தந்தை பெரியார்!
-பாவலர் கருமலைத் தமிழாழன்
விடியாத இரவுக்கு விடியல் தந்து
–விரிகதிராய் எழுந்திட்ட வீரச் சிங்கம்
மடியாதோ எனயேங்கி மாய்ந்த மக்கள்
–மனக்குமுறல் தீர்த்திட்ட ஞான வித்து
பிடியாதோ எனும்மயலில் பின்னால் நின்றோர்
— பிடறிதள்ளி முன்நிறுத்திய புரட்சி வேந்தன்
படியீதோ எனத்தன்னைத் தந்து தாழ்ந்தோர்
–பயணத்தைத் துவக்கிவைத்த பண்பின் முத்து!
நீவந்த பின்னால்தான் எங்கள் வீட்டில்
–நின்றிருந்த பழமைகளும் எரியக் கண்டோம்
நீவந்த பின்னால்தான் எங்கள் நெஞ்சில்
–நியாயத்தின் நினைவுகளும் எழும்பக் கண்டோம்
நீவந்த பின்னால்தான் இந்த நாட்டில்
–நின்றமூடம் முடமான காட்சி கண்டோம்
நீவந்த பின்னால்தான் தாழ்ந்தி ருந்தோர்
–நிமிர்ந்துதலை நடக்கின்ற துணிவு கண்டோம்!
சிந்தனையைத் தூண்டிவிட்டே அறிவால் எந்தச்
–சிறுவினையும் செய்கவென்றே முழக்க மிட்டு
இந்நிலத்தில் பகுத்தறிவுப் பாதை வெட்டி
–இருக்கின்ற சூத்திரர்க்கே உணர்வை யூட்டி
மந்தையென வாழ்ந்தோர்க்கு மதியை ஈந்து
–மறுமலர்ச்சி வரலாற்றைப் புதிதாய் ஆக்கித்
தந்திட்ட பெரியாரை நாம்ம றந்தால்
–தலைநிமிர்ந்த நாம்மீண்டும் தாழ்ந்து போவோம்!