Tag: தமிழ்த்தேனீ

  • “ வழுக்கை “

    சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன் முடிமாற்று சிகிச்சையின் பலனாய் உயிரிழந்தவர் ஒரு மருத்துவர் என்று வழுக்கை விழுந்த யாரோ ஒருவர் தன்னை அறிவாளியாக நினைத்துக்கொண்டு அறிவாளிகளுக்கு வழுக்கை விழும் என்று சொன்னதை நம்பி வழுக்கை விழுந்த பலர் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்
    ( இளநீருக்கும் வழுக்கை உண்டு )

    நம் தலையில் வழுக்கை விழக் காரணம் அறிவை உபயோகப்படுத்துவது அல்ல ஏனென்றால் நமக்கிருக்கும் அறிவில் இரண்டு சதவிகதம் கூட நாம் இன்னும் உபயோகிக்கவில்லை என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். ஆகவே அதிகமான உபயோகத்தால் தலை சூடாகி வழுக்கை விழுவதாக யாரும் தவறாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம். தலையில் மயிர்க்கால்களின் வேர் சத்து இழப்புதான் முடி கொட்டுவதற்கும் வழுக்கைக்கும் உண்மையான காரணம் பூமியில் சத்தில்லையென்றால் பயிர் வளராது தலையில் சத்தில்லையென்றால் ( நான் மூளையைச் சொல்லவில்லை ) கபாலத்தில் முடிவளரும் பூமியில் சத்தில்லை என்றால் முடி வளராது அப்படியே வளர்ந்தாலும் வேர்க்கால்கள் பலகீனமாய் பெயர்ந்து விழுந்து வழுக்கையை உண்டாக்கும்.

    நம் முன்னோர்கள் மூடர்களல்ல குழந்தைக்கு அடிக்கடி மொட்டை அடிப்பார்கள் அப்படி மொட்டை அடிக்கும் போது வேர்கால்களில் இருக்கும் ஒருவித திரவம் தலையெங்கும் பரவும் அது மட்டுமல்ல வெட்ட வெட்ட வேர்க்கால்களின் சக்தி அதிகமாகும்.

    நன்றாக யோசித்துப் பாருங்கள் நரை விழுந்தால் அந்த முடியைப் பிடுங்காதே என்பார்கள் ஏனென்றால் அந்த முடியைப் பிடுங்கும் போது அதன் வேர்க்கால்களில் இருக்கும் திரவம் மற்ற முடிகளின் வேர்க்காலிலே பட்டு அந்த முடிகளும் வெண்மைத் தன்மை பெற்று வளரும் இதுதான் நரைமுடி அதிகரிக்க காரணம்.

    அது மட்டுமல்ல தேங்காய்க்கும் வழுக்கைக்கும் தொடர்பு இருக்கிறது அதனால்தான் வழுக்கை விழாமல் முடியின் சக்தி அதிகரிக்க தேங்காய் எண்ணெய் உபயோகிக்கிறோம்.

    ஆக சிறு வயதிலிருந்தே மொட்டை அடித்து தேங்காய் எண்ணெய் தடவி பராமரித்தால் முடி நன்றாக வளரும் வழுக்கை விழாது இழுக்கையும் வழுக்கையும் வந்தபின் களைய இயலாது என்பதே உண்மை

    ( கேரளப் பெண்களின் கருகரு கவர்சிக் கூந்தல் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல )

    ( நான் மொட்டை அடித்து என்று சொன்னது அவரவர் தலைக்கு மற்றவர் தலைக்கு அல்ல )

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    Share
  • கூறாமல் சன்யாசம் கொள்

    தமிழ்த்தேனீ

    வரவர யாருமே என்னை மதிக்கறதில்லே. எனக்கு ஒண்ணுன்னா துடிச்சுப் போற இதயங்கள் இப்பல்லாம் எனக்கு என்ன ஆனாலும் கவலைப்படாமே பாத்து நடக்கணும் மெதுவா போகணும் கவனமா இருக்கணும் இப்பிடியெல்லாம் வார்த்தையாலே கொல்றாங்களே!

    எங்க அடிபட்டுதுன்னு ஆதரவாக் கேக்க ஆளில்லே. மனுஷனுக்கு மதிப்பில்லாம போனா அதுக்கப்புறம் உயிர் வாழறது எதுக்கு எல்லாமே வீண்.

    எப்பவுமே எனக்குத் தெரிந்தவற்றில் கூட வீட்டிலுள்ளோரை மதித்துக் கருத்துக் கேட்டு அவர்கள் சொல்வது நியாயமாக இருந்தால் ஏற்றுக் கொண்டு செயல்படும் என் குணத்தையும் மதிக்காமல் நான் எது செய்தாலும் அதிலே தலையிட்டு அபத்தமாக ஒரு யோசனையைச் சொல்லி அதை நான் ஏற்காவிட்டால் என்னைக் கோவப்படுத்தி கத்தவைத்து என்னை உணர்ச்சி வசப்படச் செய்து கத்தவைத்துவிட்டு எதுக்கெடுத்தாலும் கத்தறான் என்று என்னை ஏசுவதே இவர்கள் பிழைப்பாகிவிட்டது
    மத்தவங்களை விட்டுத் தள்ளுங்ககொண்ட இவ்வளவு வருஷம் பழகியும் பொண்டாட்டியும் என்னைப் புரிந்து கொள்ளாத துரதிருஷ்டசாலி நான் அவளுக்கு புரியவைப்பதற்குள் என் ஆவி கொஞ்சம் கொஞ்சமாக குறைவது எனக்குத் தெள்ளத் தெளிவாக புரிகிறது. அதை வெளிப்படையாக எடுத்துச் சொல்லியும் மீண்டும் மீண்டும் என்னைச் சீண்டி வம்புக்கிழுப்பதைக் குறைத்துக் கொள்ளவே இல்லை அவள்இப்படி இருக்கும் நிலையில் என்ன செய்வது.எப்பேர்ப்பட்ட ஞானிகளெல்லாம் சொல்லி இருக்காங்க கூறாமல் சன்யாசம் கொள்ளுன்னு. முடிவாகத் தீர்மானித்தார் சபேசன். சரி எங்காவது போய்விடலாம் எனும் முடிவு எடுத்த பின் மனம் அமைதியாய் ஆயிற்றுஎங்கே போவது என்று எண்ணிப் பார்த்தால் அது ஒரு பெரிய சவாலாக தோன்றிற்று. எங்கே போவது எப்படிப்பட்ட விடையில்லாத கேள்வி உறவுக்காரங்க கிட்ட போக முடியாது நாலு நாளைக்கு மரியாதையா நடத்துவாங்க அப்புறம் என்ன ஆகும்னு அவருக்குத் தெரியாதா சரி நண்பர்கள் வீட்டுக்கு போயிடலாம்னு பாத்தா யாரு நம்மோட நலன் விரும்பியா உண்மையான நண்பனா இருக்கான். அப்பிடியே இருந்தாலும் நண்பனோட மனைவி பிள்ளைகள் நம்மை எப்படி ஏற்பார்கள் அதுவும் சரிப்படாது.

    அப்போ எங்கேதான் போறது அட எங்கேயும் போக முடியாது நமக்கென்று யாருமில்லை என்னும் உண்மை நெஞ்சில் கசந்து வழிந்தது

    அட என்னடா உலகம் இது இவ்வளவு பெரிய உலகத்திலே நமக்கு போக்கிடமே இல்லையே. என்னாத்தை பொறந்து வளந்து படிச்சு வேலைக்குப் போயி சொத்து சேர்த்து கல்யாணம் செஞ்சிகிட்டு புள்ளை குட்டிகளைப் பெத்து எதுவுமே ப்ரயோசனம் இல்லே. இப்போ என்னதான் செய்யறது

    கோடிக்கணக்கான மக்கள் இருந்தாலும் அவர்கள் நடுவே தனியாய் இருக்க முடியவேண்டும் தனியாய் இருந்தாலும் கோடிக்கணக்கான மக்கள் இடையே இருப்பதைப் போல வாழத் தெரியவேண்டும் என்று தோன்றியது

    அது சரி மனசிலே தோண்றதெல்லாம் செயல்பாட்டில் எவ்வளவு கடினம் எப்படிச் செயல் படுத்துவது யோசிக்க யோசிக்க மண்டை காய்ந்தது. என்னதான் தீர்வு

    அட கூறாமல் சன்யாசம் கொள் அப்பிடீங்கற கருத்துக்கு வேற பொருள் இருக்குமோ ஆமாம் இப்படி யோசிக்கலாமே கூறாமல் யாரிடமும் நான் சன்யாசியாக ஆகப் போகிறேன் என்று அறிவிக்காமல் சன்யாசம் கொள்ளலாம்

    சன்யாசம் கொள்வது என்றால் என்ன?எல்லாவற்றையும் துறத்தல் என்று பொருள் வருகிறது. எல்லாவற்றையும் துறக்கலாம் ஆனால் இந்த மனதை எங்கே தொலைப்பது அதுதானே இவ்வளவு பாடு படுத்துகிறது

    மனதைத் துறக்க என்ன செய்வது முதலில் ஒன்றைத் துறக்க அதைப் புரிந்துகொள்ள வேண்டுமே எப்படி மனதைப் புரிந்து கொள்வது நம்முடைய மனதை நாமே புரிந்து கொள்ள இயலாத நிலையில் அடுத்தவர் மனதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும். இதற்கு தீர்வே இல்லையா

    சரி புரிந்துகொண்டுதான் துறக்க வேண்டுமா புரிந்தாலும் புரியாவிட்டாலும் துறக்கலாமே என்றது மனது. அட இப்போதும் இந்த மனது விழித்துக் கொண்டே இருக்கிறது யோசனை வேறு சொல்கிறது

    எப்போதுமே தளராமல் யோசனை சொல்லிக் கொண்டே இருக்கும் இந்த மனதைத் துறப்பது அவ்வளவு எளிதல்ல என்பது புரிந்தது.

    சரி துறக்க வேண்டாம் இந்த மனதில் ஆழ்ந்துவிட்டால் அட இது நல்ல யோசனையாகத் தெரிகிறதே. சரி வெளி உலகத்தை மறந்து இந்த மனதில் ஆழ்ந்துவிடுவோம். அதுதான் சரியான வழி என்று உணர்ந்து உள்ளே பார்க்கத் தொடங்கினார் அவர்.

    கண் விழித்துப் பார்த்த பொழுது அவரைச் சுற்றி ஏராளமான மக்கள் அவருக்கு தங்க சிம்மாசனம் தலையிலே கிரீடம். அவர் வாய் திறக்க மாட்டாரா என்று ஏங்கும் மக்கள் கையைத் தூக்கி ஆசீர்வதிக்க மாட்டாரா என்று ஏங்கும் மக்கள் அவர் கண்ண்ணால் ஒரு முறை பார்க்க மாட்டாரா என்னும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்கள் அவர் பாதத்தை தலைமேல் வைத்து வழிபடும் பக்த கோடிகள்.

    எங்கும் பளபளப்பான தரை விரிப்புகள். மலர் தூவிய பட்டுக் கம்பளங்கள் அவர் தரிசனம் காணக் வாயிலிலே காத்திருக்கும் முக்கியமான மனிதர்கள் முதல் பாமர்கள் வரை எல்லோருடைய அணிவகுப்பு!

    என்ன ஆயிற்று எப்படி நடந்தது இதெல்லாம் மீண்டும் மனதுக்குள்ளே ஆழ்ந்து உற்றுக் கவனித்தார்.

    அவருடைய உள் மன ஆசைகளே இவையெல்லாம் வெறும் கற்பனையே மாயையான தோற்றங்களே என்று உணர்ந்த கணத்தில் மீண்டும் விரக்தியும் சோர்வும் வந்தது.தலை சுற்றியது. கண் இருட்டிக் கொண்டு வந்தது. அதற்கு நடுவே ஏதோ ஒரு உணர்வால் திடுக்கிட்டு மலங்க மலங்க விழித்தார். யாரோ கத்தறாங்க

    கை வேலையா இருக்கேன் கொழந்தையைப் பாதுக்கங்கன்னு படிச்சுப் படிச்சு சொல்லிட்டுப் போனேன் எங்கேயோ பராக்கு பார்த்துகொண்டே தலையை ஆட்டினீங்களே இப்போ பாருங்க குழந்தை கட்டில்லேருந்து கீழே விழுந்துட்டான்

    எதுக்கும் துப்பில்லாத ஒரு ஆளைக் கல்யாணம் செஞ்சிகிட்டு நான் படற அவதி இருக்கே சொல்லவும் முடியலே சொல்லாம இருக்கவும் முடியலே சொல்லாம கொள்ளாம எங்கேயாவது போயி சன்யாசினியாயிடலாம்ன்னு அவ்ளோ ஆத்திரம் வருது என்று கத்திவிட்டு ஓய்ந்து உட்கார்ந்தாள் அவர் மனைவி. அவர் காதிலே யாரோ ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினார்கள்

    Share
  • பழசு

    -தமிழ்த்தேனீ

    தயங்கித் தயங்கித் தொலைபேசியில் மகன் சரவணனிடம் கேட்டார் சபேசன். ”ஏம்பா உனக்கு நம்ப வீட்டோட போட்டோ எல்லாம் அனுப்பிச்சேனே  பாத்தியா?”

    ”எல்லாம் பாத்தேம்பா  ரொம்ப மோசமா இருக்கே…?  நானே அதைப்பத்தி உங்க கிட்ட பேசணும்னு இருந்தேன்  நிறைய வேலை.”

    ”சரிப்பா நான் நாளைக்கே ஐந்து லட்‌சத்தை உங்க பேருலே அனுப்பறேன்; வீட்டை உடனடியாச் சரிப்படுத்திடுங்க” என்றான் சரவணன்.

    மூன்று மாதங்களாக  ஏற்கெனவே சொருகு ஓடு போடாத மேல் தளத்தில் மழை பெய்ததால்  ஏற்பட்ட  நீர்க் கசிவை சரிசெய்ய  வேறு வழியில்லாமல்  தளத்தில் இருந்த சிமென்ட் ஜல்லி கலந்துபோட்ட கலவையெல்லாம் உடைத்து எடுத்து   ஒரு இடம் விடாமல் லீக் ப்ரூப் எண்ணெயைப்  பூசிவிட்டு  வேறு சிமென்ட் ஜல்லி மணல்கலந்து போட்டு,  விழும் தண்ணீர் ஒரு இடத்தில் குவிந்து குழாய் வழியாகத் தோட்டத்துக்குப் போகுமாறு சாய்வு கொடுத்து,  அதைச் சரிசெய்துவிட்டு, அதன்மேல் மீண்டும் லீக் ப்ரூப் எண்ணெயை அடித்து அதன்மேல் சிமென்ட் போட்டு, அதுக்கும் மேலே வெள்ளை டைல்ஸ் போட்டு, வெப்பம் தாக்காமலும், நீர் உள்ளே இறங்காமலும்  மற்ற இடங்களில் அதனால் ஏற்பட்ட பள்ளங்கள், வர்ணம்போன இடங்கள்  எல்லாவற்றையும் சரிசெய்து,  ஒழுங்காக வேலைக்கு வராத,  வந்தாலும் ஒழுங்காக வேலை செய்யாத ஆட்களை வைத்துக்கொண்டு வெய்யிலில் அவர்களின் கூடவேநின்று  வேலை வாங்கி, வலிக்கும் முதுகில்  அவ்வப்போது வலிநிவாரணிப் பசை தேய்த்துக்கொண்டு மூன்று மாதத்துக்குப் பின் இப்போதுதான்  வேலை முடிந்திருக்கிறது.

    வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் புகைப்படம் எடுத்து மகனுக்கு  இணையத்தின் வழியாக அனுப்பினார்.

    மகனிடமிருந்து தொலைபேசி அழைப்பு!

    ”சொல்லுப்பா போட்டோ எல்லாம் பாத்தியா?”  என்றார் உற்சாகக் குரலில்.

    ”பாத்தேம்பா!  இந்த வயசிலே எதுக்கு இவ்ளோ உழைக்கிறீங்க?  அது சரி இவளோ உழைச்சு  இன்னும் அசிங்கமா ஆக்கிவெச்சிருக்கீங்க வீட்டை” என்றான் மகன்.

    ”என்னப்பா சொல்றே?” என்றார் அவர்.

    பின்ன என்னப்பா? நீங்க அமெரிக்காவுக்கு வந்தப்போ அங்கே இருக்கிற வீட்டையெல்லாம் பாத்தீங்களே அதெல்லாம் எவ்ளோ  நல்லா  நாகரிகமா வசதியா  இருக்கு.  இப்பிடி  ஒவ்வொரு அறைக்கு ஒவ்வொரு வர்ணம்  முன்னாலே  தாழ்வாரத்துக்கு அடுத்து  முத்தம், அது போதாக்குறைக்கு  அதிலே  ரெட் ஆக்சைடு அடிச்சு,  ஏதோ காவி கலர்லே தரை. என்னப்பா இதெல்லாம்?  வீட்டை அசிங்கப்படுத்தி வெச்சிருக்கீங்க!  அஞ்சு லட்‌சம் அனுப்பினேன்;  அஞ்சு லட்‌சம் செலவழிச்சு நீங்களும் உழைச்சு,  வீட்டைக் கெடுத்து வெச்சிருக்கீங்களே?   இன்டெர்னெட்லே  பாருங்கப்பா!  எவ்ளோ டிசைன் வந்திருக்கு.  அதைப் பாத்தாவது  லேட்டஸ்டா,  மாடர்னா,  கட்டக் கூடாதா?   சரி… என்னமோ செய்ங்க!”  என்று தொலைபேசியை வைத்தான்  மகன்.

    ஆறு மாதங்கள் அவருடன் சரியாகப் பேசவில்லை.  அவரும் சரி எதையுமே கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தார். சற்றே கோபம் தணிந்தது போலும்!
    ஒருநாள் தொலைபேசியில், ”அப்பா! நான் உங்களுக்கும் அம்மாவுக்கும்  விசா போடறேன் அமெரிக்கா வறீங்களா?  உங்க பேரன் உங்களோட இருக்கணுமாம்! இப்போ அவனுக்கு லீவு விட்டுட்டாங்க.  வறீங்களா?  என்றான்.

    ”சரிப்பா…வரோம்!” என்று அமெரிக்கா போய் இறங்கினார்கள் இவரும் இவர் மனைவியும்.

    பேரன் ஓடிவந்து,  ”தாத்தா, பாட்டி  வெல்கம்! வெல்கம்!” என்று கட்டிக் கொண்டான்.  மருமகள், “வாங்க வாங்க  ப்ரயாணமெல்லாம் சௌகரியமா இருந்துதா?”  உக்காருங்க  முதல்லே  காப்பி குடிங்க! என்று காப்பியைக் குடுத்துவிட்டு சாப்பாடு ரெடியா இருக்கு குளிச்சிட்டு வந்தீங்கன்னா சாப்படலாம் என்றாள்.

    ஆயிற்று உணவு முடிந்ததும் தூக்கம் கண்களைச் சுழற்றிக் கொண்டு வந்தது.

    ரெண்டு பேரும் இப்போ  சமாளிச்சிக்கோங்க;  ராத்திரி  தூங்கலாம்   அப்போதான்  ஜெட்லாக் போகும் என்றாள் மருமகள். சரி என்று இவர்களின் வருகைக்காகவே ஏற்பாடு செய்து வைத்திருந்த தமிழ்ச் சேனல்களைப்  பார்க்க ஆரம்பித்தார்கள்.

    தொலைக்காட்சித் தொடர் பார்த்துக் கொண்டிருந்தபோது  அதிலே ஒரு வீட்டைக் காட்டினார்கள்.  அப்பா இந்த  வீடு இருக்கே  நிறைய தொலைக் காட்சித் தொடர்லேயும்  சினிமாவிலேயும்  நிறைய வருதுப்பா. ஒரு நாளைக்கு  இருவதாயிரம் வாடகையாம்.  இருந்த இடத்திலேருந்தே சம்பாதிச்சுக் கொடுக்குது  என்றாள்  மருமகள்.

    ”இப்படி மூன்று மாதங்கள் கழிந்ததும் சரிப்பா.. நாங்க இந்தியா கிளம்பறோம்” என்றார்.

    ”ஏம்பா இன்னும் மூணு மாசம் இருக்கலாமே?” என்ற மகனிடம் அமெரிக்காவிலே  பார்க்கவேண்டிய இடங்களெல்லாம் பாத்தாச்சு. அங்கே இந்தியாவிலே கொஞ்சம் வேலையிருக்கு  அதுனாலே கிளம்பறோம்” என்றார்.

    மறுநாள் மீண்டும் இந்தியா கிளம்பவேண்டும்.

    ”ஏம்பா…எனக்கு ஒரு பத்து லட்‌சம்  அனுப்பி வைக்கிறியா?” என்றார்  அப்பா.

    ”என்னப்பா விளையாடறீங்களா? உங்களையும் அம்மாவையும் இங்கே கூட்டிகிட்டு வந்து இது வரைக்கும்  10 லட்‌சம் செலவழிச்சிருக்கேன். காசு சும்மா வரலப்பா…உழைச்சாதான் வரும். பணத்தோட  அருமையே தெரியாம பேசறீங்களே?” என்றான் மகன்.

    மறுநாள்  ஏர்போட்டுக்கு வந்து சேர்ந்தாயிற்று. ”எல்லாம் எடுத்து வெச்சிகிட்டீங்களாப்பா?  பத்திரமா போயிட்டுவாங்க  ரெண்டு பேரும். உடம்பைப் பாத்துக்கோங்க.  நான் நேத்து கடுமையாப் பேசினேன்… அதையெல்லாம் மனசிலே வெச்சிக்காதீங்க!”  என்றார் மகன்.

    ”சரிப்பா…இமிக்ரேஷனுக்கு நேரமாச்சு!  நாங்க கிளம்பறோம்.  எங்க பேரனைப் பத்திரமா பாத்துக்கங்க.  நீங்க  ரெண்டுபேரும்கூட  நேரத்துக்குச் சாப்டுட்டு நேரத்துக்குத் தூங்கி ஆரோக்கியத்தைப் பாத்துக்கோங்க.  பணம்மட்டும்  முக்கியமில்லேப்பா;  ஆரோக்கியம் முக்கியம்” என்றபடி பேரனைத் தூக்கி ஒரு முத்தம் கொடுத்துவிட்டு,  ”உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்! தொலைக்காட்சித் தொடர்லேயும், சினிமாவிலேயும் அடிக்கடி வருதே அந்த வீடுதாம்ப்பா நம்ம கிராமத்து வீடு. நாங்க  ஒரு அறையிலே இருந்துண்டு வாடகைக்கு விடறோம் படப்பிடிப்புக்கு. இது வரைக்கும் அந்தவீடு இருவத்தி அஞ்சு லட்சம் சம்பாறிச்சுக் குடுத்திருக்கு.

    அந்த இருபத்தி அஞ்சு லட்‌சத்தை வெச்சு  அதே கிராமத்திலே  இன்னொரு வீடு வாங்கினேன்.  அந்த வீட்டை நீ  ஏற்கெனவே சொன்னா மாதிரி  மாடர்னா  மாத்தலாம்னுதான்  பத்து லட்‌சம் கேட்டேன்”  என்றார் அப்பா.

    சற்றுநேரம் புயலடித்து ஓய்ந்தாற்போல் ஒரு மௌனம்.

    மகன் சொன்னான்…”அப்பா நான் பத்து லட்சம் அனுப்பறேன்…ஆனா மாடர்னா கட்டாதீங்க!  நம்ம கிராமத்து வீடு மாதிரியே கட்டுங்க!” என்றான் கையைப் பிடித்துக் கொண்டு.

     

     

     

    Share
  • இலக்கிய வாசல் குவிகம்

    தமிழ்த்தேனீ

    திருமுல்லைவாயிலிலிருந்து திருவான்மியூர்

    திரு சுந்தரராஜன் அவர்களும் திரு கிருபாநந்தன் அவர்களும் இணைந்து நடத்தும் குவிகம் இலக்கியவாசல் என்னும் அமைப்பில் திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தகாலயத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவுப் பெட்டகங்களை திரு சுஜாதா தேசிகன் திரு ரகுநாதன் இருவரும் பேசுகிறார்கள் அவசியம் வாருங்கள் என்று அன்போடு அழைத்தார்கள் . நானும் என் துணைவியாரும் இந்த சந்திப்பிலே கலந்து கொண்டோம்.

    de3f7094-6408-458d-9c5b-27ced59df879

    திரு சுஜாதா அவர்களின் பன்முகத் திறமை சிலாகிக்கப்பட்டது . திரு சுஜாதா தேசிகன் திரு ரகுநாதன் இருவரும் திரு சுஜாதா அவர்களின் வாழ்க்கையில் தாங்களும் எப்படி பின்னிப்பிணைந்தார்கள் என்பதை மிகுந்த நகைச்சுவை உணர்வோடும் பொறுப்பாகவும் சிலாகித்தார்கள், திரு சுஜாதா அவர்களே இவர்கள் இருவருக்கும் கதை எழுதக் கற்றுக் கொடுத்த அனுபவங்களை கூறினார்கள் .திரு சுஜாதா தேசிகன் திரு ரகுநாதன் இருவரும் திரு சுஜாதா அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த அனுபவங்களை நகைச்சுவையோடு கூறினார்கள் . ஆனாலும் திரு சுஜாதா அவர்களின் மறைவு இவர்களைப் பாதித்த ஏக்கம் இழையோடிக்கொண்டே இருந்தது . இருவர் பேசியதைக் கேட்டதும் ஒரு ஏக்கம் பிறந்தது நமக்கும் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவில்லையே என்று.

    மேலும் திருமதி சுந்தரராஜன் அவர்கள் சிறுவர்களை வைத்து சுஜாதா அவர்களின் நாடகம் ஒன்றை அரங்கேற்றினார். சிறுவர் சிறுமியர்கள் வசனங்களை திருத்தமாகப் பேசிய விதம் ஆச்சரியப்படுத்தியது. . நானும் பல மேடைகளில் நடித்திருந்தாலும் இந்தக் குழந்தைகளிடமிருந்து உட்கார்ந்த இடத்திலேயே நடிக்க முடியும் குரல் ஏற்ற இறக்கங்களாலும் முக பாவனைகளாலும் என்பதை கற்றுக் கொண்டேன் .

    திரு நகுபோலியன் அவர்கள் ஒரு கதை படித்தார் கதை எழுதுவது ஒரு கலை என்றாலும் அதைப் படிக்கும் பாவனையில் அந்தக் கதை இன்னும் மிளிரும் என்பதை அவருடைய அனுபவம் பேசிற்று.

    074ef34f-3cf6-4bca-a11e-72dcbae904e8
    நானும் சுஜாதா அவர்களின் பல கதைகளைப் படிந்து ரசித்தவன்தானே

    அதனால் சுருக்கமாக

    விடைக்கு எழுதுவார்கள் சில எழுத்தாளர்கள்
    கடைக்கும் எடைக்கும் எழுதுவார்கள் சில எழுத்தாளர்கள்
    பண முடைக்கென்றே எழுதுவார்கள் சில எழுத்தாளர்கள்
    ஆனால்
    நடைக்கென்றே எழுதியவர் திரு சுஜாதா என்று கூறிவிட்டு
    தாய்மை என்னும் ஒரு கவிதை படித்தேன்
    இதோ அந்தக் கவிதை
    தாய்மை
    பத்தியமாயிருந்து பத்திரமாயப் பாதுகாத்து
    பத்து மாதம் சுமந்திருந்து, இடைநோகப் பெற்றெடுத்து
    மடியிலுன்னைத் தவழவிட்டு இடுப்பிலுன்னை
    அரவணைத்து கட்டிமுத்தம் நான் கொடுத்தேன்,
    –அப்போது தெரியவில்லை
    முட்டி முட்டிப் பால் குடித்தாய்,நகத்தால் என்னைக்
    கிள்ளி விட்டாய், கீழிறக்கி விடவில்லை,கடிந்துன்னைப்
    பேசவில்லை,தோளில் உன்னை தூக்கி வைத்தேன்,
    இடுப்பில் வைத்து நான் சுமந்தேன்
    –அப்போது தெரியவில்லை
    பிஞ்சுக்கையால் அடித்தபோதும்,பற்களால்
    கடித்தபோதும்,எட்டி எட்டி உதைத்தபோதும்
    முடிபிடித்து இழுத்தபோதும் ஏறி என்னை
    மிதித்தபோதும், சுமந்தே இருந்தேன்
    -அப்போது தெரியவில்லை
    தள்ளாத வயதிலென்னை தாங்கும் வேராய்
    நினைத்திருந்தேன்,நீயும் நானும் வேறு வேறாய்
    தனிமையிலே இருக்கவிட்டாய், இனி தாங்க
    முடியாதென்றாய், இனி தேவையில்லை என்றெண்ணி
    முதியோரில்லத்திலே தங்கவைத்தாய்,
    வேறெதுவும் தேவையில்லை, அன்பாக ஒரு வார்த்தை
    ‘அம்மா” என்றே ஒருமுறை தான் சொல் என்றேன்
    அதுகூட முடியாமல் மௌனமாய் நீ…..
    தவறென்ன செய்திட்டேன்? இப்போதும் தெரியவில்லை…!
    அப்போது தெரியவில்லை…ஏனோபுரியவில்லை
    ..வலிக்கிறது வலிக்கிறது

    என்ன செய்வது அப்பாக்களைப் பற்றிக் கவிதை எழுதினால் யாரும் ரசிப்பதில்லை

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    Share
  • குழந்தை

    தமிழ்த்தேனீ

    அம்மாவே ஒரு குழந்தை

    எத்தனையோ பேறுகள் பெற்றவள் ஆயினும் அம்மாவே ஒரு குழந்தைதானே மலடி பூக்காமரம் காய்க்காகொடி முளைக்கா விதை என்றெல்லாம் ஒருகுழந்தை பெற்றுத்தர வக்கில்லையென்றே ஏசும் வாய்மொழிகள் வீசும் தீக்கணைகள் எத்தனையோ பேர்கள் அத்தனையும் பெற்றுத் துடித்தாலும் ஏற்காத பழியெல்லாம் ஏற்று மனம் நொந்து போனபின்னே நோற்காத நோன்பெல்லாம் நோற்று  வரமாய் ஒரு குழந்தை பெற்றாளே

    அம்மாவே ஒரு குழந்தை

    தாலாட்டி சீராட்டி பாலூட்டி வளர்க்க ஒரு குழந்தை வேண்டுமென்றே தவம் கிடந்தே பெற்ற ஒரு மகன் அந்தத் திருமகன் வாழ்வுக்காய் எத்தனையோ தியாகங்கள் செய்திருந்தாலும் அத்தனையும்  அடி மனதில் அழுத்தி வைத்தே  சிரித்தாள் அம்மாவே ஒரு குழந்தை

    தவமிருந்து தான் பெற்ற  அந்த  ஒரு மகன்  அந்தத் தாயின் திருமகன்  அவளைக் காப்பான் என்று சற்றும் எண்ணாமல் அவனைக் காப்பதே வரமாய் வளர்த்தாள்

    அம்மாவே ஒரு குழந்தை

    எதிர்பார்ப் பேதுமின்றி அவன் சொன்ன சொல்லுக்கெல்லாம் மறுப்பேதுமின்றி எதற்கும் தலையாட்டி நயந்தாள்  பயந்தாள் இழைந்தாள் குழைந்தாள் அவள் பெற்ற  குழந்தைக்காய்  அவள் குழந்தை ஆனாளே  அம்மாவே ஒரு குழந்தை எதிர்பார்ப் பேதுமின்றித்தானே தவமிருந்தாள்  தானே தவமிருந்தாள்

    தாயறியாச்  சூலா நூலறியாச் சீலையா  தவமிருப்பதே வேலையா அதென்ன பிள்ளை பெறும் ஆலையா

    சூலாயுதம் கொண்டே காக்கும் வேலாயுதா சூல் ஆயுதம்  கொண்டே தாக்கினால் தாங்குவார் யாருளர் தவித்தே போனாள் தனித்தே அவன் போனான் தவித்தே இவள் போனாள்

    பாவம் அம்மாவே ஒரு குழந்தை

    தாய்க்குப் பின்  தாரம்தானே அந்த அவதாரம் தானே சொன்ன  மந்திரம் ஆக்கியதே அவளை யந்திரமாய் இனித்தே பெற்ற அந்த  ஒரு மகன் அவளைத் தனித்தே தைரியமாய்  துணித்தான்

      அவளை பணித்தாயாய்ப் பணித்தான்   அவளுக்கு  தனிமையைத் திணித்தான்  இனித்தேற  வழியுண்டோ தனித்திருந்து  தவமிருந்தாள் தவமிருந்து தனித்திருந்தாள் தனித்திருக்கும் நேரமெல்லாம் தவமிருந்தாள் தவமிருந்த காலமெல்லாம் தனித்திருந்தாள் அதனால்தான்  பிள்ளை கனிந்தான் அறியாமல் அவனின்று  நினைந்தான் அவளைத் தவிர்த்திருக்கக துணிந்தான்

     பாவம் அம்மாவே ஒரு குழந்தை

      அன்புக்காய் பரிவுக்காய் அன்பான உறவுக்காய் இதமான  சொல்லுக்காய் பரிவான  மனதுக்காய் ஏங்கியேங்கித் தவித்தாள்   கனிகின்ற காயானால் கனியும் எப்போதும் கனியாத  காயாலே  தனித்தாள்

    பாவம் அம்மாவே ஒரு குழந்தை

    Share
  • வாக்காளர்கள் அல்ல நாம் நியமிப்பாளர்கள்!

    -தமிழ்த்தேனீ

    நேரத்தை வீணடிக்கும் போது கவனி! வீணடிப்பது நேரத்தை அல்ல!  உன் வாழ்க்கையை!

    —-விவேகானந்தர்

    60 x 60 x 24 x 30 x 12 x 5 = 155520000 x 13 = 2,021,760,000

    —————————————————————————————————-

    60 வினாடிகள் ஒரு நிமிடத்துக்கு; 60 நிமிடங்கள் ஒரு மணிக்கு;  3600 வினாடிகள்   ஒரு  மணிக்கு;   ஒரு நாளைக்கு  24  மணி நேரம்; 24  மணி நேரத்துக்கு  86400 வினாடிகள்; ஒரு மாதத்துக்கு 30 நாட்கள்; 30 நாட்களுக்கு  2,592,000 வினாடிகள்; ஒரு வருடத்துக்கு 12  மாதங்கள்;  31,104,000 வினாடிகள்;  ஐந்து வருடத்துக்கு  366 நாட்கள்;  ஐந்து வருடத்துக்கு  1830 நாட்கள்; 1,55,520,000  வினாடிகள்.  ஆக மொத்தம் ஒரு தேர்தல் கழிந்து மறு தேர்தல் வரை    1,55,520,000  வினாடிகள்  நாம் வீணடிக்கிறோம்   தவறான ஆளுவோரை நியமித்து!

    ஒன்று நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்! ஐந்து வருடங்களை நாம் வீணடித்தால் 1,55,520,000  வினாடிகள் வீணடிக்கிறோம்.  அது மட்டுமல்ல  நாட்டையும் கெடுத்து நாட்டு மக்களின் நல்வாழ்வையும் கெடுத்து நாட்டின் பொருளாதாரத்தையும் இயற்கை வளங்களையும் கெடுத்து மொத்தத்தில் நாமே நம்மை ஒவ்வொரு வினாடியிலும் வீழ்ச்சியை நோக்கி நகர்த்திச் செல்கிறோம்.

    ஒரு வினாடி என்பது  செலவழித்துவிட்டால் மீண்டும்  பெற முடியாத எப்படிப்பட்ட பொன்னான வினாடி என்பதைப் புரிந்து கொண்டால் நாம் இனி வினாடியை வீணடிப்போமா?  வினாடியை வீணடிப்போமா?  என்னும்  வினா   நமக்குள்  எப்படிப்பட்ட விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும்  என்பதை எண்ணிப் பாருங்கள்!

    சரி… இப்படி மாற்றிச் சிந்தனை செய்து பார்ப்போம்.

    இறைவனைத் தரிசனம் செய்ய  வரிசையில்  மூன்று நாட்கள் நின்று  இறைவன் அருகே சென்றவுடன் அந்த இறைவனைக் காண நமக்கு ஒதுக்கப்படும் நேரம்தான் ஒரு வினாடி என்பது.

    அந்த ஒரு வினாடிக்குள்  நம்மால் இறைவனை முழுவதுமாக தரிசிக்க முடிகிறதா?  இல்லை என்பதே  பதிலாகக் கிடைக்கிறது.

    ஏனென்றால் அப்படி  முழுமையான தரிசனம் கிடைத்தால்  மீண்டும் மீண்டும் ஏன்  நாம் அந்த தரிசனத்துக்காக  ஏங்குகிறோம்?

    ஏன் மீண்டும் தரிசனம் செய்ய முயல்கிறோம்?  ஏன் ஆசைப்படுகிறோம்?  இப்போது புரிகிறதா  அந்த  ஒரு வினாடி எப்படிப்பட்ட  அருமையான வினாடி  என்று.

    ஆனால் எத்தனை வினாடிகள் தரிசனம் கிடைத்தாலும் நம்மால் ஒரு வினாடிக்கு மேல் இறைவன் மேல் மனத்தைச் செலுத்த முடிவதில்லை  என்பதே உண்மை.

    ஏனென்றால்  மனித  மனம் இடையறாது  வினாடிக்கு வினாடி மரத்துக்கு மரம் தாவும் குரங்கின் இயல்பை ஒத்திருப்பதால்  நம்மால் ஒரு வினாடிக்குமேல் இறைவனுடன் ஒன்றிப்போக முடிவதில்லை என்பதே உண்மை அல்லவா?

    அப்படிப்பட்ட  ஆழமான, ஒன்றிப்போக முடியாத  அந்தப் பொன்னான வினாடியை மீண்டும் மீண்டும்  நம் வாழ்விலே பெறவே முடியாது. ஆம், கழிந்து போன வினாடியை மீண்டும் நம்மால் பெற முடியாது.

    அப்படிப்பட்ட  தவம் போன்ற  வினாடியை நாம் வீணடிக்கிறோம்; அதுவும் ஒவ்வொரு வினாடியாக  ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சுமாராக  1,55,520,000  வினாடிகள் வீணடிக்கிறோம்.

    ஒரு வினாடியை வீணடித்தாலே மீண்டும் பெற முடியாத நாம் 1,55,520,000 வினாடிகளை வீணடிக்கிறோம்  தவறான ஒருவருக்கு ஆட்சியை…  பதவியை  அளித்து!

    ஆனால் இப்படி  நாம் தவறான, தகுதி இல்லாத  ஒருவரை நியமிக்க ஆட்சியை அளிக்க, பதவியை அளிக்க  நாம் எடுத்துக் கொள்ளும் நேரமே வினாடி நேரம்தான்!

    ஆமாம் நாம் வரிசையிலே பல மணி நேரம் நின்றாலும் வாக்களிக்க நாம் எடுத்துக் கொள்ளும்  நேரம் ஒரு வினாடியே!

    அந்த வினாடியை எப்படிப் பயனுள்ளதாக, ஆக்க பூர்வமாக, நம் முன்னேற்றத்துக்காக,  நம் தாய் நாட்டின் முன்னேற்றத்துக்காக எவ்வளவு யோசித்துத்  திறம்படச் செலவழிக்க வேண்டும்.

    அப்படித் திறம்படச் செலவழித்துத் தகுதியான  நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்னும் பொறுப்பை நாம் அனைவரும் உணர்ந்தால் அந்த ஒரு வினாடியை, நாம் வாக்களிக்க இருக்கும் அந்த ஒரு வினாடியை, மிகவும் கவனத்தோடு,  கண்ணியத்தோடு,  பொறுப்போடு உணர்ந்து பயன் படுத்துங்கள் வாக்காளர்களே!

    ஒரு விபத்து ஒரு வினாடியில் பல உயிரைப் பறித்துவிடுகிறது! புயல் ஒரு வினாடியிலே  ஒரு நாட்டையே  சீரழித்துவிடுகிறது!

    ஒரு சுனாமி ஒரு வினாடியிலே பல நாடுகளைக் கபளீகரம் செய்துவிடுகிறது. ஆனால், விபத்திலிருந்தோ,  புயலிலிருந்தோ,  சுனாமியிலிருந்தோ,  நில நடுக்கத்திலிருந்தோ  தப்பித்த  ஒருவரைக் கேளுங்கள்,  அந்த  ஒரு வினாடியின் அருமை அவருக்கு தெரியும்.

    அப்படி வினாடியின் அருமை புரிந்த  ஒருவரைப் போல் திறமையாக யோசித்துப் பொறுப்பாக இந்தத் தேர்தலில்  மிகச் சரியான ஆளுவோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் நாம்.

    உண்மையைச் சொல்லப்போனால் சுதந்திரம் வாங்கி  இந்த வருடத்தோடு   நாம் 13  ஐந்து வருடங்களைக் கோட்டை விட்டிருக்கிறோம்.

    ஐந்து வருடத்துக்கே  1,55,520,000  வினாடிகள் என்றால் 13  ஐந்து வருடங்களுக்கு அதாவது 65  வருடங்களில்   20,21,760,000   வினாடிகளைத் தவற விட்டிருக்கிறோம். இனியும் ஒரு வினாடியைத் தவற விடலாமா?

    வாக்காளர்களே! உண்மையில் நாம் வாக்காளர்கள்  அல்ல;  நியமிப்பாளர்கள்! ஆமாம், நாம்தான் நியமிக்கிறோம். நம்மை ஆள, நம் தேசத்தை ஆள,   மந்திரிகளையும்  பாராளுமன்ற உறுப்பினர்களையும்  சட்டசபை உறுப்பினர்களையும் நாம் வாக்களித்து   அவர்களை நியமிக்காமல் அவர்களால் ஆளவே முடியாது.

    நமக்கு வேலைதரும் முதலாளிகள் நம்மைப் பணிக்கு நியமிக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்ததுபோல் அவர்கள் வியாபாரத்துக்கோ, ஆலைக்கோ, லாபம் வராமல் நஷ்டம் வந்தால்  நம்மைப் பணியிலிருந்து நீக்குகிறார்கள்.  அவர்களுக்கு நம்மைப் பணியிலிருந்து நீக்க எப்படி உரிமை உள்ளதோ அதுபோல நாம் நியமிக்கும்  ஆளுவோரால் நமக்கு நஷ்டம். நம் நாட்டுக்கு  நஷ்டம் ஏற்படுகிறது என்றால் அவர்களை நீக்கவும் தண்டிக்கவும் நீதிமன்றங்களை நாடுவது நம் உரிமை நாமே நியமிக்கிறோம்; அதை நன்றாக உணருங்கள்.

    ஆகவே, நாம்தான் முதலாளிகள்; மந்திரிகள்  நம்மால் நியமிக்கப்பட்ட பணியாளர்கள். இதை நன்றாக யோசித்து இனி நம்மை வாக்காளர்கள் என்று அழைப்பதை நிறுத்தி, நியமிப்பாளர்கள்  என்று அழைக்க வேண்டும் என்னும் மாற்றத்துடன்  நம் உரிமையைப் பாதுகாக்க ஏற்கெனவே வீணடித்த   2,021,760, 000  பொன்னான வினாடிகளையே இனி திரும்பப் பெறமுடியாது என்பதை உணர்ந்து இந்த  முறை ஒரு வினாடியையும் வீணாக்காமல் அந்த  வாக்களிக்கும் வினாடியை – நியமிக்கும் வினாடியை  வீணடிக்காமல் அறிவுபூர்வமாக, ஆக்கபூர்வமாக உபயயோகியுங்கள்; வீணடிக்காதீர்கள்!

    நாம்தான் நியமிப்பாளர்கள் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்!

     

    Share
  • ஐயாண்டுத் தேர்தல் நையாண்டிகள்

    தமிழ்த்தேனீ

    1. விரலிலே மையிட்டு அழகு பார்க்கிறார் பதவி

    வந்தவுடன் த்ரோணர் போல  விரலைக் கேட்கிறார்

    1. வாக்காளர் யார் பக்கம் என்று கருத்துக் கணிப்பு நடத்துபவர்களே யார் மக்கள் பக்கம் என்று கருத்துக் கணிப்பு எடுத்து விடையைச் சொன்னால் தேர்தலில் வாக்களிக்க உதவியாய் இருக்குமே

    1. தேர்தல் விழிப்புணர்வு ன்னு மேடையிலே

    பேசிக்கிறாங்களே அப்பிடீன்னா என்னாப்பா அது

    அது ஒண்ணும் இல்லேடா கண்ணா அந்தப் பொதுக் கூட்டத்துக்கு போனா ரூபா குடுப்பாங்க சாப்பாடு குடுப்பாங்க அப்பிடிப் போகலைன்னா அதுவும் கிடைக்காது அதுதான் தேர்தல் விழிப்புணர்வு

    1. கோடி கோடியாய் பணம் சேர்த்து வைத்திருப்போர் கோடி கோடியாய் சொத்துக்கள் சேர்த்திருப்போர்

    வேட்பாளர்களாய்

    கோடி கோடியாய் வாக்காளர்கள் ஏழைகளாய்

    5,       நாட்டிலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் தெரிகிறது அவர்களுக்கு எந்த ஊர் எந்த மாவட்டம் எந்த தொகுதி என்று

    ஆனால் இந்த ரூபாய் நோட்டுக் கட்டுக்களுக்கு மட்டும் தெரியவில்லை எந்த ஊர் எந்த மாவட்டம் எந்த தொகுதி என்று. பாவம் அல்லாடிக் கொண்டிரு க்கிறது  போக்கிடம் இல்லாத நோட்டுக்கட்டுகள் போவதெங்கே

    1. அசோகர் சாலை இரு மருங்கிலும் மரங்களை நட்டார்  ஆறுகள் குளங்கள் வெட்டினார்

    ஆட்சியாளர்கள்  சாலை இரு மருங்கிலும்   மக்களை  நடுகிறார்கள்

    ஆறுகளை   வெட்டுகிறார்கள்    வெட்டி  வெட்டி  மணலை எடுத்து விற்கிறார்கள்   ஏரிகள்  குளங்களையெல்லாம் வெட்டி வெட்டி  சதுரமாக்கி  நீள் சதுரமாக்கி    பொதுமக்களுக்கு   சேவை செய்ய  நிலங்கள் அளித்து   வீடுகட்ட   மணல் அளித்து   பணம் ஈட்டுகிறார்கள்

    1. முதுகு வலி தாங்க முடியாமல் வாலினி தெளிப்பான் அடித்துக் கொண்டேன். எரிச்சல் முதுகைப் பிளந்தது.சற்று நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள் வலி போய்விடும் என்றார்கள். சற்று நேரம் போனதும் எரிச்சல் பழகிவிட்டது.

    இன்னும் சற்று நேரம் போனதும் எரிச்சல் அடங்கியது மீண்டும் முதுகு வலிக்க ஆரம்பித்தது.

    வாழ்க்கையில் எல்லாமே அப்படித்தான் தேர்தலும் ஆட்சி மாற்றமும் கூட என்று புரிந்தது

    1. இதுவரை நானே உங்களை ஆண்டேன் இனியும் நான்தான் ஆளுவேன் . நான் ஆளுகின்ற காலத்திலே உங்களுக்கு என்ன செய்தேன் என்பது முக்கியமல்ல

    இனி ஆளப்போகும் காலங்களில் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதும் முக்கியமல்ல

    என்னைத் தவிர யார் கேட்டாலும் ஆளும் பொறுப்பைத் தராதீர்கள் . ஏனென்றால் நாட்டை ஆண்டு ஆண்டே பழக்கப்பட்டுவிட்டேன் என்னால் இந்த நாட்டை ஆளாமல் இருக்க முடியாது என்பதுதான் முக்கியம்

    அது மட்டுமல்ல பொதுமக்களே ஒரு ரகசியத்தையும் சொல்கிறேன் எனக்கு நாட்டை ஆள்வதைத் தவிர வேறு தொழில்களே எதுவும் தெரியாது . ஆகவே நான் உயிரோடு இருக்கும் வரையில் தயவு செய்து எனக்கே ஆளும் பொறுப்பினைத் தாருங்கள்

    நீங்கள் யார் பேச்சையும் கேட்டு ஏமாறும் முட்டாள்களல்ல யாராலும் உங்களை ஏமாற்ற முடியாது என்பதை நான் அறிவேன் . ஆகவே இந்த நாட்டை ஆளும் பொறுப்பை எனக்குத்தான் தரவேண்டும் நிச்சயம் தருவீர்கள் நிச்சயம் தந்தே ஆகவேண்டும் என்று உங்களை அன்போடு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்

    1. அடங்காமலிருப்பது என்னும் கொள்கை எல்லா இடத்துக்கும் சரிப்படாது அடங்கி நடப்பது நல்லது என்பதை அறியாத சில எதிர்க் கட்சிக்காரர்கள்  கேட்கிறார்கள்  ஏன் காலில் விழுகிறீர்கள்  என்று அவர்கள்  ஒதைப்பேன் என்று கைகாட்டினாலும்  பதிலுக்கு  கைகூப்பினால்  அதுக்கு தனி மரியாதை கிடைக்கும் என்று புரியாத எதிர்க்கட்சிக்காரர்கள்

    1. . சுதந்திரத்துக்காக போராடிய நாம் பணம் செய்யும் தந்திரத்துக்காக போராடுகிறோம் என்கிறார்கள்  அதைப் பாதுகாப்பது எவ்வளவு கடினம்  சுதந்திரத்தை போராடி மீண்டும் பெறலாம் ஆனால் பணத்தை இழந்தால் அதைமீண்டும் பெறவே முடியாது என்பது என்னைப் போன்ற அரசியல்வாதிகளுக்குத்தான் தெரியும்.
    2. இந்த நாட்டின் நிதி மந்திரியாகிய நான் நம் நாட்டின் நிதி நிலமை இவ்வளவு சீரழிந்து போய்விடும் என்று  கனவுகூடக் காணவில்லை-

    என் ஆட்சியில் மக்கள் இவ்வளவு கஷ்டப் படுகிறார்களா?  அதற்கு என் ஆட்சிதான் காரணமா?  நான் நினைக்கவே இல்லை   முதன் மந்திரி

    1. . கற்பனையைச் சொன்னேன் கரகோஷம் விண்ணைப் பிளந்தது உண்மையைச் சொன்னேன் கரங்கள் என்னைப் பிளந்தன

    .

    1. கோயிலில் இருக்கும்  தெய்வத்தின் தரிசனம் காணக் கூட வேண்டுமாம் மந்திரியிடம் சிபாரிசுக் கடிதம்

    .14..      ஒரு ரூபாய் தர்மம் கொடுத்தேன் வாயாரத்  திட்டினான் பிச்சைக்காரன்

    ஒரே ஒரு ஓட்டு போட்டேன் நாட்டையே  வீடாக்கிக் கொண்டார் அரசியல்வாதி

    1. மீன் விலையும் அதிகரிக்கிறது மின் விலையும் அதிகரிக்கிறது ஆனால் தேர்தல் ப்ரசார அலைகள் மட்டும் இரண்டையுமே தயாரிக்காமல் வெட்டியாய் ஓயாமல் வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறது ஆனால் கடலிலே கொந்தளிப்பே காணவில்லை அமைதியாய் இருக்கிறது

    1. யார்  ஜெயிப்பார் இந்த தேர்தலில்  நமக்கு நிச்சயமாகத் தெரியும்  கதாநாயகன்தான் ஜெயிப்பான் என்று

    மக்கள் கண்ணுக்கு  எல்லோருமே  வில்லனாகத் தெரிகிறார்கள்.யார் ஜெயித்தாலும்   அவர்களே   வில்லன்  அவர்களே கதாநாயகன்   என்னும் முடிவுக்கு  மக்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டுவிட்டார்கள்

    1. மதுப்பாட்டில்களிலும் சிகரெட் அட்டையின் மீதும்   அது ஆபத்தானது உயிரைக் குடிக்கும் புற்று நோய் வரும் சற்று நாட்களில்  விஷம்  உயிரைக்  குடிக்கும் என்று எழுதி விற்கிறார்கள்    இதைப் போல     எச்சரிக்கை  வாசகத்தை   மேலே எழுதிவிட்டு  விஷத்தையும்  விற்பார்களா வாங்குவோர்   அதை  வாங்கி  உபயோகப்படுத்தினால்  நடவடிக்கை  எடுப்பாமல்  இருப்பார்களா

    1. மேலிடத்திலே இருந்து வரும் தலைவர்கள் தமிழ் நாட்டிலே தமிழர்களிடம் இந்தி மொழியிலே பேசுகிறார்கள் தமிழ் மக்களுக்கு எப்படி புரியும் என்பது விவாதிக்கப்படுகிறது

    எனக்கு ஒரு சந்தேகம் தமிழ் நாட்டிலே தமிழர்களிடம் தமிழிலே பேசுகிறார்கள் பல தலைவர்கள் அதெல்லாம் மட்டும் மக்களுக்கு புரிகிறதா என்ன ? என்று

    1. அனைத்துக் கட்சித் தலைவர்களும்  வேட்பாளர்களும்     தங்களின்     கடந்த  காலத்தில் நடந்த  நடத்தப்பட்ட  தவறுகளை   அலசி  ஆராய்ந்து தங்களையே  ஆராய்ச்சி செய்து கொண்டு   தமக்குத் தாமே திருத்தி்க் கொள்ள  அமைந்த    ஒரு  அருமையான  நேரம் இந்தத் தேர்தல் களம் .  யார்  திருத்திக் கொள்கிறார்கள்   யார்   தங்கள்  தவறுகளை நியாயப் படுத்துவதி்லேயே  குறியாக இருக்கிறார்கள்  என்று கூர்மையாக  கவனியுங்கள்  வாக்காளர்களே .

    1. விலை உயர்ந்த நான்கு சக்கர  வாகனத்தையும்  தங்களோடு புதைக்கச்  செய்யலாமா என்று யோசிக்கிறார்கள் செல்வந்தர்கள்   ஆனால்  போகுமிடத்தில் பெட்ரோல் அல்லது  டீசல் கிடைக்குமா   தெரியவில்லை
    2. கப்பலை நிலை நிறுத்தப் பயன்படும்  நங்கூரமும்  கப்பலிலேயே  பயணிக்கிறது   வாகனங்களை நிறுத்த பயன் படும்  ஓட்டத் தடை  எனப்படும்   Break   வாகனத்தோடே  பயணிக்கிறது ஊழலைத் தடுக்க  மட்டும்  எதாலும் முடிவதில்லை

    1. ஹரிகேன் என்றால் புயல்    புயல் அடித்தாலும் அணையாத  விளக்கு  என்று சொல்வார்கள் . அந்த  விளக்கின்  வடிவம் அப்படி  அது போல் புயலடித்தாலும் இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டாலும் அவை மக்களைப் பாதிக்காத வண்ணம்  சுற்றுச் சூழலை ஏற்படுத்தி  மக்களைப் பாதுகாப்பதே  ஆளுவோர் செய்ய வேண்டிய  கடமைகளில் முக்கியமான ஒன்று
    2. நான் சிறுவனாக இருந்த போது இவ்வளவு மக்கள் தொகை பெருகாத  அந்தக் காலத்திலேயே  1960  ஆண்டு  சென்னை வால்டாக்ஸ் சாலையில்  சாக்கடை வடிகால் குழாய்கள் ஆளுயரத்துக்கு  வட்ட வடிவமாக இருக்கும்  அதிலே இறங்கி  மாநகராட்சி துப்புறவுப் பணியாளர்கள்  சுத்தம் செய்வார்கள். எட்டிப் பார்த்து  அந்தக் குழாய்களின் ஆழத்தை நினைத்து பயந்தி்ருக்கிறேன். ஆனால் இவ்வளவு மக்கள் தொகைப் பெருக்கத்துக்குப் பின்

    ஒப்பந்ததாரர்களை பணக்காரர்களாக்க  இரண்டடி விட்டமுள்ள  சிறு குழாய்களையே பதிக்கிறார்கள்.  அதையும்   நகரின் பல பாகங்களில் இன்னமும் பதிக்காமல்   சாலையிலேயே சாக்கடைகளை ஓடவிடுகிறார்கள்.  சாலைகளா  சாக்கடைகளா  என்றே தெரியாமல்  மக்கள் அல்லாடுகிறார்கள்

    1. வேட்பாளரை மாற்றக் கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் ஒரு பக்கம் மக்களின் விழிப்புணர்வைக் காட்டினாலும் அறிவித்த வேட்பாளரின் எதிர்ப்பாளர்கள் செய்கின்ற ஆர்ப்பாட்டமோ எனும் சந்தேகமும் வருகிறதுப் பாவம் வாக்காளர்கள் அவர்களுக்கு எப்போதும் குழப்பமே
    1. தேர்தல் அதிகாரிகள் இயன்றவரை சிறப்பாக செயல்பட்டு நேர்மையான முறையை தேர்தலை நடத்துகிறார்கள் . அவர்களுக்குத்தான் தெரியும் அவர்களின் கஷ்டங்கள்.

    தேர்தல் முடிந்தவுடன் வேட்பாளர்கள் பதவி பெறுகிறார்கள்

    வாக்காளர்கள் எந்தப் புதுமையும் இன்றி பழைய வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள் .

    அவ்வளவு மாதங்கள் உழைத்த தேர்தல் அதிகாரிகளை

    இனி வரும் தேர்தல் நேரத்தில் நினைவுகொண்டால் போதும் என்று மக்களும் அதிகாரிகளும் அவரவர் வேலையைத் திறம்படச் செய்கிறார்கள்

    1. உழைப்பவர் உழைக்கட்டும் திறமையாக உழைப்பவருக்கு உழைப்பை அளியுங்கள் தகறாரு செய்பவருக்கு பதவி உயர்வு அளியுங்கள் எனும் கொள்கை தீவிரமாக கடைப் பிடிக்கப்படுகிறது
    1. நங்கூரத்தின் அளவைக் கொண்டு கப்பலின் அளவை ஓரளவு  அறிய முடியும்  உறைக்கேற்ற கத்தி  அல்லது கத்திக்கேற்ற  உறை போல் விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல் கப்பலுக்கேற்ற  நங்கூரம் அது போல் மக்களுக்கேற்ற  மன்னன்தான் அமைகிறான்

    1. வெட்கமாகத்தான் இருக்கிறது !

    அவரவர் கடமையை அவரவரர் செய்வதற்கு பணம் கொடுப்பது தான் நியாயமான செயல்

    ஆனால் அவரவர் கடமையை அவரவர் வேலையைச் செய்யாமலிருக்க சாலைகளை விரிவாக்கம் செய்யாமலிருக்க ஏரிகளை ஆக்ரமிக்க நிலங்களை அபகரிக்க பணம் கொடுப்பது அநியாயமான செயல்

    அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்

    சாலைகளை விரிவாக்கம் செய்யாமலிருக்க சாலையோரக் கடைகள் நடத்துவோர் பெரும் தொகை கொடுக்கத் தயாராய் இருக்கிறார்கள். அப்போதுதான் அவர்கள் கடைகள் இடிக்கப்படாமல் இருக்கும்.

    ஏரிகளை ஆக்ரமித்தால்தான் அந்த நிலங்களை பட்டா போட்டு விற்க முடியும் அதனால் பலர் ஏரிகளை ஆக்ரமிக்க பெருந்தொகை கொடுக்கத் தயாராய் இருக்கிறார்கள்

    அரசு அதிகாரிகள் அவர்கள் கடமைகளை செய்யாமல் இருக்க பெருந்தொகை அளிக்க பலர் தயாராய் இருக்கிறார்கள் அப்போதுதான் சட்டவிரோதமாக பலர் சம்பாதிக்க முடியும்  இப்படிச் செய்வோரெல்லாம் பொதுமக்களாகிய நம்முடனேயே கலந்திருக்கிறார்கள் .

    நிலமை இப்படி இருக்க அரசையோ அரசியல்வாதிகளையோ குறை சொல்ல நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று யோசித்தேன். வெட்கமாகத்தான் இருக்கிறது.

    1. உற்பத்தி விளைச்சல் அதிகமானால் பொருட்களின் விலை குறைகிறது

    விலை குறைந்தால் வியாபாரிகளுக்கு  லாபம் குறைகிறது

    உற்பத்தி  குறைந்தால் தேவை  அதிகமாகிறது  தேவை அதிகமானால் விலை உயர்கிறது

    விலை உயர்ந்தால் உற்பத்தியாளர்களுக்கும்  வியாபாரிகளுக்கும் லாபம் அதிகமாகிறது

    1. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்

    நலத் திட்டங்களை செயல் படுத்துவோம்

    என்று வாக்குறுதி அளிப்போரே ஏற்கெனவே ஆட்சியில் இருந்த போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டீகளா? இன்னும் இல்லையா !

    ஓ ! அவைகளையும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் நிறைவேற்றுவீர்களா இப்போதுதான் புரிகிறது

    1. வேண்டுகோள் :

    வில்லிவாக்கம் வழியாக பாடி அம்பத்தூர் தொழில் நகரம் போன்றவைகள் இருக்கும் திருவள்ளூர் நெடுஞ்சாலையை இணைக்கும் ஒரே பாலம் டீ ஐ சைக்கிள் அருகே இருக்கும் பாலம்தான். . அந்தப் பாலத்தை அகலப்படுத்தி உறுதிப்படுத்தினால் அம்பத்தூர் ஆவடி பட்டாபிராம் திருவள்ளூர் முதல் திருப்பதி வரை வாகனங்களில் செல்வோருக்கு உதவியாக இருக்கும்.

    அந்த ஒற்றைப் பாலம் உறுதியாக இருக்கிறதா? அதை முதலில் கவனியுங்கள் ஆட்சியாளர்களே

    பாலம் இடிந்து மக்கள் ஒடிந்து போனபின் ஆறுதல் சொல்வதை விட, ஈட்டுத் தொகை வழங்குவதற்கு செல்வழிக்கும் தொகையைக் காட்டிலும் குறைவாகவே செலவாகும் . மக்களும் காப்பாற்றப்டுவார்கள்

    1. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று எல்லோருமே பேசுகிறார்கள்.

    ஆக மொத்தம் யாருக்குமே நம்பிக்கை இல்லை ஆட்சிக்கு வருவோம் என்று

    1. ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியிலிருந்து புறவிலைப்படி வரையில் உயர்த்திக் கொடுக்கிறீர்களே பாராட்டுக்கள்

    ஆமாம் அரசு ஊழியர் அல்லாத மற்ற ஊழியர்கள் யாரும் இந்த நாட்டு மக்கள் இல்லையா என்று ஒரு சந்தேகம் எழுகிறது.

    பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சைக்கிள் இலவச கணிணி எல்லாம் கொடுக்கிறீர்களே.

    படிக்க இயலாத பிள்ளைகளுக்கு இலவச படிப்பைக் கொடுப்பீர்களா

    1. ஆங்கிலேயர் காலத்திலே மதுவைக் கொடுத்து அடிமையாக வைத்திருக்கும் நுணுக்கத்தை கற்றுக் கொடுத்தார்கள் நம்மவர் எப்போதுமே கற்றுக் கொண்ட நுணுக்கங்களை

    மறக்க மாட்டார்கள்

    அதனால்தான் இன்னமும் அதே நுணுக்கத்தைப் பயன்படுத்துகிறோம். நன்றி மறவாதவர்கள் நாம்

    1. ஊழலை ஒழிப்போம் ஊழலை ஒழிப்போம் என்கிறார்களே

    குழந்தைகள் மேல் பாசமே இல்லாதவர்கள்.

    பெற்ற தாயே குழந்தையைக் கொல்லலாமா

    பெற்றவர்களே இப்படிச் செய்தால் அந்த ஊழல் குழந்தை

    பாவம் எங்குதான் போகும்

    குழந்தையை அனாதையாக விடலாமா?

    1. நல்லவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கு அரசியல் செய்யத் தெரியாது. அப்படி அரசியல் செய்யக் கற்றுக்கொண்டு விட்டால் அவர்களால் நல்லவர்களாக இருக்க முடியாது

    1. நாட்டிலே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அதிகமாகிவிட்டனர் எங்கு குற்றம் நடந்தாலும் அடையாளம் தெரியாத சிலரால் நடத்தப்பட்டது என்கிறார்கள்.. ஒரு வேளை வேற்றுக் கிரகவாசிகளாக இருப்பரோ.

    இந்த நாட்டில் உள்ளோரையே அடையாளம் தெரியவில்லை என்றால் வேற்று கிரக வாசிகளை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்ள முடியும்

    அதனால் வேற்று கிரக வாசிகளைக் கண்டு பிடித்து முதலில் அவர்களுக்காவது அடையாள அட்டை கொடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ஏனென்றால் தேர்தல் வாக்குறுதிகளில் மக்களுக்காக மக்கள் நலன் கருதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களைக் கண்டு பிடித்து நிச்சயமாக அடையாள அட்டைகள் வழங்கும் திட்டத்தை ஏற்படுத்துவோம் என்பது உறுதி ஆகவே எங்களுக்கே வாக்களியுங்கள் என்று மேடையிலே முழங்கும் அபாயம் ஏற்படும்

    1. ஆங்கில வழித் தனியார் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்து கல்வி கற்க வைத்து இந்த நாட்டிலே வாழவைக்க பள்ளியின் வாசலிலே இரவெல்லாம் நடைபாதையில் காத்திருக்கின்றனர்தமிழ்ப் பெற்றோர்கள். எப்போது கதவு திறக்கும் ?

    நான் பள்ளிக் கதவைப் பற்றி கேட்கவில்லை.

    கல்விக் கதவைப் பற்றிக் கேட்கிறேன்

    தமிழ்மொழிக் கதவைப் பற்றிக் கேட்கிறேன்

    1. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று வாக்களிக்கும் தலைவர்களை

    அப்படி நிறைவேற்றாவிட்டால் உங்களை என்ன செய்யலாம் என்று வாக்காளர்கள் யாரும் கேட்டுவிடாதீர்கள்

    எங்களை அடுத்த முறை தேர்ந்தெடுக்காதீர்கள் என்று எந்தத் தலைவராலும் சொல்லவும் முடியாது, சொல்லவும் மாட்டார்கள்..

    அதையும் தவிர இந்தக் கேள்விக்கு இன்னமும் யாருக்குமே பதில் தெரியாது .

    1. இன்று 2016 ஏப்ரல் 25 ஆம் தேதி

    பாச மழை பொழிகிறது கோடைக்கால மழையென்றால் அதிலே ஒரு தனிக் கவர்ச்சி இருக்கிறது. கொளுத்தும் வெய்யிலில் குளிர்விக்கும் பாச மழை நேச மழை வாக்கு மழை இப்போது சுகமாய்த்தான் இருக்கிறது ஆனால் அடுத்து வரப்போவது அக்னி நக்‌ஷத்திர வெய்யில் அப்போது தெரியும் தேர்தல் முடிவுகள். அப்போது பார்க்கலாம் பாசமழை குளிர்விக்கிறதா அல்லது இன்னும் அனலைக் கிளப்பப் போகிறதா என்று

    1. நிருபர் :

    நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நலத்திட்டங்கள் செய்வீங்கன்னு கேட்டா இப்பிடி கொஞ்சம்கூட பொறுப்பே இல்லாம நாங்க ஆட்சிக்கு வரமாட்டோம் . எதுவும் செய்ய மாட்டோம்னு பதில் சொல்றீங்களே எந்த நம்பிக்கையிலே இப்பிடி சொல்றீங்க

    ஒருவர் :  நாங்கதான் தேர்தல்லேயே நிக்கலையே அந்த நம்பிக்கைலேதான் சொல்றோம்

    1. கொய்யாக் கனிகளாக இருந்தாலும் கொய்யா கனியாக இருந்தால் கல்லடி படும்

    கோடி கோடியாய்ப் பணமிருந்தாலும்  முறையாக செலவழிக்காவிட்டால்  கொள்ளையர்களுக்குத்தான் பயன்படும்.

    1. வாக்காளர் யார் பக்கம் என்று கருத்துக் கணிப்பு நடத்துபவர்களே
      யார் மக்கள் பக்கம் என்று கருத்துக் கணிப்பு எடுத்து விடையைச் சொன்னால் தேர்தலில் வாக்களிக்க உதவியாய் இருக்குமே

    1. நுகர்வோர்பயன் படுத்தும்  மின்சாரக்  கட்டணத்தைக் குறைக்க எளிதான பல வழிகள் உள்ளன . அவற்றில் சிறந்த வழி மின்சாரம் அளிப்பதைக் குறைப்பது ஒன்று

    அப்போது மின் கட்டணம் அதிகமாகக் கட்டவேண்டிய அவசியம் இராது.

    1. இலவசங்களை அள்ளிக் கொடுத்து அதுவும் நம் பணத்திலே அவர்கள் கொடுப்பது போல் கொடுத்து அவர்களை ஆளுவோர்களாக அடையாளம் காட்ட வைக்கிறார்கள் அதுதான் ஆள் காட்டி விரல் . அந்த ஆள்காட்டி விரலில் மை போட்டு நம்மை மயங்க வைத்து

    அதை உணராமல் மந்திரச் சாவியைியும் கொடுத்துவிட்டு பொக்கிஷப் பெட்டியை திறக்க அவர்களை அனுமதியும் கொடுத்துவிட்டு மீண்டும் அவர்களை நோக்கி கையேந்துகிறோம்

    சிந்தியுங்கள் வாக்காளர்களே

    நம்மை ஆள்காட்டிகளாக ஆக்கு்வோரோ் அவர்கள்தான்

    நாம் ஆள் காட்ட வேண்டாம் தகுதியானவரை ஆளுவோராக அனுமதிக்க வேண்டும் . நம்மை திறம்பட ஆள, நாட்டை முன்னேற்ற நமக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்க அவர்களை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். ஆகவே நம் மனமே மந்திரச் சாவி

    புரிந்து கொள்ளுங்கள்

    1. டீ வீ மிக்ஸீ க்ரைண்டர் போன்ற எதுவானாலும் இயன்றவரை பணம் செல்வழித்து சரிபார்த்துவிட்டு இனியும் ஓடாது என்று தெரிந்தாலே தூக்கி வீசுகிறோம்

    ஆனால் பெற்றோர்களை இதெல்லாம் செய்யாமல் உடனடியாக தூக்கி வெளியே வீசுகிறோமே பெற்றோர்களுக்கு வாரண்டியும் இல்லை கியாரண்டியும் இல்லை

    1. அதிர்ஷ்டசாலிகளுக்கு திறமை தேவையில்லை திறமை சாலிகளுக்கு அதிர்ஷ்டம் வருவதில்லை

    உழைப்பாளிகளுக்கு ஊதியம் கிடைப்பதில்லை ஊதியம் கிடைப்போர் உழைப்பதில்லை

    1. ஏமாற்றுவோருக்கு ஏமாளிகள் கிடைக்கிறார்கள் ஏமாறுவோருக்கு ஏமாற்றுகிறவர்களே அமைகிறார்கள்

    ஆக மொத்தத்தில் திறமையாக ஏமாற்றுவோரே வெற்றி பெறுகிறார்கள். ஏமாற்றுவோரெல்லாமே திறமைசாலிகள் என்று அவர்களே நினைத்துக் கொள்கிறார்கள்

    ஏமாளிகள் என்றுமே ஏமாந்துகொண்டே இருக்கிறார்கள்

    1. மனைவி :ஏங்க நீங்க நியாயமா செய்ய வேண்டிய வேலைக்கு எதுக்காக இப்பிடி லஞ்சப் பணம் வாங்கறீங்க

    புருஷன் : நம்ம பிள்ளையை பள்ளிக் கூடத்திலே சேக்க அவங்களுக்கு பணம் குடுக்கணும்,

    எந்த வேலை நடக்கணும்னாலும் பணம் குடுத்தாதான் நடக்கும் ,

    தேர்தல்லே நிக்கணும்னா பணம் வேணும். வாக்காளர்களுக்கு பணம் குடுக்கணும், விளம்பரம் செய்யணுன்னா பணம் வேணும்.

    எல்லாரும் வாங்கறாங்க நானும் வாங்கினாத்தானே குடுக்க முடியும்

    இப்பிடி வாங்கினாத்தான் கேக்கறவங்களுக்கு குடுத்து எல்லாத்தையும் செய்ய முடியும்

    உனக்கு அப்பப்போ தங்க நகை வாங்கணும் காஞ்சீவரம் போயி பட்டுப் புடவை வாங்கணும் .

    பொண்ணுக்கு கல்யாணம் செய்ய மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதக்‌ஷணை குடுக்கணும். கார் வாங்கிக் குடுக்கணும் மாப்பிள்ளைக்கு , வீடு வாங்கிக் குடுக்கணும்

    இதுக்கெல்லாம் நான் இப்பிடி வாங்கினாத்தான் குடுக்க முடியும் அப்பிடியே நாம வாங்காம இருந்தா பயித்தியக் காரன்னு திட்றாங்க

    நான் வாங்கித்தான் ஆகணும் வேற வழியில்லே

    இதுக்கெல்லாம் பணம் உங்க அப்பனா குடுப்பான் வாயை மூடிக்கிட்டுப் போவியா?

    வேட்பாளர் :எங்களுக்கேஉங்க ஓட்டைப் போடுங்க

    வாக்காளர் : சாக்கடைத் தண்ணியிலே குண்டும் குழியுமா கல்லும் முள்ளுமா இருட்டா இருக்கற எங்க சாலையிலே நடந்து வந்து ஓட்டுக் கேக்கறீங்களே உங்களைப் பாத்தா நல்லவராத் தெரியுது அதுனாலே உங்களுக்கே எங்கள் ஓட்டு

    1. மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்போரே அது ஆணவத்தின்  உச்சமாக மாறும்   அபாயம் இருக்கிறது   .கீழே விழாமல்  இருக்க கொஞ்சம் மட்டுப் படுத்திக் கொள்ளுங்கள்   நிரந்தரமான மகிழ்ச்சிக்கு  அதுவே  வழி

    விரக்தியின் உச்சத்தில் இருப்போரே  மீண்டும் வாழத் தலைப்படுங்கள்  அதுதான் ஒரு  முடிவின் ஆரம்பம்

    1. ஊழல் நாடுகள் பட்டியலில் எழுவத்தி ஆறாவது இடத்தில் இந்தியா உள்ளது.

    டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு தரவரிசைப் பட்டியல் கணக்கீட்டுக்காக 168 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

    ஓ அதிலும் முதல் இடம் இல்லையா வருத்தமாகத்தான் இருக்கிறது இன்னும் முன்னேறினால்தான் முதல் இடத்தைப் பிடிக்க முடியும்

    1. வேட்பாளர் : ட்ரைவர் எல்லாத்தையும் வேன்லே ஏத்திட்டியா பத்திரமா கொண்டு போயி வாக்காளர்கிட்டே சேக்க வேண்டியது உன் பொறுப்பு . அப்போதான்யா நமக்கு ஓட்டு கிடைக்கும்

    ட்ரைவர் : நான் பாத்துக்கறேங்க நீங்க கவலைப்படாம இருங்க

    வேட்பாளர் : அதுக்கில்லே போற வழியிலே ஏதாவது ப்ரச்சனைன்னா எப்பிடி சமாளிப்பே

    ட்ரைவர் : நான் பாத்துக்கறேங்க நீங்க டென்ஷனாகாதீங்க

    வேட்பாளர்: எதுக்கும் நம்ம ஆளுங்களை உஷாரா இருக்கச் சொல்லு

    ட்ரைவர் : ஏங்க தேர்தல் வாக்குறுதி அச்சிட்டு எல்லாருக்கும் குடுக்கறீங்க அதுக்கு ஏன் இவ்ளோ பதட்டப் படறீங்க. வர வர நாட்டிலே ஒண்ணுமே புரியமாட்டேங்குது

    1. ஓட்டுப் போட பணம் தருகிறோம் என்று யார் வந்தாலும் அவர்களிடம் பணம் வாங்காமல் அவர்களை விரட்டி அடியுங்கள் என்றார் ஒரு நண்பர்

    இன்னொரு நண்பர் ஏய்யா தேர்தலுக்கு தேர்தல் நமக்குன்னு கிடைக்கறதே அது ஒண்ணுதான் வேற எதுவும் கிடைக்காது அதையும் வாங்காதே அப்பிடீன்னா எப்பிடி ?

    1. தேங்காய்க்கு மேல் கடினமான ஓடு அதன் மேல் தென்னை நாறால் ஒரு கவசம், அதன் மேல் காய்ந்த தேங்காய் நாறின் கடினமான மேல் பகுதி இத்தனையையும் வைத்து இளநீரையும் தேங்காயையும் பாதுகாத்து அளிக்கிறான் இறைவன் ஆனால் கடினமான அவைகளை நீக்கி தேங்காயையும் இளநீரையும் நம்மால் அடைய முடிகிறது

    ஆனால் லஞ்சம் ஊழல் பொய்கள் ஏமாற்று போன்ற கவசங்களை வைத்திருக்கும் அரசியல்வாதிகளிடமிருந்து அவைகளை நீக்கி நேர்மையான நாணயமான மனிதரை அடைய வழி ஏதும் வைக்கவில்லை அதே இறைவன்

    Share
  • மந்திரமாவது நீறு

    –தமிழ்த்தேனீ.

    ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தார் கணேசன். என்னது இது நான் எப்பவும் எல்லாருக்கும் நல்லதைத்தான் சொல்றேன். மனதிலே பட்ட உண்மையைத்தான் சொல்றேன். ஆனா, பேசறதே அவங்களுக்கு கோவமா பேசறா மாதிரியே தெரியுது. உண்மை எப்போதுமே சற்று உரக்கவே இருக்கும் அப்பிடீன்னு யாருக்கும் புரியலே. அதுகூடப் பரவாயில்லை துரோகம் எப்போதுமே இனிமையாக நைச்சியமாக இதமாக இனிக்க இனிக்கப் பேசும் அப்பிடீங்கறதைக் கூட புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்க. இதை வெளியார் யாரும் புரிஞ்சிக்கலைன்னா பரவாயில்லே. நாற்பது வருஷமா கூடவே இருக்கற மனைவியும் நாமே பெத்த பிள்ளைகளும் கூட புரிஞ்சிக்கலையே. இனிமே வேற யாரு புரிஞ்சிக்கப் போறாங்க எனும் விரக்தியின் உச்சக் கட்டத்தில் இருந்தார் அவர்.

    அவர் எந்த நடிப்பும் கலக்காத உண்மையா பாசமா அன்பா நடந்துக்கறது யாருக்குமே புரியலையா, அல்லது புரியாத மாதிரி நடிக்கறாங்களா என்றே புரியாமல் குழம்பிப் போனார் அவர். அவர் சொல்கிற எதையுமே அவர் சொல்லும் சொற்களுக்கு உண்மையான பொருளை யாருமே புரிஞ்சிக்காம, ஏடாகூடமா அதுக்கு அர்த்தம் கற்பிச்சு, எப்போதுமே அவர் எவ்வளவு பொறுமையா சொன்னாலும் கேக்காமல் அவரைக் கோவப்படுத்தி கத்தவிட்டு விட்டு, நீங்க எப்பவுமே எதுக்கெடுத்தாலும் கத்தறீங்க உங்களை மாதிரி கோவக்காரரை நாங்க மதிக்கிறதா இல்லே … அப்பிடீன்னு முகத்துக்கு நேரே சொல்கிற எல்லோருமே அவர் சொல்வதைக் கேளாமல் அடிபட்டாலும் பாதிக்கப்பட்டாலும், அப்போதும் நீங்க உங்க வாயை வெச்சீங்க நாங்க அடிபட்டோம், பாதிக்கப் பட்டோம் அப்பிடீன்னு மறுபடியும் அவரையே குற்றம் சாட்டுகிற அவர்களைப் பார்த்து வருத்தப்படுவதா? அல்லது இப்படி இவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையெனில் சூதும் வாதும் கள்ளமும் கபடமும் நிறைந்த இந்த உலகில் எப்படி இவர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று கவலைப்படுவதா ஒன்றுமே புரியாமல் ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தார் கணேசன்.

    அவர் இந்த 70 வயதில் பார்த்த, அனுபவித்த, அடிபட்ட, பாதிக்கப்பட்ட, அனைத்திலும் கற்ற அனுபவத்தின் சாரத்தையல்லவா அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். அது புரியவே இல்லையே அவர்களுக்கு மனிதரைத் தவிர மற்ற விலங்குகள் எல்லாமே அவர்களின் மூதாதையர்கள் சொல்லிக் கொடுத்த பாடத்தை நுணுக்கத்தை அனுபவத்தை உள்வாங்கித்தானே இன்று வரை தொடர்கிறது. இந்த மனிதருக்கு மட்டும் ஏன் இவ்வளவு புரியாமையும் பெரியவர்களின் அனுபவத்தை மதிக்காத குணமும் வந்துவிட்டது. மிருகத்திடமிருந்து வேறுபட்டு பரிணாம வளர்ச்சியினால் மாந்தராகிவிட்டோம் என்று பெருமைப்படும் மனிதர்கள் இன்னமும் மிருகங்களின் நல்ல குணங்களைக் கூட கைக்கொள்ளாதது ஏன் என்றே புரியாமல் ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தார் கணேசன்.

    அவரை மட்டுமே சண்டைக்காரர் என்று முத்திரை குத்துகிறார்களே அப்படி என்ன செய்துவிட்டார் அவர். இது வரை அவர் வாயால் வரம்புக்கு மீறிய சொற்களை உபயோகித்ததில்லை, எந்த மரியாதைக் குறைவான சொற்களையும் உபயோகப்படுத்தியதில்லை. அப்படி இருந்தும் கத்துகிறார் கோவக்காரர் என்பதைத் தவிர அவருக்கு வேறு நற்பெயரில்லை. அவர் தீர்மானமாக இனி பேசுவதே இல்லை என்று முடிவெடுத்தார். மனம் சற்றே அமைதியானது.

    அந்த நிமிடம் முதல் யார் எது பற்றிப் பேசினாலும் அவர் நேராக முருகன் படத்துக்கு முன்னால் சென்று திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு மௌனமானார். இது வரைக்கும் பேசியே எங்களைத் தொந்தரவு செய்தீங்க இப்போ பேசாமலே கழுத்தை அறுக்கறீங்க என்று மற்றவர்கள் கோபமாக கத்திக் கொண்டிருந்தனர். அவருக்கு ஒன்று புரிந்தது மௌனம் சர்வார்த்த சாதகம் நிமிர்ந்து உட்கார்ந்தார் கணேசன் அமைதியான புன்னகையுடன்.

    Share
  • ஒரு துளி கடல்

    தமிழ்த்தேனீ

    இரண்டு மூன்று முறை சொல்லிவிட்டாள் கனகம். ஏங்க  நாளைக்கு  எந்த வேலையும் வெச்சுக்காதீங்க. நம்ம வைதேகிக்கு  60 வயசாவுது  வைதேகியோட பொண்ணுங்க  மாப்பிள்ளைகள் எல்லாரும் சேர்ந்து   வைதேகி வீட்டிலே ஒரு விழா ஏற்பாடு செஞ்சிருக்காங்க.

        ஏதோ யோசனையாய் இருந்த ராஜகோபாலன்   சரிம்மா  உன்னோட  ஆர்வம் புரியுது  நாம  போயிட்டு வரலாம்  என்றார்

    அவர் மனதில்  வைதேகியைப் பற்றிய  எண்ணங்கள் நிழலாடின. அவருடைய  சகதர்மிணியின்  தங்கை. அவருக்கு திருமணம் ஆகும் போது அவள் 16  வயதுப் பெண்.  மாமனார் வீட்டுக்கு  போனால்  பொண்டாட்டி கவனிக்கறாளோ இல்லயோ   மாமா  காபி சாப்டுங்க, மாமா  இந்தாங்க  பஜ்ஜி கொண்டாந்து வெச்சிருக்கேன் சாப்பிடுங்க  என்றும் அவ்வப்போது  அவரைப் பார்த்துப் பார்த்து அக்கா புருஷங்கிற  பாசத்தோட  கொஞ்சமும்  களங்கமில்லாம கவனிச்சு  எல்லாத்தையும்  செய்யற பாசமான  மச்சினி.

    அவரும் வைதேகியை  தன்னோட  தங்கையாகவே பாவிச்சு  பாசம் செலுத்த  ஆரம்பித்தார். மாமனார்  ஒரு நாள்  மாப்பிள்ளை  நம்ம வைதேகிக்கும்  கல்யாணம்  செய்யலாம்னு பாக்கறேன்  என்றவுடன்

    ஆமாம் மாமா  நானே  சொல்லணும்னு இருந்தேன்  என்னோட  வேலை செய்யறவர்  கண்ணன்  அவரோட  தம்பி  ரமேஷ் நல்லா  படிச்சிட்டு அரசாங்க  வேலையிலே இருக்கானாம். என்றார் ராஜகோபாலன்.

    அதே போல்  தன் வீட்டிலேயே பெண் பார்க்கும் படலம் ஏற்பாடு செய்து அந்தத் திருமணத்திலே  மாப்பிள்ளை என்கிற  பந்தாவெல்லாம் இல்லாமல்  மாமனாரையும்  தன்னுடைய தகப்பனைப் போலவே  நினைத்து  அவர்கள் வீட்டையும்  தன் வீட்டைப் போல  நினைத்து  எல்லா காரியங்களையும்  இழுத்துப் போட்டுக்கொண்டு  செய்து  கல்யாணத்தை  நிறைவாக நடத்தியவர்  ராஜ கோபாலன்.

    மாமனார்   அவர் கையைப் பிடித்துக்கொண்டு  மாப்பிள்ளே  நீங்க  என் பிள்ளை  மாதிரி   எல்லாத்தையும்  நல்லா  நடத்திட்டீங்க.  அப்பிடியே  வைதேகியை  அவங்க புகுந்த வீட்டுக்கு  கொண்டு போயி  நீங்களும் என் பொண்ணு கனகாவும்தான்  விட்டுட்டு வரணும்  என்றார். அதெல்லாம் நாங்க  பாத்துக்கறோம்  நீங்களும் கூட வாங்க  என்றபடி  வைதேகியின் புருஷன் ரமேஷ் வீட்டுக்கு  அழைத்துப் போய்  அவர்களை விட்டுவிட்டு விருந்தும் உண்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அட  காலம் எவ்ளோ வேகமா ஒடுது  அதுக்குள்ளே  வைதேகிக்கே  60  வயசாயிடிச்சா!

    அது மட்டுமா  இரண்டு வருஷத்துக்கு  முன்னாலே  வைதேகியோட  புருஷன்  திடீர்ன்னு  ஹார்ட் அட்டாக்கிலே  போனதும்   குழந்தை மாதிரி வைத்திருந்த  வைதேகியின் நிலையை  எண்ணிக் கலங்கியதும் அவர் நினைவுக்கு வந்து அவர் மனதை சலனப்படுத்தியது.

    ஆனாலும்  இங்கே  வந்து  விழாவிலே கலந்து கொண்ட போது  வைதேகி  அவளுடைய குழந்தைகள்  யாருமே  இறந்து போன ரமேசைப் பற்றிய  கவலையே  இல்லாமல்  மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

    மனுஷன்  இருக்கறவரைக்கும் தான்  மதிப்பு   பல சமையத்திலே  இருக்கும் போதே  மதிப்பு இல்லாம போயிடறதும் உண்டு  என்று நினைத்துக் கொண்டு

    இந்தப் பொம்பளைங்களே  இப்பிடித்தான் புருஷன் போயிட்டான்னா  அதோட  தொல்லை விட்டுதுன்னு  மறந்துருவாங்க  என்று நினைத்துக் கொண்டார்.

    விழா  இனிதே   முடிந்தது.  வாங்க  மாமா  சாப்பிட உக்காருங்க என்று வழக்கம் போல்  உபசரித்தாள் வைதேகி.

    சாப்பாடு   முடிந்து  சரிம்மா  நாங்களும் கிளம்பறோம்   இன்னும் அவ்ளோ தூரம் போகணும்  என்றபடி கிளம்ப யத்தனித்தார் ராஜ கோபாலன்

    ஒரு பெண்மணியும் அவளுடைய  புருஷனும்  நாங்களும் கிளம்பறோம்என்றபடி கிளம்பினார்கள்

    அந்தப்  பெண்மணி  இதே மாதிரி  எங்க வீட்டிலேயும்  ஒரு விழா ஏற்பாடு  செய்யறோம்  அடுத்த  மாசம்  எல்லாரும் வந்திடுங்க  என்றாள்

    வைதேகி  வேகமாக  வந்து  இன்னொரு வாட்டி  அப்பிடி சொல்லாதே  இதே மாதிரி  விழா  யார் வீட்டிலேயும் வரவேண்டாம்

    எனக்குதான் தெரியும்  என் புருஷன்  ரமேஷ்  இல்லாத  வீடு எப்பிடி வெறிச்சோடிக் கிடக்குன்னு  அந்தத் தனிமையை இனிமே யாரும் அனுபவிக்க வேண்டாம்  . உங்க  வீட்டிலே  வேற மாதிரி  விழாக் கொண்டாடுங்க  எல்லாரும் வருவாங்க  என்றாள் கண்ணில் பொங்கி வந்த  ஒரு துளிக் கண்ணீரை  முந்தானையால் துடைத்துக் கொண்டு

    நம்ம  நாட்டுப் பொண்களுக்கு  புருஷன் மேலே இருக்கற  பாசமும்  அன்பும் வேற  யாருக்கும் வராது. பத்தினிங்கற  சொல்லுக்கே  இலக்கணம்  இவங்கதான். இவங்களோட  மனசாழத்தை  கண்டு பிடிக்கவே  முடியாது  என்று உணர்ந்தார் ராஜகோபாலன்.

    அவர்  நேராக வைதேகியிடம் சென்று நாங்க  வரோம்  . நாங்க  இருக்கோம் எப்போ வேணா நீ அங்கே வந்துடு தனியா அவதிப்படாதே நீயும் எங்க வீட்டுப் பொண்ணுதான்  புரியுதா  என்றவர்  சமாளித்துக்கொண்டு  சரி  நாங்க கிளம்பறோம் என்று கிளம்பினார்

    அன்புடன்

    தமிழ்த்தேனீ

    Share
  • திண்ணை

    — தமிழ்த்தேனீ.

    கட்டுப்பெட்டி கிராமமாக இருந்த திருவிடை மருதூர் அக்கிரகாரத்தில் ஓட்டு வீடுகளும் திண்ணையுமாக இன்னும் சற்றேறக் குறைய தன் பழமை மாறாமல் இருந்தது. திண்ணையிலே சீட்டாடும் கும்பலைத் தாங்கிக் கொண்டு முதுகுச் சுமை தாளாமல் தவித்துக் கொண்டிருந்தாலும் எத்தனை பேர்களை சுமந்தாயிற்று, எத்தனை மனிதர்களைப் பார்த்தாயிற்று, அத்தனை பேரின் அந்தரங்கக் கதையும் தனக்கு மட்டுமே தெரியும் என்கிற கர்வத்தோடே இது வரை வாழ்ந்தாயிற்று, அந்தக் கர்வம்தான் இத்தனை பேருக்கும் சுமைதாங்கியாய் தன்னை ஆக்கி வைத்திருக்கிறது என்றே உணராமல் நம்மை அசைக்க ஆளில்லை எனும் கர்வத்தோடு, வெயிலையும் மழையையும் தாங்கிக் கொண்டு, பற்றாக்குறைக்குத் தேக்கு மரத் தூண்களையும் தாங்கிக் கொண்டு, கர்வத்தின் அலகை அகல விரித்து கால்பரப்பி கனத்தின் அழுத்தத்தால் கால் மடங்கி அப்படியே சமமாய் பரந்து படர்ந்து அந்தரங்க ரகசியங்களையும் கிசுகிசுக்களையும் கேட்பதே பேரானந்தம் என்று நினைத்துக் கொண்டு இன்னமும் எப்போது இடிபடுவோம் என்றே தெரியாமல் காத்திருக்கிறது.

    இன்றும் வாயில் வெற்றிலைக் குதப்பலுடன் புளிச் புளிச்சென்று முதுகின் மேலேயே துப்பவும், கையிலே சீட்டுகளைப் பிடித்துக் கொண்டு ஜோக்கர் வரவில்லை என்று பொறுமிக் கொண்டு காத்திருக்கும் சீட்டாட கும்பல் வந்தாயிற்று. இனி சுமைதான். எவ்வளவு வேண்டுமானாலும் சுமக்கிறேன். ஆனாலும், எனக்குத் தினமும் கிசுகிசுக்களையும் அந்தரங்கங்களையும் காதால் கேட்டால்தான் தூக்கமே வரும்.

    திண்ணைக்கேதடா காது என்று யோசிக்கிறீர்களா? சுவருக்கும் காது உண்டு என்று சொல்வார்களே!! எனக்கு இருக்கக் கூடாதா? எத்தனையோ ராமநாதன்கள்… எத்தனையோ விஸ்வநாதன்கள்… எத்தனையோ கிருஷ்ணமணிகள் என்று அத்தனை பேரையும் பார்த்த திண்னை நான் என்று நினைக்கும் போது இன்னமும் கர்வம் ஓங்கி வளர்ந்தது. பெரியவங்க சொல்வாங்க, வாயை மூடிக்கிட்டு காதைத் தொறந்து வையி, அப்போத்தான் ஞானம் வரும்னு, திண்ணையாய் இருக்கும் என்னை உதாரணமாக வைத்துத்தான் அதைச் சொன்னாங்க தெரியுமா? என்று மனம் படபடக்கிறது. இது யாருக்குமே புரிய மாட்டேங்குது.

    ராமநாதன் தன் கையிலிருந்த சீட்டுகளை உற்றுப் பார்த்தான். மப்பும் மந்தாரமுமாக இருந்த மானமும் மனமும் கண்களை மறைக்கவே உற்றுப் பார்த்தான். சிவந்த விழிகள் மேலும் சிவந்தன. கை நடுங்கியது. ஆண்டவா!!! எனக்கு இந்தத் தடவை எல்லாம் நல்ல நல்ல சீட்டா வந்திருக்கு. ஒரே ஒரு ஜோக்கர் மட்டும் இருந்தா ஜெயிச்சிடுவேன். எப்பிடியாவது கருணை காட்டுப்பா, என்று வேண்டியபடி ஒரு சீட்டை எடுத்தான். அது தேவையே இல்லாத சீட்டு.

    “இந்தத் தடவையும் என்னைக் கவுத்திட்டியா?” என்றார் உரக்க எதிரே இருந்த ஜெயராமன்.

    “ஆமாம், கவுத்துட்டேன்,” என்றார் .

    “உன்னை இல்லைப்பா,” என்றார் ராமநாதன்.

    “நான் உன்னைக் கவுத்துட்டேன்னு சொன்னேன், நான் ஜெயிச்சிட்டேன்,” என்றான் ஜெயராமன்.

    ஹூம் …

    “எல்லாரும் காசைக் குடுங்க,” என்று கல்லாகட்ட ஆரம்பித்தார் ஜெயராமன்.

    தெய்வமே எவ்ளோ வேண்டறேன், எவ்ளோ திறமையா ஆடினாலும் ஒரு சீட்டுலே என்னைக் கவுக்குறியே, என்னை ஜெயிக்கவே விடமாட்டியா? என்று நொந்து போனார் ராமநாதன். அவருக்குக் காலையில் அவருக்கும் அவர் மனைவிக்கும் நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது.

    “என்னோட ஏழு தலைமுறைக்கும் உக்காந்து சாப்டாலும் என் சொத்து தீராது. நீ எதுக்கு என்னை வேலைக்குப் போகப்படாதா? அதைவிட்டுட்டு எப்போ பாத்தாலும் சூதாடிண்டு இருக்கேன்னு திட்ற,” என்றார் ராமநாதன்.

    “பழங்கதையே பேசாதீங்க. இப்போ என்ன நிலமைன்னு தெரியுமா? இன்னும் மூத்தவளுக்கே கல்யாணம் செய்யலை. இப்போ நாம வெறும் காலிப் பெருங்காய டப்பாதான். எல்லாத்தையும் சீட்டாடியே தோத்தாச்சு,” என்றாள் மூக்கைச் சிந்தியபடி.

    சுருக்கென்றது அவருக்கு. அடேடே!!! இவ்ளோ நாள் என்ன நிலமைன்னே தெரியாமே சீட்டாடினோமே!! இதுலேயாவது ஜெயிச்சோமா? இதுலேயும் தோத்துண்டே இருக்கோம். வாழ்க்கையிலேயும் தோத்துட்டோமா? ஒரு தீர்மானத்துக்கு வந்தவராய் எழுந்தார்.

    “நான் இனிமே சீட்டாடப் போறதில்லே. நாம அதிர்ஷ்டத்தையும் கடவுளையும் நம்பி ஆடிண்டே இருக்கோம். ஆனா நாம தன்னம்பிக்கையா ஆடவேண்டிய ஆட்டத்தை ஆடறதில்லே. இனிமே என்னைத்தான் நம்பப் போறேன். இனிமே நான் ஆடற எல்லா ஆட்டமும் என்னை நம்பியே இருக்கும்,” என்று சொல்லிவிட்டு தள்ளாடினார்.

    “இனிமே இவரு போயி தனியா ஆடப் போறாராம்! நிக்கவே முடியலே. உடம்பு தள்ளாடுது, இதுலே ஆட வேற போறாராம்,” என்று சிரித்தனர் அனைவரும்.

    திண்ணை ஆடாமல் அசையாமல் கவனித்தபடி இருந்தது. மாநகராட்சியின் சாலைப் பணியாளர்கள் ராக்‌ஷச இயந்திரத்தோடு வந்து கொண்டிருக்கின்றனர். சாலையை அகலமாக்கப் போறாங்களாம். திண்ணையை எல்லாம் இடிச்சிருவாங்களாம் என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.

    Share
  • இளமை

    — தமிழ்த்தேனீ.

    ram  hanuman

    பால்ய ஸ்னேகிதர்கள் சபேசனும் கிருஷ்ணனும். இருவரும் 70 வயதை எட்டிக்கொண்டிருப்பவர்கள். காலார நடந்து வருகையில் சபேசன் கேட்டார்.

    “கிருஷ்ணா, ரொம்ப நாளா நான் ஒரு சந்தேகம் கேட்டுண்டே இருக்கேன்,” என்றார்.

    “நானும் நீயும் சம வயது, ஆனா நீ எப்பிடி இப்பிடி இளமையா இருக்கே, அதானே? இன்னிக்கு சொல்றேன். நான் சின்ன வயசிலேயே கிழவன் மாதிரி ஆயிட்டேன். அப்போத்திலேருந்து அப்பிடியே மெயின்டைன் பண்றேன். அதுனாலே எல்லாருக்கும் எப்பவும் ஒரே மாதிரி காட்சி அளிக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு, ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ … என்று சிரித்தார் கிருஷ்ணன்.

    “ஏதாவது ஜோக்கடிச்சு சரியான பதிலை சொல்லாமலே காலம் கடத்தறே,” என்றார் சபேசன் எரிச்சலுடன்.

    “இரு, இரு உடனே சீறாதே. இப்ப உண்மையைச் சொல்றேன். உனக்கு ரெண்டு பொண்ணு ஒரு பையன். எனக்கும் ரெண்டு பொண்ணு ஒரு பையன்,” என்றார் கிருஷ்ணன்.

    “உன் இளமையைப் பத்திக் கேட்டா, ஏதோ கதை சொல்றே,” என்றார் சபேசன்.

    “இந்த அவசரம்தான் உனக்கு முதுமையை குடுக்குது, நிதானம் எனக்கு இளமையைக் குடுக்குது,” என்றார் கிருஷ்ணன்.

    “கிருஷ்ணா, நீ எப்பவுமே விளக்கமா சொல்றேன்னு சொல்லுவே புரியறா மாதிரி இருக்கும். ஆனா கடைசியிலே குழம்பிடும்,” என்றார் சபேசன்.

    “இரு, இரு சொல்றேன். உன் பிள்ளைகளும் வெளி நாட்டிலே இருக்காங்க. என் பிள்ளைங்களும் வெளி நாட்டிலே இருக்காங்க. வீட்டுக்கு வீடு வாசற்படி. எல்லார் வீட்டிலேயும் எல்லாப் ப்ரச்சனையும் இருக்கு. ஆனா …” என்று நிறுத்தினார் கிருஷ்ணன்.

    “என்ன ஆனா, ஆவன்னா? விஷயத்துக்கு வாப்பா,” என்றார் பொறுமையற்று சபேசன்.

    “ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ …என்று சிரித்த படி, “சபேசா, இப்போ சொல்லிடறேன். வருஷத்திலே ஒரு வாட்டி நம்மளைப் பாக்க வர பசங்க கிட்ட நாம நல்லாத்தான் நடந்துக்கறோம். நேத்து என் பையன் அமெரிக்காவிலேருந்து வந்து பாதிராத்திரிக்கு வீட்டுக்கு வந்து இறங்கினான். அதுக்கப்புறம் போயி தூங்கிட்டான். அவனுக்கும் வயசு நாற்பது ஆயிடுச்சு. கல்யாணமும் ஆகி எனக்கு ஒரு பேரனும் பெத்துக் குடுத்துட்டான். காலையிலே ஒரு கல்யாணத்துக்கு போகணும்னு குளிச்சிட்டு அவனையும் எழுப்பினேன். அவன் எழுந்து என்னைக் கட்டிண்டு அப்பிடியே என் தோளிலே தலையை வெச்சிண்டு செல்லம் கொஞ்சறான் இந்த நாற்பது வயசிலேயும். எனக்கு 27 வயசுலே அவனைப் பெத்து அவன் குழந்தையா இருந்தப்போ எழுந்து என்னைக் கட்டிண்டு என் தோளிலே தலையை சாச்சிண்டு இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவானே அது நியாபகத்துக்கு வந்துடுச்சு. நான் திடீர்ன்னு 27 வயசுக்கு போயிட்டேன். அதே மாதிரி என் மருமக அவளும் என் சம்பந்தி பெத்த பொண்ணு கொஞ்சம்கூட விகற்பமே இல்லாம அப்பான்னு என்னைக் கட்டிக்கறா. எப்பிடிப்பா இருக்கீங்கன்னு கொஞ்சறா, அப்போ அவளோட 30 வயசுக்கு நான் போயிடறேன். அதே போல என் பொண்ணுங்க ரெண்டு பேரும் மாப்பிள்ளைகளும் என்னைக் கட்டிண்டு என்னப்பா எப்பிடி இருக்கீங்கன்னு அன்பா விசாரிச்சுக் கொஞ்சும் போது அவங்க அவங்க வயசுக்கு நான் போயிடறேன். அதே மாதிரி என் பொண்ணுங்களோட குழந்தைகள் நாலு பேரனும் மஹாலக்‌ஷ்மி மாதிரி ஒரு பேத்தியும் தாத்தான்னு என்னைக் கட்டிண்டு கொஞ்சறாங்க. அப்போ அவங்க வயசுக்கு நான் போயிடறேன். என் சம்பந்திகளும் எப்போ என்னைப் பார்த்தாலும் ஆரத் தழுவிண்டு வாங்கோ எப்பிடி இருக்கீங்கன்னு அன்பா பாசமா கேக்கறாங்க. என்னைவிட சின்னவங்கள் அவங்க வயசிலே ஆனா மனசாலே பெரியவங்க. அப்போ அவங்க வயசுக்கு நான் போயிடறேன். எல்லாம் அந்த இறைவன் கருணை. இப்போ புரியுதா என் இளமையோட ரகசியம்?” என்றார் கிருஷ்ணன்.

    “இன்னொரு ரகசியம் சொல்லப் போறேன். இப்பிடி கட்டிண்டு இதமா கொஞ்சினா அதுக்குப் பேரு காடாலிங்கனம்னு சொல்வாங்க. இதைப்பத்தி விவரமா சொல்லணும்னா வாழ்நாள் பூரா பேசணும்,” என்றார் கிருஷ்ணன்.

    “அதானே பார்த்தேன்! ஏதோ புரியறா மாதிரி ஏதோ சொன்னியேன்னு பாத்தேன் மறுபடியும் குழப்பிட்டியா?”என்றார் எரிச்சலுடன் சபேசன்.

    Share
  • காதலர் தினம் கவிதை

     

    தமிழ்த்தேனீ

     
    தோற்றதனால் எரித்தான் சிவன்
    வெற்றியினால் எரிந்தான் காமன்
    அந்தக் காமன் கணை தொடுக்க
    கனவுகள் தளம் அமைக்க

    நாடிகள் முறுக்கேற கற்பனை சூடேற
    கட்டியவளை அவன் அவனணைக்க
    கை விலக்கி அவள் சொன்னாள்
    இன்று உடல் நலமில்லையென்று
    அப்படியா என்று பதறிப்போய்

    இதமாகத் தொட்டுப் பார்த்து
    காய்ச்சலா தலைவலியா உன் நலமே
    முக்கியம் மருத்துவரிடம் போவோம் வா
    என்றவுடன் அதெல்லாம் ஒன்றுமில்லை

    ஆயினும் வெறும் களைப்புதான் என்றவுடன்
    தோற்ற ஈசனையும் வென்ற காமனையும்
    சேர்த்தே அடக்கி வீறிட்டெழுந்த காமம்
    போரிட்டு அடக்கி மனதிலே தேவனாய்

    மனிதரில் கடவுளாய் மாறியே
    சரி தூங்கும்மா என்றபடி
    என்று போர்வையை அவள்மேல்
    போர்த்தி விலகிப் படுத்த ஆண்மகன்

    கொண்டாடப்படாத காதல்
    ஆயினும் ஒவ்வோர் ஆண்மகனும்
    கைக்கொள்ள வேண்டிய காதல்
    இதுதான் காதல்

    Share
  • நிவாரணம்

    –தமிழ்த்தேனீ.

    நிவாரணத் தொகை என்பது இழப்பீட்டுத் தொகை அல்ல.

    குறிப்பாக மேல் நாடுகளில் காப்பீட்டு நிறுவனங்கள் அளிப்பது போல் கண் போனால் இவ்வளவு, கால் போனால் இவ்வளவு, விரல் போனால் இவ்வளவு என்று தரம் பிரித்து அதற்கேற்ற இழப்பீட்டுத் தொகையை அளிப்பது போல் அல்ல (நம் நாட்டில் இல்லை) நிவாரணத் தொகை என்பது.

    தலைவலி வந்தால் அளிக்கும் ஒரு மாத்திரை போன்றது நிவாரணத் தொகை. அதைத் தலைவலிக்கேற்ப அதிகப்படுத்தலாம் குறைக்கலாம். ஆனால் தலைவலியின் மூலகாரணத்தை அறியச் செய்யவேண்டிய மருத்துவ ஆராய்ச்சிகளை முழுவதும் முடித்து அந்த மூலகாரணத்துக்கேற்ப மருந்தோ அல்லது அறுவை சிகிச்சையோ அளிப்பது போன்றது இழப்பீட்டுத் தொகை.

    தற்போதைய நிலையில் முழு வீடு, வீட்டில் உள்ள அத்துணைப் பொருட்கள், நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் போன்றவற்றுக்கு இவ்வளவு ஆண்டு காலமாக காப்பீட்டுத் தொகையாக மக்கள் அளித்தவற்றைக் காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு சதவிகிதம் கூட திருப்பித் தராமல் பொருளீட்டினர்.

    ஆனால் இன்றைய இயற்கைப் பேரிடரினால் ஏற்பட்ட இழப்புகளுக்குக் காப்பீட்டு நிறுவனங்கள் இவ்வளவு வருடங்கள் ஈட்டிய தொகை முழுவதும் செலவழித்தாலும் அது ஈடாகாது. ஆகவே காப்பீட்டு நிறுவனங்கள் என்ன செய்து ஈடுகட்டப் போகிறார்களோ பொறுத்திருந்து பார்ப்போம்.

    denver-flood-restoration-servicesஎன் நண்பரின் சகோதரியார் முடிச்சூர் சாலையில் இருந்த வீட்டில் அவருடைய குளிர்சாதனக் கருவி, விலை உயர்ந்த தொலைக் காட்சிப் பெட்டி, இரண்டு கார்கள், மேலும் பல விலை உயர்ந்த மின்சார சாதனங்கள், மேலும் நகைகள் உட்பட அவர்களுக்கு இழப்பு ஐந்து இலட்சம்‌ ரூபாய்கள்.

    யார் கொடுப்பார்கள் இந்த இழப்பீட்டுத் தொகையை ?
    ஒரு வீட்டுக்கே ஐந்து இலட்சம் ரூபாய்கள் என்றால் நகரம் முழுவதும் பாதிக்கப் பட்டோருக்கு எவ்வளவு கோடிகள் செலவாகும் என்று எண்ணிப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது

    ஆனால் விலை மதிப்பில்லாத உறவுகளை, உறவுகளின் உயிரையே அளித்துவிட்டுக் கதறும் மக்களுக்கு நிவாரணத் தொகையோ இழப்பீட்டுத் தொகையோ எவ்வளவு அளித்தாலும் ஈடாகுமா உயிருக்கு.

    உயிரின் விலை என்ன? உறவின் விலை என்ன இதற்கெல்லாம் எப்படி ஈடுகட்ட முடியும்?
    மனிதன் தான் முக்கியம். எவ்வளவு பொருட்கள் போனாலும் மனம் தளராதீர்கள். மனிதன் உயிரோடு இருந்தால் கடினமே என்றாலும் எப்படியேனும் கஷ்டப்பட்டு மறுபடியும் பொருளீட்டலாம்.

    ஆனால் விலை மதிப்பில்லாத மனிதரின் உயிர் போனால் அதை ஈடுகட்டவே முடியாது. ஆகவே இழந்த பொருட்களை எண்ணி இதயத்தை பலகீனப்படுத்திக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

    “உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
    உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே”
    என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறியதை நினைவில் வைத்துக்கொண்டு மனதைத் தேற்றிக் கொண்டு வாழவேண்டும் வேறு வழியில்லை.

    உலகில் பணம் பொருட்கள் ஆகிய எல்லாவற்றையும் விட உயிர் பிரதானமானது ஆகவே உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லுங்கள்.

    காலுக்குச் செருப்பில்லையே என்று கவலைப் படுவோர் காலை இழந்தோரைப் பார்த்து தேறுதல் கொள்ள வேண்டியதுதான்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    படம் உதவி: http://www.elitewaterdamage.com/flood-cleanup/

    Share
  • மனித வேர்கள்

    –தமிழ்த்தேனீ.

    வேரோடு பிடுங்கிய கரும்பு

    மிருகங்கள் வாழுமிடத்தை மனிதர் கைப்பற்றி அங்கே குடியேறிவிட்டு அந்த மிருகங்கள் வாழ வகையின்றி உண்ண உணவின்றி மனிதர்கள் வாழுகின்ற அவைகளுக்குச் சொந்தமான இடத்தை நாடி வரும் போது, ஐயோ! நாங்கள் வாழும் இடத்துக்கே வந்து எங்களைத் தாக்குகின்றனவே மிருகங்கள் என்று அபயக் குரல் எழுப்பும் மனிதர்களே!

    நீர்நிலைகளையெல்லாம் ஆக்ரமித்து வீடுகள் கட்டிவிட்டு அங்கே நீர் நிலைகள் வீடுகளை ஆக்ரமித்து சூழும்போது, ஐயோ! எங்கள் உடமைகளெல்லாம் நீரிலே போய்விட்டனவே, நாங்கள் என்ன செய்வோம் என்று பரிதவிக்கும் மனிதர்களே!

    “பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது“

    என்று கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் மனதிலே வருகின்றன.

    “கரும்பு ருசி என்றால் வேரோடு பிடுங்கலாமா?“ என்றொரு சொல் வழக்கு உண்டு.

    சுதந்திரக் கரும்பு நமக்குக் கிடைத்தது. அந்தச் சுதந்திரக் கரும்பை அதாவது நம் நாட்டை நம் தேசத்தை ஒரு சில தவறுகள் நாம் செய்ததன் மூலமாக நம் கையிலிருந்து இழந்து அன்னியரிடம் ஒப்படைத்து அதனால் நாம் அடிமைகளாக அதுவும் நம் தேசத்திலேயே நாம் அடிமைகளாக வாழ்ந்த சரித்திரத்தை மறந்து அந்த இழந்து போன சுதந்திரத்தை மீண்டும் நாம் கைக்கொள்ள எத்துணைப் பெரியோர்கள் தாய்மார்கள், வாலிபர்கள், குமரிகள், குழந்தைகள் எல்லோரும் எத்தனை மகத்தான தியாங்களைச் செய்தனர், எப்படியெல்லாம் பாடுபட்டு இழந்த சுதந்திரத்தை மீட்டுக் கொடுத்தனர் எனும் வரலாற்றை மறந்து தவறு செய்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் எனும் இயற்கையின் கட்டளையை மறந்து நாம் எப்படிக் காலடிகளை எடுத்து வைக்கிறோமோ அதற்கேற்ற பலன்தான் கிடைக்கும் என்பதை மறந்து அடிமைப்பட்டிருந்த காலத்தையெல்லாம் மறந்து அகங்காரம் கொண்டு தலைவிரித்து ஆடத் தொடங்கினோமோ அன்று தொடங்கின நம் நாட்டின் அவலங்கள்.

    chennai-flood-wiki-picture2

    எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே அவர் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே

    எனும் பாடலில் வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று வணங்கேனோ என்று பாடியதை மறந்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று தலைதெறித்து வாழத் தொடங்கினோமோ அன்றே தொடங்கின நம் நாட்டின் அவலங்கள்.

    நாட்டில் மக்களுக்கு இயற்கையாகக் கிடைக்க வேண்டிய வளங்களைச் சீரமைத்து மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து மக்கள் நலமாக மகிழ்ச்சியாக வாழத் தேவையானவற்றையெல்லாம் செய்து கொடுக்கத்தான் அரசாளும் பதவிகள் என்பதை அடியோடு மறந்து நம் நாட்டு மக்களையே அடிமைகளாக நடத்த என்று தொடங்கினோமோ அன்று தொடங்கின நம் நாட்டின் அவலங்கள்.

    மக்களை மனிதத் தன்மையோடு பாசத்தோடு, நேசத்தோடு, அன்போடு, ஆதரவாக மதிக்க வேண்டிய ஆளுவோர் எலும்புத் துண்டைப் போட்டால் கவ்விக்கொண்டு மற்றவற்றையெல்லாம் மறந்து ஓடும் நாயினைப் போல வேண்டாத இலவசங்களை அளித்து மக்களைத் திசை திருப்பி ஓடவிட்டுவிட்டுத் தனியாக வளங்களைக் கொள்ளையடிக்கும் குணத்தை அரசியல்வாதிகள் என்று கொண்டனரோ அன்று தொடங்கின நம் நாட்டின் அவலங்கள்.

    திறமை இருந்தால், ஏமாற்றும் திறமை இருந்தால் மாட்டிக் கொள்ளாத புத்திசாலித்தனமான கள்ளத்தனம் இருந்தால், அப்படியே மாட்டிக் கொண்டாலும் கொள்ளையடித்த பணத்தை அள்ளிவீசி தப்பிக்கத் தெரிந்தால், ஈவு இரக்கமின்றிக் கொலை செய்தாலும் கொள்ளை யடித்தாலும் மனசாட்சியே இல்லாமல் அந்தக் குற்றங்களிலிருந்து மீண்டு வந்து மக்களின் மனதைத் தவறான ப்ரசாரங்களால் வசியப்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வரும் நரித்தனம் இருந்தால் யார் வேண்டுமானாலும் கொள்ளையடியுங்கள், ஆனால் கொள்ளையடித்த செல்வத்திலே எங்களுக்கும் பங்கு கொடுங்கள் அது போதும் எனும் மனநிலைக்கு கட்டிக் காக்கவேண்டியவர்களே என்று வந்தார்களோ அன்று தொடங்கின இந்த நாட்டின் அவலங்கள்.

    பயத்தால் ஆட்சியாளர்களின் அதிகார வன்முறையால் மக்கள் பொறுத்துக் கொண்டனர், தட்டிக் கேட்பவரைக் கொலை செய்யத் துணிந்தவர்கள் ஊழல்வாதிகள் என்பதை வெளிச்சம் போட்டுத் திரைப்படங்கள் காட்டியும் மக்கள் மனதிலும் ஊழல்வாதிகளின் உண்மையான தோற்றம் புரிந்து போனதாலும் நமக்கெதற்கு, நாம் கண்டும் காணாமலும்போய் நம் வீட்டாரைக் காப்பாற்றுவோம் எனும் மன நிலைக்கு மக்களை என்று திசை திருப்பினார்களோ கூழல்வாதிகள் அன்று தொடங்கின இந்த நாட்டின் அவலங்கள்.

    மக்கள் தங்கள் பொன்னான வாக்குகளை நமக்கு அளித்து நம்மை ஆள விட்டிருக்கிறார்கள், இந்த தேசம், இந்த நாட்டில் வாழும் ஒட்டு மொத்த மக்களின் தேசம், அவர்களுக்குச் சொந்தமானது என்பதை மறந்து ஆட்சிக்கு வந்தவுடன் இந்த தேசம் என் தேசம், என் நாடு, என்னுடைய சொத்து, இதில் நான் ஆட்சிக்கு வந்திருக்கிறேன். நான் ஆட்சிக்கு வந்து இருக்கும் இந்த ஐந்தாண்டுகள் இந்த தேசம் என்னுடையது எனக்கே சொந்தமானது, இந்த தேசத்திலிருக்கும் வளங்களெல்லாம் எனக்கே சொந்தமானவை. ஆகவே இதன் மூலமாக வரும் அனைத்துப் பயன்களும் எனக்கே சேர வேண்டும் என்று பேராசை கொண்டு மக்களை மறந்து, ஒட்டு மொத்த வளங்களையும் தனக்கே எடுத்துக் கொண்டு, வரும் வருவாயெல்லாம் தன் வீட்டிலே கொண்டு போய்ப் பதுக்கி வைத்துவிட்டு மக்களுக்கோ நாட்டுக்கோ ஒன்றுமே செய்யாமல் இருக்கும் ஊழல்வாதிகளின் விபரீதப் போக்கினால் விளைந்த நிலைதான் இந்த முறை இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட சேதாரத்தின் அளவு.

    இந்த சேதாரத்தின் அளவு கோல்தான் இனி வருங்காலங்களில் அரசாள்பவர்கள் எப்படி இந்த நாட்டை ஆள வேண்டும் என்பதற்கான அளவு கோல்.

    எந்த ஒரு சிறு பொருளை நாம் உரிமையாக்கிக் கொண்டாலும் அந்தப் பொருளைப் பராமரிப்பதிலேதான் இருக்கிறது அந்தப் பொருள் மூலமாகக் நமக்கு கிடைக்கும் வளங்கள் வசதிகள். குதிரையை வைத்துக் கொள்ளலாம், அதன் மேல் ஏறி சவாரி செய்யும் போது கிடைக்கும் சுகம் பயண அனுபவங்கள் அனைத்துமே மற்ற நாட்களில் அந்தக் குதிரையைப் பராமரிப்பதில்தான் அடங்கி உள்ளது.

    யானையை வைத்துக் கொண்டு இறைவனை அதன் மேலேற்றித் திருவீதிப் புறப்பாடு செய்து மக்களை மகிழ்விக்கலாம், மற்ற நாட்களில் அந்த யானையைப் பொதுமக்களிடம் வேடிக்கைப் பொருளாகக் காட்டிப் பணம் செய்யலாம் ஆனால் அந்த யானைக்குத் தேவையான உணவை அளித்து அந்த யானையின் தேவைகளைப் பூர்த்தி செய்து அதைப் பராமரித்தால்தான் அந்த யானையும் நலமாக இருக்கும் நமக்கும் உபயோகப்படும்.

    இல்லையேல் அது மிரண்டு பொதுமக்களையும் கடைகளையும் கண்ணில் படும் பொருட்களையும் தாக்கி அழிக்கும். அது போலத்தான் நாடும் இயற்கையும் மற்ற நேரங்களில் பராமரிக்காவிட்டால். ஆறு, குளம், ஏரிகள் போன்ற நீர் நிலைகளைத் தூர்வாரி சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் மழை பெய்யும் நாட்களில் அவை சுத்தமான தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொண்டு நமக்குத் தண்ணீர் தரும். அதை விடுத்து அவைகளை மனிதர்கள் தங்கள் சுயநலத்துக்காக ஆக்ரமித்து அவற்றை அவதிப்படுத்தினால் அவை தங்கள் மேல் விழும் நீருடன் ஆக்ரமிப்பாளர்களைத் தாக்கி அழிக்கும் என்பது நமக்குப் பாடமாக இருக்க வேண்டும்.

    மக்களைத் தெளிவான கல்வி கொடுத்து அறிவாளிகளாக ஆக்குவதை விடுத்து, கல்விக்குப் பணம் பிடுங்கி சம்பாதிக்கக் கல்விக் கூடங்களைக் கட்டி அதன் மூலமாக மக்கள் பாடுபட்டு ஈட்டிய பொருளையெல்லாம் கொள்ளையடித்து அப்படியும் தரமான கல்வி அளிக்காமல் மக்களைத் தவறான திரைப்படங்கள், தொலைக் காட்சிகள் மற்றும் போதைப் பொருட்கள் மூலமாக திசைதிருப்பி அவர்களை எப்போதும் போதையிலேயே வைத்திருந்தால்தான் நாம் கொள்ளையடிக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டு கொள்ளையடித்துக் கொண்டே இருந்தால் மக்கள் வேண்டுமானால் மழுங்கிக் கிடக்கலாம் ஆனால் இயற்கை சீறி எழும் என்பதற்கு அத்தாட்சிதான் இந்த முறை பெய்த மழை.

    இயற்கையை எப்படிப்பட்ட குறுக்குபுத்தி உள்ளவரும் அரசியல் சூழ்ச்சிகள் செய்வோரும் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்த்திய மழை.

    கடல் கொந்தளித்தால் சுனாமியாக உருவெடுத்து நாட்டின் உள்ளே சீறிப் பாய்ந்து அழிக்கும் என்று நினைத்திருந்தோமே,
    அப்படி அல்ல, கடலுக்குச் சென்று கலக்க வேண்டிய ஆறுகள், கழிவு நீர்க் குழாய்களின் கழிவு நீர் ஆகியவை கடலுக்குச் சென்று கலக்க முறையான பாதைகள் இல்லாவிட்டாலும் நாட்டின் உள்ளே இருக்கும் நீர் நிலைகளே நிரம்பி குடியிருப்புகள் வீடுகள் வழியாகவும் சாலைகளிலேயும் புகுந்து நாட்டை அழிக்கும் என்று உணர்த்திய மழை.

    சுயநலவாதிகள் தூண்டிவிடும் ஜாதி வெறி தேவையில்லாத ஒன்று. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவர்க்கும் தாழ்வு என்பதை ஆணித்தரமாக உணர்த்திய மழை.

    தவறு செய்வோரைத் தட்டிக் கேட்கும் உரிமை இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் உண்டு என்பதை உணர்த்திய மழை
    அப்படித் தட்டிக் கேட்காவிட்டால் நாடும் நாமும் எப்படி அவதிப்படுவோம் என்று உணர்த்திய மழை.

    இயற்கையின் முன்னால் அனைவரும் சமமே. பாதிப்பு எல்லோருக்கும் தான் வரும் என்று உணர்த்திய மழை.

    அண்டை மாநிலங்களும் ஒருவருக்கு ஒருவர் உதவித்தான் ஆக வேண்டும் மனிதாபிமானமே உயரிய உணர்வு என்று மக்களுக்கு உணர்த்திய மழை.

    நாம் அளிக்கும் வாக்குகளின் உயர்வை மதிப்பை உணர்ந்து அந்த வாக்குகளினால் ஆட்சிக்கு வருவோர் அவர்தம் கடமைகளை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் இல்லையென்றால் நமக்குத்தான் அவதி என்று மக்களுக்கு உணர்த்திய மழை.

    ஆட்சிக்கு வந்தால் போதாது, மக்களுக்கு நலம் செய்யவே வந்திருக்கிறோம் என்பதை மறந்து ஊழலில் திளைத்தால் பேதம் பார்க்காமல் எல்லோரையுமே அவதிக்குள்ளாக்கும் என்று ஆளுவோருக்கு உணர்த்திய மழை.

    இப்படி இயற்கை மழை மூலமாக நமக்கெல்லாம் மனிதத்தை மழை இந்த முறை உணர்த்தியுள்ளது.

    ஆனாலும் இயற்கையின் சீற்றத்துக்கு ஆட்பட்டு உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி இருக்க இடமின்றிப் பச்சிளங் குழந்தைகள் குடிக்கப் பாலின்றி, வயது முதிர்ந்தோர் நோயுற்றோர் மருந்துகளின்றி, மொட்டை மாடியிலும் மார்பு வரையில் சாக்கடை நீரிலும் சொத்துக்களையெல்லாம் இழந்து சாலைகளிலே நடுத்தெருவிலே நின்று சொந்த பந்தங்களின் நிலை என்ன என்றே அறியாமல் தங்களையே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் அகதிகளாக அவதிப்படும் இந்த நேரத்திலே என்னைப் போன்ற முதியவர்களும் நாம் சென்று உதவ முடியவில்லையே என்று ஏங்கி ஏதோ எங்களால் இயன்றவரை இறைவனை வேண்டிக்கொண்டு உதவ முயல்கிறோம். ஆனால் சில சுயநலவாதிகள் எரிகிற கூரையில் பிடுங்கின வரையில் லாபம் என்று பால் பாக்கெட்டை 100 ரூபாய்க்கும் காய்கறிகளை அநியாய விலைக்கும் விற்றுப் பொருள் ஈட்டுகிறார்கள். சில துரோகிகள் அதற்கும் மேலே பூட்டியிருக்கும் வீடுகளில் உள்ள பொருட்களைக் கொள்ளையடிக்கிறார்கள்.

    மனிதம் செத்துப் போனால் உலகம் இருந்தும் உபயோகமில்லை.

    ஆபத்துக் காலங்களில் பணம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மைதான் ஆனால் பணமே வாழ்க்கையல்ல.

    எவ்வளவு பணம் இருந்தாலும் சென்ற உயிரை மீட்க முடியாது. போகும் உயிரை நிறுத்த முடியாது. இதை உணராமல் நடக்கும் மனித மிருகங்களை என்ன செய்வது?

    உணருங்கள் மனிதர்களே!

    இயற்கைதான் கடவுள். அவற்றைப் பராமரிக்காவிட்டால் அவற்றின் சீற்றத்தை நம்மால் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை உணருங்கள். மனிதம் காக்கப்பட வேண்டுமானால் இயற்கையைக் காக்கப் பழகுங்கள். அப்போதுதான் இயற்கை நம்மைக் காக்கும்.

    இது இயற்கையின் விதி!

    அன்புடன் தமிழ்த்தேனீ

    படம் உதவி: விக்கி பீடியா

    Share
  • செல்ஃபி

    தமிழ்த்தேனீ

    நானும் கடவுளும் அடிக்கடி சந்திப்போம் ! என்ன நம்ப முடியவில்லையா ? நம்பவேண்டாம். நான் நம்புகிறேன் அவரும் நம்புகிறார் அதனால் நாங்கள் சந்திக்கிறோம்

    இது எப்படி நிகழ்ந்தது .. நான் ஒரு முறை மானசீகமாக கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தேன் “ கடவுளே ஒரே ஒரு முறையாவது காட்சி கொடு ” நாத்திகரிடமும் ஆத்திகரிடமும் கூட நிரூபிக்க என்னால் முடியவில்லை என்று பல பெரும் மேதைகள் கூட கேட்கும் வரத்தை சரியாக யோசித்துக் கேட்கத் தவறியதால் அவதிப்பட்ட கதைகள் ஏராளம் அப்ப்டி இருக்க இந்த சிறியவனுக்கும் அதே தடுமாற்றம் வந்ததில் வியப்பில்லை

    ஆனால் நான் கேட்ட வரத்தை மிகச்சரியாக கொடுத்தது கடவுள் பாவம் சிறு பிள்ளை தவறாகக் கேட்கிறான் என்று புரிந்து கொண்டு ஒரு முறை மட்டுமல்ல பலமுறை எனக்கு காட்சி கொடுத்துக் கொண்டே இருக்கிறது.

    அங்கேதான் சிக்கல் எனக்கு காட்சி கொடு என்று வேண்டினேன் எல்லோருக்கும் காட்சி கொடு என்று வேண்டவில்லையே அதனால் எனக்கு மட்டும் காட்சி கொடுக்கிறார் அதனால் இன்னமும் நான் யாரிடமும் நிரூபிக்க முடியாமல் தவிக்கிறேன்
    ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் நான் ஏதேனும் சந்தேகம் கேட்பேன் ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை கடவுள் என்னிடம் ஒரு விருப்பத்தை தெரிவித்தார். நானும் உன்னைப் பார்த்துக் கொன்டேதான் இருக்கிறேன் எங்கே போனாலும் கையடக்க ஒளிப்பதிவுக் கருவியை வைத்துக்கொண்டு படம் எடுக்கிறாய். பத்து வருடங்களுக்கு முன்னாலிருந்தே சூழ்நிலையையும் சுற்றிலும் உள்ள மனிதர்களையும் அப்படியே உன்னையும் சேர்த்து படம் எடுத்துக் கொள்கிறாய் , அப்படி உன்னையும் சேர்த்து படம் எடுக்கும் முறை இப்போது மக்களிடையே செல்ஃபி என்று ப்ரபலமாகி உள்ளது. எனக்கும் பிடித்திருக்கிறது அது அதனால் நாம் இருவரும் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்வோம் . என்றார் கடவுள்.

    அப்பாடா என் ப்ரச்சனைக்கு ஒரு வழி பிறந்துவிட்டது என்று மனதில் நினைத்துக் கொண்டு நிச்சயமாக நானே எடுக்கிறேன் என் பக்கத்தில் சேர்ந்து நில்லுங்கள் என்றேன். கடவுளும் என்பக்கத்தில் வந்து நின்று கனகம்பீரமாக தோற்றம் காட்டினார் செல்ஃபி எடுத்துக் கொண்டோம் .

    என் கையிலிருந்து ஒளிப்பதிவுக் கருவியை பிடுங்கி அதில் எங்கள் செல்ஃபியை கண்டு மகிழ்ந்து மிக நன்றாக வந்திருக்கிறது என்றார் கடவுள் கடவுளே என்னிடம் ஏமாந்துவிட்டீரே இப்போது இந்த செல்ஃபியில் நான் அனைவருக்கும் உன்களைக் காட்டுவேனே என் ப்ரச்சனை தீர்ந்துவிட்டது என்று துள்ளிக் குதித்து கடவுளிடமிருந்து ஒளிப்பதிவுக் கருவியை பிடுங்கி அதில் எங்கள் செல்ஃபியைப் பார்த்தேன் அதில் கடவுளைக் காணவில்லை.

    நான் மட்டுமே தெரிந்தேன், ஏமாற்றத்துடன் கடவுளே என்னை ஏமாற்றிவிட்டீரே இந்த செல்ஃபியிலே உம்மைக் காணவில்லையே என்றேன் ஏன் பொய் சொல்கிறாய் நன்றாகப் பார் நான் இருக்கிறேன் என்றார் கடவுள் இல்லை நான் இருக்கிறேன் ஆனால் நீர் இல்லை என்றேன் திருவிளையாடல் தருமி பாணியில்.

    நான் இருப்பதால்தான் உனக்கு நான் தெரியவில்லை என்றார் கடவுள் இதோ பார் என்று ஒளிப்பதிவுக் கருவியைக் காட்டினார் கடவுள் அதிலே நான் மட்டும் தானே இருக்கிறேன் என்றேன் இல்லை அங்கே இருப்பது நான் .உன்னைத்தான் காணவில்லை என்றார் கடவுள்.

    ஆமாம் உனக்கு செல்ஃபி சரியாக எடுக்கத் தெரியவில்லை நான் இருக்கிறேன் ஆனால் நீ அங்கு இல்லை என்றார்.
    அதனால் நன்றாக போகஸ் செய்து எண்ணங்களை குவித்து மீண்டும் எடு அப்போதாவது உன்னையும் சேர்த்து எடுக்கிறாயா என்று பார்க்கிறேன் என்றார் .

    Share