இசையும் கோயிலும் 2

விசாலம்

வாத்தியங்களை எடுத்துக்கொண்டால் எல்லா கோயில்களிலும் நாம் கேட்டு அனுபவிப்பது நாதசுரம் தான் என்பதில் சந்தேகமேயில்லை இது இந்த அளவு சிறந்து விளங்குவதன் காரணம் அதன் ஒலிதான்.மங்களகரமான அதன் த்வனி எல்லோரையும் ஈர்க்கும் சக்தியுடையது. .மேலும் கோயில்களில் இருக்கும் மண்டபங்களில் இந்த ஒலி எதிரொலித்து அருகில் இருக்கும் அக்கிரகாரம் கோடி வரை கேட்பதால் அந்தச்சூழ்நிலையே ஆன்மீக நற்றலைகளால் நிரம்பி மனதுக்கு ஆனந்தமளிக்கிறது, இதைத்தவிர சங்கு, திருச்சின்னம், உடல், முகவீணை, பஞ்சமுகவாத்தியங்கள் என பலவகை வாத்தியங்களையும் காணமுடிகிறது. கேரள நாட்டுக்கோயில்களில் அதிகமான வாத்தியங்கள் இசைப்பதை நாம் காணமுடிகிறது .ஆடிப்பூரம் திருநாளில் ஜண்டை .தவில் தொப்பிமத்தளம் ,வீராணம் டமாரம், மிருதங்கம் போன்ற தோல் வாத்தியங்கள் முக்கியப்பங்கு வகித்து கேட்பவரைப் பரவசப்படுத்துகின்றன. வித விதமான லயங்களை அள்ளி வீசுகின்றன. இவைகளுடன் சேங்கலை,குழித்தாளம்,ஜால்ரா, போன்றவைகளும் ஒன்று சேர நம்மை நாமே மறந்துவிடுகிறோம். .

கோயில் மணியும் அதன் ஒலியும் நம்மை ஆன்மீக சூழ்நிலைக்கு எடுத்துச்சென்று நம்மையுமறியாமல் இறைவன், இறைவியின் பால் நம் கவனத்தைச்செலுத்துகிறோம்.சில சமயம் அந்த மணி நிற்காமல் டண்,டண் டண் என்று வரிசையாக ஒலிக்கும் சில சமயம் அந்த மணி விட்டு விட்டு ஒலிக்கும் அதன் ஸ்வரம் சட்ஜமமாக இருக்கும் சில கோயில்களில் கோயில் மணியுடன் சங்கும் ஊதுவதுண்டு .நான் அடிக்கடி சிதம்பரம் போய்வருவேன்.அப்போது இதைக்கூர்மையாக கவனிப்பேன் இதில் என்ன சிறப்பென்றால் மணியின் ஒலி “ஸ’ என்று கேட்க சங்கின் ஒலி “ப” என்று இசைக்கும் “ஸ பா ஸ பா “என்று வரிசையாக கேட்க உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும் ஆஹா அது என்ன ஆனந்தம் !

திருச்சின்னம் என்ற வாத்தியம் பித்தளையினால் ஆனது என நினைக்கிறேன் .இது ஒரு காற்று வாத்தியம் ஆனால் இதன் நடுவில் துளைகள் இல்லை .பெருமாளின் திருமஞ்சனம் அல்லது சிவனின் அபிஷேகம் போது முழங்கப்படும்.இதனது ஒலியும் வெகு தூரம் வரை எட்டும் சீரடி பாபா மந்திரில் இது போன்று ஒலி எழுப்பி கண்டிருக்கிறேன். உடல் என்னும் வாத்தியம் ஒரு பெரிய குச்சியால் அடித்து ஒலி எழுப்புவதாக இருக்கிறது . கோயிலிலிருந்து சுவாமி புறப்பாட்டின் போது “டம்டம்” என்றோ அல்லது மூன்று மூன்றாக “டம் டம் டம் ” என்றோ அடித்து சுவாமி எழுவதைத் தெரிவிப்பது உண்டு கிராமத்து எல்லை தெய்வங்களின் கோயில்களில் தவிலுக்கு முக்கிய பங்கு உண்டு. அத்துடன் உடுக்கு, தண்டைக்கொலுசு, தம்பட்டம்,சலங்கை போன்றவைகளும் பூசாரி உபயோகிப்பதைக்காணலாம் இங்கு இருக்கும் தேவி மாரியம்மன், காளி, பேச்சாயி மூக்காயி போன்ற பெயர்களிலும் ஆண்தெய்வம் கருப்பண்ண சுவாமி மதுரை வீரன் முனீஸ்வரன் போன்ற பெயர்களிலும் காணமுடிகிறது

தொடரும் .

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *