— தமிழ்த்தேனீ.

ram  hanuman

பால்ய ஸ்னேகிதர்கள் சபேசனும் கிருஷ்ணனும். இருவரும் 70 வயதை எட்டிக்கொண்டிருப்பவர்கள். காலார நடந்து வருகையில் சபேசன் கேட்டார்.

“கிருஷ்ணா, ரொம்ப நாளா நான் ஒரு சந்தேகம் கேட்டுண்டே இருக்கேன்,” என்றார்.

“நானும் நீயும் சம வயது, ஆனா நீ எப்பிடி இப்பிடி இளமையா இருக்கே, அதானே? இன்னிக்கு சொல்றேன். நான் சின்ன வயசிலேயே கிழவன் மாதிரி ஆயிட்டேன். அப்போத்திலேருந்து அப்பிடியே மெயின்டைன் பண்றேன். அதுனாலே எல்லாருக்கும் எப்பவும் ஒரே மாதிரி காட்சி அளிக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு, ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ … என்று சிரித்தார் கிருஷ்ணன்.

“ஏதாவது ஜோக்கடிச்சு சரியான பதிலை சொல்லாமலே காலம் கடத்தறே,” என்றார் சபேசன் எரிச்சலுடன்.

“இரு, இரு உடனே சீறாதே. இப்ப உண்மையைச் சொல்றேன். உனக்கு ரெண்டு பொண்ணு ஒரு பையன். எனக்கும் ரெண்டு பொண்ணு ஒரு பையன்,” என்றார் கிருஷ்ணன்.

“உன் இளமையைப் பத்திக் கேட்டா, ஏதோ கதை சொல்றே,” என்றார் சபேசன்.

“இந்த அவசரம்தான் உனக்கு முதுமையை குடுக்குது, நிதானம் எனக்கு இளமையைக் குடுக்குது,” என்றார் கிருஷ்ணன்.

“கிருஷ்ணா, நீ எப்பவுமே விளக்கமா சொல்றேன்னு சொல்லுவே புரியறா மாதிரி இருக்கும். ஆனா கடைசியிலே குழம்பிடும்,” என்றார் சபேசன்.

“இரு, இரு சொல்றேன். உன் பிள்ளைகளும் வெளி நாட்டிலே இருக்காங்க. என் பிள்ளைங்களும் வெளி நாட்டிலே இருக்காங்க. வீட்டுக்கு வீடு வாசற்படி. எல்லார் வீட்டிலேயும் எல்லாப் ப்ரச்சனையும் இருக்கு. ஆனா …” என்று நிறுத்தினார் கிருஷ்ணன்.

“என்ன ஆனா, ஆவன்னா? விஷயத்துக்கு வாப்பா,” என்றார் பொறுமையற்று சபேசன்.

“ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹஆ …என்று சிரித்த படி, “சபேசா, இப்போ சொல்லிடறேன். வருஷத்திலே ஒரு வாட்டி நம்மளைப் பாக்க வர பசங்க கிட்ட நாம நல்லாத்தான் நடந்துக்கறோம். நேத்து என் பையன் அமெரிக்காவிலேருந்து வந்து பாதிராத்திரிக்கு வீட்டுக்கு வந்து இறங்கினான். அதுக்கப்புறம் போயி தூங்கிட்டான். அவனுக்கும் வயசு நாற்பது ஆயிடுச்சு. கல்யாணமும் ஆகி எனக்கு ஒரு பேரனும் பெத்துக் குடுத்துட்டான். காலையிலே ஒரு கல்யாணத்துக்கு போகணும்னு குளிச்சிட்டு அவனையும் எழுப்பினேன். அவன் எழுந்து என்னைக் கட்டிண்டு அப்பிடியே என் தோளிலே தலையை வெச்சிண்டு செல்லம் கொஞ்சறான் இந்த நாற்பது வயசிலேயும். எனக்கு 27 வயசுலே அவனைப் பெத்து அவன் குழந்தையா இருந்தப்போ எழுந்து என்னைக் கட்டிண்டு என் தோளிலே தலையை சாச்சிண்டு இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவானே அது நியாபகத்துக்கு வந்துடுச்சு. நான் திடீர்ன்னு 27 வயசுக்கு போயிட்டேன். அதே மாதிரி என் மருமக அவளும் என் சம்பந்தி பெத்த பொண்ணு கொஞ்சம்கூட விகற்பமே இல்லாம அப்பான்னு என்னைக் கட்டிக்கறா. எப்பிடிப்பா இருக்கீங்கன்னு கொஞ்சறா, அப்போ அவளோட 30 வயசுக்கு நான் போயிடறேன். அதே போல என் பொண்ணுங்க ரெண்டு பேரும் மாப்பிள்ளைகளும் என்னைக் கட்டிண்டு என்னப்பா எப்பிடி இருக்கீங்கன்னு அன்பா விசாரிச்சுக் கொஞ்சும் போது அவங்க அவங்க வயசுக்கு நான் போயிடறேன். அதே மாதிரி என் பொண்ணுங்களோட குழந்தைகள் நாலு பேரனும் மஹாலக்‌ஷ்மி மாதிரி ஒரு பேத்தியும் தாத்தான்னு என்னைக் கட்டிண்டு கொஞ்சறாங்க. அப்போ அவங்க வயசுக்கு நான் போயிடறேன். என் சம்பந்திகளும் எப்போ என்னைப் பார்த்தாலும் ஆரத் தழுவிண்டு வாங்கோ எப்பிடி இருக்கீங்கன்னு அன்பா பாசமா கேக்கறாங்க. என்னைவிட சின்னவங்கள் அவங்க வயசிலே ஆனா மனசாலே பெரியவங்க. அப்போ அவங்க வயசுக்கு நான் போயிடறேன். எல்லாம் அந்த இறைவன் கருணை. இப்போ புரியுதா என் இளமையோட ரகசியம்?” என்றார் கிருஷ்ணன்.

“இன்னொரு ரகசியம் சொல்லப் போறேன். இப்பிடி கட்டிண்டு இதமா கொஞ்சினா அதுக்குப் பேரு காடாலிங்கனம்னு சொல்வாங்க. இதைப்பத்தி விவரமா சொல்லணும்னா வாழ்நாள் பூரா பேசணும்,” என்றார் கிருஷ்ணன்.

“அதானே பார்த்தேன்! ஏதோ புரியறா மாதிரி ஏதோ சொன்னியேன்னு பாத்தேன் மறுபடியும் குழப்பிட்டியா?”என்றார் எரிச்சலுடன் சபேசன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.