Tag: மலர் சபா

  •   நான் அறிந்த சிலம்பு – 184

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை

    மன்னனைக் கண்டு பொற்கொல்லன் செய்தி தெரிவித்தல் 

    மன்னனைக் கண்ட பொற்கொல்லன்
    அவன் காலடியில் விழுந்து
    அவனைப் பலவாறு புகழ்ந்து போற்றினான்.
    “கன்னக் கோலும், கவைக்கோலும் இன்றி
    வாயில் காத்து நின்றோரையும் மயக்கி
    அவர்களை உறங்கச் செய்து,                                  silambu
    அரண்மனை புகுந்து,
    அரசியின் சிலம்பைத்
    திருடச் சென்ற கள்வன்,
    காவலர் கண்களையும் மறைத்து
    ஒளிந்து கொண்டு இருந்தவன்,
    என்னுடைய சிறுமை பொருந்திய
    குடிலில் வந்து தங்கியிருக்கிறான்”
    என்று அரசனிடம் உரைத்தான். 

    மன்னவன் வினைவசத்தால் மயங்கிக் காவலர்க்கு இட்ட கட்டளை 

    வினையின் பயன் தோன்றிய
    காலம் வந்து விட்டது;
    ஆதலால், கொம்புகளுடன் கூடிய
    வேம்பு மாலை அணிந்த
    பாண்டிய மன்னன்
    சற்றும் ஆராய்ந்து சிந்திக்க இயலாதவனாய்க்
    காவலர்களை அழைத்து,
    “தாழ்ந்த பூங்கோதைகளையுடைய
    என் தேவியின் காற்சிலம்பு
    இவன் காட்டிக் கொடுக்கும்
    அந்தக் கள்வனது கையில் இருக்குமாயின்,
    அக்கள்வனைக் கொன்று அச்சிலம்பை
    இங்கு கொண்டு வருவீர்களாக” என்றான்.

    காவலாளருடன் திரும்பி வந்த பொற்கொல்லன் கோவலனிடம், “இவர் சிலம்பு காண வந்துள்ளனர்என்று சிலம்பைப் பற்றிக் கூறுதல் 

    அங்ஙனம் அரசன் காவலரை ஏவியதால்
    தீயதொழில் புரியும் பொற்கொல்லன்
    ‘கோவலன் திருட்டுப்பழி ஏற்க வேண்டும்’
    என்ற தன்எண்ணம்
    ஈடேறப்போகிறது என்று நினைத்து
    அகம் மகிழ்ந்தான்.
    ஊழ்வினையின் வலையில் விழுந்து கிடந்த
    கோவலனை அணுகினான்.

    “வெற்றி பொருந்திய படைகளையுடைய
    மன்னனின் ஏவுதலினால்
    உம்மிடம் உள்ள சிலம்பைக் காண
    இங்கு வந்துள்ளனர்.
    அதனைக் காட்டுவாயாக”
    என்று கூறினான்.

    கோவலனும் தன் கையில் உள்ள சிலம்பை
    அவர்களிடம் காட்டினான்.
    அதன் அருமை பெருமைகளை
    விளக்கிச் சொல்பவன் போல
    அக்காவலர்களைத்
    தனியே அழைத்துச்சென்ற
    அக்கயவன் பொற்கொல்லன்,
    அரசியின் சிலம்பை அது எவ்வாறு
    ஒத்திருக்கிறது என்பதை
    விளக்கிச் சொன்னான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 142 – 161

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 183

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை

    பொற்கொல்லன் தீய எண்ணத்துடன் செல்லுதல்

    ‘நான் வஞ்சகம் செய்து கவர்ந்த சிலம்பு
    என்னிடம்தான் உள்ளது என்று
    பிறர் அனைவரும் அறியும் முன்னே
    வேறு ஊரிலிருந்து இங்கு வந்த
    இவன் மூலம் என் கள்ளத்தனத்தை          silambu new
    நான் மறைப்பேன்’ என்று எண்ணி,
    சிறிதும் கவலைப்படாது
    பொற்கொல்லன்  சென்றான்.

    கோப்பெருந்தேவியின் கோவிலை நோக்கி மன்னவன் செல்லுதல்

     கூடல் மகளிர் ஆடும்போது
    தோன்றும் தோற்றமும்,
    அந்த ஆட்டத்துக்கேற்ற பாட்டு இசைக்கும்போது
    எழும் வேறுபாடும்,
    யாழிசையின் பயன்களும்,
    அரசனின் உள்ளத்தைக் கவர்ந்தது என்று எண்ணி,
    தன் ஊடலை உள்ளே வைத்துக் கொண்டு
    தலைநோயாகிய வருத்தத்தைத் தன் மீது படரவிட்டு,
    உயர்குடிப்பிறப்பையுடைய பெருந்தேவி
    தன்னுடன் மேவாது
    அந்தப்புரம் சென்றுவிட்டதால்…
    காமம் மிகுந்த அரசன்
    மந்திரிகளின் கூட்டத்தை விட்டு நீங்கி,
    அரி சிதறிய நீண்ட கண்களையுடைய பணிப்பெண்களுடன்
    கோப்பெருந்தேவியின் கோவிலை நோக்கிச் சென்றான்.
    காவலையுடைய வாயிலின்கண் செல்லும் முன்னே
    அவனைப் பலவாகப் புகழ்ந்து ஏத்தி
    அவன் கால்களில் விழுந்தான் பொற்கொல்லன்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 127 – 141

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 182

    -மலர்சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை 

    பொற்கொல்லன் உரைத்த விடை 

    பொற்கொல்லன் கூறலானான்:
    “அடியேன் அதைப்பற்றி அறியேன்;

    எனினும், அரசனுக்குரிய முடி முதல் அனைத்து
    அணிகலன்களை நான் நன்கு செய்வேன்;”
    எனக்கூறிக் கைதொழுது நின்றான்                          silambu 2
    எமனின் தூதனாக வந்த பொற்கொல்லன். 

    போற்றத்தக்க சிலம்பைத் தன்னிடம் இருந்த
    பொதியிலிருந்து எடுத்தான் கோவலன்.

     கோவலன் சிலம்பைக்காட்ட, கொல்லன் அதன் தகுதி பற்றிக் கூறுதல் 

    அந்தச் சிலம்பு தூய்மையான பொன்னால்
    செய்யப் பட்டிருந்தது.

    மணிகள் பதிப்பதற்கான குழிகளில்
    சிறந்த மாணிக்க மணிகள் மற்றும் வைரங்கள்
    வரிசையாகக் கோக்கப்பட்டிருந்தன.
    அதன் உள்பக்கம் குழிவாகக்
    குடையைப் போல் இருந்தது.
    சித்திர நுணுக்கம் போல் வேலைப்பாடமைந்த
    அந்தச் சிலம்பின் அழகையெல்லாம்
    பொய் பேசுவதையே தொழிலாகக் கொண்ட
    அந்தப் பொற்கொல்லன் கண்டதும்,
    அரண்மனையில் முன் தான் களவாடிய
    சிலம்பை ஒத்திருந்ததைக் கண்டான். 

    “அரசியான கோப்பெருந்தேவிக்கு அல்லாது
    இச்சிலம்பு வேறு யார்க்கும் பொருந்தாது;”

    என்று கூறினான். 

    வேந்தனுக்குச்சிலம்பு பற்றித் தெரிவித்து வருமளவும் தன் குடிலில் தங்கியிருக்க என்று பொற்கொல்லன் சொல்ல, கோவலன் அயலில் உள்ள தேவ கோட்டத்தின் மதில் புறத்துக்குச் செல்லுதல் 

    “வெற்றிச் சிறப்புப் பொருந்திய
    நம் வேந்தனிடம் நான் இதைத்

    தெரிவித்து வரும் வரை
    நீவிர் இங்கே எம் 
    சிறு குடிலில் தங்கியிருப்பிர்”
    எனக் கூறிச் சென்றான். 

    கோவலனும் கீழ்மகனாம் அவனின்
    இருப்பிடம் செல்லாமல்

    அருகில் இருந்த தேவகோட்டத்தின்
    மதிலுள் சென்று தங்கினான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 113 – 126

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai– 

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 180

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை

    கோவலன் கண்ணகியைப் பாராட்டி, ஒரு சிலம்பை எடுத்துச்சென்று விற்று வருவேன்என்று கூறி, விடைபெற்றுச் செல்லுதல்

    கோவலன் கண்ணகியிடம் கூறினான்:
    “பிறந்த குடியின் முதல் சுற்றமாகிய
    தாய் தந்தையரையும்,
    உடனிருந்து வேலை செய்யும் மகளிரையும்,
    அடியார்கள் கூட்டத்தையும்,
    நட்பாய் நிற்கும் தோழியரையும் விட்டு விலகி
    நல்லோர் விரும்பும் நாணத்தையும் மடத்தையும்
    பெருமை வாய்ந்த கற்பினையும் மட்டும் விரும்பி,
    அவற்றை மட்டுமே துணையாகக் கொண்டு
    இவ்விடத்து என்னுடன் வந்து
    என் துன்பம் தீர்த்த
    பொன் போன்றவளே!
    கொடி போன்றவளே!
    மலர்மாலை அணிந்தவளே!
    நாணின் பாவையே!
    நீள்நில விளக்கே!
    கற்பின் கொழுந்தே!
    பொற்பின் செல்வியே!

    உன் சிறிய பாதங்களுக்கு
    அணியாகும் சிலம்புகளுள் ஒன்றை
    நான் சென்று விற்று வருவேன்;
    நான் வரும் வரையில்
    நீ இங்கு வருந்தாது இருப்பாயாக!”

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 81 – 99

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 179

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை

    கண்ணகியின் பணிவுரை

    “அறவோர்க்கு உணவளித்தல்
    அந்தணர் போற்றுதல்
    துறவிகளை எதிர் கொள்ளுதல்
    பழங்காலம் முதல் இல்லறத்தினர் செய்துவரும்  kannaki
    பெருமைவாய்ந்த அறமாகிய
    விருந்தினரை வரவேற்று உபசரித்தல் ஆகிய
    நல்லறங்களை இழந்து
    மிகவும் வருத்தமுற்றிருந்தேன்.

    இங்ஙனம் துன்புற்ற என்னைக் காணப்
    பெருமை வாய்ந்த உம் தாயோடு,
    அனைவரிடமும் நற்பெயரும்
    பொருள் தேடுவதில் மிகச் சிறந்த முயற்சியும்
    மன்னனுக்கு நிகரான பெருமையுடைய
    மாசாத்துவானும் ஆகிய
    உம் தந்தையும் வருவர்.

    நீவிர் எம்முன் இல்லாது இருக்கும் வருத்தத்தை
    அவர்முன் காட்டாமல்
    மறைத்துச்  சிரித்து நடிப்பேன்
    அதனை உணர்ந்த அவர்கள்
    அன்பு கலந்த அருளுரைகள் கூறி
    என் பொறுமையான நிலையை மிகவும் பாராட்டுவர்.

    அவர்கள்முன் வருத்தம் காட்டாமல்
    நான் புன்னகைத்தாலும், அது
    உம் பிரிவால் ஏற்படும்
    மனத்துன்பத்தையும் மெய்வருத்தத்தையும்
    வெளிப்படுத்தி நிற்கும்
    அப் பொய்யான புன்னகையைக் கண்டு
    அவர்கள் மனம் வருந்திச் செல்வர்.

    இவ்வாறு உம் பெற்றோர் கலங்கும் வண்ணம்
    முறையற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டீர்களே!
    என்னதான் ஆனாலும்,
    நான் உங்கள் வார்த்தைகளை ஒருபோதும் மீறாத
    உறுதியான எண்ணத்துடன் வாழ்ந்திருப்பவள்;
    எனவேதான் தாங்கள் கூறியதும்
    உடனே புறப்பட்டு வந்தேன்”
    என்று கூறினாள் கண்ணகி.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 71 – 80
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 178

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை

    கோவலன் கண்ணகியை நோக்கிக் கழிந்ததற்கு இரங்கிக் கூறுதல்

    இனிதே உண்டு முடித்தபின்
    மிகச்சிறந்த பெருமை வாய்க்கப்பெற்ற கோவலனுக்கு,
    வெற்றிலையோடு பாக்கினையும் தந்த
    கருமையான குளிர்ந்த கூந்தலையுடைய கண்ணகியை
    ‘வருக’ என்று கூறி அணைத்து அருகில் அமர்த்தி…       kovalan kannagi new

    “பெரிய கற்கள் நிறைந்த வழியதனைக்
    கடக்கும் வண்ணம்
    சிறிதளவேனும் வலிமை
    நின் பாதங்கள் எங்ஙனம் பெற்றனவோ…
    கொடிய வெம்மையான மறவர் நிறைந்த
    ஆபத்தான வழியில் வந்ததை எண்ணி
    நம் பெற்றோர் எங்ஙனம் வருந்தினரோ…
    யான் கண்டது கனவு என்னும் மாயையோ…
    அல்லது இது நனவாயின்
    யான் முன் செய்த தீவினையின் பயனோ…

    இப்போது எம் உள்ளம்
    கலக்கம் உற்று இருப்பதால்
    இதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.

    நான் முன்பு பயனில்லாத சொல் பேசுபவருடனும்
    புதிய பரத்தையரை நாடும் காமுகரோடும்
    கூடித் திரிந்தேன்;

    சிறுமையானவற்றைப் பேசும் கயவர்கூட
    இழிந்து பேசும் நிலைக்கு ஆளானேன்.
    இங்ஙனம் சிறுபுத்தியுடன்
    அறவோர் சொல் கேளாது
    நல்லன செய்ய மறந்து
    நல்லொழுக்கத்தைக் கைவிட்டேன்.

    அது மட்டுமல்லாமல்
    என் தாய் தந்தையர்க்குச் செய்ய வேண்டிய
    பணிவிடையும் செய்யத் தவறினேன்;
    இளமையாய் இருந்தும் மூதறிவு பெற்ற
    உனக்கும் தீங்கு செய்தேன்.

    எனினும் நான் செய்த எதையும் ஆராய்ந்து பார்க்காமல்
    ‘மதுரைக்குப் புறப்படு’ என்றதும் புறப்பட்டுவிட்டாயே!
    மறுப்பேதும் கூறவில்லையே!
    எனக்காக என்ன அரிய காரியம் செய்துவிட்டாய்?!”
    என்று கோவலன் மனம் இரங்கிக் கூறினான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 54 – 70

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 177

    malarsabaa-மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை

    ஐயையும் மாதரியும் கோவலனையும் கண்ணகியையும் பாராட்டுதல்

    அரிய மறைகளில்
    அரசர்க்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றக்கூடிய
    வணிகர்க்கு எனக் கூறப்பட்ட முறைமைகளுள்
    உணவு உண்ணும் முறைமைகள் அனைத்தையும்
    முறையாக முடித்துப்
    பின் உணவருந்த வந்தான் கோவலன்.

    “இம்மதுரைக்கு வந்த நம்பி கோவலனும்
    ஆயற்பாடியில் நல்ல உணவு உண்ணும்
    யசோதை மகன்
    காயாம்பு வண்ணன் கண்ணன் தானோ!

    இவன் பசித்துயர் தீர்க்கும்
    பலவகை வளையல்களை அணிந்த
    இந்தக் கண்ணகியும்
    முன்னொருகாலத்தில்
    நம் குலத்தில் தோன்றிக்
    காளத்தி எனும் ஆற்றிலே
    தூய்மையான நீலமணி போலும்
    நீல நிறம் கொண்ட
    அக்கண்ணனின் துயர்தீர்த்த
    குலவிளக்காம் நப்பின்னைதானோ!

    இந்த அழகிய காட்சி
    நம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறதே!”
    என்று அவ்விருவரையும் கண்குளிரப்
    பார்த்துக் கொண்டிருந்து
    புகழ்ந்து மகிழ்ந்தனர்
    ஐயையும் அவள் அன்னை மாதரியும்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 46 – 53

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 176

     -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை

    கோவலனுக்குக் கண்ணகி உணவு படைத்தல்

    பனையால் செய்த ஓலைகொண்டு
    கைவேலை செய்யும் மகளிர் அழகாய் முடைந்த
    வேலைப்பாடுகள் அமைந்த தடுக்கில்
    கோவலன் அமர்ந்தான்
    அதன்பின் கண்ணகி                                              food
    செந்தாமரை மலர் போன்ற
    தன் கைகளைக் குவித்துச்
    சுட்ட மண்கலத்தில் உள்ள நீர்கொண்டு
    அவன் பாதங்களைக் கழுவி வணங்கினாள்.

    மண்மகளின் மயக்கத்தைத் தெளிவிப்பவள் போல்
    இலைபோடும் இடத்தில் தரையை மெழுகி,
    குலைதராத வாழை இலையை
    அதன் உள்பக்கம் வெளித்தோன்றுமாறு
    பக்குவமாய் விரித்து,
    அதில் சமைத்த உணவினைப் படைத்து
    ‘அடிகளே! உணவு உண்ணுங்கள்’
    என்று கூறி நின்றாள்.

    அரசர்க்கு அடுத்த நிலையில் வைத்து
    மதிக்கப்படும் வணிக மரபில் வந்தவர்
    உணவு உண்ணத் தொடங்கும் போது
    கடைப்பிடிக்க வேண்டிய மரபுகளான
    வாய்ப்பூச்சு, பலியிடுதல்
    முதலியவற்றை எல்லாம் செய்தபின்
    கோவலன் உணவு உண்ணத் தொடங்கினான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 35 – 45

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

    படத்திற்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 175

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06. கொலைக்களக்  காதை

    இடைக்குல மடந்தையர் கண்ணகிக்குக் கொடுத்த பொருள்கள்

    மாதரி கூறியது போலவே,
    தம் இயல்பில் இருந்து சிறிதும் குன்றாத
    இடைக்குல மகளிர்,
    சமைப்பதற்கு உரிய பாத்திரங்களோடு,     fruits veg
    மாட்சிமை பொருந்திய பெரியவர்கள்
    பிறர்க்குச் சொல்லாமல் கொடுப்பது போலவே,
    பூக்கள் பூக்காமல் காய்க்கும் தன்மையுடைய
    பலாமரத்தின் செழிப்பான திரண்ட பலாக்காய்,
    வளைந்த கோடுகளை உடைய வெள்ளரிக்காய்,
    மாதுளை மரத்தின் பசுங்காய்,
    மாமரத்தின் கனியாம் மாங்கனி, வாழைப்பழம்,
    செந்நெல், அரிசி
    ஆகிய இவற்றுடன்
    இடையர் குலத்துக்கு இயல்பான
    பால், தயிர், நெய்
    ஆகியன கொண்டுவந்து,
    “திரண்ட வளையல்களை அணிந்த மங்கையே!
    இவற்றைக் கொள்வாயாக!”
    என்றேதான் கூறினர்.

    ஐயையின் உதவியுடன் கண்ணகி அமுது ஆக்கல்

    இடைக்குல மகளிர் கொண்டுவந்து தந்த
    பலவகைப்பட்ட பசுமையான காய்கறிகளை
    வளைந்த அரிவாள்மனையில்
    தன் மென்மையான விரல்கள் சிவக்க
    அரிந்து சமைத்தாள்
    அப்போது அவளது அழகிய திருமுகம் வியர்த்தது;
    செவ்வரிகள் கொண்டு தானாகவே சிவந்திருக்கும்
    அவள் கண்கள் மேலும் சிவந்தன

    அடுப்பில் வைக்கோலை வைத்துத் தீமூட்டி
    அவளுக்கு உதவிய ஐயையுடன் சேர்ந்து
    தன் கைப்பக்குவத் திறனையும் வெளிக்காட்டிக்
    கோவலனுக்கு ஏற்ற உணவைச் சமைத்தாள்
    அதன்பின் புகையால் கருத்திருந்த
    அச்சமையல் அறையில் இருந்து வெளியே வந்தாள்

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 21 – 34
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

     படத்து நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 174

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை

    மாதரி கண்ணகியைத் தக்கதோர் இல்லத்தில் சேர்த்து, அவளுக்கு வேண்டும் பணி செய்வதற்கு ஏற்றவர்களை நியமித்தல்

    பெறுவதற்கரிய மடந்தையான கண்ணகியை
    அடைக்கலமாகப் பெற்ற
    மிக்க மகிழ்ச்சியடைந்தவளான                                Ravi_Varma-Shakuntala_columbia
    இடைக்குல ஆய்ச்சி மாதரி,
    மோர் விற்றுக் கிடைத்த பொருளால்
    உணவை உண்டு வாழும்
    வாழ்க்கைமுறை உடைய ஆய்ச்சியரோடு
    கட்டிய வேலிகள் சூழ்ந்த
    இடையர்களின் இருப்பிடத்தின்கண்
    அழகும் சிறப்பும் உடைய பந்தலையும்
    காவலினையும் உடைய செம்மண் பூசிய
    சிறப்புவாய்ந்த சிறுவீட்டினை அடைந்தாள்.

    நெருக்கமாக வளையணிந்த ஆய்ச்சியர்
    சிலருடன் கூடி
    நறுமலர் மாலை அணிந்த
    கண்ணகியை நீராட்டினாள்.

    “கூடல் நகரத்து மகளிரின்
    அழகைப் பெருக்குவதற்காகப்
    பொன்னால் செய்த அணிகலன்களின்
    பெருமை குறைக்கும் வண்ணம்
    இயற்கை அழகுடன் வந்த உனக்கு
    என் மகளாகிய ஐயை
    ஏவல் புரியும் பணிமகள் ஆவாள்.
    பொன்னைப் போற்றிக் காப்பது போல
    உன்னைப் போற்றிக் காப்பேன்.
    அழகிய பூங்கோதையுடைய நங்கையே!
    என்னுடன் இங்கு இருப்பாயாக”
    என்றே கூறி வணங்கினாள்.

    “மாதவம் செய்த கவுந்தியடிகள்
    வந்த வழியின் உற்ற துன்பம் நீங்கி
    உம்மைக் காக்கும் குற்றமற்ற இடத்தில்
    உம்மைச் சேர்ப்பித்திருக்கிறாள்
    எனவே, உன் கணவனுக்கு
    இனி இவ்விடத்தில் நேரக்கூடிய
    துன்பம் ஒன்றுமில்லை”
    என்றே கூறினாள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 01 – 20

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

     படத்திற்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 173

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    காவல் காடும் அகழியும்
    வளைந்த இயந்திர வில்லும்
    கரிய விரல் கொண்ட
    குரங்கு போன்ற தோற்றத்தில்
    வந்தவரைக் கடிக்கும் பொறியும்
    கல்வீசும் கவணும்
    மதில்வழி வரும் பகைவர் மீது ஊற்றச்
    சூடாக வைக்கப்பட்டிருந்த நெய்யும்
    செம்பை உருக்கும் கலன்களும்
    இரும்பைக் காய்ச்ச வைக்கப்பட்ட உலைகளும்
    கல் இட்டு வைத்துள்ள கூடைகளும்
    அகழியில் ஏறவருபவர்களைப் பிடிக்கும்
    தூண்டில் வடிவக் கருவிகளும்
    எதிரியின் கழுத்தை முறிக்கும் சங்கிலிகளும்
    ஆண்டலைப் பறவை வடிவில்
    அமைக்கப்பட்டுள்ள அடுப்புகளும்
    அம்புகளை ஏவும் அறைகளும்
    எதிர்ப்பவர் தலையைத் திருகி எறியும் பொறிகளும்
    மதில் உச்சிக்கு வருபவரின் கையைத் துளைக்கும்
    ஊசிப் பொறிகளும்
    பகைவர் கண்ணைப் பறிக்கும்
    மீன்கொத்தி போன்ற பொறிகளும்
    உடல் சிதைக்கும் பன்றிப் பொறிகளும்
    மூங்கில் போன்ற பொறிகளும்
    கதவுக்கு வலிமை சேர்க்க
    உள்வாயிலில் இடும் மரங்களும்
    கதவுக்குக் குறுக்காகக் கட்டப்பட்ட
    கணைய மரங்களும்
    எறிகோல் குத்துக்கோல் ஈட்டி
    இன்னும் சில கருவிகளும் அமைந்திருந்தன.

    நாள்தோறும் பகைவரை வென்று
    உயர்ந்த கொடிகள் அசையும்
    பலதரப்பட்ட பொறிகள் அமைந்த
    அம்மதிலின் வாயிலைக் கடந்து
    இடைக்குலப்பெண்  மாதரி
    தன் அடைக்கலத்தைப் பாதுகாத்திட வேண்டும்
    என்ற கொள்கையுடையவளாய்த்
    தன் மனையை அடைந்தாள்.

    (அடைக்கலக் காதை முற்றியது; அடுத்து வருவது கொலைக்களக் காதை)

     அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 206 – 219

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 171

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    மேலான தன் கணவன் கூறியதைப் பின்பற்றி,
    அக்குரங்கு இறந்த பின்னும் கூட
    அதன் தீய பிறவி ஒழிய வேண்டும் எனக்கருதி  Donating gold
    தானம் செய்கையில் அதற்கான ஒரு பங்கை
    ஒதுக்கி வந்தாள் அப்பெண்.

    மத்தியதேசத்தில் வாரணாசி என்ற ஊரில்
    உத்தர கௌத்தர் என்பவர்க்கு மகனாய்
    மீண்டும் பிறந்தது அக்குரங்கு.

    அப்புதல்வன்
    அழகு, அறிவு, செல்வம் இவற்றில்
    சிறந்து விளங்கினான்.
    வள்ளல்தன்மையுடன் தானங்கள்
    பலவும் செய்து வாழ்ந்தவன்
    தன் முப்பத்தியிரண்டாம் வயதில் இறந்து
    தேவர் வடிவம்தனை அடைந்தான்.

    பெரிய செல்வத்தைப் பெற்ற பயன் யாவும்
    தன்னைப் பாதுகாத்துத் தானம் செய்து வளர்த்த
    சாயலன் மனைவியினால்தான் என்பதைக்
    கருத்தில் கொண்டு,
    அந்த நன்றிக்கடனை
    உலகத்தோருக்கு அறிவுறுத்த
    ஒரு கையைக் குரங்கின் கையாகக் கொண்டு
    இவ்வானவன் பிறந்தான்’ என்று
    சாரணர் கூறினார்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 175- 191
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 170

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    சாரணர் கூறிய குரங்குக் கை வானவனது வரலாறு

    சாரணன் கூறியதாவது:

    முன்பு ஒரு காலம்
    ’எட்டி’ எனும் பட்டம் பெற்ற
    ‘சாயலன்’ எனும் வணிகன் ஒருவன் இருந்தான்
    பட்டினி இருந்து நோன்பு செய்யும் பலரும் வந்து
    தம் இல்லம் சேர்ந்து தானம் செய்ய வேண்டி
    அவன் இல்லம் துறவாது வாழ்ந்து வந்தான்

    மேலான தவத்தால் சிறப்புப் பெற்ற ஒருவனை
    இல்லறத்துணையாகிய சாயலன் மனைவி,
    தம் தீவினைகள் அழிய வேண்டி                       monkey for silambu
    ஒரு நாள் எதிர் கொண்டழைத்து
    உணவு படைத்தாள்

    அப்போது அவ்வூர் மக்கள் அலைக்கழித்ததால்
    அச்சப்பட்ட சிறுகுரங்கு ஒன்று
    அம்மனைக்குள் புகுந்தது
    அருளும் அறனும் வாய்க்கப்பெற்ற
    அம்மாதவ(ன்) அடிகளை வணங்கி,
    அவன் உண்டபின் மிஞ்சிய சோற்றையும்
    அவன் ஊற்றிய நீரையும் விரும்பி உண்டு
    தன் பசி நீங்கியது

    இன்பமடைந்த அக்குரங்கு
    அவன் முன்னே சென்று நின்று
    தன் நன்றியை அறிவிக்கும் வண்ணம்
    அவன் முகத்தை நோக்கியபடி இருந்தது

    இச்செய்கையை விரும்பிய
    பிறழாத அறக்கொள்கையுடைய அம்மாதவனும்
    சாயலன் மனைவியை நோக்கி,
    ‘இல்லக்கிழத்தி!
    இக்குரங்கினை நின் மக்களைப் போலப்
    போற்றிப் பாதுகாப்பாயாக!’ என்றுரைத்தான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 163 – 174

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
    pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 169

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    தவத்தோர் தரும் அடைக்கலப் பொருளினால் வரும் இன்பம் பற்றிக் கவுந்தி அடிகள் மாதரிக்கு உரைத்தல்

    தவத்தோர் தரும் அடைக்கலமானது
    எளிமையாகச் சிறியதாகத் தோன்றினாலும்  garden 1
    அது பேரின்பம் தரும்
    அதை நான் விவரிக்கிறேன்
    நீ கேட்பாயாக!

    தோட்டங்கள் பல உள்ள
    காவிரிப்பூம்பட்டினத்திற்குள்
    மலர்கள் விரிந்த அசோக மரத்தின்
    பொதுத்தன்மை நீங்கிய நிழலிடத்தில்
    நோன்பிருக்கும் பலரும்
    ஒன்றுசேர்ந்து அமைத்திட்ட
    ஒளிபொருந்திய காந்தக்கல்
    மேடை ஒன்று இருக்கும்
    அதன்மேல் எழுந்தருளி
    அறவுரைகள் கூறும்
    சாரணர் முன்பாக…

    வானவில் போன்ற ஒளிதரும்
    வண்ணமேனியை உடையவனாய்,
    பூமாலைகள் மணிமாலைகள் அணிந்தவனாய்,
    பொன் அணிகளும் பூண்டவனாய்,
    இவ்வுலக மக்கள் யாரும் காணாதவனாய்,
    தேவர் மட்டுமே கண்டு தொழும்
    தெய்வத்தின் வடிவம் உடையவனாய்த்
    தேவமகன் ஒருவன் வந்து நின்றான்.
    அவனுடைய ஒருபாகத்துக் கை
    கரிய விரல்களை உடைய
    குரங்கின் கை போலக் காணப்பட்டது.

    உலக நோன்பிகள் சாரணரை வணங்கி
    “இவ்விடத்தில் இத்தேவன்
    வருகை தந்தது எதற்காக?”எனக் கேட்க,
    சாரணர் தலைவனும் பின்வருமாறு கூறலானான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 149 – 162

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–

     படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 168

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

    கவுந்தி அடிகள் மாதரியிடம் கண்ணகியைப் போற்றும் வகை கூறி உரைத்தல்

    “மங்கலம் வாய்க்கப்பெற்ற
    இம்மங்கையைத்
    தூய நீரினால் நீராட்டி,
    சிவந்த கயல் போன்ற கண்களில்
    அஞ்சனம் தீட்டி,
    மணம்மிக்க இவள் கூந்தலில்
    சில மலர்களைச் சூட்டி,
    தூய புடவை உடுத்தி,
    முன்னோர் கூறிய சிறப்பனைத்தும் வாய்ந்த
    தோழியாகவும், செவிலியாகவும்,
    தாயும் ஆகி இவளைக் காப்பாயாக!

    இங்கே என்னோடு தங்கியிருந்த
    இந்த இளைய கொடி போன்ற நங்கையின்
    அழகுவாய்ந்த சிறு பாதங்களின் அடிகளை
    மண்மகளும் கண்டாள் இல்லை
    சூரியனின் கடுமையான கதிர்களின் வெப்பத்தால்
    துன்புற்று வாடிய தன் கணவன் துயர்கண்டு
    நடுங்கி வருந்தியிருக்கிறாள் இவள்;
    அது தவிரத் தன் நாவே உலர்ந்து போகும்படித்
    தான் வாடியதை ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை

    தன் கணவனுக்கு இனிய மனைவியாய் விளங்கும்
    பெண்கள் தமக்கு இன்றியமையாததாக விளங்கும்
    கற்பு நெறி தன்னை அணியாகப் பூண்டுள்ள
    இவள் சிறப்புமிக்கப் பெண்தெய்வம்!
    இவளைத் தவிர சிறப்புமிக்க
    வேறோர் பெண்தெய்வத்தை நான் கண்டதில்லை

    இத்தகைய கற்பிற் சிறந்த
    பெண்கள் வாழும் நாட்டில்
    வானம் பொய்க்காது;
    நிலத்தின் வளமும் குன்றாது;
    நீண்ட நிலமதை ஆள்கின்ற
    அரசர் தம் கொற்றமும் சிதையாது;
    இத்தகைய நல்வாக்குகளை
    நீ கேட்டதில்லையோ?” எனக்
    கவுந்தி அடிகள் மாதரியிடம் கூறினார்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 131 – 148
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
    <http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>
    pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–
    <http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>

     

    Share