Tag: மீனாட்சி பாலகணேஷ்

  • அளறுபட்ட மகரப்பரவை

    மீனாட்சி பாலகணேஷ்

    Kandapuranam-10

    இன்று கந்தசஷ்டி தினம். முருகப்பிரான், அன்னை பராசக்தி (வேல்நெடுங்கண்ணி) ஆசிர்வதித்து தனக்களித்த கூரிய வடிவேலினால் அரக்கர்களைக் கொன்று தேவர்களைக் காத்தான்.

    குழந்தை குமரன்; அவன் தன் சின்னஞ்சிறு கைகளால் சப்பாணி கொட்டுமாறு அன்னையும் பிறரும் வேண்டுகின்றனர். சப்பாணிப்பருவத்தின் பாடுபொருளாவன குழந்தையின் கைகளே! இங்கு குமரனின் குட்டிக்கரங்கள் எத்துணை அரும்பெரும் செயல்களைச் செய்தன என்பதனைக் காண்போமா? திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழில் காணும் ஒரு சப்பாணிப்பருவப்பாடல்.

    நெய்தல்நிலமாகிய கடற்புறத்தே அமைந்தவூர் திருப்போரூர்; அங்கு மகரமீன்களைக் கொண்ட கடல் சேறாகி விட்டது; (மகரப்பரவை அளறுபட்டது). அரக்கர்களின் மாயை நிறைந்த கிரௌஞ்சமலை பொடியாகி அதிலிருந்து செந்தூள் பொடியாகப் பறக்கின்றது. வயிரம்பாய்ந்த மலைபோன்ற யானைமுகாசுரனின் மார்பு உடைந்துபட்டது. சிங்கமுகாசுரனின் ஆயிரம் வாய்களினின்றும் பெருகிய குருதி கடலைப்போல விளங்கி அலைகளை வீசி எறிகிறது. அண்டகூடம் வரை ஒரு நெடிய மாமரம் உயர்ந்து நிற்கின்றது. சூரபத்மன்தான் இவ்வாறு மாயையால் மரமாகி நிற்கிறான். குமரன்கை வேலால் தாக்கப்பட்டு முறிந்து பிளந்து அலறி விழுகின்றான். அரக்கர்கள் தமது குடியிருப்பான மகேந்திரபுரியிலிருந்து பதறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்கள்! தேவர்கள் பெருத்த நிம்மதியுடன் தங்களது விண்ணுலகக் குடியிருப்புகளில் திரும்பக் குடியேறுகின்றனராம்.

    samhara-1

    இவ்வாறெல்லாம் நிகழும்படிக்கு முருகன் கையிலெடுத்த வேல் அன்னை அளித்த வேல். அதுஅழகும் பொலிவும் பொருந்தி ஒளிவீசும் நீண்ட இலைபோன்ற தகட்டுவடிவில் அமைந்த கூரிய நீண்ட வேலாகும். அதனைத்தான் முருகன் தன்கையிலெடுத்து நிற்கிறான்.

    ‘மகரப் பரவை யளறுபட

    மாயைத் திறமார் கிரவுஞ்ச

    வயமால் வரைசெந் தூளியெழ

    மதமா முகத்துச் சினத்தவுணன்

    அகலக் குலிச வரைதகர

    அரிமா முகன்பே ராயிரவாய்

    ……………………………………..’

    (திருப்போரூர் முருகன் பி. த.- தாலப்பருவம்- சிதம்பர அடிகள்)

    Murugan- soorapadman

    கிரவுஞ்சமலை மாயைத்திறம் கொண்ட அரக்கன். ஆகவே அதனை ‘மாயைத் திறமார் கிரவுஞ்சம்’ எனக்கூறுகிறார். இவ்வாறு நெய்தல் நிலத்தில் அக்காட்சிகள் தோன்றும்படி சூரனை வதைத்த முருகவேளின் புகழைப் பாடியமை கண்ட நாம் அடுத்து முருகன் வாழும் திருச்செந்தூரின் நெய்தல் நிலத்தின் அழகினைக் காணலாமா?

    திருச்செந்தூர் தலம் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆகவே, பகழிக்கூத்தனார் தாமியற்றிய பிள்ளைத்தமிழில் கடல்சார்ந்த நெய்தல் நிலத்தினைப் பலவிதமாகப் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களில் போற்றியுள்ளார்.

    ‘திரையெறியு மலைவாய்’ – அலைகளை வீசி எறியும் திருச்செந்தூர் (திருச்சீரலைவாய் என்பது இதன் பெயர்),

    ‘வெள்வளை தரும் தண்தரள மலைகொண்டு கொட்டு நகராதிபா’- வெண்மையான சங்குகள் ஈனும் குளிர்ச்சி பொருந்திய முத்துக்களை மலைபோல கடலலைகள் கொண்டு கொட்டும் நகருக்கு அதிபனே!’,

    ‘குரைகட லலையெறி திருநக ரதிபதி’- ஓசையிடும் கடல் அலைகளை வீசியெறியும் திருநகருக்கு அதிபதி,

    ‘அலையாழிசூழ் திருச்செந்தூர் வடிவேலன்.’

    ‘கழிதொறும் கயல்குதிக்கத் திரைவாய் முழங்கும் திருச்செந்தில் வேலவனே!’ (கழி- உப்பங்கழி- நெய்தலின் அடையாளம்) என்பன சில உதாரணங்கள்.

    முத்தப்பருவத்துப் பாடலில் கூறுகிறார்: “குமரனே! உனது அலைவாய் எனப்படும் திருச்செந்தூரில் கடலலைகள் முத்துக்களை வாரி வாரி வீசும். அலைகள் விடாது ஒலியெழுப்பும் கடலிலும், கடற்கரையிலுள்ள உப்பங்கழிகளிலும், அவற்றில் மலர்ந்துள்ள கழுநீர் மலர்களிலும், அக்கழிகளில் உண்டாகும் நீர்ச்சுழிகளிலும், கடற்கரையில் வளர்ந்துள்ள அடர்ந்த தாழைப் புதர்களிலும், இன்னும் பல இடங்களிலும் சங்குகள் வருந்திப்பெற்ற கோடிக்கணக்கான முத்துக்களைக் காணலாம். அத்தகைய வளமுடைய திருச்செந்தூரில் குடிகொண்டிருக்கும் பெருமானே! எமக்கொரு முத்தம் தந்தருளுக,” எனத்தாய் வேண்டுவதாக அமைந்த ஒரு இனிய பாடல்.

    ‘கத்துங் கடலி னெடும்படவிற்

    கழியிற் கழுநீ ரிற்சுழியிற்

    கானற் கரையிற் கரைதிகழும்

    கைதைப் பொதும்பிற் ………

    …………………………………….

    முத்தம் சொரியும் கடலலைவாய்

    முதல்வா முத்தம் தருகவே’

    (திருச்செந்தூர் முருகன் பி. த.- முத்தப்பருவம்- பகழிக்கூத்தர்)

    திருவிடைக்கழி என்றொரு சிறப்பு வாய்ந்த திருத்தலம். இதுவும் சூரசங்காரத்துடன் தொடர்புடையது. திருச்செந்தூரில் சூரபதுமனை வென்றான் குமரன். சூரனின் மகன் இரணியாட்சன் என்பவன் ஒரு மகரமீனாக இருந்துகொண்டு தேவர்களுக்குத் துன்பம் விளைவித்து வந்தான். அவன் சிறந்த சிவபக்தனுமாவான். தேவர்களின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து முருகன் இங்குவந்து இரணியாட்சனைக் கொன்றான். பின்பு அவனைக்கொன்ற பாவம் தீர ஒரு குராமரத்தடியே சிவலிங்கத்தினைப் பிரதிட்டை செய்து வழிபட்டான். சிவனும் மனமகிழ்ந்து குமரனிடம், “நீயும் நானும் ஒன்றே,” எனக்கூறினார். ஆகவே இத்தலத்தின் சிவனும் முருகனும் ஒருவரே!

    திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இந்தத் தலத்து முருகன்மீது ஒரு பிள்ளைத்தமிழை இயற்றியுள்ளார். அதிலிருந்து ஒரு செங்கீரைப்பருவப்பாடல்.

    ‘முறுவல் கொண்ட முகத்து வேர்வை முத்தைப்போல் இலங்க, பச்சைநிறங்கொண்ட பாம்பாட, எருக்கஞ்செடிகள் போன்று சூழ்ந்திருக்கும் படையோடு உன்னை எதிர்த்துப் போரிட்ட சூரபதுமன் தோல்வியடையுமாறு போரிட்ட பன்னிரு திருத்தோள்களும் அசைந்தாட, திருவிடைக்கழி முருகனே! நீ செங்கீரையாடுக!’ என வேண்டுவதாக அமைந்த பாடல்.

    ‘………………………………

    சூரனெருக்கமை கானென முற்றிச்

    சுற்றிய படையொடுசூர்

    தொலைதர மலைதரு நிலைதரு பன்னிரு

    தோளு மசைந்தாட

    …………………………………

    ஆய இடைக்கழி நேய முடைக்குகன்

    ஆடுக செங்கீரை’

    (திருவிடைக்கழி முருகன் பி. த.- செங்கீரைப்பருவம்- மீனாட்சிசுந்தரம் பிள்ளை)

    இதுபோன்று நயமிகுந்த பாடல்கள் பல முருகன் சூரபதுமனை அழித்த பெருமையைப்பாடியுள்ளன. இக்கந்தசஷ்டி தினத்தன்று முருகன் திருவடிகளில் இந்த எளிய கட்டுரையை வைத்து வணங்குகிறேன்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)

    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,

    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,

    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,

    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ************

    Share
  • சித்ரா-5 ( கடைசி பாகம்)

    (காதலின் புதியதொரு பரிமாணம்)
    மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்;
    ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்
    *****************

    தொடர்ச்சி: காட்சி- 8

    Chithra-4
    அர்ஜுனன்: ஒரு கொள்ளைக்காரர்கள் கூட்டம் சமவெளியை வந்தடைந்துள்ளது என அறிகிறேன். என் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சென்று பயந்திருக்கும் கிராமமக்களை நான் காக்க வேண்டும்.

    சித்ரா: நீங்கள் அவர்களைப்பற்றிப் பயப்பட வேண்டாம். தீர்த்த யாத்திரைக்குச் செல்லும்முன் இளவரசி சித்ரா வலிமைவாய்ந்த காவலர்களை நாட்டின் எல்லைப்புறத்து வழிகளில் நிறுத்திவிட்டே சென்றுள்ளாள்.

    அர்ஜுனன்: இருப்பினும் ஒரு சிறு பொழுதிற்காவது நான் எனது க்ஷத்திரியனுடைய கடமையைச் செய்ய அனுமதிப்பாயாக. வீணே இருக்கும் என் கைகளைச் சேரும் புதுப் புகழுடன் நான் அதனை உனக்குத் தகுதியான ஒரு தலையணையாக ஆக்குவேன்.

    சித்ரா: என் கரங்களில் சிறைப்படுத்திவைத்து நான் உங்களைச் செல்ல அனுமதிக்காவிட்டால்? நீங்கள் முரட்டுத்தனமாக என்னிடமிருந்து உங்களை விடுவித்துக் கொண்டு செல்வீர்களா? அப்படியானால் செல்லுங்கள்! ஆனால் ஒருமுறை இரண்டாக முறிந்த கொடி திரும்பச் சேராது என்பதைத் தாங்கள் அறியவேண்டும். உங்களுடைய தாகம் தணிந்துவிட்டதெனில் செல்லுங்கள். இல்லையென்றால், மகிழ்ச்சி எனும் தேவதை சலனபுத்தியுள்ளவள், யாருக்காகவும் காத்திருக்க மாட்டாள் எனத் தெரிந்து கொள்ளுங்கள். சிறிது நேரம் அமருங்கள், என் தலைவா! தங்களை அலைக்கழிக்கும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தங்கள் எண்ணத்தை யார் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது? அவள் சித்ராவா?

    அர்ஜுனன்: ஆம். சித்ரா தான். எந்தவொரு வேண்டுதல் நிறைவேறுவதற்காக அவள் தீர்த்தயாத்திரை சென்றுள்ளாள் என வியக்கிறேன். அவளுக்குத் தேவையானது என்னவாக இருக்கும்?

    சித்ரா: அவளுடைய தேவைகளா? ஏன்? அதிர்ஷ்டமற்ற அவளிடம் எப்போது, என்னதான் இருந்தது? அவளுடைய பெண் உள்ளத்தை சிறு அறையில் அடைத்திடும் அவளுடைய குணங்கள் அனைத்துமே அவளுக்குச் சிறைக்கதவுகளாகும். அவள் அறியப்படாதவள். நிறைவை அடையாதவள். அவளுடைய பெண்மையுள்ளத்துக் காதல் கிழிந்த ஆடைகளால்தான் போர்த்தப்பட்டுள்ளது. அழகு அவளுக்கு மறுக்கப்பட்டது. உற்சாகமற்ற காலைப்பொழுதினைப்போல், வெளிச்சமெல்லாம் கருமேகங்களால் மறைக்கப்பட்டு, கருங்கல் மலையின்மீது அமர்ந்திருக்கும் உருவைப்போன்றவள் அவள். அவள் வாழ்க்கையைப் பற்றி என்னிடம் கேளாதீர்கள். உங்கள் செவிகளுக்கு அது இனிமையாக இராது.

    அர்ஜுனன்: அவளைப்பற்றிய அனைத்தையும் அறிந்துகொள்ள நான் ஆவலாக இருக்கிறேன். ஒரு வினோதமான நகருக்கு இரவுநேரத்தில் வந்திருக்கும் வழிப்போக்கனைப்போல உணர்கிறேன். மாடங்கள், கோபுரங்கள், மரத்தோப்புகள் முதலியன புரியாத நிழல்போலக் காட்சியளிக்கின்றன; உறக்கத்தின் அமைதியிடையே கடலின் மெல்லிய புலம்பல் கேட்கிறது. இந்த வழிப்போக்கனும் ஆச்சரியமான அதிசயங்களைக் காட்டும் விடியலுக்காகக் காத்திருக்கிறான். ஓ! எனக்கு அவளுடைய கதையைக் கூறுவாய்!

    சித்ரா: கூறுவதற்கு இன்னும் என்ன இருக்கிறது?

    அர்ஜுனன்: நான் என் மனக்கண்ணில் அவளைக் காண்கிறேன்- ஒரு வெண்ணிறப் புரவியின் மீதமர்ந்து, பெருமிதத்துடன் தனது இடதுகையில் அதன் கடிவாளங்களைப் பிடித்துக்கொண்டும், வலதுகரத்தில் வில்லினை ஏந்தியபடியும், வெற்றிதேவதை ஒருத்தி தன்னைச் சுற்றிலும் நம்பிக்கையைப் பரப்பிச் செல்வதனைக் காண்கிறேன். மிகுந்த கவனத்துடன் உள்ள தாய்ச்சிங்கத்தைப்போல அவள் தனது குட்டிகளைக் கொடூரமான அன்பினால் பாதுகாக்கிறாள். அணிகளால் அலங்கரிக்கப்படாத பெண்ணின் கரங்கள், தளைகளற்ற பலத்துடன் இருப்பின் அதுவே அவளுக்கு அழகாகும். நீண்ட குளிர்காலத்து உறக்கத்திலிருந்து விழித்தெழும் பாம்பினைப்போல் எனது உள்ளம் அமைதியற்று இருக்கின்றது. வா, இரட்டை ஒளிவளையங்கள் விண்வெளியில் பறந்துசெல்வது போல அருகருகே நாமிருவரும் விரையும் புரவிகளில் அமர்ந்து வேகமாகச் செல்லலாம். இந்த மயக்கமான பசும் சிறையிலிருந்து, குளிர்ந்த, உற்சாகமற்ற, அடர்ந்த, வாசமிகுந்த, மூச்சையடைக்கும் தன்மைகொண்ட இவ்விடத்திலிருந்து சென்றுவிடலாம்.

    சித்ரா: அர்ஜுனா, உண்மையாகச் சொல்லுங்கள், இப்போது எனது இந்தக் காமமூட்டும் மென்மையை நான் ஏதோவொரு மாயத்தால் உதறித்தள்ளிவிட்டு, உலகத்தின் கரடுமுரடான ஆரோக்கியமான பிடியிலிருந்து சுருங்கும் சிறியமலர் போல வாடி உதிர்ந்து, கடன்வாங்கிய ஆடைகளைப்போல எனது உடலிலிருந்து (மென்மையான இப்பெண்மையை) கழற்றி எறிந்துவிட்டாலும், உங்களால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியுமா? நான் இயலாமையை வெளிப்படுத்தும் செய்கைகளை நிராகரித்து நேராகவும் வலிமையான உள்ளத்துடனும் நிமிர்ந்து, எனது சிரத்தை மலைமீதுள்ள ஒரு நெடுமரம் போல உயர்த்திக்கொண்டு நின்றும், ஒரு மெல்லிய கொடியைப்போல புழுதியில் தவழாமலும் இருந்தால், ஒரு ஆணின் கண்களுக்கு நான் விருப்பமுள்ளவளாக இருப்பேனா? இல்லை, இல்லை, உங்களால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாது. நான் என்னை இந்த நளினமான பெண்மை விரும்பும் நிலையற்ற இளமையின் பொருட்களால் சூழ்ந்துகொண்டு உங்களுக்காகப் பொறுமையாகக் காத்திருப்பேன். உங்கள் விருப்பப்படி நீங்கள் திரும்ப வரும்போது, இந்த எனது அழகிய உடல் எனும் கோப்பையில் புன்னகை ததும்ப இன்பம் எனும் மதுவை நிரப்பித் தங்களுக்கு வழங்குவேன். இந்த மது தங்களுக்கு நிறைவைத்தந்து சலிப்பினையும் தரும்போது தாங்கள் விளையாடவோ, வேலை செய்யவோ வெளியே செல்லலாம். நான் முதுமையை அடைந்து தளர்ச்சியுறும்போது, நன்றியறிதலுடன் எனக்கு அளிக்கப்படும் வாழ்வினை ஏற்றுக்கொண்டு எனக்காக ஒதுக்கப்பட்ட ஒரு ஓரமாக ஒதுங்குவேன். இரவின் காதல்துணை பகலில் தங்களுக்கு உதவியாளாக இருந்தால் உங்களுடைய வீர உள்ளத்திற்கு அது மகிழ்ச்சியைத் தருமா? இடதுகையானது பெருமைவாய்ந்த வலதுகரத்தின் சுமையைப் பகிர்ந்துகொள்ளப் பழகிக்கொண்டால் அது உங்களுக்கு சம்மதமா?

    அர்ஜுனன்: நான் உன்னைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலாதவனாக இருக்கிறேன். ஒரு தங்கச்சிலைக்குள் ஒளிந்திருக்கும் தேவதைபோல நீ இருக்கிறாய். என்னால் உன்னைத்தொடவோ, உனது விலைமதிப்பற்ற பரிசுகளுக்கு ஈடுசெய்யவோ முடியவில்லை. ஆகவே எனது காதல் முழுமையடையாமல் உள்ளது. சில பொழுதுகளில் புரிந்துகொள்ள முடியாத உனது சோகமான பார்வை, உன்னை நீயே பரிகசித்துக் கொள்ளும் விளையாட்டுத்தனமான சொற்கள், இவை எனக்கு நீ உனது மென்மையான தேகத்தைப் பிளந்து வெளிப்பட முயல்வதனையும் உன்னைத்தகிக்கும் ஒரு புனிதமான நெருப்பெனும் வலியிலிருந்து புன்னகையோடு நீ விடுபட முயல்வதனையும் கீற்றுகளான காட்சிகளாக எனக்கு அறிவிக்கின்றன. உண்மையின் முதல் தோற்றம் மாயைதான். அவள், அந்த மாயை, தனது காதலனை நோக்கிப் பொய்த்தோற்றத்தோடு செல்கிறாள். ஆனால் சரியான சமயம் வாய்க்கும்போது தனது அணிமணிகளையும், முகத்திரையையும் களைந்தெறிந்து விட்டு நிர்வாணமான பெருந்தன்மையில் காட்சியளிக்கிறாள். உண்மையின் எளிய வடிவமான முடிவான உன்னை அடைய நான் தேடுகிறேன். ஏன் இந்தக் கண்ணீர், என்னுயிரே? முகத்தை ஏன் கரங்களால் மூடிக்கொள்கிறாய்? நான் உன்னை வருத்தப்படுத்தி விட்டேனா, என் அன்பே? நான் கூறியதனையெல்லாம் மறந்துவிடு. இப்போதைய பொழுதில் நான் திருப்தியாக இருப்பேன். ஒரு மர்மமான பறவை இருளிலுள்ள தன் கூட்டிலிருந்து இனிய இசையுடன் புறப்பட்டு வருவதனைப்போல் ஒவ்வொரு அழகிய பொழுதும் என்னிடம் வரட்டும். எப்பொழுதும் இதனை உணர்ந்து கொள்ளும் எல்லையில் நான் இருந்துகொண்டு எனது நாட்களை முடிவுக்குக் கொண்டுவருவேன்.

    காட்சி- 9

    சித்ரா:

    (போர்த்து மூடியவண்ணம்) அன்பரே, கோப்பையின் கடைசித்துளிவரை பருகிவிட்டீர்களா? இதுதான், உண்மையாக, முடிவா? இல்லை, எல்லாம் முடிந்துவிட்டாலும் எதாவது மிச்சமிருக்கும்; அதுவே நான் தங்கள் காலடியில் சமர்ப்பிக்கும் கடைசி அர்ப்பணம்.

    என் இதயத் தெய்வமான உங்களை வழிபட சுவர்க்கத்தின் பூந்தோட்டத்திலிருந்து ஈடிணையற்ற அழகுடைய மலர்களைக் கொண்டுவந்தேன். சடங்குகள் முடிவுற்றதெனில், மலர்கள் வாடி விட்டால், அவற்றைக் கோவிலிலிருந்து வெளியே எறிந்து விடுகிறேன். (போர்வையை விலக்கி அவளுடைய உண்மையான ஆணின் உடையில் காட்சியளிக்கிறாள்.) இப்போது உங்களுடைய பக்தனைக் கருணை நிறைந்த கண்களால் காணுங்கள்.

    நான் உங்களை வழிபட்ட மலர்களைப்போன்று நிறைவான அழகு உடையவளல்ல. என்னிடம் பலவிதமான குறைகள் உள்ளன. உலகப்பாதையில் நான் ஒரு தேசாந்திரி, எனது உடைகள் அழுக்கானவை, எனது பாதங்கள் முள்தைத்து ரத்தம் கசிகின்றன. சில பொழுதுக்கே உண்டான பூவைப்போன்ற அழகை நான் எங்கிருந்து பெறுவேன். நான் பெருமையுடன் தங்களுக்குக் கொடுக்க வந்துள்ளது ஒரு பெண்ணின் இதயத்தினை மட்டுமே! இதில் ஒரு சாமானியப்பெண்ணின் வலிகளும், இன்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன; நம்பிக்கையும், பயங்களும், அவமானங்களும் இணைந்துள்ளன; இங்குதான் காதல் பீறிட்டெழுந்து தடுமாறிக்கொண்டு நித்தியமான வாழ்க்கையை நோக்கிச் செல்கிறது. இதனுள் தான் கௌரவமான உயர்வான பூரணமற்ற தன்மை இருக்கிறது. பூவாலாகிய பூசனை முடிந்துவிட்டால், என் தலைவனே, இனி வரப்போகும் நாட்களுக்கு என்னைத் தங்கள் அடிமையாகக் கொள்ளுங்கள்.

    நான்தான் சித்ரா, அரசமகள். ஒருநாள் சிவனின் கோவிலுக்கு ஒரு பெண் அணிமணிகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டு உங்களிடம் வந்தது ஒருவேளை உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த நாணம்கெட்ட பெண் உங்களிடன் ஒரு ஆணைப்போல் காதல்புரிய வந்தாள். நீங்கள் அவளை மறுத்தீர்கள்; நீங்கள் செய்தது நன்றே. என் தலைவா, நானே அந்தப்பெண். அவள் என்னைப்போல வேடம் தரித்தவள். பின் கடவுள்களின் வரத்தால் நான் ஓராண்டிற்கு ஒரு மானிட வடிவு பெறக்கூடிய பிரகாசமான வடிவைப் பெற்று, என் தலைவனின் உள்ளத்தை அந்தப் பொய்ம்மையின் கனத்தால் களைப்படையச் செய்தேன். நிச்சயமாக நான் அந்தப் பெண்ணல்ல.

    நானே சித்ரா. வழிபட வேண்டிய தேவதையல்ல, இருப்பினும் பரிதாபப்பட்டு ஒதுக்க வேண்டிய ஒரு பூச்சியைப் போன்ற பொருளுமல்ல. நீங்கள் என்னை அபாயமும் வீரமும் நிறைந்த உங்கள் பயணத்திலும் துணையாகக் கொள்வீர்களாயின், என்னைத் தங்களுடைய பெரும் கடமைகளில் பங்கெடுக்க அனுமதிப்பீர்களாயின், அப்போது எனது உண்மை வடிவினை அறிந்து கொள்வீர்கள். எனது கருவில் வளர்ந்து கொண்டிருக்கும் உங்கள் குழந்தை, மகனாகப் பிறந்தால், நானே அவனை இரண்டாவது அர்ஜுனனாக வளர்ப்பேன்; காலம் வரும்போது உங்களிடம் அனுப்பி வைப்பேன்; கடைசியில் நீங்கள் என்னை உண்மையாக அறிந்து கொள்வீர்கள். இன்று நான் தங்களுக்குத் தரக்கூடியது அரசனின் மகளான சித்ராவை மட்டுமே!

    அர்ஜுனன்: அன்பே, எனது வாழ்க்கை முழுமை அடைந்தது.

    {நிறைந்தது}

    Share
  • சித்ரா – 4

                 (காதலின் புதியதொரு பரிமாணம்)

                மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்;

    ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்

                                 *****************

                               தொடர்ச்சி: காட்சி- 5

                வசந்தன்: உன் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை, நண்பா! எனக்குக் களைப்பாக இருக்கிறது. உன்னால் மூட்டப்பட்ட இந்த நெருப்பினைத் தொடர்ந்து எரிய வைப்பதென்பது பெரும் சோதனையாக உள்ளது. உறக்கம் என் கண்களைத் தழுவுகிறது, கையிலுள்ள விசிறி தவறி விழுகின்றது, ஆறிப்போன சாம்பல் தீயின் ஒளியை மழுங்கவைக்கின்றது. நான் திடுக்கிட்டு விழித்துக்கொண்டு அணைந்துகொண்டிருக்கும் தீயை மறுபடியும் காப்பாற்ற முயல்கிறேன். நீண்ட நேரம் இதை என்னால் இனிச் செய்ய முடியாது!

             மதனன்: நீ குழந்தையைப்போல் சலனபுத்தியுடையவன் என்று எனக்குத்தெரியுமே! சொர்க்கத்திலும் பூமியிலும் உன்னுடைய விளையாட்டில் பொறுமை இழந்து விடுபவன் நீ! மிகுந்த நாட்களைச் செலவிட்டுப் பொறுமையாக எல்லா விஷயங்களையும் பார்த்துப்பார்த்து நீ செய்வனவற்றை, ஒரே நாழிகையில் சிறிதும் வருத்தமின்றி உடைத்தெறிகிறாய். இந்த நம்முடைய வேலை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. களிப்பின் சிறகுகளைக்கொண்ட நாட்கள் விரைந்தோடும்; ஆண்டும் அதன் முடிவினை எட்டும்போது எல்லையற்ற ஆனந்தத்தில் மயங்கிக்கிடக்கும்.

                காட்சி- 6

                அர்ஜுனன்: நான் காலையில் எழுந்ததும் எனது கனவுகள் உருவாக்கி வடித்தெடுத்த ஒரு மாணிக்கத்தைக் கண்டேன். அதனைப் பாதுகாக்க என்னிடம் ஒரு பேழையுமில்லை, அதனைப் பதித்து வைக்க ஒரு மணிமகுடமுமில்லை, அதனைத் தொங்கவிட ஒரு சங்கிலியுமில்லை, அதனைத் தூக்கியெறிய மனமுமில்லை. க்ஷத்திரியனான எனது வலதுகரம் வேலையின்றி அதனைப் பிடித்துக்கொண்டு தனது கடமைகளை மறந்திருக்கிறது.

                [சித்ரா உள்ளே நுழைகிறாள்]

                சித்ரா: தங்கள் எண்ணங்களைக் கூறுங்கள் ஐயா!
    ர்ஜுனன்: இன்று என் சிந்தனை வேட்டையாடப்போவதில் ஈடுபட்டுள்ளது. எப்படி இந்த மழை தாரையாகப் பெய்து ஆக்ரோஷமாக மலைப்பிரதேசத்தை அடித்துத் துவைக்கின்றதெனப்பார்! மேகங்களின் கருநிழல் கானகத்தின் மீது கவிந்திருக்கிறது; பெருகிவரும் வெள்ளம், பொறுப்பற்ற இளைஞனைப்போல் எல்லாத் தடைகளையும் உடைத்துக்கொண்டு பரிகசித்துச் சிரிப்பதனைக் காண்பாய்! இத்தகைய மழைநாட்களில் நாங்கள் ஐந்து சகோதரர்களும் ‘சித்ரகா’ கானகத்திற்குச் சென்று வனவிலங்குகளைத் துரத்துவோம். அவை இன்பமான நாட்கள்; எங்கள் உள்ளங்கள் மேகங்கள் முழக்கும் மத்தள ஒலிக்கேற்ப நடனமாடும். கானகம் முழுதிலும் மயில்களின் கூச்சல் எதிரொலிக்கும். மழைவிழும் சப்தத்திலும், அருவிநீரின் ஓசையிலும், தைரியமில்லாத மான்கள் நாங்கள் அவற்றினை நெருங்கிவரும் காலடி ஓசையைக் கேட்க முடியாது. சிறுத்தைகளின் கால்தடங்கள் ஈரமான மண்ணில் பதிந்து அவைகளின் இருப்பிடத்தை வெளிக்காட்டிக் கொடுத்துவிடும். எங்கள் வேட்டையாடும் கேளிக்கைகள் முடிந்தபின், கட்டவிழ்ந்து கரைபுரண்டோடும் புனல்களில் நீந்திச்சென்று வீட்டை அடைய நாங்கள் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக்கொள்வோம். அந்த அமைதியற்ற தன்மை என்னை ஆட்கொண்டுள்ளது. நான் வேட்டையாடச் செல்ல ஏங்குகிறேன்.

                சித்ரா: முதலில் தாங்கள் இப்போது தொடரும்Chitrangadha-1 இரையை வீழ்த்துங்கள். தாங்கள் தேடும் மாயமானை வீழ்த்த வேண்டியது அவசியம் தான் என எண்ணுகிறீர்களா? இல்லை, இன்னும் இல்லை. ஒரு கனவுபோன்ற அதனைத் தாங்கள் மிக நெருங்கும்போது அது தங்களை விட்டோடுகின்றது. இந்த பயித்தியக்கார மழை, காற்றினைத் துரத்தி, அதனின்றும் ஓர் ஆயிரம் அம்புகளை எய்வதனைப் பாருங்கள். இருப்பினும் அதனை யாராலும் பிடிக்க முடியாமலும் வெல்லமுடியாமலும் இருக்கிறது. நமது விளையாட்டும் அத்தகையதே, அன்பே! விரையும் அதனை நீங்கள் உங்கள் கரத்திலுள்ள எல்லா அம்புகளையும் எய்து, விடாது துரத்துகிறீர்கள்! இருப்பினும் அந்த மாயமான் எப்போதும் யாராலும் தொடமுடியாமல் ஓடிக்கொண்டுள்ளது.

                அர்ஜுனன்: என் அன்பே, அன்பான உள்ளங்கள் உனது வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வீடு உனக்கு இல்லையா? உனது மென்மையான பணிவிடைகளால் இனிமை நிரம்பச் செய்த அந்த வீடு, நீ அதனை விட்டு வெளியேறியதும் களையிழந்து போயிருக்குமே?

                சித்ரா: எதற்காக இந்தக் கேள்விகள்? நமது எல்லையற்ற இன்பத் தருணங்கள் முடிவுற்று விட்டனவா? தற்போது தங்கள் கண்முன் காணும் என்னைத்தவிர நான் வேறொன்றுமில்லை என்பது தங்களுக்குத் தெரியுமா? எனக்கு இதனைத்தவிர வேறொரு கற்பனைத் தோற்றம் கிடையாது. கிம்சுகா மலரின் இதழ் நுனியில் தொங்கும் பனிநீருக்கு பெயரும் இடமும் கிடையாது. அது எந்தக் கேள்விக்கும் விடையளிப்பதில்லை. நீர் காதலிக்கும் மங்கையும் அந்தப் பனிநீர்த்துளி போன்றவளே!

                அர்ஜுனன்: அவளுக்கு இந்த உலகுடன் தொடர்பு ஏதும் கிடையாதா? ஒரு விளையாட்டுத்தனமான கடவுளின் பொறுப்பற்ற செய்கையினால் சுவர்க்கத்திலிருந்து விழுந்துவிட்ட ஒரு துகள்தானா அவள்?

                சித்ரா: ஆமாம்.

                அர்ஜுனன்: ஆ! அதனால்தான் நான் எப்போதும் உன்னை இழந்துவிடக் கூடிய நிலையில் இருக்கிறேன். எனது உள்ளம் நிறைவு அடையவில்லை, என் சிந்தையில் நிம்மதி இல்லை. அடைய இயலாதவளே, என்னருகே நெருங்கி வா! பெயர், வீடு, பெற்றோர் எனும் தளைகளுக்குள் உன்னை அர்ப்பணிப்பாயாக. எனது இதயம் உன்னை எல்லாப் பக்கங்களிலிருந்தும் உணர்ந்து, உன்னுடன் அமைதியான, அன்பின் பாதுகாப்பு நிறைந்த வாழ்க்கையை வாழட்டும்.

                சித்ரா: மேகங்களின் நிறங்களையும், அலைகளின் நடனத்தையும், மலர்களின் வாசனையையும் பிடித்து நிறுத்தும் இந்த வீண்முயற்சி எதற்காக?

                அர்ஜுனன்: எனது தலைவியே! காதலை உனது வெற்றுமொழிகளால் அமைதிப்படுத்த முயலாதே! எனக்குப் பற்றிக்கொள்ள எதையாவது கொடு; இன்பத்தைவிட நீடிப்பதாகவும், துயரத்திலும் பொறுத்துக்கொள்ளக் கூடியதாகவும் அது இருக்கட்டும்.

              சித்ரா: எனது வீரத்தலைவரே, ஆண்டு முடியவில்லை, ஆயினும் அதற்குள் நீங்கள் சலித்து விட்டீர்களா? ஒரு மலரின் ஆயுளைக் குறைவாக வைத்த ஆண்டவனின் செய்கையை நான் இப்போது புரிந்து கொண்டேன். எனது இந்த உடல் வசந்தகாலத்து மலர்களுடன் உலர்ந்து இறந்து போயிருந்தால் அது கட்டாயம் மரியாதையுடன் இறந்திருக்கும். இருப்பினும் அதன் நாட்கள் எண்ணப்பட்டு உள்ளன, அன்பே! அதனை விடாது, தேன் வறண்டுபோகும்வரை சுவையுங்கள். வேனிற்காலத்து மலர்கள் வாடி மண்ணில்வீழ்ந்து இறந்தபின் அதனைத் தேடிவரும் வண்டினைப்போலாகாமல் உங்களுடய யாசகனின் இதயம் திரும்பத்திரும்ப தணியாத ஆசையுடன் வேண்டும்வரை விடாது எடுத்து அனுபவியுங்கள்.

                காட்சி- 7

                மதனன்: இந்த இரவே உந்தன் கடைசி இரவு.

                வசந்தன்: நாளை உனது உடலின் வனப்பு வசந்தகாலத்துக் குறைவற்ற பொக்கிஷத்தினுள் சென்றடையும்; அர்ஜுனனின் முத்தங்களின் நினைவிலிருந்து அழிக்கப்பட்ட உனது இதழ்களின் அழகான சிவப்புநிறம் புதியதான ஒரு ஜோடி அசோக இலைத்தளிர்களாக முகிழ்க்கும்; மின்னலைப்போலும் உன் மேனிவண்ணம் திரும்பவும் ஓராயிரம் மல்லிகை மலர்களாகப் பிறவியெடுக்கும்.

                சித்ரா: கடவுள்களே! எனக்கு இந்த வரத்தை மட்டும் அளியுங்கள்! அணையப்போகும் தீச்சுடரின் கடைசிச் சுடரொளி போல இன்றிரவு மட்டும் எனது அழகு அதன் கடைசி நேரத்தில் மிகுதியாக ஒளிரட்டும்.

                மதனன்: உனது விருப்பம் நிறைவேறும்.

                காட்சி- 8

                கிராம மக்கள்: யார் நம்மை இப்போது காப்பாற்றுவார்கள்?

                அர்ஜுனன்: ஏன், என்ன தீங்கு உங்களை இப்போது அச்சுறுத்துகின்றது?

                கிராம மக்கள்: மலையிலிருந்து பெருகிவரும் வெள்ளம்போல, கொள்ளைக்காரர்கள் வடதிசையிலுள்ள மலைகளிலிருந்து நமது கிராமத்தை நோக்கி அதனை கொள்ளையிட்டு அழிக்க வந்துகொண்டிருக்கிறார்கள்.

                அர்ஜுனன்: இந்த நாட்டில் உங்களைக் காக்க யாருமில்லையா?

                கிராம மக்கள்: கொடுமைக்காரர்கள் அனைவருக்கும் இளவரசி சித்ரா ஒரு அச்சுறுத்தலாக இருந்தாள். அவள் இந்த நாட்டில் இருந்தபோது நாங்கள் வேறொன்றைப்பற்றிய பயமும் இல்லாமல், இயற்கையாக நிகழும் மரணமொன்றையே பயந்திருந்தோம். அவள் இப்போது தீர்த்தயாத்திரை சென்றிருப்பதால், யாருக்கும் அவளை எங்குபோய்த் தேடுவதெனத் தெரியவில்லை.

                அர்ஜுனன்: உங்கள் நாட்டின் காவலன் ஒரு பெண்ணா?

                கிராம மக்கள்: ஆம்; எங்களுக்குத் தாயும் தந்தையும் அவள் ஒருவளே!

                [அனைவரும் அங்கிருந்து வெளியேறுகிறார்கள்]

                [சித்ரா நுழைகிறாள்]

                சித்ரா: ஏன் தனியாக அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்?

                அர்ஜுனன்: இளவரசி சித்ரா எப்படிப்பட்ட பெண்ணாக இருப்பாள் எனக் கற்பனை செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அவளைப்பற்றிய பலவிதமான கதைகளை பல மனிதர்கள் கூறக் கேட்கிறேன்.

                சித்ரா: ஆ! ஆனால் அவள் ஒன்றும் அழகியல்ல. எனது கருமையான கொல்லும் விழிகளைப்போல் அவள் கண்கள் ஒன்றும் அழகானதல்ல. அவளால் எந்தக் குறியையும் நோக்கி அம்பெய்ய முடியும்; ஆனால் தனது காதலனின் இதயத்தை விழியெனும் அம்பால் துளைக்க இயலாது.

                அர்ஜுனன்: அவள் வீரத்தில் ஆண்மகனாகவும், இளகிய மனம்கொண்ட பெண்ணாகவும் உள்ளவள் என்கின்றனர்.

                சித்ரா: அது உண்மையிலும் ஒரு துரதிர்ஷ்டமே! ஒருபெண், பெண்ணாக மட்டுமே இருக்கும்போது தனது புன்சிரிப்பாலும், அழுகையாலும், பணிவிடைகளாலும் இன்னும் அன்புப்பிணைப்பான தழுவல்களாலும் தன்னை ஆண்மகனின் இதயத்தைச்சுற்றி பின்னிப் பிணைத்துக் கொள்கிறாள்: அப்போதுதான் அவள் மகிழ்ச்சியடைகிறாள். கல்வியாலும் தனது மற்ற சாதனைகளாலும் அவளுக்கு என்ன பிரயோசனம்?

                நேற்று மட்டும் நீர் அவளை காட்டுப்பாதையிலுள்ள சிவன்கோவிலின் முற்றத்தில் பார்த்திருந்தால் இன்னொருமுறை அவளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் சென்றிருப்பீர்கள். ஒரு பெண்ணிடம் ஆண்மையின் வலிமையைத் தேடும் உங்களுக்கு, பெண்மையின் அழகில் சலிப்பு ஏற்பட்டு விட்டதா என்ன? அருவிநீரால் நனைந்த பசிய இலைகளால் குகையிலுள்ள நமது மதியப் படுக்கையை நான் இரவுபோல இருளாகச் செய்துவைத்திருக்கிறேன். அங்கு கருநிற ஈரக்கற்களில் படர்ந்திருக்கும் மென்மையான பச்சைநிறப் பாசிகள் உமது இமைகளை முத்தமிட்டு உறங்கவைக்கும். நான் உங்களை அங்கே அழைத்துச் செல்கிறேன்.

                அர்ஜுனன்: இன்று வேண்டாம், அன்பே!

                சித்ரா: ஏன் இன்று வேண்டாம்?

    [தொடரும்]

    Share
  • குறிஞ்சிவாழ் பசுமா மயிலா!

    -மீனாட்சி பாலகணேஷ்

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தமிழுக்கே உரிய ஐவகை நிலங்களின்  செழிப்பையும் அழகையும் புகழ்ந்து இயற்றப்பட்ட பல பாடல்களை அனைத்துப் பருவங்களிலும் இயற்றிய புலவர்களின் கற்பனைக்கேற்பக் கொண்டமைந்து விளங்குகின்றன. இலக்கியச் சுவையையும் மேம்படுத்துகின்றன. பாட்டுடைத்தலைவன் அல்லது தலைவியின் நாட்டின் வளம் இந்த ஐவகை நிலங்களின் செழிப்பாலும் உணரப்படும்.

    முருகப்பெருமான் மீதான பிள்ளைத்தமிழ் நூல்களில் இந்த நயங்கள் மிகச்சிறப்பாகப் பாடப்படும். ஏனெனில் குறிஞ்சிநிலத்திற்குக் கடவுள் குமரப்பெருமானல்லவா?

    இந்தவரிசையில் நாம் முதலில் காண்பது திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்றினையே! திருச்செந்தூரானது கடல்சார்ந்த நெய்தல் நிலப்பகுதியாயினும் குன்றுதோறுமுறைபவனாகிய குமரப்பெருமானின் குறிஞ்சிமலை வளத்தையும் பாடுதல்தானே முறைமை?

    பகழிக்கூத்தர் விளக்கும் ‘மலையும் மலைசார்ந்த இடமுமான’ குறிஞ்சிநிலத்து மலைப்புறத்தின் அச்சமூட்டும் பேரழகு அருமையான பாடல்வரிகளாக விரிகிறது:

    நெடிய மரங்கள் கொடிகளுடன் பின்னிப்பிணைந்து அடர்ந்து வளர்ந்துள்ளமையால் பகல்போதிலும் இருள் meena1சூழ்ந்திருக்கும் அச்சம்தரும் மலைப்பிரதேசம். இங்கு எவ்வாறு வழிபார்த்து நடந்து செல்வது? அந்த இருளை நீக்கவும் இயற்கையே வழிசெய்கிறது. அங்குள்ளதான கொடிய நஞ்சினை உடைய ஒரு பாம்பு தன் வாயை அகலத்திறந்து மாணிக்கல்லை உமிழ்கின்றது; அந்த மாணிக்கக்கல் ஊழிக்கால இருள்போன்ற கொடிய இருளை நீக்குகின்றதாம்.

    மலையில் வாழும் குறவர்கள் உணவுக்காகத் தினை பயிரிடுவர். அதுவே அவர்களின் முக்கிய உணவாகும். meena2அதற்கு எருவாக அவர்கள் பயன்படுத்துவது என்ன தெரியுமா? கவரிமானின்  முலையிலிருந்து பெருக்கெடுத்தோடும் பால் சூரியஒளியினால் காய்ந்து, பாறைகள்மீது படர்ந்துள்ளது; சூரிய ஒளியில் அது வெள்ளித்தகடுகள் போன்று பளபளவென்று ஒளிவீசுகின்றது. மலைவாழ் குறவர்கள் அதனை எடுத்து தங்களது தினைப்பயிருக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்களாம். ஆச்சரியமாக இல்லை? மலையின் வளப்பத்தைக்கூற இன்னும் வேறுபல சொற்கள் வேண்டுமோ?

    இக்குறிஞ்சி நிலத்தில் வாழும் கருநிறம் கொண்ட குறமகளிரின் இன்றியமையாத வேலை, தினைப்பயிரைத் தின்னவரும் கிளிகளையும் மற்ற பறவைகளையும், ‘ஆலோலம்,’  எனக்கூறி கவண் எறிந்து ஓட்டுவதே! சிலபொழுது அவர்களின் கவனம் பறவைகளை விரட்டுவதில் ஈடுபடுகிறது; இன்னும் சிலபொழுது தங்கள் குலமகளான வள்ளியின் உள்ளம் கவர்ந்த குமரனையும் அவன் திருவுருவையும் எண்ணி நெகிழ்ந்து கனிகின்றது. இவ்வாறு இருவிதமான எண்ணங்களும் மாற்றி மாற்றி அவர்களுடைய உள்ளங்களில் ஊசலாடுகின்றனவாம்!

    இவ்வாறெல்லாம் குறிஞ்சிநிலவளம்கூறிப் பின்பு
    குறமகளிரின் செம்மைபாய்ந்த கண்களைக் கொள்ளைகொண்ட முருகப்பெருமானைத் தலையசைத்து, திருவாய் திறந்து சில சொற்களைக்கூறிச் செங்கீரையாட வேண்டுகிறார் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழினை இயற்றிய புலவர் பகழிக்கூத்தனார்.

    ‘வெங்காள கூடவிட மொழுகுபற் பகுவாய்
    ………………………………….
    மங்காம லிரசதத் தகடெனச் சுடர்விட
    மலைக்குறவர் கண்டெடுத்து
    வண்டினைக் கெருவிடுஞ் சாரலிற் கரியகுற
    மகளிருள மூசலாட…….’ (திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்-செங்கீரைப்பருவம்)

    ***

    அடுத்து நாம் காணப்போவது திருமலை முருகன் பிள்ளைத்தமிழிலிருந்து சுவையான ஒருபாடல். இது குறிஞ்சிநிலமான வள்ளிமலையில் நடந்த நிகழ்வைத் தெரிவிக்கின்றது!

    வள்ளிமலையில் ஒரு சிவமுனிவர் தவம்செய்து கொண்டிருந்தபோது அவர்முன்பு அழகானதொரு மான் வந்து உலவியது. முனிவர் மோகத்துடன் அம்மானை நோக்கவும் அது கருப்பமடைந்து, ஓடோடிச்சென்று ஒரு குழிக்குள் கருவை ஈன்றுவிட்டுச் சென்றது. அவ்விடம் வந்த வேட்டுவர்கள் தோகைமயில் போல் விளங்கிய அக்குழவியான வள்ளியை எடுத்துவந்து மிக்க பெருமையுடன் வளர்த்தனர்.

    வளர்ந்து இளம்குமரியான வள்ளியைத் தினைப்புனக் காவலுக்கும் அனுப்பிவைத்தனர். அப்போது அங்குவந்த முருகவேள் அவள்மீது மோகம் கொண்டான். meena3அவ்வள்ளியின் கையால் தேன்கலந்த தினைமாவைப் பெற்றுண்ண ஆசைப்பட்டு அவளிடம் வேண்டவும் செய்தானாம்.

    ‘அத்தகைய குமரனே! சிறுபறையை முழக்குக,’ என வேண்டுவதாகத் திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் நூலினை இயற்றிய கவிராச பண்டாரத்தையா பாடியுள்ளார்.

    ‘வள்ளிமலை தனில்முதிய சிவமுனிவன் முன்னர்ஒரு
    மான்வந் துலாவ மானை
    ………………………………………….
    …………………. தினைப்புனத் தினில்வைத்த
    வேட்டுவமடந்தை கையால்
    தெள்ளுதினை மாவுக் கவாவுற்ற மோகனே
    சிறுபறை முழக்கி யருளே…’ (திருமலை முருகன் பி. த. சிறுபறைப்பருவம்)

    இது வள்ளியம்மை பற்றிய பாடல்.

    ***

    முருகன்மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்களெல்லாம் அவன் உறையும் குறிஞ்சிநிலத்தின் பெருமைகளைப் பலவிதமாகப் பாடி மகிழ்ந்தனர்.

    திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழினை இயற்றிய வரகவி மார்க்கசகாய தேவரும் இதற்கு விதிவிலக்கல்ல. சந்தநயம் பொங்குமொரு அழகான பாடலைத் தாலப்பருவத்தில் பாடிவைத்துள்ளார்.

    சிறுகுழந்தைகள் பசியால் வாடிவிடாமல் அன்னை அவர்களின் பசியறிந்து அன்போடு பாலூட்டுவாளல்லவா? நிலம் என்னும் குலமகள் அத்தகைய தாய் போன்றவளாம். தனது சிறார்களான சின்னஞ்சிறு பயிர்கள் பசியால் வாடிவதங்காமல் காப்பதற்காக மலையிலிருந்து விழும் தாய்ப்பால் போன்ற அருவிநீரை விரைந்தோடி வரச்செய்கின்றாள். இதனால் குறிஞ்சிநில மக்கள்கூட்டம் மிக்க மகிழ்ச்சியுடன் தங்கள் கடவுளான முருகனைக் கொண்டாடுகின்றனராம். ‘அந்தக் குறிஞ்சிநிலத்து வாழும் முருகன் பச்சைநிறம் கொண்ட பெரியமயில்மீது அமர்ந்திருப்பவன். முனிவர் போற்றும் சிவபிரானின் பாலகன். சரவணபவன்,’ என அவனுக்குத் தாலாட்டுப் பாடுகின்றார் புலவர்.

    ‘நிலனெனும் ஒருகுல மடமகள் சிறுபயி
    ராயசி றார்க ளெலாம்
    …………………………………………….
    மலைதரும் அருவி விரைந்து வரக்குற
    வாணர் இனங்க ளெல்லாம்
    மகிழ்வுட னாடுகு றிஞ்சிநி லந்தனில்
    வாழ்பசு மாமயிலா….’ (திருவிரிஞ்சை முருகன் பி. த. தாலப்பருவம்)

    இவ்விதமாக ஒவ்வொரு புலவரும் சளைக்காமல் மலைவளம்கூறிக் குமரனை வழுத்துகின்றனர்.

    ***

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

     

     

     

    Share
  • சித்ரா – 3

    -மீனாட்சி பாலகணேஷ் 

     (காதலின் புதியதொரு பரிமாணம்)

              மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்;

    ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்

                                  *****************

                            தொடர்ச்சி: காட்சி – 3

              சித்ரா: அது முடியாத செயல். தணியாத Chitrangadha-3ஆர்வத்துடன் என்னை எதிர்கொள்ளும் அவருடைய பார்வை தாபமிகுந்த ஆன்மா தனது கரங்களால் அணைத்துக்கொள்வது போலுள்ளதே! அவருடைய இதயம் தளைகளை உடைத்துக்கொண்டு எல்லையற்ற ஆசையின் ஓலம் உடல் முழுவதும் படர்ந்தோடுவதை உணரும்போது, எவ்வாறு அவரை ஒரு யாசகனைப்போல் திருப்பி அனுப்ப இயலும்? முடியவே முடியாது!

              (மதனனும் வசந்தனும் நுழைகின்றனர்)

    ஆ! காதற்கடவுளே! எத்தகைய பயங்கரமான தீயில் என்னைச் சுட்டெரிக்கிறீர் நீர்? நான் எதனைத் தொட்டாலும் அது சூட்டால் எரிகின்றதே!

              மதனன்: நேற்றிரவு என்ன நடந்ததென அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.

              சித்ரா: வசந்தமலர்கள் தூவப்பட்ட புல்படுக்கையில் நான் படுத்துக்கொண்டு அர்ஜுனன் என்னை, என்னழகைப் பற்றிக் கூறிய வர்ணனைகளை திரும்ப எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்தேன். நீண்டநாள் முழுவதும் சேர்த்துவைத்த நறுந்தேனை துளித்துளியாக சுவைத்து மகிழ்ந்திருந்தேன். எனது முந்தைய பிறவிகளைப்போலவே முந்தைய வாழ்க்கையையும் மறந்துவிட்டேன். என்னை விரைந்து செல்லும் சில பொழுதுகளே உள்ள ஒரு மலர்போல எண்ணிக்கொண்டேன்; அதற்குள்ளாக அது ரீங்காரமிடும் வண்டுகளின் புகழாரங்களைச் சூடிக்கொள்ள வேண்டும்; கானகத்தின் ரகசியங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்; ஆகாயத்தை நோக்காமல் கண்களைத் தாழ்த்திக் கொண்டும், தலைகுனிந்து கொண்டும் ஒரு சப்தமுமின்றி, தனது இறுதிமூச்சைப் புழுதிக்கு அளித்திட வேண்டும்; அவ்வாறு கடந்தகாலமும் எதிர்காலமும் அற்ற சிறுகதை போலும் அருமையான பொழுதினை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

              வசந்தன்: முடிவற்ற பெருமை நிறைந்த வாழ்வு மலர்ந்து நிறைவுறுவதும் ஒரேயொரு காலைப்பொழுதுதான்.

           மதனன்: பாடப்படும் ஒரு பாடலின் குறுகியபொழுதில் முடிவற்ற பொருள்பொதிந்துள்ளதனைப் போன்றதே அது!

              சித்ரா: தென்றல் காற்று என்னைத் தாலாட்டிட நான் உறங்கினேன். தலைக்குமேல் பூத்துக்குலுங்கிய மாலதிக்கொடியிலிருந்து எனது மேனி முழுதும் முத்தங்கள் விழுந்தன. எனது தலைமயிர், மார்பகம், பாதங்கள் என ஒவ்வொரு மலரும் ஒரு இடத்தைத் தேர்ந்து விழுந்து இறந்தது! நான் உறங்கினேன். எனது ஆழ்ந்த உறக்கத்தினிடையே தீயின் கூரான விரல்களைப்போல ஒரு ஆழமான ஆர்வமான பார்வை, எனது உறங்கும் மேனியைத் தீண்டியதை உணர்ந்தேன்.

              திடுக்கிட்டு எழுந்த நான் எனதுமுன்பு அந்தத் தவசி நிற்பதனைக் கண்டேன். மேற்குத்திசை நோக்கி நகர்ந்துவிட்ட நிலவு, இந்த மெல்லிய மனித உடலில் புனையப்பட்ட ஆச்சரியமிகுந்த தெய்வீகக்கலையை மரங்களின் இலைகளினூடாக வேவுபார்த்துக் கொண்டிருந்தது. வீசியகாற்று அழுத்தமான நறுமணச் சுகந்தங்களால் நிரம்பியிருந்தது; சில்வண்டுகள் ஓசையிடும் ஆரவாரம் இரவின் நிசப்தத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது; மரங்களின் நிழல்கள் ஏரியின் நீரில் ஓசையின்றிப் பிரதிபலித்தன. தனது கைத்தடியுடன் அவன் அங்கு ஒரு காட்டுமரத்தைப்போல உயரமாக, உறுதியாக, அசைவின்றி நின்றான்.

              கண்களைத் திறந்தபோது, நான் வாழ்வின் நிதர்சனங்களிலிருந்து இறந்துவிட்டது போலவும் ஒரு கனவின் வசப்பட்டு, நிழலுலகில் பிறந்துவிட்டது போன்றும் எனக்குத் தோன்றியது- நழுவும் ஆடைகளைப்போல எனது நாணமும் எனது காலடியில் நழுவி விழுந்தது. அவனுடைய அழைப்பு கேட்டது – ‘ஆருயிரே! எனது உயிரின் உயிரே!’ மறந்துவிட்ட எனது பிறவிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அதற்குப் பதிலளித்தது. நான், “எடுத்துக்கொள்! என்னை முழுமையாக எடுத்துக்கொள்!” என்றேன். எனது கரங்களை அவனை நோக்கி நீட்டினேன். நிலவு மரங்களின் பின்னேசென்று மறைந்தது. ஒரு இருள்திரை அனைத்தையும் மூடிக்கொண்டது. சுவர்க்கமும் பூமியும், காலமும் இடமும், மகிழ்ச்சியும் துன்பமும், இறப்பும் வாழ்வும் ஒன்றோடொன்று பிணைந்து தாங்கவியலாத இன்பவெள்ளத்திலாழ்த்தின. நாளின் முதல் ஒளிக்கீற்றுகளுடனும், பறவைகளின் முதல் ஒலிகளுடனும் நான் எழுந்து எனது இடதுகரத்தின் மீது சாய்ந்து அமர்ந்தேன். காலைநேரத்துப் பிறைநிலாவைப்போல் தனது இதழ்களில் தவழும் பொருளற்ற புன்னகையுடன் அவன் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான். விடியல்பொழுதின் இளஞ்சிவப்பு அவனது உயர்வான நெற்றியில் படர்ந்து அழகு செய்தது. நான் ஒரு பெருமூச்சுடன் எழுந்து நின்றேன். பெரிய இலைகளை ஒன்றுசேர்த்து அவனுடைய முகத்தினை சூரியவெளிச்சத்தினின்று மறைத்தேன். என்னையே நான் பார்த்துக்கொண்டபோது பழைய மண்ணையே கண்டேன். நான் யாராக இருந்தேன் என நினைவு வந்தபோது, தன் நிழலையே கண்டு அச்சங்கொண்டு ஓட்டமாக ஓடும் மானைப்போல் ஷெபாலி மலர்கள் இறைந்திருந்த கானகப்பாதையில் ஓடினேன். ஒரு தனிமையான இடத்தைக் கண்டுபிடித்து, அங்கு அமர்ந்து எனது முகத்தை இரு கரங்களாலும் மூடிக்கொண்டு அழவும் புலம்பவும் முயன்றேன். ஆனால் கண்களில் நீரே வரவில்லை.

              மதனன்: அந்தோ! மானிட மகளே! நான் தெய்வீகப் பொக்கிஷத்திலிருந்து சுவர்க்கத்தின் இனிய தேறலை எடுத்து, அத்துடன் ஒரு உலகசம்பந்தமான இரவினை விளிம்புவரை நிரப்பி, உனது கையில் அதனை அருந்தி மகிழ அளித்தேன்! இருந்துமா இந்த அவலக்குரல்?

              சித்ரா: (வெறுப்புடன்) யார் அதனைப் பருகினார்கள்? வாழ்வின் மிக அபூர்வமான ஒரு ஆசை, காதலின் முதன்முதல் சங்கமம் எனக்கு அளிக்கப்பட்டது; ஆயினும் வலுக்கட்டாயமாக எனது பிடியிலிருந்து பறித்துக்கொள்ளவும் பட்டதே! இரவல் வாங்கிய இந்த அழகு, என்னைப் போர்த்துள்ள இந்தப் பொய்மை என்னைவிட்டு நழுவும்போது, நன்றாக மலர்ந்து முதிர்ந்த பூவின் இதழ்களைப்போல் அந்த இனிய சங்கமத்தின் ஒரே அத்தாட்சியையும் எடுத்துக்கொண்டு சென்றுவிடுமே! தனது நிர்வாணத்தின் கொடுமையையும் அவமானத்தையும் தாங்காமல் அந்தப்பெண் இரவும் பகலும் அழுதுகொண்டு அமர்வாளே!

              காதல்கடவுளே! இந்த சபிக்கப்பட்ட தோற்றம் ஒரு அரக்கனைப்போல் என்னுடன் இருந்துகொண்டு காதல் தொடர்பான அனைத்துப் பரிசுகளையும் களவாடுகிறது; எனது உள்ளம் விழையும் முத்தங்கள் அனைத்தையும் பறித்துச் செல்கிறதே!

              மதனன்: அந்தோ! உனது அந்த ஓர் இரவு எப்படி வீணாகி விட்டது! உனது மகிழ்ச்சி எனும் படகு கண்ணில் கண்டும், அலைகளால் அலைக்கழிக்கப்பட்டு கரையைத் தொட முடியவில்லையே!

              சித்ரா: சுவர்க்கம் எனக்கு மிக அருகில் நெருங்கி வந்தும், அது என்னை இன்னும் வந்தடையவில்லை என்பதனை நான் கணப்பொழுது மறந்துவிட்டேன். ஆனால் காலையில் எனது கனவிலிருந்து கண்விழித்ததும் எனது உடலே எனது எதிரியாக மாறக் கண்டேன். அவளை தினந்தோறும் அலங்கரிப்பதும், அவளுடைய காதலன் தழுவிக்கொள்ள அவனிடம் அனுப்புவதும் எனக்குப் பிடிக்காத வேலை. ஓ கடவுளே! உனது வரத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வீராக!

              மதனன்: ஆனால் நான் அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டால் உன்னால் உன் காதலன் முன்னால் நிற்க இயலுமா? மதுக்கிண்ணத்திலிருந்து முதலில் சிறிது அருந்தியுள்ளவனிடமிருந்து, அவனுடைய மகிழ்ச்சியைத் தட்டிப்பறிப்பது கொடுமையல்லவா? எத்தகையதொரு கழிவிரக்கம் நிரம்பிய கோபத்துடன் அவன் உன்னை எதிர்கொள்வான் தெரியுமா?

              சித்ரா: அது இப்போதைய நிலைமையை விட மேலானது. எனது உண்மை வடிவை அவனுக்குக் காண்பிப்பேன்; இந்த வேடத்தைவிட அது உயர்வானது. அவன் என்னை நிராகரித்தாலும், மறுத்து என் இதயத்தைச் சிதறடித்தாலும், அதையும் அமைதியாகப் பொறுத்துக் கொள்வேன்.

              வசந்தன்: எனது புத்திமதியைக் கேட்டுக்கொள். வசந்தகாலம் முடிந்து இலையுதிர்காலம் துவங்கும்போது பழங்கள் கனியும் வெற்றிப்பெருமிதம் உண்டாகும். காதல் வெப்பத்தால் மலர்ந்த உன் உடலெனும் மலர் வாடியுதிர்ந்து போகும்போது அர்ஜுனன் மகிழ்ச்சியாக உன்னிடம் உள்ள முதிர்ச்சியின் உண்மையைப் புரிந்துகொள்வான். குழந்தாய்! உனது களியாட்டத் திருவிழாவிற்குச் சென்று மகிழ்ந்திருப்பாயாக!

    காட்சி- 4

              சித்ரா: வீரரே! என்னை ஏன் அவ்வாறு பார்க்கிறீர்கள்?

              அர்ஜுனன்: நீ அந்த மலர்மாலையை எவ்வாறு தொடுக்கிறாய் எனப் பார்க்கிறேன். இரட்டை சகோதர-சகோதரி என்னும் தோலும் நளினமும் இணைந்து உன் விரல்நுனிகளில் எவ்வாறு விளையாட்டாக நடனமாடுகின்றன எனக்காண்கிறேன். பார்த்துக்கொண்டே சிந்தித்தவண்ணம் இருக்கிறேன்.

              சித்ரா: என்ன சிந்திக்கிறீர்கள் ஐயா?

              அர்ஜுனன்: உன்னைப் பற்றித்தான், நீ இதே மென்மையான தொடுதலுடனும் இனிமையுடனும் நான் தலைமறைவாயுள்ள எனது இந்த நாட்களை நான் நாடு திரும்பும்போது எனக்குச் சூட்டும் கிரீடமாக வைக்க ஒரு தெய்வீகமான மலர்ச்சரமாகத் தொடுத்துக் கொண்டிருக்கிறாய்;

              சித்ரா: வீடா? (நாடா?) ஆனால் இந்தக் காதல் வீட்டிற்கானதல்லவே!

              அர்ஜுனன்: வீட்டிற்கல்லவா?

              சித்ரா: ம்ஹூம்; அதனைப் பற்றியே பேசவேண்டாம்! நிரந்தரமானதையும் உறுதியானதையுமே உமது வீட்டிற்கு எடுத்துச் செல்வீராக. வழியில் பூத்த இந்தச் சிறிய காட்டுமலரை அவ்விடத்திலேயே விட்டுச் செல்லுங்கள்; நாளின் முடிவில் அது மற்ற வாடும் மலர்களுடனும், அழுகும் இலைகளுடனும் அழகாகக் கிடந்து மடிய விட்டுவிடுங்கள். அதனை உங்களுடைய மாளிகையின் கூடத்திற்கு எடுத்துச்சென்று விடாதீர்கள்; அங்கு அதன் மதிப்பையறியாத கல்தரையில் வீசியெறியப்பட்டு, வாடி, மறக்கப்பட்டும் விடும்.

              அர்ஜுனன்: நம்முடையதென்ன அத்தகைய காதலா?

              சித்ரா: ஆம்! வேறொன்றுமல்ல! ஏன் அதற்காகப் பச்சாதாபப்பட வேண்டும்? பொழுதுபோக்குக்கான ஒன்று அதன் காலத்தைக் கடந்து வாழக்கூடாது. அது வெளியேற வேண்டிய வாயில் மூடப்பட்டுவிட்டால், மகிழ்ச்சி துன்பமாக மாறிவிடும் நிலை வந்துவிடும். அது நீடிக்கும்வரை மட்டுமே அதனைக் கொண்டாட வேண்டும். மாலைப்பொழுதின் நிறைவினை உங்கள் காலைப்பொழுதின் தேவைகளுக்குமேல் உரிமை கொண்டாடக்கூடாது. அந்தநாள் முடிவுற்றுவிடும்.

              இந்த மாலையை அணிவீராக! நான் களைப்பாக இருக்கிறேன். என்னை உம் கரங்களில் ஏந்திக் கொள்ளுங்கள் அன்பே!  நமது இதழ்களின் இனிய சந்திப்பில், இந்த வீணான பிதற்றல்கள் நிறைந்த மனக்குறைகள் இறந்து போகட்டும்.

            அர்ஜுனன்: உஷ்! கேள், என் கண்ணே! அந்த அமைதியான மரங்களினூடே மாலைநேரத்துக் காற்றின் மூலம், தூரத்துக் கிராமத்திலிருந்து ஒலிக்கும் கோவில்மணியின் ஓசையைக்கேள்!

    [தொடரும்]

    Share
  • சித்ரா -2 (காதலின் புதியதொரு பரிமாணம்)

    Chitra-pic

     மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்;

    ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்

                                  *****************

    தொடர்ச்சி: காட்சி-2

     அர்ஜுனன்: நான் ஏரிக்கரையில் கண்டது கனவா அல்லது நிஜமா? அந்தப் புல்தரையிலமர்ந்து நான் கடந்த காலத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, கானகத்தின் அடர்ந்த இருளிலிருந்து மெல்ல ஒரு அழகிய பெண்ணுருவம் வெளிப்பட்டது; வந்து நீர்க்கரையில் வெண்ணிறக்கல்லின் மீது நின்றது. அவளுடைய வெண்மையான பாதங்களின் கீழ் இருந்த பூமியின் இதயம் ஆனந்தத்தால் விம்முவது போலிருந்தது.

              கீழ்த்திசையில் காணும் மலைச்சிகரங்களின் பனி உருகி விடியலின் தங்கநிற மூடுபனித்திரையாகி வழிவதுபோல அவளுடைய உடலை மறைத்த துகில்கள் கரைந்தோடிடக் கண்டேன். கண்ணாடி போல ஒளிர்ந்த ஏரியின் நீரினை நோக்கிக் குனிந்து தனது முகத்தின் பிரதிபலிப்பை அவள் பார்த்தாள். ஆச்சரியத்தில் பிரமித்து அசையாது நின்றாள்; பின் புன்னகையோடு, அலட்சியமாகத் தன் கூந்தலைத் தளர்த்தி தன் காலடியில் பூமியில் தழைய விட்டாள். தனது ஆடையைத் தளர்த்தி, குறைகளின்றிப் படைக்கப்பட்ட தனது மார்பகங்களையும் கரங்களையும் பார்த்துக்கொண்டாள்; முறையாகத் தழுவியபடி சிலிர்த்தாள். தலையைக் குனிந்து பார்த்தபோதில் பூவிரிந்தது போன்ற இளமையின் இனிய வடிவையும் தோலின் இளஞ்சிவப்பு வண்ணத்தையும் கண்டாள். ஆச்சரியமான மகிழ்வில் அவள் ஜொலித்தாள். காலையில் கண்களை விரிக்கும் அழகிய வெண்தாமரைமலர் கழுத்தை வளைத்துத் தனது நிழலை நீரில் கண்டால், நாள்முழுதும் அதனையே நோக்கிக் கொண்டிருப்பாளா என்ன? அவளுடைய இதழ்களிலிருந்து அந்தப்புன்னகை மறைந்தபின்பு மெல்லிய ஒரு சோகம் அவள் கண்களில் குடியேறியது. தனது கூந்தலை முடிந்து கொண்டவள், ஆடையைத் தனது தோள்களின் மீது சரிசெய்து கொண்டாள். மெல்லியதொரு பெருமூச்சுடன் அழகான ஒரு மாலைப்பொழுது இரவினுள் கரைவது போல் சென்று மறைந்தாள். மிகவும் உயர்வானதொரு எழுச்சியின் நிறைவு ஒரு மின்னலைப்போல் தோன்றிப்பின் திடீரென மறைவதுபோல இருந்தது…. ஆ! அது யார் கதவைத் தள்ளித் திறக்கமுயல்வது?

              [சித்ரா ஒரு பெண்ணின் ஆடைகளில் உள்ளே வருகிறாள்]

              ஆ! அவள்தான். என் நெஞ்சே! அமைதியாக இரு!……… மாதரசியே, என்னைக்கண்டு அஞ்ச வேண்டாம்! நான் ஒரு க்ஷத்திரியன்.

     சித்ரா: மதிப்பிற்குரிய ஐயா, தாங்கள் எனது விருந்தினர். நான் இந்தக் கோவிலில் வாழ்கிறேன்.  தங்களுக்கு எந்தவிதத்தில் விருந்தோம்புவதென அறிய இயலவில்லையே!

    அர்ஜுனன்: அழகிய மாதே! உன்னைக்காணும் பெரும்பேறே உயர்வான விருந்தோம்பலுக்குச் சமமானதாகும். நீ தவறாக எடுத்துக் கொள்ளாவிடில், உன்னை ஒரு கேள்விகேட்க விரும்புகிறேன்.

     சித்ரா: அதற்கு நான் அனுமதி அளிக்கிறேன்.

     அர்ஜுனன்: உனது பேரழகினை மனிதர்கள் காணவியலாமல் இந்தத் தனிமைக் கோவிலில் அடைபட்டுக் கிடக்கச் செய்துள்ள கொடூரமான சபதங்கள் எதுவாகும் என நான் அறிந்து கொள்ளலாமா?

     சித்ரா: எனது உள்ளத்தில் ஒரு ரகசியமான விருப்பம் உள்ளது. அது நிறைவேறுவதற்காக நான் சிவபெருமானுக்கு தினம் பூசைகள் செய்து வருகிறேன்.

     அர்ஜுனன்: ஓ! உலகமே உன்னை விரும்புபவளாகிய நீயும் விரும்பும் பொருள் ஒன்று உள்ளதோ? சூரியன் தனது நெருப்புக் கால்களைப் பதிக்கும்  கிழக்கெல்லையிலுள்ள மலையிலிருந்து அச்சூரியன் மறையும் பூமிவரை நான் பயணப்பட்டிருக்கிறேன். உலகிலுள்ள அத்தனை மதிப்புள்ள, அழகான, பெருமைவாய்ந்த அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். நீ தேடுவது எதனை அல்லது யாரை எனக் கூறினாயாயின், அந்த அறிவு அனைத்தையும் உனக்குத் தருவேன். நீ விரும்பும் பொருளை அடையலாம்.

     சித்ரா: நான் தேடுபவரை அனைவரும் அறிவார்கள்.

    அர்ஜுனன்: கட்டாயமாக! உனது இதயத்தைக் கவர்ந்து கொண்டுள்ள அந்தக் கடவுள்களுக்கும் விருப்பமானவன் யார்?

    சித்ரா: மிகவும் உயர்வான அரசகுலத்தைச் சார்ந்த அவர், வீரர்களிலேயே மிகவும் சிறந்தவரும் ஆவார்.

    அர்ஜுனன்: மாதே! உனது உயர்வான அழகை, பொய்யான கீர்த்தியின் சன்னிதியில் படையலிடாதே! சூரியன் உதிக்கும் முன்பெழும் காலைப்பனிபோல் தவறான புகழாரங்கள் ஒருவரிடமிருந்து ஒருவரைச் சென்றடைகின்றன. அரசவம்சங்களிலேயே மிகவும் உயர்வான வம்சத்தைச் சேர்ந்த அந்த மாபெரும் வீரன் யாரென எனக்குக் கூறுவாய்! 

    சித்ரா: தவசியே! மற்றவர்களின் புகழைக் கண்டு நீ பொறாமைப்படுகிறாய்!  உலகிலேயே குரு அரசவம்சமானது மிகவும் புகழ்வாய்ந்ததென்று உனக்குத் தெரியாததா?

    அர்ஜுனன்: குரு வம்சமா?!

    சித்ரா: அத்துணை புகழ்வாய்ந்த அரச வம்சத்தின் பெயரை நீ அறியாயோ!

    அர்ஜுனன்: உனது வாய்மொழியாக நான் அதைக்கேட்க விழைகிறேன்.

    சித்ரா: உலகையே வென்ற ஆற்றல் படைத்த அர்ஜுனனே அவர். உலகின் அத்தனை மனிதர்களின் வாயிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தப் பெயரை நான் எனது கன்னியுள்ளத்தில் பத்திரமாக ஒளித்து வைத்துள்ளேன். தவசியே! நீர் ஏன் சிறிது கலக்கத்துடன் காணப்படுகிறீர்? அப்பெயர் என்ன வஞ்சனையில் ஒளிருவது தானா? உண்மையைக் கூறுங்கள், அப்படியாயின் எனது உள்ளச்சிறையை உடைத்து அந்தப் பொய்யான ரத்தினத்தை மண்ணில் எறிய நான் தயங்க மாட்டேன்.

    அர்ஜுனன்: பெண்ணே! அவனுடைய வீரமும் தீரமும் பொய்யாகவோ, உண்மையாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்; தயவுசெய்து உனது உள்ளத்திலிருந்து அவனை வெளியேற்றி விடாதே! ஏனெனில் அவன் இப்போது உனதடியில் மண்டியிட்டுக் கிடக்கிறான்.

    சித்ரா: தாங்களா? அர்ஜுனரா?

    அர்ஜுனன்: ஆம். நானே அவன், உன்வீட்டு வாயிலில் காதலில் வாடி நிற்பவன் நானே!

    சித்ரா: அப்போது, அர்ஜுனன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிரம்மசரிய விரதம் பூண்டுள்ளார் என்பது உண்மையல்லவா?

    அர்ஜுனன்: இரவின் தெளிவற்ற தன்மையை நிலவொளி கரைத்துவிடுவதனைப்போல் நீ எனது சபதத்தைக் குலைத்துவிட்டாய்!

    சித்ரா: ஓ! உங்களுக்கு வெட்கமாக இல்லையா? தங்கள் சபதம் பொய்க்குமாறு செய்ய என்னிடம் எதனைக் கண்டீர்கள்? தங்களது நேர்மையையே விலையாகக் கொடுக்கத் தயங்காத நீங்கள் இந்தக் கரிய கண்களில், பால்போலும் கரங்களில், யாரைக் கண்டீர்கள்? எனது உண்மை வடிவையல்ல என நானறிவேன். இது ஆண் பெண்ணுக்குச் செலுத்தும் உயர்வான மதிப்பான பொருளல்ல; நிச்சயமாக இது காதலும் அன்று. இந்தப் பலஹீனமான வேடம், இந்த உடல், இவையனைத்தும் ஒருவரை, உள்ளிருக்கும் அழிவற்ற ஆன்மாவைக் காண முடியாதபடிக் குருடாக்கிவிடுகின்றன. ஆம்! அர்ஜுனா! உமது புகழ்வாய்ந்த வீரம்செறிந்த ஆண்மை பொய்மையானது என இப்போது நானறிகிறேன்.

     அர்ஜுனன்: ஆ! புகழும், வீரத்தால் விளையும் பெருமிதமும் எத்தனை நிலையற்றதென நான் இப்போதுதான் உணர்கிறேன். எல்லாமே ஒரு கனவு போலுள்ளது. நீ ஒருத்தியே முழுமையானவள்; பூரணமானவள்; நீயே உலகின் முதன்மையான செல்வம்; வறுமையின் முடிவு; முயற்சிகளின் நோக்கு, நீ ஒருத்தியேதான்! மற்று உள்ள அனைத்தையும் காலம் செல்லச்செல்ல மட்டுமே உணர இயலும். உன்னை ஒருமுறை கண்ணால் காண்பது மட்டுமே முழுமையின் நிறைவை இப்போதும் எப்போதும் அளிக்கும்.

     சித்ரா: அந்தோ! அர்ஜுனா! அது நானல்ல, நானல்ல! அது கடவுளின் வஞ்சனை! சென்றுவிடு, எனது வீராதிவீரனே! பொய்மையை வேண்டிக் கேட்காதே! உனது பரந்த இதயத்தை ஒரு மாயத்தோற்றத்திற்குக் காணிக்கையாக்காதே! சென்றுவிடு!

                                                      [தொடரும்]

    Share
  • சித்ரா – 1

    (காதலின் புதியதொரு பரிமாணம்)

              மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்

    ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்

     முன்னுரை:

              இந்தச் சொற்களாலான நாடகம் தாகூரால் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

             ஒரு பிராயச்சித்தத்தின் காரணமாக அலைந்து திரிந்த அர்ஜுனன், மணிப்பூரை வந்தடைகிறான். அந்நாட்டு அரசனான சித்ரவாஹனனின் அழகான மகள் சித்ராங்கதாவைக் காண்கிறான். அவள் அழகால் கவரப்பட்டு அவளைத் தனக்கு மணமுடித்துத் தருமாறு அரசனிடம் கேட்கிறான். அர்ஜுனனை யாரெனக் கேட்கும் சித்ரவாஹனன் அவன் பாண்டவர்களில் ஒருவன் என அறிந்ததும் அவனிடம் தன் கதையைக் கூறுகிறான்.

                பிரபஞ்சனன் எனும் அவனுடைய மணிப்பூர் அரச வம்சத்து  மூதாதையானவன், குழந்தைகளின்றி வருந்தினான். அதற்காகக் கடுந்தவம் புரிந்தான். அதற்கு மகிழ்ந்து சிவபெருமான், அவனும் அவன் வம்சாவழியினரும் ஒவ்வொரு குழந்தையைப் பெறுவார்கள் என அருளினார். எல்லாருக்குமே ஆண்குழந்தைதான் பிறந்து வந்தது. சித்ரவாஹனனுக்கு மட்டும் அவன் வம்சத்தை விளங்கவைக்க ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவன் அவளை ஒரு மகனாகவே பாவித்து, தனது வாரிசாகக் கொண்டான். அரசன் கூறுவான்:

             ‘இவளுக்குப் பிறக்கும் ஒரு மகன் என் வம்சத்தை விளங்கவைப்பவனாக இருப்பான். அந்த மகனே நான் இந்தத் திருமணத்திற்காகக் கேட்கும் விலை! அர்ஜுனா! நீ இதனை ஒப்புக்கொண்டால் இவளை மணந்து கொள்ளலாம்.’

        அர்ஜுனன் இதற்கு ஒத்துக்கொண்டு சித்ராங்கதாவை மணந்து கொள்கிறான். மணிப்பூரில் மூன்று ஆண்டுகள் அவளுடன் வாழ்கிறான். அவளுக்கு ஒரு மகன் பிறந்ததும், அவளை அன்போடு அணைத்துக்கொண்டு, அவள், அவள் தந்தை இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, தனது பிரயாணங்களைத் தொடர்கிறான்.

          இவர்களுடைய மகனே வீரனாகிய பப்ருவாஹனன்.

                                      ————————-

     

    காட்சி 1:

             சித்ரா: ஐந்து கணைகளைக் கொண்ட கடவுள் தாங்கள் தானே? காதல் கடவுள்?

              மதனன்: படைத்தவனின் உள்ளத்தில் முதலில் பிறந்தவன் எவனோ அவனே நான். ஆண், பெண் இருவரின் வாழ்க்கையிலும் காதலால் விளையும் வேதனையையும் பேரானந்தத்தையும் நிரப்புபவனும் நானே!
    சித்ரா: அந்த வேதனையையும் ஆனந்தத்தையும் நான் நன்றாகவே உணர்ந்தவளாவேன். தாங்கள் யாரோ, கடவுளே?

        வசந்தன்: நான் இவரது நண்பன் வசந்தன், பருவங்களின் அரசன் நானாவேன். சாவும் முதுமையின் தளர்ச்சியும் உலகினை நசிப்பித்துவிடும். ஆகவே நான் அவற்றை விடாது தொடர்ந்து தாக்குபவன், என்றும் இளமை குன்றாதவன்.

       சித்ரா: வசந்தக் கடவுளே! உம்மை நான் வணங்குகிறேன்.

              மதனன்: மென்மையான புதியபெண்ணே! உனது கடினமான சபதம் என்னவோ? உனது புத்தம்புது இளமையை ஏன் நீ தவத்தாலும் உடலை வருத்துவதாலும் வீணடித்துக் கொள்கிறாய்? காதலின் வழிபாட்டிற்கு இந்தத் தியாகம் ஏற்றதல்ல. நீ யார்? உனது வேண்டுதல்தான் என்ன?

             சித்ரா: நான்தான் சித்ரா, மணிபுரியின் அரசகுடும்பத்து மகள். கடவுள்களுக்கே உரிய தயாள குணத்துடன் சிவபெருமான் எனது தந்தையின் வம்சத்திற்குத் தலைமுறை தலைமுறையாகத் தவறாமல் ஆண்வாரிசைத் தருவதாக வாக்குறுதியளித்தார். இருப்பினும், அந்த தெய்வவாக்கு என் விஷயத்தில் உயிர்ப்பின் பொறியை மாற்றும் சக்தியற்றுப் போனது. என்தாயின் கர்ப்பத்தில் நான் பெண்ணாகப் பிறந்தேன்.

                   மதனன்: அதனால்தான் உன் தந்தை உன்னைத் தன் மகன் போலவே கருதி வளர்த்துவருவதனை நானறிவேன். அவர் உனக்கு விற்பயிற்சியும் கொடுத்து, ஓர் அரசனின் கடமைகளையும் போதித்து வருகிறார் அல்லவா?
    சித்ரா: ஆம்; அதனால்தான் நானும் ஓர் ஆணைப்போல் உடைகளணிந்தும் அந்தப்புரத்தின் தனிமையில் வாழாமலும் உள்ளேன். ஆண்களின் உள்ளங்களைக் கவரும் பெண்மையின் நளினமான செயல்கள் எனக்குத் தெரியாது. எனது கரங்கள் வில்லை வளைக்க உறுதியானவை; ஆனால் கண்களின் அசைவுகளால் நிகழ்த்தும் காதல்போரில் எனக்குப் பரிச்சயமில்லை.

                 மதனன்: அவற்றைக் கற்கப் பாடம் தேவையில்லை மகளே! கண் தனது பணியை கற்பிக்கப்படாமலே சரியாகச் செய்தால், அந்தக் கண் எய்த அம்பு யாருடைய இதயத்தைத் தைக்கின்றதோ, அவன் அதனை நன்கு உணர்ந்து அறிவான்.

              சித்ரா: ஒருநாள் நான் வேட்டை மிருகங்களைத் தேடியலைந்து காட்டில் தன்னந்தனியாக  பூமா ஆற்றங்கரையில் உலவிக்கொண்டிருந்தேன். மாலைப்போதில், பின்னிப்பிணைந்த மரக்கிளைகளினூடாக வளைந்து செல்லும் ஒரு குறுகலான பாதையைக் கண்டேன். இலைகளினூடே சில்வண்டுகள் சப்தமெழுப்பிக் கொண்டிருந்தன. அப்போது திடீரென, என் பாதையின் குறுக்காக ஒரு மனிதன் காய்ந்த இலைச்சருகுகளின் மீது படுத்திருந்ததைக் கண்டேன். நானொரு இளவரசன் (இளவரசி) எனும் கர்வத்துடன் அவனை வழியைவிட்டு நகருமாறுகூற, அவன் அதனைக்  காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை. ஆகவே எனது வில்லின் கூர்மையான முனையால் அவனை எரிச்சலுடன் குத்தித் துன்புறுத்தினேன். அவனும் உடனே சாம்பற்குவியலிலிருந்து திடீரென ஒரு நெருப்பின் நாக்கு பெரிய ஜ்வாலையாக வெளிப்பட்டதுபோலத் தனது நீண்ட உறுதியான கைகால்களுடன் துள்ளியெழுந்தான். எனது சிறுவன்போன்ற உருவத்தைக் கண்ணுற்றோ என்னவோ, அவனுடைய இதழ்க்கோடியில் ஓர் இகழ்ச்சியான புன்முறுவல் மின்னிற்று. அத்தருணத்தில்தான் நான் என்னை ஒரு பெண்ணாக உணர்ந்தேன்; ஓர் ஆண்மகன் என்முன் நிற்பதையும் அறிந்தேன்.

              மதனன்: அப்படிப்பட்ட நல்லதொரு சரியான தருணத்தில்தான் நான் ஆணுக்கும் பெண்ணுக்கும் தாங்கள் ஒருவரையொருவர் உணரும் பாடத்தைக் கற்பிப்பேன். பின் என்ன ஆயிற்று?

             சித்ரா: உடலில் நடுக்கத்துடனும் ஆச்சரியத்துடனும், “தாங்கள் யார்?” எனக்கேட்டேன். “நான் அர்ஜுனன், பெருமைவாய்ந்த குரு வம்சத்தவன்,” என்றான். நான் அவருக்கு மரியாதை செய்யவும் மறந்துபோய் பயத்தில் சிலையாக உறைந்து நின்றேன்; இவர்தான் அர்ஜுனரா? எனது கனவுகளின் மகோன்னதமான லட்சிய புருஷரா? அவர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிரம்மசரியம் கடைப்பிடிப்பேனெனச் சபதம் செய்திருந்ததை நீண்ட நாட்களுக்கு முன்பே நான் அறிந்திருந்தேன். அவரை என்னுடன் ஒருவரோடொருவரான வாட்போருக்கழைத்து ஆயுதப்பயிற்சியில் எனக்குள்ள திறமையை அவருக்குக் காட்ட வேண்டும் என எத்தனையோ நாட்களாகவே நான் ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். ஆ! முட்டாள் உள்ளமே! உனது அகந்தை நிறைந்த எண்ணம் இப்போது என்னவாயிற்று? எனது இளமையையும் அதன் கனவுகளையும் அவருடைய கால்தூசிக்கு சமர்ப்பணம் செய்யவா? மிகவும் உன்னதமான  கௌரவமாக அதனை நான் கருதுவேனே.

           என்னவிதமான எண்ணச்சுழல்களில் ஆழ்ந்திருந்தேனோ நான், திடீரென அவர் மரங்களினூடே சென்று மறைவதனைக் கண்டேன். ஓ முட்டாள் பெண்ணே! நீ அவருக்கு வந்தனம் செலுத்தவில்லை, ஒரு சொல் கூறவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை, அவர் உன்னிடமிருந்து அலட்சியமாக நடந்து சென்றபோது ஒரு பண்பற்ற பட்டிக்காட்டான் போல நின்றாயே!

              அடுத்தநாள் காலையில் நான் எனது ஆண்மகனின் உடைகளை ஒதுக்கி வைத்தேன். கரங்களில் வளையல்களையும், கால்களில் பாதசரங்களையும், இடையில் ஒட்டியாணமும் அணிந்தவள், ஒருகருஞ்சிவப்பு வண்ணப் பட்டாடையையும் உடுத்தேன். அந்தப் பழக்கமில்லாத ஆடை என் மறைக்கவியலாத அவமானத்தை எடுத்துக்காட்டி என்மீது பொருத்தமின்றித் தொங்கியது! ஆனால் நானோ எனது தேடலை நோக்கி விரைந்தேன். அர்ஜுனனைக் காட்டினுள்ளே சிவன்கோவிலில் கண்டேன்.

              மதனன்:  கதையின் முடிவுவரை எனக்கு விவரமாகக் கூறுவாய். நான் இதயங்களில் வசிக்கும் தெய்வம் ஆதலால் எனக்கு இந்த உணர்ச்சிவேகத்தின் சூட்சுமங்கள் நன்றாகவே புரியும்.

              சித்ரா: நான் என்ன சொன்னேன் என்றும், அதற்குக் கிடைத்த விடையும் எனக்கு நன்கு நினைவிலில்லை. எல்லாவற்றையும் கூறச் சொல்லிக் கேட்காதீர்கள். இடிவிழுந்தது போல என்மீது அவமானம் இறங்கியது; இருப்பினும் நான் சுக்குநூறாகச் சிதறவில்லை; ஆண்மகனைப்போல உறுதியாக அதனைச் சகித்துக் கொண்டேன். அவர் கூறிய கடைசி வார்த்தைகள், நான் வீடு திரும்பும்போது பழுக்கக் காய்ச்சிய கூரிய ஊசிகளைப்போல் எனது செவிகளைத் துளைத்தனவே! ‘நான் பிரம்மசரிய விரதம் பூண்டுள்ளேன். உனக்குக் கணவனாக இருக்க எனக்குத் தகுதி இல்லை.’ ஓ! ஆண்கள் செய்யும் சபதங்கள்! காதல்கடவுளே, எத்தனை ஞானிகளும் துறவிகளும் தங்களது ஆயுட்காலத் தவத்தின் பயனை ஒரு பெண்ணின் காலடியில் சமர்ப்பித்துள்ளனர் என்று உமக்குத் தெரியாதா?

              நான் எனது வில்லை இரண்டாக முறித்து, அம்புகளைத் தீயில் எரிய விட்டேன். வில்லின் நாணைத் திரும்பத் திரும்ப ஏற்றியதால் தழும்பேறிய எனது பலம் வாய்ந்த புஜங்களை வெறுத்தேன். ஓ காதலே, காதல்கடவுளே! எனது ஆண்மைநிரம்பிய பலம், அதனால் உண்டான செருக்கு இவை அனைத்தையும் நீர் புழுதிபடிய வைத்துவிட்டீர். எனது ஆண்மைத்தனமான பயிற்சிகள் அனைத்தும் உம் காலடியில் நசுக்கப்பட்டுக் கிடக்கின்றன. இப்போது எனக்கு உமது பாடங்களைக் கற்பிப்பீராக! வலிமையற்றவர்களின் சக்தியையும், ஆயுதங்களற்ற கரத்தின் ஆயுதத்தையும் எனக்கு அளிப்பீராக!

              மதனன்: நான் உனது நண்பனாக இருப்பேன். உலகையே வெல்லும் சக்திபடைத்த அந்த அர்ஜுனனை உன்முன்பு கொண்டுவந்து நிறுத்தி, அவனுடைய எதிர்ப்பின் தண்டனையை உன்கரத்தால் அவனைப் பெறவைப்பேன்.

              சித்ரா: எனக்கு மட்டும் நிறைய அவகாசம் இருந்திருந்தால் கடவுள்கள் யாரையும் உதவி கேட்காமல்  சிறிது சிறிதாக அவருடைய இதயத்தை வெற்றி கொள்ள முயற்சித்திருப்பேன். அவருக்கு உதவியாக அவர் பக்கத்தில் ஒரு தோழமையாக நிற்பேன்; அவருடைய தேரின் சாரதியாக அந்தக்  குதிரைகளைச் செலுத்துவேன்; அவர் வேட்டைக்குச் செல்லும்போது உடன் செல்வேன்; அவருடைய கூடாரத்தின் வாயிலில் இரவில் காவல் காப்பேன். எளியோரைக் காப்பதும், தேவையானபோதில் தர்மத்தை நிலைநாட்டுவதுமான ஒரு க்ஷத்திரியனின் கடமைகளில் துணை நிற்பேன்; இறுதியில், கட்டாயமாக ஒருநாள் அவர் ஆச்சரியத்துடன் என்னை நோக்கி, “யாரிந்த இளைஞன்? எனது முன்பிறப்பில் இருந்த எனதடிமைகளில் ஒருவன் நான்செய்த புண்ணியத்தால் என்னைத் தொடர்ந்து வந்தானோ?” என எண்ணுவார். நான் ஒன்றும் அவநம்பிக்கையால் நாள்முழுதும் துயரத்திலாழ்ந்தும், இரவில் ஒரு விதவையைப்போல் கண்ணீர் வடித்தும், பகலில் பொறுமையாகப் புன்னகை முகத்துடனும் இருப்பவளல்லள். எனது ஆசையெனும் மலர் கனிந்து பழமாகும்வரை உதிர்ந்து மண்ணில் விழுந்துவிடாது. வாழ்நாளின் இடைவிடாத முயற்சியால் எனது உண்மைவடிவை உணர்ந்து அதனை மதிப்பிற்குரியதாக்குவேன். உலகையே வெற்றிகொள்ளும் காதல்கடவுளே! அதற்காக நான் உம்மிடம் வந்துள்ளேன். வசந்தனே! பருவங்களைக்காக்கும் இளமைவாய்ந்த தலைவனே! எனது இளமையான உடலிலிருந்து இந்தப் புராதனமான அநீதியான கவர்ச்சியற்ற கட்டமைப்பை நீக்குவீராக! ஒரே ஒரு நாள் மட்டுமே என் உள்ளத்தில் மலர்ந்துள்ள காதலின் அழகுக்கு இணையான அழகுவாய்ந்தவளாக என்னை மாற்றுவீர்; ஒரேயொரு நாள் மட்டும் எனக்குப் பரிபூரணமான அழகினைத் தருவீர்; அதனைக்கொண்டு நான் தொடரும் நாட்களுக்கெல்லாம் மறுமொழி அளிப்பேன்.

              மதனன்: பெண்ணே! நான் உனக்கு இவ்வரத்தை அளிக்கிறேன்.

              வசந்தன்: ஒரேயொரு நாளுக்கு மட்டுமல்ல, ஒரு முழு ஆண்டிற்கு உனக்கு நான் வசந்த மலர்களின் வசீகரத்தை உனது உடலில் தவழச் செய்கிறேன்.

    [தொடரும்]

     

     

     

     

    Share
  • மருதத்தச்சன்

    மீனாட்சி பாலகணேஷ்

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தமிழின் பலசுவைகளையும் இலக்கியநயங்களையும் கொண்டமைந்து படிப்போருக்கு இன்பமூட்டுகின்றன. இவற்றுள் ஒன்றே ஐவகை நிலங்களின் செழிப்பினை விளக்குவது. பாட்டுடைத்தலைவன் அல்லது தலைவியின் நாட்டின் வளப்பத்தைக் கூறுங்கால் ஐவகை நிலங்களின் செழிப்பையும் அழகுற உவமைநயங்களுடன் பாடுவது புலவர்களின் வழக்கம். இவை புலவரின் கற்பனைக்கேற்ப எப்பருவத்தில் வேண்டுமாயினும் அமையும். அலைமகளையும் கலைமகளையும் மருதநிலத்தில் வாழ்பவர்களாகச் சித்தரிப்பது வழக்கு. ஏனெனில் இருவரும் பங்கயத்தில் உறைபவர்கள். பங்கயமெனும் தாமரை மலரானது மருதநிலத்துக்குரிய மலராகும். இதில் செந்தாமரையில் அலைமகளெனும் இலக்குமியும், வெண்தாமரை மலரில் கலைமகளாம் சரசுவதியும் உறைகின்றனர்.

    Vishnu- Lakshmi

    குமரகுருபரனார் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் முதல் பாட்டிலேயே அழகுபட ஒரு சுவையான மருதநிலத்துச் செய்தியைக் கூறுகிறார். முதல்பருவமான காப்புப்பருவத்தின் முதல்பாடலில் திருமாலின் பெருமையைக் கூறும்போது அவன் தமிழ்மீது கொண்ட காதலால் தமிழ்பாடும் புலவனின் பின்னால் தனது பைந்நாகப்பாயைச் சுருட்டிக்கொண்டு விரைவதனை அழகுற விவரிக்கிறார்.1

    காதல்மனையாளை விட்டுப்பிரியத் திருமாலுக்கு மனமில்லை. ஆகவே வயலில் பூத்து நிற்கும் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் அவளை அந்த வழுக்கும் சேறுநிறைந்த வயலில் தனது கையால் அணைத்தபடி அவள் விழுந்துவிடாமல் பற்றிக்கொண்டு உடனழைத்தவாறு தமிழ்ப்புலவரின்பின் விரைகிறான். மிக அழகான கற்பனை!

    கணிகொண்ட தண்துழாய்க்காடலைத் தோடுதேம்

    கலுழிபாய்ந் தளறுசெய்யக்

    கழனிபடு நடவையில் கமலத்தணங்கரசொர்

    கையணை முகந்துசெல்லப்

    பணிகொண்ட முடவுப் படப்பாய்ச்சுருட்டுப்

    பணைத்தோள் எருத்தலைப்பப்

    பழமறைகள் முறையிடப்பைந்தமிழ்ப் பின்சென்ற

    பச்சைப் பசுங்கொண்டலே.

    (மீனாட்சியம்மை பி. த.- காப்புப்பருவம்- குமரகுருபரர்)

    ‘கையணை முகந்துசெல்ல,’ எனும் சொற்கள் மிகவும் நயமாக, ‘கையால் அணைகொடுத்து, அவளை அன்போடு தழுவி அணைத்து நடத்திச் செல்ல’ எனும் பொருள்படும்.

    ***

    அடுத்து, தாலப்பருவத்தினின்று ஒரு அழகான கற்பனைக்குவியல்!

    கயல்மீன்கள் துள்ளிக் குதித்து மகிழ்கின்றன. மேகங்கள் பொழிகின்ற மழைநீரிலும், சுழியை வீசியெறியும் கழிமுகத்திலும், சிறிய குழிகளிலும், கரையிலும், கரையை மோதுகின்ற அலையிலும், தலையை விரித்துக் கொண்டிருக்கும் தாழம்புதர்களிலும், இளம்பெண்கள் விளையாடுமிடங்களிலும், நெற்போர்களிலும், அதன் பக்கமாக அமைந்துள்ள உழவர்களின் வீடுகளில் உள்ள நெற்கூடுகளிலும் குளத்தில் நிறைந்த நீரிலும் இந்தக் கயல்மீன்கள் குதித்துக் கூத்தாடிப் போர்புரிந்து மகிழ்கின்றன. இவை மருதநிலத்துச் செழிப்பினைப் புலப்படுத்துகின்றன.

    இவற்றை, இக்கயல்மீன்களை மதுரைநகர்வாழ் கணிகையரின் கண்களுக்கு உவமையாக்கி அவை புரியும் போரினை நயம்பட விளக்குகிறார் புலவர்.

    அப்பெண்டிர்தம் கண்களாகிய கெண்டைமீன்கள், தேரில் செல்லும் இளைஞர்களுடைய மார்பிலும், அவர்களுடைய செல்வச் செழிப்பிலும், போர்புரியும் ஒப்பில்லாத கட்டமைந்த வில்லிலும், திரண்ட மலைபோன்ற தோள்களிலும், ஊடலை நீக்கிட அவர்கள் பெண்டிர் கால்களில் பணியும்போது உதிர்ந்த மாலையிலும், சென்று போர் செய்கின்றன; அத்தகைய மதுரைக்கு அரசியே! தாலோ! தாலேலோ! சங்கம் வளர்ந்திட நின்று அருள்செய்த பொற்கொடியே! தாலோ! தாலேலோ!

    நீரிலுள்ள கயல்மீன்கள் பெண்களின் கண்களாகிய கெண்டைமீன்களுக்கு உவமையாகின்றன.

    உவமைநயம் மட்டுமின்றி, சந்தநயமும் பொருந்தியதொரு சிறப்பான பாடல் இதுவாகும். பாடியோ பொருள்கூட்டிப் படித்தோ பார்த்தாலே இதனழகு கண்முன் விரியும்!

    காரிற் பொழிமழை நீரிற்சுழியெறி

    கழியிற் சிறுகுழியிற்

    கரையிற் கரைபொரு திரையிற்றலைவிரி

    கண்டலில் வண்டலினெற்

    போரிற் களநிறை சேரிற்குளநிறை

    புனலிற் பொருகயலிற்

    பொழிலிற் சுருள்புரி குழலிற்கணிகையர்

    குழையிற் பொருகயல்போய்த்

    தேரிற் குமரர்கள் மார்பிற்பொலிதரு

    திருவிற் பொருவில்வரிச்

    சிலையிற் றிரள்புய மலையிற்புலவி

    திருத்திட ஊழ்த்தமுடித்

    தாரிற் பொருதிடு மதுரைத்துரைமகள்

    தாலோ தாலேலோ

    சங்கம் வளர்ந்திட நின்றபொலன்கொடி

    தாலோதாலேலோ

    (மீனாட்சியம்மை பி. த.- தாலப்பருவம்- குமரகுருபரர்)

    இன்னும் பிறிதோரிடத்திலும் மருதநிலத்துச் சிறப்பை நயம்பட உரைக்கிறார் குமரகுருபரனார்.

    Paddy-field (1)

    அழகான மருதநிலத்து வயல். அந்தப் பசிய மருதநிலத்தில் திருமகள் குடியிருக்க விருப்பம் கொண்டுள்ளாள். அவள் ‘மருதம்’ எனும் பெயர்கொண்ட தச்சனிடம் தனக்காக அழகான ஒரு வீட்டினை அமைக்க வேண்டுகிறாள். அவள் விருப்பம் என்னவென்று தெரிந்த தச்சன் அவன். அவன் அழகான பல தாமரைப்பூக்களாகிய கோவில்கள் பலவற்றை அவளுக்காகச் சமைத்தருளுகிறான். இனி அவள் குடிபுக ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமே! அவள் உள்ளே புகுவதற்காக அவ்வீடுகளின் கதவுகளைத் திறந்து வைக்க வேண்டாமா?

    இதற்காக வண்டுகள் துணை செய்கின்றனவாம்! மகரந்தப்பொடியை அளைந்து தேனருவிப் பெருக்கில் துளைந்து மூழ்கி விளையாடும் அறுகால் தும்பிகளாகிய அவ்வண்டுகள் விடியற்காலையில் அத்தாமரைமலர் வீடுகளின் பசிய இதழ்களெனும் கதவுகளைத் திறக்கின்றனவாம்! பின் இலக்குமி குடியேற ஏது தடை? இவ்வாறு குமரகுருபரர் மதுரையின் மருதநில அழகினைச் சொல்லோவியமாக நம் கண்முன்பு வரைகின்றார்.

    ‘சுண்ணந் திமிர்ந்து தேனருவி

    துளைந்தா டறுகால் தும்பிபசுந்

    தோட்டுக் கதவம் திறப்பமலர்த்

    தோகை குடிபுக் கோகைசெயும்

    தண்ணங் கமலக் கோயில்பல

    சமைத்த மருதத் தச்சன்………. ‘

    (மீனாட்சியம்மை பி. த.- வருகைப்பருவம்- குமரகுருபரர்)

    இவ்வாறு எண்ணற்ற இலக்கிய நயங்களைக் கொண்டு பிள்ளைத்தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. இன்னும் கண்டு களிப்போம்.

    *****

    மீனாட்சி பாலகணேஷ் . இலக்கியச்சித்திரம்- இனிய பிள்ளைத்தமிழ்-1- வல்லமை – செப்.9, 2015. )

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ************

    Share
  • ஆறு முகமான பொருள்!

    மீனாட்சி பாலகணேஷ்

    குழந்தை முருகனின் பன்னிரு திருக்கரங்களின் பெருமையைச் சென்ற கட்டுரையில் கண்டோம். ஆறுமுகங்களின் அருமைபெருமைகளையும் கண்டுமகிழலாமே! முருகனைப்பாடுவோர் அனைவரும் தமது கற்பனைக்கேற்றவண்ணம் அவனுடைய திருமுகங்கள் செய்வதனைக் கூறிமகிழ்ந்தனர். அவர்களுடைய விளக்கங்கள் ஒன்றுக்கொன்று சளைக்காமல் அனைத்துமே அழகுறப் பல பொருள்களை விளக்கியருளுகின்றன.

    2
    முதலில் ஐங்கரன், முருகன் இருவரின் ஒரு சிறு விளையாட்டைக் கண்டு ரசிக்கலாம்.
    ஐங்கரனான கணேசன் தன் தந்தையான அரனிடத்தில் வந்து, “ஐய! என் செவியை முருகன் கிள்ளினான்,” என முறையிடுகிறான். ஐங்கரனுடையது பெரிய முறம்போலும் யானைச்செவி. அது குறும்பனான முருகனின் கவனத்தைக் கவர்ந்தது. கிள்ளியும் விட்டான். தந்தை என்ன செய்வார்? தன் இளையமகனிடம், “ஏன் இப்படிச் செய்தாய்?” எனக்கேட்கவே, “அண்ணன் எனது ஆறுமுகங்களில் விளங்கும் கண்களை எண்ணினான்,” எனச் சிணுங்கினான். “ஓ! அப்படியா சேதி? நீ ஏனப்பா அவ்வாறு செய்தாய்?” என விநாயகனிடம் அண்ணல் கேட்க, “அவன் எனது தும்பிக்கையினை முழம் போட்டளக்கிறான் தந்தையே!” என்றிட, தாயும் தந்தையுமான அன்னையும் அத்தனும் இவ்வுரையாடலைக்கேட்டு நகைக்கின்றனராம். இது துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எனும் ஒரு பக்தரின் கற்பனை.

    ஆறுமுகங்களும், வேழமுகமும் அடியார்களின் கற்பனைகளை எவ்வாறெல்லாம் விரிக்கின்றன?

    ‘அரனவ னிடத்திலே ஐங்கரன் வந்துதான்
    ஐய!என் செவியைமிகவும்
    அறுமுகன் கிள்ளினான் என்றே சிணுங்கிடவும்
    அத்தன்வே லவனைநோக்கி
    விரைவுடன் வினவவே, அண்ணன்என் சென்னியில்
    விளங்குகண் எண்ணினன்என
    வெம்பிடும் பிள்ளையைப் பார்த்துநீ அப்படியும்
    விகடம்ஏன் செய்தாய்?என
    மருவும்என் கைந்நீளம் முழம்அளந் தான்என்ன
    மயிலவன் நகைத்துநிற்க
    …………………………………………………’

    (துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்)

    சிவபிரானுடைய ஐந்து திருமுகங்கள் ‘பரத்’தையும் உமையம்மையின் திருமுகம் ‘இகத்’தையும் அளிக்கவல்லன. முருகப்பெருமானுடைய ஆறு திருமுகங்கள் இவையனைத்தும் சேர்ந்ததே! இவை இகபர நன்மைகளை அடியார்களுக்கு அளிக்க வல்லன.

    1
    அருணகிரிநாதர் முருகனின் ஆறுமுகங்களைப் பாடுகிறார். பெருமைவாய்ந்த மயில்மீதேறி திருவிளையாடல்கள் புரிந்தது உனது ஒரு முகம்தான்! சிவபிரானுக்கு பிரணவ உபதேசம் செய்ததும் உனது ஒருமுகமே! உனது பெருமைகளைக் கூறித்துதிக்கும் அடியார்களின் இருவினைகளையும் தீர்த்துவைப்பதும் உன் ஒருமுகம்தான். கிரவுஞ்சமலையை உருவும்படியாக வேலைச் செலுத்தி நின்றதும் உன் ஒருமுகமேதான்!

    உன் எதிரியான சூரபதுமனை வதைத்ததும் உன் ஒருமுகமே! வள்ளியம்மையை மணம்புரிய வேண்டி விருப்புடன் வந்ததும் உன் ஒருமுகமே!

    அவ்வாறாயின், நீ ஆறுமுகங்களைக் கொண்டு நீ விளங்குவதன் பொருளை எனக்கு உணர்த்தியருளுவாயாக!’ எனவொரு வேண்டுகோளையும் முன்வைக்கிறார் குருநாதர்.

    ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
    ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
    கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
    குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
    மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
    வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
    ஆறுமுகமானபொருள் நீயருளல் வேண்டும்
    ………………………………………………
    (அருணகிரிநாதர் திருப்புகழ்)

    ஐந்துபிராயம்வரை பேசாதிருந்து பின் முருகனருளால் பேசும்திறம் பெற்ற குமரகுருபரர், அச்சிறு வயதிலேயே முருகனருளால் அவன்மீது இயற்றிய முதல்நூலான கந்தர் கலிவெண்பாவில் அவனுடைய திருவடிவை அணுவணுவாகச் சுவைபட, பக்திரசம் பொங்கப் பாடியுள்ளார்.

    4
    ‘அசுரர்களால் போற்றப்பட்ட சூரபதுமனைக் கொன்ற வீரம் பொருந்திய திருமுகம்;
    ஊழ்வினையைக் களைந்து அழியாத பேரின்பப் பெருவாழ்வினைத் தரும் சிவந்த தாமரைமலர் போன்ற அருள்சிந்தும் முகம்;

    உயிர்களைப் பிணிக்கும் ஆணவமெனும் இருளை ஓட்டிடப் பல கதிரவர்கள் ஒன்றாகத் திரண்டது போன்ற கருணையொளி வீசும் திருமுகம்;

    நீங்காத பாச இருளை அகற்றிப் பல கதிரவர்கள் போலத் திகழும் வதனமாகிய மண்டலமுகம்;

    அன்புடன் தன்னை அடைய விரும்பும் வள்ளியம்மைக்கும் தெய்வயானை எனும் மங்கைக்கும் விருப்பையளிக்கும் காதல்முகம்;

    ஆறாவன்புடன் வந்து தனது திருவடியில் சேர்ந்தோர் மகிழுமாறு அவர்கள் வேண்டும் பல வரங்களைத் தரும் தெய்வமுகம்,’ எனவெல்லாம் போற்றுகிறார் குமரகுருபரர்.

    ‘வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூரனைத் தடிந்து
    தெவ்வர் உயிர்சிந்தும் திருமுகமும் ……………………
    ……………………………………………………………..’

    (கந்தர் கலிவெண்பா- குமரகுருபரர்)

    இது பக்தியின் பெருக்கில் விளைந்த கவிதைநயம்!

    உமையன்னை மீதான பிள்ளைத்தமிழ் நூல்களில் அவளுடைய குழந்தைகள் செய்யும் குறும்பு விளையாட்டுகள் குறிப்பிடப்படுவது வழக்கம். அவ்வகையில் அழகிய சொக்கநாத பிள்ளை அவர்கள் இயற்றிய நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழில் நயம் மிகுந்ததோர் வருகைப்பருவப்பாடல்:

    3
    ஐங்கரத்தோனாகிய கணேசன் தன் தம்பியை நோக்கி, “உனக்கு ஏன் ஆறுமுகங்கள்?” எனக் கேட்க, அவன் அதற்கு, “நம்மை ஈன்றவர் என்னைச் சேர்த்தெடுத்து அள்ளியணைத்து முத்தங்கொடுத்து விளையாடுவதற்கு,” என மொழிகிறான். குழந்தைமையின் பேதைமை செறிந்த சுட்டிப்பேச்சு! அத்துணை கன்னங்களிலும் முத்தம் கிடைத்தால் பேரானந்தம் தானே அக்குழந்தைக்கு? இதைக்கேட்ட உமையம்மை, “இவ்வாறான காரணத்தை இன்றல்லவோ நானறிந்தேன் செல்வா,” என அவனை அள்ளியணைத்து உச்சிமுகர்ந்து முத்தமிடுகிறாளாம்.

    ‘கலையை வளைத்த பிறைக்கோட்டு ஐங்கரத்தோன்
    துணைவன்தனை நோக்கி
    கவின்தோய் முகமாறு உன் உருவின்
    காணும் நிமித்தம் கழறுக……
    ……………………………………………
    தலையை வளைத்து முத்தமிடும் சயிலக்
    குயிலே வருகவே!
    சாலிப்பதிவாழ் காந்திமதித் தாயே
    வருக வருகவே!
    (நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்)

    இதனை முத்தப்பருவமும் வருகைப்பருவமும் இணைந்திலங்கும் பாடல் எனக் கொள்ளலாமா?

    புலவர் நடேச கவுண்டர் இயற்றிய திருநிலைநாயகி பிள்ளைத்தமிழின் முத்தப்பருவப் பாடலொன்று முதலில் நாம்கண்ட துறைமங்கலத்தாரின் பாடலைப்போன்றே நகைச்சுவைமிகுந்து விளங்குகிறது!

    மதம்பெருகும் வாரணமுகனின் தும்பிக்கையைப் பிடித்திழுத்து முழம்போட்டு அளக்கும் தம்பி முருகன், “இவன் மூக்கு மிகப்பெரிது,” என நகையாடுகிறான். கணேசன் வாளாவிருப்பானா? “இவனுக்கு எத்தனை முகங்கள்! சளிபிடித்தால் எப்படிப்பட்ட துன்பம்? எத்தனை மூக்குகளை சமாளிக்க வேண்டும்?” எனக்கேட்டு நகைக்கிறான். இவ்வாறு கலகமிட்டு வரும் இருகுழந்தைகளையும் பார்த்து திருநிலை நாயகியான உமையம்மை, “இது என் யானைக்குட்டி! இது என் சிங்கக்குட்டி!” என்று கொஞ்சி மகிழ்கிறாள், எனப்பாடியுள்ளார் புலவர்.

    பெருகு மதவா ரணமுகத்துப்
    பிள்ளைமுகத்துக் கையிழுத்துப்
    பிடித்து முழம்போட் டையவிவன்
    பெரிய மூக்க னெனநகைக்க
    ………………………………………….
    முந்நீர் மிதந்த தோணிபுர
    முதல்வீ முத்தம் தருகவே!
    (திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ் முத்தப்பருவம்- நடேச கவுண்டர்)

    படிக்குந்தோறும் புதிது புதிதாய்க் காணும் பல்வேறு சுவைகள்! இலக்கிய நயங்கள்!
    இவையே பிள்ளைத்தமிழின் அள்ளக்குறையாத அருஞ்சுவையாகும்!

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}
    ***********

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி – 17

    மீனாட்சி பாலகணேஷ்

    நீயே எனக்கு எல்லாமாக இருக்கிறாய் என நான் கூறிக் கொள்ளும்
    வகையில் ‘என்’னுடைய ஒரு சிறு பகுதி மட்டும் என்னிடம்
    எஞ்சியிருக்கட்டும்’ – தாகூர் (கீதாஞ்சலி).
    ********************************

    unnamed (1)

    ஆடலரசு பணிபுரியும் மருத்துவமனை. அவனுடைய கன்ஸல்டிங் ரூமில் ஜிம், கீதா இருவரும் அமர்ந்து கொண்டு கவலை தோய்ந்த முகத்துடன் ஆடலரசு கூறுவதைக் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

    ” உன் சிந்தனையின் ஓட்டத்தில் உன் அன்பை, கருணையைத் தன்னலமற்றதாக்கிப் பார் என்று கூறினேன், அவள் முகம் எப்படி ஒளிர்ந்தது தெரியுமா அதைக் கேட்டு…

    “…எனக்குக் கூட கடைசி நிமிஷத்தில் தான் அவள் திருவண்ணாமலைக்குக் கிளம்பிய விஷயம் தெரியும். டிரைவர் மாத்யூவைக் கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டுத் தானே டிரைவ் செய்து கொண்டு போனாளாம்.

    “திரும்பி வந்தவள் நேராக என்னுடைய இந்த அறைக்குள் வந்தாள். அப்பப்பா, முகத்தில் என்ன தீவிரம். அவள் சொன்னதை எல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் உடல் சிலிர்க்கிறதே ஜிம்!” ஆடலரசு இங்கு சிறிது மௌனமானான்; மனக்கண்ணில் அந்த உரையாடலை ‘ரீ ப்ளே” செய்து பார்ப்பது போல….

    ***

    மனதில் தெளிவு பிறந்ததும் சைலஜாவுக்குத் திருவண்ணாமலையில் இருப்புக் கொள்ளவில்லை. பென்ஸைப் புயல்வேகத்தில் ஓட்டிக் கொண்டு சென்னை வந்து சேர்ந்துவிட்டாள். அவளுடைய திறமை மிகுந்த சாரத்தியத்தை மாத்யூ பார்த்திருந்தால் அசந்து போயிருப்பார். வந்தவள், நேராக ஆடலரசின் ஆஸ்பத்திரிக்குப் போனாள்.

    “டாக்டர் இருக்கிறாரா? அர்ஜென்டாகப் பார்க்கணும்.” புருவத்தை வியப்பில் உயர்த்திய செக்ரெடரி, இன்டர்காமில் விசாரித்து அவளை உள்ளே அனுப்பினாள்.

    அன்றைய கேஸ்களின் விவரங்களைக் குறிப்பெழுதிக் கொண்டிருந்த அரசு, பேனாவை வைத்துவிட்டு நிமிர்ந்தான். “எஸ்…” என்ற தொனியில் புருவம் கேள்வியைத் தொக்கியது.

    “அரசு, உங்களிடம் ஒரு யாசகத்துக்கு வந்திருக்கிறேன். அன்று உங்களிடம் பேச வந்தபோது அந்த மாற்றுச் சிறுநீரகம் தேவைப்படும் ஒரு எஞ்சினீயரிங் கல்லூரி மாணவனைப் பற்றிச் சொன்னீர்களல்லவா? அவன் பெற்றோர் வசதி இல்லாதவர்கள். தந்தை, ரிடையரான ஸ்கூல் வாத்தியார். மூன்று பெண்களுக்குப் பின் பிறந்த மிகப் புத்திசாலியான பையன். திடீரென்று இப்படி கிட்னி பழுதாகி டயாலிஸிஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கூறினீர்களே…

    “என் கிட்னி ஒன்று அவனுக்குப் பொருந்துமா என்று பாருங்களேன். ஐ வான்ட் டு ஹெல்ப் ஹிம். ப்ளீஸ், நான் அவனுக்கு உதவ நீங்கள் எனக்கு உதவுங்களேன்….”

    ஆடலரசு திடுக்கிட்டு எழுந்து ஷீலாவின் தோள்களைப் பற்றி அமர வைத்து, குளிர்ந்த நீர் குடிக்கக்கொடுத்து, முதலில் அவளை ஆசுவாசப் படுத்தினான்.

    “சைலஜா, நீ யோசித்துத்தான் பேசுகிறாயா? இது என்ன திடீர் என்று இப்படி ஒரு யோசனை? என்ன ஆயிற்றம்மா?”

    இப்போது அவள் குரல் சமனப்பட்டிருந்தது. “அரசு, என்னை நானே தேடிக் கண்டுகொண்ட விடை இதுதான். ஜிம்முடன் நான் ஒரு புது வாழ்வு தொடங்கவேண்டும் என்றால் நான் திரும்ப உயிர்த்து வர வேண்டும். இதற்கு ஒரே வழி தன்னலமற்ற சிந்தனை என்றீர்கள். முன்பின் நான் பார்க்காத ஒரு உயிர் இந்த தானத்தின் மூலம் நன்றாக உயிர் வாழ முடியும் எனில், என் புதுவாழ்வை நான் தொடங்க அதை தெய்வத்தின் உத்தரவாக எடுத்துக்கொள்வேன். ப்ளீஸ், என் சிறுநீரகம் ஒன்று ‘மாட்ச்’ ஆகுமா என்று பாருங்கள்; நான் முடிவை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.”

    “உணர்ச்சி மிகுதியால் அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. முதலில் ஆரோக்கியமான உடல்நிலையை அறிய உண்டான பரிசோதனைகளை எல்லாம் செய்து விட்டு ‘டிஷ்யூ மாட்ச்’ செய்ய டெஸ்ட் எடுத்தோம்.

    “வாட் வாஸ் த ரிஸல்ட் டாக்டர்?” கீதா குறுக்கிட்டாள். ஜிம் கூறினான், “டார்லிங், இப்போது நமக்குத் தான் தெரியுமே, அது மாட்ச் ஆனதும், ஸர்ஜரி நடந்து முடிந்ததும் எல்லாம். உன் அம்மா இப்போது ஆஸ்பத்திரியில் தான் இருக்கிறாள்.” சொல்லியபடி தன் மகளை இறுக அணைத்துக் கொண்டு, ஆண்டவனுக்கு நன்றி கூறுவது போல அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

    “ஜிம், ரிஸல்ட் வரக் காத்திருந்த நேரம் அவளுக்கு நரகமாக இருந்தது. எல்லாம் மாட்ச் ஆகிறது என்றதும், முதல் தடவையாக என்னிடம், ‘ஜிம் இப்போது என்னருகில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்,’ என்று குறைப்பட்டுக் கொண்டாள். நீங்களும் இதோ வந்து விட்டீர்கள்…”

    “டக், டக்.” கதவு தட்டப் பட்டது. செக்ரெடரியின் தலை உள்ளே நீண்டது. “டாக்டர், ஆபரேஷன் தியேட்டரில் இருந்து கூப்பிடுகிறார்கள், மேடம் ஷீலாவைப் பற்றி…”

    பாய்ந்து போனை எடுத்துப் பேசிய ஆடலரசு, “சைலா இஸ் ஆல்ரைட். என்னைப் பார்க்கணுமாம். நீங்களும் வாங்க.”

    ‘ட்ரிப்’ டியூப், ஆபரேஷன் ரூம் உடை, வெளிறிய முகம், இவற்றின் நடுவே கண்கள் மட்டும் அனைத்தையும் மீறித் தெளிவாகச் சுடர் விட்டன. ஜிம்மைக் கண்டதும், அவன் கரங்களைப் பற்றிக்கொண்டு, “இனி என் பயணம் உன்னோடுதான் தொடரப் போகிறது ஜிம்.” என்று கூறியவள், கண்களை மூடியபடி நிம்மதியான உறக்கத்திலாழ்ந்தாள்.

    ***

    ஷீலாவின் பங்களா விழாக்கோலம் பூண்டிருந்தது. புரியவில்லையா? ஒரு திருமண ரிசப்ஷன் நடந்து கொண்டிருந்தது. யாருடைய திருமணமா? கீதாவுக்குத் திருமணம் நிகழத்தான் இன்னும் சில ஆண்டுகள் செல்ல வேண்டுமே!

    ஜேம்ஸ், சைலஜாவினுடைய மறுமணம்தான் இங்கே கொண்டாடப்படுகிறது. மிக எளிய முறையில் திருமணம் பதிவு செய்யப்பட்டாலும், அமுதா, ஆடலரசு, செக்ரெடரி ப்ரியா, இன்னும் பல நன்மைவிரும்பிகளின் விருப்பப்படி, பெரிதாக ரிசப்ஷனை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆடலரசு தான் எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தான்.

    சைலஜாவின் சிறுநீரகத்தைத் தானம் பெற்றுக் கொண்ட மாணவன் நல்ல முறையில் தேறி வந்தான்.

    “என் பையனுக்கு உயிரு கொடுத்த மகராசி நீங்க நல்லா இருக்கணும்.” எனப் பையனின் தாயார் சைலாவின் கரங்களைப் பற்றிக் கொண்டு கண்ணீருகுத்து உணர்ச்சி வசப்பட்டாள். இதுவே தன் புனர்வாழ்வுக்கான வாழ்த்தாகப்பட்டது சைலாவுக்கு.

    உடல் நலம் தேறியதும் முதலில் ஜிம்முடன் தன் மறுமணத்தை ரிஜிஸ்தர் செய்துகொண்டாள். ஆடலரசின் ஏற்பாட்டின்படி கீதாஞ்சலியின் நடன நிகழ்ச்சி கலைவிருந்தாகப் படைக்கப் பட்டுக் கொண்டிருந்தது. தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் நாட்களை வீணாக்காமல், ஒரு பிரபல ஆசிரியரிடம் இன்னும் கொஞ்சம் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்திருந்தாள் சைலஜா. மெருகேறிய கலை மேடையில் பிரகாசித்தது. சைலாவின் தாயுள்ளம் பெருமையில் பூரித்து மகிழ்ந்தது. தன்னையே மேடையில் கண்டு தன் சிறுமிப்பருவத்து நினைவுகளில் லயித்தாள்.

    ‘நடனமாடினார்’ என்ற பாடலுக்கு கீதா ஆடியபோது, ஷீலா வேண்டுமென்றே ஆடலரசை வம்புக்கிழுத்து, சிறு வயதில் தன் நடனத்தை அவன் ஒளிந்திருந்து பார்த்ததையும். அதிகமாகச் சாய்ந்ததால் கதவு எதிர்பாராமல் திறந்து கொண்டதையும், ஜிம்மிற்குக் கூறி ஆடலரசை கூச்சப்பட வைத்தாள்.

    ஸ்பெஷலாக, ‘வருகலாமோ’ பாடலுக்கு கீதாவை நடனம் கற்றுக் கொள்ள வைத்திருந்தாள். ஊனும் உயிரும் உருக நின்றபடி தன் பெண்ணின் நடனத்திறமையை ரசித்தாள். தனிமையாக இருக்கும்போதில் இதன் பொருளை ஜிம்முக்கு விளக்கிச்சொல்ல வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

    ‘பவழ மல்லிகை’ காம்பினேஷன் பட்டுப் புடைவையில் உயிர் ஓவியமாய் மின்னிய சைலஜாவைப் பார்த்து ரசிக்க ஜிம்மிற்கு இரு கண்கள் போதவில்லை. பட்டு வேட்டி சட்டையில் நெற்றியில் சந்தனக் கீற்றுடன் அவனும் இந்தியக்களை வீச நின்றான்.

    நடனம் முடிந்து டின்னர் தொடங்கியது. ராபர்ட்ஸ் குடும்பம் அமர்ந்திருந்த டேபிளைச் சுற்றி ஒரே கும்மாளம்.

    “சைலா! குழந்தை வாயில லட்டுவைப் போடம்மா. உங்க வாழ்க்கை இனிப்பா ஆரம்பிக்கட்டும்!” அமுதா.

    “ஷீலா, இந்த பனானா சிப்ஸ் நீ பண்ணித்தருவது போல அவ்வளவு டேஸ்டியாக இல்லை.” ஜிம்.

    “மம், இந்த ஸ்வீட் பாரிட்ஜை…” என கீதா ஆரம்பித்ததும், “பாயசம் என்று சொல் கீதா.” என அரசு திருத்த, “எஸ், பாயசத்தை நீயும் டாடியும் ஒரே கப்பிலிருந்து ஒரே சமயம் சாப்பிட வேண்டும். முடியுமா?” என வம்புக்கிழுத்தாள்.

    இன்னும் சம்பிரதாயமான சீண்டல்களுடன் விருந்து நடைபெற்றது.

    மெல்ல ஒவ்வொருவராக மனமேயின்றி விடைபெற்றுச் செல்ல ஆரம்பித்தனர்.

    இந்த தம்பதிகளை வாழ்த்தி விடைபெற, சிறுநீரகம் பெற்றுக் கொண்ட மாணவனின் தந்தை, ரிடையர்ட் பள்ளி ஆசிரியர் வந்திருந்தார். ஒரு கவிதைத்தொகுதியை தன் பரிசாக அவர் மகன் அனுப்பியிருந்தான். முதல் பக்கத்தில், ‘தன்னுடலின் ஒரு பகுதியைத் தந்து என்னுயிர் காத்த இனிய சகோதரி, இன்று நான் புதிய உயிராகி உன்னை வாழ்த்தி வணங்குகிறேன், ரவி.” என்று கையொப்பமிட்டிருந்தான்.

    “இது எனக்குமே புனர்ஜென்மம், ஐயா.” என்றாள் ஷீலா அப்பெரியவரிடம். கையை உயர்த்தி ஜிம்மையும் ஷீலாவையும் ஆசிர்வதித்தார் அவர். ஷீலா கூறியதன் பொருள் அருகிலிருந்த ஆடலரசுக்கும் அமுதாவுக்கும் மட்டுமே ‘தெள்’ளென விளங்கிற்று.

    அமுதா, ஆடலரசுக்கு வீடுதிரும்ப மனமே இல்லை. ஜிம், ஷீலாவுக்கும் அவர்களுக்கு விடை தர விருப்பமே இல்லை!

    “இன்றிரவு இங்கேயே தங்கி விடுங்களேன். நாம் பேசவும் பிளான் செய்யவும் நிறைய விஷயங்கள் உள்ளனவே.” என்றான் ஜிம்.

    “புதுமணத் தம்பதிகளுக்குத் தொந்தரவாக நாங்கள் எதற்கு? கீதாவையும் கூட்டிக்கொண்டு எங்கள் வீடுதிரும்பலாம் என எண்ணினோம்.” அமுதா.

    “ஐயையோ, இல்லை, இல்லை. உங்கள் உதவியால் தான் இந்தப் புது வாழ்வு சாத்தியமானது. ஆடலரசு, உங்கள் தேவதையின் கட்டளை இது. இருங்களேன், இங்கு.” இறைஞ்சினாள் ஷீலா.

    மிகுந்த தயக்கத்தின் பின்னர் அமுதாவும் ஆடலரசும் இதற்கு ஒப்புக் கொண்டனர்.

    ரிஸப்ஷனுக்காகத் தோட்டத்தில் போடப்பட்டிருந்த மின்விளக்குகள் சில இன்னும் ஒளிவீசின. அந்த வெளிச்சத்தில் தோட்டத்தைச் சுற்றி நடந்தபடி அந்த அன்புக் குடும்பம் பலப்பல விஷயங்களைப் பற்றிப் பேசி மகிழ்ந்தது.

    பவழமல்லி மலர்கள் விரிய ஆரம்பித்து விட்டன. ஜிம் அதிசிரத்தையுடன் ஐந்தாறு மலர்களைப் பறித்து எடுத்து வந்து அதன் இயல்புகளைத் தன் மகள் கீதாவுக்கு விளக்க முற்பட்டான்.

    “எளிய இனிய மலர். நெருங்கி முகர்ந்து பார்த்தால் தான் இதன் சுகந்தம் தெரியும். மண்ணில் விழுந்தாலும் கூட எடுத்து பூஜையின் போது இறைவன் அடியில் இடுவார்கள்.” என சொல்லிக் கொண்டே, ‘என் சைலாவை மாதிரி அழகான இனிய மலர்..’ என மனதில் எண்ணிக் கொண்டான்.

    கீதா சடாரெனத் திரும்பித் தன் அம்மாவை, சைலஜாவை, இரு கைகளாலும் அணைத்து இறுக்கிக்கொண்டாள்.

    பலமாக வீசிய காற்றில் ‘பொல’, ‘பொல’வெனப் பவழமல்லி மலர்கள் உதிர்ந்து விழுந்து அவர்களை ஆசிர்வதித்தன.

    (நிறைந்தது)

    Share
  • 44. ஓராறு முகமும் ஈராறு கரமும்…!

    மீனாட்சி பாலகணேஷ்

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் குழந்தைகளைப் போற்றுவன. பெரும்பாலும் தெய்வங்களே குழந்தைகளாகப் போற்றப்படுவதனால் அத்தெய்வங்களின் சிறப்பையும் புகழையும் குழந்தைக்குமாக்கிப் பாடுவது பிள்ளைத்தமிழின் மரபாகின்றது.

    ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்கள் பெரும்பாலும் முருகப்பெருமான் மீதானவையே. அவனுடைய வேல், மயில், அரக்கர்களையழித்த வீரச்செயல்கள், தேவர்களைக் காத்த வரலாறெனப் பற்பல கருத்துக்களைக் கொண்டமைந்த பாடல்கள் பலவாகும். அருணகிரிநாதரின் திருப்புகழ், கச்சியப்பச் சிவாச்சாரியாரின் கந்தபுராணம் ஆகியவற்றில் காணும் நிகழ்ச்சிகள், மக்களிடையே வழக்கிலிருந்து வரும் சிறுபுனைகதைகள் ஆகியன பிள்ளைத்தமிழ் நூல்களின் புலவர்களால் பொருத்தமான பருவங்களில் அழகுற எடுத்தாளப்பட்டுள்ளன.

    அவற்றுள் ஒன்றாக இன்று நாம் காணப்போவது முருகப்பிரானின் கைகளின் செயல்களைத்தான்!

    Pannirukaiyan
    ‘வாங்கும் எனக்கு இருகை- அருளை
    வழங்கும் உனக்கு பன்னிருகை,’

    என ஒரு பாடகர் முருகனைப் போற்றியுள்ளார். கணக்கு கைகளுக்கானதல்ல! அத்திருக்கைகள் வாரிவாரி வழங்கும் அருட்செயல்களுக்காகத்தான் பலவாக உள்ளன எனக்கொள்ள வேண்டும்!

    திருமுருகாற்றுப்படையில் புலவர் நக்கீரர் முருகனின் கைகளின் திறத்தைச் சிறப்பிப்பதனைக் காண்போம்! முதலில் முருகனின் ஆறுமுகங்களின் சிறப்பைக்கூறிப்பின் அதற்கியையக் கைகளின் செயல்களைக் கூறுகிறார்.

    இறையருளால் முத்திப்பேற்றினைப் பெற்று வானுலகு நோக்கிச் செல்லும் முனிவர்களுக்குப் பாதுகாவலாக விளங்குகிறது முருகனின் ஒரு திருக்கரம். அதற்கிணையான மற்றொரு திருக்கரத்தினை அவன் இடுப்பில் வைத்தபடி இருப்பதுவும் ஒரு அழகாக விளங்குகிறது.

    விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
    ஒருகை உக்கம் சேர்த்தியது ஒருகை

    மற்றொரு திருக்கை நல்ல அழகிய சிவந்த ஆடையை உடுத்துள்ள தொடையின்மேல் கிடக்கிறது. இன்னொரு கரம் யானையை அடக்குவதற்குரிய அங்குசத்தை ஏந்தி அந்த யானையைச் செலுத்துகிறது.

    நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகை;
    அங்குசங் கடாவ ஒருகை,

    மற்றவிரு கைகளில் ஒன்றில் வட்டவடிவமான கேடயமும் ஏந்தி, இன்னொரு கரம் வேலினை வலப்பக்கமாகச் சுழற்றியவண்ணமும் உள்ளது.

    இருகை ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப ஒருகை
    அடுத்த கை முனிவர்களுக்குத் தத்துவங்களைக் கூறி, சொல்கடந்த பொருளை உணர்த்தும் விதமாக ‘மோனமுத்திரை’ தாங்கி மார்போடு விளங்குகிறது. அதற்கு இணையான மற்றொரு கை மார்பில் தவழும் மலர்மாலைமீது படிந்துள்ளது.

    மார்பொடு விளங்க ஒருகை
    தாரொடு பொலிய ஒருகை

    ஐந்தாம் இணைக்கரங்கள் செய்வதென்ன? ‘களவேள்வி துவங்குக,’ என முத்திரை கொடுக்க ஒருகை உயரும்போது அதிலணியப்பட்ட வளையல்கள் (தொடி) தவழ்ந்து கீழே நழுவுகின்றன. நுட்பமான கருத்துப்பதிவு! அதன் இணைக்கை மணியை அசைத்து ஒலிப்பிக்கின்றதாம்.

    gajavahana_350
    கீழ்வீழ் தொடியடு மீமிசைக்கொட்ப ஒருகை
    பாடின் படுமணி இரட்ட ஒருகை

    ஆறாம் இணைக்கரங்களில் ஒருகை நீலநிறத்தையுடைய முகில்கூட்டங்களால் மழையைப் பொழிவிக்கின்றது; அதன் இணைக்கை தெய்வமங்கையர்க்கு மணமாலை சூட்டுகிறது.

    நீல் நிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை
    வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட,
    ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்றி…..

    இவ்வாறு பன்னிரு கரங்களின் செயல்களையும் நக்கீரனார் விளக்குகின்றார்.

    இதேவிதமாக இன்னும் சுவைமிகுந்த கருத்துக்களைப் புலவர் நடேச கவுண்டரும் தாமியற்றிய எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் முருகனின் கைவண்ணமாகக் கூறிச் சிறப்பிக்கிறார். அதனைக் காணலாமா?

    இவர் போற்றுவது பன்னிரு கரங்களையுடைய குழந்தை முருகன். எல்லாமறிந்த எல்லாம்வல்ல இறைவனே சிறுகுழந்தையான முருகப்பெருமான் எனத்தெளிந்த அடியார் சிறுபறை முழக்கும் அவனுடைய சிறு கரங்களைப் பலவிதமாகப் போற்றுகிறார்.

    arunagiri_murugansri_brahmasasta

    மிகுந்த துயரளிக்கும் பிறவிப்பெருங்கடலிலிருந்து எடுத்து எம்மைத் தாங்கி ஆசுவாசம் அளிப்பதொருகை;
    இருவினைகளையும் செய்து இந்த உலகில் உழலும்போது ‘அஞ்சாதே!’ என அபயம் அளிப்பது மற்றொரு கை.

    அருணகிரிநாதருக்கு அருள் செய்யும் விதத்தில் செபமாலையை அவருக்கு அளித்ததொரு சிவந்த கொடைக்கை.

    மிகுந்த செருக்குடன் திரிந்த தாமரையோனாகிய பிரமனுடைய தலை குலுங்குமாறு குட்டுவது ஒரு கை!

    தேவர்களின் அரசனான இந்திரனுக்கு, அவனுடைய பறிபோன அரசபதவியைத் திரும்பப் பெற்றளித்து அவன் தலையில் மகுடம் சூட்டும் வரதக்கை இன்னொன்று!
    இனிய தெளிந்த அமுதம் போன்றவளான வள்ளியம்மைக்கு மணமாலையைச் சூட்டும்கை மற்றொன்று!

    இவ்வுலகத்திலுள்ளோர், வானுலகிலுள்ளோர் அனைவரும் வேண்டுகின்றன அனைத்தினையும் கொடுத்தருளுவது ஒருகை!

    அருணகிரிநாதர் கோபுர உச்சியிலிருந்து கீழே விழுந்தபோது அவர்தமைத் தாங்கியெடுத்து ஏந்திக்கொண்டது மற்றொருகை!

    சித்தர் பெருமக்களுக்கு ஞானநெறியைத் தெரிவிக்கும்வகையில் சின்முத்திரை காட்டும்கை ஒன்றாகும்.

    சீர்காழி எனும் திருத்தலத்தில் ஞானசம்பந்தராக அவதரித்து அந்தணராகிய தமது தகப்பனாருக்கு சிவபெருமானை, ‘தோடுடைய செவியன்’ எனச் சுட்டிக்காட்டிய திருக்கை மற்றொன்றாகும். (குழந்தையான சம்பந்தர் குளக்கரையில் தனியே இருந்து அழுதபோது, உமையம்மையும், சிவபிரானும் விடையேறி வந்து அவருக்கு ஞானப்பாலைப் புகட்டிச் சென்றனர். பின் கரையேறி வந்த அந்தணராகிய தந்தை ‘யார் வந்தனர்’ எனக்கேட்க, “தோடுடைய செவியன் விடையேறித் தூவெண்மதி சூடி வந்தனன்,” எனச் சுட்டியது குழந்தை. அதனையே இங்கு குறிப்பிடுகிறார்.)

    மாலையணிந்த பாண்டியமன்னனின் (வேம்பன்) சுரத்தை நீக்கி, அவன் உடல் குளிருமாறு திருநீறு பூசிய கையொன்று! (சமணோரோடான மதவாதத்தில், திருநீற்றைப்பூசி, நின்றசீர் நெடுமாறப் பாண்டியனின் சுரநோயைத் தீர்த்தருளினார் திருஞானசம்பந்தர். அதனை இங்கு நயம்படக் கூறினார் புலவர்.)

    கோலக்கா எனும் ஊரில் பொற்றாளம் கிடைக்கப்பெற்றது ஒருகை. (சிவபிரான் குழந்தை ஞானசம்பந்தருக்கு பொற்றாளங்களை அளித்தது திருக்கோலக்கா எனும் ஊரிலாகும்; அதுவே கூறப்பட்டுள்ளது)

    இக்கைகளால் எல்லாம் எட்டிக்குடிவாழ் முருகா நீ சிறுபறை முழக்கியருளுக! எனப்புலவர் கற்பனை வளம் பெருக வேண்டிப்பாடும் பாடல்கள் மிக்க அழகானவையாம்.

    ‘வருந்தும் பிறவிக் கடனின்று வாங்கி யெம்மைத் தாங்குங்கை
    மண்மேல் வினையி லுழலுங்கால் மயங்கா தஞ்ச லருளுங்கை
    ……………………………………………………………………………………………………
    முருந்து நகையெட் டிக்குடியாய் முழக்கி யருள்க சிறுபறையே
    முழுமா ணிக்கத் திரளொளியே முழக்கி யருள்க சிறுபறையே.’

    ‘இத்தா ரணியார் வானோர்வேண் டியவெல்லாமு மீயுங்கை
    எம்மானருண கிரிசிகரி யிருந்து விழுங்கா லேந்துங்கை
    ……………………………………………………………………………………………………
    கொத்தார் வேம்பன் சுரநீங்கிக் குளிர நீறு பூசுங்கை
    கோலக்காவிற் பொற்றாளங் கொண்ட கையா லுமையளித்த
    …………………………………………………………………………………………………….
    முழுமா ணிக்கத் திரளொளியே முழக்கி யருள்க சிறுபறையே’
    என அழகிய இரு பாடல்களில் ஈராறு கரங்களின் பெருமையை எல்லாம் அழகுறப் பேசுகிறார்.

    (எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்- சிறுபறைப்பருவம்- நடேச கவுண்டர்)
    அடுத்து இச்சிறுகைகள் செய்யும் குறும்புகளைக் காணலாம்!

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ***********

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி – 16

    மீனாட்சி பாலகணேஷ்

    உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
    உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
    உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்று
    உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே
    – திருமூலர்

    * * * * *

    சிவப்பழமான ஒரு முதியவர், திறந்த மார்பு, நெற்றி எங்கும் பட்டை பட்டையாகத் திருநீறு அணிந்தவர், அதிக மனித சந்தடி இல்லாத அந்த வேளையில் சுவாமிசந்நிதியின் பிராகாரத்திலமர்ந்து திருமுறைகளிலிருந்து பாடல்களை கணீரென்ற உரத்த குரலில், ஆனால் உள்ளம் நெகிழும் வண்ணம் பாடிக் கொண்டிருந்தார்.

    புடவைத் தலைப்பால் நன்கு போர்த்தி மூடியவாறு தலைகுனிந்து, தளர்ந்த நடையுடன் பிராகாரத்தை வலம் வந்து கொண்டிருந்த சைலஜா மேற்கூறிய இந்தத் திருமந்திரப் பாடலைக் கேட்டதும் துணுக்குற்று நின்றாள். ‘எனக்குப் புரிய வைப்பதற்காகவே இங்கு இம்முதியவர் பாடிக் கோண்டிருப்பது தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது தெய்வச் செயலா?’ உடல் புல்லரித்தது.

    ‘சைலஜா, உன் மனதை உறுத்திக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. நீயே, உன் மனதில் உருவாக்கிக்கொண்ட மனநோய்க்கு அடிமைப்பட்டு, உள்ளத்தையும் உடலையும் பாழடித்துக் கொண்டு ஒரு வெற்று வாழ்க்கை வாழ்ந்துவந்தாய். இத்தனை ஆண்டுகள் எதைத்தேடுகிறோம் என்று அறியாமல் தேடி அலைந்தாய். ‘நான்’ என்ற நினைவு மனத்தில் நிரம்பி வழிய, உன்னை மிகவும் நேசிக்கும் கணவனையும் குழந்தையையும் கூடப் புறக்கணித்தாய். தேடியது கிடைக்காத போது அன்பு, சுயநலமற்ற அன்பு, ஆடலரசு, அமுதா, ஜிம், கீதா வடிவில் திரும்ப உனக்குக் கிட்டியுள்ளது.

    ‘ஏற்றுக்கொள்ள உன் சுயகௌரவம் தடுக்கிறது. பாழாக்கிக் கொண்ட உடலையும் உள்ளத்தையும் திரும்பவும் ஜிம்மின் அன்புக்கு அர்ப்பணிக்க நீ தயங்குகிறாய். முடிவு எடுக்க முடியாமல் மயங்குகிறாய்.

    ‘உன் கனவுகளைப் புரிந்துகொண்டு மதித்தவன் ஜிம். உன்னை, உன் இதயத்தைப் பூஜிப்பவன், ‘நான்’ என்ற எண்ணத்தைத் துறந்து, அவனுடைய மனைவி, கீதாவின் தாய், அவர்களுடைய நல்வாழ்வு என்றெண்ணி, உன்னை அதற்குக் காரணமாக்கிக்கொள். விளங்கும், நீ தேடியலைந்தது என்னவென்று…”

    உடலின் வலுவெல்லாம் இழந்தவள்போல் அப்படியே அந்தச் சன்னிதியில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு தூணில் சாய்ந்திருந்தாள். எவ்வளவு நேரமாயிற்றோ?

    “அம்மா, அம்மா, உங்களைத்தானே. இப்போ கதவைச் சார்த்தப்போறோம். இனிமே சாயரட்சை பூஜைக்குத்தான்- கொஞ்சம் எழுந்திருக்கிறேளா?” ஒரு இளைய அர்ச்சகர் வேண்டினார். எழுந்து வெளியே வந்தாள். உச்சி வெய்யிலின் உக்கிரத்தில் கால்சுட்டது. அது உறைக்காமலே கோவிலின் நுழைவாயிலருகே நின்றவள் திரும்பிப் பார்த்து அந்த ராஜகோபுரத்தை நோக்கிக் கைகூப்பிக் கண்மூடினாள்.
    _________________________%_______________________

    கடந்த இரு நாட்களாகத் தனிமையில் சிந்திக்க வேண்டி, திருவண்ணாமலைக்கு வந்து விட்டாள் சைலஜா. ‘இனி என் பாதை எது?’ என்ற கேள்விக்கு பதிலைத் தேடி கோவிலிலும் தங்கியிருந்த ஆச்ரமத்திலும் மாற்றி மாற்றி அமர்ந்து சிந்தனை செய்து நேரத்தை செலவிட்டு, உள்ளத்தை வருத்தியபடி மயங்கினாள்.

    அன்றொரு நாள், ஆடலரசுடன் நடந்த ஒரு பெரிய ‘டிஸ்கஷனு’க்குப் பின் தான் இவ்வாறு வந்திருந்தாள் சைலஜா.

    ‘ஆஸ்பத்திரி மீட்டிங்கில் இருக்கிறார்,’ என்று அவன் செக்ரெடரி கூறியபோது பொறுமை இன்றிக் கிளம்பிவந்து, ரிஸப்ஷனில் காத்துக் கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட ஐம்பது நிமிடங்களுக்குப் பின் வெளியே வந்தவன் அவளைப்பார்த்து வியப்படைந்து, இது ஏதோ முக்கியமான விஷயம் எனப் புரிந்துகொண்டான்.
    “சைலா, என் வேலை ஆயிற்று. நான் இன்னும் ‘லஞ்ச்’ சாப்பிடவில்லை. கொஞ்சம் வெளியே போகலாமா? சாப்பிட்டபடி பேசலாமே,” இவளது அவசரங்களை அவனால் எப்படி உணர முடிகிறது?

    அந்த நட்சத்திர ஹோட்டலின் மிக அமைதியான மூலையில் நாற்காலியின் ‘மெத்’தில் அழுந்தியவர்கள் ‘லிம்கா’ ஆர்டர் செய்தார்கள். மாலை மூன்று மணியை நெருங்கி விட்டதால் கூட்டம் இல்லை.

    “இரண்டு ரொட்டி, வெஜிடபிள் கறி,” என ஆர்டர் செய்தவன் சைலா ஒன்றுமே வேண்டாம் என மறுத்ததால், “ஓகே. சொல்லம்மா, உன் மனதிலுள்ளதை,” எனக் கரிசனத்துடன் வினவினான்.

    “அரசு, நான் ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறேன்.”
    “பார்த்தாலே தெரிகிறதே…”

    “என் குழப்பத்தை எப்படி விவரிப்பது என்று புரியவில்லை. ஜிம் நான் திரும்ப அவனுடன் வரவேண்டும் என்று கேட்கிறான், கீதாவும் கூடத்தான் மிகவும் மகிழ்ந்து போவாள். ஆனால்…” வார்த்தைகளைத் தேடினாள்.

    “ஆனால் என்ன? எதை யோசித்து மலைக்கிறாய்?”
    “எப்படி உங்களுக்குப் புரிய வைப்பது அரசு? என் கடந்த காலம் என ஒன்றிருக்கிறதே. ஊர் சிரிக்க, முறையற்று, தான்தோன்றித்தனமாக நான் வாழ்ந்த வாழ்வு. எதன் மீதோ நான் கொண்ட வெறுப்பில், ‘எதுவும் என்னால் முடியும். யார் என்னைத் தட்டிக்கேட்பது’ என்ற இறுமாப்பில் அல்லவா என் வாழ்வை என் விருப்பப்படி வாழ்ந்தேன். என்னுடைய பிஸினஸில் நான் உயர்ந்து வெற்றிக்கொடி பறக்க விட்டபோது உண்டான திமிரில் நானாகத் தேடிக் கொண்ட வம்பு அது. ‘ஜிம்மிற்கு இது தெரியும்’ என்பதனால் நான் கவலைப் படவில்லை. அவன் தவறி அமெரிக்காவில் பிறந்து விட்ட ஒரு இந்தியன். மிக உயர்ந்த ஆத்மா. நம் பண்பாட்டை மிக உயர்வாக மதிப்பவன். என் அழுக்கான கடந்த காலத்தைப் பற்றித் தெரிந்து கொண்டால் கூட, என்மீது உள்ள அன்பினால், என்னை ஏற்றுக் கொள்வான்,” திடீரெனப் பேசுவதை நிறுத்தித் தன்னுள் ஆழ்ந்து போனாள் சைலஜா.

    சர்வர் வந்து உணவைத் தட்டில் பரிமாறி விட்டுப் போனதும், “நிதானமாக யோசித்துப்பாருங்கள். என்ன பிரச்சினை என்று சொல்லுங்கள்,” என்றபடி ரொட்டியைப் பிய்த்துச்சாப்பிடலானான் ஆடலரசு.

    “இத்தனை நாள் தாயாகவும் தந்தையாகவும் இருந்து எங்கள் குழந்தையை வளர்த்துவிட்டான் ஜிம். இது எத்தனை பெரிய சாதனை! இப்போது இந்த நிலையில் நான் எதற்காகத் திரும்பிப்போவது? என்னிடம் எதை எதிர்பார்த்து என்னை அழைக்கிறான் ஜிம்? அவனிடம் எப்படி இதைக்கேட்பேன் அரசு? என்னால், இந்த வெறுக்கத்தக்க பெண்ணால் அவனுக்கு ஆக வேண்டியதென்ன?” குரல் கம்மக் கேட்டாள் சைலஜா.

    மௌனமாகச் சில நிமிடங்கள் கழிந்தன. யோசித்தபடி உணவை உண்டான் ஆடலரசு. ஒரு ரொட்டியை சாப்பிட்டு முடித்தவன், ஆழமாக ஒரு பார்வை பார்த்தபடி சைலஜாவிடம், “உங்களுடைய ஜேம்ஸ் ராபர்ட்ஸைப் போல நான் தத்துவம் படித்தவனல்ல. ஆனால் மனித உணர்வுகளை எடை போடுவதில் கொஞ்சம் சமர்த்து எனக்கு உண்டு.

    “சைலா, ஒன்று கேட்கிறேன். யோசித்துப் பாரம்மா. நான், நான் என்று எப்போதும் உன்னைப் பற்றிய நினைப்புத்தானே உனக்கு? ‘என்’ வாழ்வு அவலமானது; ‘என்னைப்’ பற்றி என்ன நினைப்பார்கள்? என்னால் ஜிம்மிற்கு என்ன பிரயோஜனம்? என்று நினைவு முழுவதும் அந்த ‘என்னைப்’ பற்றியே சுழன்று கொண்டிருக்கிறதே உனக்கு, கவனித்தாயா? கொஞ்சநாள் முன்பு வரை ‘என்’னால் முடியாதது ஒன்றுமில்லை, ‘என்’னைத் தட்டிக் கேட்பவர் யார்? நான் ‘என்’ மனம் போனபடி நடப்பேன் என்று அந்த ‘என்’னைத் தான் சுற்றிச் செயல்கள் மையம் கொண்டிருந்தன. இப்போதைக்கும் அப்போதைக்கும் ஒரே வித்தியாசம், இப்போது இது பச்சாதாபத்தில் உழல்கிறது. அப்போது மமதையில் உழன்றது. சூழ்நிலை தான் வேறே தவிர, ‘தீம்’, அதாவது ‘உட்கரு’ ஒன்றே தான். அது ‘நான்’ என்பது.”

    “அரசு, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? நான் என்ன, சுயநலக்காரியா?” தொண்டை தழதழத்தது. கண்களில் பிரவாகம் பொங்கத் தயாராகியது.

    “இல்லையம்மா, இல்லை. உன்னுடைய எண்ணத்தை ‘நான்’ என்ற வரம்பைத் தாண்டி மற்றவர்களை நோக்கி விரிவு படுத்திப் பார். ஜிம்மை சந்தோஷமாக வைப்பது, கீதாவுக்கு அன்பான தாயாக விளங்குவது, எங்களுக்கும் நல்ல நண்பராக இருப்பது- இவை ‘என்னால் முடியும்’ என்பதை விட ‘அவர்களுக்காகச் செய்கிறேன்’ என்று வேறு விதமாக எண்ணிப் பார்.

    “முதலில் உன்னிடம் அன்பு செலுத்தும், உன் மீது உயிரையே வைத்திருக்கும் குடும்பத்தினரிடம் உனது தன்னலமற்ற அன்பையும் கடமையையும் காட்டிப்பார். ‘நம் மீது அன்பு கொண்டவர்கள்,’ ‘நம் குடும்பம்,’ என்ற எல்லைகளைச் சிறிதுசிறிதாக விரிவாக்கிப் பின்பு இத்தகைய உயர்ந்த அன்பும் சேவையும் எல்லாருக்குமே பொதுவாகும்படி ஏதாவது சமூக சேவையில் கூட ஈடுபடலாம்…”

    பேசியபடியே அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அது கிரகணம் விலகிய சந்திரன் போலத் தெளிவு பெறுவதைக் கண்டு வியந்தான். தன்னுடைய இந்த அறிவுரை எத்தகைய செயலைச்செய்ய அவளைத்தூண்டும் என்று அவன் அறிந்தானா என்ன!

    ___________________________________________________________

    முண்டாசு அணிந்த ஒரு கவிஞன் காளியை நோக்கி வரம் கேட்டபடி பாடி வந்தான். இப்போது அக்கவிஞன் நின்ற இடத்தில் ஒரு சிறுபெண் நின்று அவன் பாடிய பாட்டைத் திரும்பத் தன் இனிய குரலில், உயிரை உருக்கும் சாருகேசி ராகத்தில் பாடலானாள்.

    ‘நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்……..
    …………………………………….இனி
    என்னைப் புதிய உயிராக்கி –எனக்
    கேதும் கவலையறச் செய்து- மதி
    தன்னை மிகத் தெளிவு செய்து -என்றும்
    சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்’-

    எல்லா மாணவிகளும் ஏன் ஆசிரியர்களும்கூடக் கைதட்டி ஆரவாரிக்கின்றனர். முதல் பரிசு அந்த சிறுமிக்குத்தான். பரிசு கிடைத்த புத்தகக்கட்டை மார்போடணைத்தபடி சந்தோஷத்தில் மிதந்தபடி நடக்கிறாள் சிறுமி சைலஜா.
    ‘குக்கூ’ கடிகாரம் கூவி மணி ஐந்து என அறிவித்தது. ‘டக்’கென்று விழித்துக் கொண்ட ஷீலா தன்னருகே விரிந்து கிடந்த ‘பாரதியார் கவிதைகளை’க் கண்டவள், தன் கனவின் இனிமையையும், பொருளையும் உணர்ந்து மகிழ்ந்தபடி எழுந்தாள். மனம் ஒன்றையே விடாமல் எண்ணிக் கொண்டிருந்தால் கனவுகளும்கூட அதைச் சார்ந்தேதான் வருமோ? தெளிவான உள்ளத்துடன் உறங்கச்சென்றதால், நல்ல நிம்மதியான உறக்கத்தின் பின் வரும் புத்துணர்ச்சி மிகுந்திருந்தது.

    திரையை விலக்கி, அந்தப் புலர்ந்தும் புலராத காலைப் பொழுதில் ஜன்னல் வழியாகத் தோட்டத்தைப் பார்த்தாள். பறவைகளின் இன்னொலி நிரம்பியிருந்தது. விரிந்து சிதறியிருந்த பவழ மல்லிகை, இன்னும் என்னென்னவோ மலர்களின் நறுமணங்களை அள்ளியபடி வந்தது இளங்காற்று. நெஞ்சு நிறைய அந்த ஆரோக்கியமான காற்றை நிரப்பிக் கொண்டு சிலமுறை ஆழ்ந்து சுவாசித்தாள் ஷீலா.

    ஆதித்தனின் தேர் கிளம்பி விட்ட செய்தி அடிவானத்தில் சிறு வெள்ளிக் கீற்றுகளாக வெளியிடப் பட்டு விட்டது. தான் செயல்படுத்த வேண்டிய காரியங்களை நினைவு படுத்திக் கொண்டவள் அந்த நாளை எதிர்கொள்ளத் தயாரானாள். நேரம் குறைவு- செய்ய வேண்டியவை மிக அதிகம்!

    அரைமணி நேரத்தில் இரவே ‘பாக்’ செய்து வைத்திருந்த தன் சிறிய பெட்டி சகிதம் மாடிப்படிகளில் இறங்கினாள். அந்தக் காலைப்பொழுதில் தோட்டத்தில் சிறிது உலவ வேண்டும் எனத்தோன்றவே, ‘பத்து நிமிடம் தாமதமாகக் கிளம்பினால் தான் என்ன? காரில்தானே போகிறேன்?’ என்று பெட்டியை வைத்து விட்டுத் தோட்டத்தில் புகுந்தாள்.

    தன் ரசனைக்காக வளர்ககப்பட்டுத் தன்னால் ரசிக்கவே படாத ரோஜாக்கள் அழகாகத் தலையசைத்து வரவேற்றபோது உள்ளம் துள்ளியது. அவைகளை வருடியும், முகர்ந்து பார்த்த படியும் நடந்தாள்.

    சைலஜாவுக்கு உயிரான ஏழடுக்கு மல்லிகைப் புதர் விண்மீன்களைப் போல் சுடர்விடும் வெள்ளிய பெரிய மலர்களுடன் சிரித்தது.

    உள்ளமெனும் பாத்திரத்தில் அள்ள அள்ளக் குறையாத இனிய எண்ண ஊற்றுகளுடன் சைலஜா மெல்ல உலாவினாள்.

    பவழமல்லிகை மரத்திலிருந்து மலர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மெல்ல விழுந்து கொண்டிருந்தன. தெய்வானுபவமான ஒரு சுகந்தம் கமழ்ந்தது. மெல்ல, விழுந்திருந்த மலர்களை மிதிக்காமல் நடந்து மரத்தடியில் இருந்த சிறிய கல்பெஞ்சில் அமர்ந்தாள். குனிந்து, கை நிறைய மலர்களை அள்ளி எடுத்து முகத்தை அதில் லேசாகப் புதைத்துக் கொண்டாள்.

    காற்று சிறிது பலமாக வீசியதில் ‘கலகல’வெனப் பவழமல்லி மலர்கள் அவள்மீது சொரிந்தன.

    மனமென்ற சிமிழின் மூடியைத் திறந்து, சுகானுபவமான எண்ணங்களை வெளியே உலவவிட்டுத் திளைத்தாள் சைலா.

    ஜிம்மின் மனதை மிகவும் கவர்ந்த மலர் பவழ மல்லிகை!

    “எவ்வளவு சிறிய, எளிய, இனிமையான மலர் இது. மல்லிகையைப் போல் இல்லாமல், தன் வாசனையைக் கூட, கிட்டே போய் மென்மையாக முகர்ந்து பார்த்தால் தான் தெரிவிக்கின்றது. மண்ணில் விழுந்து கிடந்தாலும்கூட, எடுத்துப் பூஜையில் சேர்க்கின்றீர்கள். சிம்பிள் பட் டிவைன் அண்டு பியூட்டிபுல்,” அவனை எவ்வளவு தூரம் அது கவர்ந்துவிட்டது என்பது பிற்பாடு தானே தெரிந்தது!

    திருமணத்துக்குப் புடைவை வாங்க வெங்கடேசன் இருவரையும் காஞ்சிபுரம் அழைத்துச்சென்றார். சைலஜா எடுத்த ஐந்தாறு புடைவைகளை ரசித்தவன், மேலும் பலவற்றை அவற்றின் அழகை ரசிப்பதற்காகப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்,  நடுவில் ஒரு புடைவை – வெண்மை நிற காஞ்சிப் பட்டில், சுடர் போன்ற ஆரஞ்சு வர்ண பார்டர் ஜரிகையும் நூல்வேலையுமாக ஒரு கவிதைபோல் இருந்தது. “ஷீலா, இதோ பவழமல்லிகை போன்ற ஒரு புடைவை. ப்ளீஸ், நான் உனக்கு இதை வாங்கித்தரட்டுமா? நம் திருமணத்தில் நீ இதை உடுத்துக் கொள்வாயா?”
    அவன் கேட்ட தொனியும், குரலில் தென்பட்ட உற்சாகமும், உவகையுடன் ஷீலாவை அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள வைத்தன.

    ________________________________________

    நினைவுகளைக் கடிவாளம் போட்டு ஒரு நிலையில் நிறுத்தியவள் திரும்ப வந்து ரமணி அம்மாளின் அறைக் கதவைத் தட்டி, “நான் வருகிறேன். திரும்பி வர மூன்று நான்கு தினங்கள் ஆகலாம்,” என விடை பெற்றுக் கொண்டாள்.

    அவளுடைய பிரத்தியேக உபயோகத்திற்கு என்றிருந்த பென்ஸ் வண்டியை டிரைவர் மாத்யூ கொண்டு வந்து போர்டிகோவில் நிறுத்தியிருந்தார். “மாத்யூ, கவலைப்படாதீங்க. நான் பத்திரமா ஓட்டறேன். மெதுவாவே போறேன் என்ன? திருவண்ணாமலை தானே- நாலுமணி நேர டிரைவ் தானே!” என்றபடி சூட்கேஸை பின் சீட்டில் வைத்து விட்டுத் தெளிந்த மனத்துடன் வண்டியை ஸ்டார்ட் செய்து நகர்த்தினாள்.

    வண்டி புள்ளியாக மறையும்வரை பார்த்தபடி நின்ற மாத்யூ, தன் எஜமானி ஷீலாவை, இத்தனை வருடங்கள் வேலைபார்த்த பின்னும் புரிந்துகொள்ள முடியாமல் போனதற்காக வருந்தி ஏங்கினார். “கடவுள் உங்களுடன் இருக்கட்டும் மேடம்,” என்றபடி சிலுவைக்குறி இட்டுக் கொண்டார்.

    ஆசிரமத்தில் தங்கியதும், மணிக்கணக்காக அமைதியாக அமர்ந்து மனதை ஒருமைப்படுத்தி அடக்க முயன்றதும்தான் அவளுக்கு அடுத்த இரு தினங்களுக்கு வாழ்வின் பொருளாக இருந்தது. சிந்தனைகள் பெருகி வந்துவந்து ஓய்ந்தன. எண்ண அலைகள் வீசிவீசி ஆர்ப்பரித்தன. மெல்லச் சிறிது சிறிதாக அவற்றைக் கட்டுப்படுத்தினாள்.

    தன்னைப் பரிவுடனும், கனிவுடனும், கருணையுடனும், ஆசிர்வதித்த தந்தை எனும் தெய்வத்தைச் சிந்தையில் பதித்துக் கொண்டாள். அருவமான ஒன்றின் அன்பில் (தன் மீது ஜிம்மும் கீதாவும், ப்ரியா, ஆடலரசு, அமுதா இவர்கள் பொழியும் அன்பு தான் அது) தான் கரையத்தயார் என்ற உணர்வு மூன்றாம்நாள் வந்தது. மனம் ஆனந்தத்தில் லயித்தது.

    ஒற்றைப்பாயில், தரையில் உறங்கியபோது கனவுக்கும் நினைவுக்கும் இடைப்பட்ட ஒருநிலையில், விடை உருக்கொள்ள ஆரம்பித்தது. மனம் தெளிந்து விட்டது.
    ஷீலா போன்ற வெகு புத்திசாலியான ஒரு பெண்ணுக்குத் தன் சிந்தனைகளையும் வாழ்க்கை முறைகளையும் ஒழுங்கு படுத்திக் கொள்வது ஒன்றும் கடினமானதாக இருக்கப் போவதில்லை!

    இருட்டான பாதையில் வெளிச்சம் தெரிந்ததும் ஷீலா பயணத்தைத் தொடரத் தயாரானாள். கோவில் சன்னிதியில் புகுந்து வழிபட்டு விட்டுத் திரும்பத் தன் வீட்டை நோக்கி, ஜிம்- கீதாவை எதிர் கொள்ளத் தயாராகக் கிளம்பி விட்டாள்.

    (தொடரும்)

    மறு பகிர்வு: தாரகை இணைய இதழ்

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி – 15

    மீனாட்சி பாலகணேஷ்

    ‘யுக யுகாந்தரங்களாக உலகங்கள் அனைத்திலும் தன்னந் தனியாக உன்னுடைய அன்பு என்னைத் தேடி அலைந்தது என்பது உண்மையா, உண்மை தானா, சொல்வாய்?’- — தாகூர் (The Gardener)

    *******************************

    ப்ரியா ஓரக்கண்ணால் தன் ‘பாஸை’ப் பார்த்து ரசித்தபடி மனதிற்குள் மகிழ்ந்து கொண்டாள். ஏதோ ஒரு பழைய தமிழ் சினிமாப் பாடலின் இருவரிகளை உற்சாகமாக முனகியபடி, ஒரு மீட்டிங்கிற்குக் குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தாள் ஷீலா.

    அவளுடைய உற்சாகம் ப்ரியாவிற்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் அவ்வப்போது நீண்ட சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறாளே, நெற்றியில் சுருக்கங்களும், முகம் கறுத்துக் கோணுவதும் பார்க்கச் சகிக்காமல், எழுந்து மேலும் கீழும் உலாவுவதுமாக- அது தான் ரொம்பவே கவலையைத் தந்தது.

    டாக்டர் சுவாமிநாதனிடம் இன்னொரு அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கூட்டிக் கொண்டு போகலாம் என்றால், ஜிம், கீதா இவர்களின் வரவால் இப்போது ஷீலா ரொம்ப பிஸியாக இருக்கிறாள்.

    அரைகுறையாக ஷீலாவின் வாயாலேயே கேட்டிருந்த கதைகளிலிருந்து ப்ரியா கனவு காணத் தொடங்கியிருந்தாள் தன் தோழிக்காக! ‘சுபம்’ என்று போட்டு இந்தச் சிக்கல்கள் நிறைந்த கதை முடிந்து ஷீலா புது வாழ்வு தொடங்குவதற்காக!

    அப்படித்தான் இன்று ரயில்வே நிலையத்திலிருந்து வந்திருந்தாள் ஷீலா. ஒரு வாரமாக மாமல்லபுரம், காஞ்சிபுரம், பாம்புப்பண்ணை, முதலைப் பண்ணை என்று சென்றதில் நாட்கள் ஓடியதே தெரியவில்லை.

    ab

    கீதாவைத் தன் மகள் என்று சென்ற இடமெல்லாம் அறிமுகம் செய்ததில் பெருமை பொங்கி வழிந்தது. கீதாவிற்கு விதம் விதமான பட்டுப் பாவாடைகளும், இந்திய உடைகளும் வாங்குவதில் ஈடுபட்டுத் தன் பிரச்சினைகளைக் கூடச் சற்றே மறந்திருந்தாள் ஷீலா. ‘குழந்தையை’ – ஆமாம், ஷீலாவின் மனது இளங்குமரியான தன் மகளைப் பற்றி அப்படித்தான் எண்ணியது. ‘நாட்டியம் ஆடச் சொல்லிப் பார்க்க வேணும்; ஒரு சின்ன ப்ரோக்ராம் இந்த பங்களாவிலேயே ஏற்பாடு பண்ணினால் என்ன?’ என யோசித்து, அவளை அழைத்துக் கொண்டு போய் நாட்டிய உடை ஒன்று அளவெடுத்துத் தைக்கக் கொடுத்தாள்.

    ஜிம்மையும் கீதாவையும் கேரளாவுக்கு ரயிலேற்றி விட்டாள் அன்று மாலை. தன் தாயையும் வருமாறு வற்புறுத்தி அழைத்தாள் கீதா. ஆனால், இது தான் தனக்குச் சிந்திப்பதற்கேற்ற நல்ல நேரம் என்பதால், ஜிம்மிடம் மட்டும் காரணத்தைக் கூறித் தங்கி விட்டாள் ஷீலா.

    பத்து நாட்கள் அவர்கள் கேரளாவைச் சுற்றப் போகிறார்கள். ‘எனக்கும் பத்து நாள் அவகாசம்,’ மனது முனகியது. முதலில் சஞ்சலத்துடன், பிறகு எண்ண இயலாத பயத்துடன். யோசித்துப் பார்த்தபோது தோன்றியது- வேண்டும் என்றே, தான் இந்த முடிவெடுக்கும் படலத்தை ஒத்திப் போட்டுக் கொண்டு வந்திருப்பதாக உணர்ந்தாள்.

    ‘என்ன முடிவு எடுக்கின்றேனோ இல்லையோ, என் வாழ்வில் சில குறிக்கோள்கள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்த வேண்டும்.’ “ப்ரியா, லாயர் சுந்தர்ராஜனைக் கூப்பிட்டு ஒரு அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கோம்மா!” என்றபடி பென்சிலைக் கடித்த வண்ணம் வெட்டவெளியை வெறித்தபடி எண்ணச் சுழல்களில் மிதந்தாள் ஷீலா.

    “நாளைக் காலை பத்து மணிக்கு, முதல் அப்பாயின்ட்மென்ட் உங்களுடையது.” என்றாள் ப்ரியா.

    ‘ஜிம்முடன் அமெரிக்கா திரும்பிச் சென்று புதுவாழ்வு துவங்குவதானால் இந்தக் கம்பெனியை வாங்க விருப்பம் உள்ளவர்களுக்கு விற்றுவிட வேண்டும். ஆனால் திரும்பிப் போய் நான் என்ன செய்யப்போகிறேன்? இத்தனை நாள் என் தேவை, ஒரு மனைவியாகவோ, தாயாகவோ, ஏன், ஒரு ஹவுஸ்கீப்பராகவோ கூட ஜிம்முக்கு வேண்டியிருக்கவில்லை, என் மீது இரக்கப்பட்டுத் தான் இப்போது அழைக்கிறானா? நான் செய்ய வேண்டியது என்ன?’ நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள் இப்போது.

    “ப்ரியா, எனக்குக் கொஞ்சம் அரசுடன் கனெக்க்ஷன் வாங்கிக் கொடேன்.”

    போனில் உரையாடி முப்பது நொடிகளின் பின்பு, “ஷீலா, அவர் இப்போது ஹாஸ்பிடல் மீட்டிங் ஒன்றில் இருக்கிறாராம். மீட்டிங் முடிய இன்னும் ஒருமணி நேரமாவது ஆகுமாம். மிக முக்கியமான மீட்டிங், ஆகவே எமர்ஜென்சி என்றாலொழியத் தொந்தரவு செய்யக் கூடாது என்றிருக்கிறாராம்,” என்றாள் ப்ரியா.

    இப்போது பென்சிலால் மேஜையைத் தட்டிய வண்ணம் யோசித்தாள் ஷீலா.

    ^^^^^^^^^^^^^^^^^^^^^

    ஓடிக் கொண்டிருந்த ரயிலில் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர் தந்தையும் மகளும்.

    “டாடி, அம்மா என்ன முடிவெடுப்பாள் என்று உன்னால் ஊகிக்க முடியுமா?” மனம் தாயைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருந்ததை, வெகுளியாகப் பிறந்த கேள்வி, ஜிம்மிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியது.

    “டார்லிங், அவள் என்ன முடிவெடுத்தாலும் நீ அதை ஏற்றுக் கொள்ளும் மனோதிடத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் அவள் உன்னைப் பெற்ற தாய். உன்னை மிகவும் நேசிக்கும் ஒரு ஜீவன் என்பதில் ஒரு மாற்றமும் இராது. புரிகிறதா கண்மணி?” மகளின் தலையை ஆதுரத்துடன் வருடியபடியே ஜிம் கூறினான்.

    “டாடி, ஒன்ஸ் மோர் அதே கேள்வியைக் கேட்கிறேன். அம்மா நம்மைப் பிரிந்து ஏன் போனாள்? பலமுறை கேட்டிருக்கிறேன். உனக்குப் பதில் தெரியவில்லை. இப்போது ஏதாவது புரிகிறதா?

    “கீதா, வயதுக்கு மீறிய முதிர்ச்சி கண்ணே உனக்கு. நிஜம் தான். டாக்டர் ஆடலரசுடன் பேசியதிலிருந்து பல விஷயங்கள் புரிய வந்தன. உன் தாய் சைலஜா என்கிற ஷீலா, ஒரு அற்புதமான வித்தியாசமான மங்கை. வாழ்வை மிகவும் ஈடுபாட்டுடன் ரசிப்பவள்; ரசித்தவள். அவளுடைய இளமைக் காலத்துக் கனவுகள் பல. உன்னதமான கனவுகள் அவை. குமரிப் பருவத்துக்கே உரிய கனவுகளும் சில சேர்ந்து கொண்டன. ஒன்றன் பின் ஒன்றாக, கனவுகள் நிறைவேறும் வாய்ப்பும் தகுதிகளும் இருந்தும் அவை நிறைவேறாமல் அவளை ஏமாற்றத்தில் ஆழ்த்தித் துயரப் பட வைத்தனவாம். பின்னொரு நாள் விரிவாக இதைப் பற்றி நான் உனக்குக் கூறுகிறேன்.

    “நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்து, விரும்பி, மணம் புரிந்து கொண்ட பின்பு தான் இந்தத் துயரமான எண்ணங்களிலிருந்து வாழ்க்கையைத் திரும்ப மீட்டு ரசிக்கத் துவங்கினாள் ஷீலா…

    “… திடீரென்று கடந்த கால வாழ்க்கையின் நிழல் எங்கள் காதல் வாழ்வைத் தாக்கியது. அவளுடைய கஸின் என்ற ரூபத்தில். அவன் என்னவெல்லாமோ பேசி அவள் மனதைக் குத்திப் புண்படுத்தி, ஓ கீதா டார்லிங், என்னுடைய தேவதை ஷீலா — அவள் மனநோயாளியானாள்; தன்னம்பிக்கையை இழந்தாள். என் அன்பைக் கூட நம்பவில்லை. பிரிந்து பறக்க எண்ணி என்னை வற்புறுத்தி விவாகரத்து வாங்கிக் கொண்டாள்.

    “இந்த வினோதமான மனநோய் வெவ்வெறு உருவங்களில் அப்பப்போது அவளை வாட்டியபடியே இருந்திருக்கிறதாம்…

    கீதா குறுக்கிட்டாள், “ஆனால், டாடி, அம்மா ஒரு டாப் கிளாஸ் கார்ப்பரேட் பிஸினஸ் புள்ளி. மனநோய் இருந்தால் எப்படி இதெல்லாம் சாதிக்க முடியும்?”

    “டாக்டர் அரசு சொன்னார் – இவர்கள் இரட்டை பர்ஸனாலிடி என்று. வெளியுலகுக்கு படாடோபமாக, பெரிய மனிதர்களாக, மிக நல்லவர்களாக இருப்பார்கள். உள்மனத்தை அரிக்கும் விஷயங்களை அழுந்த மூடி வைத்து விடுவார்கள். இதனாலேயே இவர்களுடைய சுயரூபம் யாருக்கும் தெரிவதில்லையாம்.

    “இந்தியப் பண்பாட்டில் ஊறிப்போன உன் அம்மா, தன் விருப்பப்படி எப்படியெல்லமோ வாழ்ந்து கொண்டிருந்தாளே – ஊர் உலகம் எல்லாம் சிரிக்கும்படி. ஒன்றை நினைவு வைத்துக்கொள், மை சைல்ட். உன் தாயின் மீது நீ வைத்திருக்கும் அன்பும், மதிப்பும் இதையெல்லாம் கேட்ட பின்பு மாறியது என்றால் நான் மிகவும் வருத்தப்படுவேன். நீ பெரிய பெண், சிறுமி அல்ல என்ற எண்ணத்தில் நான் இவற்றை உனக்கு விளக்கிக்கூறுகிறேன்.

    “ஒரு விஷயம் மட்டும் நன்றாகப்புரிகிறது. தன் இளமைப் பருவத்து நண்பர்களான ஆடலரசின் குடும்பத்தினரைச் சந்தித்தது ஷீலாவுக்கு ஒரு பெரிய ஆசீர்வாதம். அதுவும் ஆடலரசு டாக்டராக இருப்பது இன்னுமே ஒரு பெரிய உதவி. அவளுடைய மனநிலையை கவனித்து நல்ல நண்பராக உதவி வருகிறார். கடந்த சில மாதங்களில் அவள் மனநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்கிறார்.

    “அவள் தன்னுள் ஒடுங்கிக் கொள்ளும் தருணங்கள் மிகக் குறைந்து விட்டனவாம். மை சைல்ட், நான் உன் தாயை மிகவும் நேசிக்கிறேன். அவளுடையது அழகான, உற்சாகமான, உணர்ச்சி மிகுந்த உள்ளம். பூப்போன்றது. அதை அப்படியே திரும்ப ஏற்றுக்கொள்ள நான் யாசிக்கிறேன். ஆனால் அவளாகத் தன் குழப்பங்களிலிருந்து விடுபட்டு நம்மிடம் திரும்பி வர ஒப்ப வேண்டும். நாம் காத்திருந்து பார்ப்போம்…” ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். பசேலென்ற நீர் நிறைந்த வயற்பரபில் வெள்ளைவெளேரென்ற ஒற்றைக் கொக்கு தன்னந்தனியாக நின்று தவமிருந்தது. ஏனோ அவனுக்கு அது ஷிவாவை நினைவு படுத்தியது; உள்ளத்தைப் பிசைந்தது.

    “டாட்,” கீதா ஜிம்மின் முகத்தைத் தன் விரல்களால் தொட்டாள். ” நீ தைரியமாக இரு. வி லவ் ஹெர். அவளுக்கும் அது புரிகிறது. எல்லாம் நல்ல விதமாக முடியும்,” தந்தையின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு துயரை அழுந்த விழுங்கியது அந்தப் பெண்.

    அவள் ஏக்கம் யாருக்குப் புரியும்? நினைவு தெரிந்த நாளிலிருந்து ஜிம் தான் தாய், தந்தை எல்லாம். என்ன தலைபோகும் வேலை ஆனாலும் தன் பெண்ணுடன் டின்னர் சாப்பிட ஆறு மணிக்கு வீட்டில் இருப்பான் ஜிம்.

    விட்டுச் சென்ற தாயைப் பற்றி கீதாவின் நண்பர்கள் கேட்கும் வினோதமான கேள்விகளைக் குழப்பத்துடன் அவள் ஜிம்மிடம் வந்து கேட்கும்போது, “கண்ணே, உன் அம்மா மிக நல்லவள். உன்மீது அவளுக்கு மிகவும் அன்பு உண்டு. ஆனால் அவளுக்கென்று சில விருப்பங்கள் உண்டு. அதை மதிப்பதன் மூலம் நாம் அவள் அன்பை கௌரவப்படுத்துகிறோம்,” என்று சமாதானம் கூறுவான்.

    ஏதோ ஒரு இந்தியன் கடையில் வாங்கின பொம்மை ஒன்று, அழகாகப் புடவை கட்டி, நீண்ட தலைப்பின்னலும், பொட்டும், வளையலுமாக- ரொம்ப நாட்களுக்கு கீதா என்ற சிறுமிக்கு அந்த ‘மம்மி பொம்மை’ தான் உயிருக்கு உயிரானது. அதனுடன் தான் உறங்குவாள். டைனிங்டேபிளில் அதற்கு ஓரிடம் உண்டு. எங்காவது வெளியூர் சென்றால் கூட, முதலில் வருவது ‘மம்மி பொம்மை’ தான். இப்போது கூட அவளுடைய சூட்கேஸின் ஒரு பத்திரமான மூலையில் அந்த பொம்மை இருந்தது. பொம்மைக்குப் பதில் நிஜமான மம்மியைக் கொண்டு போகும் ஆவலுடன் வந்திருந்தாள் கீதா.

    சென்ற ‘ஸம்மர்’ விடுமுறையில் கூடப் படிக்கும் ‘ரிக்’ என்னும் ரிச்சர்ட், கீதாவை ஒரு சிலமுறைகள் தியேட்டர்களுக்கு அழைத்துச் சென்றவன், “கீதா. எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. நீ என் தோழியாக இருப்பாயா?” என்று கேட்டான்.

    அடுத்த சில நாட்களுக்குத் தான் அனுபவித்த நூதன உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள ஆளில்லாமல் பரிதவித்தாள் கீதா. ‘மம்மி’ பொம்மையுடன் உரையாடியது ஜிம்மின் காதில் விழுந்தது. அவன் குறுக்கிட்டு, நீண்ட நேரம் அவளுடன் பேசி, அறிவுரை கூறி ஆதரவு தந்தான்; இருந்தாலும் அது அம்மாவின் அன்பு நிறைந்த பெண் மனதைப் புரிந்துகொண்ட அறிவுரைக்கு ஈடாகுமா? ஆகாதே!

    தாங்கள் வாழும் அமெரிக்காவில் இது வெகு சகஜமாயிற்றே. தன் தந்தைக்கு வேறு பெண்நண்பர்கள் கிடையாதா? மறுமணம் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்று மனதில் உறுத்தியிருக்கிறது.

    அமெரிக்கக் குழந்தையாயிற்றே. ஆறாம் வயதில் இருந்தே தந்தையிடம் இதைப் பற்றிக் கேட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் ஜிம் சிரித்துக்கொண்டே சொல்வான், “உன் அப்பா கொஞ்சம் விசித்திரமானவன், டார்லிங். உன் அம்மா இந்த இடத்தை இன்னும் காலி செய்யவில்லை,” என நெஞ்சைத் தொட்டுக் காண்பிப்பான்.

    “ஐ லவ் யூ டாட், ஐ லவ் மம்மி டூ!” என்று குழந்தை ஒரு சேர ஜிம்மையும் மம்மி பொம்மையையும் இறுகக் கட்டிக்கொள்ளும்.

    என்றேனும் ஒரு நாள் தாயைச் சந்திப்போம் என்று எதிர் பார்த்திருந்தாள். அது நீண்ட நாட்கள் கழித்தே நிகழ்ந்துள்ளது. அதுவரை அந்த எதிர்பார்ப்பு ஆவலும் அற்புதமும் நிரம்பிய உணர்ச்சியாக இருந்தது. அவளைச் சந்தித்ததும் தான், அந்த அணைப்பில், தாயின் ஸ்பரிசத்தில் மூழ்கியதும் தான், அந்தச் சிறுமி இத்தனை நாள் தான் இழந்திருந்ததின் பரிமாணம் என்னவென்று உணர்ந்தாள். இதைத் திரும்பத் தன்னுடன் கொண்டு செல்லவேண்டும் என்று குழந்தை மனத்தின் உத்வேகம் கூறியது. தாயின் மனநிலையை விளக்கமாக அறிந்த புத்திசாலி மகளின் மனம், ‘இது முடியாமலும் போகலாம்,’ என்ற உண்மையை உணர்ந்து தன் நிலைக்கும், தன் தாயின் நிலைக்கும் சேர்ந்து பரிதவித்தது.

    ‘காதல்’ என்ற உணர்வை உணர ஆரம்பித்திருக்கும் வாலிபப் பருவமாதலால், ஜிம், ஷீலாவைத் தன் கதையின் கதாநாயகர்களாக்கி, அவர்களின் அன்பை, அன்பால் அவர்கள் படும் அவஸ்தையை எல்லாம் கண்டும், கேட்டும், கதை எப்படி தொடரப் போகிறதோ என்ற தவிப்பிலும் இருந்தாள் அந்த இளம் பெண் கீதா.

    (தொடரும்)

    மறு பகிர்வு: தாரகை இணைய இதழ்

    ********************************************************

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி-14

    மீனாட்சி பாலகணேஷ்

     

    ‘மதியப் பொழுதின் வேலை முனைப்பில் நான் கூட்டத்துடன் ஒன்றிப் போய் விடுகிறேன். ஆனால் இந்த இருண்ட தனிமையான நாளில், உன்னை மட்டும் எதிர்பார்த்தே காத்திருக்கிறேன்’- தாகூர் (கீதாஞ்சலி)

    ^^^^^^^^^^^^^^^^

    ஷீலா உறக்கம் பிடிக்காமல் தவித்தாள். எப்படி உறக்கம் வரும்? பங்களாவின் மற்றொரு அறையில் ஜிம், வேறொரு அறையில் கீதாஞ்சலி எல்லாரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது, அவளுக்கு எப்படி உறக்கம் வரும்?!

    அவளுக்குத் தெரிந்து சமீபத்தில் இதயபூர்வமான களங்கமற்ற அன்பில் நனைந்து குளிர்ந்தது இன்று மாலை தான். இந்த வீடு கலகலப்பாக, இனிமை நிறைந்ததாக விளங்கியது இன்று தான்.

    எட்டுமணி வரை அமுதா ஆடலரசு அவர்கள் குழந்தைகள் எல்லாரும் இருந்தனர். ஒரு எளிய, ஆனால் ருசியான டின்னருக்குப் பிறகு பேசிக் களித்த வண்ணம் இருந்தவர்கள், கீதா ‘ஜெட்லாக்’ எனப்படும் நேரம் மாறியதால் உண்டாகும் களைப்பினால் உறங்கத் தவிப்பதை உணர்ந்து, பேச்சுக்குத் தற்காலிக முடிவு கட்டிவிட்டுக் கிளம்பினார்கள்.

    இத்தனை ஆண்டுகளுக்குப் பின் ஜிம் தன்னிடம் வெகு சகஜமாகப் பழகியதைக் கண்டு ஆனந்தக்களிப்பில் துள்ளியது ஷீலாவின் உள்ளம்.

    இப்போதும் பொங்கிய மகிழ்வின் மிஞ்சிய தித்திப்பைத் திரும்பச் சுவைத்து எண்ண அலைகளைப் புரட்டினாள்.

    ஜிம்மையும் கீதாவையும் வரவேற்க ‘ஏர்போர்ட்டு’க்குப் போவது என்று ஏற்பாடு. அமுதாவும் ஆடலரசும் உடன் வர வேண்டும் என்று பிடிவாதமாக வேண்டினாள். ஜிம், கீதாவுடனான அவளுடைய சந்திப்பு, நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வித்தியாசமான சூழலில் நிகழும்பொழுது தாங்கள் இடைஞ்சலாக இருப்பதை அமுதாவும் ஆடலரசும் விரும்பவில்லை. ஆனால் ஷீலா மிகவும் வற்புறுத்தியதன் பேரில் ஒப்புக்கொண்டனர்.
    விமானநிலையத்தில் ஷீலாவின் தவிப்பு வேடிக்கையாக இருந்தது. பத்து நிமிடம், இன்னுமொரு பதினைந்து நிமிடம் என்று விமானம் தாமதமாக வந்ததில் அவள் நெற்றிக் கண்ணைத் திறந்து விமானநிலையத்தையே எரித்து விடுபவள்போல் பொறுமையிழந்து தவித்தாள்.

    விமானம் வந்து நின்ற அறிவிப்பைக் கேட்டதும் அமுதாவின் கரத்தைப் பற்றிக்கொண்டு ஆவலுடன், கண்ணிமைக்காமல் ஒவ்வொரு பயணியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

    கீதாவின் புகைப்படங்களை அடிக்கடி பார்த்திருந்ததால் அவள் எப்படி இருப்பாள் என்று தெரியும். ஆனால் ஜிம்மைப் புகைப்படத்தில் கூட இத்தனை நாட்களாகப் பார்த்திராததால் அவன் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு எப்படி மாறி இருப்பான் என ஊகிக்கக்கூட முடியவில்லை. தன் புகைப்படம் அவளுக்கு அனுப்பப்படக்கூடாது என்பதில் ஜேம்ஸ் மிகவும் உறுதியாக இருந்தான். அவள் மனத்தில் மேலும் சஞ்சலத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதில் அவன் மிகவும் கவனமாக இருந்தான்.

    அதோ, அங்கே ஜிம்…. அது தானா, ஆமாம். அந்தச் சிறிய பெண், கீதா தான் அது. ஜிம் மாறவே இல்லை. அன்று கண்டது போல அப்படியே இருந்தான். குதிநடையிட்டு வரும் இளம்பெண் அப்படியே சிவகாமியின் அச்சாக இருந்தாள். விழிகள் மட்டும் ஜிம்மின் நீலவிழிகள்.

    மனதில் சிறைப்பட்டுக் கிடந்த தாய்மை, பொங்கிப்புரண்டு பிரவகித்து, இனம் புரியாத சங்கடமான தவிப்பையும், பேரானந்தத்தையும் உண்டாக்கியதால் செய்வதறியாது மயங்கி நின்றாள் ஷீலா ராபர்ட்ஸ் என்ற சூப்பர் வுமன். ஆடலரசு இதற்குள் அவர்களைப் பார்த்து விட்ட பரபரப்பில் இவர்கள் பக்கம் விரைந்து வந்தான்.

    “அமுதா, சைலஜா ஜூனியர் பார்த்தியா? அப்படியே அதே அச்சு!” பரவசத்தில் அமுதாவின் தோளை உலுக்கினான். ஷீலாவின் இதயம் சிறகடித்து பறந்துபோய் மகளை மானசீகமாகத்தழுவி ஆலிங்கனம் செய்து கொண்டது.

    “தேர், தேர் ஷி இஸ், டார்லிங் கீதா, ஹியர் இஸ் யுவர் மதர்,” ஜிம்மின் குரல் அருகாமையில் கேட்டதும் ஷீலாவின் உடல் சிலிர்த்தது. “ஹலோ, கீதா டியர், எப்படி இருக்கே?” என்று இத்தனை வருடங்களாக அன்னியப் பட்டுப்போன தன் மகளாகிய அந்த இளம் பெண்ணின் கரங்களை, கம்பித் தடுப்பினூடே தனது கரங்களை விட்டுப்பிடித்தபடி மென்மையாக வருடிக் கொண்டு வினவினாள் ஷீலா.

    “மம்மி டியர், ஓ. எவ்வளவு அழகாக இருக்கிறாய் நீ, உன்னைப் பார்த்ததில் நான் ரொம்பவும் பரவசப்பட்டுப் போயிருக்கிறேன்,” என்று உற்சாகமும் ஆனந்தமும் பொங்கக் கூறிய கீதா, ஷீலாவின் கரங்களை இழுத்துப் பற்றி, அழுத்தி முத்தமிட்டாள். ஷீலாவின் உணர்ச்சிகள் புயலாகக் கொந்தளித்தன. ‘நான் இரண்டாம் பட்சம் என்று ஒதுக்கிவிட்டு வந்தது எவ்வளவு இன்றியமையாததாக இன்று ஆகி விட்டது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு இத்தனை நாட்கள் ஆயினவே,’ என்று பச்சாதாபத்தில் குமைந்தாள்.

    தாய்- மகளின் சந்திப்பை அருகில் நின்று அமைதியாகக் கைகளைக் கட்டியவாறு பார்த்துக் கொண்டிருந்த ஜிம்மின் முகத்தில் மகிழ்ச்சியின் அலைகள். எப்போதுமே கலைந்தது போல இருக்கும் தலைமுடியை விரல்களால் கோதியபடி, “ஷீலா, ஹவ் ஆர் யூ? நான் இந்தியாவிற்கு கீதாவை அழைத்துக் கொண்டு வந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அவள் கரத்தைப் பற்றிக் குலுக்கினான்.

    ame
    ‘இத்தனை ஆண்டுகளின் பின்பு, டைவர்ஸ் செய்த ஆண்மகனின் கைகுலுக்கலில் இப்படி ஒரு மின்சாரம் பாயுமா? நான் மனதை மிகவும் அலைபாய விடுகிறேனோ? இல்லை, அவன் கடிதத்தில் எழுதி இருந்தவைகளால் தான் என் மனது திரும்பவும் வண்ணத்துப் பூச்சியாகப் பறக்கிறது. ஜிம் நீ எவ்வளவு உயர்ந்தவன்- நீ என்னைப் புரிந்து கொண்ட அளவில் நான்கில் ஒரு பங்காவது நான் என்னைப் புரிந்து கொண்டிருந்தால், இந்தக் குழப்பங்களெல்லாம் வந்தே இருக்காதோ என்னவோ–

    ‘ஜிம், நான் தேடி வந்ததைத் தவிர, அது கிடைக்காததை விட இழந்தது மிக அதிகம். என் சுய கௌரவம், மனிதத் தன்மை, பெண்மையின் இனிமையான தாய்மை உணர்வு, இன்னும் என்னென்னவோ- எல்லாம் இழந்து- நீயும் இல்லை என்றாகி விடுமோ என்று நொந்து போனபோது, ‘இதோ இருக்கிறேன்,’ என்று நீ இங்கு வந்தது என்ன நிகழ்வு? தெய்வச் செயலா? என் அதிர்ஷ்டமா……’

    “சைலஜா, லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கிட்டு அவங்க வந்துட்டாங்க பாரு, வா போகலாம்,” ஷீலாவை இழுத்துக் கொண்டு ஜிம்மை நோக்கி விரைந்தாள் அமுதா.

    “மம்மி டியர், ஐ லவ் யூ ஸோ மச்…..”

    “கீதா பேபி, என் கண்ணே, லிட்டில் ஏஞ்சல்,” வார்த்தைகள் குழற, அந்த இளம் பெண்ணை அணைத்தபடி பிதற்றினாள் சைலஜா. பட்டுப் போன்ற கூந்தலிலும், கண், மூக்கு, முகம், கரங்கள் என முத்தமாரியில் நனைத்தாள். சுற்றுச் சூழலை மறந்தாள்.

    அந்தக் குழந்தையும் தாயின் அணைப்பில், காலம் கடந்து கிடைத்தாலும், கிடைத்தற்கரிய பேரானந்தத்தைத் தரக்கூடிய ஒரே ஒருத்தியின் அணைப்பில் துவண்டு ஒடுங்கி, விசும்பியபடி அவளின் கரங்களில் தவழ்ந்தது.

    அமுதா, கண்கள் பனிக்க, ஆடலரசின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கலங்கிய கண்களை நாசுக்காகத் துடைத்தபடி, தன்னை ஜிம்மிடம் அறிமுகப் படுத்திக் கொண்டான் ஆடலரசு.

    எல்லாரும் இவர்களையே திரும்பித் திரும்பிப் பார்த்தபடி கடந்து போகும் நிகழ்வினால் கூச்சமடைந்த அமுதா, “சைலா, வாம்மா, காருக்குப் போகலாம்,” என்று சைலஜா, கீதா இருவரையும் மெல்லத் தட்டி அழைத்தாள். ஒருவர் அணைப்பிலிருந்து மற்றவர் பிரியாமல் தாயும் மகளும் வந்து காரில் ஏறியதும், வீடு வந்ததும் ஏதோ கனவு போலத்தான் இருந்தது.

    ஜிம் நாகரிகம் தெரிந்தவனாக இருந்ததால் தனக்கு ஹோட்டலில் ரூம் ரிஸர்வ் செய்து கொண்டிருந்தான். ஷீலாவின் பெரிய பங்களாவில் தங்குவதை அவன் எதிர் பார்க்கவில்லை. எனவே, டின்னருக்குப் பின் அவன் ஹோட்டலுக்குக் கிளம்பியதும், அதுவரை இதைப் பற்றி அறியாத ஷீலாவுக்குத் ‘துணுக்’கென்றது. மெல்ல ஆடலரசை விட்டு, “ஜிம்மை இங்கேயே தங்கிக்கச் சொல்லுங்களேன். எனக்கு ஒரு தொந்தரவும் இல்லை. ப்ளீஸ், ஆடலரசு, எனக்கு எப்படி அவரிடம் சொல்லிக் ‘கன்வின்ஸ்’ பண்ணுவது என்று புரியல,” என்றதும், ஜிம்மின் சமீபத்திய கடிதத்தின் உட்பொருளை நெருங்கிய நண்பர்கள் என்ற முறையில் அவர்களுடன் ஷீலா பகிர்ந்து கொண்டிருந்ததால், உரிமையுடன் ஆடலரசு, “ஏன் சைலா, நீங்களே சொல்ல மாட்டீங்களா? இதென்ன, அரசு விடு தூதா?” என்று குறும்பாக வினவினான்.

    பதினைந்து வயதில் தான் அவள் முகத்தில் கண்டு ரசித்த நாணக் கலவை இப்போது அதே அளவில், மேலும் பொலிவோடு மின்னி மிளிரக் கண்டான். அன்று அந்த நாணம், அவனுக்குக் கழிவிரக்கத்தை ஏற்படுத்தியதென்றால், இன்றும் வேறு யாரையோ கருதி ஏற்பட்ட நாணம், அவனுக்குக் களிப்பையும், உல்லாசம் நிறைந்த மனக்கிளர்ச்சியையும் உண்டு பண்ணியது.

    ஜிம்மை ரொம்ப வற்புறுத்த வேண்டியிருக்கவில்லை. ஷீலாவின் ஒரு வேண்டுகோளுக்காகக் காத்திருந்தவன் போல உடனே ஒப்புக்கொண்டு விட்டான்.

    கீதா மிகவும் களைத்துப்போய் உறங்க விரும்பியதாலும் ஜிம்மின் கண்களில் ஷிவாவுடன் தனித்துப்பேசும் ஆர்வமும் ஆவலும் மின்னியது வெளிப்படையாகத் தெரிந்ததாலும், ஆடலரசும் அமுதாவும் விடை பெற்றுக் கொண்டனர்.

    “குட் நைட் மம்,” கீதாவிற்கு என்று ஷீலா ஒரு அறையை அழகாகத் தயார் செய்து வைத்திருந்தாள். கீதா தன் தாயை இறுக அணைத்து முத்தமிட்டபடி, ‘குட் நைட்’ சொல்லிவிட்டு உறங்கச் சென்றாள்.

    மெல்லத் திரும்பி வந்தவளிடம் ஜிம் தானும் களைப்பாக இருப்பதாகவும், இருந்தாலும், “ஒரு ஷவர் எடுத்துக்கொண்டு வருகிறேன். உன்னுடன் கொஞ்சம் பேசவேண்டும். உனக்கு நேரம் இருக்குமானால்….” என்றான். பத்துப் பதினைந்து நிமிஷங்கள் பால்கனியில் காத்திருந்த ஷீலா அவன் வரக்காணாதது கண்டு, ‘ஒருவேளை களைப்பினால் உறங்கிப் போயிருப்பான்,’ என எண்ணியபடி தன் அறைக்குச் சென்றபோது மணி ஒன்பது.

    கடிகாரம் பத்து முறை அடித்து ஓய்ந்தது. உறக்கம் வராததால், சிந்தனை ஓட்டங்களில் தன்னை இழந்திருந்த ஷீலா மெல்லத் தன் அறைக் கதவைத் திறந்துகொண்டு பால்கனியில் வந்து நின்றாள். நிராசையில் மனம் துடிதுடித்தது. இரவில் மலர்ந்த மலர்களின் மெல்லிய வாசம் தோட்டத்திலிருந்து வந்து அந்த அமைதியான இரவில் அவளுடைய மனத்தின் அமைதியை மாத்திரம் கலைத்தபடி சவால் விட்டது. வானில் நட்சத்திரங்கள் ஒன்றையொன்று பார்த்து கண் சிமிட்டிக்கொண்டன.

    “சைலஜா,” அழைத்தது யார் என்று திரும்பிப் பார்க்காமலே சொல்லிவிட அவளால் முடியும். இந்த அழைப்புக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தாளே- திரும்பிப் பார்த்தவளை ஜிம் மூக்குக் கண்ணாடிக்குப் பின்னாலிருந்து ஆழ்ந்த நீல நிற விழிகளால் கனிவுடன் பார்த்தவண்ணம் கைகளை நீட்டி அவள் கைகளைப்பற்றிக் குலுக்கினான். “உன்னைக் காக்க வைத்து விட்டேன், மன்னித்துக்கொள்.”

    ஒன்றுமே பேசாமல் ஒரு புன்சிரிப்புடன் அவனையே சில கணங்கள் நோக்கியவள், என்ன பேசுவது எனப் புரியாத தவிப்பில், “ஜிம், நீ மாறவேயில்லை. அப்படியே இருக்கிறாய். சற்றுப் பருத்திருக்கிறாய்,” என்றாள். இரவின் நிசப்தத்தை கிழிக்க அச்சப்பட்டவள் போல சன்னமான குரலில் பேசினாள்.

    “ஹ்ம், இதை நானும் உனக்குத் திருப்பிச்சொல்வேன் என்று நினைக்காதே. நீ ரொம்பவும் மாறி இருக்கிறாய்…”

    நட்பின் கனிவோடு, பரிவாக வந்த வார்த்தைகள்- கண்களில் பொங்கிய நீரை அவன் காணாவண்ணம், திரும்பி, பால்கனியின் மறுகோடிக்கு நடந்தாள் சைலஜா.

    “நான் ஏதாவது தப்பாகச் சொல்லி விட்டேனா சைலா?” பின் தொடர்ந்தான் ஜிம்.

    “இல்லவே இல்லை. நீ எப்போதும் உண்மையை நேருக்கு நேர் கூறுபவன். அதனால் நான் உன்னை மிகவும் மதிக்கிறேன். நீ சொன்னது உண்மை. நான் மிகவும் மாறிவிட்டேன். பழைய சைலஜா இல்லை….” விரல்களைக் கோர்த்துக்கோர்த்துப் பிரித்தபடி வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.

    “நீ என் லெட்டரைப் படித்தாயா?” நேரடித் தாக்குதலாக வந்து விழுந்த கேள்வியின் பொருளுணர்ந்து திகைத்தாள் ஷீலா. சில நொடிகள் மௌனத்தின் பின் பேசினாள், “ஜிம்,… உன் கடிதத்தைப் படித்தபின்புதான் நான் புத்துணர்ச்சியில் புதுமனுஷியாக நடமாட ஆரம்பித்து இருக்கிறேன். நீ என்னிடம் எதிர்பார்க்கும் பதில் என்னவென்று எனக்குப்புரிகிறது. நானும் அதைக்கூறி விடுவேன். ஆனால் சில புதுவிதமான கவலைகளும் அச்சங்களும் தோன்றி என்னை அலைக்கழிக்கின்றன.

    “என் கடந்தகால வாழ்வை, உன்னைப் பிரிந்து நான் வாழ்ந்த இந்த நாட்களை, வருடங்களை நான் சிந்தித்துப் பார்த்தபடி இருக்கிறேன். எனக்குக் சிறிது அவகாசம் கொடு..ப்ளீஸ்.. உன்னால் இது முடியுமா?”

    “வேண்டிய அவகாசம் எடுத்துக்கொள். உன் பதில் மறுப்பாக இருந்தாலும் கூட எனக்கு அதை ஏற்றுக் கொள்ளும் மனோபலம் இருக்கிறது. ஒரு சிறு விஷயம்.. இதோ…” ஒரு சிறு நகைப் பெட்டியை டிரௌஸர் பாக்கெட்டிலிருந்து எடுத்தான். ரத்தச் சிவப்பான ‘ரூபி’ என்னும் மாணிக்கங்கள் பதித்த ஒரு அழகிய மோதிரம் வெல்வெட் குஷனில் அமர்ந்தபடி ஷீலாவைப் பார்த்துப் புன்னகைத்தது. “இதை நாங்கள் டெல்லியில் இருந்த ஆறுமணி நேரங்களில், கீதா உனக்காக வாங்கினாள். நான் இதை உனக்குப் பரிசாகத்தர வேண்டும் என்பது அவளது விருப்பம். அதுவும் நாம் இருவரும் தனிமையாக இருக்கும்போது என்றும் சொல்லியிருக்கிறாள். ‘டீன் ஏஜ்’ பெண் அல்லவா? காதல் சம்பந்தமான உணர்வுகள் மிகவும் அதிகமாகப் பாடுபடுத்தும் வயது! அவளுடைய விருப்பப்படி, ஏன், நானும் கூட விரும்பித்தான், உனக்கு இதைத் தருகிறேன்,” எனப் பெட்டியை அவளிடம் நீட்டினான்.

    பெட்டியை வாங்கிக் கொள்ளாமல், ஒரு கையால் தூணை அணைத்தபடி மறுகை விரல்களை மடக்கிக்கொண்டு மோதிரவிரலை அவனிடம் நீட்டினாள். வெட்கமேயில்லாமல் கண்களிலிருந்து கண்ணீர் மழை பொழிந்து கொண்டிருந்தது.

    மென்மையாக அவ்விரலைப்பற்றி மோதிரத்தை அணிவித்தவனுடைய கரங்களும் நடுங்குவதை அவளால் உணர முடிந்தது.

    ‘ஜிம், நீ தான் எனக்கு வேண்டும். நீ மட்டுமே எனக்கு வேண்டும். பகலும் இரவும் என்னைப் பொய்மை மிகுந்த எண்ணங்கள் அலைக்கழிக்கின்றனவே,’ என மனம் கதறியது. அந்த உயரமான ஆறடி ஆகிருதியில் தன்னைப் புதைத்துக்கொண்டு கதறத்துடித்தது உள்ளம். எது அவளை இப்போது பலாத்காரமாகத் தடுக்கிறது? வெறும் ஒரு சட்டபூர்வமான காகிதம், மனங்கள் விழையும் உறவைக் கூடாதென்று தடுக்குமா என்ன? இல்லை, இது வேறு ஏதோ ஒன்று.

    புதிய ஒரு குழப்பம் ஷீலாவை அலைக்கழிக்கத் துவங்கி இருந்தது.

    மோதிரம் அணிவித்த விரலையும் கரத்தையும் விட்டு விடாமல், “வித் யுவர் பர்மிஷன்,” என்று அக்கரத்தைத் தன் இதழ்களில் பதித்துக்கொள்ள விரும்பி அவள் முகத்தை ஏறிட்டான் ஜிம். ‘ஆமாம்,’ என்பது போல அவள் தலை லேசாக அசைந்தது. ஒரு மின்சார அலை ஆத்மாவை ஊடுருவிப் பாய்ந்து, நெஞ்சத்தைச் சம்மட்டி போலப் பிளந்தது.

    தன் பாக்கட்டிலிருந்து ‘டிஷ்யூ’ பேப்பரை உருவி, அவள் கண்களை மென்மையாக ஒற்றித் துடைத்த ஜிம், “சைலஜா, உனக்கு இப்போது நல்ல ரெஸ்ட் தேவை. நாளை காலையில் பார்க்கலாம்,” என்றதும், அன்பான கட்டளைக்குக் கீழ்ப்படியும் குழந்தையைப் போல, தன் புதுமோதிரத்தைத் திரும்பத்திரும்பப் பார்த்துக்கொண்டு நடந்தவாறே தன் அறைக்குள் நுழைந்து உறங்க முயன்றாள் ஷீலா.

    (தொடரும்)

    தாரகை இணைய இதழ்

    ********************************

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி–13

    மீனாட்சி பாலகணேஷ்

    எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி
    எட்டாத பேராசைக் கோட்டை கட்டி
    புண்ணாக நெஞ்சம் புலம்பும் வண்ணம்…….. (பாபநாசம் சிவன்)

    ^^^^^^^^^^^^^^^^^^^^

    ame

    ஞாயிறு மாலை. மணி மூன்று என கடிகாரம் மூன்றுமுறை அடித்துத் தெரிவித்தது. பங்களா முழுவதும் நிலவிய நிசப்தத்தில் அந்த மணி ஓசை மண்டையில் ஓங்கி அறைவது போல ஒலித்தது.

    பத்மாசனமிட்டுத் தன்னறையில் கார்ப்பெட்டில் அமர்ந்து கண்களை மூடியபடி, தன்னுள் ஆழ்ந்து, எதையோ தேடிக் கொண்டிருந்த ஷீலாவின் விழிகள் மெல்லத் திறந்தன. இப்போதெல்லாம் அடிக்கடி இப்படி ஒரு தியானத்தில் அவள் ஆழ்ந்து விடுகிறாள். உள்ளத்தைத் துருவித் துருவித் தேடுகிறாள். இப்போது தான் ஆரம்பித்த தேடல்- விடை அவ்வளவு சீக்கிரம் கிடைத்து விடுமா என்ன?

    எழுந்து, பெரிய ஜன்னல்களை விரியத் திறந்து தோட்டத்தைப் பார்த்தாள். மாலையின் மஞ்சள் வெயிலில் எல்லாமே பொன்னிறம் கொண்டு துலங்கின. பளபளத்த பெரிய பொன்வண்டு ஒன்று தென்னம் பாளைகளில் ரீங்காரம் செய்தபடி மது அருந்தியது. இரு குருவிகள் ‘சிர்ப்’, ‘சிர்ப்’ என்றபடி ஒன்றை ஒன்று துரத்தி விளையாடின. ஒரு அணில்பிள்ளை கருமமே கண்ணாக பாதாம் கொட்டையைக் கடித்துக் கொண்டிருந்தது. உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது!

    ‘எத்தனை நாட்களாக நான் என்னைச் சுற்றி இருப்பவைகளை ரசிக்க மறந்திருக்கிறேன். ‘நான்’ என்பது தான் உயர்வு என்று அதைப் பிரதானமாக்கி நெஞ்சம் புண்ணாகும் வரை பேதலித்துப் போயிருந்தேனே. என்று நான் என் உணர்வுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அன்பு பூண்ட கணவனையும் குழந்தையையும் விட்டு விட்டு எதையோ நாடி ஓடி வந்தேனோ,அன்றல்லவோ இந்தத் துயரத்தின் தொடக்கம்-

    ‘எதை நாடி வந்தேனோ, இன்னும் அது கிடைக்கவில்லையே. ஆனால் அதைத் தேடிக் கொண்டே இருந்தால், முடிவற்ற இந்தத் தேடலில் என் வாழ்வு முடிந்து விடும். பின்பு மிச்சம் இருப்பது என்ன?’ எங்கோ ஒரு தனிமைக் குயில் கூவியது. கும்’மென்று ஒருமுறை அவள் உடல் சிலிர்த்து அடங்கியது.

    முதலில் நாளைக்கு வக்கீலைப் பார்த்து சில முக்கியமான விஷயங்களை முடிவு செய்து பதிவும் செய்ய வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டாள். லேசான ஒரு நிம்மதி பிறந்தது.

    ‘ஜிம்மின் கேள்விக்கு என்ன விடை தரப் போகிறேன்? கீதாஞ்சலி, என் அருமைக் கண்மணி என்னிடம், தன் தாயிடம் என்ன எதிர் பார்க்கிறாள்? ஆடலரசுடன் இது பற்றிப் பேச வேண்டும்,’ என எண்ணிக் கொண்டாள்.

    போர்டிகோவில் ஆடலரசின் பெரிய மெர்சேடிஸ் வண்டி வந்து நிற்பது தெரிந்தது. குழந்தைகள் இறங்கி உள்ளே ஓடி வந்தனர். அமுதாவும் ஆடலரசும் பின்னால். அமுதாவின் கையில் ஒரு ‘நல்லி சில்க்ஸ்’ பை.

    “ஆன்ட்டி, நீங்க இன்னும் ரெடியாகலையா?” என்றபடி ரொம்ப சுவாதீனமாக மாடியேறி வந்த குட்டி சுமதி கேட்டது. ஒரு பழைய ஜீன்ஸ் பான்ட், சாயம் போன கதர் சட்டை சகிதம் நின்ற ஷீலா முறுவலித்தாள்.

    “அமுதா, மேலே வாம்மா,” எனக் குரல் கொடுத்தாள். ஷீலாவின் சாம்பியன் நாய் டெபி, நான்கு குட்டிகளை ஈன்றிருந்தது. ஆடலரசு மகன் சுரேஷுடன் நாய்க்குட்டிகளைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தான்.

    “சைலா, இது உங்களுக்கு- பிரிச்சு உடுத்திக்கிட்டு, டிரெஸ் செஞ்சுக்கிட்டு வாங்க,” நல்லிப் பையை நீட்டினாள் அமுதா. பட்டுப் புடைவையும் நகைகளுமாக மின்னினாள். காதில் கல் ஜிமிக்கிகள் ஆடின. ஷீலாவின் மனம் துடித்தது. ஜிமிக்கி அவளுக்கு மிகவும் பிடித்த நகை. சிறு வயதில் எப்போதும் அதைப் போட்டுக் கொண்டே தான் இருப்பாள். அதைத் துறந்து எத்தனை வருடங்களாகி விட்டன! அமுதாவின் காதில் தொங்கிய ஜிமிக்கியை லேசாக விரலால் தட்டியபடி, “யூ லுக் ப்ரெட்டி அமுதா,” என்று மென்மையாகக் கூறினாள்.

    “ஆன்ட்டி, இந்த பாக்ஸ்ல புடைவை இருக்கு. அப்பாவும் அம்மாவும் உங்களுக்காக வாங்கியிருக்காங்க. ப்ளீஸ், போய் உடுத்திட்டு வாங்க, டைம் ஆகுது ஆன்ட்டி,” என்று சிணுங்கினாள் சுமதி.

    “எனக்கெதுக்கும்மா புடைவை இப்போ? இருக்கிறதையே நான் கட்டிக்கிறதில்லே,” என்ற சைலாவிடம் விடை கூறுமுன் அமுதா மகளை நோக்கி, “நீயும் போய் நாய்க்குட்டிகளைப் பார்த்துவிட்டு வாயேன். நான் ஆன்ட்டியோட கொஞ்சம் பேசணும்,” என்று அனுப்பி விட்டு, உரிமையுடன் ஷீலாவின் கரங்களைப் பிடித்து அழைத்துப் போய் சோபாவில் அமர்த்தினாள்.

    “சைலா, நவராத்திரிக்கு துணி எடுக்கப் போனோம். உங்களுக்கு நல்ல குங்கும கலரில் ஒரு ஜரிகைப் பட்டுப் புடைவை எடு என்று அரசு தான் சொன்னார். ஏன் தெரியுமா? ஏற்கெனவே நான் அப்பப்ப சொல்லியிருக்கேன் இல்ல- அவங்க உங்களைத் தன் மனதிலே ஒரு தேவதையா, ஏன், கோவில்ல இருக்கிற அம்பிகை மாதிரி இருக்க வெச்சுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    “சின்ன வயசிலிருந்தே உங்ககிட்ட அப்பிடி ஒரு அபிமானம், அன்பு- அவர் மனைவியான என் கிட்டயே விளக்கமாச் சொல்லியிருக்கார். அவர் வார்த்தையிலேயே சொல்லணுமின்னா, ‘இது பாரதியாரோட லக்ஷ்மி காதல், சரஸ்வதி காதல், காளி காதல் மாதிரி சைலஜா காதல்,’ என்பார். அவர் வாழ்க்கையிலே இவ்வளவு முன்னேறி இருக்கக் காரணம் நீங்க தான், உங்க மேலே அவர் வச்சிருக்கிற பிரியம், அந்தப் பிரியத்தை வாழ்க்கையில் உயர உயரப் போகிறதுக்கு ஒரு படிக்கட்டா வச்சிருக்கார்.
    “திரும்ப இந்தியா வந்து உங்களைச் சந்திச்சதுல எங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? கொஞ்ச நாட்களுக்குள்ளேயே ஒரே குடும்பம் போல நெருங்கிப் போயிட்டோம். திலகா கிட்ட வச்சிருக்கிற பாசம் மாதிரின்னு கூட சொல்ல மாட்டேன் சைலா. அண்ணன் தங்கைன்னு ஏதாவது சும்மாச் சொல்லி இந்தப் புனிதமான அன்பை நான் கொச்சைப் படுத்த மாட்டேன் சைலஜா-

    “அதனால தான் இன்னிக்கு நவராத்திரி கொலுவுக்குப் போகிறப்ப நீங்க இந்தப் புடைவையை உடுத்திக்கிட்டு தேவதை மாதிரி வருவீங்களான்னு என்னை விட்டுக் கேட்கச் சொன்னார். நீங்க சம்மதிப்பீங்கன்னு நான் காரண்டி குடுத்திருக்கேன். ப்ளீஸ்,” என்றாள் அமுதா.

    சைலஜாவுக்குத் தொண்டையில் பந்து உருண்டது. இது எந்த விதமான அன்பில் சேர்த்தி? அவளைப் போன்ற ஒரு இழிந்த பெண்ணை, அவல வாழ்வு வாழ்ந்து சமூகம் அவள் பின்னால் கைகொட்டிச் சிரிக்கும்படியான நிலையிலுள்ள அவளையா இவன் இவ்வளவு உயர்ந்த இடத்தில் தூக்கி வைத்திருக்கிறான்?

    “நானா தேவதை… அமுதா- நான்… நான்…” சொற்கள் தொண்டைக் குழியிலேயே தடுமாறி உருண்டன. உடல் நடுங்கியது.

    ‘நீ தான் சைலஜா. உன் கடந்த காலம் ஒரு மாயை. அது உன் உள்ளம் சம்பந்தப் பட்டதல்ல. நீ ஆழ்ந்து உன்னையே தேடிய தேடலின் ஒரு அத்தியாயம் அது. கணவனை விட்டுப் பிரிந்ததும், அருணுடன் வாழ்ந்ததும், தேடிய பொருள் என்ன என்று விளங்காததால் ஏற்பட்ட ஏமாற்றத்தை மறைத்துக் கொள்ள போட்டுக் கொண்ட மாயத்திரை. உன் மனது பூப்போன்றது. பிறருக்கு அது உற்சாகத்தின் சுரங்கம். நம்பிக்கையின் அஸ்திவாரம். இதை நீ உன்னையறியாமல் உன் அன்பன் ஒருவனுக்கு வழங்கியிருக்கிறாய்- இன்னும் உன்னுடைய தேடல் என்னவென்று புரியவில்லையா?’ உள்மனம் உரிமையுடன் கூறியது.

    கொஞ்சம் புரிந்தது போல இருந்தது. மிகவும் குழம்பிப் போயிருந்தாள். சிலை போலச் சிறிது நேரம் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தவளை, அமுதா தான் எழுப்பிச் சென்று, முகம் கழுவிக் கொள்ள வைத்தாள். அலமாரியைக் குடைந்து புடைவைக்கு ஏற்ற சில அணிமணிகளை எடுத்துக் கொடுத்து விட்டு, “பத்து நிமிஷம் தான் தருவேன். வெளியிலேயே இருப்பேன், வந்துடணும்,” என்று செல்லமாகக் கூறி விட்டு வந்தாள்.

    “அம்மா, நாய்க்குட்டி எல்லாம் ரொம்ப அழகும்மா. நம்ப ஒண்ணு எடுத்துக்கலாமா? அப்பா உன்னைக் கேட்டுக்கச் சொன்னார்மா,” மூச்சிரைக்க ஓடி வந்தனர் குழந்தைகள். பின்னாலேயே வந்த ஆடலரசு மனைவியை முகத்தில் கேள்விக்குறியுடன் நோக்க, அவளோ அவனைப் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகையை வீசினாள். அவளருகே அவனும் அமர்ந்தபடி தன் தேவதையின் எழுந்தருளலுக்காகக் காத்திருந்தான்.

    கதவு திறந்தது.

    அமுதாவுக்கும் ஆடலரசுக்கும் தங்கள் கண்களை இமைக்கக் கூட முடியவில்லை. இது எத்தகைய தெய்வீகப் பேரெழில் இவளிடம்? உடலை அரவணைத்த குங்கும வண்ணப் பட்டு. சம்பிரதாயமான வைரத்தோடு, கழுத்தோடு உறவாடிய மெல்லிய நெக்லஸ், கண்மை, நெற்றிக் குங்குமம், ‘பாப்’ செய்த தலைமுடியை அழுந்த முடித்து, ஒரு கொண்டை மாதிரி ஆக்கி, அதில் சிறிது ஜாதி முல்லைச் சரத்தையும் சுற்றியிருந்தாள். “சைலஜா…..,” குரல் தழுதழுத்தது ஆடலரசுக்கு. “நீங்க என்னை விடச் சின்னவங்க. இல்லாட்டி, உங்க காலில் விழுந்து கும்பிட்டிருப்பேனம்மா. அம்பிகை மாதிரி நிக்கிறீங்க,” குழந்தைகள் பார்த்து விடாதபடி அவசரமாக அறையை விட்டு வெளியேறியபடியே ‘கர்சீப்’பை எடுத்து கண்களை ஒற்றிக் கொண்டான்.

    எல்லாரும் காரில் ஏறிக் கொண்டு நகரின் பிரபல வக்கீல் சுந்தரராஜனின் பங்களாவை அடைந்தார்கள். அவர்கள் வீட்டில் நவராத்திரி பெரிய திருவிழாவாகவே கொண்டாடப்படும். பதினோரு படிகள் தவிர, பார்க், ராக்கெட் தளம், மிருகக் காட்சி சாலை, தேர் ஊர்வலம் எல்லாமாகப் பெரிய கொலு- குழந்தைகளுக்கு, ஏன் பெரியவர்களுக்குமே பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத கலைவிருந்து. மூன்று நான்கு அறைகளில் கொலு வைத்திருப்பார்கள்!

    இவர்கள் உள்ளே நுழைந்ததும், சுந்தரராஜனின் பெரிய பெண் வரவேற்றுக் கூட்டிக் கொண்டு போனாள். கூட்டம் அவ்வளவாக இல்லை. ஐந்தாறு பெண்கள், அவர்களது கணவர்களும் குழந்தைகளுமாக முன்னறையில் சிலபேர்- அவ்வளவு தான்.

    வருடாவருடம் சுந்தரராஜன் வீட்டிலிருந்து அழைப்பு வரும். ஷிவா வேண்டுமென்றே வராமல் இருந்து விடுவாள். ஒருமுறை சில பிரெஞ்சு விருந்தாளிகளைக் கூட்டிக் கொண்டு வந்தாள். பட்டும் நகைகளுமாகப் பளபளத்த பெண்கள் கூட்டத்தின் நடுவே, ‘லெதர் டிரௌசரும்’ முன்னால் இடையில் முடிந்து கொண்ட ஒரு ‘லொட லொட’ டாப்ஸுமாக வந்து எல்லாரையும் விழி பிதுங்க வைத்து அதிர்ச்சிக்குள்ளாக்கினாள்.

    சாந்தா சுந்தரராஜனுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. சைலஜாவின் அரசி போன்ற கம்பீரமான தோற்றத்தில் தன் மனதைப் பறி கொடுத்தவள், உரிமையுடன் அவள் கரத்தைப் பற்றி அழைத்துப் போய் கொலுவில் அந்த வருடத்து விசேஷ அமைப்புகளை விளக்கலானாள்.

    அமுதாவும் ஆடலரசும் கொலுவின் அமைப்புகளை குழந்தைகளுக்கு விளக்கிக் கொண்டிருந்தனர்.

    சைலஜாவின் வீட்டில் கொலு பெரிதாக வைப்பார்கள். அக்கம் பக்கம் எல்லாரையும் கூப்பிட்டு மஞ்சள் குங்குமமும், சுண்டலும் வினியோகிப்பார்கள். ஒரு வருடம் ஆடலரசு தான் சைலாவின் பார்க்குக்கு திலகாவின் சிபாரிசின் பேரில் கேழ்வரகு தெளித்து முளைக்கட்டி, கோவில் குளம் எல்லாம் அமைத்துக் கொடுத்தான்.

    அவர்கள் வீட்டில் தாம்பூலம் வாங்கிக் கொள்ள வரும் பெண்கள் தாங்கள் பாடுகிறார்களோ என்னவோ, சைலஜாவைப் பாடச் சொல்லி ரசிப்பது வழக்கம்.

    இன்றும் இங்கு மற்ற பெண்கள் பாடிக் கொண்டிருந்தனர். “நீங்கள் பாடுகிறீர்களா ஷீலா?” என்றார் சுந்தரராஜன்.

    அந்த மாலை நேரத்து இனிமையை, விழாக்காலத்துக்குரிய கலகலப்பு நிறைந்த அனுபவத்தை, தன்னைச் சுற்றி உள்ளவர்களின் தோழமையை, வெகு நாட்களுக்குப் பின் ரசித்து, பரவசமடைந்து மகிழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், பக்தனின் தவத்தில் மகிழ்ந்து வரம் தரத் தயாராக இருக்கும் அம்பிகையைப் போல், சைலஜா, “அதனால் என்ன, பாடினால் ஆயிற்று,” என்றதும், ஒரு பவ்யமான மௌனம் நிலவி, அவள் பாடுவதைக் கேட்க எல்லாரும் தயாரானார்கள்.

    ஃபாஷன் மாடல் போல் உடையணிந்து ஊரை வலம் வந்த ஷீலா ராபர்ட்ஸா இது? விஸ்கியின் போதையில் வெட்கம் இல்லாமல் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ‘லாபி’யில் அருணுடன் வெட்கமின்றிச் சரசமாடிய ஷீலாவா இது? ஏதோ ஒன்றைத் தேடிக் களைத்து, கீழே விழுந்து புழுதியில் புரண்ட குழந்தையைக் கையைப் பிடித்துத் தூக்கி, தூசியைத் தட்டி, அன்பு வார்த்தைகள் சொன்னதும், அது மகிழ்ந்து சிரிப்பது போல, இசை அவள் வாயிலிருந்து அருவியெனப் பொழிந்தது. பழைய பழைய பாடல்களும், அம்பாள் மீதான ஸ்லோகங்களும், விருத்தங்களும் அழகாக அணிவகுத்து நடைபயின்றன.

    மதுவுண்ட வண்டு போல, மற்ற பெண்கள் எல்லாம், “இதைப் பாடுங்கள், அதைப் பாடுங்கள்,” என்று வேறே கேட்டுக் கேட்டு உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடங்களின் பின்பு, “மிகவும் நாட்களாகி விட்டன நான் பாடியே- இனி முடியாது. தொண்டை கரகரக்கிறது. கடைசியாக ஒரே ஒரு பாட்டு- எனக்கு ரொம்பப் பிடித்தது,” என அமுதாவிடம் கிசுகிசுத்தாள் ஷீலா. “வருகலாமோ ஐயா,” எனப் பாட ஆரம்பித்தாள்.

    சரணத்தைப் பாடும்போது அது தன்னுடைய நிலைக்கு எவ்வளவு பொருத்தம் என மனம் உணர்ந்ததோ என்னவோ, குரல் தழதழத்தது.

    “சாமி உன் சந்நிதி வந்தேனே, பவ சாகரம் தன்னையும் கடந்தேனே, கரை கடந்தேன் சரணம் அடைந்தேன் தில்லை வரதா, என் பரிதாபமும் பாபமும் தீரவே நான் அங்கே வருகலாமோ ஐயா?”

    மனக்கண்ணில் அபிநயம் பிடித்து ஆடியவளாக சைலஜா என்ற ஷீலா பாடினாள். ஜிம் முன்பு தான் தயங்கி நிற்பது எதற்கு என மனம் துடித்தது. குரலில் உலகத்துத் துயரை எல்லாம் இழைத்து வடித்து வைத்தது போலத் தோன்றியது. உடல் ‘குப்’பென வியர்த்தது. கண்முன் இருந்த எல்லாம் தட்டாமாலை சுற்ற ஆரம்பித்தது. பாட்டு ஒருவழியாக முடிய, “ஆஹா ஷீலா, எத்தனை அற்புதமாகப் பாடுகிறீர்கள்?” என்றாள் சாந்தா சுந்தரராஜன்.

    அமுதா அவளை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தவள் ஷீலா கண்களை மூடிக் கொண்டு திவானில் சாய்ந்து தொய்வதைக் கண்டு, அவளைத் தாங்கிக் கொண்டு, “மாமி, கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்,” என்றாள். ஷீலாவின் உடல் கட்டை போல் சில்லித்துக் கிடந்தது. தண்ணீர் பட்டதும் மெல்லக் கண்களை விழித்தவள், உயிரற்ற புன்னகை பூத்தபடி சுதாரித்துக் கொண்டு எழுந்திருக்க முயன்றாள்.

    ஆடலரசு, மருத்துவர் என்ற முறையில் நிலைமையைக் கச்சிதமாகக் கையாண்டான். “உற்சாகமாக ரொம்ப நேரமாகப் பாடினாங்க. வருஷக் கணக்காகப் பாடாதவங்க- டயர்டாகப் போயிருப்பாங்க. நானும் அமுதாவும் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறோம்,” என்றபடி கிளம்பத் தயார் செய்தான்.

    அவனுக்கும் அமுதாவுக்கும் அல்லவோ தெரியும்- இது அவளுடைய உள்மனத்தின் புலம்பல், இப்போது வார்த்தைகளாக உருவம் தந்து வெளிப்படுத்தியதும், அவற்றின் பரிமாணமும் கனமும் தாங்காத உள்ளம், உடலையும் சேர்த்து அயர்ச்சியில் வீழ்த்தி விட்டது என்று.

    ஷீலாவை அவளுடைய பங்களாவின் அறையில் படுக்க வைத்தபடி, “இரண்டு நாள் கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும் சைலா உங்களுக்கு. நீங்க சிந்தித்து மூளையைக் குழப்பிக்கிறதை கொஞ்சம் நிறுத்துங்க. ஜிம்மும் கீதாவும் வரும்போது ‘ஹெல்த்தி’யாக இருந்தால் தானே எல்லாம் சரியாக இருக்கும்? நான் இப்ப உங்களுக்குத் தூங்குவதற்கு ஒரு ஊசி போடப் போகிறேன். ரமணி அம்மா கிட்ட என்ன ஆகாரம் என்று சொல்லிட்டுப் போறேன். நிம்மதியாகத் தூங்குங்கள். சலனமற்ற, கவலைகளற்ற, குழப்பமற்ற உறக்கம் வேண்டும். உங்கள் சிந்தனைகளுக்கும் குழப்பங்களுக்கும் ஒரு நல்ல முடிவு காத்திருக்கிறது. இப்போ வேண்டியது ஓய்வு. ஸ்லீப் வெல், மை டியர் ஏஞ்சல்,” என்று கூறியபடி அவளுக்கு ஊசியைப் போட்டவன், அவள் கரங்களை அழுந்தப் பற்றி ஆறுதல் கூறி விடை பெற்றான்.

    காரை ஸ்டார்ட் செய்தவன், ” அமுதா….” என்றபடி குரல் கம்ம, அவள் கையைப் பற்றிக் கொண்டான்.

    “என்னங்க இது? நீங்க ஒரு டாக்டர். இப்படி உணர்ச்சிவசப் படலாமா? அவங்க நல்லாயிடுவாங்க,” என்றாள் அந்த இனிய மனைவி.

    (தொடரும்)

    மறு பகிர்வு: தாரகை இணைய இதழ்

    **********************

    Share