படிப்பதற்கே நூல்கள்!

-பாவலர் கருமலைத்தமிழாழன்

அடுக்கடுக்காய் நூல்களினை அடுக்கி வைத்தே
அழகுதனைப் பார்ப்பதிலே பயன்தான் உண்டோ?
மிடுக்கான பேழைக்குள் வரிசை யாக
மிளிர்கின்ற படிவைத்தால் அறிவா கூடும்?                 Tamizhazhan
எடுக்காமல் எடுப்பாக வீட்டிற் குள்ளே
எழிலுக்காய் வைப்பதிலே மதிப்பா சேரும்?
கொடுக்காமல் புதைக்கின்ற பணத்தைப் போன்ற
கொடுமையன்றோ படிக்காமல் வைத்தி ருத்தல்!

வாங்கிவந்த நூல்களினைக் கருத்துக் கேற்ப
வகைபடுத்தித் துறைபிரித்து வைக்க வேண்டும்
பாங்காகத் தூசிதட்டிப் பூச்சி வந்து
பக்கங்கள் அரிக்காமல் காக்க வேண்டும்
பூங்காவில் தேன்தேடும் தேனீ போன்றுப்
புதுநூல்கள் கொண்டுவந்து சேர்க்க வேண்டும்
நீங்காத அன்புகாட்டிக் காக்கும் தாயாய்
நிறைநெஞ்சால் நாள்தோறும் பேண வேண்டும்!

உண்பதற்கு நேரத்தை ஒதுக்கல் போல
உரியநேரம் படிப்பதற்கும் ஒதுக்க வேண்டும்
பண்புகளைக் குழந்தைகட்குச் சொல்லல் போன்று
படிக்கின்ற பழக்கத்தைப் பதிக்க வேண்டும்
எண்ணத்தை அறிவுதனைக் கூர்மை யாக்கி
எப்போதும் துணைநிற்கும் நூல்கள் தம்மைக்
கண்போலக் காத்துநாளும் படிக்கும் போதே
கால்நிற்கும் துணிவுவந்து சிறக்கும் வாழ்வே !

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *