Tag: கே. ரவி

  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 5

    கே.ரவி

    ரமணனும் நானும், ஓ, அந்த உறவை எப்படி வர்ணிப்பது! நட்பா, ரசனையா, ப்ரமிப்பா, எல்லாம் சேர்ந்த கலவையா? தெரியவில்லை. வள்ளுவரின் முதிர்ச்சி, கம்பனின் கற்பனை வளம், பாரதியின் உணர்ச்சி, கண்ணதாசனின் எளிமை எல்லாம் அங்கங்கே பளிச்சிடும் அவன் கவித்துவம் மட்டுமே இந்த ஈர்ப்புக்குக் காரணம் என்றும் சொல்ல முடியாது. சில விஷயங்கள் சொல்லுக்கு அப்பாற்பட்டவை. விட்டுவிடுகிறேன்.

    சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் ரமணன் ஒருநாள் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு என்னைக் காண வந்திருந்தான். என் பணியிடம் அதுதானே.

    அங்கே முதல் மாடியில் ஒரு முற்றம் (qudrangle) உண்டு. காற்றாட நின்றுகொண்டு பேசலாம் என்று அங்கே போனால், காற்றே வரவில்லை. சலித்துக் கொண்டேன். உடனே ரமணன் பாடினான்:

    “காற்றே வா கவிதை தா ஆற்றாமை அதைநீ மாற்றாமல் தாகம் என்ற யாகம் பெருகத் தண்ணீர் ஊற்றிவிடு காற்றே வா கவிதை தா”

    பாடி முடிக்கும் முன் வந்ததே காற்று!

    இந்தப் பாடலில் ஓர் அழகான முரண்பாடு, தன்னைக் கவனிக்கச் சொல்லி முரண்டு பிடிக்கிறதே! தாகத்தைத் தணிக்கவும், யாகத்தை அணைக்கவும் தண்ணீர் ஊற்றுவதுதான் வழக்கம். ஆனால் தாகம் என்ற யாகம் பெருகத் தண்ணீர் ஊற்றச் சொல்கிறானே! அதுவும் காற்றை! கவிஞன் சொன்னால் என்ன வேண்டுமானாலும் நடக்குமோ, இயற்கையில்!

    காற்று மட்டும் இல்லை, நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் கவிதைக்குக் கட்டுப்பட்டவை. இதையும் அருட்குறள் மூவாயிரத்தில் ரமணனே சொல்கிறான்:

    “தீயென்றால் காடெரியத் தேனென்றால் பூமகிழ வாய்நின்ற பேரருளே வாக்கு.”

    காலத்தில் இன்னும் சற்றுப் பின் நோக்கிப் போவோமே. 1977ஆம் ஆண்டு, கார்த்திகைத் திருநாள். மந்தைவெளி நார்ட்டன் லேன் வீட்டில், முன் வராண்டாவில் ஈஸிசேரில் உட்கார்ந்திருந்தேன். இருபதாவது பிறந்தநாள் பரிசாகத் தன் மகனுக்கு சாய்வு நாற்காலி (அதற்கு நாலு கால் இருந்ததோ?), வாங்கித் தந்த ஒரே தந்தை என் வளர்ப்புத் தந்தையாகத்தான் இருக்க முடியும்! அந்த சாய்வு இருக்கையில் சாய்ந்து கொண்டு, வெறுமை சூழ்ந்த மனத்தோடு வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன், குறிப்பாக எதையும் பார்க்காமல்.

    வெற்று மனத்துடனோ – ஆழம் மேவிய சிந்தை ஒருமையில் மூழ்கியோ சற்று விழிகுவித்து – நானும் சாய்ந்திருக் கின்ற பலசம யங்களில் கொத்து மலர்க் கூட்டம் – அழகு குலுங்கக் குலுங்கவென் உள்விழி யில்மின்னல் இட்டு மறைந்துவிடும் – அடடா இதுவே இதுவே தனிமையின் பேரின்பம்

    (“For oft, when on my couch I lie In vacant or in pensive mood, They flash upon that inward eye Which is the bliss of solitude”)

    ஆங்கில மாக்கவிஞன் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் அமர வரிகளை அப்போது நினைத்துக் கொண்டேனோ இல்லையோ, இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

    அப்படி நான் சாய்ந்திருந்த அந்தச் சாய்ங்கால நேரத்திலே, சற்று நேரத்துக்கெல்லாம், வெறுமை சூழ்ந்த என் மனத்தில் ஒரு பேரொளி எழுந்து சுடர் விட்டுச் சிரித்தது. அதுவும் வரிசை, வரிசையாக ஒளிச்சுடர்கள். மனத்திலா? அதோ, தெருவெல்லாம், எல்லா வீட்டு வாசல்களிலும்! ஓ, கார்த்திகையாயிற்றே! வீடுதோறும் அகல்விளக்குகள், நிரல்நிரலாக! அந்தக் காட்சியிலிருந்து என் கையைப்பிடித்து வேறொரு ப்ரும்மாண்டமான காட்சிக்கு அழைத்துச் சென்றது காற்று.

    ஒரு சராசரி மனிதனின் பார்வையில் சாதாரண, அன்றாட நிகழ்வாகத் தெரியும் ஒரு காட்சி, சில நேரங்களில் ஒரு கவிஞனை பிரம்மிக்க வைக்கும் ப்ரும்மாண்டத்துக்கு அழைத்துச் செல்லக் கூடும்.

    மாலை மயங்கி இரவாக மாறப் போகும் அந்தி நேரம். கிழக்கு வானில் நிலா உதயம். இது தினமும் நடப்பதுதானே! அன்றும், அதாவது, சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பும் நடந்தது. அதை ஒரு புலவர் பார்த்துவிட்டாரே! போதாதா? பாட்டு வந்தது பாருங்கள், அதுதான்யா பாட்டு!

    “கானெலாம் மலர்ந்த முல்லை ககனமீ தெழுந்த தென்ன வானெலாம் வயங்கு தாரை நிறைநிறை அடர்ந்து தோன்ற வேனிலான் விழவின் வைத்த வெள்ளிவெண் கும்ப மென்ன தூநிலா மதியம் வந்து குணதிசை தோன்றிற் றம்மா”

    காடு முழுக்க மலர்ந்த முல்லைப்பூக்கள் குபீரென்று, தாங்கள் மலர்ந்த செடிகொடிகளை விட்டுப் பிரிந்து, மேலெழுந்து பறந்துபோய் வானத்தை நிறைத்து விட்டதாம்! அப்படி வானம் முழுக்க நட்சத்திரக் கூட்டம் கொட்டிக் கிடந்தது என்கிறார், புலவர். அவற்றுக்கு மத்தியில் நிலா எப்படி வந்து உட்கார்ந்து கொண்டதாம்? மன்மதனுக்கு விழா, அதாவது காமன் திருவிழா, அதில் வெள்ளிக் கும்பம் வைக்கப் பட்டிருக்குமே, அப்படியாம்! நிலா எனப்படும் மதியொளியின் கம்பீரத்தையும், குளுமையையும் அப்படியே படம்பிடித்துக் காட்டும் கவிதையிது. வில்லிபுத்தூர் ஆழ்வார் அருளிய பாரத காவியத்தில் உள்ளது இந்த மகோன்னதமான கவிதை.

    மீண்டும் 1977- மந்தைவெளி, நார்ட்டன் லேனுக்கு வருவோம். அன்று வீடுதோறும் ஏற்றப்பட்ட கார்த்திகை அகல்விளக்குகளின் பேரணியை என்நெஞ்சில் அகலாமல் இடம்பெறச் செய்த அந்தக் கவிதை இதோ:

    காற்றுப் பல்லக்கிலே – செல்லும் கார்த்திகைத் தீபங்களே – உங்கள் காதல் வனப்புகள் ஆடிக் களித்திட ராகங்கள் நான்தருவேன் – இனிய ராகங்கள் நான்தருவேன்

    நேற்று நினைவுகளில் – துள்ளும் நெஞ்சத் துடிப்புகளே – நீங்கள் நேர்வந்தென் கண்முன் நின்று சிலிர்த்திடத் தேகங்கள் நான்தருவேன் – புதிய தேகங்கள் நான்தருவேன்

    (காற்றுப் பல்லக்கிலே)

    புரியாத கதியோடு சுகமான ஜதியோடு நதியாக வந்தாலும் நான்பாடுவேன் – இன்னும் புலராத பொழுதுக்குப் புகைபோடும் மார்கழிப் பனியாக வந்தாலும் பாட்டிசைப்பேன்

    (காற்றுப் பல்லக்கிலே)

    முடியாத பாட்டுக்கு முதலாக என்னுயிரை முழுதாக நான்தந்து விளையாடுவேன் – அந்தப் பாட்டுக்குக் கருவாகிப் பண்ணென்ற உருவாகிப் பாரெங்கும் காற்றாகப் பறந்தோடுவேன்

    (காற்றுப் பல்லக்கிலே)

    காற்றையே பல்லக்காக்கி அதிலேறி அமர்ந்துகொண்டு, மயிலைக் கபாலி கோயில் திருவிழாவில் சப்பரங்களில் போகும் அறுபத்து மூவரைப்போல் தீபங்கள் போகும் அந்த அதியற்புதக் காட்சி, இல்லை, தரிசனம், இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறது.

    முதன்முதலில் இந்தப் பாட்டை நண்பர் வ.வே.சு.வுக்குப் பாடிக் காட்டினேன். என்ன ராகம் என்று கேட்டார். ‘சுபபந்துவராளியில் ஒரு ஸ்வரம் மட்டும் நீங்கல்’ என்று பதில் சொன்னது நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது. அவ்வளவுதான் சாமி நம்ம ராகஞானம்! ஏதோ, காதிருக்கிறது, காற்றடிக்கிறது, வாயசைகிறது, பாடல் வருகிறது, அம்புடுதேன், ஆனால், அம்புட்டும் தேன்!

    பருகலாம், உருகலாம், களி பெருகலாம்.

    இதுவும் தொடரலாம்!

    Share
  • காற்று வாங்கப் போனேன் : பகுதி 3 & 4

    கே.ரவி

    மீண்டும் காற்று வீசுகிறது. சாதாரணக் காற்று இல்லை. சண்டமாருதம் என்று சொல்லப்படும் சூறைக்காற்று. ஒரு நிமிடம் என்னோடு வாருங்கள்; காலப்பரப்பில், அல்லது, காலப் பரபரப்பில், சற்றுப் பின்னோக்கி வாருங்கள். பல நூற்றாண்டுகள் இல்லை. சில ஆண்டுகள் அவ்வளவுதான்!

    நாள்: 1990, கோடை விடுமுறை. நேரம்: பிற்பகல் சுமார் 2 மணி. இடம் ஏலகிரி (வாணியம்பாடி அருகில்). அங்கே, ‘சாந்தாமணி லாட்ஜ்’ என்றொரு விடுதியில் ஒரு பெரிய பட்டாளத்தோடு நான் தங்கியிருந்தேன். நான், ஷோபனா, என் வளர்ப்புத் தந்தை, என்னிரு பெண்மக்கள், அவர்களுடைய தோழர்கள், தோழிகள் சுமார் எட்டுப் பேர், இவர்களோடு என் நண்பனும், அவன் மனைவியும். அப்பா! இப்பொழுது நினைத்தாலும், அப்பொழுது எப்படி இப்படியொரு பெரும்படையோடு ஏலகிரி, கோடைக்கானல் என்று ஆண்டுதோறும் சென்று கொண்டிருந்தேனோ என்று பிரமிப்பாக இருக்கிறது!

    images (5)

    அன்று பிற்பகல், லாட்ஜுக்குள் மின்சாரம் இல்லை. ஒரே புழுக்கம். லாட்ஜின் பின்புறம் இருந்த பெரிய தோட்டத்துக்குப் போயமர்ந்தேன். வெளியிலும் காற்றில்லை. வானத்தில் ஒரே மேக மூட்டம். சற்று இருண்டிருந்தது. அப்பொழுது ஷோபனாவும், என் நண்பனும் அங்கே வந்து நான் ஏன் தனியாக அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறேன் என்று கேட்கவும், ‘காற்று வாங்க வந்தேன், ஆனால் காற்றே இல்லை’ என்று சொல்லிவிட்டுத் திடீரென்று பாடத் தொடங்குகிறேன். பாடல் ப்ருந்தாவனி ராகத்தில், வட இந்திய க்ராமிய வயல்வெளிப் பாடல்களின் சாயலில், மடமடவென்று வருகிறது.

    பாடணும் நான் பாடணும்
    அதக்
    கேட்டுப்புட்டுக் காத்துவந்து தந்தனத்தோம் என்றுதாளம்
    போடணும் நான் பாடணும்“.

    நான் பாடிக்கொண்டே இருக்கிறேன், திடீரென்று பாட்டுக்குப் பின்னணி இசைபோல் ஊய்ய்ய் என்றொரு சத்த்த்த்தம்! காற்று! சூறைக்காற்றில் புழுதி கிளம்பி எங்கள் கண்களை மறைக்க, மரங்கள் தலைவிரித்தாட, இலைகள் பறக்கப் பாட்டு மட்டும் நிற்காமல் தொடர… ஒரே அமளிதான்!

    “பாடணும் நான் பாடணும்austin-rosacrutions
    அதக்
    கேட்டுப்புட்டுக் காத்துவந்து தந்தனத்தோம் என்றுதாளம்
    போடணும் நான் பாடணும்

    பித்தெடுத்துக் காதலுடன் இத்தரையத் தொட்டுத்தொட்டு
    அத்தன மரங்களுமே ஆடணும்
    அத்தன மரங்களுமே ஆடணும்
    சத்தங்கள வுட்டுப்புட்டு சந்தத்துலக் கட்டுப்பட்டுச்
    சத்தங்கள வுட்டுப்புட்டு சந்தத்துலக் கட்டுப்பட்டுச்
    சிட்டுக்குரு விக்கூட்டம் கூடணும்
    நான் பாடணும்

    மேகத்துலத் தோகவிரிச் சாடுகிற வானமயில்
    ஓ ஓ ஓ ஓ
    மேகத்துலத் தோகவிரிச் சாடுகிற வானமயில்
    ராகத்துல சிக்கித்தடு மாறணும் – என்
    ராகத்துல சிக்கித்தடு மாறணும்
    மோகவலை போலவொரு தாளஅலை பின்னிப்பின்னி
    பின்னிப்பின்னிப் பின்னிப்பின்னிப் பின்னிப்பின்னிப் பின்னிப்பின்னி
    மோகவலை போலவொரு தாளஅலை பின்னிப்பின்னி
    மூச்சுத்தெண றும்படிப் பாடணும்
    நான் பாடணும்

    பாட்டுக்கொரு போதையுண்டு போதைக்கொரு பாதையுண்டு
    ஏ ஏ ஏ ஏ
    பாட்டுக்கொரு போதையுண்டு போதைக்கொரு பாதையுண்டு
    பாத்துநடந் தால்பறந் தோடலாம்
    பாத்துநடந் தால்பறந் தோடலாம்
    கூட்டுக்குள்ள நீயிருந்து வாடுறது ந்யாயமில்ல
    கூட்டுக்குள்ள நீயிருந்து வாடுறது ந்யாயமில்ல
    கூடவந்து களியாட்டம் போடலாம் – என்
    கூடவந்து களியாட்டம் போடலாம்

    பாடலாம் நாம் பாடலாம் – அதக்
    கேட்டுப்புட்டுக் காத்துவந்து தந்தனத்தோம் என்றுதாளம்
    போடலாம் நாம் பாடலாம்

    பாட்டு முடிந்து பத்து நிமிடங்கள், காற்றுச் சுழன்று சுழன்று அடித்துவிட்டுக் களைத்துப்போய் மெல்ல விசையிழக்கும் வரை, நாங்கள் எதுவும் பேசிக்கொண்டதாக நினைவில்லை. நான், ஷோபனா, அந்த நண்பன், ஒரு கனத்த மெளனம்!

    அந்த நண்பன் ஒரு நல்ல கவிஞன். நல்ல குரல்வளத்தோடு கணீரென்று பாடும் கவிஞன். கிருஷ்ண பக்தியில் தோய்ந்த கவிஞன். மராட்டிய அபங் பாடல்களை அவன் பாடிக் கேட்க வேண்டும். இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழன் எக்ஸ்பிரஸ் என்ற இதழின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்து, சில ஆண்டுகளுக்கு முன் காலமாம் சூறைக் காற்றால் அடித்துச் செல்லப்பட்ட அந்த நல்ல நண்பன், அமரன் சிவகுமாரை நினைத்துக் கொள்கிறேன்.

    மீண்டும், இல்லை, மீண்டும் மீண்டும் காற்று வரும், வந்து கொண்டே இருக்கும். சந்திப்போம்.

    காற்று வாங்கப் போனேன் – பகுதி 4

     

    மேலே சொன்ன சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னால், அதே ஏலகிரி, அதே சாந்தாமணி லாட்ஜ். அதே நபர்கள். ஆம், ஷோபனா, சிவகுமார், நான். லாட்ஜ் அறையில் அமர்ந்திருந்தோம். அப்பொழுதுதான் ஒரு பாடல் உதயமாகியிருந்தது. வழக்கத்துக்கு மாறாக அதை உடனே எழுதியும் வைத்திருந்தேன். மற்ற இருவருக்கும் நான் பாடிக் காட்டுகிறேன்.

    என் குரல் ஸ்ருதியோடு போராடும் இழுபறியைப் பொருட்படுத்தாமல் என் நண்பர்கள் என்னைப் பாடச் சொல்லி, மன்னிக்கவும், பாடவிட்டுக் கேட்டிருந்ததெல்லாம் நட்புக் கருதியும், எனக்குள் இருந்து வரும் கவிதையூற்றின் மேல் உள்ள மதிப்பினாலும்.

    திணறித் திணறிப் பாடுகிறேன், சிவரஞ்சனி ராகத்தில் (இந்த ராகத்துக்கு ‘சங்கரந்தனப்ரியா’ என்று இன்னொரு பெயரும் உண்டாமே!):

    நினைத்துக் கொள்ள நிமிடம் போதும் – உன்னை
    நினைத்துக் கொள்ள நிமிடம் போதும் – அதை
    நிலைக்க வைக்கும் கவிதை யோகம்
    உனக்கும் எனக்கும் உள்ள பந்தம்
    ஒன்று மட்டும் என்றும் சொந்தம்
    இறைவனே இறைவனே – என்னை
    எழுதிடும் கவிதையே

    மனைவி மக்கள் என்பதெல்லாம்
    மரணம் வரையிலே
    மனையும் பொருளும் தேகத்தைநான்
    மறக்கும் வரையிலே – நீ
    . . . . .

    இந்த இடத்தில் ஏனோ என் தொண்டையடைத்துக் கொண்டுவிட்டது. மேலும் பாட வரவில்லை. நான் திணறுவதைப் பார்த்த சிவகுமார் உடனே என்னிடமிருந்து கவிதைத்தாளை எடுத்து த் தொடர்ந்து வந்த வரிகளைப் பாடியதும் மெய்மறந்து போனேன். அடுத்த சரணத்தை நானே சுதாரித்துக் கொண்டு பாடி முடித்தேன்.

    உன்னை-siva
    நினைத்துக் கொள்ள நிமிடம் போதும்
    நிலைக்க வைக்கும் கவிதை யோகம்
    உனக்கும் எனக்கும் உள்ள பந்தம்
    ஒன்று மட்டும் என்றும் சொந்தம்
    இறைவனே இறைவனே – என்னை
    எழுதிடும் கவிதையே

    மனைவி மக்கள் என்ப தெல்லாம்
    மரணம் வரையிலே
    மனையும் பொருளும் தேகத் தைநான்
    மறக்கும் வரையிலே – நீ
    ஏற்றி வைத்த தீபம் மட்டும்
    அணைவ தில்லையே – எந்தக்
    காற்று வந்து மோதி னாலும்
    கலைவ தில்லையே
    இறைவனே இறைவனே – என்னை
    எழுதிடும் கவிதையே

    உன்னைப் பாடும் எண்ணம் என்னுள்
    யார் விதைத்தது – அந்தப்
    பாட லுக்குள் பரவ சத்தை
    யார் வளர்த்தது
    பாடப் பாடத் திரைய றுந்து
    நான் விழுந்தது
    பாடல் உந்தன் பேர்ம றந்து
    தேன் பொழிந்தது

    உன்னை
    நினைத்துக் கொள்ள நிமிடம் போதும்
    நிலைக்க வைக்கும் கவிதை யோகம்
    உனக்கும் எனக்கும் உள்ள பந்தம்
    ஒன்று மட்டும் என்றும் சொந்தம்
    இறைவனே இறைவனே – என்னை
    எழுதிடும் கவிதையே

    ‘எந்தக் காற்று வந்து மோதினாலும் அணைவதில்லையே’ என்று சிவகுமார் பாடிய மெட்டு வெகு அலாதியாக என்னை ஈர்த்தது. நானே அந்த வரியைப் பாடியிருந்தால் அவ்வளவு அழகாக மெட்டு அமைந்திருக்க வாய்ப்பில்லை. என் மனத்தில் எழுந்த இசைக் காற்றைச் சற்றே திசைத்திருப்பி மலையமாருதமாய் வளையவரச் செய்த சிவகுமாரை மறக்க முடியுமா?

    இப்படியாக என் வாழ்வில் காற்றும் கவிதையும் எத்தனைமுறை உறவாடியிருக்கின்றன!

    முன்பொருநாள், இசைக்கவி ரமணனும் நானும் …..

    (தொடரும்)

    Share
  • காற்று வாங்கப் போனேன் 1&2

    -கே.ரவி-

    tumblr_l7s4lk4qtC1qc5cc5o1_500

    புழுக்கம் தாங்கவில்லை, உஸ் அப்பா! தோட்டத்தில் சென்று அமர்கிறேன். அப்பாடா, ஜில்லென்று ஒரு காற்று (‘காதல்’ இல்லை) என்னைத் தீண்டியது. இல்லை, சீண்டியது. ‘என்ன ஓய், கவிதை வேணுமா?’

    ஏனோ தெரியவில்லை, கவிதையிடம் எனக்கு அப்படியோர் ஈடுபாடு! வெறி! ஆங்கிலத்தில் சொன்னால், an obsession. ஏன்? காரணம் புலப்படவில்லை. என்ன விட்ட குறை தொட்ட குறையோ!

    சிந்தித்துப் பார்த்தால் கவிதையால் பெரிய சமூகப் பயன் இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவே கவிதை பெரும்பாலும் பயன்படுவதுபோல் தோன்றுகிறது.

    இன்னும் சற்று அணுகிப் பார்த்தால் மனத்துக்கு ஒர் ஆறுதல் அளிப்பதாக, அல்லது, மனத்தைப் பண்படுத்துவதாக, இப்படி வேறு சில பயனுள்ள பணிகளைச் செய்யும் சாதனாமாக அது தெரியலாம். இதெல்லாம் என் கவிதைப் பித்துக்குக் காரணமாக இருக்க முடியாது.

    கவிதை எனக்குப் பயன்படுகிறது என்பதை விட, அதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதை விட, ஒரு கருவியாகக் கவிதை என்னைப் பயன்படுத்திக் கொள்கிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. கவிதையை ஒரு சாதனமாகவோ, வாகனமாகவோ என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்னை ஆட்கொண்ட ப்ரபஞ்ச சக்தி அது என்றே நம்புகிறேன். “நம்புவதே வழி என்ற மறைதனை நாமின்று நம்பி விட்டோம்” என்பது பாரதி வேதம்.

    மீண்டும் அறிவு குறுக்கிடுகிறது. அது சொல்கிறது: ‘இதெல்லாம் ஒருவித மாயா வாதம். ஆங்கிலத்தில் delusion என்பார்களே அதை போன்ற ஒரு மனநோய்.’

    அறிவு ஆயிரம் சொல்லும். அதனால்தான் அதைச் சிற்றறிவு என்கிறோம். அதைக் கடந்து போனால்தான் பேறறிவாகிய அருட்கடலில் நீந்த முடியும். கவிதை அந்தப் பேரறிவோடு சம்பந்தப்பட்டது. இதுவும் என் நம்பிக்கை!

    எப்படியாவது தன் உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பே கவிதை எழுதத் தூண்டுகோல் ஆகிறது. அருகிலோ, எதிரிலோ இருக்கும் நபரிடம் தன் வியப்பையோ, சோகத்தையோ, சினத்தையோ, விரக்தியையோ ஒருவன் மிக எளிதாகப் பேசும் மொழியிலேயே பகிர்ந்து கொண்டுவிட முடிகிறது. அருகில், அல்லது, எதிரில் இல்லாத நபர்களுடனும் அதைப் பகிர்ந்து கொள்ள அவன் ஆசைப்பட்டால் அதைப் பிறகு படித்துப் பார்க்கக் கூடிய வகையில் எழுதி வைக்க நேரிடுகிறது. அச்சுத் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப் படாதபோது, எழுதி வைப்பவற்றைத் தக்க முறையில் பாதுகாக்க வசதிகள் இல்லாத போது, தான் சொல்வதைக் கேட்பவர் மனப்பாடம் செய்து அப்படியே பிறருக்குச் சொல்லக் கூடியவாறு சொல்லும் வழக்கம் உண்டாயிற்று. அதற்குச் செய்யுள் நடையே உதவியது.

    பேசும் மொழிகளாகவே இருந்துவிட்ட பல மொழிகளின் நடுவே, செய்யுள் மொழியாக உருவெடுத்ததால்தான், நன்றாகச் செய்யப்பட்டது என்ற பெயர் சம்ஸ்க்ருதத்துக்கு ஏற்பட்டதோ? பேச்சே செய்யுள் நடையில் அமைந்த மொழியாக வளர்ந்ததுதான் தமிழோ?

    அந்த விசாரணையை விட்டுவிடுவோம். மேலே சொன்னது ஓரளவு செய்யுள் தோன்றிய வரலாற்றின் அடிப்படையாக இருக்கக் கூடும். ஆனால், கவிதை . . . ! அதன் கதை வேறு!

    இந்தக் கணத்தில், என் மனத்தின் அடித்தளத்தில், “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்”, என்ற பழைய திரைப்பாடல் மெட்டில், “செய்யுள் என்பதும் கவிதை ஆகலாம்” என்று தொடங்கும் ஒரு முழுப்பாட்டு ஒலிக்கிறது. ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

    “சொல்லும் சொல்லும் சேரும் போது கானமாகலாம்
    சொல்கடந்து செல்லும் போது மோனமாகலாம்
    சொல்மலர்ந்து சுடரெழுந்து ஞானமாகலாம்
    செய்யுள் என்பதும் கவிதை ஆகலாம்”

    “செய்யுள் என்பதும்” என்பதில் உள்ள அந்த உம்மைக்கு எத்தனை உம்மா வேண்டுமானாலும் கொடுக்கலாம். என்ன அழுத்தம்!!

    கவிதை பற்றிச் சிந்தித்து ஒரு கட்டுரை எழுதும்போது இதென்ன குறுக்கீடு? அந்தப் பாட்டையே முணுமுணுக்கும் மனத்தை அடக்க முல்கிறேன். அட, மனத்தின் ஒரு மூலையில் எங்கோ ஒரு கேலிச் சிரிப்பொலி வேறு கேட்கிறதே!

    மன்னித்துக் கொள்ளுங்கள், இந்த அறிவு ரீதியான முயற்சியின் நடுவே ஒரு பாடல் குறுக்கிட்டது போல், வேடிக்கையான காட்சி ஒன்று, மனத்திரையில்தான், இப்பொழுது குறுக்கிடுகிறது.

    1642141-bigthumbnail

    உடல் பிரிந்து வெறும் ஆவியாக, (அப்படித்தானே நாம் சொல்லாக்கம் செய்து கொண்டிருக்கிறோம்!), திரிந்து கொண்டிருக்கும் ஓருயிர் (?), வான்விளிம்பில் தோன்றும் வர்ணஜாலங்களில் தன் நெஞ்சம் பறிகொடுத்து ( ஆவிக்கு நெஞ்சம் உண்டோ?), எப்படியாவது தன் வியப்பையும் பரவசத்தையும் வெளிப்படுத்தத் துடிக்கிறது. அது ஆவியா ஏதாவது தேவதையா? கந்தர்வக் கன்னியா? (எப்படி நான் அதைப் பெண்பால் என்று தீர்மானித்தேன்? என் பெண்ணீர்ப்புச் சக்தியின் தன்முனைப்பே காரணமோ!!!). அதே கணத்தில் பூமியில் நான் வானத்தின் அழகை ரசித்தபடி அதில் மனம் பறிகொடுத்து, மெய்மறந்த நிலையில் இருக்கிறேன். என் துடிப்பும், அந்தத் தேவதையின் துடிப்பும் ஓரளவு ஒரே அதிர்வு நிலையில் ஸ்ருதி சேர்கிறது. என்ன ஆச்சர்யம்! பாடலொன்று ( அடடா, மீண்டும் பாடலா?) குபீரென்று என் உட்செவியில் ஒலிக்கிறது. அதை உருவாக்கியது அந்தத் தேவதையா, நானா, வானா? யார் இதைத் தீர்மானிப்பது? பாடல் முண்டியடித்துக் கொண்டு வருகிறது:

    “நானும் அந்த வானும் இங்கே நந்த வனத்துத் தோழிகள்
    நாளும் இரவும் ஒளியும் நிழலும் நாங்கள் உருட்டும் சோழிகள்”

    யாரோடு யாரைப் பகிர்ந்து கொள்ள யார் பாடும் பாடலிது?

    அறிவைக் கொண்டு சொற்கள் தேடி அடுக்கிச் செய்யும் செய்யுள்கள் வேறு, கவிதை வேறு. அறிவுக்கு உருவாக்கும் ஆற்றல் கிடையாது. கற்பனையின் தனிப்பட்ட சக்தி அது. அறிவு ஆக்கும் கருவி இல்லை. காக்கும் கருவி. “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்பதே வள்ளுவர் வாக்கு. “அறிவினால் ஆகுவதுண்டோ?” என்பதும் வள்ளுவர் கேள்வி. எனவே அறிவு ஆக்கும் கருவி இல்லை. அதனால்தான் அதைச் சிற்றறிவு என்கிறோம். பேரறிவு என்ன என்றால் . . . ., அட, காற்று நின்று விட்டதே! மரம், செடி, கொடிகள் ஆடாமல் அசையாமல் மெளனத்தை அடைகாக்கின்றன. காற்று மீண்டும் வரக்கூடும், வரும். காத்திருக்கிறேன்; வரட்டும், மேலும் எழுதுகிறேன், வந்தால்!

    கரவொலிகள் ஓய்ந்துவிடும் ராக்கா லத்தில்lean-against-the-wind-by-Radu-Voinea
    காதருகே வந்துசில கவிதை சொல்லிப்
    பறந்துவிடும் தென்றலைநீ பார்த்த துண்டா
    பாவனையாய் அதுசொன்ன மந்தி ரத்தை
    மறந்துவிட முடியாது என்றைக் கேனும்
    மனத்துக்குள் இடிமுழக்கம் செய்யும் அன்று
    கரவொலிகள் ஓய்ந்துவிடும் கண்ணீர் சூழும்
    கடலுக்கு நடுவிலொரு தீ உண்டாகும் – கண்ணீர்க்
    கடலுக்கு நடுவிலொரு தீயுண் டாகும்

    கவிதையொரு மனோதர்மம் கலைந்த கூந்தல்
    கற்பனைகள் சிறகடித்துப் பறக்கக் கண்டும்
    புவியெல்லாம் புதுமெருகு தோன்றக் கண்டும்
    புலப்படாது திடீரென்று நடுங்கும் நெஞ்சில்
    தவிக்கின்ற உணர்வுகளில் தனிமை யூற்றில்
    தாகத்தால் மனம்வரண்டு தளரும் போதில்
    சுருக்கென்று முள்குத்திச் சிரித்துக் கொள்ளும்
    சுவடுகளே தெரியாமல் விரைந்து செல்லும் – வந்த
    சுவடுகளே தெரியாமல் விரைந்து செல்லும்

    நேருக்குநேர் அதையும் பார்ப்ப தற்கு
    நிச்சயித்த விழிகளுடன் காத்தி ருந்தேன்
    கார்மேகம் நகர்கிறது கனவு காட்டிக்
    கள்ளநிலா மறைகிறது சாரல் வேறு
    யார்யாரோ வருகின்றார் ஓடு கின்றார்
    அதைமட்டும் காணவில்லை அந்த நேரம்
    இதயத்தைத் தூளாக்கும் சிரிப்புச் சத்தம்
    இருள்கிழிக்க வந்ததொரு வெட்டு மின்னல்
    உதிரத்தைச் சூடேற்றி என்னை நானே
    உறிஞ்சுகிற ஆவேசம் அதற்குப் பேர்தான்
    உன்மத்தம் உயர்கவிதை உணர்ச்சி போதை
    எங்குமே செல்லாத புதிய பாதை

    ஓசைகளின் விளிம்பினிலே ஊஞ்ச லாடும்
    உற்சாகம் உள்மனத்தின் இயக்க மெல்லாம்
    ஆசைகளாய்ப் பரிணமிக்கும் அர்த்த ஜாமம்
    அனுபவங்கள் மலர்கின்ற உதய காலம்
    புரியாத நுணுக்கங்கள் புலனா கின்ற
    புதுப்பார்வை உலகாளும் புலமை யோகம்
    தரிசனக் கடலாடி விட்டு வார்த்தைத்
    தறிகளிலே சிக்குண்டு தவிக்கும் பேதை
    உன்மத்தம் உயர்கவிதை உணர்ச்சி போதை
    எங்குமே செல்லாத புதிய பாதை

     

    காற்று வாங்கப் போனேன் – பகுதி 2

    போன பகுதியை எங்கே நிறுத்தினேன்? நான் நிறுத்தவில்லையே! காற்று நின்றது, கட்டுரையும் நின்றது. காற்றுக்கும் கவிதைக்கும் என்னய்யா சம்பந்தம்? பாடலாகவே வந்தது பதில்:

    மனமலரைத் தென்றல் வருடிவிடும் – ஒளி
    மகரந் தங்கள் சிதறிவிழும்
    தினமிது போல்சில கவித்துளிகள் – எட்டுத்
    திசைகளி லும்விழும் சுடர்ப்பொறிகள்

    (மனமலரை)

    கனவிலி ருந்தொரு துளிவிழலாம் – பல
    காட்சிக ளும்அதில் பதிந்திடலாம்
    ஒவ்வொரு துளியும் ஒருவிதை யாய்ச்சில
    உள்ளங்க ளில்சென்று விழுந்திடலாம் – பே(ர்)
    அண்டங்க ளாயவை மலர்ந்திடலாம்

    (மனமலரை)
    வண்ணமும் வாசமும் போலல்ல வோநம்
    எண்ணமும் கற்பனையும்
    வண்டுக ளாய்ப்பல வார்த்தைக ளைமன
    வாசலில் கொண்டுவரும் – தேன்
    கவிதைகள் மொண்டுதரும்

    (மனமலரை)
    அடிப்படை யில்நாம் ஓருயிரே – வெளி
    அதிர்வுக ளில்பல வடிவங்களே
    என்குரல் உந்தன் உயிர்த்துடிப்பே
    எதிரொலித் தாலதில் தோய்ந்துவிடு – உன்னை
    ஏந்திக்கொண் டாலதில் சாய்ந்துவிடு

    (மனமலரை)

     

     

    Share
  • சாஹஸ மோஹினி நீ

    கே.ரவி

     


    10365964_1412031469078978_5027039259935012318_n

     

    =========================================

    பாடலைக் கேட்க:

    http://www.vallamai.com/wp-content/uploads/2014/06/Saahasa-Mohini_new2.mp3

    =========================================

     

    சாஹஸ மோஹினி நீ – என்
    மானஸ வீணையின் நாள நரம்புகள்
    ராகம் இசைத்திட ராஜஸம் பயில்
    சாஹஸ மோஹினி நீ

    காலையிலே செந்தாமரை நீ – பகல்
    வேளையிலே பொன்னோவியம் நீ – அந்தி
    மாலையிலே நீலோத்பலம் நீ – பின்
    இரவினிலே வரும் பேரமைதி
    சாஹஸ மோஹினி நீ

    கண்களிலே நீ ஒளிவடிவம்
    பண்களிலே நீ களிநடனம் – என்
    எண்ணமெல்லாம் ஒரு ஜீவநதி – அதன்
    ஒவ்வொரு துளியுமுன் சலங்கையொலி
    சாஹஸ மோஹினி நீ

    காதலர் நடுவே காற்றாக – நல்ல
    கவிதையிலே அமுதூற்றாகப்
    புன்னகையில் இளம் கீற்றாகப்
    புயல் இடி மழையென்று கூத்தாடப்
    புதுப்புது வடிவம் எடுப்பவளே – ஒன்றும்
    புரியாததுபோல் நடிப்பவளே
    சாஹஸ மோஹினி நீ

    Share
  • மந்த்ராலயம்

    கே.ரவி

    1980-களில் இசைக்கவி ரமணன் எழுதிப் பாடி எங்கள் குழுவில் மிகப் பிரபலமான பாடல். பல்லவியில் ஹூங்காரமாக ஒரு ஹம்மிங்! அதற்கே வசப்பட்டு ஒரு போதையில் நாங்கள் எல்லாரும் அதையே ஹம் செய்து கொண்டிருப்போம். இந்தப் பாட்டும் என் இசையமைப்பில் (மெட்டு அப்படியே ரமணன் போட்டது. பின்னணி இசை மட்டும் எனது) அமரத்வனி இசைப்பேழையில் ராஜுவின் குரலில் பதிவானது. (அமரத்வனி பேழை 1987 ஆகஸ்ட் மாதம் ம்யூஸிக் அகடமியில் திருமதி ஹேமமாலினி முன்னிலையில் திரு.எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது.)

    ======================================

    இசைக்கவி ரமணன் எழுதிய பாடலை, கே.ரவியின் பின்னணி இசையில், ராஜகோபால் குரலில் இங்கே கேளுங்கள்:

    http://www.vallamai.com/wp-content/uploads/2014/05/En-Manam_new3.mp3

    ======================================

    இசைக்கவி ரமணன் எழுதிய இதே பாடலை அவர் மகன் ஆனந்த் பாடுகிறார். அதனை இங்கே கேளுங்கள்:

    http://www.vallamai.com/wp-content/uploads/2014/05/En-Manam-Ananda.mp3

    ======================================

    என்மனம் நீ வாழ்ந்திடும் மந்த்ராலயம் – ம்ம்ம்ம்
    என்நேரமும் உன்நாமமே சங்கீர்த்தனம்images
    அந்தநாள் பாலைவனம் – உன்
    அன்பிலே ப்ருந்தாவனம் – என்
    அன்னை உன்னில் கனவும் நினைவும் துயிலும்
    (என்மனம்)
    பனித்த கண்கள் குவிந்த கைகள்
    பாதிக் கண்கள் திறந்த பண்கள்
    தனித்த வனத்தில் தாயைத் தேடும்
    மானைப் போல மருளும் நெஞ்சம்
    இனியும் பாதை தேடுவேனோ
    இமையை மறந்தும் மூடுவேனோ
    மலரைத் தேடிப் புலர்ந்த வானம்
    சரணம் சரணம் ராகவேந்த்ரம்

    நினைத்ததில்லை நெகிழ்ந்ததில்லை
    நீண்ட பாதை நடந்ததில்லை
    கனத்த நெஞ்சம் உனது பாதம்
    கனவில் கூடத் தொழுததில்லை
    கங்கையோடு பொங்கும் போது
    கண்கள் அழுத சுவடும் ஏது
    நான்விழுந்த கரையின் ஓரம்
    நாணலாகும் ராகவேந்த்ரம்
    (என்மனம்)

    (ரமணன்)

     

    கே.ரவி

    Share
  • அமரத்வனி

    கே. ரவி

     

    (35 ஆண்டுகளுக்கு முன் ஷோபனா எழுதி என் இசையமைப்பில் எங்கள் இனிய நண்பர் ராஜு என்ற திரு.கே.எஸ்.ராஜகோபால் பாடிய ஒரு பாடல் இது. 1980-களில் வெளியான ‘அமரத்வனி’ என்ற இசைப்பேழையில் உள்ளது. ராஜு ஒரு பெரிய வங்கியின் மேலாளராகப் பணியில் இருந்தார். திரைப்படங்களிலும் சில பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் பாடிய பாடல்களில், “கீரை அறுக்கையிலே கிழக்கு வெளுக்கையிலே” என்ற பாடல் மிகவும் பிரபலமானது. தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் சந்தியா ராஜகோபாலின் கணவர் இவர்.)

    பாடலைக் கேட்க:

    http://www.vallamai.com/wp-content/uploads/2014/05/04.Layame-Sivame.mp3

     

    ஷோபனா ரவி

    shiv2_800x600

     

    லயமே சிவமே தயங்காத காருண்யமே
    மயனால் பிறந்த த்ரிபுரங்களை வெல்ல
    பாணம் தந்த சிலையே
    காலம் வென்ற நிலையே
    (லயமே சிவமே)

    பனியில் பூத்த தழலே – வெண்ணீறு
    கனவு காணும் நிழலே
    மதியும் அரவமும் நதியும் உலவிடும்
    கானகக் குழலே
    முகிலுலாவும் நுதலே
    (லயமே சிவமே)

    தீம் தோம் தீம் தோம் தீம்திரனதீம் தீம் தோம்
    தவம்கலைந்ததும் தாண்டவம் தீம் தோம் – புயல்
    நிமிர்ந்ததைப்போல் நர்த்தனம் தீம் தோம்
    இமை விரிந்து சடை பிரிந்து – இசை
    சிலிர்த்துத் தாளம் தெறிக்க
    வீழ்ந்தோம் எனத் தீமைகள் நடுங்கும்
    வாழ்ந்தோம் என வேதங்கள் முழங்கும்
    கண் பனிக்க மனம் துடிக்கக் – கை
    குவித்த படிவான் திகைக்க
    வந்தோம் எனத் துந்துபி பாடிவரும்
    தந்தோம் எனத் தாண்டவம் ஆடும் சிவம்
    (லயமே சிவமே)

     

     

    Share
  • பொன் மழையெனத் தா கவிதைகளே!

    கே. ரவி

     

    (23-05-2014 வல்லமை இதழில் “வாணியைச் சரண்புகுந்தேன்” என்ற தலைப்பில் வெளியான இசைக்கவி ரமணனின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் கவிதையும், சிந்தனையைத் தூண்டும் கட்டுரையும் அற்புதம்.
    1993-ல் என் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இனிய குரலில் பாடி வெளிவந்த ‘தெய்வ கானாம்ருதம்’ இசைப்பேழையில் இடம்பெற்ற என் கலைமகள் கவிதையை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.)

    பூமலர்வது போலுயிரிடை நீமலர்வதனால்goddess-saraswati-learning
    நீமலர்ந்ததும் மனமுழுவதும் தீவளர்வதனால்
    தீமலரென நானழைத்ததும் வாகலைமகளே
    தீச்சுடரிடை தேன்மழையெனத் தாகவிதைகளே
    தீச்சுடரிடை தேன்மழையெனத் தாகவிதைகளே

    நீர்நிலைகளில் மீன்புரள்வது போல்நினைவிடையே
    கார்முகில்களும் தாரகைகளும் தாமுலவிடவே
    வெண்ணிலவென வேயெழுந்திடும் புன்னகையொளியே
    புன்னகையிடை பொன்மழையெனெத் தாகவிதைகளே
    புன்னகையிடை பொன்மழையெனெத் தாகவிதைகளே

    புல்நுனிகளில் வெண்பனித்துளி வந்தமர்வதுபோல்
    என்னுணர்விலும் உன்சதங்கைகள் நின்றசைந்திடுமே
    கண்மணிகளில் விண்மணிகளின் நிழல்விரிவதுபோல்
    உன்சதங்கைக ளில்கவிதைகள் வந்துயிர்த்திடுமே
    உன்சதங்கைக ளில்கவிதைகள் வந்துயிர்த்திடுமே

    15-11-1990
    கே.ரவி

    Share
  • வெடித்துப் பிறந்தவள்

     

    கே. ரவி
    எங்கும் பரவசம் எல்லாம் அதிசயம்large_276238
    தங்கும் வரையித் தரையே நிச்சயம்

    ஒவ்வோர் அடியாய்த் தாங்கிக் கொண்டு
    ஓலமெல் லாமுள் வாங்கிக் கொண்டு
    வெவ்வே றான மரஞ்செடி கொடிகள்
    விதவித மான காய்கனி வகைகள்
    வளர விரிந்து தன்மடி தந்து
    மெளன மேவடி வாக இருக்கும்
    பூமித் தாய்க்கிங் கீடிணை யுண்டோ

    காற்று வந்து புழுதி வாரித்
    தூற்றி னாலும் பொறுமை யாக
    ஏற்றுக் கொள்ளும்
    தென்றல் வந்து
    சீண்டி னாலும் சிரித்துக் கொள்ளும்
    தேசங்க ளாகப்
    பிரித்துக் கொண்டு போர்புரிந் தாலும்
    ஒரேமு னைப்பில் ஒரேஏ கதியில்
    சுழன்று கொண்டேஇருக்கும்
    சூரியத் தேவனைச் சுற்றிச் சுற்றியே

    அவளே சற்று நடுங்கும் வண்ணம்
    அமைதி இழந்து குலுங்கும் வண்ணம்
    என்ன நடந்தது யாரழு தாரோ
    எங்கோ ஒருகண் ணகியா இல்லை
    இரணியன் மீண்டும் வந்துவிட் டானா
    தேவகு மாரனைச் சிலுவையில் அறைய
    யாரோ திட்டம் இடுகின் றாரோ
    மாமுனி வர்தவம் கலைப்ப தற்கே
    மீண்டும் ஊர்வசி ஆடுகி றாளோ
    குழந்தை பசியில் கதறிய ழத்தாய்
    கையில் சல்லிக் காசும் இன்றிக்
    கலங்கி நிற்கும் காட்சியோ இந்த
    நிலநடுக் கத்துக் கென்ன காரணம்
    ஊழிக் கூத்துக் (கு) ஒத்திகையோ
    பாழில் வெடித்துப் பிறந்தவள் தானே

    எங்கும் பரவசம் எல்லாம் அதிசயம்
    தங்கும் வரையித் தரைதான் நிச்சயம்.

    21-05-2014

    Share
  • நாடோடிப் பாடல்

     

    கே. ரவி

    10252036_618978758193600_5068132543127217621_n

    நேத்துரா வேளயிலே நீபாத்த பார்வையிலே
    நெஞ்செல்லாம் சல்லடையாப் போச்சுதடீ பொம்மயிலே ஓ! ஓஓஓ!

    காத்துலே பூவாசங் கலந்துவந்து மயக்குதடீ
    கண்ணுக்குள்ளே ஓன்சலங்க கலகலன்னு சிலும்புதடீ
    ஆத்துமணல் படுகையெல்லாம் அணலாக் கொதிக்குதடீ
    அம்மாடீ ஓம்மொவந்தான் அங்கும் இங்கும் தெரியுதடீ
    (நேத்துரா)

    பூத்தநெல வாமனச நான்தொறந்து வச்சீருக்கேன்
    பூப்போலப் பாதம்வச்சுப் பூமுடிக்க வந்தீருநீ
    காத்திருந்து காத்திருந்து காலம்வீ ணாச்சுதடீ
    கண்ணம்மா ஓன்பெயரக் காட்டுக்குயில் கூவதடீ
    (நேத்துரா)

    நிமுந்தா சூரியனாம் குனிஞ்சாத்தான் கும்மிருட்டாம்
    ஒன்னப்பத்தி ஊர்முழுக்கப் பாட்டுக்கட்டிப் பேசுதடீ
    தெரிஞ்சா ஆசப்பட்டேன் தேகத்தயா காதலிச்சேன்
    புரிஞ்சா போதுமடீ பொய்வேசம் ஏதுக்கடீ
    (நேத்துரா)

    கூட்டுக்குள்ள நானிருந்தா கூடமுடி யாதுனுதான்
    பாட்டுக்குள்ள ஏறிகிட்டுப் பாதிவழி வந்துபுட்டேன்
    மீதிவழி நீயிறங்கி மின்னலா வந்துதொடு
    மீறமுடி யாதபடி வார்த்தகளப் போட்டுவச்சேன்.
    (நேத்துரா)

     

    Share
  • பொன் மாலை

    கே. ரவி

    Plum-tree-poetry

     

    வானளாவி நின்றதென்ன வாமன ஸ்வரூபமோ
    வார்த்தையுள் வளர்வதென்ன மோனஞான தீபமோ
    கானமாகி கானமாகிக் கரைவதேவி தேகமோ
    காதலாகிக் காதலாகிக் கவிதையாக மாறுமோ

    தூண்பிளந்த சிங்கமேதா மோதரன்மா மாயக்கண்ணன்
    ஆதிசேட சயனனேயா லிலைக்கிடந்த நீலவண்ணன்
    பூவமர்ந்த செல்வியேபின் தீயெதிர்த்து நின்றவள்
    சொற்பிளந்து வந்தவளுள் ஜோதியுள்ம லர்ந்தவள்

    கூத்தெடுத்த பாதமேயக் கூற்றுதைத்த தென்னவோ
    தீயுதித்த பாலனைச்செந் தேன்னனைப்ப தென்னவோ
    தந்தமேயோர் எழுதுகோலாய் ஆனதாமது போலவே
    சந்தமேமென் மலர்களாகச் சூட்டுவேன்பொன் மாலையே

     

    Share
  • கல்யாணமாம் கல்யாணம்

     

    கே. ரவி

    images

    காத்துக்கும் பூமிக்கும் கல்யாணமாம் – இது
    காணக் கிடைக்காத வைபோகமாம்
    பூத்துக் குலுங்குமலர் தோட்டங்களாம் – அங்குப்
    பூவெல்லாம் பொறிவண்டுக் கூட்டங்களாம்
    (காத்துக்கும்)

    தோளுக்குப் பட்டாடை அருவிகளாம்
    தொங்கட்டான் போல்சிறு குருவிகளாம்
    காலுக்கு நீரோடை கொலுசுகளாம் – அலங்
    காரத்தில் பலநூறு தினுசுகளாம்
    (காத்துக்கும்)

    மேகங்களே நல்ல மேளங்களாம்
    மின்னல்கள் கூத்தாடத் தாளங்களாம்
    வானத்துத் தேவர்கள் ஆனந்தத் தோடுவந்து
    பூமாரி பொழிகின்ற சாரல்களாம்
    (காத்துக்கும்)

    சிற்றெறும்புக் கூட்டங்கள் ஊர்வலமாம் – புதுச்
    சீர்கொண்டு போகின்ற சிங்காரமாம்
    குட்டைக ளில்தவளைக் கச்சேரியாம்
    குண்டுமல்லிக் கூட்டங்கள் ரசிகர்களாம்
    (காத்துக்கும்)

    நாட்டுக்கு நாடிது நடப்பதுண்டாம் – எழில்
    நாடகமாய் நெஞ்சைக் கவர்வதுண்டாம்
    பாட்டுக்குள் மட்டும்கண் திறப்பதுண்டாம் – அந்தப்
    பார்வைக்குத் தானிது புலப்படுமாம்
    (காத்துக்கும்)

    Share
  • ஏதாயினும் சொல்

     கே. ரவி

     

    ஏதாயினும் சொல் ஏனிந்த மெளனம்goddess-saraswati-hindu-goddess-learning
    எங்கெங்கும் பொழியட்டும் பூமழையே
    காதோரம் வந்து சி றகடிக்கும் காற்றில்
    ஒலிக்கட்டும் ஒருமுறை உன்குரலே
    (ஏதாயினும்)

    நீதானே எந்தன் கவிதையின் ஊற்று
    தினமொரு தீபமென் சிந்தையில் ஏற்று
    (ஏதாயினும்)

    ஆதாரம் நீயே அனுபவச் சுவையே
    ஆவியில் அமுதம் நிறைப்பவளே
    ஆகாயமெல்லாம் எதிரொலிக்கும் – நீ
    ஆணையிட்டால் உடன் அதுபலிக்கும்
    (ஏதாயினும்)

    பாதாதி கேசம் பாட வல்லேன் அல்லேன்
    பாவனை சுகத்தில் மூழ்குகிறேன்
    பாராமுகம் எதற்குத் திரைவிலக்கு – இன்னும்
    பாராமுகம் எதற்குத் திரைவிலக்கு – இசைப்
    பாடலொன்றே நம் சுடர்விளக்கு
    (ஏதாயினும்)

    படத்திற்கு நன்றி:

    http://www.hindudevotionalblog.com/2011/09/goddess-saraswati-hindu-goddess-of.html

     

    Share
  • உன்னை ஒரு மலராய்….. !

     

    கே. ரவி

    vivid_flowers-wide

    உன்னையொரு மலராய் மாற்றுகிறேன் – இதழ்
    ஒவ்வொன்றிலும் சுடர் ஏற்றுகிறேன்
    என்னென்ன வண்ணங்கள் காட்டுகிறாய் – என்
    எண்ணமெலாம் இசை மீட்டுகிறாய்
    (உன்னையொரு)

    பொன்னிறமும் செந்நிறமும் கூடியதாய்த் – துளிப்
    புன்னகையி லேஇழை ஓடியதாய்
    மின்னல் நடனம் களியேறியதாய் – மழை
    மேகமெல்லாம் அணை மீறியதாய்
    என்னென்ன வண்ணங்கள் காட்டுகிறாய் – என்
    எண்ணமெலாம் இசை மீட்டுகிறாய்
    (உன்னையொரு)

    சின்ன சின்ன முத்துக்களும் தூவுகிறாய் – புயல்
    சீறிவரும் போதுநடை மாறுகிறாய்
    அந்திப்பகல் நாடகம் ஆடுகிறாய் – உயிர்
    அத்தனையிலும் கலந்தோடுகிறாய்
    என்னென்ன வண்ணங்கள் காட்டுகிறாய் – என்
    எண்ணமெலாம் இசை மீட்டுகிறாய்
    (உன்னையொரு)

    வெட்டவெளியோ அதில் நட்ட விதையோ
    விண்ணும்மண்ணு மாய்ப்பிளந்து நிற்கும் வடிவோ
    பட்டப்பகலில் கரம் ஆயிரமோ – இருள்
    படர்ந்ததும் கோடிப் பூச்சரமோ
    (உன்னையொரு)

     

    Share
  • கும்ப முனியின் குறுநகை

    கே.ரவி

    26-10-1988, பெங்களூரு போகும் வழியில் உள்ள குறடு மலையில் சில நண்பர்களோடும்,ஷோபனாவோடும் இருந்தேன். அது ஒரு மிகச்சிறிய கிராமம். அதில் ஒரு மிகப்பழைய,சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வினாயகர் கோயில் உள்ளது. அதில் உள்ளவினாயகர் சிலை ஒரே சாளக்ராமக் கல்லால் ஆனது, மிகப் பெரியது, சுமார் 20 அடி உயரவினாயகர். அதை அகத்திய முனிவர் நிறுவினார் என்று குருநாதர் சொல்லியிருந்தார்.அங்கே, அன்று பகல் நேரத்தில் சற்றுக் கண்னயர்ந்தேன். துயில் கலைந்ததும் ஒரு பாடல்வந்தது, என் கனவில், வஷிஷ்ட, அகத்திய மாமுனிவர் இருவரும் வந்து சில வாசகங்கள் சொன்னதுபோல் …..

    thalakaveri
    அந்தக் கவிதையை, சென்னை வந்ததும் குருநாதருக்குப் படித்துக் காட்டினேன். உடனேஅவர் என்னைத் தலைக்காவேரிக்குச் சென்று அங்கே உள்ள குளம் அருகே அகத்தியமுனிவரை தியானம் செய்துவிட்டு, ‘கும்பமுனியின் குறுநகை’ என்ற தலைப்பில் ஒருகவிதையெழுதி அங்கேயே அதைப் படித்துவிட்டு வருமாறு பணித்தார். நானும்,ஷோபனாவும், ‘திராவிட மாயை’ சுப்புவும் 02-11-1988 புறப்பட்டு, மைசூர் சென்று, இன்னும் மூன்று நண்பர்களை அழைத்துக் கொண்டு மறுநாள் மாலை தலைக்காவேரி சென்றடைந்தோம். அங்கே, கும்பமுனியின் குறுநகை என்று ஐந்து பாடல்களை எழுதி அரங்கேற்றினேன். அந்தப் பாடல்கள் வரக் காரணமாய்க் குறடு மலையில் நான் எழுதிய பாடலையும், கும்பமுனியின் குறுநகை பாடல்களையும் இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

    kuradu

                                                                                  குறடுமலை விநாயகர் : படம் கே. ரவி

    “குந்து மணியுள் குத்து விளக்கா கூர்ந்து கவனித்தேன்
    அந்த மணியென் அருகில் வந்தென் ஆக்ஞ விபூதியிலே
    சென்று நுழைந்து சிதறி வெடிக்கச் சித்துருவா யெழுந்தான்
    குந்து மணியுள் குறுகிக் கொண்டு குந்தி யிருந்தவனே

    பெயர்சொல்ல வில்லையந்தப் பெரிய சித்தன்
    பிடியென்றான் கைநீட்டிப் பிடித்துக் கொண்டேன்
    முயல்பாகம் இல்லாத முழுநி லாப்போல்
    முகமெங்கும் ஜோதியதில் முறுவல் வேறு
    குயவன்மண் பானைவரச் சுற்று தல்போல்
    குறுமுனிவன் எனைப்பற்றிச் சுற்றி விட்டான்
    சுயநினைவு நீங்கியது சூனி யத்தின்
    சூட்சுமத்தில் சுடராக அவனி ருந்தான்

    ஒன்றாக இருந்தவனே இரண்டு கூறாய்
    ஒளியோடு பிரிந்துநின்ற காட்சி கண்டேன்
    ஒருவன்கை ஜபமாலை பிடித்தி ருக்க – (இன்)
    னொருவன்கைக் கமண்டலத்தைக் கொண்டி ருக்க
    நின்றவர்கள் இருவருமே நெடிதி ருந்தார்
    நிலவுமழை போலவொளி வழிய நின்றார்
    நீண்டதொரு கரமந்த ஒளிவட் டத்துள்
    நேராக என்தோளைத் தொட்ட போது

    மூன்று மொழியென் சிந்தையிலே தோன்றி நிறைந்தனவே
    ஒன்று ‘பருகு வெளிச்சத்தை’ என்று பணிக்கிறது
    ஒன்று ‘பழகு ப்ரம்மத்தை’ என்று தொனிக்கிறது
    ஒன்று ‘புலர்க சித்தவெளி’ என்று முடிக்கிறது

    மீண்டும் எதிரே குந்துமணி – அதன்
    உள்ளே ஒருவிளக்கு
    கூண்டுக் குள்ளே சிறகடித்துத் – துயில்
    கலைந்த நினைவெனக்கு.”

     

    (நாள்: 3-11-1988. நேரம்: கும்மிருட்டு. இடம்: தலைக்காவேரி. பாத்திரங்கள்: சுப்பு, ஷோபனா, நான், பின்னணியில் மாமுனிகள் அகத்தியரும், விஸ்வாமித்திரரும். தலைப்பு: “கும்ப முனியின் குறுநகை” என்று குருநாதர் குறும்பாகத் தந்தது! இப்படி ஒரு சூழலில் வந்த பாடல்களை இங்கே பதிவு செய்கிறேன்)

    ஓங்கி எழுந்தவோர் ஓங்காரப் பேரொளியின் ஊற்றுத் தடாகத்திலே
    உந்துகதி யாகிவெளிச் சென்றுகலை யாதுவளி நின்றுநிலை யாகியுள்ளே
    வேய்ங்குழலும் ஆகியதை ஊதுமித ழாகியலை மோதுமுள் நாதமாகி
    மொட்டுமல ராகியதை முட்டியுற வாடியது கொட்டுகிற அமுதமாகி
    வானொன் றிலாதபடித் தானென் றெழுந்துநித் யானந்த லஹரியாகி
    வாசிவெளி யாகமுனை ஊசிவழி யாகவருள் வ்யாபித்து விட்டதிரையில்
    கூன்பிறை யணிந்தசிவ னார்விழி திறந்துதழல் மான்மழு வுடனுடுக்கை
    கொண்டுநட மாடுமெழில் கண்டுமல ரும்பொய்கை கும்பமுனி யின்குறுநகை (1)

    அன்றுதிரி சூலிநட மாடியவி நாடியிலிவ் வண்டச ராசரங்கள்
    விண்டுசித றுண்டுதிசை யென்றநிலை இன்றிவெளி யெங்கும் தெறித்துவீழ
    ஒன்றிலொன் றாயவை கொண்டுசெய் தானொரு மண்டலம் பெரியதேவன்
    மண்டலத் தைச்செய்த மந்திரத் தைத்தன்க மண்டலத் தேந்திவந் தான்
    வந்தமுனி வன்ஞான வாசல் திறந்தந்த மண்டலத் தொளிகொடுக்க
    விந்துமணி யுள்கோயில் கொண்டுபின் வேள்வியில் கும்பத் தெழுந்துவந்தான்
    குந்துமணி போல்சின்ன குண்டலியி லேயவன் குறுகிக் கிடந்தஅழகை
    என்றுநினைத் தாலுமுடன் இந்துவெனத் தோன்றுவது கும்பமுனியின் குறுநகை (2)

    வீடுமறி யாதுவெளி யேகிஉழல் வார்தம்மை வேண்டிச் சுமந்துவந்து
    வித்தையறி வித்துமன வீச்சிலொரு மித்துப்பொய் வித்தகம் அடக்கியாண்டு
    பாடுபடு கின்றபல தேவதூ தர்க்கெலாம் பரமகுரு கும்ப முனிவன்
    பாதையிது தானென்று பாடமுரைப் பானொரு பவித்திரம் புனையவைப்பான்
    ஆடுகட லத்தனையும் அள்ளிப் பருகியவன் ஆனந்த ஜோதி வள்ளல்
    ஆத்ம விதானத்தில் ஆழ்ந்த நிதானத்தில் ஆச்சர்ய மாய்முளைப்பான்
    கூடுபிரி யாமலொளி ஏடுபிரி யாதென்ற கூற்றுப்பொய் யானசரிதை
    கொண்டலுக் குள்மின்னல் கொண்டுவைக் கும்திங்கள் கும்பமுனி யின்குறுநகை (3)

    அன்றிலங் கைப்போரில் வெல்வதற் காதித்ய மந்திரம் சொன்னதென்ன
    அமரரெ லாரும்வந் அமர்ந்தும்கை லாசகிரி அழுந்தாது காத்ததென்ன
    தென்னகத் தேயொளி தங்கவைத் தேநல் லிலக்கணம் வகுத்ததென்ன
    தேடும்விழி யாவுமொளி சூடும்வழி யோகமெனத் தெளிவா யுரைத்ததென்ன
    ஒன்றுவழி என்றமறை வள்ளுவத் தையுடன் வாழ்த்தியருள் செய்ததென்ன
    ஓங்கிவளர் விந்தியத்தின் கர்வம் அகற்றியடி பணியப் புரிந்ததென்ன
    என்றுமுல காளுநெறி சத்யனெறி என்றதொரு சங்கல்பம் தந்ததென்ன
    என்றுமுள தென்றமிழ் இயம்பியிசை கொண்டமுகை கும்பமுனி யின்குறுநகை (4)

    ஐங்கரத் தான்கோயில் செய்துவைத் தானங்கே ஆனந்த ஜோதிவைத்தான்
    ஜோதியுள் ஜோதியெனச் சொல்லவைத் தானின்று சொன்னபடி யேசிரித்தான்
    திங்கள்பகல் என்றவிரு கண்கள்கொண் டானிந்த அகிலத்தின் ஆத்மஜோதி
    தேவமுனி யாவரையும் வரவழைத் தேயெமை அறிமுகம் செய்துவிட்டான்
    சங்கடம் அகன்றதினி சாதகம் கைகூடும் சத்ய யுகமலருமே
    சன்னிதியி லேநின்று சொல்லுகின் றேனிது சத்தியம் தேவதேவே
    செங்கதிரைச் சொல்லாக்கி மந்திரம் ஜபித்தமுனி யோகவிஸ் வாமித்திரன்
    கோமுனிவ னேயென்னைப் பாடவைத் தானதைப் பாடினேன் வணங்குகின்றேன்
    ஓமென் றுரைக்கட்டும் அண்டமெல் லாமிந்த உலகம் இனிதுவாழ்க
    ஆமென் றுரைக்கட்டும் அமரர்கள் அகிலத்தில் ஆனந்த அமைதிசூழ்க. (5)

    Share