Tag: தஞ்சை வெ.கோபாலன்

  • பெங்களூர் நாகரத்தினம்மா வாழ்வில் …..

    –தஞ்சை வெ.கோபாலன்.

    திருவையாற்றில் அடுத்த மாதம் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனையும், ஐந்து நாட்கள் இசைவிழாவும் மிகச் சிறப்பாக நடக்கவிருக்கிறது. இந்த நேரத்தில் அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை வெளியுலகுக்குக் கொண்டுவந்து இந்த அளவுக்குச் சிறப்பாக விழா நடைபெற வழிவகுத்த ஒரு பெண்மணியைப் பற்றி தெரிந்து கொள்வோமே!

    திருவையாறு சற்குரு ஸ்ரீதியாகபிரம்மத்தின் புகழ் வெளியுலகத்துக்குப் பரவிட பெரும்பணியாற்றிய பெண்மணி பெங்களூர் நாகரத்தினம்மாள். இவர் வாழ்க்கையில் செல்வம், புகழ் இவற்றின் உச்சியையும் தொட்டவர்; சில நேரங்களில் கடுமையான வீழ்ச்சிகளையும் கண்டவர். இவர் ஒரு தேவதாசி குடும்பத்தில் பிறந்தவர். தந்தையால் கைவிடப்பட்டு இவரும், இவரது தாயார் புட்டம்மாவும் மிகவும் சிரமங்களுக்கு ஆளாகி வளர்ந்தவர்கள். இசையிலும், நாட்டியத்திலும் இவர் தேர்ந்து மிகவும் மதிக்கப்பட்ட கலைஞராகத் தென்னாடு முழுவதிலும் திகழ்ந்தவர். இவர் மைசூரில் பிறந்ததனால் கன்னடமும், தெலுங்கும், சென்னையில் வாழ்ந்ததால் தமிழும், சம்ஸ்கிருதமும் நன்கு பயின்று அவற்றில் புலமை பெற்றிருந்தார்.

    பெங்களூர் நாகரத்தினம்மாநாகரத்தினம்மாள் அவருடைய சமகாலப் பெண்களோடு ஒப்பிடும்போது அதிகம் படித்த பெண்மணியாகத் திகழ்ந்தார். இவருடைய புலமைக்காக இவர் பல ஊர்களிலும் அழைத்துப் பாராட்டப் பட்டிருக்கிறார். புகழின் உச்சியைத் தொட்டவர் என்பதை பலகாலும் வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டியவர். அப்படிப்பட்ட இவர்தான் பின்னர் வாழ்க்கையில் பட்ட அடியின் காரணமாக, செல்வச் செழிப்பிருந்தும், வசதி வாய்ப்புகள் இருந்தும், கலைகளில் நல்ல பாண்டித்யம் இருந்தும், நிம்மதியில்லாமல் போயிற்று. காரணம் இவருக்கு வாரிசு இல்லை. நம்பிக்கை துரோகத்துக்கும் ஆளாகி மனம் வருந்தி, நெருங்கிய நண்பர்கள், கலைஞர்கள் ஆலோசனைக் கிணங்க திருவையாற்றுக்கு வந்து சற்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் சமாதி காவிரிக் கரையில் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அதை செப்பனிட்டு அங்கு அவருக்கு ஒரு சமாதி கோயில் எழுப்பி, இன்று அது உலகத்தையே சுண்டி இழுக்கும் இசையின் தலைமை பீடமாக உருவெடுத்து ஆண்டுதோறும் அவர் சமாதியில் ஆராதனை இசைவிழா நடைபெற மூல காரணமாகத் திகழ்ந்தவர். அதுமட்டுமல்ல பல புரட்சிகளைச் செய்த இவரே, திருவையாற்றில் தியாகராஜர் சமாதி ஆராதனையில் பெண்கள் பாடுவதற்கு அனுமதி இல்லாமலிருந்த நிலையை மாற்றி, பெண்களுக்கும் சம அந்தஸ்து பெற்று அங்கு மேடையேறி பாட வழிவகுத்தவரும் இவரே. இந்த உண்மை இன்றைய பெண் பாடகிகள் எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இது.

    இவருடைய வாழ்க்கையில் இன்னுமொரு வேடிக்கையும் நடந்தது. அது வேடிக்கையான நிகழ்ச்சி மட்டுமல்ல, வேதனை தரும் நிகழ்ச்சியுமாகும். தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள் வரிசையில் பிரதாபசிம்ம ராஜா மிகவும் பிரபலமானவர். 18ஆம் நூற்றாண்டில் பிரதாபசிம்ம ராஜா தென்னாட்டு வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் சம்பந்தப் பட்டிருந்தார். 1739 முதல் 1763 வரை இவர் தஞ்சையை ஆண்டு வந்தார். ஆற்காடு நவாப் முகமது அலிக்கு ஆதரவாக இருந்து அவருடைய எதிரியான சந்தா சாஹேபை சிறைபிடித்துப் பின்னர் முகமது அலியின் வேண்டுகோளுக் கிணங்க அவரை பலியிட்டதும் இவரே. இவர் காலத்தில்தான் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து வாணிபம் புரிய நாடுதேடி வந்து கொண்டிருந்தனர், அப்படிப்பட்ட நிலையில் அவர்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பிரதாப சிம்மருக்கு இருந்தது. இவருடைய மகன் தான் துளஜேந்திர ராஜா. அவருக்குப் பின் சுவீகாரம் எடுக்கப்பட்ட மகன்தான் இரண்டாம் சரபோஜி.

    இந்த பிரதாபசிம்ம ராஜாவின் அரண்மனையில் பல தேவதாசிகள் உயரிய அந்தஸ்துடன் இருந்து வந்தனர். அப்படிப்பட்ட பல தேவதாசிகளில் ‘முத்துப்பழனி’ எனும் பெயர் கொண்ட தேவதாசி அவருடைய ஆசை நாயகியாக இருந்தார். மன்னரின் அவையில் பல கலைஞர்கள் இருந்தனர், அவர்களில் முத்துப்பழனியும் ஒருவர்; அதுமட்டுமல்லாமல் அவர் மிகச் சிறந்த பண்டிதராகவும் திகழ்ந்தார். தெலுங்கு மொழியில் கவிதை இயற்றும் ஆற்றல் படைத்தவர்; சமஸ்கிருத மொழி அறிவும் இவருக்கு அதிகம். அப்படிப்பட்டவர் ஆண்டாளின் திருப்பாவையை யொட்டி அதே போல தெலுங்கில் ஒரு கவிதை நூலை இயற்றியவர். இவர் கவிதைகளில் பல புதுமைகளை செய்த போதிலும், இவர் இயற்றிய “ராதிகா சாந்தவனமு” (ராதையை சமாதானப் படுத்துதல்) எனும் தெலுங்கு மொழி கவிதை நூல் மிகவும் பிரபலமடைந்தது; பிரபலமடைந்தது மட்டுமல்ல, அரசாங்கத்தின் பார்வை பட்டு அது தடையும் செய்யப்பட்டது.

    இந்த “ராதிகா சாந்தவனமு” கதைப் பாடல் அப்படி என்னதான் சொல்லுகிறது என்பது தெரிய வெண்டாமா? ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, ராதை ஆகியோர் பற்றிய கதைகள், வடமொழி, தெலுங்கு போன்ற இலக்கியங்களில் ராதை, கிருஷ்ணன் பற்றிய பல கவிதை நூல்கள், அஷ்டபதி, கீதகோவிந்தம் போன்ற பல புகழ் பெற்றன. இந்த கிருஷ்ணன் ராதை உறவை பொதுவாக, பரமாத்மா, ஜீவாத்மா ஐக்கியத்தை உருவகப்படுத்துவதாகத்தான் பெரும்பாலும் சொல்வார்கள். வடமொழி அறிஞர் கே.எம்.முன்ஷி தன்னுடைய “கிருஷ்ணாவதார்” “மேஜிக் ஆஃப் தி ஃப்ளூட்” எனும் நூலில் ஒரு அத்தியாயத்தின் தலைப்பாக “ராதா தி காண்ட்ரோவர்ஷியல் கேரக்டர்” என்று எழுதி, ராதை என்பவர் கிருஷ்ணனை விட வயதில் மூத்தவர், யாதவ குல தலைவன் ஒருவனின் மனைவி என்றும் குறிப்பிடுகிறார். அப்படியானால் ராதையையும் கிருஷ்ணனையும் இணைத்து இப்படி பக்தி மார்க்கத்தில் ஒரு பஜனை சம்ப்ரதாயம் உருவாகி விட்டது எப்படி?

    போகட்டும்! இப்போது பிரச்சனை அதுவல்ல. கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணன் ராதை உறவு பரமாத்மா ஜீவாத்மா ஐக்கியத்தை விழையும் நோக்கத்தில் இருந்தாலும், தெலுங்கு கவி முத்துப்பழனி இயற்றிய “ராதிகா சாந்தவனமு” அப்படி அமையவில்லை. காம உணர்வால் தூண்டப்பட்ட ஒரு இளம் பெண் கிருஷ்ணனுடன் இன்பம் துய்க்கும் உறவாக சித்தரித்து அது இயற்றப்பட்டிருந்தது. எந்தக் கதையானாலும் அது ஒரு திருப்பம் (ட்விஸ்ட்) இருக்க வேண்டுமல்லவா? இந்தக் கதையில் வயதில் மூத்த அந்தப் பெண் கிருஷ்ணனுடன் உறவில் ஈடுபட்டிருந்தாலும், தன்னுடைய மருமகளான இலா என்பவள் வயதுக்கு வந்தவுடன் அவளை கிருஷ்ணனுக்கு அளித்து விடுகிறாள். அப்போது அந்த ராதை இலாவுக்கும், கிருஷ்ணனுக்கும் இவர்கள் உறவில் எப்படியெல்லாம் இன்பம் துய்க்க முடியும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறாள். அதுதான் கவிதை. *(இணையத்திலிருந்து சில பாடல்களை கட்டுரையின் இறுதியில் காண்க)

    பிற்காலத்தில் இந்த நூலைப் பற்றி குறிப்பிடும் ஒருவர் இந்த நூலை இயற்றியவர் ஒரு பெண் என்பதறியாமல் முத்துப் பழனி எனும் ஒரு ஆண் என்கிறார். இந்த நூல் 1887இலும் பின்னர் 1907லும் சென்னையில் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த ஒரு வெளியீட்டாளரால் வெளியிடப்பட்டிருக்கிறது. அப்போது சென்னை மாகாணத்தில் தெலுங்கு பேசும் பகுதியில் வாழ்ந்த சீர்திருத்தக்காரரும், தேவதாசி முறை ஒழிப்பு ஆதரவாளரும், விதவா விவாக ஆதரவாளருமான வீரேசலிங்கம் பந்துலு என்பவரின் கவனத்துக்கு இந்த நூல் வந்தது. மகாகவி பாரதி தன்னுடைய “சந்திரிகையின் கதை” எனும் நாவலில் இந்த வீரேசலிங்கம் பந்துலுவையே ஒரு கதாபாத்திரமாக்கியிருக்கிறார் என்பதை நினைவூட்டுகிறேன்.

    இந்த வீரேசலிங்கம் பந்துலு தெலுங்கு மொழி கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு”களைத் தொகுத்து வெளியிட்டிருந்தார். அந்தத் தொகுப்பு நூலில் இந்த “ராதிகா சாந்தவனமு” கவிதை நூலைப் பற்றியும், அதன் உள்ளடக்கம் பற்றியும் எழுதியிருந்தார். அப்படி குறிப்பிடும்போது அவர் தேவதாசிகளை வெறுப்பவர் என்ற முறையில் இதன் ஆசிரியரான முத்துப்பழனியைக் குறிப்பிட தெலுங்கில் மரியாதைக் குறைவாக விளிக்கும் சொற்களைப் பயன்படுத்தியிருந்தார். கவிஞரின் சம்ஸ்கிருதம், தெலுங்கு மொழி அறிவைப் பாராட்டிவிட்டு, உள்ளடக்கம் அதிர்ச்சியாக இருப்பதாக அவர் எழுதினார். உச்சகட்டமாக கவிஞர் முத்துப்பழனியை நடத்தை கெட்டவள் என்றும், ஒரு விலைமாதினால் எழுதப் பட்டதால் நூல் ஆபாசம் நிறைந்ததாக உள்ளது என்றும் எழுதினார்.

    இந்த விவரங்களையெல்லாம் கேள்விப்பட்ட நாகரத்தினம்மாள் அந்த நூலை வாங்கிப் படித்துப் பார்த்தார். அதில் இருந்த பல பிழைகளை நீக்கி நல்ல முறையில் மீள்பதிவு செய்து வெளியிட்டார். அப்படி வெளியிட்ட பதிப்பின் முன்னுரையை எழுதிய நாகரத்தினம்மாள் சொல்கிறார். “வீரேசலிங்கம் இந்த நூலைப் பற்றி எழுதுகையில் ஆசிரியரும் கவிஞருமான முத்துப்பழனியை மிகக்கேவலமாக, அவர் ஒரு வேசி, இவரது தாயார் முத்தியாலு, முத்துப்பழனி பிரதாபசிம்ம ராஜாவின் ஆசைநாயகி என்றெல்லாம் எழுதியிருந்ததை நாகரத்தினம்மாள் கண்டித்து முத்தியாலு என்பவர் கவிஞரின் தாய் அல்ல, தந்தை என்பதையும் எழுதினார்.

    முத்துப்பழனி ஒரு விலைமாது, ஒழுக்கமற்றவர் என்றெல்லாம் விமர்சனம் செய்திருந்ததை நாக்ரத்தினம்மாள் விரும்பவில்லை. அதற்கு கண்டனங்களைத் தெரிவித்தார். தேவதாசியாகப் பிறந்ததாலேயே ஒருவர் ஒழுக்கமற்றவர் என்று வீரேசலிங்கம் எப்படி முடிவுக்கு வரலாம் என்பது அவர் வாதம். இதற்கிடையே 1911 ஜனவரி மாதம் சென்னையிலிருந்து வெளிவந்த தெலுங்கு பத்திரிகையான “சசிலேகா” வில் இந்த நூலைப் பற்றி “ஒரு விலைமாதினால் எழுதப்பட்டு, இன்னொரு விலைமாது அதை திருத்தி வெளியிட்டிருக்கிறார்” என்று எழுதினார்கள்.

    பல விவாதங்கள், அரசாங்க கடித பரிமாற்றங்கள், சமூக ஆர்வலர்களின் தலையீடு இவற்றின் முடிவில் இந்த நூல் காவல்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அதில் பதிப்பாசிரியர் பெயரை பெங்களூரு நாகரத்தினம்மாள் (மதராசின் பிரபலமான விலைமாதுக்களில் ஒருவர்) என்று குறிக்கப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து 1911 மே மாதம் சென்னை காவல்துறை டெபுடி கமிஷனர் கன்னிங்ஹாம் தலைமையில் ஒரு குழு சென்று ஆய்வு நடத்தி மொத்தம் 18 நூல்களை ஆபாசம் என்று முடிவுக்கு வந்து ஒரு பட்டியல் தயாரித்தது. அதில் இரண்டாமிடத்தில் நாகரத்தினம்மாள் பிரசுரித்த முத்துப்பழனியின் “ராதிகா சாந்தவனமு” இருந்தது. இதில் இன்னொரு வேடிக்கை, இந்த பிரச்சனையைக் கிளப்பி சீர்திருத்தம் பேசிய வீரேசலிங்கம் பந்துலு எழுதிய “ரசிக ஜன மனோரஞ்சனம்” எனும் நூலும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதைவிட ஆச்சர்யமும், பெரிய கொடுமையும் என்ன வென்றால் பெரிய புராணத்தில் பாடப்பட்ட நந்தனார் வரலாற்றை இசை நாடகமாக மாயூரம் கோபாலகிருஷ்ண பாரதியார் ஆக்கினாரல்லவா “நந்தன் சரித்திர” நாடகம், அதுவும் பட்டியலில் இருந்தது.

    பின்னர் பல சர்ச்சைகள், கூட்டங்கள், ஆலோசனைகள் இவற்றுக்குப் பிறகு மற்ற நூல்கள், அடித்தல் திருத்தல், நீக்கல் ஆகியவைகளுடன் வெளியிட்டாலும் முத்துப்பழனியின் “ராதிகா சாந்தவனமு” சந்தையில் இல்லாமலே போய்விட்டது.

    இந்த சந்தடிகளெல்லாம் அடங்கிய பின் வாழ்க்கையில் விரக்தியுற்று நாகரத்தினம்மாள், தன் செல்வங்களையெல்லாம் ஒரு மகானின் நினைவிடத்தைப் புதுப்பித்து, ஒரு துறவி போல வாழ்ந்து வந்த கதை நமக்கெல்லாம் தெரிந்ததுதானே. இன்று திருவையாற்றில் காவிரிக் கரையில் மெல்லிய பனிப் பொழிவிடையே இசை வெள்ளம் பெருக்கெடுத்தோடுவது, இவருடைய சிறந்த தொண்டினால் என்பதை அறியும்போது சாதனைதான் பெரிதாக இருக்குமே தவிர, சாதனையாளரைப் பற்றிய சொந்த விமர்சனங்கள் நிற்பதில்லை. போராட்டங்களை சந்தித்த அந்தப் பெண்மணியின் மன உறுதியும், அர்ப்பணிப்புணர்வும் அனைவரும் போற்றவேண்டிய குணங்கள். வாழ்க நாகரத்தினம்மாள் புகழ்!!

    _______________________________________________________________________________

    எனையின்றி பொன் பொருளீந்தவள்
    எனையின்றி என்குலத்தில் எவளுண்டு
    நலமிகு காவியத்தை நாவலர்கள் எனையன்றி
    எம் குலத்தார் எவர்க்கேனும் படைத்ததுண்டோ
    கலையெலாம் பயின் றோங்கி நின்றாள்
    எனையன்றி எம் குலத்தில் எவளுளாள்
    முத்துபழனியே உனக்கிணையாய்
    எவரேயுளார் உன் குலத்தில்

    தெலுங்கு மூலத்தில் இருந்து…ஆங்கிலம். பி.வி.எல் நாராயணராவ் | தமிழ்: ப. சிவனடி
    (http://puthagampesuthu.com/2014/04/16/தடை-செய்யப்படும்-புத்தகங/)
    _______________________________________________________________________________

    தேனே,
    நான் காளியை நசுக்கினேன்;
    ஏன் என்று நினைக்கிறாய்?
    அந்தப் பாம்பு
    உன் அழகான ஜடைப்பின்னுலுக்குப்
    போட்டி என்பதால்…
    நான் கம்சனின் வில்லை உடைத்தேன்
    எதற்கு என்று நினைக்கிறாய்?
    அது உன் வடிவான புருவத்திற்குப்
    போட்டி என்பதால்…
    நான் கோவர்தனமலையை
    வேரோடு பிடிங்கினேன்;

    ஏன் என்று நினைக்கிறாய்?
    அந்த மலை
    உன் திடமான முலைகளுக்குப்
    போட்டி என்பதால்…
    நான் குவளயபீடாவை வருத்தினேன்;
    எதற்கு என்று நினைக்கிறாய்?
    அந்த யானை
    உன் அழகான பின்னிடை அசைவிற்குப்
    போட்டி என்பதால்..
    தேனே,
    தயவுசெய்வு நீயே யோசித்துப்பார்..
    அவைகள் உன்னைப் போலவே
    அழகாய் இருந்தால்
    என்னை வருத்துமா இல்லையா…

    தெலுங்கு மூலத்தில் இருந்து…ஆங்கிலம். பி.வி.எல் நாராயணராவ் | தமிழ்: ஆ. ஈஸ்வரன்
    (http://meyveendu.blogspot.com/2014/03/blog-post_685.html)
    _______________________________________________________________________________

    விக்கிபீடியாவிலிருந்து:
    பார்க்க … https://en.wikipedia.org/wiki/R%C4%81dhik%C4%81-s%C4%81ntvanam

    “If I ask her not to kiss me,
    stroking on my cheeks
    she presses my lips hard against hers.
    If I ask her not to touch me,
    stabbing me with her firm breasts
    she hugs me.
    If I ask her not to get too close
    for it is not decorous,
    she swears at me loudly.
    If I tell her of my vow not
    to have a woman in my bed,
    she hops on
    and begins the game of love.
    Appreciative,
    she lets me drink from her lips,
    fondles me, talks on,
    making love again and again.
    How could I stay away
    from her company?”

    B. V. L. Narayanarow (trans.), ‘From RADHIKA SANTWANAM (Appeasing Radhika)
    [If I ask her not to kiss me]’, in Women Writing in India: 600 B. C. to the Present, ed.
    by Susie Tharu and K. Lalita, 2 vols (London: Pandora, 1991), I 120.

    _______________________________________________________________________________

    பார்க்க … https://en.wikipedia.org/wiki/Muddupalani

    “Which other woman of my kind has
    felicitated scholars with such gifts and money?
    To which other women of my kind have
    epics been dedicated?
    Which other woman of my kind has
    won such acclaim in each of the arts?
    You are incomparable,
    Muddupalani, among your kind.
    […]
    A face that glows like the full moon,
    skills of conversation, matching the countenance.
    Eyes filled with compassion,
    matching the speech.
    A great spirit of generosity,
    matching the glance.
    These are the ornaments
    that adorn Palani,
    when she is praised by kings.”

    B. V. L. Narayanarow (trans.), ‘From RADHIKA SANTWANAM (Appeasing Radhika)
    in Women Writing in India: 600 B. C. to the Present, ed.
    by Susie Tharu and K. Lalita, 2 vols (London: Pandora, 1991), I 120.
    _______________________________________________________________________________

    Share
  • அசுவத்தாமன் எனும் அரக்கன்

    தஞ்சை வெ. கோபாலன்.

    மகாபாரத யுத்தம் முடிவுறும் சமயம். யுத்த களத்தில் துரியோதனன் பீமனால் அடித்துத் துவம்சம் செய்யப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த நேரம். அணுஅணுவாக அவன் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. தான் வாழ்ந்த கோலாகலத்தை மனத்தில் எண்ணி அசைபோடலாயினான். வாழ்நாள் முழுவதும் கேட்பார் எவருமின்றி தான்தோன்றியாகத் திரிந்து மனத்தில் நினைத்ததைப் பேசி, விரும்பியதைச் செய்து, நல்லது எது, தீயது எது என்பதைப் புரிந்து கொள்ள மனமின்றி ஆணவத்தின் அடிச்சுவட்டில் நடந்து வந்த பாதையைச் சற்றுத் திரும்பிப் பார்க்கலானான். தட்டிக் கேட்க வேண்டிய தந்தை, சக்கரவர்த்தி, அனைவருக்கும் பொதுவானவன், நீதியை நிலைநாட்ட வேண்டியன் என்கிற கடமையுணர்வுகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டுத் தன் புத்திர பாசத்தால் மகன் சொற்படி ஆடியதன் விளைவாக கொடியவனானவன் துரியோதனன். ஆகவே மகன் செய்த கொடுமைகளுக்கெல்லாம் முழுமுதற் காரணம் கடமை தவறிய சக்கரவர்த்தி திருதராஷ்டிரனே.

    வாழ்ந்த காலம் முழுவதும் எதிர்ப்பட்ட அனைவரும் அவனுக்கு அடங்கி, வாய்பொத்தி ஏவியதைச் செய்து இவனை மமதையின் உச்சத்தில் உயர்த்திவிட்டனர். ராஜாதி ராஜர்களும் வீராதி வீரர்களும் அவனுடைய ஏவலுக்குக் கைகட்டிக் காத்திருந்தனர். திரும்பிய பக்கமெல்லாம் ஏவலாளர்கள் அவன் கண்ஜாடைக்குக் காத்திருந்து பணிவிடைகளைப் புரிந்து வந்தனர். அப்படி அவன் வாழ்ந்த வாழ்க்கை எங்கே? இன்று குருதியும் ரணமுமாக சாவை எதிர்நோக்கி மண்தரையில் வீழ்ந்து கிடக்கும் கோலம்தான் என்ன?

    தூங்கிக் கண் விழித்துப் பார்த்ததும் கோப்பையில் சோமபானமும் சுறாபானமும் கையில் கொண்டு அழகு மங்கையர் அவனை உபசரித்த நாட்கள்தான் எங்கே? அவனது கால்கள் தரையில் பட்டால் புண்ணாகுமே என்று அவனைப் பட்டு பீதாம்பரங்கள் கொண்டு அலங்கரித்து கால் தரையில் படாவண்ணம் பல்லக்கில் சுமந்த ஏவலர்கள் எங்கே? தனது ஆணவத்துக்கும், அகம்பாவத்துக்கும் எதிரானவர்கள் என்று சந்தேகித்த அனைவருமே, குறிப்பாக பாண்டவர்கள் அழிந்து போகவேண்டுமென்று எண்ணி துரோகச் செயல்கள் என்னவெல்லாம் முடியுமோ அவற்றையெல்லாம் செய்துவந்த அவன் மனம், இப்போது தன்னுடைய நிலைமையை எண்ணி பேதலித்தது. தாயாதியர்களை முறை தவறி கொல்ல எண்ணியவனின் உடல் இன்று மரணத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. உடலின் வேதனை பெரிதா, பட்ட துன்பங்கள் பெரிதா என்று சொல்லவொண்ணா பரிதாப நிலைமை அவனுக்கு.

    மரண தேவனின் அரவணைப்பை எந்த நொடியிலும் வரலாம் என்ற எதிர்பார்ப்பில் துடித்துக் கொண்டிருந்த வேதனை நிறைந்த அவன் கண்கள் முன்பாக மூவர் வந்து நின்றனர். அவர்கள் குரு துரோணரின் புத்திரன் அசுவத்தாமன், குரு கிருபாச்சாரியார், துரியோதனனின் படையைச் சேர்ந்த வீரன் கிருதவர்மன் ஆகியோர். போர்க்களத்தில் பீமனின் கதையால் அடித்துத் தொடை எலும்புகள் நொறுங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான் இளவரசன் துரியோதனன் என்ற செய்திகேட்டு ஓடோடி வந்திருந்தனர் அம்மூவரும், போர்க்களத்தின் வெவ்வேறு மூலைகளிலிருந்து. பாராளும் வேந்தன் இன்று பராரியாய், ஆதரவற்றவனாய், குருதிப் புனலில் நீந்திக் கொண்டு அனாதையாய்க் கிடக்கும் கோரக் காட்சியைப் பார்த்தனர்.

    நண்பன் அசுவத்தாமனைக் கண்டதும் துரியோதனன் சுயபச்சாதாபத்தோடு பேசினான். விதி சதிசெய்து தனக்கு இப்படிப்பட்ட நிலைமையை உருவாக்கிவிட்டதாக வருந்தினான். அப்பொதும் அவன் செய்த பாவங்கள், துரோகங்கள், ஈடு இரக்கமற்ற கொடுஞ்செயல்கள் அவனை பழிவாங்கிவிட்டதாக அவன் எண்ணவில்லை. இரக்கமற்ற அரக்க குணம் படைத்த எவருமே தாங்கள் தவறு செய்ததன் தண்டனை இது என்று எண்ணுவது கிடையாது. பிறர் தங்களுக்கு தீங்கிழைத்து விட்டார்கள் என்ற மூடத்தனமான எண்ணங்கள்தான் எப்போதும் அவர்கள் மனதில் இருக்கும்.

    நண்பன் கிடந்த கோலம், அவன் படுகின்ற அவஸ்தை இவற்றையெல்லாம் பார்த்ததும் அசுவத்தாமனுக்கு கோபாவேசம் மூண்டது. எரிமலையென பொங்கி எழுந்தான். நண்பனின் நிலைமையை விட தன் தந்தையைப் பொய் சொல்லி ஏமாற்றி கொன்றுவிட்டதால் அவன் உள்ளமும் உடலும் துடித்தன. ஆம்! ‘அஸ்வத்தாம ஹத: குஞ்சரக:” என்று அஸ்வத்தாமன் என்கிற குதிரை இறந்தது என்று கண்ணபிரான் சொல்லச் சொன்னபடி, ‘குஞ்சர:’ எனும் சொல்லை மெல்ல காதில் விழாதபடி சொன்னதும் துரோணர் தன் மகன் தான் கொல்லப்பட்டான் என்று எண்ணி, ஆயுதங்களைக் கீழே போட்டார், அப்போது அம்பு எய்தி கொல்லப்பட்டார். போர்க்களத்தில் போர் தர்மங்களுக்கு எதிராக நடந்த பல நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. பொய்யே பேசாத தர்மன் கூட பொய்யாய் ஒலிக்கும் இந்த சொற்றொடரை சொன்னதற்குக் கலி காலம் தொடங்குவதே காரணமாயிற்று.

    எதற்கும் அஞ்சாத குரு துரோணரைத் தான் இறந்து விட்டதாக பொய் சொல்லி கொன்று விட்டனரே இந்தப் பாண்டவர்கள் என்று அவன் நெஞ்சு கொதித்தது. அடி வயிற்றிலிருந்து பொங்கி எழுந்த கோபாவேசத்தில் அவன் ஒரு சபதம் செய்தான். “இல்லாத ஒன்றை பொய்யாகச் சொல்லி என் தந்தையின் மனதைத் துன்பத்திற்குள்ளாக்கிவிட்டு அவரைக் கொன்று சாய்த்து விட்டனர் கோழைகள். போர் தர்மங்களுக்கு மாறாக இடுப்புக்குக் கீழே தொடையில் அடித்து வீழ்த்தி உயிருக்குப் போராடும் நிலையில் என் நண்பனை வைத்துவிட்டனர். நண்பா! துரியோதனா! அஸ்தினாபுரத்தின் அரசே! நான் இப்போது ஒரு சபதம் மேற்கொள்கிறேன். இன்றே, இன்றிரவே அந்த வஞ்சகர்கள் பாண்டவர்கள் அனைவரையும் நான் கொல்வேன். அவர்களது படைவீரர்கள் உட்பட அனைவரும் பிணமாகும் வரை நான் ஓயமாட்டேன். இது சத்தியம்!” என்றான் அசுவத்தாமன்.

    மரணத்தின் பிடியில் மயங்கிக் கிடக்கும் துரியோதனனுக்கு நண்பன் செய்த சபதம் மனதில் சற்று ஆறுதலைக் கொடுத்தது. தான் இறப்பதைவிட தன் எதிரிகள் கொல்லப்படப் போகிறார்கள் என்பதில் அவனுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி. நண்பன் அசுவத்தாமனைத் தன் அருகில் வரும்படி சைகை செய்தான். அருகில் வந்த நண்பன் மீது நீர் தெளித்து, அவன் தலையில் கைவைத்து “இப்போது முதல் நீயே கவுரவர்கள் படைக்குத் தளபதி, பாண்டவர்களை அழித்து வெற்றியை ஈட்டுவது உன் பொறுப்பு, உனக்கு வெற்றி கிட்டட்டும்” என்றான் துரியன்.

    அந்த விசாலமான போர்க்களத்தில், எங்கும் பிணக்குவியல் விழுந்து கிடக்க, பேயும், பிசாசும் உலவுகின்ற அந்த கோர பூமியில் தனித்து ரத்தம் ஒழுக வீழ்ந்து கிடக்கும் துரியோதனனுக்கு அப்போதும் ஒரு சிறு நப்பாசை. பாண்டவர்களை தன் நண்பன் அசுவத்தாமன் வீழ்த்திவிட மாட்டானா என்று. பாண்டவர்கள் அழித்தது போக மீதம் படை என்று சொல்லிக் கொள்ள போர்க்களத்தில் எவரும் மிச்சம் இருக்கவில்லை. தனியனாய், ஒற்றை ஆளாய், வல்லமையும் நேர்மையும் நீதியும் ஆயுதங்களாகக் கொண்டு போராடும் பாண்டவர்களை எதிர்க்கத் தயாரானான் அசுவத்தாமன்.

    கோழைகள் எப்போதும் மறைந்திருந்தே தாக்குவார்கள். படை இழந்து வஞ்சனையும், பழிவாங்கும் உணர்வும் மட்டும் மேலோங்க காத்திருந்த அசுவத்தாமன் அருகிலுருந்த ஒரு அடவியினுள் புகுந்து மறைந்திருந்தான். அங்கிருந்து பாண்டவர்கள் பாசறை அருகில் இருந்தது. இருள் சூழ்ந்த நேரம். ஆளரவமற்ற சூழ்நிலை. பாண்டவர் முகாம்களில் கூடாரங்களில் பாண்டவர்களும், சேனை வீரர்களும் அயர்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். அப்போது ஓசையின்று கூடாரங்களுக்குள் சென்று அசுவத்தாமன் அங்கு படுத்து உறங்கியவர்கள் அனைவரையும் வெட்டிச் சாய்த்தான்.

    திருடச் சென்றவனிடம் பெரும் செல்வம் சிக்கியதைப் போல பாண்டவ சேனாபதியான திருஷ்டத்யும்னன் சிக்கினான். துருபதன் மகனும், பாஞ்சாலியின் சகோதரனுமான அந்த மாவீரனை சித்திரவைக்குள்ளாக்கித் துன்பம் தந்து கொன்றொழித்தான் அசுவத்தாமன். தன் தந்தை துரோணரைக் கொன்றவனல்லவா இவன்? என்ற ஆத்திரம் அவனுக்கு.

    அடுத்தடுத்த கூடாரங்களில் பாண்டவர்களின் வாரிசுகளாக வந்துப் பிறந்திருந்த உபபாண்டவர்கள் எனும் சிறுவர்களை ஒருவர் விடாமல் வெட்டிக் கொன்றான். இப்படி அடாத செயலைச் செய்து முடித்துவிட்டு அசுவத்தாமனும் அவனுடன் வந்த ஓரிரு வீரர்களும் ரத்தக் கறை படிந்த ஆயுதங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த துரியோதனன் முன்பு வந்து நின்றனர். என்ன ஆயிற்று என்று துரியதன் கண் ஜாடையால் அவனை வினவினான்.

    அசுவத்தாமன் வெற்றிக் களிப்போடு சொல்லலானான். வேறு எங்கோ உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்கள் ஐவர், கிருஷ்ணன், சாத்யகி ஆகியோர் நீங்கலாக மற்ற அனைவரையும் உறக்கத்திலேயே வெட்டிக் கொன்றுவிட்டதாகப் பெருமையோடு முழங்கினான். பாண்டவர்களையும், கிருஷ்ணன், சாத்யகி ஆகியோரை ஏன் விட்டு விட்டாய் என்றான் துரியன். அவர்கள் இருக்குமிடம் தெரியாமல் வேறு எங்கோ ஓடிப்போய் தப்பி விட்டனர் என்றான் அசுவத்தாமன்.

    இவற்றையெல்லாம் கேட்ட துரியோதனன் துன்பங்களுக்கிடையிலும் மனதில் மகிழ்ச்சியை எய்தினான். நண்பா! நீ வீராதி வீரனடா! எப்படிப்பட்ட காரியத்தை மிக எளிதாகச் செய்துவிட்டு வந்திருக்கிறாய். உன்னை ஆரத் தழுவி, மனதார பாராட்டிப் பரிசுகளைக் கொடுக்கும் நிலையில் நான் இப்போது இல்லையே என்று தவித்தான் துரியோதனன். என்றாலும் பரம எதிரிகளான பாண்டவர்களுடைய சேனையையும், அவர்களுடைய தளபதியாக இருந்த திருஷ்டத்யும்னனையும் வதம் செய்துவிட்டான் நண்பன் என்கிற மகிழ்ச்சியோடு கண்களை மூடினான், உயிரையும் நீத்தான்.

    பாண்டவர்கள் ரகசியமாக தங்கியிருந்த இடத்துக்கு பாஞ்சால நாட்டு இளவரசனும், பாண்டவர்களின் சேனைத் தலைவனுமான திருஷ்டத்யும்னனும், திரெளபதியின் இளம் புத்திரர்கள் ஐவரும், பாண்டவ சேனா வீரர்கள் அனைவரும் அசுவத்தாமனால் கொலையுண்டனர் எனும் செய்தி வந்து சேர்ந்தது. இந்த சோக நிகழ்வைக் கேட்டு யுதிஷ்டிரன் ஆற்றொணா துயரில் ஆழ்ந்தான். பாண்டவரில் ஏனையோரும் அதிர்ச்சியுற்றனர். உபபாண்டவர்களும் சேனா வீரர்களும் படுகொலையான இடத்துக்கு திரெளபதி அழைத்து வரப்பட்டாள். தன் அன்புப் புதல்வர்கள் கொலையுண்டு மடிந்து கிடப்பதைப் பார்த்து மயங்கி வீழ்ந்தாள் திரெளபதி. உலகில் வேறு யாருக்கும் வந்திராத சோகமயமான நிகழ்ச்சி, தன் உடன்பிறந்த சகோதரனும், வீராதிவீரனுமான திருஷ்டத்யும்னனும், தன்னுடைய ஐந்து புதல்வர்களும் கொல்லப்பட்டனர் எனும் கொடிய செய்தி அவள் செவிகளில் விழுந்ததும் இடிவீழ்ந்தது போல அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

    மயங்கி வீழ்ந்தாள்; பின்னர் எழுந்தாள்; நடந்தது இதுவென உணர்ந்தாள். அதிர்ச்சியும் கோபமுமாக அழுத குரலில் உரக்க ஒரு சபதத்தை ஏற்றாள். “பாவி, அசுவத்தாமன் என் குலம் விளங்க வந்த இளம் பிஞ்சுகளைக் கொன்றுவிட்டான். அவனை பழிதீர்க்க நம்மில் எவருமே இல்லையா? அவனை இன்றே கொன்று வீழ்த்த வேண்டும், இல்லையேல், அவன் நெற்றியில் மிளிரும் மணியைப் பிடுங்கி அவனை உயிர்ப் பிணமாக ஆக்கி, அவமானத்துக்கு உட்படுத்த வேண்டும். இவ்விரண்டில் ஏதேனுமொன்றை செய்து முடிக்கும் வரை பச்சைத் தண்ணீர்கூட அருந்த மாட்டேன்; பட்டினி கிடப்பேன்” என்றாள் திரெளபதி.

    Ashwatthamaஇதனைக் கேட்ட பீமன் அசுவத்தாமனைத் தேடிப்பிடிக்க விரைந்து சென்றான். ஆனால் அந்த மாயாவியை, கொடுமனம் படைத்த கடைமகனைப் பிடிப்பது அத்தனை எளிதன்று என்பதை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும், அர்ஜுனனும் அறிந்தே இருந்தனர். தன்னை பாண்டவர்கள் சும்மா விடமாட்டார்கள் என்பதை யுணர்ந்திருன்த அசுவத்தாமன் பதுங்கிக் கொள்ள இடம் தேடி ஓடினான். கங்கை நதிக் கரையோரம் இடம் தேடி ஓடியவனுக்குத் தவத்தில் ஆழ்ந்திருந்த வியாசபகவான் தென்பட்டார். அந்த தவயோகியின் பின்னால் ஒளிந்து கொண்டால் தன்னை பாண்டவர்களால் கண்டுபிடிக்க முடியாது என்றுணர்ந்து அங்கே போய் ஒளிந்து கொண்டான்.

    அப்போது ஓடி ஒளிந்த தன்னைத் தேடி பீமன், அர்ஜுனன், கண்ணன் ஆகியோர் வருவதைக் கண்டான்; அச்சத்தில் உறைந்தான். தான் உயிர் பிழைக்க ஒரே வழி தனக்குத் தெரிந்த பிரம்மாஸ்திரத்தை ஏவி இம்மூவரையும் அழிப்பது ஒன்றே என்பதுணர்ந்தான். அருகில் இருந்த ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து அதில் மிகவும் ஆபத்தான பிரம்மாஸ்திரத்தை மந்திரம் சொல்லி ஆவாகனம் செய்து, அதனை பாண்டவர் மீது ஏவிவிட்டான். அவன் ஏவிய அந்த பிரம்மாஸ்திரம், பாண்டவர் வம்சத்தை ஒருவர் விடாமல் நாசம் செய்துவிடும் ஆற்றல் பெற்றது. எவராலும், அல்லது எதனாலும் தடுக்க முடியாத ஆயுதம் அந்த பிரம்மாஸ்திரம்.

    கொடியவன் அசுவத்தாமனின் கேடுகெட்ட எண்ணத்தை ஸ்ரீகிருஷ்ணன் உணர்ந்து கொண்டான். பிரம்மாஸ்திரத்தை எதிர்கொள்ள இன்னுமொரு பிரம்மாஸ்திரத்தை ஏவிவிடுவது ஒன்றே வழி என்று அர்ஜுனனை நோக்கி அவனிடமுள்ள பிரம்மாஸ்திரத்தை எடுத்து அவன் மீது ஏவ கண்ணன் ஆலோசனை சொன்னான். இந்த ஆபத்தான தருணத்தில் நாரத முனிவரும், வியாச பகவானும் அவர்கள் முன் தோன்றி உலகையே அழிக்கும் நாசகாரி ஆயுதங்களான இந்த பிரம்மாஸ்திரப் பிரயோகத்தை நிறுத்திவிடும்படி கேட்டுக் கொண்டனர். உலகைப் பற்றியோ, உயிர்களைப் பற்றியோ எந்தவித அக்கறையுமில்லாமல், சொந்த கோப தாப உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு உலகை அழிக்கும் பிரம்மாஸ்திரப் பிரயோகத்தை நிறுத்திவிடும்படி அவர்கள் உத்தரவிட்டனர்.

    நியாய தர்மங்களை உணர்ந்த அர்ஜுனன் உடனே தான் ஏவிய பிரம்மாஸ்திரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். ஆனால் அதனை ஏவமட்டுமே தெரிந்த அசுவத்தாமனுக்கு அதைத் திரும்பப் பெறும் வழிமுறைகள் தெரியாத காரணத்தால், தான் ஏவிய அந்த அஸ்திரம் செய்யப்போகும் பேரழிவுகளை எண்ணி அஞ்சினான். பாண்டவர்களின் வாரிசுகள் அனைவரையும் கொன்று, கர்ப்பத்தில் இருந்த சிசுக்களைக் கூட விட்டு வைக்காமல் அழித்த கொடியவன் அசுவத்தாமனின் சூழ்ச்சியை உடைத்து ஸ்ரீகிருஷ்ணன் உத்தரையின் கர்ப்பத்தில் வளர்ந்து வந்த அபிமன்யுவின் மகன் மட்டும் அழியாமல் காப்பாற்றினான்.

    நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த முனிவர்கள் ஒன்றுகூடி அந்த கேடுகெட்ட அசுவத்தாமனை சினந்து கொண்டனர். கிருஷ்ணன் ஆவேசமடைந்து அவன் நெற்றியில் ஒளிர்ந்த அந்த மணியைப் பிடுங்கிக் கொண்டார். அசுவத்தாமனைப் பொறுத்தவரையில் அவன் உயிரை எடுப்பதும், நெற்றி மணியைப் பறிப்பதும் ஒன்றே என்பது தெரியும். வெற்றிக் களிப்பில் செய்யத் தகாத காரியங்களைச் செய்து வெறித் தனமாக நடந்து கொண்டு அசுவத்தாமன் இப்போது வெறுமையடைந்தான். தனித்து நின்றான். பராரியாய் உலகைச் சுற்றிவந்து வருந்தவேண்டிய சூழ்நிலையை அடைந்தான். அப்போது ஸ்ரீகிருஷ்ணர் சினந்து அவனை சபித்தார். துன்பங்களை மட்டுமே கண்டும், கேட்டும், அனுபவித்தும் உலகம் முழுவதும் பேய்போல அலைந்து திரியும் அவலநிலையை அவன் அடையவேண்டுமென்பது அவரது சாபம். ஆம்! இறப்பு என்பது இல்லாமல் உலகைச் சுற்றிக்கொண்டு அழிவையும் துன்பத்தையும் துயரத்தையுமே காணும் கேவலமான வாழ்க்கையை அடைந்தான். பிறரைத் துன்பத்தில் ஆழ்த்தும் படுபாதகங்களைச் செய்து மகிழ்ச்சியடைய நினைக்கும் மாந்தர்க்கெல்லாம் அசுவத்தாமன் வரலாறு ஒரு பாடமாக அமையும் என்பது திண்ணம்.

    Share
  • பாரதியாரின் இறுதிக் காலம்

    தஞ்சை வெ.கோபாலன்.

    Subramanya_Bharathi

    (மகாகவி பாரதியாரின் இளைய மகள் சகுந்தலா “பாரதி — என் தந்தை” எனும் நூலில் தரும் தகவல்களிலிருந்து திரட்டப்பட்டது.)

    பாரதியார் புதுச்சேரியிலிருந்து வெளியேறி கைதாகி கடலூர் சிறையில் சில நாட்கள் இருந்த பிறகு விடுதலையாகித் தன் மனைவியின் ஊரான கடையத்தில் போய் இருந்து வந்த நேரம். அவ்வூர் வாசம் பாரதிக்கு எந்தவிதத்திலும் ஒத்துப் போகவில்லை. அங்கு அவருக்கு இருந்த ஒரே நண்பரான நாராயண பிள்ளை என்பவரோடு அவருக்கு ஒரு மனவருத்தம் ஏற்பட்டுவிட்டது. அதன் பிறகு அந்த ஊரில் இருக்க அவருக்குப் பிடிக்கவில்லை. அப்போது பாரதியாரின் மைத்துனர் அப்பாத்துரை பாரதி இனி சென்னையில் வசிப்பதே நல்லது என்று அவரை சென்னை அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்.

    சிறையிலிருந்து விடுதலையாகும்போது இவருக்கு அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஒருக்கால் இவர் கடையத்தைவிட்டு வெளியேறி சென்னைக்குச் செல்வதை அரசு தடுத்தால் என்ன செய்வது? ஆனால் கடையத்தில் இருந்த காலத்தில் இவர் ஊரைவிட்டு வெளியேறி மதுரை, காரைக்குடி, கானாடுகாத்தான் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று சில நாட்கள் தங்கி வந்திருக்கிறார். அதையெல்லாம் அரசாங்கம் தடைசெய்யவில்லை என்பதால், இப்போது சென்னைக்குச் செல்வதையும் அவர்கள் தடை செய்ய மாட்டார்கள் என்று நினைத்தார்கள். முதல் உலக யுத்தம் முடிந்த பின்னர் புதுச்சேரியில் வந்து தங்கியிருந்த சுதேசிகளையும் வெளியேற அனுமதித்து விட்டார்கள். ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த மகான் அரவிந்தரின் சகோதரரும், வீர சாவர்க்கரும்கூட தீவாந்தர தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்கள். இந்தச் சூழ்நிலையில் தானும் சென்னைக்குப் போவதில் எந்தத் தடையும் இருக்காது என்றுணர்ந்து பாரதியாரும் சென்னைக்குப் புறப்பட்டு விட்டார்.

    சென்னை செல்வதற்கு பாரதி புறப்பட்டபோது அவருடன் செல்லம்மாவும் மகள் சகுந்தலாவும் புறப்பட்டார்கள். கையில் பணம் இல்லாததால் ரயிலில் இவர்களுக்கு மூன்றாம் வகுப்புப் பயணத்துக்கான டிக்கெட்டுகள் வாங்கப்பட்டுவிட்டன. ரயில் பெட்டியில் கூட்டம் அதிகமாயிருந்தபடியால் ஒருவரோடொருவர் இடித்து மோதிக்கொண்டு, மரியாதையின்றி வசை பாடிக்கொண்டு வரும் கூட்டத்துக்கிடையில் தான் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வது பாரதிக்கு அறவே பிடிக்கவில்லை.

    “அடடா! கையில் பணமில்லை என்பதால் உயர்ந்த மெத்தை தைத்த ரயில் பெட்டியில் பயணம் செய்ய முடியவில்லை. சரி! அதற்காக ஆடுமாடுகளைப் போல ஒரே வண்டியில் கூட்டமாக ஏறிக்கொண்டு, நிற்கக்கூட இடமின்றி ஒருவரையொருவர் வசைபாடிக்கொண்டு சண்டையிட வேண்டுமா? அமைதியாக ஒருவருக்கொருவர் இடம்விட்டு விலகியிருந்து, உதவி செய்து பயணம் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அட! புதுத்துணி, பட்டுடைகள் வாங்கத்தான் பணம் இல்லை, இருக்கிற துணியையாவது அழுக்கு இல்லாமல், நாற்றமடிக்காமல் தோய்த்து உடுத்தக் கூடாதா? என்ன இழிவு நிலை நம் பாரத தேசத்துக்கு!” என்று மனம் வருந்திக்கொண்டிருந்தார் பாரதியார். அந்தச் சூழ்நிலை அவருக்குத் தலைவலியை உண்டாக்கிவிட்டது.

    ரயில் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போது வெயிலும் கொளுத்திக் கொண்டிருந்தது. இவர்கள் பயணம் செய்த ரயில் வண்டி ஒரு நிலையம் தவறாமல் எங்கும் நின்று நின்று சென்றுகொண்டிருந்தது. அலுப்பு தரும் இந்தப் பயணம் சென்னை வரை எப்படி இருக்கும். செல்லம்மாள் மதுரை வந்ததும் விரைவாகச் செல்லும் ரயிலுக்கு மாறிவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டாள். இவர்கள் ரயில் மதுரை நிலையத்துக்குள் நுழையும் அதே நேரத்தில் சென்னைக்குச் செல்லும் விரைவு ரயில் நிலையத்தைவிட்டுப் புறப்பட்டுவிட்டது. பெட்டி படுக்கைகளுடன் அதைப் பிடிக்க ஓடியும் பிடிக்க முடியாததால் பாரதியார் குடும்பம் மீண்டும் தங்கள் சுமைகளுடன் பழைய வண்டிக்கே வந்து சேர்ந்தது.

    அவசரத்தில் ரயில் பெட்டிக்குள் ஏறும்போது எங்கோ அடிபட்டு செல்லம்மாள் காலிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கியது. பயணக் களைப்பு, சூழ்நிலையின் வெறுப்பு, இவை பாரதிக்குக் கோபத்தை உண்டாக்கியது. கோபம் வந்து என்ன செய்வது? அல்லது யாரை நோவது? உடன் பயணம் செய்தவர்கள் இவர்கள் படும் துன்பங்களையும், பாரதியாரின் கவுரவமான பேச்சு, உடல் நிலை இவற்றைக் கவனித்து இவர்களுக்கு உட்கார இடம் கொடுத்தனர். இரவும் வந்துவிட்டது. பாரதி சற்று கண் அயர்ந்தார், செல்லம்மா மட்டும் உடைமைகளை கவனித்துக் கொண்டு விழித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது மதுரையிலிருந்து சென்னை செல்ல ‘மெயின் லைன்’ எனப்படும் தஞ்சாவூர், கும்பகோணம், மாயூரம் வழியாகத்தான் போக வேண்டும். அரியலூர் விருத்தாசலம் வழியான குறுக்குவழி அப்போது போடப்படவில்லை. அவர்கள் ரயில் பயணத்தில் வண்டி தஞ்சாவூருக்கு முன்னதாக ஒரு நிலையத்தில் நின்ற சமயம் அங்கு ஏழெட்டுப் பெண்களும், இரண்டு ஆண்களும் ஏராளமான சாமான்களுடன் பெட்டியில் ஏறினார்கள். அவர்களுள் ஒருவர் ஒரு பெஞ்சில் படுத்திருந்த பாரதியாரிடம் வந்து தன் கைத்தடியால் அவர் காலில் தட்டி “ஏய்! எழுந்திரு; உட்கார இடமில்லை, அதிலே படுக்கை என்ன?” என்று அதட்டினார்.

    பாரதியார் அவரைக் கண்விழித்துப் பார்த்தார். அவர் பேசிய தோரணை, தட்டி எழுப்பிய அலட்சியம், குரலில் இருந்த அதிகாரம் இவை பாரதியாருக்குக் கோபத்தை உண்டாக்கிவிட்டது. அவர் எழுந்து “தூ”வென்று அவர் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டுத் திரும்பப் படுத்துக் கொண்டுவிட்டார். அந்த மனிதருக்கு அதிர்ச்சி, அதிர்ந்து போய் நின்றுவிட்டார். சிறிது அதிர்ந்து போய் நின்றுவிட்டுக் கூச்சல் போட்டு பெருங்குரலெடுத்துத் திட்டத் தொடங்கிவிட்டார். அவரோடு உடன் வந்த பெண்களும் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியாதபடிக்கு ஏதோ பெரும் கலவரம் செய்யத் தொடங்கி விட்டார்கள். இத்தனைக்கும் பாரதியார் எந்த எதிர்ப்புமின்றி அவர் பாட்டுக்குப் படுத்துக் கொண்டிருந்தார். உடன் பயணித்த மற்ற பயணிகளுக்கு இவர் மீது மரியாதையும் அன்பும் ஏற்பட்டிருந்தது. ஆகவே மற்றவர் எவரும் புதிதாக வந்தவர்கள் செய்த அமளியில் பங்கேற்கவில்லை. அந்த நிலையில் அடுத்த ரயில் நிலையம் வந்துவிட்டது. பாரதியாரை அவமதித்த அந்த மனிதன் கீழே இறங்கிப் போய் ஒரு போலீஸ்காரரை அழைத்துக் கொண்டு வந்து பாரதியாரைக் காட்டி அவரைக் கைது செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அப்போது அந்த ரயிலின் ‘கார்டு’ (Guard) அங்கு வந்து சேர்ந்தார். அவர் பாரதியாரைப் பார்த்துவிட்டு அங்கு வந்த போலீஸ்காரரிடம் ஏதோ மெல்லச் சொன்னார், உடனே அவர்கள் அனைவரும் அங்கிருந்து போய்விட்டனர் (அந்த ரயில் அதிகாரி பாரதியாரை அடையாளம் கண்டுகொண்டு, அவர் மிகப் பிரபலமானவர், கவிஞர் அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி எல்லோரையும் கலைந்து போகச் சொல்லிவிட்டார்). போலீஸ்காரர் பாரதியாரை அழைத்துக்கொண்டு போய்விடுவார்களோ என்று பயந்து போயிருந்த செல்லம்மாளுக்கும், சகுந்தலாவுக்கும் மனதில் நிம்மதி பிறந்தது. இவர்கள் பயணம் மட்டும் தடைப்படாது இரவு முழுவதும் தொடர்ந்து நடந்தது.

    மறுநாள் விடியற்காலை ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வந்து நின்றது. அப்போது சென்னை சைதாப் பேட்டையில் ஆசிரியர் பயிற்சியில் இருந்த பாரதியாரின் தம்பி விஸ்வநாத ஐயர் வந்து இவர்களை சைதாப் பேட்டையில் இறங்கும்படியும், தன்னுடன் வந்துவிடும்படியும், வற்புறுத்தினார். தம்பியின் வற்புறுத்தலுக்கிணங்க இவர்கள் எழும்பூர் வரை டிக்கெட் வாங்கியிருந்தும் சைதாப் பேட்டையில் இறங்கிவிட்டனர்.

    சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விஸ்வநாத ஐயர் அப்போது படித்துக் கொண்டிருந்தார். அவருடன் அவரது தாய்மாமனும், அவர் தாயார் வள்ளியம்மாளும் வசித்து வந்தனர். பாரதியாரின் தந்தை சின்னச்சாமி ஐயருக்கு இந்த வள்ளியம்மாள் இளைய மனைவி. தன்னுடைய மூத்தாள் மகன் என்று வித்தியாசம் பார்க்காமல் இந்த வள்ளியம்மாள் பாரதியாரிடமும், அவர் மனைவி செல்லம்மா, மகள் சகுந்தலா ஆகியோரிடம் அன்போடு நடந்து கொண்டார். அந்த வள்ளியம்மாள் வேண்டிக்கொண்டதால் பாரதியார் தான் சமஸ்கிருத மொழியில் எழுதியிருந்த “தேஹிமுதம் தேஹி ஸ்ரீராதே ராதே” எனும் பாடலைப் பாடிக் காண்பித்தார். வள்ளியம்மாளுக்கு அளவற்ற மகிழ்ச்சி.

    இவர்கள் சில நாட்கள் சைதாப் பேட்டையில் தங்கியிருந்தார்கள். அப்போது பாரதியார் “சுதேசமித்திரன்” அலுவலகத்துக்குப் போய் ஆசிரியர் ஏ.ரங்கசாமி ஐயங்காரைச் சந்தித்தார். அவர், “பாரதி! இங்கே எப்போதும் உனக்கு ஒரு வேலை உண்டு. இப்போதே வேண்டுமானாலும் நீ பணிசெய்யத் தொடங்கலாம்” என்று சொல்லிவிட்டார். அங்கே அப்போதே பாரதியார் மீண்டும் “சுதேசமித்திரனில்” உதவி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். தொடர்ந்து பாரதி தினந்தோறும் காலையில் சைதாப் பேட்டையில் ரயில் ஏறி ஜார்ஜ் டவுனில் இறங்கி, எர்ரபாலு செட்டித் தெருவில் இருந்த ‘சுதேசமித்திரன்’ காரியாலயம் செல்லத் தொடங்கினார்.

    தினமும் இவ்வளவு தூரம் பயணம் செய்வதைக் குறைத்துக் கொள்வதற்காக டவுனில் தம்பு செட்டித் தெருவில் ஒரு வீட்டின் பகுதியில் மாதம் பதினைந்து ரூபாய் வாடகைக்குக் குடிபோனார். அந்த இடம் மிகச் சிறிய இடம், பாரதிக்குப் பிடிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் சுரேந்திரநாத் ஆர்யா பாரதியாருக்கு உதவ முன்வந்தார். ஆர்யா முதலில் அதிகம் சிரமங்களைச் சந்தித்து, ஒருவேளை சோற்றுக்குக்கூடக் கையேந்தும் நிலைமையில் உடல்நலம் கெட்டு மருத்துவ மனையில் கிடந்து அவதியுற்றவர். ஒரு டேனிஷ் மிஷன் கிறிஸ்தவ பாதிரியார் அவரை மதமாற்றம் செய்து பாதிரியாராக ஆக்கி, அமெரிக்காவுக்கு அனுப்பி மீண்டும் சென்னை வந்தவர். அமெரிக்காவில் இருந்தபோது ஒரு சுவிஸ் மாதைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். இவர் மனைவியுடன் சென்னை வேப்பேரியில் ரண்டால்ஸ் சாலையில் ஒரு பங்களாவில் வசித்து வந்தார்.

    ஆர்யாவின் மனைவி பெயர் மார்த்தா. இந்திய பாணியில் உடை அணிவார். மார்த்தாவுக்கு தமிழ் தெரியாது, பாரதியாரின் மனைவி மகள் இவர்களுக்கு அவள் மொழி தெரியாது. இவர்கள் ஜாடைசெய்துதான் பேசிக் கொண்டார்கள். அந்த மார்த்தா இவர்களை மிகவும் அன்போடு கவனித்துக் கொண்டாள். வேறு வீடு கிடைக்கும் வரை வேப்பேரியில் அவர்களுடன் வசிக்க முடிவு செய்தனர் பாரதி குடும்பத்தினர். செல்லம்மாவின் ஆசாரத்துக்கு அந்த இடம் ஒத்துப் போகவில்லை. பிறகு குவளை கிருஷ்ணமாச்சாரியின் முயற்சியால் சென்னை திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் ஒரு வீட்டின் முன்பகுதியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்குக் குடிபெயர்ந்தார்கள். அந்த வீட்டில் இவர்கள் தவிர மேலும் மூன்று குடும்பங்கள் குடியிருந்தார்கள். இங்கு எல்லாக் குடித்தனக்காரர்களுமே அன்போடும் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்து வந்த நேரத்தில் தான் பாரதியை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை தள்ளி சிலகாலம் உடல்நலம் கெட்டு பின்னர் உடல் தேறி வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது வயிற்றுக் கடுப்பு நோய் வந்து அதனால் அவர் அதே திருவல்லிக்கேணி இல்லத்தில் காலமானார். அப்போது அவருக்கு வயது 39. பாரதி அமரரான இடம் இப்போது அவரது நினைவு இல்லமாகத் திகழ்ந்து வருகிறது.

    Share
  • கர்மவீரர் காமராஜ்!

    –தஞ்சை வெ.கோபாலன்.

    பெருந்தலைவர் காமராஜ் பற்றி எத்தனை எழுதினாலும் மனம் முழுத் திருப்தி அடையவில்லை. மேலும் மேலும் அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கவே மனம் விரும்புகிறது. அவரைப் பற்றி நாம் என்ன சொல்கிறோம் என்பதுகூட அத்தனை முக்கியமில்லை. அவருடைய தாய் சிவகாமி அம்மையார் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போமா? “நான் ஒரு மாணிக்கத்தைப் பெற்றேன், இப்போ உலகத்தில் உள்ள எல்லா மாணிக்கங்களும் என்னைப் பார்க்க வர்றாங்க”. இப்படி அவர் சொன்ன செய்தியை சென்னையிலிருந்து வெளிவரும் வாராந்தரி ராணி எனும் பத்திரிகை வெளியிட்டது.

    இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் கூட தமிழ் மக்களுக்குத் தேவையில்லை. கைக்குழந்தை முதல் புலன்கள் அடங்கிய முதுபெருங் கிழவர் வரை இவர் பெருமையை அறிந்தவர்தாம். எனினும் சொல்லவேண்டிய செய்தியைச் சொன்னால்தானே நாம் அவரைப் பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறோம் என்பது தெரியும்.

    இவர் தனக்கென வாழாதவர்; பிறருக்காக மக்களோடு மக்களாய், ஏழைகளின் பிரதிநிதியாய் உயர்ந்த பீடத்தில் இருந்துகொண்டு அரியபல உதவிகளைச் செய்து கொடுத்தவர். தாய் நாட்டில் வறுமையை ஒழித்திட தன்னால் இயன்றதனைத்தையும் செய்துவிடத் துடித்தவர். சொத்து சுகம் எதுவுமின்றி, நேர்மையே முதலாய் வைத்து, சுயநலம் எனும் தீங்கை நீக்கி, துறவிபோல் வாழ்ந்தவர். தாய் தங்கை முதலானவர் இருந்தும், அவர்களோடு வாழ்ந்தால், அவர்களுக்கு ஏதோ உதவியை இவர் செய்துவிட்டார் என்று பிறர் பேச வாய்ப்பின்றி தனித்து வாழ்ந்த பெருந்தகை. எளிமையின் இருப்பிடம். பதவிக்குத் தேவையான பாதுகாப்புக் கருதி காவல்துறை வாகனம் முன்னால் சங்கொலி எழுப்பிக்கொண்டு சென்றதைப் பார்த்து, “இது என்ன செத்த பின்னல்ல சங்கூதுவாங்க, இப்போ எதுக்கு எனக்குச் சங்கு ஊதறீங்க” என்று பாமரத்தனமாய்ச் சொல்லி தனக்கு ஆடம்பரம் தேவையில்லை என்பதைப் புரியவைத்தவர்.

    படித்தவர்களால்தான் அரசியல் நுட்பமும், ஆட்சி முறையில் வல்லமையும் கொண்டு நிர்வாகம் நடத்த முடியுமா என்ன? இவரால் அரசு நிர்வாகத்தை நடத்த முடியுமா என்ற சந்தேக நிழல் சிலர் மனதில் ஊடாடுவதைக் கண்டு, தன்னால் எதுவும் முடியும் என்று துணிந்து நிர்வாகப் பொறுப்பை 1954இல் ஏற்றுக்கொண்டு சிறப்புற செயல்படுத்திக் காட்டிய செயல் வீரர். பொருளாதார அறிவும், பொது அறிவும், சட்டங்கள் மனிதனின் தேவைகளுக்காகத்தானே தவிர, சட்டங்களுக்கு உட்பட்டு மனிதனுடைய தேவைகளை மாற்றிக்கொள்வது பேதைமை என்பதை நிரூபித்துக் காட்டிய மேதை அவர்.

    தான் படிக்கவில்லை, தாய் நாட்டின் அடிமைத் தளையை உடைத்தெறிய வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டோம், இனி சுதந்திரம் பெற்ற தாய்த் திருநாட்டில் கல்வி அறிவு இல்லாத தலைமுறை இருக்கக்கூடாது என்பதில் தனித்த அக்கறை காட்டி இலவசக் கல்வி, மதிய உணவு, அதிக பள்ளிகள் என்று கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த படிக்காத மேதை அவர். கல்வி கற்க வறுமை ஒரு தடைக்கல்லாக இருக்கக்கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டியவர். அதனால் தான் அவரைக் கர்மவீரர் என்று அடைமொழியிட்டு அழைக்க முடிகிறது.

    ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பிறந்து கொண்டிருந்தாலும், நூற்றுப்பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த 1903 எனும் ஆண்டுக்கு மட்டும் தனிச் சிறப்பு உண்டு. அந்த ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் நாள்தான் அந்தத் தங்கத் தலைவர் பிறந்தார். பிறந்தவர் அனைவருமே தங்களை அப்படித்தான் அழைத்துக் கொள்வர் என்றாலும், அதற்காகச் சுவரொட்டிகள் அடித்து சுவரைக் கெடுக்காதவர். தன் பிறந்த நாள் என்பதற்காக ஆங்கில பாணியில் ‘கேக்’ வெட்டி தனது மாபெரும் குடும்பத்து உறுப்பினர்களுக்கெல்லாம் ஊட்டி உல்லாசம் அனுபவித்தவர் அல்ல அவர். பிறர் சொல்லித்தான் அவர் பிறந்த நாளை ஒவ்வோராண்டும் அவரே அறிந்து கொண்டார்.

    அவருடைய 16ஆம் அகவை, 1919ஆம் ஆண்டு ஆங்கிலப் பேரரசு ரவுலட் சட்டம் என்பதாக ஒரு அடக்குமுறைச் சட்டத்தை அறிமுகம் செய்து வைத்தது. இதனை எதிர்த்து காந்தியடிகள் போராட முடிவு செய்தபோதே, தமிழகத்துக் கருப்பு காந்தி என அறியப்பட்ட கர்மவீரரும் போராட்டக் களத்தில் குதித்து விட்டார். ஆம்! தனது 16ஆம் வயதில். அதே ஆண்டில் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக் என்னுமிடத்தில் ஜெனரல் டயர் என்பான் செய்த படுகொலை மக்கள் உள்ளங்களை எரிமலையாக ஆக்கியது. இவ்விரு போராட்டங்களிலும் முன்னிலை வகித்தவர் பெருந்தலைவர்.

    இவருடைய அரசியல் பிரவேசம் இவரைத் தடம் மாறச் செய்துவிடுமோ என்று அஞ்சி இவரைத் திருவனந்தபுரத்தில் உறவினர் வியாபாரத் தலத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அக்னியை வெளியே தெரியாமல் காகிதத்தில் ஒளித்து வைத்தால் தெரியாமல் இருக்குமா? புயலைக் கூண்டுக்குள் அடைத்தால் அடைந்து கிடக்குமா? சுதந்திர தேவியின் பரிபூரண கடாட்சம் கிடைத்த பின் நம் தலைவரைக் கட்டித்தான் போட முடியுமா? தமிழக அரசியலில் இந்தியச் சுதந்திரப் போரை நடத்துவதற்காகப் பராசக்தி படைத்த இந்தப் புனிதர் அரசியல் வானில் பிரகாசிக்கத் தொடங்கினார்.

    விடிந்தால் புதுப்புதுப் போராட்டங்கள். ஒவ்வொரு நாளும் போராட்டம். ஆண்டுக்கு ஆண்டு போராட்டம். 1923இல் நாகபுரி நகரில் கொடிப் போராட்டம். நம் இந்தியக் கொடியை ஏந்தி நடமாடக்கூடாது எனும் அநியாயச் சட்டத்தை எதிர்த்துப் போர். கள் குடித்து மதிமயங்கிக் கிடக்கும் ஏழை உழைப்பாளர்களின் வாழ்வை உயர்த்திடக் கள்ளுக்கடை முன்பு மறியல் செய்து போராட்டம். ஜெனரல் நீல் என்பான் சிப்பாய் கலகத்தின் போது இந்தியச் சிப்பாய்களைப் பறவைகளைச் சுடுவது போல சுட்டுக் கொன்ற கொடியவனுக்குச் சென்னை நகரின் மத்தியில் ஒரு சிலை. பொறுக்க முடியுமா இந்த அநியாயத்தை. அந்தச் சிலையை அகற்ற ஒரு போராட்டம். இந்தியர்களுக்கு அள்ளிக் கொடுக்கவென்று அளவெடுக்க வந்த சைமன் கமிஷன் முன்பாக “சைமனே திரும்பிப் போ” என்றொரு போராட்டம். இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்த உப்பை அதிக விலைக்கு விற்பதற்காக, இந்தியக் கடற்கரையில் எடுக்கப்படும் நாட்டு உப்புக்கும் வரிவிதித்த ஆங்கிலேயர்களின் சதியை முறியடிக்க காந்தியடிகளார் 1930இல் மேற்கொண்ட தண்டி யாத்திரையின் எதிரொலியாகத் தமிழகத்தில் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம். 1932இல் சட்ட மறுப்புப் போராட்டம். இப்படி வாழ்க்கையே போராட்டக் களமாக மாறிவிட்டதே.

    எல்லோருக்கும் குழந்தைப் பருவம், மாணவப் பருவம், இளமைப் பருவம், நடுவயதில் நிதிதேடி உழைக்கும் பருவம், வயது மூத்ததும் பிறருக்கு வழிகாட்டி அறிவூட்டும் பருவம், எல்லாம் முடிந்தபின் சந்தடியின்றி வம்பு தும்பு இல்லாமல் தானுண்டு தன் வாழ்வுண்டு என்றிருக்கும் வானப்பிரஸ்த ஆசிரமம், தேவைப்பட்டால் துறவு என்று நம் பெரியோர் வகுத்த பாதையில், இளமை தாண்டியதுமே ஊருக்கு உழைத்திடல் யோகம் என்று வாழ்ந்தவர் தலைவர். அதிலும் கடைசி ஆசிரம வாழ்க்கையை மேற்கொண்டவர் இப்புவியில் வேறு யாரேனும் உண்டா? ஐயகோ! இவரைப் பார்த்துத்தான் ஏதோவொரு திரைப்பட நடிகையோடு இணைத்துப் பேசினர், நாக்கில் நரம்பில்லாதோர். தனக்கென பத்து ரூபாய்கூட வைத்துக் கொள்ளாத இவரை, தாய்க்கு நூறு ரூபாய் மட்டுமே அனுப்பி வந்த இவரைப் பார்த்து ஐதராபாத் வங்கியில் கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி வைத்திருப்பவர் என்று நாக்கூசாமல் சொன்னார்களே, தாங்குமா இந்த நாடு? இரும்பினால் ஆன கோட்டை மீது காற்றில் வரும் குப்பைக் கூளங்கள் மோதுவதைப் போன்ற இந்த வசைகள் என்ன செய்துவிடும்? காலம் பதில் சொல்லி விட்டதே, இவர் உலகம் போற்றும் உத்தமர் என்று, பிறகு யாருடைய சான்றிதழ் வேண்டும் இவரைப் போற்றி வணங்கிட.

    ஆலமரம் போல ஓங்கி வளர்ந்த ஒரு தேசியக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர். இன்று நேற்று மட்டுமா? இல்லை. 1942 தொடங்கி அவரே ஒப்பற்ற தலைவர். பதவி கேட்டு பரிதவித்தாரா? ஆதரவுக்கு ஆள் தேடிச் சென்றாரா? இல்லையே. குருநாதர் தீரர் சத்தியமூர்த்தி சொன்னார், உன்னையே கட்சித் தலைமைக்கு நிறுத்துவேன், வென்று காட்டுவேன் என்று, அதன்படி அவரல்லவா சாதித்துக் காட்டினார். பதவி ஆசை என்பதில் மனம் ஒட்டாமல், விளாம்பழத்து ஓடு போலத் தனித்து தியாக வாழ்வல்லவா வாழ்ந்து காட்டினார். 1942 ஆகஸ்ட்டில் பம்பாய் காங்கிரஸ் “வெள்ளையனை வெளியேறச்” சொன்னது. தலைவர் தன் பங்கை சாங்கோ பாங்கமாகச் செய்து முடித்துத் தானே வலிய காவல்துறை அதிகாரிகளை அழைத்துக் கைதான செய்தியை என் முதல் கட்டுரையில் கொடுத்து விட்டேன்.

    சில செய்திகளை ஊரறியச் சொல்லக்கூடாது என்பர். ஏன் சொல்லக்கூடாது, அது உண்மை என்றால். தமிழ் நாட்டில் ராஜாஜிக்கும் காமராஜருக்கும் பனிப்போர் இருந்தது என்று காலம் காலமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இவ்விருவரின் கருத்து வேற்றுமைகளை இன்றைய எடைக்கல்லைக் கொண்டு அளந்து பார்க்கிறார்கள். இவ்விருவருக்கிடையே இறுகிக்கிடந்த பாசப்பிணைப்பு எத்தகையது என்பதை என் முதல் கட்டுரை சொல்லும். இன்னொன்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைச் சொன்னவர்கள் தேசிய இயக்கத்துக்கு எதிர் வரிசையில் இருந்தவர்கள். ராஜாஜி பிராமண ஆதரவாளர் என்றும் காமராஜர் பிராமண எதிரி என்றும். இது உண்மைக்கு நேர் மாறான பச்சைப் பொய் என்பதைப் பல நேரங்களில் பலரும் சொல்லி வந்திருக்கின்றனர். ராஜாஜி எந்தக் காலத்திலும் தன்னை ஒரு பிராமணனாகவும், பிராமணர்களுக்கு உதவுபவராகவும் காட்டிக் கொண்டதில்லை. காமராஜர் பிராமண எதிரியாகவும் இருந்ததில்லை. எனினும் ஆதாயம் நாடி இப்படியொரு அபாண்டம் அவர் மீது திணிக்கப்பட்டது. அது உண்மையாயின் அவர் பிராமணரான தீரர் சத்தியமூர்த்தியைத் தன் குருவாக எப்படி ஏற்றுக் கொண்டிருக்க முடியும்? ஆர். வெங்கட்டராமனைத் தன் நம்பிக்கைக்குரிய உதவியாளராக எப்படி வைத்துக் கொண்டிருக்க முடியும்? இன்னும் எண்ணற்ற பல சான்றுகளை அள்ளிக் கொட்ட முடியும், தேவையில்லை, தீ சுடும் என்பதற்கு ஆதாரம் தேவையா என்ன? மற்றவர்களுடைய அரிப்புக்காக அவரை, பச்சைத் தமிழன், கருப்புத் தமிழன், சிவப்புத் தமிழன் என்றெல்லாம் கொண்டாடியிருக்கலாமே தவிர, அவர் எந்தக் காலத்திலும் பச்சையாவோ, கருப்பாகவே, சிவப்பாகவே தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளவில்லை. மாறாக நாடு, மக்கள், நல்வாழ்வு என்றுதான் நாளெல்லாம் சிந்தித்து வந்திருக்கிறார் என்பதை உணர்ந்தாலே போதும், அவரைப் புரிந்து கொண்டதாகும்.

    அவர் சாதனைகளுக்கு முடிவு கிடையாது. எனினும் நிறைவாக ஒன்றைச் சொல்லி முடித்தால்தான் அவரைப் பற்றி சொன்ன மனச் சாந்தி உண்டாகும். அதுதான் “காமராஜ் திட்டம்”. எல்லோரும் சுதந்திர இந்தியாவில் பதவி பதவி என்று அலைந்து கொண்டிருந்த நேரத்தில், அதிலும் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதற்கும் ஆளும் கட்சியாக இருந்த போழ்து ஆற்றோடு போகிற தண்ணீரை, ஐயா குடி, அம்மா குடி என்று பங்கு போட்டுக்கொண்டு அனுபவித்த காலத்தில் இவர் தன்னிடம் இருந்த பதவியையும் விட்டுவிட்டுக் கட்சிப் பணிக்குப் போகிறேன், மற்றவர்களும் அப்படிப் போகட்டும் என்று சொல்லி பதவி வேட்டைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு திகைத்துப் போனார். இப்படியொரு எண்ணம் உருவாகி, அதனை அமல்படுத்தத் தன்னையே முதல் ஆளாகவும் கொண்டு வந்து நிறுத்திய பெருந்தலைவரை நாவாரப் புகழ்ந்தார். விளைவு, தலைவர் உட்பட வெகு சிலரே பதவி விலகினர், ஆண்டாண்டு காலமாக மனித மனத்தில் வேரூன்றிக்கிடக்கும் பதவி மோகம் அத்தனை சீக்கிரம் விட்டு விலகிவிடுமா என்ன? எனினும் காமராஜ் திட்டம் என்பது வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட அரியதொரு தியாகத் திட்டம் என்பதில் ஐயமில்லை.

    முடிவில் இன்னொரு முக்கிய செய்தியையும் சொல்லித்தான் தீரவேண்டும். பள்ளிக்கல்வி அதிகம் இல்லாதவர் பெருந்தலைவர் என்று சொல்வதுண்டு. ஆனால் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு உண்மை என்ன தெரியுமா? தலைவரின் ஆங்கில அறிவு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தக் கூடியது. ஒரேயொரு மாதிரி மட்டும் இங்கு சொல்கிறேன். லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த போது இலங்கைக்குச் சென்று அவர்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு திரும்பியிருந்தார். சென்னையில் ராஜ்பவனில் நிருபர்கள் அவரைச் சந்தித்துக் கேள்விகள் கேட்டனர். ஒருவர் கேட்டார், “இப்போது நீங்கள் செய்துகொண்டிருக்கிற ஒப்பந்தத்தை தொடர்ந்து பதவிக்கு வரும் ஆட்சியாளர்கள் மதித்து நடப்பார்களா?” என்றார். அப்போது அருகில் இருந்த பெருந்தலைவர் ஆங்கிலத்தில் சொன்னார்:

    “Don’t go and print any such suggestions in the paper. This is an agreement signed by two Democratic Governments. Just as any Democratic Government in India would honour this agreement, the successive Governments in Ceylon will also honour this agreement. That is the principle involved in it.”

    பெருந்தலைவர், ஏழைப்பங்காளன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட அந்தத் தலைவரைப் பற்றி பத்திரிகையாளர் “சோ” எழுதிய வரிகளைச் சொல்லி இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

    “விளம்பரத்தைத் துரத்திக்கொண்டு ஓடும் அரசியல் வாதிகளிடையே, விளம்பரம் தன்னைத் தேடி வந்தபோதும், அதைத் துரத்தி அடிக்கும் அரசியல்வாதியாகக் காமராஜர் வாழ்ந்தார்”.

    வாழ்க பெருந்தலைவர் காமராஜ் புகழ்!

    Share
  • காலத்துக்குக் காலம் உணர்வுகள் மாறுபடுமா?

    தஞ்சை வெ.கோபாலன்

                           11825115_1648443785371404_7891288417354296886_n

    முன்பு சென்னை மாகாணத்தைப் பிரித்துத் தெலுங்கு மொழி பேசுவோர் அதிகமுள்ள பகுதிகளை ஆந்திரப் பிரதேசம் என்று தனி மானிலமாகப் பிரிக்க வேண்டுமெங்கிற கோரிக்கையை வைத்து பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதமிருந்தார். அப்போதைய ஆந்திரத் தலைவர்கள் டி.பிரகாசம், புலுசு சாம்பமூர்த்தி போன்ற பெரியவர்கள் அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வந்ததோடு பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதத்துக்குத் தூண்டி அவர் இறப்பதையும் பார்த்திருந்தனர். உடனே தெலுங்கு மக்கள் வசிக்கும் பகுதிகள் தீப்பற்றி எரிந்தன. ஆந்திரம் கேட்டதோடு “மதறாஸ் மனதே” என்கிற கோஷமும் வானைப் பிளந்தது. தமிழகத்திலிருந்து வடக்கே செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. தமிழர்கள் தாக்கப்பட்டனர். விளைவு, ஜவஹர்லால் நேரு மனமிரங்கி தனி ஆந்திரம் அமைக்க ஒப்புக்கொண்டார். இது வரலாறு. ஒரு தனிமனிதனின் உண்ணாவிரதம், அவர் இறப்பு, அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறை வெறியாட்டங்கள், மத்திய அரசு இறங்கி வந்து கோரிக்கையை அங்கீகரித்தது இவை அனைத்தையும் நம் காலத்தில் பார்த்த நிகழ்ச்சிகள்.

    ஆந்திரம் பிரிந்து போய் தனி மானிலம் ஆன பின்பு மலபார் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கேரளம் உருவானதும், தமிழ் பேசும் எஞ்சிய சென்னை மாகாண பகுதிகளுக்குத் தமிழ் நாடு என்று பெயரிட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சங்கரலிங்க நாடார் என்பவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அப்போது பெயர் மாற்றம் நிகழவில்லையாயினும் சி.என்.அண்ணாதுரை முதலமைச்சரான பின்பு தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

    1937இல் ராஜாஜி சென்னை மாகாண முதலமைச்சரான போது சேலம் ஜில்லா முழுவதும் முழு மது ஒழிப்பு அமுல் படுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக செயல்பட்டதைத் தொடர்ந்து 1947க்குப் பிறகு சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு அமுல் படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டது. 1947 ஆகஸ்ட் 15இல் நடந்த சுதந்திர தின பேரணிகளில் பெரிதும் மக்கள் கவனத்தைக் கவர்ந்த பகுதி, குடி ஒழிந்ததைக் கொண்டாடும் வகையில், சிலர் குடிகாரர்கள் போல் நடந்து கொண்டு, கையில் வடைக்கு பதில் தவக்களையைக் கடிப்பதுபோல் பாவனை செய்து, மனைவியை அடிக்கும் குடிகாரனை உருவக்கப்படுத்தி வேடமிட்டும் வந்தவர்களை மக்கள் பார்த்து மகிழ்ந்து கைதட்டி ஆர்ப்பரித்த காட்சிகளைக் கண்டிருக்கிறேன். மதுவிலக்கு மிகத் திறமையாகக் கையாளப்பட்டுதான் வந்தது. மதுவிலக்குப் போலீஸ் துறை தனித்து இயங்கியது. அது திறமையோடு இயங்கியதையும் பார்த்திருக்கிறேன்.

    திருட்டு குற்றம்தான்; கொலை செய்வதும் குற்றம்தான்; இந்தியன் தண்டனை சட்டம் பல்வேறு செயல்களைக் குற்றம் என்று சொல்கிறது. அப்படி சட்டம் சொன்னாலும், அந்தக் குற்றங்கள் ஆங்காங்கே சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அல்லவா? அதற்காக குற்றம் நடக்கிறது என்பதற்காகச் சட்டத்தை நீக்கவில்லையே. மதுவிலக்கு அமுலில் இருந்தபோதும், சில இடங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதும், திருட்டுத் தனமாக கள் இறக்கிக் குடிப்பதும் இருந்துகொண்டுதான் இருந்தன. அப்படிப்பட்டோரைப் பிடிக்கக் காவல்துறையும் இருந்தது. குடித்துவிட்டு வருபவன், குடிக்கக் கையில் சாராயம் எடுத்துச் செல்வது, சாராயம் திருட்டுத் தனமாகக் காய்ச்சுவது இவற்றைப் போலீஸ் தடுக்கத்தான் செய்தது. அப்படியும் குற்றங்கள் நடந்து கொண்டு இருந்தது. அதற்காக இந்த சட்டம் வேண்டாம், மக்கள் தாராளமாகக் குடிக்கட்டும், இந்த விற்பனையைத் தனியார் வசம் விட்டுவிட்டால் லாபம் அனைத்தும் தனியாருக்குப் போய்விடும் என்று அரசாங்கமே சாராய வியாபாரம் செய்யத் தனிப் பிரிவு ஏற்படுத்தி, அதன் மூலம் ஏராளமான ‘டாஸ்மாக்’ கடைகளைத் திறந்து, மக்களை, குடிகாரர்களை மட்டுமல்ல, மாணவர்களை, சிறுவர்களை, இளம் பெண்களை, வேலைக்குப் போகும் படித்த பெண்களை, இளைஞர்களை, முதியவர்களை, பொறுப்பற்ற மனிதர்களைக் குடிகாரர்களாக ஆக்கியப் பெருமை யாரைச் சாரும்? எண்ணிப் பார்ப்போம்.

    ராஜாஜி ஒரு நாள் விடியற்காலையில் காரில் புறப்பட்டு எங்கோ செல்கிறார். கடற்கரைசாலைக்குச் சென்று அங்கு நடை பயிற்சி செய்வார் என்று நினைத்தார்கள். ஆனால் அவரோ முக்கியமான நபர் ஒருவரைச் சந்தித்து, அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு, ஐயா! ஒரு தலைமுறை மற்ந்து போயிருக்கிற குடிப்பழக்கத்தை மீண்டும் கடைகளைத் திறந்து மக்களைக் கெடுத்து விடாதீர்கள் என்று கெஞ்சினார் என்கிறார்கள். ஆனால் அவரோ, அவர் சொற்களைக் கேட்காததோடு, அவர் வேறு விஷயமாய்த் தன்னைப் பார்த்தார் என்று விஷயத்தைத் திசைதிருப்பி விட்டுவிட்டார். அன்று பிடித்தது சனியன் தமிழ் நாட்டுக்கு. எங்கும் குடிகாரர்கள், சாலையில் எதிர்ப்படும் பத்துப் பேரில் எட்டு பேர் குடித்துவிட்டு வருகிறவர்கள். கண்கள் சிவந்து, உடை கசங்கி, நிலை தடுமாறி, வாய் குழறி, உடை மட்டும் நாகரிகமாக வரும் எத்தனை பேரை தினமும் பார்க்கிறோம். எத்தனை படிக்காத பெண்மணிகள் குடிகார கணவன் மார்களிடம் அடிபட்டு, உதைபட்டு, தான் சம்பாதிக்கும் காசையும் அவன் குடிப்பதற்காக இழந்துவிட்டு, தான் வேலை செய்யும் வீடுகளில் வந்து புலம்புவதைக் காண முடிகிறது. வெள்ளிக்கிழமை மாலையானால் போதும், குடிகாரக் கடைகளின் வாசலில்தான் எத்தனை விதமான ஆசாமிகள். படித்தவர்கள், காரில் வருபவர்கள், உழைப்பாளிகள், பிறருக்கு வாங்கிக் கொண்டு போக வந்திருக்கும் சிறுவர்கள், தாங்களே குடிப்பதற்காக நிற்கும் பையங்கள், பெண்கள், உழைக்கும் பெண்கள் இப்படி எத்தனை விதம்.

    ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் தினமும் குடித்துவிட்டு கண்களை மூடிய வண்ணம் தன் இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பும் காட்சியைப் பார்த்து வருகிறேன். அடிக்கடி அவர் யார் மீதாவது வண்டியை மோதிவிட்டு பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருப்பதையும் பார்த்து வருந்தியிருக்கிறேன். ஒரு முறை அவர் மூக்குக்கண்ணாடி தூர விழுந்து கிடந்ததை எடுத்து அவரிடம் கொடுத்த போது மூடிய கண்களோடு, என்னைக் கன்னத்தைத் தொட்டு நன்றி சொன்னதையும் மூக்கைப் பொத்திக் கொண்டு ஏற்றுக் கொண்டேன். இதுதான் இன்றைய தமிழ் நாடு.

    இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல, ஜூலை 31 அன்று கன்யாகுமரிக்கு அருகில் டெலிபோன் டவர் ஒன்றின் மீது ஏறி மதுவிலக்கைக் கொண்டு வரச்சொல்லி போராடிய காந்தியவாதி யொருவர் இறந்து போன கொடுமையையும் ஊடகங்கள் இடைவிடாது ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். பொட்டி ஸ்ரீராமுலு இறப்பு நடந்த போது இருந்த எதிர் விளைவுகள் போலவே, சங்கரலிங்க நாடாரின் இறப்புக்கு இருந்த அனுதாபம் போலவே இந்த காந்தியவாதியின் இறப்புக்கு ஏன் ஏற்படவில்லை என்று நெடு நேரம் யோசித்ததில் புரிந்தது, நம்மில் பலர் மதுவிலக்கு வேண்டும் என்பதிலோ, அல்லது இந்தக் கோரிக்கைக்காக ஒரு நபர் தன் உயிரை இழந்தது குறித்தோ சற்றும் கவலைப்படவில்லை என்பது புரிந்தது. சின்ன அண்ணாமலை ஒரு பழமொழி சொல்வார்: “ஏற்கனவே பையனுக்கு தமிழே தள்ளாபுள்ளா, இதிலே ஆங்கிலம் தலைகீழ் பாடமாம்” என்பார். குடிப்பழக்கத்தை ஒழித்திட நம்மவர்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. இல்லாவிட்டால் ஒரு காந்தியவாதி மிக உயர்மான டவரில் ஏறி உயிர்விட்ட பின்பும் சற்றும் அயர்ந்து விடாமல் தங்கள் வயிற்றுப்பாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மவர்களைப் பார்த்து வருந்துவதா? துக்கப்படுவதா? போராடத் துடிப்பதா? என்ன செய்வது? அதை முடிவு செய்யவாவது மனம் தெளிவாக இருக்க வேண்டுமல்லவா?

    Share
  • பரிகாரம்

    — தஞ்சை வெ.கோபாலன்.

    அந்த கிராமத்து அக்கிரகாரத்தில் வெளியிடங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் போக மிச்சமுள்ள ஏழெட்டு வீடுகளில் மட்டும் இன்னமும் அங்கு நிலமோ, வேலையோ உள்ளவர்கள் மட்டும் மிச்சமிருந்தார்கள். அதே பழைய, தழைந்த ஓட்டு வீடுகள், முற்றம், தாழ்வாரம், கூடம் பின்புறம் கிணறு என்று பழைய பாணியில் அமைந்த வீடுகள். அதில் ஹெட்மாஸ்டர் வீடு என்றழைக்கப்பட்ட வீட்டில் அந்த காலத்தில் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த ஒருவரின் வாரிசுகள் இன்னமும் இருந்தனர். அதில் கடைசி தலைமுறையச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தன் வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தார்.

    அங்கிருந்த சிலருக்கு அவர் வாயைக் கிளறினால் மிகப் பழைய காலத்தில் அந்த கிராமத்தில் இருந்தவர்கள், அவர்களது கதைகள் இவைகளை அவர் அவிழ்த்து விடுவார், பொழுது போவது தெரியாது. ஆகையால் அவர் ஓய்வாக வாயில் திண்ணையில் அமர்ந்திருக்கும் போது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரிடம் சென்று அவரோடு திண்ணையில் அமர்ந்துகொண்டு சாவகாசமாகப் பேச்சைத் தொடங்குவார்கள். அவரும் இவர்களது ஆசையைத் தீர்க்கவென்று பழைய நிகழ்ச்சிகளை அசைபோட்டுச் சொல்லிக் கொண்டு வருவார். அவை கற்பனையா, நடந்தவையா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அவர் அந்த வரலாறுகளைச் சொல்லும் பாங்கு அத்தனை சுவையாகவும், கண்ணெதிரே நடப்பது போலவும் இருக்கும்.

    அந்த கிராமத்து தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் ராகவன் என்பார் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அவர் கேட்டார், “என்ன மாமா? ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருக்கீங்க போல இருக்கே. என்ன விஷயம்?” என்றார்.

    அதற்கு அந்தப் பெரியவர், “அதெல்லாம் ஒண்ணுமில்லைடா! நேற்று பம்பாயிலிருந்து என் சொந்தக்காரர் ஒருத்தர் வந்திருந்தார் இல்லையா?” என்று தொடங்கவும்.

    “அப்படியா! தெரியாதே, யார் அவர், உங்களுக்கு என்ன உறவு, என்ன விசேஷமா இங்கே வந்தார்” என்றெல்லாம் கேள்வி எழுப்பினார் ராகவன். கூட உட்கார்ந்திருந்த மேலும் இருவரும் இந்த உரையாடலில் ஆர்வம் கொண்டவர்களாகத் தெரிந்தனர்.

    பெரியவர் சொன்னார், “அவரும் நம்ம ஊரைச் சேர்ந்தவர்தான். மேற்கே பஜனை மடம் இருக்கிறது அல்லவா? அந்த இடமும், அதையொட்டி உள்ள வீடும் இவர்களுடையது. அதை இன்னமும் அவர்கள் யாருக்கும் விற்கவில்லை. அந்த இடம் எப்படி இருக்கு, என்ன செய்யலாம் என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் வந்திருந்தார்” என்றார்.

    “அப்படியா, நீங்க சொல்றதைப் பார்த்தா, இங்கே ரொம்ப வசதியா வாழ்ந்தவங்கன்னு தெரியுது. வீடும், சொந்தமா பஜனை மடமும் கட்டி வச்சிருக்காங்கன்னா நிச்சயமா வசதி படைச்சவங்கதான், சரி, என்ன முடிவு பண்ணினார்?” என்றார் ராகவன்.

    பெரியவர் சொன்னார், “அவருக்கு இருக்கும் சொத்தில் இது ஒண்ணும் கணக்கே இல்லை. அந்த மடத்தையும், அந்த இடிந்து பாழடைந்து கிடக்கும் அவரது பழைய வீட்டையும் இங்கே ஏதாவது நல்ல காரியத்துக்கு தேவைன்னா கொடுத்துவிட தயாரா இருக்கிறார். அவர் ஒண்ணும் சாமானிய மனிதர் இல்லை. அவரோட அப்பா 1930ல ராஜாஜி தலைமையில் திருச்சிலேருந்து வேதாரண்யத்துக்கு பாதயாத்திரையா போய் அங்கே உப்பு எடுத்து சத்தியாக்கிரகம் செய்தாங்க இல்லையா, அதில ஒரு தொண்டரா போயி, புளிய மிளாறுல அடிபட்டு ஜெயிலுக்குப் போனவர், தியாகி. ஒரு சமயம் ராஜாஜிகூட இங்க பக்கத்துல எங்கேயோ கூட்டம்னு வந்தப்போ அவர் வீட்டுக்கு வந்துட்டு போயிருக்கார், அப்படின்னு சொல்லுவாங்க.” என்றார் பெரியவர்.

    “ஓ! அத்தனை பெரியவங்களா, அப்படின்னா, அவங்க குடும்பத்தைப் பற்றியும், அவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க, கேட்போம். நம்ம ஊரும் சாதாரண ஊரு இல்லை, தேச சுதந்திரத்துக்காக ஒரு தியாகியை உருவாக்கின ஊருங்கறது பெருமைக்குரிய விஷயம் இல்லையா?” என்றார் ராகவன்.

    “சரி, சொல்றேன், கேளுங்க. நேத்து வந்தவரோடு அப்பா தியாகி குருமூர்த்தின்னு பேரு. அவரை எல்லோரும் ஆச்சா ஆச்சான்னுதான் கூப்பிடுவாங்க. ஆளு, நல்லா வெள்ளை வெளேர்னு வெள்ளைக்காரன் போல இருப்பாரு. அவரைத் தொட்டா அந்த இடம் சிவப்பா போயிடுமாம், அத்தனை கலர். அந்தக் காலத்திலே அவர் கதர்தான் போடுவாராம். அவரைப் பார்க்க அடிக்கடி மாயவரத்திலேர்ந்து நாராயணசாமி நாயுடுங்கற தியாகியும் வருவாரம். இவுங்க இரண்டு பேருமாத்தான் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமா கலந்துகிட்டவங்க.”

    “இந்த ஆச்சாவுக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் இருந்தாங்க. பெண்களைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடணும்னு ஆசைப்பட்டாரு. பையன் மட்டும் மாயவரத்துல படிச்சுட்டு பம்பாய்க்கு வேலைக்குப் போய்விட்டான். அவந்தான் நேத்து இங்கே வந்தது. “

    “இந்த ஆச்சாவோடு பெரிய பொண்ணு வீட்டோட இங்கேயே இருந்தா. அவ வளர்ந்திருந்தாளே தவிர ஒரு குழந்தை மாதிரி, சின்ன குழந்தைகளோடு விளையாடுவா. பின்னால தெருவில இருக்கறவங்களோடு ஆடு மாடு இதையெல்லாம் அக்கறையா கவனிச்சுக்குவாளாம். தெருகோடில ஒரு சாவடியும், அதையொட்டி மஞ்சவாய்க்காலும் ஓடுதில்லையா, அங்கேதான் அவ சின்னச் சின்ன பெண்களைக் கூட்டி வச்சு விளையாடிக் கொண்டிருப்பாளாம்.”

    “அவளுக்கும் வயசாயிடுச்சின்னு, அவர் அவளுக்கு ஒரு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார். அப்போது இங்கே பக்கத்துல இருக்கற நாகங்குடி கிராமத்துல ஜில்லா போர்டு பள்ளிக்கூடத்துல வாத்தியாரா ஒரு பையனும், அவன் அம்மாவும் நம்ம ஊருல வந்து குடியேறினாங்க. அந்த பையனும் நல்லவனா இருந்ததால, அவன் அம்மாகிட்ட பேசி மெதுவா பெரிய பொண்ணை அந்தப் பையனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டார் அவர். வீட்டோட மாப்பிள்ளை என்கிற மாதிரி ஊரோட மாப்பிள்ளை. ஆனா அந்தப் பொண்ணு, மத்த பெண்களைப் போல இல்லாம, சின்னக் குழந்தை போல, குழந்தைகளையெல்லாம் கூட்டி வச்சு, அவங்களுக்கு சாதம் போடறது, மஞ்சவாய்க்காலுக்குக் கூட்டிகிட்டு போயி குளிப்பாட்டி விடறது, அதுல இருக்கற மீன்களுக்கு ஆகாரம் போடறது, இப்படி குழந்தைத் தனமாகவே இருந்தாளாம். அந்த மாப்பிள்ளைப் பையனும் ரொம்ப சாதுவானதால, சின்ன கிராமம்தானே, அவ அப்படித்தான் இருப்பாங்கற நினைப்புல அவளைப் பத்தி அதிகமா கவலைப் படறதில்லை. அவன் அம்மாவுக்கும் மருமகளா இல்லாம வீட்டுல அவ ஒரு குழந்தை மாதிரி இருந்து, சீக்கிரமே இறந்தும் போயிட்டா”

    “அடப் பாவமே! அப்புறம் என்ன ஆச்சு” என்றார் ராகவன் ஆர்வத்துடன்.

    “அந்த வாத்தியார் பையன் முதல்ல ரொம்ப வருத்தப்பட்டான், அவன் அம்மாவும் அவனை வேற கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்தியும் அவன் செஞ்சுக்கல. அந்த சமயத்துல இங்கே பக்கத்துல இருக்கே மங்கலஞ்சேரிங்கற ஊர், அந்த ஊரைச் சேர்ந்த மகமது யூசுப் மறைக்காயர் இந்த வாத்தியாருக்கு ரொம்ப சிநேகம். அவர் அடிக்கடி இங்கே வந்து வாத்தியாரோட இருப்பார். வாத்தியாரோட அம்மாவை அவரும் அம்மா, அம்மான்னுதான் கூப்பிடுவார். அதே அன்போடத்தான் பழகிவந்தார்.”

    “அவர் நல்ல செல்வந்தர் குடும்பம். அவர்களுக்கு மலேயாவில் கோலாலம்பூரிலும், இந்தோசைனாவில சைகோனிலும் வியாபாரம் இருந்தது. நம்ம வாத்தியாருக்கு இங்கிலீஷ், ஃப்ரெஞ்சு பாஷை இதோட கைரேகை சாஸ்திரமும் நல்ல தெரியும். அதனால, பெண்டாட்டியை இழந்துட்டு இந்த எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார் வேலைல இருக்கறதைவிட, வா எங்க அப்பாவோட வியாபாரத்துல எங்கேயாவது வேலைக்குப் போயிடலாம். நானும் அங்கே வரேன் என்று சொல்லி வாத்தியாரை முதலில் கோலாலம்பூருக்கும், பிறகு அங்கேயிருந்து சைகோனுக்கும் கூட்டிக் கொண்டு போய்விட்டார்.”

    “போன இடத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு. சைகோனில் ஒரு தெருவே இவுங்களுக்குச் சொந்தமா இருந்தது. எல்லா வகை வியாபாரத்திலும் இவுங்க இருந்ததால, நம்ம வாத்தியாரையும் ஒரு இடத்தில இருக்க வச்சுட்டாங்க. அவருக்குத் தனியா தங்க இடம், அவரே சாப்பாடு செஞ்சு சாப்பிடறமாதிரி ஏற்பாடு. இதைத் தவிர ஓய்வு நேரத்துல கைரேகை சாஸ்திரம் பார்க்க அனேகம் பேர் வருவாங்க, அதிலயும் வாத்தியாருக்கு நல்ல வருமானம்”

    “கொஞ்ச நாள்ல, ஊர்ல நிலம், வீடுன்னு வாங்கி போட்டு அம்மாவை அங்கே இருக்க வச்சுட்டு, இவர் மாத்திரம் அங்கே இருந்தாரு. நண்பர் மகமது யூசுபும் அவுங்க அப்பாவும் இவரை அவுங்க வீட்டுப் பிள்ளை மாதிரி கவனிச்சுக் கிட்டாங்க. அப்போல்லாம் வெளிநாட்டுக்குப் போறது ஒண்ணும் கஷ்டம் இல்ல. இங்கேயிருந்து நாகப்பட்டணம் போயிட்டா, கப்பல் டிக்கட் வாங்கி படகுல போயி, கொஞ்சம் எட்டத்துல கடலில் நிற்கிற கப்பல்ல ஏறி, எங்கே போகணுமோ, அங்கே போகலாம். அப்படித்தான் அந்தக் காலத்துல தென்னாப்பிரிக்கா, பிஜித் தீவு, லட்சத் தீவுகள் இப்படி பல ஊர்களுக்கும் நம்ம ஆளுங்க போயிருக்காங்க. இப்போ போல பாஸ்போர்ட், விசா அப்படியெல்லாம் எதுவும் இல்ல இல்லையா?”

    “ஒரு தடவை அந்த வாத்தியார் லீவுல ஊருக்குத் திரும்பி வந்திருந்தார். அப்போ மாயவரத்துல அவரோட சித்தப்பா ஒருத்தர், நல்ல வைதீகர் அவருக்கு சஷ்டியப்த பூர்த்தின்னு இவுங்களை அழைச்சிருந்தார். லீவுல வந்திருந்த வாத்தியாரும் அம்மாவை அழைச்சிகிட்டு மாயவரம் போய் அவுங்க வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கற சமயம், உள்ளேயிருந்து அந்த வைதீகர் உரத்த குரலில், அங்கேயே நில்லு” என்று குரல் கொடுத்தார்.

    “இது என்ன கொடுமை. விசேஷத்துக்கு அழைச்சுட்டு, வெளில நிக்கச் சொல்றது அவமானமில்லையோ?” என்றார் ராகவன்.

    “ஆமாம் ஆமாம். அவமானம்தான். ஆனா, அவரோ சித்தப்பா, ஆசாரசீலர், போதாதற்கு ஒரு வைதீகர். இவரோ கப்பல் ஏறி வெளிநாடு போயி வந்தவர். அப்படி கப்பல் ஏறி கடலைக் கடந்து போனா, அவுங்க தீண்டத் தகாதவங்க ஆயிடுவாங்க, அவுங்க சாஸ்திரப்படி. அதனால, தீட்டுப் பட்டவரை உள்ளே விட அவர் விரும்பவில்லை. அம்மாவை மட்டும் உள்ளே வரச் சொல்லிவிட்டு, அந்த வைதீகர் வாசலுக்கு வந்து வாத்தியாரிடம், நீ கடல் கடந்து போயிட்டு வந்ததால, தீட்டுப் பட்டுப் போயிட்டே. அதனால, நீ ராமேஸ்வரம் போய், கடல் ஸ்நானம் செஞ்சுட்டு, ராமநாத சுவாமியை தரிசித்துவிட்டு பிரசாதத்தோட இங்கே வா, இன்னிக்கு விசேஷம் முடிஞ்சாலும் இன்னும் பதினைந்து நாளுக்கு தொடர்ந்து ஜபம் எல்லாம் நடக்கும். அது முடியறதுக்குள்ள நீ வந்துடு. போ! இப்பவே கிளம்பி ராம்ஸ்வரம் போய் ஸ்நானம் செஞ்சுட்டு வந்துடுன்னு சொல்லி அனுப்பிட்டார்.”

    “பாவம் வாத்தியார், சரின்னு சொல்லிட்டு நம்ம ஊருக்கே திரும்பி வந்தவர் விஷயத்தை யார்கிட்டயும் சொல்லாம, நேரே மஞ்சவாய்க்காலுக்குப் போய் ஒரு சொம்புல வாய்க்கால் ஜலத்தைப் புடிச்சுட்டு வந்து வீட்ல வச்சுகிட்டார். நாலைந்து நாள் நம்ம ஊர்லேயே இருந்துட்டு வாரக் கடைசில ஒருநாள் காலைல கிளம்பி மாயவரம் போயி, அங்கே ‘லாகடத்துல’ ஒரு கடைல மஞ்சவாய்க்கால்ல புடிச்ச தண்ணி இருக்கற சொம்புக்கு ஈயப் பத்து வச்சு சீல் பண்ணி கையில எடுத்துகிட்டு, நெற்றில விபூதிப் பட்டைப் போட்டுக்கொண்டு சித்தப்பா வீட்டுக்குப் போனார்.”

    “பையன் சமத்தா ராமேஸ்வரம் போய்ட்டு, நெற்றியில் திருநீற்றுப் பட்டை, கையில சீல் வைத்த ராமேஸ்வரம் புனிதநீர் இவற்றோடு வந்ததைப் பார்த்து மகிழ்ந்த வைதீகர் இவருக்கு ராஜ உபசாரம் செய்து விருந்து வைத்து, வாத்தியாரோடு அம்மாவிடம், அவளுடைய மகனுடைய பெருமைகளைச் சொல்லி மகிழ்ந்து போனாராம். இந்த விவரங்களையெலாம் நேற்று வந்த பம்பாய்க்காரர் தன் அக்காள் வீட்டுக்காரர் செய்த வேலையைச் சொல்லிச் சொல்லிச் சிரித்துவிட்டு, அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் மூட நம்பிக்கையிலே வாழ்ந்திருக்காங்க, இப்போ, உலகம் எப்படிச் சுருங்கிப் போச்சு, தினம் ஆயிரக் கணக்குல வெளிநாடு போறாங்க வறாங்க, அவுங்கள்ளாம் ராமேஸ்வரம் போயா ஸ்நானம் பண்ணி புனிதநீரா கொண்டு வராங்க என்றார்”

    பெரியவர் கதை சொல்லி முடிக்கும் வரை ராகவன் உள்ளிட்ட எல்லோரும் சிரித்துக் கொண்டே கதைகேட்ட சுவாரசியத்தோடு வீடுகளுக்குப் புறப்பட்டனர். பெரியவரும் திண்ணையைக் காலி செய்துகொண்டு அவர் வேலையைப் பார்க்க உள்ளே போய்விட்டார்.

    http://www.bharathipayilagam.blogspot.in/2015/07/blog-post_26.html

    பின் குறிப்பு

    1910ஆம் ஆண்டில் சுதேசமித்திரனில் அதன் நிறுவனர் ஜி.சுப்பிரமணிய ஐயர் “ஆசாரதிருத்த வியாசங்கள்” எனும் தலைப்பில் பல்வேறு பழைய பழக்க வழக்கங்கள் காலத்துக்கேற்ப மாற்றப்பட வேண்டுமென்று கட்டுரைகள் எழுதினார். அவற்றை வரிசைப்படுத்தி நான் என்னுடைய www.bharathipayilagam.blogspot.in வலைப்பூவில் வெளியிட்டுக்கொண்டு வருகிறேன். அதில் இரண்டாவது பகுதியை இத்துடன் தங்கள் பார்வைக்காக இணைத்துள்ளேன். அதில் இந்துக்கள் கடல்கடந்து போனால் சாத்திர விரோதம் என்ற கருத்து இருந்தது என்பதையும், அந்தக் கருத்தைச் சில பண்டிதர்கள் ஆதரித்தார்கள் என்பதையும் இதில் காணலாம். நான் ‘பரிகாரம்’ எனும் தலைப்பில் அனுப்பியுள்ள கதையின் சாரமும் அதுதான் என்பதற்காக, ஜி.சுப்பிரமணிய ஐயரின் கட்டுரையின் தொடுப்பை அளித்திருக்கிறேன் நன்றி.

    தங்களன்புள்ள,
    தஞ்சை வெ.கோபாலன்

    Share
  • “இனி நினைந்திரக்கமாகின்று!”

    — தஞ்சை வெ.கோபாலன்.

    தஞ்சை என்றதும், பசுமையான நெல்வயல்கள், அந்த வயல்களை ஈரமாக்கி விளைச்சலை கொள்ளை கொள்ளையாகத் தரும் காவிரி நதியும்தான் முதலில் நம் எண்ணத்தில் வரும். ஆடியில் காற்றடித்தால், காவிரியில் தண்ணீர் வரும் என்பர் அந்த நாளில். “ஆடியிலே காத்தடிச்சா, ஐப்பசியில் மழை வரும்” என்றொரு பாடலும் உண்டு. ‘அக்கா’ குருவிகளின் ‘அக்கோ’ எனும் சோக ஒலி சோலைகளிலும், தோப்பு, துரவுகளிலும் எதிரொலிக்கும். காவிரி வறண்டு கிடக்கும் காலங்களில் ஆற்றுப் படுகைகளில் தெருக்கூத்து விடிய விடிய நடைபெறும். நிலவொளி இருக்கும் நாட்களில் கிராமங்களில் மின்சாரம் வராத பழைய நாட்களில் (சுதந்திரத்துக்கு முன்பு வரை) ஆற்று மணலில் நெடுநேரம் அமர்ந்து பேசுவர், சிறுவர்கள் ‘சடுகுடு’ (இப்போதைய பெயர் கபடி) ஆடிக் கொண்டிருப்பர்.

    பல கிராமங்களுக்கு சுதந்திரத்துக்குப் பிறகுதான் மின்சாரம் கிடைத்தது. புதிய கம்பங்கள் நட்டு, கம்பி இழுத்து வீடுகளுக்கு மின்சாரம் கொடுத்தபோது அரிக்கன் விளக்கும், சிம்னி விளக்கும் எரிந்த வீடுகளில் மின்சார பல்புகள் வெளிச்சத்தை உமிழும் அதிசயத்தை தங்கள் வீட்டில் மின்சாரம் இல்லாத சிறுவர்கள் வேடிக்கைப் பார்க்க வருவார்கள்.

    உள்ளடங்கிய கிராமங்களில் அஞ்சல் அலுவலகங்கள் இருந்தாலும், அந்த ஊர்களுக்கு வந்து சேரவேண்டிய தபால்களை அருகிலுள்ள பெரிய ஊரிலிருந்து ‘ரன்னர்’ (Runner) எனும் அஞ்சல் ஊழியர், சீல் வைத்த அஞ்சல் பையைத் தோளில் சுமந்து கொண்டு கையில் சலங்கை கட்டிய ஒரு கைத்தடியோடு ஓடிவருவதைப் பார்க்கவே அழகாக இருக்கும். அவர் நடந்து வரக்கூடாது, ஓடிவர வேண்டும், அதனால்தான் அவருக்கு ரன்னர் என்று பெயர். ரன்னர் ஓடிவரும்போது கேட்கும் சலங்கை ஒலியைக் கேட்டதும் எழுந்து அஞ்சல் அலுவலகம் போய் தங்களுக்கு ஏதேனும் கடிதம் இருக்கிறதா என்று பார்ப்பவர்களும் உண்டு. இந்த காட்சிகளை கல்கியின் “அலை ஓசை” நாவலின் முதல் பகுதிகளில் பார்க்கலாம்.

    கிராமங்களில் கிராம தேவதைகளுக்குக் கோடையில் காப்புக் கட்டுதல் நடைபெறும். அப்போதெல்லாம் கிராமக் கோயில்களின் முன்பு தீமிதி, கரகம் போன்றவைகளும், மண்ணெண்ணையில் எரியும் திரிவிளக்கு வெளிச்சத்தில் ஜவ்வு மிட்டாய் வியாபாரமும், பயாஸ்கோப்புப் பெட்டியும் கோலாகலம்தான். ஊரின் மேற்கே ஒரு பெருமாள் கோயில், கிழக்கே ஒரு சிவன் கோயில், வடக்கே ஆற்றங்கரையோரம் ஒரு மாரியம்மன் அல்லது காளியம்மன் அல்லது ஒரு ஐயனார் கோயில் இப்படி எங்கு திரும்பினாலும் ஆலய வழிபாடுகள். தேர் திருவிழா என்றால் அக்கம் பக்கத்து கிராமத்தாரின் படையெடுப்பு. வசதி படைத்தோர் வெயில் நேரத்தில் திருவிழா காண வந்த மக்களுக்கு நீர்மோர், பானகம் விநியோகம் ஒரு பக்கம். அடடா! அந்த நாளைய தஞ்சாவூர் கிராம வாழ்க்கை சொர்க்க வாழ்க்கைதான்.

    பள்ளிக்கூட மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் முழுவதுமே கொண்டாட்டம்தான். ஆற்றில் தண்ணீர் இருந்தால் இவர்கள் குதித்து, நீராடும் பாங்கில் ஆறு இரண்டுபடும். கோடையில் ஆற்றில் நீர் இல்லாத காலங்களில் இருக்கவே இருக்கிறது மாரியம்மன் கோயில் குளம், சிவன்கோயில் குளம், பெருமாள் புஷ்கரணி, வயல்வெளிகளுக் கிடையில் உள்ள குட்டைகள் இங்கு எங்கெல்லாம் தண்ணீர் கிடைக்கிறதோ அங்கெல்லாம் கொண்டாட்டம் பரவிவிடும்.

    குருகுலம் இருந்த காலத்தில் நாம் வாழ்ந்திருக்கவில்லை. பள்ளிக்கூடங்கள் தொழிற்கூடங்கள் போல காலையில் தொடங்கி உணவு இடைவேளைக்கு மணியடித்துப் பின் மறுபடி கூடி மாலை நான்கு மணிக்கு அவிழ்த்து விட்டால், பிறகு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒட்டு ஏது உறவு ஏது? அப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமை மற்ற விடுமுறை நாட்கள் என்றால், வீடுகளில் பழைய சோறு அல்லது நீராகாரம் முடித்துவிட்டு தலைமை ஆசிரியர் வீட்டுக்குப் போய் விடும் மாணவர்களைப் பார்க்கலாம். மிகப் பெரிய தோட்டமும், அருகில் அவர் வீடும் சோலை போல காட்சியளிக்கும். வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகள் பயிரடப்பட்டு காய்களும் காய்த்துக் குலுங்கும். பெரும்பாலும் அப்போதெல்லாம் உள்ளூர்காரர்களே பள்ளிக்கூடங்களில் பணியில் இருந்தார்கள். அவர்கள் வசதி படைத்தவர்களாகவும், தோட்டம் துரவுகளோடு வாழ்ந்து மாணவர்களைப் பயிற்றுவிப்பதில் ஆர்வமுடையவர்களாக இருந்தனர்.

    ஆசிரியரின் மனைவி சொன்ன காய்கறிகளை பதமாகப் பார்த்துப் பறித்து அவருக்குக் கொடுத்துவிட்டு, காய்கறி பாத்திகளுக்குத் தண்ணீர் பாய்ச்சி, களையெடுத்து முடித்ததும் அழைப்பு வரும். அனைவருக்கும் அவர்கள் வீட்டில் காலை எளிய உணவு அல்லது கெட்டித் தயிர் கலந்த பழைய சாதம், காய்ந்த நாரத்தங்காய் ஊறுகாய் ஆகியவைகள் ஏதேனும் அனைவருக்கும் தரப்படும். அவர்கள் வீட்டு மாட்டை அருகிலுள்ள குளத்துக்கு ஓட்டிச் சென்று குளிப்பாட்டி மாட்டையும் கன்றையும் வீட்டுக்கு அழைத்து வந்து, நெற்றியில் மஞ்சள் குங்குமம் பூசி அதற்கு புல்லையும் அள்ளிப்போட்டு அன்போடு உபசரிக்கும் வழக்கமும் இருந்தது.

    பிறகு ஆசிரியர் கணக்கு அல்லது ஆங்கிலம் போதிப்பார். பதினோரு மணிக்கு அனைவரும் வீடு நோக்கி ஓடிவிடுவர். அங்கு குளித்து முடித்து பகல் உணவு உண்டபின், வீட்டினுள் விளையாட்டுகள். மாலையானதும் மீண்டும் தெருவில் விளையாட்டு. இருட்டியதும் அரிக்கன் விளக்கை ஏற்றிவைத்து பாடங்களைப் படிக்க வற்புறுத்துவதால் சிறிது நேரம் படிப்பதாக பாவனை செய்தபின் இரவு உணவை முடித்து நிலவில் விளையாட்டு, இருளாக இருந்தால், யார் வீட்டுத் திண்ணையிலாவது அமர்ந்து அரட்டை, பாட்டு, நடிப்பு இப்படி. அதிலும் பண்டிகை காலங்கள் என்றால் எங்காவது ஒரு வீட்டுத் திண்ணையில் நாடகமோ, பாட்டுக் கச்சேரியோ அரங்கேறிக் கொண்டிருக்கும். “நாம் இருவர்” படத்தில் வரும் பாரதியார் பாடல்கள் பெரும்பாலும் அனைவருக்கும் மனப்பாடம் ஆகியிருக்கும்.

    எல்லா வீடுகளும் இரவு ஒன்பது மணியானால் ஓய்ந்து விடும். அவரவர்கள் சாப்பாடு முடிந்து படுத்து விடுவர். ரேடியோ, டி.வி. போன்ற பொழுதுபோக்குகள் ஏது? பெண்கள் சிலர் வீட்டினுள் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் தாயம் விளையாடுவது உண்டு. பையன்கள் ஒரு ஜமக்காளம் ஒரு தலையணையை எடுத்து வீட்டுக்கு வெளியே திண்ணையில் போட்டுவிட்டு போய்விடுவார்கள். சில நாட்கள் ஐந்து மைல் தொலைவிலுள்ள பக்கத்து டவுனுக்கு இரண்டாம் காட்சி சினிமா பார்க்கப் போய்விட்டு இரவு மூன்று மணிக்கு வந்து படுப்பார்கள். யார் வீட்டுத் திண்ணையிலும் இவர்கள் படுத்துக் கொள்ளலாம், யாரும் கேள்வி கேட்பாரில்லை.

    ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ என்ற திரைப்படப் பாடல் இப்போது நெஞ்சிலே ஓடுகிறது. மேலே சொன்னவை அனைத்தும் வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் நடந்தவை, அந்த நாள் இனித்தது. கவலை என்பது என்னவென்று தெரியாத பருவம். இப்போது போல நெருக்கடிக்கு மத்தியில் மூட்டைக்குள் கட்டப்பட்ட தானியம் போல அடைந்து கிடக்கும் வழக்கம் இல்லை. வானத்தில் சிறகு விரித்து முடிந்த மட்டும், மேலே, மேலே பறந்து களித்த நாட்கள்.

    malgudi daysஊர் எல்லையில் பெரிய குளம். அது குளமா ஏரியா? இரண்டுக்கும் இடைப்பட்ட பெரிய நீர்த்தேக்கம். அதன் ஒரு புறம் பெரிய மாந்தோப்பு. கோடை விடுமுறை காலம் பார்த்து அந்த மரங்களில் மாங்காய்கள், அடடா, அதில்தான் எத்தனை வகைகள், ஒட்டு, கிளிமூக்கு, துவர்ப்புக்காய், புளிப்பு, கற்பூராதி இப்படி பலதரப்பட்ட மாங்காய்கள் மரங்களில் கிளை தெரியாது, இலைகள் தெரியாது, மாங்காய்கள் தான் தெரியும். தோட்டத்துக்குக் காவல் உண்டு. காவல்காரன் நுழைவு வாயிலுக்கு அருகில் ஒரு குடிசை போட்டுக்கொண்டு இருப்பான். குளக்கரை பின் பக்கம் இருக்கும், மற்ற மூன்று பக்கங்களிலும் உயர்ந்த முள்வேலி, உள்ளே நுழைய முடியாது. ஊர் சுற்றிவரும் பிள்ளைகளில் பலரும் அரை டிராயர் பேர்வழிகள். சிலர் மட்டும் முழங்காலுக்குக் கீழ் வரை ஒரு வேட்டி. குளத்தின் இந்தக் கரையில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும், அதில் ஒரு எருமை மாட்டை ஓட்டிக்கொண்டு போய் குளத்தில் இறக்கி அதன் மீது ஒருவன் ஏறி உட்கார்ந்து விடுவான். வேட்டி கட்டியவனின் வேட்டி உருவப்பட்டு அவனிடம் கொடுக்கப்படும். அவன் குளத்தில் மாட்டின் மீதே போய் தோட்டத்துப் பக்கம் மெதுவாம ஓசையின்றி இறங்கி, கைக்கு எட்டும் உயரத்தில் உள்ள பலவகை மாங்காய்களைப் பறித்து அந்த வேட்டியில் மூட்டை கட்டிக்கொண்டு, திரும்ப வந்து மாட்டின் முதுகில் அந்த சுமையை வைத்துத் தானும் உட்கார்ந்து திரும்புவான். அவன் திரும்பி வரும்வரை ஒரே திகில்தான். காவல்காரனிடம் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது? நல்ல காலம் மாட்டுவதில்லை. அப்படி காவல்காரன் துரத்தி வந்தாலும் ஓடிவந்து மாட்டின்மீது ஏறிக்கொண்டு எமதர்ம ராஜன் போல இந்தக் கரை வந்துவிடுவான்.

    சில சமயங்களில் அப்படி மாங்காய் திருடிய பையன்களைத் தெரிந்து கொண்டு அவர்கள் வீட்டில் வத்தி வைத்து விடுவார்கள். அப்புறம் அவன் வீட்டில் திமிலோகம் தான். அடிவாங்கி, தோப்புக்கரணம் போட்டு, தோட்ட உரிமையாளர் பட்டாமணியாரிடம் சென்று மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தால்தான் சோறு கிடைக்கும். அதிலும் ஒரு ‘கிக்’ இருக்கத்தான் செய்தது. சில ஆசிரியர்கள் தங்கள் தோட்டத்தில் கொய்யா, மா மாரம் போன்றவற்றில் ஒட்டு போடுவதைக் கற்றுத் தருவார்கள். ஒரு வகை மாமரக் கிளையை நன்கு சீவி, அதோடு, வேறொரு மரக்கிளையை ஒட்டு சேர்த்து இணைத்து துணியால் கட்டி வைத்து அதில் தினம் தன்ணீர் ஊற்றிவர அது பிடித்துக் கொண்டு வளரும். அதில் காய்க்கும் மாங்காய் ஒட்டு மாங்காய் எனப்படும். அதன் சுவையே சுவைதான்.

    எட்டாம் வகுப்பு வரையில் தான் அந்த ஊரில் படிக்க முடியும். அதற்குத்தான் ஒரேயொரு பள்ளி. ஆங்கிலேயர்களை மகிழ்ச்சியடைய வைக்கவென்றோ என்னவோ, அந்தப் பள்ளிகளுக்கு ஆங்கிலோ வெர்னாகுலர் ஹையர் எலிமெண்டரி பள்ளி என்று பெயர். ஒன்பதாம் வகுப்புக்கு ஐந்தாறு மைலுக்கு அப்பாலுள்ள டவுனுக்குத்தான் போகவேண்டும். அது ஒரு தனி அனுபவம். திடீரென்று ஒரு நாள் தலைமை ஆசிரியர் மாணவர்களையெல்லாம் அழைத்து விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி, நம்ம நாடு வருகிற ஆகஸ்ட் 15இல் சுதந்திரம் அடையப்போவுது. அதை நாம் நம்ம பள்ளியிலே உத்சாகமாகக் கொண்டாடணும் என்று அறிவித்த காட்சிகள் நினைவுக்கு வருகிறது.

    போதும் இந்தக் கிராம வாழ்க்கை அனுபவத்தை அசைபோட்டுப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்துவிட்டு, டவுனுக்குப் போன அந்த அனுபவத்தை மறந்தே விடலாம். கிராம வாழ்க்கை அன்று சொர்க்கம். இன்று நினைத்தாலும் மனதுக்கு இதமாக இருக்கிறது. புறநானூற்றில் “தொடித்தலை விழுத்தண்டூன்றினார்” எனும் பெயரில் எழுதப்பட்ட ஒரு பாடல் உண்டு. “இனி நினைந்திரக்கமாகின்று….” எனத் தொடங்கும் அந்தப் பாடலில், வயது முதிர்ந்த கிழவர் ஒருவர், உடல் நடுக்கமடைந்து, கண் பார்வை மங்கி, தடியூன்றி நடக்கும் பருவத்தில் தன்னுடைய இளமைக் காலத்து சாகசங்களை நினைத்துப் பார்த்துப் பெருமூச்சுவிடும் பாடல் அது. அதைப் போலத்தான் இப்போதும் “இனி நினைந்திரக்கமாகின்று” என்று பெருமூச்சு விடும் ‘பெரிசுகள்’ என்னைப்போல ஏராளமாக உண்டு.

    படம் உதவி: www.oldindianphotos.in

    Share
  • நாராயண தீர்த்தர் ஆராதனை

    தஞ்சை வெ. கோபாலன்                    

    தஞ்சாவூரை அடுத்த கண்டியூரிலிருந்து கல்லணை செல்லும் பாதையில் அமைந்துள்ள சிற்றூர் திருப்பூந்துருத்தி. இங்கு வரும் பிப்ரவரி 24ஆம் தேதி நாராயண தீர்த்தர் ஆராதனை நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து தினமும் இசை நிகழ்ச்சிகளும், உபன்யாசங்களும், வேத பாராயணங்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன. விழா 26ஆம் தேதி நிறைவு பெறுகிறது என்று ஸ்ரீநாராயண தீர்த்த ஸ்வாமிகள் ஆராதனை விழா குழுவினர் தெரிவிக்கின்றனர். ஆராதனை நடைபெறும் காலங்களில் குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள் சமாதியில் அபிஷேக அலங்கார அர்ச்சனை முதலானவைகள் சிறப்பாக நடைபெறும். யார் இந்த நாராயண தீர்த்தர்?

    ஆந்திர நாட்டில் பிறந்து அங்கு அருந்தவங்கள் புரிந்து ஆயர்குலக் கோமான் ஸ்ரீகண்ண பிரானின் லீலைகளால் கவரப்பட்டு, பக்தி வெள்ளத்தில் திளைத்து அங்கிருந்து புறப்பட்டு தேசாந்தரம் வந்து தமிழ்நாட்டில் வரகூர் எனும் புண்ணிய க்ஷேத்திரத்தில் வந்து தங்கி, அங்கு கோயில் கொண்டுள்ள வெங்கடேச பெருமாளின் அருளால் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி எனும் அற்புதமான இசை வடிவத்தை உருவாக்கித் தந்து, அத்துடன் சாண்டில்ய பக்தி ஸூத்ர வியாக்யானம், ஹரி பக்தி ஸுதார்ணவம், பாரிஜாதபஹரணம் போன்ற பல நூல்களை இயற்றியவர் இவர். நீண்ட நாட்கள் வரகூரில் தங்கிய பிறகு அங்கிருந்து புறப்பட்டு தன்னுடைய வாழ்வின் கடைசி கட்டத்தில் திருப்பூந்துருத்தி தலத்துக்கு வந்து சிலகாலம் வாழ்ந்தபின் அங்கேயே ஜீவசமாதி அடைந்தவர் நாராயண தீர்த்தர்.

    narayana-theerthar-2இவருடைய இயற்பெயர் தள்ளவஜுல கோவிந்த சாஸ்த்ருலு என்பது. 1650ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1745இல் ஜீவசமாதியடைந்தார். ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரிக்கருகில் பிறந்தவர். இவர் பிறந்த ஆண்டு நிச்சயமாக கணிக்கப்படவில்லை யென்றாலும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலக பண்டிதர்கள் இவர் பிறந்த வருஷத்தை 1650 என்று கணித்திருக்கிறார்கள். 1745இல் இவர் ஜீவசமாதி அடைந்த போது 95 ஆண்டுகள் வயதாகியிருக்க வேண்டும். மிக இளம் வயதிலேயே இசையை நன்கு பயின்றதோடு, புராணங்களிலும் ஆர்வம் கொண்டு படித்திருக்கிறார். வடமொழி இலக்கியங்களில் தீவிரமாகப் பயிற்ச்சி பெற்று அவற்றில் தேர்ந்து விளங்கினார். இளம் வயதில் இவருக்கு துறவறத்தில் பற்று மிகுந்து தன் வாழ்வை சமயம் சார்ந்த பணிகளுக்கென்று அர்ப்பணித்துக் கொண்டார்.

    இசைக் கலையில் தேர்ந்தவராக மட்டுமல்லாமல் நடனக் கலையிலும் இவர் தேர்ச்சி பெற்றிருந்தார். இவருடைய சங்கீத படைப்புக்களில் 34க்கும் மேற்பட்ட ராகங்களைக் கையாண்டிருக்கிறார். தாள வகைகளிலும் இவர் திரிபுட, ஆதி, ரூபகம், சாபு, ஜம்ப, மத்ய, விளம்ப, ஏக, அட தாளங்களைக் கையாண்டிருக்கிறார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் நாட்டியத்தில் பயன்படுத்தி ஆடும் வகையில் இயற்றப்பட்டிருப்பதை உணர முடிகிறது. இவர் இயற்றிய நூல்கள் பதினைந்துக்கும் மேற்பட்டவை. இவைகளில் சில காசி இந்து சர்வகலாசாலையில் கிடைக்கின்றன. பாரிஜாதபஹரணம் எனும் நூல் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் கிடைக்கிறது.

    ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி என்பது இவருடைய சிறப்பான படைப்பாக விளங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளை விளக்கும் இந்த நூல் வடமொழியில் இயற்றப் பட்டிருக்கிறது. யமுனை நதிக்கரையில் கோபியர்களுடன் ஓடி விளையாடித் திரிந்த பால கிருஷ்ண லீலைகளை விளக்கும் வகையில் அமைந்த இந்த பாடல்கள் ருக்மணி கல்யாணம் வரையில் சொல்லப்பட்டிருக்கிறது. தரங்கம் எனும் சொல்லுக்கு அலைகள் என்பது பொருள். கடல் அலைகளைப் போல மேலே மேலே வந்து மோதும் இசை தாளக் கட்டில் இவரது தரங்கிணி அமைந்திருப்பதால் இந்தப் பெயர் பெற்றது. மிக எளிமையான அழகான வரிகளைக் கொண்டது இந்த தரங்கிணி. ஜெயதேவரின் அஷ்டபதி இவருக்கு உந்துதலாக இருந்திருக்கலாம்.

    இவர் வாழ்ந்த ஊரைச் சுற்றியுள்ள நடுக்காவேரி, வரகூர், திருப்பூந்துருத்தி ஆகிய இடங்களில் ஆற்றங்கரை தோப்புகளும், துறவுகளும் இவருடைய கவிதா சக்தியை ஊக்குவித்திருக்க வேண்டும். இவர் இப்படி இசையும், இறை பக்தியுமாக இருந்த நிலையில் இவருக்குத் தீராத வயிற்று நோய் வந்து துன்பப்படுத்தியது. தன் நோய் தீர ஏழுமலையான் அருள் நாடி அங்கு செல்ல உடலில் வலிமை தர வேண்டி இறைவனிடம் முறையிடலானார். அப்போது எழுந்த ஒரு தெய்வீக ஒலி இவர் கண்களுக்குத் தென்படும் ஒரு பன்றியைப் பின் தொடர்ந்து, அது எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் செல்லப் பணித்தது. அப்படி அவர் கண்ணில் பட்ட ஒரு பன்றியை இவர் பின் தொடர அது பூபதிராஜபுரம் எனும் ஊரைச் சென்றடைந்தது. அந்த ஊர்தான் இப்போது வரகூர் எனப்படும் தலம். இவரைப் பற்றி அறிந்திருந்த வரகூர் மக்கள் இவர் தங்கள் ஊருக்கு வருவதையறிந்து மகிழ்ச்சியடைந்தனர். இவருடைய வரவுக்குப் பின் அவ்வூர் மக்கள் இவரது வழிகாட்டுதலோடு அங்கு வெங்கடேசப் பெருமானுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவித்தார். பின்னர் இவர் குடமுருட்டி ஆற்றின் கரையில் தன் வாழ்வைக் கழிக்கத் தொடங்கினார்.

    Share
  • சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்

    தஞ்சை வெ. கோபாலன்

    ராஜாஜி அவர்களுடைய நினைவு தினத்தையொட்டி அவரைப் பற்றிய சுவாரசியமான இரு நிகழ்வுகளை நினைவுகூரலாம் என நினைக்கிறேன். 1930 வேதாரண்யம் சென்று உப்பு அள்ளும் சத்தியாக்கிரகம் செய்வதற்காக நூறு தொண்டர்களுடன் ராஜாஜி திருச்சியிலிருந்து பதினைந்து நாட்கள் நடைப்பயணமாக ஊர் ஊராக நடந்து சென்றார். அப்படி அவர் கும்பகோணம் சென்றபோது அங்கு சத்தியாக்கிரகிகளை கும்பகோணம் நகர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருக்கருகாவூர் பந்துலு ஐயர் என்பார் வரவேற்று இப்போதைய காந்தி பூங்கா இருக்குமிடத்தில் அப்போதிருந்த திடலில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் தொடங்குமுன்பாக தொண்டர்கள் உண்டியல் குலுக்கி வசூல் செய்து கொண்டிருந்தனர். அப்போது சுயமரியாதை இயக்கத்தார் சிலர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர். பின்னர் கூட்டம் தொடங்கும் சமயம் கூச்சலிட்டு மண்ணை வாரி இறைத்து இடையூறு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் விநியோகித்த துண்டுப் பிரசுரத்தில் “ராஜகோபாலாச்சாரியே! உன் பெயரோடு சக்கரவர்த்தி என்று போட்டுக் கொண்டிருக்கிறாயே, நீ எந்த நாட்டுக்கு சக்கரவர்த்தி?” என்று இருந்தது.

    rajajiகூட்டம் தொடங்கும் சமயம் ராஜாஜி மேடையேறிப் பேசத் தொடங்கினார். அப்போது ரகளையில் ஈடுபட்டவர்கள் அதே கேள்வியைக் கேட்டு கூச்சலிட்டனர். அப்போது ராஜாஜி சொன்னார், நான் இப்போது உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லப் போவதில்லை. நான் வேதாரண்யம் சென்று உப்பு சத்தியாக்கிரகம் செய்யச் சென்று கொண்டிருக்கிறேன், ஆகையால் என் கவனம் முழுவதும் அதில்தான் இருக்கும். ஆனால் உங்கள் கேள்விக்குப் வேறொரு நாளில் நான் பதில் சொல்வேன், பதிலாகவோ அல்லது செயலாகவோ அது இருக்கும் என்றார். அப்போது அவர் என்ன சொல்கிறார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் அவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்ற பிறகு முதன் முதலில் சென்னைக்கு வந்தபோது அவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாராக வந்திறங்கியபோதுதான் தெரிந்தது அவர் இப்போது இந்தியாவுக்கே சக்கரவர்த்தி என்பது. அதை அன்று ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் புரிந்து கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை.

    இன்னொரு சம்பவம். 1943இல் சென்னையில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆண்டுவிழாவில் திரு வி.க. கலந்து கொள்ள முடியாததால் அவருக்குப் பதிலாக பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தத்தை நிர்வாகி ராமானுஜாச்சாரியார் என்பார் பேச அழைத்திருந்தார். விழாவுக்கு ராஜாஜி தலைவர். டி.எம்.பி.மகாதேவன் ஆங்கிலத்திலும், தெலுங்கில் ஒருவரும், தமிழில் அ.ச.ஞா. அவர்களும் பேசினர். கூட்டம் தொடங்கியதிலிருந்து மேடையில் உட்கார்ந்திருந்த ராஜாஜி அருகில் வீற்றிருந்த அ.ச.ஞானசம்பந்தத்தை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தார். ஏன் அவர் இப்படிப் பார்க்கிறார் என்பது பேராசிரியருக்குப் புரியவில்லை. அழைப்பிதழில் பேராசிரியரின் முதலெழுத்துக்களாகிய அ.ச. என்று போடாமல் வெறுமனே ஞானசம்பந்தம் ஆஃப் பச்சையப்பாஸ் என்று போடப்பட்டிருந்தது.

    கூட்டம் தொடங்கியது; முதலில் டி.எம்.பி.மகாதேவன் ஆங்கிலத்தில் பேசி முடித்துவிட்டார். அடுத்துப் பேச பேராசிரியரை ராஜாஜி அழைக்க வேண்டும். அப்படி அவர் அழைத்தபோதே ஏதோ வேண்டா வெறுப்பாக, “இப்போ மகாதேவன் பேசி முடிச்சுட்டார், அடுத்து ஞானசம்பந்தமாம், பச்சையப்பாவாம், அவர் இப்போ தமிழில் பேசுவார்” என்று அறிவித்தார். இதைக் கேட்டு பேராசிரியருக்கு வருத்தம் ஏற்பட்டது. எத்தனை பெரிய தலைவர், தன்னை இப்படி இளக்காரமாக அறிவித்து விட்டாரே என்று மனம் வருந்தி நேரடியாக அவையினரை விளித்துப் பேசாமல் பேசத் தொடங்கினார்.

    மேடையில் வைக்கப்பட்டிருந்த ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் படங்களை அவையோருக்குச் சுட்டிக் காண்பித்துவிட்டு அவர் பேசியது: “தயை கூர்ந்து எல்லோரும் இவ்விரு படங்களையும் கூர்ந்து கவனியுங்கள். இதில் தலையில் முண்டாசு கட்டிக்கிட்டு இருக்கிறாரே அவர் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அறிவே வடிவானவர். இதோ இங்கு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறாரே கூட்டத்தின் தலைவர் அவரைப் போல அறிவில் சிறந்தவர். இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா என்கிறீர்களா? அதற்காகத்தான் சொன்னேன், இத்தனை பெரிய அறிவின் வடிவம், அருகில் இருக்கிறதே ஒரு படம் தெய்வீகப் புன்னகையோடு ஒருவர், தற்குறி நம்பர் ஒன், இதை நான் சொல்லவில்லை, சுவாமி விவேகானந்தரே “You are the greatest illiterate in the world” என்று அவரிடமே நேரில் சொன்னார். அவருடைய காலில் போய் விழுந்தார் அறிவாளியான விவேகானந்தர். அதுதான் ஆச்சரியம். இந்த அறிவு எல்லாம் ஒரு பைசாவுக்குக்கூட பயன்படாது. அறிவைவிட உயர்ந்தது உணர்வு. அதைவிட உயர்ந்தது இறையுணர்வு; அதனையும் விட உயர்ந்தது இறையனுபவம். அந்த நிலையை அடைந்துவிட்டவர்கள் திருவடிகளில் அறிவுக் களஞ்சியங்கள் போய் விழுவதில் புதுமையொன்றுமில்லை” இப்படிப் பேசத் தொடங்கினார் அ.ச.ஞா.

    இருபது நிமிஷம் பேசியபின் பேராசிரியர் உட்கார்ந்துவிட்டார். ராஜாஜி இவரிடம் “இன்னும் கொஞ்சம் பேசலாமே!” என்றார். இல்லை எனக்கு இருபது நிமிஷங்கள்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனால் முடித்துவிட்டேன் என்றார் அ.ச.ஞா. ராஜாஜி சொன்னார், நான் தலைவர் என்கிற முறையில் இன்னொரு இருபது நிமிஷங்கள் தருகிறேன் பேசுங்கள் என்றார்; கூட்டத்தினரும் அதனை ஆமோதித்தனர். அ.ச.ஞா. இன்னொரு இருபது நிமிஷம் பேசும் வரை கூர்ந்து கேட்டார் ராஜாஜி.

    பேசி முடித்து உட்கார்ந்ததும் ராஜாஜி அ.ச.ஞா.விடம் கேட்ட கேள்வி, உங்கள் இனிஷியல் என்ன என்பது. அவர் அப்படி ஏன் கேட்டார் என்பது பேராசிரியருக்குப் புரிந்து விட்டது. உடனே அவர் ராஜாஜியிடம் “ஐயா, என்னுடைய இனிஷியல் T.L. அல்ல அ.ச. என்பதுதான்” என்றார். இவருடைய பேச்சு சாமர்த்தியத்தைப் புரிந்து கொண்ட ராஜாஜி “தஞ்சாவூர் ஜில்லாவோ?” என்றார். “இல்லை ஐயா, அரசங்குடி, திருச்சியை அடுத்த கல்லணைக்கு அருகில் உள்ள ஊர், தந்தையார் சரவண முதலியார்” என்றார் பேராசிரியர். பின்னர் ராஜாஜி பேச எழுந்து விட்டார். பேராசிரியர் பேசிய அதே தலைப்பைத் தொடர்ந்து ராஜாஜியும் விரிவாகப் பேசினார்.

    இது என்ன? ராஜாஜி பேராசிரியரை முறைத்துப் பார்த்ததற்கும், இவ்விருவருக்குமிடையே நடந்த உரையாடலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? சம்பந்தம் இருக்கிறது. ராஜாஜி முதன் மந்திரியாக இருந்த சமயம் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த T.L.திருஞானசம்பந்தம் என்பார் ஒரு பெரிய மண் சட்டியில் மலத்தைக் கரைத்துக் கொண்டு வந்து ராஜாஜியின் வீட்டு வாசலில் போட்டு உடைத்தார். அந்த மனிதர்தான் இவர் என்று ராஜாஜி அ.ச.ஞானசம்பந்தத்தை நினைத்து விட்டார். அந்த மனிதருக்கு வயது அதிகம் இருக்குமே, இவர் இளைஞராக இருக்கிறாரே என்பதை நினைத்துத்தான் ராஜாஜி முறைத்து முறைத்து இவரைப் பார்த்திருக்கிறார். அவர் மலச் சட்டியைப் போட்டு உடைத்த கோபம் அவர் அறிமுகம் செய்து வைத்ததிலும் தெரிந்தது. இவர் வேறு ஆள் என்பதும், இவர் பேச்சில் இருந்த அழகும் ராஜாஜியைச் சிந்திக்க வைத்தது, போதாதற்கு அ.ச.ஞா. தன்னுடைய இனிஷியல் T.L. இல்லை அ.ச. என்றதும் புரிந்து கொண்டார் ராஜாஜி. இவ்விரு மேதைகளும் அடுத்தவர் அறியாமல் அரியதொரு நாடகத்தையே அங்கு அரங்கேற்றி விட்டனர். இந்த செய்தியை “நான் கண்ட பெரியவர்கள்” எனும் நூலில் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்களே எழுதியிருக்கிறார்.

    Share
  • எதிரியின் வீட்டில் கையை நனைக்கலாமா?

    தஞ்சை வெ.கோபாலன்

    இப்போதெல்லாம் எதிரிகள் என்றால் ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக்கொள்ளக்கூட முன்வர மாட்டார்கள். பொதுவான ஒரு நிகழ்ச்சிக்குப் போவதென்றாலும் ஒருவர் வந்துவிட்டுப் போன பிறகுதான் மற்றவர் அங்கு விஜயம் செய்வார். இப்படி எதிரிகளின் நடவடிக்கைகள் கவனமாகக் கண்காணிக்கப்பட்டு உரியவர்களுக்குச் செய்தி போய்விடும். இதுபோன்ற மனப்போக்கு எப்போது தொடங்கியது? இது சரியா? பல ஆண்டுகளுக்கு முன்பு நம் பகுதிகளில் இருந்த பெரியவர்கள் விரோதம் என்பது எந்தத் துறையிலோ, அதோடு மட்டும் விரோதம் பாராட்டிவிட்டு மற்ற சமூகப் பழக்க வழக்கங்களில் சுமுகமாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பல பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது தெரிய வருகிறது. அதுபோன்றதொரு சூழ்நிலை மனதுக்கு இதமாகவும், அந்த நிலைமை இப்போது வராதா என்கிற ஏக்கமும் கூடவே ஏற்படுகிறது. இந்த எண்ணங்கள் எனக்குத் தோன்ற காரணமாக இருந்தது ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது அதில் காணப்பட்ட நிகழ்ச்சிகள்தான்.

    200px-Ptrajanதமிழவேள் பி.டி.ராஜன் என்றதும், அவர் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர், மிகப் பெரிய செல்வந்தர், உத்தமபாளையம் ஜமீன், மதுரை மீனாட்சியின் பரம பக்தர், 1920 முதல் 1937 வரை சென்னை மாகாணத்தை ஆண்ட ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சராகப் பதவி வகித்தவர் என்பதெல்லாம் ஓரளவுக்குத் தெரியும். மேலும் ஒரு கொசுறுச் செய்தியாக அவருடைய புதல்வர் பி.டி.ஆர்.பழநிவேல்ராஜன் தி.மு.க.ஆட்சியில் சென்னை மாநில சட்டமன்ற சபாநாயகராகப் பதவி வகித்தவர் என்பதும் தெரியும். வேறு என்ன தெரியவேண்டும்? ஆம், மிக முக்கியமான செய்தியொன்று, முதல் பாராவில் சொன்ன விவரங்களின் அடிப்படையில் இவரைப்பற்றிய விருந்தோம்பல் அல்லது அன்னதானம் அல்லது எதிரிகளுக்கும் பசியாற உணவளித்த வரலாறு இவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவரைப் பற்றி முழுமையான வரலாற்றைத் தெரிந்து கொள்வதே அறிவுடைமை. ஒரு பக்க செய்திகளோடு நிறுத்திக் கொள்வது, நாம் அவர்களுக்குச் செய்யும் துரோகமாகும். அந்த வகையில் பி.டி.ராஜன் பற்றி ஒரு சில விபரங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    பி.டி.ராஜன் அவர்களுடைய முழுப்பெயர் பொன்னம்பலத் தியாகராஜன். மதுரையில் இருக்கும் நாட்களில் ஒரு நாள்கூட தவறாமல் மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குச் சென்று தரிசனம் செய்துவருவார். ஜஸ்டிஸ் கட்சி என்றதும் அதன் அடுத்த பிறவிகளான திராவிடக் கட்சிகள் நம் நினைவுக்கு வருவதும், அவர்களது நாத்திகக் கொள்கைகளும், கடவுள் மறுப்பும் நம் மனதில் தோன்றுவதும் தவிர்க்க முடியாதது. ஆனால் அந்தக் கால ஜஸ்டிஸ் கட்சியினரில் பெரும்பாலோர் ஆத்திகர்களாவும், இறை நம்பிக்கை உடையவர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள் என்பது ஏனோ அதிகம் வெளிச்சத்துக்கு வரவில்லை.

    சென்னையில் இருந்த நாட்களில் அவர் காலத்தில் மிகச்சிறிய கருவறையொன்றில் குடிகொண்டிருந்த வடபழனி முருகனை தரிசிக்காமல் அவர் இருந்ததில்லை. 1963இல் பெரும் செலவில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலய குடமுழுக்கினை ஏற்பாடு செய்து நடத்தியவர் இவர். இவரைப் பற்றி எழுதும் தமிழறிஞர் ஒருவர் சொல்லும் செய்தி, இவர் ஆழ்வார்பேட்டை மெளபரீஸ் சாலையில் (இப்போது TTK சாலை), அமைச்சராக இருந்த காலத்தில் வசித்து வந்தாராம். அந்த வீட்டில் பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வருவோ போவோர் அனைவரும் நேரே போய் இலையில் உட்கார்ந்து அறுசுவை விருந்து சாப்பிட்டு விட்டுப் போகலாமாம். யார், எவர் என்பதெல்லாம் கேள்வி இல்லை; பசித்தவர் யார் வேண்டுமானாலும் உள்ளே சென்று சாப்பிடலாமாம். மதுரை இல்லத்திலும் அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதே நிலைமைதானாம். அந்தக் காலத்தில் இதுபோன்ற அன்னதானம் மிக உயர்ந்தது. இப்போது போல தெருவுக்கு பத்து உணவகங்கள், தெரு முனைகளில் எல்லாம் டீக்கடைகள் என்று இல்லாத காலம். இப்படிப்பட்டதொரு தர்மத்தை விளம்பரமில்லாமல், இன்றைய தலை முறையினருக்கும் இப்படியெல்லாம் நடந்தது என்பது தெரிவிக்காத அளவுக்கு மெளனமாக இந்த பெருஞ்செயல் நடந்திருப்பது அதிசயமாக எண்ணத் தோன்றுகிறது.

    இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்ற ஒரு நிகழ்ச்சிதான் நம்மை திக்குமுக்காட வைக்கிறது. இப்படியுமா நடக்கும் என்று வியக்க வைக்கிறது. அது என்ன? சொல்கிறேன்! 1928ஆம் வருஷத்தில் சென்னை மாகாண லெஜிஸ்லேடிவ் கவுன்சிலுக்குத் தேர்தல் நடைபெற்றது. ஜஸ்டிஸ் கட்சி சார்பில் பி.டி.ராஜன் வேட்பாளர். அவரை எதிர்த்து மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான தியாகி மட்டப்பாறை வெங்கட்டராமையர் என்பார் காங்கிரசின் சார்பில் போட்டியிடுகிறார். சர் பி.டி.ராஜன் அவர்களோடு ஒப்பிடுகையில் ஐயர் மிகவும் வசதிக் குறைவானவர். காங்கிரஸ் தியாகி, பிரபலமான தலைவர் என்பதுதான் அவருக்கு உள்ள தகுதிகள். இதில் இன்னொரு வேடிக்கை இவ்விருவரும் நெருங்கிய நண்பர்கள் வேறு. எதிரெதிர் கட்சியினர்தானே தவிர எதிரிகள் அல்லர்.

    தேர்தல் சமயத்தில் மட்டப்பாறை ஐயருக்கு ஆதரவு திரட்ட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அனைவரும் பல இடங்களிலிருந்து சொந்த செலவில் வந்து தங்கி பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள். அப்படி அவர்கள் பணியாற்றிய போது பகல் உணவுக்கு பி.டி.ராஜன் இல்லத்துக்குத்தான் வருவார்களாம். அவர்கள் எதிர் கட்சிக்குப் பணியாற்றுபவர்கள் என்றெல்லாம் பாராமல் அவர்கள் அனைவருக்கும் உணவு படைத்தவர் பி.டி.ஆர். தேர்தல் முடிவும் வந்தது, அதில் பி.டி.ஆர். வெற்றி பெற்று விட்டார். இந்த முடிவு பற்றி சொல்லும்போது மட்டப்பாறை ஐயர் சொன்னாராம், “சோறு போட்டே பி.டி.ஆர். என்னைத் தோற்கடித்து விட்டார்” என்று. என்ன பண்பாடு! என்ன ஆரோக்கியமான அரசியல். ஊ….ம், இப்போது நினைத்துப் பார்த்தால்? “இனி நினைந்திரக்கமாகின்று……..” எனும் தொடித்தலை விழுத்தண்டூன்றினாரின் புறநானூற்றுப் பாடல் நினைவுக்கு வருகிறது.

    ஆதாரம்: “நான் கண்ட பெரியவர்கள்” பேரா.அ.ச.ஞானசம்பந்தன், கங்கை புத்தக நிலையம், சென்னை.

    படத்திற்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/P._T._Rajan

    Share
  • கோவை அ.அய்யாமுத்துவின் “நினைவலைகள்”

    தஞ்சை வெ.கோபாலன்.

    Kovai Khadar Ayyamuthu
    கோவை அ. அய்யாமுத்து

    கோவை அய்யாமுத்து – ஈ.வே.ரா.பெரியாருக்கும் ராஜாஜிக்கும் நெருங்கிய நண்பர். தமிழ்நாட்டில் கதர் இயக்கத்தை முன்னின்று நடத்தியவர். அவரும் அவர் மனைவி கோவிந்தம்மாளும் தேச சுதந்திரத்துக்காக சிறை சென்றவர்கள். காந்திஜியிடமே போய் நேருக்கு நேர் சண்டை போட்டுவிட்டு வந்தவர்.அவர் தன்னுடைய அனுபவங்களை “நினைவலைகள்” எனும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார். அதிலிருந்து ஒரு சிறு பகுதி இதோ:

    (பெரியார் தான் நடத்திய “குடியரசு” பத்திரிகைக்கு கோவை அய்யாமுத்துவை அழைக்கிறார். அதைப் பற்றி தன் நூலில் அய்யாமுத்து எழுதியுள்ள பகுதி)

    ஈ.வெ.இராமசாமி நாயக்கர்
    ஈ.வெ.இராமசாமி நாயக்கர்

    பெரியார் நாயக்கருடன் சில மாதங்கள்

    1929ஆம் ஆண்டில் ஒருநாள் ஈ.வே.ராமசாமிப் பெரியார் என்னைத் தேடிக்கொண்டு புஞ்சை புளியம்பட்டிக்கு வந்து சேர்ந்தார். அவர் ஈரோட்டிலிருந்து “குடியரசு” எனும் வாரப்பத்திரிகை யொன்று வெளியிட்டுக் கொண்டிருந்தார். அதனை 1926ஆம் ஆண்டில் அவர் ஆரம்பித்தார். அதன் ஆரம்ப விழாவை நடத்தியவர் திருப்பாதிரிப்புலியூர் சிவமடத் தலைவராகிய ஞானியார் சுவாமிகள். ஈ.வே.ரா. அதன் ஆசிரியர்.

    ஈரோடு கருங்கல்பாளையம் வ.மு.தங்கப்பெருமாள் பிள்ளையெனும் பழுத்த வைஷ்ணவரும் எம்.ஏ.,பி.எல்., படித்தவருமான அவர் அதன் துணை ஆசிரியராகச் சிலகாலம் இருந்தார். நாயக்கரின் பாஷையும், கொள்கையும் அவருக்குப் பிடிக்காததால் அவர் விலகிக் கொண்டார்.

    “குடியரசு” பத்திரிகைக்கு நான் பிரதி வாரமும் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். சிற்சில சமயம் நான் எழுதாத கட்டுரைகளையும், என் பெயரைப் போட்டு நாயக்கர் பிரசுரித்து விடுவார். நாயக்கர் மேடைகளில் ஏறிச் சரமாரியாகப் பேசுவாரேயொழிய எழுதுவதில் அவர் வல்லவரல்ல. அவர் பேசுவதைப் பிறர் குறிப்பெடுத்து எழுதச் சொல்லி “குடியரசில்” பதிப்பதுதான் அவர் வேலையாக இருந்தது. “குடியரசு”க்குச் சொந்தமான அச்சாபீஸ் ஈரோட்டில் நாயக்கருக்குச் சொந்தமான கட்டடமொன்றில் இருந்தது.

    நாயக்கர் அங்குமிங்குமாகப் போய்க் கொண்டிருந்தபடியால் அவரால் பத்திரிகை காரியாலயத்தில் அமர்ந்திருந்து எதையும் கவனிக்க முடியவில்லை. பொன்னம்பலனார், குருசாமி, ஈஸ்வரன், சிதம்பரனார், லிங்கம், நடராசன், வெங்கடாசலம் போன்ற ‘கெளரவ’த் தொண்டர் களிடம் எதையும் நம்பி ஒப்புவிக்க அவர் மனம் இசையவில்லை. அவரது சாதிக்காரரான கரிவரதசாமி நாயக்கர் என்பவரிடம் “குடியரசு” காரியாலயப் பொறுப்பையும் பணப் பொறுப்பையும் ஒப்புவித்திருந்தார்.

    நாயக்கர் “குடியரசு” காரியாலயத்தின் கணக்கு வழக்கு ஒன்றையும் கவனித்துப் பார்க்க மாட்டார். வாரம் எட்டாயிரம் பிரதிகள் அச்சாகிக் கொண்டிருந்தது. நாயக்கர் ஒரு குத்து மதிப்பாக மாதம் எவ்வளவு ஆதாயம் வரும் என்பதை மனதில் கணக்கிட்டுக் கொண்டு கரிவரதசாமியை மாதாமாதம் பணம் கேட்பார். அவரும் கொடுத்துக் கொண்டிருந்தார். என்னை நாயக்கர் தேடிவந்த சமயம் அந்த வருவாய் நின்று போயிருந்தது.

    “குடியரசு” பத்திரிகை நஷ்டத்தில் வேலை செய்கிறது. அதை என்னால் நீடித்து நடத்த முடியாது. நீங்கள் வந்து அதன் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அதைத் தொடர்ந்து நடத்துவேன். இல்லையானால், அடுத்த மாசமே அதை நிறுத்திவிடப் போகிறேன். என்ன சொல்கிறீர்கள்? என்றொரு வெடிகுண்டை நாயக்கர் வீசினார். அது என்னைத் தூக்கி வாரிப் போட்டது. …….

    …..”எனது கட்டுரைகள் வாரந்தோறும் “குடியரசு” (ஈ.வே.ரா நடத்தியது) பத்திரிகையில் பிரசுரமாயிற்று. பின்னர் அதனைப் புத்தக ரூபத்தில் காஞ்சிபுரம் குமரன் அச்சகத்தார் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்து “குடியரசு” பதிப்பகம் பல பதிப்புகள் பல்லாயிரக் கணக்கில் அச்சிட்டுப் பிரதியொன்று நான்கணாவுக்கு விற்றுக் கொண்டிருந்தது. எனவே நாயக்கர் (ஈ.வே.ராமசாமி நாயக்கர்) என்னைத் தேடி வந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

    “கொஞ்சம் அவகாசம் கொடுங்கள், நான் தீர யோசித்துப் பதில் சொல்கிறேன்” என்றேன்.

    “யோசிப்பதற்கு என்ன இருக்கிறது. நீங்கள் வராவிட்டால் நான் ‘குடியரசு’ப் பதிப்பகத்தை இழுத்துச் சாத்திவிடுவேன். இரண்டிலொன்று பதில் இப்போது சொல்லியாக வேண்டும்” என்றார். நாயக்கருக்கு என் மீது எத்தனை பிரியம்! எத்தனை நம்பிக்கை!!

    “சரி வருகிறேன்! ஆனால் ஒரு நிபந்தனை. ‘குடியரசு’ அச்சகத்தை ஈரோட்டிலிருந்து சென்னைக்கு மாற்றிவிட நீங்கள் சம்மதிக்க வேண்டும். குடியரசின் நிர்வாகத்தில் நீங்கள் தலையிடக் கூடாது. உங்களுக்கு மாதம் ஐநூறு ரூபாய் கொடுத்து வருவேன். நீங்கள் எழுதிக் கொடுப்பதை அப்படியே பிரசுரிப்பேன். நான் மாதம் என் செலவுக்கு அறுபது ரூபாய்க்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டேன். எனக்கு இஷ்டமான பேர்களை நான் சேர்த்துக் கொள்வேன். அவர்களுக்கு என் இஷ்டம்போல் பணம் கொடுப்பேன். அதையெல்லாம் நீங்கள் காதில் போட்டுக் கொள்ளக் கூடாது. சென்னைக்கு அச்சாபீசை மாற்றுவதற்கும் அங்கு சென்றபின் ஏற்படும் உடனடிச் செலவுகட்கும் நீங்கள் இரண்டாயிரம் ரூபாய் என்னிடம் முன் பணமாக மொத்தமாகக் கொடுத்துவிட வேண்டும். சம்மதமா?” என்றேன்.

    நாயக்கர் திருதிருவென்று விழித்தார். சென்னைக்குச் சென்றால் தனது கண்காணிப்பே இல்லாது போய்விடுமே என்று மலைத்தார்.

    “உங்கள் கண்காணிப்புக் கூடாதென்பதற்காகத்தான் சென்னைக்கு மாற்ற வேண்டுமென்று சொல்கிறேன்” என்றேன் நான் அழுத்தம் திருத்தமாக.

    “சரி” என்று சம்மதம் கூறிவிட்டு ஈரோடு சென்றார். அவருடன் யார் யார் வந்திருந்தார்களென்று எனக்கு இப்போது நினைவில் இல்லை.

    சர்க்கா சங்கத்திலிருந்து ஆறுமாத காலம் ரஜா எடுத்துக் கொண்டு நானும் என் மனைவியும் புஞ்சை புளியம்பட்டியிலிருந்து ஈரோடு சென்றோம்.

    “குடியரசு” பத்திரிகைக் காரியாலயம் சென்னைக்கு மாற்றப்படுவதாகவும், அதன் முழுப் பொறுப்பும் கோவை அ.அய்யாமுத்து ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் எனவே இரண்டு வாரங்கட்கு பத்திரிகை வெளிவராதென்றும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்துவிட்டு மெஷினரி சாமான்களையெல்லாம் கட்டிப் பந்தோபஸ்தாக ரயிலேற்றிவிட்டு நானும் என் மனைவியும் சென்னைக்குக் கிளம்பினோம்.

    சென்னை பெரும்பூரில் இருந்த எனது பாக்தாத் தோழன் (இளம் வயதில் அய்யாமுத்து ஈராக் பாக்தாதில் இருந்தார்) டி.வி.சிவக்கொழுந்து விட்டில் போய்த் தங்கினேன். சென்னை காஸ்மாபலிடன் கிளபுக்கு அடுத்தாற்போல் வடபுறம் இப்போது ‘பிளாசா’ தியேட்டர் உள்ள காம்பவுண்டில் ஜஸ்டிஸ் கட்சியின் பிரதான காரியாலயம் இருந்தது. அந்த சர் தியாகராயர் மெமோரியல் பில்டிங்ஸ் கட்டடத்தின் ஒரு புறம் “ஜஸ்டிஸ்” எனும் ஆங்கில தினசரி ஏடு சர் ஏ.ராமசாமி முதலியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

    newspapaerகட்டடத்தின் மறுபுறம் “திராவிடன்” எனும் தமிழ் தினசரி ஜே.எஸ்.கண்ணப்பரை ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டது. இதே காம்பவுண்டின் மேல்புறம் சுமார் ஐம்பதடி நீளத்தில் ஒரு குதிரை லாயம் இருந்தது. அதில் “குடியரசு” அச்சகத்தை ஸ்தாபித்துக் கொள்ள திரு ராமசாமி முதலியார் சம்மதம் தந்தார். லாயத்தின் முன்புறத்தில் மூன்றடி உயரச் சுவர் எழுப்பி, அதன் மீது டைமண்ட் வலையடித்துக் கதவு நிலைகள் அமைத்துத் தளம் போட்டு, அச்சு இயந்திரங்களை மாட்டி, பழைய டைப்புகளையெல்லாம் நெல்சன் கம்பெனியில் கொடுத்துப் புதுப்பித்துத் தேவையான தளவாடங்களும் வாங்கி, அச்சகத்தை மாற்றுவதற்குச் சம்பிரதாய உத்தரவுகள் கிடைத்ததும் “குடியரசு” சென்னைப் பதிப்பு வெளிவரச் செய்தேன்.

    கண்ணப்பர் எனக்குப் பேருதவியாக இருந்தார். கோமளேஸ்வரன்பேட்டையில் ஒரு வீட்டின் முன் பாகத்தில் பாதியை மாதம் பதினைந்து ரூபாய் குடிக்கூலிக்குப் பிடித்துக் குடியேறினேன். ஈரோடு கரிவரதசாமியின் மகன் கிருஷ்ணசாமியை காஷியராக நியமித்தேன். உடுமலை வி.ராமசாமி, உதவி ஆசிரியர். அவருக்கு மாதம் நாற்பத்தைந்து ரூபாய் சம்பளம். நாஞ்சில்நாடு பண்டிதர் முத்துச்சாமிப் பிள்ளையை ஆங்கில ஏடுகளையும் புத்தகங்களையும் மொழிபெயர்ப்பாளராகச் சேர்த்துக் கொண்டேன். அவருக்கு என்ன சம்பளம் வேண்டுமென்று கேட்டேன். இரண்டு விரல்களைக் காட்டினார். அவருக்குக் காது கொஞ்சம் மந்தம். மாதம் இருபது ரூபாயா என்றேன். இல்லை! தினம் இரண்டு ரூபாய் வேண்டுமென்றார். சரியென்று வைத்துக் கொண்டேன். உள்ளூரில் விளம்பரங்கள் சேகரிக்க ஒரு ஆளை நியமித்தேன். ப்ரூஃப் ரீடர், ஃபோர்மேன், கம்பாசிடர்கள், காரியாலயப் பையன், மேஜை நாற்காலி, மின் விளக்குகள், மின் விசிறிகள் ஏக தடபுடல்! நாயக்கரின் வயிறு நன்றாய் எரிந்திருக்கும்.

    “ஆனந்தவிகடன்” பத்திரிகையிடமிருந்து விளம்பர பாக்கி நூற்று நாற்பது ரூபாய் வரவேண்டி யிருந்தது. பாக்கிப் பணம் தரும் வரையில் விளம்பரம் போடுவதை நிறுத்தி வைப்பதாகக் கடிதம் எழுதினேன். இன்று கோடி கோடியாய்ப் பணத்தில் புரண்ட ஜெமினி வாசனால் அன்று அத்தொகையைக் கேட்டவுடன் கொடுக்க முடியாத ஒரு நிலை. நாற்பது ரூபாயை — அவருடைய தம்பியென்று நினைக்கிறேன் — ஒருவர் கொண்டு வந்து செலுத்தி விளம்பரத்தை நிறுத்தாது போடுமாறு கேட்டுக் கொண்டார்.

    பத்திரிகை வெளியான அடுத்த மாதம் நாயக்கருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தேன். அவருடைய அண்ணன் திரு ஈ.வே.கிருஷ்ணசாமி நாயக்கர் தம் மகன் சம்பத்துக்குத் திருப்பதியில் முடியெடுக்கப் போவதாகவும், அதற்கு ரூபாய் முன்னூறு அனுப்பித் தரும்படியும் நாயக்கருக்குக் கடிதம் எழுதியிருந்தார். நூறு ரூபாய் அனுப்பித் தொலையென்றார் நாயக்கர். அனுப்பி வைத்தேன்.

    newspapaer2அதன் பின்னர் மாதா மாதம் ஐநூறு ரூபாய் நாயக்கருக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருந்தேன். சென்னை நகரில் “குடியரசு” விற்பனை உயர்ந்தது. வெளியூர் ஆர்டர்களும் பெருகிற்று. மலாய், சிங்கப்பூர், சிலோன் முதலிய நாடுகளிலிருந்து நாடோறும் மணியார்டர்கள் வந்து குவிந்த வண்ணமாய் இருந்தது. ஈரோட்டில் எட்டாயிரம் பிரதிகள் அச்சாகியிருந்த “குடியரசு” சென்னைக்கு மாற்றிய நான்கே மாதங்களில் பதிமூன்றாயிரமாக உயர்ந்தது.

    கோமளேஸ்வரன்பேட்டையில் நான் குடியிருந்த வீட்டுக்கும் குடியரசு காரியாலயத்துக்கும் சுமார் ஒரு மைல் தூரமிருந்தது. காரியாலயத்துக்கும் வீட்டுக்கும் நடந்து சென்றேன். பகல் சாப்பாடு வீட்டிலிருந்து ஒரு டிபன் காரியரில் காரியாலயப் பையன் கொண்டு வந்தான். கண்ணப்பருக்கு ஓட்டல் சாப்பாடு வந்தது. இருவரும் ஒன்றாக உட்கார்ந்து இரண்டு சாப்பாட்டையும் கலந்து சாப்பிட்டோம்.

    நாயக்கர் சென்னைக்கு வந்த போதெல்லாம் யாராவது சாப்பாட்டிற்கு அழைத்தால் அங்கு போவார். இல்லையேல் எங்களுக்கு வரும் சாப்பாட்டில் கலந்து கொள்வார். ஒரு நாள் பகல் “குடியரசு” காரியாலயத்தில் கண்ணப்பரும், நாயக்கரும் சாப்பிட உட்கார்ந்தார்கள். நான் ஏதோ சில அவசரத் தபால்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நாயக்கர் வந்துள்ள செய்தியை ஆபீஸ் பையன் மூலமாகத் தெரிந்து கொண்ட என் மனைவி, எப்போதையும் விடக் கொஞ்சம் விசேஷமாகவும் அதிகமாகவும் சாப்பாடு அனுப்பியிருந்தாள்.

    “அய்யாமுத்து தனது யோக்கியதைக்கு மீறிய சாப்பாடு சாப்பிடுகிறார்” என்று கண்ணப்பரிடம் நாயக்கர் கூறியது என் காதில் விழுந்தது. அப்படியென்றால்…………..?

    எனது சிந்தனை சிறகடித்துப் பறந்தது. என் மேஜை மீதிருந்த சாவிக் கொத்தையெடுத்து நாயக்கர் மீது வீசியெறிந்துவிட்டு, நில்லாமல் சொல்லாமல் வீடு போய்ச் சேர்ந்தேன். வீட்டிலிருந்த சாமான்களையெல்லாம் ‘பாக்’ செய்து கொண்டிருந்தேன். நாயக்கரும் கண்ணப்பரும் வந்தார்கள்.

    “நான் என்ன சொன்னேன்?” விளையாட்டாக ஏதோ சொன்னதற்கு…..” என்றார் நாயக்கர்.

    உங்கள் “குடியரசு’ப் பணத்தில் கறியும், மீனும், முட்டையும் சாப்பிட்டுக் கொண்டிருக்க எனக்குப் பிரியமில்லை. புஞ்சைப்புளியம்பட்டிக்குச் சென்று எப்போதும் போல் கம்பங்கூழ் குடிக்கப் போகிறேன்” என்றேன்.

    ஊருக்குத் திரும்ப வழிச் செலவுக்குக் கண்ணப்பரிடம் இருபத்தைந்து ரூபாய் கடன் கேட்டு வாங்கினேன். சென்னை செண்ட்ரல் ரயில்வே நிலையத்துக்குக் கோவை சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியாரைக் கூட்டிக் கொண்டு நாயக்கர் ஓடோடியும் வந்தார்.

    எனது ‘சுயமரியாதை’ உணர்ச்சி அவருடன் சேர்ந்து உழைக்க இடந்தரவில்லை. அவருக்குக் ‘குட்பை’ சொல்லிவிட்டு ரயிலேறினேன். பாவம் நாயக்கர்! வாய்க்கொழுப்பு சீலையில் வடிந்த கதைக்கொப்பத் தமது குடியரசுப் பதிப்பகத்தை மீண்டும் ஈரோட்டுக்கு சுமந்து சென்றார்.”

    நன்றி: “எனது நினைவலைகள்” கோவை அ.அய்யாமுத்து. பக்கம் 251 முதல் 260.

     

     

     

     

     

     

    படம் உதவி: http://www.thehindu.com/features/metroplus/society/a-couple-of-patriots/article6317808.ece

    Share
  • கொடியவன் நீலன் சிலை அகற்றும் போராட்டம்

    தஞ்சை வெ.கோபாலன்.

    General James George Smith Neil

    James George Smith Neill (27 May 1810 – 25 September 1857)

    1857இல் வட இந்தியாவில் நடைபெற்ற இந்திய சிப்பாய்களின் புரட்சியை முதல் சுதந்திரப் போர் என்றுதான் தேசபக்தர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த புரட்சி சரியான தலைமை இல்லாமையாலும், உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்பதுபோல இந்தியர்களே செய்த துரோகச் செயல்களாலும் வீரத்தோடு போராடிய பல தேசபக்த சிங்கங்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டியிருந்ததை நாம் அறிவோம். இது தவிர ஆங்கில தளபதி நீல் என்பவன் நடத்திய வெறியாட்டம் காரணமாக எத்தனை இந்தியர்கள் உயிர் துறக்க நேர்ந்தது என்பதை அறிய வேதனை உண்டாகிறது. போதாதற்கு இந்த கொடுமைக்காரன் ராணுவ தளபதி நீலனுக்குச் சென்னையில் அப்போது ஸ்பென்சருக்கு எதிரில் சிலையொன்றையும் நிறுவி நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்கள்.

    நீலனுடைய முழுப் பெயர் ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் (General James George Smith Neill) யார் இந்த நீல்? இவன் செய்த கொடுமைகள் எவை? அவன் சிலையொன்றை சென்னையில் வைத்தது என்ன ஆயிற்று? இவைகளுக்கு விளக்கம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அந்த விவரங்களை இந்தக் கட்டுரையில் சிறிது பார்க்கலாம்.

    சிப்பாய்கள் தொடங்கிய கலகம் மெல்ல மெல்ல வட இந்திய நகரங்களுக்கெல்லாம் பரவத் தொடங்கியது. மீரத் நகரத்தில் உருவான எழுச்சி, டெல்லியில் அதிர்வு, அசம்கர் வெற்றி இவை பற்றிய செய்திகள் எல்லாம் நாடெங்கும் பரவிய நேரம். பஞ்சாபில் இருந்த ஆங்கில அதிகாரி ஜான் லாரென்ஸ் என்பவரும் கல்கத்தாவில் தலைமை பீடத்தில் இருந்த லார்ட் கேனிங் பிரபுவும் புரட்சியை அடக்கப் பிரம்ம பிரயத்தனங்களைச் செய்து கொண்டிருந்தனர். வெள்ளையர் ஆதரவுப் படைகள் டெல்லியில் புரட்சியாளர்களை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் மற்ற பகுதிகளில் இருந்த வெள்ளைப் படைகள் பாதுகாப்புக்காக படைகளை அனுப்ப அவசரப்படுத்திக் கொண்டிருந்தனர். பம்பாய், சென்னை, ரங்கூன் ஆகிய இடங்களிலிருந்து படைகள் கலகம் நடந்த பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டன.

    அப்படி வரவழைக்கப்பட்ட படைகளில் சென்னையிலிருந்து சென்ற துப்பாக்கிப் படை ஜெனரல் நீல் என்பான் தலைமையில் கலகத்தை அடக்கப் புறப்பட்டது. இந்த நீல் என்பான் பற்றி சொல்லப்படும் குணாதிசயங்கள், இவன் தர்மம் என்பதையே அறியாதவன், எதற்கும் துணிந்த கொடியவன், மனிதாபிமானம் இல்லாத ராட்சச குணங்கள் படைத்த மனித உருவிலான அரக்கன். காசிக்கு வந்த நீலனின் படைகளுக்கு இந்திய துரோகிகளின் துணையும் கிடைத்தது.

    இவன் இந்திய படைவீரர்களுக்கு இட்ட முதல் கட்டளை அவர்கள் ஆயுதங்களை யெல்லாம் கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டுமென்பதுதான். ஆனால் சுயமரியாதையும் தேசபக்தியும் கொண்ட இந்திய வீரர்கள் அவன் ஆணையை ஏற்க மறுத்து தாக்குதலில் ஈடுபட்டனர். ஜெனரல் நீல் தன் வெள்ளை படைகளோடு பஞ்சாபின் சீக்கியர் படையையும் சேர்த்துக் கொண்டு தாக்கத் தொடங்கினான். இந்தப் படை சிப்பாய்களைத் தவிர கிராமம் கிராமமாகப் புகுந்து அங்கெல்லாம் கண்ணில் தெரிந்த மனிதர்களையெல்லாம் வெட்டி வீழ்த்தினர். சிறை பிடித்தவர்களை ஆங்காங்கே மரங்களில் தூக்கிலிடுவது என்று வெறியாட்டம் ஆடினர். பல தூக்கு மேடைகள் அமைத்து ஓயாமல் ஒழியாமல் அப்பாவி பொதுமக்களை தூக்கிலிட்டுக் கொன்றான் நீல். தூக்கிலிட வேண்டிய கூட்டம் அதிகமாக இருந்ததால், தூக்கிலிட்ட ஒருவரின் உயிர் பிரியுமுன்பாகவே அவரை குற்றுயிரும் குலையுயிருமாகத் தூக்கி ஏறிந்துவிட்டு அடுத்தவரை தூக்கிலிட்டனர்.

    இப்படி ஒருவர் ஒருவராகத் தூக்கிலிட பலநாட்கள் ஆகுமென்பதால் ஒரு காரியம் செய்தனர். பலரை ஒரே நேரத்தில் ஒரு பெரிய மரத்தடியில் நிறுத்தி, அவர்கள் கழுத்துகளில் எல்லாம் சுறுக்குக் கயிற்றைச் சுற்றி பெரும் மரக்கிளை வழியாக மறுபுறம் கொண்டு சென்று அங்கு ஒரு யானை மூலம் கயிற்றை இழுக்கச் செய்து பலரை ஒரே நேரத்தில் தூக்கிலிட்ட கொடுமையும் நடந்தது. இப்படி பலரை தூக்கிலிட தூக்கு மேடையும், கயிறும் தேவைப்பட்டதால் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தனர். ஒரு கிராமத்தின் உட்பகுதியில் அனைவரையும் நிறுத்தி சுற்றிலும் தீமூட்டி அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் பரலோகப் பிராப்தி அடையும்படி செய்தனர். அதில் தப்பி ஓட நினைத்தால் சுற்றிலும் பீரங்கிகளை நிறுத்திவைத்து சுட்டுப் பொசுக்கினர். இந்த வரலாற்றையெல்லாம் இவர்கள் பெருமையாகப் பின்னர் எழுதி வைத்துவிட்டுச் சென்றனர்.

    இந்த கொடியவன் நீலன் செய்த அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல; சொல்லி மாளாத கொடுமைகள். இப்படி சென்னையில் புறப்பட்டுக் கல்கத்தா சென்று அங்கு கேனிங் பிரபுவின் உத்தரவின் பேரில் இந்திய சிப்பாய்களை வழியெல்லாம் பலிகொடுத்துக் கொண்டு வந்தபோது காசியையும் அதன் சுற்றுப்புற கிராமங்களிலும் நடத்திய கொலைவெறி காட்சிகளைப் பார்த்தோம். அந்தக் கொடியவன் புரட்சியின் போது 1857இல் லக்னோ நகரத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தன் வெறியாட்டத்தை நடத்திக் கொண்டிருந்த சமயம் பீரங்கியால் சுடப்பட்டுத் தன் குதிரையில் இருந்தபடியே கீழே விழுந்து உயிரைவிட்டான். மனித உருக்கொண்ட அரக்கன் இந்திய மண்ணில் இரத்தம் கக்கிச் செத்தான்.

    1861ஆம் வருடத்தில் அந்த கொடியோன் நீலனுக்குச் சென்னையில் ஸ்பென்சருக்கு எதிரில் ஒரு சிலை நிறுவப்பட்டது. பீடமும் சிலையுமாக 21 அடி உயரமுள்ள முழு வெண்கலத்தால் ஆன அந்தச் சிலையை வெள்ளையர்கள் நிறுவினர். அந்த காலகட்டத்தில் சென்னையில் வாழ்ந்த மக்களுக்கு அவன் செய்த கொடுமைகள் தெரியவில்லையோ என்னவோ அப்போது அவன் சிலைக்கு எந்த எதிர்ப்பும் எழவில்லை. ஆனால் இந்திய மக்கள் விழிப்புணர்வு பெற்றபின் சுமார் 66 ஆண்டுகள் கழித்து 1927இல் தேசிய வாதிகள் இந்த கொடியவன் நீலனின் சிலை அங்கிருந்து அகற்றப்பட வேண்டுமென போராட்டத்தைத் துவக்கினர். இந்த நீண்ட நெடிய போராட்டத்தை மதுரை தேசபக்தர் நா.சோமையாஜுலு என்பார் தலைமை தாங்கினார். அவருடன் பங்குபெற்ற சில தேசபக்தர்கள் கடலூர் சுப்பராயலு, மதுரை சிதம்பர பாரதி, கடலூர் அஞ்சலை அம்மாள், லீலாவதி மற்றும் பலர்.

    1927 ஆகஸ்ட் 11ஆம் தேதி தேசபக்தர்கள் ஊர்வலமாகச் சென்று ஒரு ஏணியை வைத்து அந்த சிலைமீது ஏறிக்கொண்டு கடலூர் சுப்பராயலு ஒரு சுத்தியல் கொண்டு சிலையை உடைக்கத் தொடங்கினார். சிலை வெண்கலத்தால் ஆனது என்பதால் உடையவில்லை; ஆனால் நீலனின் கையில் பிடித்திருந்த வாள் சிறிது சேதமடைந்தது. அப்போது அங்கு கூடிய கூட்டத்தினர் மத்தியில் அந்த நீலன் செய்த கொடுமைகளை விளக்கி தேசபக்தர்கள் பேசினார்கள். அதற்குள் அங்கு வந்த காவல்துறையினர் தொண்டர்களைக் கைது செய்து அழைத்துக் கொண்டு போய்விட்டனர்.

    நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது தியாகி சுப்பராயலு சொன்னார், நீலன் சிலை இந்திய மக்களுக்கோர் அவமானச் சின்னம். நான் மரண தண்டனை பெறுவதாயிருந்தாலும் இதை உடைத்தே தீருவேன் என்று முழங்கினார். நீதிபதி தொண்டர்களுக்குத் தலா ரூ.300 அபராதமும் 3 மாத சிறை தண்டனையும் விதித்துத் தீர்ப்புக் கூறினார். அபராதம் செலுத்த மறுத்து தொண்டர்கள் மேலும் 3 மாத சிறைதண்டனை பெற்றனர்.

    இப்படித் தொடர்ந்து பல நாட்கள் தொண்டர்கள் ஊர்வலமாக வந்து சிலையை உடைக்க முயல்வதும், கைதாவதும், சிறை செல்வதுமாக இருந்தனர். இதில் நா.சோமையாஜுலு உட்பட பலருக்கு ஒரு வருஷம் சிறை தண்டனையும் ரூ.50 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த ரூ.50 அபராதத்தைச் செலுத்த மறுத்ததால் இவர்களுக்கு மேலும் 15 மாத சிறை தண்டனை கிடைத்தது. இவர்கள் ஒரிசாவில் உள்ள பெர்ஹாம்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்தப் போராட்டத்தில் 13 வயதே ஆன காந்திமதிநாதன் எனும் சிறுவன் ஒரு கோடாலி கொண்டு சிலையை உடைக்க முயற்சித்துக் கைதாகி செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் நான்கு ஆண்டுகள் இருக்க நேர்ந்தது. சென்னை வந்த மகாத்மா காந்தி நீலன் சிலையை அகற்ற அஹிம்சை முறையில் போராட வேண்டுமென்றார். கடலூர் முருகப்பப் படையாச்சி, அவர் மனைவி அஞ்சலை அம்மாள், அவர்களது 11 வயது நிரம்பிய மகள் லீலாவதி ஆகியோர் இந்தப் போராட்டத்தில் பங்கு பெற்றனர். லீலாவதி சென்னை சிறுமியர் இல்லத்தில் நான்கு ஆண்டுகள் இருக்க நேர்ந்தது.

    அப்போதைய சென்னை சட்டமன்றத்தில் நீலன் சிலையை அகற்றும் தீர்மானம் ஜஸ்டிஸ் கட்சியினரால் தோற்கடிக்கப்பட்டது. 98 உறுப்பினர்களில் 29 பேர் நீலன் சிலையை அகற்ற ஆதரவு தந்தும், ஜஸ்டிஸ் கட்சியினரும் 18 ஆங்கிலேய உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்து தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் காங்கிரசார் சிலையின் மீது களிமண் உருண்டைகளை வீசித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர். இதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து 1937இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ராஜாஜி தலைமையில் ஒரு அரசாங்கம் அமைந்த பின்னர் நீலன் சிலையை அகற்றி எழும்பூர் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு சென்றார்கள். இப்படி அடக்கி ஆண்ட அந்நியர்களை மட்டுமல்ல, இந்தியர்களை மிருகத்தனமாகக் கொன்று குவித்த ராட்சசன் நீலன் சிலையைக் கூட இங்கு வைக்கக்கூடாது என்று போராடியவர்கள் நம்மவர்கள் என்பதை எண்ணி பெருமைப்படலாம். ஜெய் ஹிந்த்!

    Share
  • காந்தி பயிலரங்கம்

    கோபாலன் வெங்கட்ராமன்

    காந்தி இயக்கம்,
    (பாரதி இலக்கியப் பயிலகம், 28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, தஞ்சாவூர் 613007)

    சுற்றறிக்கை.

    gandhiமகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக திருவையாறு காந்தி இயக்கம், தஞ்சை மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் கருத்துரையாடல், காந்திய அறிஞர்களின் கருத்து விளக்கங்களும் கொண்ட ஒருநாள் பயிலரங்கம் வருகிற 18-10-2014 சனிக் கிழமை காலை 10 முதல் மாலை 5 வரை திருவையாறு மேட்டுத் தெருவில் உள்ள சரஸ்வதி அம்பாள் தொடக்கப் பள்ளியில் நடைபெறும். இந்த கருத்தரங்கில் காந்திய சிந்தனைகளையும், அவரது கோட்பாடுகளைப் பற்றியும் மாணவர்கள் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் இது நடத்தப்படுகிறது. ஓரளவு மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையையும், கருத்துக்களையும் அறிந்த அல்லது அறிந்து கொள்ளும் ஆவலுள்ள மாணவர்கள் சிலரை ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் அழைத்து இதில் கலந்து கொள்ள வைக்க வேண்டுமென்பது எங்கள் அவா.

    இந்த ஒருநாள் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் மாணவர்கள் குறித்த விவரங்களைக் கீழ்கண்ட முகவரிக்கு 15-10-2014ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். அனுப்பவேண்டிய முகவரி:
    காந்தி இயக்கம், பாரதி இலக்கியப் பயிலகம்,

    28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை,
    தஞ்சாவூர் 613007. தொலைபேசி: 9486741885.
    தலைப்பு: சமுதாயத்துக்குத் தேவையான காந்திய சிந்தனைகள்.
    நாள்: 18-10-2014 சனிக்கிழமை நேரம்: காலை 10 முதல் மாலை 5வரை.

    1. ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் 4 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம்.

    2. மாணவர்கள் தங்கள் சொந்த செலவில் வந்து செல்ல வேண்டும். மதிய உணவும் இடைவேளை
    தேநீரும் அளிக்கப்படும்.

    3. கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும், காந்திஜியின் நூலும் பரிசளிக்கப்படும்.

    4. மாணவர்கள் மகாத்மா காந்தியடிகளின் சிந்தனைகளில் கீழ்கண்ட ஏதாவதொரு தலைப்பில் (5 பக்கங்களுக்குள்) ஒரு கட்டுரையை எழுதிக் கொண்டு வரவேண்டும். அந்த தலைப்பில் மாணவர் களின் கலந்துரையாடல் நடைபெறும்; தொடர்ந்து காந்திய அறிஞர்கள் அவைகளுக்குத் தகுந்த விளக்கங்களை அளிப்பார்கள்.

    தலைப்புகள்:

    1. காந்திஜி – சோதனைகளும் சாதனைகளும்.

    2. தென்னாப்பிரிக்காவில் காந்திஜி.
    3. இந்திய சுதந்திப் போராட்டத்தில் காந்திஜியின் பங்களிப்பு.
    4. உலக அமைதிக்குத் தேவை காந்திய கொள்கைகளே!

    கல்லூரி முதல்வர்களும், துறைத் தலைவர்களும், இப்பயிலரங்கின் முக்கியத்துவம் கருதி தங்கள் கல்லூரியிலிருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பங்கேற்கச் செய்ய வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

    தஞ்சாவூர்,

    9-10-2014. தலைவர், காந்தி இயக்கம்.

    Share
  • தஞ்சையில் களிமேடு பகுதிக்கு அந்தப் பெயர்வரக் காரணம்

    -தஞ்சை வெ. கோபாலன்

    தஞ்சை நகரத்தினுள்ளும், சுற்றுப்புறத்திலும் ஏராளமான ஆலயங்கள் உள்ளன. தஞ்சை நகரத்துக்குப் பெருமை சேர்ப்பது ’ராஜராஜேச்சுரம்’ எனும் பெரிய கோயில்தான் என்றாலும் இங்கிருக்கும் மற்ற பல சிறு ஆலயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். தஞ்சை நகரத்தில் மட்டும் சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட சக்தி ஆலயங்கள் இருப்பதாகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள “தஞ்சை சக்தி ஆலயங்கள்” எனும் நூல் மூலம் தெரியவருகிறது.

    தஞ்சையின் கீழ்ப்புற கோட்டைவாசல் அருகில் வெள்ளைப் பிள்ளையார் என்றொரு ஆலயம் உண்டு. இந்த ஆலயம் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களில் கடைசி மன்னரான விஜயராகவ நாயக்கர் காலத்தில் ஒரு குறவஞ்சி இந்த வெள்ளைப் பிள்ளையார் மீது பாடப்பட்டிருக்கிறது. சிதலமடைந்த ஓலைச் சுவடிகளிலிருந்து படியெடுத்து அதனை சரஸ்வதி மகால் நூலகத்தார் வெளியிட்டிருந்தார்கள். புலவர் வீ. சொக்கலிங்கம் என்பார் இதன் பதிப்பாசிரியர் ஆவார். இந்த நூலில் அந்தக் குறவஞ்சியில் குறிப்பிடப்படும் பல சிவாலயங்கள், வைணவ ஆலயங்கள், மற்ற பல ஆலயங்களைப் பற்றியெல்லாம் சிறு குறிப்பினை பதிப்பாசிரியர் கொடுத்திருக்கிறார். அவற்றில் சில குறிப்புகள் சுவையானவை, குறிப்பாகத் தஞ்சையைச் சேர்ந்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் அவை.

    இங்கு சில ஆலயங்களைப் பற்றிய குறிப்புகளை முதலில் பார்ப்போம். ஆனைமுகன் என்று பொதுவாக விநாயகப் பெருமானை வணங்கி பெருவுடையார் என்று பெரிய கோயிலின் நாயகனைக் குறிப்பிட்டுவிட்டு மற்ற பல ஆலயங்களைக் குறிப்பிடுகிறார்.

    தஞ்சை நாயகர் ஆனந்தவல்லி: இது தஞ்சைக்கு அருகில் விண்ணாற்றங்கரை (வெண்ணாறு என்று இப்போது அறியப்படுகிறது) தெற்கில் அமைந்துள்ள ஆனந்தவல்லி உடனாய தஞ்சேசர் (தஞ்சபுரீஸ்வரர்) ஆலயம்.

    சொக்கநாயகர்: தஞ்சை கருந்திட்டைக்குடி (இப்போது கரந்தை) ராஜவீதியில் கோயில் கொண்ட மீனாம்பிகை சமேதரான சோமசுந்தரக் கடவுள். இதே பெயரில் தஞ்சை மேலவீதி ஐயன்குளக் கரையிலும் ஒரு ஆலயம் உண்டு என்கிறார்.

    வைத்தீசர்: தஞ்சை பெரியகோயிலுக்கும் முன்னதாகக் கட்டப்பட்ட கோயிலில் எழுந்தருளியிருக்கும் கருந்திட்டைக்குடி கருணாமூர்த்தி. இந்த மூர்த்தி கருங்குஷ்டம் தீர்த்ததால் “கருங்குட்டம் தீர்த்த இறைவன்” என்று குறிப்பிடப்படுகிறார், ஆகவே இந்த குறவஞ்சியில் குறிப்பிடப்படும் வைத்தீசர் இவராகத்தான் இருக்கவேண்டுமென்பது ஆசிரியர் கருத்து.

    தொப்பாரங்கட்டி பிள்ளையார்: இந்த விநாயகப் பெருமான் தஞ்சை நாணயக்காரச் செட்டித் தெருவின் கீழ்புறத்தில் மிக உயரமாக எழுப்பப்பட்ட மேடையில் அமைந்த “தொப்பைக்கு ஆரம் கேட்ட பிள்ளையார்” என்று பெயர் பெற்றவர்.

    இனி சில வைணவக் கடவுளர்களின் பெயர்களைக் காண்போம்.

    கோபாலப் பெருமாள்: தஞ்சை வடக்கு வீதியும் ஐயன் கடைத்தெருவுக்கு இணையாக உள்ள ராஜகோபாலசுவாமி கோயில் தெருவும் சந்திக்கும் இடத்தருகே இருக்கும் கோயில். இப்போதும் ராஜகோபாலசுவாமி கோயில் என வழங்கப்படுகிறது.

    சிங்கப் பெருமாள்: தஞ்சையை அடுத்த விண்ணாற்றங்கரை அடுத்தடுத்து சில வைணவ ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இதற்கு முன்பாக பழைய சோழர்கால தலைநகராக இருந்த இடத்தில் இருந்தவை என்றும், நகரம் அழிக்கப்பட்டபோது இந்த ஆலயங்கள் இங்கு கொண்டு வந்து நிறுவப் பட்டதாகவும் கூறுவர். இதற்கு ஆதாரமாக சீனிவாசபுரத்திலிருந்து ரெட்டிபாளையம் செல்லும் பாதையில் சிங்கப்பெருமாள் குளம் என்று ஒன்று இருக்கிறது. அந்தப் பகுதிதான் பழைய சோழர் தலைநகராக இருந்த இடம். அந்தக் குளம்தான் இந்தச் சிங்கப்பெருமாளின் புஷ்கரணியாக இருந்தது, அதன் கரையில்தான் இந்த ஆலயமும் இருந்தது என்று கூறுவாரும் உளர்.

    மணிகண்டப் பெருமாள்: மேற்சொன்ன சிங்கப் பெருமாள் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ளது இந்தக் கோயில். இதே பெயரில் தஞ்சைக் கீழவீதி ‘சர்ச்சா வாசல்’ என்று அழைக்கப்படும் சிறப்பு வாயிலுக்கு எதிரே அமைந்துள்ள ஆலயமெனவும், அங்குள்ள பெருமாளுக்கு ‘நீலமிடற்றான்’ எனப் பெயர் எனவும் தெரிகிறது.

    நீலமேகப் பெருமாள்: இவரும் விண்ணாற்றங்கரையில் வரிசையாக அமைந்துள்ள ஆலயங்களில் ஒன்றான நீலமேகப் பெருமாள் ஆலயத்தில் கோயில்கொண்ட பெருமாள்.

    மின்மலை வெங்கடேசர்: தஞ்சை ஐயன்கடைத் தெருவுக்கு அருகில், முன்சொன்ன ராஜகோபாலசுவாமி கோயில் தெருவுக்கு அருகில், காசுக்கடைத் தெரு முடிந்து தெற்கில் திரும்பினால் அங்கு இந்த ஆலயத்தை மிக உயர்ந்த படிகளைக் கொண்ட மேடையில் காணலாம். இங்குள்ள வெங்கடேசப் பெருமாள் உயரமான உருவமுடையவர். இவ்வாலயத்தின் முன்பாக அமைந்துள்ள நாலுகால் மண்டபம் எனுமிடத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் பிரசித்தமானவர். ஒவ்வோராண்டும் இந்த நாலுகால் மண்டப ஆஞ்சநேயருக்கு பத்து நாட்களுக்கு இசைவிழா மிகச் சிறப்பாக நடந்து வருவதை அனைவரும் அறிவர்.

    ஆதிகேசவப் பெருமாள்: இந்தப் பெருமாள் மேற்சொன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தின் தெற்குத் திருச்சுற்றில் எழுந்தருளியுள்ள பெருமாள்.

    ரகுநாதப் பெருமாள்: தஞ்சைக் கீழவாசல் பகுதியிலுள்ள கீழ அலங்கம் எனும் பகுதியில் கோட்டை வாயிலுக்கு மேற்கே உள்ள கொண்டிராஜாபாளையத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள ராமசுவாமி ஆலயம்தான் ரகுநாதப் பெருமாள் ஆலயம். இதன் மிகஅருகில் இப்போதும் கோட்டை மேட்டில் பழைய கால பீரங்கியொன்றை மக்கள் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். கீழ அலங்கம் சாலையிலிருந்து படிகள் மூலம் மேலே ஏறிச்சென்று அந்தப் பீரங்கியைச் சுற்றுலா வரும் மாணவர்கள் கண்டு களிக்கிறார்கள்.

    முப்பிலாறுமுகப் பெருமான்: தஞ்சை வடக்கு வாசலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி. அந்தக் காலத்தில் தஞ்சைக் கோட்டைக்கு இரண்டே வாயில்தான், ஒன்று கிழக்கு வாசல் மற்றது வடக்கு வாசல். கிழக்கில் வெள்ளைப் பிள்ளையாரையும், வடக்கில் இந்த முப்பிலாறுமுகனையும் நிறுவியதாகச் சொல்லப்படுகிறது.

    மேல கோதண்டராமப் பெருமாள்: தஞ்சை ஐயன் கடைத்தெருவில் அமைந்துள்ள கோயிலில் குடிகொண்டுள்ள பெருமாள்.

    தாழியான்: தஞ்சை மேலவீதியில் மிகப் பிரசித்தமான பங்காரு காமாட்சி அம்மன் ஆலயத்தையொட்டி வடக்கில் அமைந்த ஸ்ரீகிருஷ்ணன் கோயில் என அழைக்கப்படும் கோயிலில் இருக்கும் பெருமான். இவர் வெண்ணைத் தாழியைக் கைக்கொண்டிருப்பதால் தாழியான் என அழைக்கப்பட்டிருக்கிறார்.

    நரசிங்கப் பெருமாள்: தஞ்சை கொண்டிராஜாபாளையத்திலுள்ள ரகுநாதப் பெருமாள் சந்நிதிக்கு எதிர்ப்புறமாக அமைந்துள்ள கோயிலில் எழுந்தருளியிருக்கிறார். இந்தப் பெருமாளைப் பற்றிய ஒரு சுவாரசியமான வரலாறு அல்லது கதை வழக்கில் இருக்கிறது. அந்தக் கதையை வெள்ளைப்பிள்ளையார் குறவஞ்சியின் பதிப்பாசிரியர் தன் நூலில் குறிப்பிடுகிறார். அந்தக் கதை என்னவென்பதையும் பார்ப்போமே.

    மேற்சொன்ன நரசிங்கப் பெருமாள் ஆலயத்தின் வாசலில் கடைவைத்திருந்தார் ஒருவர். அவர் பெயர் பெத்ததாசர் என்பவர். தீவிர வைணவர். அவருக்கு இந்த நரசிங்கப் பெருமாள்தான் எல்லாம். அவரை வழிபடாமல் எந்தக் காரியமும் செய்வதில்லை அவர். தன் கடைக்கு திருமண் பூசிய வைணவர் யாரும் வந்துவிட்டால் இவர் எழுந்து அவர்களை வலம் வந்து நமஸ்கரித்துவிட்டுதான் மற்ற காரியங்களைப் பார்ப்பாராம். அப்போது தஞ்சையை ஆண்ட மன்னர் ஒருவர் இவரது செயலைப் பரிகசிக்க எண்ணித் தன் அவைக்கு இரண்டு கழுதைகளைக் கொண்டுவந்து நிறுத்தி, ஒரு கழுதைக்கு நெற்றியில் திருமண் அணிவித்து, மற்றொரு கழுதையை வெறும் நெற்றியோடு நிறுத்திவைத்துவிட்டு பெத்ததாசரை அழைத்துவரச் செய்து பார்க்கச் சொன்னாராம். பெத்ததாசர் திருமண் இட்ட கழுதையை வலம் வந்து நமஸ்கரித்து எழுந்தாராம்.

    அப்போது மன்னர் பெத்ததாசரைப் பார்த்து மற்றொரு கழுதையை ஏன் வணங்கவில்லை என்று வினவினாராம். அதற்கு அவர் இது திருமண் தரிக்காத கழுதை, உன்னைப் போன்ற கழுதை, திருமண் தரித்த கழுதை என்னைப் போன்ற கழுதை என்றாராம். இந்தப் பதிலைக் கேட்டு மன்னன் கோபம் கொண்டு இவரைக் கழுவில் ஏற்ற உத்தரவு இட்டாராம்.

    தஞ்சை நகருக்கு மேற்கே சுமார் மூன்று கல் தூரத்தில் உள்ள ஒரு மேடான பகுதியில் அமைந்த கழுமரம் அமைந்த கொலைக்களத்துக்கு இவர் கொண்டு செல்லப்பட்டாராம். பெத்ததாசர் வழிநெடுகிலும் தன் இஷ்ட தெய்வமான நரசிம்மப் பெருமாளை நினைந்து “நரசிம்மா” “நரசிம்மா” என்று உச்சரித்துக் கொண்டே வந்தாராம். கழுமரத்தை அணுகியதும் அந்தக் கழுமரம் தீப்பற்றி எரிந்துபோனது. இந்தச் செய்தி அரசனுக்கு அறிவிக்கப்பட, மன்னனுக்குத் தான் செய்த தவறு புரிந்து அந்த பக்தரிடம் “ஐயனே! உங்களுக்கு நான் கொடுத்த தண்டனைக்காக என்மீது கோபப்படாமல், கழுமரத்தை எரிந்திடச் செய்தது என்மீதான தங்கள் இரக்க குணத்தினால்தான்; தங்கள் கருணைக்குத் தங்களை பணிகிறேன்” என்று சொல்லி அவர் பாதங்களில் வீழ்ந்து பணிந்தானாம். பிரகலாதனைக் காத்த நரசிம்மப் பெருமாள் எங்களையும் காத்தார் என்று மற்றவர்களும் அந்த அடியாரை விழுந்து வணங்கினார்களாம்.

    இந்த பக்தருக்கு அந்தக் கழுமரம் இருந்த பகுதியைத் தானமாக வழங்கினானாம் மன்னன். இவரைக் கழுவேற்றுவதற்காக அமைந்த அந்த மேடுதான் கழுமேடு என்றாயிற்று, பின்னர் மருவி “களிமேடு” என வழங்கியதாகச் சொல்லப்படுகிறது. கழுதை காரணமாகக் கொடுக்கப்பட்ட இடம் என்பதால் இது கழுதைமேடு என்று வழங்கி பின்னர் களிமேடாயிற்று என்றும் சொல்வர்.

    இப்படி மக்களின் விசனத்தைப் போக்கிய பெருமாள் இந்தக் குறவஞ்சியில் “விதனமே போக்கும் தஞ்சை நரசிங்கப் பெருமாள்” என்று அடைமொழியோடு புகழப்படுகிறார்.

    மேற்கண்ட ஆலயங்கள் தவிர மற்ற ஆலயங்களையெல்லாம் ஒன்றாக்கி ஏனையோர் என்று பொதுவில் அழைத்து வணங்கியிருக்கிறார் இந்தப் பாடலில். இந்த ‘ஏனையோர்’ எனும் சொல்லினுள் பங்காரு காமாட்சி, கொங்கணேஸ்வரர், காசி விசுவநாதர் ஆகிய கோயில்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

    அந்தப் பாடலை இங்கே பார்ப்போம்.

    பாடல் 1.

    ஆனைமுகன் அருள்பொழியும் ஆனந்தவல்லியுமை பிறைநாறு சீரடிக்கைம்
    மானையுள பெருவுடையார் சொக்கநாயகரும் வயித்தீசரும் தஞ்சை நாயகரும்
    சோனைமலைக் கைலாயக் கனியீன்ற தொப்பாரங்கட்டிப் பிள்ளையாரும்
    மீன்வெல் கோழிக்கொடியோனும் மகிழ வெள்ளைப் பிள்ளை குறமெனக்கு
    முன்னடக்க வேணும்.

    பாடல் 2.

    கோபாலப்பெருமாள் சிங்கப்பெருமாள் மணிகண்டப் பெருமாள்
    மின்மலை வெங்கடேசர் ரகுநாதப் பெருமாள் ஆதிகேசவப் பெருமாள்
    முகப்பிலாறுமுகப் பெருமாள் *கருடங்கோட்டை மேல் கோதண்டப் பெருமாள்
    தாழியான் நீலமேகன் விதனமேபோக்கும் தஞ்சை நரசிங்கப் பெருமாள்
    ஏனையோரும் தஞ்சை வெள்ளைபிள்ளையார் குறுவஞ்சிக்கு முன்னடக்க வேணும்.

    *தஞ்சைக் கோட்டை கருடன் வடிவில் இருப்பதால் இதற்கு கருடங்கோட்டை எனப் பெயர். சத்ரபதி சிவாஜி மகாராஜ் தன் சகோதரர் ஏகோஜி தஞ்சையை ஆண்டபோது அவருக்குத் தெரியாமல் இராமேஸ்வரம் போய்த் திரும்பும் வழியில் தஞ்சைக்கு வந்து கோட்டையைச் சுற்றிப் பார்த்ததாகவும், பின்னர் ஊர் திரும்பித் தம்பிக்கு எழுதிய கடிதத்தில் இந்தக் கோட்டை கருடன் வடிவில் இருக்கிறது; ஒரு பகுதியை மட்டும் வலுப்படுத்தினால் இந்தக்கோட்டை மிக உறுதியானதாக இருக்கும் என்று குறிப்பிடுவதாக, சரபோஜி எழுதித் தஞ்சைக் கோயிலில் கல்வெட்டில் பதிக்கப்பட்ட “போன்ஸ்லே வம்ச வரலாற்றில்” குறிப்பிடப்படுகிறது.

    Share
  • கீசகன் வதம்

    –தஞ்சை வெ.கோபாலன்.

    பாரத புண்ணிய பூமியின் தலைசிறந்த இதிகாசங்களுள் மகாபாரதம் ஒன்று. அதில் பாண்டவர்களின் மூத்தவன் யுதிஷ்டிரன் சகுனியோடு சூதாடி தோற்றதன் விளைவாக ஓராண்டு காலம் அக்ஞாத வாசம் அதாவது தாங்கள் யார் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலைமறைவாக இருத்தல் வேண்டுமென விதிக்கப்பட்ட நிபந்தனைக்கு உட்பட்டு மறைந்திருந்த காலம். தாங்கள் யார் கண்ணிலும் படாமல் ஒரு வருஷ காலத்தை ஓட்ட வேண்டுமானால் அதற்குத் தக்க இடம் விராட மன்னன் ஆண்ட மத்சிய நாடு என்பதை முடிவு செய்தார்கள். அவர்கள் அந்த ஊரினுள் நுழையுமுன் ஊருக்கு வெளியே இருந்த ஒரு வன்னிமரப் பொந்தில் தங்களுடைய ஆயுதங்களையெல்லாம் மறைத்து வைத்துவிட்டுத் தனித்தனியாகப் பிரிந்து போய் நகரத்தினுள் நுழைந்தார்கள். தங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டுமென்று யுதிஷ்டிரன் துர்க்கையிடம் வேண்டிக் கொண்டான்.

    விராட ராஜாவிடம் சென்று யுதிஷ்டிரன் தன்னை கனகன் எனும் பெயர் கொண்ட ஒரு பிராமண பண்டிதன் என்று சொல்லிக் கொண்டு பகடை ஆட்டத்திலும் வல்லவன் என்று சொல்லி அரசனின் தோழனாகச் சேர்ந்து கொண்டான். பீமன் தன்னை வல்லாளன் என்று சொல்லிக் கொண்டு, மல்யுத்தமும் செய்வேன் என்று சொல்லி விராட ராஜாவின் அரண்மனையில் சமையல் செய்பவனாகச் சேர்ந்தான். அர்ஜுனன் பெண் வேடமணிந்து கொண்டு சற்று ஆண்மை வெளிக்காட்ட தன் பெயர் பிரஹன்னளை என்றும் தான் ஒரு பேடு எனத் தெரிவித்து அந்தப்புரத்தில் வேலைக்கு அமர்ந்தான். நகுலனோ தமக்ரந்தி எனும் பெயரோடு அரண்மனை குதிரை லாயத்தில் குதிரைகளைப் பழக்கும் பணியில் ஈடுபட்டான். சகாதேவனோ தந்திரிபாலன் எனும் பெயரோடு மாட்டுத் தொழுவத்தில் பணியாற்றத் தொடங்கினான்.

    இப்படி பாண்டவர்கள் ஒருவருக்கொருவர் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விராட மன்னனிடம் வெவ்வேறு பணிகளில் அமர்ந்து கொண்ட அதே நேரத்தில் விராட நகரத்து வீதிகளில் ஒரு வேலைக்காரி போல பாஞ்சாலி நடந்து செல்கிறாள். வேலைக்காரி என்பதை ‘சைரந்திரி’ என்று தன்னைக் கூறிக் கொண்ட பாஞ்சாலி அதற்கேற்ப கிழிந்த உடைகளை அணிந்திருந்தாள். பேரழகியான திரெளபதி என்னதான் கந்தை உடைக்குள் தன்னை மறைத்துக் கொண்டாலும் அழகு வெளிப்படாமல் போகுமா? தெருவில் போவோர் வருவோர் எல்லாம் அவள் மீது கவனம் செலுத்தினார்கள். அரண்மனை மேல்தட்டில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ராணி சுதேசனா என்பாள் கண்களில் இந்த சைரந்திரி தென்பட்டாள். அவள் நிலைமையைக் கண்டு மனமிரங்கி அவளை அழைத்துவரச் செய்து அவள் வரலாற்றைக் கேட்டாள். அதற்கு சைரந்திரி சொன்னாள், “மகாராணி! எனக்கு ஐந்து கந்தர்வர்கள் கணவன்களாக இருக்கிறார்கள். ஒரு சாபத்தின் காரணமாக ஒரு வருஷ காலம் நான் அவர்களிடமிருந்து பிரிந்து வாழ வேண்டும். இந்த ஒரு வருஷ காலம் முடிந்ததும் அவர்கள் என்னை வந்து அழைத்துச் செல்வார்கள். அதுவரை எனக்கு அடைக்கலம் தாருங்கள். நான் தங்களுக்கு மலர்மாலைகள் தொடுத்தும், அழகுபடுத்தியும் தோழியாக இருந்து பணிவிடை செய்வேன்” என்றாள்.

    ராணி சுதேசனா உடனே ஒப்புக்கொண்டாலும், இவளது அழகு தொல்லை கொடுத்தால் என்ன செய்வது என்று யோசனை செய்தாள். அவளது சந்தேகத்தை சைரந்திரியிடமே கேட்டாள் ராணி. அதற்கு அவள் சொன்னாள், “தாயே! நான் தங்களுடனேயே தங்கிக்கொள்கிறேன். பிரிந்து சென்றாலல்லவோ தொல்லை. இருந்தாலும் எனது கந்தர்வக் கணவர்கள் எனக்கு எப்போதும் காவலாக இருந்து காப்பாற்றுவார்கள். முறைதவறி யாரேனும் நடக்க முயன்றால், அவர்களை என் கணவன்மார்கள் கொன்றுவிடுவார்கள், ஆகையால் அஞ்ச வேண்டாம்” என்றாள். ராணியின் பரிபூரண சம்மதத்தோடு சைரந்திரி அங்கேயே ராணியின் தோழியாகத் தங்கிக் கொண்டாள்.

    விராட நாடு, அற்புதமான வளம் மிகுந்த நாடு. அங்கு எப்போதும் திருவிழாக்கள் நடந்து கொண்டிருக்கும். மகாசிவராத்திரி அங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். பத்து நாட்கள் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பல போட்டிகள் நடக்கும். அவற்றில் மற்போரும் ஒன்று. பல தேசங்களில் இருந்தெல்லாம் மல்லர்கள் வந்து அங்கு குவிந்தனர். அந்த ஆண்டில் நடந்த மற்போரில் வேற்று நாடு ஒன்றிலிருந்து வந்திருந்த மல்லன் ஒருவன் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றதோடு தன்னை எதிர்க்க எவரும் இல்லையென்று முழக்கம் செய்து கொண்டிருந்தான். மன்னருக்கு இந்தச் செய்தி மனவருத்தத்தைக் கொடுத்தது. அயலானான இவனை எதிர்த்து மல் யுத்தம் செய்ய நம் நாட்டில் எவரும் இல்லையா? என வருந்தினான். அப்போது கனகன் எனும் பெயரில் மன்னனிடம் நண்பனாக விளங்கிய யுதிஷ்டிரன் சொல்கிறார், “மன்னா! கவலை வேண்டாம். தங்கள் அரண்மனை மடைப்பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சமையற்காரன் வல்லாளன் சிறப்பாக மற்போர் புரிவதை நான் பார்த்திருக்கிறேன். அவனை இந்த வேற்று நாட்டானோடு போட்டியிட்டு வேற்றி பெறச் செய்யலாம், அவன் நிச்சயம் வெல்வான்” என்றார்.

    அரசர் உடனே வல்லாளனை அழைத்தார். அவனை புதிய மற்போர் வீரனை எதிர்த்து மற்போர் புரிய முடியுமா என்றார். வல்லாளன் ஒப்புக்கொண்டான். அங்ஙனமே வல்லாளன் புதியவனை எதிர்த்துக் களம் இறங்கினான். இரண்டு யானைகள் மோதிக்கொண்டது போல இருவரும் மோதிக் கொண்டனர். எடுத்த எடுப்பில் வல்லாளன் தன் திறமைகளை வெளிக்காட்டவில்லை. மெல்ல மெல்ல அவன் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தான். ஆணவத்தோடு புதியவன் போரிடத் துவங்கும் சமயம் வல்லாளன் தன் திறமையை எடுத்து விட்டான். கூட்டம் ஆர்ப்பரிக்க புதியவன் மண்ணைக் கவ்வ, வல்லாளன் வெற்றி வீரனாக மார்பில் முஷ்டியால் குத்திக் கொண்டு தன் வெற்றியைக் கொண்டாடினான்.

    விராட தேசத்து ராணி சுதேசனாவுக்கு ஒரு தம்பி இருந்தான். அவன் பெயர் கீசகன். பயங்கரமான பலசாலி அவன். அந்த நாட்டுப் படைத்தலைவன், அதோடு அரசரின் மைத்துனன் என்கிற திமிர் உண்டு அவனுக்கு. பாண்டவர்களின் அக்ஞாத வாசம் பத்து மாதங்கள் முடிந்த நிலையில் அவர்களுக்கு ஒரு சோதனை உண்டானது கீசகன் வடிவத்தில். ஒரு நாள் அவன் தன் சகோதரியின் அந்தப்புரத்துக்குச் சென்றான். அங்கு ராணிக்கு உதவி புரிந்து கொண்டிருந்த தோழி சைரந்திரியைப் பார்த்து விட்டான். அவளுடைய அழகில் மயங்கி அந்தப் பணிப்பெண்ணைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி சகோதரி சுதேசனாவிடம் கேட்டான். அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக அந்த வேலைக்காரிதான் வேண்டுமென்று கீசகன் அடம் பிடித்தான். அவளுடைய கணவன்மார்கள் தீங்கு செய்வார்கள் எனும் எச்சரிக்கை செய்தும் அவன் கேட்பதாயில்லை.

    வேறு வழியறியாத ராணி தன் சேடியான சைரந்திரியை கீசகன் மாளிகைக்குச் சென்று சிறிது மதுபானம் எடுத்து வரும்படி கட்டளையிட்டாள். மறுத்துப் பேசமுடியாத சைரந்திரி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள், தனக்குப் பதிலாக வேறு யாரையாவது அனுப்பும்படி, ராணி கேட்கவில்லை, பிடிவாதமாக அவளையே போகச்சொன்னாள். கீசகன் கொடுத்த அழுத்தம் அல்லவா? வேறு வழியில்லை. இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டுத் தன் கணவன்மார்கள் மீதிருந்த நம்பிக்கையில் தாம் எப்படியும் காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் சைரந்திரி கீசகன் அரண்மனைக்குச் சென்றாள்.

    Raja_Ravi_Varma,_Keechaka_and_Sairandhri,_Oleograph_wiki pictureதான் விரும்பிய பெண் தன் அரண்மனைக்குள் வருவது கண்டதும் இன்ப உணர்வு மேலிட கீசகன் தன்னை மறந்து அவளைக் கட்டி அணைக்க முயன்றான். மிக நளினமாக அவன் பிடியிலிருந்து தப்பினாள் சைரந்திரி. ஓடி அரண்மனையின் சபைக்கு நடுவே சென்று உதவி கேட்டு அலறினாள். அப்போது அங்கு குழுமியிருந்த விராட ராஜா உட்பட அனைவரும் பயத்தில் உறைந்து போயிருந்தனர். கீசகனைக் கண்டு அவர்களுக்கெல்லாம் அத்தனை பயம். அருகிலிருந்த யுதிஷ்டிரரும், பீமனும் கூட தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாளாவிருந்தனர். பீமன் கட்டுப்பாட்டை இழந்து பொறுமை இழக்கும் நிலைக்கு வந்தது கண்டு அருகிலிருந்த யுதிஷ்டிரர் அவனை சமையற்கட்டில் விறகு பிளக்க வேண்டுமாம் போ என்று அனுப்பி வைத்தார்.

    எப்படியும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்த சைரந்திரி சமையற்கூடத்தில் பீமனை ரகசியமாகச் சந்தித்துத் தன்னைக் காப்பாற்ற வேண்டினாள். சூழ்நிலைகளை நன்கு ஆராய்ந்து பீமன் சைரந்திரியிடம் சொன்னான், “கீசகன் ஆசைக்கு இணங்குவது போல பாசாங்கு செய்து, நள்ளிரவில் தனித்து வந்து உன்னை சந்திக்கும்படி சொல். நான் அங்கு மறைந்திருந்து மற்றவைகளை கவனித்துக் கொள்கிறேன்” என்றான்.

    வலாளனாக இருந்த பீமன் சொன்ன ஏற்பாட்டின்படி திரெளபதி எனும் சைரந்திரி நடந்து கொண்டாள். அவள் சம்மதத்தைக் கேட்டு கீசகன் மட்டற்ற இன்ப அதிர்ச்சி அடைந்தான். இரவை எண்ணி தவமிருந்தான். இரவும் வந்தது. சைரந்திரி சொன்ன நாட்டியசாலைக்குள் எதிர்பார்ப்புகளோடும், இன்பக் கனவுகளோடும் நுழைந்தான். உள்ளே மங்கிய வெளிச்சம். அருகில் கட்டிலில் ஒரு உருவம் போர்வையால் மூடிக்கொண்டு படுத்திருந்ததைப் பார்த்தான் கீசகன். அவன் இதயம் மிக வேகமாக படபடவென்று அடித்துக் கொண்டது. உடலெங்கும் இன்ப உணர்பு பரவியது. கட்டிலுக்கருகில் சென்றான், மெல்ல போர்வையால் மூடிய தேகத்தைத் தொட்டான், அந்த உருவம் அசைந்தது, எழுந்தது பலம் மிகுந்த ஒரு ஆண் கீசகனோடு போரிடத் தொடங்கினான்.

    இருவரும் பலமாக மோதிக் கொண்டார்கள். ஒருவன் உள்ளம் காம இச்சையால் களி கொண்டிருந்தது. மற்றொருவன் உள்ளமோ பழிவாங்கும் உணர்வில் ரத்தப்பசி கொண்டு போராடியது. கையில் கிடைத்த கீசகனை மாவு பிசைவது போல பிசைந்து கொன்றான் வல்லாளன். பிறகு சென்று குளிர்ந்த நீரில் நீராடிவிட்டு உடலெங்கும் சந்தனம் பூசிக் கொண்டு படுத்து நன்கு உறங்கினான்.

    பொழுது விடிந்தது. ஊரெங்கும் செய்தி பரவியது. காம வெறி பிடித்த கீசகனை ஏதோ கந்தர்வர்கள் வந்து பிசைந்து கொன்றுவிட்டார்கள் என்று. விராட ராஜாவும், ராணி சுதேசனாவும், நாட்டு மக்களும், அரண்மனையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஐந்து ஜீவன்களைத் தவிர அனைவருமே கீசகனை கந்தர்வர்கள் வந்து கொன்றுவிட்டார்கள் என்று நம்பினார்கள். பாண்டவர்களும் எஞ்சியிருந்த ஒரு மாத காலத்தை அஞ்சாத வாசமிருந்து முடித்துக் கொண்டார்கள். கீசகன் வதம் மகாபாரதத்தில் வரும் ஒரு சுவையான கதை.

    படம் உதவிக்கு நன்றி: விக்கிபீடியா

    Share