Tag: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (285)

    அன்பினியவர்களே!

    அன்பினுமினிய வணக்கங்கள். காலத்தின் ஓட்டத்தோடு போட்டி போட்டுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் எமக்கு வாரங்கள் அவசரமாய்ப் புரண்டு கொண்டு ஓடுவது தெரிவதில்லை/ இதோ மற்றொரு மடலில் உங்களுடன் உறவாட விழைந்து இம்மடல் வரைகின்றேன். இந்த ஒரு வாரத்தில் இங்கிலாந்தில் எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்து விட்டன. சில அனைவராலும் வரவேற்கப்பட்டவை, மற்றும் சில அனைவராலும் வெறுக்கப்பட்டவை வேறு சிலவோ கலவையான உணர்வுகளைக் கொண்டவை.

    முதலாவதாக இங்கிலாந்தின் பிரதமர் திரேசா மே அவர்களின் நிலையை எடுத்துப் பார்த்தோமானால் அவரது எதிர்காலம் சிக்கல் மிக்க கேள்வியாகவே இருக்கிறது. “ப்ரெக்ஸிட்” எனும் ஒரு பெரிய சுமையை எப்போது பிரதமனாரோ அப்போதே தனது கழுத்தினூடு மாட்டிக் கொண்டு விட்டார். நவம்பர் மாதம் இங்கிலாந்தின் எதிர்கால ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான வர்த்தக உறவுகளை நிர்ணயிக்க கால எல்லை வகுக்கப்பட்டிருந்தது. ஏனெனில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதகான நாள் 2019 மார்ச் மாதம் 29ஆம் திகதி என்பது உலகறிந்த உண்மை. இவ்வெளியேற்றத்தின் பின்னால் சுமார் இரண்டு வருட காலத்துக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உறவுகளுக்கான சட்ட மூல நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக கூட்டப்பட்ட விசேட கூட்டத்தில் இதற்கான உடன்படிக்கை எட்டப்படவில்லை. சர்ச்சை மிகுந்த விடயமாக வட அயர்லாந்து விளங்குகிறது. அதற்கிடையில் தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் பல குழப்பங்கள். அமைச்சர்களில் சிலர் தெரேசா மே அவர்களின் நிலைப்பாட்டையும் ஒன்றியத்துடனான வர்த்தக உறவு பற்றிய அவரது கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சியோ இதனை உபயோகித்து எப்போது அரசைக் கவிழ்க்கலாம் என்று காத்திருக்கிறார்கள். பாராளுமன்றத்துக்கு வெளியேயும் நாடு பிளவுபட்டுக் கிடக்கிறது. பிரதமர் தெரேசா மே ஒரு நூலிழையில் ஊசலாடுகிறார்.

    இந்நிலையில்தான் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் நிதியமைச்சரினால் இவ்வருடத்துக்குரிய பட்ஜெட் தாக்கலாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு காலமும் அதாவது சுமார் எட்டு வருடமாக முன்னாள் பிரதமர் டேவிட் கமரன் அவர்களின் அமைச்சரவையினால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பொதுச்செலவீனக் கட்டுப்பாடு இப்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகவே நிதியமைச்சர் தனது உரையில் குறிப்பிடிருந்தார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த கன்சர்வேடிவ் கட்சியின் மகாநாட்டில் பிரதமர் தனது உரையின்போது இக்கொள்கை முடிவுக்குக் கொண்டு வரப்படும், இதுவரை மக்கள் அனுபவித்த பொருளாதாரச் சிக்கல்கள் முடிவடையும் என்று அறிவித்திருந்தார். இவ்வறிவித்தலை ஊர்ஜிதம் செய்யும் வண்ணமே நிதியமைச்சரின் உரையும் அமைந்தது. ஆனால் இது எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது என்பதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. புதிதாக ஒரு நிதியும் ஒதுக்கப்படவில்லையே இதுவரை காலமும் சிக்கனம் எனும் பெயரில் ஒவ்வொரு துறைக்கும் கிடைக்க வேண்டிய நிதியைக் குறைத்தவர்கள் அதை இப்போது திரும்பக் கொடுக்கிறார்கள். இதிலென்ன பெரிய பிரதாபம் என்கிறார்கள் சில அரசியல் அவதானிகள். முக்கியமான துறைகளான காவற்துறை, கல்வித்துறை போன்றவற்றினை விடுத்து போக்குவரத்துப் பாதைகளின் குழிகளைப் பழுதுபார்ப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது நகைப்புக்கிடமானது என்கிறார்கள் வேறு சிலர். பிரபல வர்த்தக நிலையங்கள், மற்றும் மத்தியதரக் குடும்பங்களின் வரிக்குறைப்பு என்பன வரவேற்கப்படாமலில்லை. இதன் தாக்கம் மொத்தத்தில் எப்படி இருக்கும் என்பதை ப்ரெக்ஸிட் எனும் அந்தப் பூதாகரமான நிகழ்வின் பின்னாலேயே முற்றாக உணர்ந்து கொள்ள முடியும்.

    மீண்டும் துப்பாக்கி வேட்டுக்கள் அமெரிக்காவை அதிர வைத்திருக்கின்றன. அநியாமாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த யூதர்களில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமேரிக்காவை மட்டுமல்ல அகில உலகையுமே கலக்கி விட்டிருக்கிறது. இந்நிகழ்வினைப் பலவிதமான கோணங்களில் பல முனைகளில் இருந்து பலர் அலசியிருக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு இனைத்துவேஷப் படுகொலையே! இக்கொலையைச் செய்தவனின் கொடூரச் செயலின் பின்னணியில் எது செயல் பட்டிருக்கிறது எனும் கேள்வி பல முனைகளில் இருந்துஎழுகிறது. இன்றைய மேற்குலக அரசியல் ஒழுங்கீன, நிற, மத வெறிப் பின்னணியைக் கொண்டதாக இருக்கிறதோ எனும் கேள்வி கூட எழுக்கிறது. பல முன்னணி அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற உரைகள் கூட இதற்கான காரணமாக இருக்கலாமோ என்றுகூடச் சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். எது எப்படியிருப்பினும் எத்தனையோ இன்னல்களைக் கடந்து இன்று தமக்காக ஒரு வாழ்வைக் கட்டியெழுப்பியிருக்கும் யூத இன மக்களுக்கு இது ஒரு பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்பதே உண்மை

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்,
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (284)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். இதோ மற்றொரு வாரத்தில் உங்களுடன் மடல் மூலம் மனந்திறக்க விழைகிறேன். காலத்தின் வேகம் சூறாவளிக் காற்றின் வேகத்தைப் போல அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் வேகத்திற்கேற்ப நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளும் மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. அன்றைய நாட்டின் நடப்புகள் இன்றைய நாட்டின் நடப்புக்கு ஏற்றதாகக் கருதப்படாததால் சமுதாய நிலைப்பாடுகளும் காலத்திற்கேற்பத் தமது போக்குகளை மாற்றிக் கொண்டே செல்கின்றன. இது நாட்டிற்கு நாடு அந்தந்த நாட்டின் கலாசார நிலைப்பாடுகளை ஒட்டி வேறுபடுகின்றதேயொழிய அடிப்படையில் அனைத்தும் காலத்தின் மாற்றங்களே!

    இங்கிலாந்தில் இன்று அரசியல்களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. இங்கிலாந்தின் பிரதமர் தெரேசா மே அவர்கள் தமது பதவியில் நிலைத்து இருப்பாரா? எனும் கேள்வி பல அரசியல் அவதானிகள் மத்தியில் எழுப்பப்பட்டு அலசப்பட்டு வருகிறது. “ப்ரெக்ஸிட்” எனும் அந்தப் பூதம் மீண்டும் அடைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் குவளையிலிருந்து மெதுவாக தலையை வெளியே நீட்டினாலும் அந்நிகழ்வு பூதாகரமான நிகழ்வாகவே நோக்கப்படுகிறது. இங்கிலாந்தும், ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்தின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றத்தின் பின்னால் எவ்வகையான வியாபார ஒப்பந்தத்தை எட்டப்போகின்றன என்பதே இன்றைய முக்கியமான விவாதமாக இருக்கின்றது.

    இந்த ஒப்பந்தத்தை எட்ட இருக்கும் காலக்கெடுவானது அவசரமாகத் தனது எல்லையை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கிலாந்தின் ப்ரெக்ஸிட்டுக்கான அமைச்சரும், பிரதமரும் அவசரம், அவசரமாக பல கருத்துப்பரிமாறல்களை ஜரோப்பிய ஒன்றியத்துடன் நிகழ்த்தினாலும் இன்னும் தீர்க்கப்படாத சில முக்கிய விவகாரங்கள் தலையிடியைக் கொடுக்காமலில்லை. இங்கிலாந்தின் பிரதமரின் வைராக்கியத்தைப் பாராட்டமலிருக்க முடியாது. ப்ரெக்ஸிட் வேண்டும் எனும் தீர்ப்பளித்த பெரும்பான்மை இங்கிலாந்து மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதே அரசின் ஜனநாயகக் கடமை என அதற்குச் சார்பான அரசியல்வாதிகள் ஒருபுறம், மக்கள் ஆதரவாக வாக்களித்தார்கள் எனும் ஒரே காரணத்திற்காக நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டாலும் பரவாயில்லை ப்ரெக்ஸிட்டை நிறைவேற்றுவோம் என்பதல்ல உண்மையான ஜனநாயகம் என்று வாதிடும் அரசியல்வாதிகள் ஒருபுறம், இந்த இக்கட்டான சூழலை உபயோகித்து அரசாங்கத்தைக் கவிழ்த்துப் பொதுத்தேர்தலுக்கு வழிவகுத்தால் தமக்கு வெற்றியடைய ஒரு வாய்ப்பிருக்கும் என்று செயல்படும் எதிர்கட்சி ஒருபுறம், பிரதமரின் சூழலை உபயோகித்து பிரதமரை வீழ்த்தித் தாம் பிரதமராகலாம் எனும் எண்ணம் கொண்ட பிரதமரின் கட்சியைச் சார்ந்தோரின் முதுக்குப் பின்னால் விழும் கத்திக் குத்துகள் ஒருபுறம் என அனைத்தையும் சமாளித்துக் கொண்டு ஒரு பெண் என்று எண்ணி என்னை விழுத்தி விட முடியாது என்று செயற்படும் பிரதமரின் வைராக்யம் அலாதியானது.

    பிரதமருக்கான இந்த பிரச்சனைகள் ஓரிடத்தில் இருந்து மட்டும் வந்து விடவில்லை. அரசாங்கத்தின் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ப்ரபல்யமான அரசியல்வாதிகள் எனப்பலரும் இந்நிலைக்கு காரணகர்த்தாக்கள். இங்கே செயற்படும் எத்தனை பேர் நாட்டின் நன்மையை முன்வைத்து செயற்படுகிறார்கள் என்பது கேள்விக்குறியே! இன்னும் இரண்டு தினங்களில் கூட இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டத்தொடரில் ஒரு முடிவும், உடன்படிக்கையும் எட்டப்படாவிட்டால் உடன்படிக்கையற்ற ஒரு விலகலையே இங்கிலாந்து எதிர்நோக்க வேண்டிவரும். அத்தகைய ஓர் முடிவினால் எத்தகைய பொருளாதாரப் பின்னடைவுக்கு இங்கிலாந்து முகம் கொடுக்க வேண்டிவரும் என்பது யாராலும் கூறமுடியாத ஒரு விடயமாகும். பொருளாதாரத்தில் பின்னடைவைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை அனைத்துத் தரப்பினரும் ஒத்துக் கொண்டாலும்,ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவானவர்கள் இப்பின்னடைவு மிகவும் தற்காலிகமானது அதைத்தொடர்ந்து வரும் முன்னேற்றம் இப்பின்னடைவினை நியாயப்படுத்தும் என்கிறார்கள். ஆனால் ப்ரெக்ஸிட்டுக்கு எதிரானவர்களோ இப்பின்னடைவு எமது பொருளாதாரத்தை ஒரு பத்து வருடங்களுக்கு மேலாகப் பின் தள்ளும் என்கிறார்கள். இத்தகைய ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் படலத்தை இதுவரை எந்த ஒரு நாடுமோ மேற்கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் சரித்திரத்திலேயே இத்தகைய ஒரு நிகழ்வு இப்போதுதான் முதன்முறையாக நிகழ்கிறது.

    பிரதமர் திரேஸா மே அவர்கள் நாட்டின் முன்னேற்ற்த்துக்கான உடன்படிக்கையை நிறைவேற்றித் தனது சங்கற்பத்தை நிறைவேற்றுவாரா? இல்லை பதவியைப் பறிகொடுப்பாரா?  இங்கிலாந்தின் பொருளாதாரம் எவ்வகையில் பாதிக்கப்படப் போகிறது? இக்கேள்விகளுக்கெல்லாம் விடையை அடுத்த வாரம் பகன்று விடுமா? இல்லை இன்னும் ஏக்கத்தின் விளிம்பில் காத்திருக்க வேண்டுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்,
    சக்தி சக்திதாசன்
    16.10.2018

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (283)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். சில வார இடைவெளியின் பின்னால் மீண்டும் உங்களுடன் மடல் மூலம் உறவாட விழைகின்றேன். சிறிய விதையாக மண்ணில் விழும் விதை சீறிய செடியாக, பெரும் செடியாக , மரமாக பல கிளைகளுடன் வளர்ந்து விடுகிறது. அம்மரக்கிளைகளில் இருக்கும் இலையொன்று தான் உருவாகக் காரணமாக இருந்த வேர்களைத் தேடி ஒரு பயணம் மேற்கொண்டால் எப்படி இருக்கும்? அது போன்றதொரு அனுபவத்துடன் கூடிய ஒரு பயணத்தை நான் மேற்கொண்டதே எமது சில வார இடைவெளிக்குக் காரணம்.

    ஆமாம் நான் பிறந்து தவழ்ந்து தமிழ் கற்ற என் தாய்மண்ணின் மீது கால் பதித்த ஒரு பயணம். 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் என் தாய்மண்ணை விட்டுப் புலம் பெயர்ந்தேன். அதன் பின்னால் 1978ம் ஆண்டு எனது மூத்த சகோதரனின் திருமணத்திற்காக யாழ் மண்ணை மிதித்தேன். அதன் பின்னால் சுமார் 35 வருடங்களின் பின்னால் 2013ம் ஆண்டு யாழ் மண்ணை மீண்டும் மிதித்தேன். அந்த இடைப்பட்ட காலத்தில் இலண்டனில் மாணவனாக இருந்த நான் கணவனாகித் தந்தையாகி வாழ்வின் பல பருவங்களைக் கடந்திருந்தேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த என் மனைவிக்கு அதுவே முதன் முதலாக “யாழ்ப்பாணம்” எனும் என் தாய்மண்ணின் அறிமுகம் கிட்டியது.

    அதன் பின்னால் ஜந்து வருடங்கள் கழித்து மீண்டும் கடந்த 5ம் திகதி ஈழத்தை நோக்கிப் பயணமானேன். உள்ளத்தில் உரசிய உணர்வுகள் ஆயிரம். ஜந்து வருடங்களுக்கு முன்னால் தொட்டுத் தொட்டுப் பார்த்து வந்த தாய்மண்ணை மீண்டும் கொஞ்சம் உற்றுப்பார்க்க ஒரு சந்தர்ப்பம். சரியாக நாற்பது வருடங்கள் கழித்து யாழ் நல்லூர்க் கந்தனின் சப்பரம், தேர், தீர்த்தம், பூங்காவனம் எனும் நிகழ்வுகளைப் பார்க்கப் போகிறோம் எனும் ஆவல் முந்திக் கொண்டது. 1978ம் ஆண்டின் பின்னால் என் பிறந்த நாளை என் தாய்மண்ணில் கழிக்கப் போகிறோம் எனும் எண்ணமும் தலை தூக்கியது. அது மட்டுமல்ல வாழ்வில் முதல் முறையாக எமது திருமணநாளை அதாவது எமது முப்பத்தி ஏழாவது மணநாளை எனது தாய்மண்ணில் கழிக்கக் கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம். உள்ளம் குறுகுறுப்பால் துள்ளியது.

    6ம் திகதி அதிகாலை கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தை அதிகாலை 4.30 மணியளவில் வந்தடைந்தோம். விமானநிலையத்திலிருந்து நேராகவே யாழ்நகருக்குச் செல்வதற்காக அதற்குரிய பேருந்தில் இருக்கையை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். சுமார் காலை ஆறு மணியிலிருந்து முன்பகல் 9.30 வரை விமானநிலையத்திலேயே நேரத்தைக் கழிக்க வேண்டியிருந்தது. காலைச் சிற்றுண்டியை விமான நிலையத்திலேயே முடித்துக் கொண்டோம். 9.30 மணியளவில் விமான நிலையத்துக்குள் வந்த யாழ்நகருக்கான பேருந்து எம்மையும், மற்றும் சில பயணிகளையும் ஏற்றிக் கொண்டு சென்றது. அந்தப் பேருந்தின் பயண இருக்கைகள் வசதியானவையாகவே இருந்தன. சுமார் 8 மணி நேரப் பேருந்துப் பிரயாணம். உடம்பு ஓய்வுக்காகக் கெஞ்சியது. பத்து மணிக்கு மேலான விமானப் பிரயாணம் அதைத் தொடர்ந்து 8 மணிநேரம் பேருந்தில்,  அப்போதுதான் வயது 60க்கு மேல் ஆகிவிட்டது என்பதை உடம்பு எடுத்துச் சொல்லியது.

    யாழ்நகரில் இறங்கி நாம் ஏற்கனவே பதிவு செய்திருந்த விடுதிக்குச் சென்று ஓய்வெடுத்தோம். அடுத்தநாள் 7 திகதி நல்லூர்ச் சப்பரத் திருவிழா. சுமார் ஜந்து மணியளவில் கிளம்பி கந்தனின் ஆலயத்தை நோக்கி நடந்தோம். அப்போது நான் எனது பதின்ம வயதுகளில் சைக்கிளில் பவனி வந்த பழைய ஞாபகங்கள் என் நெஞ்சை நெருடிச் சென்றன. அழகாக முருகன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்திலே பவனி வரும் காட்சியைக் காண அலைபோல திரண்டு வந்த மக்கள் கூட்டம். இங்கிலாந்திலிருந்து எமக்கு அறிமுகமான பலரையும் சந்தித்தோம். அடுத்தநாள் காலை தேர்த்திருவிழா மக்களலை எம்மை அமிழ்த்தித் திக்குமுக்காட வைத்தது. பின்பு தீர்த்தத் திருவிழா அதைத்தொடர்ந்து பூங்காவனம் என அனைத்தையும் அடுத்து வந்த நாட்களில் ரசித்தோம்.

    எனது அம்மாவின் பக்க உறவினர்கள் பலரையும் நான் நன்கறிவேன் ஆனால் தந்தையின் பக்கத்தைத்தான் அதிகமாக அறிந்திருக்கவில்லை. தெரிந்த சிலரின் உதவியோடு வட்டுக்கோட்டை (தந்தையின் தந்தையின் பூர்வீக இடம்), சுதுமலை (தந்தையின் தாயரின் பூர்வீக இடம்) எனும் இடங்களை நோக்கி எனது வேர்களைத் தேடிய பயணத்தில் பலரைச் சந்திக்க முடிந்தது எனது பாக்கியம் என்றே கொள்ள வேண்டும். நான் சந்தித்த பலரும் நான் அவர்களைத் தேடி வந்து சந்தித்ததை ஓர் பெரிய விடயமாக ஆனந்தப்பட்டார்கள்.

    அதைத்தொடர்ந்து நான் படித்த ஆரம்பப் பாடசாலை “மங்கையர்க்கரசி மகாவித்தியாலயம்” மற்றைய கல்லூரிகளான “சென் ஜோன்ஸ்” , “ யாழ் மத்திய கல்லூரி” என அனைத்தையும் சென்று பார்த்து அதிபர்களுடன் கலந்துரையாடியது நெஞ்சை நிறைத்தது. நான் வாழ்ந்த சுற்றுப்புறம், எனது அயல் என பலவற்றையும் பார்த்து மகிழ்ந்தது ஒருபுறம் அவை நான் விட்டுச் சென்ற நிலையிலிருந்து முற்றும் மாறுதலடைந்து இருப்பதைக் கண்டு ஏக்கம் கொண்டது மறுபுறம் என இதயம் கலவையான உணர்வுகளோடு உரசியது.

    சுமார் ஒன்பது நாட்கள் யாழ்நகரில் தங்கியிருந்து விட்டு ஒரு தனியார் வாகனத்தை அமர்த்திக் கொழும்பு வந்து சேர்ந்தோம். கொழும்பிலே இருந்த சில உறவுகளையும், நட்புகளையும் சந்தித்து விட்டு இரண்டு நாட்கள் கொழும்பில் தங்கி விட்டு திரும்ப லண்டன் வந்து சேர்ந்து அன்றாட அலுவல்களில் மீண்டும் எம்மைப் புகுத்திக் கொண்டோம்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்
    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (282)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்தில், அடுத்தொரு மடலுடன் உங்களிடையே உலவ வருகிறேன். ஓடி,ஓடிக் களைக்கவில்லை உலகம், பாடிப் பாடிச் சலிக்கவில்லை குயில், பேசிப் பேசி ஓயவில்லை கிளி, வீசி, வீசி ஓயவில்லை காற்று, பொழிந்து, பொழிந்து வற்றவில்லை மழை, ஒளிர்ந்து, ஒளிர்ந்து அழியவில்லை ஆதவன், தேய்ந்து, தேய்ந்து தன்னை முழுவதுமாய் முடிக்கவில்லை நிலா. ஆம் இவையெல்லாம் எமக்கு இயற்கையன்னை தந்த பரிசு. இவைகளெல்லாம் தமக்களிக்கப்பட்ட கடமைகளை காலத்தோடு நிறைவேற்றிக் கொண்டேயிருக்கின்றன. யாருக்கு தம்முடைய தேவை இருக்கிறதோ? அன்றி யாருக்குத் தேவைப்படவில்லையோ? எனும் கவலையின்றி ஓய்வின்றி தமது கடமைகளை ஆற்றிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால் மனிதர்கள் மட்டும் . . . . உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

    ப்ரெக்ஸிட் எனும் அந்தப்பெரிய குழி தோண்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதைச்சுற்றிய வாதங்களும், பிரதிவாதங்களும் ஓயாமல் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இதுவரை அந்த ப்ரெக்ஸிட் எனும் சுழியினுள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த எமது பிரதமர் தெரேஸா மே அவர்கள் அதற்போது அந்தச் சுழலுக்குள் இருந்து மெதுவாக தனது தலையை உயர்த்தியுள்ளார். அவரது தலை மட்டுமே தெரிகிறது உடல் இன்னமும் அந்தச் சுழிக்குள் தான் அகப்பட்டு இருக்கிறது. அப்படியே உள்ளே இழுபட்டு விடும் அபாயம் அவரை விட்டு இன்னமும் அகலவில்லை. இங்கிலாந்துப் பாராளுமன்றம் தனது கோடைகால விடுமுறையைக் கழித்துக் கொண்டிருப்பதால் அவர் இன்னமும் கடித்துக் குதறப்படாமல் இருக்கிறார். இந்த நிலையில் தான் அவரது கால் முதன்முறையாக ஆபிரிக்க கண்டத்தினுள் பதிந்திருக்கிறது. தென்னாபிரிக்காவில் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நைஜீரியா நாட்டினுள் நுழைந்திருக்கிறார். அவரது இந்த விஜயம் பற்றி அவர் ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வு முடிந்த பின்னால் ஜக்கிய இராஜ்ஜியம் தனது எதிர்கால வியாபார விஸ்தரிப்புகளை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக அமையும் எனும் வகையில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

    பிரதமர், அடுத்த வருடம் மார்ச் 29ம் திகதி ஐக்கிய இராஜ்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உத்தியோகபூர்வமாக முற்றாக வெளியேறிய பின்னால் அதிககாலம் தனது பதவியில் நீடித்திருக்க வாய்ப்பில்லை என்பது கணிசமான அரசியல் அவதானிகளின் கணிப்பாகும். அதற்கு ஏதுவாக சமீபத்தில் பிரதமரின் ப்ரெக்ஸிட் சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்யப்போகும் உடன்பாட்டைப் பற்றிய அறிக்கையை எதிர்த்து தனது பதவியை இராஜினாமாச் செய்த முன்னால் வெளியுறவு அமைச்சர் பொரிஸ் ஜான்சன் தொடர்ந்து பிரதமருக்கு எதிரான பல பத்திரிக்கை அறிக்கைகளை வெளியிட்ட வண்ணமிருக்கிறார். வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் பிரதமரின் அரசியல் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் வருடாந்தர மகாநாட்டின் போது பிரதமருக்கு எதிரான சவால் பொரிஸ் ஜான்சனிடமிருந்து வரலாம் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆனால் நமது பிரதமரும் சளைத்தவரல்ல ! இந்த வெளிநாட்டுப் பயணத்தின் போது உடன் சென்ற ஊடகவியலாளருக்கு அளித்த பேட்டியில் எவ்வகையான எதிர்ப்பு எவரிடமிருந்து வரினும் அதனை நான் எதிர்கொண்டு வெற்றிகொள்வேன் என்றும் எமது இந்த அரசியல் பயணம் எனது நாட்டு மக்களின் வாழ்வைச் சுபீட்சமாக்கும் நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார். தென்னாபிரிக்காவில் அவரை வரவேற்ற ஒரு பாடாசலை மாணவர்களின் நடனத்தில் தானும் இணைந்து ஆடிவிட்டாரே ஒரு நடனம் பாருங்கள் ! பார்த்த பொரிஸ் ஜான்சன் கூடக் கலங்கியிருப்பாரோ ?

    இதுவெல்லாம் இப்படியிருக்க எமது ட்ரம்ப் அண்ணா எப்படியிருக்கிறார் ? ஐக்கிய அமெரிக்காவின் ஒரு இராணுவக் கதாநாயகர் என்று வருணிக்கப்படும், அமெரிக்க குடியரசுக் கட்சியின் முன்னால் ஜனாதிபதி வேட்பாளர் ஜான் மக்கெயின் அவர்களின் மறைவின் போதும் சர்ச்சையைக் கிளப்ப எமது அண்ணா தவறவில்லை. அமெரிக்க வியட்நாம் யுத்தத்தின் போது போரில் ஈடுபட்டிருந்த ஜான் மக்கெயின் அவர்கள் இரு இராணுவக் கைதியாக பிடிபட்டு பல சித்திரவதைகளுக்குள்ளாக்கபட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட போது அமெரிக்கா முழுவதனாலுமே நாட்டுத் தியாகியாக மதிக்கப்பட்டவர். அவர் பின்பு அரசியலில் ஈடுபட்டு ஓபாமா அவர்களுக்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். எப்போதும் தமது கருத்துக்களை அது தனது கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானதாக இருந்தாலும் கூட துணிந்து உரைத்து வந்தவர் ஜான் மக்கெயின். அவர் எமது ட்ரம்ப் அண்ணாவின் பல செய்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தவர். ஒரு சமயம் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் ட்ரம்ப் அண்ணா அவர்கள் எதிரிகளால் கைப்பற்றப்படாமல் போரிடும் வீரர்களே தியாகிகள் , கைப்பற்றப்பட்ட ஜான் மக்கெயின் அல்ல என்று ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். கடந்தவாரம் ஜான் மக்கெயின் அவர்கள் புற்றுநோய் காரணமாக இயற்கையெய்தியது அனைவரும் அறிந்ததே. அப்போது அமெரிக்காவில் அனைத்து முக்கிய ஸ்தலங்களில்லும் அமெரிக்கக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப் பட்டிருந்தது. ஆனால் ட்ரம்ப் அண்ணாவின் வெள்ளை மாளிகையில் ஒரே ஒருநாள் மட்டுமே அரைக்கம்பத்தில் பறந்தது. கொதித்தெழுந்தனர் அமெரிக்கர்கள். ஊடகங்கள் அனல் கக்கின. பயந்து விட்டார் ட்ரம்ப் அண்ணா என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ! இறக்கி விட்டார் கொடியை மீண்டும் அரைகம்பத்தில்.

    போகப் போகத் தெரியும். . . . இந்தப் பூவின் வாசம் புரியும் . . . .

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (281)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் மீண்டுமொரு வாரத்தில் மடல் வரைய விழைகின்றேன். இம்மடல் வரையும் நாளான 14ம் திகதி செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தில் காலையில் மீண்டும் ஒரு பரபரப்பு, பதைபதைப்பு. காலைவேளையில் தமது கடமைகளைச் செய்யச் சென்று கொண்டிருந்த ஏதுமறியா அப்பாவி மக்கள் காயப்பட்ட ஒரு கனத்த காலையாகி விட்டது . மனதை ஆணவத்திற்கும், மிருக உணர்ச்சிக்கும் விலையாக்கி விட்ட மிலேச்சத்தனம் கொண்ட சிலருள் ஒரு கயவன் தான் மோட்டார் கார் கொண்டு நடைபாதையில் சென்று கொண்டிருந்தோரின் மீது மோதியதில் அப்பாவியான சைக்கிள் பிரயாணிகள் சிலர் காயமடைந்தார்கள். அக்கோரச் செயலைப் புரிந்தவன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் யார் என்பது போலீசாருக்குத் தெரிந்திருந்தும் அவனது நோக்கத்தை அவன் இதுவரை வெளிப்படுத்தவில்லை என்று தெரிய வருகிறது. நடைபெற்ற இந்நிகழ்வுகள் ஒரு பயங்கரவாதியினால் நடத்தப்படுத்தப்பட்டிருப்பதற்குரிய அடையாளங்களைக் கொண்டிருந்தாலும் அது இன்னமும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

    இன்றைய இங்கிலாந்தில் நடைபெறும் இத்தகைய செயல்களால் தமது இருப்பினை நியாயப்படுத்திக் கொள்ள முனையும் சிறுபான்மை சமூகத்தின் முயற்சிகள் மேலும் பின்னோக்கித் தள்ளப்படுமேயல்லாது வேறு பயனில்லை. தமது நாடுகளில் தம்மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சி இங்கிலாந்தில் தஞ்சம் கோரி வந்த உண்மையான அகதிகள் அனைவருமே ஒருவிதமான சந்தேகக் கண்ணோட்டத்துடன் நோக்கப்படுவதே இதனால் இத்தகைய மூடர்கள் சாதிக்கக்கூடிய விடயமாகிறது. ஜனநாயகத்தின் கருவறை எனக் கருதப்படும் இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்திற்கு மிக அருகாமையில் நடைபெற்றிருக்கும் இச்செயலானது இங்கிலாந்தின் ஜனநாயக நீரோட்டத்தையே நிலைகுலைய வைத்திருக்கிறது,. இங்கிலாந்தின் அரசியல் நீரோட்டத்தில் சிலதுளிகளாக இருக்கும் அதீத வலதுசாரப் போக்குக் கொண்ட மிதவாத இனத்துவேசம் கொண்ட அரசியல்வாதிகளின் பலத்தை பெருக்குவதற்கே இத்தகைய செயல்கள் துணை போகும் என்பதுவே உண்மையாகும். இதன் விளைவுகளை இனிவரும் நாட்கள்தான் எமக்கு உணர்த்தும் என்பதும் உண்மை.

    இனி அடுத்தொரு செய்தியினைப் பார்ப்போம். டாக்டர்கள் எனப்படுவோர் உயிர்களைக் காப்பாற்றப் போராடுவோர் என்பதுவே பொதுவான கருத்து.. ஆனால் கடந்த 2011ம் ஆண்டு லெஸ்டர் ஹாஸ்பிட்டலில் கொண்டு செல்லப்பட்ட ஆறு வயதான ஜாக் எனப்படும் சிறுவனை அன்றைய டாக்டர்கள் பற்றாக்குறையினால் சேவையில் குறைந்த அனுபவமுள்ள டாக்டர் ஹடிசா பாவா-ஹாபா எனும் பெண் வைத்தியரினால் பரிசோதிக்கப்பட்டார். தனக்குள்ள அனுபவத்துடனும் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையினாலும் கிடைக்கப்பட்ட வசதிகளின் படி தன்னாலான வகையினில் பரிசோதனை செய்து வைத்தியமளித்தும் பயனளிக்காமல் அவ்வாறு வயதான பையன் உயிரிழந்தான். மனமுடைந்த பெற்றோர்கள் அந்த டாக்டர் மீது குற்றம் சாட்டி வழக்குத் தொடுத்தார்கள். அவ்வழக்கில் அந்த டாக்டர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டார். விளைவாக அந்த டாக்டர் அந்த வைத்தியசாலையில் தனது பதவியை இழந்ததோடு இனி இங்கிலாந்தில் டாக்டராக பணியாற்ற முடியாது என்று இங்கிலாந்தின் டாக்டர்கள் கவுன்சிலின் அங்கத்தினர் அந்தஸ்திலிருந்தும் விலக்கப்பட்டார்.

    இது ஏனைய இங்கிலாந்து டாக்டர்கள் பலருக்கு அதிர்ச்சியளித்தது. டாக்டர்களும் மனிதர்கள் தானே அவர்கள் அ|றியாமல் இழைத்த தவறுக்காக அவர்களின் ஜீவாதாரத்தையே குலைக்கும் வகையில் தண்டிக்கலாமா? கூடாது என்றனர். அந்த டாக்டருக்குச் சார்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள் விளைவாக நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த டாக்டர் இனி டாக்டராக பணியாற்றக் கூடாது எனும் தடை நியாயமற்றது என்று தீர்ப்பளித்தது. அந்த டாக்டர் இனி டாக்டராக பணியாற்ற வகை செய்தது. இந்தத் தீர்ப்பினால் மகிழ்ந்த அந்த டாக்டர் தனது வைத்தியத்தின் போது உயிரிழந்த அந்த குடும்பத்தின் துயரையும், கோபத்தையும் தான் நன்கு உணர்வதாகவு,ம், இச்சம்பவத்தில் தான் மட்டுமன்றி அந்த வைத்தியச்சாலையின் நிர்வாகத்தினரின் தவறும் எத்தனையோ இணைந்திருப்பதாகவும் இனியாவது இத்தகைய தவறுகள் நடக்காவண்ணம் நிர்வாகத்தினர் தமது பணியாற்றுவோர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அப்பையனின் பெற்றோர் அந்த டாக்டரை மன்னிப்பதற்கு தாம் இன்னமும் தயாரில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

    சரி இனி எமது ட்ரம்ப் அண்ணாவின் விளையாட்டுக்களைப் பார்ப்போம். அவரது அரசியல் அந்தரங்க ஆலோசகராக அவர் தான் தொலைக்காட்சியில் “அப்பிரண்டிஸ்” எனும் நிகழ்ச்சியை நடத்தும்போது பங்கு பற்றிய ஒரு கறுப்பு இன பெண்ணை நியமித்திருந்தார். பின்பு அப்பெண்மணி ட்ரம்ப் அண்ணாவின் நிர்வாக அதிகாரியினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இப்போது அந்தப் பெண்மணி தனது நினைவுப் பதிவுகளை உள்ளடக்கிய ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதிலே எமது ட்ரம்ப் அண்ணாவைப் பற்றி மிகவும் சர்ச்சைக்குரிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். தான் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது அதைப்பற்றி ட்ரம்ப் அண்ணாவுக்கு தெரியவே தெரியாது என்று அவர் தன்னோடு உரையாடிய தொலைபேசி ஒலிப்பதிவை ஊடகங்களுக்கு கையளித்துள்ளார். இதற்கு ட்ரம்ப் அண்ணாவின் பதில் ” அந்தப் பெண்மணி ஒரு தோல்வியின் உதாரணம், கீழ்த்தரமானவர்” என்பதுவே. அதுமட்டுமல்ல இன்றுகாலை இங்கிலாந்தில் நடைபெற்ற பயங்கரவாதச் செயல் எனும் நம்பப்படும் செயல் ட்ரம்ப் அண்ணாவுக்கு தனது இஸ்லாமிய எதிர்ப்புப் பிரசாரத்துக்கு கிடைத்த ஒரு துருப்புச் சீட்டுப் போல உள்ளது.. அதைப் பற்றியும் தனது சமூக ஊடகத்தளத்தில் வெளியிட்டுள்ளார்,

    சுண்டெலிக்குத் திண்டாட்டம்
    பூனைக்கு கொண்டாட்டம் . . . . . . ம் , , , , , இருந்து பார்ப்போம்
    மீண்டும் அடுத்த மடலில்.

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • கலைஞர் அஞ்சலி

    கலைஞர் என்றோர் ஓவியம்
    கலைந்தது இன்று அறிவீரோ ?
    கண்ணீர் சுரக்கும் வேளையிலே
    கவிதை வழியுது உள்ளத்திலே

    தமிழகம் தவிக்குது துயரிலே
    தமிழன்னை மைந்தன் மண்ணிலே
    குறளமுதம் தந்த தமிழ்த் தலைவன்
    குரல் இன்னும் மனதிலே மறையாமல்

    அரசியல் பார்வையில் பார்க்கவில்லை
    அன்னைத் தமிழைத் தாலாட்டிய
    தமிழுக்குச் சொந்தக்காரனாய் இந்தத்
    தனயன் எத்தனை அழகுற மொழி செய்தான்

    தமிழை நான் அறிந்த நாள் முதல்
    தரணியில் நானின்று வாழும் வரை
    செந்தமிழ் விளையாடும் விளைநிலமாய்
    செம்மொழி தந்த கலைஞர் துயில்கிறார்

    அறிவுக்களஞ்சியம் அறிஞர் அண்ணாவின்
    அன்புத் தம்பியாய் , புரட்சித் தலைவரின்
    அருமை நண்பராய் கவியரசர் கண்ணதாசனோடு
    அடிப்படை நட்புக் கொண்டவராய்

    பல இலட்சம் தமிழ் மக்களின் தலைவராய்
    பன்னாடு வாழ் தமிழர்களின் காவலராய்
    பல்வேறு கோலப் பதவி கொண்டு வாழ்ந்த
    பராசக்தித் தமிழன் ஓய்வெடுத்தான்

    சங்கத்தமிழ் தந்த எங்கள் கலைஞசரிடம்
    சரித்திரம் படைக்கும் இனிய தமிழ் எமக்கு
    இனிப்பாய்க் கிடைக்குமென்று காத்திருந்தோம்
    இனியுமக்கில்லை என்றே ஈசன் அழைத்துக் கொண்டான்

    கலைஞரே ! தமிழ்ப் புரவலனே ! போதுமய்யா!
    கனவேகத்தில் உருளும் பொல்லாத உலகத்தில்
    கனமான இதயத்தொடு வாடவேண்டாம்
    இனமான உணர்வு காத்தேனென்று துயில் கொள்வீர்

    மறைந்து விட்ட தமிழ்த் தனயன் எம்
    மகத்தான கலைஞர் கருணாநிதிக்கு
    மனத்துயரத்தோடு தமிழன் எந்தன்
    மெளன அஞ்சலிகள்.

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (280)

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் மீண்டும் மற்றொரு வாரத்தில் உங்கள் மத்தியில் இங்கிலாந்துச் செய்திகளுடன் உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். எமக்குக் கிடைத்த இந்த மனிதப்பிறவி இருக்கிறதே அது ஒரு விலைமதிப்பில்லாத பரிசு. ஆங்கிலத்தில் My body is my temple என்பார்கள். அதாவது எனது உடலே எனது கோவிலாகும் எனப்பொருள்படும். இதன் உள்ளர்த்தம் என்னவென்றால் எமது உடல்நலத்தைப் பேணுவதே ஒரு ஆன்மீகச் செயலாகும் என்பதுவே. இதிலிருந்து ஒவ்வொரு மனித வாழ்விற்கும் எத்தகையதோர் உன்னத மதிப்பு அளிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது இல்லையா ?

    சரி எதற்காக இந்த ஆலாபனை என்கிறீர்களா ?

    கடந்த யூன் மாதம் இங்கிலாந்து மேல் வழக்கு மன்றம் (High Court) ஒன்றில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் முக்கிய விளைவினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கமே இதற்கான விளக்கமாகும். மேற்கண்ட வழக்கு என்னவென்றால் , வழக்கு மன்றத்தில் “எம்” என்றே குறிக்கப்பட்ட ஒரு 50 வயதுப் பெண்மணி கடந்த 25 வருடங்களாக “ஹண்டிங்டன்” என்றழைக்கப்படும் வியாதியால் பீடிக்கப்பட்டு அப்போது அவரது மூளை ஸ்தம்பிக்கப்பட்ட நிலையில் குழாய்கள் மூலம் அவரது உயிர் தக்க வைத்துக் கொண்டிருந்த வேளை. அவரது உறவினர்களும், வைத்தியர்களும் கருணை கூர்ந்து அவரது மூச்சு நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியபோதும் சட்டம் அதற்கு இடமளிக்கவில்லை. இப்பிரச்சனையை மேல் நீதி வழக்காடு மன்றத்துக்கு எடுத்துச் சென்றபோது இவ்வழக்கை விசாரித்த நீதிபதி “பீட்டர் ஜாக்சன்” என்பவர் இத்தகைய நிலைமைகளில் சட்டத்தின் துணையை நாடவேண்டும் என்பது தேவையற்றது அதிக பட்சம் வைத்தியர்களின் அறிவுறுத்தலின் படி, உறவினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் இத்தகைய நோயாளிகளின் மூச்சுக்குழாய் நிறுத்தப்படலாம் என்று தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பின் விளைவு என்னவென்றால் இனிவரும் காலத்தில் மூளை இயங்கவில்லை எனும் நிலையிலிருக்கும் ஜடம் போன்ற நோயாளிகளை மூச்சுக்குழாய்களின் உதவியோடு தக்க வைத்திருப்பது தேவையற்றது என்று வைத்தியர்களும், உறவினர்களும் கருதுவார்களானால் அவர்களது மூச்சுக்குழாய்களும், வலுக்கட்டாயமாக உணவூட்டும் உணவுக்குழாய்களும் நிறுத்தப்பட்டு அவர்களது இயற்கை மரணம் நிகழும்வகை செய்யலாம்.

    இதனை எதிர்ப்பவர்களின் வாதம் என்னவென்றால் இதனைச் சாக்காக வைத்து தமது அசையமுடியாமல், பேசும் திறனற்ற உறவினர்களைப் பராமரிப்பதின் சிக்கலைத் தவிர்க்குமுகமாக பலர் இம்முறையைத் தேர்ந்தெடுப்பது பேசமுடியாமல் , நினைவின்றிக் கிடக்கும் அந்நோயாளர்களின் உரிமைப் பாதிப்பாகும் என்பதுவே. இறைவன் அளித்த இவ்வாழ்வினைப் பறிக்கும் உரிமை ஒருவருக்கும் கிடையாது என்பதுவே அவர்களது வாதம். இனி அவர்களால் சுயநினைவுக்குத் திரும்பவே முடியாது என்று வைத்தியர்களால் உறுதி செய்யப்பட்டவர்களை இத்தகைய நிலையில் இயற்கைக்கு மாறாக வைத்திருப்பது மட்டும் எவ்வகையில் நியாயமாகும் என்கிறார்கள் இதனை ஆதரிப்போர். “எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எப்படி முடியும்?” எனும் கவியரசரின் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது இல்லையா?

    சரி இனி இவ்வாரத்தில் இங்கிலாந்தில் ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்ட எமது நாயகனைப் பார்ப்போமா? அவர் வேறு யாருமல்ல “கோமாளி” என்று சிலராலும், அதி உயர்ந்த திறைமையான அரசியல்வாதி என்று சிலராலும், இவர் எப்படியானவர் என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கும் பலராலும் விரும்பப்பட்டு, வெறுக்கப்பட்டு, விமர்சிக்கப்பட்டு வரும் முன்னாள் இங்கிலாந்து வெளியுறவு மந்திரி “பொரிஸ் ஜான்சன்” தான் அவர். இங்கிலாந்துப் பிரதமரின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியதால் தனது அமைச்சர் பதவியை இழந்து விட்ட இந்நாள் ஹீரோ விட்டார் பாருங்கள் கிளிகள் கூட்டத்திடை ஒரு பூனையை . . ஆமாம் டென்மார்க் நாட்டில் இஸ்லாமியப் பெண்கள் கண்களைத் தவிர அனைத்தையும் மறைக்கும் பெர்க்கா என அழைக்கப்ப்படும் அங்கி பொது இடங்களில் அணிய விதிக்கப்பட்ட தடையைப் பற்றித் தான் வாராவாரம் டெய்லி டெலிகிராப்ட் எனும் பத்திரிகையில் எழுதும் பத்தியில் குறிப்பிட்டதினால் பிடித்துக் கொண்டார் “காகத்தின் எஜமான் (சனி)” அவரை. ஆம் அத்தடைக்கு எதிராக விமர்சிக்கப் போய் தான் ஒரு வலையில் சிக்கிக்கொண்டார் இந்தக் கோமாளி . . . . இல்லையில்லை அதி புத்திசாலி பொரிஸ் ஜான்சன். இஸ்லாமியப் பெண்கள் அணியும் இந்த அங்கி ஒரு தபாற் பெட்டி போலவும், கொள்ளையரின் சீருடை போலவும் தென்படுகிறது என்றாரே பாருங்கள் .. . . . . போச்சுடா . . . .

    அவரது இந்தக் கருத்துக்கும் எமக்கும் எதுவித சம்பந்தமுமில்லை என்று ஏன் இன்னமும் அறிக்கை விடவில்லை என்று அவர் சார்ந்திருக்கும் , இன்றைய இங்கிலாந்து அரசுக்கட்டிலில் மிகச் சொற்பமான பெரும்பான்மையுடன் அமர்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியை நோக்கிப் பறக்கின்றன கேள்விக்கணைகள் பலமுனைகளிலிருந்தும். . . . . ப்ரெக்ஸிட் எனும் வலைக்குள் அகப்பட்டுத் துடித்துக் கொண்டிருக்கும் எமது பிரதமருக்கு இது தேவைதானா? என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.

    சரி இந்த வாரம் எமது நெருங்கிய நட்பு நாட்டின் பிரசித்தம் மிகுந்த ௶ட்ரம்ப் அண்ணாவின் அதிரடிகளைப் பார்ப்போம். . . இரண்டு தீவிரமான அதிரடிகளைக் கிளப்பி விட்டிருக்கிறார் ட்ரம்ப் அண்ணா.

    அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட தேர்தலில் அமெரிக்க ஜனநாயக முறையைச் சீர்குலைக்கும் வகையில் ரஸ்ய நாட்டு உளவுத்துறை செயல்பட்டிருக்கிறதா என்பதை ஆராய நியமிக்கப்பட்ட குழு அத்தகைய செயல்களில் ட்ரம்ப் அண்ணாவின் மகனே நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கிறது. இதுவரை அச்சந்திப்பு வேறு தேவைக்காக நடந்தது என்று கூறிவந்த அண்ணா ட்ரம்ப் இப்போது அது சரி எனும் வகையில் சமூக வலைத்தளம் ஊடாகக் கூறியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. . . . என்ன அண்ணா? வார்த்தை புரள்கிறதே !

    உலகின் முன்னணி நாடுகளும் (அமெரிக்கா உட்பட) , ஈரானும் சேர்ந்து செய்த உடன்படிக்கையில் இருந்து ட்ரம்ப் அண்ணா தன்னிச்சையாக அமெரிக்காவை வெளியெடுத்துக் கொண்டது அனைவரும் அறிந்ததே ! அடுத்த கட்டமாக அண்ணா ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக சில பாரதூரமான பொருளாதாரத் தடைகளை அமுல் படுத்தியுள்ளார். இத்தடைகளின் பிரகாரம் விதிக்கப்பட்ட தடைகளை மீறும் எந்தவொரு நிறுவனத்துக்கும் எதிராக அமெரிக்கா தீவிர நடவடிக்கை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அண்ணா மூலம் தானே வெளியேறுவதற்கும் தமக்கும் எதுவித சம்பந்தமுமில்லை என்று அவ்வுடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட மற்றைய நாடுகள் குறிப்பிட்டிருந்தன. தற்போது அமெரிக்கா கொடுத்திருக்கும் இப்புதிய சிக்கல் ஜரோப்பிய ஒன்றியத்திற்கும், அமெரிக்காவுக்குமான வர்த்தக உறவை எவ்வகையில் பாதிக்கப் போகிறது என்பதுவே பொருளாதார நிபுணர்களின் தீவிர கரிசனையாக இருக்கிறது.

    இதுவும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயமே !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(279)

    அன்பினியவர்களே!

    அன்புநிறை வணக்கங்களுடன் அடுத்தொரு மடலுடன் இங்கிலாந்திலிருந்து உங்களுடன் மனந்திறக்கிறேன். நேற்றிருந்தோர் இன்றில்லை, இன்றிருந்தோர் நாளையில்லை இதுதான் உலக யதார்த்தம். அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இவ்வுலகில் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது தன்போக்கிலே தனது சக்கரத்தை உருட்டிக் கொண்டேயிருக்கிறது. சிரிப்போர் சிலர், அழுவோர் சிலர் சிரித்துக்கொண்டே அழுவோர் பலர். இப்படித்தான் வாழவேண்டும் என வாழத் தொடங்குவோர் எப்படியும் வாழ்ந்து முடிப்பதும் உண்டு. எப்படியும் வாழ்வோம் என்று வாழத் தொடங்குவோர் இப்படித்தான் என்று வாழ்ந்து முடிப்பதும் உண்டு.

    வகுத்த பாதை நினைத்த இடத்தில் கொண்டு சேர்ப்பது சிலருடைய வாழ்வில் தான் சாத்தியமாகிறது. இப்படியான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டே சமுதாய நிகழ்வுகளில் ஒரு கண்ணோட்டம் செலுத்த வேண்டியுள்ளது.

    சரி இனி இங்கிலாந்தில் நிகழ்ந்த சமீப நிகழ்வுகளில் சிறுதுளிகளை அலசுவோமா?

    அரசியல் அரங்கத்தில் பல காட்சிகள் நடந்தேறினாலும் முக்கியப் பங்கான ப்ரெக்ஸிட் எனும் காட்சி கொஞ்சம் தொய்வு கண்டிருக்கிறது. காரணம் தற்போது இங்கிலாந்துப் பாராளுமன்றம் தனது கோடைக்கால விடுமுறையை அமுல்படுத்தியுள்ளது. பிரதமர் கூட இச்சிக்கல்களில் இருந்து கொஞ்சம் ஓய்வு பெற இத்தாலியை விடுமுறைக்குத் தேர்ந்தெடுத்துச் சென்றுள்ளார். ஓ! அது கூட ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடோ? பிரதமரைப் போட்டு துவைத்து எடுத்துவிட்ட சக பாராளுமன்ற அங்கத்துவர்கள் அவருடைய கட்சியினர் உட்பட பிரதமர் கொஞ்சம் மூச்சுவிட அவகாசம் கொடுத்துள்ளார்கள் போலத் தென்படுகிறது. ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட ப்ரெக்ஸிட்டுக்கான எதிர்பார்ப்புகளை கொஞ்சம் அனுசரணையோடு ஐரோப்பிய ஒன்றியம் நோக்குகிறது எனும் செய்தியோடு அவற்றில் சில மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள் எனும் செய்தியும் வயிற்றில் புளியைக் கரைக்கத்தான் செய்கிறது. பொறுமை, பொறுமை, பொறுமை என்கிறார்கள் சில அரசியல் அவதானிகள்.

    அதைத்தவிர லேபர் கட்சியைப் பிடித்த சனிதோஷம் இன்னும் நீங்கிய பாடில்லாதது போலத் தோன்றுகிறது. யூத இன மக்களுக்கு எதிரான இனத்துவேஷக் கருத்துகளை கொண்டவர்கள் பலர் லேபர் கட்சியில் இருப்பதாக ஒரு பரவலான குற்றச்சாட்டு அனைத்து ஊடகங்கள் உட்பட பல முன்னணி யூத மதத் தலைவர்களால் சில மாதங்களாக லேபர் கட்சியை உலுக்கி வந்திருப்பதை உங்களில் பலர் அறிந்திருக்கலாம். இக்குற்றச்சாட்டுக்கு அக்கட்சியின் தலைவர் ஜெர்மி கோபனும் உட்படுத்தப்பட்டிருக்கிறார். பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஒடுக்குமுறையை நாம் எதிர்க்கிறோமேயொழிய எமது எதிர்ப்பு யூத மக்களுக்கு எதிரானதல்ல என்பது இக்கட்சியில் குற்றம் சாட்டப்பட்டிருப்போரின் வாதம். சரி, அப்படியாயின் உலகின் அனைத்துப் பொது ஸ்தாபனங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட “யூத எதிர்ப்பு” எனும் அடைமொழிக்கான பொது வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்ள ஏன் லேபர் கட்சி தயங்குகிறது என்கிறார்கள் குற்றஞ்சாட்டுவோர். இதற்கிடையில் வந்ததடா மற்றுமோர் தலையிடி லேபர் கட்சிக்கு “பீட்டர் வில்ஸ்மன் (Peter Wilsman)“ எனும் பெயரில். எப்படி என்கிறீர்களா? பீட்டர் வில்ஸ்மன் லேபர் கட்சியின் தேசிய நிர்வாகக் குழுவில் ஓர் அங்கத்தினர். அத்தோடு இவர் தலைவர் ஜெர்மி கோபனின் நெருங்கிய ஆதரவாளர். இவர் சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகக்குழுக் கூட்டத்தில் லேபர் கட்சியின் மீது சுமத்தப்பட்டுள்ள  “யூதர் எதிர்ப்பு”  எனும் குற்றச்சாட்டு “ட்ரம்ப் (அமெரிக்க அதிபர்)அவர்களின் மீது வெறித்தனமான ஆதரவு கொண்ட விஷமிகளினால் சுமத்தப்படுக்கிறது என்று எகிறிக்குதித்த பேச்சு ஒலிப்பதிவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளிவந்துவிட்டது. சும்மா விட்டு விடுவார்களா? நமது ஊடகங்கள், பின்னி எடுத்து விட்டார்கள் போங்கள் ! இதன் விளைவுகளை அடுத்தடுத்த வாரங்களில்தான் பார்க்க வேண்டும்.

    அதுதவிர சில வாரங்களாக இங்கிலாந்தை கொளுத்தும் வெயில் வாட்டி வதக்கிக் கொண்டிருந்தது. மேமாதம் இறுதிக்குப் பின்னால் கடந்த யூலை மாதம் 27ஆம் திகதி தான் இங்கிலாந்தின் தென்பகுதி (அடியேன் வசிக்கும் பகுதி) மழையையே கண்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 1976ஆம் ஆண்டுக்குப் பின்னால் 33 டிகிரிகளை வெப்பம் அதிகநாட்களுக்குத் தாண்டியது இவ்வருடம்தான் என்கிறார்கள். 1976ஆம் ஆண்டு கோடை நான் லண்டன் வந்து சுமார் 18 மாதங்களின் பின்னால், அப்போதுதான் சமீபத்தில் நான் ஈழத்திலிருந்து இங்கிலாந்துக்கு புலம் பெயர்ந்திருந்ததினால் அப்போது இருந்த வெப்பம் எனக்கு சும்மா “ஜூஜூபி “. ஆனால் இப்போதோ சுமார் 42 வருடங்களின் பின்னால் வாட்டி வதக்கி விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.  பச்சைப் பசேல் என்றிருந்த புல்வெளிகளெல்லாம் வைக்கோல்போலக் காட்சியளிக்கிறது. பின்புலங்களில் உலவுவது போல இங்கும் கால்நடைகள் உள்ளன என்றால் அவைகளுக்குத் திருவிழாதான் போங்கள்!

    இந்த ட்ரம்ப் அண்ணா இருக்கார் பாருங்கோ! அவருக்குச் சும்மா விளையாட்டுன்னா பாத்துக்கோங்களேன். விட்டேனா பார் அடித்து நொறுக்கி விடுவேன் என்று ட்வீட்டர் மூலம் வெருட்டி விட்டு பின்னர் சிரித்துக் கொண்டே சந்தித்து விட்டு வந்தார் தென்கொரிய அதிபரை. அமெரிக்க நாட்டு ஜனநாயகத்தின் அத்திவாரத்திலேயே கைவைத்து விட்டார் என்று அமெரிக்க அரச உளவு நிறுவனம் குற்றம் சாட்ட, சிரித்துக் கொண்டே சென்று கைகுலுக்கி விட்டு வந்தார் ரஸ்ய நாட்டு அதிபருடன். ஈரானா? காட்டுகிறேன் பார் அவர்களுக்கு நான் யாரென்று என்று கூறி முன்னணி மேற்குலநாடுகள் அனைத்தும் சேர்ந்து கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக வெளியேறியது மட்டுமல்ல சில நாட்களின் முன்னால் ட்வீட்டர் வலைத்தளத்தின் மூலம் ஈரானுக்கு எச்சரிக்கை கூட விட்டிருந்தார் ட்ரம்ப் அண்ணா. அடிச்சார் பாருங்கோ ஒரு பல்டி ” எதுவித முன்நிபந்தனைகளுமின்றி ஈரான் நாட்டு அதிபருடன் பேசத்தயார்” என்று எதுவித முன்னறிவித்தலுமின்றி எதேச்சையாக ஓர் அறிவித்தலைச் செய்தார். புரியவில்லை ஒருவருக்கும். ஓ! ஒருவேளை இதைத்தான் “ராஜதந்திரம்” என்கிறார்களோ? என்ன செய்வது? சாணக்கியர் இருந்திருந்தால் கேட்டறிந்திருக்கலாம். எதையும் கேட்ட மாத்திரத்திலேயோ அன்றி பார்த்த மாத்திரத்திலேயோ அதைப்பற்றி முடிவு கட்டி விடக்கூடாது. ஒருவேளை அவரது இந்த யுக்திகள் தான் இன்றைய உலகிற்கு உகந்ததோ? காலம்தான் விடைபகர வேண்டும்.

    மீண்டும் மற்றுமோர் மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (277)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். சிலவார இடைவெளிகள், சில நிகழ்வுகள், சில மகிழ்வானவை வேறு சிலவோ மனதை வருத்துபவை. ஆனால் எதையும் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. காலச்சுழற்சியின் இயக்கத்தைத் தடுக்கக்கூடிய வல்லமை யாருக்குத்தான் உண்டு. பலகாலம் பழகிய சிலரின் இழப்பு உள்ளத்தின் ஓரத்தில் உரசத்தான் செய்கிறது. “ கூக்குரல் போட்டு அழுவதனாலே மாண்டவர் மீண்டும் வருவாரா?” என்பது கவியரசரின் யதார்த்தமான வரிகள். “ போனால் போகட்டும் போடா” என்று மனதுக்கு ஆறுதலை ஏற்படுத்தும் வரிகளை முணுமுணுத்துக் கொண்டு இருப்பதைத் தவிர செய்வதற்கு வேறு ஒன்றும் இல்லை.

    சரி இனி இந்த மடலுக்கு வருவோம். இங்கிலாந்தின் நிலப்பரப்பிலும் இத்தகைய பல நிகழ்வுகள் பல முனைகளில் நிகழ்ந்திருக்கின்றன.

    கடந்த மார்ச் மாதம் முன்னாள் மேற்குலக நாடுகளுக்காக உளவு செய்ததிற்காக ரஷ்யாவில் கைது செய்யப்பட்டு பின்னர் உளவாளிகளின் பரிமாற்றத்தின் போது இங்கிலாந்திடம் கையளிக்கப்பட்டு இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த ரஷ்யப் பிரஜை ஒருவரைச் சந்திக்க அவரது மகள் வந்திருந்த போது, அவர்களிருவரும் மிகப்பயங்கரமான இரசாயன நச்சுப் பொருளினால் தாக்கப்பட்டது பரபரப்பான செய்தியாக வெளிவந்ததை அனைவரும் அறிந்திருக்கலாம். அதைத்தொடர்ந்து அந்த இரசாயனப் பொருளின் ஆரம்பம் ரஷ்யா என்று இங்கிலாந்தினால் குற்றம் சாட்டப்பட்டு இவ்விருநாடுகளுக்கிடையேயும் இருந்த உறவில் பாரிய விரிசல் ஏற்பட்டதையும் அனைவரும் அறிந்திருக்கலாம். அந்த நச்சுப் பொருளினால் தாக்கப்பட்ட இருவரும் இங்கிலாந்து மருத்துவர்களினால் மிகத்தீவிரமான சிகிச்சைகளுக்குள்ளாக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதும் பழைய செய்தியே. அதன் பக்க விளைவே இப்போதைய பெரிய செய்தியாகி விட்டிருக்கிறது. ஆமாம் அந்த நச்சுப் பதார்த்தத்தின் மிச்சம் மீதி எதேச்சையாக எதுவித அரசியலோ, அன்றி வேறு துறைகளிலோ சம்பந்தப்படாத ஒரு ஜோடியின் கைகளில் எவ்வாறோ தட்டுப்பட்டு அவர்களிருவரும் மிகவும் மோசமான உடல்நிலையில் வைத்தியசாலையில் சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பாதிக்கப்பட்ட பெண் இரு தினங்களுக்கு முன்னால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இது சர்ச்சையை மீண்டும் கிளப்பியுள்ளதோடு அப்பகுதியில் வாழும் ஏனைய பொதுமக்களை சிறிது அச்சத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

    அடுத்து இங்கிலாந்து அரசியல் களத்தில் உதைபந்தாக அடிபட்டுக் கொண்டிருக்கும் “ப்ரெக்ஸிட்” இன் அடுத்தகட்ட நகர்வு இங்கிலாந்து அரசுக்கும், பிரதமருக்கும் தலையிடியைக் கொடுத்திருக்கிறது. கால அட்டவணையின் படி 2019ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் அந்தஸ்திலிருந்து உத்தியோகப்பூர்வமாக வெளியேற வேண்டும். ஆனால் அதற்கு முன்னர் அவ்வெளியேற்றத்தின் பின்னால் ஜரோப்பிய ஒன்றியத்துடனான இங்கிலாந்தின் வர்த்தக உறவுகளை நிர்ணயிக்க வேண்டிய தேவையிருக்கிறது. அத்தகைய உடன்பாடு அத்திகதிக்கு முன்னர் ஏற்படுத்தப்படாவிட்டால் இங்கிலாந்தின் பொருளாதாரச் சிக்கல் வலுவடைவதைத் தடுக்க முடியாது. இங்கிலாந்தில் நிலைகொண்டுள்ள பல முன்னணி நிறுவனங்கள், ஸ்தாபனங்கள் தம்மை ஜரோப்பிய ஒன்றியத்துக்குச் சொந்தமான ஒரு நாட்டிற்கு இடம் பெயர்த்து விடும் அபாயமுள்ளது. இத்தகைய இடப்பெயர்வினால் பலர் தமது பணிகளை இழக்கும் நிலை ஏற்படலாம். இத்தகைய ஒரு ஸ்திரமற்ற சூழலினால் இங்கிலாந்தில் பணமுதலீடு செய்ய பல நிறுவனங்கள் தயங்குகின்றன. இது இங்கிலாந்தின் பொருளாதார முன்னேற்றத்தை ஸ்தம்பிக்கச் செய்கிறது. இதனைச் சரிசெய்வதற்காக ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் எத்தகையதோர் வர்த்தக உடன்பாட்டை இங்கிலாந்து எதிர்பார்க்கிறது என்பதனை இங்கிலாந்து அரசு முன்வைத்தால் மட்டுமே அதனை ஏற்பதா இல்லையா எனும் நிலையை ஜரோப்பிய ஒன்றியம் எடுக்க முடியும் என்பது ஜரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய நிலைப்பாடு. இங்கிலாந்து அரசாங்கம் ஒரு தீர்க்கமான நிலையை எடுக்க முடியாது அதனுள் அமைச்சரவையில் இருந்த கருத்து வேறுபாடு தடையாக இருந்தது. அமைச்சர்கள் தமக்கேற்றவாறு பிரதமரின் நிலைப்பாட்டை விமர்ச்சித்து சமூக ஊடகங்களில் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். இதனைச் சரிசெய்வதற்காக பிரதமர் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்து அமைச்சர்களையும் அமைச்சரவை கூட்டத்துக்கு அழைத்து அவர்களது கையடக்கத் தொலைபேசி, மற்றும் சமூக வலைத்தளங்களுக்கு செய்தி அனுப்பக்கூடிய சாதனங்கள் ஒன்றும் இல்லாமல் அமைச்சரவைக்கூட்டத்தை ஒரு அடைக்கப்பட்ட கூட்டமாக நிகழ்த்தினார் என்ற தீர்க்கமான நிலைப்பாட்டிற்கு அனைவரும் வரவேண்டிய கட்டாயத்தை எடுத்துரைத்து தான் முன்மொழியும் நிலைப்பாட்டை விமர்சித்து அதில் சில மாற்றங்களைச் செய்து ஏற்றுக்கொள்ளாதவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகலாம் எனும் முடிவைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சில முனகல்களுடன் அனைவரும் ஒரு நிலைப்பாட்டை ஆதரித்துள்ளனர். ஆனால் அதைப்பற்றிய விமர்சனங்கள் அமைச்சர்களிடமிருந்து இனி வரக்கூடது அப்படி வந்தால் அவ்வமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. இன்றைய செய்திகளின் படி இந்த “ப்ரெக்ஸிட்” பேச்சுக்களுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் டேவிட் டேவிஸ் தனது பதவியைத் தனது துணை அமைச்சருடன் இராஜினாமாச் செய்துள்ளார். இனிவரும் நாட்களில் விளைவுகளை நாம் ஒவ்வொன்றாக நோக்க வேண்டும்.

    சரி இனி இங்கிலாந்தின் சாதனைகளில் ஒன்றைப் பார்ப்போமா ?

    28 வருடங்களின் பின்னால் இங்கிலாந்தின் உதைபந்தாட்ட அணி உலகக் கோப்பைக்கான பந்தயத்தில் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த இங்கிலாந்து அணி பல எதிர்பார்ப்புகளுடன் இப்போட்டிக்குள் நுழையவில்லை. மிகவும் இளவயதினரைக் கொண்ட இவ்வணி அனைவரையும் திகைப்பிலாழ்த்தும் வண்ணம் சாதனையை நிலைநாட்டியுள்ளது. இங்கிலாந்தின் பல பொருளாதாரச் சிக்கல்களுக்குள் சிக்கி உழன்று கொண்டிருந்த மக்களுக்கு கொஞ்சம் மகிழ்வைக் கொடுக்கக்கூடிய வகையில் உதைபந்தாட்ட அணி ஒரு மாற்றத்தைக் கொடுத்துள்ளது. இதுவரை நடந்த போட்டிகளில் இதுவே இங்கிலாந்து இக்கிண்ணத்தைத் தட்டிச் செல்வதற்கான ஒரு அருமையான வாய்ப்பு என்று சிலரால் கூறப்படுகிறது. கடைசியாக இங்கிலாந்து உதைபந்தாட்ட உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டது 1966ம் ஆண்டு. கடைசியாக இங்கிலாந்து அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது 1990ம் ஆண்டு. சுமார் 28 வருடங்களின் பின்னால் மக்களின் மனதில் மகிழ்ச்சி நம்பிக்கை விதையைத் தூவியிருக்கிறார்கள் உதைப்பந்தாட்ட வீரர்கள். அவர்களது ஆட்டம் மக்கள் மனதின் கனவினை நிறைவேற்றுமா என்பது வரும் புதனன்று மாலையே தெரிய வரும் அதுவரை காத்திருப்போமே !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (276)

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இந்தவார மடலில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். வாரமொன்று என்பது வாழ்வின் காலத்தின் அளவினைக் குறுக்கிக் கொண்டே போகும் அளவுகோல் போன்று தோன்றுகிறது. ஒவ்வொரு வாரமும் வந்து போக வேண்டியது தமது காலக்கட்டாயக் கடமை போன்று யார் விரும்பினாலும் அன்றி விரும்பாவிட்டாலும் தன்பாட்டுக்கு வந்து போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் சரித்திரத்தில் அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு பதிவுகளைத் தமது சார்பில் விட்டுத்தான் சென்றிருக்கின்றன என்பதுவே உண்மையாகிறது.

    அப்படியான ஒரு சரித்திர நிகழ்வின் நூற்றாண்டு இவ்வாண்டில் இம்மாதத்தில் நிகழ்வதென்பது இப்போது பலவகைகளில் இங்கிலாந்தில் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படியான அந்நிகழ்வுதான் என்ன? இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்து இவ்வாண்டு தூற்றாண்டாகத் திகழ்கிறது. இங்கிலாந்தில் பெண்களும் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது 1918ம் ஆண்டேயாகும். இவ்வாக்குரிமையை இங்கிலாந்திலுள்ள மக்கள் மிக இலகுவாகப் பெற்று விடவில்லை. அதற்காக இங்கிலாந்திலுள்ள பெண்கள் பெரும் போராட்டம் நடத்த வேண்டிய தேவையிருந்தது.

    இங்கிலாந்தில் 1865ம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் எனும் போராட்டம் வலுப்பெற்று பல வடிவங்களெடுத்து முற்றிலுமாக 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தேர்தல்களில் வாக்களிக்கலாம் எனும் உரிமை இறுதியாக 1928 ம் ஆண்டுதான் அளிக்கப்பட்டாலும். பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது 1918ம் ஆண்டேயாகும். இத்தருணத்தில் இன்றைய பெண்களின் நிலையைப் பற்றிய ஒரு கேள்வி பலரது மனங்களிலும் எழுவது இயற்கை. இன்றைய உலகில் பெண்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் மட்டுமல்லாமல் பல நாடுகளின் தலைவர்களாக அந்நாட்டின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தகமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இருந்திருக்கிறார்கள் என்பதுவே உண்மையாகிறது.

    ஆனால் அதேசமயம் பெண்கள் தமக்கு கலாச்சாரக் கட்டுப்பாடு எனும் பெயரில் இடப்பட்ட தடைகளை உடைத்தெறியக் கூடிய சந்தர்ப்பங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் நிலையிலிருக்கிறார்களா ? என்பது கேள்விக்குறியே ! இங்கு மிக முக்கியமாக நாம் நோக்க வேண்டிய பதம் “காலாச்சாரம்” எனும் சொல்லே. இதன் முழுஅர்த்தமும் சரியான வகையில் உள்வாங்கப்பட்டிருக்கப் பட்டிருக்கிறதா என்பது சந்தேகமே ! இன்றைய இந்த நவீன உலகில் கலாச்சாரம் எனும் பதத்தின் உபயோகத்தைப் பெண்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக உபயோகிக்கும் பல ஆண்கள் இருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயமே ! பெண்களுக்கென சில குறிக்கப்பட்ட வேலைகளை நிர்ணயித்து அவர்களை அந்த எல்லைகளை விட்டு வெளியே வரவிடாதபடி கதவுகளை ,ஊட்டி வைத்து சமுதாய அமைப்புகளை ஏற்படுத்தி வைத்திருப்பதை பல இடங்களில் பார்க்கக்கூடியதாக உள்ளது. ஒரு பெண் பிரதமரைக் கொண்ட இந்த இங்கிலாந்து நாட்டில் கூட இன்றும் பெண்களுக்கான முன்னேற்றக் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கிறது என்பதுவே கசப்பான உண்மையாகிறது.

    இன்றும் பலரால் பெண் என்பவள் தமது தாய், சகோதரி, மனைவி எனும் நிலைகளில் இருந்தாலும் பெண்களை காமப்பொருளாகக் கண்டு சிலாகிக்கும் பலரைக் காணும்போது நெஞ்சம் கொஞ்சம் வருந்தத்தான் செய்கிறது. அதேசமயம் பாரதி கண்ட புதுமைப்பெண் என்பவளின் உண்மையான சமுதாயப் பங்களிப்பின் முழுஅர்த்தத்தையும் விளங்கிக் கொண்டிருக்கிறோமா? என்பது சந்தேகமே ! இதன் அர்த்தத்தை ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் விளங்கிக்கொள்ளவில்லை என்பதுவே உண்மை. தம்மை கவர்ச்சியின் அடையாளமாகக் காட்டுவதற்க்குச் சாதகமாக புதுமைப்பெண் எனும் விளக்கத்தை உபயோகப்படுத்தும் சில பெண்களினால் வரம்புகளை மீறும் ஆண்கள் தம்மை நியாயப்படுத்தும் பல நிகழ்வுகளைக் காண்கிறோம்.

    அன்னை எனும் ஸ்தானத்தில் எமது பிறப்புக்கும் இன்று நாம் சமுதாயத்தில் நடமாடும் நிலைக்கும் காரணமாக இருந்த பெண்ணின் திறமை இல்லம் எனும் நான்கு சுவர்களுக்குள் மட்டும் விளங்குவது எந்தவொரு சமுதாயத்திலும் முன்னேற்றத்துக்கு ஏற்ற ஒரு செயலாக அமையாது. இராணுவம், போலிஸ் போன்ற பணிகளில் பெண்கள் அமர்வது முடியாத ஒன்று எனும் நிலைமாறி இன்று அத்தகைய பணிகளில் பெண்களுக்கும் முன்னிடம் கொடுப்பது நிகழாமல் இல்லை. இங்கிலாந்தின் மெட்ரோபோலிடன் போலிஸ் இலாகவின் தலைமைப்பதவியில் இப்போது ஒரு பெண் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்றும் இங்கிலாந்தில் முன்னனி ஸ்தாபனங்களில் நிர்வாக இயக்குனர்களாக அவற்றை வழிநடத்துபவர்களில் பென்களின் விகிதாசாரம் குறைவாகவே உள்ளது.

    இங்கிலாந்தில் ஒரே பணியில் இருக்கும் ஆண்களின் ஊதியத்துக்கும் பெண்களின் ஊதியத்துக்கும் வித்தியாசமிருப்பது பெண்களின் நிலை இன்னமும் குறைவாக மதிப்பிடப்படுவதையே காண்பிக்கிறது. இதைப்பற்றிய கரசாரமான விவாதங்கள் முன்னனி ஊடகங்களில் நிகழாமல் இல்லை. இருப்பினும் இதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகள் இன்னமும் மந்தமாக இருக்கிறது என்பதுவே உண்மை. பெண் பிரதமரின் வழிநடத்தலில் இயங்கும் நாட்டில் இந்நிலை இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது என்கிறார்கள் பல ஊடகவியலாளர்கள். அதேசமயம் நானொரு பெண் எனக்கு இப்போது கிடைத்திருப்பதுவே பெரும் விடயம் என்று தம்மைக்குறித்த தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்களின் பங்களிப்பும் இம்முன்னேற்றத்துக்கு தடையாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    ஆண், பெண் எனும் இருவரிமே மனிதர்கள் தான் காலத்தோடு உலகம் சந்தித்த மாற்றங்கள் பல . அவற்றோடு பெண்களை நோக்கிய சமுதாயப் பார்வைகளும் மாற்ற வேண்டியது அவசியமே ! அம்மாற்றங்கள் எங்கெங்கே, எவ்வாறு நிகழ வேண்டும் என்பது முக்கியம். பெண்கள் தமக்கு இணையாக அனைத்துப் பணிகளையும் புரியும் ஆற்றல் கொண்டவர்கள் என்று ஆண்களும், தாம் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் பெண்களும் புரிவது எத்தனை முக்கியமோ கலாச்சார மாற்றத்தின் உண்மையான புரிதலையும், நாகரீகம் என்பதின் முழுஅர்த்தத்தையும் ஆண்கள், பெண்கள் இருவருமே புரிந்து கொள்வதும் அத்தனை முக்கியம். அன்னை என்பவளின் உறவு அன்றும், இன்றும், என்றும் அன்னையே ஆனால் அவளின் அறிவின் ஊடுருவல் குடும்பம் எனும் எல்லைகப்பாலும் விரிவடைவது அன்றை விட இன்று மாற்றமடைந்திருக்கிறது.

    பெண்மையைப் போற்றுதும் !

    பென்மையைப் போற்றுதும் !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (275)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் இதோ அடுத்த வாரம் மீண்டும் உங்களுடன் மடல் மூலம் உறவாடும் வேளை வந்து விட்டது. எதிர்பாராத பல நிகழ்வுகளை உள்ளடக்கியதே வாழ்க்கை. எண்ணியிருக்காத நேரத்தில் எண்ணவே முடியாத நிகழ்ச்சிகள் நடந்தேறுவது வாழ்க்கையில் பல சமயங்களில் நாம் கண்கூடாகக் பார்ப்பதுவோ அல்லது செய்திகளாக கேள்விப்படுவதோ வாழ்வில் நிகழும் சாதாரண நிகழ்வுகளாகும். இவற்றில் சில எமக்கு மகிழ்வையும், இன்பத்தினையும் தரவல்லன, மற்றும் சிலவோ துயரத்தையும், துன்பத்தினையும் அளித்துச் செல்கின்றன. உலகில் பிறந்த அனைவருமே ஒரு நாள் இறப்பது என்பது வாழ்க்கையின் யதார்த்தம். ஆனால் அந்த இறப்பு என்பது நடக்கும் துரதிருஷ்ட வசமான நிகழ்வினாலே எதிர்பார்க்காத தருணத்தில் நிகழ்வது என்பதனை ஏற்றுக் கொள்ள மனதுக்குப் பலகாலம் எடுக்கின்றது.

    இங்கே நான் படித்த ஒரு கதை ஞாபகத்துக்கு வருகின்றது. ஒருமுறை புத்த பகவான் தனது சீடர்களுடன் ஒரு பயணத்தை மேற்கொண்டு நடந்து கொண்டிருந்தார். அப்போது அனைவரும் களைப்படைந்து ஓய்வெடுத்துக் கொள்ள எண்ணினார்கள். ஆற்றங்கரையிலிருந்து சிறிதுதூரத்தில் இருந்த ஆலமர நிழலில் அனைவரும் அமர்ந்து கொண்டார்கள். அப்போது ஒரு சீடன் ” குருவே என் மனம் மிகவும் குழப்பமடைந்திருக்கும் வேளையில் அமைதியடைய என்ன செய்யலாம் என்று கேட்டான். அதற்கு புத்த பகவான் ஒரு பதிலும் கூறவில்லை. சிறிது நேரம் கழித்து புத்த பகவான் அச்சீடனிடம் அருகிலிருந்த ஆற்றிலிருந்து குடிப்பதற்கு நீர் எடுத்து வருமாறு கேட்டுக் கொண்டார். அச்சீடனும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றான். அப்போது அவன் தண்ணீர் எடுக்க வந்த இடத்தில் சில மனிதர்கள் அவ்வாற்றினுள் இறங்கி அடுத்த கரையை நோக்கி அவசரமாக நடந்தார்கள். அதனால் ஆற்றுநீரின் அடியிலிருந்த சேறு மேல்நோக்கி வந்து ஆற்றுநீர் அவ்விடத்தில் முற்றாகக் கலங்கி விட்டது.

    கலங்கிய சேற்று நீரைத் தனது குருவுக்கு குடிக்க கொடுக்க முடியாது எனும் காரணத்தினால் அச்சீடன் திரும்பவந்து புத்த பகவானிடம் நடந்ததைக் கூறினான். புத்த பகவானும் சிறிது நேரம் கழித்துத் திரும்பச் செல்லுமாறு கூறினார். அவன் திரும்பச் சென்ற போது ஆற்றில் அவன் முன்பு சென்ற இடத்தில் சேறு எல்லாம் அடியில் அடைந்துவிட நீர் தெளிவாக, சுத்தமாக இருந்தது. அவனும் அந்நீரை அள்ளிச்சென்று புத்த பகவானிடம் கொடுத்தான். அவனிடம் புத்தர் ” நீ முன்பு பார்த்தபோது கலங்கிய நிலையில் இருந்த நீர் இப்போது தெளிவடைந்திருந்தது அல்லவா? அதற்கு நீ ஏதாவது செய்தாயா?” என்றார். அதற்கு அச்சீடன்  “இல்லை” என்று பதிலளித்தான். அப்போது புத்தர் ” அதுபோலத்தான் மனம் குழப்பமடையும் போது அச்சமயத்தில் நாம் எதுவும் செய்யத்தேவையில்லை; மனதை அதன் போக்கிலேயே விட்டு விட்டால் அது தானாகவே தெளிவாகிவிடும். மனதின் குழப்பத்தின் தீவிரத்தைப் பொறுத்து அதற்கான காலம் தேவைப்படுகிறது” என்றார்.

    அதைப் போலவே எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் நிகழும் எதிர்பாராத நிகழ்வுகளைத் தாங்கிக் கொள்வதற்காக எதுவிதமான நடவடிக்கைகளை எடுப்பதென்பது இயலாத காரணம் . அத்தகைய ரணங்களை ஆற்றும் மருந்து காலம்தான் என்பதுவே மறுக்க முடியாத உண்மை. கடந்த வருடம் இங்கிலாந்தில் ஒரு பயங்கரத் தீ விபத்து நிகழ்ந்தது . இலண்டன் நகரின் பகுதியாகிய வெஸ்ட் மினிஸ்டர் நகரசபையின் கட்டுப்பாட்டில் இயங்கிய பல்லடுக்கு மாடிகளைக் கொண்ட வாடகை இருப்பிடங்கள உள்ளடக்கிய கிறென்வெல் எனும் கட்டிடம் யதேச்சையாகப் பயங்கர தீ விபத்துக்குள்ளாகியது. அதன் விளைவாக 72 பேர் உயிரிழந்தார்கள்.

    அதைத்தொடர்ந்து அத்தீவிபத்தின் காரணத்தையும், அது நிகழ்வதைத் தடுத்திருக்கக்கூடிய வல்லமை கொண்டவர்களையும் அடையாளம் காண்பதற்காகவும் இங்கிலாந்து அரசாங்கத்தினால் ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. அவ்விசாரணைக் கமிஷன் அத்தீவிபத்தோடு மிக நெருங்கிய சம்பந்தமுடையவர்களின் பிரத்தியேக வாக்குமூலங்களைச் செவிமடுக்கும் பணியினை கடந்த வாரம் ஆரம்பித்தது. சாட்சியளித்தவர்கள் அத்தீவிபத்தில் உயிரிழந்த தமது குடும்ப உறுப்பினர்களை நினைவுகூர்ந்து வழங்கிய வாக்குமூலங்களைக் கேட்ட அனைவரது கண்களிலும் கண்ணீர் திரண்டது என்பது மிகையாகாது. இத்தகைய ஒரு நிகழ்வு ஒவ்வொரு குடும்பத்தையும் எவ்வகையில் பாதிக்கிறது என்பதைப் பார்க்கும்போது உணர்வுகள் கொந்தளிக்கின்றன.

    குறிப்பாக இந்தக் கட்டிடத்தில் வசித்து வந்தவர்களில் பெரும்பான்மையோர் இங்கிலாந்துக்குள் அகதிகளாகத் தஞ்சம்கோரி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தாம் பிறந்து வளர்ந்த தமது தாய்மண்ணில் வாழ வகையின்றி அரசியல் சூழல்களினாலும், வேறு பல பிரச்சனைகளாலும் மொழிபுரியாத நாடுகளுக்குள் தமது உயிரைப் பணயம் வைத்து வந்தவர்கள் தீயின் நாவினால் தமது உயிரை இழந்த பரிதாப நிகழ்வு பல அரசியல் கேள்விகளை ஆழமாகத் தூக்கிப் போட்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மை. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இவ்விசாரணையின் முடிவு அடுத்த வருடமே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்தத் தீ விபத்தினால் எழுப்பப்பட்டுள்ள பல கேள்விகளுக்கான பதிலில் பல அரசியல் கொள்கைகளின் நியாயத்தன்மையின்மீது விமர்சனங்கள் எழும் என்பது பலரது கணிப்பாக இருக்கிறது.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (274)

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் மற்றொரு மடலில் உங்களுடன் இணைவதில் மனமகிழ்வடைகிறேன். எம்முள்ளத்தில் ஆசைகள் எழுவது இயற்கை. ஆசைகளில்லா மனம் மனித மனமாக இருக்க முடியாது. ஆசைகளற்ற உலகம் இயக்கமின்றி போய்விடும். ஆசைகளே மனித மனத்தின் ஆராய்ச்சிகளைத் தூண்டி பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு அத்திவாரமிடுகிறது. அதற்காக ஆசைகள் அனைத்துமே அர்த்தம் நிறைந்தவைகளாக இருக்க முடியாது. அவ்வாசைகள் நியாயம் எனும் வரம்புமுறையைக் கடந்து விடும்போது பேராசைகளாகின்றன.

    இப்பேராசைகளின் வழி ஓடும் மனித மனம் அடைய முடியாதவைகளை அடைய முற்படும் பிராயத்தனத்திலும், அனைத்தையும் நினைத்த மாத்திரத்தில் அடைந்து விட வேண்டும் எனும் அவசரத்துக்குள்ளும் தம்மை நுழைத்துக் கொள்கின்றன.

    நியாயமான ஆசைகள் கொண்டவர்களும், பேராசைகள் கொண்டவர்களும் இணைந்தே சமுதாயங்கள் உருவாகின்றன. இதுவே நடைமுறை யதார்த்தமானது. எங்கே பிரச்சனை உருவாகிறது என்றால் இவர்கள் இருவர்களுக்குமிடையில் இருக்கும் விகிதாசாரம் மாற்றமடையும் போதுதான். இன்றைய இங்கிலாந்து சமுதாயத்தைக் கொண்டால் இவ்விரு மனப்பான்மை கொண்ட மக்களின் விகிதாசாரம் ஒன்றோடொன்று முட்டி மோதிக்கொண்டு நிற்பது போல் தென்படுகிறது. அதன் அடிப்படையையே இன்றைய அரசியல், மற்றும் பொருளாதார நிகழ்வுகள் சுட்டிக்காட்டுவது போல இருக்கிறது. அரசியல் எனும் இரயிலின் தன்டவாளம் எப்போதும் மையத்தில் இருக்கும் போதுதான் நாட்டின் நிலை சீராக இருக்கும். அத்தண்டவாளம் ஏதாவது ஒரு திசையில் ஓரளவு தீவிரவாதத்தைத் தழுவிக் கொண்டால் அங்கே சிக்கல்கள் உருவாகின்றன.

    இரண்டாவது உலக மகாயுத்தத்தின் அழிவுகள் இங்கிலாந்தை மிகவும் பாதித்திருந்தது. போரில் உயிரிழந்தோரின் தொகை பன்மடங்காகவிருந்தது. யுத்தத்தின் முடிவின் பின்னால் நாட்டை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டிய தேவை மிகுந்திருந்த வேளையில் அதனைச் செயல்படுத்தப் போதியளவு ஆள்பலம் அவர்களுக்கு இருக்கவில்லை. விளைவாக தம்முடைய பெரிய பிரித்தானிய எனும் குடையின் கீழ் தம்மால் ஆளப்பட்டு வந்த கிழக்காசிய, ஆபிரிக்க நாடுகளில் இருந்து மக்களை தம் நாட்டிற்கு குடியேற வருமாறு அறைகூவல் விடுத்தார்கள். அவ்வாறு 40,50,60 களில் இங்கிலாந்துக்கு வந்து குடியேறியவர்கள் ஏராளம். இன்றைய இங்கிலாந்துக்கான அத்திவாரம் அவர்களின் உதவியுடனேயே இடப்பட்டது என்றால் அது மிகையாகாது. ஆனால் அதே சமயம் எழுபதுகளில் அளவு கணக்கின்றி வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்தில் குடியேறும் மக்களின் கலாச்சார வேறுபாடுகள் இந்நாட்டில் எதிர்காலத்தில் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அன்றைய முன்னணி கன்சர்வேடிவ் அரசியல்வாதிகளில் ஒருவரான “இனொக் பவல் (Enoch Powel) “ என்பவர் போன்ற சிலரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போதைய மிதவாத அரசியல்வாதிகள் நிறைந்த கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து நிறப்பாகுபாடு கொண்டவகையில் பேசினார் எனும் குற்றம் சாட்டினால் அவர் கட்சியினின்றும் நீக்கப்பட்டார். இன்று அவர் மறைந்து சில வருடங்களாகின்றன.

    இங்கிலாந்தைக் கட்டியெழுப்ப தமது வாழ்நாளில் உழைத்த புலம் பெயர்ந்த மக்கள் அனைவரும் இங்கிலாந்தும் முதலாந்தரப் பிரஜைகளாக மதிக்கப்பட வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பே ! இங்கிலாந்து அரசினைப் பொறுத்தவரையிலும், அரச சட்டங்களைப் பொறுத்தவரையிலும் இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஆனால் இங்கிலாந்தினைப் பரம்பரை பரம்பரையாகக் கொண்டு வாழ்ந்து வரும் வெள்ளை இன இங்கிலாந்து தேசத்தவர் அனைவரினதும் மனதில் இத்தகைய சமத்துவம் நிலவுக்கிறதா? என்பது கேள்விக்குறியே ! அதேசமயம் அனைத்து மக்களின் மனங்களும் ஒரேமதிரியாகவோ அன்றி அனைவரும் ஒரே உணர்வினைக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணுவதோ யதார்த்தமன்று. ஆனால் இதுவரை அவர்களில் பெரும்பான்மையினர் புலம்பெயர்தோர் அன்றி வெளிநாட்டுக் குடியேற்றவாசிகள் என்போரின் மீது கொண்டிருக்கும் பார்வை அனுகூலமானதாகவே இருக்கிறது. அதேசமயம் வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளுக்கெதிரான கோஷம் முன்னையை விட வலுவடைந்திருப்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

    இத்தகைய ஒரு நிலைக்கு இன்று நாம் வந்தடைந்திருப்பதன் காரணம் என்ன? இங்கிலாந்து நாட்டுக்குள் வெளிநாட்டுக்காரர் வந்து குடியேறுவதன் தாக்கத்தை விவாதிப்பதை நிறத்துவேஷம் என்று வர்ணிக்கத் தலைப்பட்டமையும் அத்தகைய விவாதத்தை முன்னெடுப்பவர்களின் குரல்கள் அதனால் மெளனிக்கப்பட்டதும் முக்கியமானதொன்றாகும். இங்கிலாந்தின் இன்றைய வீட்டு வசதியின்மை, தேசிய சுகாதார சேவையின் மீது ஜனத்தொகை அதிகரிப்பால் ஏற்படும் அழுத்தங்கள், பாடசாலைகளில் அதனைச் சுற்றி வசிப்பவர்களின் குழந்தைகளுக்கு இடப்பற்றாக்குறை எனும் பல காரணங்கள் இந்த வெளிநாட்டவரின் வருகையின் மீது தீவிரமான பார்வையை ஏற்படுத்தக் காரணிகளாகின்றன. இப்போது வெள்ளை இனத்தவர்கள் மத்தியில் அல்ல இரண்டு, மூன்று தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வரும் ஆபிரிக்க, ஆசிய மக்களின் மத்தியில் இருந்தும் இத்தகைய விவாதங்கள் கிளம்புவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

    அதேசமயம் இந்த சமுதாய பேதலிப்புகளைச் சாதகமாக்கிக் கொண்டு உண்மையான இனத்துவேஷம் கொண்ட வெள்ளை இனத்தவர்கள் வெளிநாட்டவருக்கெதிரான கோஷத்தை எழுப்பிக்கொண்டு பயணிப்பதும் உண்மையே ! இத்தகைய விளைவுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் எம்மைப் போன்றீரின் நடவடிக்கைகளும் காரணமாக அமைந்து விடுக்கின்றன. கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறோம் எனும் 4ண்ணத்தில் எமக்குக் கிடைக்கும் சலுகைகளை சலுகைகள் என்று பார்க்காமல் உரிமைகள் எனும் பெயரில் இந்நாட்டில் வாழும் மக்கள் மீது சிலசமயங்களில் திணிக்கிறோமோ என்றுகூட எண்ணத்தோன்றுகிறது. நாம் வாழும் நாட்டில் எமது மொழியையும், கலாச்சாரத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டவன் நான் ஆனால் அதேசமயம் அவற்றின் எல்லைகள் எவை என்று நிர்ணயிக்க வேண்டிய காலக்கட்டாயத்தையும் உணர்ந்தவன்.

    எமது எதிர்கால புலம்பெயர் தலைமுறை சமதளத்தில் இந்நாட்டு மக்களாகிய வெள்ளையர்களுடன் வாழ்வுப்போராட்டத்தில் ஜெயிக்க வேண்டுமெனில் அதற்கான சரியானதளமைப்பை நாம் முன்னெடுக்கத் தவறக்கூடாது. அனைவருடனும் இணைந்து வாழும் வாழ்வே வெற்றியளிக்கும் பிரிவு அல்ல.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (273)

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலில் உங்களுடன் இணைகிறேன். மனித வாழ்க்கை என்பது ஒரு வட்டச் சங்கிலி. அதனுள் நடக்கும் நிகழ்வுகள் பரந்துபட்ட அளவில் எதிர்பார்க்கக்கூடிய நிகழ்வுகள் அடங்கிய ஒரு புதிர்ப் பெட்டகமே ! கால ஓட்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சமுதாயத்திலும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நிகழ்வுகள் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தம்மை தமது நாட்டுடன் இணைக்கும் பந்தத்தைப் பலப்படுத்துவதற்கு தமது இனம் தமது நாட்டளவில் எவ்விதமான நிகழ்வுகளுக்குட்பட்டு தற்காலத்தை வந்தடைந்திருக்கின்றது எனும் சரித்திரப் பதிவுகளைப் பின்னோக்கிப் பார்க்கும் தேவையிருக்கிறது.

    தமது நாட்டினதும், தமது நாட்டில் வாழும் தமது குடிமக்களினதும் தனித்தன்மையைப் பாதுகாக்கும் கடமை அந்நாடுகளை அரசாளும் அன்றி நிர்வகிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு கட்டாயத் திணிப்பாக அமைந்து விடுகிறது. அத்தகைய வகையில் தத்தமது நாட்டின் கலாச்சார மகிமைகளை பேணிப்பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளும், அதற்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசப்படுகிறது. இங்கிலாந்தைப் பொறுத்த மட்டிலே இன்றும் தமது நாட்டின் தலைமைத்துவத்தைப் பெயரளவில் கொண்டிருக்கக்கூடிய அரச சம்பிரதாயம் நிலவுகிறது. அவ்வகையில் இந்நாட்டின் மகாராணியாக இரண்டாவது எலிசபேத் மகாராணி அவர்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக தனது 90வது அகவைகளில் இன்றும் கோலோச்சி வருவது அனைவரும் அறிந்ததே.

    இங்கிலாந்தைப் பொறுத்த மட்டில் இந்த மகாரானியார் பட்டம் ஒரு கலாச்சாரபீடமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இங்கிலாந்தின் பல புராதானச் சின்னங்களாக விளங்கும் பல பிரசித்தி பெற்ற தேவாலயங்கள், அரச கட்டடிடங்கள் என பல்வேறு வகையான சரித்திரச் சின்னங்கள் இன்றும் மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அரசாங்கத்தினால் பேணப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்நாட்டு மக்களில் பெரும்பான்மையோ இம்முக்கியத்துவத்தின் அவசியத்தை உணர்ந்து அது பேணப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதினாலே என்றால் அது மிகையாகாது.

    பொதுவாகவே எந்நாட்டிலும், எவ்வின மக்களுக்கிடையிலும், எம்மதத்தினரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் திருமணம் என்றாலே அது சம்பந்தப்பட்டவர்களிடத்திலே ஒரு களை கட்டிவிடும். அனைவரும் குதூகலமடைந்து விடுவார்கள் . திருமண ஏற்பாடுகளைச் செய்வதில் ஒரு பகுதியினர் தம்மையே முழுதாக அர்ப்பணித்து விடுவார்கள். ஒரு சாதாரண குடும்பத்தினரிடையேயே இத்தகைய கொண்டாட்டம் என்றால் அது ஒரு அரச குடும்பத்தினரிடையே என்றால் கேட்கவும் வேண்டுமா? ஒரு பகுதி மட்டுமல்ல அந்நாட்டினைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் இது ஒருவகை குதூகலத்தை அளித்து விடுமல்லவா?

    என்ன யாருடைய திருமணத்தைப் பற்றி இவன் பேசுகிறான் என்கிறீர்களா?

    வேறுயாருமில்லை இங்கிலாந்தின் அரச குடும்பத்தின் வாரிசுகளில் முடிசூடும் தகுதியில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இளவரசர் ஹரி அவர்களின் திருமணத்தைப் பற்றியே குறிப்பிடுகிறேன். ஆமாம் வருகிற சனிக்கிழமை அதாவது மே மாதம் 19ம் திகதி இங்கிலாந்தின் முடிக்கு அடுத்த வாரிசான இளவரசர் சார்ளஸ் அவர்களின் இரண்டாவது மைந்தன் இளவரசர் ஹரி அவர்கள் தனது காதலியான மெகன் மாக்கல் அவர்களின் கரம் பற்றப் போகிறார். பொதுவாக இங்கிலாந்தில் பெரும்பான்மையினர் மிகவும் தீவிரமான அரச குடும்ப ஆதரவாளர்கள். அரச குடும்பத்தின் நிகழ்வுகளை தமது சொந்தக் குடும்பத்தின் நிகழ்வுகள் போல மிகவும் அக்கறையுடன் அவதானித்து அவற்றுடன் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

    இன்றைய இங்கிலாந்தில் ப்ரெக்ஸிட் எனும் கருமேகம் சூழ்ந்துள்ள நிலையில் எதிர்கால பொருளாதார நிலையைப் பற்றிச் சிறிது கலக்கமடைந்திருக்கும் மக்களுக்கு இத்திருமனம் ஒரு சிறிய ஒளிக்கீற்றுப் போல கொஞ்சம் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். சிறுவயதிலேயே தாயை இழந்து விட்ட இளவரசர் ஹரியின் மீது பொதுமக்களுக்கு அனுதாப் அலை எப்போதும் இருந்து கொண்டே இருந்திருக்கிறது. அது மட்டுமன்றி இளவரசர் ஹரி பலவிதமான சமூக அமைப்புக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டதோடு பல சமூக சேவைகளையும் தானே முன்னெடுத்துச் செய்து வருக்கிறார். அவர் மணமுடிக்கும் மெகன் மக்கெல் எனும் அமெரிக்கப் பெண் , அமெரிக்காவில் ஹாலிவூட்டில் புகழ் பெற்ற ஒரு இளம் நடிகை, அது மட்டுமின்றி ஒரு வெள்ளை அமெரிக்கப் பெண்மணிக்கும், ஆபிரிக்கத் தந்தைக்கும் பிறந்த கலப்பினப் பெண்ணாவார்.

    பொதுவாக சமுதாயத்தில் மேல்வர்க்கமெனக் கருதப்படும் பிரபுக்கள் அந்தஸ்தை உடையவர்களையே அரச குடும்ப்பத்தினர் மணமுடிப்பது வழக்கம். ஆனால் ஒரு சாதாரண நடிகை, அதுவும் கறுப்பின கலப்புப் பெண்மணி இங்கிலாந்து அரச குடும்பத்தினுள் நுழைவது இதுவே சரித்திரத்தில் முதல் தடவை. ஆங்காங்கே இனத்துவேஷமும், நிறத்துவேஷமும் கொண்ட சிலரின் முணுமுணுப்புக் கேட்காமலில்லை. இருப்பினும் மிகவும் துணிச்சலுடன் இங்கிலாந்து அரச குடும்பத்தினுள் ஒரு உரட்சியை உருவாக்கியவர் எனும் பாங்கில் இளவரசர் ஹரியின் மீது பலர் நன்மதிப்புக் கொண்டுள்ளார்கள்.

    இது ஒருபுறமிருக்க இத்திருமணத்துக்கு மெகன் மக்கல் அவர்களின் தந்தை வருவாரா? மாட்டாரா? எனும் ஊடகத் துருவல் ஓய்ந்தபாடில்லை. மெக்சிகோவில் வசிக்கும் அவர் சமீபத்தில் ஒரு ஊடகச் சர்ச்சைக்குள் மாட்டியிருந்தார். அவர் மகளின் திருஅனத்துக்கு போக ஆயத்தப்படுத்தும் சில ஏற்பாடுகளை ஒரு ஊடப்படப்பிடிப்பாளர் படம் பிடித்து பல வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். இதை மணமகளின் தந்தையே உடன்பட்டுச் செய்து அதன்மூலம் பெரும்தொகை பணம் பெற்றுள்லார் என்பதுவே ஊடகங்களின் பரவலான செய்தி.

    அதையடுத்து அவர் மெக்சிகோவில் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தன்மீது இப்படியான பழி சுமத்தப்பட்டிருப்பதால் தான் தன் மகளின் திருமணத்துக்கு வந்து அவருக்கும், இங்கிலாந்து அரச குடும்பத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்த விரும்பவில்லை அதனால் தான் திருமணத்துக்கு வரப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார். இந்தச் செய்தி அவரின் மகளும், மணமகளுமான மெகன் அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை அளிப்பதாகவும் அவர் தனது தந்தை திருமணத்துக்கு வந்து தன்னை மணமகனிடம் கையளிக்கும் வைபவத்தில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புவதாகவும் செய்திகள் வந்தன.

    மறுபடி திருப்பம் !
    ஆமாம் மெகன் மக்கல் அவர்களின் தந்தைக்கு ஒரு இருதய சிகிச்சை நடப்பதாகவும் டாக்டர்கள் அனுமதியளித்தால் தான் திருமணத்துக்கு வருவதாகவும் அவர் தெரிவித்ததாக வேறு செய்திகள் வெளியாகின. அவர் வரவேண்டுமா? இல்லையா ? எனும் விவாதங்கள் கடந்த சில நாட்களாக பல ஊடகங்களில் விறுவிறுப்பாக நடந்தன. அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஈடகங்கள் விடாமல் தொடர்ந்து ஏதாவது ஒரு செய்தி கிடைத்தால் உண்டு, இல்லை என்று பண்ணி விடுவார்கள். ஆனால் இங்கோ அரச குடும்பத்துக்குள் அதிகாரபூர்வமாக இணைய முன்பாகவே இணையப் போகிறவர்களின் குடும்பத்தின் செய்திகள் அறுவைச் சிகிச்சைக்குள்ளாக்கப்படுக்கின்றன. மணமகளின் குடும்பம் இங்கிலாந்தைச் சேர்ந்ததாக இருந்தால் அரசகுடும்பத்தின் நிர்வாகிகளே அவர்களுக்கு ஊடகங்களைக் கையாளுவதற்க்கு போதிய ஆலோசனைகளை வழங்கியிருப்பார்கள் ஆனால் இங்கோ மணமகளின் தந்தை மெக்சிகோவில் அல்லாடுகிறார்.

    அவர் வருவாரா? இல்லை மாட்டாரா? எனும் கேள்வி ஒருபுறமிருக்கட்டும் இதோ எமது இளவரசர் ஒருவரின் திருமணம் கோலாகலமாக நடைபெறப் போகிறது. மகாராணியாரின் பேரனுக்கு ௶டும் ! டும் ! டும் !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (272)

     

     

     

     

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

     

    அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலிலே உங்களுடன் உரையாடுவதில்பெருமகிழ்வடைகிறேன். பிறந்தோம், வளர்ந்தோம், மடிந்தோம் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் எந்தவிதமாகவோ நிச்சயம் நடந்தேறும் ஒரு நிகழ்வாகும். ஆனால் எப்போது பிறக்கிறோம் என்பதும் எப்போது மடிகிறோம் என்பதும் நாம் திட்டமிட்டு நடப்பதல்ல. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் “வாழ்ந்தோமா?” என்பதுவே கேள்வி. என்ன இவன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறானே ! வாழ்க்கை என்று ஒன்று இருக்கும்போது அதை வாழ்ந்துதானே முடிக்கிறோம் எனும் கேள்வி எழுவது இயற்கையே ! வாழ்ந்தோமா? எனும் என் கேள்விக்குள் புதைந்திருப்பது ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல் மனதுக்குத் திருப்தியாக வாழ்ந்தோமா? என்பதுவே !

     

    நமது மூதாதையர் வழியாக வந்த நாம் பல தலைமுறைகளைத் தாண்டி வந்துள்ளோம்.தலைமுறைக்குத் தலைமுறை வாழ்க்கை முறையில் பலவித மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.இம்மாற்றங்களின் தாக்கம் நாம் வாழும் முறையிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.இத்தாக்கங்களின் சில வாழ்வின் முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கின்றன, சில வாழ்வின் முறைகளுக்குச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஆனால் இவைகளைத் தடுத்து நிறுத்துவது என்பது நமது கைகளில் இல்லை. பெரும்பான்மையாக இவை நம்மீது திணிக்கப்படுகின்றன என்றே சொல்ல வேண்டும். ஒரு தலைமுறை எடுக்கும் முடிவுகளின் தாக்கம் அவர்களைத் தொடர்ந்து வரும் அடுத்த தலைமுறையின் வாழ்க்கையில் தாக்கங்களை ஏற்படுத்துவது என்பது யதார்த்தமானது.

     

    சுமார் 43 வருடங்களுக்கு முன்பாக பதின்ம வயதுகளின் எல்லையில் இங்கிலாந்துக்கு மாணவனாகப் புலம் பெயர்ந்த நான் எனது தாய், தந்தையரின் வாழ்க்கை முறையின் தாக்கத்தை எனது கலாச்சாரப் பரிமாணமாகச் சுமந்து கொண்டு இந்நாட்டுக்குள் கால் பதித்தேன்.அதைத்தொடர்ந்து வந்த அனுபவப்பதிவுகளும், வாழ்க்கைச் சவால்களும் பலமுறைகள் எனது கலாச்சாரப் பின்னணிக்கும், இந்நாட்டின் கலாச்சாரப் பின்னணிக்கும் இடையில் பல பனிப்போர்களை நிகழ்த்தியிருக்கின்றன. வாழ்க்கையை நோக்கிய ஒரு பரந்து பட்ட பார்வையை எனது பாதுகாப்பு வட்டத்தினை விட்டு வெளியே செலுத்தக்கூடிய ஒரு வாய்ப்பினை இங்கிலாந்து வாழ்க்கை நல்கியது. அன்றைய தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்கும் இடையிலான வேறுபாட்டினை இருவேறு நாடுகளின் கலாச்சாரப் பின்னணி எனும் சாளரத்தின் வழியாக நோக்கும் போது அவைகளுக்கிடையே அந்தந்த நாடுகளுக்கு எற்ற வகையில் அவர்களின் தலைமுறை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது என்பது நன்றாகப் புரிக்கிறது.

     

    எதற்காக இந்த ஒரு ஆழமான அலசல் என்று எண்ணுகிறீர்களா ?

     

    இன்றைய ஊடகங்களில் பரவலாக அடிபட்டுக் கொண்டும் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டும் இருக்கும் ஒரு சிக்கலான விடயத்தை உங்களுடனான உரையாடலில் இங்கு முன்வைப்பதற்காக ஒரு பொதுவான அலசலுடன் மடலை ஆரம்பிக்கும் நோக்கமே அதற்குக் காரணம். இன்று நான் வாழும் இந்த இங்கிலாந்து மண்ணிலே பொருளாதாரச் சூழல் பலவிதமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக “ப்ரெக்ஸிட்” எனும் அந்தச் சொல் பல பொருளாதார நிபுணர்களின் வயிற்றிலும், பல முன்னனி அரசியல் அவதானிகளின் வயிற்றிலும் புளியைக் கரைக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தான் சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சித் தகவலின் முடிவு நான் மேற்சொன்ன விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

     

    இங்கிலாந்தின் 1940, 50 களில் பிறந்தவர்கள் தற்போது பெரும்பான்மையாக இங்கிலாந்தின் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையோரின் வாழ்க்கைத்தரம் திருப்திகரமானதாக இருக்கிறது. இதற்குக் காரணம் இவர்களது காலத்தில் இவர்கள் எதிர்கொண்ட இவர்களுக்குச் சாதகமான பொருளாதாரச் சூழல். அத்துடன் அத்தகைய பொருளாதாரச் சூழலின் அடிப்படையில் இவர்கள் அப்போதிருந்தே தமது ஓய்வுகால வாழ்க்கைக்கான புரிதலின் அடிப்படையில் எடுத்துக் கொண்ட தனியார் ஓய்வூதியக் காப்புறுதியும் அதன் இன்றைய முதிர்ச்சியின் இலாபமுமாகும். இன்றைய இங்கிலாந்தில் வீடு வாங்குவது அதுவும் குறிப்பாக வேலை வாய்ப்புகள் அதிகம் நிறைந்த லண்டனும் அதனையொட்டிய தென்கிழக்கு பகுதிகளிலும் படு சிரமமான விடயமாகிறது. காரணம் வீட்டு விலைகள் கோடைகால வெப்பம் போல கிடு,கிடுவென உயர்ந்து கொண்டு செல்வதுதான்.அன்றைய சூழலில் ஒரு நடுத்தர ஊதியம் பெறும் ஒருவர் தனது ஊதியத்தின் அடிப்படையில் கிடைக்கும் வங்கிக் கடனின் மூலம் வாங்கக்கூடிய அளவில் வீட்டு விலைகள் இருந்தன. ஆனால் இன்றோ அது நிறைவேறமுடியாத கனவாக இருக்கிறது. இதற்குக் காரணம் பொருளாதாரத்தில் விரைவாக முன்னேறும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரச் செழிப்பின் விளைவாக அப்பகுதிகளைச் சேர்ந்த பலர் போட்டி போட்டுக் கொண்டு லண்டனையும், அதனைச் சார்ந்த பகுதிகளிலும் வீடுகளை வாங்கி முதலீடு செய்வதும், வீட்டு விலையின் அதிகரிப்புக்கிணங்க இங்கிலாந்து நடுத்தர வர்க்கத்தினரின் ஊதியம் அதிகரிக்கப்படாததுமே என்று கூறப்படுகிறது.

     

    இதற்குத் தீர்வாக அந்த ஆய்வு முன்வைத்த விடயமே இன்றைய முதியவர்களின் விசனத்துக்கும்,விவாதங்களின் முன்னெடுப்புக்கும் காரணமாகிறது. இன்றைய இருபதுகளின் நடுப்பகுதியில் இருக்கும் வாலிப சமுதாயம் தமக்கென ஒரு இருப்பிடத்தை வாங்கி தமது வாழ்வை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் முகமாக இவர்களுக்கு இருப்பிடம் வாங்குவதற்கு உதவியாக 10000பவுண்ஸ் வரையில் அரசாங்கம் உதவிப்பணம் கொடுக்க வேண்டும் என்றும் இதற்காக அரசாங்கம் செலவிடும் பணத்தை இன்றைய ஓய்வு பெற்ற முதியவர்களில் வசதியாக வாழ்வோரிடத்தில் இருந்து கூடுதல் வரிப்பணமாக வசூலிக்க வேண்டும் என்றும் இவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.இது இன்றைய வயதானவர்கள் மத்தியில் ஒருவித அரசியல் அதிர்வலைகளை உண்டு பண்ணியிருக்கிறது. இது பலமுனைக் கேள்விகளையும் கிளப்பி விட்டிருக்கிறது.

     

    அன்றைய பொருளாதரச் சூழல் இன்று ஓய்வு பெற்று வாழ்பவர்களின் வாழ்வில் தமக்கென இருப்பிடம் வாங்குவதற்கு இலகுவாக இருந்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அதை யாராவது இனாமாகக் கொடுத்தார்களா? தமது வாழ்வில் எத்தனையோ செளகரியங்களைத் தியாகம் செய்துதான் தமது வாழ்வை அவர்கள் செப்பனிட்டார்கள். ஆனால் இன்றைய தலைமுறையோ இன்று விதை விதைத்து நாளை மழை பொழிந்து நாளை மறுநாள் அறுவடை செய்ய வேண்டும் எனும் மனப்பான்மையோடு வாழ்வது மட்டுமின்றி தமது வாழ்வில் எதையும் தியாகம் செய்யாமல் தமது மனம் போன போக்கில் தாராளமாகச் செலவு செய்து கொண்டு தமது தாய் தந்தையர் இன்று வாழ்வது போல் வாழ வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இவர்களின் இந்தத் தான்தோன்றித்தனமான வாழ்வுக்கு நம்மையா தண்டிக்க வேண்டும் என்கிறது பல முதியோர்களின் அமைப்புகள். இந்த விடயத்தில் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலத்தான் நீங்கள் எண்ணுகிறீர்கள். நாம் எல்லோரும் ஊதாரித்தனமாக வாழவில்லை எவ்வளவோ சிக்கனமாக, அவதானமாக வாழ்ந்தும் வீடு வாங்கும் நிலையை எட்ட முடியாதிருக்கிறது நமக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்னும் வாதம் நியாயமானதே என்கிறது பல இளையோருக்கான அமைப்புகள். இல்லை நாம் மிகவும் கடினமாக உழைத்து நமது இலட்சியத்தை அடைவதுதான் முறை இதற்காக நமக்கு முந்தைய தலைமுறையினரை வருத்துவது முறையல்ல என வாதிடும் இளையோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

     

    இன்றைய இங்கிலாந்து கன்சர்வேடிவ் அரசாங்கத்தை அரசுக் கட்டிலில் அமர்த்தியதற்கு பல முதிய தலைமுறையின் வாக்குகளே காரணம் என்பது அரசியலை நன்றாக அவதானித்து வரும் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட தமக்குச் சாதகமான வாக்கு வங்கியை முற்றிலும் நிறைந்த தண்ணீர்ப்பானையை தாகத்தில் இருக்கும் ஒருவன் ஒற்றைக்கல்லால் குறிவைத்து உடைப்பது போல் இவ்வரசு செயற்படுமா? இல்லை மேற்புறம் சத்தும் அடியில் சக்கையுமாக இருக்கும் பாத்திரத்தில் ஒரு கரன்டிய வைத்து சமமாக கலக்கி விடுவதைப் போல ஒரு அதிரடி திட்டத்தை முன்னெடுத்து செயற்படப் போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

     

    ஓ ! இளைய தலைமுறையக் கடந்து நானும் ஓய்வுபெற்றோர் எனும் முதிய தலைமுறையின் வாயிலுக்குள் நுழைந்து விட்டேனோ ?

     

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

     

      

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 271 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் இதோ அடுத்தவார மடல் வரையும் பொழுது இது. அரசியல்களத்திலே ஒருவாரம் என்பதே மிகப்பெரும் காலமாகும் என்று காலஞ்சென்ற முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர் ஹெரால்ட் வில்ஸன் அவர்கள் ஒரு சமயம் கூறியிருந்தார். நாட்டில் ஏற்படும் நிலைமைகளுக்கு ஏற்ப அரசியல் நிலவரங்களும் மாறிக்கொண்டேயிருக்கும். அனைத்தும் அமைதியாக தம்சார்பில் ஓடிக் கொண்டிருக்கிறது என்று அரசாங்கக் கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள் எண்ணிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத திசையில் இருந்து ஒரு சூறாவளி அடிக்கிறது. இச்சூறாவளியில் சிக்குண்டு யார் தமக்கு எதுவும் நடக்காது என்று எண்ணியிருக்கிறார்களோ அவர்களே இலக்குகளாக அடித்துச் செல்லப்படும் நிலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்.

    இதே அரசியல் சூறாவளி சுமார் ஒருவாரகாலத்தின் முன்னர் இங்கிலாந்து அரசியல்களத்திலும் அடித்தது. அதிலே அகப்பட்டு இங்கிலாந்து அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்த உள்துறை அமைச்சர் அம்பர் ரட் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டார். இருவார காலத்தின் முன்னால் தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று அவர் கனவில் கூட எண்ணியிருக்க மாட்டார். இதுவரை காலமும் அமைச்சரவையில் பிரதமருக்குப் பக்கபலமாக, மிகவும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு திறமை மிக்க அமைச்சராகப் பணியாற்றிய இவர் இன்று தனது பதவியை இழந்த நிலையில் இருப்பதே அரசியல் களத்தின் நிலையற்ற தன்மையைக் காட்டுகிறது.

    அப்படி அவர் பதவி விலகக் காரணமாக இருந்த சூறாவளிதான் என்ன?

    ஆம், அந்தச் சூறாவளி ” Wind Rush (வின்ட் ரஷ் – அதாவது வேகக் காற்று)” எனும் வடிவில் தாக்கியது. சுமார் 70, 80 ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டாவது உலகப் போரின் அழிவுகளுக்குப் பின்னால். பிரித்தானிய நாடு பல சீரழிவுகளைச் சந்தித்த நிலையில் நாட்டைத் திரும்பக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையிலிருந்தது. அத்தேவைகளுக்கான வேலையாட்கள் பற்றாக்குறையை பிரித்தானியா எதிர்கொண்டது. அதனால் பல காமன்வெல்த் – பொதுநலவாய நாடுகளில் இருந்து மக்கள் இங்கிலாந்துக்குக் குடியேற வருமாறு அழைக்கப்பட்டனர். அப்படி அழைக்கப்பட்டவர்களில் மேற்கிந்திய தீவைச் சேர்ந்த பலர் இங்கிலாந்துக்கு வருகை தந்தனர். இவர்களை இங்கிலாந்துக்கு அழைத்து வந்த கப்பல் ” Wind Rush Empire (வின்ட் ரஷ் எம்பயர்) “ என்று அழைக்கப்பட்டது.

    இந்தக் கப்பலில் வந்த பலர் தமது குடும்பத்துடன், கைக்குழந்தைகளுடன் வந்திறங்கினார்கள். இவர்கள் வந்திறங்கியபோது இவர்கள் இங்கு வந்ததன் அத்தாட்சியாக ” Landing Card எனும் குடிவரவு அட்டை ” அப்போதைய உள்துறை அமைச்சினால் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் இங்கிலாந்துப் பிரஜைகளாகக் கருதப்பட்டு அவர்கள் வரி செலுத்தவும், பணிகளில் அமர்த்தப்படுவதகும் முக்கியமான தேசிய காப்புறுதி இலக்கம் வழங்கப்பட்டு அவர்கள் சாதாரணமாக பணியாற்றி, வரி செலுத்தி இங்கிலாந்துப் பிரஜைகளாக வாழ்ந்தார்கள். அத்தோடு 1970களின் முற்பகுதியில் கொண்டுவரப்பட்ட இங்கிலாந்துக் குடியேற்றச் சட்டம் 1973 ஜனவரி மாதத்துக்கு முன்னர் இங்கிலாந்துக்குள் வந்த வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிநாட்டவர் அனைவரும் இங்கிலாந்துப் பிரஜைகளுக்கான தகுதியுடையவர்கள் என்று வரையப்பட்டது.

    இவர்களில் பலர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளாததினால் இங்கிலாந்து பாஸ்போட் எடுக்காமலே இருந்து வந்தனர். சமீபகாலமாக இங்கிலாந்தில் வெளிநாட்டவரின் குடியேற்றம் ஓர் அரசியல் பிரச்சனையாக உருவெடுத்தது. 2010ஆம் ஆண்டு வரை சுமார் பத்துவருடங்களுக்கு மேலாக பதவியிலிருந்த லேபர் அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கையின் தவறு காரணமாகவே வெளிநாட்டவரின் குடியேற்ற எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகரித்தது எனும் குற்றச்சாட்டு பலமாக வைக்கப்பட்டதினால் 2010ஆம் ஆண்டு பதவிக்கு வந்த கன்சர்வேடிவ் கட்சி தனது வெளிநாட்டவர் குடியேற்றச் சட்டத்தை இறுக்கியது. இங்கிலாந்தில் சட்டத்துக்குப் புறம்பாக சரியான அனுமதி இல்லாமல் வாழும் வெளிநாட்டவரை வெளியேற்றுவதில் தாம் கடுமையான போக்கைக் கையாளப்போகிறோம் என்றார்கள் கன்சர்வேடிவ் கட்சியினர். இன்றைய பிரதமர் திரேசா மே அவர்களே அன்றைய குடியேற்ற இலாகாவுக்கு பொறுப்பாக இருக்கும் உள்துறை அமைச்சராக இருந்தார். அவரது காலத்தில் 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து குடியேற்றச் சட்டம் மிகவும் இறுக்கப்பட்டது. அதன் பிரகாரம்தாம் இந்த நாட்டில் வசிப்பதற்கு உரிய முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் வைத்தியசாலைகளில் வைத்தியம் பெறுவதோ, அன்றி அரசாங்க வீட்டு வசதி பெறுவதோ, கல்வி பெறுவதோ, பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவதோ தடை செய்யப்பட்டது.

    இத்தகைய கடுமையான சட்டங்களினால் அன்று இங்கிலாந்தின் அழைப்பின் பெயரில் குடியேறி இங்கு 60 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் “வின்ட் ரஷ்”எனும் கப்பலில் வந்தவர்களும் பாதிக்கப்படலாம் என்ற எதிர்க்கட்சியினரதும், பல சமூக அமைப்புகளினதும் எச்சரிக்கையை அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை. பின்னால் நடந்த பல அரசியல் அதிர்வுகளின் விளைவாக திரேசா மே அவர்கள் பிரதமரானர் அவரது அமைச்சரவையில் அவர் வகித்து வந்த உள்துறை அமைச்சர் பதவியை “அம்பர் ரட் (Amber Rudd) “ அவர்கள் எடுத்துக் கொண்டார். அந்தோ பரிதாபம்! வின்ட் ரஷ் பிரச்சனை அவரை நோக்கிய சூறாவளியாகத் தாக்கியது. இங்கிலாந்துப் பிரஜைகளாக இங்கிலாந்து நாட்டைக் கட்டியெழுப்பிய மக்கள் பலர் உரிய ஆவணங்கள் இல்லை எனும் பெயரில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர், பலர் தமது வேலைகளை இழந்தனர், பலருக்கு வைத்தியசாலைகளில் மருத்துவ வசதி மறுக்கப்பட்டது. வெகுண்டெழுந்தது சமூகம்!  நாம் இங்கிலாந்து மக்கள் என்று சொல்லவே வெட்கப்படுகிறோம் என்று சமுதாயத் தலைவர்கள் கடிந்துரைத்தனர். அரசாங்கம் தனது தவற்றினைக் காலந்தாழ்த்தி உணர்ந்து கொண்டது. பிரதமர் தொடங்கி, உள்துறை அமைச்சர் வரை பாராளுமன்றத்திலே மன்னிப்புக் கோரினார்கள். உள்துறை அமைச்சர் மட்டுமல்ல, பிரதமரும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஆரவாரித்தன.பதவி விலகுவதால் பிரயோஜனமில்லை. அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை உடனடியாகச் சரிபடுத்துவதே எமது கடமை என பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஒருவாறு தமது பதவிகளில் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.

    இந்நிலையில் தான் மற்றொரு இடி விழுந்தது. பாராளுமன்றத்தில் குடியேற்றம் பற்றிக் கண்காணிக்கும் தெரிவுக்குழுவின் முன் சாட்சியளித்த உள்துறை அமைச்சர், சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவரை வெளியேற்றுவதில் எண்ணிக்கை இலக்கு வைத்திருந்தீர்களா எனும் கேள்விக்கு இல்லை என்று பதிலளித்தார். வந்ததே பிரச்சனை! அவரது இலாகாவினுள் இருந்தே அனாமதேயமாக அப்படி ஓர் இலக்கு இருந்ததற்கு அத்தாட்சி வெளிவிடப்பட்டது. ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் தனது தவற்றை ஏற்று உள்துறை அமைச்சர் இராஜினாமா செய்தார். இந்தக் குற்றச்சாட்டு உள்துறை அமைச்சருடன் மட்டுமல்ல பிரதமரையும் சாரும் எனும் குரல்கள் சில கோணங்களில் இருந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பிரதமரைக் காப்பதற்காக தன்னைப் பலிகடாவாக்கிக் கொண்டார் உள்துறை அமைச்சர் எனும் கோஷமும் கேட்காமல் இல்லை.

    “நிலை மாறும் உலகில், நிலைக்கும் எனும் நினைப்பில்” எனும் பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன. எது எப்படி இருப்பினும் இங்கிலாந்து நாட்டின் நியாகக் கோட்பாடுகளைப் பார்த்துச் சற்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

     

    Share