Author: கருமலைத் தமிழாழன்

  • யாதும் ஊரே யாவரும் கேளிர்

    இரண்டாம்  உலகத் தமிழ் எழுத்தாளர்  மாநாடு

    இடம் – இராசரத்தினம் கலையரங்கம், அடையாறு, சென்னை.

    நாள் – 09 – 06 – 2017

    கவியரங்கம்

    தலைமை –  கவியரசு  ஆலந்தூர் மோகனரங்கம்

    தலைப்பு – யாதும் ஊரே யாவரும் கேளிர்

    பாடுபவர் – பாவலர் கருமலைத்தமிழாழன்

    unnamed (1)

    தமிழ்த்தாய் வாழ்த்து

    புத்தமுதாய்   இலங்குதொன்மைத்    தமிழைப்   போல

                பூமிதனில்    வேறெந்த    மொழிதாம்   உண்டோ

    முத்தமிழின்    பிரிவைப்போல்    உலகந்    தன்னில்

                முகிழ்ந்துள்ள   மொழிகளிலே    பிரிவு    உண்டோ

    நித்திலமாய்   ஐந்துவகை    இலக்க    ணத்தை

                நீள்புவியில்    பெற்றவேறு    மொழிதான்    உண்டோ

    எத்தனையோ    மொழிகளினைத்    திணித்த    போதும்

                எழில்மாறாத்    தனித்தமிழ்போல்    வேறிங்    குண்டோ !

     

    அகத்திற்கும்    புறத்திற்கும்    நெறிகள்    சொல்லும்

                அருந்தமிழைப்    போலெந்த    மொழியிங்    குண்டு

    தகவுடைய    திருக்குறள்போல்    வாழ்வைக்    காட்டும்

                தனிநூல்கள்    வெறெந்த    மொழியி    லுண்டு

    நகமகுட     விரல்கள்போல்    காப்பி   யங்கள்

                நல்லெட்டு    பத்துதொகை     எங்கே   உண்டு

    முகத்திற்கு    முன்நிற்கும்    மூக்கைப்    போலே

                முன்பிறந்த   தமிழ்க்கிணையாய்    பிறிதெங்    குண்டு !

     

     (  1  )

    ஆழ்வார்கள்    நாயன்மார்    சமணர்   யாத்த

                அரும்பாக்கள்    கொண்டமொழி;    இறைவன்   போற்றி

    வாழ்வித்த   சங்கமொழி;    கணினிக்    கேற்ற

                வளமுடைய    மொழியென்றே   உலகம்    ஏற்று

    வாழ்த்தியவிஞ்    ஞானமொழி;    சித்தர்    தந்த

                வளமருந்து   ஞானமொழி;    தமிழுக்    கீடாய்

    வாழ்மொழியில்    எம்மொழிக்கு   மண்ணி    லின்று

    வளம்கொண்ட  மொழியென்னும்  தகுதி உண்டு ! தாயே வணங்குகிறேன்  !

    தலைவர் வணக்கம்

    நூலகராய்த்   தம்வாழ்வைத்   துவக்கி   நல்ல

                நூலாக   வாழ்பவர்தாம்   மோகன   ரங்கம்

    காலத்தை    வெல்கின்ற   கவிதை  நெய்து

                கவின்வனப்பைத்   தமிழுக்குச்   சேர்க்கும்   பாவோன்

    கோலத்தில்   எளிமையொடு   அரவ   ணைப்பில்

                கோப்பெருமான்   பிசிராந்தை   நட்பின்   பண்போன்

    மூலத்தொல்   காப்பியத்து   நூற்பா   போன்று

                முத்தமிழைக்   காப்பவர்தாம்   ஆலந்   தூரார் !

     

    கவிதையொடு   நாடகங்கள்   புதினம்   என்று

                கருத்தான   படைப்புகளை   நாளும்   படைப்போன்

    நவிலுமாறு   சிறுகதைகள்   குறும்பா   என்று

                நாட்டோர்கள்   புகழுமாறு   படைத்த  ளிபோன்

    கவிதையிலே   நாடகத்தைச்   சிறுவர்க்   காக

                கனித்தமிழில்   முதன்முதலில்   வடித்த  ளித்தோன்

    புவிபோற்றும்   காவியமாய்க்   கனவுப்   பூக்கள்

                புனைந்துதமிழ்   அன்னைக்கு   அணியைச்  சேர்த்தோன் !

     

    குறுந்தொகையின்   குழந்தையென்றே   குறும்பா   பாடிக்

                குவித்திட்ட   பல்துறையின்   நூல்க   ளாலே

    நறுந்தமிழோ   நன்றாக   நிமிர்ந்து   நின்று

                நவில்கின்றாள்   தனிப்பெருமை   சேர்ந்த  தென்றே

    பெரும்பேறு   நாம்பெற்றோம்   ஆலந்   தூரின்

                பெருங்கவிஞர்   மோகனரங்கை   பெற்ற   தாலே

    வருங்காலம்    இவரடியைத்   தொடர்ந்து   சென்றால்

                வளமாகும்  தமிழ்மொழியே  வாழ்த்து  வேமே !

    (  2  )

    அவையோர் வணக்கம்

    மாநாட்டை   அமைத்தளித்த  முத்துசிதம்பர  சான்றோரை

    மாநாட்டில்  பங்கேற்ற  மாத்தமிழ்  பேராளர்

    மன்றில் கவிபாடும்  கவிஞர்கள்  அனைவரையும்  வணங்கி மகிழ்கிறேன்

     

    கவியரங்கக்  கவிதை

    ஈரமண்ணாய்    மனம்கசிந்து   வீட்டுப்   பக்கம்

    இருப்போரின்    துயரினிலும்   பங்கு   கொண்டு

    வேரடியாய்   அன்புதனில்   கிளைய    ணைத்து

                வெறுப்பின்றிக்   கூட்டமாக    ஒன்றி    ணைந்து

    தூரத்தே   அடிபட்டு   வீழ்ந்த   வர்க்கும்

                துடிதுடித்தே   ஓடிப்போய்   உதவி   செய்தும்

    பாரத்தைப்   பிறருக்காய்    சுமந்து   நின்ற

                பரிவென்னும்   மனிதநேயம்   போன   தெங்கே !

     

    சேற்றினிலே    களையெடுக்கும்   கரங்க   ளாலே

                சேர்த்தணைத்துக்   கபடுகளைக்   களைந்தெ   றிந்து

    நாற்றுகளை   நட்டுவயல்   வளர்த்தல்   போல

                நகையாலே   வஞ்சமின்றி    வளர்ந்த   நட்பால்

    வேற்றமைகள்   இல்லாத   குடும்ப   மாக

                வேறுவேறு    சாதியரும்    நெஞ்ச    மொன்றிப்

    போற்றுகின்ற    சோதரராய்ப்    பிணைந்தி    ருந்த

                போலியற்ற    மனிதநேயம்    போன   தெங்கே !

     

    காடுகளாய்    நம்முன்னோர்    வளர்த்து   வைத்துக்

                கவின்மிகுந்த    மரங்களினை    வெட்டி   வெட்டிக்

    கோடுகளாய்    மண்ணுடலைப்    பிளக்க   வைத்துக்

                கொட்டிவந்த    மழைவளத்தை    அழித்த   போல

    வாடுகின்ற   பயிர்கண்டு   வாட்டம்    கொண்ட

                வள்ளலாரின்    மனிதநேயம்    அழித்து   விட்டோம்

    பாடுபட்டு    யாதும்ஊர்   என்ற   பண்பைப்

                பாதுகாத்துத்    தந்ததனைத்    தொலைத்து   விட்டோம் !

                                                                      (  3  )

     

    பக்கத்தில்   குடியிருப்போர்   முகத்தைக்    கூடப்

                பார்க்காமல்    வாழுகின்ற   வகையைக்    கற்றோம்

    துக்கத்தில்   துடிப்போரின்   குரலைக்    கேட்டும்

                துடிக்காமல்   இயல்பாக   நடக்கக்    கற்றோம்

    நக்கலாகப்    பிறர்துயரில்   வாடக்    கண்டும்

                நகைத்தவரை     ஏளனமாய்ப்   பழிக்கக்    கற்றோம்

    வக்கிரமே    எண்ணமாகி    அடுத்தி   ருப்போர்

                வயிறதனில்   அடிப்பதையே    தோழிலாய்க்    கற்றோம் !

     

    பிறர்வாழப்    பொறுக்காத    மனத்தைப்    பெற்றோம்

                பிறர்நெஞ்சைப்    புண்ணாக்கும்    கலையில்    தேர்ந்தோம்

    பிறர்போற்றப்    பொதுநலத்தை    மேடை    மீது

                பிசிரின்றிப்    பேசிநிதம்    கள்ள   ராகப்

    பிறர்பொருளை   அபகரிக்கும்    தன்ன   லத்தால்

                பிறர்காலை    வெட்டுவதில்   வல்லவ    ரானோம்

    சிரம்தாழ்த்தும்    பழிதனுக்கே    நாணி    டாமல்

                சிறப்பாக    நடிக்கின்ற    நடிக    ரானோம் !

     

                          சாதிகளின்    பெயராலே    சங்கம்   வைத்தோம்

                சாதிக்காய்த்    தலைவரினைத்    தேர்ந்தெ   டுத்தோம்

    சாதிக்கும்    சக்தியெல்லாம்    ஊர்வ    லத்தில்

                சாதனையாய்ப்   பகையுணர்ச்சி   பெருக்கு   வித்தோம்

    வாதிக்கும்    கருத்தெல்லாம்    வாயா    லன்றி

                வாள்தடிகள்    சங்கிலியால்    மோதிக்    கொண்டோம்

    போதிக்கும்    அன்புவிட்டு   மதங்க    ளென்னும்

                போதையாலே    மதம்பிடித்தே    அலைகின்   றோம்நாம் !

     

    (  4  )

     

    அறிவியலில்    உலகமெல்லாம்    அற்பு   தங்கள்

                அரங்கேற்றக்    கலவரங்கள்    அரங்க    மேற்றி

    அறிவிலியாய்க்   குறுமனத்தில்   திகழு   கின்றோம்

                அணுப்பிளந்து   அடுத்தகோளில்    அவர்க    ளேற

    வெறியாலே   உடன்பிறந்தார்    உடல்பி   ளந்து

                வீதியெலாம்    குருதியாற்றில்   ஓடம்   விட்டோம்   

    நெறியெல்லாம்   மனிதத்தைச்   சாய்ப்ப   தென்னும்

                நேர்த்திகடன்   கோயில்முன்   செய்கின்    றோம்நாம் !

     

    வானத்தை   நாம்வில்லாக    வளைக்க   வேண்டா

                வாடுவோரின்   குரல்கேட்க   வளைந்தால்    போதும்

    தேனெடுத்துப்   பசிக்குணவாய்க்    கொடுக்க   வேண்டா

                தேறுதலாய்   நம்கரங்கள்   கொடுத்தால்   போதும்

    தானத்தில்   சிறந்ததெனும்   நிதானத்   தில்நாம்

                தமரென்றே    அனைவரையும்   அணைத்தால்   போதும்

    மானுடந்தான்   இங்குவாழும்    சமத்து  வத்தில்

                மண்பதையே    அமைதிவீசும்   நேயத்    தாலே !              

     

    பலமொழிகள்   பேசினாலும்   அன்பு   என்னும்

                பாலத்தால்   ஒருங்கிணைந்தே   வாழ்வார்  அங்கே

    கலக்கின்ற   கருத்தாலே   மொழிக   ளுக்குள்

                காழ்ப்புகளும்   உயர்வுதாழ்வு   இருக்கா  தங்கே

    இலக்கியங்கள்   மொழிமாற்றம்   செய்தே   தங்கள்

                                        இலக்கியமாய்ப்    போற்றிடுவர் !   கணினி   மூலம்

                            பலரிடத்தும்   பலமொழியில்    பேசு   கின்ற

                                        பயனாலே   மொழிச்சண்டை   இல்லை  அங்கே !

     

    (  5  )

     

    நாடுகளுக்    கிடையெந்த   தடையு   மில்லை

                நாடுசெல்ல   அனுமதியும்   தேவை   யில்லை

    நாடுகளுக்    கிடையெந்த    பகையு   மில்லை

                நட்பாலே   உதவுதற்கும்   எல்லை   யில்லை

    வாடுகின்றார்   ஒருநாட்டு   மக்க   ளென்றால்

                வளநாடு    கரங்கொடுத்தே   காத்து   நிற்கும்

    பாடுபட்ட   பலனெல்லாம்    அனைவ   ருக்கும்

                பகிர்ந்தளித்தே   வாழ்ந்திடுவர்    பொதுமை   என்றே !

     

    உயிர்பறிக்கும்    குண்டுகளைச்    செய்வோ   ரில்லை

                உயிர்மாய்த்து   நிலம்பறிக்கும்   போர்க   ளில்லை

    உயர்சக்தி   அணுக்குண்டு   அழிவிற்    கின்றி

                உயர்த்துகின்ற   ஆக்கத்தின்   வழிச   மைப்பர்

    உயரறிவால்   கண்டிடித   விஞ்ஞா   னத்தை

                உயர்வாழ்வின்   மேன்மைக்குப்  பயனாய்ச்   செய்வர்

    அயல்நாட்டை   அச்சுறுத்தும்   இராணு   வத்தின்

                அணிவகுப்பும்   போர்க்கருவி   இல்லை  அங்கே !

     

    வான்மீது   எல்லைகளை   வகுக்க   வில்லை

                வாரிதியில்   கோடுகளைப்    போட   வில்லை

    ஏன்நுழைந்தாய்   எம்நாட்டு    எல்லைக்   குள்ளே

                என்றெந்த    நாட்டினிலும்   கேட்போ   ரில்லை

    தேன்சிந்தும்   மலர்மணத்தைச்    சொந்த    மென்று

                சொல்கின்ற   முட்டாள்கள்    இல்லை   அங்கே

    கூன்முதுகில்   இருப்பதன்றி    அறிவு   தன்னில்

                கூன்விழுந்த   குறுமனத்தார்   இல்லை   அங்கே !

    (  6  )

    Share
  • தமிழிசையை உயிர்ப்பிப்போம்

    பாவலர்  கருமலைத்தமிழாழன்

     

    சிலம்புரைக்கும்    அரங்கேற்றுக்    காதை    தன்னில்

    சிறந்திருந்த    தமிழிசையைக்    கொணர்வோம்    மீண்டும்

    புலமையொடு    தமிழிசைக்கு    இலக்க   ணத்தைப்

    புகன்றிட்ட    இசைநுணுக்கம்    பஞ்ச   மரபு

    வலம்வந்த    பெருநாரை    பெருங்குரு   கென்று

    வரிசையாக   இருந்தஇசை   நூல்கள்   சொல்லும்

    நலமான    தமிழிசைதான்    செவிவி    ழுந்தால்

    நாமுணர்ந்து    தலையாட்டி    மகிழ்வோம்    அன்றோ !

     

    கீர்த்தனைகள்   எனப்புரியா    மொழியில்   பாடக்

    கீழ்மேலாய்த்    தலையாட்டும்   மாடாய்   ஆனோம்

    சீர்த்தகுரல்    கைக்கிளையும்    துத்தம்    தாரம்

    விளரியொடு    உழைஇளியும்    ஏழாய்   நின்று

    ஆர்த்தசுரம்    பன்னிரண்டும்   பாலைக்    குள்ளே

    அரும்பண்கள்   நூறோடு    மூன்றில்    தேனைச்

    சேர்த்தளிக்கும்   துளைநரம்பு    கருவி   பெய்யும்

    செம்மையான    தமிழிசையே    மயக்கும்   நெஞ்சை !

     

    புறக்கணிப்பால்    மறைந்துவரும்    தெருவின்    கூத்து

    புறமொதுக்கும்    கரகாட்டம்    மயிலின்     ஆட்டம்

    குறத்தியர்தம்    ஏலேலோ    பொம்ம   லாட்டம்

    குற்றுயிராய்ப்    போனதுபோல்    போயி   டாமல்

    சிறப்பாகத்    தமிழிசையை     இசைக்கச்    செய்தால்

    சீர்பெற்று    மீண்டுமிங்கே    தழைக்கும்   நன்றாய்

    உறவாக    உலகத்தை    இணைக்கும்    நம்மின்

    உயர்வான    தமிழிசையை    உயிர்ப்பிப்    போமே !

     

    Share
  • புதியதோர் சமுதாயம் படைப்போம்

         பாவலர்  கருமலைத்தமிழாழன்

     

    சாதிகளின்   பிரிவுயின்றி   உயர்வு   தாழ்வு

    சண்டையின்றிச்   சாத்திரத்தின்    பேத   மின்றி

    ஆதிக்க    மதங்களின்றி   வணங்கு   கின்ற

    ஆண்டவனில்   முரண்பட்ட   கருத்து   மின்றி ;

    உழைக்கின்ற   வர்க்கமென்றும்   உழைப்பைத்   தின்றே

    உடல்கொழித்த   வர்க்கமென்றும்   இருந்த   தெல்லாம்

    தழைக்கின்ற   பொதுவுடைமை   நிலையி   னாலே

    தகர்ந்ததென்ற    புதுக்குமுகம்   படைப்போம்   வாரீர் !

     

    வாக்களிக்கத்   தொகைகொடுக்கும்    வழக்க   மின்றி

    வன்முறைகள்   மிரட்டல்கள்   ஏது   மின்றி

    ஆக்கத்தை   அளிப்போரைத்   தேர்ந்தெ   டுக்கும்

    அமைதியான    தேர்தலாக   நடத்தித்  தேர்ந்த

    ஆட்சியிலே   ஊழலின்றி   அமைச்ச  ரெல்லாம்

    அதிகார   ஆர்ப்பாட்டம்   ஏது  மின்றிக்

    காட்சிக்கே   எளியவராய்   மையூட்   டின்றிக்

    கடமைசெய்யும்   புதுக்குமுகம்   படைப்போம்   வாரீர் !

     

    ஆற்றினிலும்   ஆலைகளின்   கழிவு  சேர்த்தே

    ஆகாய   வெளியினிலும்   மாசு   சேர்த்தே

    ஊற்றினையும்   தூய்மையிலா   நீராய்   மாற்றும்

    உன்மத்தச்    செயல்களின்றி   இயற்கை    காத்தே ;

    போற்றுகின்ற    இளைஞரெலாம்    வெளிநாட்   டிற்கே

    போகாமல்    தாய்நாட்டை   வளமாய்  ஆக்கி

    ஏற்றதொரு   காட்டாக   உலகின்   முன்னே

    ஏற்றுகின்ற   புதுக்குமுகம்   படைப்போம்   வாரீர் !

     

     

     

    Share
  • பாரதிவழி ஓங்கச்செய்வோம்

    பாவலர்  கருமலைத்தமிழாழன்

     

    ஆயிரமாம்   தெய்வங்கள்   உண்டாம்   என்போர்

    அறிவிலிகள் !   அறிவொன்றே    தெய்வ   மென்று

    பாயிரமாய்    வேதங்கள்    சொல்லும்   சொல்லைப்

    பகுத்தறிவாய் !   மாடனைக்கா    டனையும்    போற்றி

    மாயிருளில்    மதிமயங்கி    வீழு    வோர்கள்

    மதியிலிகள் !    அவலைநினைத்   துமியை   மெல்லும்

    வாயினைப்போல்   உள்ளவர்கள்   என்றே   தம்மின்

    வரிகளிலே   மூடத்தை    ஓட    வைத்தோன் !

     

    சாதிகளின்   வேரறுக்கத்    தன்னு   டம்பின்

    சதிநூலை    அறுத்தெறிந்தே    பூணூல்   தன்னை

    ஆதிதிரா    விடனென்னும்    கனக   லிங்க

    அருந்தோழன்    மார்பினிலே   அணிய   வைத்து

    வேதியர்கள்    பறையரென்னும்    வேறு   பாட்டை

    வெறிதன்னைப்   போக்குகின்ற   செயலைச்   செய்து

    சாதித்த   புரட்சியாளன்     இவனைப்   போல

    சரித்திரத்தில்   பெயர்சொல்ல   யாரே   உள்ளார் !

     

    தான்உண்ண   உணவின்றி    வறுமை   தன்னில்

    தவித்திட்ட   போதினிலும்   கவிதைச்   சோற்றைத்

    தேன்சுவையில்   பிறருண்ண   ஆக்கி   வைக்கத்

    தெவிட்டாமல்  நாமதனை   உண்ணு   கின்றோம்

    ஊன்வருத்தி   அவர்வடித்த   கவிதை   யெல்லாம்

    உயிர்துடிப்பை    நமக்கின்றும்   ஏற்றும்   போதும்

    ஏன் பிறர்கால்    நத்துதற்கே    ஓட   வேண்டும்

    எழுந்திடுவோம்   பாரதிவழி     ஓங்கச்    செய்வோம் !

    Share
  • பெண்கள் சுதந்திரம்

     

     

    பாவலர் கருமலைத்தமிழாழன்

     

    பெண்கள்தம்   சுதந்திரமோ  பூத்த   பூவாய்ப்

    பெருமையாகத்   தெரிந்தாலும்   தாளின்   பூவே

    கண்களெனப்   பெண்களினைச்    சொல்லு   வோரே

    கறுப்பாடி   அணிவித்துக்   குருடாய்ச்   செய்வார்

    உண்மையான   இறையென்றே   போற்றிக்   கோயில்

    உள்ளிருக்கும்    சிலையாக   வீட்டுள்   வைப்பர்

    மண்மீதில்   மாதவத்தால்   பிறந்தாள்   என்றே

    மாபெருமை   தருவதுபோல்   அடிமை   செய்வார் !

     

    உடல்முழுதும்    மறைக்கின்ற்   சுடுதார்   ஆடை

    உடுத்துதற்கும்    எதிர்ப்புதனைத்   தெரிவிப்   பார்கள்

    முடக்காமல்   தெருவினிலே    அழைத்துச்   செல்ல

    முழமெட்டு    சேலையினை    உடுத்தென்   பார்கள்

    மடமச்சம்   பயிர்ப்புநாணம்    பண்பு    நான்கில்

    மண்மகளைக்    கண்பார்க்க   வேண்டு   மென்பர்

    படபடென்று    பேசுவது   பொதுவி   டத்தில்

    பண்பாட்டுக்   கிழுக்கென்றே   ஏசு   வார்கள் !

     

    உயர்கல்வி   படித்துயர்ந்த   பதவி   தன்னில்

    உட்கார்ந்த   போதும் ! நாள்    கூலி   யாக

    வயல்களிலே    நாற்றுநட்டு    களைபி   டிங்கி

    வளைந்துடலில்   வியர்வைசிந்த    உழைத்த   போதும்

    தயக்கமின்றிப்   புகுந்தவீட்டில்    அனைவ   ருக்கும்

    தாதியாக   நாள்முழுதும்    செய்த    போதும்

    சுயமாகத்   தன்விருப்பில்    செய்வ   தற்குச்

    சுதந்திரத்தை    யார்தந்தார்    பேதை   யர்க்கே !

     

     

     

    தேர்தலிலே    நின்றுவெற்றி   பெற்ற   போதும்

    தெரிவதுவோ    கணவன்தான்   அதிகா   ரந்தான்

    போர்வையாகப்    பண்பாடு   ஒழுக்கம்    தன்னைப்

    போர்த்திநேராய்ப்    பேசுதற்கும்   உரிமை   யின்றிக்

    கூற்றுகளை     சங்கநூல்கள்    காப்பி   யங்கள்

    கூறியவர்    சுதந்திரத்தைப்    பறித்த   போல

    சீர்திருத்தம்    பகுத்தறிவு    கல்வி    என்று

    சிறப்புக்கள்    வந்தபோதும்   கானல்   நீரே !

     

    Share
  • தீவாக்கிய தொலைப்பேசி

     

     

    பாவலர் கருமலைத்தமிழாழன்

    Girl hand touching screen on modern mobile smart phone. Close-up image with shallow depth of field focus on finger.

    செல்லிடக்கை    அலைப்பேசி    என்றே    இன்று

    செப்புகின்ற   அறிவியலின்    பேசி   யாலே

    இல்லத்தில்    இருந்தபடி     உலகில்    எங்கோ

    இருப்பவரைத்   தொடர்புகொண்டு    பேசு   கின்றோம்

    செல்கின்ற     இடத்திருந்தே    வீட்டா    ரோடு

    செய்திகளைப்    பரிமாறி    மகிழு    கின்றோம்

    எல்லைகளை    நாடுகளைக்    கடந்தி   ருந்தும்

    எதிர்நின்று   பேசுதல்போல்   பேசு   கின்றோம் !

     

    எழுத்தாலே    அனுப்பிவைத்த    செய்தி   தம்மை

    ஏற்றவகை    படங்களொடு    அனுப்ப   லானோம்

    கழுத்துவலி   எடுக்கமேசை    முன்ன   மர்ந்து

    கணினியிலே    செய்கின்ற   பணியை  யெல்லாம்

    அழுத்திவிரல்    படுத்தபடி   சாய்ந்த   மர்ந்தும்

    அடுத்தஊர்க்குச்   செலும்போதும்   செய்ய   லானோம்

    பழுதின்றி   முகநூலைக்   கூடக்   கையுள்

    படமாகக்   காண்கின்ற   வசதி   பெற்றோம் !

     

    கற்பனைக்கும்    எட்டாத   அற்பு   தங்கள்

    கரத்திருக்கும்   பேசியிலே   செய்யும்   நாமோ

    நற்காலம்   காட்டுகின்ற   கடிகா   ரத்தை

    நாள்காட்டி   கணக்கியினை   துறந்து  விட்டோம்

    பற்றியெங்கும்    எடுத்துசென்று   செய்தி   யோடு

    பாடல்கேட்ட   வானொலியைத்   தொலைத்து  விட்டோம்

    நற்றமிழில்   நலம்கேட்டு   எழுதி   வந்த

    நற்கடிதப்   பழக்கத்தை   விட்டு  விட்டோம் !

     

    பக்கத்தில்   பெற்றோர்கள்   அமர்ந்தி   ருக்கப்

    பக்கத்தில்   உடன்பிறந்தோர்   அமர்ந்தி   ருக்கப்

    பக்கத்தில்   சுற்றத்தார்   அமர்ந்தி   ருக்கப்

    பக்கத்தில்   நின்றிருந்தும்   வாயால்   பேசித்

    துக்கத்தை   இன்பத்தைப்   பகிர்ந்தி   டாமல்

    தூரத்தே   யாரிடத்தோ   பேசிப்  பேசித்

    திக்கில்லா   தீவினிலே    இருத்தல்   போன்று

    திரிகின்றோம்   காதினிலே   பேசி   வைத்தே !

     

     

    Share
  • தாயும் தாரமும்

     

     

    பாவலர்  கருமலைத்தமிழாழன்

     

    அன்பின்நல்   இலக்கணமே   தாய்தான் !   பாச

                —அணைப்பிற்கு   இலக்கியமாய்த்   திகழ்ப   வள்தாய்

    தன்வயிறு   பட்டினியில்    தகிக்கும்   போதும்

                —தன்குழந்தை   பசிதீர்த்து   மகிழ்ப  வள்தாய்

    தன்பிள்ளை    நோய்தனக்குத்    தான்து   டித்துத்

                —தன்னுணவு   பத்தியத்தில்   காப்ப  வள்தாய்

    வன்மம்தீக்    கயவனென்று    தூற்றும்   போதும்

                —வாஞ்சையுடன்    திருத்துதற்கே    முயல்ப   வள்தாய் !

     

    எங்கிருந்தோ    வந்தவள்தான்    என்ற   போதும்

                —எல்லாமும்    கணவனென்றே    தன்னை    மாற்றி

    பொங்கிவரும்    தாய்வீட்டு    நினைவ    ழித்துப்

                —பொழுதெல்லாம்    புகுந்தவீட்டின்    உயர்வை   எண்ணி

    மங்கலத்தை    மனையேற்றி    மடிய   ளித்து

                —மனந்தன்னில்    கொழுநனுக்கே    இடம   ளித்து

    செங்கதிர்போல்   குலம்ஒளிரக்   குழந்தை   பெற்றுச்

                —செவ்வாழ்வை    அளிப்பவளே    மனைவி   நல்லாள் !

     

    தன்குருதி    பாலாக   ஊட்டும்   அன்னை

                —தன்னுடலால்    இன்பத்தைக்   கொடுக்கும்    தாரம்

    தன்னுடைய    மகிழ்ச்சியினை    எண்ணி    டாமல்

                —தன்குழந்தை    கணவனுக்கே    வாழ்வர்   நாளும்

    அன்பான    தாயைப்போல்    அரவ    ணைக்கும்

                —அருமையான    தாரந்தான்    அமைந்து   விட்டால்

    இன்பந்தான்    வாழ்க்கையிங்கே !   இல்லை   யென்றால்

                —இவ்வுலகே    நரகந்தான்   நொடிகள்    தோறும் !

     

     

    Share
  • தந்தை பெரியார்!

    -பாவலர் கருமலைத் தமிழாழன்

    விடியாத   இரவுக்கு   விடியல்   தந்து
                –விரிகதிராய்   எழுந்திட்ட   வீரச்   சிங்கம்
    மடியாதோ   எனயேங்கி   மாய்ந்த   மக்கள்
                –மனக்குமுறல்   தீர்த்திட்ட   ஞான   வித்து  Thanthai_Periyar
    பிடியாதோ   எனும்மயலில்   பின்னால்   நின்றோர்
               — பிடறிதள்ளி   முன்நிறுத்திய   புரட்சி   வேந்தன்
    படியீதோ   எனத்தன்னைத்   தந்து   தாழ்ந்தோர்
                –பயணத்தைத்   துவக்கிவைத்த   பண்பின்   முத்து!

    நீவந்த   பின்னால்தான்   எங்கள்   வீட்டில்
               –நின்றிருந்த   பழமைகளும்   எரியக்   கண்டோம்
    நீவந்த   பின்னால்தான்     எங்கள்   நெஞ்சில்
                –நியாயத்தின்   நினைவுகளும்   எழும்பக்   கண்டோம்
    நீவந்த   பின்னால்தான்   இந்த   நாட்டில்
                –நின்றமூடம்   முடமான   காட்சி   கண்டோம்
    நீவந்த   பின்னால்தான்   தாழ்ந்தி   ருந்தோர்
                –நிமிர்ந்துதலை   நடக்கின்ற   துணிவு     கண்டோம்!

    சிந்தனையைத்     தூண்டிவிட்டே   அறிவால்   எந்தச்
                –சிறுவினையும்     செய்கவென்றே   முழக்க   மிட்டு
    இந்நிலத்தில்   பகுத்தறிவுப்   பாதை   வெட்டி
                –இருக்கின்ற   சூத்திரர்க்கே   உணர்வை   யூட்டி
    மந்தையென   வாழ்ந்தோர்க்கு   மதியை   ஈந்து
                –மறுமலர்ச்சி   வரலாற்றைப்     புதிதாய்   ஆக்கித்
    தந்திட்ட   பெரியாரை   நாம்ம   றந்தால்
                –தலைநிமிர்ந்த   நாம்மீண்டும்   தாழ்ந்து   போவோம்!

     

    Share
  • நேரு வியந்த காமராசர்!

    -பாவலர் கருமலைத்தமிழாழன்

    பெருந்தலைவர்   காமராசர்   முதல்வ   ராகப்
    –பெருமைமிகு   தமிழ்நாட்டை   ஆண்ட   போது
    வருங்காலச்   சந்ததியை     நெஞ்சி   லெண்ணி
    –வளர்தொழில்கள்   விவசாயம்     கல்விக்   காக
    அருந்திட்டம்   பலதீட்டி   மாநி   லத்தை
    –அனைத்துவகைத்     துறைகளிலும்   முதன்மை   யாக்கித்
    திருவாக   இந்தியாவை   ஆட்சி   செய்த
    –திருமகனாம்   நேருவினை   அழைத்தார்   காண !

    மதுரையிலே   நடக்குமொரு   விழாவிற்   காக
    –மாண்புமிகு   நேருவுடன்   சென்ற   போது
    இதுவுங்கள்   ஊருக்குப்   பக்கம்   தானே
    –இன்றுங்கள்     அம்மாவைப்   பார்த்துச்   செல்வோம்
    பொதுவாழ்விற்     குயர்ந்தோனை   அளித்த   தாயின்
    –பொன்முகத்தைக்   காட்டுங்கள்   என்றே   நேரு
    வதுவையினைச்     செய்யாமல்   நாட்டிற்   குழைத்த
    –வாய்மையாளன்   காமராசைக்   கேட்டுக்   கொண்டார் !

    செல்கின்ற   வழியினிலே   வயலில்   பெண்கள்
    –சேற்றினிலே   பணிசெய்ய   வண்டி   நிறுத்தி
    எல்லோரை   வரப்பினிலே   அழைத்துச்   சென்றே
    –ஏறுவெயில்   தனில்வயலில்   உழைக்கும்   தாயை
    நல்லவராம்   காமராசர்   அழைத்துக்   காட்ட
    –நாடாளும்   நேருகண்டு   வியந்து   போனார்
    இல்லையிவர்     போலவொரு     தலைவ     ரென்றே
    –இருவரையும்   இருகரத்தால்     வணங்கி   நின்றார் !

     

     

    Share
  • தன்மானக் காமராசர்!

    -பாவலர் கருமலைத்தமிழாழன்

    பெருந்தலைவர்   காமராசர்   நாகர்     கோயில்
    –பெருந்தொகுதி   உறுப்பினராய்   நாட்டை   ஆளும்
    அருமன்றில்   இருந்தபோது     தில்லி   வந்த
    –அமெரிக்க   அதிபராக   இருந்த   நிக்சன்
    அருந்தலைவர்     காமராசர்     எளிமை     நேர்மை
    –அருந்தொண்டு   தியாகத்தைக்     கேள்வி   யுற்றுப்
    பெருமகனார்     தமைக்கண்டு     பேசு   தற்கே
    –பேரார்வ     விருப்பத்தை     எடுத்து   ரைத்தார் !

    உலகத்தின்   மிகஉயர்ந்த   பதவி   தன்னில்
    –உள்ளநிக்சன்   ஆசையினைத்     தமிழ   கத்தின்
    குலக்கொழுந்தாம்   காமராச   ரிடத்தே   கூறிக்
    –குறித்துரைப்பீர்   நேரத்தை   என்றே   கேட்க
    நிலமாளும்   பிரதமரைத்   தேர்ந்தெ   டுக்கும்
    –நிறைந்தாற்றல்   செல்வாக்கைப்     பெற்றி   ருந்த
    நிலத்தமிழன்   எனக்குந்தான்   ஆசை   ஆனால்
    –நிறைவேற்ற   நேரமில்லை   உரைப்பீர்   என்றார் !

    உடனிருந்த   தலைவரெல்லாம்   அதிர்ச்சி   யாகி
    –உறைந்திட்ட   காட்சிகண்டே   காம   ராசர்
    நடமாடும்   பேரறிஞர்   அண்ணா   தம்மை
    –நல்நிக்சன்   சந்திக்க   மறுத்தார்   அங்கே !
    இடம்தேடிச்   சென்றவரை   மதிக்கா   தவரை
    –இன்றிங்கே   சந்திக்க   மறுத்தேன்   என்றே
    திடமாக   உரைத்திட்ட   தன்மா   னத்தின்
    –திருமகன்தான்   பெருந்தலைவர்   காம   ராசர் !
     

    Share
  • பாவேந்தர் போல் நாமெழுவோம்!

    -பாவலர் கருமலைத்தமிழாழன்

    வான்கதிர்தான்   சிதறித்தூள்   பூமி   யாக
        வந்தபோதே   பிறந்தமொழி   தமிழ்தான்   என்றும்
    தேன்என்றும்   பால்என்றும்   தெவிட்டி   டாத
        தெள்ளமுதாம்   எனத்தாசன்   புகழ்ந்து   ரைத்தும்    baaradhidasan
    ஊன்உணர்வில்   கலந்தென்னை     இயக்கு   கின்ற
        உயிரென்றும்   தமழ்மொழியை   உயர்த்திச்   சொல்லக்
    கூன்மொழியாய்   ஆக்கியின்று   குனியச்   செய்தே
        கூறுகின்றோம்   செம்மொழிக்குச்     சொந்த   மென்றே !

    தமிழாய்ந்த   தமிழன்தான்   தமிழ நாட்டின்
        தலைஅமைச்சாய்   வரவேண்டும்   என்று   ரைத்த
    அமிழ்தான   கவிஞனிவன்   கருத்தை ஏற்றே
        அரியணையில்   தமிழனைநாம்   அமர்த்தி   னோமா?
    நிமிர்ந்திங்கே   தமிழர்காள்   எண்ணிப்   பார்ப்பீர்!
        நிலைகுலைந்து   தமிழ்நாடு   போவ   தெல்லாம்
    தமிழ்நாட்டில்   தமிழன்தன்   ஆட்சி   யின்றித்
        தமிழல்லார்   அமர்ந்திருக்கும்   அவலத்   தாலே !

    இருட்டறையில்   உள்ளதடா   உலகம்   சாதி
        இருக்கின்ற   தென்பானும்   இருக்கின் றானே
    உருபடுமா   இந்நாடு   என்று   ரைத்தும்
        ஊர்ஊராய்ப்   பெரியார்தாம்   சுற்றி   வந்து
    கருத்தாலே  சமத்துவத்தை   ஊட்டி   விட்டும்|
        காணுகின்றோம்   இன்னுமிங்கே   சாதிக்   கொடுமை
    அரும்புலவன்   பாவேந்தன்     சொல்லை   ஏற்றே
        அகற்றிடுவோம்     சாதிகளைப்     பொதுமை   காண்போம் !

    வேடமிட்டே   ஆரியர்கள்   சூழ்ச்சி   செய்து
        வேதத்தில்   புராணத்தில்   உலவ   விட்ட
    மூடத்தின்   மூக்கறுக்கக்   கவிதை   தன்னில்
        மூட்டிவிட்டார்   விழிப்புணர்வை   பாவேந்   தர்தாம்
    ஏடகமாம்   குயிலேட்டில்   பஞ்சாங்   கத்தை
        ஏற்றிடாமல்   பகுத்தறிவை   ஏற்றி   டென்றார்
    வீடகத்தில்   இன்னும்நாம்   முட்டா   ளாக
        விதிப்படித்தான்   நடக்குமென்றே   வீழு   கின்றோம் !

    வீட்டினிலே     தமிழில்லை   தெருக்கள்   தம்மில்
        விளம்பரப்   பலகைகளில்   தமிழே   இல்லை
    காட்சிதரும்   தொலைக்காட்சி   திரைப்ப   டங்கள்
        காண்கின்ற   செய்தித்தாள்   கல்வி   தன்னில்
    தீட்டென்றே   தமிழ்மொழியைத்   துரத்தி விட்டார்
        தீந்தமிழ்தான்   அழிந்துவிட்டால்   இனமும்   மாயும்
    மீட்டெடுக்க   எழவில்லை   என்றால்   ஞாலம்
        மீதினிலே   பெயரின்றிப்   போவோம்   நாளை !

    வீட்டிற்குள்   முடக்கிவைத்த   பெண்க   ளுக்கு
        விழிப்புணர்வைத்   தருவதுவே   கல்வி   என்று
    பாட்டினிலே   பாவேந்தர்   எழுச்சி   ஊட்டிப்
        படிப்பறிவு   பெறுவதற்கே   வழிவ   குத்தார்
    நாட்டினிலே   பெண்களின்று   அமைச்ச   ராக
        நாடுவிட்டுப்   பணியாற்றும்   அறிஞ   ராக
    காட்சிதராக்   கோள்களுக்கும்   செல்வோ   ராகக்
        காண்கின்ற   பெருமையெல்லாம்   அவர்பாட் டாலே !

    பாரதிபோல்   யாப்பினையே   சீர்தி   ருத்திப்
        பாமரர்க்கும்   புரியுமாறு   கவிதை   நெய்தோன்
    ஊரதிரக்   கருத்தினிலே   புரட்சி   ஏற்றி
        உயர்குடும்பம்   உருவாகப்   பாப்பு னைந்தோன்
    சீரழிந்த   தமிழகத்தைத்   தமிழு   ணர்வை
        சீர்செய்யக்   கனல்தெறிக்கும்   பாபொ   ழிந்தோன்
    வேரழிக்க   வந்தபிற   மொழிய   ழிக்க
        வெகுண்டெழுந்த   பாவேந்தர்   போல்நா மெழுவோம் !

     

    Share
  • பெண்ணே…நீ!

    -பாவலர் கருமலைத்தமிழாழன்

    குளிர்நிலவே   எனப்புகழும்
    குயில்மொழிக்கு   மயங்காதே
    குளிரெரிக்கப்   புறப்பட்ட
    குங்குமத்தின்   தீக்கதிர்நீ !

    மானென்னும்   புகழ்மொழியால்
    மண்ணிலுயிர்   துறக்காதே
    தேனுண்ணும்   நரிகள்தம்
    தோலுரிக்கும்   பாய்புலிநீ !

    கயலென்னும்   புகழ்மொழியால்
    கலங்கிவலை   துடிக்காதே
    புயலாகி   வலையறுக்கப்
    புறப்பட்ட   திமிங்கிலம்நீ !

    கற்பென்னும்   பெருமைக்குக்
    கல்தன்னை   அணைக்காதே
    விற்பனையின்     பொருள்மாற்ற
    வெடிக்கின்ற   கந்தகம்நீ !

    படிதாண்டாப்   பத்தினியாய்ப்
    படிக்குள்ளே   கருகாதே
    படிசமைக்கும்   ஓநாயைப்
    பதைக்கவைக்கும்   தீச்சுடர்நீ !

    தாய்மைக்கு   வித்தென்னும்
    தவிப்பினிலே     புதையாதே
    பேய்மைக்கு   மண்பிளக்கும்
    பிரளயத்தின்   விருட்சம்நீ !

     

    Share
  • வானம் உன் கைகளுக்குள்!

    -பாவலர் கருமலைத்தமிழாழன்

    பூந்தென்றல்   வீதியுலா
    புறப்பட்டு   வருவதற்கே
    ஏந்திவரும்   பல்லக்கை
    எதிர்பார்த்தா   காத்துளது ?

    காரிருளை   மாய்ப்பதற்குக்                              skytouching
    கதிரவன்தான்   காலைவர
    தேரினையா   எதிர்பார்த்துத்
    தெருமுனையில்   காத்துளது ?

    கண்களினைப்   பறிக்கின்ற
    கார்மேக   மின்னல்தான்
    மின்சாரம்   எதிர்பார்த்தா
    மின்னுதற்குக்   காத்துளது ?

    தானிறங்கி   வருவதற்குத்
    தரையிருந்து   குழாய்இணைப்பு
    வானிற்கு   வருமென்றா
    வளமழையும்   காத்துளது ?

    சாதனைகள்   புரிவதற்குச்
    சந்தர்ப்பம்     வாய்க்குமென்று
    சோதனைகள்   செய்யாமல்
    சோம்பலுடன்   இருப்பதுவோ ?

    வாய்ப்புகளோ   உனைத்தேடி
    வரவேற்பு     கொடுக்காது
    வாய்ப்புகளை   உருவாக்கு
    வானம்உன்    கைகளுக்குள் !

     

    Share
  • படிப்பதற்கே நூல்கள்!

    -பாவலர் கருமலைத்தமிழாழன்

    அடுக்கடுக்காய் நூல்களினை அடுக்கி வைத்தே
    அழகுதனைப் பார்ப்பதிலே பயன்தான் உண்டோ?
    மிடுக்கான பேழைக்குள் வரிசை யாக
    மிளிர்கின்ற படிவைத்தால் அறிவா கூடும்?                 Tamizhazhan
    எடுக்காமல் எடுப்பாக வீட்டிற் குள்ளே
    எழிலுக்காய் வைப்பதிலே மதிப்பா சேரும்?
    கொடுக்காமல் புதைக்கின்ற பணத்தைப் போன்ற
    கொடுமையன்றோ படிக்காமல் வைத்தி ருத்தல்!

    வாங்கிவந்த நூல்களினைக் கருத்துக் கேற்ப
    வகைபடுத்தித் துறைபிரித்து வைக்க வேண்டும்
    பாங்காகத் தூசிதட்டிப் பூச்சி வந்து
    பக்கங்கள் அரிக்காமல் காக்க வேண்டும்
    பூங்காவில் தேன்தேடும் தேனீ போன்றுப்
    புதுநூல்கள் கொண்டுவந்து சேர்க்க வேண்டும்
    நீங்காத அன்புகாட்டிக் காக்கும் தாயாய்
    நிறைநெஞ்சால் நாள்தோறும் பேண வேண்டும்!

    உண்பதற்கு நேரத்தை ஒதுக்கல் போல
    உரியநேரம் படிப்பதற்கும் ஒதுக்க வேண்டும்
    பண்புகளைக் குழந்தைகட்குச் சொல்லல் போன்று
    படிக்கின்ற பழக்கத்தைப் பதிக்க வேண்டும்
    எண்ணத்தை அறிவுதனைக் கூர்மை யாக்கி
    எப்போதும் துணைநிற்கும் நூல்கள் தம்மைக்
    கண்போலக் காத்துநாளும் படிக்கும் போதே
    கால்நிற்கும் துணிவுவந்து சிறக்கும் வாழ்வே !

     

    Share
  • என்ன வைத்தோம்?

    -பாவலர் கருமலைத் தமிழாழன்

    முன்னோர்கள்   தூய்மையாக   வைத்தி   ருந்த
       மூச்சிழுக்கும்   காற்றினிலே   நஞ்சைச்   சேர்த்தோம்
    முன்நின்று   காற்றிலுள்ள   அசுத்தம்   நீக்கும்
       முதலுதவி   மரங்களினை   வெட்டிச்   சாய்த்தோம்   Tamizhazhan
    பொன்கதிரை   வடிகட்டி ஒளிய   னுப்பும்
       பொற்கவச   ஓசோனை   ஓட்டை   செய்தோம்
    என்னவைத்தோம்   சந்ததிக்கே   தன்ன லத்தால்
       எல்லாமும்   கலப்படத்தால் கெடுத்து   வைத்தோம்!

    ஆயிரமாம்   ஆண்டுகளாய்   சேர்த்து   வைத்த
       அடிநீரைக்   குழாய்வழியே   காலி   செய்தோம்
    பாய்மரம்போய்   கடல்நீரில்   எண்ணெய்   குண்டால்
       பரிதவிக்க   மீன்களினைச்   சாக   டித்தோம்
    தாய்மண்ணில்   உரங்களினைப்   போட்டுப்   போட்டுத்
       தரும்விளைச்சல்   எனஉறிஞ்சிச்   சக்கை   செய்தோம்
    சேய்களுக்கே   என்னவைத்தோம்   தன்ன   லத்தால்
       செழித்திருந்த   இயற்கையினைக்  கெடுத்த   வைத்தோம்!

    அரணாக   நமைக்காத்த   காட்டை   வெற்பை
       அறுத்துடைத்தே   மழைவளத்தை   மலடு   செய்தோம்
    வரமாகப்   பெற்றவயல்   தோப்பை   வீடாய்
       வடிவமைத்து   விளைச்சலுக்கு   முடிவு   செய்தோம்
    கரமாக   உதவிவந்த   ஆற்று   நீரில்
       கழிவுசேர்த்து   நோய்பெருக்கி   முடமாய்ச்   செய்தோம்
    சிரமிழந்த   உடலாகச்   சந்த திக்கே
       சீர்இயற்கை   தனைமாய்த்தே   அழிவை   வைத்தோம்!

     

    Share