குழம்பிக்கிடக்கும் குட்டை

6

தனுசுcar-index

ஆடையில்லா மனிதன்
அரை மனிதன்!
ஆசையில்லா மனிதன்
குறை மனிதனா?

ஆசைப்படு என்கிறது
அனைத்து முன்னேற்ற நூல்களும்
கலாம் சொன்னதால்
கனவும் காண்கிறேன்.

அடுக்குமாடி குடியிருப்பில்
ஒரு வீடு!
போகவர வாகனமும் ஒன்று அதனோடு!
ஆண்டுக்கொரு
உல்லாசப் பயணம்!
பெண்டு பிள்ளை பெயரில்
சில நிலபுல ஆவணம்!
வங்கி இருப்பில்
கொஞ்சம் நிரந்தரம்!
நறுமணமும் வெள்ளுடையும்
என்னை ஆக்கவேண்டும்
அழகு சுந்தரம்!

ஆனால்
அகப்பையில் வர
சட்டியில் இல்லையே!

வேண்டாமென்றால்
இந்த விளம்பரங்கள் விடுவதாயில்லை!
வேண்டுமென்றால்
வெள்ளையப்பன் வசதியில்லை!

என் நண்பனும்
அவனின் எதிர் வீடும்
போட்டியிலிருக்க
உன்னாலும் முடியும் தம்பி எனும்
உற்சாக கீதம் என்னுள் எழுப்பி
முகூர்த்தக்கால் நட்டு விட்டது மனம்!

ஆட்டம் காணாமலிருக்க
ஆடாமல் இருக்க வேண்டுமென்ற
வேதமும் எச்சரிக்கிறது!

ஆசையை விலக்க
என் மனம்  நாகசாதுவல்ல
நான்
தத்தாத்ரேயர் படையாளியுமல்ல!

ஆசைப்பட்டதை வாங்க
நான்
அம்பானியுமல்ல
கையூட்டு வாங்கும்
களவாணியுமல்ல!

தேடலில்
நிதானம் அவசியம்
கவர்ச்சி
வியாபாரத்தின் வசியம்

இரண்டுக்கும் இடையில்
அவசியமில்லா குழப்பத்தில்
மாட்டிக்கொண்ட நான்
நாலோரைப்போல்
நாகரீக வாழ்வில்
நடிக்கத் துடிக்கிறேன்
முடிவில்
வேட்டியாவது மிஞ்சுமா?
வேறு விடையாவது கிடைக்குமா?

படத்துக்கு நன்றி

http://barbarashdwallpapers.com/cars-wallpapers-part-2/

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “குழம்பிக்கிடக்கும் குட்டை

  1. ///ஆசைப்பட்டதை வாங்க
    நான்
    அம்பானியுமல்ல
    கையூட்டு வாங்கும்
    களவாணியுமல்ல!///
    🙂 

    ///தேடலில்
    நிதானம் அவசியம்
    கவர்ச்சி
    வியாபாரத்தின் வசியம்
    இரண்டுக்கும் இடையில்
    அவசியமில்லா குழப்பத்தில்
    மாட்டிக்கொண்ட நான்
    நாலோரைப்போல்
    நாகரீக வாழ்வில்
    நடிக்கத் துடிக்கிறேன்
    முடிவில்
    வேட்டியாவது மிஞ்சுமா?///

    🙂 நடிப்பது என்பது ரொம்பக் கஷ்டம் தான் கவிஞரே!

    அருமை.. பகிர்விற்கு நன்றிகள்.

  2. நாகரிக மோகம் மிகுந்த இன்றைய உலகில் மற்றவர்களுக்காகவாவது நாம் பகட்டாக வாழவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகின்றது; அதனை வெறுத்து எளிமையாக வாழத் தலைப்பட்டாலோ உலகம் அவனுக்கு வழங்கும் பெயர்கள் ‘கஞ்சன்’, ‘வாழத் தெரியாதவன்’ இன்னும் பல. குழம்பிக் கிடக்கும் குட்டையாகின்றது மனித வாழ்வு என்பது உண்மையே. யதார்த்தத்தை அழகிய கவிதையாய் வார்த்துள்ள நண்பர் தனுசுவுக்குப் பாராட்டுக்கள்!!

  3. அன்பின் தனுசு,
    வித்தியாசமாய் நிறைய கேள்வி(கவி) கணைகளை தொடுக்கிறீர்கள்
    குழம்பிக்கிடக்கும் குட்டையானால் தலையும் சொட்டை யாகிவிடும்
    எழும்பி கிளப்பும் ஆசைப்பேயோ…..தலையை மொட்டை ஆக்கிவிடும்
    விரும்பி தேடிசுழலில் மாட்டிக் கொண்டார் கதையோ பலகோடி
    திரும்பி அருளில் திருந்தினால் அதிலே  வாழ்வின் பயன்கோடி

  4. வாழ்க்கையின் யதார்த்தத்தை, ஒரு சாதாரண குடும்பத் தலைவனின் மனவோட்டத்தை அழகாகக் கவிதையில் கொண்டு வந்து விட்டீர்கள் நண்பரே. சகோதரி மேகலா இராமமூர்த்தி கூறியிருப்பது போல அனாவசியமான செலவுகளைத் தவிர்த்து வாழ்ந்தால் கஞ்சன் என்ற முத்திரியைக் குத்துவதற்குத் தயாராகவே இருக்கிறது சமுதாயம். அனைத்து வரிகளுமே அருமை. வாழ்த்துக்கள்.

  5. கவிதையை படித்து கருத்துக்கள் பதிவிட்ட அருமை நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    Alasiam G
    /// 🙂 நடிப்பது என்பது ரொம்பக் கஷ்டம் தான் கவிஞரே!
    அருமை.. பகிர்விற்கு நன்றிகள்.///

    மேகலா இராமமூர்த்தி wrote
    ///யதார்த்தத்தை அழகிய கவிதையாய் வார்த்துள்ள நண்பர் தனுசுவுக்குப் பாராட்டுக்கள்!!///

    sathiyamani wrote
    ///வித்தியாசமாய் நிறைய கேள்வி(கவி) கணைகளை தொடுக்கிறீர்கள்///

    சச்சிதானந்தம் wrote///
    சாதாரண குடும்பத் தலைவனின் மனவோட்டத்தை அழகாகக் கவிதையில் கொண்டு வந்து விட்டீர்கள்///

    தாங்கள் அனைவரின் மனம் நிறைந்த பாராட்டுக்கள் என்னை மேன் மேலும் உற்சாகமூட்டுகிறது. நன்றிகள்.

  6. விடை கிடைத்துவிட்டது-
    நல்ல கவிதையாக…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.