உழவுக்காடு….

உழவுக்காடு….
*****************
– ஆ. செந்தில் குமார்

கண்ட கனவு பலிக்குதடி கண்ணம்மா!
கருமேகம் திரண்டுடுச்சி கண்ணம்மா!
கருமேகம் திரண்டுச்சின்னா கண்ணையா
படும்பாடு தீருமா கண்ணையா?

கருமேகம் திரண்டுச்சின்னா கண்ணம்மா
காத்து மழை பெய்யுமடி கண்ணம்மா!
காத்து மழை பெஞ்சிசின்னா கண்ணையா
படும்பாடு தீருமா கண்ணையா?

காத்து மழை பெஞ்சிச்சின்னா கண்ணம்மா
காவிரிதான் கரை புரளும் கண்ணம்மா!
காவிரிதான் கரை புரண்டா கண்ணையா
படும்பாடு தீருமா கண்ணையா?

காவிரிதான் கரை புரண்டா கண்ணமா
ஏரி குளம் நெரம்புமடி கண்ணமா!
ஏரி குளம் நெரம்புச்சின்னா கண்ணையா
படும்பாடு தீருமா கண்ணையா?

ஏரி குளம் நிரம்புச்சின்னா கண்ணம்மா
காஞ்ச வயல் ஈரமாகும் கண்ணம்மா!
காஞ்ச வயல் ஈரமானா கண்ணையா
படும்பாடு தீருமா கண்ணையா?

காஞ்ச வயல் ஈரமானா கண்ணம்மா
ஏர் பிடிக்க ஏதுவாகும் கண்ணம்மா!
ஏர் பிடிக்க ஏதுவானா கண்ணையா
படும்பாடு தீருமா கண்ணையா?

ஏர் பிடிக்க ஏதுவானா கண்ணம்மா – நிலத்தை
ஆழமாக உழுவலாம் கண்ணம்மா!
ஆழமாக உழுதாலே கண்ணையா
படும்பாடு தீருமா கண்ணையா?

ஆழமாக உழுதாலே கண்ணம்மா
பயிரெல்லாம் செழிக்குமடி கண்ணம்மா!
பயிரெல்லாம் செழிச்சதுன்னா கண்ணையா
படும்பாடு தீருமா கண்ணையா?

பயிரெல்லாம் செழிச்சதுன்னா கண்ணம்மா
விளைச்சலெல்லாம் இருக்குமே  அதிகமா!
அதிக விளைச்சல் இருந்தாலே கண்ணையா
படும்பாடு தீருமா கண்ணையா?

படும்பாடு தீருமோ இல்லையோ
பட்ட கடனெல்லாம் தீருமடி கண்ணமா! – உன்னை
கட்டிக்கிட்ட பாவத்துக்கு நானுமே
கஞ்சாச்சும் ஊத்தணும் நியாயமா!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *