நான் அறிந்த சிலம்பு – 170
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை
சாரணர் கூறிய குரங்குக் கை வானவனது வரலாறு
சாரணன் கூறியதாவது:
முன்பு ஒரு காலம்
’எட்டி’ எனும் பட்டம் பெற்ற
‘சாயலன்’ எனும் வணிகன் ஒருவன் இருந்தான்
பட்டினி இருந்து நோன்பு செய்யும் பலரும் வந்து
தம் இல்லம் சேர்ந்து தானம் செய்ய வேண்டி
அவன் இல்லம் துறவாது வாழ்ந்து வந்தான்
மேலான தவத்தால் சிறப்புப் பெற்ற ஒருவனை
இல்லறத்துணையாகிய சாயலன் மனைவி,
தம் தீவினைகள் அழிய வேண்டி
ஒரு நாள் எதிர் கொண்டழைத்து
உணவு படைத்தாள்
அப்போது அவ்வூர் மக்கள் அலைக்கழித்ததால்
அச்சப்பட்ட சிறுகுரங்கு ஒன்று
அம்மனைக்குள் புகுந்தது
அருளும் அறனும் வாய்க்கப்பெற்ற
அம்மாதவ(ன்) அடிகளை வணங்கி,
அவன் உண்டபின் மிஞ்சிய சோற்றையும்
அவன் ஊற்றிய நீரையும் விரும்பி உண்டு
தன் பசி நீங்கியது
இன்பமடைந்த அக்குரங்கு
அவன் முன்னே சென்று நின்று
தன் நன்றியை அறிவிக்கும் வண்ணம்
அவன் முகத்தை நோக்கியபடி இருந்தது
இச்செய்கையை விரும்பிய
பிறழாத அறக்கொள்கையுடைய அம்மாதவனும்
சாயலன் மனைவியை நோக்கி,
‘இல்லக்கிழத்தி!
இக்குரங்கினை நின் மக்களைப் போலப்
போற்றிப் பாதுகாப்பாயாக!’ என்றுரைத்தான்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 163 – 174
படத்துக்கு நன்றி: கூகுள்