Tag: தனுசு

  • புத்தாண்டு வாழ்த்துக்கள்

    தனுசுnew yearimages

    கண்களை மூடி
    கடவுளை நினைத்தால்
    அவன்
    பிரகாசிக்கிறான் உள்ளத்தில்

    அதே கண்களை மூடி
    தோழமையை நினைத்தால்
    உள்ளே சிலாகிப்பதோ நீங்கள்

    நட்புக்கு நல்லதோர் தேரானாது
    இந்த சின்ன உவமை
    என் வலை நட்பில்
    அழகானது நம் வல்லமை

    முன்னேற வேண்டுமா
    முன் மாதிரியாக வேண்டுமா
    அதற்கு
    மாற்றி யோசி  எனும் முழக்கம்
    முழுமையைடைந்திருக்கும் இவ்வேளையில்
    அதையும் மாற்றி யோசித்து
    இனி
    யோசித்து மாறு எனும் மந்திரம்
    உங்கள் முன் வைத்து

    வாழ்த்துகிறேன்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    படத்துக்கு நன்றி

    http://www.newhdwallpapers.in/happy-new-year/happy-new-years-2014-6/

    Share
  • காத்திருப்பில் கலங்காதே …

    -தனுசு-

    கொல்லிமலை காட்டுக்குள்ள
    மூங்கில் வெட்டும் சின்னப்புள்ளை
    மூணு நாளா தவிச்சிருக்கு -என்
    முகம் காண துடிச்சிருக்கு.

    பச்சரிசி சோறோடு
    கருவாட்டு குழம்பாக்கி
    தெருவோடு பார்த்திருக்கு -எனக்காக
    ஒத்தையிலே காத்திருக்கு.

    உச்சந்தலை கூந்தலிலே
    கட்டிவச்ச கருப்பு!
    நெற்றியெனும் முற்றத்திலே
    பொட்டு வச்ச வனப்பு !

    கண்ணுக்குள் குடிவந்த
    கடல்மீனின் துடிப்பு!
    கன்னக் கதுப்பினில்
    உப்பியிருக்கும் செழிப்பு!

    வெளஞ்ச சோளக்கொல்லை
    போல உந்தன் உடம்பு!
    மெலிந்த உதட்டோரம்
    மின்னுமடி சிவப்பு!

    நிமிர்ந்து நடந்தாலே -சுவைக்கும்
    மாங்கனி நினைப்பு!
    இத்தனையும் பார்த்தாலே -மனசில்
    வைக்குமடி நெருப்பு!

    மலரும் நினைவினில் -உன்முகம்
    உலர வேண்டாமடி
    புலரும் பொழுதிதில் -விலகும்
    உன் வருத்தமடி!

    கொஞ்சிப்பேச வாரேனடி
    கொஞ்சம் பொறு மயிலே!
    கூட்டிக் கொண்டு வாரேன்
    குளிர்காயும் நிலவை!

    கொக்கரொக்கோ கூவும்வரை
    நித்திரைக்கு தடை சொல்ல
    வில்லாளன் வாரேனடி
    வன வேட்டை முடித்து.

     

     

     

    Share
  • உன்னாலே……

    தனுசு

    நெரிசல் மிகுந்த சாலையில்
    உன்னோடு
    ஒரு
    நடைபயணம் போகிறேன்

     

    அங்கே பார்
    அத்தனை பேரின் கண்களும்
    உன் மீதும் என் மீதும்
    என் ஆண்மைக்கே கம்பீரம் சேர்த்தது
    நம் ஜோடிப்பொருத்தம்

     

    பட்டால் நெய்த வனப்பும்
    சுட்டு இழுக்கும் உன் இளைப்பும்
    சொல்லாமல் சொல்கிறது
    நீ ஒரு
    தொட்டால் மலரும் பூவின் ஜாதியென்று

     

    உன்னை முதன் முதலில்
    ஒரு திருமணத்தில் பார்த்தேன்
    பின்
    என் நண்பனுக்குப் பெண் தேட
    இணையம் வந்தபோது
    துணையாக உன்னையும் கண்டேன்
    பின்
    வணிகவளாகத்தில் பார்த்தேன்

     

    அன்றிலிருந்து
    கனவும்
    கடமையும் நீயானாய்
    தினமும்
    தரிசனம் நீயானாய்

     

    ஆனால்
    நான் மட்டும்
    நானாயில்லை
    உன் நினைவே எனை ஆண்டதன்றி வேறில்லை

     

    உனக்காக நின்றேன்
    பெற்றோரிடம் போராட்ட வீரனாக
    சகோதரியிடம் சிபாரிசுக்காக

     

    முயற்சியும் பலன் தந்தது
    என் நம்பிக்கையும் வென்றது
    இன்று
    நீ
    என்னிடம்
    இனி
    நீ
    எனக்கே
    எனக்கு மட்டும்

     

    அன்று
    நீயே அறியாமல்
    உன்னை பார்க்க வந்தேன் அடிக்கடி
    இன்று
    எனக்கு நீ சொந்தமானதால்
    நான் உயர்ந்தேன்
    வாழ்க்கையில் இன்னும் ஒரு படி

     

    அன்று
    ஆதாமையும் ஏவாளையும் சேர்க்க
    ஒரு ஆப்பிளை படைத்தான் இறைவன்
    இன்று
    எனக்காக
    ஆப்பிளாகவே
    படைத்தான் உன்னை

     

    இதோ
    என்னை யாரோ அழைக்கிறார்
    அவருக்கு
    உன் மூலமே பதில் சொல்கிறேன்
    ஹலோ…
    ஹலோ…

     

    Share
  • காந்தி ஜெயந்தி

     

    தனுசு

    Gandhiji-wallpaper

    தடி ஊன்றிய கிழவன்
    எங்கள் பாரதத்துப் பெருங்கிழவன்
    சுதந்திரப்
    பயிர் செழிக்க
    பாடுபட்ட ஒப்பற்ற உழவன்

    சாந்தியம் என்பது
    இவனது கொள்கை
    உலகம்
    காந்தியம் என சொல்லும்
    இவனது வாக்கை

    இவன்
    வெடி தூக்கிய கூட்டத்தை
    வடிகட்டிப் படியவைத்து
    அஹிம்சையில் கான் தீ என்ற காந்தி.
    அவன் பெயர் உச்சரித்தால்
    கிடைக்குது சாந்தி.

    அரை ஆடையும்
    பொக்கை வாயும்
    இவன் கவர்ச்சியின் சின்னம்
    சைவம் தின்ற
    சிங்கம் என்பது
    இவனைப்பற்றிய உலகத்தின் எண்ணம்

    இவனின்
    தடி கண்டு
    ஓடி ஒளிந்தான் எதிரி
    வெடிகுண்டு மார் துளைத்தும்
    இவன் அஹிம்சையைப் போடவில்லை உதறி

    ஐயன் இவன்
    அவதரித்த நன்னாள் இன்று
    அப்பன் இவனே
    என்றழைக்கும்
    ஒப்பற்ற பாரதம்
    என்றென்றும் ஒன்று.

     

    Share
  • குழம்பிக்கிடக்கும் குட்டை

    தனுசுcar-index

    ஆடையில்லா மனிதன்
    அரை மனிதன்!
    ஆசையில்லா மனிதன்
    குறை மனிதனா?

    ஆசைப்படு என்கிறது
    அனைத்து முன்னேற்ற நூல்களும்
    கலாம் சொன்னதால்
    கனவும் காண்கிறேன்.

    அடுக்குமாடி குடியிருப்பில்
    ஒரு வீடு!
    போகவர வாகனமும் ஒன்று அதனோடு!
    ஆண்டுக்கொரு
    உல்லாசப் பயணம்!
    பெண்டு பிள்ளை பெயரில்
    சில நிலபுல ஆவணம்!
    வங்கி இருப்பில்
    கொஞ்சம் நிரந்தரம்!
    நறுமணமும் வெள்ளுடையும்
    என்னை ஆக்கவேண்டும்
    அழகு சுந்தரம்!

    ஆனால்
    அகப்பையில் வர
    சட்டியில் இல்லையே!

    வேண்டாமென்றால்
    இந்த விளம்பரங்கள் விடுவதாயில்லை!
    வேண்டுமென்றால்
    வெள்ளையப்பன் வசதியில்லை!

    என் நண்பனும்
    அவனின் எதிர் வீடும்
    போட்டியிலிருக்க
    உன்னாலும் முடியும் தம்பி எனும்
    உற்சாக கீதம் என்னுள் எழுப்பி
    முகூர்த்தக்கால் நட்டு விட்டது மனம்!

    ஆட்டம் காணாமலிருக்க
    ஆடாமல் இருக்க வேண்டுமென்ற
    வேதமும் எச்சரிக்கிறது!

    ஆசையை விலக்க
    என் மனம்  நாகசாதுவல்ல
    நான்
    தத்தாத்ரேயர் படையாளியுமல்ல!

    ஆசைப்பட்டதை வாங்க
    நான்
    அம்பானியுமல்ல
    கையூட்டு வாங்கும்
    களவாணியுமல்ல!

    தேடலில்
    நிதானம் அவசியம்
    கவர்ச்சி
    வியாபாரத்தின் வசியம்

    இரண்டுக்கும் இடையில்
    அவசியமில்லா குழப்பத்தில்
    மாட்டிக்கொண்ட நான்
    நாலோரைப்போல்
    நாகரீக வாழ்வில்
    நடிக்கத் துடிக்கிறேன்
    முடிவில்
    வேட்டியாவது மிஞ்சுமா?
    வேறு விடையாவது கிடைக்குமா?

    படத்துக்கு நன்றி

    http://barbarashdwallpapers.com/cars-wallpapers-part-2/

    Share
  • காதலோ காதல்.


    தனுசு

     

    நீ
    எதையோ தொலைத்ததுபோல்
    தேடுகிறாய்
    தேடுவது என்னவென்று
    உனக்கே தெரியவில்லை…

    நீ
    எதையோ இழந்ததைப்போல்
    தவிக்கிறாய்
    இழந்ததும் என்னவென்று
    உனக்கே தெரியவில்லை…

    நீ
    எங்கேயோ சேர
    துடிக்கிறாய்
    எங்கே என்று
    உனக்கே தெரியவில்லை…

    நீ
    தங்கிக்கொள்ள ஒர் இடம்
    தேடுகிறாய்
    அது எந்த இடமென்று
    உனக்கே தெரியவில்லை…

    அனைத்திற்கும்
    நான் பதில் தரவா?

    நீ
    தேடுவது என்னை
    நீ
    இழந்தது உன்னை
    நீ
    சேர துடிப்பது என்னிடம்
    நீ
    தங்க ஏங்குவது என் இதயம்

    இன்னுமா
    உனக்கு புரியவில்லை
    நீ
    என்னை
    காதலிக்க தொடங்கிவிட்டாய்.

    ஆனால்
    வேண்டாமடா பாலகா
    பின்னாளில்
    தாடி தான் வளர்ப்பாய்
    கண்ணாடியில் பார்
    இன்னும் உனக்கு
    மீசையே முளைக்கவில்லை.

     

    Share
  • குழந்தையும் தெய்வமும்.

    தனுசு

    குழந்தை பிறப்பு குறைந்துவிட்ட
    கணக்கைக் கண்டு
    காரணமறிய
    கள்ளத்தனமாய்
    கடவுள் வந்தான் பூமிக்கு….

    சகதியில் பன்றி
    தன் குட்டிகளோடு புரள
    தாய் பன்றியை
    ஏக்கத்தோடு பார்த்தான்
    ஓரத்தில் நின்ற
    அனாதை சிறுவன்.

    பில்கேட்ஸின் சுவரொட்டியை
    கிழித்துவிட்டு
    பத்தாவது நாள் பட சுவரொட்டியை
    ஒட்டுவதில்
    நேர்த்தியாய் இருந்தான்
    ஒரு குழந்தை தொழிலாளி.

    புதிய சட்டைக்கு
    பட்டன் தைக்கும் சாக்கில்
    தன் மீது போட்டுப் பார்த்து
    தடவிக் கொடுத்தான்
    கிழிந்த ஆடையுடன் ஒரு சிறுவன்.

    உணவகத்தில்
    வயிறு நிறைந்து
    எழுந்தவரின் இலையில்
    உண்ணாமலிருந்த லட்டை
    உற்றுப்பார்த்து
    எடுத்துப் போட்டுத் துடைத்தான்
    பசித்த வயிறோடு ஒரு பாலக ஊழியன்.

    தன்னால் செய்யப்பட்ட பட்டாசுகள்
    வானத்தில்
    வண்ணம் காட்ட
    அதை நோக்கும் எண்ணமில்லாமல்
    புண்ணான உடம்பில்
    உண்ணாத வயிறும்
    வேதனை கொடுக்க
    வதை பட்டான்
    பட்டாசு தொழிற்சாலையில்
    ஒரு சிறுவன்.

    ஒப்பாரி பாட யாருமில்லாததால்
    ஈக்கள் மொய்க்க
    இறுதிப் பயணத்துக்குத் தயாரானது
    குப்பைத்தொட்டியில் கிடந்த
    ஒரு குழந்தை.

    மலர்ந்த பூக்களை
    தட்டில் வைத்து
    பூ பூவென கூவினாள்
    வாடிய முகத்துடன் சிறுமி.

    கல் சுமக்க போனவிடத்தில்
    வல்லுறவு சுமத்தப்பட்டதால்
    வெளியுலகம் அஞ்சி
    கூடுக்குள் குருகியது
    ஒரு பூப்பெய்தா பிஞ்சு.

    கும்பிட கடவுள்
    கைக்கெட்டும் தூரத்திலிருக்க
    கோயிலின் வாசலில்
    கள்ளனோ
    கபோதியோ
    அவனை கையெடுத்து கும்பிட்டு
    “ஐயா…சாமி….” என்றே
    காசு கேட்டது
    ஒரு குழந்தைக்கூட்டம்.

    குழந்தையாய்ப் பிறக்க
    குழந்தைகளே விரும்பவில்லை
    ஏழையாய்ப் பிறக்க
    எந்த உயிரும் தயாரில்லை
    தன் தவறை உணர்ந்தான்
    தலையில் அடித்துக்கொண்டான்

    என்னடா
    ஏதடா
    ஏனிந்த நிலையடா
    படைத்தவன் நானா?
    என் பணியும் வீணா?
    இறைவன் என்பவன்
    இனி எதற்காக
    இரங்கல் பாடுங்கள்
    இன்றோடு எனக்காகவென
    கண்ணீர் விட்டு அழுதான்.

     

    படத்துக்கு நன்றி: http://qhpc.org/wp-content/uploads/2013/02/Tears-of-Faith.jpg

     

    Share
  • போய்விடு இறைவா….


    தனுசு

     

    இறைவா
    நீ என்னை விட்டுப்போ
    அப்படியே
    எனக்கான உன் கருணையையும் கொண்டுபோ.

    இறைவா
    உன் இல்லத்தையும் மூடிக்கொள்
    அப்படியே
    எனக்கான அந்தப் பாதையையும் அடைத்துக்கொள்.

    உன்
    பரிவும் அருளும்
    பங்கு வைத்து பார் முழுக்கக் கொடு
    உன்
    அன்பும் அணைப்பும்
    ஏங்கி நிற்கும் அடியவர்க்கு வழங்கிவிடு.

    “வழிபட்டு வாழி” என்ற
    உன் மொழி கேட்டு
    விழி மூடி
    உன் பழியாய்
    நான் கிடக்க விரும்பவில்லை.
    என்னிலிருந்து
    நீ பிழைக்க
    என்வழி விட்டு நின்றுவிடு
    உன்
    எல்லைப் பரப்பு பற்றி எனக்கு கவலையில்லை.

    உன் சொர்க்க வாசல்
    அதை நீ எனக்கு
    தர்மம் செய்து தரவேண்டாம்
    வன் நரகமென பயமுறுத்தி
    என்னை நீ
    உன் பக்கம்
    இழுக்கவேண்டாம்.

    உன் சக்தி கொண்டு
    பக்தி தந்து
    பக்தனாக மாற்றிட வேண்டாம்.
    சாந்தி என்றும்
    சாந்தமென்றும்
    முக்தி பெற
    சந்தனத்தை பூசவேண்டாம்.

    உன் மோகம் தந்து
    ஆன்மீகத்தை
    என் மீது ஏற்றிடவேண்டாம்
    தயவும்
    துணையும்
    நீயே என
    நீயாக மெச்சிக்கொள்ள வேண்டாம்.

    மன்னிப்போ
    மறதியோ
    உன்னிடம் நான் எதிர்பார்க்கவில்லை.
    கண்டிப்பாய்
    இதை நான் உனக்கு விதிப்பதில்
    எனக்கு தயக்கமேதுமில்லை.

    ஏனென்றால்….
    என் அருகில்
    என் தாய் இருக்கிறாள்
    அது போதும் எனக்கு.

     

    Share
  • கீழ் வான சிவப்பு

    தனுசுimag va

    அடி வானம் சிவந்தது
    அது ஏன்?
    பல வினாக்கள் என்னுள் எழுந்தது
    அவைகளை உங்கள் முன் வைக்கிறேன்
    தகுந்த விடை தந்தால் ஏற்கிறேன்!

    பணி முடித்த சூரியன்
    சொல்லாமல்
    வீட்டுக்கு விரைவதால்
    வானம் கோபத்தில் சிவக்கிறதா?

    எரிக்கும் தன்னை வெறுத்து
    குளிர் தரும் நிலவை
    வரசொல்லும் வானுக்கு
    சூரியன் தீ வைக்கிறதா?

    ஒரு நாள் விளையாட்டில்
    இரவோ பகலோ
    யார் அத்து மீறுவதென புரியாமல்
    அந்தி நேரம்
    ஆட்டத்தை நிறுத்த
    அடிவானத்துக்கு
    சிவப்பு கொடி காட்டுகிறதா?

    இரவுக்கு
    அழகூட்ட வரும் நிலவுக்கு
    வானம் ஆரத்தி எடுக்கிறதா?

    இரவும் பகலும்
    கலவிக்கு தயாரானதால்
    வானம் வெட்கப்பட்டு சிவக்கிறதா?

    இரவின் வானம்
    நிலவாலும் நட்சத்திரத்தாலும்
    பூச்சூடுவதால்
    பகலின் முகம்
    பொறாமையால் கீழ்வானில் எரிகிறதா?

    இரவின் வண்ணத்திற்கு ஈடுகட்ட
    பகலவள்
    மருதாணியிட்டுக் கொண்டாளா?

    ஜாம விருந்துக்கு
    தயாராகும் வானம்
    மகிழ்ச்சியில்
    வெற்றிலை போட்டுக்கொண்டதா?

    இரவின் இருளால்
    உலகம் தவிக்காதிருக்க
    பகல்
    அடி வானில் தீப்பந்தம் ஏந்துகிறதா?

    நிலவவளை வரவேற்க
    பகலரசன்
    வானில்
    சிவப்பு கம்பளம் விரிக்கிறானா?

    பூலோக பெண்களுக்கு போட்டியாக
    மஞ்சள் அரைத்துக் குளித்த வானம்
    இன்று கொஞ்சம்
    அதிகமாக மஞ்சள் பூசிக்கொண்டதா?

    ஏன்?
    ஏன்? என்று எழுந்த
    விளங்க முடியா வினாக்களை
    உங்கள் முன் வைத்துவிட்டேன்
    தகுந்த பதிலை தாருங்கள்
    தலை வணங்கி ஏற்கிறேன்.

    Share
  • அவள் கண்ணாடி

     

    -தனுசு-

     

    என் வீட்டுக்கு
    வந்த நாள் முதல்
    நீ
    சிறைப் பறவையானாலும்….
    உன் தேவை
    எனக்கு படும்போதெல்லாம்
    எந்த மறுப்புமின்றி
    என்னை ஏற்றுக்கொள்வதால்
    உன்னை
    எனக்கு நிரம்ப பிடித்திருக்கிறது

    பனியின் குளிர்
    மழையின் சாரல்
    வியர்வை வாசம்
    தெருப்புழுதி
    இவைகள் என்னை தாக்கினாலும்
    அவைகளுடன் உன்னை நான் நோக்கினாலும்
    என் தேவை உணர்ந்து
    நீயும்
    மறுப்பின்றி
    உன் மீது படர
    எனக்கு இடம் தருகிறாய்

    நான் உறங்கையிலும்
    உடுத்துகையிலும்
    உடன் இருந்து பார்க்கும் நீ
    என்னை அலங்கரித்து அழகு பார்க்கையில்
    நீ
    அறியாத அந்தரங்கம்
    என்னிடம் மிச்சமேதுமில்லை

    உன் பள பள உடம்பை பார்க்கும் போதெல்லாம்
    புஷ்பாஞ்சலி விதத்தில்
    அரங்கேற்றம்
    செய்யும் என் சேட்டைகள்…
    இரவு
    பகல்
    வேறுபாடின்றி
    தந்தனா ராகம் பாடி
    அதை
    உன்னில் ரசிக்கவும் செய்கிறது.

    நான்
    வெய்யிலில் கறுத்து
    களைத்து வந்தாலும்
    கதவை மூட
    மறந்து வந்தாலும்
    அசதியில் தூங்கி
    கண் விழித்தாலும்
    குளித்து விட்டு
    புதுசாய் வந்தாலும்
    அமைதியாய் இருக்கும் நீ
    என்னை நிறுத்தி
    மீண்டும் உன்னைப் பார்க்கவைப்பது
    உன்னைத்தவிர வேறில்லை
    என் முன்னாடி நிற்கும்
    கண்ணடியே
    என் வீட்டு நிலைக்கண்ணாடியே.

     

    Share
  • என் இல்லாள்.

     

    தனுசு

     

    என் இல்லாளிடம் சொன்னேன்
    சிக்கனமாய் இருக்க
    மறுக்கிறாள்
    அதை எக்கணமும் கேட்க.

    பெண்ணுக்குப் பகை
    ஊதாரித்தனம்.
    அது இந்த மண்ணுக்கும் தெரியும்
    எடுத்து சொன்னால் கேட்பதில்லை
    எதிர்த்து நிற்க முடியவில்லை.

    சிறுகச் சிறுக சேர்த்தால்
    சேமிப்பு.
    அது பெருகப் பெருக
    தரும் பூரிப்பு.

    இவள்
    பெரிது பெரிதாய்
    செலவாக்கி
    வீட்டை நிறைக்கும்
    பைத்தியக்காரி.
    இந்தக் குணத்தை
    தாய்வீட்டுச் சீதனமாய்
    தன்னோடு கொண்டு வந்த
    கொடுமைக்காரி.

    மிச்சம் பிடித்து
    வாழ்வது
    மெச்சத்தகுந்த வாழ்க்கை
    அதை
    துச்சமாய் நினைப்பது
    இவளின் வாடிக்கை.

    கொஞ்சம் கொஞ்சமாய்
    கொடுப்பது
    குடும்பத்துக்கு அழகு
    கொட்டிக்கொடுப்பது
    என்ன வழக்கு?

    அள்ளிக்கொடுக்கும்
    இந்த
    அன்னபூரணியை
    தள்ளிவைக்க முடியவில்லை
    சொல்லிதர வாருங்கள்
    சொந்தமுள்ள அண்ணன்மாரே அக்காமாரே….
    குறைக்கச் சொல்லி கூறுங்கள்
    அவளின்
    அன்பில் தேவை சிக்கனம்!
    யாரையும்
    அரவணைப்பதிலும்
    தேவை சிக்கனம்!

     

    Share
  • விலங்குகள்

     

    தனுசு

    கள்ளிப்பாலுக்கு கொஞ்சம்
    கற்பழித்து கொஞ்சம்
    வரதட்சணையால்
    கரிக்கட்டையாகி கொஞ்சம்
    தலைபிரசவத்தில் கொஞ்சம்
    கணவன் கை விட்டு கொஞ்சம்
    காப்பார் யாருமின்றி கொஞ்சம்
    இப்படி
    கொஞ்சம் கொஞ்சமாய்
    பறிகொடுத்துவிட்டு
    காலியாகி போன பெண்ணுலகுக்கு
    ஒரு
    வேலிக்குள் இருந்தாலும்
    ஏனடா விலங்குகள்?

    அடுத்தவீட்டில்
    எதிர்வீட்டில்
    ஆலயத்தில்
    அலுவகத்தில்
    பேருந்தில்
    தெருவில்
    இருட்டில்
    பள்ளியில்
    கல்லூரியில்
    இங்கெல்லாம்
    கசக்கி மிதித்து
    அமிலம் வீசி
    இருப்பதையும் கிழித்து அழிக்க
    மனித விலங்குகள் இருப்பதாலா?

     

    Share
  • திருடி

    -தனுசு

    எங்கே சென்றாய்
    என்னவளே
    என்னை விட்டுசென்றது
    ஏனடி?

    எங்கே இருக்கிறாய்
    கள்ளியே
    என்னை பிரிந்து சென்றது
    ஏனடி?

    நித்தம் பித்தம்
    தந்தவளே
    இன்று மறைந்து சென்றது
    ஏனடி?

    இத்தனை அழைத்தும்
    மறுப்பவளே
    இன்று என்னடி ஆனது
    உனக்கு?

    பார்
    நீ இல்லாத இந்த இரவு
    எத்தனை இருட்டு?
    யார்
    சிறைவைத்து உன்னை
    விளையாடிப் பார்ப்பது!

    நீயும் ஒத்துக்கொண்டு
    ஓடி விளையாட
    இது நேரமா?
    உன்னைக்காணாமல்
    ஒடிந்துவிழும்
    என்னுயிரைப் பாரம்மா!

    சொல்லாமல்
    போன தேவியே
    அதனால்
    கொல்லாமல் கொல்லுது
    என் ஆவியே!

    எத்தனை இருளிலும்
    என்னால்
    உன்னை உணர முடியும்
    எத்தனை தொலைவிலும்
    என்னால்
    உன் திசையை அறிய முடியும்.

    ஆனால் இன்று
    உணரவோ அறியவோ முடியவில்லை
    இதை
    யாரிடம் கேட்டும் பயனில்லை.

    கேட்டால்
    இன்று அமாவாசை என்கிறார்கள்
    என் பிரயாசை அறியாதவர்கள்
    என்னை காக்க வைத்தது போதும்
    சீக்கிரம்
    ஓடோடி வா நிலா…..

     

    Share
  • மாலைகொடு வீரைய்யா!

    –  தனுசு

    வண்டி ஒட்டும் வீரைய்யா!
    சண்டிதனம் ஏனைய்யா?
    ஒண்டிக்கட்டை நானையா -என்னை
    கட்டிக் கொண்டு போய்யா!

    முருக்கு மீசை மாமனே!
    திறுக்கை மீன் நானாவேன்
    திருக்கிக் கொண்டு போவானேன்?
    செருக்கு வேண்டாம் கோமானே.

    எட்டு பத்து சிங்கக்குட்டி
    பெத்துத்தாறேன் புள்ளக்குட்டி -இந்த
    வெல்லக்கட்டி சொல்லுறதைக் கேளைய்யா-என்
    மயிலக்காளை பொன்னையா! .

    விடலைக்கோழி விரட்ட
    வேட்டைக்காரன் ஓடாதே!
    வெட்கப்பட்டு தப்பாதே
    வச்சக்குறி மீளாதே!

    கடைசி மாமன் பெண்குட்டி
    என்னைவிட சிறுகுட்டி-அவள்
    மூனுமாசம் முன்னாடி
    முடிஞ்சிதய்யா வளைகாப்பு!

    ஓலமிதை கேட்பாய்யா-மனக்
    கோலம் கான வருவாய்யா -எங்கள்
    வாத்தியார் பெயர் சுப்பையா
    அவரிடம் சொல்வேன் உஷாரைய்யா!

    தப்புத்தாளம் இல்லையா!-இது
    தப்புத்தாண்டா இல்லையா!
    ஊரைக்கூட்டி சொல்லையா!
    ஊமத்துரை பேசய்யா!

    நான் பூத்திருக்கும் ரோஜாப்பூ தோட்டம்-நல்ல
    கனியிருக்கும் மாம்பழதோப்பு!-இங்கு
    காவக்காரன் இல்லாட்டி -நரி
    ஊளையிடும் வாலாட்டி.

    காடுகரை காக்கும் வேலய்யா!
    அக்கா பொண்ணு முகம் பாரைய்யா!-அதில்
    ஏக்கம் ஒரு நூறைய்யா-நல்ல
    சாங்கி செய்தி சீக்கிரம் சொல்லைய்யா!

     

    -தனுசு

     

     

    நன்றி: வகுப்பறை

    Share
  • குமுறுகிறாள் கண்ணம்மா

     

    -தனுசு

    சபையோருக்கு வணக்கம்
    நான்
    பாரதி பாடிய பாஞ்சாலி வீட்டு பெண்!

    நான் சொல்வதெல்லாம் உண்மை!
    உண்மையைத் தவிர
    வேறொன்றுமில்லை.
    இது
    நீதிமன்ற வாக்குமூலமல்ல
    நான்
    வீதி தோறும் பார்க்கும் உண்மை!

    தேடினேன் தேடினேன்
    தேமதுரத் தமிழை தேடினேன்.
    ஓடினேன் ஓடினேன்
    ஒப்பில்லாத் தமிழை தேடி ஓடினேன்;

    கண்டேன்
    அந்த மொழி உலகின் முதல் கதாநாயகியை
    முள்வேலி முகாமில்!
    மீட்டெடுக்க
    போராளியோ
    ராஜாளியோ யாருமின்றி!

    “தவறு செய்தால்
    அதை தெரிந்து செய்தால்
    அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்”
    மண்ணின் மைந்தன் சொன்னது,

    தாயின்றி பிறப்பார் யாருமில்லை
    பாதிபொழுதில் மறையும் சூரியனுமில்லை
    தமிழும் தானாய் மறைந்ததில்லை
    தமிழா…
    நீ தமிழை
    மறந்தது மட்டும் எப்படி தவறில்லை?

    பட்டுடுத்திய தமிழ்
    இன்று
    பட்டுப் போனது
    பஞ்சபூதம் வணங்கிய தமிழ்
    இன்று
    பஞ்சமாகிப் போனது
    மகுடம் சூடிய தமிழ்
    இன்று
    மக்கி மண்ணாகிறது!

    தென்வேந்தர்
    சங்கம் வைத்து காத்தது
    பார் வேந்தர்
    பாலூட்டி வளர்த்தது
    இன்று
    பாலூற்ற வைத்திடுமோ?

    தமிழுக்குத் தேவையா இந்த
    அவலம்?
    தமிழனுக்குத் தேவையா இந்த
    கேவலம்?

    தாம்பத்யம் துறந்தவன் சன்யாசி!
    பல ஊர் சுற்றுபவன் பரதேசி!
    நீ பிழைக்க
    தமிழை மறந்ததை யோசி
    நீ எந்தவகை தாசி!

    Share