Tag: மலர் சபா

  • நான் அறிந்த சிலம்பு – 152

    மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

    கடை கழி மகளிர் காலத்திற்கு ஏற்ற இன்பங்களில் ஈடுபடுதல்கார் காலம்

    அங்ஙனம் படுக்கையில் இருக்கையில்
    பூ வேலைப்பாடு அமைந்த சிவப்பு நிறப்பட்டை
    இடையில் உடுத்திக்கொண்டு
    அடர்ந்த கூந்தலில் வெண்மையான பாலைப்பூவைச் சூடி
    சிறுமலையில் புதிதாய்ப் பூத்த                                 a_lonely_maiden_oq35-1
    சிவந்த நறுந்தாளிப்பூவுடன்
    நறுமணம் வீசும் புதிய குறிஞ்சிப்பூவைச் சூடி
    குங்குமச் சாந்தைக் கொங்கையில் பூசி
    செங்கொடு வேரியின் வளமான பூக்களால்
    கட்டப்பட்ட மாலையுடன்
    சிவந்த சுண்ணம் பூசிய மார்பில்
    அழகிய பவளத்தால் ஆகிய அணிகலன் பூண்டு
    மலைகளின் சிறகுகளைப் பிளந்த
    வச்சிராயுதம் கொண்ட இந்திரனுக்கு
    ஆர்ப்பரிக்கும் கடலிடத்தே
    தம் செவ்வணியைக் காட்டுமாறு
    கார்கால அரசன் தம் வாடைக்காற்றுடன் வரும்
    காலம் அன்றியும்..

    கூதிர்காலம்

    சிற்ப நூல் சாத்திரம்
    நன்கு கற்றறிந்தவர்களால் செய்யப்பட்ட
    மேகம் தவழும் உயர்ந்த மாடங்களில்
    அகில் ஆகிய விறகாலே
    மடமை பொருந்திய மகளிர்
    அத்தளத்தில் இட்ட தீயில்
    குளிர்காய விரும்பி அமர்ந்து
    நறுஞ்சாந்து பூசிய நம்பியருடன் கூடி
    குறுகிய சாளரங்களை அடைக்கும் கூதிர்க்காலமும்…

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 98 – 101
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி:
    Google

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 151

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

    நண்பகலில் பொழுதுபோக்கு

    குளிர்ந்த நறுமண முல்லை மலரும்
    ஆழ்ந்த நீரில் பூத்த குவளை மலரும்
    கண்கள் போன்ற நெய்தல் மலரும்                    silambu
    இவை அனைத்தும் கூந்தலில் சூடி
    மல்லிகையின் வெண்பூக்களால் ஆன
    மாலையுடன் இணைந்து
    குளிர்ந்த செங்கழுநீர்ப்பூவின்
    தாதுகள் விரிந்த இதழ்களால் கட்டிய பிணையலை
    கொற்கைத் துறையில் கிடைக்கும்
    பெரிய முத்துகளால் செய்த வடத்துடன் அணிந்து
    தென் திசைப் பொதிகை மலையில் விளைந்த
    சந்தனத்தை உடல் முழுதும் பூசி
    அழகிய கொடிகளையுடைய மூதூர்க்கு அருகில் உள்ள
    சோலைதனில் விளையாடும்  விளையாட்டை விரும்பி

    அந்திப் பொழுதைக் கழித்தல்

    எற்பாடாகிய பொழுதில்
    இளநிலா பொழியும் முற்றத்தில்
    மனதிற்கு இனியதாக இருக்கும்
    கோலத்தை இளைஞர் பாராட்ட
    மனம் விரும்பும் பூம்படுக்கை மேல்
    இனிதாக அமர்ந்து

    கடைகழி மகளிர் காலத்திற்கு ஏற்ற இன்பங்களில் ஈடுபடுதல் கார் காலம்

    பூவேலைப்பாடமைந்த செம்பட்டை
    இடையின் மீது உடுத்தி
    கொத்தாக முடியுள்ள தலையில்
    வெண்மை நிறப் பாலைப் பூவைச் சூடி,
    சிறுமலையில் பூத்த செந்நறுந்தாளிப்பூவுடன்
    மணமுடன் மலர்ந்த குறிஞ்சியையும் சூடி,
    குங்கும வண்ணம் கொண்ட செஞ்சந்தனத்தை
    மார்புகளில் எழுதி
    செங்கொடுவேரியின் செழுமையான பூவால்
    கட்டப்பட்ட பிணையலை
    செம்மையான சுண்ணம் அப்பிய மார்பினில்
    அழகிய பவள வடத்துடன் பூண்டு
    மலைகளின் சிறகைத்  தாக்கிய
    வச்சிரப்படையுடைய இந்திரனுக்கு
    ஆரவாரம் மிகுந்த கூடல் மாநகரத்தில்
    தம் செவ்வணியைக் காட்டுமாறு
    காரை ஆளும் அரசன்
    குளிர்காலக் காற்றுடன் வரும் காலமும்
    அந்தக் காலம் அன்றியும்…

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 76 – 97
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி:
    http://en.wikipedia.org/wiki/Modern_Indian_painting

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 150

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

    சுருங்கை வீதி வழியாகச் செல்லுதல்

    வேலி சூழ்ந்த காவல் காட்டுடன் பொருந்தி
    வளைந்த நீர்ப்பரப்புடைய அகழியின்கண்    akazhi
    பெரிய தும்பிக்கையுடைய யானைகள்
    போக்குவரத்து செய்வதற்கு வசதியாக அமைத்த
    சுருங்கையுடைய  வீதியைக் கடந்துபோய்

    மதில் வாயிலைக் கடந்து,  அகநகரின் எல்லையைச் சார்தல்

    அச்சம் விளைவிக்கும் மதில் வாயிலைக்
    காக்கும் தொழிலால் சிறப்புப் பெற்ற
    கொல்லும் தொழில் புரிகின்ற
    வாளைக் கையில் ஏந்திய யவனர் கண்படாது
    ஆயிரம் கண்களையுடைய இந்திரனின்
    பெறுவதற்கரிய அணிகலன்களை வைத்திருக்கின்ற
    பேழையின் வாய் திறந்தாற்போல விளங்கும்
    மதிலின் உள்ளே இருக்கும் அந்நகரின் எல்லைக்கண்

    டை கழி மகளிரின் பொழுது போக்கு, காலைப் பொழுதைக் கழித்தல்

    மேற்கிலிருந்து காற்று வீசுவதால்
    கொடிகள் அசைகின்ற மறுகின்கண் உள்ள
    பெண்டிர்க்கென்று வகுக்கப்பட்ட எல்லையைக் கடந்த
    பொது மகளிர்,
    தம்மீது காதல் கொண்ட செல்வந்தரான இளைஞர்களுடன்
    எப்போதும் இடைவிடாது நீர் வற்றாது காணப்படும்
    வைகை ஆற்றின் ஓங்கிய திருமருதத்துறையின் முன்
    விரிந்து பரந்து பொலிவுடன் விளங்குகின்ற
    ஆற்றிடைக்குறையின் வெண்மணல் உடைய
    அடைகரைக்கண் உயர்ந்த ஓடங்களோடு
    தோணிகளை ஏறிச் செலுத்தியும்
    பொலிவுபெற்ற தெப்பத்தில் நீந்திப்
    புனலாடுதலை விரும்பி…

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 63 – 75
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி:
    http://tamilpandal.blogspot.in/2014/05/10.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 149

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

    பெண்களைப் பிரிவதால் உண்டாகும் துன்பமும்
    அவர்களைப் புணர்வதால் உண்டாகும் துன்பமும்
    அவ்வேளைகளில் காமன் தண்டிக்கும் துன்பமும்
    அழகுக் கூந்தல் கொண்ட பெண்களைப் புணர்ந்தவர்க்கன்றி,
    தனித்து வாழும் அறிஞர்க்கு இல்லை.

    இவ்வுலகில் பெண்டிரும் உணவும் மட்டுமே       kovalan
    முக்கியமான பொருளாய்க் கருதும்
    அறிவற்றவர் அடையும் துன்பத்தை உணர்ந்தவராய்
    முனிவர்கள் ஒதுக்கிய காமம் பற்றுக்கோடாய்
    காதலினால் வருந்தி
    கரைக் காணாத் துன்பம் அடைந்தோர்
    இன்று மட்டுமல்லாமல் முற்காலத்திலும் பலராவர்.
    இந்நிகழ்ச்சி தொடர்ந்துவரும் பழைமையுடையதாகும்.

    ஆதலினால், தன் தந்தை ஏவியதால்
    தன் மனைவியோடு கானகம் சென்று
    அம்மனைவி பிரிந்ததால் கொடுந்துன்பத்தை அடைந்தவன்
    வேதம் அருளிய நான்முகனைப்பெற்ற
    திருமால் என்று நீ அறியமாட்டாயோ?
    அது அனைவரும் அறியும் வண்ணம்
    பரவி நிற்கும் சொல்லன்றோ!

    சூதாடும் தாய விளையாட்டால்
    மண் இழந்து அரசு இழந்து
    மென்மைத்தன்மை வாய்ந்த காதலி தமயந்தியுடன்
    காட்டை அடைந்தவன்
    பொருள் மீது கொண்ட அன்பின் காரணமாய்
    அவளைப் பிரிந்தவன் அல்லன்.
    அவள் குற்றம் செய்தவள் என்ற
    இழிவினைப் பெறுவாளும் அல்லள்.

    அடவியாகிய காட்டின் இடத்து
    இருள்நிறைந்த யாமத்தின்போது
    உறக்கம் நீக்குவது
    அவர் முன்செய்த தீவினை அன்றோ!
    அப்பெண்ணின் பிழையே காரணம்
    என்று சொல்வதற்குச்
    சாட்சி உண்டாயின் அதை நீ சொல்வாயாக!

    நீ அவர்களைப் போன்றவனல்லன்.
    ஏனெனில் நீ நின் மனைவியைப்
    பிரியாத வாழ்க்கையினைப் பெற்றவன்.
    இம்மன்னவனின் கூடல் நகரின் கண்
    நீ மனம் வருந்தாமல் சென்று
    விருந்தெதிர் கொள்வாரைக் கண்டுகொண்டு
    அங்கு செல்வாயாக” என்று கவுந்தியடிகள் கூறினார்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 35 – 62
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி:
    Share
  • நான் அறிந்த சிலம்பு – 148

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

    மதுரை நகரைக் காண வேண்டும் என்னும் தனது விருப்பத்தைக் கவுந்தியடிகளிடம் கோவலன் தெரிவித்தல்

    தவநெறியில் இருந்த கவுந்தியடிகளிடம்
    கோவலன் சென்று,
    “அடிகளாரே! அறநெறியில் இருந்து நீங்கிக்
    கயவன் போல சிறுமையுடையவன் ஆகி,      kovalan
    இந்த அறியாத புதிய தேசத்தில்
    நறுமலர் மேனியுடைய இக்கண்ணகி
    நடுங்கித்துயர் உறும் வண்ணம்,
    பல கொடிய வழிகளை எல்லாம் கடந்து வந்து
    சிறுமையுடையவனாகி நிற்கின்றேன்;

    பழம்பெருமை வாய்ந்த மதுரை நகரில்
    மன்னர்க்கு அடுத்தபடியான நிலையில் இருக்கின்ற
    பெருவணிகரைக் கண்டு
    என் நிலைமை உணர்த்திவிட்டு,
    மீண்டும் நான் இங்கே வரும் வரையிலும்
    இப்பைந்தொடிப்பெண் முன்போலவே
    உங்கள் பாதுகாப்பில் இருக்கட்டும்;
    அப்படியிருந்தால் இவளுக்குத் துன்பம் ஏதும்
    நேராதன்றோ?” என்று கேட்டான்.

    கவுந்தியடிகள் ஆறுதல் மொழி கூறி, ஊர் கண்டு வருமாறு பணித்தல்

    இங்ஙனம் தன் செயலுக்காய் வருந்தி நின்ற கோவலனிடம்
    கவுந்தியடிகள் கூறலானார்:

    “தவமாகிய அறத்திலிருந்து சற்றே தவறிய காரணத்தால்
    காதலி தன்னோடு பெருந்துயர் எய்திய கோவலனே!
    ‘தீவினைகளில் இருந்து விடுபட்டு உய்யுங்கள்;
    இல்லையேல், அவை தீய பலனைத் தந்து நிற்கும்’ எனத்
    தங்களின் வாயாகிய பறையை
    நா என்னும் தடி கொண்டு
    உரக்க அறைந்து கூவினாலும்,
    மனத்திண்மை இல்லாத மாக்கள்,
    தமது இழி இயல்பு காரணமாய்
    அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

    பின், அத்தீங்குடைய வெவ்வினை
    தனது துன்பத்தின் பயனைத் தந்து நிற்கும்போது,
    இது தாம் முன்செய்த வினையால் வந்தது என்றறியாமல்
    தமது அறியாமையையே பின்பற்றி வாழ்ந்து கலங்குவர்.
    ஆனால் கற்று அறிந்த திறமுடைய அறிவுடையவர்கள்
    இத்தகைய பெருவினைத் துன்பங்களை அனுபவிக்கும்போது,
    செயலற்றுக் கலங்கி நிற்க மாட்டார்கள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 15 – 34
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி:
    http://omsakthionline.com/?katturai

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 147

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை

    சூரியன் உதித்தல்

    அவர்கள் புறஞ்சேரி புகுந்தபின்
    அங்கிருந்த பூஞ்சோலைகளிலும்,
    விளங்குகின்ற நீரையுடைய பண்ணைகளிலும்,      sunrise lotus
    கதிர்கள் வளைந்து தொங்குகின்ற கழனிகளிலும்,
    பறவைகள் எழுந்து ஆர்ப்பரித்து ஒலியெழுப்பின.

    வைகறைப் பொழுது புலரும் போது,
    குளத்தின்கண் உள்ள தாமரைகளை மொட்டவிழ்க்கும்
    உலகிலுள்ளோர் யாவரும் தொழுது வணங்கும் கதிரவன்,
    பகையரசர்கள் நடுங்கும் வண்ணம்
    வீரவாளை ஏந்திய பாண்டியன் அவனின்
    வீரத்தால் ஏற்றம் பெற்ற
    மதுரை நகரின் துயில் எழுப்பினான்.

    காலை முரசத்தின் ஒலி

    நெற்றியில் கண்ணுடைய
    சிவபெருமான் கோயிலிலும்,
    சேவல் கருடனைக் கொடியாகக் கொண்ட
    பெருமாள் கோயிலிலும்,
    வெற்றிக் கலப்பை ஏந்திய
    பலராமன் கோயிலிலும்,
    சேவற்கோழிக் கொடியுடைய
    முருகன் கோயிலிலும்,
    அறநெறி சார்ந்து வாழ்கின்ற
    முனிவர்களின் பள்ளிகளிலும்,
    வலிமை அமைந்த
    மன்னனின் அரண்மனையிலும்,
    தூய வெள்ளைச் சங்கின் ஒலியுடன் சேர்ந்து
    கொடை முரசு, வெற்றி முரசு, நீதி முரசு எனப்படும்
    மூவகை முரசுகளும் முழங்கின.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1 – 14
    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–

    படத்துக்கு நன்றி:
    http://nature.desktopnexus.com/wallpaper/1726024/

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 146

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

    வையையைக் கடந்து, மூவரும் தென்கரை சேர்தல்

    “இந்த வைகை ஆறு நீர் நிறைந்த ஆறு அன்று;
    பூக்கள் நிறைந்த ஆறு” என்று
    அன்னம் போன்ற நடைகொண்ட கண்ணகியும்
    அவள் தலைவன் கோவலனும் வணங்கி,
    மாதவப் பிராட்டியாம் கவுந்தியடிகளுடன்

    அந்த அருந்துறையில் செலுத்தப்படும்
    குதிரைமுக ஓடம் யானைமுக ஓடம்     flag
    சிங்கமுக ஓடம் – இவற்றில் ஏறிப்
    பலரும் செல்லும் பெருந்துறைப்பக்கம் செல்லாது,
    தேன்மலர்கள் நிறைந்த சோலையுடைய
    தெற்குக் கரையை அடைந்தனர்.

    மதுரை மாநகரின் புறஞ்சேரியை அடைதல்

    தேவர்கள் வசிக்கும்
    மதுரை நகரை வலம் வந்தால்

    மிகச் சிறப்புண்டாகும் என்று கருதி
    அவ்விடத்தில் அழிப்பதற்கு இயலாத காடு
    காவலாய்ச் சூழ்ந்த அகழியைச் சுற்றிச் சென்றனர்.

    அந்த அகழியில் பூத்த
    கரிய நெடிய குவளைமலரும்
    அல்லிமலரும் தாமரை மலரும்
    கண்ணகியும் கோவலனும்
    பிரிவால் அடையும் துயர்தனை
    ஐயம் ஏதுமின்றி அறிந்தனபோல,
    தம்மிடம் வந்து தேன் உண்ணும் வண்டுகள்
    வாயாலே தாமும் அழுது
    தேன் எனும் கண்ணீரைச் சொரிந்து
    கால் பூமியில் நிலைத்து நிற்க இயலாமல் நடுங்கின.

    பகைவர் வருந்தப் போர் தொடுத்து வென்று
    அவ்வெற்றிக்கு அறிகுறியாகக்
    கோட்டையின் உச்சியில் பறந்த கொடி,
    “இம்மதுரை நகருக்கு நீங்கள் வராதீர்கள்”
    என்று கூறுவது போல் மறித்துக் கைகாட்டி நின்றது.

    பறவைகள் அழகு சேர்க்கும்
    வயல்களும் சோலைகளும் விளங்கப் பெற்று
    அதிகமான நீரையுடைய பண்ணைகளும்
    பரந்த நீர் கொண்ட ஏரிகளும்
    குலைகுலையாய்க் காய்களுடன் காணப்படும்
    தெங்கும் கமுகும் வாழையும்
    திரண்டிருந்த மூங்கிலால்
    ஏயப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தலும்
    ஆகிய இவையனைத்தும் அமையப்பெற்ற
    இருப்பிடங்களை உடையதாய்,
    அறத்தினை விரும்பும் முனிவர் தவிரப்
    பிறர் யாரும் புகுந்திடமுடியாத
    மதுரைக்குப் புறத்தேயுள்ள சேரியை
    அவர்கள் மனம் விரும்பியபடியே
    மூவரும் அடைந்தனர்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 135 – 150
    http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

    படத்துக்கு நன்றி:
    http://kundavairajeam.blogspot.in/

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 145

    மலர் சபா

     

    மதுரைக் காண்டம் – 03. புறஞ்சேரி இறுத்த காதை

     

    வையை ஆற்றின் காட்சி 

    flowers

    குரவம் வகுளம் கோங்கு வேங்கை
    வெண்கடம்பு சுரபுன்னை மஞ்சாடி மருதமரம்
    சேடல் செருந்தி பவளமல்லிகை செண்பகம் பாதிரி
    இந்த மரங்களின் மலர்கள் நன்கு விரிந்து
    வைகைப் பெண்ணின் பூந்துகிலாய்த் திகழ்ந்தது.

     

    குருக்கத்தி செம்முல்லை கொழுங்கொடி முசுண்டை
    விரிந்த மலர்களையுடைய மோசி மல்லிகை
    வெள்ளை நிறம் கொண்ட நறுந்தாளி
    வெட்பாலை மூங்கில் கொழுங்கொடிப் பகன்றை
    பிடவம் இருவாட்சி
    இந்த மலர்க்கொடிகள் பின்னிப் பிணைந்த கோவை
    வைகைப் பெண்ணுக்கு மேகலையாய்த் திகழ்ந்தது.

     

    அக்கோவையாகிய மேகலை
    எல்லா இடங்களிலும் செறிந்து பரந்து
    கரையென உயர்ந்து நின்ற காட்சி
    வைகைப் பெண்ணின் அல்குல் போல் திகழ்ந்தது.

     

    பரந்து விரிந்த ஆற்றிடைக் குறையின்
    அடிப்பக்கம் அகன்று காணப்பட்டு
    பல்வகை மலர்க்குவியல்களால் உயர்ந்து நின்று
    எதிர் எதிராய் நின்ற மணற்குன்றுகள்
    வைகைப் பெண்ணின் ஒளிபொருந்திய
    இள மார்புகளாய்த் திகழ்ந்தன.

     

    கரையில் நின்ற முருக்க மரங்கள்
    உதிர்த்து நின்ற செம்மலர்கள்
    அவள் வாய் எனத் திகழ்ந்தது.

    அருவி நீரோடு வந்த முல்லைமலர்கள்

    அவள் நகையாகத் திகழ்ந்தது.

     

    குறுக்கும் நெடுக்குமாய் ஓடுகின்ற கயல்மீன்கள்
    அவள் விழிகளாய்த் திகழ்ந்தன.

    விரிகின்ற மலர்கள் ஒருபோதும் நீங்காத கருமணல்
    அவள் கூந்தலாய்த் திகழ்ந்தது.

     

    இவ்வனைத்துச் சிறப்பும் பெற்ற வைகைப்பெண்
    இவ்வுலகில பல பொருட்களை விளைவித்து
    அனைவருக்கும் உணவு படைக்கும் சிறப்புடையவள்.
    புலவர்கள் நாவில் பொருந்தியவள்.
    திருமகளை ஒத்தவள்.
    பருவம் பொய்த்திடாத பாண்டியநாட்டின்
    குலக்கொடியாய்த் திகழ்பவள்.

     

    அந்த வைகைப்பெண்
    கண்ணகிக்கு வரக்கூடிய துன்பங்களை
    முன்னரே உணர்ந்தவள் போல
    தூய்மைவாய்ந்த நறுமண மலர்களைத்
    தன் மீது ஆடையாகப் போர்த்திக்கொண்டு
    தன் கண்களை மறைத்த நீரை
    வெளியே காட்டாமல் உள்ளடக்கி இருந்தாள்.

     

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 135 – 150

    http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

     

    படத்துக்கு நன்றி:

    http://www.dreamstime.com/stock-images-flowers-floating-water-image

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 144

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

    முந்தைய நாளில் போல, மூவரும் இரவில் வழிநடத்தல்

    கோவலனும் கண்ணகியும்
    முந்தைய நாட்களைப் போலவே
    கவுந்தியடிகளுடன்
    அன்றும் பகல் பொழுதை
    அந்தணர் வாழும் அப்பகுதியில் கழித்துவிட்டு
    இரவில் மீண்டும் புறப்பட்டனர்.

    வைகறைப்போதில் மதுரையின் பேரொலி கேட்டு வருத்தம் நீங்குதல்  

    அரிய தொழிலாகிய அழிக்கும் தொழிலை
    மேற்கொண்ட சிவபெருமான் கோயிலிலும்
    பெரும்புகழ் வாய்ந்த
    பாண்டியமன்னனின் அரண்மனையிலும்
                     Paraiyoli
    பல்வகைச் சிறப்புகளையும் உடைய முரசு
    சிறப்பாக ஒலித்தது.

    நான்குமறைகளையும் பயின்ற
    அந்தணர் ஓதுகின்ற ஒலியும்,
    மாதவ முனிவர்கள் ஓதும்
    மந்திரத்தின் ஒலியும்,
    வெற்றியிலிருந்து மீளாத
    அரசனின் சிறப்பினை வாழ்த்திப்பாடும்
    வாள்வீரர் அதிகாலையில் எடுத்து முழக்கிய
    முரசின் ஒலியும்,

    போரில் பகைவரை வென்று
    கவர்ந்து வந்த போர்யானை முழக்கமும்,
    காட்டில் பிடித்துக் கொண்டுவந்த
    காட்டு யானையின் முழக்கமும்,
    லாயங்களில் நிற்கும் குதிரைகளின்
    கனைப்பு ஒலியும்,
    வைகறையில் கிணைப்பறையுடன்
    மள்ளர் கொட்டுகின்ற பறையொலியும்
    அவர்கள் மன்னனை வாழ்த்திப்
    பாடும் பாடல்களின் ஒலியும் ஒலித்து நின்றன.

    மகிழ்ச்சி பொருந்திய மதுரைக்கண்
    ஒலித்த ஒலிகள்
    கருங்கடல் ஒலிகள் போலவே
    ஓங்கி ஒலித்ததால்
    இதைக் கேட்ட அவர்கள்
    தம் வருத்தமெல்லாம் நீங்கி
    வையை ஆற்றை அடைந்தனர்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 135 – 150
    http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

    படத்துக்கு நன்றி:
    http://www.ourjaffna.com

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 143

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

    மதுரைப் பதிக்கு இன்னும் எஞ்சியுள்ள வழி பற்றிப் பாணரிடம் கோவலன் வினாவுதலும், அவர் விடை பகர்தலும் 

    கோவலனுக்குப் பாணர்கள் பதில் கூறலாயினர்:

    “வயிரம் பற்றிய அகில் சாந்தும்
    மணம் வீசும் குங்குமப்பூக் குழம்பும், புழுகுக் குழம்பும்
    மணம் பொருந்திய சந்தனச் சாந்தும் கத்தூரிச் சாந்தும்
    இத்தெய்வமணம் அனைத்தும் பொருந்திய
    சேற்றினை அளைந்து…

    பூந்தாதுகள் பொருந்திய கழுநீர் மலரையும்    scent
    செண்பக மலரையும்
    ஒருசேரத் தொடுத்த மாலையோடு
    குருக்கத்தி, மல்லிகை, மனைவளர் முல்லை
    இவற்றால் தொடுத்த மாலையுடைய
    மலர் மஞ்சங்களில் பொருந்தி…

    தாளிப்பு முதலிய காரணத்தால்
    அடுக்களையில் தோன்றுகின்ற புகையும்
    அகன்ற கடைவீதிகளில்
    தன் வாணிகம் ஓயாது புரியும்
    அப்பம் விற்பவர்கள் அப்பம் சுடும் புகையும்
    ஆடவரும் பெண்டிரும்  உண்டாக்கிய
    இனிய அகிற்புகையும்
    வேள்விச்சாலைகளில் ஓமம் பண்ணுதலால்
    உண்டாகின்ற புகையும்
    இத்தகைய பலவகைப் புகைகளில் அளாவி…

    பங்குபெறும் போரில் எல்லாம் வெற்றி கொள்பவனும்
    இந்திரன் அணிவித்த ஆரம் பொருந்திய மார்புடையவனுமாகிய
    பாண்டியன் அவன் அரண்மனையில்
    மணப்பொருட்களை ஒருசேர அரைப்பதால் எழுகின்ற
    அளவிடற்கரியதும் உள்ளத்தைப் பிணிக்கும் இயல்புடையதாயுமுள்ள
    இணையற்ற மணங்களின் கலவையை நுகர்ந்து…

    புலவர்களின் செவ்விய நாவால் புகழப்படும்
    பொதிகைத் தென்றல்போல் அல்லாது
    அதைவிடச் சிறந்த மதுரைத் தென்றல்
    இங்கே வந்து தவழ்ந்திருப்பது காண்கிறீர்கள் அல்லவா?

    எனவே புரிந்துகொள்வீர்:
    பாண்டியனின் செழிப்புமிக்க மதுரைமாநகர்
    மிகவும் தொலைவில் இல்லை;
    அருகில்தான் உள்ளது.
    நீங்கள் தனித்து வழியில் சென்றாலும்
    உம்மைத் தடுப்பார் எவரும் இருக்க மாட்டார்கள்.”

    இங்ஙனம் கூறி அவ்விடத்தைவிட்டுப்
    பாணர்கள் அகன்றனர்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 114 – 134
    http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

    படத்துக்கு நன்றி
    http://web.prm.ox.ac.uk/bodyarts/index.php/temporary-body-arts/scent/41-scent-cakes.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 142

    மலர் சபா

    மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

    மாதவியின் திருமுகத்தைத் தன் தந்தைக்குக் கோவலன் அனுப்புதல்

    மடலைப் படித்து முடித்ததும்
    கௌசிகனிடம் கோவலன் கூறினான்:                     harp
    “இலச்சினையிடப்பட்ட இந்த ஓலையில்
    எனக்காக வருந்துகின்ற என் பெற்றோர்க்கும்
    விடை பொருந்தியிருக்கிறது.
    எனவே இதைக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்து
    குற்றமற்ற அவர் மலரடி தொழுதேன் என்று கூறுவாயாக.
    இந்த ஓலையை அவரிடம் காட்டுவாயாக” என்று கூறினான்.

    எம் பிரிவால் ஏற்பட்ட
    அவர்தம் நடுக்கத்தைப் போக்கி,
    அவர்கள் உள்ளத்தில் உறைந்துள்ள
    துயரத்தை நீக்க இப்போதே
    புகார் நகரம் விரைந்து செல்வாயாக என்றான்.

    கோவலன் மீண்டு வந்து, பாணர்களுடன் இசை பாடிப் பொழுது போக்குதல்

    குற்றமில்லாக் கற்புநெறி கொண்ட
    தன் மனைவியாம் கண்ணகியோடு இருந்த
    தவறில்லாக் கொள்கையுடைய
    கவுந்தியடிகளிடம் சென்று இணைந்து,
    போர்க்கோலம் பூண்ட துர்க்கையின் வெற்றியைப்
    பாடும் பாணருடன் உரிமையுடன் சேர்ந்து,
    செம்மையாகச் செய்யப்பட்ட செங்கோட்டு யாழில்
    தந்திரிகம் திவவு உறுப்புகளைத் திறம்படக் கட்டி,
    ஒற்று உறுப்பைக் கொண்ட யாழ் அது என்பதால்
    பற்று உறுப்பையும் கூட்டி
    உழை குரலாகவும், கைக்கிளை தாரமாகவும்
    நரம்புகளை நிறுத்தினான்.

    மூவகைத் தானத்தாலும்
    துள்ளிப் பாயும் மானை ஊர்தியாகக் கொண்ட
    கொற்றவையின் புகழ்பாடும் பண்ணை
    ஆசான் திறம் என்னும் பண்ணோடு பொருந்துமாறு
    அவற்றைச் செவியால் கேட்டுணர்ந்து
    தன் யாழில் இசைத்தான்.
    பின் அவன் அப்பாணர்களிடம்,
    “மதுரைக்கு இன்னும்
    எத்தனை காததூரம் உள்ளது?” என்று கேட்டான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 96 – 113
    http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 141

    மலர் சபா

    மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

    மாதவியின் முடங்கலைப் பார்த்துக் கோவலன் உண்மை உணர்தல்

    அதன் பின் கௌசிகன்
    கோவலனைப் பிரிந்து வருந்துதலால்
    அழிவைத் தரும் நெஞ்சத்தையும்
    நிறைந்த காம நோயை உடையவளுமாகிய   sankailakkiyam
    பூங்கொடி போன்ற மாதவியின் மடலைக்
    கோவலனிடம் கொடுத்தான்.

    தாம் அவளுடன் கூடி வாழ்ந்த காலத்தில்
    அவள் கூந்தலில் இட்ட புனுகு நெய்யின் மணத்தை
    அம்மடலின் மீது இருந்த
    மண் இலச்சினை உணர்த்தியது.
    எனவே அதைப் பிரிக்க இயலாதவனாய்
    மீண்டும் மீண்டும் நுகர்ந்தான்.

    பின் அதனுள் பொதிந்திருக்கும்
    அவள் கருத்துகள் அறிய வேண்டி
    இலச்சினை அகற்றி அதைப் பிரித்துப்
    படிக்கத் தொடங்கினான்.

    மடலில் எழுதியிருந்தவை:

    அடிகளே! உம் திருவடிகள் இருக்கும்
    திசை நோக்கி வணங்குகின்றேன்.
    தெளிவில்லாத என் புன்மொழிகளைத்
    தாம் கேட்டருள வேண்டும்.
    குலப்பிராட்டியாம் கண்ணகியோடு
    இரவோடு இரவாக யாரும் அறியாவண்ணம்
    நீவிர் சென்றதற்குக் காரணம்தான் என்ன?

    இதை உணராமல் என்னுள்ளம்
    செயலற்றுப் போகின்றது.
    இக்குழப்பத்தைப் போக்க வேண்டும்.
    குற்றம் நீங்கிய அறிவுடைய மேலானவரே!
    உம்மைப் போற்றுகின்றேன்!

    இதற்கு நான்தான் காரணம் எனில்,
    “என் சொல் குற்றமற்ற சொல்” என்று கருதி
    அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்.

    இங்ஙனம் அவள் எழுதிய வார்த்தைகள் கண்டு
    அதன் பொருள் உணர்ந்து
    ‘மாதவி ஒரு குற்றமும் அற்றவள்;
    இது எல்லாம் எம் தீவினை போலும்’
    என்றெண்ணிய கோவலன்
    அம்மடலை மீண்டும் மீண்டும் வாசித்தான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 80 – 95
    http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

    படத்துக்கு நன்றி:
    http://www.gunathamizh.com/2011/03/what-she-said.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 140

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

    புகாரில் நிகழ்ந்தவற்றைக் கௌசிகன் அறிவித்தல்

    கௌசிகன் புகார் நகரில் கோவலன் பிரிவால்
    வருத்தத்தில் இருப்பவர்கள் பற்றிப் பேச வந்த    thalavi-thozhi
    தன் கொள்கையுடன் பேசத் தொடங்கினான்.

    “கோவலன் நகரை விட்டு நீங்கியதால்
    பெருவாணிகனாம் கோவலன் தகப்பன் மாசாத்துவானும்
    அவன் தம் இல்லக்கிழத்தியும்
    அரிய மணியைக் கிடைக்கப்பெற்ற நாகம்
    அதை இழந்ததைப் போல வருந்துகின்றனர்.

    இனிய உயிரை நீத்த உடல் போல
    சுற்றத்தார் எல்லாம் செயலற்றுப் போய்த்
    துன்பக்கடலில் வீழ்ந்தனர்.

    ‘நான்கு திசைகளிலும் சென்று கோவலனைத் தேடுக’ என
    ஏவலர்க்கிட்ட பணியின் பொருட்டு
    அவர்கள் உன்னைத் தேடிச்சென்றுள்ளனர்.

    ‘தந்தை தந்த பணியைச் செய்வதே மேலானது
    அவ்வாறு அன்றி அரசாள்வது இழிந்தது’  என்று
    அரசு துறந்து கொடுமையான காட்டுக்குச் சென்ற
    இராமனைப் பிரிந்த அயோத்தி மக்கள் போலப்
    புகார் மக்களும் உன்னைப் பிரிந்து
    பெருந்துயர் அடைந்துள்ளனர்.

    நீ பிரிந்ததையும் உன் வீட்டில் நிகழ்ந்ததையும்
    தன் திருமுகம் மறுத்ததையும்
    வசந்தமாலை மூலம் கேட்டுத் தெரிந்து கொண்ட மாதவி
    பசலையுற்ற மேனியளாய் நினைவுகளால் நோயுற்று
    உயர்ந்த நிலைகளையுடைய மாளிகையின் நடுமாடம் தன்னில்
    உன்னை நினைத்தபடியே
    ஒரு பள்ளியறைப்படுக்கையில் வீழ்ந்தாள்.

    துயருற்றுத் தனித்திருந்த
    மாதவியைக்காண நான் சென்றேன்.
    என்னிடம் அவள்,
    ‘உன் திருவடி தொழுது நிற்கிறேன்.
    என் துயரம் நீக்குவாயாக’ என வேண்டினாள்.
    ‘என் கண்ணின் கருமணி போன்றவனுக்கு
    இதைக் காட்டுவாயாக’ என்று கூறித்
    தம் மலர்க்கரங்களால் எழுதிய
    மடல் ஒன்றைத் தந்தாள்.
    அம்மடலை மண் இலச்சினையிட்டுத்
    தன் கூந்தலால் ஒற்றி என்னிடம் தந்தாள்.

    அவள் தந்த அந்த ஓலையை எடுத்துக்கொண்டு
    பல வழிகளில் அலைந்து திரிந்து
    இப்போதுதான் நான் உன்னைக் கண்டேன்” என்று
    கௌசிகன் கோவலனிடம்
    நடந்தேறிய நிகழ்வுகளை நடந்தவாறே கூறினான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 56 – 79
    http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 139

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

    கோவலனது உருவ மாறுபட்டால் ஐயுற்ற கௌசிகன், உண்மை   தெளிய, மாதவிப்பந்தரை நோக்கிக் கூறுதல்

    காதலி தன்னுடன் கானகம் புகுந்த கோவலன்,
    கொல்லன் உலைத் துருத்தி போல்
    பெருமூச்சுவிட்டு உள்ளம் கலங்கி
    உடலின் நிறமும் கறுத்துக் காணப்பட்டதால்,
    மாதவியின் தூதுவனாய் வந்த கௌசிகன்
    இவன் கோவலன்தானோ? என ஐயமுற்றான். Madhavi

    “கோவலன் தன்னைவிட்டுப் பிரிந்ததால்
    கொடிய துயரினை அடைந்த
    கரிய நெய்தல் மலர் போல்
    நெடிய கண்களையுடைய மாதவியைப்போல்
    நீயும் அல்லவா
    பொறுக்க இயலாத இவ்வேனிற்வெயிலால்
    வாடி வதங்குகிறாய்” என்று
    கௌசிகன் அருகிருந்த
    மாதவிக்கொடியை நோக்கிக் கூறினான்.

    அதைக் கேட்டகோவலன் கௌசிகனை அடுத்துக் கூறுதல்

     இங்ஙனம் கௌசிகன் உரைக்கக் கேட்ட கோவலன்
    அவனிடம் சென்று,
    “நீ இப்போது இங்கு உரைத்ததன் பொருள் யாது?”
    எனக் கேட்டான்.

    கௌசிகனும் “இவன் கோவலன்தான்
    எந்த ஒரு ஐயமுமின்றி
    அவன் அடையாளம் அறிந்தேன்”
    எனத் தெளிவுற்றான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 44 – 55
    http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanak/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 138

    -மலர் சபா

    மதுரை பயணம்

    மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

    அடிகளின் அறவுரையைக் கேட்டுக் கோவலன் வழிநடத்தல்

    வழியில் நடந்ததால் துயருற்ற
    கண்ணகியிடம் கோவலன்
    “இக்கொடிய வழியில்
    புலிகள் திரியும்
    ஆந்தைகள் அலறும்
    கரடியும் சத்தமிடும்
    இதற்கெல்லாம் அஞ்சாமல் செல்வாயாக”

    இப்படிக்கூறி வளைந்த வளையலை அணிந்த
    அவள் கைகளைத் தன் தோள்மேல் சார்த்தி
    அன்புடன் அவளை அழைத்துச் சென்றான்.

    வழிநெடுகக் கவுந்தியடிகளின்
    பாவமொழிகள் நீங்கிய குற்றமற்ற
    அறவுரைகளைக் கேட்டுக் கொண்டே,
    அவர்கள் கடப்பதற்கு அரிய
    பல வழிகளைக் கடந்து சென்றனர்.

    வரிநவில் அந்தணர் வாழும் பதியை வைகறையின் சார்தல்

    வெம்மை நிலைபெற்று விளங்கும் காலத்தில்
    மூங்கில் வெம்மையில் கரிந்து கிடக்கும்
    காட்டின் இடையில்
    காட்டுக்கோழிகள் கூவிக்
    கதிரவனின் வரவை அறிவித்தன.

    வரிப்பாடல் பாடும் கொள்கையுடையவராய் ஆனால்
    அந்தக் கொள்கையிலிருந்து தற்போது வழுவியவராய்,
    முப்புரி நூல் அணிந்த அந்தணர்கள் வாழ்ந்துவந்த
    ஓர் ஊரினை அம்மூவரும் சென்றடைந்தனர்.

    கோவலன் நீர்நிலை நோக்கிச் செல்லுதல்

    அந்த காலைப் பொழுதினில்
    கண்ணகியுடன் கவுந்தியடிகளையும்
    ஒரு பாதுகாப்பான இடத்தில் அமரச் செய்துவிட்டு,
    முள்ளிட்டுக் கட்டப்பெற்ற வேலியைக் கடந்து
    நீர் கொண்டு வருவதற்காகத்
    தொலைவிலிருந்த நீர்நிலையிடத்துக்
    கோவலன் சென்றான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 30 – 43
    http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

    படத்துக்கு நன்றி:
    http://www.howtogeek.com/92364/peaceful-early-morning-by-the-riverside-wallpaper/

    Share