நான் அறிந்த சிலம்பு – 179
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக் காதை
கண்ணகியின் பணிவுரை
“அறவோர்க்கு உணவளித்தல்
அந்தணர் போற்றுதல்
துறவிகளை எதிர் கொள்ளுதல்
பழங்காலம் முதல் இல்லறத்தினர் செய்துவரும்
பெருமைவாய்ந்த அறமாகிய
விருந்தினரை வரவேற்று உபசரித்தல் ஆகிய
நல்லறங்களை இழந்து
மிகவும் வருத்தமுற்றிருந்தேன்.
இங்ஙனம் துன்புற்ற என்னைக் காணப்
பெருமை வாய்ந்த உம் தாயோடு,
அனைவரிடமும் நற்பெயரும்
பொருள் தேடுவதில் மிகச் சிறந்த முயற்சியும்
மன்னனுக்கு நிகரான பெருமையுடைய
மாசாத்துவானும் ஆகிய
உம் தந்தையும் வருவர்.
நீவிர் எம்முன் இல்லாது இருக்கும் வருத்தத்தை
அவர்முன் காட்டாமல்
மறைத்துச் சிரித்து நடிப்பேன்
அதனை உணர்ந்த அவர்கள்
அன்பு கலந்த அருளுரைகள் கூறி
என் பொறுமையான நிலையை மிகவும் பாராட்டுவர்.
அவர்கள்முன் வருத்தம் காட்டாமல்
நான் புன்னகைத்தாலும், அது
உம் பிரிவால் ஏற்படும்
மனத்துன்பத்தையும் மெய்வருத்தத்தையும்
வெளிப்படுத்தி நிற்கும்
அப் பொய்யான புன்னகையைக் கண்டு
அவர்கள் மனம் வருந்திச் செல்வர்.
இவ்வாறு உம் பெற்றோர் கலங்கும் வண்ணம்
முறையற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டீர்களே!
என்னதான் ஆனாலும்,
நான் உங்கள் வார்த்தைகளை ஒருபோதும் மீறாத
உறுதியான எண்ணத்துடன் வாழ்ந்திருப்பவள்;
எனவேதான் தாங்கள் கூறியதும்
உடனே புறப்பட்டு வந்தேன்”
என்று கூறினாள் கண்ணகி.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 71 – 80
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–