நான் அறிந்த சிலம்பு – 149
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 04: ஊர் காண் காதை
பெண்களைப் பிரிவதால் உண்டாகும் துன்பமும்
அவர்களைப் புணர்வதால் உண்டாகும் துன்பமும்
அவ்வேளைகளில் காமன் தண்டிக்கும் துன்பமும்
அழகுக் கூந்தல் கொண்ட பெண்களைப் புணர்ந்தவர்க்கன்றி,
தனித்து வாழும் அறிஞர்க்கு இல்லை.
இவ்வுலகில் பெண்டிரும் உணவும் மட்டுமே
முக்கியமான பொருளாய்க் கருதும்
அறிவற்றவர் அடையும் துன்பத்தை உணர்ந்தவராய்
முனிவர்கள் ஒதுக்கிய காமம் பற்றுக்கோடாய்
காதலினால் வருந்தி
கரைக் காணாத் துன்பம் அடைந்தோர்
இன்று மட்டுமல்லாமல் முற்காலத்திலும் பலராவர்.
இந்நிகழ்ச்சி தொடர்ந்துவரும் பழைமையுடையதாகும்.
ஆதலினால், தன் தந்தை ஏவியதால்
தன் மனைவியோடு கானகம் சென்று
அம்மனைவி பிரிந்ததால் கொடுந்துன்பத்தை அடைந்தவன்
வேதம் அருளிய நான்முகனைப்பெற்ற
திருமால் என்று நீ அறியமாட்டாயோ?
அது அனைவரும் அறியும் வண்ணம்
பரவி நிற்கும் சொல்லன்றோ!
சூதாடும் தாய விளையாட்டால்
மண் இழந்து அரசு இழந்து
மென்மைத்தன்மை வாய்ந்த காதலி தமயந்தியுடன்
காட்டை அடைந்தவன்
பொருள் மீது கொண்ட அன்பின் காரணமாய்
அவளைப் பிரிந்தவன் அல்லன்.
அவள் குற்றம் செய்தவள் என்ற
இழிவினைப் பெறுவாளும் அல்லள்.
அடவியாகிய காட்டின் இடத்து
இருள்நிறைந்த யாமத்தின்போது
உறக்கம் நீக்குவது
அவர் முன்செய்த தீவினை அன்றோ!
அப்பெண்ணின் பிழையே காரணம்
என்று சொல்வதற்குச்
சாட்சி உண்டாயின் அதை நீ சொல்வாயாக!
நீ அவர்களைப் போன்றவனல்லன்.
ஏனெனில் நீ நின் மனைவியைப்
பிரியாத வாழ்க்கையினைப் பெற்றவன்.
இம்மன்னவனின் கூடல் நகரின் கண்
நீ மனம் வருந்தாமல் சென்று
விருந்தெதிர் கொள்வாரைக் கண்டுகொண்டு
அங்கு செல்வாயாக” என்று கவுந்தியடிகள் கூறினார்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 35 – 62
http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1134-oorkankathai–
1 thought on “நான் அறிந்த சிலம்பு – 149”