன் என்று பதில் சொன்னேன். ஓ, சமீபத்தில் எழுதினீர்களோ என்று நினைத்தேன் என்றான். ஏன் அப்படி நினைத்தாய் என்று கேட்டேன். “பாடிக் கொண்டே ஓசை இழக்க” என்ற வரியால், எனக்குக் குரல் போனபின் அப்படி எழுதியிருப்பேனோ என்று நினைத்ததாகச் சொன்னான். தன்னால் பாட முடியவில்லயே என்று மனமுருகி நண்பன் சு.ரவி முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வரிகள் நெஞ்சில் அலைமோதுகின்றன:

    என் குரல் நாண்களிலே இசையே நீயேன்

    குலவ மறுக்கின்றாய் – இதமாய்க்

    குழைய மறுக்கின்றாய்

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் (31)

    கே.ரவி

    குருநாதர் நித்யானந்தம்
    குருநாதர் நித்யானந்தம்

    1989-90 என்று ஞாபகம். என் குருநாதர் டாக்டர் நித்யானந்தம் ஒரு பழைய நூலை என்னிடம் தந்து அதைப் படித்து ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றார். அதில் மாணிக்க வாசகப் பெருமான் அருளிய ‘ஞானத் தாழிசை‘ மூலமும் அதற்குத் தமிழில் ஒரு பெரியவர் எழுதிய உரையும் இருந்தன. படித்தேன். தோய்ந்தேன். நான் ஏதோ அனுபவத் தெளிவு பெறுவதற்காகவே அந்த மூலநூல் எழுதப்பட்டதோ என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அதற்காக பாடல்களுக்குத் தரப்பட்டிருந்த பழைய உரை எனக்கு நிறைவு தரவில்லை. இதை டாக்டரிடம் சொன்னேன். என் குருநாதரை நானும், என் சக சீடர்களும் டாக்டர் என்றுதான் அழைப்போம். உனக்கு என்ன தோன்றுகிறதோ, எப்படித் தோன்றுகிறதோ அப்படியே எழுது என்று அவர் கட்டளையிட்டார்.

    தமிழ் இலக்கணத்தில், விருத்தம், துறை, தாழிசை என மூன்று பாவினங்கள் சொல்லப் படுகின்றன. ‘ஞானத் தாழிசை’ நூல், பன்னிரண்டு ஆசிரிய விருத்தங்கள் கொண்ட நூல். ஆனால் அதற்கு ‘ஞான விருத்தம்’ என்று பெயர் தராமல், ‘ஞானத் தாழிசை’ என்ற பெயர் ஏன் வழங்கப் பட்டது என்பது முதலில் புரியவில்லை. முழுதும் படித்து, ஆங்கிலத்தில் உரை எழுதும் போதுதான் அந்த மர்ம முடிச்சு அவிழ்ந்தது.

    நாம் எவ்வளவுதான் ஞானத்தைத் தேடியலைந்தாலும், எவ்வளவு உயர, உயரப் பறந்தாலும் ஞானம் கிட்டாது; ஞானமே இசைந்து, தாழ்ந்து வந்து, நம்மை வரவேற்று, நம்முள் இசையாகக் கலந்தாலன்றி. அப்படித்தான் என் குருநாதரும் என்னைத் தேடி வந்து ஆற்றுப் படுத்தினார். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இறைவனே ஒரு மனித வடிவிலோ அல்லது வேறு வடிவிலோ இறங்கி வந்து குருநாதனாக ஆற்றுப் படுத்துவான். இதை ஆங்கிலத்தில் ‘டிஸென்டென்ஸ்’ (descendance) என்று சொல்வார்கள். ஞானம் தமக்குள் இறங்கி வந்த அனுபூதியை மாணிக்கவாசகப் பெருமான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பாக்கள் என்பதைக் குறிக்கவே விருத்தங்கள் கொண்ட நூலுக்கு, ‘ஞானத் தாழிசை’ என்று பெயர் தரப்பட்டதாகத் தோன்றியது. தாழிசை என்ற பாவகையிலேயே அந்த நூலின் பாடல்கள் அமைந்திருந்தால் அதன் பெயர்க் காரணம் பற்றிய சர்ச்சையே எழுந்திருக்காது, இந்தக் குறிப்பை உணர வாய்ப்பின்றிப் போயிருக்கும். எனவே, காரணத்துடன்தான், ‘தாழிசை’ என்று பெயர் சூட்டிவிட்டு, விருத்தங்களில் அந்தப் பாக்கள் எழுதப்பட்டன என்று தோன்றியது.

    இந்தப் பாக்களை மாணிக்கவாசகப் பெருமான் பாடினார் என்பதைப் பண்டிதர்கள், அதுவும் சைவநெறியில் தோய்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதன் நடையும் திருவாசக ஆசிரியர் நடையை ஒத்ததாக இல்லை. ஆனாலும் இந்தப் பாக்கள் மாணிக்கவாசகர் அருளிய பாக்களே. இது என்ன புதிர்?

    இந்தப் பாடல்களுக்கான உரை எழுதும் போது ஒரு செய்தி இந்தப் பாடல்களில் இருந்து பெறப்பட்டது. அது என்ன? திருவாசகத்தில், சிவபுராணம் பகுதியில், மாணிக்கவாசகரே சொல்கிறார்:

    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்ad

    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

    செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்

    இதில் ஒன்று கவனிக்க வேண்டும். மனிதப் பிறவி எடுக்கும் முன்பு பல பிறவிகளும், மனிதப் பிறவிக்குப் பிறகு பல பிறவிகளும் எடுத்ததாக அவர் சொல்கிறார். மனிதனாக வாழ்ந்து மரணம் அடைந்த பின்பு, பேயாகவும், அசுரராகவும், முனிவராகவும், தேவராகவும் பிறக்கும் வாய்ப்பைச் சுட்டிக் காட்டுகிறார். இப்படி எல்லாப் பிறப்பும் எடுத்து விட்டாலும், பிறவாநிலையாகிய வீடுபேற்றை அடைய வேண்டுமானால், கந்தர்வனாகவும், தேவனாகவும், தவ முனிவனாகவும், மேல் படிகளில் சஞ்சாரம் செய்த பிறகு மீண்டும் நிறைவாக ஒருமுறை மனிதப் பிறவி எடுத்த பிறகே முக்தி கிட்டும் என்ற ஒரு நுட்பத்தை ஞானத் தாழிசை நூலின் பாடல்கள் எனக்குக் குறிப்பாக உணர்த்தின.

    இப்படி இரண்டாவது முறை மனிதப் பிறவி எடுப்பவர்களே ‘இருபிறப்பாளர்கள்’ என்று பழைய மறைநூல்களில் குறிக்கப் பட்டனர். அடுத்தடுத்துப் பல மனிதப் பிறவிகள் எடுப்பவர்கள் இந்தப் பட்டியலில் சேர மாட்டார்கள். மனிதப் பிறவிக்குப் பிறகு, சில காரணங்களால், பேயாய், கணங்களாய், வல்லசுரர்களாய் இருந்து விட்டு மீண்டும் மனிதப் பிறவி எடுப்பவர்களும் இந்தப் பட்டியலில் சேர முடியாது. மனிதப் பிறவியில் இருந்து உயர் தளங்களுக்குப் பதவி உயர்வு பெற்று, உயர் பதவிகள் எல்லாம் வகித்த பிறகு, பணி ஓய்வாகிய மோட்சம் அல்லது வீடுபேறு அடைவதற்கு முன்பு, மீண்டும் கர்மபூமியில், மிச்சமுள்ள கர்ம பலன்களைக் கழிக்க மனிதப் பிறவி எடுப்பவரே இருபிறப்பாளர்கள். ஒருவன் இந்தப் பொருளில் இருபிறப்பாளன் என்பதை அவனுக்குத் தக்க தருணத்தில் நினைவுறுத்தவே அப்படிப்பட்டவனுக்கு தக்க குருநாதரால் பிரம்மோபதேசம் செய்து வைத்துப் புனித நூல் அணிவிக்கும் வழக்கம் ஏற்பட்டது. ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறப்பவர்கள் எல்லாரும் இருபிறப்பாளர்கள் என்பதாகவும், மற்ற ஜாதிகளில் பிறந்தவர்கள் எவரும் இருபிறப்பாளராக இருக்க முடியாது என்பது போலவும் ஒரு தப்புக் கணக்கு எப்படியோ மதத்தின் பெயரால் நம்மிடையே பரவிவிட்ட ஒரு நச்சுக் கருத்து. பாரதி சொன்னது போல்:

    கலகத்து அரக்கர் பலர் எங்க முத்து மாரியம்மா

    கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் எங்க முத்து மாரியம்மா.

    பறையடியத்துக் கொண்டு சேரி மக்கள் பாடும் பாட்டாக இதை அமைத்து, பல நூற்றாண்டுப் பிழையைத் திருத்த முன்வந்த பாரதியின் துணிவும், தெளிவும் நினைந்து, நினைந்து போற்றுதற்குரியது.

    மாணிக்கவாசகராகத் ‘திருவாசகம்’ போன்ற பக்திச் சுவைசொட்டும் பாக்கள் எழுதி முடித்த பிறகு, உயர்நிலைகளில் பல நூற்றாண்டுகள் இருந்துவிட்டு வந்து மீண்டும் ஒரு மனிதனாகப் பிறந்து அவர் முக்தி அடையுமுன் தந்த அனுபூதிச் செய்யுள்களே ஞானத் தாழிசையின் பன்னிரண்டு பாக்களும் என்று கொள்ளலாமா?

    அல்லது, அவர் சூக்கும நிலையில் இருந்து வேறொரு புலவனை ஆட்கொண்டு அவனுள் தாழ்ந்து, இறங்கி வந்து அவன் மூலம் பாடிய செய்யுள்கள் என்று சொல்லலாமா?

    இப்படிப் பல நுட்பங்களைப் பெயரிலேயே கொண்ட ஞானத் தாழிசையின் பன்னிரண்டு பாக்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அவற்றுக்கு ஆங்கிலத்தில் உரை எழுதும் போது, சில சமயம், நான் ஏதேனும் வலிந்து பொருள் சொல்கிறேனோ என்று சந்தேகம் எழும். உடனேயே, அடுத்த வரி அல்லது அடுத்த பாட்டில் அதற்குத் தீர்வு கிட்டும். உடனே, உட்குரல் ஒலிக்கும்: ‘அட சந்தேகப் பிராணியே, நீ சொன்ன பொருள் சரிதான். அதை நீயா சொல்கிறாய். உன் மூலம் அது சொல்லப் படுகிறது. நம்பு.’ ஒருமுறை டாக்டரிடம் இது பற்றிச் சொன்ன போது, அவர் சொன்னார்: “அந்த நூல் ஒரு பொற்குவியல் பெட்டி (treasure box); உன் அறிவு அதைத் திறக்கும் சாவி என்று ஒரு நோக்கில் தோன்றலாம். உண்மையில், உன் ஆழ்மனமே ஒரு பொற்குவியல் நிறைந்த பெட்டி. அதன் “தாழ்” அல்லது தாழ்ப்பாளைத் திறக்கும் சாவிதான் “ஞானத் தாழிசை”.

    கூச்சப் படுவது கூட கர்வமாகி விடும் என்று பட்டது. ஞானத் தாழைத் திறக்கும் சாவியாகிய இசை என்ற பொருளும் அந்த நூலின் தலைப்புக்குப் பொருந்துவதை எண்ணி வியந்தேன். “தாழ்” என்ற சொல்லுக்கு இத்தனை அர்த்தங்களா! அது ஒரு மந்திரச் சொல் என்று புரிந்து கொண்டேன்.

    இப்போதாவது பஞ்ச பூத வாதத்துக்கு வாப்பா! சிகாமணி பொறுமை இழந்து விட்டான். மனோன்மணியும் முனகுகிறாள். இனியும் காலம் கடத்துவது சரியில்லை. பஞ்ச பூதங்கள் பற்றிய ஒரு விளக்கம் ஞானத் தாழிசைக்கு நான் எழுதிய உரையில் பளிச்சிட்டது. அது அறிவியலோடு முரண்படாத விளக்கம். அது என்ன?

    சாதாரணமாக, நம் புலப்பாட்டுக்கு உள்ளாகும் பொருட்கள் மூன்று நிலைகளில் இருப்பதாக விஞ்ஞானம் சொல்கிறது. திடப்பொருள் நிலை, திரவப் பொருள் நிலை, வாயு அல்லது ஆவி நிலை. ஆங்கிலத்தில் சொல்வதென்றால், ஸாலிட், லிக்விட், கேஸ் (நான் கோர்ட்டில் வாதாடும் வழக்கில்லை ஓய், சமையலுக்குப் பயன்படுத்துகிறோமே அந்த சிலிண்டரில் வரும் ஆவி)!

    advoஇன்னும் சற்று நுட்பமாக ஆராய்ந்தால், இந்த மூன்று விதமாகவும் இல்லாத சில விஷயங்கள் அறிவியல் புலப்பாட்டிற்கு உட்படுவது தெரிகிறது. இந்த மூன்று நிலைகளில் ஒன்று இன்னொன்றாகச் சில சூழ்நிலைகளில் மாறும். எடுத்துக்காட்டாக, திடப் பொருளாக இருக்கும் பனிக்கட்டி, உருகினால், திரவமாகி விடும். நீரைக் கொதிக்க வைத்தால் அது ஆவியாகி விடும். விஞ்ஞானிகள், சோதனைக் கூடத்தில் செய்த சில பரிசோதனைகளில், சில பொருள்கள் இந்த மூன்று நிலைகளுக்கும் அப்பாற்பட்ட நிலையில் மறைந்தே போய்விடுவதைக் கண்டுபிடித்தார்கள். ஆனால், பொருண்மை அழிவதே இல்லை என்ற விதியின்படி அவை மறைவதில்லை என்று சொல்லி, அவை ‘ப்யூர் என்ர்ஜி’ என்ற ஆற்றல் நிலைக்கு ஏகி விட்டன என்று அமைதி செய்தார்கள். அணுகுண்டின் சூக்குமமே அதுதான். எந்தப் பொருண்மை நிலைக்கும் அடிப்படைப் பொருண்மையான அணுவுக்குள் ஆற்றல் பொட்டலமாக ஓர் உட்கரு, மையம்கொண்டு இருப்பதை ரதர்ஃபோர்ட் என்ற அறிவியல் மேதை கண்டுபிடித்துச் சொன்னார். அவரைத் தொடர்ந்து, அவருடைய சீடர்கள், சாட்விக் போன்றவர்கள், அந்த ஆற்றல் பொட்டலத்தைப் பிரித்து, அவிழ்த்து அதற்குள் இருந்து மிகப் பெரிய அளவு ஆற்றல் வெளிப்படக்கூடிய வாய்ப்பை முன்மொழிந்த பிறகே, ஓப்பன்ஹைமர் என்ற விஞ்ஞானியின் தலைமையில் ஒரு குழு, அணுகுண்டை உருவாக்க முடிந்தது. திடநிலை, திரவநிலை, ஆவிநிலை, ஆற்றல்நிலை ஆகிய நான்கு நிலைகளில் பொருண்மை இருக்க முடியும் என்பது தெளிவாகியது. ஆனால், இன்னும் நுட்பமாக விஞ்ஞானம் வளர, வளர வெட்டவெளி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வெளியில் உண்மையிலேயே, பாரதி வியந்து சொன்னதுபோல் கணம்தோறும் சிற்றணுத் துகள்கள் கோடிக்கோடித் தோன்றி, நொடிப் பொழுதில் மறையும் தீராத விளையாட்டு, அல்லது கம்பர் சொன்னதுபோல் “அலகிலா விளையாட்டு”, நடைபெற்றுக் கொண்டே இருப்பது தெளிவாகியது. எனவே, ஆற்றலாக உருவெடுத்து, அதிலிருந்து சிற்றணுக்களாக உருவெடுத்து, உடனே மறைந்து, மீண்டும் தோன்றி, ஓர் ஓயாத சக்தி நடனத்தை வெட்டவெளி நடத்திக் கொண்டிருக்கும் வியப்பை விஞ்ஞானம் ஒப்புக் கொண்டுள்ளது.

    இப்பொழுது சொல்லுங்கள், திடப் பொருள், திரவப் பொருள், ஆவிப்பொருள் ஆகிய மூன்று நிலைகள், அவற்றைக் கடந்த ஆற்றல்நிலை என்ற நாலாவது நிலை, நான்கு நிலைகளுக்கும் நிலைக்களமாக விளங்கும் வெட்டவெளியாக விரிந்து கொண்டே இருக்கும் ஐந்தாம் நிலை. இப்படி ஐந்து நிலைகளை அறிவியல் ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த ஐந்து நிலைகளே, திடப்பொருள் நிலையைக் குறிக்கும் நிலம்; திரவப் பொருள் நிலையைக் குறிக்கும் நீர்; ஆவிப்பொருள் நிலையைக் குறிக்கும் காற்று; ஆற்றல் நிலையைக் குறிக்கும் நெருப்பு; வெட்டவெளி நிலையைக் குறிக்கும் ஆகாசம் அல்லது வெளி. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாசம் என்ற பஞ்ச பூதங்கள்! சரிதானே!

    ‘என்னப்பா, ஆவி, பூதம் என்று அச்சுறுத்துகிறாய்?’ என்ற குரல் கேட்கிறது. ‘ஆவி’ என்பது வாயு நிலை. அவ்வளவுதான். ‘பூதம்’ என்ற சொல்லுக்கு வடமொழியில் தோற்றம் என்று பொருள். பூத உடல் என்றால் புலப்பாட்டுக்குத் தோன்றும் உடல். சூட்சுமம் என்பதன் எதிர்ப்பதமே பெளதிகம். பெளதிகம் என்ற சொல்லில் இருந்து வருவது பூதம். பூச்சாண்டி காட்டவில்லை. தோற்றங்களால் ஆன உலகத்தில் தோன்றும் பொருள்கள் இந்த ஐந்து விதமாகத்தான் தோன்ற முடியும் என்ற விஞ்ஞான உண்மையைக் குறிப்பதே, ‘பஞ்ச பூதங்கள்’ என்ற சொற்றொடர். பஞ்ச பூதங்கள் இன்றி உலகம் இல்லை. பஞ்ச பூதங்களை நுகரும் பொருட்டே அவற்றுக்கு ஏற்ப ஐந்து பொறிகளும், அவற்றின் மூலம் புலப்பாடாகின்ற ஐந்து புலன்களும். எப்படி ஒரு கச்சிதமான அமைப்புமுறை! இந்தப் பஞ்ச பூத அமைப்புமுறை பஞ்சர் ஆனால் சூனியம்தான். அடாடா, என்ன பஞ்ச் டயலாக்!

    சிகாமணி விசிலடிக்கிறான், அதுவும் ஒரு திரைப்படப் பாடலை. என்ன பாடல்? “கேள்வி பிறந்தது அன்று, நல்ல பதில் கிடைத்தது இன்று”. சரியான கேள்வி கேட்பதே தீர்வின் முதற்படி. இல்லையா? ஒளவை நடராஜன் அவர்கள் 1986-ல் கேட்ட கேள்வியால், ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் கழித்து, ‘ஞானத் தாழிசை’ மூலம் ஒரு தீர்வு கிடைத்த வரலாறு இதுதான் ஐயா! அவருக்கு என்றும் நான் நன்றி சொல்ல வேண்டும்.

    குருவாகத் தேடி வந்து என்னை ஆற்றுப் படுத்திய டாக்டர் பற்றி இன்னும் நிறைய சொல்ல வேண்டியுள்ளது. அது மட்டுமில்லை. ஞானத் தாழிசைக்கு உரை எழுதக் கட்டளை இட்டதற்கு முன் அவர் தந்த உள்ளூக்கத்தால், ஏதோ ஓர் உயர்ந்த களத்தோடு என் ஆழ்மனம் தொடர்பு கொண்டதாகத் தோன்றியது. திருமூலருக்கு எப்படித் திருமந்திரம் பாடல்கள் உருவாகின என்று சொல்லப் படுகிறதோ, கிட்டத்தட்ட அப்படியொரு நிலையில் சில அதிசயச் செய்யுள்கள் என் அகத்தில் உதித்தன. அப்படி வந்த 101 செய்யுள்களை என் கவிதைத் தொகுப்பான “உன்னோடு நான்” என்ற நூலில் ‘குருமந்திரம்’ என்ற துணைத் தலைப்பிட்டுத் தந்துள்ளேன். அதில் கூட பஞ்ச பூதங்களைப் பற்றிய விளக்கம் பொதிந்து கிடப்பதை நான் உணர்ந்தேன். குருமந்திரத்திலிருந்து, மாதிரிக்கு ஒரு செய்யுள் மட்டும் இங்கே தருகிறேன்:

    நெருப்புக்கு நீர்தந் தணைக்கலாம் அன்றி

    நெருப்பை வளியால் பெருக்கலாம் உள்ளே

    நெருப்பை விதைக்க நிலம்தரலாம் தீயில்

    உருவாரம் செய்துவெளி ஊதலாம் அன்றே

    சரி, சரி. அந்தக் கதைகளை அப்புறம் கேட்கலாம். நாம் பாட்டுக்கு ஏதேதோ பேசிக் கொண்டே, கால பைரவன் துணையோடு கடகடவென்று பத்துப் பதினைந்து ஆண்டுகள் தாண்டி வந்து விட்டோமே. அந்தக் காலக் கட்டத்தில் என்னவெல்லாம் நடந்தனவோ? அவற்றைத் தவற விடலாமா?

    திருமணம் ஆன பிறகு, முன்பே சொன்னது போல், அவ்வப்போது நானும் ஷோபனாவும் சேர்ந்து அமர்ந்து சில இசைப்பாடல்கள் உருவாக்கினோம் என்றாலும், ‘கவிதை கவிதை’ என்று வெறி கொண்டு பாடிய தாகம் குறைந்து விட்டது போல் ஆனது. திருமணம் ஆகிச் சில ஆண்டுகளாக நான் பாரதி கலைக் கழகக் கவியரங்கத்திற்குச் சரிவரப் போகாமல் இருந்த நிலையில், திடீரென்று, 1977-ஆம் ஆண்டில், மீண்டும் அந்தக் கலைக் கழகத்தோடு தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ள, மீண்டும் என்னுள் மின்னிக் கொண்டிருந்த கவிதைக் கனலை ஊதி வளர்க்க, மந்தைவெளி, நார்ட்டன் லேனில் அப்போது நான் வசித்து வந்த வீட்டில் பாரதி கலைக் கழகத்தின் கவியரங்கம் நடைபெற அழைப்பு விடுத்தேன். எல்லாரும் வந்து கவிதை பாடினார்கள். என்னைப் பாட அழைப்பார்கள் என்று தெரியும். அதற்குச் சில நாட்கள் முன்பிருந்தே அந்தக் கவியரங்கத்துக்காக ஏதாவது கவிதை எழுத முனைந்து, முயன்று முடியாமல் தோற்றுப் போய்க் கடைசியாக ஒரு கவிதை எழுதினேன். அதைத்தான் படித்தேன். என் கவிதை நண்பர்கள் இன்றும் அந்தக் கவிதை வரிகளைச் சொல்லி வருகிறார்கள். அதன் ஆரம்ப வரிகள்:

    எனக்குக் கவிதை எழுத வராது

    ஏக்கம் இல்லாமல் இலக்கியம் ஏது

    அந்தக் கவிதை அந்த அரங்கத்தில் அனைவரையும் கவர்ந்தது. ஆனால் அந்த அரங்கத்தில் என் கவனம் வேறு திசையில் சென்றது. அந்த அரங்கத்தில் புதிதாக எனக்கு அறிமுகமான ஒரு கவிஞரும், அவருடன் வந்திருந்த இன்னொரு நண்பரும் என் கவனத்தைக் கவர்ந்தார்கள். அவர்கள் இருவருமே நெற்றி நிறைய குங்குமம் நீட்டியிட்டிருந்தார்கள். தீட்டியிருந்தார்கள் என்று கூடச் சொல்லலாம். அந்த அரங்கத்துக்கு வந்திருந்த என் நண்பன் கண்ணன், ” என்னடா ஒரே சாக்தர் கூட்டமா இருக்கே” என்று சத்தமாகக் கேட்டுவிட்டான். அந்தக் குங்குமக் கவிஞர்கள் இருவரும் வேறு யாருமில்லை, நம்ம இசைக்கவி ரமணனும், திராவிட மாயை சுப்புவும்தான். அவர்களைச் சந்தித்தது என் வாழ்வின் ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம்.

    ரமணனின் கவிதாவேசமும், சுப்புவின் அடக்கமான எதேச்சாதிகாரமும் என்னை எப்படியோ கவர்ந்ததோடு, எனக்குள்ளும் தொற்றிக் கொண்டன. சீன தத்துவத்தில் ‘யின் அண்ட் யாங்’ (yin and yang) இரட்டை நிலைக்கு இந்த இரட்டையரை உதாரணம் காட்டலாம். அவர்களுக்குள் அப்படியோர் முரண்பட்ட இணைவு, இணைபிரியாத தொலைவு!

    அன்று முதல் அவர்கள் என் வீட்டுக்கு வருவதும், நானும் ஷோபனாவும் பெஸண்ட் நகரில் ரமணன் குடியிருந்த வீட்டுக்குப் போவதும் அன்றாட வழக்கமாகி விட்டது. சுப்புவுக்கு ஷோபனாவின் மேல் ஒருவித பக்தி கலந்த மரியாதை. முதலில் பார்த்த போது ‘இந்தப் பெண்ணுக்கு கவிதை சமாச்சாரம் எல்லாம் எதற்கு” என்பதுபோல் பார்த்தவன் தன் அபிப்ராயத்தைப் பிறகு மாற்றிக் கொண்டான். ‘உனக்கு என்ன பாடல் பிடிக்கும்?’ என்று சுப்பு அவளிடம் கேட்டதும், பாரதியின் ‘மோகத்தைக் கொன்றுவிடு பாடல்’ என்று அவள் விடை சொன்னாளாம். அதனால், அவனுடைய அபிப்பிராயம் அடியோடு மாறிவிட்டதாம். இதை அவனே சொல்லியிருக்கிறான்.

    ரமணன் என்ன எழுதினாலும் அந்தத் தாளின் முகப்பில், “சக்தி காக்கிறாள் சஞ்சலம் இல்லை” என்று எழுதியிருப்பான். அது அவனுடைய தாரக மந்திரமாகவே இருந்தது. ஒருநாள், மாலை பெஸண்ட் நகர் ரமணன் வீட்டில் கவிதைக் கச்சேரி, ரமணனுடைய அப்பா சேஷு மாமாவின் கிண்டல், ரமணன் அம்மா தந்த பாயசம் என்று எல்லா கலாட்டாவும் முடிந்த பிறகு, ரமணன் அன்று இரவு ரயிலில் ஏதோ ஊருக்குக் கிளம்பினான். அவனுடைய பெட்டி, மூட்டை முடிச்சுகளை எல்லாம் சுப்புவும், இன்னொரு தாசானுதாசனான நண்பன் கெளரிசங்கரும் எடுத்துக் கொண்டனர். “என்னப்பா, இப்படியே நடைபயணமாகச் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை, “சக்தி காக்கிறாள் சஞ்சலம் இல்லை” என்று கோஷம் போட்டுக் கொண்டே போவதாக உத்தேசமா?”. இப்படி நான் கேட்டதும் எல்லாரும் சிரித்தார்கள். சுப்பு மட்டும் விரைப்பாக, ரமணனை வழியனுப்பப் போவது ஏதோ சபரிமலை யாத்திரை மாதிரி ஒரு பரவச உணர்வுடன், நடை கட்டுவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தான்.

    நான் அந்த சாக்தர் கூட்டத்தில் வகையாக மாட்டிக் கொண்டு விட்டேன். அப்போது கடவுள் என்றெல்லாம் ஒரு தீவிர நம்பிக்கை எனக்குக் கிடையாது. அப்படி ஒருவரோ, ஒருத்தியோ, ஒன்றோ இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும் என்ற ஒரு கர்வத்தோடு நான் இருந்த காலம் அது. உடைந்து தவிடுபொடி ஆவதற்குத்தானே கர்வம்! அது உடைந்த கதையைப் பிறகு சொல்கிறேன்.

    (தொடரும்)

    Share
  • மந்த்ர ரூபம்

    கே. ரவி

     

    பாடியிருப்பவர்  : எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

    மந்த்ர ரூபம்

    {கேட்டு மகிழ சொடுக்குங்கள் மேலே}

    sivan5

    மந்த்ர ரூபம் மந்த ஹாஸம்

    மன்மதனை வென்ற சிவ வைராக்யம் – மணி

    கண்டனே உந்தன் மலர்ப்பதம் – துணை

    கொண்டவர்க்கு வழி புலப்படும்

     

    தென்றலோடொரு செந்தழலெழுந் தன்று செய்தது

    நர்த்தனம் – சிவ

    நர்த்தனம் – அந்தச்

    சங்கமத்தில் வந்த சந்திரன் – ஒளி

    பொங்கித் ததும்பும் எழில் பாலகன்

    மந்த்ர ரூபம் மந்த ஹாஸம்

     

    தன்னையிழக்கும் சரணாகதி அதில் வந்துசிரிக்கும் முகம் முழுமதி

    தேகமேயொரு யோகசாதனம் உணர வைக்குமுன்

    பெருவழி

    தத்வமஸி என்ற தத்துவம் – உன்

    சன்னிதிக்குள் வரும் அனுபவம்

    மந்த்ர ரூபம் மந்த ஹாஸம்.

     

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் (30)

    கே.ரவி

    காலபைரவன் என்றெல்லாம் சொல்லி பயமுறுத்துகிறேனா? காலத்தில் முன்னும், பின்னும் நாம் சென்றுவர வேண்டுமென்றால் அவன் துணை வேண்டும். காலக் குதிரையின் கடிவாளம் அவன் கையில்.

    ஆங்கிலத்தில் டைம், ஸ்பேஸ் என்று சொல்லப்படும் காலமும், வெளியும் எப்போதுமே புதிரானவை. இந்த இரண்டில் எது முன்னது, எது பின்னது என்று கேட்டால், முன்-பின் என்ற தொடர் மூலம் காலம் தலைக்காட்டித் தானே முன்னிற்கும். இந்த இரண்டில் எதிலிருந்து எது வந்தது என்று கேட்டால், எதற்கு எது இடமளித்தது என்ற கேள்வியாக அதை மாற்றி வெளியாகிய இடமே வியாபித்து நிற்கும். தலைசுற்ற வைக்கும் இரட்டைக் குதிரைகள் அப்பா!

    dravidமுன்பொருமுறை, 1988-ஆம் ஆண்டு என்று ஞாபகம், சென்னை, பெஸண்ட் நகரில் உள்ள ரத்னகிரீஸ்வரர் கோயிலில், ஆதிசங்கரர் விழாவையொட்டி, நண்பர் சுப்பு, இப்பொழுது மிகப் பிரபல எழுத்தாளராயிருக்கும் ‘திராவிட மாயை’ சுப்பு, ஒரு கவியரங்கம் ஏற்பாடு செய்திருந்தார். அதில் கவிமாமணி மதிவண்ணன் தலைமையில் நான் பாடிய பாடலின் பல்லவி இப்பொழுது நினைவுக்கு வருகிறது:

    வெளிச்சம் வந்தா இருட்டு எங்கே போகும் – அட

    இருட்டு தானே வெளிச்சமுனு மாறும்

     

    இப்படி இரட்டைப் புதிர்கள் இயற்கையில் ஏராளம். 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்தக் கவியரங்கத்தை நான் இப்போது நினைத்துக் கொண்டதற்குக் காரணம், நான் புதுக்கவிதையோ அல்லது அது மாதிரி ஏதாவதோ எழுதியிருக்கிறேனா என்ற கேள்விதான். அந்தக் கவியரங்கத்தில், மேலே குறிப்பிட்ட பாடலைப் பாடிவிட்டு நான் படித்த ஒரு கவிதை, அல்லது வசனம், என் நினைவில் நிழலாடுகிறது. அதையும்தான் சொல்லி வைக்கிறேனே:

     

     

    ஓம்!

     

    பஞ்ச பூதங்களை வணங்குகிறேன்

     

    ஆதாரம் ஆகி என்னைத் தாங்கும் நிலத்தை

     

    ஆகாரம் ஆகி என்னைக் காக்கும் ஜலத்தை

     

    தேகாபி மானம் கொன்று புசிக்கும் நெருப்பை

     

    ஓசைகள் பறக்கச் சிறகு கொடுக்கும் காற்றை

     

    ஓங்காரம் என்ற லயம் ஜனிக்கும் வெளியை

     

    வணங்குகிறேன்

     

    லம் வம் ரம் யம் ஹம்

     

    ஐந்தும் கடந்து சென்று

     

    ஆறாவ தான புருவ மத்தியில்

     

    மாறாத ஜோதி வடிவில்

     

    பாராள வந்த பஞ்ச பூதங்களை

     

    ஒருமைப் படுத்தி வணங்குகிறேன்

     

    நீங்களிட்ட பிச்சை – நான்

     

    அணிந்திருக்கும் சட்டை – என்

     

    ஒவ்வோர் அணுவும் உங்கள் வசம் ஒப்படைக்கப் போகிறேன்

     

    பஞ்ச பூதங்களே பஞ்ச பூதங்களே – என்

     

    த்யானம் பலிக்கட்டும் – என்

     

    சங்கல்ப தீபம் சத்தியமாக ஜொலிக்கட்டும்

     

    எத்தனை மேடு பள்ளங்கள் ஏறி இறங்கிய பாதங்கள்

     

    எத்தனைக் கோடி உயிர்களின் மீது நடந்தன கேளுங்கள்

     

    தட்டுப்பட்ட பொருள்களைத் தட்டி விட்ட புறங்கால்கள்

     

    தண்டைபொற் சதங்கை கட்டி நடனமிட்ட கணுக்கால்கள்

     

    தண்டனிட்டு மண்டியிட்டுத் தேய்ந்து போன முழங்கால்கள்

     

    ஆணவத்துடன் ஆயிரம் முறைத் தட்டப்பட்ட தொடைகள்

     

    ரத்தஓட்டப் பித்தலாட்டத்(து) அகப்பட்டு முறுக்கேறிச்

     

    சத்தழிந்து போவதற்கே சதிசெய்த குறியீடு

     

    உண்டுயிர்த்து வாழ்வதையே மாபெரும் லட்சியமாய்க்

     

    கொண்டிருக்க வைத்த வயிறு

     

    தேகத் தினவு தீரச் சத்தமிட்டுப் பிறர்

     

    நோகச் சிரித்து நொந்தவிலா

     

    உணர்வலை ஓட்டத்தில் சிக்குண்டு

     

    துடித்துத் துடித்துத் துவண்ட மார்பு

     

    பந்தபாச நுகத்தடிக்கே தந்த இரு தோள்கள்

     

    தன்னைவிடச் சிறியவர்கள் தன்னிச்சைக் கடிபணிய மடங்கித்

     

    தன்னைவிட வலியவரின் தண்டனையில் இருந்து தப்ப வணங்கித்

     

    தன்னுடையதாய் எண்ணித் தர்மத்தின் பேர்சொல்லி வழங்கி

     

    மடங்கிக் குவிந்து வளைந்து மெலிந்த கைகள்

     

    ஆகாத ஓசைகள் ஏராளம் எழுப்பி ஆகாசம் கெடுத்த தொண்டை

     

    காவல் மறந்து பேசிப்பேசிக் கலிவளர்த்த நாக்கு

     

    கர்மவாசம் அற்றுப் போகாமல் நுகர வைத்த மூக்கு

     

    வண்ணமே வடிவமென்றும் வடிவமே உண்மையென்றும்

     

    கண்டு மயங்கிச் சுழன்ற கண்கள்

     

    வியப்பூஞ்சல் ஆடியாடி வில்லாய் வளைந்த புருவங்கள்

     

    கவலைக் கதிர்கள் தாக்கித் தாக்கிச் சுருங்கிப் போன நெற்றி

     

    மெளனம் என்ற மகோன்னதத்தை மறக்க வைத்துச்

     

    சத்தச் சில்வண்டின் ரீங்காரத்தில் மரத்துப் போன காதுகள்

     

    நாடி நரம்பில் ஓடியடைந்த சேதிகளை

     

    வகைப்படுத்துவதிலேயே அறிவு முழுக்கச் செலவழித்த மண்டை

     

    அத்தனையும் உங்களிடம் அர்ப்பணிக்கிறேன்

     

    அக்குவே றாணிவே றாகக் கழற்றி

     

    ஒவ்வோர் அணுவும் உங்கள் வசம் ஒப்படைக்கப் போகிறேன்

     

    பஞ்ச பூதங்களே பஞ்ச பூதங்களே – என்

     

    த்யானம் பலிக்கட்டும் – என்

     

    சங்கல்ப தீபம் சத்தியமாக ஜொலிக்கட்டும்

     

    ஓம்!

     

     

     

     

    நிலம், நீர், காற்று, நெருப்பு, வெட்டவெளி ஆகியவற்றைப் பஞ்ச பூதங்கள் என்று குறிப்பிடும் வழக்கம் இந்தியாவில் உண்டு. இந்தக் கட்டத்தில் 1996-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைத்துக் கொள்கிறேன். அந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற வானவில் பண்பாட்டு மையத்தின் மூன்றாம் ஆண்டு பாரதி விழாவில்தான் அந்த நிகழ்ச்சி நடந்தது.

    வானவில் பண்பாட்டு மையம், பாரதி விழா என்று நான் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டே போனால் எப்படி? விளக்க வேண்டாமா?

    1994-ஆம் ஆண்டில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி என்னுடைய சில பாடல்களை சங்கீதா ஸ்டூடியோவில் பதிவு செய்தேன். என் மேல் மிகவும் அன்பு கொண்ட அந்த ஸ்டூடியோவின் நிறுவனர் மஹேஷ், அந்தப் பாடல்கள் கொண்ட ஒலிப்பேழையைத் தாமே வெளியிட முன்வந்து உதவினார். அதில் பதிவு செய்யப் பட்டதெல்லாம் தெய்வப் பாடல்கள். அது கூட ஒரு கேள்விக்கு இடம் தந்துவிட்டது.

    ஏற்கனவே வல்லமையில் அந்தப் பேழையில் இருந்து கலைமகள் மேல் உள்ள பாடலின் வரிகளை மட்டும் பதிவேற்றியிருந்தார்கள். அதைப் படித்துவிட்டுத் தேமொழி என்ற சகோதரி அது பக்திப் பாடல்தானா என்று கேட்டிருந்தார். அந்தப் பாடலின் ஒலிப்பதிவைக் கேட்டால் இன்னும் என்ன சொல்வாரோ? அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நான் அடிக்கடிச் சொல்வதுபோல், ஜேசுதாஸ் காதல் பாட்டுப் பாடினாலும் அது பக்திப் பாடல் போல் இருக்கும், எஸ்.பி.பி. பக்திப் பாடல் பாடினாலும் அது காதல் பாடல் போல இருக்கும். அடுத்த காரணம், எனக்கே பக்திக்கும், காதலுக்கும் வேறுபாடு புரியாது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பாடும் போது இந்த வேற்றுமை எப்படிக் குறுக்கே வரும்? நான் காதலியைப் பாடினாலும் பக்திதான்; மதுரை மீனாட்சியைப் பாடினாலும் காதல்தான். அந்தப் பேழையில் இருந்து வல்லமையில் வரிவடிவில் மட்டும் பதிவான கலைமகள் பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்கள், அது காதலா, பக்தியா என்று நீங்களே தீர்ப்புச் சொல்லுங்கள்:

    பாடலைக் கேட்கச் சொடுக்கவும் —.

    அந்த இசைப்பேழைக்குத் ‘தெய்வகானாம்ருதம்’ என்று பெயர் தந்து அதை வெளியிட ஒரு விழா நடத்த வேண்டுமென்று மஹேஷ் என்னைக் கேட்டுக் கொண்டார். சங்கீதா நிறுவனம் வெளியீட்டு விழாக்கள் நடத்தும் வழக்கம் இல்லையென்பதால் வேறு ஏதாவது ஒரு அமைப்பின் பெயரில் அந்த விழாவை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஒரு கணம் சிந்தித்தேன். சிந்தனைக் கோட்டம் செயலற்றவுடன் திரு.ஒளவை நடராஜனின் நல்யோசனையின்படி ‘வானவில்’ என்று ஒரு கட்டமைப்பில்லாத, அதாவது, ஆங்கிலத்தில் இன்ஃபார்மல் என்பார்களே அப்படியோர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அதில் ஒவ்வொரு மாதமும் ஓர் இலக்கிய ஜாம்பவானை அழைத்துப் பேசச் சொல்லிக் கேட்பது என்று முடிவு செய்தோம். அது 1970 – ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். ஆழ்வார்பேட்டையில் இருந்த என் மூத்த சகோதரி நந்தினி சத்தியமூர்த்தி வீட்டில் இந்த நிகழ்ச்சிகளை நடத்தவும் முடிவு செய்தோம். ஒரு மாதம் பெரியவர் பி.ஶ்ரீ. அவர்கள் தள்ளாத வயதிலும் வந்து சாய்ந்து படுத்தவாறே, கம்பராமாயணக் காட்சிகள் சிலவற்றை விவரித்ததை மறக்க முடியுமா?

    .. .. .. .. … … … … … … அவர்

    சொன்னன சொன்னன செவியில் தூங்கவும்

    அசோக வனத்தில் சீதை இருந்த நிலை பற்றிய கம்பனின் வரியை அந்தக் கிழவர் அப்போது அனுபவித்துச் சொன்னவிதம் கேட்டவர் செவிகளில் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும்.

    அதே போல் இன்னொரு மாதம், பேராசிரியர் அ.சீ.ரா. என்ற ஆ.சீனிவாஸ ராகவன் வந்து “எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி” என்ற பாரதி பாடலின் நாலே நாலு வரிகளை வியந்து, விளக்கி ஒன்றரை மணி நேரம் பேசி எங்களையெல்லாம் பிரமிப்பில் ஆழ்த்தியதைத்தான் மறக்கமுடியுமா? இல்லை, ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்ததும் நந்தினி படைத்த நல்விருந்தை, அதுவும் நா.பாவும், ஒளவையும் மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்டு வாங்கிக் குடித்த ஆப்பிள் மில்க்கைத்தான் மறக்க முடியுமா? அந்த நிகழ்ச்சிகள் ஏனோ நாலைந்து மாதங்களுக்குமேல் தொடரவில்லை. அதே வானவில் பெயரில் நண்பர் சுப்புவால் நாமகரணம் செய்யப்பட்டு 24 ஆண்டுகளுக்குப் பிறகு 1994-ல் பிறந்ததுதான் வானவில் பண்பாட்டு மையம்.

    krs

    இசைப் பேழை வெளியீட்டு விழா முடிந்ததும் வானவில் பண்பாட்டு மையத்தை என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆலோசனை செய்த போது சுப்பு கொடுத்த யோசனைதான், ஆண்டுதோறும் பாரதி பிறந்த நாளை விமரிசையாக, அதுவும் திருவாரூர் தியாகைய்யர் உத்சவம் போல் இசை விழாவாகக் கொண்டாடுவது. அப்படித்தான் ஆரம்பித்தோம் ஆண்டுதோறும் பாரதி விழா கொண்டாடும் வழக்கத்தை. அந்த விழாவில், முதலாண்டில் திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியும், திருமதி டி.கே.பட்டம்மாளும் கலந்து கொண்டு பாடியதும், அதில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தள்ளாத வயதிலும் வந்து கலந்து கொண்டு ஆற்றிய பேருரையும் சரித்திர நிகழ்ச்சிகள்.

    arr

    ஒவ்வோர் ஆண்டும் பாரதி விழாவில் பாரதி கண்ட கனவு மெய்ப்படத் தொண்டாற்றியவர்களுக்கு பாரதி விருது வழங்குவது என்றும் முடிவு செய்தோம்.

    ravi

    kss

    மூன்றாவது ஆண்டு பாரதி விழா, 1986-ஆம் ஆண்டு, டிசம்பர் 8-ஆம் தேதி, சென்னை ம்யூஸிக் அகாடமி பிரதான கூடத்தில் நடக்க ஏற்பாடு ஆகியிருந்தது. அதில் பாரதி விருது வழங்க இரண்டு பேரைத் தேர்வு செய்து விட்டோம். ஒருவர், பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியின் நிறுவனர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி. ‘பள்ளித் தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாரதி கண்ட கனவு மெய்ப்பட அவர் ஆற்றிவந்த கல்விப் பணிக்காக அவரைத் தேர்வு செய்தோம். அவரும் நான் கேட்டவுடன் ஒப்புக் கொண்டு விட்டார். இன்னொருவர் அப்போது புதுதில்லியில் மிக முக்கியமான மத்திய அரசு அலுவலராக இருந்தார். “சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளிவோம்” என்ற பாரதியின் கனவு மெய்ப்படப் பணியாற்றிக் கொண்டிருந்தார் அவர். தொலைபேசியில் அவரை அழைத்ததும், “நான் பாரதி பக்தன். மேலும் உங்கள் விழாக்குழுத் தலைவர் செம்மங்குடி சீனிவாசய்யரின் அபிமானி. உங்கள் அழைப்பை எப்படி மறுக்க முடியும்?’ என்று அவர் கேட்டதும் நெகிழ்ந்து போனேன். விழா நாள் வந்தது. அதற்கு இரண்டு சோதனைகள் ஏற்பட்டன. ஒன்று அந்த விழா நடைபெற வேண்டிய நாளுக்கு நலைந்து நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு மாநில ஆளுநர் டாக்டர் சென்னா ரெட்டி காலமாகி விட்டார். அதனால் அரசாங்கம் பத்துநாள் துக்கம் என்று அறிவித்து விட்டது. அதனால் விழாவில் நான் எழுதிய முதல் தமிழ் நூலை வெளியிட ஒப்புக் கொண்டிருந்த கல்வியமைச்சர், பேராசிரியர் அன்பழகன் விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை. விழாவுக்கு முந்தைய நாளில் இருந்தே சென்னையில் பலத்த புயல், மழை. விழாவன்று காலையில் விருது பெற்றுக் கொள்ள தில்லியில் இருந்து வந்துவிட்ட அந்த அறிவியற் பெருமகனாரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விழாவை ஒத்தி வைக்கலாமா என்று கேட்டேன். அவர், ” வேண்டாம், குறித்த படியே நடத்தி விடலாம்” என்றார். விழா நடந்தது. நீதியரசர் பக்தவத்சலம் விருது வழங்கினார். திருமதி ஒய்.ஜி.பி. அவர்களும், அந்த அறிவியற் பெருமகனாரும், அவர்தாம் பிறகு நம் குடியரசுத் தலைவரான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களும் விருது பெற்றுக் கொண்டு நல்லுரையாற்றினார்கள். “நமக்குத் தொழில் கவிதை” என்ற என் நூலை டாக்டர் ஒளவை நடராஜன் அவர்கள் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

    ravi

    பொறுமை! பொறுமை! பஞ்ச பூதத்துக்கு வந்து விடுகிறேன்!

    ஒளவை அவர்கள் அந்த விழா நிறைவின்போது என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். “நீ ஏன் கவிதை என்பதை அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோ மாயப் பொருளாகச் சித்தரித்திருக்கிறாய்? நம் நாட்டில்தான் அறிவு புறக்கணிக்கப் படுகிறது. நிலம், நீர், காற்று என்று நாம் அன்றாடம் காணும் பொருள்களைக் கூடப் பஞ்ச பூதங்கள் என்று சொல்லிக் கதையளக்கிறோம். நீயும் ஏன் இப்படியெல்லாம் எழுதுகிறாய்?”

    அந்தக் கேள்விக்கு நான் அப்போது எதுவும் விடை சொல்லவில்லை. சிந்தித்துப் பிறகு சொல்கிறேன் என்று நழுவி விட்டேன், ஏனென்றால், அதற்குள் திரு.கலாம் அவர்கள் என்னை அருகில் வரச் சொல்லி அழைத்துவிட்டார். சென்றேன். ஷோபனாவையும் அழைத்தார். அவளுடைய செய்தி வாசிப்பைப் பாராட்டிச் சில வார்த்தைகள் சொல்லிவிட்டு, என்னிடமே தாள் கேட்டுப் பெற்று அதில் ஒரு கவிதையும் எழுதித் தந்தார், ‘எழுச்சி உள்ளம்’ என்ற தலைப்பிட்டு. அது இதோ:

    எழுச்சி உள்ளம்

    செல்வத்திற் கெல்லாம் தலையான செல்வம்kalam

    என்ன என்ன என்று எண்ணுக!

    உயர் லட்சியத் தீக்கொழுந்தால்

    எழுச்சி செய்யப்பட்ட உள்ளத்தின் சக்தி

    எல்லாச் சக்திக்கும் பெரிய சக்தி;

    சக்திக் கெல்லாம் சக்தி!

    பூமியிலும் விண்ணிலும் பூமிக்கடியிலும்

    நிகரில்லாத சக்தி!

    மாந்தரின் உள்ளச் சக்தி!!

    கலாம் விடை பெற்றுச் சென்ற பிறகு, ஒளவையிடம் உங்கள் கேள்விக்கு நிச்சயம் பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். இன்னும் சொல்லவில்லை. ஆனால், அதற்கான விடை, மாணிக்கவாசகர் எழுதியதாக நம்பப்படும் ‘ஞானத் தாழிசை’ என்ற தமிழ் நூலை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதற்கு ஆங்கிலத்தில் ஒரு விரிவுரையும் எழுதி, ‘வெர்ஸஸ் ஆஃப் விஸ்டம்’ (Verses of Wisdom) என்ற நூலாக படைத்தபோது அதில் வெளிப்பட்டது. அந்த விடையை அடுத்த பகுதியில் சொல்கிறேனே!

    (தொடரும்)

    Share