நான் அறிந்த சிலம்பு – 182
-மலர்சபா
மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக் காதை
பொற்கொல்லன் உரைத்த விடை
பொற்கொல்லன் கூறலானான்:
“அடியேன் அதைப்பற்றி அறியேன்;
எனினும், அரசனுக்குரிய முடி முதல் அனைத்து
அணிகலன்களை நான் நன்கு செய்வேன்;”
எனக்கூறிக் கைதொழுது நின்றான்
எமனின் தூதனாக வந்த பொற்கொல்லன்.
போற்றத்தக்க சிலம்பைத் தன்னிடம் இருந்த
பொதியிலிருந்து எடுத்தான் கோவலன்.
கோவலன் சிலம்பைக்காட்ட, கொல்லன் அதன் தகுதி பற்றிக் கூறுதல்
அந்தச் சிலம்பு தூய்மையான பொன்னால்
செய்யப் பட்டிருந்தது.
மணிகள் பதிப்பதற்கான குழிகளில்
சிறந்த மாணிக்க மணிகள் மற்றும் வைரங்கள்
வரிசையாகக் கோக்கப்பட்டிருந்தன.
அதன் உள்பக்கம் குழிவாகக்
குடையைப் போல் இருந்தது.
சித்திர நுணுக்கம் போல் வேலைப்பாடமைந்த
அந்தச் சிலம்பின் அழகையெல்லாம்
பொய் பேசுவதையே தொழிலாகக் கொண்ட
அந்தப் பொற்கொல்லன் கண்டதும்,
அரண்மனையில் முன் தான் களவாடிய
சிலம்பை ஒத்திருந்ததைக் கண்டான்.
“அரசியான கோப்பெருந்தேவிக்கு அல்லாது
இச்சிலம்பு வேறு யார்க்கும் பொருந்தாது;”
என்று கூறினான்.
வேந்தனுக்குச்சிலம்பு பற்றித் தெரிவித்து வருமளவும் தன் குடிலில் தங்கியிருக்க என்று பொற்கொல்லன் சொல்ல, கோவலன் அயலில் உள்ள தேவ கோட்டத்தின் மதில் புறத்துக்குச் செல்லுதல்
“வெற்றிச் சிறப்புப் பொருந்திய
நம் வேந்தனிடம் நான் இதைத்
தெரிவித்து வரும் வரை
நீவிர் இங்கே எம்
சிறு குடிலில் தங்கியிருப்பிர்”
எனக் கூறிச் சென்றான்.
கோவலனும் கீழ்மகனாம் அவனின்
இருப்பிடம் செல்லாமல்
அருகில் இருந்த தேவகோட்டத்தின்
மதிலுள் சென்று தங்கினான்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 113 – 126