ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 38
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“எழுபதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே நான் அருகில் சென்ற போது, குகைக்குள் நுழையும் ஒரு சுதந்திரப் பூச்சியைப் போல் உன்னைக் கண்டேன் ! ஏழு நிமிடங்களுக்கு முன்பு நீ என் பளிங்குக் கண்ணாடி ஜன்னல் வழியே போவது என் கண்களில் பட்டது. அப்போது மரணம் உனக்கு மேல் தொங்கி நிற்க, அடிமைச் சங்கிலிக் கட்டிய குறுகிய சந்துக்கள் வழியே நீ மனிதனாய்ப் போய்க் கொண்டிருந்தாய்.”
கலில் கிப்ரான் (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
___________________
விடுதலை அழைக்கிறது
நம்மைத் தனது
மேடைக்கு !
அங்கே நின்று
அவளது செழித்த ஒயினையும்
அறுசுவை உணவையும்
சுவைக் கிறோம் !
ஆனால் நாமந்த பீடத்தில்
அமரும் போது
பகற் கொள்ளை அடித்து
பசியைப் போக்க
வயிறு புடைக்கத் தின்கிறோம்
___________________
இயற்கை அன்னை தன்
கரம் நீட்டி நம்மை எல்லாம்
வரவேற்பாள்
தனது எழிலை நாம்
அனுபவிக்க
வேண்டு மென்று !
ஆனால் நாமெல்லாம்
அஞ்சி நடுங்குவோம்
அவளது மௌனத்தைக் கண்டு !
நெருக்க மான
நகருக்கு ஓடுவோம்
நாமெல்லாம்
ஓநா யிக்கு அஞ்சி
ஒதுங்கும்
ஆட்டு மந்தை போல் !
___________________
சத்தியம் அழைக்கிறது
நம்மை யெல்லாம்
குழந்தையின்
களங்க மிலாப்
புன்னகை யோடு
கவர்ச்சிக்
காதலியின் முத்த மோடு !
ஆயினும் நாமெல்லாம்
அதன் அன்பு முகத்தில் அறைவோம்
கதவைச் சாத்தி !
பகைவன் போல் எதிர்த்து
நகைப்போம் !
___________________