Tag: ஆ. செந்தில் குமார்

  • வினைத்தொகையே வாழ்க்கைத்துணையாய்…!!!

    -ஆ.செந்தில் குமார்.

    படர்கொடி நீயாக.. பற்றும் கொழுகொம்பு நானாக…
    சுடரொளி நீயாக.. செல்லும் பரவெளி நானாக…
    அடர்வனம் நீயாக.. தரும் அடைமழை நானாக…
    தொடுதிரை நீயாக.. அதன் உணர்திறன் நானாக…
    எந்நாளும் நந்நாளாய்.. பூமலராய்.. நம்மிடையே…
    என்றென்றும் வளர்பிறையாய் இன்பம் வளர்க..!!

    நடுபயிர் நீயாக.. அதற்கு உழுநிலம் நானாக…
    தொடுவானம் நீயாக.. அதில் விடிவெள்ளி நானாக…
    நிறைகுடம் நீயாக.. தாங்கும் பிரிமனை நானாக…
    உறைபனி நீயாக.. உகந்த சூழ்நிலை நானாக…
    எந்நாளும் நந்நாளாய்.. பூமலராய்.. நம்மிடையே…
    என்றென்றும் தேய்பிறையாய் இன்னல் மறைக..!!

    தாழ்குழல் நீயாக.. சூடும் விரிமலர் நானாக…
    வீழ்புனல் நீயாக.. சேரும் அலைகடல் நானாக…
    இலங்குநூல் நீயாக.. அதில் விளங்குபொருள் நானாக…
    உலவுதென்றல் நீயாக.. உனைப் பாடுகவி நானாக…
    எந்நாளும் நந்நாளாய்.. பூமலராய்.. நம்மிடையே…
    என்றென்றும் நிறைமதியாய் வாழ்வு ஒளிர்க…!!

    Share
  • புத்தாண்டே வருக! வருக…! புதுவாழ்வு தருக! தருக…!

    -ஆ. செந்தில் குமார்.

    நல்லதோர் அரசு அமைய… புத்தாண்டே வருக! வருக..!
    நல்லோர் நட்பு நிலைக்க… புத்தாண்டே வருக! வருக..!
    பொல்லாதோர் விலகி ஓட… புத்தாண்டே வருக! வருக..!
    இல்லாத நிலை மாற… புத்தாண்டே வருக! வருக..!

    தொட்ட தெல்லாம் துலங்க… புத்தாண்டே வருக! வருக..!
    நட்ட தெல்லாம் தழைக்க… புத்தாண்டே வருக! வருக..!
    பட்ட தெல்லாம் மறக்க… புத்தாண்டே வருக! வருக..!
    கெட்ட தெல்லாம் விலக… புத்தாண்டே வருக! வருக..!

    பருவமழை பொய்க்காது பொழிய… புத்தாண்டே வருக! வருக..!
    துருவப்பனி உருகாது இருக்க… புத்தாண்டே வருக! வருக..!
    இருப்பதைக் கொண்டு மகிழ… புத்தாண்டே வருக! வருக..!
    தரணியெங்கும் அமைதி நிலவ… புத்தாண்டே வருக! வருக..!

    முத்தான வாழ்வு கிடைக்க… புத்தாண்டே வருக! வருக..!
    எத்திசையும் தமிழ் ஒலிக்க… புத்தாண்டே வருக! வருக..!
    புத்துணர்ச்சி பெற்று விழிக்க… புத்தாண்டே வருக! வருக..!
    புத்தாண்டே வருக! வருக…! புதுவாழ்வு தருக! தருக…!

    Share
  • இச்சையின் பிடியிலிருந்து இளம் பிஞ்சுகளைக் காப்போம்…!

    ஆ. செந்தில் குமார்.

    அனைத்திலும் குழந்தைகள் முதன்மையாக இருப்பதற் கேங்கும் பெற்றோரால்…
    அகவை ஐந்தை எட்டுவதற்குள் ஆற்ற வியலா மனவுளைச்சல்…
    அளித்திடும் இந்த கல்விமுறை அடிப்படை மாபெரும் தவறல்லவா…?

    பகட்டு வாழ்வே மகிழ்வளிக்கும் என்று எண்ணும் மாணவனை…
    பணம்காய்க்கும் மரமாய் உருவாக்கத் தெரிந்த இந்த பள்ளிகட்கு…
    பண்பில் உயர்ந்த சமுதாயம் ஒன்றை உருவாக்கத் தெரியாதா…?

    வழித்தடம் பிறழும் மனிதனுக்கு வாய்ப்புகள் இங்கே ஏராளம்…
    வீதிக் கிரண்டு மதுக்கடைகள் விதிமுறை மீறித் திறந்திருக்கும்… இளைஞன்
    வாசத்தை மட்டும் முகர்ந்துவிட்டு வந்த வழியே செல்வானா?

    இதயம் கவரும் திரைத்துறையில் அரைகுறை ஆடைக் கலாச்சாரம்…
    இருக்கும் ஊடகத்தில் பெரும்பாலும் இச்சையைத் தூண்டும் விளம்பரங்கள்…
    இம்மி அளவேனும் இவற்றுக்கு சமுதாய அக்கறை வேண்டாமா…?

    வன்முறை ஆபாசம் மலிந்திருக்கும் இணைய வசதிகள் மிகுந்திருக்கும்…
    வயது வரம்பின்றி யாவருமே பார்த்திடும் அந்த நிலையிருக்கும்… காணும்
    வயதில் முதிர்ந்த கிழவனுமே புத்தன் காந்தி ஆவானா…?

    அலைபாயும் பருவத் தொடக்கத்தில் அன்பைச் செலுத்த மறந்துவிட்டு…
    ஆப்பிள் ஆண்டிராய்டு அலைப்பேசி பகட்டுக்காக வாங்கித் தந்து…
    அழிவுப் பாதையின் வாயிலுக்கு அழைத்துச் செல்வது முறைதானா…?

    அழகுற அணிந்தும் பயனில்லை அப்பட்டமாய்த் தெரியும் அங்கங்கள்…
    அதுபோன் றிருக்கும் ஆடைகளை அணிவதற் கனுமதி அளித்துவிட்டு…
    அன்னை தந்தை இருவருமே குய்யோ முறையோ எனலாமா…?

    அகவை ஐந்து ஆனாலும் ஐம்பதைக் கடந்துச் சென்றாலும்…
    அன்னை தந்தை இருவருக்கும் அன்புக் குழந்தை என்றாலும்…
    அடுத்தவர் கண்களில் அக்குழந்தை அங்ஙனம் தோன்றுமென எண்ணலாமா…?

    இருபத்து நான்கு மணிநேரம் இயற்கை நமக்கு அளிக்கையிலே…
    இருபத்து நான்கு மணித்துளிகள் தம் பிள்ளைகட்கு ஒதுக்காமல்…
    இருக்கும் மணித்துளி அனைத்தையுமே காசுகளாக்கி என்ன பயன்…?

    இணைய சேவைகள் அனைத்திலுமே நெறிமுறை ஏதும் வேண்டாமா…?
    இச்சை கொண்டோர் பிடியிலிருந்து பிஞ்சுகளைக் காக்க வேண்டாமா…?
    இந்திய அரசு நினைத்துவிட்டால் ஒருநொடி இதற்குப் போதாதா…?

    பண்பில் சிறந்த குழந்தைகளை பெற்றோர் உருவாக்கித் தரவேண்டும்…!
    பண்பில் சிறந்த சமுதாயத்தை பள்ளிகள் உருவாக்கித் தரவேண்டும்…!
    பண்பில் சமுதாயம் சிறந்திடவே அரசு வழிவகை செயவேண்டும்…!

    Share
  • கருவாகி உருவாகி கவினுலகைக் காணும் வரை…

    ஆ. செந்தில் குமார்.

    தந்தையின் உயிரணு ஆற்றலைப் பெற்று…
    தாயின் கருமுட்டை சுவற்றைத் துளைத்து…
    உட்புகுந் ததனுள் ஒன்று கலந்து…
    உயிரின் கருவாய் மாற்றம் பெற்றது…!

    மாற்றம் பெற்ற அச்சிறு கருவும்…
    மெல்ல நகர்ந்து கருப்பையை அடைந்து…
    கருப்பை சுவற்றில் ஒட்டிக்கொண்டு…
    குழந்தை உருவாய் மாறத் துடித்தது…!

    செல்களின் பகுப்பு வேகமாய் நடந்து…
    செல்களின் வளர்ச்சி துரிதமாய் நடந்து…
    செல்களின் பகுப்பும் துரித வளர்ச்சியும்…
    சேர்ந்தொரு சதையின் பிண்டமாய் ஆனது…!

    நஞ்சுக்கொடி யொன்று வளரப் பெற்று…
    பிஞ்சுக் குழந்தைக்குத் தேவையான…
    சுவாசக் காற்று சத்துப் பொருட்கள்…
    சடுதியில் தாயிடம் பெற்றுக் கொடுக்கும்…!

    மூன்றாம் நான்காம் வாரத்திற் குள்ளே…
    முதுகுத் தண்டு மூளை தோன்றி…
    இரத்த அணுக்கள் நாளங்கள் தோன்றி…
    இதயம் தோன்றி துடித்திடத் துவங்கும்…!

    உள்ளுறுப் பனைத்தும் மெல்லத் தோன்றி…
    உடலில் கைகால் குருத்துகள் தோன்றி…
    காது மடல்கள் எலும்புகள் நரம்புகள்…
    கருக் குழந்தைக்கு வளர்ந்திட லாச்சு…!

    எட்டாம் வார இறுதிக்குள் எல்லாம்…
    எலும்புகள் தசைகள் நரம்புகள் கொண்ட…
    ஒற்றை அங்குல நீளக் கருவில்…
    உறுப்புகள் மொத்தமும் தோன்றி யிருக்கும்…!

    குரல் தசைநார்கள் வளரத் துவங்கும் …
    புறப் பாலுறுப்பு தோன்றத் துவங்கும்…
    கைகால் நகங்கள் வளரத் துவங்கும்…
    கைரேகை எல்லாம் தோன்றத் துவங்கும்…!

    பன்னிறு வாரங்கள் கடந்த பிறகு…
    பல மடங்காக எடையும் கூடும்…
    சிசுவின் வாயுள் இருக்கும் நாவில்…
    சுவையை உணரும் அமைப்புகள் தோன்றும்…!

    தோல் அடுக்கெல்லாம் முதிரத் துவங்கும்…
    தலைமுடி யனைத்தும் வளரத் துவங்கும்…
    காற்றை சுவாசிக்கும் திறமை தோன்றும்…
    கேட்கும் திறமை எல்லாம் தோன்றும்…!

    கருப்பை திரவத்தில் மிதக்கும் கருவில்…
    கழுத்தைத் திருப்பும் தலையை அசைக்கும்…
    திடுக்கிடும் கைகால் அசைவுகள் பலவும்…
    துடிப்புள்ளதாக உணர்ந்திட முடியும்…!

    இருபத்து நான்கு வாரங்கள் கழித்து…
    இமைக ளிரண்டும் மெல்லத் திறக்கும்…
    சிசுவின் தோலில் சுருக்கங்கள் குறையும்…
    சிசுவின் மூளை துரிதமாய் வளரும்…!

    சுவாச மண்டலம் எலும்பு மண்டலம்…
    செரிமான மண்டலம் தசை மண்டலம்…
    நரம்பு மண்டலம் குருதியோட்ட மண்டலம்…
    நிணநீர் மண்டலம் அனைத்தும் வளரும்…!

    முப்பத்தாறு வாரம் கழிந்தப்பின்…
    முழுதாய் வளர்ந்த அக்கருக் குழந்தை…
    நாற்பதாம் வார இறுதிக்குள் பிறந்து…
    நம்மைத் தாங்கும் உலகைக் கண்டது…!

    குறிப்பு :-
    நிணநீர் மண்டலம்
    நிணநீர் என்பது என்ன? சிவப்பணு நீங்கிய குருதி. வெளிர்ப் பாய்மம். கொழுப்பு முண்டுகளால் உண்டாக்கப்படுவது. உடல் பாதுகாப்பிற்குப் பயன்படுவது. நிணநீர் மண்டலத்திலுள்ள உறுப்புகள் யாவை? நுண்ணிகள், குழாய்கள், முண்டுகள், நிணநீர்ச் சுரப்பிகள் ஆகியவை.
    நிணநீர் ஒட்டம் எவ்வாறு ஏற்படுகிறது, தசை அசைவுகளாலும் மூச்சு அசைவுகளாலும் நிணநீர் ஒட்டம் நடைபெறுகிறது. நிணநீர் மண்டலத்தின் வேலைகள் யாவை? 1. ஊட்டப்பொருள்களையும் உயிர்வளியையும் திசுக்களுக் களித்தல். 2. திசுக்கள் உண்டாகும் கழிவுகளை மீண்டும் குருதி யோடு சேர்த்தல். 3. உயிரணுக்களுக்கிடையே நிரம்பி அவற்றை உயிர் வாழச் செய்தல். 4. குடற் பால் குழலில் தங்கிக் கொழுப்பை உறிஞ்சுதல். 5. இதிலுள்ள வெள்ளணுக்கள் நோய் நுண்ணங்களைக் கொல்லுதல்.

    Share
  • நாட்டுப்புறப் பாடல்…

    ஆ. செந்தில் குமார்

     

    சிங்கப்பூரு சீமபோயி… மச்சான்

    சட்டுபுட்டுன்னு சம்பாரிச்சி…

    செட்டிகுளம் கூட்டுரோட்டுல…

    பெட்டிக்கட ஒன்னு போடலாமுங்க..

     

    சிங்கப்பூரு சீமபோயி… புள்ள

    சிக்கித் தவிக்க வேணுமாடி…

    சிக்கனமாக வாழ்ந்தோமுன்னா…

    சொர்கம்தானே நம்ம ஊருமே…

     

    மேலத்தெருவு மணிகண்டனும்… மச்சான்

    மச்சி வீடு கட்டுறாருங்க…

    மஸ்கட்டு போயி சம்பாரிச்சி…

    மணிமணியா வாழுறாருங்க…

     

    மச்சிவீடெல்லாம் வேணாம் புள்ள… நம்ம

    மண்குடிசைக்கு கொறவு ஏதுடி…

    மாடுகன்னு வாங்கிக்கலான்டி… புள்ள

    மணிமணியா வாழலான்டி…

     

    புள்ளகுட்டி பொறந்ததுன்னா… மச்சான்

    பத்தாதுங்க இந்த வீடு…

    இத்துப்போன கூரையிலே… மச்சான்

    பொத்துக்கிட்டு மழ கொட்டுதுங்க…

     

    புதுசா கூரை வேஞ்சுக்கலான்டி… புள்ள

    இதுக்குப்போயி வருத்தம் ஏனடி…

    கருத்தா நாம வாழ்க்கை நடத்துனா…

    கண்டகனவெல்லாம் பலிக்கும் பாரடி…

     

    கெணத்த கொஞ்சம் ஆழப்படுத்துவோம்… புள்ள

    நெலத்த நல்லா உழுதுப்போடுவோம்…

    ஆடி மாசம் மழ பெய்யுமே..

    தேடி வெதச்சி பயிர்பண்ணலாம்…

     

    ஊரு எல்லாம் பசுமையாகுமே… நம்ம

    உறவு எல்லாம் கூட இருக்குமே…

    தன்னா தனனானா தன்னனானா…

    தன்னா தனனானா தன்னனானா…

    Share
  • முதுமலையின் வனப்பு..!

    ஆ. செந்தில் குமார்.

     

     

     

     

     

     

     

     

     

     

    குயில்கள் பாட்டு இசைக்க
    மயில்கள் நடனம் புரியும்!
    கிளிகள் கொஞ்சி மகிழ
    கொக்கு ஒற்றைக்காலில் நிற்கும்!
    புலிகள் சீறிப்பாய சிறு
    முயல்கள் பதுங்கி மறையும்!
    காட்டெருமை கரடி இருக்க
    காட்டுப்பன்றிக் கூட்டம் மேயும்!
    ஓநாய் நரியின் ஊளை – இரவில்
    அச்சம் கொள்ள வைக்கும்!
    யானைப்பிளிரல் சத்தம் கேட்க
    வரையாடு ஒன்று கத்தும்!
    மான்கள் துள்ளி ஓட – அதை
    சிறுத்தை பாய்ந்து பிடிக்கும்!
    வானரங்கள் யாவும்
    மரக்கிளைகளில் தாவும்!
    வண்டு தேனை அருந்த
    மலர்கள் பூத்துக் குலுங்கும்!
    வானுயர்ந்த மரங்களனைத்தும்
    காற்றில் அசைந்து ஆடும்!
    இயற்கை எழில் கொஞ்சும்
    முதுமலையைக்காண மனம் கெஞ்சும்!

     

    Share
  • தாகம் ……

    ஆ. செந்தில் குமார்.

     

     

     

     

     

     

     

     

     

    ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பேயே

    நீராதாரத்தைப் பாதுகாக்க அல்லும்பகலும்

    பாராதுழைத்து அழகியவோர் கல்லணையை

    பார்போற்ற கட்டினான் கரிகாலன்!

     

    இத்தகு வரலாறு நமக்கிருந்தும்

    மெத்தனப்போக்காய் வாழ்ந்ததனால் திணை

    யத்தனையளவு நீருக்கும் நித்தம்

    எத்தனை எத்தனை போராட்டம்!

     

    தான் வாழ்ந்தால் போதுமென்று

    எண்ணுமிம்ம(மா)க்களாலே கழிவுகள் கலக்கும்

    தேன்சுவை நீர்நிலைக ளெல்லாம்

    வீணில் போவது அவலமன்றோ!

     

    பொழிகின்ற வான்மழையும் சேமிக்க

    வழியின்றி கடலில்போய் கலக்கிறது!

    விழிபிதுங்கும் பல மாசுக்களால்

    வாழ்வாதாரம் மெல்ல அழிகிறது!

     

    தடுப்பணை பலவும் கட்டிடுவோம் – நீர்

    கடலில் கலப்பதை குறைத்திடுவோம்!

    ஏரி குளங்கள் அனைத்தையுமே

    தூர்வாரி நீரை சேமிப்போம்!

     

    நாடெங்கும் மரங்களை நட்டிடுவோம்!

    தடையயற்ற மழையைப் பெற்றிடுவோம்!

    வீடுகளில் மழைநீர் சேகரித்து

    நிலத்தடி நீர்மட்டம் உயர்த்திடுவோம்!

     

    நீர் சூழ்ந்த இவ்வுலகினிலே

    பருகும் நிலையில் இருக்கின்ற

    ஒரு சதவீதத்திற்கும் குறைவான

    நீரைப் பொன்னெனப்போற்றி காத்திடுவோம்!

     

     

    நீரின்றி அமையாது உலகு எனின் யார் யார்க்கும்

    வானின்றி அமையாது ஒழுக்கு

    (குறள்: 20

    Share
  • விடியலை நோக்கிப் புறப்படு

    ஆ. செந்தில் குமார்.

     

     

     

     

     

     

     

     

     

     

     

    இளைஞனே!
    உன்னில் உறங்கும் ஆற்றல் உலகளவு -அது
    உன்னுள் உறங்கிப் பயனென்ன?

    உன்னை
    நசுக்கும் வலியிங்கு ஏராளம் – அதை
    நறுக்கிக் களைந்து வெளியே வா!

    உன்
    நாடு நலிந்து மெலிந்து போவதனை
    வேடிக்கை பார்த்து நிற்காதே!

    உன்
    உள்ளத்தின் அச்சத்தை அறவே தவிர்!
    உலகாளும் வல்லமை உனக்குண்டு!

    நீ
    சோம்பித் தூங்கி கழித்தது போதும்!
    சொக்கும் கண்ணைத் திற!

    நீ
    விட்டில் பூச்சியாய் வீழ்ந்தது போதும்!
    வீரு கொண்டு எழு!

    இளைஞனே!
    விடியலை நோக்கிப் புறப்படு – உலகு
    வியக்கும் வண்ணம் செயல்படு!!

    Share
  • ஈழத்தின் குரலாய்…!

     

    ஆ. செந்தில் குமார்

     

    வஞ்சியவள் சீதையின்
    வாட்டத்தைப் போக்கி – காத்து நின்ற
    அஞ்சனையின் மைந்தனவன்
    அனுமனைப் போன்று
    எதிரிகளின் படைதம்மை வீழ்த்தியே நித்தம்
    எமைக் காத்து நின்றான் எமது அண்ணன்!

    எங்குமே காணாத அவன் வீரம் கண்டு
    சிங்கக் கொடியுமே வீழ்ந்தது அன்று!
    சங்கும் முழங்கியது அவன் வீரம் கொண்டு
    எங்கும் தமிழ் ஒலிக்க செய்திட்டான் அவனே!

    செங்காந்தள் மலர் போன்ற தன் மனதைக் கொண்டு
    செந்தமிழர் தம் மனதில் கோலோச்சி நின்றானே!
    செங்கதிரோன் ஒளி போன்ற அவன் கண்ணைக் கண்டு
    எதிர்த்து நின்ற சேனைகளும்
    அஞ்சியது அன்று!

    நெஞ்சுரமே சிறிதுமின்றி இருந்த நம் பகைவர்
    வஞ்சனைகள் பல சேர்ந்து வீழ்த்தியது நம் படையை!
    முத்து முத்தாய் பொழிகின்ற வான் மழையைப் போல
    கொத்து கொத்தாய் பொழிந்தன குண்டுகள் தலை மேலே!

    செங்குருதி பெருக்கெடுக்க தலைசாய்ந்த நம் மக்கள்!
    எங்குமே மரணத்தின் ஓலம் – நாடே
    பிணக்காடாய் மாறிய அவலம்!
    அறமின்றி
    மறம் சிறிதுமின்றி
    வஞ்சனையின் துணைக்கொண்டு
    இன அழிப்பு செய்திட்டார் நம் பகைவர்!
    பிஞ்சென்றும் பூவென்றும்
    பால் மணம் மாறா
    பிள்ளையென்றும் பாராமல்
    நஞ்சு மனம் கொண்டு அவர்கள்
    கொன்று கொன்று குவித்தனரே!
    கங்குகரை காணாத
    கடல் போன்ற மக்கள்
    பொங்கி வந்த வேதனையால்
    சிலையாகி நின்றனரே!

    இன்றளவும் கிடைக்கவில்லை
    இதற்கு ஒரு நீதி!
    எங்களுக்கும் காலம் வரும்
    எம்மண்ணில் விதைக்கப்பட்ட வீரமும்
    முளைத்து வரும்!
    அது வரையும் காத்திருபோம்!
    ஈழத்தை வென்றெடுப்போம்!
    புலிக்கொடியை நாட்டிடுவோம்!

    Share
  • வஞ்சகர்…!!

    -ஆ. செந்தில் குமார்

     

    கருத்திருப்பர்! வெளுத்திருப்பர்!
    கனிவான பேச்சில் இனித்திருப்பர்!
    உள்ளத்தில் கடுத்திருப்பர்! – எனினும்
    உடல் மொழியதை உணர்த்தாது!

    உறவென்பர்! உயிரென்பர்!
    உயிரில் கலந்த உணர்வென்பர்!
    உள்ளத்தில் கடுத்திருப்பர்! – எனினும்
    உடல் மொழியதை உணர்த்தாது!

    மதமென்பர்! இனமென்பர்!
    இனத்தின் மொழியென்பர்!
    உள்ளத்தில் கடுத்திருப்பர்! – எனினும்
    உடல் மொழியதை உணர்த்தாது!

    கண்னென்பர்! மணியென்பர்!
    கனவில் பூத்த மலரென்பர்!
    உள்ளத்தில் கடுத்திருப்பர்! – எனினும்
    உடல் மொழியதை உணர்த்தாது!

    அமுதென்பர்! தேனென்பர்!
    தேனில் ஊறிய சுளையென்பர்!
    உள்ளத்தில் கடுத்திருப்பர்! – எனினும்
    உடல் மொழியதை உணர்த்தாது!

    அறிவென்பர்! அழகென்பர்!
    அனைத்துமே நீயென்பர்!
    உள்ளத்தில் கடுத்திருப்பர்! – எனினும்
    உடல் மொழியதை உணர்த்தாது!

    ~~~~~~~~~~~~

    Share
  • உறவுகள் மேம்பட…!

    – ஆ. செந்தில் குமார்

    உதிர்க்கின்ற கடுஞ்சொல்லால்
    உறவு நிலைக்குமா?
    காண்கின்ற குற்றத்தால்
    சுற்றம் நிலைக்குமா?

    கடுகடுத்த முகத்தைக் கண்டால்
    குடும்பம் மகிழுமா?
    சிடுசிடுக்கும் பேச்சாலே
    சிந்தை குளிருமா?

    முணுமுணுக்கும் வார்த்தைகளால்
    முகங்கள் மலருமா?
    பசப்பு மொழி பேசினாலே
    பாசம் கிடைக்குமா?

    தந்திரங்கள் கையாண்டால்
    தந்தை மகிழ்வாரா?
    தறிகெட்டுத் திரிந்தாலே
    தாய் மகிழ்வாரா?

    நயவஞ்சகம் கொண்டிருந்தால்
    நட்பு நிலைக்குமா?
    நீதி நேர்மை இல்லையென்றால்
    நண்பன் கிடைப்பானா?

    செருக்கு கொண்ட கணவனாலே
    வாழ்வு இனிக்குமா?
    அகந்தை கொண்ட மனைவியாலே
    அமைதி கிடைக்குமா?

    அன்பு என்ற ஆணி வேரை
    உறுதிப் படுத்துவோம்!
    உறவு என்ற ஆலமரத்தை
    தழைக்கச் செய்குவோம்!

     

    Share
  • உழவுக்காடு….

    உழவுக்காடு….
    *****************
    – ஆ. செந்தில் குமார்

    கண்ட கனவு பலிக்குதடி கண்ணம்மா!
    கருமேகம் திரண்டுடுச்சி கண்ணம்மா!
    கருமேகம் திரண்டுச்சின்னா கண்ணையா
    படும்பாடு தீருமா கண்ணையா?

    கருமேகம் திரண்டுச்சின்னா கண்ணம்மா
    காத்து மழை பெய்யுமடி கண்ணம்மா!
    காத்து மழை பெஞ்சிசின்னா கண்ணையா
    படும்பாடு தீருமா கண்ணையா?

    காத்து மழை பெஞ்சிச்சின்னா கண்ணம்மா
    காவிரிதான் கரை புரளும் கண்ணம்மா!
    காவிரிதான் கரை புரண்டா கண்ணையா
    படும்பாடு தீருமா கண்ணையா?

    காவிரிதான் கரை புரண்டா கண்ணமா
    ஏரி குளம் நெரம்புமடி கண்ணமா!
    ஏரி குளம் நெரம்புச்சின்னா கண்ணையா
    படும்பாடு தீருமா கண்ணையா?

    ஏரி குளம் நிரம்புச்சின்னா கண்ணம்மா
    காஞ்ச வயல் ஈரமாகும் கண்ணம்மா!
    காஞ்ச வயல் ஈரமானா கண்ணையா
    படும்பாடு தீருமா கண்ணையா?

    காஞ்ச வயல் ஈரமானா கண்ணம்மா
    ஏர் பிடிக்க ஏதுவாகும் கண்ணம்மா!
    ஏர் பிடிக்க ஏதுவானா கண்ணையா
    படும்பாடு தீருமா கண்ணையா?

    ஏர் பிடிக்க ஏதுவானா கண்ணம்மா – நிலத்தை
    ஆழமாக உழுவலாம் கண்ணம்மா!
    ஆழமாக உழுதாலே கண்ணையா
    படும்பாடு தீருமா கண்ணையா?

    ஆழமாக உழுதாலே கண்ணம்மா
    பயிரெல்லாம் செழிக்குமடி கண்ணம்மா!
    பயிரெல்லாம் செழிச்சதுன்னா கண்ணையா
    படும்பாடு தீருமா கண்ணையா?

    பயிரெல்லாம் செழிச்சதுன்னா கண்ணம்மா
    விளைச்சலெல்லாம் இருக்குமே  அதிகமா!
    அதிக விளைச்சல் இருந்தாலே கண்ணையா
    படும்பாடு தீருமா கண்ணையா?

    படும்பாடு தீருமோ இல்லையோ
    பட்ட கடனெல்லாம் தீருமடி கண்ணமா! – உன்னை
    கட்டிக்கிட்ட பாவத்துக்கு நானுமே
    கஞ்சாச்சும் ஊத்தணும் நியாயமா!

    Share
  • பெண் ஒரு போராளி…!

    -ஆ. செந்தில் குமார்

    கல்லடிகள் தாங்கி நிற்கும் பழுமரம் போல் – கணவனின்
    சொல்லடிகள் தாங்கி நிற்கும்
    பெண் ஒரு போராளி!

    கற்புநெறிக்கு இடையூறு எது வரினும் கலங்காமல்
    கனல் கக்கும் பார்வையினால் வாள் வீசும்
    பெண் ஒரு போராளி!

    சுட்டாலும் வெண்மை தரும் சங்கைப் போல் – எத்துன்பம்
    பட்டாலும் பிள்ளைக்காக இன்பமெனக் கொள்ளும்
    பெண் ஒரு போராளி!

    ஆணாதிக்கம் என்பது இங்கு இருந்தாலும்
    ஆடவர்க்கு நிகராக அனைத்திலுமே கோலோச்சி நிற்கும்
    பெண் ஒரு போராளி!

    அடக்குமுறைக்கு அடிபணியாமல் அழுத்தமான மனம் கொண்டு
    நினைத்த எண்ணம் நிறைவேற நிலைத்து நின்று போராடும் ஒவ்வொரு
    பெண்ணுமே ஓர் போராளி!!

     

     

     

    Share
  • தமிழ் பால் கொண்ட ஈர்ப்பால்…!

     

    ஆ. செந்தில் குமார்

     

    இலக்கணத்தில் இருப்பது
    ஆண்பால் பெண்பால்
    பலர்பால் ஒன்றன்பால்
    பலவின்பால் எனும் ஐம்பால்…
    இவற்றுள் முதல் மூன்றும்
    உயர்திணைப்பால்…
    அடுத்த இரண்டும்
    அஃறிணைப்பால்…

    வள்ளுவன் தந்த
    அறத்துப்பால் பொருட்பால்
    இன்பத்துப்பால் எனும் முப்பால்…
    ஆண்பால் பெண்பால் என்ற
    இருபால் புலவரும்
    தமிழ்பால் கொண்ட ஈர்ப்பால்…
    வடித்த பாக்களின் படைப்பால்…
    மொழி வளர்ந்தது வனப்பால்!

    அன்னையின் அன்பால்…
    தந்தையின் அரவணைப்பால்…
    பிள்ளைகளின் நற்பண்பால்…
    பெரியோரின் ஆர்பரிப்பால்…
    உறவினரின் இருப்பால்…
    குடும்பம் திளைக்கும் பூரிப்பால்!

    பாட்டாளிகளின் உழைப்பால்…
    படைப்பாளிகளின் படைப்பால்…
    ஆட்சியாளர்களின் பொறுப்பால்…செல்வங்களின் கையிருப்பால்…
    வளங்களின் அதிகரிப்பால்….
    நாடு வளரும் செழிப்பால்!

    Share
  • முரண்பாடு….!

     

    ஆ. செந்தில் குமார்

     

     

    அணுவின் உருவம் மிகச்சிறிது
    அதில் பொதிந்துள ஆற்றல் அளப்பரிது!
    அழகாய் தோன்றும் கடல்தனிலே
    ஆழிப் பேரலை மறைந்துளதே!

    அருவெறுப்பான சேற்றினிலே
    அழகாய்த் தாமரை மலர்கிறதே!
    அழகே உருவான பாம்பிடமோ
    ஆளைக் கொல்லும் நஞ்சுளதே!

    கரியென்றொதுக்கும் பொருள்தனிலே
    கட்டி வைரங்கள் விளைகிறதே!
    குயிலின் நிறமே கருப்பாரும்
    குரலின் வளமே அதன் சிறப்பாகும்!

    சில்லென்றிருக்கும் தென்றலுமே
    சீற்றம் கொண்டால் புயலாகும்!
    பொருமையின் உருவே பூமிப்பந்து – அதில்
    பூகம்பம் என்பது புதைந்துளதே!

    உன்னத உறவே வாழ்க்கைத்துணை – அதில்
    உலுக்கும் போராட்டம் ஏராளம்!
    என்னே என்னே விந்தையிது
    எங்கும் நிறைந்தவன் படைப்பினிலே!

    அழகில் ஆபத்து நிறைந்துளது
    அருவெறுப்பில் அழகும் கலந்துளது!
    பெருமையில் இருக்கும் சிறுமைத்தனம்
    சிறுமையில் இருக்கும் பெருமை குணம்!

    ஏனோ இந்த முரண்பாடு – என்பதை
    எண்ணி வியக்கின்றேன்!
    இன்பம் துன்பம் எல்லாமே
    இரண்டறக் கலந்ததே வாழ்கையன்றோ!

    தோற்றப் பொருட்கள் எல்லாமே
    மாற்றம் நோக்கிச் செல்வதற்கே!
    இந்த உடலே நாளை மண்ணாகும்
    அந்த மண்ணும் மறுபடி உயிர் பெறுமே!

    மறை பொருளாம் இறைநிலையே
    மானிடர் நமக்கு உரைக்கின்ற
    உலகியற்கை இதுவன்றோ! – இதை
    உணர்ந்தே நாமும் வாழ்ந்திடுவோம்!

    Share