குமுறுகிறாள் கண்ணம்மா
-தனுசு
சபையோருக்கு வணக்கம்
நான்
பாரதி பாடிய பாஞ்சாலி வீட்டு பெண்!
நான் சொல்வதெல்லாம் உண்மை!
உண்மையைத் தவிர
வேறொன்றுமில்லை.
இது
நீதிமன்ற வாக்குமூலமல்ல
நான்
வீதி தோறும் பார்க்கும் உண்மை!
தேடினேன் தேடினேன்
தேமதுரத் தமிழை தேடினேன்.
ஓடினேன் ஓடினேன்
ஒப்பில்லாத் தமிழை தேடி ஓடினேன்;
கண்டேன்
அந்த மொழி உலகின் முதல் கதாநாயகியை
முள்வேலி முகாமில்!
மீட்டெடுக்க
போராளியோ
ராஜாளியோ யாருமின்றி!
“தவறு செய்தால்
அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்”
மண்ணின் மைந்தன் சொன்னது,
தாயின்றி பிறப்பார் யாருமில்லை
பாதிபொழுதில் மறையும் சூரியனுமில்லை
தமிழும் தானாய் மறைந்ததில்லை
தமிழா…
நீ தமிழை
மறந்தது மட்டும் எப்படி தவறில்லை?
பட்டுடுத்திய தமிழ்
இன்று
பட்டுப் போனது
பஞ்சபூதம் வணங்கிய தமிழ்
இன்று
பஞ்சமாகிப் போனது
மகுடம் சூடிய தமிழ்
இன்று
மக்கி மண்ணாகிறது!
தென்வேந்தர்
சங்கம் வைத்து காத்தது
பார் வேந்தர்
பாலூட்டி வளர்த்தது
இன்று
பாலூற்ற வைத்திடுமோ?
தமிழுக்குத் தேவையா இந்த
அவலம்?
தமிழனுக்குத் தேவையா இந்த
கேவலம்?
தாம்பத்யம் துறந்தவன் சன்யாசி!
பல ஊர் சுற்றுபவன் பரதேசி!
நீ பிழைக்க
தமிழை மறந்ததை யோசி
நீ எந்தவகை தாசி!
வழக்கம் போல் கவிஞரின் உணர்ச்சி பொங்கும் வரிகள். நியாயம் நிறைந்த கோபாவேசம் தெறிக்கிறது ஒவ்வொரு சொல்லிலும். வாழ்த்துக்கள் சகோதரரே!!