நான் அறிந்த சிலம்பு – 177
மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக் காதை
ஐயையும் மாதரியும் கோவலனையும் கண்ணகியையும் பாராட்டுதல்
அரிய மறைகளில்
அரசர்க்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றக்கூடிய
வணிகர்க்கு எனக் கூறப்பட்ட முறைமைகளுள்
உணவு உண்ணும் முறைமைகள் அனைத்தையும்
முறையாக முடித்துப்
பின் உணவருந்த வந்தான் கோவலன்.
“இம்மதுரைக்கு வந்த நம்பி கோவலனும்
ஆயற்பாடியில் நல்ல உணவு உண்ணும்
யசோதை மகன்
காயாம்பு வண்ணன் கண்ணன் தானோ!
இவன் பசித்துயர் தீர்க்கும்
பலவகை வளையல்களை அணிந்த
இந்தக் கண்ணகியும்
முன்னொருகாலத்தில்
நம் குலத்தில் தோன்றிக்
காளத்தி எனும் ஆற்றிலே
தூய்மையான நீலமணி போலும்
நீல நிறம் கொண்ட
அக்கண்ணனின் துயர்தீர்த்த
குலவிளக்காம் நப்பின்னைதானோ!
இந்த அழகிய காட்சி
நம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறதே!”
என்று அவ்விருவரையும் கண்குளிரப்
பார்த்துக் கொண்டிருந்து
புகழ்ந்து மகிழ்ந்தனர்
ஐயையும் அவள் அன்னை மாதரியும்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 46 – 53