நிவாரணம்
–தமிழ்த்தேனீ.
நிவாரணத் தொகை என்பது இழப்பீட்டுத் தொகை அல்ல.
குறிப்பாக மேல் நாடுகளில் காப்பீட்டு நிறுவனங்கள் அளிப்பது போல் கண் போனால் இவ்வளவு, கால் போனால் இவ்வளவு, விரல் போனால் இவ்வளவு என்று தரம் பிரித்து அதற்கேற்ற இழப்பீட்டுத் தொகையை அளிப்பது போல் அல்ல (நம் நாட்டில் இல்லை) நிவாரணத் தொகை என்பது.
தலைவலி வந்தால் அளிக்கும் ஒரு மாத்திரை போன்றது நிவாரணத் தொகை. அதைத் தலைவலிக்கேற்ப அதிகப்படுத்தலாம் குறைக்கலாம். ஆனால் தலைவலியின் மூலகாரணத்தை அறியச் செய்யவேண்டிய மருத்துவ ஆராய்ச்சிகளை முழுவதும் முடித்து அந்த மூலகாரணத்துக்கேற்ப மருந்தோ அல்லது அறுவை சிகிச்சையோ அளிப்பது போன்றது இழப்பீட்டுத் தொகை.
தற்போதைய நிலையில் முழு வீடு, வீட்டில் உள்ள அத்துணைப் பொருட்கள், நான்கு சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் போன்றவற்றுக்கு இவ்வளவு ஆண்டு காலமாக காப்பீட்டுத் தொகையாக மக்கள் அளித்தவற்றைக் காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு சதவிகிதம் கூட திருப்பித் தராமல் பொருளீட்டினர்.
ஆனால் இன்றைய இயற்கைப் பேரிடரினால் ஏற்பட்ட இழப்புகளுக்குக் காப்பீட்டு நிறுவனங்கள் இவ்வளவு வருடங்கள் ஈட்டிய தொகை முழுவதும் செலவழித்தாலும் அது ஈடாகாது. ஆகவே காப்பீட்டு நிறுவனங்கள் என்ன செய்து ஈடுகட்டப் போகிறார்களோ பொறுத்திருந்து பார்ப்போம்.
என் நண்பரின் சகோதரியார் முடிச்சூர் சாலையில் இருந்த வீட்டில் அவருடைய குளிர்சாதனக் கருவி, விலை உயர்ந்த தொலைக் காட்சிப் பெட்டி, இரண்டு கார்கள், மேலும் பல விலை உயர்ந்த மின்சார சாதனங்கள், மேலும் நகைகள் உட்பட அவர்களுக்கு இழப்பு ஐந்து இலட்சம் ரூபாய்கள்.
யார் கொடுப்பார்கள் இந்த இழப்பீட்டுத் தொகையை ?
ஒரு வீட்டுக்கே ஐந்து இலட்சம் ரூபாய்கள் என்றால் நகரம் முழுவதும் பாதிக்கப் பட்டோருக்கு எவ்வளவு கோடிகள் செலவாகும் என்று எண்ணிப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது
ஆனால் விலை மதிப்பில்லாத உறவுகளை, உறவுகளின் உயிரையே அளித்துவிட்டுக் கதறும் மக்களுக்கு நிவாரணத் தொகையோ இழப்பீட்டுத் தொகையோ எவ்வளவு அளித்தாலும் ஈடாகுமா உயிருக்கு.
உயிரின் விலை என்ன? உறவின் விலை என்ன இதற்கெல்லாம் எப்படி ஈடுகட்ட முடியும்?
மனிதன் தான் முக்கியம். எவ்வளவு பொருட்கள் போனாலும் மனம் தளராதீர்கள். மனிதன் உயிரோடு இருந்தால் கடினமே என்றாலும் எப்படியேனும் கஷ்டப்பட்டு மறுபடியும் பொருளீட்டலாம்.
ஆனால் விலை மதிப்பில்லாத மனிதரின் உயிர் போனால் அதை ஈடுகட்டவே முடியாது. ஆகவே இழந்த பொருட்களை எண்ணி இதயத்தை பலகீனப்படுத்திக் கொள்ளாதீர்கள். ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே”
என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறியதை நினைவில் வைத்துக்கொண்டு மனதைத் தேற்றிக் கொண்டு வாழவேண்டும் வேறு வழியில்லை.
உலகில் பணம் பொருட்கள் ஆகிய எல்லாவற்றையும் விட உயிர் பிரதானமானது ஆகவே உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லுங்கள்.
காலுக்குச் செருப்பில்லையே என்று கவலைப் படுவோர் காலை இழந்தோரைப் பார்த்து தேறுதல் கொள்ள வேண்டியதுதான்
அன்புடன்
தமிழ்த்தேனீ
படம் உதவி: http://www.elitewaterdamage.com/flood-cleanup/