Tag: க.பாலசுப்பிரமணியன்

  • உலக மிருகங்கள் தினம்

    க. பாலசுப்பிரமணியன்

     

    இன்று ..
    உலக மிருகங்கள் தினம்.
    ஐந்து நட்சத்திர விடுதிகளில் ..
    பட்டயங்கள் ..
    தோரணங்கள் ..
    பாடல்கள் ..
    பேச்சுக்கள் …
    விருதுகள் ..
    பல்சுவையில் சமைக்கப்பட்ட
    மிருகங்களின்
    உணவுகளுடன்….

    நடுத்தெருவில்
    சில காகங்கள் மட்டும்
    பயந்துகொண்டே அமர்கின்றன.
    அவைகளுக்கு கூட
    சத்தம்போட்டுக் கரைந்தால்
    சுட்டுவிடுவார்கள் என்ற பயம் ..
    சில நாய்கள் மட்டும்
    சங்கிலியின் சுதந்திரத்தோடு ..
    சத்தம்போட்டுக் குரைத்தால்
    சட்டம் மீறிடுமோ என்ற அச்சத்தில் ..

    “என்று தணியும் எங்கள்
    சுதந்திரத் தாகம்?”
    மிருகசாலையில் ஒரு கூண்டுக்குள்ளிருந்து
    ஒரு இனம் தெரியாத பாரதி ..
    ஆனால் ..
    அவன் மொழிதான்
    எனக்குப் புரியவில்லை !

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (29)

    க.பாலசுப்பிரமணியன்

    பார்வை எப்படியோ பரம்பொருள் அப்படியே

    திருமூலர்-1-3

    .ஒரு நாள் ஒரு வழிப்போக்கன் காட்டின் வழியாகச் சென்றுகொண்டிருந்தான். அங்கே ஒரு முனிவரின் குடில் இருப்பதைக்கண்டு அவரிடம் சென்று “அய்யா. நான் கிழக்கே இருக்கும் கிராமத்திலிருந்து மேற்கே இருக்கும் கிராமத்தை நோக்கி வாழ்வாதரம் வேண்டி சென்றுண்டிருக்கின்றேன். அந்த கிராமத்திலிருக்கும் மக்கள் எப்படிப் பட்டவர்கள் என்று தங்களால் சொல்ல முடியுமா? தங்கள் அறிவுரை எனக்கு உதவியாக இருக்கும்.” என்றான். அதைக்கேட்ட முனிவர் ஒரு புன்முறுவலுடன் “நீ வருகின்ற கிராமத்து மக்கள் எப்படிப் பட்டவர்கள்?” எனக் கேட்டார்.

    “அவர்கள் மிகவும் மோசமானவர்கள். நல்ல எண்ணங்களே இல்லாதவர்கள். அங்கே ஒருவர் கூட நல்லவர் கிடையாது” என்று சொல்ல, “அப்படியா? நான் மிகவும் வருந்துகின்றேன். ஆனால் நீ செல்லக்கூடிய இந்தக் கிராமத்தைச் சார்ந்தவர்களும் அப்படித்தான். நீயே சென்று பாரேன்”  என்று பதிலளித்தார்.

    சில நாட்களுக்குப் பின் மற்றொரு வழிப்போக்கன் அதே கிராமத்திலிருந்து வரும்பொழுது முனிவரை அணுகி அதே கேள்வியைக்கட்டான். இப்பொழுதும் முனிவர் அவனை நோக்கி “நீ வருகின்ற கிராமத்து மக்கள் எப்படிப்பட்டவர்கள்? ” எனக் கேட்க “அவர்களா? மிகவும் நல்லவர்கள். நல்ல  உதவும் சிந்தனை உடையவர்கள். அவர்களில் ஒருவர் கூட கெட்டவரில்லை. உண்மையிலேயே அந்த கிராமத்தை விட்டு வர நான் வருந்துகின்றேன்.” என்றான். முனிவரும் புன்முறுவலுடன் “அப்படியா. மிக்க மகிழ்ச்சி.நீ செல்லும் இந்த கிராமத்தைச் சார்ந்தவர்களும் மிக நல்லவர்கள் .மிகவும் பரோபகாரிகள். நீயே சென்று பாரேன்.” என்று சொன்னார்.

    இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவருடைய சீடர்கள் முனிவரின் இந்தச்  செயல் கண்டு மிகவும் ஆச்சரியமும் வேதனையும் அடைந்து அவரிடம் சென்று “குருவே. நீங்கள் செய்வது உங்களுக்கே சரியாகப் படுகின்றதா ?

    இரண்டுபேருக்கும் முரணான பதில்களை சொல்லி அவர்களை ஏமாற்றலாமா ? உண்மைக்குப் புறம்பான வழியில் தாங்களே செல்லலாமா? ” எனக் கேட்டனர்.

    அவர் சிரித்தபடியே சொன்னார் “நான் பொய் பேசவில்லையே. முதலாமவனுக்கு அந்த கிராமத்தில் ஒருவர்கூட நல்லவராகத் தெரியவில்லை. குற்றம் அவன் பார்வையிலிருந்தது இரண்டாமவனுக்கோ ஒருவர் கூடக் கெட்டவராகத் தெரியவில்லை. அவன் பார்வையில் தெளிவு இருந்தது. நாம் எவ்வாறு உலகைப் பார்க்கின்றோமோ அவ்வாறே உலகம் நமக்குத் தென்படும். அதனால்தான் அவர்கள் பார்வையில் கிடைத்த பதில்களை அவர்களுக்கு கூறினேன் : என்று விளக்கம் அளித்தார்.

    “நீ எவ்வாறு பார்க்கின்றாயோ அவ்வாறே ஆகின்றாய்” என்பது முதுமொழி. அதேபோல் நாம் எவ்வாறு இறைவனைப் பார்க்கின்றோமோ அவ்வாறே நமக்குத் தென்படுகின்றான், அணுவிலிருந்து அண்டம் வரை எங்கும் அவன் ஆட்சி தான். அதை உணர்ந்தவருக்கு அவன் தரிசனம் எல்லா இடத்திலும் கிடைக்கும். இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்

    எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி

    எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம்

    எங்குஞ் சிவமா யிருந்தலால் எங்கெங்குந்

    தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே.”

    திருமூலருக்கோ எங்கும் சிவனின் ஒளியும் அருளும் புலப்பட்டது.

    இதேபோல் கபீர்தாசர் கூறுகின்றார் :

    “நான் வெளியிலே இறைவனின் வண்ணத்தைக் காணச் சென்றேன். பார்க்குமிடமெல்லாம் அவன் வண்ணமாகவே இருந்தது. கடைசியில் நானும் அவன் வண்ணத்தில் ஒரு பகுதியாகத்தான் தென்பட்டேன்”

    திருநாவுக்கரசருக்கோ இந்த வண்ணம் எங்கெங்கெல்லாம் தென்படுகின்றது?

    விண் ஆகி, நிலன் ஆகி, விசும்பும் ஆகி

    வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற

    எண் ஆகி, எழுத்து ஆகி. இயல்பும் ஆகி

    ஏழ் உலகும் தொழுது ஏத்திக் காண நின்ற

    கண் ஆகி, மணி ஆகி, காட்சி ஆகி

    காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற

    பண் ஆகி, இன்அமுதுஆம் பாசூர் மேய

    பரஞ்சுடரைக் கண்டு அடியேன் உயந்தஆறே !

    ”வெளியில் இருக்கின்ற ஒளி உள்ளே பிரதிபலிக்கின்றதா? இல்லை உள்ளே இருக்கின்ற ஒளி வெளியே பார்க்கும் இடங்களிலெல்லாம் வெளிப்படுகின்றதா ?  “ -என்ற ஐயம் எழுத்தான் செய்கின்றது

    அவனை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? ஏதாவது ஒரு இடத்தில் அவனை கட்டியோ அல்லது அடைத்தோ க்க முடியுமா ?

    பட்டினத்தார் என்ன கூறுகின்றார் ?

    பத்துத் திசைக்கு மடங்காப் பருவமடி

    எத்திசைக்கு பொங்கு மிடைவிடா தேகமடி.

    அது மட்டுமா ?

    தித்திக்க வூறுமடி சித்த முடையார்க்குப்

    பத்திக் கடலுட் பதித்தபரஞ் சோதியடி “

    இந்த அனுபவ பூர்வமான உணர்வுகளை நம்மால் புரிந்துகொள்ள என்ன ஆழ்ந்த அறிவு தேவைப்படுகின்றது?

    இந்த அறிவித்த தேடும் பொழுதுதான் நமக்கு வாழ்க்கையில் எவ்விதமான மாயையில் பிடிபட்டு உண்மையை அறிய மறுக்கிறோம் என்ற துயரம் வருகின்றது. இந்த நிலையில் தான் மாணிக்கவாசகரும் பாடுகின்றார் :

    யானேபொய் என் நெஞ்சும்

    பொய் என் அன்பும் பொய்

    ஆனால் வினையேன் அழுதால்

    உன்னைப்   பெறலாமே

    தேனே அமுதே கரும்பின்

    தெளிவே தித்திக்கும்

    மானே அருள்வாய் அடியேன்

    உனைவந்து உருமாறே !

    இறைவனின் அருளை பெறுவதற்கு அடியார்கள் எவ்விதமெல்லாம் தவித்திருக்கின்றார்கள் என்பதை உணரும் பொழுது நமது மெய்  சிலிர்க்கின்றது !

    தொடருவோம்

    (தொடரும் )

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 97

    க. பாலசுப்பிரமணியன்

    உள்ளுணர்வு சார்ந்த நுண்ணறிவு (Intra-personal intelligence)

    education-1-1

    ஒரு முறை மக்களின் தொழில் திறனையும் உற்பத்தித் திறனையும் மேம்படுத்த உதவும் வண்ணம் ஒரு மேலாண்மை பற்றிய கல்வியில் பட்டம் பெற்ற இளைஞன் கடற்கரை ஓரமாக நடந்து கொண்டிருந்தான். அங்கே ஒரு படகிற்குப் பின் சாய்ந்து புகை பிடித்துக்கொண்டிருந்த ஒரு முப்பது வயது உள்ள மற்றொருவரைக் கண்டு அவரிடம் வினவினான் “இந்த நேரத்தில் இங்கே உட்கார்ந்து என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள்?”

    அதற்குப் பதிலளித்த இரண்டாவது இளைஞன் “இன்று என்னுடைய வேலை முடிந்து விட்டது. நான் ஒய்வெடுத்துக்கொண்டிருக்கின்றேன்.”

    “இப்பொழுதுதான் பகல் 12 மணி ஆகின்றது அதற்குள்ளே ஓய்வா?”

    “:ஆம். இன்றைய வேலை முடிந்துவிட்டது. இன்றைக்கான மீன்களை பிடித்து விற்று காசு சம்பாதிப்பட்டுவிட்டேன்.”

    அப்படியானால் மீண்டும் ஒரு முறை சென்று மீன் பிடித்து வந்திருக்கலாமே?

    “எதற்கு?”

    “:இன்னும் கொஞ்சம் பணம் கிடைத்திருக்கும்?

    “அப்புறம்?”

    “நிறையப் பணம் இருந்தால் நீங்கள் ஒரு புதிய மாதிரி வேகமாகச் செல்லக்கூடிய படகை வாங்கியிருக்கலாம்

    ‘பிறகு?’

    :இன்னும் நிறைய மீன்களை பிடித்திருக்கலாம். அதனால் இன்னும் கொஞ்சம் பணம் கிடைத்திருக்கும் ?

    “பிறகு?”

    “நான்கு ஐந்து படகுகளை வாங்கித் தொழிலை மேம்படுத்தியிருக்கலாம்

    “பிறகு?””

    “ஒரு அழகான வீடு கட்டிக்கொண்டு பணக்காரனாக வாழலாம் ?

    “பிறகு?”

    “எல்லாக் கவலைகளையும் மறந்து கடலோரமாக அமர்ந்து புகை பிடித்துக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கலாம்”

    “நண்பா,  அதைத்தானே நான் இப்பொழுது செய்துகொண்டிருக்கின்றேன்.. இதற்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்?”   என்று பதில் சொன்னான்.

    நாம் யார்? நமக்கு என்ன தேவை? வாழ்க்கையில் நம்முடைய குறிக்கோள் என்ன? நம்முடைய இலக்கு என்ன? இந்த இலக்கை நோக்கிச் செல்ல நாம் என்னென்ன செய்ய வேண்டும்?

    நம்முடைய மகிழ்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பாதை எங்கே உள்ளது? எப்படிப்பட்ட பாதை? அதில் உள்ள கரடு முரடுகளைக் கடக்க என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடும் உள்ள நிலையை மேம்படுத்துவதே உள்ளுணர்வு சார்ந்த நுண்ணறிவு.

    இந்த நுண்ணறிவு ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்டதாகவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் அமைகின்றது. பல நேரங்களில் இந்த நுண்ணறிவின் அடிப்படையில் அவர்கள் பிறந்த, வாழ்ந்த சமுதாய பொருளாதார மற்றும் கலாச்சார சூழ்நிலைகள் காரணமாக அமைந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.

    இந்த உள்ளுணர்வு சார்ந்த நுண்ணறிவில் சிறந்தவர்களாக இருக்கின்றவர்களுடைய பொதுவான குணங்கள் ழ்க்கண்டவையென அறியப்பட்டுள்ளது

    1.  தனிமை
    2.  சுய சிந்தனை
    3. இலக்குகளை நோக்கி செல்லும் தன்மை
    4. சுய விழிப்புணர்வு
    5. ஆழ் சிந்தனை, தியானம்
    6. மௌனம்
    7. தன்னிச்சையாகச் செய்தல்
    8. புதிய நோக்கு, புதிய பாதைகள் வகுத்தல்
    9. மற்றவர்களோடு ஒட்டாமல் தனிவழி வகுத்தல்
    10. உள்நோக்கு மனப்பான்மை

    இந்த நுண்ணறிவில் சிறந்தவர்கள் பிற்காலத்தில மேற்கொள்ளக்கூடிய  தொழில்கள்

    1. தத்துவ சிந்தனையாளர்கள்
    2. ஆராய்ச்சியாளர்கள்
    3. திட்ட வரைவாளர்கள்
    4. கருத்து கணிப்பாளர்கள்
    5. கவிஞர்கள், எழுத்தாளர்கள்
    6. மன நல மருத்துவர்கள்

    பொதுவாக பள்ளிகளில் சில மாணவர்கள் தனியாக இருப்பதும், யாரோடும் அதிகமாகப் பழகாமல் இருப்பதும், படிப்பில் மட்டும் தங்கள் இலக்கையும் குறியையும் வைத்துக்கொண்டு மற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதும், அதிகமாகப் பேசாமல், சிரிக்காமல் தன்னிச்சையாக இருப்பதும் இந்த நுண்ணறிவைச் சார்ந்தவர்களுக்கான அறிகுறிகள். இந்த நுண்ணறிவு ஒரு மனிதனுக்கு மிகவும் தேவையானது. இந்த உள்ளுணர்வு சார்ந்த நுண்ணறிவே தனது திறன்களையும் தனது எழுச்சிக்கான பாதைகளை வழிப்பதற்கும் உதவி செய்கின்றது. அதே நேரத்தில் இந்த நுண்ணறிவின் மேலாதிக்கம் ஏற்பட்டு மற்ற நுண்ணறிவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் கவனித்துக்கொள்ளுதல் அவசியம்.

    ஓவியம் வரைதல், கவிதைகள் எழுதுதல். புத்தகங்கள் படித்தல் திட்டங்கள் தீட்டுதல,ஆராய்ச்சிக் கட்டுரைகள் படித்தல், சுயசரிதைகள் படித்தல் போன்ற பல ஆக்க பூர்வமான வேலைகள் மூலம் இந்த நுண்ணறிவை வளப்படுத்த முடியும்.  சமூகப் பிரச்சனைகளை பற்றி பேசுதல், கருத்துக் பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சிகள் மூலமும் இந்த அறிவை வளப்படுத்த முடியும்.

    தொடரும்

    Share
  • நவராத்திரி நாயகியர் (9)

    க. பாலசுப்பிரமணியன்

    சரஸ்வதி தேவி

    images (2)

    வெள்ளைத்தாமரை விரித்து விடியும்வரை காத்திருப்பேன்

    வீணையினைக் கையிலேந்தி விரைவாக வருவாயே

    கரையில்லாக் கலைகளைக் கைகளில் எடுத்துவந்தே

    தடையின்றித் தந்திடுவாய் தலைமகளே கலைமகளே !

     

    அசைகின்ற இதழ்களிலே உயிரூட்டும் மொழியனாய்

    அமுதான முத்தமிழில் அனுதினமும் இசையானாய்

    அழகான கவிதையிலே கற்பனையின் கருவானாய்

    அருளூற்றே! அலைபாயும் உள்ளத்தில் அமைதியானாய் !

     

    நரம்பெல்லாம் நான்மீட்டி நாதங்கள் எழுப்பிடுவேன்

    தசையெல்லாம் தாளமிட நின்நினைவே நடனமிட

    இருளெல்லாம் நீக்கிடவே எழுந்தருள்வாய் எழிலரசி

    இசையோடு மலர்தூவி இமைவிழித்துக் காத்திருப்பேன் !

     

    குரல்வேண்டும் வளம்வேண்டும் குறைவில்லா மதிவேண்டும்

    குலம்போற்றும் அறம்காக்க மறைசொன்ன மனம்வேண்டும்

    நான்முகனின் படைப்பினிலே நாலோடுஒன்றாக நானின்றி

    நாள்தோறும் உனைப்போற்றும் நல்லறிவு நீதரவேண்டும்  !

     

    எழுபிறப்பும் உன்னருளால் உயிரினங்கள் உயர்ந்திடவே

    எழுத்தறிவுக்கும் ஆசானாய் இனியதொழில் செய்யவேண்டும் !

    மடமைகள் மறைந்திடவே மாதங்கி அருளவேண்டும்

    மறக்காமல் உன்நினைவில்  உளம்மறந்து வாழவேண்டும் !

     

    விடையமர்ந்த மலைமகளோடும் வேங்கடத்தான் திருமகளோடும்

    நான்முகனின் நாவமர்ந்து நல்லவளே நீவருவாய் !

    விண்ணமர்ந்த வானவரின் வாழ்த்துக்கள் சேர்த்திடுவாய்

    மண்வாழும்  மாந்தருக்கே மகிழ்வுடனே  தந்திடுவாய் !

     

     

     

     

     

    Share
  • நவராத்திரி நாயகியர் (8)

    க. பாலசுப்பிரமணியன்

     

    அஷ்ட லட்சுமியர்

    ashtalakshmi-QM21_l

     

     கண்ணனின் காதலியே கருணையின் புன்சிரிப்பே

    கற்பனையின் முதலசைவே கதிரின் முதலொளியே

    கலைகளின் முதலெழுத்தே கருவின் முதல்மூச்சே

    காலத்தின் கண்விழிப்பே காத்தருள்வாய் ஆதிலட்சுமி !

     

    சிதறாத கவனத்தைச் சிந்தையில் தந்து

    உறங்காத உள்ளத்தில் உழைப்பை5த் தந்து

    வீழ்ந்தாலும் எழுகின்ற உறுதியைத் தந்து

    வெற்றிக்கு வழிகாட்டும் விஜயலட்சுமியே !

     

    தருமத்தைக் காக்க நெருப்பாக எழுகின்ற

    துணிவான தோள்களுக்குத்  துணையாக நின்று

    மலைக்கின்ற நேரத்தில்  மலையான தைரியத்தை

    மடைவெள்ளமெனத் தருகின்ற தைரியலட்சுமியே !

     

    மண்ணும் செல்வமே மழையும் செல்வமே

    மலரும் மணமும் பயிரும் உயிரும்

    மதியும் அறிவும் உழைப்பும் உயர்வும்

    மகிழ்வும் தருவாள் செல்வமாய் தனலட்சுமி !

     

    தான்படைத்த உயிர்கள் தரணியிலே தழைத்திடவே

    நெல்லொடு கம்பும் நிலமெல்லாம் தானியமும்

    பாலோடு பழமும் பருப்பும் பல்வகைக்கனியும்

    தடையின்றித் தருபவளே தாயே தான்யலட்சுமி

     

    தாய்மைக்கு நிகரில்லை தாயுள்ளம் ஈடில்லை

    தரணியிலே திருக்கோயில் கருவறையில் கொண்டவளே

    பூவுக்கும் புழுவுக்கும் தாய்மையினைத் தந்தவளே

    சந்ததியைத் தந்தருளும் சக்தியே சந்தானலட்சுமியே

     

    கரையறியா விண்ணொளியை கற்பனையாய்த்  தருபவளே

    கலையெல்லாம் கண்விழியில் கருணையாய்க் கொண்டவளே

    மதிகொண்ட இருள்நீக்க எண்ணெழுத்தில் இனிப்பவளே !

    விதிவெல்ல மதிதேடும் வித்தையே வித்யாலட்சுமியே !

     

    கரியோடு அரியும் கணக்கில்லா கால்நடைகள்

    கடலுள்ள உயிரினங்கள் பறக்கின்ற புள்ளினங்கள்

    மண்ணுள்ளே மறைந்திட்ட எண்ணில்லா உறவெல்லாம்

    கண்ணின்று காக்கின்ற கருணையே கஜலட்சுமியே !

     

    வடிவங்கள் பலகொண்டு வற்றாத நதியாய்

    அகிலங்கள் காக்கும் அழிவில்லா அருளூற்றே

    பருவங்கள் அனைத்திலுமே பரந்தாமன் துணையோடு

    பசிதீர்க்க வருவாயே பாராளும் பெருந்தேவி !

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (28)

     எத்தவம் சிறந்தது ?

    துறவு பூண்டு இமயத்தில் இருந்து இறைவனை ஆராதித்துக்கொண்டிருந்த ஒரு முனிவருக்கு சில சீடர்கள் இருந்தனர். அவர்களில் ஒரு சீடன் தன்னுடைய குருவை அணுகி “குருவே, பல ஆண்டுகள் தவம் செய்து நீங்கள் பல விதமான திறமைகளை அடைந்திருக்கின்றீர்கள். இவற்றில் சிலவற்றையாவது தாங்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்தால் மிகப் பேறுபெற்றவனாக இருப்பேன்.” என்றான்.

    அவனைப் பார்த்து சிரித்த குருவோ ‘நீ முதலில் தன்னை வென்றுகொள் ” என்று சூசகமாக சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார், இதனால் கோபமடைந்த சீடனோ அந்த குருவிடம் சொல்லாமல் மலையின் இன்னொரு பகுதியில் வாழும் மற்றொரு துறவியிடம் புகலடைந்தான். சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவன் தன்னுடைய முதல் குருவிடம் தான் கற்ற கலைகளைக் காட்டி பெருமிதம் கொள்வதற்காகத் திரும்பி வந்தான். அவனை வரவேற்ற குருவிடம் தன் திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் “குருவே. உங்களால் செய்ய முடியாததை என்னால் செய்ய முடியும்” என்று சொல்ல புன்முறுவலுடன் குருவும் “அப்படியா, மிகவும் மகிழ்ச்சி. அப்படி என்ன செய்யப் போகின்றாய்?” என வினவினார்.

    அவன் “இதோ என் வாயைத் திறந்தேனென்றால் ஏன் நாவிலிருந்து தீப்பொறிகள் பறக்கும்” என்றான். “மிகவும் மகிழ்ச்சி. ஆனால் இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள உனக்கு எவ்வளவு காலம் பிடித்தது ?” எனக் கேட்டார்

    அவனோ பெருமிதத்தட்டுடன் :”இதைக் கற்றுக்கொள்ள இருபது ஆண்டுகள் ஆயிற்று” என பதிலளிக்க குருவோ “மூடனே, பத்து வினாடிகளில் தீக்குச்சியால் கொணரக்கூடிய நெருப்பைத் தோற்றுவிக்க உனது இருபது ஆண்டுகளை வீணடித்து விட்டாயே” என்று சொன்னார்.

    இது போல்தான். நம்மில் பலரும் ஒளிப்பிழம்பாக உள்ளே நின்று நம் வாழ்வை வளப்படுத்திக்கொண்டிருக்கும் இறைவனை அறிந்து கொள்ளாமல் இங்கும் அங்கும் அவனைத் தேடி, எந்த முறையில் பிரார்த்தனை செய்தால் நமக்கு அவன் கிடைப்பான், எந்தத் தவம் சிறந்தது என்று அலைந்து கொண்டிருக்கின்றோம். இதற்குத் தெளிவு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் இந்தப் பாடல்

    இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்

    பித்தரைக் காணின் தருமங்கள் போநந்தி

    எத்தவ மாகிலென் எங்கு பிறக்கிலென்

    ஒத்துணர் வார்க்கு கொல்லையூர் புகலாமே

    எந்த வழியில் நாம் இறைவனை அடைய முயற்சித்தாலும் எப்பொழுது நாம் அவனோடு ‘ஒத்துணர்’ நிலையில் இரண்டறக் கலந்த நிலையில் அபேதமாக இருக்கும்பொழுதுதான் நமக்கு உண்மையான அனுபவம் கிடக்கின்றது.

    இந்த நிலையைத் தேடிய பத்திரகிரியாரும் கூறுகின்றார்

    நானெவு நீயெனவு நாமிரண்டு மற்றொன்றும்

    நீயெனவே சிந்தைதனி னேர்படுவ தெக்காலம்?

    இந்தக் கருத்தையே வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது பட்டினத்தாரின் கீழ்கணட பாடல்

    எட்டுத் திசையும் பதினாறு கோணமு மெங்குமென்றாய்

    முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம்

    கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் கருத்தில்வையார்

    பட்டப்  பகலை யிரவென்று கூறிடும் பாதகரே

    என்ன அருமையான கருத்து.! தங்கள் மனதிலும் கருத்திலும் இறைவனை வைக்காமல் எட்டுத் திசைகளும் பதினாறு கோணங்களிலும் இறைவனைத் தேடும் மூடர்களைப் பற்றி என்ன சொல்வது?

    இந்தத் துயரிலிருந்து நாம் எப்படி விடுபட முடியும்? அவனுடன் உறவை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? அவனை மனதுக்குள்  சிறைப்படுத்தி விடலாமா? அதன் பின்பு எப்படி அவனை நம்பால் பற்று வைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் ?

    இதோ விடை கிடைக்கின்றது திருமூலரின் இந்த உன்னதமான உணர்ச்சிமயமான பாடலில்:

    அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்

    என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்

    என்பொன் மணியை இறைவனை ஈசனைத்

    தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே.”

    அது மட்டுமா ? திருமூலரின் மனம் என்னவெல்லாம் செய்ய விழைகின்றது?

    சூடுவன் நெஞ்சிடை வைப்பன்  பிரான்என்று

    பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்

    றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று

    நாடுவன்  நானின் றறிவது தானே.

    இந்த ஆனந்த அனுபவத்தை எல்லோராலும் பெற முடியுமா? இறைவனுடன் இப்படிப்பட்ட சொந்தத்தையும் உரிமையையும் எல்லோராலும் எடுத்துக்கொள்ள முடியுமா? இந்த ஆனந்த நிலையிலே திருமூலரைப் போன்று வேறு யாரவது இருந்திருக்கின்றார்களா ?

    உண்மை! இதே ஆனந்த நிலையை வெளிப்படுத்துவது போல் உள்ளது மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் உள்ள கீழ்கண்ட பாடல்

    பாடவேண்டும் நான் போற்றி நின்னையே

    பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு

    ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து

    ஆடும் நின் கழல் போது நாயினேன்

    கூட வேண்டும் நான் போற்றி இப்புழுக்

    கூடு நீக்கு எனைப் போற்றி பொய் எலாம்

    விட வேண்டும் நான் போற்றி வீடு தந்து

    அருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே.

    இப்படிப்பட்ட பரவச நிலைக்கு எல்லா உயிர்களும் தங்களைத் தயார் செய்து கொள்ள முடியுமா? இதற்கும் அந்தத் திருவருளின் துணை வேண்டாமா?

    தொடரும்

    Share
  • நவராத்திரி நாயகியர் (7)

     க. பாலசுப்பிரமணியன்

     

    ஞானாம்பிகை      

    srikalahasti-temple-andhrapradesh-shiva-parvati

    காளத்தி நாதனைக் கைப்பிடித்த காமினியே

    காலத்தைக் கடந்தவளே கலைவானின் கருவறையை

    வானத்து தேவர்களும் விதியறியா அரக்கர்களும்

    வாதமிடும் மதிதன்னின் ஞானக்கடலின் நல்லமுதே!

     

    வானத்து வண்ணத்தில் வில்லான வளிதன்னின்

    விதையாகி வளம்காக்கும் பேரொளியே பார்வதியே

    புறமெல்லாம் வலம்வந்தும் புரியாமல் தவிப்போரின்

    அகமமர்ந்த ஆனந்த போகத்தின் அருள்மொழியே !

     

    சொல்லோடு மொழியும் சுவையிழந்த பருவத்தில்

    சுவையான நுண்ணறிவாய் சுகத்தைத் தருபவளே

    அஞ்ஞான விஞ்ஞான ஆணவத்தின் ஆர்ப்பரிப்பில்

    மெய்ஞ்ஞானத் தத்துவமாய் மோனத்தில் நிற்பவளே!

     

    மறையினில் மறைந்தாயோ மதியினில் உறைந்தாயோ

    நாதத்தின் நரம்பினில் நல்லிசையாய் அமர்ந்தாயோ

    தாயினங்கள் கருவறையில் தன்னருளைத் தந்தாயோ?

    பாதங்கள் போற்றுகின்றேன் பக்குவமாய் சொல்லிடுவாய்

     

    கீதைதந்த நல்லறிவோ? பாதைதேடும் பகுத்தறிவோ ?

    மேதைகளின் மூதறிவோ?முன்னோர்கள் மூதுரையோ?

    மாதவத்தின் முடிவுரையோ? முற்காலச் சிந்தனையோ ?

    மூவுலகும் அறிந்தவளே மெய்ஞ்ஞானம தந்திடுவாய் !

     

    இருள்நீக்கி ஒளிகாட்டும் இறைவி நீயன்றோ

    அருள்தந்து ஆட்கொள்ளும் அம்மையும் நீயன்றோ

    அதுவாகி இதுவாகி எங்கும்நிறை பராசக்தியே

    அருளாட்சி எழில்காண கொலுவிருக்க வருவாயே !

     

     

     

    Share
  • தனிப்பட்ட உறவு சார்ந்த நுண்ணறிவு (Inter-persoal intelligence)

    க. பாலசுப்பிரமணியன்

    “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ” என்பது பழமொழி. மனித சமுதாயங்கள் உருவான காலம் தொட்டே ஒரு தனி மனிதனின் பார்வைகளும் தேவைகளும் அந்தத் தனிமனிதனின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாகக் கருத்தப்பட்டதால் அந்தத் தேவைகளை அடைவதற்காகவும் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் சண்டைகளும் போர்களும் துவங்கின. காலப் போக்கில் இந்தத் தனியான போராட்டங்கள் எவ்வாறு அழிவுக்கு ஆதாரமாகின்றன என்ற அறிவு முதிர்ச்சியினால் கூடி வாழும் சமுதாய நோக்கும் மற்றவர்களோடு பகிர்ந்து வாழும்நோக்கும் மேலோங்கத் தொடங்கின. இதன் வழி வந்ததே கூட்டுக குடும்ப நோக்கமும் வாழ்க்கை முறைகளும். இந்த உறவுகள் விரிந்து சமூக அளவிலே மற்றவர்களுடன் எப்படி உறவாடுவது என்ற உணர்வுநிலையில் மனித இனத்திற்கு பல நுண்ணறிவுகள் மேலோங்கி வந்தன. இன்றைய காலக்கட்டத்தில் மீண்டும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில்  ஏற்பட்ட விரிசல் சமுதாய சிந்தனைகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே. ஆகவே மீண்டும் உறவு சார்ந்த நுண்ணறிவின் அடிப்படைக் கருத்துக்கள் தனி மனிதருக்கும் சமுதாயத்திற்கும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

    இந்த உறவு சார் நுண்ணறிவின் சில முக்கிய அடிப்படைகளாக கருதப்படுவது:

    1. உறவுகளின் அமைப்பு, தேவைகள் மற்றும் நிலைப்பாடுகளை அறிதல்
    2. உறவுகள் பாராட்டுதலில் அளவு, மேன்மை மற்றும் காலங்கள்
    3. உறவுகளை வலுப்படுத்துதல், மேன்மைப்படுத்துதல்
    4. உறவுகளை தேவைகள் காலங்களுக்கேற்ப உபயோகித்தல்
    5. உறவுகளின் அடிப்படைகள் அழிந்துவிடாமல் பாதுகாத்தல்
    6. உறவுகளின் உணர்வுகளை அறிதல், பாராட்டுதல் பாதுகாத்தல்
    7. உறவுகளோடு உள்ள தொடர்பில் பேச்சு மற்றும் உடல் மொழிகளின் பங்கு
    8. உறவுகளின் தொடர்புகளால் பொருளாதாரம் மற்றும் மனநலன்களை வளர்த்தல்

    இந்த நுண்ணறிவு அநேகமாக எல்லாவிதமான தொழில்களுக்கும் சமுதாய உறவுகளுக்கும் தேவையானதாகக் கருதப்படுகின்றது.  அவற்றில் சில

    1. ஆசிரியர் -மாணவர் உறவுகள் (Teacher-student Relationships)
    2. மருத்துவர் – நோயாளி உறவுகள் (Doctor-patient Relationships)
    3. வியாபார உறவுகள் (Business Relationships)
    4. அரசியல் உறவுகள் (Political Relationships)
    5. வெளிநாட்டு உறவுகள் (Foreign Relations)
    6. மனிதவள மேம்பட்டுப் பணிகள் (Human Resource Management)
    7. வெகுஜன உறவுகள் (Mass Relationships and Management)
    8. தொழிலாளி- முதலாளி உறவுகள் ( Management relationships)
    9.  மனநலம் பாதுகாப்போர் உறவுகள் (Counselling)
    10. கூட்டுக்குடும்ப உறவுகள் (Family Relationships)

    ஆகவே இந்த நுண்ணறிவு விளம்பரம், விற்பனை, சந்தை வாய்ப்புக்களில் உறவாடுவோர், வழக்கறிஞர்கள் முதலாளிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், மதகுருக்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள், வரவேற்ப்பாளர்கள்  தூதர்கள் போன்ற பல தொழில்துறையைச் சார்ந்தவர்களுக்கு இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது. இவர்களை “மக்கள்சார்  நுண்ணறிவில்” (People Smart) வல்லுனர்களாக கருத்தப்படுகின்றனர்

    இவர்களுக்குத் தேவையான சில குணங்கள

    1.  பொறுமை  (Patience)
    2. சகிப்புத் தன்மை (Tolerance)
    3. இடம் அறிந்து அளவாகப் பேசுதல் (Communication skills)
    4. நேரம் காத்தல் (Time management)
    5. காலந்தவராமை (Punctuality)
    6. அயல்நோக்கு (Extrovertness)
    7. ஒத்துழைப்புத் தன்மை (cooperation)
    8. காது கொடுத்துக் கேட்கும் திறன் (Listening skills)
    9. மற்றவர்களின் கருத்துக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை (Respect for others feelings)
    10. 10 நட்புப் பாராட்டுதல் (Celebration of friendship)

    கற்றலில் பள்ளிகளிலும்  கல்லூரிகளிலும் மேற்கண்ட திறன்களை வளர்ப்பதற்கான  பல்நோக்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பொதுவான வகுப்பறை பாடத்திட்டங்களுக்குள் மாணவர்களை சிறைப்படுத்தி அவர்களின் வாழ்க்கை வளத்தில் நெருக்கடிகளை ஏற்படுத்துதல் கல்வியின் நோக்கத்தையே சிதைப்பதாக அமையும் .

    தொடரும்

    Share
  • நவராத்திரி நாயகியர் (6)

     

     

    காளி

    27-1427456108-kali1

    கொட்டும் குருதியினை நாவில் வைத்தும்

    கொய்த தலையினைக் கையில் வைத்தும்

    கூரிட்ட அரக்கத்தைக் காலில் வைத்தும்

    கூப்பிட்ட குரலுக்குக் குறைதீர்க்க வருபவளே !

    ,

    கண்ணில் நெருப்பைக் கக்கியே வந்ததாய்

    கைகளில் ஆயுதம்  ஏந்தியே வந்தாய்

    கபாலங்கள் அணிந்தே காட்சியைத் தந்தாய்

    கருணை மழையே  கண்களில் நிறைந்தாய்!

     

    சந்தனத்தைச் சாத்தியதும் சாந்தமாய் நிற்பவளே

    செங்குருதி நீராட்டல் சிங்காரி உனக்கெதற்கு ?

    செவ்வரளிப் பூவாலே சீருடைகள் செய்திடுவேன்

    சடுதியில் வந்திடுவாய் சங்கடங்கள் போக்கிடவே !

     

    பாலோடு தேனும் பருகிடவே பானகமும்

    பல்சுவை விருந்தோடு பரிமள நறுமணமும்

    எண்ணை விளக்கும் எலுமிச்சை மாலையும்

    என்னவளே தந்திடுவேன் ஏற்றிடுவாய் மனமிரங்கி !

     

    பயந்த பார்வையை பைரவியே விரட்டிடுவாய்

    மருண்ட மனதை மகிடனாய் கொன்றிடுவாய்

    காரிருள் கலக்கத்தை காளியே! விலக்கிடுவாய்

    பாரினில் ஈடுண்டோ பராசக்தி பயங்கரியே !

     

    தாயென அழைத்தேன் தணிந்திடு கோபம்

    சேயென அணைத்திடு சிந்தையில் நித்தம்

    இராத்திரி நேரம் கொலுவினில் வேண்டும்

    இசையுடன் அழைப்பேன் இனிதே வருவாய் !

    Share
  • நவராத்திரி நாயகியர் (5)

    க. பாலசுப்பிரமணியன்

     

    வைஷ்ணவி

    vaishno-devi-wallpaper

    சிங்கத்தின் மேலமர்ந்தாலும் சிங்காரச் சித்திரமே

    அங்கமெல்லாம் ஒளிர்ந்திடுமே ஆனந்தத் திருவுருவே

    மறையேதும் தேவையில்லை மனமுவந்து அழைத்ததுமே

    மனமிரங்கி வந்திடுவாய் மலையாளும் மாதரசி !

     

    பனிமழையிலே அமர்ந்தே பெய்கின்ற அருள்மழையே

    விதிவலியை நீக்கிடவே வான்தந்த அருமருந்தே

    மகிடனைக் கொன்றிடவே பிளிறிட்ட மதக்களிரே

    மனதினில் வைத்தவுடன் தாய்மையின் திருவுருவே !

     

    கண்ணிரண்டும் காந்தமெனக் கவர்ந்திழுக்கும் கற்பகமே

    கையிரண்டில் ஆயுதங்கள் கலியெல்லாம் அழித்திடுமே

    மலையேறி வந்தோரின் மனையெல்லாம் வருபவளே

    மனதினில் நீயிருக்க மாதமெல்லாம் மங்கலமே!

     

    சொல்லுக்குள்ளே உன்புகழைச் சுமைதாங்க வளமில்லை

    சூசகமாய்ச் சொல்லுகின்றேன் சொல்லுவதே நீதானே?

    கல்லாத மனிதருக்கும் கவிபாடும்  திறன்வருமே

    கருவாக நீயிருக்கக் கற்பனைகள் வேறெதற்கு ?

     

    பூவாகப் பொழிலாக புவியெல்லாம் ஆள்பவளே

    புன்னகைக்குப் பொருள்சொல்ல பூமகளே வருவாயோ ?

    பொன்னெதற்கு மண்ணெதற்கு உன்நினைவு இருக்கையிலே

    போதுமென்ற மனம்வேண்டும் புகலிடமே உன்பாதம் !

     

    விண்மீன்கள் அண்டங்கள் விழியினிலே வலம்வரவே

    மின்மினியாய் விண்வெளியில் இன்றிரவே வந்திடுவாய்

    கண்விழியில் நல்வரவை நானெழுதிக் காத்திருப்பேன்

    இன்னிசையில் உன்புகழை நான்பாடக் கேட்டிருப்பாய் !

    Share
  • நவராத்திரி நாயகியர் (4)

    க. பாலசுப்பிரமணியன்

     

    மகாலட்சுமி

    goddess-lakshmi

    மலர்மேல் அமர்ந்தவளே மனமெல்லாம் நிறைந்தவளே

    புலர்கின்ற பொழுதெல்லாம் புதிதாகப் பிறப்பவளே

    கொடுக்கின்ற கைகளுக்கு குறைவின்றித் தருபவளே

    நிறைவான மனதினிலே நிலையாக நிற்பவளே !

     

    மண்ணோடு மழையும் மாசற்ற காற்றும்

    மதிகொண்ட கலையும் மலைக்காத மனமும்

    பண்ணோடு இசையும் பாரெல்லாம் பயிரும்

    பகிர்ந்திடும் மனமும் பரிவுடன் தந்தாயே !

     

    அறிவும் செல்வமே உறவும் செல்வமே

    அன்புடை நட்பும் அழிவிலாச் செல்வமே

    அயராத உழைப்பும் அயர்ந்த உறக்கமும்

    அளவான பசியும் அளவில்லாச் செல்வமே !

     

    பொன்னுக்கும் புழுதிக்கும் பொதுவான பொருளாகி

    பூவாகப் பொழிலாகப் புவியெல்லாம் ஒளிர்வாயே !

    இசைதழுவும் இமைதன்னில் துகிலாகித் துளிர்பவளே

    அசைகின்ற உலகெல்லாம் அரசாளும் அன்னலட்சுமியே !

     

    ஒருகாசு இடைவைத்து உழைப்பில் உளம்வைத்தோர்

    திருநாளை உரமாக்கித் திருவெல்லாம்  தருபவளே !

    முன்னைக்கும் பின்னைக்கும் உயிரூட்டும் நிகழ்வினையே !

    முதிர்கின்ற மூப்பினிலே முன்காலத்தின் முகவுரையே !

     

    முத்தொடு பவளங்கள் முடிவில்லா இரத்தினங்கள்

    முப்புரத்தின் செல்வங்கள் முழுதாகக் கொடுத்தாலும்

    முளைக்கின்ற ஆசையில் முடிவின்றி வாடும்

    மூடர்கள் துயர்நீக்கி முக்தியினைத் தருவாயே !

     

    Share
  • நவராத்திரி நாயகியர் (3)

    க. பாலசுப்பிரமணியன்

     

    துர்கை அம்மன்

    15-1444904554-1-hindu-goddess-durga

     

    கண்களில் கோபம், கடமையில் மோகம்

    கைகளில் சூலம், கால்களில் வேகம்

    கலியினைத் தீர்க்கும் கருணையின் ராகம்

    கனிவுடன் அழைத்தால் தாய்மையின் தாகம்

     

    தவமென நெருப்பைத் தலையினில் ஏந்தி

    தகித்துடும் கனலில் கால்களைப் பதித்து

    தாயினின் அன்பைத் தன்னுள் வைத்து

    வாவென அழைத்தால் வருவாள் துர்கை !

     

    தீதினை  விலக்கிடத் தீயாய் வருவாள்

    சூதினை உடைத்திடச் சூலமாய் வருவாள்

    சூழ்ச்சிகள் ஏவல் சுமையின்றி விலக்கி

    வாழ்வினில் ஒளியாய் வளம்தரும் தாயே !

     

    வில்லும் சங்கும் வழித்துணை வந்திட

    வாளும்  கதையும் வருவினை காத்திட

    பன்னிரு கைகள் பழவினை நீக்கிட

    பார்கவி பைரவி பாதங்கள் துணையே !

     

    இச்சைகள் நீக்கிடும் எலுமிச்சை விளக்கில்

    இருளில் ஒளியாய் கலங்கரை விளக்காய்

    அச்சங்கள் போக்கிடும் அவளிரு விழிகள்

    அன்புடன் அழைத்தேன் அருள்வாய் தாயே !

     

    அருவம் உருவம் அனைத்தும்  நீயே

    பருவம் காலங்கள் பயணங்கள் நீயே

    கருத்தின் கருவில் கண்விழி நீயே

    காத்திடு தாயே கனக துர்கையே !!

     

     

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 27

    க. பாலசுப்பிரமணியன்

    திருமந்திரத்தில் ஒரு மந்திரம்

    திருமூலர்-1

    திருமந்திரம் நமக்குக் கிடைத்த ஒரு உன்னதமான  நூல். இதன் உட்கருத்துக்களைப் புரிந்து கொள்ள பல ஆண்டுகளின் சிந்தனையும் பயிற்சியும் தேவை. இருப்பினும் அதில் மேலோங்கி நிற்கும் சில கருத்துக்கள் நம்முடைய தற்போதைய சிந்தனைக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் மிக்க பயனுள்ளதாக அமைந்துள்ளது. உதாரணமாக இன்றய சமுதாயத்தில் மனிதர்களின் தன்னிச்சையான போக்கும் சுயநலத்தை மட்டும் வளர்க்கும் சிந்தனைகளும் சமுதாயத்தின் அடிப்படைகளை அரித்துக்கொண்டிருக்கின்றன. “நான்” “எனது” “தனது” என்ற மாயையினால் உந்தப்பட்ட பாச உணர்வுகள் உண்மை உறவுகளையும் இறைவன்பால் இருக்கின்ற அன்பையும் விலக்கி மனிதர்களைத் தனிமரங்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.

    ஆசைகளின்வலையில் சிக்கிக்கொண்ட நாம் நம்மை விடுவித்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றோம். சிறிய ஆசைகள் கூட நம்மைக் கட்டிப்போட்டு வாழ்க்கையின் உண்மைப் பொருளை அறிந்துகொள்ள முடியாமல் தடுத்துவிடுகின்றன.

    இந்த நேரத்தில் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகின்றது.

    ஒரு அரசன் ஒரு நாள் தன்னுடைய மந்திரியை அழைத்து “நம்முடைய நாட்டில் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றார்களா? யாருக்காவது தேவைகள் ஏதாவது இருக்கின்றதா?” என்று கேட்டான்  அதற்கு பதிலளிக்கும் வகையில் “அரசே, நாட்டில் யாருக்கும் எந்தக் குறையும் இல்லை. அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றார்கள். யாரும் ஏழ்மையிலோ பசியிலோ வாடவில்லை.” என்றுரைத்தார்.

    மந்திரியின் கூற்றின் உண்மையைக் கண்டறிவதற்காக அன்றிரவு அரசர் மாறுவேடம் பூண்டு நகர்வலம் வந்தார். அவ்வமயம் நள்ளிரவில் ஒரு இளைஞன் வேகமாக ஓடுவதைக் கண்டு அவனை நிறுத்தி :”நண்பா, இந்த நள்ளிரவில் நீ எங்கே ஓடிக்கொண்டிருக்கின்றாய்?” எனக் கேட்டார்.

    அவனோ “நண்பரே. நான் ஒரு தொழிலாளி. இன்று மதியம் கோட்டையின் கதவின் அருகில் மன்னைத் தோண்டிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு தங்கக் காசு கிடைத்தது. நல்ல வேளை, யாரும் அதை பார்க்கவில்லை. அதை நான் அந்த இடத்தில் புதைத்து வைத்து விட்டேன். அதை எடுக்கத்தான் போய்க்கொண்டு இருக்கின்றேன். அந்தக் காசு எனக்கு பல நாள்களுக்கு உணவு வாங்க உதவியாக இருக்கும்” என்றான்.

    அவன் நிலையை உணர்ந்த அரசரோ ‘ நண்பா, ஒரு காசுக்காக நீ இவ்வளவு துன்பப்படுகின்றாயே. நான் ஒரு செல்வந்தன். உனக்கு நூறு தங்கக் காசுகள் தருகின்றேன். நீ திரும்பிச் சென்று நன்கு உறங்கு.” என்கிறார்.

    பதிலுக்கு அவனோ “மிக்க நன்றி. நண்பரே. ஆனால் நீங்கள் கொடுக்கும் பணம் தீர்ந்தபின் இந்தக் காசை தேடி நான் வரும்பொழுது இது இங்கு இருக்குமா என்று சொல்வதற்கில்லை. எனவே அதையும் எடுத்து வந்து விடுகின்றேன். பின் உங்கள் பணத்தையும் பெற்றுக்கொள்கின்றேன். ” என்று கூறினான்அரசர் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு தர நினைத்த [பணத்தை உயர்த்தியும் அந்த ஒரு தங்கள் காசின் மீது அவனது பற்று குறைவதாக இல்லை. மனம் நொந்து போன அரசர் கடைசியில் தனது உண்மை வடிவத்தை வெளிப்படுத்தி “நான் இந்த நாட்டு அரசன். எவ்வாறாவது உன் மனத்தை மற்ற நினைக்கின்றேன். ஆகவே இந்த நாட்டின் பாதிப் பகுதியை உனக்குத் தருவதாக முடிவு செய்து விட்டேன்.” என்று சொல்ல அந்தத் தொழிலாளியோ ” அரசே, என்னை மன்னித்து விடுங்கள். உங்களைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்ளாமல் பேசிவிட்டேன். தங்களுடைய பரந்த மனதிற்கு என் நன்றி. ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள். நீங்கள் கொடுக்கும் பாதி அந்தக் கோட்டையின் கதவு உள்ள பகுதியாக இருந்தால் மிகவும் நல்லதாக இருக்கும். நான் எப்பொழுது வேண்டுமானாலும் சென்று அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொள்ளலாம்.” என்றான்.

    நம்மில் பலரும் இது போலத்தான்… சிறிய சிறிய ஆசைகளுக்காக இறைவனின் பெரும் கருணையை இழந்து விடுகின்றோம் நமது ஆசைகளே நமக்கு வினையாக அமைகின்றன.

    இதிலிருந்து நாம் எப்படி மீளப்போகின்றோம்  பாசத்தை அறுக்க திருமந்திரம் காட்டிய வழியை விட மற்றொன்று சிறப்பாக அமைய முடியாது.

    இதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்:

    ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்

    ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்

    ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்

    ஆசை விட விட ஆனந்தமாமே

    “சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” என்ற கூற்றிற்கேற்ப தன்னுடைய ஒரே பாடலிலே மொத்த நூலின் கருத்தை முன்வைத்துள்ளார் திருமூலர்.

    ஆகவே மாயையின் வலைக்குள் சிக்கி ஆசைகளால் சூழப்பட்டு செல்வத்தைச் சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்குடன் வாழக்கையை வாழும்போது நாம் இன்ப துன்பங்களுக்கு இரையாகின்றோம்.  இந்த மாயையிலிருந்து விலகி தெளிவு பெற்றால் வாழ்க்கையின் முடிவை அமைதியுடனும் மகிழ்வுடன் சந்திக்க நாம் தயாராகி விடுகின்றோம்.

    இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் கீழ்கண்ட பாடல்.

    தேற்றித் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்

    ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே

    மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்

    கூற்றன் வருங்கால் குதிக்கலுமாமே

    திருமந்திரம் காட்டும் இந்த வழிகள் நம் வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு நல்லதொரு பாடமாக அமைந்துள்ளது.

    xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

    தொடருவோம்

    Share
  • நவராத்திரி நாயகியர் (2)

    க. பாலசுப்பிரமணியன்

     

    ராஜராஜேஸ்வரி

    images (4)

    புவியுடன் வானும் பொன்னிறப் பரிதியும்

    பொலிவுடை நிலவும் படையெனக் கோள்கள்

    பகலுடன் இரவில் பங்கிடும் அண்டத்தை

    பரிவுடன் காக்கும் புன்னகை அரசி !!

     

    மறைகளில் நின்றாய் மூச்சிடும் ஒலியாய்

    மலைகளில் மேருவில் மலர்ந்த வித்யா !

    கலைகளில் முத்திரை காலத்தின் கருவறை

    கருணையில் பெருந்தகை காத்திடும் அன்னை !

     

    அரசவை உனதில் ஆனந்தம் பொங்கும்

    அருளுடைப் பார்வையில் அமைதியே தங்கும்

    அடியவர் உள்ளத்தின் ஆனந்தப் பேரொளி

    அடைக்கலம் நீயே அகிலத்தின் தாயே !!

     

    பெற்றவள் நீயிருக்க பெற்றிட வேறெதெற்கு?

    பொற்சபை அரசியே புன்னகை மாட்சியே

    உள்ளவை பற்றியே அல்லவை விலக்கியே

    வல்லமை பெற்றிட வரம்தரும் தேவியே!

     

    கைகளில் முத்திரை காட்டிடும் யோகினி

    கலக்கிடும் துன்பங்கள் களைந்திடும்  கபாலினி

    கற்பனை தீண்டிடா அண்டங்கள் ஆட்சியே

    காலங்கள் தாண்டிய கருணையின் வடிவே !

     

    விண்ணினை அளந்திடும் விழியுடை விலாசினி

    மண்ணுடை மலர்களில் மயங்கிடும் மீன்விழி-

    மடையெனப் பெருகிடும் மங்கலக்  காவிரி

    மகிழ்வுடன் வந்தருள் மனதினில் மோகினி !

     

     

    Share
  • நவராத்திரி நாயகியர் (1)

    க. பாலசுப்பிரமணியன்

     

    திரிபுரசுந்தரி

    thiripuuu

    திக்கெட்டும் உருவாக்கித் திருபுரமும் தனதாக்கித்

    தித்திக்கும் வடிவாகித் திருவருளைத் தருபவளே

    தீதில்லா மனங்களிலே திருவீதி வலம்வந்து

    தீவினைகள் சுட்டெரிக்கும் திரிபுர சுந்தரியே !

     

    நீரோடு நெருப்பினிலே நடமாடும் காற்றினையும்

    நிலத்தோடு வானத்தின் வளமான வளியினையும்

    நிலையில்லா உடலுக்குள் நிழலாக உருவகித்து

    நினைவாகத் தானமர்ந்து நல்லருள் தருபவளே !

     

    சங்கரி சாம்பவி சடையனின் உறுதுணையே

    கயல்விழி காமினி கருணையின் உட்பொருளே

    பார்கவி பார்வதி பாகனை அழித்தவளே

    பாட்டினில் பைரவி பார்வையில் சுந்தரியே!

     

    சொல்லுக்குள் அடங்காமல் சிந்தைக்குள் சிதறாமல்

    மௌனத்தில் மறையாமல் மனதினில் நிறைந்தவளே

    எண்ணத்தில் எளிதாக சொந்தத்தை உருவாக்கி

    வானத்து வில்லாக வையகத்தை வார்த்தவளே !

     

    கோடிட்ட புருவங்களும் குலுங்கிட்ட காதணியும்

    குவிந்திட்ட கன்னத்தில் கோலமிடும் மின்மினியும்

    குளிர்ந்திட்ட பார்வையும் குறைவில்லா உடலழகும்

    நலுங்கிட்ட பாதங்களும் நெஞ்சத்தில் நிலைத்திடுமே!

     

    அன்றலர்ந்த மலராலே அர்ச்சனைகள் செய்தாலும்

    கண்ணமர்ந்து காட்சிதர கற்பகமே ! மறந்தாயோ?

    மண்ணிருந்து அழைக்கின்றேன் மாமணியே! மங்கலமே !

    விண்ணிருந்து வருவாயே விளக்கொளியில் வீற்றிடவே!

     

     

    Share