தமிழ்த்தேனீ

வரவர யாருமே என்னை மதிக்கறதில்லே. எனக்கு ஒண்ணுன்னா துடிச்சுப் போற இதயங்கள் இப்பல்லாம் எனக்கு என்ன ஆனாலும் கவலைப்படாமே பாத்து நடக்கணும் மெதுவா போகணும் கவனமா இருக்கணும் இப்பிடியெல்லாம் வார்த்தையாலே கொல்றாங்களே!

எங்க அடிபட்டுதுன்னு ஆதரவாக் கேக்க ஆளில்லே. மனுஷனுக்கு மதிப்பில்லாம போனா அதுக்கப்புறம் உயிர் வாழறது எதுக்கு எல்லாமே வீண்.

எப்பவுமே எனக்குத் தெரிந்தவற்றில் கூட வீட்டிலுள்ளோரை மதித்துக் கருத்துக் கேட்டு அவர்கள் சொல்வது நியாயமாக இருந்தால் ஏற்றுக் கொண்டு செயல்படும் என் குணத்தையும் மதிக்காமல் நான் எது செய்தாலும் அதிலே தலையிட்டு அபத்தமாக ஒரு யோசனையைச் சொல்லி அதை நான் ஏற்காவிட்டால் என்னைக் கோவப்படுத்தி கத்தவைத்து என்னை உணர்ச்சி வசப்படச் செய்து கத்தவைத்துவிட்டு எதுக்கெடுத்தாலும் கத்தறான் என்று என்னை ஏசுவதே இவர்கள் பிழைப்பாகிவிட்டது
மத்தவங்களை விட்டுத் தள்ளுங்ககொண்ட இவ்வளவு வருஷம் பழகியும் பொண்டாட்டியும் என்னைப் புரிந்து கொள்ளாத துரதிருஷ்டசாலி நான் அவளுக்கு புரியவைப்பதற்குள் என் ஆவி கொஞ்சம் கொஞ்சமாக குறைவது எனக்குத் தெள்ளத் தெளிவாக புரிகிறது. அதை வெளிப்படையாக எடுத்துச் சொல்லியும் மீண்டும் மீண்டும் என்னைச் சீண்டி வம்புக்கிழுப்பதைக் குறைத்துக் கொள்ளவே இல்லை அவள்இப்படி இருக்கும் நிலையில் என்ன செய்வது.எப்பேர்ப்பட்ட ஞானிகளெல்லாம் சொல்லி இருக்காங்க கூறாமல் சன்யாசம் கொள்ளுன்னு. முடிவாகத் தீர்மானித்தார் சபேசன். சரி எங்காவது போய்விடலாம் எனும் முடிவு எடுத்த பின் மனம் அமைதியாய் ஆயிற்றுஎங்கே போவது என்று எண்ணிப் பார்த்தால் அது ஒரு பெரிய சவாலாக தோன்றிற்று. எங்கே போவது எப்படிப்பட்ட விடையில்லாத கேள்வி உறவுக்காரங்க கிட்ட போக முடியாது நாலு நாளைக்கு மரியாதையா நடத்துவாங்க அப்புறம் என்ன ஆகும்னு அவருக்குத் தெரியாதா சரி நண்பர்கள் வீட்டுக்கு போயிடலாம்னு பாத்தா யாரு நம்மோட நலன் விரும்பியா உண்மையான நண்பனா இருக்கான். அப்பிடியே இருந்தாலும் நண்பனோட மனைவி பிள்ளைகள் நம்மை எப்படி ஏற்பார்கள் அதுவும் சரிப்படாது.

அப்போ எங்கேதான் போறது அட எங்கேயும் போக முடியாது நமக்கென்று யாருமில்லை என்னும் உண்மை நெஞ்சில் கசந்து வழிந்தது

அட என்னடா உலகம் இது இவ்வளவு பெரிய உலகத்திலே நமக்கு போக்கிடமே இல்லையே. என்னாத்தை பொறந்து வளந்து படிச்சு வேலைக்குப் போயி சொத்து சேர்த்து கல்யாணம் செஞ்சிகிட்டு புள்ளை குட்டிகளைப் பெத்து எதுவுமே ப்ரயோசனம் இல்லே. இப்போ என்னதான் செய்யறது

கோடிக்கணக்கான மக்கள் இருந்தாலும் அவர்கள் நடுவே தனியாய் இருக்க முடியவேண்டும் தனியாய் இருந்தாலும் கோடிக்கணக்கான மக்கள் இடையே இருப்பதைப் போல வாழத் தெரியவேண்டும் என்று தோன்றியது

அது சரி மனசிலே தோண்றதெல்லாம் செயல்பாட்டில் எவ்வளவு கடினம் எப்படிச் செயல் படுத்துவது யோசிக்க யோசிக்க மண்டை காய்ந்தது. என்னதான் தீர்வு

அட கூறாமல் சன்யாசம் கொள் அப்பிடீங்கற கருத்துக்கு வேற பொருள் இருக்குமோ ஆமாம் இப்படி யோசிக்கலாமே கூறாமல் யாரிடமும் நான் சன்யாசியாக ஆகப் போகிறேன் என்று அறிவிக்காமல் சன்யாசம் கொள்ளலாம்

சன்யாசம் கொள்வது என்றால் என்ன?எல்லாவற்றையும் துறத்தல் என்று பொருள் வருகிறது. எல்லாவற்றையும் துறக்கலாம் ஆனால் இந்த மனதை எங்கே தொலைப்பது அதுதானே இவ்வளவு பாடு படுத்துகிறது

மனதைத் துறக்க என்ன செய்வது முதலில் ஒன்றைத் துறக்க அதைப் புரிந்துகொள்ள வேண்டுமே எப்படி மனதைப் புரிந்து கொள்வது நம்முடைய மனதை நாமே புரிந்து கொள்ள இயலாத நிலையில் அடுத்தவர் மனதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும். இதற்கு தீர்வே இல்லையா

சரி புரிந்துகொண்டுதான் துறக்க வேண்டுமா புரிந்தாலும் புரியாவிட்டாலும் துறக்கலாமே என்றது மனது. அட இப்போதும் இந்த மனது விழித்துக் கொண்டே இருக்கிறது யோசனை வேறு சொல்கிறது

எப்போதுமே தளராமல் யோசனை சொல்லிக் கொண்டே இருக்கும் இந்த மனதைத் துறப்பது அவ்வளவு எளிதல்ல என்பது புரிந்தது.

சரி துறக்க வேண்டாம் இந்த மனதில் ஆழ்ந்துவிட்டால் அட இது நல்ல யோசனையாகத் தெரிகிறதே. சரி வெளி உலகத்தை மறந்து இந்த மனதில் ஆழ்ந்துவிடுவோம். அதுதான் சரியான வழி என்று உணர்ந்து உள்ளே பார்க்கத் தொடங்கினார் அவர்.

கண் விழித்துப் பார்த்த பொழுது அவரைச் சுற்றி ஏராளமான மக்கள் அவருக்கு தங்க சிம்மாசனம் தலையிலே கிரீடம். அவர் வாய் திறக்க மாட்டாரா என்று ஏங்கும் மக்கள் கையைத் தூக்கி ஆசீர்வதிக்க மாட்டாரா என்று ஏங்கும் மக்கள் அவர் கண்ண்ணால் ஒரு முறை பார்க்க மாட்டாரா என்னும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்கள் அவர் பாதத்தை தலைமேல் வைத்து வழிபடும் பக்த கோடிகள்.

எங்கும் பளபளப்பான தரை விரிப்புகள். மலர் தூவிய பட்டுக் கம்பளங்கள் அவர் தரிசனம் காணக் வாயிலிலே காத்திருக்கும் முக்கியமான மனிதர்கள் முதல் பாமர்கள் வரை எல்லோருடைய அணிவகுப்பு!

என்ன ஆயிற்று எப்படி நடந்தது இதெல்லாம் மீண்டும் மனதுக்குள்ளே ஆழ்ந்து உற்றுக் கவனித்தார்.

அவருடைய உள் மன ஆசைகளே இவையெல்லாம் வெறும் கற்பனையே மாயையான தோற்றங்களே என்று உணர்ந்த கணத்தில் மீண்டும் விரக்தியும் சோர்வும் வந்தது.தலை சுற்றியது. கண் இருட்டிக் கொண்டு வந்தது. அதற்கு நடுவே ஏதோ ஒரு உணர்வால் திடுக்கிட்டு மலங்க மலங்க விழித்தார். யாரோ கத்தறாங்க

கை வேலையா இருக்கேன் கொழந்தையைப் பாதுக்கங்கன்னு படிச்சுப் படிச்சு சொல்லிட்டுப் போனேன் எங்கேயோ பராக்கு பார்த்துகொண்டே தலையை ஆட்டினீங்களே இப்போ பாருங்க குழந்தை கட்டில்லேருந்து கீழே விழுந்துட்டான்

எதுக்கும் துப்பில்லாத ஒரு ஆளைக் கல்யாணம் செஞ்சிகிட்டு நான் படற அவதி இருக்கே சொல்லவும் முடியலே சொல்லாம இருக்கவும் முடியலே சொல்லாம கொள்ளாம எங்கேயாவது போயி சன்யாசினியாயிடலாம்ன்னு அவ்ளோ ஆத்திரம் வருது என்று கத்திவிட்டு ஓய்ந்து உட்கார்ந்தாள் அவர் மனைவி. அவர் காதிலே யாரோ ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினார்கள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *