தமிழ் பால் கொண்ட ஈர்ப்பால்…!
ஆ. செந்தில் குமார்
இலக்கணத்தில் இருப்பது
ஆண்பால் பெண்பால்
பலர்பால் ஒன்றன்பால்
பலவின்பால் எனும் ஐம்பால்…
இவற்றுள் முதல் மூன்றும்
உயர்திணைப்பால்…
அடுத்த இரண்டும்
அஃறிணைப்பால்…
வள்ளுவன் தந்த
அறத்துப்பால் பொருட்பால்
இன்பத்துப்பால் எனும் முப்பால்…
ஆண்பால் பெண்பால் என்ற
இருபால் புலவரும்
தமிழ்பால் கொண்ட ஈர்ப்பால்…
வடித்த பாக்களின் படைப்பால்…
மொழி வளர்ந்தது வனப்பால்!
அன்னையின் அன்பால்…
தந்தையின் அரவணைப்பால்…
பிள்ளைகளின் நற்பண்பால்…
பெரியோரின் ஆர்பரிப்பால்…
உறவினரின் இருப்பால்…
குடும்பம் திளைக்கும் பூரிப்பால்!
பாட்டாளிகளின் உழைப்பால்…
படைப்பாளிகளின் படைப்பால்…
ஆட்சியாளர்களின் பொறுப்பால்…செல்வங்களின் கையிருப்பால்…
வளங்களின் அதிகரிப்பால்….
நாடு வளரும் செழிப்பால்!