Tag: மீனாட்சி பாலகணேஷ்

  • பிள்ளைத்தமிழின் அழகின் அலைகள்

    மீனாட்சி பாலகணேஷ்

    மூவுலகங்களையும் தன் கருணையினால் ஆளும் அன்னை பராசக்தி இரத்தின சிம்மாசனத்தில் கொலுவீற்றிருக்கிறாள். சாமரம் வீசும் சேடியர் ஒருபுறம். அவளுடைய தரிசனத்துக்காக அலைமோதும் மற்ற அரசர்களின் கூட்டம் இன்னொருபுறம். ஈரேழு உலகங்களும், வானும் புவியும் வணங்கியெழும் அன்னை பராசக்தி இவளல்லவோ? இவளுடைய கடைக்கண் பார்வைக்காக ஏங்கி நிற்கின்றது அடியார் கூட்டமும், முனிவர்கள், தொண்டர் குழாமும். அடியார் குறைகளைக் கேட்டு அக்குறைகள்தீர தீயரை வீட்டி, தன்னை மேவினர்க்கின்னருள் செய்துகொண்டிருக்கிறாள் அன்னையிவள்! ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் வளர்க்கிறாள்!

    ame

    இவளது இச்செய்கையை பாரதியாரும்,

    அறுபது கோடி தடக்கைகளாலும் அறங்கள் நடத்துவள் தாய்- தனைச்
    செறுவது நாடி வருபவரைத் துகள் செய்து கிடத்துவள் தாய்,’ எனப் போற்றுகிறார். அத்துணை புகழ்வாய்ந்தவள் இந்தப் பேரரசியான அன்னை!

    திடீரென இவளுடைய அரண்மனை வாயிலில் பரபரப்பு. ஏவலரும் சேவகரும், வாய்பொத்தி, கைகட்டி வழிவிட்டு விலகுகின்றனர். பொலியும் கம்பீரமும், யாரையும் சட்டை செய்யாத தன்மையும் கொண்ட ஒருவன், புலித்தோலாடையும், சடைமுடியும், கையிலேந்திய திரிசூலமும், நீறுபூசிய உடலும், அவ்வுடலெங்கும் தவழ்ந்து அணிசெய்யும் நாகங்களுமாக இதழ்களில் தவழும் குறுநகையுடன் அரசவைக்குள் நுழைகிறான். இவன் முப்புரங்களையும் எரித்த சிவபிரானல்லவா?பிரமனும் திருமாலும் அடிமுடி தேடியறியாப் பரம்பொருள். அந்தப் பேரரசிக்கும் பேரரசன். அவளைத்தேடி வருகிறான்…….!

    பணிப்பெண்களும், சேவகர்களும் சிவபெருமான் வருகையை அறிவிக்க அன்னையை நோக்கி விரைகின்றனர். உலகின் எந்த மூலையில் நிகழும் செயலையும் அறிந்தவளல்லவா அவள்? தன் தலைவன் வருகையை அறியமாட்டாளா என்ன? அத்துணை பரபரப்பின் இடையிலும் அவள் கண்கள் அவன்வரவைக் கண்டுவிட்டன. அரசியானால் என்ன?

    ‘கற்றைச் சடைமதி வைத்த துறவியைக் கைதொழு வாள் எங்கள்தாய் – கையில்
    ஒற்றைத் திகிரிகொண்டேழுல காளும் ஒருவனை யுந்தொழுவாள்,’
    என்று பாரதி பாடிய அன்னையல்லவோ இவள்?

    அத்தகைய அன்னை தானே தனது காதற்கொழுநனை வரவேற்க எழுந்து விரைகிறாள். அது அவ்வளவு எளிதான செயலாக இல்லை!! ஏனென்றால் வழிதோறும் பணிந்துகிடக்கும் தேவர்களின் தலைகள்! அவற்றில் மணிமகுடங்கள்! பிரமனின் கிரீடம்! மது, கைடபன் எனும் அரக்கர்களைக் கொன்ற பெருமைகொண்ட திருமாலின் கனமான நவரத்தினங்கள் பதித்த மணிமுடி! இந்திரனின் மணிமுடி வேறொரு பக்கம்! இவற்றில் அவள் இடறிக்கொண்டு விட்டால் என்னாவது? கவலை கொண்ட சேடியர் அவளை எச்சரிக்கை செய்கின்றனர். “தாயே! பார்த்துச் செல்லுங்கள்! இவை எதிலாவது காலை இடறிக்கொண்டு விடப்போகிறீர்கள்,” என்கின்றனராம். யாராலுமே சிந்தித்தும் பார்க்க இயலாத இனிமையான பொருள்செறிந்த கற்பனை இதுவே!

    பொருட்செறிவு எதனால்? எத்தகைய உயர்ந்த பதவியில் இருந்தாலும் பணிவும் அடக்கமும் அன்பும் குறையாது நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அன்னையின் செயல் சான்றாகும். ‘மனையாள் அரசியானால் என்ன? நான் என் எளிமையில் இருந்து கொள்கிறேன்,’ எனப் புலித்தோலாடையணிந்து அலட்சியமாக நடந்து வரும் சிவபிரான், யாரும் வந்து தன்னை எதிர்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கவுமில்லை.
    சரி, நமது கட்டுரைக்கு வருவோம்.

    அழகின் அலைகள்- சௌந்தர்ய லஹரி- எனும் பெயர்கொண்ட நூறு ஸ்லோகங்களாலான இந்நூல், அன்னையின் அழகினை வருணித்து ஆதிசங்கரரால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. வீரை கவிராஜபண்டிதர் எனும் தமிழ்ப்புலவர் இதனைப் பொருள்பிறழாது தமிழில் அழகுற மொழிபெயர்த்துள்ளார்.

    முதுமறைசொல் இளவனிதை அயனொடு அரிகுலிசன் உனை
    முறைபணியும் நெறியின் இடையே
    பதறி உனது அருகுவரும் அரனையெதிர்கொள
    பரிசனம் உன்னடி வளமையால்
    இதுபிரமன் மகுடம் அரிமகுடம் இது குலிசன்முடி
    இதுகடினம் மிடறும் இருதாள்
    சதியமர அமரவழி விலகிவர வர எமது
    கடவுள் எனும் மொழி தழைகவே.
    (சௌந்தர்யலஹரி-29- வீரை கவிராஜ பண்டிதர்)

    இத்தகைய அருமையான ஸ்லோகங்கள் கொண்ட இந்நூல் கற்பனை வளம் செறிந்து விளங்குவது. தொன்மங்களை இணைத்து, அன்னையின் பிரதாபங்களைக்கூறி வாழ்த்துவது ஒருவித நயமெனில், தமது நுண்ணுணர்வினால் மேலும் சிறந்த சில கற்பனை நிகழ்வுகளைப் புனைந்து இலக்கியத்திற்குச் சுவை சேர்ப்பது இன்னொரு நயம். வடமொழியிலிருந்து கருத்துக்களை எடுத்து இணைத்துக்கொண்டு தமிழில் இத்தகைய பாடல்கள் சிறந்து விளங்கி வருகின்றன. ஒரு சிறந்த கற்பனைக்கருத்தை, அக்காலக்கவியுலகம் ‘காபிரைட்’, செய்யவில்லை! இக்கருத்தினைச் சிறிது மாற்றம்செய்து தாமியற்றியுள்ள சீர்காழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ் நூலில் இணைத்துள்ளார் கோவை கவியரசு நடேச கவுண்டர் எனும் புலவனார்.

    அத்தகையவொரு பாடலே கீழே நாம் காணும் இப்பிள்ளைத்தமிழ்ப் பாடலாகும். இந்நூலில் இப்பாடல் சப்பாணிப்பருவத்தில் காணப்படுகிறது. இங்கு எவ்வாறு பொருந்துமென எண்ணி வியக்கிறோம். சப்பாணிப்பருவமானது வளர்ந்துவரும் சிறுகுழந்தையை இருகைகளையும் இணைத்துக் கொட்டி ஒலியெழுப்புமாறு தாய் வேண்டுவதாக அமையும்.

    அன்னை உமையின் அரசவை நிகழ்வுக்கும் கைகளைக்கொட்டி மகிழும் குழந்தைக்கும் என்ன சம்பந்தமிருக்கும்? இங்குதான் புலவரின் மதிநுட்பம் புலனாகிறது. சப்பாணிப்பருவத்தில் குழந்தையின் கைகளே பாடுபொருளாகின்றன. இப்பெரும் செயலைச் செய்த கைகளைக்கொண்டு சப்பாணி கொட்டுக! என வேண்டுவதே வழக்காகும். அதற்கேற்ப அன்னை தன் கைகளால் செய்த செயலை விளக்குகிறார் புலவர்.

    ‘பிரமனுடன் திருமால், இந்திரன் ஆகிய அமரர்கள் சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும் நீ உனது பொற்பாதங்களை வைத்திருக்கும் பீடத்தின்முன்பு நெடுஞ்சாண்கிடையாக, தங்கள் விலைமதிப்பற்ற மணிமுடிகள் தரையைத் தொடும்வண்ணம் பணிந்துகிடக்கிறார்கள்.

    ‘அச்சமயம் அரனாகிய சிவபிரான் உனைநாடி வருகின்றான்; நீயும் அரியணையினின்றும் எழுந்து அவனை வரவேற்க விரைகின்றனை அம்மையே! அவ்வாறு அவசரமாக நீ செல்லும் வேளையில் ‘உன்னை வழிபட்டுக் கிடப்போரின் மணிமுடிகள் காலில் இடறுமே,’ எனப் பணிப்பெண்கள் எச்சரிக்கை செய்கின்றனர். அந்த அமரர்களோ ஆனந்த பரவசத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர்; எழுந்திருப்பதாகக் காணோம்!

    ‘இதனாய் அன்னையே! நீ உன் பவளவாயால் அவர்களை, “எழுந்திருங்கள்,” என உரப்பி ‘படபட’வெனப் பங்கயச்செங்கை மலர்களைத் தட்டி எழுப்புவதுபோல, இப்போதும், சரசுவதி போற்றி வணங்கும் புகலி (சீர்காழி) நகரின் தலைவியே! சப்பாணி கொட்டியருளுகவே!

    ‘அனைத்து நலன்களையும் அடியார்க்கு அருளும் எம் அம்மையே! சப்பாணி கொட்டியருளுகவே!’ என வேண்டுவதாக அமைந்துள்ள நயம் வியப்பிற்குரியதாம்.

    சப்பாணி கொட்டும் குழவியாக அன்னையைப் பார்க்க வேண்டுமெனில் அவள் கைகளைத் தட்டும் நிகழ்ச்சியொன்றைத் தெரிவு செய்ய வேண்டும். தமது கற்பனையை சௌந்தர்யலஹரிப் பாடலில் சிறிது மாற்றம்செய்து இணைத்து இதனைக் கூறியுள்ளது பிரமிக்க வைக்கிறது.

    பிரமனொடு மால்புரந் தரனாதி யமரருன்
    பொற்பாத பீடிகைமுனர்ப்
    பெருவிலைய மணிமுடியின் மிசைவைத்த வஞ்சலி
    பிறங்கவீழ்ந் தேத்துகாலை
    அரனுன்முன ரணுகவர வரியணையி னின்றெழுந்
    தவனைவர வேற்குமாநீ
    அவசரப் படும்வேலை முடிகளடி யிடறுமென்
    றரமகளி ரெச்சரிக்கப்
    பரவசப் படுமமரர் அறியார் கிடப்பவுன்
    பவளவாயா லுரப்பிப்
    படபடத் தெழுமாறு கைதட்டு மாறெனப்
    பங்கயச் செங்கைமலரால்
    சரசுவதி பரசுமொண் புகலிநக ரமர்முதல்வி
    சப்பாணி கொட்டியருளே!
    சகலதல மெலாமுதவு திருநிலைச் செல்வியொரு
    சப்பாணி கொட்டியருளே!
    (சீர்காழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- நடேச கவுண்டர்)

    இவ்வாறே இன்னும் சில புலவர்களும் பாடியுள்ளனர். அடுத்த அத்தியாயங்களில் கண்டு மகிழலாம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ************

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி-12

     -மீனாட்சி பாலகணேஷ்

    “என் அன்பே, ஒரு கண்ணீர்த் துளியுடனும், ஒரு கீதத்துடனும் அர்ப்பணிப்பதற்காகவே இந்த இதயம் உள்ளது.”
    “என் நண்பனே, உன்னுடைய இந்த வார்த்தைகள்                     எனக்குப் புரியவில்லையே”  ……. தாகூர்.

                                                    *****************

    அன்று மாலை களைத்த உடலுடனும், சோர்வடைந்த மனத்துடனும், தளர்ந்த நடையுடனும் வீடு திரும்பிய ஷீலாவுக்கு தடிமனான ஒரு வெளிநாட்டுக் கடிதக்கவரின் வடிவில் ஒர் ஆச்சரியம் காத்திருந்தது! அனுப்பியவர் முகவரி இருக்கும் இடத்தில், ஜேம்ஸ் ராபர்ட்ஸ், கீதாஞ்சலி ராபர்ட்ஸ் என்று எழுதியிருந்த கையெழுத்து மனதைக் கவர்ந்தது.  ‘டு ஷிவா ராபர்ட்ஸ்’ என்று எழுதியிருந்ததை வாய்விட்டு மெல்லப்படித்தவள், ஏதோ ஒரு நினைவில் கனவில் நடப்பதுபோல மெல்ல நடந்து, சோபாவில் அழுந்திச் சாய்ந்துகொண்டாள்.

    father & daughterமனம் முழுவதும் உணர்ச்சிகளின் கலவை.  இனம் காண முடியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தாள்.  கடிதத்தை அவசரமாகப் பிரிக்க மனம் வரவில்லை. என்ன செய்திகளைத் தாங்கி வந்திருக்கிறது என்று அறிந்துகொள்ள ஆவலாக இருந்தாலும், இன்னும் சிலபொழுது அந்த எதிர்பார்ப்பை வளர்த்து நீட்டவேண்டும் என்று மூளை வேதாந்தம் பேசியது.

    ‘நீ கனவு கண்டது போல, அடுத்த மனைவியைப் பற்றி எழுதியிருப்பான் ஜிம்.  போட்டோ கூட அனுப்பியிருக்கலாம்.  அவனுக்குத் தான் இந்தியா என்றால் உயிராயிற்றே-  தேனிலவுக்கு வருகிறேன் என்றும் கூட எழுதியிருப்பான்….

    ‘சீச்சீ, இரண்டாம் மனைவியுடன் ஹனிமூன் போக, டைவர்ஸ் செய்த முதல் மனைவியிடம் எந்த மடையனாவது ஆலோசனை கேட்பானா……

    ‘என்னதான் இருக்கும் இந்தக் கடிதத்தில்?’  வருடாவருடம் இரு கடிதங்கள் ஜிம்மிடமிருந்து ஷீலாவுக்கு வரும். புத்தாண்டு வாழ்த்துகள்-  அதனுடன் முக்கியமாக கீதாவின் வளர்ச்சி, அவள் படிப்பு, மற்ற விவரங்கள் பற்றிய நீண்ட விளக்கங்களுடன் அவளுடைய சமீபத்திய புகைப்படத்துடன் ஜிம் எழுதியிருப்பான்.  தாய் என்ற முறையில் அவள், அதாவது ஷீலா, தெரிந்து கொள்ள வேண்டும் என்று கீதா சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் விவரமாக எழுதுவதைத் தன் கடமையாகக் கொண்டிருந்தான்.  இன்னொரு கடிதம் அவளுடைய பிறந்த நாள் சமயம் கீதாவிடமிருந்து வரும்-  ‘மம்மிக்கு வாழ்த்துகளு’டன் தன் பள்ளி, நண்பர்கள் பற்றிய விவரங்களுடன் மற்றுமொரு புகைப்படத்துடன் வரும்.

    இதில் விநோதம் என்னவென்றால், தாயும் மகளும் பிரிந்திருந்த இந்தப் பத்துச்சொச்சம் ஆண்டுகளில் ஒருமுறை கூட, தொலைபேசியில் பேசிக் கொண்டதோ, ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பியதாகவோ காட்டிக் கொள்ளவில்லை.

    குழந்தை கீதா தன் தந்தையிடம் கேட்டிருப்பாளோ என்னவோ, “அம்மா எங்கே, தான் ஏன் அவளைப் பார்க்க முடியாது?” என்றெல்லாம் கேட்ட பொழுது ஜிம் என்ன கூறியிருப்பான்?  “உன் அம்மா நம்மை எல்லாம் வேண்டாம் என்று விட்டு விலகி ஓடிப் போய் விட்டாள்-  வேறு எதையோ தேடிக் கொண்டு போய் விட்டாள்.  அவளை நாம் எதற்காகப் போய் பார்ப்பது?” என்றிருப்பானோ-

    ‘கட்டாயம் இருக்காது- அவன் சராசரி ஆண்மகனல்ல.  உயர்ந்த எண்ணங்களும் பரந்த மனதும் உடையவன்.  “உன் அம்மாவைச் சந்திக்க இன்னும் வேளை வரவில்லை.  கொஞ்சம் பொறுமையாக இரு டார்லிங்,” என்று ஷீலா அத்தகைய ஒரு விருப்பத்தைத் தெரிவித்து எழுதும் வரை காத்திருக்கச் சொல்லி இருப்பான்.

    ‘அவன் இன்னொரு திருமணம் செய்து கொண்டதாகவோ வேறு பெண் நண்பர்கள் இருப்பதாகவோ தெரியவில்லை.  குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டுமே என்ற கடமைக்காக ஒருவன் தன் இளமையையும் வாழ்வின் இனிய தருணங்களையும் மனமொத்த ஒரு துணையுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்ப்பானா என்ன?

    ‘விவாகரத்து வாங்கிக் கொண்ட போது கூட, என்றேனும் ஒருநாள் நான் திரும்பி வருவேன்- கீதாவுக்காகவாவது, என்று தானும் சேர்ந்து எனக்காகக் காத்திருக்கிறானோ?

    பலவிதமாகச் சிந்தனைக் குதிரையைத் தட்டிப் பறக்கவிட்டுக் கொண்டிருந்த ஷீலா இன்னும் கடிதத்தைத் திறக்க எத்தனிக்கவில்லை. மடியிலேயே அந்த கனமான உறை கிடந்தது.

    ஜேம்ஸ், கீதாஞ்சலி என்ற பெயர்களைத் திரும்பப் பார்வையால் வருடினாள்.  வெறுமையாய் இருந்த மனதில், மெல்ல நம்பிக்கைத் துளிர்கள் அரும்ப ஆரம்பித்தன.  ‘என்ன ஆயிற்று ஷீலாஉனக்கு?’ என்றது அவள் உள்ளம்.

    முடிவும் ஆழமும் தெரியாத ஒரு சுரங்கத்துள் புகுந்தது போல, தன் மனம் புகுந்து அலையும் எல்லையற்ற ‘தேடலில்’ சலித்து, போகும் போக்கில் ஏதோ ஒன்றைத் ‘தேடிய பொருள்’ என்று எண்ணி, ஏமாந்து, பின்னும் தேடி, சுழன்று சுழன்று, ஒரு சக்கர வட்டத்துக்குள் அகப்பட்டுக் கொண்டவள், இத்தனை காலம் கடந்து, தனது பொருளற்ற செய்கையை உணர்ந்து தவித்தாளோ என்னவோ- கண்ணோரங்களில் முத்துக்கள் அரும்பின.

    ************

    பெண், டைவர்ஸ் வாங்கிக் கொண்டு மனநோயாளியாகத் திரும்பி இந்தியா வந்ததும் அவளுக்குத் தந்தையாக மட்டுமின்றி, உற்ற தோழனாக, ஆசானாக, அன்னையாக ஆறுதல் கூறி, அவளுடைய குழப்பத்தையும் சிந்தையையும் தெளிவிக்க வெங்கடேசன் என்னென்னவோ முயற்சிகளை எடுத்துக் கொண்டார்.  கோவில்கள், ஆசிரமங்கள் மற்றும் பொழுதுபோக்கு, விடுமுறை வாசஸ்தலங்கள் ஒன்றும் அவள் குழப்பத்தையும் மனநிலையையும் தெளிவிப்பனவாக இல்லை.

    மிகவும் யோசித்து, வெங்கடேசன் துணிச்சலுடன் ஒரு முடிவுக்கு வந்தார்.  அவர் வேலை பார்த்து வந்த கெமிக்கல் இண்டஸ்டிரியின் முதலாளி ஒரு சகாயமான விலைக்குக் கம்பெனியை வெங்கடேசனுக்கே விற்று விட்டார்.  முதலாளியின் ஒரே பிள்ளை ‘காபி, டீ எஸ்டேட்’ என்று அவ்வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததால் ‘கெமிக்கல்ஸை’ப் பற்றி அவ்வளவு ஈடுபாடு கொள்ளவில்லை.  கடந்த இரு வருடங்களாக வெங்கடேசன் தான் இண்டஸ்டிரியை நிர்வாகமே செய்து வந்தார்.

    ‘சைலாவும் ஒரு கெமிஸ்ட் தானே.  அவளையும் இந்த பிஸினஸில் ஈடுபடுத்தி வியாபாரத்தையும், சரக்குகளையும் விரிவு படுத்தினால், அவளுக்கு மனத்தையும் தன் எண்ணங்களையும் ஒருமுகப்படுத்தி, ஒரே காரியத்தைச் சிந்திக்க வாய்ப்பு உருவாகும்- தற்போதுள்ள மனநோயாளி என்ற நிலை மாறும்’ என்று துணிந்து சிந்தித்தது அந்தத் தந்தையுள்ளம்.

     ஷீலாவிற்கும் இந்த யோசனை பிடித்திருந்தது.  அவளுக்குத் தன்னை நாளும் பொழுதும் பாதித்துக் கொண்டிருந்த எண்ணங்களில் இருந்து விடுபட்டால் போதும் என்றிருந்தது.

    தந்தையும் மகளுமாகப் பாடுபட்டு, பிளான் பண்ணி, ‘பெர்ஃப்யூம்’ எனும் வாசனைத் திரவியங்களுக்குத் தேவைப்படும் மூலப் பொருட்களை உயர்ந்த தரத்தில் தயாரித்து ‘சப்ளை’ செய்யும் கம்பெனியாக எஸ். வி. இண்டஸ்டிரீஸை உருவாக்கினார்கள்.  மூன்றே ஆண்டுகளில் ஏற்றுமதி கூட பல லட்சங்களை எட்டிப் பிடித்தது.

    வெற்றியையும், அதன் பாதையையும் ருசி கண்டு கொண்ட ஷீலாவின் உள்ளம் களிவெறி கொண்டாடியது.  பெண்ணின் சொந்த வாழ்வின் சிக்கல்களைப் பிரித்துச் சீராக்குவதில் உதவ முடியாத வெங்கடேசனின் இதயம் துயரத்தில் தனித்து நீந்திக் களைத்து தன் களைப்பை வேலை நிறுத்தத்தின் மூலம் தீர்த்துக் கொண்டது.  தாயும் மகளும் என்றோ அன்னியப்பட்டு விட்டனர்.

    வெங்கடேசனின் காலத்திற்குப் பின் அலமேலு திருச்சியில் தன் சகோதரி வீட்டில் போய் இருந்து கொண்டு கோவில் குளம் என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள்.  மகளைப் பற்றிய செய்திகள் அவ்வபோது காதில் விழுந்து பெற்ற வயிற்றைக் குமுற வைத்தன.

    தனியொரு பெண்ணாக நின்று எஸ். வி. கெமிக்கல்ஸை ஒரு ‘கார்ப்பரேட்’ ஸ்தானத்துக்கு உயர்த்தி, வெளிநாட்டுக் கம்பெனிகளுடன் பிஸினஸ் செய்து கொண்டிருந்த ஷீலாவின் திறமையையும் சாம்ர்த்தியத்தையும் கண்டு பிஸினஸ் வட்டாரத்தில் வியக்காத, பொறாமைப்படாத மனிதர்களே இல்லை எனலாம்.

    தனிமை; முடிவற்ற தனிமை.  தனியொருத்தியாக நின்று வெற்றிகரமாக பிஸினஸ் செய்வதால் வந்த துணிவு.  பழைய ஆங்காரங்கள் புது வடிவில் உருவெடுத்தன.  ஒரு சுண்டுவிரலின் அசைவில் தன் விருப்பங்கள் கட்டளைகளாக மாறி நிறைவேறுவது போதை தந்தது.  யாரெல்லாமோ வந்து போடும் கூழைக் கும்பிடுகளும் தன்னுடைய நட்புக்காக ஏங்கி நிற்கும் சொஸைட்டியின் மேல் தட்டு மனிதர்கள், தன்னால் ஆட்டி வைக்கக் கூடிய பொம்மைகளாக நிற்பதும் மனதில் ஒரு மமதையை வளர்த்தது.

    ‘என் மனப்புண் ஆறுவதற்கு இது தான் வேண்டியிருந்தது,’ என்று தீர்மானித்து, அந்த முடிவில் திருப்தி கண்டாள் ஷீலா.  தன் கடந்தகால வாழ்வின் நினைவுகளை மனதின் ஒரு மூலையில் போட்டு அழுந்த மூடி ‘ஸீல்’ வைத்தாள்.  இதனாலேயே ஜிம், கீதா இருவருடனும் பேசவோ, அவர்களைப் பார்க்கவோ முயற்சிக்கவே இல்லை.

    கடந்த சில ஆண்டுகளாக அருணின் பரிச்சயம் வேறு;  யாரும் செய்வதற்குத் தயங்கும் காரியங்களைத் துணிச்சலோடு  செய்து காட்டி, மற்றவர்களைப் பிரமிக்க வைத்து, அந்தப் பிரமிப்பையே புகழ்ச்சியாக மாற்றிக் கொள்வது ஷீலாவுக்கு கை வந்த கலையாகி விட்டிருந்தது.

    வேஷதாரியாகி வாழ்வை ஒரு நாடகமாக நடித்து வந்தவளின் வாழ்வில் நிஜங்களுக்கு இடமில்லை.  அருண் வெளியேறியதும் அந்த வெறுமை முகத்தில் அறைந்தது.  ஆனால், ஆடலரசு குடும்பத்தினர் காட்டிய அன்பும், பாசமும், அளித்த கௌரவமும், இத்தனை நாட்களாக உணர்ந்தறியாத வினோதமான ஆனால் இனிய எண்ணங்களை எழுப்பி இன்ப அவஸ்தைக்குள்ளாக்கின.  வாழ்வில் இழந்து விட்ட சந்தோஷங்கள் திரும்ப வருமா என்ற ஏக்கம் பிறந்தது.

    ‘ஷீலா, உன்னிடம் என் மனதைத் திறந்து பேசி யுகாந்தரங்களாகி விட்டன.  நீ என்னை விட்டுப் பிரிந்து போன போது உன்னிடம் கோபத்தை விடப் பரிதாபமே எனக்கு எஞ்சி நின்றது.  என்றாவது, கூடிய சீக்கிரம், என்னை நாடித் திரும்ப வருவாய் என்று எண்ணிக் காத்திருக்க ஆரம்பித்தேன்.  உன்னுடன் நான் வாழ்ந்த வாழ்வை, பகிர்ந்து கொண்ட நேசத்தை, ஒரு வெறும் சட்ட சம்பந்தமான காகிதம், ‘இல்லை’ என்று ஆக்கி விட முடியாது என்ற பயித்தியக்கார எதிர்பார்ப்பு அது.

    ‘இத்தனை ஆண்டுகள் நான், என் நினைவுகள் வேண்டவே வேண்டாம் என நீ இருந்த உறுதியைக் கண்டு என்னுள் வியக்கிறேன்.  நீ என்னை வெறுத்து ஒதுங்கிப் பிரியவில்லை.  உன்னை நீயே உணர முடியாது அப்போது இருந்த சூழ்நிலையில் பயந்து ஓடிவிட்டாய் என்று தான் கருதுகிறேன்.  இப்போது கூட நீ இதை ஒத்துக் கொள்ள மாட்டாய் இல்லையா?’

    இந்த வரிகளைப் படிக்கும் போது, ஜிம்மின் அமைதியான முகமும், கண்ணாடிக்குப் பின்னிருந்து அவளை ஒரு உள்ளடங்கிய சிரிப்புடன் கனிவாக ஊடுருவி நோக்கும் அவனுடைய நீலக் கண்களும் கண்முன் தோன்றின.  தொடர்ந்து படித்தாள்.

    ‘ராபர்ட்ஸ் என்று உன் பெயரின் பின்னால் போட்டுக் கொள்வதை நீ எப்போது மாற்றவில்லையோ அப்போதே உனக்கு என்மீது வெறுப்பில்லை என்று தெரிந்து கொண்டேன்,’  இங்கு ஷீலா லேசாகத் தனக்குத் தானே புன்னகை புரிந்து கொண்டாள்.

    அவள் ராபர்ட்ஸ் என்ற பெயரைத் துறக்காமல் வைத்துக் கொண்டிருந்ததன் காரணமே வேறு.  ஏற்கெனவே ஷீலா என்ற பெயர் எப்படி வந்தது என்று முக்கால்வாசிப்பேர் ஆச்சரியப் பட்டனர்.  அத்துடன் ராபர்ட்ஸையும் சேர்த்துக் கொண்டு அவர்களைத் திணற அடித்து விடத்தான் அவள் ஷீலா ராபர்ட்ஸாக இருந்தாள்.

    இன்னும் தன் மன ஓட்டங்களைத் தெளிவாக விளக்கி இருந்த ஜிம்மின் கடிதத்திலிருந்து அவனுடைய இதயக் கதவுகள் இன்னமும் அவளுக்காக விரியத் திறந்திருந்தது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.

    லெட்டரின் அடுத்த பாதி இன்னுமே உற்சாகம் தரும் செய்திகளைத் தாங்கி இருந்தது.  கீதாஞ்சலிக்குப் பதினைந்து வயது முடிகின்றது.  பரத நாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறாள்.  அவளையும்  அழைத்துக் கொண்டு, அவளுடைய தாய்நாடான இந்தியாவை அவளுக்குக் காட்ட, இன்னமும் நாற்பது நாட்களில் கிளம்புவதாகத் தெரிவித்திருந்தான்.  இரு மாதங்கள் தென்னிந்தியாவை அவளுக்குச் சுற்றிக் காட்டப் போவதாகத் திட்டம் என எழுதியிருந்தான் ஜிம்.

    கடிதத்துடன் நான்கைந்து புகைப்படங்கள்- கீதாவின் பரதநாட்டியப் படங்கள்- எத்தனையோ ஆண்டுகளில் முதல்முறையாக ஷீலாாவின் தாய்ப்பாசம் மேலிட்டு, உள்ளம் பெருமையில் விம்மியது.

    கீதாவின் இரண்டு பக்கக் கடிதமும் உடன் இருந்தது.  தாயைப் பார்க்கத் துடிக்கும் இளங்கன்றின் ஏக்கத்தை வரிக்குவரி உணர முடிந்தது.

    ****************

    ‘ட்ரிங், ட்ரிங்,’ என ஒலித்த போன் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்த ஷீலா, சுதாரித்துக் கொண்டு போனை எடுத்தவள் பேசத் தடுமாறினாள்.  மறுமுனையில் ஆடலரசு தான்…..

    “என்ன சைலா, எனி பிராப்ளம்?” அவன் குரலில் கவலையும் பரிவும் தொனித்தன.

    “இல்லையே, ஐ ஆம் ஓகே,” கலகலவென்று பேச ஆரம்பித்தவள், கடிதக் கற்றையை அணைத்தபடி, எண்ணங்களில் நீந்திக் களைத்துத் தான் உறங்கி விட்டிருந்ததை எண்ணிச் சிரித்தாள்.  மறுமுனையில் சிரிப்பொலியைக் கேட்டவன், விஷயத்தை உணர முடியாமல் தவித்தான்.

    “அமுதாவுடன் ஒரு அரைமணி நேரம் இங்கு வர முடியுமா? உங்களிருவருடனும் ஒரு இனிய ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்,” என்று குழந்தை போலக் குதூகலித்தாள் சைலஜா.

    (தொடரும்)

     

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி -11

    மீனாட்சி பாலகணேஷ்

    என் கனவுகளின் வானில் மிதக்கும் மாலைநேரத்து மேகம் நீ;
    என் அன்பின் தாபங்களால் உனக்கு வண்ணங்களும் வடிவங்களும்
    தருகிறேன்.
    முடிவற்ற என் கனவுகளின் கருவான நீ எனக்கே சொந்தம், எனக்கே
    சொந்தம்-
    (-தாகூர்)

    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

    ameஅமுதா இன்னும் கொஞ்சம் உருளைக்கிழங்குப் பொரியலைக் கணவனின் தட்டில் போட்டாள். “என்னங்க, ரொம்ப யோசனையா இருக்கீங்க? தட்டிலே என்ன பதார்த்தம் இருக்குன்னே தெரியாம சாப்பிடறீங்களே,” என்றதும், மனைவியை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தான் ஆடலரசு.

    “அமுதா, நீயும் தான் சாப்பிட உட்காரேன். சேர்ந்தே சாப்பிடலாம். பசங்க தான் பக்கத்து வீட்டு பர்த்டே பார்ட்டிக்குப் போயிட்டங்களே,” என்று கரிசனத்துடன் கூறினான். இது எதற்கோ பீடிகை என்று அமுதாவுக்குப் புரிந்தது. இந்தப் பத்து வருடங்கள் தாம்பத்தியத்தில் அவனை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாள் அவள். “சரி சாப்பிடறேன். ஏதோ பெரிய விஷயம் சொல்லப் போறீங்கன்னு தெரியுது. கேட்டுக்க நான் ரெடி,” ஆர்வத்துடன் அவனுக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்தாள்.

    அமுதா பி. ஏ. தமிழ் இலக்கியம் படித்தவள். ஆனால் தன் பெயருக்குப் பின்னால் முழ நீளத்துக்கு என்னென்னவோ மருத்துவ டிகிரிகளை அடுக்கிக் கொண்டிருக்கும் டாக்டரான கணவன் ஆடலரசுக்கு அவளுடைய அன்பும் பரிவும் தான் பெரிய மருந்து என்பது உண்மை. சிரித்த முகமும், கணவன் குறிப்பறிந்து, மனம் அறிந்து சமயத்துக்கு ஏற்றவாறு நடந்து கொள்வதிலும் அமுதா மிகவும் புத்திசாலி. ஆடலரசுக்குக் கிடைத்த மருத்துவப் பட்டங்களை விட மிகவும் உயர்வான பட்டம் அமுதாவின் வாழ்க்கைத்துணை என்பதும் மணியான இரு குழந்தைகளின் தந்தை என்பதும் தான்.
    தன் மனதை ஏதாவது பாதித்தாலோ, சிந்தனையில் ஆழ்த்தினாலோ அவளுடன் அதைப் பற்றிப் பேசி ஒரு முடிவு காண்பது ஆடலரசின் வழக்கம். இன்றும் அப்படித்தான் பேச எண்ணியிருந்தான். எங்கே ஆரம்பிப்பது என்று யோசித்தபடி சோற்றைக் கிளறிக் கொண்டிருந்தான்.

    அடுத்த நாள் சனிக்கிழமை. மாலையில் ஹோட்டல் ‘தாஜ்’ல் சந்திக்கலாமா என்று ஷீலாவுக்கு இரண்டாவது முறையாகப் போன் செய்திருந்தான். “நான் மிகவும் ‘பிஸி’. ஊரிலிருக்க மாட்டேன். திரும்பவும் நானே உங்களைக் கூப்பிடுகிறேன். எப்போது சந்திக்கலாம் என்று கூறுகிறேன்,” என ஷீலா கூறியிருந்தாள்.

    இரு தடவைகள் போன் செய்ததற்கு இடையே தன் நண்பர்கள் வட்டாரங்களில் இருந்து, சொஸைட்டியில் மேல் தட்டில் இருக்கும், தன்னை ‘கன்சல்ட்’ செய்ய வரும் ஓரிரு ஓட்டை வாயர்களிடம் இருந்து, அரசல் புரசலாக ஷீலா ராபர்ட்ஸைப் பற்றி என்னவெல்லாமோ கதைகள் கேள்விப் பட்டிருந்தான் ஆடலரசு.

    ஷீலாவை நேரில் சந்திக்க ஆவலாக இருந்தான். அவள் தன்னைச் சந்திப்பதைத் தவிர்க்கப் பார்க்கிறாள் என்பது ஆடலரசுக்கு இப்போது உறுதியாகத் தெரிந்து விட்டது. பழைய நட்பின் உரிமையால் அவளுக்கு உதவி செய்ய விரும்பினான். அவள் தன் அமெரிக்கக் கணவனை விவாகரத்து செய்து விட்டு வந்து இங்கு பல ஆண்டுகளாகத் தன்னந் தனியாக பிஸினஸ் செய்து கொண்டு ‘ஏனோ தானோ’ என ஒரு வாழ்க்கை நடத்துவதும் அவனை மிகவும் பாதித்திருந்தது. இதைப் பற்றித் தான் அமுதாவிடம் பேச விரும்பினான்.

    எல்லாவற்றையும், தங்கள் பள்ளிப் பருவம் ஆகியவற்றையும் பற்றி விலாவரியாக விளக்கிக் கூறியவன், “அமுதா, உனக்கு நான் முந்தியே சொல்லியிருக்கேனில்லையா? இந்த சைலஜா தான் காரணம், நான் மெடிக்கல் படிச்சு பெரிய டாக்டரா வரதுக்கு வழி வகுத்ததே இவள் தான். வாழ்க்கையிலே நான் உயர்ந்த கல்வியை ஒரு சவாலாவே எடுத்துக்கிட்டதுக்கும் இவள் தான் காரணம். ஏய், ஏய், கண்களை விரிச்சுப் பார்க்காதே- அப்படி எல்லாம் எங்களுக்குள்ள ஒண்ணுமே நடக்கலே. ‘காதலாவது கத்தரிக்காயாவது- அவங்க ஐயரு, நம்ப எல்லாம் முதலியார்- சின்ன வயசுக் கவர்ச்சி- அவ்வளவே தான்.

    “அவளோட புத்திசாலித்தனமும் சமர்த்தும் என்னைக் கவர்ந்தது நிஜம் தான். அவளோட அத்தை பையன் ஒருத்தன் டாக்டருக்குப் படிச்சிட்டிருந்தான். அவன் எனக்குப் போட்டின்னு நானா நினைச்சு எரிச்சல் பட்டேன். நான் இதை விடப் பெரிய டாக்டரா ஆகிக் காட்டறேன்னு மனசுக்குள்ளேயே சவால் விட்டேன்.

    “நான் மேலே படிக்க இங்கிலாந்து போனப்புறம் தான் தெரிஞ்சது. திலகா எழுதியிருந்தா- அந்த அத்தை பையன், யாரோ ஒரு அமெரிக்கப் பெண்னைக் கலியாணம் செஞ்சுக்கிட்டானாம். பாவம். சைலஜாவுக்கு மெடிக்கலுக்கு ‘சீட்’டும் கிடைக்கலியாம். அவ மனசு எப்படி ஒடிஞ்சு போயிருக்கும்?” இங்கே சிறிது நிறுத்தினான் ஆடலரசு. ‘கட கட’வென ஒரு தம்ளர் தண்ணீரை அருந்தினான்.

    அமுதா தொடர்ந்து சொல்லலானாள். ‘இப்போ கட்டிகிட்ட அமெரிக்கப் புருஷனையும் விவாகரத்து செய்துட்டு இங்க தனியா இருக்காங்க. உங்களை, அதாவது சின்னப் புள்ளையில இருந்து தெரிஞ்சவங்களை சந்திக்க அவங்க விரும்பல. அதனால நீங்க அவளுக்கு எப்படியாவது உதவணும். அவங்களுக்கு ஏதாவது மனக்கஷ்டம் இருந்தா ‘ட்ரீட்மென்ட்’ குடுக்கணும்னு யோசிக்கிறீங்க இல்லியா?” என்றாள்.

    “அமுதா, நீ பெரிய சைக்காலஜிஸ்ட். எப்படி என் மனசுல இருக்கிறதைக் கண்டு பிடிச்சே,” என்றான் வியப்பு பொங்க.

    “இதுக்கென்ன பெரிய சைக்காலஜி வேணும்? அன்னிக்கு டாக்டர் சுவாமிநாதனோட மணிக்கணக்கா போன்ல பேசிட்டு பண்ணிட்டு இருந்தீங்களே- ‘என் பழைய குடும்ப நண்பர்’ என்றீர்கள். ஒண்ணும் ஒண்ணும் இரண்டு. சரி. எப்படி இதை ‘அப்ரோச்’ பண்ணப் போறீங்களாம்?” என்றாள் அமுதா.

    “உன்னுடைய ஒத்துழைப்பு எனக்கு வேணும். நான் தனியா ஏதாவது செய்யப்போனா தப்பா எடுத்துக்கிட்டு இன்னும் ‘அப்ஸெட்’ ஆயிடப் போறாங்களோன்னு பயமா இருக்குது அமுதா. அடுத்த வாரத்தில ஒருநாள் திடீர்னு சொல்லாம கொள்ளாம- நல்லாத்தான் இருக்காது- என்ன பண்றது- அவங்க பங்களாவுக்குப் போயிடலாம் விஸிட் பண்ணறதுக்கு. பாதிக்கதை இப்போ தெரியும். மீதி அப்போ புரியும்னு நினைக்கிறேன்.

    “அவங்க எனக்கு ஒரு தேவதை மாதிரி அமுதா- எட்டாத இடத்துல இருந்ததால, அவங்களைப் பார்க்கிறதே ஒரு வரம் என்று மனசில தோணியிருந்தது. ஒட்டடைக் குச்சி மாதிரி ஒரு அத்தை பையன் அவளைக் கட்டிக்கப் போறானேன்னு எனக்கு எரிச்சல். அவள் மேல இருந்த அன்பு- அதான் பாரதியார் பாடியிருக்காரே- லக்ஷ்மி காதல், சரஸ்வதி காதல் என்று- அது மாதிரி இதுவும் ஒண்ணுன்னு வைச்சுக்கோயேன். அது தான் என் லட்சியங்களை உருவாக்கி, பாதை காட்டியது.

    “யாரோ அருண் சர்மாவாம்- ஒரு ஆர்டிஸ்டோட இரண்டு மூணு வருஷம் இருந்திட்டிருந்தாங்களாம். அவன் போனவாரம் திடீர்னு எங்கேயோ போயிட்டானாம். எதையோ இழந்து விட்டு சைலஜா தேடிக்கிட்டு இருக்காங்க மாதிரிப் படுது, பீடத்திலிருந்து இறங்கி விட்ட என் தேவதையைத் திரும்ப அலங்கரித்து, அழகு செய்து, பீடத்தில் ஏற்ற வேண்டும். நீ உதவுவாயா?” டேபிளின் குறுக்கே கரத்தை நீட்டி அவளுடைய கரத்தைப் பற்றித் தன் கன்னத்தில் பதித்துக் கொண்டான்.

    “சரி, நல்லா பிளான் பண்ணனும். சாப்பிட்டு எழுந்திருங்க,” என்றாள் அமுதா.

    ——————————-%—————————————

    நகரின் பிரபல சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் சுவாமிநாதனைப் பார்த்து விவரமாகப் பேசினான் ஆடலரசு. ‘தனக்கு மிகவும் வேண்டிய குடும்ப நண்பர், தங்கை போல,’ என்று விவரித்தான். தயங்கித் தயங்கி, பெயரைக் கூறியதும் டாக்டர் சுவாமிநாதன் ஆச்சரியத்தில் புருவங்களை உயர்த்தினார். “ரொம்ப நாளாகத் தெரியுமே. அவ்வப்போது கன்ஸல்டேஷனுக்கு வருவார்கள். அவர்கள் ஒரு மனநோயாயாளி. அவர்கள் மனது மிகவும் தளர்ந்து போயிருக்கிறது.

    “இதில் என்ன ப்ராப்ளம் என்றால், டாக்டர் அரசு, அவங்களுக்கு நெருங்கிய குடும்பம் அல்லது உறவினர்களோ இல்லையோ அல்லது வேணுமென்றே இவர்கள் அவங்க உதவியை எதற்கும் நாடாமல் இருக்கிறார்களோ என்னவோ- மனம் திறந்து பேச நம் அனைவருக்குமே ஒரு துணை தேவை. அவங்க செக்ரெடரி ப்ரியான்னு ஒரு பெண் தான், ‘அப்பாயின்ட்மென்ட்’ வாங்கி, அவங்க கூட இங்க வருவாங்க….

    “கடந்த கால நிகழ்ச்சிகளை, குழந்தைப் பருவ சந்தோஷ நாட்களை, நினைவு கூர்ந்தாலோ, அவற்றைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களையோ உறவினர்களையோ சந்தித்தால் கூட இவர்களை ‘ட்ரீட்’ செய்வது மிகவும் சுலபமாகி விடும். நீங்களும் உங்கள் மனைவியும் உதவினால் மிக நன்றாக இருக்கும்,” என்றார்.

    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

    திங்கட்கிழமை மாலை. ஏற்கெனவே பிளான் செய்திருந்தபடி ஆடலரசும் அமுதாவும் ஏழுமணி அளவில் ஷீலாவின் பங்களாவை அடைந்தனர். போர்டிகோவில் வந்து நின்ற காரைப் பார்த்ததும் ரமணி அம்மாள் வந்து விசாரித்தாள். “ஏழுமணிக்கு மீட் பண்றேன்னு போன் செய்திருந்தாங்க,” என்று பெரிய பொய் ஒன்றைச் சொன்னான் ஆடலரசு.

    உள்ளே மெஸேஜ் கொடுக்கப் போனாள் அம்மாள். முதலில் ஷீலா மறுக்கப் பார்த்தாள். ஆனால் சிறிது யோசித்த பின்பு, வாசலிலேயே வந்து நிற்பவர்களைத் திருப்பி அனுப்புவது நாகரீகம் ஆகாது என்ற வெளிப்பூச்சுக்குக் கட்டுப் பட்டுப் போலியாக வரவழைத்துக் கொண்ட நட்புரிமையுடன், “ஹாய் டாக்டர் ஆடலரசு,” என்றபடி தடாலென்று வரவேற்பறையில் நுழைந்தாள்.

    ஆடலரசு தலை நிமிர்ந்து அவளைப் பார்த்தான். உடலைத் தழுவிய வெள்ளை நிறக் கஃப்தான்- தோளில் புரண்ட, பளபளக்கும் கற்றையான முடி, எடுப்பான நாசி, சுடர்விடும் கண்கள் சற்றே மங்கி இருந்தன. கை, காது, கழுத்து, நெற்றி எல்லாம் வெறுமை. ஒல்லியான உடல்வாகுடன் ஒரு தேவதை போல் நின்றவளின் கோலத்தை மனதில் பதித்துக் கொள்ள முயன்றான். ஆனால் அங்கே ஒரு பதினாறு வயது மங்கையல்லவா தகதகக்கும் பட்டுப் பாவாடை தாவணியில், சாட்டை போன்ற பின்னல் அசைந்தாட, பாதசரங்கள் கிணுகிணுக்க, கைவளைகள் கொஞ்ச, கோவை இதழ்கள் துடிக்க, ஜிமிக்கிகள் கன்னத்தை முத்தமிட்டு ரகசியம் பேச, ‘வேலன் வருவாரோடி, மானோடி வந்ததென நானோடி வந்தேனிங்கு,’ என்று அபிநயம் பிடித்தபடி ஆடிக் கொண்டிருந்தாள்.

    கணங்கள் யுகங்களாகக் கழிந்தன- அமுதா தான் நிசப்தத்தைக் கலைத்தாள். “ஹலோ மேடம், நான் அமுதா ஆடலரசு. இவர் உங்களை ரொம்ப நாள் கழித்துச் சந்தித்ததிலே அப்படியே பேச்சிழந்து போய் விட்டார்,” கல கல வென நகைத்தபடி உரிமையுடன் ஷீலாவின் அருகே சென்று அவள் கரங்களைப் பற்றினாள்.

    ஷீலா, ‘சடக்’கென்று எழுந்த எரிச்சலை உள்ளழுத்தி மூடியவள், “உட்காருங்களேன். ரொம்ப வருஷங்களாயிற்று இல்லையா? உங்கள் குழந்தைகள் எங்கே?” என்று சகஜ பாவத்துடன் உரையாட முயன்றாள். கண்கள் அலைபாய்ந்ததில் இருந்தும், மேல்பூச்சாகத் தோன்றிய பேச்சிலிருந்துமே ஆடலரசு “இவள் ‘நார்மலா’க இல்லை என்று உணர்ந்து கொண்டான். சிறு பறவை போல மனம் இங்கும் அங்கும் தாவுவதை உணர்ந்தான். கண்களின் வெற்று நோக்கும் உயிரற்ற பளபளப்பும் அவனைப் பயமுறுத்தியது. ஏதாவது பேச வாய் திறந்தால் அழுது விடுவோமோ என்று நினைத்தான்.

    அமுதா தான் ஆபத்பாந்தவனாகப் பேச ஆரம்பித்தாள். “திலகாக்கா என் கிட்ட உங்களைப் பற்றி எத்தனை கதைகதையாச் சொல்லியிருக்காங்க- நல்லாப் பாடுவீங்களாம்- டான்ஸ் ஆடுவீங்களாம்- எதுக்கெடுத்தாலும் திலகாக்கா, ‘எங்க சைலஜா மாதிரி ஒரு பொண்ணு இனிமே பிறந்து தான் வரணும். அவளோட கொஞ்ச நாள் நட்பா இருந்ததுக்கே நான் இப்படி மாஞ்சு போறேன்னா, அவ எவ்வளோ உசத்தி என்று பாத்துக்கயேன்,’ என்று சொல்லிகிட்டே இருப்பாங்க

    “பழைய சினேகிதத்தை நம்ப புதுப்பிச்சுக்கணும் மேடம்- நீங்க எங்க வீட்டுக்கு வரணும்,” அமுதாவை ஷீலா இடைமறித்தாள். முதல் முறையாகக் கடினம் நெகிழ்ந்து பூத்த சிறு முறுவலுடன், “முதல்ல நீ என்னை ‘மேடம்’ என்று கூப்பிடாதே. பேரைச் சொல்லிக் கூப்பிடறியா?” என்றாள்.
    “சரி, சைலான்னு கூப்பிடறேன். அப்பத்தான் அந்த நாட்கள் போல இருக்கும். ஏங்க, அது தானே சரி?” கணவனை நோக்கினாள் அமுதா. இறுக்கம் தளர்ந்து வரும் சூழ்நிலையைச் சந்தோஷமாக அனுபவித்தபடி, “ஆமாம் சைலஜா, நாமெல்லாம் பழையபடி சிறுவர்களாகவே ஆகி விடலாமென்று தோன்றுகிறது. எத்தனை கவலையற்ற வாழ்க்கை,” என்றான்.

    ஷீலாவைப் புண்படுத்தாத விதத்தில் நாசுக்காக அவள் கடந்த காலம் பற்றிய கேள்விகளைத் தவிர்த்து, தங்கள் குடும்பம், திலகா குடும்பம், பொழுது போக்கு, இளமைக்காலம் இவை பற்றி ஒரு மணி நேரம் அரட்டை அடித்து விட்டுக் கிளம்பும் போது அமுதா, “சைலா, எங்க குழந்தைகள் மகாபலிபுரம் பார்த்ததே இல்லை. அடுத்த ஞாயிறு போகலாம்னு இருக்கோம். ப்ளீஸ், நீங்களும் வாங்களேன்,” என அழைப்பு விடுத்தாள்.

    கருமேகமென்ற திரை விலகி, கீற்று நிலா எட்டிப் பார்ப்பது போல, அந்த ஒரு சிறு பொழுதில் மனத்தில் இட்டிருந்த தாபத்திரை விலகி, மகிழ்ச்சிக் கீற்று சைலஜாவிடம் நிலாவென எட்டிப் பார்த்தது.

    அவளுடைய பதிலை ஆவலாக எதிபார்த்திருந்தனர் இருவரும். “சரி, வர முயற்சிக்கிறேன்,” என்ற பதிலை நிச்சயம் வருவாள் என்று எடுத்துக் கொண்டு விடை பெற்றனர்.

    ——————————–%—————————————-

    அமுதாவும் ஆடலரசும் ஏன் குழந்தைகள் சுரேஷும் சுமதியும் கூட ஆச்சரியப்பட்டனர். சைலஜாவுடன் இவ்வளவு உற்சாகமாக மகாபலிபுரத்துக்கு வந்து ரசிப்போம் என்று கனவு கூடக் காணவில்லை. கடந்த இனிமையான இளமைப் பருவத்தின் ஒரு நிழல் அது; அதற்காக ஒப்புக் கொண்டாள். தன் மனமும் லேசாகி பஞ்சு போல மேகக் கூட்டங்களிடையே மிதந்தாள்.

    எத்தனை வெளிநாட்டுக்காரர்களை, அவர்கள் பிஸினஸ் நிமித்தம் வரும்போது அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாள். மேல் பூச்சாகக் காட்டி விட்டு அவர்கள் காமிராவை ‘க்ளிக்’ பண்ணி நிரப்பிக் கொள்ளும்வரை காத்திருந்து பிறகு கிளம்பி விடுவாள். இன்று தான் அவளே முதல்முறையாகப் பார்ப்பது போலக் குதூகலம்- உற்சாகம்- போலி முகமூடி தேவையில்லாததால் ஏற்பட்ட விடுதலை உணர்வா அது?

    “இதைப் பார் சுமதி, அதைப் பாரடா சுரேஷ்,” என்று குழந்தைகளிடம் காட்டியபடி தன்னை மறந்து அவள் பாறைச் சிற்பங்களிடையே நடந்தாள். சிற்பங்களின் அழகில் லயித்துத் தன்னை மறந்தபடி நடந்தாள்.

    ஆடலரசும் அமுதாவும் ஒருவரை ஒருவர் நோக்கி மகிழ்வுடன் வெற்றிப் புன்னகை பூத்துக் கொண்டனர்.

    தாகத்துக்கு வெள்ளரிப் பிஞ்சுகளை வாங்கி ‘வெடுக் வெடுக்’ என்று கடித்துச் சாப்பிட்ட போது தான் பழைய ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தாள் சைலஜா. “அமுதா, அப்போ சின்னப் பசங்களா இருக்கிறப்போ, உங்க ஆடலரசு எங்க வீட்டு மாமரத்துல ஏறி உட்கார்ந்து எங்களுக்கெல்லாம் மாங்கா பறிச்சுக் கொடுப்பார். திலகா எப்போதும் சண்டை போடுவா. அவங்க வீட்டு மரம் என்பதாலே சைலாவுக்கு மட்டும் நல்ல பெரிய காய்களா பறிச்சுத் தரேண்ணா என்று கத்துவாள்,’ என்று நகைத்தாள்.

    வாழ்க்கை இனிமையானது தான்- முட்களை மறந்து விட்டு ரோஜாக்களை மட்டும் ரசிக்கக் கற்றுக் கொண்டால், இனிமையானது தான். ஆனால் முட்கள் இருப்பதாலும், அவை குத்தும்போது வலிப்பதாலும் தான் ரோஜாவின் இருப்பும் அதன் மென்மையும் உயர்வாகத் தெரிகின்றன. சும்மாவா சொன்னார்கள்- வெயிலில் திரிபவனுக்குத் தான் நிழலின் அருமை தெரியுமென்று?

    அது போலத் தான் சைலஜாவின் வாழ்க்கை என்னும் வறண்ட பாலைவனத்தில், அதில் அவ்வப்போது அவள் கண்டு ஏமாந்த கானல் நீரில் உணர்ந்த வெறுமை, அமுதா ஆடலரசின் வரவால் திடீரென்று பசுமை நிறைந்ததாக மாறி விட்டது போலிருந்தது.

    இருந்தாலும் கூட ஒரு பெரிய கேள்வி ஷீலாவின் முன்பு விசுவரூபம் எடுத்து நின்றது. குழப்பத்திலும் அலட்சியத்திலும், போலித்தனமாக வாழ்ந்த வாழ்வில் நிறைய ஒட்டடைகள், அழுக்குகள் சேர்ந்து இப்போது அவளுக்கே ஒருவிதமான அருவருப்பை உண்டு பண்ணிக் கொண்டிருந்தன. அவற்றைச் சீர் செய்து சுத்திகரிக்க வேண்டும். தன் பாதையைச் செப்பனிட வேண்டும்.

    ஒரே கல்லும் முள்ளுமாக இருக்கிறதே- எப்படித் தொடர்ந்து நடப்பது? எங்கே போவது? முடிவில்லாத அந்தகாரம் தான் தெரிந்து கொண்டிருந்த பாதையில் இப்போது ஒளி கீற்றாகத் தெரிகின்றது. ஆனாலும் தனியாகத் தொடர்ந்து பயணிக்க, இருட்டில் பயணம் செய்த போது ஏற்படாத பயம், இந்த ஒளியில் ஏன் ஏற்படுகிறது? யார் துணைக்கு வருவார்கள்? ஜிம் வருவானா? இத்தனை நாட்களின் பின்பு வருவானா? வேண்டாம் என்று பிடிவாதமாகப் பிரிந்து வந்த அவளை மதித்து வருவானா?

    இரவின் தனிமை பயமுறுத்துகின்றதே- என் பயணம் இனி எப்படித் தொடரும்? எங்கே தொடரும்? யாருடன் தொடரும்? சிந்தனை வலையிலகப்பட்டு உள்ளம் பதற, மனது பரிதவிக்கும் போது வெட்கமே இன்றி ‘சூப்பர் உமன்’ ஷீலா அழுதழுது தலையணையை இரவெல்லாம் நனைத்தாள். அழுது களைத்து உறங்கினாள்.

    இது யார் ஜிம்மின் அருகே ஒரு பெண்? அவனுடைய இரண்டாவது மனைவியாகத்தான் இருக்க வேண்டும். ஷீலாவின் நெஞ்சை அடைத்தது. அவள் எல்லாம் இழந்து நிற்கும் போது தானா ஜிம் இப்படி அவள் முன்பு தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்?
    உறக்கத்திலேயே விம்மி விம்மி, கண்ணைத் திறந்து விழிப்புக் கொடுத்த போது அது கனவு தான் என்று தெரிந்ததில் பெரும் நிம்மதி ஏற்பட்டது. அப்படி ஏற்பட்ட நிம்மதி அவளுக்கே ஆச்சரியத்தை விளைவித்தது.

    (தொடரும்)

    மறு பகிர்வு: தாரகை இணைய இதழ்

    ^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*^*

    Share
  • மாயவனே கொட்டாய் சப்பாணி!

    மீனாட்சி பாலகணேஷ்

    யசோதை மிகவும் களைத்துப் போயிருந்தாள். பொழுது புலரும் முன்பே எழுந்து, இரவு தோய்த்து வைத்திருந்த தயிர்ப்பானைகளைக் கொண்டுவந்து வைத்துக்கொண்டு, அவற்றினைக் கடைந்து வெண்ணையெடுத்து, சிலவற்றைத் தயிராகவே வைத்து, சட்டிகளில் மோரை ஊற்றி, உறிகளில் கட்டி, கள்ளச்சிறார்களின் கைக்கெட்டாதபடி உறிகளை உயரே ஏற்றிக்கட்டி……. பொழுது போனதே தெரியவில்லை.

    ame
    குழந்தை கிருஷ்ணன் இவள் தயிர் கடையும்போது பக்கத்தில் தான் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தான். சின்னதாக ஒரு வெண்ணெய் உருண்டையைக்கூட அவனுடைய குட்டிக்கையில் கொடுத்தாளே! அரைநொடியில் அதைத்தின்றும் விட்டான் குழந்தை! இன்னும் கேட்டான். இவளுக்குத்தான் பயம். இத்துணை சிறிய குழந்தை வெண்ணெயாகத் தின்றுகொண்டே இருந்தால் வயிறு என்னாகும் என்று பயந்தாள். அவனும் சிறிது நேரம் அவளுடைய முகத்தையே நோக்கியபடி இருந்துவிட்டு, எங்கோ தவழ்ந்து சென்றுவிட்டான்.

    அன்று இப்படித்தான், எங்கேயாவது போய்விடுகிறான்; சட்டிபானைகளை உருட்டி விஷமம் செய்கிறான் என்று அவனை உரலில் கட்டிப்போட்டிருந்தாள். அவனோ அந்த உரலையும் இழுத்துக்கொண்டுபோய் இரண்டு மருதமரங்களுக்கிடையே புகமுடியாமல் புகுந்து, இழுத்துச் சாய்த்து…….. அந்த நினைப்பில் “கண்ணா!” என்று நெட்டுயிர்த்தாள் அந்த அன்னை.

    அந்தக் குட்டனைத்தான் இப்போது எங்கே எனத் தேடினாள்.

    அதோ! ‘சல், சல்,’ எனக் காற்சதங்கைகளும், அரையில் கட்டியுள்ள மாணிக்கச் சதங்கையும் ஒலிக்க வருகிறான் கிருஷ்ணன். ஆணிப்பொன் சதங்கை ஒன்று இடையில்… நேற்றுதான் தந்தை நந்தகோபன் அதனைப் புதியதாக தனது அருமைக் குழந்தைக்கு செய்து அணிவித்திருக்கிறான்.

    என்னவொரு காட்சி, தாயான யசோதையின் கண்களையும் கருத்தையும் குழந்தையின் அழகுவடிவம் நிறைக்கிறது. குழந்தைக்கும் அம்மாவைப் பார்த்துவிட்ட ஆனந்தம், தலையை நிமிர்த்தி, வாயில் முத்துப்போன்ற பற்கள் பளிச்சிடப் புன்னகை புரிகிறான். அவனை அள்ளியணைக்கக் கைகளை அவன்பால் நீட்டுகிறாள். பிஞ்சுக்கைகளை இணைத்துக் கொட்டுகிறான் கிருஷ்ணன். தலையை மகிழ்ச்சியில் அப்படியும் இப்படியும் அசைக்கும்போது சுருண்ட கரிய குழல்கற்றைகள் புரண்டாடுகின்றன. தாயின் மனம் பாகாய் உருகி வழிகிறது…

    ame2
    நாம் கவிதையில் ரசிக்கும் இந்தக் கண்கொள்ளக் காட்சியை, பெரியாழ்வார் மனக்கண்ணில் கண்டு சிலிர்க்கிறார். “கண்ணா! அன்று (பண்டு) மகாபலியிடமிருந்து மூன்று அடி நிலத்தை தானமாகப் (காணி) பெற்றுக் கொண்ட உன்னுடைய சின்னஞ்சிறு கைகளால் சப்பாணி கொட்டுவாய்!” என வேண்டுகிறார். யசோதைக்குத் தன் குட்டன் அந்தப் பரந்தாமனே என்பதை உணர முடியாது. அவன் அவளுடைய கண்மணியான சிறுகுழந்தை. அவள் ரசிப்பதனை ஆழ்வார் தமது நோக்கில் தாமும் இறையனுபவமாகக் கொண்டு ரசிக்கிறார்; போற்றுகிறார்; பாடி மகிழ்கிறார்.

    இதுவே இறைவனைக் குழந்தையாகக் கொண்டாடும் அடியாருள்ளம்!

    வாழ்த்திப்போற்றும் வைபவம்!

    அன்பில் பொங்கிப்பெருகும் பக்திப்பிரவாகம்!

    பிள்ளைத்தமிழுக்கு அடிகோலிட்ட அழகிய பாசுரம்!

    இதுவே பெரியாழ்வார் திருமொழி காட்டும் கிருஷ்ணனின் சப்பாணிப்பருவம். குழந்தை கிருஷ்ணனின் விளையாட்டுகளை எல்லாம் பட்டியலிட்டுப் பாடிய பாசுரங்களே பெரியாழ்வார் திருமொழி!

    பிள்ளைத்தமிழ் எனும் அற்புதமான ஒரு சிற்றிலக்கியத்தின் முன்னோடி!

    மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப, மருங்கின்மேல்
    ஆணிப்பொன்னால் செய்த ஆய்ப்பொன் உடைமணி
    பேணிப் பவள்வாய் முத்திலங்கப் பண்டு,
    காணிகொண்ட கைகளால் சப்பாணி,
    கருங்குழல் குட்டனே! சப்பாணி.
    (பெரியாழ்வார் திருமொழி-75- திவ்வியப்பிரபந்தம்)

    *****

    காட்சி மாறுகிறது!

    நிலாமுற்றத்தில் நந்தகோபனும் யசோதையும் அமர்ந்துகொண்டு குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். வானில் முழுநிலா பளீரிடுகிறது. குழந்தை கிருஷ்ணன் தாயின் மடியிலமர்ந்து கைகளைக் சேர்த்து சப்பாணி கொட்டுகிறான். அவனை மெல்லத் தன் மடியினின்றும் எழுப்பி, எதிரே அமர்ந்துள்ள நந்தகோபனின் மடியில் உட்கார அனுப்புகிறாள் யசோதை. அவன் அணிந்துள்ள மாணிக்கக் கிண்கிணியும் அரைநாணும் அசைந்தாடுகின்றது ஒரு அழகாக உள்ளது; தத்தித் தத்தி நடக்கும்போது நெற்றிச்சுட்டி தாழ்ந்தாடுவது இன்னொரு அழகாக உள்ளது. யசோதையின் தாயுள்ளம் பெருமிதத்தில் விம்முகிறது.

    “உன் தந்தையின் மடிமீது சென்று ஏறி அமர்ந்துகொண்டு சப்பாணி கொட்டு குழந்தாய்!” என ஆசைபொங்க குழந்தையிடம் வேண்டுகிறாள் அவள்.

    “……………………..உங்கள் ஆயர்தம்
    மன்அரைமேல் கொட்டாய் சப்பாணி!

    மாயவனே கொட்டாய் சப்பாணி,” என்பன பாசுர வரிகள்.

    தன் மடியில் வந்தமர்ந்து மழலைபேசி, சப்பாணி கொட்டி மகிழும் குழந்தையை உச்சிமுகர்ந்து, கட்டியணைத்து மகிழும் நந்தகோபன் குழந்தையை ஆசைபொங்கப் பார்த்து ரசிக்கிறான். காதணிகள் ஒளிவீசிப் பிரகாசிக்கின்றன. அதற்கும் மேலே முல்லையரும்புப் பற்கள் முத்துப்போல ஒளிவீசிப் பளீரிடுகின்றன. இப்போது அவன் கிருஷ்ணனை யசோதையின் மடியிலிருத்தி அழகுபார்க்க ஆசைப்படுகிறான்.

    எப்போதுமே குழந்தையை அணைத்து, உச்சிமுகர்ந்து, முத்தமிட்டு மகிழும் தாயோ தந்தையோ, அக்குழந்தையைத் தாய் அல்லது தந்தையின் மடிமீதிருத்தி, அது செய்யும் குறும்புகளை ரசித்து அழகுபார்க்கவும் விரும்புவர். அதனால்தான் இப்போது நந்தகோபன், “உன் அம்மையின் மடிமீதமர்ந்து சப்பாணி கொட்டாய்,” என வேண்டுகிறான் போலுள்ளது.

    ‘நின்மணி வாய்முத்து இலங்க,நின் அம்மைதன்
    அம்மணி மேல்கொட்டாய் சப்பாணி
    ஆழியங் கையனே! சப்பாணி.’ என்பன பெரியாழ்வார் திருமொழி வரிகள்.

    வானில் நிலவெழுந்து இப்போது உலா வருகின்றது. பால்போன்ற முழுநிலா. “வானத்து அம்புலியைப்பார் கண்ணா! உனக்குப் பால்சோறு தரும் வெள்ளித்தட்டு போல இல்லையா?” எனக்கூறுகிறாள் யசோதை. குழந்தைக்கு அது அஃறிணைப்பொருளல்ல. தனது விளையாட்டுத் தோழன். “அம்புலி மாமா! என்னோடு விளையாட இங்கே வா,” எனப் பிஞ்சுக்கையை ஆட்டி ஆட்டி அழைக்கிறான் கிருஷ்ணன்.

    “யசோதை நங்காய்! இதனைப்பார்! உன்மகன் செய்யும் குறும்புகளைப்பாராய்!. அவன் தன்னோடு விளையாட அம்புலியை அழைக்கிறான் பார்,” எனக்கூறி, குழந்தையின் சமர்த்தைக் கண்டு அவனை அணைத்துக் கொண்டு கொஞ்சி மகிழ்கிறான் நந்தகோபன். கைகளைக் கொட்டியவண்ணம் ‘கலகல’வெனச் சிரிக்கிறான் கண்ணன்.

    பாசுரத்தைப் பாடும் நாம் புளகம்கொண்டு மகிழ்கிறோம். தம் மனக்கண்ணில் கிருஷ்ணனின் இவ்விளையாட்டுகளைக்காணும் பேரருள் பெற்றவரல்லவோ பெரியாழ்வார்?

    ‘தூநிலா முற்றத்தே போந்து விளையாட
    வான்நிலா அம்புலி சந்திரா! வாஎன்று
    நீநிலா, நின்புகழா நின்ற ஆயர்தம்
    கோநிலாவு, கொட்டாய் சப்பாணி,
    குடந்தைக் கிடந்தானே சப்பாணி,’ என்பன புல்லரிக்கவைக்கும் பாசுர வரிகள்.

    வளரும் சிறுகுழந்தை ஒவ்வொரு விளையாட்டாகப் பயின்று, கை, கால் முதலியவற்றை அசைத்துச் செய்யும் செயல்களால் நம்மை மகிழ்விக்கிறது. இந்தச் செயல்களை வரிசைப்படுத்திப் பாடுவதே பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியம். சப்பாணிப்பாருவத்தில் கைகளை மட்டுமே கொட்டவேண்டுமென்பதில்லை. தவழுதல், தளர்நடை நடத்தல் ஆகிய பிற செயல்களையும் செய்யும். தாயும் சப்பாணிகொட்டும் குழந்தைக்கு அம்புலிமாமாவை ஒரு விளையாட்டுத் தோழனாகப் பரிச்சயப்படுத்தி வைப்பாள். ஆகவே அம்புலிப்பருவமும், சப்பாணிப்பருவமும் இணைந்ததொரு பாடலை இங்கு நாம் கண்டு மகிழ இயன்றது.

    பல பிள்ளைத்தமிழ் நூல்களிலும் இவ்வாறே பாடல்களைக் காணலாம்.

    சப்பாணிப்பருவத்தைப் பாடும்போது புலவர்களுக்குக் குழந்தையின் கைகள் பாடுபொருளாகின்றன. அச்சிறுகைகள் இறைவன் கைகளாகச் செய்த பெருஞ்செயல்களை எல்லாம் கூறிப் பாடிப் போற்றுவது அடியார் வழக்கம். பெரியாழ்வாரும் ஒரு பாடலில் தன் சிறுகுட்டனின் கைகள் பஞ்சபாண்டவர்களுக்குத் தேரோட்டிய பெருமையைப் பாடிப்பரவுகிறார்.

    ame1
    நூற்றுவரான கௌரவர்கள் இந்த உலகம் முழுவதனையும் தாமே அரசாளப் பேராசை கொண்டனர். உலகிற்கே தந்தையானவர் திருமால்; அவர் சொற்பேச்சினைக் கேட்காமல் பஞ்சபாண்டவர்கள் மீது போர் தொடுத்தனர் நூற்றுவர். அவர்கள் அனைவரும் மாண்டுபோகும்படிச் செய்து தனது கைகளால் குதிரையின் கடிவாளங்களைப் பற்றி அர்ச்சுனனுக்குத் தேரோட்டியவன் கண்ணன். அத்தகைய கைகளால் சப்பாணி கொட்டுவாயாக என வேண்டுகிறார். ‘இந்த உலகத்து நிகழ்வுகள் அனைத்துமே இறைவன் திருவுள்ளப்படி நடக்கும்,’ அல்லவா? அதன்போலவே உலகத்தோருக்கு நீதியையும் அறத்தையும் விளக்க எழுந்ததே மகாபாரதம் எனும் இதிகாசம். அது காட்டும் செயல்களனைத்துமே கிருஷ்ணனால் நிகழ்த்தப்பட்டது என்பது அடியவர் கருத்து.

    ‘தாரித்து நூற்றுவர் தந்தைசொற் கொள்ளாது
    போருய்த்து வந்து புகுந்தவர் மண்ணாளப்
    பாரித்த மன்னர்படப் பஞ்சவர்க்கு அன்று
    தேருய்த்த கைகளால் சப்பாணி
    தேவகி சிங்கமே! சப்பாணி,’ என்பன பாசுர வரிகள்.

    இதன் கடைசிவரி மிக்க நயமும் பொருளும் வாய்ந்தது. ‘தேவகி சிங்கமே,’ என்கிறார். யசோதையும் நந்தகோபனும் கண்டுகளிக்கச் சப்பாணிகொட்டிய கிருஷ்ணன் உண்மையில் தேவகியின் வயிற்றுப் பிறந்த குழந்தை. சந்தர்ப்பவசத்தால் யசோதையிடம் வளர்கிறான். அவளையும் மறக்காமல், ‘தேவகியின் மகனான சிங்கமே!’ எனப் போற்றிப் பாடுகிறார் பெரியாழ்வார்.

    இதுபோலும் எத்துணையோ நயங்கள்! இன்னும் கண்டு களிப்போம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ************

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி- 10

    மீனாட்சி பாலகணேஷ்

    மறுபகிர்வு: தாரகை இணைய இதழ்

    குழந்தையே ஆடு மரக்கிளையின் உச்சியில்
    காற்றடிக்கும் போது தொட்டில் நன்றாக ஆடும்
    மரக்கிளை உடைந்தால் தொட்டில் விழுந்து விடும்
    தொட்டிலும் குழந்தையும் எல்லாமும் கீழே வந்து விடும்-
    (நர்ஸரி ரைம்!)
    ^^^^^^^^^^^^^^^^^

    குழந்தை கீதா தன் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். பக்கத்தில் அமர்ந்து தான் படிக்கும் நாவலில் ஒரு கண்ணும், குழந்தை மேல் ஒரு கண்ணுமாக இருந்த ஷீலாவின் காதில் கீதாவுக்காகப் பாடிக் கொண்டு இருந்த காஸட்டில் இருந்து மேற்கண்ட ஆங்கில நர்ஸரி ரைம் பாடல் ஒலிப்பது விழுந்தது. நர்சரி ரைம்கள் எல்லாமே முக்கால்வாசி இந்த மாதிரி ஏன் அபத்தக் களஞ்சியங்களாக உள்ளன என்று எண்ணிக் கொண்டாள். முன் தலையிலும் லேசாகத் தட்டிக் கொண்டு, ‘அபத்தம்,’ என முனகினாள்.

    எதையோ எழுதிக் கொண்டிருந்த ஜிம் ‘கட கட’வென்று அவளைப் பார்த்துச் சிரித்தான். “ஷீலா டியர், அந்தக் காஸட்டை நிறுத்தி விட்டு நீ தான் நம் கண்மணிக்காக ஒரு இந்தியப் பாட்டுப் பாடேன்,” என்றான்.

    “ஆடாது அசங்காது வா கண்ணா,” என்று பாட ஆரம்பித்தாள் ஷீலா. கீதாக்குட்டி அம்மாவை வியப்புடன் நோக்கியபடி இருந்தவள், பாட்டு முடிந்ததும் ஜிம்மை முந்திக் கொண்டு ஒடோடி வந்து அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அழுத்தமாக ஒரு முத்தத்தைக் கன்னத்தில் பதித்தாள். ஜிம் இருவரையும் ஒருசேர அணைத்துக் கொண்டான். ஷீலாவின் உடல் சிலிர்த்து அடங்கியது. குழந்தையை அணைத்தபடி ஜிம்மை நோக்கிப் பொங்கிப் பிரவகிக்கும் காதலுடன் புன்னகைத்தாள்.

    இவர்களுடைய இல்வாழ்வு ஒரு தெளிந்த நீரோடை போல சலனமற்று அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. பிறந்த குழந்தைக்குக் கூட இந்தியப் பெயராக வைக்க வேண்டும், அதற்கு ஒரு பொருளும் இருக்க வேண்டும் என ஜிம் விரும்பியதன் பயனாக, பெண் குழந்தைக்கு கீதாஞ்சலி என்று பெயரிட்டார்கள். இப்போது கீதாவுக்கு இரண்டு வயது நிரம்பி விட்டது.

    இந்த இனிய நீரோடையில் கல்லெறிந்து சலனப் படுத்தவே சீனு திரும்பவும் இவர்கள் வாழ்வில் குறுக்கிட்டானோ?

    இந்தியா சென்றவன், மாமா வெங்கடேசனைச் சந்தித்து, சைலஜாவைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் அறிந்து கொண்டவன், திரும்பி வந்ததும் முதலில் அவளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.

    “லிஸா, குழந்தைகளுடன் இந்த ஈஸ்டர் வாரக் கடைசியில் சிகாகோ வரப் போகிறேன். உனக்கு சௌகரியம் ஆனால் உன்னையும் ஜிம்மையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன்,” மேல் பூச்சாக இனிமையும் பணிவும் அப்பிய பேச்சு! மறுப்புச் சொல்லத் தெரியவில்லை. தெரியாமல் அல்ல- முடியவில்லை. ஏனென்றால் ஜிம்மிற்கு ஷீலா தன் உறவினர்களைச் சந்திப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. வாழ்க்கை என்பது இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, மரங்கள் கிளைகளும் வேர்களும் விழுதுகளுமாகப் படர்ந்து அடர்ந்திருப்பது போல, மனித வாழ்வும் உறவு, நட்புக் கிளைகளால் தான் பலப்பட்டு நிற்கின்றதென்பதி ல் அவனுக்கு அசையாத நம்பிக்கை இருந்தது.

    முதல் சந்திப்பு இரு குடும்பங்களுக்குமிடையே ஒரு சம்பிரதாயமான சந்திப்பாக இருந்தது. சீனுவின் இரு பெண் குழந்தைகளும் அமெரிக்க பாணியிலேயே வளர்க்கப் பட்டவர்கள்.

    “மெட்ராஸ் ரொம்ப ஹாட். மகாபலிபுரம் இஸ் நைஸ். எனக்கு அந்த பீச் ரொம்பப் பிடித்தது,” இந்த ரீதியில் தான் லிஸா பேசினாள். பெண்கள் இருவரும் குழந்தை கீதாவுடன் ஒட்டவே இல்லை.

    சீனுவும், “ஹாய் ஷீலா, ஜிம், நீங்கள் இரண்டு பேரும் நியூயார்க்கில் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும். இப்போது ஸம்மர் வருகிறது. நன்றாக இருக்கும்,” என நுனிநாக்கு ஆங்கிலத்தில் அமெரிக்க உச்சரிப்பில் கூறியது மிகவும் செயற்கையாகப் பட்டது.

    ஜிம் இவர்களை சட்டென்று எடை போட்டு விட்டான். ஷீலாவின் மனதைப் புண்படுத்த வேண்டாம் என்று சிறிது கூடத் தனது வெறுப்பை வெளியிடாமல் சுமுகமாகப் பழகினான்.

    அடுத்த முறை சீனு வந்தது ஏதோ மெடிக்கல் கான்ஃபரன்ஸ் என்று- “லிஸாவிற்கு ஹாஸ்பிடலில் ரொம்பவும் பிஸியாக இருக்கிறது. அதனால் வர முடியவில்ல,” என்றான்.
    ஷீலா பண்ணியிருந்த பீன்ஸ் பொரியலையும் வெங்காய வற்றல் குழம்பையும் வக்கணையாக ஒரு கை பார்த்து விட்டு, “நான் சாதாரணமாக அமெரிக்கன் டைப் உணவு தான் சாப்பிடுவது. ஷீலா, எனக்கு ரொம்ப ஆச்சரியமக இருக்கிறது. யூ ஹாவ் நாட் கிராஜுவேட்டட் டு அமெரிக்கன் டைப் ஆஃப் லிவிங்- (அமெரிக்க பாணியில் வாழ நீ இன்னும் பழகிக் கொள்ளவில்லை). அமெரிக்கனைத் திருமணம் மட்டும் செய்து கொண்டிருக்கிறாய்,” எனச் சிறிது உரிமை எடுத்துக் கொண்டு கிண்டல் செய்யும் வரை வந்து விட்டான்.

    ‘அற்பத்துக்கு யோகம் வந்தால் அர்த்த ராத்திரி குடையோ?’ என மனதிற்குள் எண்ணிக் கொண்டாள் ஷீலா. “ஜிம்மிற்கு இந்திய உணவு, கலாச்சாரம் எல்லாவற்றிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு,”என்று கூறினாள்.

    மூன்றாம் முறை சீனு வந்த போது ஜிம் ஏதோ ஒரு கான்ஃபரன்ஸுக்காக பாரிஸ் சென்றிருந்தான். பெட்டியோடு வந்து நின்ற சீனு, “சொந்தக்காரி நீ இருக்கும்போது நான் ஏன் ஹோட்டலில் தங்க வேண்டும்? இங்கேயே இரண்டு நாள் இருக்கிறேனே,” என்று ரொம்ப உரிமை எடுத்துக் கொண்டு கூறிய போது, “போடா வெளியே. எனக்கு உன்னுடைய நட்பே தேவையில்லை,” என்று வாசற் கதவில் இருந்து பிடித்துத் தள்ளவா முடியும்? ‘தொலைந்து போ,’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு அனுமதித்தாள் ஷிவா. கண்ணியமாகத் தான் நடந்து கொண்டான் சீனு. ஆனால் அவன் பேச்சு தான் கண்ணியத்தின் எல்லையைப் பலமுறை கடந்து அவளைப் பொறுமை இழக்க வைத்தது.

    “இந்தியனான என்னை மணந்து கொண்ட பிறகும் கூட இத்தனை வருஷங்களில் ஒரு முறையாவது லிஸா புடைவை அணிய ஆசைப் பட்டதில்லை. நீ என்னடாவென்றால் புடைவையில் மாமி வேஷம் போடுகிறாய். வெஸ்டெர்ன் மாடர்ன் ட்ரெஸ்ஸில் உன் ஃபிகர் எத்தனை நன்றாக இருக்கும் தெரியுமா?” என்றபோது, கோபத்தில் முகம் சிவக்க, “சீனு, எனக்கு இந்த மாதிரிப் பேச்சுகள், அவை புகழுரைகளே ஆயினும், ரசிப்பதில்லை,” என்று முகத்திலடிப்பது போலக் கூறினாள்.

    மாலை டின்னர் தயாரிக்கும் பொழுது, “நீ ஏன் ரசம், சாதம், சப்பாத்தி என்று பண்ணிக் கொண்டு கஷ்டப்படுகிறாய்? உன் மடிசஞ்சி அமெரிக்க அகமுடையான் தான் ஊரிலில்லையே. வாயேன், போய் ஹாம்பர்கர் சாப்பிட்டு விட்டு வரலாமே,” என்றான்.
    “நான் ஜிம்மிற்காகவோ, ஜிம் எனக்காகவோ எங்களை ஒன்றும் மற்றிக் கொள்ள முயலவேயில்லை சீனு. நாங்கள் இயற்கையாக எங்கள் சுபாவப்படி இருக்கிறோம். நீ உன்னுடைய கண்ணியமான பேச்சின் எல்லைகளை மிகவும் மீறுகிறாய். என்னைக் கோபப்படுத்தாதே,” என்றாள் ஷீலா.

    சுரணையில்லாமல் “மன்னித்துக் கொள் ஷீலா,” என்றான். மனத்திற்குள் அவளை உயர்வாக ஒரு பீடத்தில் அல்லவோ அமர்த்தியிருந்தான். அதன் காரணமாகத் தானே அவளிடமிருந்து பயந்து ஓடினான். இன்னும் அந்தத் தாழ்வு மனப்பான்மையில் இருந்து அவன் விடுபடவில்லையே! அதன் வெளிப்பாடுகள் அல்லவோ இந்தப் போலி வேஷங்களும், அலட்டல் பேச்சுகளும்! தான் அமெரிக்கப் பெண்ணை மணந்து கொண்டு இங்கேயே செட்டில் ஆகி விட்டதை வாழ்வில் ஒரு சாதனையாகக் கருதி இறுமாந்திருந்தான்.

    இதென்னடாவென்றால் இவளும் அல்லவோ ஒரு அமெரிக்கப் பேராசிரியரை மணந்து கொண்டு இருக்கிறாள். போதாக் குறைக்கு, தன் இந்தியக் கலாச்சாரத்திலிருந்து இவளுக்கு அதிகம் ஒன்றும் மாற வேண்டியிருக்கவில்லையே. இப்படி ஒரு போட்டி மனப்பான்மையில் சீனுவின் உள்ளத்தில் ஆத்திரம் பிறந்து வளர்ந்து வந்தது. “இவளை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும்,” என்று நினைத்துக் கறுவிக் கொண்டான்.

    கரைப்பார் கரைத்தால் கல்லும் தான் கரையுமே, ஷீலாவின் மனது மென்மையானது தானே- சீனுவைப் போன்ற வெற்றுப் பேச்சாளன் வாய்ச்சவடால் அடித்தே அவள் மனத்தில் ஒரு பெரும் புயலை உருவாக்கினான்.

    எத்தனையோ முறைகள் ஷீலாவின் வீட்டிற்கு வந்து போனான். ஒரு முறை சொன்னான், “தத்துவமும் வேதாந்தமும் பேசிக் கொண்டே வாழ்நாளைக் கழிக்கத் தான் நீ அமெரிக்கா வந்தியா ஷீலா? இந்த நாட்டில் ரசிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் எத்தனையோ இருக்கிறது. இங்கே ஒரு சுதந்திரப் பறவையாகப் பறப்பதற்கு இயலும். தளைகளை உடைத்தெறிய முடியும்….’புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை,’ என்ற பாட்டை நீ கேட்டிருக்கிறாயா?”

    ஒருநாள் லேசான மதுவின் போதையுடன் இத்தகைய ஒரு வாக்குவாதத்தை ஷீலாவுடன் ஆரம்பித்தான். ஷீலாவுக்கு ஒருநாள் ‘சேஞ்ச்’ ஆக இருக்கட்டுமே என்று ஜிம் சமையல் பொறுப்பை ஏற்றுக் கொண்டு புத்தகத்தைப் பார்த்துப் பார்த்து தனக்குத் தெரிந்த இந்தியச் சமையலைத் தயார் செய்து கொண்டிருந்தான்.

    மூன்று வயது கீதா ஜிம்மின் அருகில் ஒரு குட்டி நாற்காலியில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தது.

    “யாரைப் பற்றி இப்போது அந்தப் பாட்டை உவமை கூறுகிறாய்?’ என்று ஏளனமாக ஷீலா கேட்டதும், அடித் தொண்டையில் பேசினான் சீனு.

    “உன்னைப் பற்றித் தான் ஷீலா. பெருமைப் பட்டுக் கொள்ளாதே. உன் புத்தியும் அறிவுக் கூர்மையும் நீ விரும்பிய மெடிக்கல் காலேஜ் அட்மிஷனை உனக்கு வாங்கித் தந்ததா? இல்லையே- உன் பாட்டும் நடனமும் எல்லாம் நீ கலைவானில் ஒரு தாரகை என நிரூபிக்க உதவியதா? இல்லையே- இங்கே வந்து ஏதோ அமெரிக்கன் புரஃபஸருக்கு சாம்பாரும் இட்லியும் பண்ணிப் போட்டுக் கொண்டு நீ உன்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய். நீ எங்கே? உன் தனித்துவம் எங்கே? நான் உன்னிடம் கண்டு பயந்து ஓடிய சுடர் விடும் உன் புத்திசாலித் தனம் எங்கே?

    “உன் முன்பு நான் ஒரு சராசரி ஆள் தான் என்று எண்ணி உன்னை நிராகரித்தேன். இந்த இதயத்துள் நீ உயர்ந்த ஒரு இடத்தில் இருந்தாய். உன்னை நிமிர்ந்து பார்க்கவே எனக்குக் கூசும். ஆனால் என் தேவதை வெறும் மண்பொம்மை தான் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது.

    “தளைகளை உடைத்தெறி. சிறகுகளை விரித்துச் சுதந்திரமாக வானில் பறக்கக் கற்றுக் கொள்- நான் சொல்லித்………….”

    “சீனு, ஷட் அப்,” வீறிட்ட ஷீலாவின் குரலைத் தொடர்ந்து, கண்ணாடித் தம்ளர் ஒன்று விசிறியடிக்கப் பட்டு ஆரஞ்சு ஜூஸுடன் உடைந்து கார்ப்பெட்டில் வழிந்தது. ஜிம் கிச்சனில் இருந்து ஓடி வந்தான்.

    ஷீலாவின் உடல் ஹிஸ்டீரியா வந்தது போல ‘கிடு கிடு’வென்று நடுங்கிக் கொண்டிருந்தது. கண்களில் வெறுப்பும் வெறியும் தெரிந்தன. “கெட் அவுட் ஆஃப் மை ஹவுஸ், நௌ,” தடுமாறியபடி கைகளை ஆட்டிக் கொண்டு சீனுவை நோக்கிக் கத்தினாள். ஒன்றும் புரியாமல் நின்ற ஜிம்மிடம் சீனு ஏதோ விளக்கிக் கூற முற்பட்டான்.

    “ஷீலா, அமைதியாக இரு,” என்று அவளை அணைத்துக் கொண்டான் ஜிம். “கெட் ரிட் ஆஃப் ஹிம்,” என்று திரும்பவும் கத்தினாள் ஷீலா.

    “சீனு, தயவு செய்து நீ இப்போது இங்கிருந்து போய் விடு. அவள் மிகவும் ‘அப்ஸெட்’ ஆகி இருக்கிறாள். பிறகு பார்க்கலாம்,” அன்று அவனை வெளியே அனுப்பிய ஜிம், ஷீலாவை அமைதிப் படுத்த முயன்றான்.

    மனத்தின் நிலவறையில் இட்டு மூடி வைத்த புண்களைக் குரூரமாகக் கிளறி விட்டதால் அத்தனை ஊமை வலியும், எரிமலை போல் பொங்கி வழிந்து, ஆத்திரமும் வெறியுமாக மாறி ஷீலாவின் மென்மையான மனம் பாதிக்கப் பட்டிருந்தது.

    “ஜிம், நான் குழப்பத்தில் இருக்கிறேன். தலை சுற்றுகிறது. என்னை அணைத்துக் கொள்ளேன். யாரும் என்னை உன்னிடமிருந்து பிரிக்க முடியாதவாறு இறுகக் கட்டிக் கொள்ளேன்,” என்று பரிதாபமாக இறைஞ்சியபடி மயங்கிச் சாய்ந்தாள்.

    பயந்தபடி மூலையில் நின்று பார்த்துக் கொண்டிருந்த குழந்தை கீதாவை ஒரு கையில் பிடித்தபடி, “அம்மாவுக்குத் தலைவலி டார்லிங். டாக்டரைக் கூப்பிட்டுக் காட்டலாமா?” என்றபடி சமாதானம் செய்து, ஷீலாவின் மயக்கத்தைத் தெளிவித்து, குழந்தையை அணைத்தது போல் அவள் பக்கத்தில் உட்கார்த்தி வைத்து விட்டு டாக்டருக்குப் ஃபோன் செய்தான் ஜிம்.

    ஜிம் எதிர்பார்த்த்து போல அது அவ்வளவு சாதாரணமான மயக்கமாக டாக்டருக்குத் தெரியவில்லை. எல்லாவற்றையும் விவரமாக ‘டிஸ்கஸ்’ செய்தவர், மனோதத்துவ நிபுணர் மற்றும் நரம்பியல் சம்பந்தமான டாக்டர்களையும் பார்க்கச் சொன்னார்.

    அத்தனை மருத்துவ ஆலோசனைகளுக்குப் பின் என்னவெல்லாமோ முழநீளப் பெயரைச் சொன்னார் நியூரோ ஸ்பெஷலிஸ்ட். மனோதத்துவ நிபுணர் தம் பங்குக்கு இன்னும் சிலவற்றையும் பட்டியலில் சேர்த்து, ‘ஷீலாவுக்குத் தேவை மன அமைதி. பழைய சலனம் தரும் எண்ணங்களைக் கிளறக் கூடாது,’ என்று கூறி எச்சரித்திருந்தார்கள். ‘தேவையானால் மருந்து தரலாம். இப்போது கொஞ்சம் ‘டிப்ரஷன்’ என்று மனம் நொந்து போயிருக்கும் நிலையில் இருக்கிறாள். ஆதரவாகப் பார்த்துக் கொள்ளுங்கள்,” என்றனர்.

    ஷீலாவின் பாட்டும் பேச்சும் குறைந்து போயின. ஒரு பொம்மை போல, குழந்தையின் தேவைகளைக் கவனித்தாள். அடிக்கடி ஒரு வெறுமை நிறைந்த பார்வை.

    ஜிம்மின் இதயம் துயரத்தில் கசிந்தது. வெங்கடேசனுக்கு ஒரு மாதிரியாக விவரம் தெரிவித்திருந்தான்.

    ஒருநாள் ஜிம் வேலைக்குச் சென்றிருந்த போது சீனு ஃபோன் செய்து பேச முயன்றிருக்கிறான். அவன் குரலைக் கேட்டதுமே கோபத்தில் வெறிபிடித்தது போல் ஷீலா ஃபோனைத் தூக்கி எறிந்து உடைத்திருக்கிறாள். ஜிம் வீடு வந்ததும் மோட்டுவளையை வெறித்தபடி அமர்ந்திருந்தவள், அழுதாள், சிரித்தாள், அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள். திடீரென்று குழந்தை மீது முத்தமாரி பொழிந்தாள்.
    ஜிம்மின் நிலை பரிதாபகரமானது. குழந்தையை பேபி ஸிட்டரிடம் விட்டு விட்டு, ஷீலாவை மருத்துவமனையில் சேர்த்தான்.

    மருந்தும், ஓய்வுமாக நாட்கள் ஓடின. கிட்டத்தட்ட இரு மாதங்கள் கழிந்த பின்னரே, கொஞ்சம் கொஞ்சமாக சாதாரண நிலைக்குத் திரும்பினாள் ஷீலா.

    *********************************

    ஷீலா இப்போதெல்லாம் மிகவும் சிந்தனைக்கு உட்பட்டாள். மணிக்கணக்காக எதையோ யோசித்து மூளையைக் குடைந்து கொண்டிருந்தாள்.

    ஒரு வெள்ளிக்கிழமை மாலை- வார இறுதி ஆரம்பம் என எல்லாருமே உற்சாகமாக இருந்தனர்.

    “ஜிம், உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்,” என்றாள். ஜிம் வெளியே எட்டிப் பார்த்தான். குழந்தை கீதா பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் மணல் நிறைந்த தொட்டியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தைகளின் தாய் ஜேன் அவர்களைக் கண்காணித்தபடி சிறிது தொலைவில் அமர்ந்து ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருந்தாள்.

    “ஹாய் ஜேன்! என் கீதாவையும் ஒரு அரை மணி நேரம் கவனித்துக் கொள்ள முடியுமா? ஒரு முக்கியமான வேலை திடீரென வந்து விட்டது,” ஜிம்.

    “நோ பிராப்ளம்,” என்று ஜேன் சினேக பாவமாகப் புன்னகைத்தாள்.

    ஷீலாவின் முகம் சீரியஸாக இருந்தது. கடந்த இரு மாதங்களில் ரொம்பவே மாறிப் போயிருந்தாள். கண்களின் கீழே கருவளையங்கள், காய்ந்த, லிப்ஸ்டிக் காணாத உதடுகள், முனைந்து தீட்டிக் கொள்ளும் மேக்கப் இல்லாத கண்கள், இந்தியப் பாரம்பரியப் பண்புகளிலேயே ஜிம்மிற்கு மிகவும் பிடித்த நெற்றிப் பொட்டு கூட வைத்துக் கொள்வதில்லை ஷீலா.

    அவளையே சில கணங்கள் இரக்கத்துடன் பார்த்த ஜிம், “யெஸ், ஸ்வீட் ஹார்ட், டெல் மி, உன் ஜிம்மிடம் சொல், என்ன வேணும் சொல்…”

    பார்த்தாள். அப்படி அவன் கண் வழியே புகுந்து இதயத்தையே துழாவும் பார்வை. புகுந்த கண்களிலும் தான் மட்டுமே இருப்பதைக் கண்டாளோ என்னவோ! தன்னைத் தாங்க, தான் நீந்த ஒரு அன்புப் பிரவாகம் இருக்கக் கண்டாள். அந்த இருப்பு தான் அவளைப் பயமுறுத்தியது! ‘இதற்கு எனக்கு அருகதை உண்டா? என் மனம் விட்டு விடுதலையாகி சிட்டுக் குருவியைப்போல் பறக்கத் துடிக்கிறதே, உன் அன்புக்கு எனக்கு இனித் தகுதி இல்லை. நான் என் வழியில் போகத் துடிக்கிறேன். எனக்கு விடுதலை தா. என்னையே நான் தேடப் போகிறேன். இது தான் என் தலையெழுத்து என்றால் என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியும். நான் தயார். என்னைப் பரிந்து காத்துப் போற்றாதே. நான் அதற்குத் தகுதி அற்றவள். உன் உள்ளம் கடல் போல விசாலமானது. அத்தனை விசாலத்திலும் என்னை நிரப்பி வைக்காதே. என்னை விட்டுவிடு. என் அன்பின் சின்னமான குழந்தையையும் என் நினைவாக வைத்துக் கொள். என்னால் உன்னத்தனை அன்பைச் செலுத்தி அந்தக் குழந்தையை ஒரு நல்ல மனித உயிராக வளர்க்க முடியாது. உரமிடப் படாத செடியைப் போல அது வாடி நசித்து விடும்.’

    எண்ணங்கள் பெரும் அலைகளென பொங்கிப் பொங்கி எழுந்தன.

    “ஷீலா, டார்லிங், சொல்லம்மா,” அவள் கைகளைப் பற்றித் தன் நெஞ்சில் பதித்துக் கொண்டான்.

    மெல்லத் தன் விரல்களை அவன் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டாள். “ஜிம், ஐ வான்ட் எ டிவோர்ஸ். உன்னை விட்டுப் பிரிய விரும்புகிறேன்,” அழுத்தமாக ஆனால் மெல்லிய குரலில் கூறினாள்.

    இது அவன் எதிர்பாராதது. “ஏன் ஷீலா?”

    “என்னால் விவரித்துச் சொல்ல இயலவில்லை. உன் வாழ்க்கையை நான் நரகமாக்கிக் கொண்டு இருக்கிறேன் என்று மட்டும் மிக நன்றாகத் தெரிகிறது எனக்கு. என் பாதை மாறி விட்டது ஜிம். என்னை நான் உணராததால் தான் இத்தனை கஷ்டங்களும் வந்தன. மனம் சிதைந்து போனேன். வாழ்வில் எனக்கு வேண்டியது என்ன என்று இனித்தான் நான் தேட வேண்டும். எனக்கு விடுதலை தா,” குழந்தையைப் போல யாசித்தாள்.

    அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஜிம்மின் கண்களில் இனம் புரியாத ஒரு கலக்கம்

    “நீ என்னிடமிருந்து ஓட வேண்டாம் ஷீலா. இப்படியே இருந்து கொண்டு உன் மனதில் உள்ளதைத் தேடி வெளிக் கொணரலாம் இல்லையா? நான் உன்னிடம் மனைவி என்ற உரிமைகளைக் கூட எதிர் பார்க்க மாட்டேன். தாயாகவும் நீ இருக்க வேண்டாம். இங்கு என் கண் எதிரே ஒரு தேவதையைப் போல் இருந்து கொண்டிரேன் அன்பே,” தழு தழுத்தன வார்த்தைகள்.

    எத்தனை அழகாகச் சிந்தித்து வைத்திருந்தாளோ, “முடியாது ஜிம், இங்கு இருந்து கொண்டிருந்தால் என் பொருட்டு நீ படும் துயரம் என்னால்ல் காணச் சகிக்காது. நான் தனியாக வெளியேற வேண்டும். இன்று, இப்போது எனக்கு தயவு செய்து விடுதலை கொடு. என்றேனும் நான் தேடும் பொருளுக்கு விடை கிடைத்தால், உன்னிடமே திரும்பி வருகிறேன்,” அழுத்தமாகச் சொல்லி விட்டு எழுந்து கீதாவைத் தேடி வெளியே போனாள் ஷீலா.

    ஜிம்முக்கு ஒன்று நன்றாகப் புரிந்தது. அவள் திடமனதுடன் சிந்தித்து எடுத்த முடிவுடன் தான் இதைக் கேட்கிறாள்.

    அவளை ‘ட்ரீட்’ செய்த மனோதத்துவ நிபுணருடன் கலந்து பேசி, அவள் கேட்டபடி செய்வது தான் உசிதம் என்று பலவிதமான ஆலோசனைகளின் பின்பு முடிவு செய்தான். ஷீலாவுக்கு விவாகரத்து கொடுத்தான். கடந்த ஆண்டில் மிகவும் மன நோயால் அவதிப்பட்டதாலும், ஜிம் மிகவும் வேண்டிக் கொண்டதாலும் குழந்தை கீதாஞ்சலி தந்தையிடமே இருக்க கோர்ட் தீர்ப்பளித்தது.

    (தொடரும்)

    ***********************************************************

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி – 9

    -மீனாட்சி பாலகணேஷ்

    காவேரி ஓரம் கவிசொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா
    உள்ளம் அலை மோதும் நிலை கூறவா-அந்தக்
    கனிவான பாடல் முடிவாகு முன்னே கனவான கதை கூறவா
    பொங்கும் விழி நீரை அணை போடவா?

                                           *******************

    “அம்மா, நான் போயிட்டு வரேன்.  சாயங்காலம் வர நாழியாகும். எங்க காலேஜ் ஜெனடிக்ஸ் கிளப்பில புரஃபஸர் சூரியநாராயணனோட லெக்சர் இருக்கு.  கிளப் காரியதரிசியான நானே போகலேன்னா மத்த எல்லாரும் கிழிச்சுப்பிடுவா,” என்றபடி புத்தகங்களை மார்போடணைத்தவாறு கிளம்பினாள் சைலஜா.

    வெங்கடேசன் குடும்பம் சென்னை வந்து சில வருடங்களாகி விட்டன.  ஒரு பிரைவேட் கெமிக்கல் கம்பெனி துவக்குவதற்கு பொறுப்பான ஒரு என்ஜினியர் தேவையாக இருந்தது.  கம்பெனி முதலாளியின் நெருங்கிய நண்பர் வெங்கடேசனுக்கு ஒன்று விட்ட சித்தியின் பிள்ளை.  திறமை இருந்தும் குடத்துள் விளக்காக இருக்கும் வெங்கடேசனுக்கு இந்தப் பொறுப்பை வாங்கிக் கொடுத்தால் அந்தக் குடும்பத்துக்கும் நல்லது செய்த மாதிரி இருக்கும் என்று அவர் தான் வெங்கடேசனிடம் முதலில் பேசினார்.

    meenakshiசைலஜாவும் எஸ். எஸ். எல். சி. படித்துக் கொண்டிருந்தாள்.  இனி மேல்படிப்புக்கு சென்னைக்கு அனுப்பலாம் என்று பிளான்.  வெளியூரில் இருந்து கொண்டு, பெண்ணை ஹாஸ்டலுக்கு அனுப்பிப் படிக்க வைக்க எல்லாம் நிறையப் பணம் வேண்டுமே- சென்னையில் கிடைக்கவிருக்கும் பொறுப்பான பெரிய வேலையும், பணமும், சைலாவையும் படிக்க வைக்கும் வாய்ப்பும் கூடி வந்த போது உற்சாகமாக வெங்கடேசன் ஒப்புக் கொண்டார்.

    பொறுப்பை ஏற்றுக் கொண்ட இரு ஆண்டுகளிலேயே தமது திறமையை வெளிப்படுத்தினார்.  சிறிய கம்பெனி ஸ்திரமாகி உறுதியாக நடைபோட ஆரம்பித்தது.  கம்பெனி முதலாளி மனமகிழ்ந்து வெங்கடேசனைத் தன் வலது கையாகவே ஆக்கிக் கொண்டார்.

    சைலாவும் நன்றாகவே படித்து பி. யூ. சி. யில் முதல் வகுப்பில் உயர்ந்த மதிப்பெண்களுடன் தேறியிருந்தாள்.  ஆர்வம் மிகுந்த எல்லா மாணவர்களையும் போல, மெடிக்கல் காலேஜில் சேர விண்ணப்பித்தாள். நீண்ட நாளைய கனவாயிற்றே.  எந்தக் கனவுகள் நிறைவேறின?  சீட் கிடைக்கவில்லை.  இது முதல் அதிர்ச்சி.  ஜீரணமாக ரொம்ப நாட்கள் ஆயின.  “அப்பா, நான் ஏதாவது ஸ்கூலில் பாட்டு டீச்சராக வேலைக்குப் போகிறேன்.  இல்லை.  மேடைக்கச்சேரி பண்ண முயற்சிக்கிறேன். படிப்புக்கு  ‘குட்பை’ சொல்லிடறேன்பா,” என மாய்ந்து மாய்ந்து அழுத கண்ணீருக்கு அளவில்லை.

    “இல்லையம்மா.  நீ இப்போ பி. எஸ்.சி சேர்ந்துடு.  அது முடிஞ்சதும் திரும்பவும் மெடிக்கல் டிரை பண்ணுவோம்மா,” வெங்கடேசனின் வார்த்தைகள் புண்ணுக்கு மருந்தாக வந்தன.  அதன்படி சைலஜா இப்போது பி. எஸ். சி கெமிஸ்டிரி இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருந்தாள்.

    அம்மா அலமேலுவுக்கு மகள் மெடிக்கல் காலேஜில் சேராதது பற்றிச் சந்தோஷம்.  “சீனு அன்னைக்கே வேண்டாம்னு தான் சொன்னான். இப்போ பார்.  என்ன குறைந்து போயிற்று?  கல்யாணத்தைப் பண்ணிண்டு சீனுவோட சந்தோஷமா இரு,” என்னவோ வாழ்வின் முக்கியமான குறிக்கோளே சீனுவைக் கல்யாணம் செய்து கொள்வது தான் என்பது போலப் பேசினாள்.

    சைலஜா டாக்டருக்குப் படிக்காததால் சீனுவுக்கு அவளைத் திருமணம் செய்து கொள்ளத் தடை ஒன்றும் இருக்காது என்று வெங்கடேசன் கூட அப்பாவியாக நினைத்துக் கொண்டார்.  அலமேலு தான் தினம் ஒரு தடவையாவது இதைப் பற்றிப் பேசி சைலாவின் மனதை அலைக்கழிக்க வைத்தாள். சைலஜா மூன்றாவது வருடம் பி. எஸ். சி படிக்கும்போது தான் ஜானகியிடமிருந்து லெட்டர் வந்தது..  ‘சீனு மேலே படிக்க அமெரிக்கா கிளம்பிக் கொண்டிருக்கிறான்,’ என்று அட்மிஷன், விஸா எல்லாம் கிடைத்து விட்டதாகப் பெருமையடித்துக் கொண்டிருந்தாள்.

    “கல்யாணத்தைப் பத்தி ஏதாவது ஒரு முடிவு சொல்லியிருந்தா நாம்பளும் என்ன பண்ணுவது என்று யோசிக்கலாமே,” அலமுவுக்கு மனது அடித்துக் கொண்டது.

    சைலஜாவின் ஆவல் இப்போது வேறு விதமாக ஒரு பக்கம் வெட்டினால் மறு பக்கம் துளிர் விடும் மரம் போல, இன்னொரு பாதையில் உருவெடுத்து வளர்ந்தது.  மருத்துவப் படிப்பு ஆசை மறைந்து விட்டது.  ஆராய்ச்சியில் இறங்கி விட ஆவல் கொண்டிருந்தாள். வெங்கடேசனும் பாவம், வெகுளியாகவே கனவு கண்டார்.  “சீனு இப்போ டாக்டர்.  தன் திருமணத்தைப் பற்றி நினைக்கத் தோணும்.

    அமெரிக்காவுலே இருப்பதாலே மனசு விசாலப்பட்டு சிந்திக்கவும் தோணும்.  பி.எஸ். சிக்கு அப்புறம் சைலஜா எம். எஸ். சியும் முடிச்சுட்டா அங்கேயே, அமெரிக்காவுக்கே போய் கல்யாணத்துக்கப்புறம் பி. எச்டி செய்து கொள்ளலாம்,” என்று கணக்குப் போட்டார்.  கனவுகளுக்கு ஏது எல்லை?

    மூன்றாம் வருடம் பி. எஸ். சி பரீட்சைக்கு முன்பு தான் ‘அந்த’க் கடிதம் வந்தது.  எல்லாருடைய எண்ணங்களிலும் மண்ணை வாரிப் போட்டது.  அதுவும் ஜானகி அத்தை தான் புலம்பித் தள்ளி எழுதியிருந்தாள்.  சீனு அங்கேயே, நியூயார்க்கில், தன் கூடவே வேலை செய்து கொண்டே படித்துக் கொண்டிருக்கும் ஒரு அமெரிக்கப் பெண்ணை, லிஸா (எலிஸபெத்) என்று பெயராம், பதிவுத் திருமணம் செய்து கொண்டு தன் பெற்றோருக்கு அறிவித்திருக்கிறான்.

    தன் செல்ல மகளின் கனவுகள் வீணாகத் திரும்பத் திரும்பத் தகர்ந்ததால், வெங்கடேசன் மிகவும் ஆங்காரப் பட்டார்.  ஜானகி குடும்பத்துடனான உறவையே முறித்துக் கொண்டு விட்டார்.  “சைலுக் குட்டி, உன்னை டாக்டராக்கிக் காட்டறேன் பாரம்மா.  மெடிஸின் படித்தால் தான் டாக்டரா?  கெமிஸ்டிரியிலே ரிஸர்ச் பண்ணி பெரிய ஆளா வரணுமம்மா நீ,” என்று உள்ளம் நெகிழக் கூறினார்.

    அப்போது தான் சைலஜா கற்றுக் கொண்டாள்- மனதை அழுத்தி மூடிக் கொள்வதற்கும், மேற்பூச்சாக ஒரு செயற்கைச்  சிரிப்புடன் எல்லாருடனும் பழகவும், தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அதையே சவாலாக எடுத்துக் கொண்டு வெற்றிப்பாதைக்கு அஸ்திவாரம் போடவும், இந்த நிகழ்ச்சி அவளைத் தயார் செய்தது.

    தன் பெண்ணுக்கு இனிமேல் திருமணமே ஆகாது என்பது போல அலமேலு தான் மிகவும் இடிந்து போய் விட்டாள்.  சைலஜா வெகு சீக்கிரம் சமாளித்துக் கொண்டு மனதைத் தேற்றிக் கொண்டு விட்டது போலத் தான் தோன்றியது.  ஆனால் இத்தகைய திடமனத்தின் உள்ளே வெகு மென்மையான ஒரு பகுதி சிதைந்து, சீர்படுத்த முடியாத அளவுக்கு நொறுங்கி விட்டதை எத்தனையோ நாட்கள் கழித்தல்லவோ அவளும், அவள் குடும்பத்தினரும் உணரப் போகிறார்கள்!

    “அம்மா! பி.எஸ்சியிலே நான் காலேஜ் பர்ஸ்ட்,” சைலாவின் உற்சாகம் தளும்பும் குரல்.  “அலமு, பார்த்தியா, எம். எஸ்சிக்கு இவ மார்க்கைப் பார்த்துட்டு அட்மிஷனே குடுத்துட்டா.  போய் பீஸ் தான் கட்டணும்,” வெங்கடேசனின் பெருமிதம்.  சில ஆண்டுகள் கழிந்த பின், “என்னவோடியம்மா, கோல்டு மெடல் வாங்கிட்ட.  இப்போ அமெரிக்கவிலே போய் பி. எச்டி. பண்ணப் போறேன் என்கிறியே, இது எதிலே போய் முடியுமோ,” அலமுவின் புலம்பல்.  ஆனால் அப்பாவும் பெண்ணும் தங்களுடைய திட்டத்தின்படி வேறோர் உலகில் சஞ்சரித்தனர்.  பாஸ்போர்ட், விஸா கிடைத்து மகளைப் பிளேனில் ஏற்றி விட்ட பின்பு வீடு வந்த வெங்கடேசன் முதல் முறையாக வெறுமையை உணர்ந்தார்.

    மகளின் மனம் மிகவும் நொந்து போயிருந்ததையும், அவளுடைய செயற்கைத்தனமான குதூகலமும் மகிழ்வும் அவர் கொஞ்ச நாட்களாகவே அறிந்திருந்தது தான்.  அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவளிடம் பேசி உற்சாகப்படுத்த முயன்றிருக்கிறார்.

    ஃபாக்டரியிலிருந்து ஃபோன் பண்ணுவார், “சைலுக் குட்டி, என்ன ப்ரோக்ராம் அம்மா சாயங்காலம்?”

    “ஒன்றுமில்லை அப்பா, அம்மா கேட்கிறா அவ கூட கதாகாலட் சேபத்துக்கு வரயா என்று. போகட்டுமா?,” வலுவில் வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன் சிரிப்பாள்.

    “ஏம்மா, அம்மாவை முதல்ல கதாகாலட்சேபத்துக்கு ட்ராப் பண்ணிட்டு, டிரைவர் கிட்ட உன்னை ‘லிட்டில் ஆனந்தி’ல ட்ராப் செய்யச் சொல்லேன்.  ரோமியோ அண்ட் ஜூலியட் ஓடறதாம்.  ரெண்டு டிக்கட் புக் பண்ணியிருக்கேன்.  உன்னோடயும் கொஞ்சம் பர்சனலாகப் பேசணுமே அம்மா,” என்பார்.

    இப்படியும் ஒரு தந்தை.  மனம் பொங்கி நெகிழ, “ஓ.கே. அப்பா,” என்பாள்.

    வேணுமென்றே, இந்தக் காதல் சித்திரமான திரைப்படத்தைப் பார்க்க வைத்து, ஷேக்ஸ்பியரை டிஸ்கஸ் செய்வது போலக் காதல், அதில் வரும் ஏமாற்றம், மனவருத்தம், விரக்தி எல்லாவற்றையும் பெண்ணுடன் விவரமாக அலசுவார்.  அற்புதமான மனமுதிர்ச்சியுடன் அவருடன் விவாதிப்பாள் சைலஜா.

    இத்தனைக்குப் பின்னும் சீனுவின் செய்கை தன் மனத்தைப் புண்படுத்திக் கீறிக் காயப் படுத்தியதை ஒருபோதும் அவள் தந்தையிடம் வெளிப்படையாகக் கூறியதில்லை.  மனமெனும் மணிக்கதவம் இறுகத் தாழ் போட்டுக் கொண்டு விட்டதோ?  அவள் உள்ளத்தினுள்ளே இருப்பதைக் காண ஒருவராலும் இயலவில்லையே!

    தன் மனத்தில் உள்ளது பிறருக்குத் தெரிந்து விடுமோ, தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற ஒருவிதமான தற்காப்பு உணர்வு அவள் மனதின் ஆழத்தில் நோயாக வேரூன்றி விட்டது.  இதன் விளைவுகளை யாரே அறிவார்?

    *******

    தொலைபேசி சிணுங்கலாகக் கிணுகிணுத்தது.  ப்ரியா அதை எடுத்து, “டைரக்டர்ஸ் ஆபீஸ்,” என்றதும் ரிஸப்ஷனிஸ்ட், “ப்ரியா, டாக்டர் ஆடலரசு என்பவர் மேடத்தைத் தெரியும், பேச முடியுமா எனக் கேட்கிறார்…..”

    “ஒன் மினிட்,” ரிஸீவரைக் கையால் மூடியபடி, “ஷீலா…” விவரத்தைத் தெரிவித்தாள்.

    ஷீலாவின் முகத்தில் உணர்ச்சிகள் பலவிதமாகப் பளிச்சிட்டன. ஆச்சரியம்-   ‘இவன் எங்கே இங்கு வந்து இத்தனை நாட்களுக்குப் பின் என்னைத் தேடிப் பிடித்தான்’;  எரிச்சல்- ‘முக்கியமான மண்டையை உடைக்கும் ஃபைலைப் பார்க்கும்போது இது என்ன தொந்தரவு!’; கலவரம்- ‘என் கடந்த காலத்தை அறிந்ததால் எள்ளி நகையாடப் போகிறானோ?.  ஒரு தற்காப்பு உணர்வு தோன்றி ஒரு கணம் வயிற்றைப் பிசைந்தது.

    “முடியாது. ஐ ஆம் பிஸி நௌ,” என்றவள் உடனே சிந்தித்தாள். மாலையோ, நாளையோ அவன் கூப்பிடுவதைத் தவிர்க்க முடியாது என்பதால், “ஓகே, அவர் எனது பழைய குடும்ப நண்பர், இப்போதே பேசுகிறேன்,” என ஒப்புக் கொண்டாள்.

    அவளுடைய தயக்கமும் பரபரப்பும் ப்ரியாவை வியப்பிலாழ்த்தின. ஷீலா ரிசீவரைக் கையிலெடுத்தவள், ஒரு சில விநாடிகளில் தன்னை ஒருநிலைப் படுத்திக் கொண்டு, வேண்டுமென்றே அழுத்தமான ஆங்கில உச்சரிப்புடன் “ஷீலா ராபர்ட்ஸ் ஸ்பீக்கிங்,” என்றாள்!

    திரும்பவும் ஆச்சரியம்!  இவளுடையதை விட மிகையான ஆங்கில உச்சரிப்புடன், “என்னுடன் பேச முடிந்ததற்கு மிக்க நன்றி!  நான் ஆடலரசு பேசுகிறேன்.  என் தங்கை திலகவதி உங்கள் இளம்பிராயத்து உயிர்த் தோழி ஆயிற்றே!  நான் சென்ற வாரம் தான் யூ. கே. யிலிருந்து வந்தேன்.  இங்கு புதிதாகத் தொடங்கப்பட்டு இருக்கும்………………… மருத்துவ மனையில் ‘சீஃப் ஆஃப் மெடிஸின்’ ஆக ஜாயின் பண்ணியிருக்கிறேன்……..,” உற்சாகமாகப் பேச்சு தொடர்ந்து கொண்டே போயிற்று.

    ஆடலரசின் குரலா இது?  எத்தகைய மாற்றம்?  உறுதியும், தன்னம்பிக்கையும், உற்சாகமும் தளும்பும் குரல்.  எதிராளியை வசப்படுத்தும் கனமான, ஆழமான குரல்.  இத்தனை வருடங்களுக்கு அப்புறம் எப்படி இருப்பான் ?  எண்ண ஓட்டங்களினிடையே பதில் பேசவும் மறந்து அமர்ந்திருந்தாள் ஷீலா.

    அமெரிக்கா செல்லும் வரை திலகாவுடன் கடிதத் தொடர்பு வைத்திருந்தாள் ஷீலா.  அதிலிருந்து, ஆடலரசு எம். பி. பி. எஸ் முடித்தவன் மேலே இங்கிலாந்து சென்று ‘ஸ்பெஷலைஸ்’ செய்ய முயன்று கொண்டிருந்ததாக அறிந்து கொண்டிருந்தாள்.  அது தான் ஆடலரசு பற்றிய கடைசித் தகவல்.  இதோ, அவன் ஒரு பெரிய மருத்துவ நிபுணனாகத் திரும்பி வந்திருக்கிறான்.  ‘நான் என்ன சாதித்தேன்….’

    அடுத்த வாரத்தில் ஒரு நாள் அவனை அவனுடைய குடும்பத்துடன் சந்திக்க முடிவு செய்து கொண்டு டெலிஃபோனைக்  கீழே வைத்தாள் ஷீலா.

    மனது அலை பாய்ந்தது.  ‘நாளன்றைக்கு அழகான மனைவி, இரு குழந்தைகள் சகிதம் வந்து நின்று ஸ்டைலாக ஒரு பெரிய பூங்கொத்தைத் தந்து நலம் விசாரிக்கப் போகிறான்.  என் பங்குக்கு என்ன இருக்கிறது காட்டிப் பீற்றிக் கொள்ள-  முறித்துக் கொண்ட மணவாழ்வும் வளர்க்கக் கிடைக்காத ஒரு குழந்தையும் சித்திரம் வரைபவன் ஒருவனிடம் அன்பை விலைவாங்க  நடித்த பொய் வேஷங்களின் கசப்பு அனுபவங்களும் தான் என் வாழ்வின் ஏடுகள்.’  பொங்கிச் சுழன்றடித்த ஆவேச நினைவலைகளில் தலை ரொம்ப வலித்தது.  ஆயாசத்துடன் நாற்காலியை விட்டெழுந்தவள் குறுக்கும் நெடுக்குமாக அறையில் நடை பயிலலானாள்.

    ப்ரியாவைக் கூப்பிட்டு, ” எனக்கு ஒரு ப்ளாக் காஃபி, கூடவே ஒரு ஆஸ்பிரினும்.” கண்கள் விரிய ஏறெடுத்த ப்ரியாவிடமிருந்து சாமர்த்தியமாகப் பார்வையை மீட்டு,  எதையோ தேடும் சாக்கில் அறையின் கோடியிலிருந்த  புத்தக அலமாரியை நோக்கி நடந்தாள். எப்போதாவது தன் அந்தரங்கங்களை அவளுடன் பகிர்ந்து கொள்வதுண்டு- இப்போது இயலாது- முடியாது- கூடாது.  ‘ஷீலா ராபர்ட்ஸ் ஒரு ஸூப்பர் வுமன்.  கடந்த காலத்து நிகழ்வுகள் எதுவும் அவளை என்றும் பாதித்ததில்லை.’  தலையை உலுக்கிச் சிலுப்பிக் கொண்டாள்.

    ப்ரியாவின் கரம் அவள் முன்பு காஃபியுடனும் ஆஸ்பிரினுடனும் நீண்டது.

    “தாங்க்ஸ் ப்ரியா,” அவள் கண்களையும் அவற்றில் தொக்கி நின்ற வினாவையும் தவிர்க்க முயற்சித்துத் தோல்வியுற்றாள் ஷீலா.

    “ஷீலா, என் தோழியே சொல்லி விடு.  உன் மனத்தை உறுத்தும் எதையும் வெளியே சொல்வது தான் உனக்கு நல்லது,” என்றபடி அவள் தோள்களை உறுதியாகப் பற்றி உலுக்கினாள் ப்ரியா.

    “ஆடலரசு நீண்ட நாளைய குடும்ப நண்பர்.  ரொம்ப நாட்களுக்குப் பின் சந்திக்கும் போது என்னுடைய சாதனைகள் என்று கூறிக் கொள்ள என் வாழ்வில் என்ன தான் மிஞ்சியிருக்கிறது ப்ரியா?” ஷீலாவுக்குத் தொண்டையை அடைத்தது.

    ‘என் சொந்த வாழ்விலும், சமூகத் தொண்டு செய்ய ஏதுவான மருத்துவ உயர் கல்வியிலும் தோற்று விட்டேன்.  எதிர் நீச்சலடித்து இங்கே இருக்கிறேன்,’ என்று கூறிக் கொள்ள அவளுடைய தன்மானம் இடம் தரவில்லை.

    ஆடலரசைச் சந்திப்பதை எப்படித் தவிர்க்கலாம் என யோசனை செய்தாள்-  புரியவில்லை-  அடுக்கடுக்காகக் குழப்பங்கள் நிறைந்து பயமுறுத்தின.

                                                                                                             (தொடரும்)

    Share
  • இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 40

    மீனாட்சி பாலகணேஷ்

    முடிப்பூவின் பிரச நாறும் பிரம்பான்!

    பிள்ளைத்தமிழ் நூல்களின் காப்புப்பருவத்தில் வழக்கமாக விளிக்கப்படும் தெய்வங்களின் பட்டியலிலிருந்து வேறுபட்டு வெவ்வேறு தெய்வங்களையும், அடியார்களையும், திருச்சின்னங்களையும் விளிப்பதனைச் சில நூல்களில் காணலாம். திருவைந்தெழுத்தினையும் திருநீற்றினையும் விளித்தலை முன்னொரு அத்தியாயத்தில் கண்டோம். முருகனின் மற்றொரு தாயான கங்கையையும் வாகனமான மயிலையும் ஆயுதமான வேலையும் விளிப்பதனையும் கண்டோம். இந்தக்கட்டுரையில் எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் (கோவை கவியரசு நடேச கவுண்டர்) சிவனடியார்களும், முருகனடியார்களும் கழுத்திலணியும் உருத்திராக்கத்தினையும், சிவபிரானின் வாகனமாகிய திருநந்தி தேவரையும் விளித்துக் குழந்தை முருகனைக் காக்க வேண்டுவதனைப் பார்க்கலாம். இதுவும் ஒருவிதமான இறையன்பு கலந்த தாயன்பின் வெளிப்பாடே!

    ame

    சூரியன் விண்மணி எனப்படுபவன். அவனைச் சிவனார் தனது ஒரு கண்ணாகக் கொண்டவர். சிவனாரின் முக்கண்களும் முறையே சூரியன், சந்திரன், நெருப்பு ஆகியவை ஆகும். ஆகவே சூரியனைத் தனது ஒரு வடிவாகக்கொண்ட முக்கண்மணியாகிய சிவபிரான் எனப்பொருள் கொள்ளவேண்டும். முப்புரத்தார் எனும் மூன்று அரக்கர்கள் பறக்கும் கோட்டைகளைத் தம்வசம் வைத்துக்கொண்டு தேவர்களைக் கொடுமை செய்து வந்தனர். தேவர்கள் சிவபிரானிடம் முறையிடவே அவர் ஒரு சிரிப்பாலேயே முப்புரங்களையும் அழித்து தேவர்களைக் காத்தார். அவருடைய கண்ணினின்றும் உகுத்த நீரில் தோன்றியது உருத்திராக்கம். இதனை அதனால் சிவகண்மணி எனவும் கூறுவது வழக்கமாகும். இதனைப் பிறவிப்பிணியைப் போக்கும் மணி எனவும் கூறுவர். ஏனெனில் உருத்திராக்கம் அணிவதனால் விளையும் நன்மைகள் மிகப்பலவாம். பிறவிநோய் நீக்குவதற்கு திருநீறு மருந்தும், உருத்திராக்கம் மணியும், திருவைந்தெழுத்து மந்திரமும் ஆவன என்பது பெரியோர் விளக்கமாம். ஆகவே அடியார்கள் இத்தகைய உருத்திராக்கமணியின் சிறப்புகளை எண்ணி உளம் மகிழ்வர்.

    இத்தகைய உருத்திராக்கமணியை விளித்து நமது முருகமணியைக்காக்க வேண்டுகிறார்.

    தெளிந்த மாசுமறுவற்ற மாணிக்கமணி போன்றவன் முருகப்பிரான். அந்தணர்கள் தமது பூசனைகளாலும் மந்திரங்களாலும் எப்போதும் தேடுகின்ற சுப்பிரமணியன் அவன். தேவர்களின் தலைவன் எனப்படும் தெய்வசிகாமணியும் அவனே! அவனை வழிபடும் அடியார்கள் தமது உள்ளத்தில் (உண்மையாக, நியாயமாக) வேண்டும் பொருட்களை வாரிவழங்கும் சிந்தாமணியும் அவனே!

    ame1

    ஒருதரம் சரவணபவா என்று உரைப்பவர் உளத்தினில் நினைத்ததெல்லாம் உடனே கைகூடுமென வேதங்கள் மொழியுதே உண்மையறி வானபொருளே! என்ற சீர்காழி கோவிந்தராஜனின் பாடலைக் கேட்டு உருகாதவர் யார்?

    அவன் எட்டிக்குடி எனும் ஊரில் உறைகிறான். அவ்வூரின்கண் பெருமதிப்புள்ள மாணிக்கங்களால் இழைக்கப்பட்ட மாடமாளிகைகள் மிகுந்துள்ளன. அந்த வேலவனை நீ காத்தருள வேண்டும் என உன்னை வேண்டுகிறேன் எனப்பாடுகிறார்.

    உருத்திராக்கம்:

    விண்மணியை ஓருருவாக் கொண்ட முக்கண் மணிமுன்

    விண்ணவர்கள் முப்புரத்தார் செய்கொடுமை விளம்பக்

    கண்மணிநீ ருகுப்பவரு கண்மணியைப் பிறவிக்

    கடியவினை நோய்கடியும் மணியையெணி மகிழ்வாம்

    தெண்மணியை விப்பிரர்கள் தேடுசுப்ர மணியைத்

    தேவசிகா மணியையடி யார்கள்சிந் தாமணியை

    எண்மணிக ளொன்பதிழை மாடமலி கின்ற

    எட்டிகுடி வேலவனைக் காவல்செய் கவெனவே.

    (எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்- காப்புப்பருவம்- நடேச கவுண்டர்)

    ***

    அடுத்து நாம் காண்பது சிவபிரானின் அணுக்கத்தொண்டரும், வாகனமுமாகிய நந்திதேவரை விளித்து முருகனைக் காக்க வேண்டும் பாடல்.

    ஒரு பசு அல்லது காளையானது தாம்புக்கயிற்றினால் பிணிக்கப்பட்டிருக்கும்; பசும்புல்லை உணவாகக்கொள்ளும். மானிடர்க்கு அடிமைப்பட்டு இருக்கும். இக்கருத்தினை மனித வாழ்விற்கும் உவமையாக்கி, நந்திதேவரை விளிக்கும் இப்பாடலில் அழகுறப் பொருத்தியுள்ளார் புலவர்பிரான்.

    மானிட வாழ்வு மும்மலங்கள் ஆகிய பாசம் எனும் தாம்பினால் பிணிப்புண்டுள்ளதாகும்; நாம் உண்ணும் உணவும் விளைநிலங்களிலிருந்து பெறப்படும் புல்லாகிய உணவே! ஐம்புலன்களிலிருந்து பெறப்படும் நிரந்தரமற்ற இன்பங்களே இவை! ‘பராதீனப்படுதல்’ என்பது சுதந்திரமின்றி, மற்றோர் சொற்படி நடத்தல் என்பதாகும். ஏதோ ஒரு எசமானனுக்கு அடிபணிந்து அவன் கட்டளைப்படியே நாம் வாழ்கின்றோம் அல்லவா? நாமும் அந்தப் பசு போன்றவர்களே! இங்ஙனம் பாசத்தில் பசுக்களாக உழலும் நம்மைப் பதியாக நின்று நிலையான தனது பதத்தை அளித்துக் காக்க வல்லவன் அச்சிவபிரான் ஒருவனே! அவ்வாறு நாம் மேலான நற்கதியை அடையுமாறு நம்மீது கொண்ட நேசத்தால் ஈசன் அருளுகிறான். எவ்வாறு தெரியுமா?

    ஆகமங்களும் வேதங்களும் விளக்கிடும் அத்துவித நெறியை- அதாவது பரமாத்மாவும் சீவாத்மாவும் ஒன்றே எனும் உண்மையை- அது தொடர்ந்து அவ்வாறே நடைபெறுமாறு மிகுந்த அருளுடனும் நேசத்துடனும் செய்விப்பவன் அந்தச் சிவபெருமானே; அவன் கல்லால மரத்தின் நிழலிலமர்ந்து மௌனகுருவாக முனிவோர்க்கு உபதேசிக்கும் சம்புவாவன். அது சரி. இங்கு நந்திதேவரைப்பற்றிக் கூறப்புகுந்தவர், சிவபிரானைப் பற்றிக் கூறுவானேன் எனும் வினா எழுகிறதல்லவா? இப்படிப்பட்ட சம்புவினிடம் அவனை அடுத்து, அவன் பக்கத்திலேயே நிற்பவர் நந்திதேவர். ‘சிவபிரானின் பக்கத்தில் இருப்பவர்,’ எனப் பேசப்படும் பெருமை உடையவனே என விளிக்கிறார் புலவனார். இப்போது அவருடைய முக்கியத்துவம் புரிகின்றதல்லவா?

    மேலும் நகர்வலம் வரும்போதும் உலாப்போதுகளிலும் சிவபிரானைத் தரிசிக்க வருபவர்கள் கூட்டமாக வந்து அவர் பாதையை மறித்து நிற்கும்போது, தனது கைப்பிரம்பினால் அவர்களைத் தட்டி, விலக்கி, கூட்டத்தினை ஒழுங்கு செய்பவர் நந்திதேவர். அதனால் அவர் கையிலுள்ள பிரம்பு பிரமன் முதலானோர்களின் முடியிலுள்ள பூக்களின் தேனையும் வாசனையையும் உடையதாக இருக்கின்றது. ‘பிரமன் முதலானோர் முடிப்பூவின் பிரச நாறும் பிரம்பானே!’- அற்புதமான கற்பனை, இல்லையா? பெரிய பெயரான ‘நந்தி’ எனும் பெயர் படைத்தவனே, நறுமணம் கமழும் தாமரை மலரில் உறையும் இருநால்வரான எட்டுப் பெண்கள்- எட்டு இலக்குமிகளும் வாழும் செல்வவளம் படைத்த எட்டிக்குடியில் மருவும் வடிவேலவனைக் காக்கவே, என வேண்டுகிறார்.

    திருநந்திதேவர்

    பாசத் தாம்பிற் பிணிப்புண்டு பயிலும் புலப்புல் லுணவார்ந்துame2

    பராதீ னப்பட் டுளபசுக்கள் பதியாய் மேலாங் கதியுறவே

    நேசத் தாலா கமவேத நிகழ்த்துஞ் சுத்தாத் துவிதநெறி

    நிகழக் கல்லால் நிழலிருந்து நிகழ்த்துஞ் சம்புக் கடுத்தவனாய்

    பேசப் படுசீ ருடையானே பிரமன் முதலோர் முடிப்பூவின்

    பிரச நாறும் பிரம்பானே பெருமா னந்திப் பெயரானே

    வாசக் கமல மலர்மேவு மடவா ரிருனால் வரும்வாழும்

    வளமா ரெட்டிக் குடிமருவும் வடிவே லவனைக் காத்தருளே.

    (எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்- காப்புப்பருவம்- நடேச கவுண்டர்)

    எண்ணற்ற கற்பனைகள், தொன்மங்கள், நயங்கள், சொல்லாடல்கள்- அருமையான பாடல்கள்! பிள்ளைத்தமிழ் நூல்கள் இவையனைத்தும் நிரம்பிய சிற்றிலக்கியச் செல்வங்கள். இன்னும் தொடர்ந்து காண்போம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}
    ************

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி- 8

     –மீனாட்சி பாலகணேஷ்

    மோகத்தைக் கொன்று விடு -அல்லால் என்றன் மூச்சை நிறுத்தி விடு
    தேகத்தைச் சாய்த்து விடு -அல்லால் அதில் சிந்தனை மாய்த்து விடு–‘

    **************************

    காரை விட்டிறங்கி மாடியை அண்ணாந்து பார்த்தாள் ஷீலா. அவளுடைய செல்வச் செழிப்பைப் பறைசாற்றுவது போல பளிங்குக்கல் வாசலும் வராந்தாவும், அகன்ற பால்கனிகளும், அடர்ந்த தோட்டமுமாகக் கம்பீரமாக நின்றது அந்தப் பங்களா. ஆனால் இன்றென்னவோ வெறுமை வழிவதை உணர்ந்தாள் ஷீலா. காரணமும் தெரியும்.

    அருண் வெளியேறி இருப்பான் என்பது அவள் எதிர்பார்த்தது தான். ஆனால் ஏற்றுக் கொள்ள இயலாமல் மனம் தவித்தது.

    மொட்டையாக நான்காக மடிக்கப்பட்ட ஒரு கடிதம். ‘ஷீலா’ என்ற பெயரெழுதப்பட்டு டெலிஃபோனின் அருகே இருந்தது. “ஷீலா, வாழ்க்கைப் பயணத்தில் நீயும் நானும் சந்தித்து சில காலம் இன்பமாக இருந்தோம். இனிமை கசப்பாக மாறும் முன்பே பிரிவது தான் சரி- நான் என் எதிர்காலத்தை நோக்கி ஓடும் திசை வேறாக இருக்கிறது. உலகம் உருண்டையானது. என்றேனும் எங்காவது சந்திப்போம். எல்லாவற்றுக்கும் உன் அன்புக்கும் நன்றி. அருண் சர்மா.”

    கையில் பிடித்திருந்த காகிதம் கையுடனும் உதடுகளுடனும்சேர்ந்து சில நொடிகள் படபடவெனத் துடித்தது.

    தொண்டைக் குழியில் அடைத்துக் கொண்ட பந்தை அழுந்த ஒருமுறை விழுங்கித் தன் தவிப்பையும் விழுங்கப் பார்த்தாள். தலை திடீரென்று ‘விண் விண்’ணென்று தெறித்தது. வயிற்றைப் புரட்டியது. அவ்வப்போது அழையாத விருந்தாளியாய் வரும் ‘மைக்ரேன்’ இது என உறைத்தது. கைப்பையைத் திறந்து இந்தத் தலைவலிக்காகப் பிரத்தியேகமாக டாக்டர் பரிந்துரைத்திருந்த மாத்திரையை எடுத்து விழுங்கினாள். மெல்ல மாடியேறி அருண் உபயோகப்படுத்திக் கொண்டிருந்த அறையை நோக்கி நடந்தாள். கதவை எப்போதும் போல- அதாவது அருண் சித்திரம் தீட்டிக் கொண்டிருக்கும் சமயங்களில் தான் உள்ளே புக நேர்ந்தால் நாசுக்காக மெல்லத் தட்டி விட்டு நுழைவது போலத் தட்டி விட்டுத் தள்ளித் திறந்தாள்…. காலியாக இருந்த அறை ‘ஹோ’வென அவளைப் பார்த்து அரக்கத்தனமாக இளித்தது.

    சுவரில் அவள் மாட்டியிருந்த ஒரு ‘ஃப்ரென்ச் இம்ப்ரெஷன்’ பெயின்டிங், இந்தப் பக்கம் ஒரு ‘பிகாஸோ’வின் நகல் ஆகியவை மட்டும் அப்படியே இருந்தன. தனது ஒரே ஒரு சித்திரத்தை மட்டும் அறையின் ஒரு மூலையில் ஸ்டாண்டில் நிறுத்தி விட்டுப் போயிருந்தான் அருண்.

    சென்ற ‘வாலன்டைன்ஸ் டே’ அதாவது காதலர்கள் தினத்தன்று அவளுக்கு அருண் பரிசாக அளித்தது அது. எப்போதும் போலவே இப்போதும் கூட, இத்தனை மனச்சஞ்சலத்திலும் ஒரு அரை நிமிடமாவது அதில் லயிக்க அவள் மனது மறக்கவில்லை. அத்தனை உணர்ச்சிகளை அந்தச் சித்திரம் அவளுக்கு உண்டு பண்ணியது. இத்தனைக்கும் ஒரு சாதாரணச் சித்திரம் அது.

    அலைவீசும் கடல் ஒருபுறம், பெரும் காற்றில் அலைபாயும் மரங்கள், அடர்ந்த, தொலைதூர மலைப் பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு நிற்கப் பளிச்சிட்டு அலறும் ராக்ஷஸ மின்னல்கள், பயந்தோடும் பறவைக் கூட்டங்கள், ஊழித்தாண்டவம் போன்ற ஒன்றின் விசுவரூப தரிசனங்கள் தத்ரூபமாக அமைந்த பெரிய சித்திரத்தின் ஒருகோடியில் ஆணா பெண்ணா என்று அறிய இயலாத ஒரு மனித உருவம், இலக்கின்றி, ஆனால் உறுதியுடன் நடைபோட்டு முன்னேறி வருவதாக வரைந்திருந்தான். கருமேகங்களிலும் மின்னல்களிலும், பொங்கி ஆர்ப்பரிக்கும் கடலலைகளிலும் ஊடாடி ‘ஸிலுவெட்’ எனும் நிழலாக ஒரு முகம்- உணர்ச்சியற்றது போல் இருந்தாலும், ஒரு கோணத்தில் ‘கல் மனதை’ப் பிரதிபலிக்கும் அலட்சிய முகபாவம் எல்லாமாகத் தெரிந்தது.

    இதற்கு ஷீலா தன் மனத்தினுள் வைத்திருந்த பெயர்- ‘முடிவற்ற தேடல்’. தன்னை, தன் வாழ்வை, மனநிலையைப் பிரதிபலிப்பதாக அச்சித்திரம் இருப்பதாக அவள் கருதியதால் தான் ஒரு ரகசியமாக அதை இவ்வளவு ரசித்தாள்.

    ‘நான் எங்கே போகிறேன்? எதைத்தேடுகிறேன், ஏன் இங்கு வந்தேன்? நான் செய்யும் காரியங்களின் பொருள் என்ன?,’ என்று எப்போதோ ஒருமுறை மனதில் கேள்வி எழுமே, அதற்கான விடை இந்தச் சித்திரத்தில் பொதிந்துள்ளதாக எப்போதும்போல் எண்ணி, இயலாமை கலந்த ஆவலுடன் அவசரமாக இப்போதும் தேடினாள்.

    அரை நிமிஷம் கூட இல்லை. திறந்து பார்த்த வாசனைத் திரவிய பாட்டிலை வாசனை போய்விடப் போகிறதே என்று பயந்து அவசரமாக அழுந்த மூடிவைப்பது போலப் படீரென்று அவளுடைய மனக்கதவு மூடிக் கொள்ள, அதன் மேல் அழுத்தமாக நாதாங்கியை இழுத்துச் சார்த்தினாள் ஷீலா. வழக்கமான ஒரு தலைச்சிலுப்பலுடன் அறையை விட்டு வெளியேறினாள். ‘குக்கூ’ கடிகாரம் ஆறுமுறை கூவி நேரத்தை அறிவித்தது.

    பங்களாவின் பின்புறம் இருந்த ஒரு சிறிய கட்டிடத்தை நோக்கி நடந்தாள். ராஜு நாய்களுக்கான உணவை அவைகளின் தட்டில் பரிமாறிக் கொண்டிருந்தான். ஷீலா உயர்ஜாதி நாய்களை வளர்த்துப் பராமரிப்பதில் நகரில் முதலிடம் வகித்தாள். அவளுடைய நாய்கள் பரிசு வாங்காத ‘டாக் ஷோ’ கிடையவே கிடையாது. அவற்றை அன்போடு பராமரிக்கவும், உணவளித்துக் கருத்தோடு கவனித்துக் கொள்வதற்காகவும் ராஜு அவன் மனைவி வனஜா இருவரும் வேலையில் அமர்த்தப் பட்டிருந்தனர்.

    ‘கிரேட் டேன்’ என்ற மிக உயர்த்தி ஜாதி இனத்தைச் சேர்ந்த, கன்றுக்குட்டி போன்ற நாய்கள் ஆணும் பெண்ணுமாக இரண்டு, ‘பாக்ஸர்’ இனத்து நாய்கள் இரண்டு, ‘ஐரிஷ் ஸெட்டர்’ என்ற வகையில் ஒன்றுமாக அந்த நன்றியுள்ள ஜீவன்களால் அந்தப் பெரிய அறை ‘கலகலப்பா’க இருந்தது.

    “டெபீ, எப்படி இருக்கே?’, என கிரேட் டேன் பெண் நாயைக் கட்டிக் கொண்டு முகத்தோடு முகம் பதித்து முத்தாடினாள் ஷீலா. டெபி குட்டி போடப் போகிறது. நாய்ப்பிரியர்களின் வட்டாரம் இந்தக் குட்டிகளுக்காக ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறது.

    “சாப்பிடத் தகராறு செய்யுது மேடம். வழக்கத்தை விட ஏனோ கம்மியாத்தான் சாப்பிடுது. இதுக்கு மட்டும் மட்டன் ஜாஸ்தியாகவே தான் தர்றேன். நாளன்னிக்கு டாக்டர் வரப்ப டானிக் எதாச்சும் தரச்சொல்லணும்,” என்றான் ராஜு.

    ‘இந்த மாதிரி சாயந்திர வேளையில் மேடம் நாய்களைப் பார்க்கவே வர மாட்டாங்களே. ஞாயிறுகாலை பதினோரு மணிக்கு வந்து ஒரு அரைமணி நேரம் எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுப் போயிடுவாங்களே. இன்னிக்கு என்ன ஆச்சு,’ என மனதிற்குள் வியந்து கொண்டான்.

    நான்கில் ஒரு குழந்தையைக் கொஞ்சியதும் எல்லாம் ஓடி வந்து தாயின் அன்புக்காகப் போட்டியிடுவது போல எல்லா நாய்களுமாக வந்து ஷீலாவைச் சூழ்ந்து கொண்டன. ஒன்று அவள் முகத்தை நக்கியது. இன்னொன்று கையைச் செல்லமாகக் கவ்விற்று.

    எல்லாவற்றையும் தட்டிக் கொடுத்தும், தடவியும் குசலம் விசாரித்த பின்பு, “வரேன் ராஜு. பத்திரமாப் பார்த்துக்கோ,” என்றபடி திரும்பப் பங்களாவை நோக்கி நடந்தாள்.

    உள்ளே நுழைந்ததும் டிராயிங் ரூமின் ஒரு புறத்தில் ஐரோப்பிய பாணியில் அமைக்கப் பட்டிருந்த ‘மினி பாரை’ நோக்கிப் போனவள், சிறிய ஃப்ரிஜ்ஜைத் திறந்து கண்ணாடித் தம்ளரில் பாதியளவு ஐஸ்கட்டிகளை நிரப்பிக் கொண்டாள். “நான் எனக்காக வாழ்கிறேன். ஹூ இஸ் அருண்? வாட் இஸ் லைஃப்?” என முணுமுணுத்தபடி ‘ஷிவாஸ் ரீகலை’க் கையில் எடுத்தாள்.

    ஏதோ ஞாபகம் வரவே, டேபிள் மீது அப்படியே வைத்து விட்டுத் தன் ‘அப்பாயின்ட்மென்ட்ஸ்’ டயரியைப் பிரித்து, மாலை ஏழு மணிக்கான குறிப்பைப் பார்த்தாள்.

    ஸ்டோர்ஸ் சூபரின்டெண்ட் சுந்தரமூர்த்தியின் பெண்ணுடைய பரத நாட்டிய அரங்கேற்றம் நகரின் பிரபல ஆடிட்டோரியத்தில் நடைபெறுகின்றது. செக்ரெடரி ப்ரியா நூறு தடவை நினைவுபடுத்தி அனுப்பி இருந்தாள். சுந்தரமூர்த்தி நல்ல மனிதர் பாவம், மேடம் போகாவிட்டால் மிகவும் மனவருத்தப் படுவார். அவர் மனைவி மாலதியோ அதை விட வெகுளி. அடுத்த முறை சந்திக்கும் பொழுது அழுதேவிடுவாள். இவள் போனால் ஏதோ கடவுளே வந்துவிட்டது மாதிரி சந்தோஷத்தில் மிதப்பார்கள். ‘ஒரு மாறுதலுக்காகப் போய்ப் பார்க்கலாமே,’ என நினைத்தாள் ஷீலா. அருண் அவள் வாழ்வில் புகுந்த பிறகு அவள் தனக்குத்தானே போட்டுக்கொண்ட திரையும், தன் கடந்த காலப் பயணத்தின் நிழல் கூட அண்ட விடாமல் கட்டிக்காத்த போலிவேஷங்களும் ரொம்பவே அதிகமாகி விட்டிருந்தன.

    இப்போது மனதில் பாறாங்கல்லாகக் கனத்த சுமையைச் சிறிது நேரம் கீழிறக்கி வைக்க இது ஒரு வடிகால் என்ற எண்ணம் பிறக்கவே, ‘ஷிவாஸ் ரீக’லைத் திரும்ப அதன் யதாஸ்தானத்தில் வைத்து விட்டு, எப்போதும் அவளுடைய உத்தரவின்படி சமையல்காரரால் தயார் செய்யப்பட்டு ரெடியாக ஃப்ரிஜ்ஜில் வைக்கப்பட்டிருக்கும் ஃப்ரெஷ் ஆரஞ்சு ஜூஸை கிளாசில் நிரப்பிக்கொண்டாள்.

    அப்படியே வெளியே செல்ல தயாராவதற்காகத் தன் அறையை நோக்கி நடந்தாள். அலமாரியைத் திறந்து நோட்டமிட்டாள். தான் வருடக் கணக்காகச் சீந்தாத வண்ண வண்ணப் புடைவைகள் கண்ணில் பட்டன. அவற்றில் ஒன்றை எடுப்பதற்குக் கை நீண்டது. ஜிலீரென்று தொண்டையில் இறங்கிய ஆரஞ்சுச்சாற்றின் குளிர்ச்சியும் புளிப்பும், சிறிது இனிப்பும் துவர்ப்பும் கலந்த சுவையில் உடல் சிலிர்த்தது.

    உடல் சிலிர்க்கும் போதெல்லாம். தலையைச் சிலுப்பிக் கொண்டு மனமூடியை அழுத்தப் பழகிக் கொண்டிருந்தவளாதலால் இப்போதும் அதையே செய்தாள். புடைவையை எடுக்க நீண்ட கை பின்வாங்கியது.

    ஒரு அழகான பெண்ணின் உடலழகைச் சிறப்பாக எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்த ‘கஃப்தான்’ போன்ற கருநீல ‘ரா ஸில்க்’கினாலான உடையை எடுத்து அணிந்து கொண்டாள். அதற்குப் பொருத்தமான ஒரு இளநீல வண்ண ஸ்கார்ஃப் கழுத்தைச் சுற்றியது.

    சின்ன ஒரு கறுப்பு நிறப் புள்ளியை நெற்றியில் பதித்துக் கொண்டவள், ரத்தச்சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை அணிந்து ‘பெர்ஃப்யூம்’ ஸ்பிரே செய்து கொண்டதும் கிளம்பத் தயார்.
    தன் அந்தரங்கங்களில் குறுக்கிடாமல் டீஸன்டாக எட்டி நின்ற படியே அந்தப் பங்களாவிலேயே கீழே ஒரு அறையில் குடியிருந்த வண்ணம் பங்களாவை நிர்வகித்து வரும் ரமணி அம்மாளைக் கூப்பிட்டு, “நான் டான்ஸ் புரோக்ராமிற்குப் போய் விட்டு வருகிறேன். டின்னர் தேவையில்லை. ஒரு கிளாஸ் பால், சில பழங்கள், சில பிஸ்கட்ஸ் போதும், பை பை,” என ஒரு ஸ்வீட் ஸ்மைலுடன் காரில் ஏறிக் கொண்டதும், மாத்யூ காரைக் கிளப்பினார்.

    ******************************

    ஷிவா மேடத்தைப் பார்த்ததும் சுந்தரமூர்த்திக்கும் மாலதிக்கும் உச்சி குளிர்ந்து விட்டது. ரத்தினக்கம்பளம் விரித்து வரவேற்காத குறையாக விழுந்து விழுந்து உபசரித்து முதல் வரிசையில் கொண்டு அமர்த்தினார்கள். நிகழ்ச்சி துவங்கியிருந்தது. அலாரிப்பு முடிந்து அடுத்த அயிட்டம் ஆடிக் கொண்டிருந்தாள் பெண்- பதினைந்து வயதிருக்கலாம். நன்றாகவே லயித்து ஆடினாள். நட்டுவாங்கமும் வீணை புல்லாங்குழலுடன் பாடிய ஆண்குரலின் கம்பீரமும் இனிமையும் மனதைக் கொள்ளை கொண்டன.

    ame
    மேடையில் வீணா என்ற பெண் ஆடிக் கொண்டிருக்க சைலஜா என்ற பதின்மூன்று வயதுப் பெண் ஷீலாவின் மனமேடையில் ஆடினாள்.

    இது என்ன விந்தை! அடுத்தபடி சைலஜா என்ன ஆடுவாள் என்று ஷீலாவுக்கு நன்றாகத் தெரியும். உள்ளம் படபடக்க, ஒருவிதமான பதட்டம் நிறைந்த எதிர்பார்ப்பில் அமர்ந்திருந்தாள்.

    வீணையும் குழலும் ஒரு சுருக்கமான மாஞ்சி ராக ஆலாபனையைக் குழைத்தன. உருக்கமான ஒரு சூழ்நிலை உருவாகியது. கணீரென்றிருந்த பாடகரின் குரல் இப்போது குழைவுடன், ‘வருகலாமோ அய்யா’ என்ற கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடலைத் துவங்கியது. முகத்தில் தவிப்பு, பக்தி, ஏக்கம், சோகம் அத்தனையுமாக சைலஜா (வீணா தான்) வெளியிட்டு அபிநயித்தாள். ஷீலா தனது கடந்த காலத்தில் சஞ்சரித்தாள்.

    ஜிம்மின் அமைதி நிறைந்த முகம் மனக்கண்ணில் தோன்றியது. பரிவோடு வருடும் பார்வை, வேதனையோடு அவளைத் தொட்டுத்தொட்டு மீண்டது. ஷீலா ஒரு நைந்த துணி பொம்மையென மாறித் தன் சக்தி எல்லாம் உறிஞ்சப்பட்டு விட்டது போல ஸீட்டில் தொய்ந்தாள். மனசு பால் போலப் பொங்கி, மூடியைத் தள்ள எத்தனித்தது. ‘எதைத் தேடி என் பயணம்?’ திரும்பவும் வினா உள்ளத்தில் விஸ்வரூபம் எடுத்தது. பணம், புகழ், பதவி, வசதி எல்லாம் அனுபவித்தாயிற்று. அன்பைக் கூட இவற்றால் வாங்கி அனுபவிக்க முடிந்ததே! இன்னும் எதைத் தேடுகின்றேன்- உள்ளம் பொருமியது- மனமேடையில் ஆடிய சைலஜா, நிஜ மேடையிலிருந்த பெண்ணுக்கு ஜோடியாக அபிநயம் பிடித்தாள், தன் உணர்வுகளைக் கொட்டிக் கலந்த வண்ணம்…….. பெருமூச்செறிந்தாள்.

    அவள் தானே ஜிம்மின் அன்பைத் துறந்து, தங்கள் ஒரே மகளின் மழலையையும் மறந்து அமெரிக்காவிலிருந்து ஓடி வந்தாள். எதைத் தேடி வந்தாள்? அந்தத் தேடல் இன்னுமே தொடர்கிறது. தேடுவது என்னவென்று புரியாததால் தான் இந்தத் துக்கமும், உணர்ச்சிகளும் பொங்குகின்றன. தான் திசைதெரியாமல் தடுமாறுவதை மறைக்கத்தான் இந்தப் போலி வேஷங்கள். அடைத்து அடைத்து மூடி வைக்கும் மனது ஒரு நாள் எரிமலையென வெடித்துக் குமுறுமோ? வேஷதாரியாகி மமதையும் கர்வமும் பொங்க, ‘என்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்,’ என்று ஒரு ஒழுங்கு முறையற்ற வாழ்வை அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறாள்- ஆனால், பொய்மை மிக்க மனது அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறதே!

    மனமூடியை அழுத்தித் தாளிட்டவள், கும்பலுடன் சேர்ந்து கை தட்டினாள். உபசாரமாக, சுந்தரம் குடும்பத்தினருடன் ஐந்து நிமிடங்கள் பேசி விட்டு, பெண்ணைப் பாராட்டிப் பரிசும் அளித்துவிட்டு, வீடு திரும்பினாள் ஷீலா.

    ‘இன்று மாலை ஏதேதோ உணர்வுகள் பொங்கி என் மனதை அலைக்கழிக்கின்றன.’ சிந்தனைகளின் ஊடே அவசரமாகத் தன் சொற்ப உணவை முடித்துக் கொண்டவள் ‘வாக்மேனை’த் தேடி எடுத்துக் கொண்டாள். காஸட் அலமாரியைக் குடைந்து நாட்டியப் பாடல்கள் நிறைந்த காஸட்டுகளை எடுத்துப் பக்கத்தில் அடுக்கிக் கொண்டாள்.

    இரவின் யாருமற்ற தனிமையில், முகமூடியைக் கழற்றி வைத்துவிட்டு சுயரூபத்துடன் உலவ அவள் தயங்கவில்லை. ‘நடனமாடினார்’ என்ற பாடலைக் கேட்டபடி உடலும் மனமும் இசைந்து ஆட, கால ஓட்டத்தை மீறிய மன ஓட்டத்தில் மிதக்கலானாள் ஷீலா என்ற சைலஜா.

    (தொடரும்)

    *********************

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி… 7

    -மீனாட்சி பாலகணேஷ்     

    நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும்
                    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
            திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
                    செம்மை மாதர் திறம்புவதில்லையாம்…

    *************************************

    பொழுது மிக அழகாக இனிமையாக விடிந்து கொண்டிருந்தது. நேரம் கழித்து எழுந்த சில சோம்பேறிச் சேவல்கள் தங்கள் கடமையாக ‘கொக்கரக்கோ’ என்று கூவிக் கொண்டிருந்தன.  பால்காரர்களின் பாத்திர ஒலிகளும், வாசலில் சாண நீர் தெளிக்கும் ஓசையும் ஒருவித லயத்தோடு ஒலித்தன.  திருச்சி வானொலியின் ‘தமிழ் மணத்’தில் “பல்லாண்டு பல்லாண்டு…மணிவண்ணா,” என உருகி நெகிழும் குரல் புல்லரிக்க வைத்தது.

    girl-kolamசீக்கிரமே எழுந்து குளித்துவிட்டு, அலமேலுவின் சொற்படி, நீலத்தில் ‘பாலும் பழமும்’ சிவப்பு நீலம் கட்டம் போட்ட பட்டுப் பாவாடையும் நீல நிற ஜார்ஜெட் தாவணியும் உடுத்திக் கொண்டு, ‘ராக்கொடி’ வைத்துப் பின்னிய  நீண்ட பின்னலின் நுனியில் அசைந்தாடும் குஞ்சலமும், உச்சியில் பந்து நித்ய மல்லிகையுமாகக் குனிந்தபடி வாசலில் நின்று, வேலைக்காரி சாணம் தெளித்திருந்த தரையில் மும்முரமாகக் கோலம் போடுவதில் முனைந்திருந்தாள் சைலஜா.

    ‘நீராழி மண்டபமா’ இல்லை ‘முத்துப் பந்தலா’ அல்லது ‘அன்னாசிப்பழமா’ என்ற நிமிட நேர யோசனையின் பின்பு ‘நீராழி மண்டபத்’துக்கான புள்ளிகளைக் கணக்குப் பண்ணி வைக்கத் துவங்கினாள்.  கண்ணும் கையும் என்னவோ கோலமாவைத் துழவியபடி இருந்தாலும் காதும் கருத்தும் மட்டும் குதிரை வண்டி தெருக்கோடியில் வருகிறதா என்று தீட்டியவாறு நின்றது.

    “ரயில் லேட் போல இருக்கே,” என்று பாட்டி  உள்ளுக்கும் வாசலுக்குமாக அலைந்தபடி இருந்தாள்.

    கோலமும் முடிந்து விட்டது.  குதிரைவண்டி வரக் காணோம். திலகாவின் அண்ணி வாசற்பக்கம் வந்தவள், ஒரு நிமிடம் நின்று சைலஜா வரைந்த கோலத்தைப் பார்த்து ரசித்தாள்.  சைலாவின் அலங்காரத் தோற்றத்தையும் பார்த்தவள், “என்ன சைலா, அத்தை ஊருக்குப் போற வரைக்கும் உன்னை இனிமே எங்க வீட்டுப் பக்கமே பார்க்க முடியாது போல,” எனக் கேலி பண்ணி முகம் சிவக்க வைத்து விட்டு நகர்ந்தாள்.

    “அரசு, என்னப்பா படிச்ச படியே இருக்கே.  வந்து இட்டிலி சாப்பிட்டுட்டுப் போய்யா.  ராத்திரி கூட சோறு சரியாகச் சாப்பிடலே,’ என்ற அவனுடைய தாயின் குரல் உள்ளிருந்து தெருவரை கேட்டது. திண்ணையை ஒட்டியிருந்த படிப்பறையிலிருந்து வெளிப்பட்டான் ஆடலரசு.  கலைந்த தலையும், படித்துப் படித்து (நிஜமாகவா?) சிவந்த கண்களுமாக…

    ஒரேயொரு கணம், இரு ஜோடி விழிகள், நேர்முகமாக ஒன்றையொன்று எதிர்கொண்டு மீண்டன.  அவன் விழிகளில் கண்டதன் பொருளை உள்வாங்கிப் பொருளறிய சைலஜாவின் மனம் முனைந்த தருணம் ‘ஜல் ஜல்’ என்று குதிரை வண்டி ஓடிவந்து வாசலில் நின்றது.  சைலாவின் எண்ண ஓட்டம் தடைப்பட்டது.

    அவசரமாகத் திண்ணையில் ஏறி, முகப்புத் தூணின் பின்பு மறைந்தாற்போல் நின்றாள் சைலஜா.  அக்கம்பக்கத்து வீடுகளில் வாசல், ஜன்னல்களில் எல்லாம் தலைகளும் முகங்களும் தென்பட்டன.

    கால்களை வெளியில் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்த சீனு என்கிற ஸ்ரீனிவாசன் முதலில் இறங்கினான்.

    ‘அட, சைலா சொன்னாப்போலவே, என்ன உசரம் இருக்கார் அவ அத்தான்,’ என எண்ணிக் கொண்டாள் திலகா, தாயின் பின்னாலிருந்து எட்டிப் பார்த்தபடி.  அடுத்தாற் போல பட்டுப்புடைவை சரசரக்க இறங்கிய ஜானகியின் காதிலும் மூக்கிலும் வைரங்கள் ஒளிவீசின. கைகளில் தங்க, கல் வளையல்கள் கணகணத்தன. மயில்கண் வேஷ்டி தரையில் புரள, ஜரிகை அங்கவஸ்திரத்தை மஞ்சள் நிறச் சட்டைமீது விசிறிப் போட்டபடி, அத்திம்பேரும்  இறங்கினார்.  வண்டியோட்டியின் அருகில் வழி காண்பிக்க அமர்ந்திருந்த வெங்கடேசன், ஏற்கனவே கீழிறங்கி அக்காவையும் மருமானையும் உள்ளே வரவேற்றுக் கொண்டிருந்தார்.

    “சீனு, பார்த்துப் போடா உள்ளே- என் மாட்டுப் பெண் மெனக்கெட்டு அழகாக் கோலம் போட்டிருக்கா- ‘ஷூ’க்காலால் அழித்து மிதித்து விடாதே, ஆமாம்,” என்ற படியே படியேறினாள் ஜானகி.

    “ஜானா, வாம்மா. சீனு உசந்துண்டே போயிண்டிருக்கான் போலிருக்கே,” பாட்டியின் உபசரிப்பும் தொடர்ந்து வந்தது.

    “இன்னும் ரெண்டு வருஷம் போனா அவன் டாக்டர் ஸ்ரீனிவாசன். எம். பி. பி. எஸ்.  வெங்கடேசா, எப்படி உனக்கு மாப்பிள்ளை தகைஞ்சிருக்கு பாரு,” மச்சினனின் முதுகில் பலமாக உற்சாகமாகத் தட்டினார் அத்திம்பேர்.

    திண்ணையில் போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து காலணிகளைக் கழற்றக் குனிந்த சீனு, தூணோடு தூணாக நின்ற சைலஜாவைப் பார்த்து, “ஹலோ சைலா, ஹவ் டு யு டு?” என்று கணீரெனக் கேட்கவே, ஆங்கிலத்தில் இதுவரை யாருடனும் உரையாடியே பழக்கம் இல்லாத சைலஜா, முகத்தில் கலவரமும், நாணமும், நடுக்கமும் உண்டாக, கேள்வியைப் புரிந்து கொண்டு, “நன்னா இருக்கேன்,” என்றாள். உரையாடல் தொடருமா என உள்ளம் தவிக்க, தொடர்ந்தால் தன்னால் ஆங்கிலத்தில் பேச முடியாதே என்ன செய்வது என்று இதயம் படபடக்க நின்றவளை அலமேலுவின் குரல் உள்ளே அழைத்தது.

    “சைலூ, இங்கே பாரு, அத்தை அத்திம்பேர் கைகால் அலம்பிண்டு வந்ததும் போய் இந்தக் காப்பியைக் கொடுத்து விட்டு பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிட்டு வா,” என்றாள்.  வீட்டுக்கு வந்த பெரியவர்களை நமஸ்காரம் பண்ணும் வழக்கம் நமது பண்பாடு; எனவே சைலஜா மறுபேச்சின்றி ஒத்துக் கொண்டாள்.

    அன்றைய பொழுது இவ்வாறு விருந்தினர்களை உபசரிப்பதிலும், சைலாவுக்குப் பாட்டு தெரியும், நடனம் தெரியும், பள்ளியில் எப்போதும் முதல் ராங்க், பல போட்டிகளில் பரிசுகள் வாங்கியவள் எனப் பெற்றோரும், பாட்டியும் பெருமையாகப் பேசுவதிலும் கழிந்தது. சீனுவுக்குத் தான் பொழுதே போகவில்லை.  கையோடு கொண்டு வந்திருந்த டிரான்சிஸ்டர் ரேடியோவைத் திருகியபடியே அமர்ந்திருந்தான்.

    அடுத்த நாள் சைலஜா பள்ளிக்கூடம் சென்றிருந்த நேரம் புத்தக அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தவன், அவள் பரிசு வாங்கியிருந்த புத்தகங்களைக் கண்டு மலைத்தான்.  கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, நாடகப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல்…

    சீனு அவ்வளவு புத்திசாலியல்ல.  சுமாராகத் தான் படிப்பான். டொனேஷன் கொடுத்துத் தான் மெடிக்கல் சீட் வாங்கி இருந்தார்கள். என்ன தான் பெரிய படிப்பு படித்துக் கொண்டிருந்த போதிலும் தன் மாமா பெண்-  இருவருக்கும் திருமண முடிச்சு வேறு போடப் பார்க்கிறார்கள் பெற்றோர்-  மகா புத்திசாலியாக இருப்பது மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையைக் கிளறி விட்டிருந்தது.

    போதாத குறைக்கு ஜானகி வேறு, சைலஜாவுக்கு ஒழிந்த நேரங்களில் எல்லாம் இழுத்துப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு, “இதைப் பாடு,” “பாபநாசம் சிவனோட கிருதி ‘கபாலி’ மோஹனத்தில் தெரியுமா? அதைப் பாடேன்,’ “ஸ்யாமா சாஸ்திரியுடைய ‘காமாக்ஷி’ தெரியுமா?’ என்று கேட்பதும், உடனே உற்சாகமாக சைலா அவற்றைப் பாடுவதும் அவனை நையாண்டி செய்வது போல இருக்கும்.  ‘இந்தப் பெண் ஏதாவது எனக்குத் தெரியாது என்று சொல்ல மாட்டாளோ,’ என்று எரிச்சல் படுவான்.

    பள்ளி ஆண்டுவிழா நாடகத்தில் எடுத்த புகைப்படங்களை மிகவும் பெருமையாக வெங்கடேசன் அக்காவிடமும் அத்திபேரிடமும் காட்டினார்.  முகத்தில் அசிரத்தையுடனும் மனதில் ஆச்சரியத்துடனும் இவற்றைப் பார்த்த சீனு இன்னுமே அவஸ்தைக்கு உள்ளானான்.

    இப்பேர்ப்பட்ட ஒரு தேவதை தனக்காகவே பிறந்து வளர்ந்து வருகிறாள் என்பது எல்லா ஆடவர்களின் மனத்திலும் கிளர்ச்சியைத் தான் உண்டு பண்ணும்.  சீனுவோ நேர் எதிரிடையாக இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தான்.  அவளைப் பிடிக்கவில்லை என்று வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை.  அவளுடைய சாமர்த்தியம் தன்னைத் தாழ்வு மனப்பான்மையடையச் செய்கிறது என உணர்ந்தும் ஒப்புக் கொள்ள அவனுடைய வறட்டு கௌரவம் இடம் கொடுக்கவில்லை.

    ஜானகி ஊருக்குக் கிளம்ப இன்னும் இரண்டு தினங்களே இருந்தன. அன்று இரவு உணவின் போது வெங்கடேசன் ஆரம்பித்தார், “அக்கா, உன்னண்டை கேட்கணும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சைலஜாவும் நன்றாகப் படிக்கிறாள்.  மேலே மெடிக்கல் காலேஜில் சேர ஆசைப் படுகிறாள்.  நீயும் அத்திம்பேரும் என்ன சொல்றேளோ…” என இழுத்தார்.

    சைலா ஆவலாகக் காதைத் தீட்டிக் கொண்டாள்.  சீனுவின் முகம் ‘ஜிவு ஜிவு’ எனச் சிவந்து விட்டது.  ‘இதென்னடா கஷ்டம்.  தன்னை மணந்து கொள்ளப் போகும் பெண் படிப்பிலும் தனக்குப் போட்டியா?’ எனக் குமுறினான்.

    அத்திம்பேரோ, “வெங்கடேசா, இப்போ எல்லாம் தான் பெண்கள் பெரிய படிப்பு படிக்கிறார்களே.  படிக்கட்டுமே என் மருமகளும்,” என்று கூற, இடைமறித்த ஜானகி, “புருஷன் பெண்டாட்டி இரண்டு பேருமாகத்தானே கிளினிக் வைச்சு நடத்துவார்கள்.  ஏண்டா சீனு, நீ என்ன சொல்லறே..”

    கேட்ட கேள்வியின் தொனியே ‘இது ஒப்புக்கு’ என்ற பொருளில் இருந்தது.   “அவளுக்கு என்ன இஷ்டமோ செய்யட்டுமே அம்மா. என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறே,” என சிடுசிடுத்தான்.

    “நீ தானேடா கட்டிக்கப் போகிறவன், கரெக்டாகச் சொல்லிக் கொடேன்.  இப்படி ஒரு பெண் கிடைக்கக் கொடுத்து வைச்சிருக்கணுமாக்கும்,” ஜானகி கூறியதும் சீனுவின் கோபம் பொங்கி வெடித்தது.  “கட்டிக் கொண்டால் பார்த்துக்கலாம்.  அதற்குள்ளே நீயும் எல்லாருமாகப் பெரிய கோட்டை கட்டாதேங்கோ.  என்னையும் தொந்தரவு செய்யாதே,” கையை உதறிக் கொண்டு தட்டை விட்டு எழுந்து விட்டான்.

    அத்தைக்கும் அத்திம்பேருக்கும் முகம் விழுந்து விட்டது.  மரியாதை கருதி வெங்கடேசன், “பார்க்கலாம் அக்கா. சிறிசுகளை விட்டுப் பிடிக்கணும் தான்.  நீ வெளிப்படையாகக் கட்டிக்கப் போகிறவன் அப்படி என்றபோது அவனுக்கு வெட்கமும் கோபமும் வந்திருக்கு.  கவலைப்படாதே.  ப்ராப்தம் இருந்தால் எல்லாம் தானாக நடக்கிறது,” என சமாதானம் செய்ய முற்பட்டார்.

    சைலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அவளை மணந்து கொள்வதைப் பற்றி சீனு சொன்னதால் அல்ல.  அதன் பின்னே பொதிந்திருந்த ஒரு திடுக்கிடும் உண்மையை அவளுடைய அபார மூளை ஊகித்து அறிந்ததினால் தான் அந்த அதிர்ச்சி.  ஆண்வர்க்கத்தின் அதிகாரத்தால் பெண்கள் நன்கு படிக்கவோ சுதந்திரமாகச் செயலாற்றவோ  இயலாமல் இருந்தனர் என்பது தன் பாட்டி கூறிய அக்கப்போர்களில் இருந்தும் அக்கம்பக்கத்து வீடுகளின் நடைமுறைகளில் இருந்தும் அவள் அறிந்திருந்தது தான்.

    தங்கள் வீட்டில் அப்பா வெங்கடேசன் அலமுவுக்கு அளித்திருந்த பொறுப்பும் சுதந்திரமும் அளவற்றது.  வீட்டுச் செலவுகள், சமையல், முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பது என நீண்ட பட்டியல். எட்டாவது வரை படித்திருந்த அலமுவுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்து ‘ஹிந்து’ பத்திரிகை படிக்கும் அளவுக்கு அவளுடைய படிப்பின் தரத்தை உயர்த்தி இருந்தார் வெங்கடேசன்.  தன் பெண் சைலஜாவைக் கூடப் பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும், அவள் பேரும் புகழும் பெற வேண்டும் என்று கனாக் கண்டார்.

    அலமேலுவும் தன் தாயாரும் கண்டு கொண்டிருந்த சைலாவின் கல்யாணக் கனவுகளுக்கு அவர் தடை சொல்லாத காரணம், தன் தமக்கை மகன் தான் என்பதலும், அவனும் பெரிய படிப்பாக டாக்டராகப் படிப்பதாலும் தான்.

    சைலாவுக்குப் புரிந்து விட்டது.  சீனுவுக்குத் தான் அவனுக்கு இணையாகப் படித்து வேலை பார்ப்பதில் விருப்பம் இல்லை.  வேளா வேளைக்கு ருசியாகச் சமைத்துப் போடவும், குழந்தைகளை வளர்க்கவும், வீட்டை அழகாக வைத்துக் கொள்ளவும் அவ்வப்போது வாங்கிக் கொடுக்கும் புடைவைகளுக்காகப் பூரித்துப் போய் புன்னகைக்கவும் தான் அவனுக்கு மனைவி தேவை போல உள்ளது என உணர்ந்து கொண்டாள்.

    மலரும் பருவ காலத்து இனிமைக்கனவுகள் சற்றே ஆட்டம் கண்டாலும், தன் படிப்பு பற்றித்தான் வளர்த்து தந்தை ஆதரிக்கும் கனவுகள் தான் பெரிதாகக் கண்முன் சைலாவுக்கு விரிந்தன.

    ‘மாட்டை அடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார் அதை வெட்டி விட்டோமென்று கும்மியடி’- என்று பாடியபடி பாரதி நினைவு தினத்தன்று பள்ளியில் கும்மியடித்தது நினைவுக்கு வந்தது.  அவள் கனவில் கண்ட ‘அவரி’ன் வடிவம் சீனு அல்ல என்று நிதர்சனமாகத் தெரிந்தது. சீனுவுக்குத் ‘தான் ஆண்மகன்.  அதனால் பெரிய படிப்பு படிக்கத் தகுதியும் உரிமையும் தனக்குத்தான் உண்டு என்ற கர்வம்.  ‘நான் பெண் என்பதால் சளைத்தேனா.  நானும் ஒரு புதுமைப் பெண்.  புத்திசாலிப் பெண். வாழ்வில் உன்னை விட உயர்ந்து காட்டுவேன் பார்,’ என்று மனதினுள் உறுதி பூண்டாள் சைலஜா என்ற சின்னப் பெண்.

    ‘நான்’ எனும் அகந்தையின் விதை ஊன்றப்பட்டது ஒரு பிஞ்சு மனத்தில்.  தவறு அவளுடையதல்ல.  விந்தை மனிதர்கள் நிறைந்த ஒரு சமுதாயத்தினுடையது தான்.

    அத்தை குடும்பம் ஊருக்குப் போயாகி விட்டது.  அன்று சாயந்திர வேளையில், அம்மாவும் பாட்டியும் சமையலறையில் காரியமாக இருந்த போது, ரேடியோ நியூஸ் கேட்டுக் கொண்டிருந்த அப்பாவின் முன் போய் பொறுமையோடு அமர்ந்து, தகுந்த சமயத்தை எதிர்நோக்கி, அது கிடைத்ததும் அவரிடம் கேட்டாள்.

    “அப்பா, சீனுவைக் கல்யாணம் பண்ணிக்க எனக்குப் பிடிக்கல்லே. நான் நிறையப் படிச்சு பெரிய டாக்டராகவோ விஞ்ஞானியாகவோ ஆகப் போகிறேன்,” குரல் தழதழக்க, கை தாவணி நுனியை முறுக்கியது.

    வெங்கடேசன் மகளைப் பாசத்துடன் பார்த்தார்.  தகப்பனார் இறந்து விட்டதால் ஆர்வம் நிறைந்த படிப்பு சம்பந்தமான தனது கனவுகள் நிறைவேறாததும், தன் அருமை மகளைப் படிக்க வைத்தே அவற்றை நிறைவேற்றிக் கொள்ளப் போவதும் அவருடைய வாழ்வில் குறிக்கோளாக இருந்தது.

    “சைலாக்குட்டி, அம்மா, பாட்டி ரெண்டு பேர் மனசும் கஷ்டப்படாமல், சொல்லிப் புரிஞ்சுக்க வைச்சு, உன்னைக் கட்டாயம் நன்னாப் படிக்க வைக்கிறேனம்மா.  சீனுவும் சின்னப் பையன் தானே. ஏதோ கூச்சத்தில் கோவிச்சுக்கிறான்.  நீயும் டாக்டரானா அவனுக்கு சந்தோஷமா இருக்காதா என்ன?  அப்படி அவனை உனக்குப் பிடிக்கலை என்றால் பிராப்தம் எப்படி இருக்கோ, அது கடவுளாகப் பார்த்துச் சேர்த்து வைக்கிறதும்மா,” என்றார்.

    “அப்பா….,” அடுத்து வார்த்தைகள் வராமல் தொண்டையில் அடைபட்டு, கண்கள் குளம் கட்டிக் கொள்ள, சில நொடிகள் தந்தையை ஏறிட்டாள் சைலஜா.

    “சைலு, இதைப் பார்த்தாயா அம்மா.  ஓபன் ஹார்ட் சர்ஜரியிலே ஒரு புதுமை பண்ணியிருக்கா அமெரிக்க டாக்டர்கள்,” என்று விளக்க ஆரம்பித்து, அந்தக் கண்ணீருக்கு அணை போட்டார் அன்புத் தந்தை.

    இந்த சின்னப் பெண்ணுக்கு விஞ்ஞான மருத்துவ உலகின் புதுமைகளை, தான் செய்தித் தாள்களிலும் புத்தகங்களிலும் படித்து அறியும் அறிவியல் செய்திகளைச் சொல்லிக் கொடுப்பதில் தான் வெங்கடேசனுக்கு எத்தனை ஆர்வம்!

    தந்தையும் மகளும் பாசப் பிணைப்பில் கட்டுண்டு அறிவு பூர்வமான உரையாடலில் ஆனந்தமாக லயித்திருந்தனர்.

    (தொடரும்)

     

    Share
  • இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 39

    மீனாட்சி பாலகணேஷ்

    கங்கையும் வேலும் மயிலும் துணை!

    ame2

    ஆறுமுகனான குமரவேள் மீது இயற்றப்பட்டுள்ள பிள்ளைத்தமிழ் நூல்கள் அனைத்திலும் காப்புப் பருவத்தில் பிள்ளைத்தமிழ்நூல் இலக்கணப்படியே திருமாலில் துவங்கி, சிவபிரான், உமையன்னை, கணபதி, இந்திரன், அலைமகள், கலைமகள், சத்தமாதர், முப்பத்து முக்கோடி தேவர்கள் வேண்டிக்கொள்ளப்படுவர். சில நூல்களில் உருத்திராக்கம், திருநீறு, திருவைந்தெழுத்தான ‘நமசிவாய,’ ஆகியனவும் பாடப்பட்டுள்ளன.

    வரகவி மார்க்க சகாயதேவர் அருளிச்செய்துள்ள திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் அருமையான ஆச்சரியங்கள் இவ்விதத்தில் நம்மை எதிர்கொள்கின்றன. முதலில் புலவர் பாடுவது இறையருளாம் ‘திருவருளை’ வேண்டித்தான். திருவருள், திருநீறு, மார்க்கசகாயசுவாமி, மரகதவல்லி, இவர்களை அடுத்து கங்கை எனும் நதிப்பெண்ணாள் குழந்தை முருகனைக்காக்க வேண்டிக்கொள்ளப்படுகிறாள். குமரனின் அவதாரத்தின்போது சிவனாரிடம் உதித்த ஆறு பொறிகளையும் தாங்கிக் காத்த தாயல்லவா அவள்?

    பின், கணபதி, வைரவன் (சிவபிரானின் திருக்குமாரர்களுள் ஒருவன்) இவர்களை அடுத்து, குமரன்கைத் திருவேல், திருமயில், திருமுருகாற்றுப்படையும் திருப்புகழும் ஆகிய நூல்கள் முதலானோர்களும், பதினொன்றாவதாக பலதேவரும் காப்புப் பருவத்தில் விளிக்கப்படுகிறார்கள்.

    முருகனைப்பாடும் சில பிள்ளைத்தமிழ் நூல்கள் அருணகிரிநாதரை விளிப்பதுண்டு; அல்லது முருகனின் தம்பியாகிய அரிகரபுத்திரன், வீரபத்திரர், தாயாரான கார்த்திகைப்பெண்டிர் ஆகியோர் விளிக்கப்படுவர்.

    திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் நூல் இவற்றிலிருந்து வேறுபட்டுள்ளது. இலக்கணப்படி, ஒற்றைப்படையில் பதினோரு பாடல்களைக்கொண்டு அமைந்துள்ளது. இதன் சில சிறப்பம்சங்களைக் கண்டு களிக்கலாமே!

    ***

    கங்கை எனும் தாயை அழைத்து குமரனைக் காக்க வேண்டுபவர், பாடலின் முதல் பகுதியில் முருகனின் பெருமையையும், பிற்பகுதியில் கங்கையின் பெருமைகளையும் விரிக்கிறார்.

    ame

    “கம்போநதி, குற்றமற்ற காவேரி, காளிந்திநதி, கோதாவரி, பாலிநதி எனப்படும் பாலாறு, கனகாநதி, கண்டிகை எனப்படும் உருத்திராக்கமும் குண்டிகை எனப்படும் கமண்டலமும் சூழ்ந்து விளங்கும் பம்பாநதி, வானத்தினின்று இழிதருதலால் வானதி எனவும் பெயர்படைத்த கங்கை, சீதைநதி எனப்படும் தமஸாநதி (அயோத்திலுள்ளது. இங்கு தான் இராமன், சீதை, இலக்குவன் மூவரும் அயோத்தி மக்களைப் பிரிந்து வனவாழ்க்கையை மேற்கொள்ளப் பயணித்தனர்; பின், சீதை கருவுற்றுத் தங்கியிருந்து, இலவ, குசர்களைப் பெற்றெடுத்ததும் தமஸா நதிக்கரையில் தான்), பாஞ்சாலிநதி ஆகிய தவம்செய்ய உகந்த கரைகளைக்கொண்ட புண்ணிய நதிகளாகப் பலவாகி பிரிந்து ஓடும் பாகீரதியே! பகீரதன் தன் தவத்தினால் ஆகாயத்தினின்றும் பூமிக்குக் கொண்டுவந்த கங்கை நதியே!” என கங்கையின் பெருமைகளைக் கூறி விளித்து, குமரனைக் காக்க வேண்டுகிறார்.

    “எனது பாதகங்களையெல்லாம் (பாவங்கள்) நீக்கியவன் இந்த வேலவன். இவன் இமையோராகிய தேவர்களின் அரசன், குமரேசன்; எனது இதயத்து இருளாகிய அறியாமையைக் களைந்தெறியும் குகன். அழகான இனிய பால்போலும் மொழிபேசுபவளான உமையம்மை அளித்த அமுதக்கனி போன்றவன். கரனூர் ஆகிய திருவிரிஞ்சை எனும் ஊரில் வாழும் அடியவர்களின் பெருவாழ்விற்கு ஊன்றுகோலாக விளங்குபவன்; அவனைக் காத்தருள்வாய் தாயே!” என அமைகிறது இவ்வழகிய பாடல்.

    கங்கை

    எம்பாதகநீக்கிய வேலவனை இமையோர் அரசைக்குமரே சனையென்
    னிதயத்திருளைக் களையுங்குகனை
    அம்பால்மொழி யம்மையளித்தரு ளும்அமுதைக்கனி யைக்கரனூர் தனில்வாழ்
    அடியார்பெருவாழ் வையளித்தருள்க
    கம்பாநதிகோ தமைகாவேரி காளிந்தி கோதாவிரி பாலிநதி
    கனகாநதிகண் டிகைகுண்டிகைசூழ்
    பம்பாநதிவா னதிசீதைநதி பாஞ்சாலி தபோநதியே முதலாம்
    பலவாநதியா னபகீரதியே.

    கங்கையைப்பற்றிக் கூறப்புகுந்தால் பெரும் காப்பியமே இயற்றலாம். இங்கு முருகனின் பெருமைகளுக்கு இணையாக ‘எல்லா நதிகளும் கங்கையின் வடிவே’ எனும் அழகான பேருண்மையை விளக்கிய நயம் இரசிக்கத்தக்கது. வைதிகமுறையில் பூசனை செய்யும்போது ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதில், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளையும் ஆவாகனம் செய்து பூசை செய்வது நமது வழக்கம் அல்லவா? கங்கையின் பெருமை கொஞ்சநஞ்சமா? ஆகாயத்திலிருந்து அவள் வந்த கதையைக் கூறுவாரா? முருகப்பிரானின் பிறப்பில் அவள் வகித்த பெரும்பங்கை விளக்குவாரா? ஆகவேதான் மற்ற நதிகளனைத்துமே கங்கையில் அடக்கம் என நான்கு வரிகளில் கங்கையின் புகழை அழகுறப்பாடுகிறார் வரகவியார்.

    ***

    திருவேல்

    ame1

    முருகனடியார்களுக்கு, வேலும் மயிலுமே என்றும் காத்து வழிநடத்தும் துணையாகும். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, குழந்தை முருகனைக் காப்பதற்கு, அவனுடைய கைவேலையே விளித்துப் பாடுகிறார் புலவனார். இது முருகனுக்கு உமையம்மை வழங்கிய வேல். ஆகவே தாய் கொடுத்தவேல் அவனைக் காக்கட்டும் என விளிப்பது மிகப்பொருத்தம்தானே?

    “கொடிய அசுரர்களைக் கொன்று அவர்களுடைய குருதியில் நீராடி, அவர்களுடைய குடலை மாலையாகவும் தரித்துக்கொண்ட வேலே! பின் அவர்களுடைய உடலின் கொழுப்பையெல்லாம் அருந்தியதான வேலே! முருகன் உன்னைத் தன் கையில் பிடித்துள்ளான்,” எனப் புகழ்ந்து விளிக்கிறார்.

    “ஆறு தலைகள் கொண்ட எங்கள் முருகனை, முதல்வனாகத் திகழ்பவனை, சிவந்த நிறம்கொண்டு திகழும் செவ்வேளை, இவ்வுலகமெல்லாம் புகழ்ந்து ஏத்தும் தேவனை, திருவிரிஞ்சை எனும் இப்பதியில் விளங்கும் எமது முருகனை என்றும் நீ துணைநின்று காக்க வேண்டும்,” என வேண்டிக்கொள்கின்றார்.

    இந்த வேல் செய்ததாக புலவர் பாடும் செயல்களனைத்தும் முருகன், தான் அதனைக் கரத்தில் ஏந்திச் செய்தவையே! புலவர் அதனை அறியாதவரா? இருப்பினும், வேலை ஒரு தனிப்பொருளாக்கி, ‘இத்தகு வீரச் செயல்களைச் செய்த எமது முருகப்பிரானின் கரத்தில் நீ இருந்ததனால் அல்லவோ அவன் இவற்றைச் செய்ய இயன்றது,’ எனும் பெருமை தோன்ற இவ்வாறு பாடியருளியுள்ளார் எனக் கொள்ளலாமா? பாடலைக் காண்போம்:

    முடியொராறுடை யானையெம்மையனை முதல்வனைச் செவ்வேளைப்
    படியெலாம் புகழ்தேவனை விரிஞ்சையம் பதிமுருகனைக் காக்க
    கொடியதானவர் குருதியிலாடிவெங் குடலெனுந் தொடைசூடி
    நெடியயாக்கையின் நிணமெலாம் அருந்தியவவன் கையிநெடுவேலே.

    வேலையும் மயிலையும் பெருமைப்படுத்தி முதல்முதலில் பாடியவர் அருணகிரிநாதராவார். வேல்விருத்தம், மயில்விருத்தம், வேல் வகுப்பு, மயில் வகுப்பு என அவர் பாடாத ஒன்றுமே இல்லை. அவ்வளவு முருகனிடம் ஆழ்ந்து அடைக்கலம் புகுந்தவர் அவர். அற்புதமான சந்தம் நடமிடும் பாடல்கள் அவை.

    அவருடைய அடிச்சுவட்டில், இங்கு மார்க்கசகாய தேவர் மயிலை விளிப்பதனைக் காணலாமா?

    “ஓ மயிலே! (மயூரமே!) வானத்தின் உச்சியான மேகக்கூட்டங்கள் நடுங்கவும், பெரிய மலைகள் தவிடுபொடியாகவும், அப்பொடித்துகள்களால் ஏழுகடல்களும் நிரம்பி மேடாகிவிடும்படியும் உனது தோகையை விரித்து அடித்து எழுந்து எட்டுத் திசைகளிலும் கண்மூடி இமைக்குமுன்பு உலாவி, என்றும் இவ்வாறு ஆடலைச்செய்து வாழும் அந்த முருகப்பிரான் ஏறுகின்ற மயிலே!” எனப் பெருமிதம் தோன்ற விளிக்கிறார். அதாவது மயில் இவ்வாறெல்லாம் செய்யுமாறு அதனைச் செலுத்துபவன் இம்முருகவேள். ஆகவே இந்த ஆடலை மயில் செய்வதாகவோ அன்றி, முருகனே செய்வதாகவோ, எவ்விதமாகவும் கொள்ளலாம்.

    “இந்த முருகன் எம்மைத் தனது தொண்டனாகக் கொண்டு ஆள்பவன்; உருவில் சிறிய (குழந்தையானதால்) பெரிய தலைவனாவான்; நான்கு வேதங்களையும் உணர்ந்து அவற்றை மணிபோலும் மொழியால் உரைப்பவன்; அணிவதனால் குளிர்ச்சியும் மணமும் தரும் இன்பமான கடப்பமாலையை அணிந்தவன். திருக்கரனூரில் வாழ்கின்ற மரகதவல்லி எனும் கொடிபோன்ற அன்னை பெற்றெடுத்த சிவந்த சுடர் போலும் அழகன். அவனை நீ அன்போடு காக்க வேண்டும்,” என் வேண்டுகிறார்.

    மயில்

    am3
    தொண்டனாக வெமைக்கொ ளுஞ்சிறு தோன்றலைச் சதுர்வேதநூல்
    சொல்லுமாமணி வாயனைச்சுக மாயிருந்தும ணங்கொளும்
    வண்டுசேர்தரு நீபமாலைய னைத்தி ருக்கர னூரில்வாழ்
    மரகதக்கொடி பெற்றசெஞ் சுடர்மணியை யன்பொடு காக்கவே
    அண்டகூட நடுங்கமால் வரைதூளி யாகஅத் தூளியால்
    ஆழிஏழுநி ரம்பிமேடுப டக்கலாபம டித்தெழுந்
    தெண்திசாமுக முங்கடைக்க ணிமைக்கு முன்னமு லாவியே
    என்றுமாட லியற்றிவா ழவனேறு கின்றமயூரமே.

    இன்னும் நக்கீரரின் திருமுமுருகாற்றுப்படையையும் அருணகிரியாரின் திருப்புகழையுமே விளித்து, குழந்தை முருகனைக் காக்க வேண்டுகிறார். புலவனாரின் பக்திப்பெருமிதத்தை, முருகனிடமும், முருகனடியார்களிடமும் அவர் கொண்டுள்ள அன்பை, நேசத்தை, உணர இவைகளே சான்றாகத் திகழுகின்றன எனலாம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ************

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி………6

                                                         -மீனாட்சி பாலகணேஷ்             

    திலகாவும் சைலஜாவும் திலகா வீட்டுத் திண்ணையை ஒட்டிய சிறிய அறையில் ரகசியமாக ஏதோ பேசிச் சப்தமிடாமல் சிரித்துக் கொண்டும், ஒருவரை ஒருவர் கேலி செய்து கொண்டும் இருந்தார்கள்.

    ab

    “உங்க அத்தை பையன் பேரென்னடி? ரொம்ப உசரம்னு பாட்டி சொன்னாங்களே, நிஜமாவா?”திலகா கேட்டாள்.

    “ம், இருப்பான் ஆறடி உசரம். ஸ்ரீனிவாசன்னு பேர். சீனுன்னு கூப்பிடுவோம்,” சைலஜா.

    திலகாவின் கண்கள் அகல விரிந்தன.”அவன் இவன்னு சொல்லறே, உங்க அத்தை கோவிச்சுக்க மாட்டாங்களா?”

    சைலா இத்தனை நாட்கள் இதைப் பற்றி சிந்தித்ததேயில்லை. இப்போது, ‘ஓ இப்படியும் ஒரு சம்பிரதாயம் உண்டா?,’ என அவளுடைய இளம் உள்ளம் தத்தளித்தது.

    “ஆமாம், நாளைக்கு என்ன பாவாடை தாவணி போட்டுக்கப் போறே?” என்று சீண்டினாள் திலகா.

    “அம்மா சொல்லறதத் தான். நானா எப்படி எடுத்துக்க முடியும்? போன வருஷம் ராஜிச் சித்தி நவராத்திரிக்கு ஹைதராபாதில இருந்து அனுப்பியிருந்தாங்களே, கல் வைச்ச வளையல், அதைப் போட்டுக்கவாடி திலகா?” என்று கன்னத்தில் சிறிது செம்மையேற, தலையைச் சாய்த்துக் கேட்டதில், குடை போன்ற ஜிமிக்கிகள் அவள் காதில் உரசி ரகசியம் பேசின.

    ஆடலரசு அப்போது அந்த அறை வாயிலில் எட்டிப் பார்த்து, “திலகா, எனக்கு அட்லாஸ் வேணும்; படிக்கணும். என் புத்தகம் எல்லாம் இங்க தான் இருக்குது,” என்று சற்று விரைப்புடன் கூறவே இரு பெண்களும் வெளியே வந்தனர்.

    ஆடலரசு சிடுசிடுத்தானே தவிர, சைலஜா தலை சாய்த்து வினவிய அழகுக் கோலம் அவன் மனத்தில் பதிந்து அவனை அலைக்கழித்தது. கன்னத்தில் விழுந்த குழியின் அழகில் மூழ்கிப் போனான் அவன். உதட்டோரத்தில் முகிழ்த்த நாணச் சிரிப்பு போதை போல ஒரு உபாதையை உள்ளத்தில் ஏற்றியது. தன் மனதில் ஒளித்து வைத்துக் காப்பாற்றிய ஒரு பரம ரகசியம் இப்போது அவனைத் தத்தளிக்க வைத்தது.

    பக்கத்து வீட்டிற்குக் குடி வந்து தன் தங்கையின் தோழியாகிப் பின் தன் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட அந்தப் பெண்ணுக்கும் தனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என அவன் அறிவான். ஆனாலும் அவளுடைய புத்திசாலித்தனம், சமர்த்து எல்லாம் தனக்கு ஒரு சவாலாக அமைந்ததென அவன் கருதினான். அவள் முன்பு அறிவிலும், படிப்பிலும் சிறந்து விளங்கி அவளை வியப்பினால் புருவத்தை உயர்த்த வைக்க வேண்டும் என்பது அவன் கனவு.

    ‘அவள் மீது தான் கொண்ட அன்பு நிறைவேறாது. தான் இதை அவளிடம் கூட வெளியிட முடியாது,’ என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் தான் அவளை, அவளுடைய செயல்களை ஆர்வத்துடன் ரசிப்பதை அவள் அங்கீகரிக்கிறாள் என்று அவளுடைய கடைக்கண் வீச்சுகள் நன்றாக உணர்த்தியிருந்தன. ‘தொடக்கமும் முடிவும் இது தான்,’ என்று இரு இளம் உள்ளங்களும் உணர்ந்திருந்த போதிலும், தங்களுடைய பருவத்துக்கும், இளமைக்கும் இது ஒரு பரஸ்பர அங்கீகரிப்பு என ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து இந்த திருட்டுப் பார்வைகளிலும், கண் வீச்சுகளிலும் ஈடுபட்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

    ஆனால் இன்று சைலஜாவின் நாணம் புதியதாக இருந்தது. ஆடலரசு இதுவரை காணாதது அது. ‘இத்தனை நாள்வரை அந்தக் கண்களில் சவால் விடும் விஷமமும் குறும்பும் தான் தென்பட்டு வந்தது. இப்போது நாணக்கலவையும் சேர்ந்து அவளை எவ்வளவு அழகாக மாற்றிவிட்டது! அவளுடைய அத்தை மகனுக்காகத் தான் இந்த நாணமும் கொஞ்சலும் அழகுமா? ‘என் தேவதை, நான் எட்டாத உயரத்தில் வைத்துப் பார்த்து மகிழும் இவளுடைய பார்வை கூட இனி என் பக்கம் திரும்பாதோ…’

    ‘இத்தனை நாள் உன்னை உயர்வாக மதித்துப் போற்றியிருக்கிறேனே பெண்ணே. என் இளம் மனத்தின் கதவுகளை மெல்லத் திறந்து அன்ன நடையிட்டு உள்ளே புகுந்தவள் நீ. நானாக உன்னை வெளியேற்ற மாட்டேன். நீயாக வெளியேற முற்படுகிறாய். நீயும் எவரும் அறியாமல் எத்தனை நாள் இங்கு குடியிருப்பாய்? உன் இருப்பு தெரிந்தால் தானே எனக்கும் மதிப்பு, உனக்கும் கௌரவம்…..

    ‘நீ போய் விட்டாலும் கூட, நீ அமர்ந்திருந்த என் இதயபீடத்தில், உன் காலடிச் சுவடுகள் உள்ளனவே, இதய அறையினில் இனிய நறுமணம் நிரம்பியுள்ளதே, இதைப் போற்றிப் பாதுகாத்து நான் உள்ளளவும் வழிபடுவேன். இதை நீ உணரவில்லையே சைலா….’

    ஆடலரசுக்கு இதில் தான் மிகவும் வருத்தம்.

    ——————————————————————

    சைலஜா துள்ளல் நடையிட்டுத் தங்கள் வீட்டுக் கூடத்தில் நுழைந்ததும் அப்பாவின் லேசான குறட்டையொலி கேட்டது. அவர் இருந்த கோலம் அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது எனில், ரேடியோவிலிருந்து ஒலித்த பாடல் கன்னங்களைச் செம்மையேற்றி இதயத்துடிப்பை அதிகரித்தது.

    ‘அத்தை மகனே போய் வரவா, அம்மான் மகனே போய் வரவா, உந்தன் மனதைக் கொண்டு செல்லவா எந்தன் நினைவைத் தந்து செல்லவா..’ பி. சுசீலா இனிமையான குரலில் தலைவியின் உள்ளத்துக் காதலைக் குழைத்து வடித்து வார்த்துக் கொண்டிருந்தார்.

    தான் பாட்டை ரசிப்பதை யாராவது பார்த்து விட்டார்களோ என்ற பதைப்பில் சுற்றுமுற்றும் பார்த்தபடி, விடுவிடெனச் சமையலறையை நோக்கி ஓடினாள் சைலஜா. “பாட்டி, அப்பாவைப் பாரேன். தூங்கியே போய் விட்டார், ” என்றாள். அலமு கூடத்துக்கு வந்து எட்டிப் பார்த்தாள்.

    “இதோ தட்டு வைத்தாயிற்று. சாப்பிட வாங்கோ. அந்த கண்றாவிப் பாட்டை நிறுத்துங்கோ. பெண் குழந்தைகள் எல்லாம் கெட்டுப் போகணுமின்னே தான் போடறாங்கள் இந்த மாதிரிப் பாட்டெல்லாம்.”

    எழுந்து நின்று சோம்பல் முறித்த வெங்கடேசன் ரேடியோவை நிறுத்தினார். பேப்பரை ஒழுங்காக மடித்து வைத்தார். ‘இளம் பெண்கள் கெட்டுப் போக இந்தப் பாட்டைக் கேட்க வேண்டாம். அத்தைமகன், முறைப்பெண் என்று முடிச்சுப் போடும் சம்பிரதாயங்களும், கேலிப் பேச்சுகளும், இளம் பெண்களின் மனதை எவ்வளவு பாதித்து, வீண் கனவுகளை வளர்த்துக் கொண்டு பின்பு சங்கடத்துக்குள்ளாக வைக்கின்றன,’ என நினைத்துக் கொண்டார். பழியைச் சுமர்த்த வேறு யாராவது கிடைத்தால் சரி!

    அப்பாவோடு பக்கத்திலமர்ந்து குழந்தை என்கிற ஹோதாவில் சைலஜா எப்போதும் சாப்பிடுவாள். அவள் ‘பெரியவளாகி’ விட்ட பின்பு இதை மாற்ற முயன்று கொண்டிருந்தாள் அலமேலு. வெங்கடேசன் இந்தச் சிறிய சலுகையைத் தன் செல்ல மகளிடமிருந்து பறிப்பதை விரும்பவில்லை. அதனால் வழக்கம் போல இன்றும் தந்தையின் அருகிலேயே சைலஜா அமர்ந்து கொண்டாள்.

    பாட்டி சாம்பார் பரிமாறி விட்டுப் போனதும் மெல்லக் கேட்டாள், “அப்பா, நானும் கூட சீனுவை மாதிரி டாக்டருக்குப் படிக்கலாமாப்பா?”

    “பேஷ், அப்படியா பிளான்? டாக்டர் சைலஜா…ம்…ரொம்ப நன்றாயிருக்கும்மா கேட்கிறதுக்கே. படியம்மா கண்ணா. உனக்கில்லாததா குழந்தே…”

    கேட்டுக் கொண்டிருந்த அலமுவோ, “நாளைக்கு உன் அத்தை என்ன சொல்லறா என்று கேட்டுக் கொண்டு, பின்னே கோட்டை கட்டலாம்,” என்றாள்.

    தன் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் எதற்காக அத்தை தன் கருத்தை வெளியிட வேண்டும் என்று சைலாவுக்குக் குழப்பமாக இருந்தது. வீம்பாக, “அத்தை பிள்ளை சீனு தான் படிச்சு பெரிய டாக்டர் ஆகலாமோ? நானும் படிச்சா என்னவாம்? எங்கப்பா என்னைப் படிக்க வைக்கிறார்,” என ‘வெடுக்’கென மொழிந்தாள் அந்தப் பதினாலு வயதுப் பெண்.

    “நீ கவலைப்படாதே அம்மா, நானாயிற்று உன் படிப்புக்கு உத்தரவாதம்,” என்ற தந்தையின் சொற்கள் அவளைச் சிறிது குளிர்வித்தன.

    படிப்பில் என்றைக்குமே அவளுக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. பெண் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் எல்லாரும் அவள் மனத்தில் மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தார்கள்.தானும் அது போல ஒரு உயர்ந்த நிலைக்கு வந்து சமுதாயத்துக்கு தொண்டு செய்ய வேணும், இதனால் பெருமையும் புகழும் பெற வேண்டும் என்று கனவு காண்பது அவளுக்கு மிகவும் பிடித்த விஷயம். ‘டாக்டர் சைலஜா’ என மனதுக்குள்ளேயே போர்டு மாட்டிக் கொண்டு பார்த்து மகிழ்வாள்! வானளாவக் கோட்டை கட்டுவாள். “டாக்டரம்மா, டாக்டரம்மா,” என்று நோயாளிகள் அவளைச் சுற்றி வருவதாகவும், கொடுக்கும் மருந்தில் குணமாகி அவளை வாழ்த்துவதாகவும் கற்பனை செய்து உள்ளம் நெகிழ்வாள்.

    இந்த இலட்சியக் கனவுகளிடையே இப்போது இளமையின் வசந்தக் கனவுகளும் புகுந்து கொண்டு விட்டன. இரண்டும் ஒரு கலவையாகி, கற்பனைக் குதிரை இப்படியும் அப்படியுமாக ஓடியதால், சிறிது தடுமாறத்தான் செய்தாள் சைலஜா.

    படிக்கும் பருவத்தில் ஒருவரது வாழ்வில் எது முக்கியம் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு எடுப்பதற்குப் பெற்றோர் உதவி மிகவும் அவசியம். எல்லாரும் புத்திசாலிகளாக இருப்பதில்லை. மக்கோ, புத்திசாலியோ, குடும்ப வாழ்வு மட்டும் எல்லாருக்கும் எப்படியோ அமைந்து விடுகின்றது.

    வெங்கடேசன் ஒரு லட்சியவாதி. தன் மகளைப் பற்றிய பெருமை நிரம்ப உண்டு அவருக்கு. அவளுடைய சமர்த்தையும் புத்திசாலித்தனத்தையும் கண்டு பெரிதாக எதையோ சாதிக்கப் பிறந்தவள் என்று திடமாக நம்பினார்.

    அலமுவும் தன் தாயும் போடும் சம்பிரதாயமான சட்ட திட்டங்களுக்கும் வளைந்து கொடுத்துக் கொண்டு, அவர்கள் மனம் நோகாதபடியும் அனுசரித்துக் கொண்டு வந்தார்.

    நாளை ஜானகி குடும்பத்தினரின் விஜயத்தால் என்ன மாறுதல்கள் ஏற்படப் போகின்றனவோ, எப்படி அவற்றை சமாளிக்க வேண்டும் என்று சிந்தித்தபடி சாப்பிட்டு எழுந்தவர், படுக்கையைத் தட்டிப் போட்டுக் கொண்டு, “காலம்பற ஸ்டேஷனுக்குப் போகச் சீக்கிரம் எழுந்திருக்க வேணும். நான் படுத்துக்கப் போகிறேன்,” என்று தலையைச் சாய்த்தவர், ஐந்தாவது நிமிடமே குறட்டையொலியுடன் தூங்கியும் போனார்.

                                                                       (தொடரும்)

    மறு பகிர்வு– தாரகை இணைய இதழ்

    ——————————————

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி…(5)

    -மீனாட்சி பாலகணேஷ்

    ஷீலா விருந்தினர்களை எப்படியோ சமாளித்தாள். அவர்கள் விடை பெற்றுப் போனதும் பூகம்பம் வெடித்தது.

    “அருண், உனக்கு என்ன திமிர் இருந்தால் விருந்தினர்கள் முன்பு இப்படி உளறியிருப்பாய்,” வார்த்தைகள் நாகரிகத்துக்கு இடமின்றி இடம் பெயர்ந்தன.

    தானும் கலையுலகில் அங்கீகரிக்கப்பட்டு விட்டோம் என்ற உற்சாகம், பெருமை,  இதன் பொருட்டு ஏற்படும் கர்வம் இவை அளவு மீறியதால், தன் வளர்ச்சிக்கு முழுப்பொறுப்பும் ஷீலாவினுடையது தான், அவளும் தானும் பரஸ்பரம் கொண்ட காதலால் தான் என்பதை அலட்சியம் செய்து விட்டான் அருண் சர்மா.

    “வாயை மூடு. வரவர உன் அதிகாரம் ரொம்பத்தான் கொடிகட்டிப் பறக்கிறது. நீ போடும் பிஸ்கட்டுகளுக்காக உன் பின்னால் ஓடி வரும் நாய் என்று என்னை நினைத்தாயா?,” என்று ஆத்திரமாகக் கத்தியவன், விடுவிடுவென்று மாடியேறித் தன் அறைக்குப்போய், கதவை அறைந்து சாத்தித் தாளிட்டுக் கொண்டான்.

    ‘இது திரும்பவும் ஒரு நீண்ட தனிமையின் துவக்கம்,’ என்று ஷீலாவின் உள்மனது கூறியது. தலையைச் சிலிர்த்து உலுக்கிக் கொண்டு கண்ணீரைச் சுண்டி எறிந்தவள், ஒரு ‘ஜின் அண்ட் டானிக்கை’க் கலந்து எடுத்துக் கொண்டு தன் அறையை நோக்கித் தளர்ந்த மனத்துடன் நடந்தாள்.

    Artistநடு இரவில், பாதி உறக்கத்தில் விழித்தபோது, திடீர் எனத் தனிமையின் வெறுமை அவளை அறைந்தது. தூக்கம் பறந்தது. விடியா இரவு நீண்டது. இன்னொரு ‘ஜின்’னுக்காகப் பறந்த நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டு, படிக்க ஏதாவது தத்துவ சம்பந்தமான புத்தகத்தைத் தேடினாள். அத்தனை வெறுப்பிலும், துயரிலும் தத்துவ சம்பந்தமான விஷயங்கள் மனதுக்குச் சற்று ஆறுதலளிக்கக் கூடும் என அவளது கூர்மையான புத்தி கணக்குப் போட்டது.

    ஒரு சிறிய புத்தகத்தை  அலமாரியின் மேல்தட்டிலிருந்து உருவினாள். தாகூரின் கீதாஞ்சலி-மனத்தினுள் பெரிய பெரிய அலைகள் ஆரவாரித்து ஓசையிட்டன. பிரித்த பக்கத்தில் இருந்த வரிகள் மனத்தை ஈர்த்தன.

    ‘நாளின் தொடக்கத்திலேயே அந்த ரகசியம் அறிவிக்கப்பட்டு விட்டது. நீயும் நானும் மட்டுமே ஒரு படகிலேறிப் பயணம் செய்வோம். நம்முடைய முடிவும் இலக்குமில்லாத இந்தப் புனிதப் பயணம் பற்றி வேறு ஒரு ஆத்மாவுக்கும் தெரியாது.’

    தன் வாழ்க்கைப் பயணம் தொடங்கியதை எண்ணிப்பார்த்தாள். மனமெல்லாம் வலித்தது. நினைவுகள் கூரம்புகளாக எல்லாப் பக்கங்களிலிருந்தும் வந்து தைத்தன.

    படிப்பதை நிறுத்திப் புத்தகத்தை மூடினாள். அதைப் பரிசளித்தது யார் என்று தெரியும். மெல்ல, தயக்கத்துடன் முதல் பக்கத்தைத் திறந்தாள். ‘டு ஷீலா- என் மனதைத் திறந்து காட்ட, இந்தப் புத்தகத்தைத் தவிர வேறெது நிகராகும்? ஷீலா, நான் உன்னை வழிபடுகின்றேன் என் தேவதையே- அன்புடன், ஜிம் ராபர்ட்ஸ்,’ என்ற எழுத்துக்கள் மீது விரல்களால் மெல்ல வருடினாள்.

    உடலின் சக்தி எல்லாம் வடிந்து பஞ்சு மிதப்பது போல் இருந்தது. புத்தகத்தைத் திரும்ப எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு வந்து படுக்கையில் விழுந்தவள், தலையணையை அழுத்திக் கொண்டு, நினைவுகளை அழுத்தி உள்ளே தள்ள முயன்றவாறு உறங்கி விட்டாள்.

    காலையில் எழுந்த போது, வீடு நார்மலாக இருந்தது போலத் தோன்றியது. அருண் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாற் போல இருந்தது. யோகா செய்து முடித்து விட்டு, லைட்டாகக் காலை உணவைப் பழங்கள் ப்ரெட் டோஸ்ட் என முடித்துக் கொண்டாள். உறங்கிக் கொண்டிருந்தாலும் கூட அருணை எழுப்பி விடைபெற்றுக் கொண்டு கிளம்புபவள் இன்று காலை அதைச் செய்யாமலே கிளம்பி விட்டாள்.

    இப்போது வீடு திரும்பியதும் அருணை எதிர்கொள்ளும்போது எப்படி, என்ன பேச வேண்டும் என்று யோசித்து மனதிற்குள் தயார் செய்து கொண்டாள்.

    *****

    அரைமணி நேரம் ஊறி விட்டதால், தாரா திரும்ப அந்த அறையின் வாசலில் தோன்றிப் புன்னகைத்தாள். “ஷாம்பூ போட்டுக்க ரெடியா மேடம்?”என்றபடி.

    தாரா இரண்டாவது முறையாகக் கருவுற்றிருக்கிறாள். ஆறேழு மாதங்கள் இருக்கும். வயிற்றைச் சுமந்தபடி ‘துரு துரு’வெனப் பம்பரமாகச் சுழலுகிறாள். முதல் குழந்தைக்கு ஐந்து வயதாகிறது. கணவன் டிராவல் ஏஜன்சி வைத்து நடத்துகிறான். ஷீலாவின் உள் வெளிநாட்டுப் பயணங்கள் அனைத்தையும் ஏற்பாடு செய்து தருவது அவன்தான்.

    டவலை எடுக்க முன்பக்கம் சென்ற தாராவைப் பார்த்து, ” ஹவ் இஸ் ரமேஷ்?” என்று கேட்டாள் ஷீலா. “மிகவும் நன்றாக இருக்கிறார்,” என்றபோது தாராவின் கண்களில் தாரகைகள் சுடர்விட்டன. அது ஷீலாவின் பார்வைக்குத் தப்பவில்லை. கழிவிரக்கத்தில் உள்ளம் சிறுபொழுது திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து பொருமியது.

    ‘என் கண்களில் எவ்வளவு தாரகைகள் சுடர்விட்டன தெரியுமா? தாரா…. வாழ்வே வண்ண மயமாக இருந்தது. ஆனால் மிகச் சில நாட்களுக்கே,’ என்று தாராவின் கரங்களைப் பிடித்துக் கொண்டு கதறவேண்டும் போல இருந்தது.

    முடியுமா?  முடியாதே.  டாக்டர் ஷீலா ராபர்ட்ஸ் என்றால் இரும்பைப் போன்ற உறுதியான மனமும், உழைப்பும், எறும்பைப் போல சுறுசுறுப்பும் கொண்டு, பெண்மையின் நளினமும், நாகரிகமும் பொங்கி வெளிப்படும் ஒரு சூப்பர் வுமனாகத்தான் அவளை இந்த ஊரே உலகே அறியும். அந்த கணிப்பை மாற்றிவிடச் சுலபத்தில் முடியுமா என்ன?

    தாராவின் விரல்கள் தன் தலை முடியினுள் நுழைந்து பரந்து ஷாம்பூவை நுரைத்துக் கொண்டிருந்த சுகானுபவத்தில் ஷீலாவின் காலக்கப்பல் பின்னோக்கி ஓடி விட்டிருந்தது.

    *****

    5

    மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா
    பங்கயக் கைந்நலம் பார்த்தல்லவோ இந்தப் பாரில் அறங்கள் வளருமம்மா…

    சனிக்கிழமை மாலை. வெங்கடேசனின் வீடு கல்யாணக்களை கட்டியிருந்தது. நாளைக்காலை ரயிலில் ஜானகி தன் குடும்பத்தினருடன் வருகிறாள். அலமேலுவும் பாட்டியுமாகச் சமையலறையில் வெகு மும்முரமாகப் பட்சணங்கள் செய்து கொண்டிருந்தார்கள்.

    “சைலு, இங்கே வா. இந்த முந்திரிப் பருப்பை விண்டு உடைச்சுக் கொடு,” என்று பொட்டலத்தை அவளிடம் நீட்டிய பாட்டி, “அலமு, அடுத்தபடியாக நெய்யை விட்டு முந்திரிப் பருப்பை வறுத்தெடுத்துக்கோ. பர்பியைக் கிளறிக் கொட்டி பரப்பப் போற தட்டிலே முதல்லே அந்த வறுத்தெடுத்த பருப்பைக் கொட்டிப் பரப்பு. மேலே பர்பியைக் கொட்டிப் பரப்பினால், கட்டிகளா வெட்டி எடுக்கிறப்போ முந்திரி எல்லாம் மேலே இருக்கும். பார்க்க அழகா இருக்கும்,” என்று கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தாள். ஏலமும் பச்சைக் கற்பூரமும் மணத்தன.

    “அம்மா,” வாசலில் பியூனின் அழைப்பு. “புதுசாக் காய்கறி கிடைச்சா நிறைய வாங்கிட்டு வான்னாரு அய்யா. பிஞ்சா அவரைக்காயும் கத்திரிக்காயும் இருந்திச்சு. தக்காளி, முருங்கைக்காய் ரெண்டும் பக்கத்திலே ஒரு தோட்டத்திலே இருந்து பறிச்சுக் கொடுத்தாங்க,” என ஒரு பெரிய பையை வாசல் திண்ணை மீது வைத்தான்.

    “என்ன முருகேசா, காயெல்லாம் கிடைச்சுதா?” என்றபடி வந்த வெங்கடேசன், “அலமு, இந்தக் காபிப் பொடியைத் தனியா வை. ஸ்பெஷல் பிளான்டேஷன் மிக்ஸ். புதுசாப் பொடிபண்ணி வாங்கிண்டு வந்திருக்கேன். ஜானகி, அத்திம்பேர் எல்லாரும் அசந்துடணும் காபி வாசனையிலே,” என உற்சாகமாக ஆர்ப்பரித்தார்.

    “அட குட்டி மாமி, என்ன பண்ணறேள் நீங்களும் சமையல் கட்டிலே,” எனச் சைலாவிடம் விளையாட்டாக விசாரித்தார்.

    “ஒண்ணுமில்லேப்பா. நான் கொஞ்சம் திலகாவோட பேசிட்டு வரேம்பா,” என்று செல்லமாகக் குழைந்த மகளைப் பாசமிகுந்த பார்வையால் வருடியவர், “தாராளமாகப் போயிட்டு வாம்மா,” என உத்தரவு கொடுத்தார்.

    “விளக்கேத்தினப்புறம் என்ன ஊர்சுற்றல், வயசுக்கு வந்த பொண்ணு,” என்று முணுமுணுத்த அலமுவிடம், “பக்கத்து வீடுதானே, ஏன் கிடந்து அலட்டிக்கிறே,” என்று கடுகடுத்து விட்டு, “அம்மா, ஒரு அரை தம்ளர் காபி தாயேன். இலை போட இன்னும் அரைமணி ஆகும் இல்லையா? நான் இங்கே கூடத்திலே ரேடியோ நியூஸ் கேட்டுண்டு இருக்கேன்,” என்றார்.

    காபியைப் பருகிவிட்டு ஏழேகால் நியூஸ் கேட்டவர், பேப்பரைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நாள் முழுதும் ஆபீஸில் வேலை செய்த களைப்பு. சாயங்காலம் மார்க்கட், கடைத்தெரு என்று சுற்றிய அலுப்பு. பேப்பர் மார்பில் தவழத் தலை சாய்த்தபடி, ஈஸிசேரில் லேசாகக் குறட்டை விட்டபடி உறங்கியே போனார்.

    ரேடியோவில் திரைகானம் ஒலிக்க ஆரம்பித்தது. வழக்கமாக அந்த வீட்டில் ‘திரைகான’த்துக்கு அனுமதி கிடையாது. பெண்டிர் இருவரும் சமையல் கட்டில், பர்ஃபி கிளறிக் கொட்டியான பின், ஜானகி பிள்ளை சீனுவுக்குப் பிடித்த பொருள்விளங்கா(!) உருண்டையைச் சுடச் சுட பிடித்துக் கொண்டிருந்தார்கள். திரைகானம் கேட்க ஆளில்லை.

    (தொடரும்)

     

     

     

    Share
  • இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 38

    மீனாட்சி பாலகணேஷ்

    மழலைச்சிறுமியர் தாலாட்டுரைக்கும் திருநெல்லை!

    ame

    சின்னஞ்சிறுமியர் மண்ணால் சிறுவீடுகட்டி, சிற்றிலிழைத்து, விளையாட்டாக, பாவனையாகச் சோறுசமைத்தும், பாவைகளை (பொம்மைகளை) குழந்தைகளாகக் கருதியும் விளையாடுவது வழக்கம். ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் விளக்கப்படும் சிற்றில்பருவத்தில் சிறுவர்கள் வந்து இதனைக் காலால் எற்றி உதைத்து சிறுமியரை அழவைப்பார்கள் எனக் கூறப்படும். விந்தையாக, சிற்றில் இழைக்கும் சிறுமிகளின் இந்த அழகிய விளையாட்டும் பருவமும் பெண்பால் பிள்ளைத்தமிழில் பாடப்படவில்லை!

    இருப்பினும் சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் கூர்ந்து நோக்கினால் வேறு ஏதேனும் பருவத்தில் ஓரிரு பாடல்கள் இக்கருத்தினைக் கோடிகாட்டிப் பாடப்பட்டிருக்கும்.

    அவ்வகையில் இன்று நாம் காண்பது அழகிய சொக்கநாதப்பிள்ளை இயற்றியுள்ள திருநெல்வேலிக் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து இரு பாடல்கள். வெவ்வேறு பருவங்களிலிருந்து எடுக்கப்பட்ட இப்பாடல்கள் சிற்றிலிழைத்துப் பாவைகளுடன் விளையாடும் சிறுமிகளைப் பற்றி நயம்பட உரைக்கின்றது.

    ****

    திருநெல்வேலி எனும் திருத்தலம்! அவ்வூரின்கண் மரக்கிளைகளில் மலர்ந்து மணம்பரப்பும் மலர்களைக் கொண்டு சிறந்துவிளங்கும் சோலைகள்!

    சிறுமிகள் விளையாடும் ஆரவாரம் நம்மை ஈர்க்கிறது! அருகே சென்று அவர்கள் விளையாட்டினை உற்று நோக்கலாமே!

    கமலிக்கு ஐந்துபிராயமே நிரம்பியுள்ளது. தனது இடுப்பில் ஒரு பெரிய சங்கினைக் குழந்தைபோல இடுக்கிக்கொண்டு வருகிறாள். “தாமரையக்கா! எனக்குக் கொஞ்சம் குளத்துநீர் எடுத்துத் தாயேன். இந்தப் பிள்ளையைக் குளிக்க வைக்கோணும்,” என மழலை மாறாத கிளிக்குரலில் தாமரையிடம் வேண்டுகிறாள் கமலி! குளிப்பாட்டியாயிற்று! தனது பட்டுப்பாவாடையிலேயே குழந்தையின் உடலைத் துடைத்துவிடுகிறாள் அவள். கையோடு கொண்டுவந்துள்ள சிறிய மூட்டையிலிருந்து சிறு பட்டுத்துண்டுகளை எடுத்து, தனது கற்பனைக்குத் தோன்றியபடி, தனது சங்குக்குழவிக்கு அணிவித்து அலங்காரம்செய்து அழகு பார்க்கிறாள்.

    ame2
    குழந்தை சிணுங்குகிறதாம்! கவான் எனப்படும் தனது தொடைமீது அந்த மகவை இருத்திக்கொண்டு, “யாரடிச்சு நீ அழறே?” என்று தன் தாய் தம்பிப்பாப்பாவிற்குப் பாடுவதைப்போலத் தானும் பாடி மகிழ்கிறாள். பெரிய பெரிய மலர்களிலிருந்து ஒழுகும் தேனை, அப்படியே அந்த மலர்களின் அடிப்பாகத்தைக் குழந்தையின் வாயில் வைத்துப் புகட்டுகிறாள். “பாரடி! கமலியுடைய பிள்ளை உறங்கியே போச்சு,” என கண்ணம்மா வியக்கிறாள். சிறிது நேரம் சென்றதும், குழந்தை உறக்கத்திலிருந்து எழுந்து விட்டதாகப் பாவனைசெய்து, அதனைத் தன் இடையில் (ஒக்கலையில்) வைத்துக்கொண்டு உலவுகிறாள்: “பாப்பா, இங்கபாரு பட்டாம்பூச்சியை, இந்தப்பூ அழகா இருக்குதல்லவா? உனக்குப் பறிச்சுத் தரட்டுமா? அந்தக் கிளியைப் பாரடி கண்ணே!” என்றெல்லாம் ஆசைமொழிகளைக் குழந்தையிடம் பேசியபடி சோலையை வலம் வரும் கமலியைப்போல பல சிறுமிகள். குழந்தைகளுடன் உலவும் தாய்மார்கள் எனப் பல மழலைச் சிறுமிகள். ஆங்காங்கு நின்று தங்கள் குழந்தைகளின் அருமைபெருமைகள், வேடிக்கைவிளையாட்டுகளைப் பகிர்ந்து கொள்கிறர்கள்!

    இல்லையில்லை! வாழ்க்கையைப் பழகிக் கொள்கின்றனர்.

    ame1
    இதுவே இந்தப் பாவை விளையாடலின் இரகசியம். தமது தாயைப் பார்த்துத் தாமும் இவைகளைச் செய்யக் கற்றுக் கொள்கின்றனர்.

    பின்பு அக்குழவிகளை தமது மடியில் கிடத்திக்கொண்டு அழகு செய்கின்றனர். காதல்கணவனுடன் ஊடல்கொண்ட மகளிர் வெறுப்பில் அறித்தெறிந்த ஒளிமிகுந்த அணிகலன்கள் அங்கும் இங்கும் சிதறிக் கிடக்கின்றன! அவற்றைத் தேடி எடுத்து, அவற்றின் மணிகளைக் கோத்துத் தமது பாவைக்குழவிக்கு அணிவிக்கிறாள் பூங்குழலி. “அழகா இருக்கில்ல என் பாப்பா?” என்ற கேள்வி வேறு!

    பின்பு, “உறங்கு கண்ணே!” எனத் தாலாட்டினையும் இசைக்கிறாள். இவ்வாறு தமது குழவிகளைக் கொஞ்சி விளையாடும் பல மழலைச் சிறுமியர் நிறைந்த ஊர் அன்னை காந்திமதி உறையும் நெல்லையம்பதியாம். அந்த அன்னையை ஒரு குழந்தையாக்கி அவளுக்கும் தாலாட்டு இசைக்கிறார் புலவர் அழகிய சொக்கநாதப்பிள்ளை. மலர்கள் நிறைந்த அழகிய கருங்கூந்தலை உடைய இக்காந்திமதியம்மை நெல்லைக்கே ஒரு அணிபோல ஒளிருகிறாள். அவளையும் ‘தாலோ! தாலேலோ!’ எனக் கண்வளர வேண்டுவது மிகப் பொருத்தமாக இல்லை?

    கோட விர்சீர் செழுஞ்சோலைக் குறும்வால்
    வளையைக் குழவியெனக்
    கொண்டு புனைசிற் றாடைமன்னிக் குளிர்நீ
    ராட்டிக் கவானிருத்திப்
    பாடல் வரிப்பூ முளரியிதழ்ப் பசுந்தேன்
    எடுத்து வாய்புகட்டிப்
    பரிந்தொக் கலைவை த்துலவிநனி பாராட்
    டுதம் மடிக்கிடத்தி
    ஊடன் மடவார் வெறுத்தெறிய வொளிர்பன்
    மணிகோத் தணிந்துகொஞ்சி
    உறங்கா யுறங்கா யெனத்தாலாட் டுரைத்து
    மழலைச் சிறுமியர்மிக்
    காடல் புரியுந்திரு நெல்லைக்கணியே
    தாலோ தாலேலோ
    அலர்ப்பைங் கூந்தற் காந்தைமதி யம்மே
    தாலோ தாலேலோ.

    (நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- அழகிய சொக்கநாதப்பிள்ளை- தாலப்பருவம்)

    அனைத்துச் சிறுமிகளையும் போல அன்னை காந்திமதியும் சிறுமியாகிச் சிற்றிலிழைத்து, சிறு அடுப்பை மூட்டி, சோற்றினைச் சமைத்து மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கிறாள். தாய் அவளுக்கு அலங்காரம் செய்ய ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறாள். குழந்தையை ஆசையாக அழைக்கிறாள்:

    மும்முரமாக பாவனைச் சமையலில் ஈடுபட்டிருப்பவளின் நெற்றியில் வியர்வை அரும்பியுள்ளதாம். ‘அதனைத் துடைத்துவிடுகிறேன் வா அம்மா!’ என்கிறாள் தாய். ‘மணல்வீடமைத்து, உண்பதற்காக முத்துக்களைக்கொண்டு சோறு சமைத்திருக்கிறாயே கண்ணே! அதைக் கொஞ்சம் எனக்குத் தருவாயோ?’ என ஆசையாகக் கேட்கிறாள்.

    ‘விளையாட்டினால், உடலிலும், ஆடைகளிலும் புழுதித்தூள் படிந்துள்ளதே பாப்பா! அதைத் துடைத்து விடுகிறேன், வா,’ என்கிறாள். மேலும், ‘வாசனை மிகுந்த நீரில் உன்னை நீராட்டி, உனக்கு அலங்காரம் செய்து, நீண்ட அழகான கண்களில் மையிடுகிறேன் வா அம்மா! உயர்ந்ததும் மதிப்பே அறிய முடியாததுமான பலவிதமான ஒளிவிடும் அணிகலன்களை உனக்கு அணிவிக்கிறேன்,” என்று ஆசைகாட்டுகிறாள்.

    ‘என் மடியில் இனிதாக அமர்ந்து பாலமுதம் நீ விரும்பியமட்டும் பருகலாம்,’ எனவும் கூறுகிறாள். பெருமை மிகுந்த தமிழில் பாடும் பாடல்கள் பலவற்றையும் கேட்டு உள்ளம் மகிழ்பவள் காந்திமதி அன்னை. திருநெல்லையில் உறையும் அவளை இவ்வாறெல்லாம் வேண்டி வருமாறு அழைக்கிறாள் அன்னை. வாராதிருப்பாளா காந்திமதி அன்னை?

    சிலையொத் தவிர்வா ணுதல்வரம்பிற்
    செறிவேர் வகற்ற வருகமணற்
    சிற்றி லிழைத்தட் டுணுந்தரளச் சிறுசோ
    றெமக்குந் தரவருக
    நிலையைத் தருநின் னுடன்முழுது
    நிறைதூள் துடைக்க வருகவிரை
    நீரிற் குளிப்பாட் டிடவருக நெடுங்கட்
    கணிமை யிடவருக
    விலையெத் திசைக்கும் அடங்காதுமிளிர்
    பொற்பணி பூட்டிட வருக
    மிகவென் மடிமீ திருந்தமுதம் விழைவிற்
    பருக வருகவியன்
    மலையத் தமிழ்கேட் டுளமகிழும் வாழ்வே
    வருக வருகவே.
    வரைமால் வனத்துத் திருநெல்லை வடிவே
    வருக வருகவே.

    (நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- அழகிய சொக்கநாதப்பிள்ளை- வாரானைப்பருவம்)

    பருவங்களாக வரையறுத்துப் பாடப்படாத இரு இனிய சிறுமிப்பருவ விளையாட்டுகளை இப்பிள்ளைத்தமிழில் பாடிச் சொக்கவைத்துள்ளார் சொக்கநாத பிள்ளையவர்கள். இன்னும் வரும் பகுதிகளில் இவை போன்றவற்றைக் கண்டு களிக்கலாம்.

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்.}

    ************

    Share
  • இனி என்னைப் புதிய உயிராக்கி…

     மீனாட்சி பாலகணேஷ்

    3

    ‘கூடிப் பிரியாமலே ஓரிராவெலாம் கொஞ்சிக் குலாவியங்கே….
    பாடிப் பரவசமாய் நிற்கவே தவம் பண்ணியதில்லையடீ….’
    ******************

    திலகாவும் சைலஜாவும் உற்சாகத்தின் எல்லையில் நின்று கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். பள்ளி ஆண்டு விழாவில் ராஜராஜ சோழன் நாடகம் போடப் போகிறார்கள். சைலஜா தான் இளவரசி குந்தவை. குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்தில் காலடி எடுத்து வைக்கும் எல்லாப் பெண் குழந்தைகளும் தங்களை அரசிளங்குமரியென்று பாவித்துக் கனவு காண்பார்கள். சைலஜா போன்ற சிலருக்கே அக்கனவு நாடகத்திலாவது நினைவாகப் போகிறது. அம்மாவின் கிளிப்பச்சை நிற வைர ஊசிப் பட்டுப் புடவை தான் குந்தவையின் உடை. பாக்கி ‘இமிடேஷன்’ நகைகளுக்கு ‘ உமா ஜுவெல்லரியில்’ இருந்து வாடகைக்கு எடுக்கப் பள்ளியில் இருந்து ஏற்பாடாகியிருந்தது.

    ஒத்திகைகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

    சனிக்கிழமை மதியம் சாப்பாட்டுக்குப் பின் திலகா ரகசியமாக வந்து சைலாவைக் கூப்பிட்டாள். அலமுவும் பாட்டியும் சற்றே கண்ணயர்ந்திருந்த நேரம்.

    “என்ன திலகா? நான் இப்போ வந்தா பாட்டி கத்துவா,” என்று ஜாடை காட்டினாள்.

    “எங்கம்மா சரின்னுட்டாங்க. நீயும் வாயேன்,” என ரகசியக் குரலில் அவசரமாக விளித்தவளைத் தொடர்ந்து மெல்ல அடி எடுத்து வைத்தவளாக, கொலுசு சப்திக்காமல் வெளியே வந்தாள் சைலஜா.

    “சைலா, சூப்ரண்டு எஞ்சினியர் வீட்டுத் தோட்டத்துக்கு வேலியா மருதாணிச் செடி தான் இருக்குடீ, நாம போய் இலை பறிச்சுக்கிட்டு வந்தா எங்க அண்ணி அரைச்சு இட்டு விடுவாங்க. உனக்கு நாடகத்துக்கும் அலங்காரமாச்சு. இல்லாட்டி டீச்சர் சிவப்பு மசியால தான் டிசைன் போட்டு விடுவாங்க.” இதைக் கேட்ட உடன் சைலாவின் ஆர்வம் பல மடங்காகி விட்டது.

    “சரி திலகா, உங்கம்மா ஒத்துக்கிட்டாங்கன்னா எங்க பாட்டியும் கோவிச்சுக்க மாட்டாங்க. இரு வரேன்,” மெல்ல, வாயிற் கதவைச் சாத்தி விட்டு வர, இருவரும் ஓட்டமும் நடையுமாக மருதாணிச் செடிகளைத் தேடி ஓடலானார்கள்.

    பருத்தி புடைவையாகக் காய்த்தது மாதிரி சூப்ரண்டு எஞ்சினியர் மனைவி மரகதம், வேலைக்காரி வேலாயியை விட்டு மருதாணி பறித்து அரைக்கச் சொல்லியிருந்தாள். இவர்களைக் கண்டதும், “வாங்கடி பெண்களா, எங்காத்து ராதாவுக்கு நாளைக்குப் பூச்சூட்டல். மருதாணி இட்டு விட வேலாயி அரைக்கிறா. நீங்களும் அதிலேயே எடுத்து இட்டுக்கலாம், நிறைய இருக்கு,” என்று தாராள மனசுடனும் முகம் கொள்ளாத சிரிப்புடனும் கூறவே, இரண்டு சிறுமிகளும் சந்தோஷத்தில் மிதந்தனர்.

    மரகதம் மாமியின் கை ‘பர பர’வென்று வேலை செய்யும். விராளி மஞ்சள், பாக்கு, செப்புப் பைசாக் காசு எல்லாம் வைத்து அரைத்த மருதாணியை முதலில் ராதாவுக்குக் கால்களிலும் கைகளிலும் அழகாக இட்டு விட்டாள். ஆவல் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்த இவர்களை நோக்கி, “வாடி இங்கே, கையைக் காட்டு,” என்று உரிமையோடு சைலஜாவை இழுத்து உட்கார்த்தி, அவள் கையிலும் மருதாணி இடலானாள்.

    “என்ன விஷயம்? திடீர்னு மருதாணி ஆசை ரெண்டு பேருக்கும்?”

    திலகா வெட்கப்பட்டுக் கொண்டு பேசாமல் சைலாவைப் பார்த்தாள்.

    “மாமி, எங்க ஸ்கூல்லே ஆண்டு விழா. அதிலே நாடகத்திலே நான் இளவரசி குந்தவையா நடிக்கிறேன். ஒரு சின்ன டான்சும் ஆடணும். அதான்,” என்று உற்சாகமாகச் சைலஜா கண்கள் பளபளக்க விவரித்தாள்.

    “அடி சக்கை! அப்படியா சேதி? பின்ன யாராம் வேங்கி நாட்டு இளவரசன் விமலாதித்தன்? உங்களுது தான் பெண்கள் பள்ளிக்கூடமாச்சே? யாராவது ஒரு பெண் தான் இல்லையா?” என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டு குறும்புத்தனமாக ராதா கேட்ட போது சைலஜாவை வெட்கம் பிடுங்கித் தின்றது.

    “திலகா தான் விமலாதித்தனா நடிக்கிறா,” என்றாள்.

    “அப்போ உனக்கு மருதாணி இட வேண்டாமாக்கும். பரவாயில்லை. இந்தா, உங்க அண்ணி, அம்மா எல்லாருக்கும் கொண்டு போய்க் கொடு,” என்று அரைத்த மருதாணியை பெரிய சாத்துக்குடி அளவில் உருட்டி இரண்டு உருண்டைகளை ஒரு வாழையிலையில் வைத்து மடித்துத் திலகாவின் கையில் தந்தாள் மரகதம் மாமி.

    “நல்லாக் காஞ்ச பிற்பாடு ராத்திரி சாப்பாட்டுக்கு முந்தி களுவினாப் போதும் புள்ளே,” என்று சொல்லியனுப்பினாள் வேலாயி.

    சைலாவுக்கு வீடு திரும்ப மனமேயில்லை. ராதா அக்காவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, அவளைப் பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்க வேண்டும் போல இருந்தது. ராதாவின் அன்பான குறும்பான பேச்சும், அந்தக் குடும்பத்தினரின் தோழமையும், சகஜ பாவமும், தாய்மையின் விளிம்பில் ராதா நின்ற கோலமும் சைலாவின் மலரும் கனவுகளுக்கு மிக சுவாரஸ்யமான இலக்காயிருந்தன. சைலாவுக்குக் கற்பனைகள் அதிகம். ராதாவைப் போன வருடம் ஒரு திருமணத்தில் பார்த்து விட்டு அவளைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாக நின்று கூடிய சீக்கிரமே அவளை மணந்து கொண்ட கஸ்தூரிரங்கன் மாமா சைலாவைப் பொறுத்த வரை ஒரு பெரிய ஹீரோ.

    அவரைப் பற்றிப் பேசும்போது ராதாவின் முகம் தாமரை போல விகசிக்குமே, சைலஜாவுக்கு அது காணக் காணத் தெவிட்டாத காட்சி. சிறிது நாணம், பொங்கி வழியும் காதல், நிரம்ப உரிமை எல்லாம் கலந்த ஒரு விகசிப்பு அது. தான் அது போன்ற அந்த நூதன உணர்வை என்று அனுபவிப்போம் என்று விரியத் தயராக நின்ற மொட்டு ஏங்கி நின்றது.

    ஆனால் அவள் ஏக்கங்களும், கனவுகளும் ஒரு இளவரசனையும், தன் காதல் சாம்ராஜ்யத்தையும் மட்டும் சுற்றி உலா வருவதில்லை. திடீரென்று குதிரை வேகமெடுத்து உயரத் தாவி விடும். ‘டாக்டர் சைலஜா, எம். பி. பி. எஸ். என்று போர்டு மாட்டியிருக்கும். எல்லா பேஷண்டையும் பார்த்து மருந்து கொடுத்து அனுப்பினப்புறம் வாசலில் ‘அவர்’ காரோட காத்துக் கொண்டிருப்பார். ஏறிக்கொண்டு வெளியிலே கிளம்பிடுவோம்’, என்ற ரீதியில் முகமில்லாத ஒரு ‘அவர்’ சைலஜாவின் பேதைமை நிறைந்த சிந்தையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தார்.

    **********************

    bm

    பள்ளி ஆண்டு விழா தினம். மேடையின் பின்புற அறைகளில் அலங்காரங்கள், வேஷங்கள் தயாராகிக் கொண்டிருந்தன. திலகா மஞ்சள் பட்டாடை உடுத்தி, தோலின் நிறத்திலான ஆடலரசின் சட்டை ஒன்றை அணிந்து கொண்டு, மார்பில் புரண்ட மணிமுத்து மாலைகளும், பட்டு உத்தரீயமுமாக, அழகான பிறைச் சந்திர வடிவில் அமைந்த ஒரு சந்தனப் பொட்டும், காதில் அணிந்த குண்டலங்களுமாக, மையில் வரைந்து கொண்ட அரும்பு மீசையில், குறும்பும் கம்பீரமுமான ஆணழகனான விமலாதித்தனாக நின்றாள், நின்றான்!

    தமிழ் டீச்சர் ருக்மிணி, குந்தவைக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்ட சைலஜாவுக்குப் பெருமை தாங்கவில்லை. உள்ளம் எழுச்சியில் விம்மியது. “ஏய் திலகா, இவளுக்கு நல்லா ஒரு அழகான பொட்டு நெத்தியில் எழுதி விடறியா?” என்ற ருக்மிணி டீச்சர், ராஜராஜனின் பக்கம் திரும்பி, அவனுடைய பஞ்சகச்சத்தைச் சரி செய்யலானாள்!

    செஞ்சாந்துக் குப்பியுடனும், சிறிய குச்சியுடனும், குந்தவையான சைலஜாவின் பக்கம் திரும்பி, அவளை நெருங்கி, நெற்றியில் மயில் போன்ற ஒரு வடிவை எழுத விமலாதித்தனாக நின்ற திலகா முற்பட்டாள். மூச்சை லேசாக்கிக் கொண்டு சிரத்தையாக நின்ற சைலாவின் கண்கள் திலகாவின் முகத்தை ஏறிட்டன. திடீரென, திலகாவிற்குப் பதில், யார் இது? ஒரு இளம் வாலிபன், ஆடலரசு தான் நிற்கிறானா?- தன் நாட்டியத்தை அவன் ஒளிந்து நின்று ரசித்தது நினைவிற்கு வந்தது.

    இடது கையால் சைலாவின் முகவாய்க்கட்டையைப் பிடித்து நிமிர்த்தி, தன் உத்தரீயமும் புஜங்களும் அவள் தோள்களிலும் கன்னத்திலும் படுகின்ற சிந்தையே இன்றி, நெற்றியில் எழுதும் செஞ்சாந்துப் பொட்டின் அழகொன்றே பொருட்டாக முனைந்திருந்த அந்த இளைஞனின் (திலகா தான்!) முகத்தில் லயித்து சைலஜா மயங்கினாள். பதின்மூன்று வயதில், இனிய கன்னிப் பருவத்தின் தலைவாசல்- உடலும் உள்ளமும் மலரத் தயார் என்று சொல்லாமல் சொல்லி, துள்ளாமல் துள்ளின.

    இந்த வினோதமான உணர்வுகளைப் பூரணமாக உணர்ந்து கொள்ள சைலஜாவால் இயலவில்லை. இந்த மாதிரியான எண்ணங்கள் தவறோ என்ற பயம் அடிமனதில் நெருடிக்கொண்டே தான் இருந்தது. ஆனால் சிறகுகளை விரித்து உல்லாசத்துடன் குதி போடும் மனது கட்டுக்கடங்காமல் அல்லவா பறக்கிறது?

    இந்த சுந்தரக் கனவிலிருந்து விடுபட அவளுக்கு மனமே இல்லை. விமலாதித்தன் பால் காதல் வயப்பட்ட குந்தவையாகவே மாறி விட்டாள். அந்த லயிப்பிலிருந்து மீளாமலே நாடகம் நடந்ததும், தான் நடனம் ஆடியதும், பலத்த கைதட்டலும், எல்லாம் முடிந்து பெற்றோருடன் வீடு திரும்பியதும், பாட்டியும் திலகாவின் அம்மாவும் இரு பெண்களையும் ஜோடியாக உட்கார வைத்து திருஷ்டி சுற்றிப் போட்டதும் எல்லாமே கனவு போலத்தான் இருந்தது.

    *********************

    உறங்கி விட்டாள் என்று நினைத்து அம்மா அப்பாவிடம் சொல்வது காதில் விழுகிறது. “என் கண்ணே பட்டு விடும் போல் இருக்குன்னா. இந்தப் பேச்சும் ஓட்டமும் ஆட்டமும் எத்தனை நாளைக்கோ? நாளைக்கே பெரியவளாகி விட்டால் பாவம், அடக்க ஒடுக்கமாகத் தான் இருக்கணும் …”. சைலாவுக்குத் திக்கென்றிருந்தது. “பாவம் குழந்தை,” என்று வெங்கடேசனின் கரம் அவள் தலையை வருடியது. தூக்கத்தில் திரும்புவது போலத் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

    கனவில் திரும்பவும் உருவமற்ற ‘அவர்’ முகம் வந்தது. ஒரு சமயம் விமலாதித்தனாக- மறு பொழுது ஆடலரசாக- ச்சீ, அது எப்படி முடியும்? கனவுகளின் அழுத்தம் தாளாமல் விழிப்பு வந்தது. கூடவே ஒரு வினோத உணர்வும், இனம் புரியாத உடல் அயர்வும் தவிப்பும்; தாயுடன் பகிர்ந்து கொண்டபோது சிறுமி சைலஜா இளங்கன்னியென மலர்ந்து விட்ட செய்தி புரிந்தது.

    (தொடரும்)

    ****************

    Share
  •  இனி என்னைப் புதிய உயிராக்கி… (2)

    – மீனாட்சி பாலகணேஷ்

    நீரில் மிதக்கும் அன்னப்பறவையெனத் தரையில் வழுக்கியபடி வந்து நின்றது ஒரு வெள்ளை நிற ‘மெர்ஸிடிஸ்’ கார். டிரைவர் மாத்யூ தன் சீட்டை விட்டிறங்கி ஓடிவந்து பின் கதவைத் திறந்து பிடித்தார். ஓரு அழகிய ஃபாஷன் மாடலினுடையதைப் போன்ற கால்கள் தென்பட்டன. சணலினால் அழகாகப் பின்னிய வார்கள் கொண்ட குதிகால் உயர்ந்த இத்தாலியன் காலணிகள் வெண்புறா போன்ற பாதங்களைக் கவ்வியிருந்தன. அந்தப் பாதங்களின் அழகு நன்கு தெரிய வேண்டுமென்பதற்காகவே கணுக்கால் மட்டுமே வரும் ஒருவிதமான பான்ட்டை அணிந்திருந்தாள் அக்கால்களுக்குரிய பெண்மணி. நாகரிகத்தின் உச்சிக் கொம்பில் நிற்பவளாகத் தென்பட்ட அந்த நடுத்தர வயது மாது ஒரு செயற்கை முறுவலுடன் வண்டியிலிருந்து இறங்கியவள், “தாங்க்யூ மாத்யூ,” என்றபடி தன் கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு  ‘பாப்’ செய்யப்பட்ட தலைமுடியை ஒருமுறை உலுக்கிக் கொண்டவள், ‘டக் டக்’கென ஒரு ஜாதிக் குதிரையின் லயத்தோடும் மிடுக்கோடும் நிமிர்ந்த நன்னடையிட்டு கட்டிடத்தின் உள்ளே நுழைந்தாள்.

              “குட்மார்னிங் மேடம்,” பரபரத்த ரிசப்ஷனிஸ்டின் தேனொழுகல்.

              இவளை எதிர்பார்த்தே வந்தது போல் வந்து நின்ற girl‘லிஃப்டி’ல் இருந்து வெளிப்பட்ட பர்சனல் செக்ரெட்டரி  ப்ரியா, மாத்யூ தந்த ‘ப்ரீஃப்கேஸை’ வாங்கிக் கொண்டு, தன் பாஸுக்கு காலை வணக்கம் கூறினாள். இப்போது இருவரையும் தன்னுள் அடக்கிக் கொண்ட ‘லிஃப்ட்’ அந்தக் ‘கார்ப்பரேட்’ மாளிகையின் மூன்றாவது தளத்துக்கு விரைந்தது.

              ‘மெத்’தென்ற கம்பளம் விரித்த பார்வையாளர்களின் ‘லவுஞ்சை’த் தாண்டி,  அழகான மர வேலைப்பாடு செய்யப்பட்டு ‘டாக்டர் ஷீலா ராபர்ட்ஸ், எம்.டி.’ என்ற போர்டு போட்ட அறைக்குள் நுழைந்தாள் ஷீலா என்ற அந்த மாது. ஏசியின் குளுமையில் ‘மெத்’தென்ற நாற்காலியில் அமர்ந்தவள், தனது ‘ரா சில்க்’ சட்டையின் மேல் பித்தானைத் தளர்த்திக் கொண்டு, நாசுக்காக விசிறிக் கொண்டாள்.

              தன் எஜமானியின் விருப்பு வெறுப்புகள், சமயத்துக்கேற்ற மனநிலையை சாமர்த்தியமாக ஊகித்தறியும் ப்ரியா, அறையின் கோடியிலிருந்த ‘ஃப்ரிஜ்ஜை’த் திறந்து, “எது வேண்டும்?” என வினவ, ஷீலா, ” நான் ஒரு லிம்காவுடன் நாளைத் தொடங்குகிறேன்,’ என்று ஆங்கிலத்தில் விடையிறுத்தபடி, கண்களை இரு நிமிடங்கள் மூடிக் கொண்டு அந்த நாளின் ‘அப்பாயின்ட்மென்ட்’களைப் பற்றி யோசித்தாள்.

              பத்தரை மணிக்கு சீனியர் ஆபீசர்களுடன் ஒரு டிஸ்கஷன். முக்கியமாக ‘குவாலிடி கன்ட்ரோல்’ பற்றிச் சில புகார்கள் வர ஆரம்பித்திருந்தன. அதை நினைத்ததுமே எரிச்சல் ‘கும்’மென்று மூண்டது. ‘மரமண்டை’ என்று ராதாகிருஷ்ணனை மனதிற்குள் திட்டிக் கொண்டாள். பன்னிரண்டரை மணிக்கு ‘க்ளீவ்லாண்டி’ல் இருந்து வந்திருக்கும் கெமிக்கல் எஞ்சினியர்களுடன்  ‘தாஜ்’ ஹோட்டலில் மதிய உணவு. இரண்டரை மணிக்கு அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபீஸருடன் அந்த வருடத்திய போனஸ், சம்பள உயர்வு, பிரமோஷன்கள் பற்றிய டிஸ்கஷன்- பின்பு நாலரை மணிக்கு………’ எனப் பட்டியல் நீண்டு கொண்டே போயிற்று.

              தலையை வலிப்பது போல இருந்தது. ‘உய்ங்க்’ என்ற வண்டின் ரீங்காரம் போல் சிறியதாக ஆரம்பித்து வலுக்க ஆரம்பித்தது. நேற்றைய இரவின் மிச்சங்கள் இன்னும் அடிமனதில் கனன்று, கசந்து கொண்டிருந்தன.

              ‘லிம்கா’வுடன் வந்து நின்ற ப்ரியா, ஷீலாவின் மூடிய கண்களையும் தன்னையறியாமல் விரல்கள் நெற்றிப் பொட்டை அழுத்தியதையும் பார்த்தவள், ஷீலாவின் கையைப் பற்றி அதில் லிம்கா பாட்டிலைத் திணித்தாள். “தலையை வலிக்கிறதா? ராத்திரி தூக்கமில்லையா ஷீலா?” என்றபடி அவள் பின்புறமாக நின்று கொண்டு உரிமையுடன் நெற்றிப் பொட்டை இதமாக நீவி விடலானாள்.

              ப்ரியா மிகச் சூடிகையான பெண். மற்றவர் முன்னிலையில் எஜமானி- அந்தரங்கக் காரியதரிசி என்ற இடைவெளிக்கு மதிப்புக் கொடுத்து நடப்பவள். ஷீலாவின் உற்ற தோழி; அவளுடைய அந்தரங்கங்களை அறிந்து அறிவுரை கூறவும், கடிந்து கொள்ளவும், ஆறுதல் பகரவும் ஏற்ற ஆருயிர்த் தோழி. இல்லாவிடில் ஷீலா போன்ற ஒரு பெண்ணிடம் வேலை செய்து குப்பை கொட்ட முடியுமா?

              அமைதியான ஐந்து நிமிடங்களின் பின், “போதும் ப்ரியா, தாங்க்ஸ்,” என்றாள் ஷீலா. “நாலரை மணிக்கு ப்யூட்டி பார்லர் அப்பாயின்ட்மென்ட்டையும் எப்படியாவது புகுத்தி விடேன், தலையில் ஆயில் மஸாஜ் பண்ணிக் கொண்டால் நன்றாக இருக்கும் போல இருக்கு,” என முனகினாள்.

              “ஓகே. ஆயிற்று. நீங்கள் உங்கள் நாளைத் தொடங்கத் தயாரா?,” ப்ரியா.

              “சரிடி, ஒரு பத்து நிமிஷம் கூடக் கொடு,” செல்லமாகக் கடிந்து கொண்ட ஷீலா, தன் கைப்பையைத் திறந்து ஏதோவொரு மாத்திரையை வாயிலிட்டுக் கொண்டாள். வானிடி கேஸை எடுத்துக் கொண்டு தனது பிரத்தியேக உபயோகத்துக்காக உள்ளடங்கி, எம். டி. யின் ஆபீஸின் கோடியில்  ரசனையுடன் அழகுபடுத்தப்பட்டிருந்த டாய்லெட்டை நோக்கி நடந்தாள். பாத அணிகளை உதறி விட்டு வெறும் கால்கள் கார்ப்பெட்டின் மென்மையில் புதையப் புதைய நடந்தாள்.

              ப்ரியா ப்யூட்டி பார்லருக்கு போன் செய்து கொண்டிருந்தாள். ரிசீவரை வைத்தவள் பாத்ரூம் கதவை மூடிக் கொள்ளும் ஷீலாவைப் பார்த்தாள். மனத்தின் ஒரு மூலையில் லேசாக வலித்தது. ஓரு நீண்ட பெருமூச்சுடன் ‘பைல்கள்’ அடங்கிய காபினட்டைத் திறந்து டைரக்டரின் அன்றைய ‘மீட்டிங்’குகளுக்கான பேப்பர்களை எடுத்து அடுக்கலானாள்.

              “ஐ ஆம் ரெடி,” ‘க்ளிக்’ என்று பாத்ரூம் தாள் திறந்ததைத் தொடர்ந்து ஷீலாவின் குரல் அறிவித்தது. சரேலென்று தலையைத் திருப்பி அவளை நோக்கிய ப்ரியா என்றும் போலவே இன்றும் ஆச்சரியப்பட மறக்கவில்லை. மென்மையான வாசனைத் திரவியத்தின் மணம் ஷீலாவுக்கே, அவள் நளினத்துக்கும் கம்பீரத்துக்கும் பொருத்தமாகக் கமழ்ந்தது.  சற்று நேரத்திற்கு முன்பு வரை களைப்பின் சுவடுகள் பதிந்து, சிவந்த கண்களுடன் காட்சியளித்த முகமா இது? அகன்ற விழிகளை அரவணைத்த ‘ஐ லைனர்’, ஆழமான பிங்க் நிற உதட்டுப் பூச்சு அணிந்து துடிக்கும் கோவையிதழ்கள், அலையலையாக ஒயிலாகத் தோளில் உறவாடும் பட்டிழை போன்ற கூந்தல், சவால் விடும் சிறுத்தைப் புலியின் கம்பீரம்…

              ‘இது என் ஷீலா- இனிய தோழி,’ ப்ரியாவின் உள்ளம் பெருமிதத்தில் விம்மியது.

              “என்ன ப்ரியா? என்ன சிந்தனை?” என்று ஷீலா இருமுறை திரும்பக் கேட்ட பிறகே, ப்ரியாவுக்குத் தன்னிலைக்குத் திரும்ப முடிந்தது.

              “நேசிக்கப்பட வேண்டிய ராக்ஷஸி,” என்று மனதிற்குள் முணுமுணுத்தபடி, இன்டர்காம் லைனை எடுத்து சீனியர் ப்ரொடக்ஷன் மானேஜர் ராதாகிருஷ்ணனையும் அவனுடைய அசிஸ்டண்டாகப் புதிதாக வேலையில் சேர்ந்திருந்த பாஸ்கர், லாபரட்டரி சீஃப் ராஜாராமையும் எம்.டி. யின் ஆபீசிற்கு வரக் கூறிவிட்டு, ஷார்ட் ஹாண்ட் புத்தகம், பென்சில் சகிதம் எம்.டி. யின் வலதுபுறம் சற்றுத் தள்ளிப் போட்டிருந்த காரியதரிசியின் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

              டாக்டர் ஷீலா ராபர்ட்ஸ், எம். டி., எஸ். வி. கெமிக்கல்ஸ் தன்னுடைய ‘இன்னும் ஒரு நாளை’ இவ்வாறு தொடங்கினாள்.

      (தொடரும்)

                                               

    Share