க. பாலசுப்பிரமணியன்

சரஸ்வதி தேவி

images (2)

வெள்ளைத்தாமரை விரித்து விடியும்வரை காத்திருப்பேன்

வீணையினைக் கையிலேந்தி விரைவாக வருவாயே

கரையில்லாக் கலைகளைக் கைகளில் எடுத்துவந்தே

தடையின்றித் தந்திடுவாய் தலைமகளே கலைமகளே !

 

அசைகின்ற இதழ்களிலே உயிரூட்டும் மொழியனாய்

அமுதான முத்தமிழில் அனுதினமும் இசையானாய்

அழகான கவிதையிலே கற்பனையின் கருவானாய்

அருளூற்றே! அலைபாயும் உள்ளத்தில் அமைதியானாய் !

 

நரம்பெல்லாம் நான்மீட்டி நாதங்கள் எழுப்பிடுவேன்

தசையெல்லாம் தாளமிட நின்நினைவே நடனமிட

இருளெல்லாம் நீக்கிடவே எழுந்தருள்வாய் எழிலரசி

இசையோடு மலர்தூவி இமைவிழித்துக் காத்திருப்பேன் !

 

குரல்வேண்டும் வளம்வேண்டும் குறைவில்லா மதிவேண்டும்

குலம்போற்றும் அறம்காக்க மறைசொன்ன மனம்வேண்டும்

நான்முகனின் படைப்பினிலே நாலோடுஒன்றாக நானின்றி

நாள்தோறும் உனைப்போற்றும் நல்லறிவு நீதரவேண்டும்  !

 

எழுபிறப்பும் உன்னருளால் உயிரினங்கள் உயர்ந்திடவே

எழுத்தறிவுக்கும் ஆசானாய் இனியதொழில் செய்யவேண்டும் !

மடமைகள் மறைந்திடவே மாதங்கி அருளவேண்டும்

மறக்காமல் உன்நினைவில்  உளம்மறந்து வாழவேண்டும் !

 

விடையமர்ந்த மலைமகளோடும் வேங்கடத்தான் திருமகளோடும்

நான்முகனின் நாவமர்ந்து நல்லவளே நீவருவாய் !

விண்ணமர்ந்த வானவரின் வாழ்த்துக்கள் சேர்த்திடுவாய்

மண்வாழும்  மாந்தருக்கே மகிழ்வுடனே  தந்திடுவாய் !

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *