Tag: நெல்லைத் தமிழ்

  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 62

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 62

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 62

    62. ஆள்வினை உடைமை

    குறள் 611:

    அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்

    நம்மால முடியுமா னு மன உளச்சல் படுதது கூடாது. மனசு வச்சி முனஞ்சோம்னா அதுக்கு உண்டான தெம்பு தானா வந்துக்கிடும். 

    குறள் 612:

    வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
    தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு

    எதச் செஞ்சாலும் முழுக்க செஞ்சு முடிக்கணும். முடிக்கது செரமம் னு பாதில உட்டவங்கள ஒலகமும் விட்டுப்போடும். 

    குறள் 613:

    தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றே
    வேளாண்மை என்னுஞ் செருக்கு

    விடாம முனஞ்சி செய்யுத ஒசந்த கொணத்துல தான் மத்தவங்களுக்கு ஒதவுத பெருமயான செயல் அடங்கியிருக்கு. 

    குறள் 614:

    தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
    வாளாண்மை போலக் கெடும்

    முயற்சி இல்லாதவன் மத்தவங்களுக்கு ஒதவுதேன்னு சொல்லுதது பேடி தன் கையில வாளத் தூக்கி வீசுததுக்குச் சமானம். 

    குறள் 615:

    இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண்

    சுயநலமா இல்லாம தான் ஏத்துக்கிட்ட செயல முடிக்க; விரும்புதவன் தன்னையச் சுத்தி இருக்க எல்லாரோட தொயரத்தையும் போக்கித் தாங்குத தூண் ஆவான்.

    குறள் 616:

    முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
    இன்மை புகுத்தி விடும்

    காரியத்த முனஞ்சி செய்யுதது செல்வத்தக் கொடுக்கும் அப்டி செய்யாதது வறுமையக் கொடுத்துப் போடும்

    குறள் 617:

    மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
    தாளுளாள் தாமரையி னாள்

    ஒருத்தன் மாச்சப்பட்டாம்னா அதுல மூதேவி வந்து வாழுவா.  காரியத்த முனைஞ்சி செய்யுதப்போ மகாலச்சுமி வந்து தங்கிக்கிடுவா.

    குறள் 618:

    பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
    தாள்வினை இன்மை பழி

    நன்மைய விளைவிக்குத விதி இல்லாம இருக்கது யாருக்கும் குறையா ஆவாது. தெறிஞ்சுக்கிட வேண்டியத தெரிஞ்சுக்கிட்டு முனஞ்சி செய்யாம இருக்கது தான் குறை. .

    குறள் 619:

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்

    விதி நமக்கு ஒதவ முடியாமப் போனாலும் ஒடம்ப வருத்திக்கிட்டு உழச்சோம்னா அதுக்கேத்த கூலி கெடைக்கும்.

    குறள் 620:

    ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
    தாழா துஞற்று பவர்

    மனசு தளராம தொடர்ச்சியா முனையுதவங்க விதியையும் தோக்கடிச்சிடுவாங்க. 

    -அடுத்தாப்லையும் வரும்-

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் – 60

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 60

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – 60

      ஊக்கம் உடைமை

    குறள் 591:

    உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
    உடைய துடையரோ மற்று

    ஊக்கம் உடையவங்க எல்லாம் உடையவங்க.ஊக்கம் இல்லாதவங்க எத வச்சிருந்தாலும் எதுவுமே இல்லாதவங்க தான். 

    குறள் 592:

    உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்

    ஊக்கம் ங்குத ஒரு பொருளத் தவித்து வேற எதையும் நெலையான உடைமை னு  சொல்ல முடியாது. 

    குறள் 593:

    ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
    ஒருவந்தங் கைத்துடை யார்

    ஊக்கத்த கைவசத்துல வச்சிருக்கவங்க செல்வம் கைவிட்டுப் போச்சுதுன்னா கூட வெசனப்பட மாட்டாங்க. 

    குறள் 594:

    ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    ஊக்க முடையா னுழை

    அசதி இல்லாத ஊக்கம் ஒடயவங்கிட்ட செல்வம் அவன் இருக்க எடத்துக்கு வழி கேட்டுக்கிட்டு போய்ச் சேந்துக்கிடும். 

    குறள் 595:

    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனைய துயர்வு

    தண்ணில இருக்க பூவோட அடிக்காம்போட நீளம் தண்ணியோட அளவ பொருத்து மாறிக்கிடும். அது கணக்கா மனுசன் வாழ்க்கையில ஒசருததும் அவன் மனசுல இருக்க ஊக்கத்தப் பொருத்து தான். 

    குறள் 596:

    உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினுந் தள்ளாமை நீர்த்து

    நெனைப்பு பூரா ஒசந்ததாவே இருக்கணும். ஒருக்கா அது நடக்கலேனாலும் நெனைப்ப விட்டுப்போடக் கூடாது. 

    குறள் 597:

    சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
    பட்டுப்பா டூன்றுங் களிறு

    ஒடம்பு முழுக்க அம்பு தைச்சாலும் யானை தளராம நிக்கும். அது கணக்கா ஊக்கம் ஒடயவங்க அழிவே வந்துச்சின்னாலும் கலங்க மாட்டாக.

    குறள் 598:

    உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
    வள்ளியம் என்னுஞ் செருக்கு

    அள்ளிக் கொடுக்குத ஊக்கம் இல்லாதவுக தங்கள வள்ளல் னு பெரும பட்டுக்கிடதுதுக்கு வழியே இல்ல. 

    குறள் 599:

    பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
    வெரூஉம் புலிதாக் குறின்

    பருத்த ஒடம்பும் கூர்மையா கொம்பும் இருக்க யானை கூட ஊக்கம் இருக்க புலி தாக்கிச்சின்னா பயந்துக்கிடும். 

    குறள் 600:

    உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
    மரமக்க ளாதலே வேறு

    மனசுல உறுதியான ஊக்கம் இல்லாதவங்க பாக்கதுக்கு மனுசங்களா இருந்தாலும் மரங்களுக்கு சமானம் தான்.

    -அடுத்தாப்லையும் வரும்- 

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 58

    -நாங்குநேரி வாசஸ்ரீ

     

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 58

    கண்ணோட்டம்

    குறள் 571:

    கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை
    உண்மையான் உண்டிவ் வுலகு

    இந்த ஒலகம் நேசமும் இரக்கமும் இணஞ்ச கண்ணோட்டம் ங்குத பெரும் அழகக் கொண்டவங்களால தான் அழியாம நிக்குது. 

    குறள் 572:

    கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
    உண்மை நிலக்குப் பொறை

    நேசத்தோட அணைச்சு இரக்கம் காட்டும் கண்ணோட்டம் இல்லாதவங்க உசிரோட இருக்கது இந்த பூமிக்கு சும தான்.

    குறள் 573:

    பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
    கண்ணோட்டம் இல்லாத கண்

    இரக்க கொணம், நேசம் ங்குத கண்ணோட்டத்தோட பொருந்தி வாராத கண்ணும் பாட்டு கூட பொருந்தி வாராத இசையும் ஒரு உபயோகத்துக்கு ஒதவாது. 

    குறள் 574:

    உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்
    கண்ணோட்டம் இல்லாத கண்

    உள்ளத்துல நேசத்தையும் இரக்கத்தையும் ஊற வைக்காத கண்ணுங்க மொகத்துல இருக்கது தவித்து அதால வேற என்ன ஒபயோகம்?

    குறள் 575:

    கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்
    புண்ணென் றுணரப் படும்

    ஒருத்தனுக்கு கண்ணுல பூட்டுத நக நட்டு கணக்கா இருக்கது கண்ணோட்டங்குத கொணம். அது இல்லன்னா வெறும் புண் னு நெனைச்சிக்கிடணும். 

    குறள் 576:

    மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
    டியைடந்துகண் ணோடா தவர்

    ஒருத்தருக்கு கண் இருந்தும் கூட அதுக்குரிய நேசமும் இரக்கமும் இல்லன்னா அவர் மரத்துக்கு தான் சமானம். 

    குறள் 577:

    கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
    கண்ணோட்டம் இன்மையும் இல்

    கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரு தான். கண் இருக்கவங்க கண்ணோட்டம் இல்லாம இருக்க மாட்டாங்க. 

    குறள் 578:

    கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
    குரிமை உடைத்திவ் வுலகு

    செய்யுத கடமயிலேந்து தவறாம கருணையா இருக்கதிலும் முதலா இருக்கவங்களுக்கு இந்த ஒலகமே சொந்தமாவும்.    

    குறள் 579:

    ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
    பொறுத்தாற்றும் பண்பே தலை

    தன்னைய அழிக்க நெனக்கவங்க கிட்டயும் பொறும காட்டுதது ரொம்ப ஒசந்த கொணம். 

    குறள் 580:

    பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
    நாகரிகம் வேண்டு பவர்

    கருண உள்ளமும் பண்பாடும் உள்ளவங்க தான் கூட பழகுதவங்க விஷத்த குடுத்தாக் கூட குடிச்சிபோட்டு சந்தோசப்படுவாங்க.

    (அடுத்தாப்லையும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57

    -நாங்குநேரி வாசஸ்ரீ

     

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57

    57. வெருவந்த செய்யாமை

    குறள் 561:

    தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
    ஒத்தாங் கொறுப்பது வேந்து

    செஞ்ச தப்ப நியாய வழில கவனிச்சு பாத்து திரும்ப அவன் அந்த தப்ப செய்யாம இருக்கதுக்கு ஏத்தா மாதிரி தண்டன கொடுக்கவனே ராசா.

    குறள் 562:

    கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
    நீங்காமை வேண்டு பவர்

    நெறைய நாள் செல்வாக்கோட இருக்கணும்னு நெனைக்கவங்க கண்டிக்கத் தொடங்குதப்போ கடுமையா தொடங்கிட்டு பொறவு வரம்பு மீறாம தண்டன கொடுக்கணும்.

    குறள் 563:

    வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
    ஒருவந்தம் ஒல்லைக் கெடும்

    மக்கள் பயப்படுதமாரி இருக்க  கொடுமக்கார ராசா நடத்துத ஆட்சி வெரசலா அழிஞ்சு போவும்.

    குறள் 564:

    இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
    உறைகடுகி ஒல்லைக் கெடும்

    நம்ம ராசா கொடுமக்காரன்னு மக்கள் சொல்லுததக் கேட்டு இருக்க ராசாவோட ஆட்சிக்காலம் கொறஞ்சு அவன் கெட்டழியுவான்.

    குறள் 565:

    அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
    பேஎய்கண் டன்ன துடைத்து

    கடுகடுனு மொகத்த வச்சிக்கிட்டு யாராலயும் சுளுவா பாக்கமுடியாதவனா இருக்கவன் கிட்ட குவிஞ்சு கெடக்க சொத்து பேய் கணக்கா பாக்குததுக்கு பயப்படுத்தும்.

    குறள் 566:

    கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
    நீடின்றி ஆங்கே கெடும்

    கடுமையா பேசி, தயவு தாட்சண்யமே இல்லாம இருக்கவன் கிட்ட உள்ள செல்வம் நிக்காம அழிஞ்சு போவும்.

    குறள் 567:

    கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
    அடுமுரண் தேய்க்கும் அரம்

    கடுஞ்சொல்லும் வரம்பு மீறின தண்டனையும் ஒரு ராசாவோட பகைய செயிக்க ஒதவுத ஆயுதத்த தேச்சி மொண்ணையாக்குத அரம் கணக்கா ஆவும்.

    குறள் 568:

    இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
    சீறிற் சிறுகுந் திரு

    மந்திரி , மத்த கூட்டாளிங்க எல்லார்கிட்டயும் கலந்து பேசாம கோவப்பட்டு சீறுதவனோட செல்வம் சுருங்கிப் போவும்.

    குறள் 569:

    செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
    வெருவந்து வெய்து கெடும்

    முன்னாலயே யோசிச்சு தேவைப்படுத பாதுகாப்பு செய்யாத ராசா போர் வந்திச்சுன்னா பயந்து வெரசலா அழிவான்

    குறள் 570:

    கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
    தில்லை நிலக்குப் பொறை

    கொடுமக்கார ராச்சியம் நல்லதப் படிக்காதவுகள தனக்கு பக்கத் தொணையா வச்சிக்கிடும். அது கணக்கா பூமிக்கு பாரம் வேற ஒண்ணுமில்ல.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-56

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-56

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-56

    56. கொடுங்கோன்மை

    குறள் 551:

    கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
    டல்லவை செய்தொழுகும் வேந்து

    நாட்டு மக்களத் துன்புறுத்துத ராசா கொல செய்யுதவனக் காட்டிலும் கொடுமக்காரன்

    குறள் 552:

    வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
    கோலொடு நின்றான் இரவு

    ஆட்சி நடத்துத ராசா அதிகாரத்த ஒபயோகிச்சு மக்கள்கிட்ட பொருள் கேக்குதது, வழிப்பறி கொள்ளக்காரன் கொள்ளையடிக்கதுக்காவ மிரட்டுததுக்கு சமானம்.

    குறள் 553:

    நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
    நாடொறும் நாடு கெடும்

    தெனைக்கும் நாட்டுல நடக்குதத அறிஞ்சுக்கிட்டு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிடாத ராசா பைய பைய தன் நாட்ட இழந்துகிட்டே வருவான்.

    குறள் 554:

    கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
    சூழாது செய்யும் அரசு

    நாட்டு நெலமயத் தெரிஞ்சுக்கிடாம கூறுகெட்டு நாட்ட ஆளுத ராசாவவிட்டு செல்வமும் , குடிமக்களும் சேந்தாப்ல வெலகிப் போயிடுவாக.

    குறள் 555:

    அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
    செல்வத்தைத் தேய்க்கும் படை

    தப்பான ஆட்சிமொறையால நொந்து போயி மக்கள் உடுத கண்ணீர் தான் ஒரு ராசாவோட செல்வத்த அழிக்குத ஆயுதம்.

    குறள் 556:

    மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
    மன்னாவாம் மன்னர்க் கொளி

    ராசாவோட புகழ் நெலச்சி நிக்கதுக்குக் காரணம் அவரோட நேர்மையான ஆட்சி.  அது இல்லன்னா புகழ் இல்லாமப் போவும்.

    குறள் 557:

    துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
    அளியின்மை வாழும் உயிர்க்கு

    மழை இல்லாமப் போவுச்சுன்னா எங்ஙன சங்கடத்த அனுபவிப்பாகளோ அங்ஙன நேர்மையில்லாத ஆட்சிலயும் அனுபவிப்பாக.

    குறள் 558:

    இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
    மன்னவன் கோற்கீழ்ப் படின்

    மொற தவறி தப்பா ஆட்சி நடத்துதவனுக்கு கீழ ஏழையா வாழுதத விட பணக்காரனா வாழுதது ரொம்ப சங்கடமான விசயம்.

    குறள் 559:

    முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல்

    ராசா மொற தப்பி ஆட்சி செஞ்சாம்னா அந்த நாட்டுல பருவம் தப்பி மழை பெய்யாமலே போவும்.

    குறள் 560:

    ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
    காவலன் காவான் எனின்

    நாட்டக் காக்க வேண்டியவன் மொறப்படி காக்கலேன்னா பசு மாடு பால் கொடுக்காது. ஞானிங்க அவுக படிச்ச அறநூல்கள அயத்து (மறந்து)  போவாக

    (அடுத்தாப்லயும் வரும்…..)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-55

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-55

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-55

    55. செங்கோன்மை

    குறள் 541:

    ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை

    தப்புதண்டா இன்னதுன்னு தெரிஞ்சிக்கிட்டு எந்தப்பக்கமும் சாயாம நடுவுநிலைமை தவறாம வழங்கப்படுதது தான் நீதி.

    குறள் 542:

    வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
    கோனோக்கி வாழுங் குடி

    ஒலகத்துலஇருக்க உசிருங்கல்லாம் மழைய நம்பி வாழுதுங்க. அதுகணக்கா மக்களெல்லாம் ராசாவோட நல்லாட்சிய எதிர்பாத்தே வாழுதாங்க.

    குறள் 543:

    அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்

    நேர்மையான ஆட்சி தான் அறிவ வளத்துக்க ஒதவுத ஞான நூல்களுக்கும், அறத்துக்கும் அடிப்படையா இருக்கு.

    குறள் 544:

    குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
    அடிதழீஇ நிற்கும் உலகு

    நாட்டு மக்கள அரவணைச்சு ஆட்சி நடத்துத நல்ல ராசாவோட அடிகளைச் சுத்தியே மக்கள் வாழுவாங்க.

    குறள் 545:

    இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
    பெயலும் விளையுளுந் தொக்கு

    நீதி வழுவாம ஆட்சி செய்யுத ராசாவோட நாட்டுல பருவத்துக்கு பெய்யுத மழையும் நல்ல வெளச்சலும் எப்பமும் சேந்தே இருக்கும்.

    குறள் 546:

    வேலன்று வென்றி தருவது மன்னவன்
    கோலதூஉங் கோடா தெனின்

    ஒரு ராசா செயிக்கதுக்கு தேவ பகையாளிய அழிக்கஒதவுத வேல் இல்ல. அவனோட நேர்மையான ஆட்சி அதுவும் தப்பான மொறைல நடத்துத ஆட்சியா இல்லாம இருக்கணும்.

    குறள் 547:

    இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
    முறைகாக்கும் முட்டாச் செயின்

    ஒலகத்தையெல்லாம் ராசா காப்பாத்துவார். அந்த ராசாவ அவர் செய்யுத நேர்மையான ஆட்சி காப்பாத்தும்.

    குறள் 548:

    எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்
    தண்பதத்தான் தானே கெடும்

    நியாயம் கேட்டு வருதவங்க எளிமையா வந்து பாக்குத மாதிரி இல்லாமயும், நல்ல மொறைல சோதிச்சுப் பாத்து நியாயமா தீர்ப்பு சொல்லாதவனாவும் இருக்க  ராசா தாழ்ந்து போயி தானே கெட்டழிஞ்சு போவான்.

    குறள் 549:

    குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
    வடுவன்று வேந்தன் தொழில்

    மத்தவங்க தொந்தரவுலேந்து மக்களக் காப்பாத்தி, தன்னையும் காத்துக்கிட்டு அவங்களோட குத்தங்கொறைகள தீத்து வச்சு ஆட்சி நடத்துதது ராசாக்கு குறை ஆவாது. அது அவரோட தொழில்.

    குறள் 550:

    கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
    களைகட் டதனொடு நேர்

    கொடியவங்களுக்கு மரணதண்டன கொடுக்குதது, வெவசாயி பயிர் நல்லா வெளையணும்னு அதக் காப்பாத்த கள புடுங்குதது கணக்கா தான்

    (அடுத்தாப்லயும் வரும்…).

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-54

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-54

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-54

    54. பொச்சாவாமை

    குறள் 531:

    இறந்த வெகுளியின் தீதே சிறந்த
    உவகை மகிழ்ச்சியிற் சோர்வு

    ரொம்ப சந்தோசமா இருக்குதப்போ அயத்துப் (மறதி) போவுதது கடுங்கோவத்தக்காட்டிலும் கொடும.

    குறள் 532:

    பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
    நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

    தெனைக்கும் வாட்டுத ஏழ்ம,  புத்திய மழுங்கடிக்கது கணக்கா அயத்துப் போவுத கொணம் புகழ அழிச்சுப்போடும்.

    குறள் 533:

    பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
    தெப்பானூ லோர்க்குந் துணிவு

    அயத்துப் போவுத கொணம் உள்ளவுகளுக்கு புகழ் இல்ல. இது எல்லாந்தெரிஞ்ச அறிவாளிங்களோட முடிவான கருத்து.

    குறள் 534:

    அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
    பொச்சாப் புடையார்க்கு நன்கு

    மனசுல பயம் இருக்கவங்களுக்கு சுத்திவர பாதுகாப்பா மதில்சுவர் இருந்தாலும் ஒபயோகமில்ல. அதுகணக்கா ஒசந்த நெலையில இருந்தாலும் அயத்துப் போவுத கொணமிருந்தா அந்த நெலையால ஒரு பிரயோசனமுமில்ல.

    குறள் 535:

    முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
    பின்னூ றிரங்கி விடும்

    வருத சங்கடங்கள முன்னமே தடுக்க அயத்துப் போனவன் சங்கடம் வந்த   பொறவு தன் தப்ப நெனச்சி வெசனப்படுவான்.

    குறள் 536:

    இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
    வாயின் அதுவொப்ப தில்

    யார்கிட்டயும் எந்தக்காலத்திலயும் ஓர்ம கெட்டு அலையுத கொணம் (ஞாபக மறதி) இல்லாமப் போச்சுதுன்னா அதப்போல நன்ம வேற இல்ல.

    குறள் 537:

    அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
    கருவியாற் போற்றிச் செயின்

    அயத்துப் போவாம ஓர்மையோட(ஞாபகமா) செய்யுதவனுக்கு செய்யமுடியாததுனு எதுவும் இல்லாமப் போவும்.

    குறள் 538:

    புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
    திகழ்ந்தார்க் கெழுமையும் இல்

    படிச்ச பெரிய மனுசங்க சொல்லுதத விரும்பிச் செய்யணும். அப்டி செய்ய அயத்து அலுத்து இருக்கவங்களுக்கு ஏழு பொறப்புலயும் நன்ம கெடைக்காது.

    குறள் 539:

    இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
    மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

    இறுமாப்போட பூரிச்சுப்போயி கடமையச் செய்ய அயத்து அலையுதவங்க,  முன்ன இது கணக்கா அலஞ்சி அழிஞ்சவங்கள நெனச்சிப் பாத்துக்கிடணும்.

    குறள் 540:

    உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
    உள்ளிய துள்ளப் பெறின்

    ஒருத்தன் தான் அடைய நெனக்குதத நாட்டத்தோட அசராம தொடர்ச்சியா நெனச்சிக்கிட்டே இருந்தாம்னா அவன் நெனச்சத சுளுவா அடஞ்சுக்கிடலாம்.

    (அடுத்தாப்லயும் வரும்….)

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-53

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-53

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-53

    53. சுற்றந் தழால்

    குறள் 521:

    பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
    சுற்றத்தார் கண்ணே உள

    ஒருத்தன் ஏழையான பொறவு கூட அவனுக்கும் தங்களுக்கும் முன்னால இருந்த ஒட்டுஒறவ நெனப்புல வச்சி பேசுத கொணம் சொந்தக்காரங்களுக்கு  உண்டு.

    குறள் 522:

    விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
    ஆக்கம் பலவுந் தரும்

    ஒருத்தனுக்கு எப்பமும் கொறையாத நேசத்தோட சொந்தபந்தம் அமைஞ்சிடுச்சின்னா அது அவனுக்கு வளர்ச்சி கொறையாத செல்வங்கள் பலதையும் கொடுக்கும்.

    குறள் 523:

    அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
    கோடின்றி நீர்நிறைந் தற்று

    சொந்தக்காரங்களோட மனசு விட்டு பேசிப் பழகாதவனோட வாழ்க்க, கரையில்லாத குளத்துல தண்ணி நெறஞ்சது கணக்கா ஒபயோகமில்லாமப் போயிடும்.

    குறள் 524:

    சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
    பெற்றத்தாற் பெற்ற பயன்

    சுத்திச்சூழ இருக்குத பாசமான சொந்தக்காரங்களோட வாழுத வாழ்க்க தான் ஒருத்தன்கிட்ட இருக்க காசுபணத்தோட ஒபயோகம்.

    குறள் 525:

    கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
    சுற்றத்தாற் சுற்றப் படும்

    வேண்டியதக் கொடுக்குத குணமும், நயமா பேசுத கொணமும் இருக்கவனச் சுத்தி சொந்தக்காரங்க இருந்துக்கிட்டே இருப்பாங்க.

    குறள் 526:

    பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
    மருங்குடையார் மாநிலத் தில்

    தேவைப்படுதவங்களுக்கு அள்ளிக் கொடுத்து கோவப்படாம ஒருத்தன் இருந்தாம்னா அவனப்போல சுத்திவர சொந்தபந்தம் இருக்கவன் ஒலகத்துல இல்லன்னு சொல்லிப்புடலாம்.

    குறள் 527:

    காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள

    தனக்கு சாப்பிடக் கெடச்சத ஒளிச்சு வையாம தன் இனத்தக் கூப்பிட்டு சாப்பிடுத காக்கா கணக்கா கொணம் உள்ளவுகளுக்கு மட்டுமே ஒலகத்துல செல்வம் உண்டு. .

    குறள் 528:

    பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
    அதுநோக்கி வாழ்வார் பலர்

    ராசா எல்லாரையும் ஒண்ணுபோலப் பாக்காம அவனவன் சிறப்புக்கு ஏத்தபடி பாத்தா அத விரும்பி அவரப் பிரியாம வாழுத சுற்றத்தார் பலர் இருப்பாங்க.

    குறள் 529:

    தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
    காரண மின்றி வரும்

    ஏதோ ஒரு காரணத்துக்காக பிரிஞ்சு போன சொந்தக்காரவுக அந்தக்காரணம் பொருந்தாது னு தெரிஞ்ச பொறவு திரும்ப சொந்தம் கொண்டாட வருவாக.

    குறள் 530:

    உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
    இழைத்திருந் தெண்ணிக் கொளல்

    தன்னவுட்டு பிரிஞ்சு போயிட்ட  ஒருத்தன் ஏதோ ஒரு காரணம் சொல்லிக்கிட்டு திரும்பி வந்தாம்னா அவன சோதிச்சு பாத்த பொறவுதான் சேத்துக்கிடணும்.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-52

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-52

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-52

    52. தெரிந்து வினையாடல்

    குறள் 511:

    நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
    தன்மையான் ஆளப் படும்

    நன்ம எது தீம எது னு தெரிஞ்சுக்கிட்டு நல்லதுல மட்டுமே நாட்டம் செலுத்துதவன் எந்த வேலைய செய்யுததுக்கும் ஏத்தவன்.

    குறள் 512:

    வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
    ஆராய்வான் செய்க வினை

    வருமானம் வருத வழிய விரிவாக்கி வளத்த பெருக்கி வார தொந்தரவெல்லாத்தையும் கண்டுக்கிட்டு நீக்கி இருக்கவன் தான் காரியத்த செய்யணும்.

    குறள் 513:

    அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
    நன்குடையான் கட்டே தெளிவு

    நேசம், புத்திசாலித்தனம், திறம, பேராச இல்லாத கொணம் இந்த நாலையும் இருக்கவங்கள தேர்ந்தெடுக்கது தான் நல்லது.

    குறள் 514:

    எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
    வேறாகும் மாந்தர் பலர்

    எம்புட்டுத்தான் ஆராஞ்சு தேர்ந்தெடுத்தாலும் எதிர்பாக்குத அளவு சிறப்பா நடந்துக்கிடாதவங்க பல பேர் இருக்காங்க.

    குறள் 515:

    அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
    சிறந்தானென் றேவற்பாற் றன்று

    செய்யுத வழிய தெரிஞ்சு எத்தன தடங்கல் வந்தாலும் செஞ்சு முடிக்கவன தவித்து மத்தவன ஒசந்தவன்னு நெனச்சி ஒருவேலையும் ஏவக்கூடாது.

    குறள் 516:

    செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
    டெய்த உணர்ந்து செயல்

    காரியத்த செய்ய வேண்டியவனோட தகுதிய அறிஞ்சுக்கிட்டு, காரியத்தோட தன்மயையும் புரிஞ்சுக்கிட்டு அத செய்யுத காலத்தையும் உணந்து காரியத்த செய்ய வைக்கணும்.

    குறள் 517:

    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
    ததனை அவன்கண் விடல்

    இந்தக் காரியத்த இவன் இன்னின்ன ஆள் பலத்தாலையும், பொருள் பலத்தாலையும் செஞ்சு முடிப்பான் னு தெரிஞ்சுக்கிட்ட பொறவு காரியத்த ஒப்படைக்கணும்.

    குறள் 518:

    வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
    அதற்குரிய னாகச் செயல்

    ஒருத்தன ஒரு காரியத்துல ஈடுபடுத்துதக்கு முன்ன அவன் அதுக்கு ஏத்தவனானு அறிஞ்சுக்கிட்டு செய்யணும்.

    குறள் 519:

    வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
    நினைப்பானை நீங்குந் திரு

    எடுத்த காரியத்த கண்ணும் கருத்துமா செய்யுத ஒருத்தன சந்தேகப்பட்டு தப்பா நினைக்குத தலைவனோட செல்வம் அவன் கையவிட்டு போவும்.

    குறள் 520:

    நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
    கோடாமை கோடா துலகு

    உழைப்பாளிங்க மனசு நோவாம இருந்தாங்கன்னா தான் ஒலகம் செழிப்பா இருக்கும். அதனால ராசா தெனைக்கும் அவங்க நெலம பத்தி தெரிஞ்சுக்கிட்டு வேண்டியத செய்யணும்.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-51

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-51

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-51

    51. தெரிந்து தெளிதல்

    குறள் 501:

    அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
    திறந்தெரிந்து தேறப் படும்

    நியாயமாவும், நாணயமாவும், மொற இல்லாத சந்தோசத்த தேடாதவனாவும், தன் உசிரக் கூட கொடுக்க பயந்துக் கிடாதவனாவும் ஒருத்தன் இருக்கானானு அறிஞ்ச பொறவு தான் அவன வேலைக்கு வைக்கணும்.

    குறள் 502:

    குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
    நாணுடையான் கட்டே தெளிவு

    குத்தமில்லாதவனாவும் , பழி பாவத்துக்கு அஞ்சுதவனாவும் இருக்கவனத் தான் ஒசந்த குடில பொறந்தவனா நம்பித் தெளியணும்.

    குறள் 503:

    அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
    இன்மை அரிதே வெளிறு

    அரிதான நூல்கள படிச்சவரு குத்தமேதும்இல்லாதவரு னு புகழப்படுதவங்க கிட்ட கூட கவனிச்சி பாத்தோம்னா அறியாம இல்லாம இருக்காது.

    குறள் 504:

    குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்

    ஒருத்தரோட கொணத்தயும் , குத்தங்களையும் ஆராஞ்சு ரெண்டுல எது அதிகம்னு தெரிஞ்சிக்கிட்ட பொறவு அவரப் பத்தின தெளிவான முடிவுக்கு வரணும்.

    குறள் 505:

    பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்
    கருமமே கட்டளைக் கல்

    ஒருத்தர் செய்யுத காரியங்கள வச்சி அவரோட கொணம் ஒசந்ததா அல்லது தாழ்த்தியா னு தெரிஞ்சிக்கிடலாம்.

    குறள் 506:

    அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
    பற்றிலர் நாணார் பழி

    சொந்தபந்தத்துல ஒட்டுதல் இல்லாதவங்கள எந்த வேலைக்கும் நம்பக்கூடாது ஏம்னா அவுகளுக்கு  ஒலகத்தப் பத்தி எந்தக் கவலயும் இல்லாததால பொல்லாப்புக்கு அஞ்சமாட்டானுவ. .

    குறள் 507:

    காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
    பேதைமை எல்லாந் தரும்

    அறிஞ்சிக்கிட வேண்டியத அறிஞ்சிக்கிடாம இருக்கவங்கள அவுக மேல இருக்க பாசத்தால தேர்ந்தெடுக்கது அறியாம மட்டுமில்ல. அதனால ஒண்ணுக்கும் பிரயோசனமில்லாம போவும்..

    குறள் 508:

    தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
    தீரா இடும்பை தரும்

    ஒருத்தன் ஆராஞ்சு பாக்காம தனக்கு தொணையா ஒருத்தர தேர்ந்தெடுத்து வச்சிக்கிட்டாம்னா அவனுக்கு மட்டுமில்லாம அவன் வாரிசுகளுக்கும் அது செரையா முடியும்.

    குறள் 509:

    தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
    தேறுக தேறும் பொருள்

    நல்லா ஆராஞ்சு அறிஞ்சுக்கிட்ட பொறவு ஒருத்தர் மேல நம்பிக்க வைக்கணும். ஆராஞ்சு பாராம யாரயும் நம்புதது கூடாது.

    குறள் 510:

    தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
    தீரா இடும்பை தரும்

    ஆராயாம ஒருத்தர தேர்ந்தெடுக்குததும் , சோதிச்சு தேர்ந்தெடுத்த ஒருத்தர சந்தேகப்படுததும் நீங்காத தொயரத்த கொடுக்கும்

    (அடுத்தாப்லயும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-50

    நாங்குநேரி வாசஸ்ரீ 

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-50

    50. இடனறிதல்

    குறள் 491:                                                       

    தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
    இடங்கண்ட பின்னல் லது

    பகையாளிய வளைச்சு பிடிக்கதுக்கு எடத்த பாக்குத வர ஒரு காரியத்தயும் தொடங்கக்கூடாது. பகையாளிய எளச்சவன்னும் நெனையக்கக் கூடாது.

    குறள் 492:

    முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
    ஆக்கம் பலவுந் தரும்

    வரக்கூடிய பகையாளிய எதுத்து நிக்குத பலம் இருக்கவனுக்குக் கூட பாதுகாப்பான எடத்துல நின்னு சண்ட போடுத வாய்ப்பு கெடச்சிதுன்னா அது பெரும் பயனக் கொடுக்கும்..

    குறள் 493:

    ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
    போற்றார்கண் போற்றிச் செயின்

    பகையாளிய தாக்குததுக்கு ஏத்த எடத்த அறிஞ்சிக்கிட்டு, தன்னையும் காத்துக்கிட்டு சண்டபோட்டாம்னா தெம்பு (வலிமை) இல்லாதவனும் தெம்பு வந்து செயிச்சுடுவான்.

    குறள் 494:

    எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
    துன்னியார் துன்னிச் செயின்

    ஏத்த எடத்த அறிஞ்சுக்கிட்டு தொடர்ச்சியா தாக்கினாம்னா பகையாளிங்க  செயிக்கணும்னு நெனச்சிக் கூட பாக்க மாட்டாக.

    குறள் 495:

    நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
    நீங்கின் அதனைப் பிற

    தண்ணிக்குள்ளார இருக்க வரைக்கும்தான் மொதலைக்கு பலம். வெளிய வந்திச்சுன்னா மத்த உசிருங்க அத சுளுவா செயிச்சிடும்.

    குறள் 496:

    கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
    நாவாயும் ஓடா நிலத்து

    பலமான சக்கரங்களக் கொண்டிருக்குத தேரால கடல்ல ஓட முடியாது. கடல் ல ஓடுத கப்பல்களால நெலத்துல ஓட முடியாது.

    குறள் 497:

    அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
    எண்ணி யிடத்தாற் செயின்

    ஒரு காரியத்த செய்யுத வழிமொறைய நல்லா யோசிச்சு , எடத்த அறிஞ்சுக்கிட்டு செய்தாம்னா பகையாளிக்கு பயந்துக்கிடாத நெஞ்சுறுதி போதும். வேற தொண தேவையில்ல.

    குறள் 498:

    சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்
    ஊக்கம் அழிந்து விடும்

    சிறுசா இருக்க படையா இருந்தாலும் தன் எடத்துல நின்னு சண்டபோட்டாம்னா பெரிசா இருக்க படையக் கூட சுளுவா செயிச்சிடலாம்.

    குறள் 499:

    சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர்
    உறைநிலத்தோ டொட்ட லரிது

    பாதுகாப்பான கோட்டயும், மத்த படைகளும் பகையாளிக்கு இல்லாமப் போவுச்சுதுன்னாலும் அவன் இருக்க எடத்துல போயி சண்டபோடுதது சிரமம் தான். .

    குறள் 500:

    காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
    வேலாள் முகத்த களிறு

    வேல் புடிச்சு நிக்குத வீரர்களக் கொன்ன கொம்பு கொண்ட யானையக் கூட சேத்து நெலத்துல அதோட கால் பொதஞ்ச நேரம் நரிகள் சுளுவா கொன்னு போடும்.

    (அடுத்தாப்லயும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-49

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-49

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-49

    49. காலமறிதல்

    குறள் 481:

    பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
    வேந்தர்க்கு வேண்டும் பொழுது

    பகல் நேரத்துல கோட்டானக் கூட காக்கா செயிச்சிடும். அது கணக்கா பகையாளிய தோக்கடிக்க நெனக்கவங்களுக்கும் அதுக்கேத்த சரியான காலம் அவசியம்.

    குறள் 482:

    பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
    தீராமை ஆர்க்குங் கயிறு

    காலத்த வெரயமாக்காம காரியம் செய்யுதது நழுவி ஓடுத சொத்து நீங்காம இருக்கதுக்காக கட்டிப்போடுத கயிறு கணக்கா ஆவும்.

    குறள் 483:

    அருவினை யென்ப உளவோ கருவியாற்
    கால மறிந்து செயின்

    காரியத்த முடிக்கத் தேவையான சாதனங்களோட ஏத்த காலத்தையும் அறிஞ்சுக்கிட்டு செஞ்சா முடியாத காரியம் னு ஏதும் உண்டா?

    குறள் 484:

    ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
    கருதி இடத்தாற் செயின்

    ஏத்த காலத்தையும் எடத்தையும் அறிஞ்சு ஒரு காரியத்த செய்தாம்னா இந்த பூமி முழுக்க வேணும்னு நெனச்சாலும் கைக்குள்ளார வந்துக் கிடும்..

    குறள் 485:

    காலங் கருதி இருப்பர் கலங்காது
    ஞாலங் கருது பவர்

    ஒலகம் முழுக்க வேணும்னு நெனக்கவங்க அதுக்காவ கலங்காம ஏத்த காலம் வருத வரைக்கும் பொறுமையா காத்துக் கெடப்பாக.

    குறள் 486:

    ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
    தாக்கற்குப் பேருந் தகைத்து

    மன உறுதி இருக்கவங்க பொறுமையா அமைதியா இருக்கது பயந்துகிட்டு இல்ல. ஆட்டுக் கிடா பகையாளிய தாக்குததுக்கு முன்ன கால பின்னுக்கு வாங்கிட்டு பொறவு பாயும் அது கணக்கா தான்.

    குறள் 487:

    பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்
    துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

    பகையாளிய தோக்கடிக்க மனசுக்குள்ளார கோவம் இருந்தாலும் வெளிக்காட்டாம எடம், காலம் பாத்துக் காத்துக் கிடப்பாக புத்திசாலிங்க.

    குறள் 488:

    செறுநரைக் காணிற் சுமக்க இறுவரை
    காணிற் கிழக்காந் தலை

    பகையாளிக்கு தகுந்த நேரம் வருதப்போ தானே அழிஞ்சு போயிடுவான். அதுவரைக்கும் பொறுத்துப் போய்க்கிடணும்.

    குறள் 489:

    எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
    செய்தற் கரிய செயல்

    காலம் நல்லதா வாய்க்குதப்போ அத ஒபயோகிச்சுக்கிட்டு ஒசந்த காரியங்கள செஞ்சு முடிக்கணும்.

    குறள் 490:

    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த இடத்து

    காலம் வருத வரைக்கும் கொக்கு போல அமைதியா காத்துக் கெடந்து பொறவு அது எங்ஙன குறி தவறாம இரைய புடிக்குதோ அது கணக்கா காரியத்த செஞ்சு முடிக்கணும்.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-48

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-48

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-48

    48. வலியறிதல்

    குறள் 471:

    வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
    துணைவலியுந் தூக்கிச் செயல்

    காரியத்தோட வலிமையும், அத செய்ய நெனக்குத தன்னோட வலிமையும், அத கெடுக்கணும்னு நெனக்கவன் வலிமையும்,  ரெண்டு பேருக்கும் தொணையா நிப்பாம்னு தோணுதவனோட வலிமையும் ஆராஞ்ச பொறவுதான்அந்த காரியத்த செய்யணும்.

    குறள் 472:

    ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
    செல்வார்க்குச் செல்லாத தில்

    தன்னால முடியுத காரியத்த செய்யுமுன்ன அத செய்யுததுக்கு தேவையானத அறிஞ்சிக்கிட்டு பொறவு செய்ய முனஞ்சாம்னா அவனால முடியாததுனு எதுவும் இல்ல.

    குறள் 473:

    உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
    இடைக்கண் முரிந்தார் பலர்

    தன்னோட பலம் இவ்ளோதான்னு அறிஞ்சிக்கிடாம உணச்சி வசத்தால காரியத்த தொடங்கிப்போட்டு பொறவு பாதியில கெடப்புல போட்டு அழிஞ்சவங்க பலபேரு இருக்காக.

    குறள் 474:

    அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
    வியந்தான் விரைந்து கெடும்

    தன்னோட பலத்த உணந்துக்கிடாம, பிறத்தியாரோடயும்  ஒத்துப் போவாம தன்னையப் பத்தி பெரிசா நெனச்சி மண்டக்கனம் புடிச்சு அலையுதவன் வெரசலா அழிஞ்சு போவான்.

    குறள் 475:

    பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
    சால மிகுத்துப் பெயின்

    மயில் தோகதானே ன்னாலும் அளவுக்கு அதிகமா வண்டியில ஏத்தினா வண்டியோட அச்சு முறிஞ்சு போவும்.

    குறள் 476:

    நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
    உயிர்க்கிறுதி ஆகி விடும்

    மரத்தோட நுனிக் கொம்புல ஏறிக்கிட்டவன் அதுக்கும் மேல ஒசரத்துல ஏற மொனஞ்சாம்னா அது அவனோட உசிருக்கு முடிவா வந்து சேரும்.

    குறள் 477:

    ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
    போற்றி வழங்கு நெறி

    எதப் பொறத்தியாருக்கு குடுக்கும்போதும்  தன்னோட சம்பாத்யத்த அறிஞ்சிக்கிட்டு அளவா குடுக்கணும்.  அப்டி கொடுக்குததுதான் பொருளச் சேத்து காப்பாத்தி வச்சிக்கிட்டு குடுக்குத வழிமுறை.

    குறள் 478:

    ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
    போகா றகலாக் கடை

    சம்பாத்யம் கொறச்சலா இருந்தாலும் வரம்பு மீறின செலவு இல்லாம இருக்குதது நல்லது.

    குறள் 479:

    அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
    இல்லாகித் தோன்றாக் கெடும்

    தன் சொத்தோட மதிப்ப அறிஞ்சுக்கிட்டு ஏத்தாப்போல வாழாதவனோட வாழ்க்க வளம் இருக்குதது போல தோணினாலும் இல்லாம அழிஞ்சு போவும்.

    குறள் 480:

    உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
    வளவரை வல்லைக் கெடும்

    தங்கிட்ட எம்புட்டு இருக்குனு பாராம மத்தவுகளுக்கு ஒதவி செஞ்சிக்கிட்டே இருக்கவனோட செல்வம் சுருக்க அழிஞ்சு போவும்.

    (அடுத்தாப்லயும் வரும்…)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-47

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-47

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-47

    47. தெரிந்து செயல்வகை

    குறள் 461:

    அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
    ஊதியமுஞ் சூழ்ந்து செயல்

    ஒரு செயலச் செய்யுததுக்கு முந்தி நட்டத்தையும் , நொடிச்சுப் போனா என்ன ஆவும்ங்குத விளைவையும், அதுக்குப் பொறவு கெடைக்கப் போவுத லாபத்தையும் கணக்குப் போட்டுப் பாத்து செய்யணும்.

    குறள் 462:

    தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
    கரும்பொருள் யாதொன்று மில்

    தெளிவா, இனம் கண்டுகிட்ட சேக்காளிங்களோட சேந்து செய்ய வேண்டிய செயல யோசிச்சு ஒருத்தன் செய்தாம்னா அவனால செய்ய முடியாதது னு ஒண்ணும் கெடையாது.

    குறள் 463:

    ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
    ஊக்கா ரறிவுடை யார்

    பொறவு வரப்போகுத லாபத்துக்காக கையில இருக்க முதல தொலைச்சுப்போடுத காரியத்த புத்தியுள்ளவங்க செய்ய மாட்டாக.

    குறள் 464:

    தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
    ஏதப்பா டஞ்சு பவர்

    தனக்கு அவமானம் வரும் னு பயப்படுதவங்க ஆக்கங்கெட்ட செயலச் செய்யத் தொடங்கமாட்டாக.

    குறள் 465:

    வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
    பாத்திப் படுப்பதோ ராறு

    முன்னேற்பாடு இல்லாம பகையாளிய ஒடுக்க முனையுதது அந்த பகையாளியோட வலிமைய நெலச்சு வளக்குத வழியா மாறிக்கிடும்.

    குறள் 466:

    செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
    செய்யாமை யானுங் கெடும்

    ஒருத்தன் செய்யக்கூடாதத செஞ்சாலும் கேடு வரும். செய்ய வேண்டியத செய்யாம விட்டாலும் கேடு வரும்.

    குறள் 467:

    எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
    எண்ணுவ மென்ப திழுக்கு

    ஒரு செயல முடிக்குத வழிய அறிஞ்சிக்கிட்டு தொடங்கணும். தொடங்கின பொறவு ரோசனை பண்ணிக்கிடலாம் னு நெனக்கிதது தப்பு.

    குறள் 468:

    ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
    போற்றினும் பொத்துப் படும்

    எத்தன பேர் தொணையா நின்னாலும் மொறையா முனஞ்சி எறங்கி செய்யலேனா கடைசில அந்த செயல் முடங்கி போவும்.

    குறள் 469:

    நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
    பண்பறிந் தாற்றாக் கடை

    அவுகவுக கொணத்துக்கு ஏத்தாப்போல தான் நன்ம செய்யணும். அப்டி செய்யலேன்னா நன்ம செய்யுததிலும் தப்பு உண்டாவும்.

    குறள் 470:

    எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
    கொள்ளாத கொள்ளா துலகு

    தன்னோட நெலமைக்கு பொருத்தமில்லாத செயலச் செஞ்சா ஒலகம் எளக்காரமா பேசும். ஒலகம் எளக்காரமா பேசாதத தேடிப் பாத்து செய்யணும்.

    (அடுத்தாப்லயும் வரும்..)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-46

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-46

     46. சிற்றினம் சேராமை

    குறள் 451:

    சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
    சுற்றமாச் சூழ்ந்து விடும்

    கெட்டவங்க கூட சேருததுக்கு நல்ல மனசுக்காரங்க பயப்படுவாங்க. ஈன புத்தி உள்ளவங்க அவுகள தங்க சொந்தக்காரங்க கணக்கா நெனச்சி பழகுவாக.

    குறள் 452:

    நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
    கினத்தியல்ப தாகும் அறிவு

    தான் இருக்க நெலத்துக்கு ஏத்தாமாரி தண்ணியோட தன்ம மாறிக்கிடுது. அது கணக்கா தான் மனுசனோட புத்தியும் அவன் சேருத கூட்டத்துக்கு ஏத்தாப்போல மாறிக்கிடும்.

    குறள் 453:

    மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
    இன்னா னெனப்படுஞ் சொல்

    ஒருத்தனுக்கு உணர்ச்சி அவன் மனசப் பொறுத்து அமைஞ்சிகிடும். அவன் இப்டி பட்டவன்னு அளந்து சொல்லுதது அவன் சேருத கூட்டாளியப் பொறுத்து அமையும்.

    குறள் 454:

    மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
    கினத்துள தாகும் அறிவு

    ஒருத்தனோட நல்ல புத்தி அவன் மனசுக்குள்ளார இருக்கமாரி தோணிச்சின்னாலும் அது அவன் சேருத சேக்கையிலேந்து வெளிப்படுதது தான்.

    குறள் 455:

    மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
    இனந்தூய்மை தூவா வரும்

    சுத்தமான மனசும், செய்யுத காரியத்துல சுத்தமும் ஒருத்தன் சேருத கூட்டத்தோட தூய்மைய ஆதாரமா கொண்டுதான் பொறக்குது.

    குறள் 456:

    மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
    கில்லைநன் றாகா வினை

    சுத்த மனசுக்காரவுகளுக்கு அவுகளுக்குப் பொறவு அவுகளோட புகழ் சொச்சமா மிஞ்சி நிக்கும். சுத்திவர உள்ள கூட்டத்தார்(இனம்)  நல்லா அமைஞ்சவுகளுக்கு  நல்லா அமையாத செயல் னு எதுவுமே கெடையாது.

    குறள் 457:

    மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
    எல்லாப் புகழுந் தரும்

    நெலச்சு நிக்குத உசிருங்களுக்கு நல்ல மனசு செல்வத்தக் கொடுக்கும். அதோடு நிக்காம நல்ல கூட்டத்தார்(இனம்)  எல்லாப் புகழையும் கொடுக்கும்.

    குறள் 458:

    மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
    கினநலம் ஏமாப் புடைத்து

    மனசு நல்லதா இருக்க பெரிய மனுசங்களுக்கு கூட அவுக சேருத கூட்டத்தப் பொறுத்து தான் வலிம வந்து வாய்க்கும்.

    குறள் 459:

    மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
    இனநலத்தி னேமாப் புடைத்து

    மனசு நல்லதா இருந்தா மறுமையில கூட சந்தோசம் உண்டாவும். அதுவுங்கூட கூட்டத்தாரால வலிம பெறும்.

    குறள் 460:

    நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
    அல்லற் படுப்பதூஉம் இல்

    ஒருத்தனுக்கு நல்ல கூட்டத்தாரப்போல பெரிய தொணை ஒண்ணுமில்ல. கெட்ட கூட்டத்தாரப் போல தீம தருததும் வேற இல்ல.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share