Tag: தி. சுபாஷிணி

  • ‘வாழ்நாள் சாதனையாளர்’ சுபாஷிணி திருமலை

    ‘வாழ்நாள் சாதனையாளர்’ சுபாஷிணி திருமலை

    அண்ணாகண்ணன்

    எழுத்தாளர் சுபாஷிணி திருமலை அவர்களுக்குத் திருவள்ளுவர் நற்பணி மன்றம், வாழ்நாள் சாதனையாளர் விருதினை 08.11.2020 அன்று வழங்குகிறது. வல்லமை மின்னிதழில் நூற்றுக்கும் மேலான படைப்புகளை வழங்கிய, 14 நூல்களை இயற்றிய சுபாஷிணி அவர்களுடனான என் அனுபவங்கள், நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஓர் அந்தியின் சந்திப்பில்…

    தி.சுபாஷிணி

    வழக்கத்திற்கு மாறாக, வாசற்படிகள் உயரமாய்த் தோன்றின. கால்களின் கனமும், மனத்தின் கனமும் அழுத்த ஏறுவதில் மயக்கதயக்கங்கள் ஏற்பட்டன. சில நிமிடங்கள் அவற்றைப் பார்த்ததில் கழிந்தன. “அம்மா! ஏதாவது பிரச்சினையா? நான் உதவட்டுமா?” என-, என்னை இறக்கிவிட்ட ஆட்டோக்காரர் வினவினார். “இல்லைங்க” என தலையசைத்தேன். மனமில்லாதுதான் ஆட்டோ நகன்றது. எப்படியோ படிகளில் ஏறி, வீட்டிற்குள் நுழைந்துவிட்டேன். நீண்ட குறுகிய பாதை, என்மேல் ஒரு இறுக்கத்தைப் பாய்ச்சியது. இதன் முடிவில் ஒரு உயரமான படி. அதில் தடுக்கி, தடுமாறி விழப்போனேன்!

    “அடவந்துவிட்டாயா? பார்த்து வரக்கூடாதா?” என்கின்ற குரல், என்னைச் சரியாக, விழாமல் காப்பாற்றியது. இந்தக் குரல் இங்கு எப்படி-?

    tkc“கலவரப்படாதே சுபா! நான் உடல் தேறிவிட்டேன்! அனாவசியமாக வேலை தடைபடக்கூடாது என மோகனையும், அண்ணாமலையையும் கூட்டத்திற்கு அனுப்பிவிட்டேன். இப்போது காந்தியைப் பற்றிக் கூறிக் கொண்டிருப்பார்கள்” என்றார். பக்கத்தில் பிரேமா, தலைமாட்டில் செண்பகவல்லி, பக்கவாட்டில் என் அத்தை. இன்னும் சில பேர்கள் இருந்தனர். நான் நன்றாகத் தேறிவிட்டேன். என்ன கொண்டு வந்திருக்கின்றாய் எனக்கு? கேட்டுவிட்டு ஏதோ சொல்கிறார். அங்கு சிரிப்பு அலை அடித்து மோதுகிறது. சட்டென்று, அப்பா யாரையோ அழைப்பதுபோல் கையை தூக்குகிறார். பின் இரு கைகளையும் தூக்கி, எதையோ பற்றுகிறார். ஆனால் அது முடியவில்லை. அலைபாய்கிறது. உடம்பு தூக்கிப்போடுகிறது. சூழ்நிலையின் மாற்றம் புரிந்து, மருத்துவரை அழைக்க சில நொடிகள் ஆகிறது. மருத்துவர் வருகிறார். அவர் இதயத்தைப் பிசைகிறார். நெஞ்சில் குத்துகிறார். அவ்வளவுதான், எல்லாம் சில நிமிடங்கள்தான். இயக்கம் நின்றுவிடுகிறது. “மாஸிவ் ஹார்ட் அட்டாக்” என்று கூறிவிட்டு மருத்துவர் வெளியேறுகிறார்.

    ‘அப்பா’ என அவரைப் பிடிக்க கைநீட்டுகின்றேன். காற்றுதான் என் கையில் அகப்பட்டது. கைககள் திண்ணையில் விழுந்தன. அத்திண்ணை காலியாகக் கிடக்கின்றது-. மெதுவாக ஏறி அமர்கின்றேன். முன் தெரிந்த முற்றம், என் குழப்பத்தை இன்னமும் விரிவாக்கி, இருபக்கமும் பூட்டிய கதவுகள் அமைதியின் அழுத்தத்தை மேலும் கனமாக்கின. சில நிமிடங்கள் கழிகின்றன.

    திண்ணையை விட்டு இறங்கி முற்றம் முடியும் இடத்தில் ஏறி, இடப்பக்கம் ‘21ணி’ என்னும் இலக்கம் உள்ள கதவைப் பார்க்கின்றேன். பல நாட்கள் மூடிய இறுக்கம் அதில் தெரிகின்றது. கதவையொட்டிய சன்னலைக் கவனிக்கின்றேன். கதவில் இலேசான இடைவெளி காணப்படுகின்றது. சன்னல் கம்பிகளின் இடையே கையால் கதவைத் தள்ளுகின்றேன். அதன் பழமையின் ஸ்பரிசத்தை உணர்கின்றேன். கதவு திறக்கின்றது. காட்சி விரிகின்றது.

    பல பத்திரிகைகள், இதழ்கள், மௌனித்துக் கிடக்கின்றன. அவைகள் பிரிக்கப்படாத ஏக்கக் குவியல்களுக்குள் தங்களை மறைத்துக் கொண்டிருக்கின்றன. பிரிக்கப்படாத தபால்களும், படிக்கப்படாத கார்டுகளும் எவற்றைத் தாங்கி நிற்கின்றனவோ! அதன் பதில்களைத் தாங்கிவரும் என தூதனுப்பிய நெஞ்சங்களின் காத்திருப்பு அவற்றில் தெரிகின்றன.

    புத்தகங்கள் நிறைந்த மேஜை. பக்கத்தில் காலியான அந்தக் காலத்து நாற்காலி. அதன்மேல் இருந்த துண்டு பல நாட்களாக மாற்றாததை அறிவிக்கின்றது. பக்கத்தில் சாய்வு நாற்காலி. மேலே, சுவரைப் பார்க்கின்றேன். “என் குருநாதர் வல்லிக்கண்ணன்” என என் காதில் குரல் ஒன்று ஒலிக்கின்றது. அந்த அறையின் இடதுபக்க ஒற்றைப் பெஞ்சில் கிடந்த பழைய செய்தித்தாள்கள், பத்திரிகைகள் தோழர். பால்முகம்மது வீட்டிற்கு வந்து வெகுநாட்களாகிவிட்டன என பறைசாற்றுகின்றதே என எண்ணிக் கொண்டிருந்த வேளையில், “ஏதாவது ஷூட்டிங்குக்குப் போய் இருப்பான்” என்று என் காதில் ஒரு குரல் சொல்லிப் போயிற்று.

    ஏன் கண்ணாடி மேசைமேல் விரித்து வைத்த வண்ணம் இருக்கின்றது! டெலிபோன் எண்கள் எழுதி வைக்கப்பட்ட நோட்டில் ஒரு பென்ஸிலை வைத்து திறந்து கிடக்கின்றது. தொடுகை இல்லா தொலைபேசி வாட்டமோடு அமர்ந்திருக்கின்றது. கொடியில் லாவண்டர் கலர் சட்டையும், ஒரு துண்டும் தொங்கிக் கொண்டிருக்கின்றது. அதன்கீழே கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் எவர்சில்வர் சாடி, டம்ளருடன் ஏதோ மௌனத்தில் உரையாடிக் கொண்டிருக்கின்றது போல் ஒரு உணர்வு.

    கண்கள் பரந்து பார்க்கப்பார்க்க, அந்த அறையின் இன்மையைப் பகர்கின்றது. இன்மையின் வெறுமையும், தனிமையும் என்னை மீண்டும் அந்த திண்ணையில் அமரச் செய்கின்றது.

    இவ்வீட்டை ஆட்சி செய்த ‘தி.க.சி.’ என்கின்ற ஆளுமை தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பட்ட ஆளுமைகளையும், இந்த முற்றம் தாண்டி, இடதுபக்க அறைக்கு வரச்செய்கின்றது என்றால், அந்த ஆளுமையின் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கின்றதே! அந்த பிரமிப்பின் சுழற்சியின் ஆழத்திற்குள் சென்று கொண்டிருக்கையில்,

    “அம்மா! எப்ப வந்தீங்க! வந்து ரொம்ப நேரமாகிவிட்டதா. வாங்க போகலாம்! ஆட்டோ கொண்டு வந்திருக்கின்றேன்” என விளித்தது, அந்த பிரமிப்பிலிருந்து என்னை விடுவித்தான் அந்த அருமையான அன்பன் சரவணன். பாரதிக்கு கண்ணன். தி.க.சி.க்கு சரவணன். இருவரும் கொடுத்து வைத்தவர்கள்.

    ‘இதோ’ எனத் திண்ணையைவிட்டு இறங்குகின்றேன். ‘போகிறாயா! பார்த்துப் போய்விட்டு வா’ என்றது… அப்பாவின் குரல்… மீண்டும் அப்பா! இங்கு எப்படி? புதிரிலிருந்து விடுபடுமுன் சரவணன் ஆட்டோ முன் நின்றுவிட்டான். ஆட்டோவில் அமர்கின்றேன். ஆட்டோ பெருமாள்புரம் நோக்கிச் செல்கின்றது. ஆமாம்! எப்படி அப்பா இங்குவந்தார்? இன்னமும் கேள்விச் சூழலில் நான் இருக்கின்றேன்.

    19சி, பெருமாள்புரம் & “அங்கு வரவா” என வினவியதற்கு 21ணி, சுடலைமாடன் கோவில் தெருவைக் கைகாட்டியது 19சி பெருமாள்புரம்& ஒரு கார் நுழையும் அளவு பெரிய கேட். அது வசதியாகச் செல்வதற்கு ஒரு ‘சரிவை’ கொத்தனார் கட்டிக்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்ததும் நன்றியாய் அவ்வீட்டைப் பார்க்கின்றேன்.

    “வாருங்கள்! மாமா அந்த அறையில் இருக்கிறார்கள்” என வரவேற்றார் அவரது மருமகள். எப்போதும் தன் மருமகளைச் சொல்லும்போதெல்லாம் ‘பிரியமானவள்’ என்று சொல்லுவார்.

    நானும், சரவணனும் தயங்குகின்றோம். ‘மாமாவை எழுப்பலாம், எழுப்புங்கள்’ என்றார். வண்ணதாசனும் வந்து, ‘உள்ளே போங்கள்’ என்றார்.

    தூக்கமாகத் தெரியவில்லை. உடம்பின் நோய்மையின் ஆயாசத்தில் படுத்திருப்பது தெரிகின்றது. சரவணன் அவரைத் தொட்டு எழுப்பி, உட்கார வைத்தான்.

    ‘சுபாஷிணி வந்திருக்கின்றேன்’ என்றேன். (அதுசரி! அந்த வீட்டில் ஏன் என் அப்பா இருந்தார்?). ‘வாம்மா! வந்துவிட்டாயா? பிரயாணம் வசதியாக இருந்ததா? சாப்பிட்டாயா?’ என்றார் தி.க.சி. எப்படி இவரால் எந்த நிலையிலும் இப்படி அன்பாக இருக்க முடிகின்றது?

    அவர் உடலின் ஆயாசம் வெளிப்படையாகத் தெரிகின்றது. அதையும் மீறி, அவரது இயல்புக்கு மீறி மனச்சோர்வு தெரிகின்றது. இது என்னுள் ஒருவித அச்சத்தைக் கிளறுகிறது. அந்த அறை அவ்வளவு வெளிச்சத்தையும், நவீனத்தின் ஒழுங்கைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும், மீறித் தெறித்த பதட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டது.

    ‘மி ணீனீ sவீஸீளீவீஸீரீ’ என்று அவரிடமிருந்து விழுந்த வார்த்தைகள்… என்னெஞ்சையும் வயிற்றையும் கலக்கியது. நான் சரவணனைப் பார்க்கின்றேன். அவன் அன்பின் குழந்தை. கலவரமாய் என்னைப் பார்க்கிறான்.

    ‘சரவணா! அந்த அலமாரியிலிருந்து அந்த நாட்குறிப்புப் புத்தகம் ஒன்றை எடு. அதில் என்றென்றும் அன்புடன் என்று எழுதி என்னிடம் கொடு’ என்றார். அவன் எழுதிக்கொடுத்தவுடன் ‘தி.க.சி.’ எனக் கையொப்பமிட்டுக் கொடுத்தார். அதுதான் அவரது கடைசி கையெழுத்து என்றும், எனக்குக் கொடுக்கப்பட்ட கடைசி புத்தகம் என்றும் நான் அறியவில்லை.

    “பார்த்தாயா! சந்தியாப் பதிப்பகம் நேற்றே அனுப்பிவிட்டார்கள்” என்று சந்தோஷமாய் சிரித்தார். அவருக்கு என் நன்றியைச் சொல் என்றார்.

    ஆமாம்! சந்தியா சௌந்திரராஜனுக்கும், நடராஜனுக்கும் தி.க.சி. அன்பர்கள் கடன்பட்டவர்களே!

    அய்யா புத்தகம் கொடுப்பதையும், நான் அவரிடமிருந்து வாங்கிக் கொள்வதையும் என் அலைபேசிக் கேமிராவில் சரவணன் பதிவு செய்து கொண்டார். ஏதோ வேலையிலிருந்த வண்ணதாசன் அறைக்குள் வந்து வாங்க என அழைத்து, விசாரித்துவிட்டுப் போனார்.

    ஆமாம்! என் அப்பா எப்படி அந்த வீட்டில் இருந்தார்? மனம் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.

    “அம்மா! செம்மொழிக் கூட்டத்திற்குப் போனாயா? ஜனனேசனைப் பார்த்தாய் என்றாய்! எங்கு பார்த்தாய்?” எனக் கேட்டார். நானும் அதற்குப் பதிலிறுத்தேன். அப்போதுகூட நான் வித்தியாசமாய் உணரவில்லை.

     “அம்மா! இந்த பி.ஏ. கிருஷ்ணன், ஐன்ஸ்டீன் பற்றி எழுதியது படித்தாயா? சே! என்னமா எழுதியிருக்கின்றார். என்னைப் பற்றி கணையாழியில் பேரா.எஸ்.தோத்திரி குறிப்பிட்டு இருக்கிறார். அவருக்கு என் நன்றியைச் சொல்லு”. (ஆனால் அப்போதுகூட அறியவில்லை. பேரா.எஸ்.தோத்தரி கூடிய விரைவில் அய்யாவிற்கு நினைவுக் கட்டுரை தினமணியில் எழுதுவார் என்று). அவர் கூறிய நன்றியை இவரிடம் சொல்லலாம். ஆனால் பேரா.தோத்தரி எழுதிய கட்டுரை பற்றி அய்யாவிடம் எப்படி சொல்வது? யார் சொல்வது? தெரியலியே! ஆனால் என் அப்பா! ஏன் என்னுடனே வந்து கொண்டிருப்பதுபோல் இருக்கின்றது!

    “ரொம்ப களைப்பாக இருக்கின்றது, படுத்துக்கட்டுமா?” என்று கேட்டவர், மேலும் பேச்சைத் தொடங்கினார்.

    அவர் முகம் கறுத்து இருக்கின்றது. கால்கள் வீங்கி இருக்கின்றன. கைகளும் வீக்கத்தின் தொடக்கத்தில் இருக்கின்றன. இப்படி அய்யாவைப் பார்த்ததும் எனக்கு என்னவோ பண்ணியது. வலித்தது & தலையிலிருந்து கால் விரல் வரை ஒவ்வொரு அசைவும் வலித்தது. சரவணனுக்கு நம்பிக்கை இருக்கின்றது, “அம்மா! அய்யா கெதியாத்தான் இருக்கார். கவலைப்படாதீங்க!” என்கின்றான்.

    அன்று இரவு ஒரு மணிக்கு கால் தடுமாறி கீழே விழுந்த தி.க.சி. தானே எழுந்து வீட்டிற்குள் வந்து நாற்காலியில் அமர்கின்றார். பின் ஒடிந்து தொங்கிய கையைத் துண்டால், மறுகையின் உதவிகொண்டு கட்டிவிட்டு வலியைப் பொறுத்துக்கொண்டு காலை 5 மணிக்காகக் காத்திருந்தார். பின் ஓவியர் பொன். வள்ளிநாயகத்திற்குப் போன் செய்திருக்கின்றார். பக்கத்து வீட்டிலிருக்கும் சுந்தரிக்குக்கூட அவர் சொல்லவில்லை. அகால வேளையில் யாரையும் தன்பொருட்டுத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அந்த வலி இருந்த அந்திக்காலையில்கூட டெலிபோனில், “கவலைப்படாதே! நான் கையை சரி பண்ணிக்கொண்டு வருகின்றேன்” என்று பேசிவிட்டுப்போன தி.க.சி.யா இன்று இல்லை எனத் தோன்றுகின்றது.

    “இறப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அது இயற்கையான நிகழ்வு. அதைப்பற்றி பரவாயில்லை. என் ஞான ஆசான் பாரதி வழிதான் நான் வாழ்ந்திருக்கின்றேன். என் குருநாதர் வல்லிக்கண்ணன், பாரதிதாசன், வள்ளலார் இப்படியான சத்குருவோடுதான் என் வாழ்க்கை. நவீன அரசியலில் அறநெறி இல்லாமல் போய்விட்டது. எல்லாவற்றிற்கும் அறம்தான் முக்கியம். அம்மா! எனக்கும் பலவீனங்கள் இருந்திருக்கலாம். சில தவறுகள் செய்திருக்கலாம். ஆனால் நான் தமிழுக்கு ஒரு சில துளிகளாவது செய்து இருக்கின்றேன். தமிழனாய்ச் சாகின்றேன். வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழ்க பாரத மணித்திருநாடு!” என்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறார்.

    தமிழ் வாழும்! சுபாஷிணிகள் வாழ்வார்கள்! சரவணன்கள் வாழ்வார்கள்!

    நண்பர்களே! வாழ்வின் அந்தியில் யாராவது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவார்களா? நம் அய்யா பாடுகிறார். எண்ணம் முழுவதும் தமிழ்தான். கலை, இலக்கியம் அறத்தை அளித்து, வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் கூறினார்.

    (100% உண்மை என்று என் காதில் ஒரு குரல். அட அப்பாவுடையது).

    பின், தன் இருகரங்களையும் கூப்பி, கண்ணீர் மல்க, “நினைவுகள் அழிவதில்லை, நினைவுகள் அழிவதில்லை. சரி, விடைபெறுகின்றேன்” என்கின்றார்.

    “சரவணன்! என்ன அய்யா, இப்படிச் சொல்கிறார்!” என்கின்றேன்.

    அவனும் சொல்வது அறியாக் குழந்தையாய் நிற்கின்றான்.

    பின், “படுத்துக் கொள்கின்றேன்” என்கின்றார். “நாங்கள் கிளம்புகின்றோம்” என்றோம். “அவர்கள் வேலையாய் இருந்தாலும் சொல்லிக் கொண்டு போங்கள்” என்கிறார்.

    அந்தவேளையிலும், எப்படி வழிநடத்துகிறார் பாருங்கள் நண்பர்களே!

    என்னிலை, எங்கள் நிலை & இரண்டும் வார்த்தைகளில் வடித்திட இயலாது.

    நாங்கள் அருந்திய காப்பிக் கோப்பைகளை, அய்யாவின் மருமகள் வள்ளி அவர்களிடம் கொடுத்துவிட்டு, ‘போய் வருகின்றோம்’ என்று அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டோம். நாங்கள் வந்த ஆட்டோ வாசலில் காத்திருந்தது. ஏறி அமர்ந்து கொண்டோம். ஆட்டோ புறப்பட்டது. நாங்கள் பேசிக் கொள்ளவில்¬லை. மௌனம் வியாபித்தது. ஆனால், மௌனத்தின் அலைகளை விலக்கி மூன்றாவது ஒருவர் என்னுடன் பயணிப்பதை உணர்ந்தேன்.

    “கவலைப்படாதே! அவரும் உன்னுடன் இருப்பார்” என்று உட்குரலாய் ஒலித்தார்.

    மீண்டும் அய்யாவைப் பார்ப்பது சாத்தியமில்லை என உணர்த்தியது. அந்தக் கண்ணீரும் கைக்கூப்பின நெகிழ்ச்சியான விடைபெறுதலும் என்னுடன் பயணித்தது. நாங்கள் இப்போது நால்வரானோம். நண்பர்களே!

    ஆட்டோ போய்க் கொண்டிருக்கின்றது. அது சுடலைமாடன் கோவிலுக்குப் போகாவிட்டாலும், நாங்கள் எங்கிருக்கின்றோமோ அங்கே, அந்த இடத்தை “21, சுடலைமாடன் கோவில் தெரு” என்று, அய்யாவின் உகந்த இடமாக்கிடுவோம்! என்று நான் நினைத்ததற்கு, “அப்படியே செய்யுங்கள்” என்று இருகுரல்கள் ஒலித்தன.

    “ஹலோ! சுபாஷிணியா! அம்மா! நல்லா இருக்கீங்களா? இப்போது பேசலாமா? (இந்த வினயம் யாருக்கு வரும்?) இன்று தினமணியில் பேரா.ஞானசுந்தரம் நீதியரசர் மகராஜன் பற்றிக் கட்டுரை படித்தாயா? என் கடிதமும் வந்திருக்கின்றது. எனக்குத் தெரியும். நீ அதைப் படிக்கமாட்டாய் என்று! ‘ஹாஹா’ என வாய் கொள்ளாச் சிரிப்பு! பேரன், மகள்கள் எல்லோரையும் கேட்டதாகச் சொல்லு!” – தொலைபேசியின் தொடர்பு அறுகிறது. நான் திகைத்துப்போய் நிற்கின்றேன்.  0462 2333456 & என்று கைகள் என்னையறியாது எண்களை வருடுகின்றன. என்னையறியாது விரல்களின் அழுத்தத்தில் அழைப்பு போய்விடுகிறது. அந்தப் பக்கம் “ஹலோ! தி.க.சி. வீடுங்க? தி.க.சி. வீடுங்க” என்னும் குரல். வண்ணதாசன் குரலாக இருக்கலாம். இல்லை, அவர் தம்பி சேதுவின் குரலாகக்கூட இருக்கலாம்.

    என்னால் பதில் பேசமுடியவில்லை. வாய் உலர்ந்து மேல் அன்னமும், கீழ் அன்னமும் ஒட்டிக் கொண்டன. இதயம், இதுகண்டு நெகிழ்ந்து கண்ணீரை அனுப்புகின்றது.

    Share
  • வாசிப்புகளின் வாசலிலே… (3)

    தி.சுபாஷிணி

    நம்மோடுதான் பேசுகிறார்கள்

    சீனிவாசன் & பாலசுப்ரமணியன்

    su

                    சென்ற ஆண்டு (2013) இறுதியில் டிசம்பர் 28 ஆம் நாள் தமிழூரில், பேராசிரியர் ச.வே.சுப்ரமண்யம் அவர்கள் நடத்திய கம்பன் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு மறுநாள் டிசம்பர் 29 ஆம் நாள் திருநெல்வேலி வந்தேன். அங்கு இடையறா இலக்கிய வேளாண்மை செய்து கொண்டிருக்கும், பொருணை இலக்கிய வட்டத்தின் ஆண்டுவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். ஆயிரத்து 550 வாரங்களுக்கும் மேலாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முற்பகல் புலவர்கள், பேராசிரியர்கள் கூடி, சங்க மரபு இலக்கியங்கள் பற்றி கலந்துரையாடலும், சிறப்புப் பொழிவுகளும் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். பண்பாட்டின் உறைவிடமான திரு.தளவாய் டி.ராமசாமி அவர்கள் இக்கட்டத்தின் புரவலராய் அவரது வீட்டில் சுப, அசுப நிகழ்வுகள் நடந்தாலும் தளராது நடத்தி வருகின்றார். அவரது அழைப்பின் பெருமிதத்தில் அவ்விழாவில் கலந்துகொண்டு, திரு.தி.க.சி. அவர்களைக் காணச் சென்றேன்.

                    வழக்கம் போல், தன் வாய்கொள்ளாச் சிரிப்புடன் வரவேற்றார் தி.க.சி.

                    “அடடா! இப்பொழுதுதான் ஓவியர் சீனிவாசனும் வேங்கட சுவாமிநாதனும் என்னை வந்து பார்த்து விட்டுப் போகிறார்கள். ஒரு அரைமணி நேரம் முன்பு வந்திருக்கக் கூடாதா?” என்றார் தி.க.சி.

                    எனக்கு வருத்தமாய் போயிற்று. ஏனெனில் வேங்கட சுவாமிநாதன் அவர்களை நான் இரு வருட காலமாக பார்க்க முயன்று கொண்டிருந்தேன். அதை நான் தி.க.சி. அய்யா அவர்களிடம் கூறினேன். உடனே சீனிவாசனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஆனால் இருவரும் நெல்லையை விட்டு மதுரையை நோக்கிச் சென்று விட்டனர். 31 ஆம் தேதியன்று சென்னையில் சீனிவாசன் வீட்டில் அவரைப் பார்க்கலாம் என்கின்ற தகவலைச் சொன்னார். அதன்படி 31-ந் தேதியன்று சென்னையை வந்தடைந்ததும், சீனிவாசன் வீட்டிற்கு கிளம்பி விட்டேன்.

                    அடையாறிலுள்ள வீட்டைக் கண்டுபிடித்து, மூச்சிறைக்கப்போய் அவர் முன் நின்றேன். வேங்கட சுவாமிநாதன் “ஏனம்மா? இப்படி சிரமப்பட்டு என்னைப் பார்க்கலாமா?” என்று வினவினார். அப்போது அங்கு கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் இருந்தார். அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். சகோதரி ஏற்கனவே அறிமுகமானவர்.

    “சிரமம் இல்லை சார்! உங்களுடைய அறிவும், திறனாய்வு பற்றியும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

    திரு.நாஞ்சில் நாடன் உங்களைப் பற்றி உயர்வாகக் கூறியுள்ளார். அன்றிலிருந்து உங்களைப் பார்க்க எண்ணம் கொண்டேன். உங்கள் எழுத்தைப் புரிந்துகொள்ளும் அளவு அறிவில்லாதவள் சார் நான். ஆனால் உங்களைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. நான் அனுபவத்தை இப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்” என என் நூல்களை அவரிடம் கொடுத்தேன். அவர் மிகவும் பிரியமாக என்னிடம் பேசினார். ‘அத்தகைய அறிவாளி’ என்கின்ற ஆணவம் இல்லாது, என்னைப்பற்றி கேட்டுக்கொண்டார். பின் சீனிவாசன் தன் நூலைக் கொடுத்தார். அதுதான் “நம்மோடுதான் பேசுகிறார்கள்”. ஓவியர் எழுத்தாளராய் காட்சியளித்தார். அந்த கணத்திலிருந்து நாங்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டோம்.

                    இப்படித்தான் என்னை நூல்கள் வந்தடைகின்றன. சீனிவாசன், பாலசுப்ரமணியன் என்னும் இரு ஓவியர்கள் நம்மோடுதான் எளிய பேச்சுநடையில் நம்முன் உட்கார்ந்து சம்மணம் போட்டுக்கொண்டு பேசுகிறார்கள். திடீரென்று எழுந்து ஜன்னல் அருகே நின்று சீனிவாசன் சீரியஸாகப் பேசுகிறார். அதைத் தூண்டிவிடுவது பாலசுப்ரமணியன். ‘என்னால் முடியலைப்பா? மூச்சு முட்டுது! கொஞ்சம் வெளியில் வாங்கப்பா! காலாற மெரினா வழியாக திருவல்லிக்கேணி செல்லலாம்” என்று அழைத்து செல்கிறார்கள்.

                    ‘சுபாஷிணி’ என்று கூப்பிட்டு சொல்கிற மாதிரி இருக்கிறது. அதாவது “கலைங்கிறது கூடை முடையறது இல்லை. வாழ்க்கை. அனுபவம் வெளிப்பாடு. வாழ்க்கையைக் கத்துக்கவும் முடியாது. காமிக்கவும் முடியாது. கலையும் அப்படித்தான்”.

                    மேலும் சீனிவாசன் தொடர்கிறார்.

                    “சமுதாயத்துல மூணு விஷயங்களை வலுப்படுத்த வேண்டி இருக்கு. ஒண்ணு செவ்வியல் கலைகளை மீட்டெடுக்கிறது. பாதுகாக்கிறது. சமகாலக் கலையை வளர்க்கிறது. பிரச்சாரம் பண்றது, கலைபத்தின புரிதலை, நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கிறது. நாகரீகத்தைச் செழுமைப்படுத்துகிறது. இதை ஒரு கலை வெளிப்பாடாக இருக்கிற கட்டிடம் செய்ய முடியும்னா கலைஞனா இருக்கிற நம்மால் செய்ய முடியாதா? வாழ்வியல்தான் கலை, கலைதான் வாழ்வியல்.

                    பொருளாதாரம் எப்பொழுதுமே கலை வெளிப்பாடுகளுக்கே தடையாக இருந்ததில்லை. மனநிலைதான் தடையாக இருக்கிறது. சிந்தனையும் சிந்தனை சார்ந்த கலை வெளிப்பாடும் பொருளாதாரத் தடையினால் தடைப்பட்டதில்லை. மக்களையும் சமுதாயத்தையும் செழுமைப்படுத்துவது சிந்தனை சார்ந்த கலை வெளிப்பாடுகளே!

                    நூலின் நடை எளிய பேச்சு மொழியிலேயேதான் செல்கின்றது. ஆனால் அது கூறும் விஷயங்களோ பெரியது. மிகவும் பெரியது. ‘மஹா வாக்கியம்’ என்று கூறுவார்களே அதுபோல் இருக்கின்றது.

                    சீனிவாசன் கேள்விகளைக் கேட்டு, குழப்புவதுபோல் ஒரு தோற்ற மயக்கத்தை உருவாக்குகிறார். பின் ஏதோ நம்முடன் பேசித்தான் தெளிவடைவதைப்போல், அவரது சிந்தனையின் தெளிவை, எண்ண ஓட்டங்களின் முறையை நம்மிடம் பகிர்ந்துக் கொள்கின்றார். படிக்கும் நமக்கும் அவருடன் சேர்ந்து பயணிப்பது இன்பமளிக்கின்றது.

                    சீனிவாசன் முன் வைக்கும் கேள்வி & ஓவியம் என்றால் என்ன? அதையும் தாண்டி படைப்புகள் என்றால் என்ன? அப்படியென்றால் ஓவியன் யார்? படைப்பாளி யார்?

                    “திருத்தமாகச் செய்யப்பட்ட எந்தவொரு வேலையின் வெளிப்பாடும் அழகுணர்வோடு இருக்குமானால் ஓவியம். அதே திருத்தமாக செய்யப்பட்ட எந்தவொரு வேலையின் வெளிப்பாடும் சிந்தனை சார்ந்து இருக்குமானால் அது படைப்பு. சுருங்கச் சொன்னால், அலங்காரமாகவும் இருந்துகொண்டு, சிந்தனைகளையும் தூண்டுமானால் அது படைப்பு.

                    ஒரு படைப்பாளனுக்கும் ஒரு ஓவியனுக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய வித்தியாசம் பார்வையாளன் மனதில் சந்தோசத்தை மட்டும் தூண்டுபவன் ஓவியன். சந்தோசம் என்பது பார்த்த மாத்திரத்தில் தொற்றிக் கொள்கிற விஷயம். தொற்றிக்கொண்ட பிறகு ஒரு விளக்கத்தைக் கொடுத்து உற்சாகத்தைக் கொடுத்து சிந்தனையைத் தூண்டி, நம்முடைய கலாச்சாரத்தையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் மீறிய அவரவர் சார்ந்த துறைகளில் அவரவர்களுக்கான ஊக்கத்தைக் கொடுப்பது படைப்பு. ஆக பயிற்சி, பயிற்சியின் முதிர்ச்சியில் விளைபவன் ஓவியன். பயிற்சியின் முதிர்ச்சியில் இருந்து விடுபட்டு சிந்தனாவாதியாக மாறி சிந்தித்தவற்றைப் படைப்பின் மூலமாக வெளிப்படுத்திச் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் படைப்புகள் இருக்குமானால் அவன் படைப்பாளி.”

                    இப்படி அருமையான சிந்தனை ஓட்டம், விளக்கம் தருகிறார் சீனிவாசன் இந்நூலில். அதுவும் நெல்லுக்குள் அரிசி இருக்கு என்று போகிற போக்கில் சொல்வதுபோல் சொல்கிறார்.

                    ‘கிளிப்பச்சையில் ஒரு காக்கா வந்துச்சுன்னு’ தொடங்கி, ஓவியத்தின், அருபத்தினைப் பற்றி விளக்குகிறார். சீனிவாசனின் அருப ஓவியங்களின் தேர்வைப்பற்றி பாலசுப்ரமணியம் அழகாகப் பகிர்ந்து கொள்கிறார். எல்லாம் ஓவியங்களில் தொழில்நுட்ப பெயர்கள். ஆனால் அதை மிகவும் எளிமையான மொழியில் கூறுகிறார். ஒரு அருப ஓவியத்திலேயும் வடிவம், டெக்சர், கலர், லைன்ஸ், உருவம் எல்லாமே இருக்குன்னு சீனிவாசன் சொல்கிறார். ஆனால் சீனிவாசன் ஓவியத்திலே அது இல்லாமலும் இருக்குன்னு சொல்கிறார் பாலசுப்ரமணியம். இதப்பத்தி சீனிவாசனிடம் மேலும் பேசியதை இங்கு பாலசுப்ரமணியம் குறிப்பிடுகிறார்

    என்று நூல் முடிவடைகிறது.

                    இந்நூலை படித்து முடித்தவுடன், “தி இந்து” தமிழ் நாளிதழில் (22.2.2014) கலை இலக்கியம் பகுதியில் ஓவியர் சந்தானராஜ் பற்றிய கட்டுரையில் எழுதியதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது.

                    “புள்ளிகளை இணைப்பதல்ல கோடு. புள்ளிகளுக்கு இடையே ஒரு வெளி இருக்கிறது. அந்த வெளியையும் உள்ளடக்கியதுதான் கோடு”.

                    இந்தப் புள்ளிகளுக்கு இடையிலுள்ள வெளியில் உருவாகும் படைப்புத் தெறிப்புகளால்தான், நான் சீனிவாசனின் தேடலை பார்க்கின்றேன்.

    நூலின் தலைப்பு    –       நம்மோடுதான் பேசுகிறார்கள்

    ஆசிரியர்                        &             சீனிவாசன் & பாலசுப்ரமணியன்

    பக்கம்                               &             128

    விலை                             &             200 ரூ

    வெளியீடு                     &             வம்சி புக்ஸ்

                                                                    19, டி.எம்.சாரோன்,

                       திருவண்ணாமலை & 606 601.

    Share
  • தி.க.சி. 90

    தி. சுபாஷிணி

    அந்த இளம் காலை நேரத்தில், நெல்லை எக்பிரஸ் தட,தட என திருநெல்வேலி ஜங்ஷன் இரயில் நிலையத்தில் நுழைந்து கடக் என்று நிற்கின்றது. என் நெஞ்சில் ஒரே பட படக்கின்றது. என்னவென்று தெரியவில்லை மெதுவாக ரயிலிலிருந்து இறங்குகின்றேன். ரயில் நிலையத்திலிருந்து வெளிவந்து, ஆட்டோவில் அமர்கின்றேன்.  ஆட்டோ ‘திருநெல்வேலி டவுன் நோக்கிளல செல்கின்றது.  வழியில் சந்திக்கும் ஆட்டோகள ஏதோ ‘போஸ்டர்’ ஒட்டியிருக்கின்றது.  ஒரு ஆட்டோ எங்கள் ஆட்டோவைக் கடக்கும் போது, அது என்னவெனப் பார்த்தேன். ஆச்சர்யப்பட்டுப் போனேன். “ஆம் நம்ம தி.க.சி. அய்யாவின் படம்.  அதன் கீழ் ஒரு கவிதை. ஆனால், படிக்க முடியாது போய்விட்டதே.  இது எப்படி? விடை தெரிய விழையும் போதே. எங்கள் ஆட்டோ சந்திப் பிள்ளையார் கோவில் தாண்டியது.  அதனுள் இருக்கும் பிள்ளையார் வந்துவிட்டாயா எனக் என்னைக் கேட்டது போல் தோன்றியது ஆட்டோவின் சத்தம் கேட்டு, தன் கடையிலிருந்து தலைநிமிர்ந்து பார்த்து ஒரு புன்னகையை உதிர்த்தார் பொன்னையா அண்ணாச்சி.  தெருவில் இருந்த காந்தி சிலை சற்றே அசைந்து என் வருகையைப் பதிவு செய்தது.  நந்தா டீ ஸ்டாலிலிருந்து, டீக்கடைக்காரர் “அம்மா! நீங்க போங்க? அய்யா சொன்னங்க?  காபியைக் கொடுத்தனுப்புகின்றேன்” என்றார். எனக்கு வியப்போ வியப்பு! இதெல்லாம் எப்படி நடக்குது! இப்போ சுடலைமாடன் கோவில் தெருவில் ஆட்டோ நுழைந்தது. வழியில் வீட்டு வாசலில் நின்றிருந்த ஓவியர் வள்ளி நாயகம் உடனே இறங்கி வாங்க என வரவேர்றார் பின்.  ஆட்டோ ‘21 இ’ எண் வீட்டில் என்னை இறக்கி விட்டு, சென்றுவிட்டது.  படியேறி நுழைகின்றேன்.  திண்னையைத் தாண்டிச் செல்கின்றேன். முற்றத்தில் இறங்கி அய்யா வீட்டினுள் நுழைகின்றேன்.

    “அடா! வந்தாச்சா! ம் பிரயாணம் வசதியா இருந்ததா?  களைப்புத் தீர குளித்து விட்டு வா? என்று குரல் கேட்டது.  நானும் வாசிக்காத செய்தித் தாள்களிடையே சென்று குளித்து, ஆடை மாற்றி வந்தேன்.

    DSC099561-300x225

    “அக்கா? அய்யா சொன்னாங்க! இட்லியும் சட்னியும் வைத்திருக்கேன் சாப்பிட்டுங்க!  மதியம் வள்ளியண்ணன் வீட்டிலிருந்து சாப்பாடு வந்து விடும். நான் வேலைக்கு போறேன்” என்று சுந்தரி சொல்லிக் கொண்டே, போய்விட்டாள்.  “சாயுங்கால விழாவிற்கு வந்து விடுவாயல்லவா? என்று கேட்டது அவள் காதில் விழுந்த மாதிரியும் இருந்தது.  விழாத மாதிரியும் தோன்றியது.

    தட்டைக் கழுவி சாப்பிட அமர்ந்தோன். இட்லியும் சட்னியும் பரிமாறிக் கொண்டேன்.. “அத்தனையும் உனக்குத் தான். நிதானமாகச் சாப்பிடு தயார் அந்தக் கவரில் இருக்கு எடுத்துக்கோ” என்று ஒரு குரல் மெல்லியதாக ஒலித்தது காதில் கேட்டது. அக்குரல் சொல்லிக் கொண்டே வெளியேறியது போல் தோன்றியது.

    திடீரென்று, வெளியில் அய்யாவின் வெண்காவது குரல் “வாங்க! வாங்க? கமியுனிஸ்ட் கட்சி தனித்து 2016ல் போட்டியிடப் போவது குறித்து மிகவும் சந்தேஷம். சென்னையிலிருந்து சுபாஷிணி அம்மா வந்திருக்காங்க புது எழுத்தாளர்.  நாமதானே அவங்களையெல்லாம் உற்சாகப்படுத்தணும்.

    சுமார் பத்து புத்தகங்கள் வெளியிட்டு இருக்காங்க.  அதிலும் எல்லாம் அவங்க சொந்தச் செலவில் தான்.  ரசிகமணி டி.கே.சியைப் பற்றி எழுதியிருக்காங்க.  என்னுடைய சென்னையின் பிரதிநிதி என்று சொல்லி அறிமுகப்படுத்தும் ஆனந்தக் குரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

    ஆமாம்!  அய்யா நாற்காலியில் வழக்கமாய் இருக்கும் ‘பிங்க்‘ கலர் நிரத் துண்டு இல்லையே!  நிறைய தபால்கள் வந்திருக்கு.  இதோ! ஆர். வி. சுப்பிரமணியம் கடிதம்  “இன்லண்ட் கவரில்” எழுதியிருக்கிறார்.  பிரிக்கப்படவில்லை.  இன்னும் சரவணன் வரவில்லை போலிருக்கு.  பாரதியின் கண்ணன் போல், அய்யாவில் கண்ணன் சரவணன்.

    மனமும் உடலும் ஏதோ சோர்வில் மாட்டிக் கொண்டு தவித்தன.  அவற்றை மதித்துக் கொஞ்சம் கண் அயர ஆயத்தமானேன்.

    1475795_446580005472118_1833270357_nமணி ஆகிவிட்டது.  ஒரே பரபரப்பு!  சரவணன் வந்தாச்சு. ஓவியர் வள்ளிநாயகம், வே. முத்துக்குமார் இருவரும் வந்துவிட்டனர்.  இவர்கள் மூவருமே அய்யாவின் அத்யந்த அன்பர்கள்.  தோழர்கள்.  எல்லோரும் கிளம்பி விட்டோம்.  அய்யா விருப்பப்படி மேடையில் எளிய அலங்காரம்.  ‘தி.கா.சி. 90& 30.3.2014’ என்னும் எழுத்துக்கள் தாங்கிய திரை கட்டியிருக்கிறது.  மணி ஆக ஆக ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்.  மேடையில் திரு. நல்ல கண்ணு, திரு. பழநெடுமாறன், அறிவரசன் வை.கோ. காவல்துறை ஆணையாளர், ஐ.ஏ.எஸ். அதிகாரி, சிறிமி, சிறிவி தலைவர்கள் என் முன்னணியில் அமர்ந்திருந்தனர்.  பின்னணியில் எழுத்தாளர் கி. ராஜநாராயணன், ரசிகமணி பேரன் தீப. நடராஜன், நெல்லையின் புரவலர் இந்து கல்லூரியின் அறக்கட்டளைத் தலைவர் தளவாய் ராமசாமி கி.த.பச்சையப்பன், கழனியூரான் என இன்னும் பலர் அமர்ந்து இருந்தனர்.  பார்வையாளர் பகுதி பக்கம் கண்களை செலுத்துகின்றேன்.  ஒரு பக்கம் அய்யாவின் குடும்ப உறுப்பினர்கள் வண்ணதாசன் இளைய மகன் சேது, அவரது மகள்கள், அவர்களது குடும்பத்தினர், உற்றார் உறவினர் அனைவரும் அமர்ந்து இருந்தனர்.  ஒரு பக்கம் எழுத்தாளர் வண்ண நிலவன், கவிஞர் கலாப்பிரியா, ரவி சுப்ரமணியம் எழுத்தாளர் நாஞ்சில் நாடன், பேரன் எனப் பெருமைப்படக் கூறிக் கொள்ளும் சுகா, கவிஞர் சக்தி ஜோதி என்று இளைய கவிஞர்கள் வட்டம், என்று நிரம்பிக் கொண்டிருந்தது.  பல அமைப்புகளின் தலைவர்களும், உறுப்பினர்களும் கூடியிருந்தனர்.  கிட்டத்தட்ட 500, 600 பேருக்கும் மேல் இருக்கலாம்.  தோழர் பால் முகம்மது அனைவருக்கும் தாகத்திற்கு தண்ணீரே பழச்சாரோ கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

    நான், முத்துக்குமார், ஓவியர், பொன் வள்ளி நாயகம், சரவணன் ஆகிய நால்வரும் மேடையின் பக்கவாட்டில் நின்றிருந்தோம். கவிஞர், தோழர் கிருஷி விரைந்து வந்து, கிட்டத்தட்ட தமிழ் நாடே கூடிவிட்டது.  நாம் விழாவைத் தொடங்கிவிடலாம் என்றார்.

    “அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி

    அகமெலாம் அன்பென்னும் வெள்ளம்

    பொறிகள் மீது தனி அரசாணை”

    இது பாரதியின் வரிகள் என்று யாரிடமோ சத்தம் போட்டு சொல்லிக் கொண்டிருந்த அய்யாவின் குரல் கேட்டது.

    வழக்கம் போல் வே. முத்துக்குமார் மேடையேற மறுத்து விடடார்.  கவிஞர் கிருஷி விழாவைத் தொடங்க மேடையேறினார்.

    சந்தியா பதிப்பகம் “நடராஜன்”, மேடையிலுள்ள அனைவருக்கும் அய்யாவின் “நாட்குறிப்பு புத்தகத்தை” வழங்கிக் கொண்டிருந்தார்.

    கவிஞர் கிருஷி, விழாவிற்கு வந்த அனைவருக்கும் வணக்கம் கூறி தன் தொடக்கவுரையைத் தொடங்கினார்.

    திருநெல்வேலியின் அடையாளம் 21 இ சுடலைமான் கோவில் தெரு தோழர் தி.க.சி. எந்தவித தயக்கமின்றி எந்த நேரமும் அவரைக் காணச்செல்லலாம்.  வெளியில் வரும் போது அன்றைய நாளிதழ்களின் செய்திகள், சிற்றிதழ்களின் இலக்கிய வளர்ச்சி, கதைகளின் மாண்பு எனப் பல வகைப்பட்ட விஷயல்களைப் பெற்று கருத்துக்களின் கனத்துடனும், ஆனந்தத்தால் இலேசான இதயத்துடனும்தான் திரும்பி வருவோம்.  கம்யூனிஸ்ட்கட்சி பிரிந்தபோது மார்க்ஸிஸ்ட் ஆனார்.  சோவியத் யூனியன் தளர்ந்து வீழ்ந்த போது, இவர் தளர்ந்து போய்விடவில்லை.  கலை இலக்கியம் இவரைத் தாங்கி நின்றன. அதுதான் ‘மனிதம் போற்றும்’ என்னும் கொள்கை உடையவர், தி.க.சி. முதலில் கவிதை, கதை, மொழி பெயர்ப்புகள் எனத் தன் இலக்கியப் பாதையை வதித்தபோது, “விமர்சனத் தமிழில்’ நிலைத்து நின்று விட்டார்.  இதற்கு இவர் “தாமரை, சோவியத் லேண்டு” ஆகிய பத்திரிகையிலும் பணிபுரிந்தது உதவியது. இவரது நடுநிலையான விமர்சனத்திற்குத்தான் ‘சாகித்ய விருது’ கிடைத்தது.

    ரசிகமணி டி.கே.சி. பாரதி, பாரதிதாசன், வல்லிக்கண்ணன் ஆகியோரை தன் ஆசான்களாக ஏற்றதால், எப்போதும் அவர் ஆனந்தத்தை ஆராதித்தார்.  மலர்ந்த முகமும், அதில் பிறக்கும் சிரிப்பும், சிரிப்பு அளிக்கும் ஒலியின் கனமும் அவரைச் சுற்றி அலை அலையாக சூழ்ந்து கொண்டேயிருக்கும்.  அன்று இவரால் ஊக்குவிக்கப்பட்டு, உற்சாகப்படுத்தப்பட்ட படைப்பாளிகள்தான் இன்று பெரிய ஆளுமைகளாக இருக்கின்றனர்.  இன்னமும் இளைய தலைமுறைகளில் இவரைச் சார்ந்து, இவர் இட்ட உரத்தினாலும், உற்சாக நீர் பாய்ச்சியதாலும் பல படைப்பாளிகள் உயர்ந்து கொண்டு வருகின்றனர்.  விகடனில் படித்த கதைக்கும், கல்கியில் படித்த ‘ஓ‘ பக்கத்திற்கும், சிற்றிதழ்களில் படித்த படைப்புகளுக்கும், உடனே பாராட்டுக்கள் அந்தந்த எழுத்தாளருக்கு தொலைபேசி மூலமாகவோ, கார்டு மூலமாகவோ போய்ப்படும்.  இவர் கடிதம் தாங்கி வரதாத தினமணி நாளிதழ்கள் குறைவே.

    இவருக்கு இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகள் இலக்கிய அமைப்புகள், மாணவர்கள் என அனைத்து தளங்களிலும் இவரது மனித நேயத்தால் நண்பர்கள், உண்டு.  பேப்பர் போடும் தோழர் பால் முகம்மது வந்தாலும், ஐ.ஏ.எஸ் அதிகாரி இவரைத் தேடி வந்தாலும் ஒரே மாதிரியான ஆனந்தமான சிரிப்போடுதான் வரவேற்பு.  இவ்வாறு எளியவர்களையும், சிறந்த ஆளுமைகளையும் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டு விளங்கும், விழா நாயகரான, 90ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் தோழர் தி.க.சி. அவர்களுக்கு சிறப்பு செய்ய மூத்த எழுத்தாளர், அய்யாவின் அன்பு நண்பர் திரு. கி. ராஜநாராயணன் அவர்களை அழைக்கின்றேன்.  அவரை நூறாண்டு காலம் வாழ வாழ்த்துமாறு எங்கள் அனைவரின் சார்பாக அழைக்கின்றேன்” என கவிஞர் தன் தொடக்க உரையை முடித்தார்.

    திரு. கி. ராஜநாராயணனன்  அவர்கள் எழுந்து வரும் சப்தம் கேட்கிறது.

    ஆனால் ‘தி.க.சி.’ அய்யாவை எங்கே காணும்?

    Share
  • பிரியமான மணிமொழிக்கு

    தி. சுபாஷிணி 

    பிரியமான மகளுக்கு!

    மணியின் மொழி அதன் நாதம்!
    “ஓம் ” எனும் அந்நாதத்தின் பிறப்பு மணியின் நா அசைவினிலே!
    மொழி பிறத்தலும் மனிதரின் நா அசைவில்தான்!
    அண்டத்தின் ஆதாரம் ஓங்கார நாதமென்பார்.
    ஒளியும், ஒலியும் வாழ்வின் ஆதாரங்கள்!
    இரண்டுள்ளும் ஒலியின் சிறப்பு ஒளியைவிட மேலானது!
    ஒலியுடன் இணைந்திடாது ஒளிமட்டுமே ஏற்படுத்தும் உணர்வு
    பாதிப்புகள் ஒரு பிரம்மாண்டத்தை உண்டாக்குவதில்லை!
    “இடி ” தொடரா மின்னல்வெட்டுகள் தங்களின் மிரட்டும் தன்மையை
    வெகுவாகவே இழக்கின்றன!

    உணர்ச்சிகளின் முழுமையான வெளிப்பாடு ஒலியின்றி சாத்தியமாவதில்லை!
    ஆதலால்தான் ஒலியின் பெருமை, ஆதாரத்தன்மை ஒளியினும் விஞ்சுகிறது!!
    ஒலிகளே இல்லாத சூழல் வாழ்வினையே சூன்யமாக்கிவிடும்!
    தன்னைத்தான் அறிதலே ஒலிவழிதான் நிகழ்கிறது.
    தனது பெயர் பிறர் கூறக்கேட்டு, அழைக்கப்படுவது தானேயென அறிந்து,
    ஒரு குழந்தை திரும்பிப்பார்ப்பதே ஒலி புரிதலால்தான்!
    ஏன்? அதற்கும் முன்பாகவே கர்ப்பத்திலேயே ஒலியறிதல் நிகழ்கிறது!
    அபிமன்யு தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே சில போர் உக்திகளைக்
    கற்றதாக மகாபாரதத்தில் வருகிறதே!

    ஒவ்வொரு நிலையிலும் நம்மிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்துவது ஒலியே!
    வாழ்வின் தரமும், நாம் உணரும் வாழ்வின் வண்ணங்களும் ஒலிகளால்
    உயர்த்தப்படுகின்றன!

    ஒளி, ஒலியைவிட அதிவேகத்தில் சலனிப்பதே;
    அதன் காரணமாக, அது அதிசக்தி, பரவல்தன்மை, ஆக்கிரமிப்பு உடையதாய்
    காட்சிதந்தாலும், நடைமுறையில் ஒளியின் நிலைவேறு!
    ஒளியை முடக்கும், ஒடுக்கும் தடைகள் கணக்கிலாதன; எதிர்ப்புகளால்
    எளிதாக முடங்குவது அது; ஆதலால், அதிவேகமிருந்தும் அதன் பரவல்,
    வியாபிப்பு கேள்விக்குறியாகிவிடுகிறது! ஆதவனின் கூர்க் கிரணங்களை
    பஞ்சு மேகங்கள் முயற்சியின்றி முடக்கிவிடுகின்றனவே!!
    ஆனால், ஒலியோ குறைவேகத்தில் ஆமைபோல் ஊர்ந்தாலும், நிதானமாய்,
    ஓர்முனைப்பாய் பயணித்துத் தடைகள் தாண்டி, ஊடுருவி, வளைந்து தாவி,
    பரவல் செய்கிறது. அதை முற்றிலுமாக முடக்கவல்லது காற்றுமில்லா
    வெற்றிடம் ஒன்றே என்று அறிவியல் கூறும்! காற்றே இல்லா இடத்தில்
    உயிரினங்கள் வாழ்தல் சாத்தியமில்லையே; எனவே உயிரினங்கள் உள்ள
    இடங்களிலெல்லாம் ஒலி இருப்பது சாத்தியமே.

    மொழி அதிர்வுகளால் ஜனிப்பது; அதிர்வுகளை ஜனிக்கவும் வைப்பது.
    மொழியெனும் கருவியின் வன்மை எத்தகையது என்பதை ” நலனும்
    கேடும் நவில்வோர் கையில்” எனும் ஆன்றோர் கூற்று விளக்கும்.
    ” உதவாதன பேசுபவனை விட ஊமையே தேவலை ” என்பர்.
    நலம்பட உரைக்காதோர் தானும் கேடுற்று, பிறர்க்கும் கேடு தருவர்.
    நாவினால் ஏற்பட்ட வடுக்கள் என்றும் உள்ளாறுவதில்லை.

    இரு எதிர்மறைப் பயன்களைத் தரவல்லது மொழி..கையாளுதளைப்
    பொறுத்து ! இதையே வள்ளுவர்
    “ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
    காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு ” என்பார்.
    மலர்களினும் மென்மையானது ..கூர்முனை வாளினும் கூர்மையானது!
    நஞ்சினும் கசப்பானது ..தேனினும் இனிக்கவும் செய்வது!
    வாடைக்காற்றினும் குளிர்ந்தது…தீயினும் சுட்டெரிப்பது!
    உறவுகளை வளர்ப்பது …பகைமையையும் வளர்ப்பது!
    உசுப்பிவிடுவது …தாலாட்டாகி உறங்கவும் வைப்பது!
    தீராத் துயர்களைத் தீர்க்கவல்லது ..மனவடுக்களை அளிக்கவும் வல்லது!
    மொழியறிந்து மட்டும் பயனில்லை; தேர்ந்து சொலல் வன்மை தேவை.
    “சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது ” எனும் குறள் சொல்வன்மையின்
    தேவை, பெருமைகளைக் கூறும்.

    இருவகை மாற்றுவிளைவுகளைக் கொணரக்கூடியதெனினும், நல்
    விளைவுகளைத் தரும் ஒலிகளும் ,மொழிகளும் மட்டுமே காலம்
    கடந்து நிற்கும் திறனுடையன. நல்விளைநிலத்திலிட்ட நல்வித்தாய்
    முளைவிட்டு வேரூன்றிப் படர்ந்து வியாபித்து நிற்பன! ஆன்றோர்
    வாக்குகள் போல்!

    மகளே! எத்தனையோ பெயர்களை அலசித்தேடி மணிமொழிஎனும்
    பெயர் சூட்ட முடிவுசெய்தேன்!

    மேற்கூறிய ஒலியின் தன்மைகளுடன், எச்சூழலிலும் முடங்கிவிடாது,
    நீயும் ஆக்கம் பெற்று, சமூகத்திற்கும் ஆக்கமளித்து, மணி ஓசையாய்,
    மணி மொழியாய், விளங்கவேண்டும் நீ! அதற்கான சாத்தியங்கள்
    உன்னிடம் இருப்பதைக் காண்கிறேன்; மகிழ்ச்சியே!
    மணிகள் அணியாய் கோர்க்கப்பட்ட சரம்போல் உன்மொழி இருத்தல்
    வேண்டும்.

    தமிழில் உன்பெயர் நான்கு அட்சரங்களைக் கொண்டது . அந்நான்கு
    நாற்திசைகளைக் குறிக்கட்டும் . உன் புலமை நான்கு திசைகளிலும்
    பரவட்டும்!
    பெயர்சொல்லப் பிள்ளைவேண்டும் என்பார்கள்!
    நீ உன்பெயர் விளங்கும் பிள்ளையாய் இரு!
    சகமனிதர்களின் வாழ்வின் அடிநாதமாய் இரு!!

    வாழ்த்துக்களுடன்…
    உன் தந்தை.

     

    Share
  • தி.க.சியின் நாட்குறிப்புகள்

    வாசிப்புகளின் வாசலிலே – தி.சுபாஷிணி

    தொகுப்பு: வே.முத்துக்குமார்

    tkc

    இந்நூலின் தொகுப்பாசிரியரான வே.முத்துக்குமார் சிறந்த இலக்கியவாதியும் படைப்பாளியும் ஆவார். பிரபல நாளிதழ்களில் கவிதைகளும் கதைகளும் எழுதிவருபவர். இவர் தி.க.சி.யின் ஆத்மார்த்த சீடர். வெளிஉலகத்திற்குத் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளாது, தி.க.சி. அவர்கள்பால் அன்பு கொண்டு, அவருக்குத் தொண்டு புரியும் நெல்லைப் பண்பாளர். தி.க.சியின் இலக்கியப் பொக்கிஷங்களைத் தூசிதட்டி அடுக்கு ம்போது கிடைத்த நல்முத்து இந்நாட்குறிப்புகள்.  1948 ஆம் ஆண்டு டைரியில் முதல் நாள் தொடங்கி, நவம்பர் மாதம் பாதி நாட்கள் அய்யா குறிப்பு எழுதியிருக்கிறார்கள்.  முத்துக்குமார் இதைப்படித்த உடன் ‘இது ஒரு கால ஆவணம்’, எனக்கருதி நூலாக வடித்தார். அய்யாவின் இளம் வயது புகைப்படம் அட்டைப்படமாக அமைந்தது. பின்னட்டையில் இன்றைய தி.க.சி. அத்தோடு கி.ரா.வின் அழகான குறிப்பு!

    எனக்குக் கிடைத்த நண்பர்களில் தி.க.சி. வித்தியாசமானவர். என்னிடமுள்ள நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டவர். சுமார் அறுபது ஆண்டுகளாக எங்கள் நட்பு நீடித்து வருகிறது. நான் மாறிக்கொண்டே வந்திருக்கிறேன் பலபல விசயங்களில். அவர் மட்டும் அச்சு அசல் தி.க.சி.யாகவே இருந்து வருகிறார். ‘மூத்த பிள்ளை’ என்று எங்களுக்குள் நாங்கள் தி.க.சியை குறிப்பிட்டுக்கொள்வோம். தி.க.சியை எதோடு ஒப்பிட்டுச் சொல்லுவது என்று நினைக்கிறபோது எனக்கு அவரை சுக்குக்கு ஒப்பிட்டுச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. ரசிகமணி சொல்லுவார்: “நாக்குக்குத்தான் -சுக்கு காரம்; குடலுக்கு ரொம்ப இதம்”. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் உண்டா?

    இந்நூலைப் பதிப்பிக்க சந்தியா பதிப்பகம் முன் வந்து, இம்மாதம் 15 ஆம் நாள் அய்யாவின் கைகளில் அமரும் படி செய்துவிட்டனர். இதைவிட தி.க.சி. அவர்களுக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும். நிச்சயமாக இந்நூல் கிடைத்ததும், ஒரு குழந்தையைப்போல் மகிழ்ந்திருப்பார். அந்த மகிழ்ச்சியின் நீட்சியிலேயே எனக்கொரு பிரதியும் அவர் கையால் கிடைக்கப்பெற்ற பாக்கியசாலியானேன். அப்பாக்கியத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் பேறும் உடனே கிடைக்கப்பெற்றுவிட்டேன்.

    ஆம். இது ஒரு கால ஆவணம்தான். 1925 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் நாள் தொடங்கிய வாழ்க்கையின் நீட்சியில் ஒரு கூறின் செயல்பாடு. அச்செயல்பாட்டு நாட்களின் சில குறிப்புகளை உங்களுக்கு அந்நூலிலிருந்து அளிக்க விழைகின்றேன்.  இதோ:&

    Friday, 30th January 1948

    சர்வஜித்து தைமீ 17 வெள்ளி

    இன்று மாலை 5.30 மணிக்கு உலகம் போற்றும் உத்தமர், அகிலமெங்கும் அஹிம்சை ஒளிபரப்பி அண்ணல், மகாத்மா காந்தி பிர்லா மாளிகையின் முன்பு, பிரார்த்தனைக் கூட்டத்தில், காக்கிச் சட்டையணிந்த ஒரு இந்துவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  மார்பிலே ஒரு குண்டும், வயிற்றிலே 2 குண்டுகளும் பாய்ந்தன.  காந்திஜியின் மரணச் செய்தி உலகையே கண்ணீர் விடச் செய்து விட்டது.  இந்தியா முழுவதும் சொல்ல முடியாத சோகத்தில் ஆழ்ந்தது.  ‘நல்லவனுக்கு இது காலமில்லை’ என்றார் ஷா. 8.30 மணிக்கு நேருவும், பட்டேலும் ஒலிபரப்பினர்.  நாளை காலை 11 மணிக்கு பிர்லா மாளிகையிலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு யமுனை நதிக்கரையில் அடக்கம் நடைபெறுமாம்.

    Friday, 30th January 1948

    சர்வஜித்து தைமி 18 உ சனி

    இன்று நகரெங்கும் பரிபூரண ஹர்த்தால் கார், வண்டிகள், ரயில்கள் ஒன்றும் ஓடவில்லை.  கடைகள் மூடப்பட்டன.  விட்டு விட்டு லேசாக மழை பெய்து கொண்டிருந்தது.

    காலையிலே 10 முதல் 2 வரை ஆபீசிலே வேலை நடந்தது!  ‘Petty cash, Postage வவுச்சர்கள் போட்டு supplementary day book  எழுதினார்கள். Cash bookகிலும் நான் கை வைத்தேன்.

    நேற்றைய General Ledger விஷயமாக, posting விஷயமாக Accountantக்கும் எனக்கும் சிறு சண்டை வந்தது.  அவர் அதைச் செய்கிறேன் என்று சொல்லி என்னை ஏமாற்றிவிட்டார்!

    மாலையிலே ரேடியோக் கேட்டு விட்டு நகர்சுற்றி, நயினார்குளம் வரை போய்த் திரும்பினோம். இரவு சபாபதி வீட்டில்  ரேடியோ கேட்டோம்.  5 மணிக்கு காந்திஜியைத் தகனம் செய்தார்கள் யமுனை நதிக்கரையில்.

    Thursday, 12th February 1948

    சர்வஜித்து தைமீ 30உ வியாழன்

    காலையில் குமரகுருபரன் வீட்டிற்கு வந்தார்.  இன்று காந்திஜியின் சாம்பல் கரைக்கும் நாள்.  காலையிலே ஊர்வலம் சென்றது.  மாலையில் லாலா சத்திரமுக்கில் பந்தல் அமைத்து பாவையர் நூல் நூற்றனர்.  சாயங்காலம் சர்வகட்சிகளும் அடங்கிய மாபெரும் ஊர்வலம் ஒன்றும் ஆற்றங்கரையை நோக்கிக் கிளம்பியது.  ‘சுப்பரம், தீச்சட்டி, மொட்டைத் தலை’ ஆகியவைகளுடன் ஊழியர்கள் துக்கம் கொண்டாடினார்.

    நானும் சோமுவும் 10.30 மணிக்கு ரகுநாதன் வீடு சென்றோம்.  பேச்சு, திருக்குறள், காமத்துப்பால் ஆராய்ச்சி, ராஜரத்தினத்தின் கதையைத் திருத்துதல் ஆகியலை நடந்தது.  இரவு அண்ணாச்சி வீட்டில் ‘Oil’ முகவுரையை வாசித்து விட்டு பார்க்கிலே People’s Age  படித்தோம்.  இரவு 12 வரைக்கும் மீண்டும் People’s Age வாசித்தேன்.

    (Oil -அமெரிக்க எழுத்தாளர் அப்டன் சிங்லர் எழுதிய நாவல்)

    Monday, 23rd February 1948

    சர்வஜித்து மாசி மீ 1உ திங்கள்

    Letter to  கலியபெருமாள்

    படிப்பு : People’s Age – Illustrated weekly

    அரசியல் : காந்திஜியின் கொலையைப் பற்றி கிமிசிசி யில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் குற்றச் சாட்டும் படேலின் பதிலும்.

    பொருளாதாரம் : பாங்கில் நிறைய தங்க நகைகள் அடகுக்கு வருகின்றன, மக்கள் தனது கடைசி உடைமைகளையும் அடகு வைக்கின்றனர்.

    சமூகம் : சபாபதி வீட்டிலே இரவு ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.  கட்சி அபேட்சகர்கள் 8 இல் 4 பேர் திருச்சி கவுன்சிலர்கள் ஆயிருக்கின்றனர்.

    இலக்கியம் : ‘தேனீயின் விளம்பரம் பார்த்தேன்.  மற்ற மறுமலர்ச்சிப் பத்திரிகைகளின் கதி தான் இதற்கும் என்றார் சபாபதி.  ஆம், உண்மை.

    நண்பர்கள் : தி.ப.தி.க்கு ஜலதோஷம் எனக்கு அஜீரணம்.  மோரீஸ் பழத்தினால் புளிச்சேப்பம் உண்டாகிறது.

    தேனீ & எம்.வி. வெங்கட்ராமை ஆசிரியராக கொண்டு கும்பகோணத்திலிருந்து வெளிவந்த இலக்கிய மாத இதழ்

    Friday, 27th February 1948

    சர்வஜித்து மாசி மீ 15 உ வெள்ளி

    Letter to Chidambaram; Salary Day

    அரசியல் : Draft Const. ஐ புகழ்ந்து பத்திரிகைகள் பிதற்றுகின்றன.  1951 வரை எலெக்ஷன் கிடையாது என்றுவிட்டார் படேல்.

    பொருளாதாரம் : தையல்காரன் கூலியை 8 அணா லாபப்படுத்திக் கொடுத்ததற்காக சங்கரனுக்கு ரூ.0-1-3 லஞ்சம் காப்பிச் செலவு! இது தொழிலாளி வயிற்றில் அடிப்பது தான்.  8 உருப்படிக்கு ஒன்னரை ரூபாய்!

    இலக்கியம் : ஜகன்நாதன் எனக்கு தன்னம்பிக்கை இல்லை என்றார் ‘கலைஞர் கழக’ விஷயமாக.  நீங்கள் தான் அதற்கு வெட்கப்பட வேண்டும் என்றேன் நான்.  Typical  திருநெல்வேலிப் பண்பாடு ஜகன்நாதன் பேசியது என்றார் தி.ப.தி.

    நண்பர்கள் : நடராஜன் நேற்று முழுவதும் தூக்கமில்லை, அண்ணாச்சி வருந்தும் படி ரேடியோவை நிறுத்திவிட்டதால் & எனறு தனது முன்கோபத்தைப் பற்றிச் சொன்னார்.  இரவு 10 மணிக்கு கொஞ்ச நேரம் அவர் பாணியில் பேசிக் கொண்டிருந்தேன்.  சென்னைப் பயணத்தைப் பற்றிய கனவுகளால் இன்று தூக்கமில்லை.

    Wednesday,  21st April 1948

    சர்வஜித்து சித்திரை மீ 9 உ புதன்

    Letter to Sailappan; Letter from Va.Ka

    அரசியல் : காஷ்மீரைப் பற்றிய ஐ.நா தீர்மானத்தை ஜயங்கார் மறுத்து விட்டார்.  லாகூரில் பஞ்சாப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரொமேஷ் சந்திரா கைது செய்யப்பட்டார்.

    ஆபீஸ் : டவுன் ஆபீசை மூடும்படி உத்தரவு வந்துவிட்டது.  தந்தியில் விளம்பரம் வருகிறது.  அதற்கு 2 * 2 காலத்திற்கு ரூ. 16 கூலி!

    மாலையில் நேற்றைப் போல் இன்றும் ஆற்றிலே குளிக்கச் சென்றோம்.  பேச்சு sex விஷயத்தை சுற்றிச் சுற்றி வந்தது.  இன்று சற்று முன்னே எட்டிப் போய்க் குளித்தோம்.

    நேற்று குளித்ததினால் இன்று கால்வலி வந்துவிட்டது.  வலதுகால் மட்டும் அதிகமாய் வலித்தது.  இரவு பாலகணபதி விலாசில் சாப்பாடு, நடராஜன் பற்று ரூ. 2-8-0!

    Wednesday, 5th May 1948

    சர்வதாரி சித்திரை மீ 23உ புதன்

    Letter to Va.Ka & Chidambaram; Letter from Chidambaram

    அரசியல் : ராஜாஜி, கவர்னர் ஜெனரல் ஆகிவிட்டார்.  தென்னிந்தியாவில் குதூகலம்.  ஜவஹர் அடுத்த மாதம் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம்.

    இலக்கியம் : ‘தேனீ விமர்சனம் வ.க.வுக்கு.

    சமூகம் : ராஜாஜியின் நியமனத்தைக் கண்டு அய்யங்கார்கள் துள்ளுவார்களாம்!

    பொருளாதாரம் : பல்புரூசு ரூ. 1-1-0, பல்பசை ரூ.0-14-0, பல்பொடி ரூ.0-1-0, கேசவர்த்தினி ரூ.0-12-0, பூட்ஸ் ரூ.3-5-0, இப்படியாக பல சாமான்கள் வாங்கினேன். தையல் கூலி ரூ.0-1-2-0.

    குளிப்பு : இன்று சபாபதி வராவிட்டாலும், நேற்று குளிக்காததை ஈடு செய்ய இன்று 9 மணிக்குப் போய் குளித்தோம்.

    Friday, 28th May 1948

    சர்வதாரி சித்திரை மீ 15உ வெள்ளி

    ‘ஷாப் சட்டப்படி வேலை முடிந்தாலும் நீங்கள் 7 மணி வரை ஆபீசிலேயே இருக்க வேண்டும். S.I.Bankல் அப்படித் தான் சட்டம்!  என்றார் ஏஜண்டு. வேலையில்லாமல் சும்மா இங்கே உட்கார்ந்திருப்பானேன்? Indian Bank இல் எப்படி நடக்கிறது பார்த்தீர்களா? என்றேன் நான்.

    ‘சிவாஜி’யிலே என் பெயரையும் சேர்த்து எழுத்தாளர் மகாநாட்டுப் பிரதிநிதிகளில் ‘பிரபலஸ்தர்கள்’ என்று திலோகம் குறிப்பிட்டிருக்கிறார்!

    தலைமறைவாயுள்ள கம்யூனிஸ்டுகளுக்கு தங்க இடமோ, குடிக்கத் தண்ணீரோ, பணமோ கொடுத்தால் 3 மாதக் கடுங்காவலும், 1000ரூ அபராதமும் விதிக்கப்படும் என்ற பாசிஸ அவசரகச் சட்டம் நேற்றைய பத்திரிகைகளில் வந்துள்ளது.

    திருலோகம் & திருலோக தீதாராம்: சிவாஜி இதழாசிரியர்

    Fridaay, 23rd July1948

    சர்வதாரி ஆடி மீ 8உ வெள்ளி

    படிப்பு : ‘லெனின் பிறந்தார்’

    அண்ணாச்சியிடம் ரகுநாதன் கடிதத்தைக் காட்டினேன்.  அமப்பித்தனின் ‘செல்லம்மாளை’ ரொம்பவும் பாராட்டினார் நடராஜன்.  சபாபதி ஆபீசுக்கு வந்தார் சம்பத்துக்கு மணியார்டர் செய்ய.

    இன்று Junior சிவசங்கரனுக்கு 6 மாதப் பிறந்த தின விசேடம்.  எனக்கு பாயாசச் சாப்பாடு! இரவு சபாபதி வீட்டிலே சீட்டாட்டம்.  ராத்திரி சாப்பிடாததால் உறக்கமில்லை.  Weeklyல்  C.R.Mandyயின் கதைப் படித்தேன்.

    கே. வேலாயுதம் ரொம்ப பெரிய மனுஷன் ஆய்விட்டான், நண்பர்களை மறந்துவிட்டான்’ என்று கூறினார் தி.ப.தி.

    Friday, 24th September 1948

    சர்வதாரி புரட்டாசிமீ 9உ வெள்ளி

    Office safety ordinance issued!.

    1. பியூன்களை சொந்த வேலைக்கு ஏவக் கூடாது.

    2. ஆபீஸ் நேரத்தில் வெளிச் செல்லக் கூடாது.

    3. ஆபீசில் பத்திரிகைகள் படிக்கக் கூடாது.

    4. இடைவேளியில் அரசியல் பேசக் கூடாது.

    ஏஜண்டு மட்டும் இத்தனையும் இதற்கு மேலும் செய்யலாம்.  அநீதி!  ஆபீசில் கருங்காலி C.V.R. பண்ணிய வேலை இது! கருங்காலிகளைக் கருவருப்போம்!

    இரவு 8 முதல் 9, மாணிக்கம், தி.ப.தி. நான் ஆகியோர் இலக்கியம், சினிமா, கலைகள்’ பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.

    இரவு ஆகாரம் கஞ்சி. இரவு 12 மணிக்கு தம்பியை ஏசினேன்.

    Wednesday, 6th October 1948

    சர்வதாரி புரட்டாசி மீ 21உ புதன்

    Book Post from A.I.R

    இன்று ஆபீசில் விரோதம் ரொம்ப வளர்ந்து விட்டது.  மேஜையில் தான் உட்கார்ந்து மதுசூதனனுடன் பேசிக் கொண்டிருப்பது பற்றி ஒவ்வொருவரையும் explanation கேட்டார் ஏஜண்டு.  பிறகு இன்னொரு explanation.

    Cashier-க்கும் Accountant க்கும் எவ்வித சம்பந்தமுமில்லையா? Fixed deposit இருக்கிறதே?  என்று கேட்டு ஏஜண்டை எதிர்த்து விட்டேன்.  இதை ராமகிருஷ்ணய்யர் சபாபதியிடம் சொல்லி ரொம்ப கண்டித்தாராம்.

    முத்தையா என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டான்.  இதை நான் எதிர்பார்க்கவில்லை, C.V.R ம் பாதி துரோகம் பண்ணி விட்டான்.  ராமகிருஷ்ணய்யர் நடுநிலைமை.  இரவு மதுசூதனன் வீட்டிற்குச் சென்று 2 மணி நேரம் மந்திராலோசனை செய்தோம்.  வழக்கம் போல் சபாபதி வீட்டிற்குச் சென்று ஸோமாசுடன் பேசிவிட்டு 10.30க்கு வீடு.

    Monday, 15th November 1948

    சர்வதாரி ஐப்பசி மீ 30உ திங்கள்

    Post from People’s Age; Card to Chidambaram

    காலையில் வ.க. சகோதரர்க்ள 9.30 மணிக்கு வந்தனர்.  பாளையங்கோட்டை பைண்டிங் ஆபீஸ் போய் விட்டு மீண்டும் மத்தியானம் வந்தனர்.  ஆபீஸ் ஜோலியை முடித்து விட்டு, பொன்னு கடைக்குச் சென்றோம்.  பின் ஸோமாஸைப் பார்க்கச் சென்றோம்.  போகும் போது, ‘அதிர்ஷ்டம், விதி, தர்மம், கடவுள்’ இவைகளில் அசோகனுக்கு அதிக நம்பிக்கை வந்துவிட்டதென்றும் அவைகளைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்னவென்றும் கேட்டார் வ.க.

    முயற்சி, திட்டமிட்ட உழைப்பு, தன்னம்பிக்கை, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துதல்’ ஆகியவற்றில் தான் எனக்கு நம்பிக்கை என்றேன்.

    பிறகு பார்க்கில் உட்கார்ந்து, ‘சிந்தனை, இலக்கிய விமர்சனம், கிராம ஊழியன், சல்லியர் கோன் கதைகள்’ இவைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.  உண்மையான விமர்சனத்தைப் பாராட்டும் பண்பை தமிழ்நாடு பெறவில்லை என்றார் வ.க.

    Tuesday, 16th November 1948

    சர்வதாரி கார்த்திகை மீ 1உ செவ்வாய்

    Letter to  தி.ப.தி; Letter from Raghunathan

    இன்று மனைவி வீடு தொடும் விசேடம் நடந்தேறியது.  பாயாசத்துடன் சாப்பாடு.  குழந்தையின் பெயர் ஜெயலெட்சுமி.  வாழ்க அவள்!

    “1948ல் நானெழுதிய நாட்குறிப்புகள் ஒரு முதிரா இளைஞனின் இலட்சியத் தேடல்களையும் பல்வேறு உளநிலைகளையும் பலவீனங்களையும் ஓரளவிற்குப் பிரதிபலிக்கின்றது” என்று தி.க.சி. அவர்கள் கூறுகிறார்.

    இந்நூலை மகாகவி வழிவந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் தோழர். இரா. நல்ல கண்ணு, தோழர் என்.சங்கரய்யா, தோழர் பழ.நெடுமாறன் ஆகியோருக்கு மனமுவந்து காணிக்கையாக அளித்திருக்கிறார்.

    ஒரு நூற்றாண்டின் இயக்க, இலக்கிய, திறனாய்தலின், நடுநிலை விமர்சனத்தின், இளம் படைப்பாளிகளின் ஊக்கமாய், இலக்கியத் தோட்டக்காரனாய் அனைத்துக்கும் மேலாக மனுசத்தனம் வற்றா ஊற்றாக ஒளிர்ந்து கொண்டிருக்கின்றார்  தி.க.சி.

    நூல்: தி.க.சி.யின் நாட்குறிப்புகள்

    தொகுப்பாசிரியர்: வே.முத்துக்குமார்

    பக்கம் & 176

    விலை & 125 ரூபாய்

    பதிப்பகம் & சந்தியா பதிப்பகம், அசோக் நகர், சென்னை & 83

    & கி.ரா.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    Subashini_Thirumalaiஇந்த வாரம் வல்லமையில் வந்த கட்டுரைகளில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது எழுத்தாளர் தி.சுபாஷிணியின் ‘வாசிப்புகளின் வாசல்’ கட்டுரை என்று சொல்லவேண்டும்தான். வித்தியாசத்துக்குக் காரணம் எழுத்தாளர் கோவை ஞானியின் ஒரு புத்தகத்தைக் குறிப்பிடும்போது –

    ”(கோவை ஞானி) தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்’ என்னும் அவரது புத்தகத்தை அளித்தார். வாங்கி வந்து விட்டேனேயொழிய படிக்கக் காலதாமதமாகிவிட்டது. முதற்காரணம் என் அருமைப் பேரன். இரண்டாவது அவர் மார்க்ஸிஸ்ட். அந்த அளவு எனக்கு அறிவு உண்டா? படித்து புரிந்துகொள்ள முடியுமா? என்ற அச்சம். ஆனால் படிக்கப் படிக்க என் அச்சம் விலகியது! வெயிலிடப்பட்ட பனியாய் மறைந்தது. அறிவின் வாசல் திறந்துகொண்டது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்” – என்று திருமதி சுபாஷிணி குறிப்பிட்டு பிறகு அந்தப் புத்தகத்தைப் பற்றிய தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

    பொதுவாகவே மனிதர்கள் பல விதானங்களில் சிந்திக்கிறார்கள். இது உலக மாந்தர்களுக்குண்டான சிறப்பு. பல சிந்தனைகள் சித்தாந்தங்களாக மாறுகிறதுதான். அந்த சித்தாந்தங்களில் சில காலத்தின் கோலத்திற்கேற்ப மிக அதிக அளவில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதே சமயத்தில் ஒரு சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களால் அதற்கு மாறாக உள்ள இன்னொரு சித்தாந்தத்தை மனதாலும் ஏற்றுக் கொள்ளமுடியாதுதான்.

    அதே சமயத்தில் எந்த சித்தாந்தத்தைப் பின்பற்றினாலும் மாற்றார் கருத்தையும் நாம் படித்து அறிய வேண்டும். இதற்கு பொதுவாக மனது இடம் கொடுக்காது. மறுக்கும்.. சில சமயம் அலட்சியப்படுத்தும், சிலசமயம் பயப்படுத்தும் ஆனால் படித்தபின்னர், அதுவும் முடிந்தவரை பொறுமையாக ஒரு திறந்த மனதில் படிக்கப்படும்போது அந்த சித்தாந்தத்தில் உள்ள பல நல்ல கருத்துகள் நம்மை ஆச்சரியப்படுத்தும்தான். இப்படிப்பட்ட கருத்து நம் மனதுள் வந்தவுடன் நமக்குள் முதலில் தோன்றுவது மாற்று சித்தாந்தத்தில் உள்ள நல்ல கருத்துகளும் நல்ல மதிப்பும் உண்டாகும்., இதனால் நம் எண்ணங்களையும் செம்மையாக்கிக்கொள்ள உதவுகிறது. மாற்று சித்தாந்தங்களையும் மதிக்கத் தோன்றுகிறது. நம்முள் உள்ள ஒரு எதிர்மறையை நீக்கிக் கொள்ள சந்தர்ப்பமும் தருகின்றது.

    அப்படிப்பட்ட ஒரு கருத்தை நம்முன் நிறுத்தி வாசகர்களுக்கும் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தும் வண்ணம் கருத்துரையைப் பதிப்பித்த திருமதி சுபாஷிணி அவர்களை இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு நம் நல்வாழ்த்துகள். அவர் கட்டுரையை முழுதும் படிக்க இதோ அவரது இணைப்பு – http://www.vallamai.com/?p=42999

    கடைசி பாரா: பிச்சினிக்காடு இளங்கோ’வின் சொல்லும் சொல்லும் கவிதை.

    சொற்களெல்லாம்

    சிக்கிமுக்கிக் கற்கள்

    விருட்சமாய்

    விளையும் விதைகள்

    ஒவ்வொரு சொல்லும்

    வாமன வடிவம்

    ஒவ்வொரு சொல்லும்

    சுரங்கம்

    ஒவ்வொரு சொல்லும்

    ஒரு

    சூத்திரம்

    சூத்திரம் விரிந்தால்

    சூட்சுமம் விளங்கும்

    Share
  • வாசிப்புகளின் வாசலில்… (2)

    தி. சுபாஷிணி

    தமிழர் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்?

    கோவை ஞானி

    New Doc 1 (1)

    சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தின் 15 ஆம் நாள், கோவையில் ஆறு தமிழ்ச்சங்கங்கள் கூடின. புவனேஷ்வர் தமிழ்ச்சங்கம், ஷிமோகா தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், கல்லிடக்குறிச்சி தமிழ்ச் சங்கம், விசாகப்பட்டினத் தமிழ்ச்சங்கம் மற்றும் திருச்சியிலுள்ள செண்பகராமன் இலக்கிய சங்கம், கோயம்புத்தூரிலுள்ள சிற்றிதழ்களின் சங்கம், மேலும் ஓர் இலக்கிய வட்டம் என, ஹிந்துஸ்தான் கலையியல் கல்லூரியில் கூடி, ஒருவொருக்கொருவர் அறிமுகமாகி தங்கள் படைப்புகளையும், சங்கங்களின் பணிகளையும் பகிர்ந்து கொண்டன. புவனேஷ்வர் தமிழ்ச் சங்கத்திற்கு, சிறந்த தமிழ்ப் பணிக்கான விருது வழங்கப்பட்டது. விழாவிற்கு அக்கல்லூரி தாளாளர் தலைமை வகித்தார். அக்கல்லூரியின் தமிழ்த் துறையினர் விழா ஏற்பாட்டை மிகவும் சிறப்பாக கவனித்தார்கள். அவ்விழாவிற்கு திருப்பூரிலுள்ள திரு. நாகேஸ்வரன் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அவர் தம் வாழ்நாள் பணியே, எல்லாத் தமிழ்ச் சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஒருவொருக்கொருவர் உதவி புரிந்து தமிழுக்குச் சிறந்த தொண்டாற்ற வேண்டும் என்பதுதான். அவர் என்னை அவ்விழாவிற்கு அழைத்து, என் படைப்புகளை ஏனையோருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதற்காக நான் கோவை சென்றபோது திரு. ‘கோவை ஞானி’ அவர்களைச் சந்தித்தேன். அப்போது எனக்கு, ‘தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்’ என்னும் அவரது புத்தகத்தை அளித்தார். வாங்கி வந்து விட்டேனேயொழிய படிக்கக் காலதாமதமாகிவிட்டது.  முதற்காரணம் என் அருமைப் பேரன். இரண்டாவது அவர் மார்க்ஸிஸ்ட். அந்த அளவு எனக்கு அறிவு உண்டா? படித்து புரிந்துகொள்ள முடியுமா?  என்ற அச்சம். ஆனால் படிக்க படிக்க என் அச்சம் விலகியது! வெயிலிடப்பட்ட பனியாய் மறைந்தது. அறிவின் வாசல் திறந்துகொண்டது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.

    “கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக நாம் நிறைய பேசி வரும் தமிழ் நாகரிகம், தமிழர் நாகரிகம் இவற்றின் கூறுகளை வரையறுத்துக் கொள்ளலாம்” என்றுதான் இக்கட்டுரையைத் தொடங்குகிறார் கோவை ஞானி.

    “5,000 ஆண்டுகளுக்கு மேலான தொன்மையும், மேன்மையும் கொண்ட தமிழ் மொழி, ஏனைய கிரேக்க இலத்தீன், ரபிரேயம், சீனம் ஆகிய மொழிகளின் தொன்மையையும், இலக்கிய, இலக்கண, பண்பாடு மேன்மையும் கொண்டது.  வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடங்கி வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மருத்துவம் முதலிய எத்தனையோ துறைகளில் தமிழ் மக்களின் சாதனைகள் சிறப்பானவை. சிந்து நாகரிகம் திராவிட நாகரிகமே என்று இப்போது நிரூபிக்கப்பட்டு வருகின்றது. கடல் வாணிபத்தில் தொன்மைக் காலம் முதலே தமிழ் மக்கள் பெற்றிருந்த சிறப்பை இன்று அயல்நாட்டவரும் ஒப்புக்கொள்கின்றனர். தென்கிழக்கு ஆசியா முழுவதும் தமிழர் நாகரிகம் ஆழமாகப் பரவியிருந்தது என்பதற்கும் உறுதியான சான்றுகள் உள்ளன. திராவிட மொழிகளின் பரவல் என்பது ஜப்பான் வரை சென்று இருக்கின்றது.  தமிழ் மன்னர்கள் பேரரசுகளைப் படைத்திருக்கிறார்கள். நீர்ப்பாசனத்திட்டங்கள், குளங்கள், அணைக்கட்டுகள், மாபெரும் கட்டடங்கள் முதலியவற்றை உருவாக்குவதற்குத் தேவையான பொறியியல், கணிதம் முதலிய அறிவுத் துறையிலும், தமிழர்கள் தேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.  தமிழிசைதான் வட இந்திய இசைக்கும், மேற்கத்திய இசைக்கும் அடிப்படையாக அமைந்தது என்பதை இசைத்தமிழ் அறிஞர்கள் ஆதாரத்தோடு விளக்கியுள்ளார்கள்.

    தொல்காப்பியரின் தினைக்கோட்பாடு உலக அளவில் தனித்துவமிக்கது. இலக்கியத்தின் உச்சம் சங்க இலக்கியம், உன்னதம் பக்தி இலக்கியம், சாரம் சித்தர் இலக்கியம்.

    தமிழ் அறம் என்பது சமத்துவம், சமதர்மம் என்பதை திருக்குறளும், தொல்காப்பியமும், சிலம்பும் கூறுகின்றன.  சாதி, மதம், சடங்குகள் என்பன தமிழச் சமூகத்திலும் இடம் பெற்றிருந்தன. இவற்றின் ஆதிக்கத்திற்கு இடம் தராமல் உணர்வோடு வாழும் வாழ்க்கைதான் தமிழறத்திற்கு ஒத்தது என்பது வரலாறு கூறும் உண்மை. மனித மேன்மைதான் தெய்வம் என்று படைக்கப்பட்டது. படைத்தது மனிதன்தான்.

    தமிழர் நாகரிகத்திற்கு இன்று நேர்ந்துள்ள நெருக்கடிகள் உச்ச அளவிலானவை. இவைகளில் முதன்மையானவை வடக்கிலிருந்து வந்த ஆரியத்தின் தாக்குதல்தாம்.

    இரண்டாவது, மைய அரசுக்குத் தமிழக அரசு தன்னை விட்டு கொடுத்ததன் மூலம் இந்தியை தடுக்க முடியாதது, மூன்றாவது, தமிழ் ஆட்சி மொழியாய் இல்லாதது, நான்காவது, உலகமயம், தனியார் மயம், தாராளமயம் என்பன.  இறுதியாக, தமிழின் தொன்மையைப் பற்றியும், இலக்கிய மேன்மையைப்பற்றியும் பேசினாலும் தமிழை ஆழமாக கற்கவும் இல்லை. தமிழன் என்கிற உணர்கிற இல்லை.

    இவ்வாறு இருக்கையில், தமிழ் நாகரிகத்தைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றனதா?.

    முதலில் மைய அரசு அறிவித்த செம்மொழியாம் தமிழ் மொழியை நாம் சீரிய வகையில் வளர்க்க பல்துறைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் இருப்பதால், ஏனைய மொழிகளுடனும், மாநிலங்களுடனும் தொடர்பு கொண்டு, பல ஆய்வுகள், கருத்தரங்குகள் நடத்தி அவர்களுடன் நம் உறவை பலப்படுத்த வேண்டும். அமெரிக்கா போன்றவற்றின் ஆதிக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள தமிழ் மொழியில் தேவையான மனித நேயம், மெய்யியல், பண்பாடு, இலக்கியம் முதலியவற்றைத் தமிழ் தன்னுள் தாங்கிக்கொண்டுச் செம்மொழியாய் நிற்கின்றது. மனித வாழ்வின் ஆதாரமாகிய சமத்துவம், சமதர்மம், அன்பு ஆகியவற்றின் குரலாகத்தான் தமிழ்க்குரல் இருக்கின்றது.  இதை தமிழன் உணர்ந்து உலகுக்கும் காட்ட வேண்டும். மேலும் ஆதிக்க அரசியலைத் தவிர்த்தல் நலம். தமிழ் நமக்கு ஒரு பேராற்றல். இதைத்தமிழன் கண்டறிய தமிழ்க் கல்வி அவசியம். தமிழ் என்பது அன்பு, அறம், ஆண்மை, பெண்மை, தாய்மை, அழகு, கலை, தவம், இவ்வகையில்தான் நம் வாழ்வின் உயிராகிறது, மெய்யியல்ஆகிறது. இந்தவகையில் தான் தமிழ் கற்க வேண்டும். தமிழைக் கற்பிக்க வேண்டும்.

    மேலும், எந்த அரசியல், அரசு அதிகாரத்தை நோக்கமாக கொள்ளவில்லையோ அந்த அரசியல், அரசுதான் தமிழ் தேசியமாகவும், அதன் வழியாக தமிழர் நாகரிகத்தை வளர்ப்பதாகவும் இருக்கும். மேலும் பண்பாட்டு ஆதிக்கமும் தமிழர் நாகரிகத்திற்கு இடையூறாகத்தான் இருக்கும். தமிழ் வரலாற்றோடு, தமிழ் வாழ்வோடு, தமிழ் மக்களோடு, தமிழ் மக்களின் மேம்பாட்டோடு நம்மை இணைக்கிற இயக்கம் என்கிற முறையில் தமிழ் தேசிய இயக்கத்தின் முன் பல கடமைகள் உள்ளன. அவை: ஆதிக்கத்தை மறுக்கும் இயக்கங்கள் ஒருங்கிணைய வேண்டும். மார்க்ஸியமும் பெரியாரியமும் இணைகின்ற போழ்து, தலித்தியமும் பெண்ணியமும் உறவுகொள்ள ஏதுவாகிறது. இது தமிழ் தேசியமாக மலர்ந்து தமிழர் நாகரிகத்தைக் காப்பாற்ற இயல்கிறது. இதனால் இயற்கையைக் காப்பாற்றும் தமிழ் வேளாண்மை, தமிழ் மருத்துவம், தமிழ் சார்ந்த மரபு தொழில்கள், சிற்பக்கலை போன்றவை ஆதரிக்கப்பட்டுவிடும். தமிழ் தாய்ப் பள்ளிகள் அரசு உதவியோடு தொடங்க வேண்டும். தமிழ் தேசிய இயக்கம், தம் கிளைகள் என்ற முறையில் படைப்பாளிகள், கலைஞர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், உழவர்கள், நெசவாளர்கள், தலித்துகள், பெண்கள் என ஒவ்வொரு வகையினருக்கும் ஒரு கிளை முறைணை உருவாக்கி செயல்பட வேண்டும். இறுதியாக அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்து, வள்ளுவரும், இளங்கோவும், பாரதியும், பாரதிதாசனும் நமக்குள் இன்னமும் வாழ்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்க வேண்டும்.

    மேலே குறிப்பிட்ட கட்டுரையைத் தன் ‘தமிழ் நேயம்’ பத்திரிகையில் வெளியிட்டு, அதற்கு எதிர்வினையாக வந்த 27 கட்டுரைகளையும் தொகுத்து இந்த நூலை அளித்திருக்கிறார் கோவை ஞானி.

    முதல் கட்டுரையாக, பேராசிரியர் ம.இலெ.தங்கப்பரவல் கட்டுரை அமைகிறது. அதில் “தமிழ் மக்கள் தாங்கள் யார்?  தங்கள் நாகரிகம் எத்தகையது? என்பதை அறியாமல் உறங்கிக் கிடக்கின்றனர். அவர்கள் விழித்தெழவில்லை என்பதைத் தவிர வேறு எல்லா நலக்கூறுகளும் அவர்கட்கு உண்டு. இன்று இனவுணர்வற்று உறங்கிக் கிடக்கும் தமிழர் இன உணர்வு பெற்று விழித்தெழச் செய்ய வேண்டும், செய்தால்போதும்” என தன் கருத்தை முதன்மைப்படுத்துகிறார்.

    “பாரதி வாழ்ந்த காலத்திலேயே நூலகமொழியாகத் தமிழ்வளம் பெறுவதற்கான வழியை நமக்குக் காட்டிச் சென்றிருக்கிறார். ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாரதி கூறியிருக்கின்றார். எனவே தமிழ் நூலக மொழியாக இடம்பெற வேண்டும்” என்பது மருத்துவர் கோபியின் கருத்து.

    தமிழோசை கு.முத்துக்குமார், “மண்ணையும் மக்களையும் பிரித்து தமிழை மட்டும் வளர்த்தெடுக்க முடியாது” என்று ஆணித்தரமான அடிப்படையான கருத்தை முன்வைக்கின்றார்.

    “தமிழர் வரலாறு, பண்பாடுகள், தமிழ் மொழி மேன்மை என்பனவற்றையெல்லாம் தெரிந்துகொள்வதிலிருந்து வெகுதூரம் விலகிப்போய் வேலைக்கான கவலையிலும், வீணான பொழுதுபோக்குகளிலும், மலிவான திரைப்பட நுகர்வு& பேச்சிலும்& தமிழில் என்ன இருக்கின்றது என்று அரைகுறை தாங்கிய பயிற்சி அளவிலேயே அறியாமை வெளிப்படப் பிதற்றித் திரிவதிலும்& குறிக்கோளோ நோக்கமோ அற்று, இணைய வலையத்து விளிம்புகளில் தொற்றித் தொங்கும் & இன்றைய இளைய தமிழ்ச் சமுதாயத்தை இன்று எழுபதும் எழுபதுக்குமேலுமென மூத்த வயதுடைய தமிழ் தேசியர்கள் எப்படி மாற்ற முடியும்? என்ற வினாவை எழுப்புகிறார் கவிஞர் தமிழன்பன்.

    முனைவர் சு.வேணுகோபால் கவலைப்படுவதும், ஆதங்கப்படுவதும் முந்தையக் கருத்தையொட்டித்தான் இருக்கின்றது.

    “சென்ற தலைமுறைத் தமிழறிஞர்களான தெ.பொ.மீ., வ.சுபா மாணிக்கனார், வையாபுரி பிள்ளை, வேங்கடசாமி நாட்டார், மு.வரதராசனார் போன்றோர்கள் வணங்கத்தக்கவர்கள்.  இன்று 50 வயதை நெருங்கத்தக்கவர்களில் எத்தனைபேர் தமிழறிஞர்கள்? எத்தனைபேர் தொடர்ந்து வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர்?  தன் பிள்ளை, தன் “தமிழ் மாணவர்”களாக உருவாவார்கள். இவர்களின் மாணவர் தான் பிற்காலத்தில் எப்படியும் ஆசிரியப் பயிற்சி முடித்தோ, இளநிலை முனைவர் முடித்தோ, பணம் சேர்க்க வேலை தேடுவார்கள். தமிழ் உருப்படுமா?”

    சாத்தூர் சேகரன் தன் கட்டுரையில் “தன்னம்பிக்கையே நன்னம்பிக்கை முனை” என்கிறார். “சோர்ந்து கிடக்கும் தமிழனுக்கு இன்று தேவை பணமல்ல. வீரவுரைகள், எழுச்சியுரைகள். இவையே போதும். தன்னம்பிக்கையை ஊட்டி விட்டால் எளிதில் கிடைப்பது வெற்றியாகும், பெரு வெற்றியாகும்.

    சமீபத்தில் மறைந்த சேலம் தமிழ் நாடன் கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக கோவை ஞானி கருதியிருக்கிறார்.

    “தமிழ் தேசியம், தமிழர் நாகரிகம்”&இவற்றைப் பற்றிய விரிவான விளக்கத்தை இந்நூல் தருகிறது. தன் சிந்தனைகளை நூலக வடித்து நமக்கு அளித்த கோவை ஞானி அவர்களின் தமிழ் உணர்வும், சமுதாயத்தின்பால் உள்ள அக்கறையும் தெளிவாகத் தெரிகிறது.

    தலைப்பு & தமிழர் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்? 

    தொகுப்பாசிரியர்    & கோவை ஞானி

    வெளியீடு                     & புதுப்புனல், பாத்திமா டவர், 117 திருவல்லிக்கேணி

                                                      நெடுஞ்சாலை, சென்னை & 5

    பக்கம்                               & 160

    விலை                             & ரூ.120

    Share
  • வாசிப்புகளின் வாசலில்…. (1)

    தி.சுபாஷிணி

    வாசிக்கப்படாத நூல் வாழுமா?

    ஒரேர் உழவன் கணபதியா பிள்ளை மகனார் நாஞ்சில் நாடன்.

    unnamed

    தலைவி தலைவன்பால் காதல்வயப்பட்டு, தன்மனம் முழுவதும் அவனை அமர்த்திப் பரவசப்பட்டுக் கொண்டிருக்குங்காலை, தலைவனே அவள் எதிரே தோன்றிவிடுகின்றான். தன் காதலைத் தானே ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, எங்கிருந்துதான் நாணம் வந்துவிடுகின்றதோ, தன்னையறியாது தன் கரங்களால் கண்கள் இரண்டையும் பொத்தி மறைத்துக் கொள்கிறாள். நாணத்தின் செம்மை முகத்தில் பரவ, முகம் பொன்னாலான தாமரையாய் மலர்ந்து மிளர்கின்றது. தலைவனுக்கோ, மதுரை மீனாட்சியம்மன் கோயில் குளத்தில் உலவும் பொற்றாமரை நினைவிற்கு வந்து விடுகின்றது. அங்குதான் மீன்கள் இருக்காது. தாமரை மட்டும் இருக்கும் எனக் கொள்கின்றான்.

    “தோற்றும் இயலை மறைத்தீர். பொற்கஞ்சமும் தோற்றுவித்தீர்

    சாற்றும் பொழுதினிலே நீரோ மதுரைத் தடம் பொய்கையே!”

    என்பவை பாடல்வரிகள்.

    இதை “நாணிக் கண் புதைத்தல்” என்கிறார், தளவாய் இரகுநாத சேதுபதியின் ஆஸ்தான வித்வான் அமிர்தக் கவிராயர். “நாணிக் கண் புதைத்தல்” என்னும் சொல்லாட்சியே அற்புதமாக இருக்கின்றது.

    ஆண், பெண் உணர்வுகளை முழுமையாகச் சொல்லும் அக இலக்கியம் கோவையாகும். இக்கோவை இலக்கிய வகையின் உச்சம்தான் ஒரு துறைக் கோவையாகும். இதன் புதுத்தடம்தான் “நாணிக்கண் புதைத்தல்”. இதை “வல்லான் வெட்டிய வாய்க்கால்” என்கிறார் வித்வான் கா.நயினார் முகமது.

    “சங்கொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொழுது

    வந்திழியும் சிலம்பாறு உடை மாலிருஞ்சோலை”

    என்று ஆண்டாள் பாடும் அழகர்மலைபால் உறையும் கள்ளழகர் பால் காதல் கொள்கிறாள் தலைவி. தன் காதலை யார் மூலம் அழகர் பெருமானுக்குத் தெரிவிப்பது? தான் அன்பாய் வளர்க்கும் கிளியைத் தெரிந்தெடுக்கிறாள். ஏனெனில் அதுதான் அவளுடன் சதா சர்வகாலமும் இருக்கின்றது. அவளது உள்ளத்தை அறிந்தது என அவள் எண்ணுகின்றாள் போலும். எனவே தன் கிளியிடம், அழகரிடம் தூது அனுப்புகிறாள். கிளியே! நீ திருமாலிருஞ்சோலை மலையை அடைந்து அங்கிருக்கும் அழகரிடம் செல். ஆனால் அவனிருக்கும் நிலையை முதலில் தெரிந்துகொள். அவனைத் தொழும் அடியார்களுக்கும், அவனருகில் இருக்கும் ஆண்டாள் நாச்சியாருக்கும், அவர்பால் குடிகொண்டிருக்கும் சவுந்தரவல்லித் தாயாருக்கும், இடையூறு வராது, அவன் எள்ளளவும் சினம் கொள்ளாத வகையில் ரகசியமாய் என் நிலையை, என் காதலின் தவிப்பை எடுத்துக்கூறி, உலகின் துயர் தீர்க்கும் சங்கணிந்தவன் அணிந்த மலர் மாலையை வாங்கி வருவாயாக” என வேண்டிக்கொண்டு தன் காதலுக்கு தூதாய் அனுப்புகின்றாள் தலைவி.

    “அடியார்கள்

    அங்கிருந்தால் கீர்த்தனம் செய்வாய். அடுத்து நாச்சியார்

    பங்கிருந்தால் கையில் பறந்து இருப்பாய் & எங்கிருந்து

    வந்தாய் என்றால் மாலிருஞ்சோலையில் இருந்து

    எந்தாய் உனைத் தொழ வந்தேன் என்பாய் & அந்த

    சவுந்தர வல்லி எனும் தற்சொரூபிக்-கும்

    உவந்து அலர் சூடிக் கொடுத்தாளுக்கும் & சிவந்த

    கடுகிலேசம் கோபம் காணாமல் என் மால்

    வடுகிலே சொல்வாய் வகையாய் & அருகிலே

    சம்கெடுப்பாய் சங்கெடுக்கும். சச்சிதானந்தர் அணி

    கொங்கெடுக்கும் தாமம் கொடு வருவாய்”

    இப்பாடல் இடம் பெறும் நூல் திருமாலிருஞ்சோலை அழகர் கிள்ளை விடு தூது. இதன் ஆசிரியர் மதுரையைச் சேர்ந்த பலபட்டடைச் சொக்கநாதபிள்ளை. சுமார் 270 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தூது.

    மூத்த பள்ளியின் நாடான ஆசூர் நாட்டின் பெருமையைப் புகழ்ந்து பாடுகிறான்.

    கறைபட்டுள்ளது வெண்கலைத் திங்கள்

    கடம் பட்டுள்ளது கம்பத்து வேழம்

    சிறைபட்டுள்ளது விண்ணெழும் புள்ளு

    திரிபட்டுள்ளது வல்லியம் கொம்பு

    மறைபட்டுள்ளது அரும்பொருட் செய்யுள்

    வளமை ஆசூர் வடகரை நாடே”

    உடனே, இதற்குப் பதிலாக இளையபள்ளி, தன் நாடான சீவல மங்கைத் தென்கரை நாட்டைப் போற்றிப் பாடுகிறாள். தனது நாட்டில் காய்வது சூரியன் மட்டும்தான். மத்தால் கடையப்பட்டுக் கலங்கி நிற்பது கட்டித் தயிர்  மட்டும்தான். அழிந்து போவது நாள்களும் கிழமைகளுமே. வான்மழை பொழிந்த வெள்ளம் மட்டுமே சுழன்று வரும். சுமை தாங்காது சாய்வது நெற்கதிர். ஆசைகளை ஒடுக்குவது தவமியற்றுவோர் மனம். தேய்ந்து போவது உரைக்கப்படும் சந்தனம் மட்டுமே.

    “காயக் கண்டது சூரிய காந்தி

    கலங்கக் கண்டது வெண் தயிர்க் கண்டம்

    மாயக் கண்டது நாழிகை வாரம்

    மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்

    சாயக் கண்டது காய்க்குலைச் செந்நெல்

    தணிப்பக் கண்டது தாபதர் உள்ளம்

    தேயக் கண்டது உரைத்திடும் சந்தனம்

    சீவல மங்கைத் தென்கரை “நாடே”

    இவ்வாறு முக்கடல் பள்ளுவில் தமிழ்பாடிச் செழிக்கின்றனர்.

    மந்தர முலைகள் ஏசலாட மகரக் குழைகள் ஊசலாட

    சுந்தர விழிகள் பூசலாட தொங்கத் தொங்கத் தொம்மெனப்

    பந்தடித் தனளே. வசந்த சுந்தரி விந்தையாகவே!”

    பாடலைப் பாடும் போதே, வசந்தவல்லியின்

    பந்தாட்டத்தின் ஒய்யாரம் நம் கண்முன் காட்சியாய்

    விரிகின்றது. மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயரால் இயற்றப்பட்ட குற்றாலக் குறவஞ்சியில் பாடிய பாடல் இது.

    பாட்டுடைத் தலைவனின்பால் காதல் கொண்ட தலைவியைக் கண்டு குறத்தி குறி கூறுவதே ‘குறம்’ என்று கூறப்படும் வகைப்பாடல்கள். இங்கு தலைவி அங்கயற்கண்ணியாகிய மீனாட்சி சொக்கேசனைக் கூடக் குறி சொல்கிறது குறம். முதலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

    செந்நெல் முத்தும் கன்னல் முத்தும் ஒளி

    திகழ் மதுரை அங்கயற்கண்ணி அம்மை

    பொன்னும், முத்தும் சொரியும் வெள்ளருவிப்

    பொதியமலைக் குறத்தி நான் அம்மே!

    குமரகுருபரர் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து, 52 வயது வரை வாய் பேசாது இருந்தபோது, இவரது தாய் திருச்செந்தூர் முருகனை கசிந்து கண்ணீர் மல்க வேண்டினாள். அப்போது அம்மா என்று அழைத்து ‘கந்தர் கலிவெண்பா’ பாடினார் என்பர். அவர் இயற்றியது இம்மீனாட்சியம்மை குறம். மதுரையைத் திருமலை நாயக்கர் ஆண்டகாலத்து அவர் முன்னிலையில் அங்கயற்கண்ணி சன்னிதியில் “மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்” பாடினார்.

    திருநெல்வேலி தச்சநல்லூர் வித்துவான் அழகிய சொக்கநாத பிள்ளை இயற்றியது, காந்திமதியம்மைப் பிள்ளைத்தமிழ்.

    “வாராது இருந்தால் இனி நான் உன்வடிவேல்

    விழிக்கு மை எழுதேன்

    மதிவான் நுதல்க்குத் திலகம் இடேன் மணியால்

    இழைத்த பணி புனையேன்

    பேர் ஆதரத்தினொடு பழக்கம் பேசேன்

    சிறிதும் முகம் பாரேன்

    பிறங்கு முலைப்பால் இனிது ஊட்டேன், பிரியமுடன்

    ஒக்கலையில் வைத்துத்

    தேர் ஆர் வீதி வளம் காட்டேன், செய்ய

    கனிவாய் முத்தம் இடேன்.

    திகழும்  மணித் தொட்டிலில் ஏற்றித் திருக்கண்

    வளரச் சீராட்டேன்

    தார் ஆர் இமவான் தடமார்பில் தவழும்

    குழந்தாய் வருகவே!

    சாலிப்பதி வாழ காந்திமதித் தாயே

    வருக வருகவே!”

    மாதுளம் பூ நிறத்தவளாகிய, பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், செப்பும் கனக கலசமும்  போலும் திருமுலைமேல் அப்பும் சுவை, சிந்தூர வண்ணப் பெண்ணாகிய திருக்காவூர் அபிராம வல்லியை, அபிராமிபட்டர், கிண்கிணியில் மெல்லிய சிலம்பின் சிலம்பலில், புலர் காலை புள்ளின இசையில், சிற்றருவித் துள்ளலில், பெருங்கடல் ஓசையில், வண்டினத்தின் ரீங்காரத்தில், திகட்டாத தமிழில் 100 பாடல்கள் கொண்ட அந்தாதியை ஆக்கினார்.

    “ஆசைக் கடலில் அகப்பட்டு

    அருளற்ற அந்தகன் கைப்

    பாசத்தில் அல்லல் பட இருந்த

    எனை நின் பாதம் என்னும்

    வாசக் கமலம் தலை மேல்

    வலிய வைத்து கண்டு கொண்ட

    நேசத்தை என் சொல்லு வேன் ஈசர்

    பாகத்து நேரிழையே!”

    எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி. வெண்பாக்களால் ஆனவை.

    “அழலாட அங்கை சிவந்ததோ அங்கை

    அழகால் அழல் சிவந்த வாறோ & கழலாடப்

    பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்

    தீயோடு வாய் இதனைச் செப்பு!”

    கால்களில் கழல் ஆட, கானகத்தில் போயோடு அனல் ஏந்தித் தீயாடுகிறவனே! தீயேந்தி ஆடுவதால் உன் அழகிய கை சிவந்து காணப்படுகிறதா? அல்லால்  அழகிய உன் கையின் அழகாய் தீ சிவந்த வாறோ? இதை நீ சொல்வாயாக?

    சேரமான் பெருமாள் நாயனார் அருளியது பொன் வண்ணத்து அந்தாதி. இப்பாடலில் முதற் பாடலைப் பார்க்கலாம்.

    பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்

    மேனி, பொலிந்து இலங்கும்

    மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்

    வீழ்சடை, வெள்ளிக்குன்றம்

    தன் வண்ணம் எவ்வண்மை அவ்வண்ணம்

    மால்விடை, தன்னைக் கண்ட

    என் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்

    ஆகிய ஈசனுக்கே!

    இதில் பன்னிரண்டு வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி திருவண்பரிகாரத்து திருவாழி மார்பனைப் பாடுகிறது.

    “முதலாம் திருவுருவம் மூன்றென்பார்: ஒன்றே

    முதலாடும் மூன்றும் என்பர் & முதல்வா!

    நிகர் இலகு கார் உருவா? நின் ஆகத்து அன்றே

    புகர் இலகு தாமரையின் பூ?”

    எல்லா சமயத்தாருக்கும் பொதுவான பாடல் ஒன்று இதில் உண்டு.

    “பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற

    காவிமலர் என்றும் காண்தொறும் & பாவியேன்

    மெய்ஆவி, மெய் மிகவே யூகிக்கும் அவ்அவை

    எல்லாம் பிரான் உருவே என்று”

    யாவும் இறைவடிவம் என்பதுதான் இப்பாடலின் நுட்பம்.

    கலம்பகம் பாடுவது என்பது எளிதன்று. தெள்ளாற்றுப் போர் வென்ற நந்திவர்ம பல்லவனைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது நந்திக்கலம்பகம். பாடியவர் பெயர் அறியவில்லை. பெரும்பாலும் சிற்றிலக்கியங்கள் இயற்கை அழகு, தலைவனின் வீரம், தலைவனைச் சேரும் தலைவியின் ஏக்கம், எனப்பாடி தமிழும் கவிதையும் காதலுமாய் துளிர்த்து நிற்பவை. நந்தியைப் பற்றி பல பாடல்கள் தனிப்பாடல்களாக கலம்பகப் படிகளில் ஒருசேர கிடைத்திருக்கின்றன. அவை மிகவும் சுவாரஸ்யமானவை. பைந்தமிழை ஆய்கின்ற நந்திவர்ம பல்லவனின் மார்பினைத்  தழுவ மாட்டாமல் வேகின்ற பாவியாகிய என் மீது செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுமையான குளிர்ச்சியான சந்தனம் என்று யாரோ தடவிப் போனார் என்பது தலைவியின் எதிர்பார்ப்பின் அவஸ்தை மிகு பாடல் இது.

    செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்

    சந்தனம் என்று யாரோ தடவினார் & பைந்தமிழை

    ஆய்கின்ற கோன் நந்தி அகம் தழுவாமல்

    வேகின்ற பாவியேன் மேல்!

    தலைவி திருவாழி மார்பன் திருவரங்கன்பால் தீராக்

    காதல் கொண்டு, அவனிடம் வண்டைத் தூது விடுகிறாள். அது

    திரும்பி வராததால் தன் நெஞ்சோடு கிளர்த்திய பாடல் இது.

    மறக்குமோ? காலில் மது அருந்தி, அப்பால்

    பறக்குமோ? சந்நிதி முன்பு ஆமோ? & சிறக்கத்

    தருவரங்கன் கேட்டுமோ? தாழ்க்குமோ? & நெஞ்சே!

    திருவரங்கர் பால் போன தேன்?

    திருவரங்கர் கலம்பகத்தில் உள்ள பாடல். பிள்ளைப்

    பெருமாள் அய்யங்கார் பாடியது.

    மேலே குறிப்பிட்ட பாடல்கள் இலக்கியங்கள் வாசிக்கப்படாது வாழ்விழந்து போய்விடுமோ என்ற கவலையில் பிறந்தது “சிற்றிலக்கியங்கள்” என்னும் நூல். கவலைப்பட்டது சாகித்திய விருதாளர், மரபு இலக்கியத்தின் மாண்பினை இன்னமும் கையிலேந்திக் கொண்டிருக்கும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.

    “செவிநூர் கனிகளாய், மனத்திற்கினியவாய்

    நம்முன் நாட்டியமாடும் தமிழை, எப்போதும் எங்கிருந்தும்

    கற்கலாம் என்கின்ற வகையிலே, இளைய வாசகருக்கு

    மரபிலக்கிய வாசிப்பைத்  தொடங்குவதற்கு உதவும் வகையிலே”

    இந்நூலை உருவாக்கியுள்ளார் நாஞ்சில் நாடன்.

    நூல்கள் பயிலப்  பயில, சொல்லச் சொல்ல, அனுபவிக்க அனுபவிக்கத்தான் அவைகள் உயிர்ப்புடன் இருக்கும். இல்லாவிடில் மரணத்தைத் தழுவ வேண்டியதுதான். இந்தக் கவலைதான் சிற்றிலக்கியங்களைத் தொகுத்து அளித்திருக்கின்றார் ஆசிரியர். ஆம் பெரிதினும் பெரிய செயல்தான்.

    கோவை, மும்மணிக் கோவை, உலா, தூது, பள்ளு, குறவஞ்சி, குறம், பிள்ளைத்தமிழ், அந்தாதி, கலம்பகம், பரண், சதகம், மாயை என வகைப்படுத்தி, அவ்வகையிலே காணப்படும் அத்துணை நூல்களையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அதில் தமிழின் சுவையாயும், பக்தியின் ரஸமாயும் சுவாரஸ்யமான பாடல்களையும் தெரிந்தெடுத்து, அனுபவித்து அளித்திருக்கிறார். சிலவற்றை விளக்கியும், விளக்கமும் விளம்பியிருக்கின்றார். இலக்கிய வகைகளின் பட்டியல்களை சோம்பல் இல்லாது நேர்மையாய் நல்கி இருக்கின்றார்.

    “உ.வே.சா ஒருமுறை தானே தேடித்தருவார்? தண்ணீர் மூழ்குபவனை மூன்று முறை வெளிக்காட்டும் என்பார்கள். தமிழன்னை திரும்பத் திரும்பத் தொலைப்பவனுக்கு தேடித்தருவாளா? தேடித் தந்தவருக்குத்தான் என்ன திருப்பி செய்துவிட்டோம்? எதுவோ கிடந்து விட்டுப் போகட்டும். கரையான் அரித்து மட்கி மண்ணாக இருந்தவற்றை ஒருமுறை மீட்போம். நமது அலட்சியத்தால், பொறுப்பற்ற தன்மையினால், ஆர்வம் இன்மையால், வாசிப்புப் புறக்கணிப்பால் மீண்டும் தொலைத்து விடலாகாது என்ற வேண்டுகோளுடன் இந்தக் கட்டுரைகளை உங்கள் முன் வைக்கின்றேன்” என்று ஆதங்கத்துடன் படைத்திருக்கின்றார் “சிற்றிலக்கியங்கள்” என்னும் நூலை, நாஞ்சில் நாடன்.

    இந்நூலை “பல பண்டைய நூல்களைக் காப்பாற்றித் தந்த பெருமான் மகாமகோபாத்யாயை  தக்ஷிணாஷ்ய கலாநிதி டாக்டர். உ.வே.சாமிநாதய்யர் தமிழ் சேவைக்கு காணிக்கையாக்கி, தன் நன்றியைத் தெரிவித்துக்  கொள்கிறார் நாஞ்சிலார்.

    தலைப்பு         & சிற்றிலக்கியங்கள்

    ஆசிரியர்        & நாஞ்சில் நாடன்

    பக்கம்                               & 300 பக்கங்கள்& கனமான அட்டை

    விலை                             & ரூ.300

    பதிப்பகம்       & தமிழினி,

    25ஏ. தரைதளம் முதல் பகுதி,

    ஸ்பென்சர் பிளாசா, 769, அண்ணா சாலை, சென்னை & 600 002.

    Share
  • மகளிர் தின வேண்டுகோள்

     

    தி. சுபாஷிணி 

     

    சமம் வேண்டாமே!
    சஹிரிதயர்களாய் இருப்போமே!
    போற்ற வேண்டாமே – என்
    சுற்றம் தவிக்கும்போது
    எங்களைப் போகவிடலாமே
    வலியும் வாதையும்
    ஒன்றுதானே
    பெருமைப்பட வேண்டாம்
    பெருமிதம் கொள்ளலாமே
    முப்போதும்
    நீங்கள் நீங்களாய்
    இருப்பதுபோல்
    நாங்கள் நாங்களாய்
    இருக்க விரும்புவோம்தானே!

     

    Share
  • தங்கக் குணத்தான்!

    தி. சுபாஷிணி

    tkc

    ரஸிகமணி டி.கே. சி. அவர்களின் 60 வது நினைவு நாளை ஒட்டிய சிறப்புக் கட்டுரை.

     

                              அன்னைபோல் என்னை

                                      அருவியில் நீராட்டி

                                   இன்னமுதும் பக்கத்(து)

                                      இருந்தூட்டி–தன்னொடு

                                   தங்கு தங்கு என்று சொன்ன

                                       தங்கக் குணத்தானை

                                   எங்கு நான் காண்பேன் – இனி

    என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் தங்கக் குணத்தானைப் போற்றுகிறார்.யார் இந்தத் தங்கக் குணத்தான் என்று திகைக்கிறீர்களா?கவிமணியே  அவர் யாரென்று சொல்கிறார்.

                                                       கன்னித்தமிழ் போல் கம்பன் கவிபோல் 

                                                        மன்னும் பொதிகை மலையே போல்–பன்னுநம்

                                                          நாடு மகிழச் சிதம்பரநாத நண்பா       

                                                               நீடுநீ வாழ்க நிலைத்து

    கவிமணியை உலகறியச் செய்த பெருமகனார் தான் இவர்–டி கே  சிதம்பரநாத முதலியார்.இவரை ரஸிகமணி என்றுதான் அழைப்பர் தமிழுலகம். ரஸனையை வாழ்வின் அடிநாதமாய்க் கொண்டு வாழ்ந்த மாமனிதர்.நல்ல கவியென்றால் அதில் மூழ்கித்  திளைத்தவர் அவர்.’உணர்ச்சியோடு சொல் , இசை,கட்டுக்கோப்பு இவைகளோடு ஒத்த உருவத்தில் வந்துவிட்டதென்றாலே கவி; அதுவே அற்புத சிருஷ்டி’ என்று கவிமணியின் பாடல்களைப் பற்றிப் போற்றுவர் டி.கே,சி அவர்கள்

    15tkc

    டி,கே,சி   அவர்களின் புதல்வன் தீத்தாரப்பன்(தீபன்) அவர்கள் அகால மரணமடைந்ததைக் கேட்டு கவிமணி அவர்கள் ஒரு இரங்கற்பா எழுதி அனுப்பியிருந்தார், அதைப் படித்துவிட்டு தன் துக்கத்தையும் மறந்து “இத்தகைய வெண்பா தங்களால்தான் எழுத முடியும் கவீக்கும் உயிரையேக் கொடுக்கலாம் என்பது நம்மரபு.தங்கள் கவி உயிரைக் கொடுத்து வந்த மாதிரியே இருக்கிறது.”என்று அவருக்குக் கடிதம் எழுதினார் .’இதோ அந்தப் பாடல்

                                          எப்பாரும் போற்றும் இசைத் தமிழ்ச் செல்வா !என்  

                                                     அப்பா அழகிய செல்லையா–இப்பாரில் 

                                                                  சிந்தை குளிர  சிரித்தொளிரும்  நின்முகத்தை

                                                                          எந்தநாள்  காண்பேன் இனி.

     டி.கே.சி அவர்கள்  18-8-1881 ல் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீஜயந்தியன்று பிறந்தார்.தென்காசியில் வளர்ந்தார். குற்றாலம்தான் அவரை ரசனை என்னும் அருவியில் மூழ்கச் செய்து அவ்வின்பத்தைப்  பலரும் துய்க்கச் செய்த புண்ணியத் தலம்.வக்கீலுக்குப் படித்த அவர் தமிழ் இலக்கிய ரசனையின் பக்கம் சாய்ந்து அதில் பிரம்மானுபவத்தைக் கண்ட பிரம்ம ஞானி. ஒரு இரத்ன வியாபாரி ரத்தினக் கற்களைச் சோதித்துப் பார்த்து அவற்றினின்று உண்மையான கற்களைத் தேர்ந்தெடுப்பது போல் தமிழ்ப் பாடல்களைத் தட்டிப் பார்த்து பொய்க் கவிதைகளை புறம் தள்ளி உண்மையான பாடல்களைத் தந்த அன்னப் பறவை அவர்.

    தமிழை நினைத்தால் போதும்; தமிழ்ப் பண்பாட்டை, சமய நெறியை,கவியை நினைத்துப் பார்க்க ரசிகமணி நம் எதிரில் நின்று காட்சி கொடுப்பார். தமிழிசை,, நாடகம் ,நடனம்,ஓவியம்,கோவில்,பக்தி இவ்வாறு எல்லாத் துறைகளீலும் அவர் விற்பன்னர்.தமிழ் உரைநடை,தமிழர் வீரம், அவர்தம் வாழ்க்கை ,கொடை, பண்பட்ட உழைப்பு என்று எல்லாவற்றையும்அலசிப் பார்த்த  ஆராய்ச்சியாளர் அவர்.

    நமக்கு முறுக்குச் சுற்றுவதும் இட்டிலி செய்வதும் சாதரணமாக இருக்கலாம்.ஆனால் ரசிகமணியோ ஒரு பெரிய கட்டிடம் கட்டும் அளவிற்கு  முக்கியத்துவம் கொடுத்து  இவற்றை விளக்குவார்.ஏனென்றால் சமையல் செய்வதிலும் ஒரு ரசனை வேண்டும் என்பார்.ஆன்மிகம்,விஞ்ஞானம்,மருத்துவம், பொறியியல்  எதுவாயினும் தமிழில் விளக்க முடியும் என்பார் எப்பொழுதும் நண்பர்கள் சூழ அமர்ந்து தமிழ்ப் பாடல்கள் சொல்லி அவர்களைக் குதூகலப் படுத்துவார்.

                                    சார்ந்தாரை எவ்விடத்தும்

                                         சார்வனவும் சார்ந்தன்பு

                                   கூர்ந்தார்க்கு    முத்தி

                                          கொடுப்பனவும் –கூர்ந்துள்ளே

                                  மூளத்    தியானிப்பார்

                                         முன்வந்து    நிற்பனவும்

                                 காளத்தி    யார்தம்

                                         கழல்

    காளத்தி நாதர்போல் தன்னைச் சார்ந்தோர்க்கு பாடல்களை ரசிப்பதன் மூலம் முக்தியே கொடுத்து விடுவார் நம் ரசிகமணி அவர்கள்.

    கவிதானுபவமே அவரை ஆழ்ந்த தியான நிலைக்கு  இட்டுச் சென்று விடும்.அதனால் கவியில் கடுகளவு பிழை இருந்தாலும் அணு அளவு பிறழ்ந்தாலும் டி.கே,சி அவர்களுக்குத் தெரிந்து விடும்.அதனால்தான் கம்பராமாயணத்தின் பாடல்களைப் படித்து ஆராய்ந்து  தமிழுலகுக்கு அவரால் அளிக்க முடிந்தது .இவரைத் தமிழ்ப் புலவர்கள் சாடினாலும் அதைப் பொருட்படுத்தாது  கம்பன் பாடல்களைப் பிரித்தெடுத்து கம்பனுக்கு மகுடம் சூட்டியவர் அவர்.

    நாயகனைப் பிரிந்து துடிக்கிறாள் நாயகி.மன்மதனே தன்னைத் துன்புறுத்துவதாக எண்ணுகிறாள்.திடீரென நாயகன் வந்துவிட்டான் .அவளுக்கோ எல்லையில்லா ஆனந்தம்.மன்மதனும் நாணிக் கோணி வருகிறான். மன்மதனைப் பார்த்து எக்காளத்தோடு பாடல் பாடுகிறாள்.இதோ அந்தப் பாடல்;

                                    எய்ய வந்த காமா நீ

                                           இங்கு வர வேண்டாம் காண்

                                           உய்ய வந்தானோடு

                                            உறவானேன்-பையவே

                                          தேரை விடு  பூவைமுடி

                                             தின்றுவிடு  மென்கரும்பை

                                           மீனை ஒரு காசாக

                                             வில்

    இந்தப் பாட்டைப் படிப் பாடிப் பார்க்கிறார். ரசிகமணியின்  வகுப்பில் பாடல் படிக்கும் முறையே தனி .ஒவ்வொரு அடியாக பிரித்துப் படிப்பார். முன்னுரையாக  ஒரு கதை வரும்.முடிவில் நமக்குள்    பாடல் போய்விடும். இந்த மாய வித்தை அவரால்தான் செய்ய முடியும்.இது எப்படி எனக்குத் தெரியும் என்று எண்ணுகிறீர்களா?.நான் அவருடைய சீடர் திரு ல.சன்முக சுந்தரம் அவர்களிடம் பாடல் சொல்லக் கேட்டிருக்கிறேன்.அவர் இன்று நம்மிடையே இருக்கிறார்.அவருக்கு வயது 93 ஆகிறது.என் தந்தையும் அவரும் ஒரே சமயத்தில்(1946-ல் ) டி கே சி யிடம் சேர்ந்தனர்.

    மேற்சொன்ன பாடலைப் படிக்கிறார்.சொல் தட்டுகிறது, பிழைகள் நீக்கப் பட்டு புதிய பாடல் ஒன்று துள்ளி வருகிறது

                                                      எய்ய வந்த காமா!

                                                   இனி உனக்கு வேலை இங்கென்!

                                                       உய்ய வந்தான் தன்னோ(டு)

                                                    உறவானேன் –பையவே

                                                      தேரை விட்டு மென்கரும்பைத்

                                                    தின்றுவிட்டுச் செய்ய வந்த

                                                      போரை விட்டுப் பூ முடித்துப்

                                                   போ

    இப்படித்தான் பாடல்களுக்கு  உயிர் கொடுத்தார் ரசிகமணி அவர்கள் இதுதான் அவர் தமிழுக்குச் செய்த தொண்டு.

    விருந்தோம்பலில் பிரம்மானுபவத்தைக் கண்டவர் மாமுனி ரசிகமணி அவர்கள்.அவருடைய இல்லத்தில் விருந்தினர்கள் நண்பர்கள் , உறவினர்கள் குழாம் எப்பொழுதும் இருந்தவண்ணம் இருக்கும். ரசிகமணியின் கவிதானுபவத்தைக் கேட்டு மகிழவே  தமிழ்ப் புலவர்கள் ,அறிஞர்கள்,அரசியலறிஞர்கள் , சாதாரன வேலைக்காரர்கள் என்று பலதரப்பட்டவர்கள் வருவார்கள்.காபிபொடி விற்பவரும் கவர்னர் ஜெனரலும் அவர்முன் சமம்.செவியின்பத்திற்குப்பின்  பசியாற உணவு பரிமாறப்படும். பந்தியிலும் எல்லோரும்  சமமாக உட்கார்ந்திருப்பார்கள்.தினமும் பலர் உண்பார்கள்.திடீரென்று நண்பர்கள் வந்தாலும் அவர் மனைவி பிச்சம்மாள் அவர்கள் மனம் சலியாமல் மகிழ்ச்சியுடன் உணவு தயாரித்து பரிமாறுவார்கள். எல்லோரும் எவ்வாறு உண்கிறார்கள்  என்று பார்த்துவிட்டு பலவகை உணவுகளை  எவ்வாறு ரசித்து உண்ண வேண்டும் என்று பிரசங்கமே செய்வார். ஏனெனில் வாழ்க்கையே ஒரு ரசனையான அனுபவம் தானே என்பது அவர் கருத்து. வாழ்க்கையில் ஒரு லயம் இல்லையெனில் அது வாழ்க்கையாகாது, மாடு தண்ணீர் குடிப்பதுபோல பாயாசத்தை குடிக்கக் கூடாது; அதை ரசித்து  ரசித்து இலையிலிருந்து எடுத்து உண்ண வேண்டும் என்பார்.இடையிடையே பாடலும் சொல்லுவார்.உண்பதை மறந்து அனைவரும் ரசிப்பார்கள்.அப்பொழுது அம்மையார் அவர்கள் மற்றொரு பாடல் சொல்லுங்கள். டிபன் நேரமும் வந்து விடும். எல்லோருக்கும் டிபன் பரிமாறிவிடலாம் என்பார்கள்.இத்தகையதொரு குதூகலமான குடும்பத்தைப் பார்த்திருக்கிறீர்களா ?தான் பெற்ற இன்பம் மற்றவர்களும் பெற வேண்டும் என்று உண்மையாக நினைத்தவர் ரசிகமணி அவர்கள்.இது பிரம்ம ஞானிகளின் நிலைதானே.

    இலக்கியத்தை ரசித்தவர்கள் பலர் இருக்கலாம். இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதையே தொழிலாகக் கொண்டிருக்கலாம்.ஆனால் ரசணையின் உண்மைப் பொருளை உனர்ந்து தானே மெய்மறந்து ரசித்து ஆழ்ந்த தியான நிலைக்குச் சென்ற ஞானிதான் இந்த ரசஞ்ஞானி.ரசிகமணியும் அவரது சீடர் திரு.ல.சண்முக சுந்தரம் அவர்களும்  தென்காசியில் ஒரு வீட்டிற்குச் சென்று அந்த வீட்டு நபரை அழைக்கிறார்கள்.அவர் வரவில்லை.ஆனால் அவர்கள் இருவரும் வீட்டுத் திண்ணையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து பெசிக் கொண்டிருந்தார்கள்.அரைமனி நேரங்கழித்து வந்த அந்த வீட்டு நபர் இவர்கள் இருவரையும் பார்த்து  சிரித்துவிட்டு உள்ளே சென்று விட்டார்.மேலும் அரைமணிநேரம் காத்திருந்து விட்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.சிறிது தொலைவு சென்றபின் சண்முக சுந்தரம் அவர்கள் ரசிகமணியிடம்   ”என்ன அநியாயம் அவன் உங்களை மதிக்கவில்லை; சும்மா அவன் வீட்டில் அமர்ந்து விட்டு வந்ததன் நோக்கமென்ன? என்று கேட்டார்.அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை;என்னை நகையாடிக் கொண்டிருந்தான்;அவன் என்னை அவமானப் படுத்த வேண்டும் என்று எண்ணினான். அவனுக்கு ஆனந்தத்தைத் தரலாம் என்றுதான் வந்தேன் என்றார். நகையாடியவனுக்கு இப்படியொரு மரியாதையா என்று நீங்கள் நினைக்கலாம்.கவர்னர் ஜெனரல் , ஜவஹர்லால் நேரு, கல்கி, பெரியார் .உ,வே சா போன்ற  பெரிய மனிதர்களுடன் பழகிய மாமேதை இந்தச் செயலைச் செய்யலாமா? என்று நீங்கள் நினைக்கலாம். ”தம்மை வெறுத்தாரை தாம் உகத்தல்என்பது ஞானிகளின் நிலை.அந்த நிலையை உணர்ந்தவர் ரசிகமணி அவர்கள்.அந்த நிலையை அவருக்கு அளித்தது ரசனைதான்,  இத்தகைய பண்பு துறவிகளிடத்திலும் முனிவர்களிடத்திலும் நாம் எதிர்பார்க்கலாம்.ஆனால் ஒரு இலக்கிய வாதியிடம்  நாம் காண முடியுமா. அதுதான் ரசிகமணியின் உன்னத பண்பு.

    வழக்கறிஞருக்குப் படித்தவர் ரசிகமணி அவர்கள். ஆனால் வழக்கறிஞர் தொழில் பார்க்கவில்லை.பிரம்ம ஞானி அல்லவா அவர் .பொய் சொல்லத் துணியாது அவர் மனம்.குடும்பச் சொத்து  டி.கே.சி யின் பொறுப்பில் இருந்தது.சொத்து பிரிக்கப் படவில்லை.அதனால் அவரை எதிர்த்து அவர் தமையனார் மகன்  சொத்து வழக்கு ஒன்று பதிவு செய்தார்.வழக்கு விசாரணைக்கு வந்தது.ரசிகமணி அவர்கள் நீதிபதிமுன் நின்று”சொத்துக்களின் மீது எனக்கு நாட்டம் இல்லை.என் சகோதரன் அவர் பங்கை கேட்பது நியாயம்.என்னிடம் நேரிடையாகக் கேட்டிருக்கலாம்அவர்கள் சொத்து முழுவதையும் அவரிடம் ஒப்படைத்து விடுகிறேன்.அவர் எடுத்துக் கொண்டது போக மீதியை நான் எடுத்துக் கொள்கிறேன்”என்று சொன்னார்.நீதிபதி அவர்கள் ஆச்சரியப்பாட்டார், நீதிமன்றமே அதிசயித்தது இக்காலத்தில் இம்மாதிரி ஒரு மனிதனா?என்றார் அவர்.இப்பண்பு அவருக்கு ரசனை அளித்த கொடை

    வாழ்க்கையை ரசிக்கப் பழக வேண்டும். அணு அணுவாக ரசிக்க வேண்டும்.அந்த ரசனையை பள்ளிகள் தருவதில்லை.பாடத்தை மாணவர்கள் தலையில் திணிக்கிறார்கள் என்பாரவர். அது இன்றும் நிகழ்கின்ற விஷயம்தான்.அதனால் தன் மகன்களுக்கு வீட்டிலேயெ கல்வி போதித்தார்.பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கும் தன் பிள்ளைகளுக்கும் புரிதலில் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக் காட்டுவார். மகாத்மா காந்தி, வினோபா,நேரு. போன்ற அரசியல்வாதிகளைச் சந்தித்தாலும் தமிழ்க் கவி இன்பத்தை அவர்களுக்கு அளித்து தமிழின் பெருமையை விளக்காமல் இருக்கமாட்டார்.இவரது கம்ப ராமாயண ரசனையில் மோகித்து வீழ்ந்தவர் இராஜாஜி அவர்கள்.கல்கி அவர்களை தமிழர்களுக்கு அறிமுகப் படுத்தியவர் ரசிகமணிதான்.”பண்பாடு’,’வாய்க்குருவி’என்ற சொற்களைஅறிமுகப் படுத்தியவர் இவர்தான்.

    இக்கட்டுரையை எழுதியதன் நோக்கம் தமிழகத்தில் இத்தகையதொரு அரிய மாணிக்கம் தமிழை வளர்த்தார் என்று நம் இளைஞர்களுக்கு தெரிய வேண்டு மென்பதே.  இசை,இயல்,நாடகம் முதலிய மூன்று துறைகளிலும் தமிழ் சிறக்க வேண்டும் என்று தமிழ்  இசை ஆராய்ச்சி மன்றத்தை நிறுவிய முதல் தமிழர்.கம்ப இராமாயணம் உலகமெங்கும் பரவ வேண்டும் என்று முதன் முதலில் கம்பன் கழகத்தை  அமைத்தவர்.வட்டத்தொட்டி என்ற அமைப்பை உருவாக்கி வட்டமாக பல அன்பர்களை அமரவைத்து தமிழ்ப் பாடல்களில் தான் பெற்ற அனுபவத்தை அவர்களிடம் பரிமாறி ஆனந்தத்தில்  திளைக்க வைத்த மாமுனிவர். எதையும் நாம் உண்மையாக உணர்ந்து உண்மையாக செயல்பட்டால் அது உயரிய ஆன்மநிலைக்கு  இட்டுச் செல்லும்  என்பதற்கு டி.கே,சி யின் வாழ்க்கை ஓர் எடுத்துக் காட்டு மரணத்தையும் ஆனந்தமாக அணைத்துக் கொண்டவர். மரணிக்கும் தருவாயில் பிற்பகல் 12 மணி வெய்யிலை அவர் குளிர்ந்த நிலவொளியாக உணர்ந்து மரணத்தைத் தழுவினார் 1954ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் நாள்.தங்கக் குணத்தானின் ரசானுபவத்தை நம் தமிழுலகம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே ரசிகமணியின் அன்பர்களின் விருப்பமாகும்.

    Share
  • ரசனையின் சிலிர்ப்பு!…

    தி. சுபாஷிணி

    tkc1881 ஆம் ஆண்டு, ஆவணித் திங்களில், ரோகிணி நட்சத்திரத்தில் பூ ஒன்று தோன்றியது. இப்பூ பூத்து, தமிழ்க்கவியின்பத்தில் திளைத்து, எது கவியென கண்டுகொண்டு களித்தது. கம்பனைக்கண்டு குதூகளித்தது. கும்மாளம் போட்டது. கம்பனின் இதயம் புகுந்து கம்பனாகவே மாறிவிட்டது. பழந்தமிழ் பாடல்களையெல்லாம் வெளிக்கொணர்ந்து, படித்து படித்து ரசித்து சிலிர்த்தது. அச்சிலிர்ப்பில் தமிழ்ப்பண்பாடு மலர்ந்தது. சமயம், தமிழிசை, நாடகம், நடனம், ஓவியம், சிற்பம், கோயில், பக்தி என அனைத்து விடியல்களையும் அறிந்து பாராட்டியது. பாராட்டப் பாராட்ட ஆனந்தம் பெருகியது. இதை தன்னைச் சார்ந்தவர்களுக்கு அள்ளி அள்ளி அளித்தது. அறிஞர், அல்லாத பாமரன், பணக்காரன், இல்லாதவன் என பாகுபாடில்லது, தன்னிலத்தில் இருத்தி, இன்னமுதூட்டி தங்கு தங்கு எனத் தங்கவைத்து, ரசனையின்பத்தை பொதிகைச் சாரலாய்ப பொழியச் செய்தது.

    இப்பூ, ‘தமிழின்பத்தால் அவரது மீசையும் முறுவல் சிந்தும்‘ எனப் போற்றப்படும் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் ஆவார். கிருஷ்ணன் அவதரித்த ரோகிணி நட்சத்திரப் பூ! இவ்வாண்டு இந்த ரசனை மலருக்கு 132 ஆவது பிறந்த நாளாகும்.

    ஆன்றோர்களும் சான்றோர்களும் அடங்கிய வாசகர் வட்டம் கணையாழிக்கு உண்டு என்பதை நான் நன்கு அறிவேன். சாகித்ய விருதோடு இயல் விருதையும் தாங்கி நிற்கும் சீரிய எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் கவலையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். “விழாவிற்கு வந்திருக்கும் விருந்தினரை வரவேற்று, முதலில் கொடுக்கும் குளிர்பானமகிய எலுமிச்சை பானத்தில் பழரசத்திற்கு பதிலாக செயற்கை மணத்தை கலந்து, பொய்யான பானத்தை மெய்யான பானம்போல் கொடுக்கின்றோம். அனால் உணவு அறிந்தி கை கழுவுகையில், கழுவும் நீர்கே கிண்ணத்தில் எலுமிச்சம் பழத்துண்டை வைக்கின்றோம். நாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்“ என்பதுதான் அவரது கவலை. இக்கவலையின் வீச்சு என்னை 132 ஆண்டுகளுக்கு முன் போகவைத்துவிட்டது.

    தமிழ் பண்பாட்டின் உன்னதத்தை உணர்ந்து தன் வாழ்வியல் ஆக்கி, தன சமகாலச்  சான்றோர்களையும்  ஆளுமைகளையும் தன் பக்கம் ஈர்த்த பூவாய் அவதரித்த ரசிகமணி டி.கே.சிநினைவில் என்னை அமரவைத்துவிட்டது.

    1930 &ஆம் ஆண்டு என்றே சொல்லலாம். அப்போது சென்னையில், தி.நகரிலுள்ள பசுல்லா சாலையில் ஒரு பங்களா வீட்டில், கீழ்பகுதியில் கல்கி தங்கி வசித்து வந்தபோது, மாடிப் பகுதியில் திரு.ராஜாஜி அவர்கள் வசித்து வந்தார்.

    அப்போது, பிரபல வக்கீலும், நீதிபதியுமான ஸ்ரீனிவாச அய்யங்கார் அவர்களது வீட்டில் கம்பராமாயண வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அலுவலகம் செல்பவர்களின் வசதிக்காக, வகுப்பு மாலை 7 மணிக்கு துவங்கும். வகுப்பு முடியும் நேரம் இரவு 11 மணி ஆகிவிடும். நாள் தவறாது கல்கி இந்த வகுப்பிற்கு சென்று வந்தார். தினந்தோறும் மாலையில் 6 மணிக்குச் செல்லும் கல்கி, வீடு திரும்ப பன்னிரண்டு மணிவரை ஆவதை ராஜாஜி அவர்கள் கவனித்து வந்தார். சில நாட்கள் கழித்து ராஜாஜி கல்கியிடமே இதுபற்றி விசாரித்தார். வேறு ஏதாவது தப்பு காரியம் செய்கிறாயா, என்று நேரடியாகவே கேட்டு விட்டார்.  துளியும் மறைக்க முடியாத நிலையென உணர்ந்த கல்கி, “வக்கீல் ஸ்ரீனிவாச அய்யங்கார் வீட்டில் ஒருவர் தினந்தோறும் கம்பராமாயண வகுப்பு நடத்துகிறார். அது மிகவும் அருமையாக இருக்கின்றது” என்று கூறவே தன்னையும் அங்கு அழைத்துப் போகுமாறு ராஜாஜி கல்கியிடம் வேண்டினார். அன்றிலிருந்து கம்பராமாயண வகுப்பிற்கு இருவரும் இணைந்து போகத் தொடங்கி விட்டனர். 1937 ஆம் ஆண்டு ராஜாஜி அவர்கள் சென்னை மகாண முதல்வராய் பொறுப்பேற்றார். அப்போதும் கம்பராமாயண வகுப்பை மறக்கவில்லை. விடாது சென்றார். நாட்டின் பணிகளைச் செய்து விட்டு மிகவும் களைத்து வரும் இவருக்காக வக்கீல் அவர்கள் கட்டில் ஒன்று போட்டு வைத்திருந்தார். வேலைப்பளுவின் காரணமாக அதில் படுத்துக்கொண்டே கம்பராமாயணத்தை தொடர்ந்து அனுபவித்தார்.

    ஆம்! உணர்வின் உன்னதமாகிய இதய தத்துவமாகிய டி.கே.சியையும், அறிவின் ஆளுமையாகிய ராஜாஜியையும் இணைத்தவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள். இந்த இணைப்பினால் இலக்கியம், இசை, கலை, அரசியல் ஆகிய துறைகளில் வரலாறு போற்றும் பல விளைவுகள் விளைந்தன. ராஜாஜியின் நட்பினால் டி.கே.சிக்கு பல பெரியவர்களின் உறவும், மதிப்பும் கிடைத்தன.

    சென்னைக்கு மகாத்மா காந்தி வந்திருந்த சமயம். இராஜாஜி அவர்கள் தன்னுடன் தன் நண்பர் தி.கேசியை அழைத்துக் கொண்டு அவரைப் பார்க்கச் சென்றார். அப்போது காந்திஜியிடம் ராஜாஜி, “தன் வாழ்வின் 50வது வயதில் சந்தித்தவர் நண்பராகவும், அதிலும் மிகவும் அணுக்கமான இதயபூர்வமான நண்பராகவும் இருக்க முடியுமா? நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று கேட்க, மிகவும் புரிதலோடு மகாத்மா அவர்கள், “ஓ! பார்த்திருக்கேனே! இதோ! என்முன்! உங்களோடு!” என்று சட்டென்று பதிலளிக்கிறார். “ஆமாம்! என் 50 ஆவது வயதில் சந்தித்த இவர், இதுவரை நான் சந்தித்த, கிட்டிய நண்பர்களைக் காட்டிலும் எனக்கு நெருங்கிய நண்பர்” என்று ஆமோதித்தார். இப்படித்தான் அவரை அறிமுகப்படுத்தினார் ராஜாஜி.

    மகாத்மா காந்தி தேச சேவைக்காகத் தன்னை முற்றிலும் அர்ப்பணித்தார். அவ்வமயம் எல்லாவகைப் பற்றுக்களையும் எளிதாக ஓரிரு நாட்களில் துறக்க முடிந்தது. அவருக்கு இலக்கியப் பற்றைத் துறக்க ஒரு வாரம் ஆகியது. ராஜாஜி அவர்களின் மகன் நரசிம்மனிடம் காந்திஜி அவர்கள், “உன் அப்பாவிடம் இலக்கியப்பற்று அதிகம் இருக்கின்றது. அதைத் துறக்கச் சொல்” என்றாராம். ஆனால் சில வருடங்கள் கழித்து, ராஜாஜி தன் நெருங்கிய நண்பரை காந்தியிடம் அழைத்துச் சென்றார். அப்போது அந்நண்பர் “கம்பராமாயணம்” பாடல் ஒன்றைப் பாடி ஆங்கிலத்தில் விளக்கம் கூறினார். அவ்வளவுதான் அந்த கணமே காந்திஜியின் இலக்கிய சன்னியாசம் கழன்று விழுந்து விட்டது.  நான் கம்பராமாயணத்தை அனுபவிக்க வேண்டும் என்று வேண்டினாராம். அதற்கு நீங்கள் தமிழ் கற்க வேண்டும் என்று அந்நண்பர் பதில் கொடுத்தாராம். காந்தியின் இலக்கிய சன்னியாசத்தை துறக்க செய்து  விட்டார் ரசிகமணி.

    உயர்ந்த பதவிகளில் இருந்த அதிகாரிகள், நீதிபதிகள், அமைச்சர்கள் என அனைவரும் டி.கே.சியுளன் பழகுவதை தமக்கு ஒரு பெருமையென நினைத்தனர். எனினும் அவருடைய கம்பராமாயண திருத்தங்களால்  ஏற்ப்பட்ட எதிர்வினைகளால் டி.கே.சி மனம் நைந்து போனார். அச்சமயத்தில் ராஜாஜியின் செல்வாக்கும் அவரது நட்புக்குழாத்தின்  அவரது இதயத்திற்கு இதமாக இருந்தன.

    டி.கே.சியின் நட்பினால் ராஜாஜிக்கு ஆன்ம அமைதியும், ஆனந்தமும் கிடைத்தன. அரசியல் பரபரப்பில் வேஷதாரிகளுக்கும், ஆஷாடபூதிகளுக்கும் இடையே பெற்ற சொல்லவொண்ணாத வேதனையெல்லாம்  டி.கே.சி என்ற அன்பு தத்துவத்தில் மூழ்கி மூழ்கி மறக்க கற்றுக்கொண்டார். தம்மிடத்தில் ஒருவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காத டி.கே.சியை போன்ற தன்னலமற்ற உத்தமர்களோடு பழகும்போது, ராஜாஜி தம்முடைய முகமூடியையும், கறுப்பு கண்ணாடியையும் கழற்றி எறிந்துவிட்டு, அன்பை கொட்டிக்கொண்டு இருப்பார்கள்.

    அன்பு தத்துவமாக திகழ்ந்த ரசிகமணி டி.கே.சியைப்பற்றி ராஜாஜி கூறுவதை நாம் பார்க்கலாம்

    ராஜாஜி::

    ராஜாஜி அவர்கள் குற்றாலத்திற்கு வந்த வருடம் 1956 ஆம் ஆண்டு. அங்கு தங்குகிறார்கள். அவர்களுடன் இணைந்து மற்றவர்களும் வெளியில் நடக்கிறார்கள். ஐந்தருவிக்கு போகும் வழியில் மலை ஏறத் தொடங்குகிறார்கள். சிற்றருவிக்கும் மேலே சற்று தொலைவில் பெரிய பாறைகளால் ஆன சமவெளி இருக்கிறது. அப்படியே அங்கு தன் தோள் துண்டை உதறி விரித்து அமர்ந்து விடுகிறார். நேரமோ வெயில் கொளுத்தும் மதியம். நினைவு அலைக் குமிழுக்குள் ஆழமாகச் சென்று விட்டார். ராஜாஜி அமர்ந்த கோலம் & அப்படியே சம்மணம் போட்டு ஒரு யோகிபோல் அமர்ந்துவிட்டார்.

    டி.கே.சியும் ராஜாஜியும் சந்திக்க காரணமாயிருந்தவர் ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள். ராஜாஜியின் 50 வயதில்தான் இந்நட்பு மலரத் தொடங்கியது. டி.கே.சியை காந்திக்கு அறிமுகப்படுத்தினார் ராஜாஜி. அப்போது காந்தியிடம் ராஜாஜி, “டி.கே.சி எனக்கு 50 வது வயதில் நண்பர். நண்பரைவிட காதலர்” என்றே அறிமுகப்படுத்தினார். ராஜாஜியோ அறிவின் கொடுமுடி. டி.கே.சி அவர்களோ உணர்வின் உன்னத உச்சம். அறிவு, உணர்வு இரண்டின் உச்சங்களின் நட்பு அக்காலத்தில் வரலாறாக மாறியது. ராஜாஜிக்கு அரசியலில் காந்தி குரு என்னில் இலக்கியத்திற்கு டி.கே.சிதான் குருவாக இருந்தார். அரசியல் வேலைகளால் மனம் சோர்வாய் இருக்கும்போதெல்லாம் டி.கே.சியுடன் வந்து தங்கிவிடுவார் குற்றாலத்தில். மனதை சரி செய்துகொண்டு, புத்துணர்ச்சி பெற்றுத் திரும்புவார். இலக்கிய சர்ச்சைகளும், அறிவார்த்தமான, தத்துவார்த்தமான உரையாடல்களும் இவர்கள் இடையே ஏற்படும்போது, கூட இருப்பவர்களுக்கு நல்ல சிந்தனை விருந்தாக இருக்கும் என்று கூறுவார்கள் நீதிபதி எஸ்.மகராஜன் அவர்கள். கலையை அனுபவித்து, ஆனந்தத்தை அனுபவிக்கும் அனுபவத்தை டி.கே.சி. அவர்கள் ராஜாஜிக்கு நல்கினார். பல இலக்கியச் சான்றோர்கள் அவருக்கு டி.கே.சியால் கிடைத்தனர். டி.கே.சிக்கு ராஜாஜியின் அரசுத் தலைவர்கள் மகாத்மா காந்தி, நேரு, வினோபா இன்னும் பல பெரியோர்களின் நட்பு கிடைத்தது. “தமிழிசை இயக்கம்” நடத்தும்போது, டி.கே.சியை பல வித்வான்கள் கண்டனம் தெரிவித்தனர். அவரது இராமாயண நூலை எரித்தனர். ஆனால்அவருக்குத் துணையாக ‘ராஜாஜி’ நின்றார். கல்கியில் இதுபற்றிக் கட்டுரை எழுதினார். அதுபோல், காங்கிரஸ் கட்சியில் பெருந்தகையார் ராஜாஜி பற்றி மாற்றுக் கருத்து தெரிவிக்கும்போது, ராஜாஜியின் நல்ல இதயத்தையும் பண்பையும் பற்றி ‘பத்தரைமாற்றுத் தங்கம்’ என தலைப்பிட்டு கட்டுரை எழுதி, தமிழ் மக்களுக்குப் புரிய வைத்தார் டி.கே.சி. அவர்கள். அவர்களது நல்நட்பின் பண்பும் பயனும் அது.

    இந்தியா விடுதலை அடையும்முன் இடைக்கால அமைச்சரவையில் ராஜாஜியும் அங்கம் வகிக்க வேண்டும் என விரும்பி நேரு, ராஜாஜியை அழைத்தபோது, அவர் டி.கே.சியுடன் குற்றாலத்தில்தான் இருந்தார். இங்கிருந்து தில்லி கிளம்பினார். 1952ல் காமராஜர் பொதுத்தேர்தலின் போது  நிலைமையைச் சமாளிக்க ராஜாஜி தேவை என்று தீர்மானித்து காமராஜர் குற்றாலத்துக்கு வந்து, ராஜாஜியை அழைத்துச் சென்றார். தில்லியின் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்று இருந்தபோதும் ராஜாஜியின் உள்ளம் முழுவதும் டி.கே.சி. நினைவாகத்தான் இருந்தது என்பதை அவரது ஏக்கம் நிறைந்த கடிதங்கள் கூறின.

    ‘முதல் தாம்பூலம்’  என்னும் கட்டுரை மகாபாரத நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதினார்  ராஜாஜி அவர்கள். அதைப் படித்து ரசித்த டி.கே.சி. அவர்கள், ராஜாஜிக்கு தம் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். அதில் “மகாபாரதக் கதை முழுவதையும் நீங்கள் தமிழ் மக்களுக்கு எழுதலாமே” என்ற யோசனையையும் வழங்கி இருந்தார். அதுதான் ‘வியாசர் விருந்து’ என்று மலர்ந்தது. பின்னாளில் “சக்ரவர்த்தித் திருமகன்’ என இராமாயணத்தையும் எளிய தமிழில் ராஜாஜி எழுதினார்கள். இவ்விரு செயல்களும் தன் பணிகளிலேயே சிறந்த பணியும் மனதிற்கு திருப்தி அளித்தன என்பதையும் அவர் உணர்ந்தார். வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் டி.கே.சியைப் பற்றிப் பேசிப் பேசி  நட்பின் ஆற்றாமையை தீர்த்துக்கொண்டார் ராஜாஜி. எதற்கும் கலங்காத அறிவின் சிகரம், தன் நண்பர் அமரரானபோது நிலை குலைந்துதான் போனார். இதோ! டி.கே.சியின் அலைகள் அந்தப் பொதிகை மலைத் தென்றலாய் வருடும் இன்பத்தை  அனுபவித்துக் கொண்டு, அந்தப் படபடக்கும் வெய்யிலில் ஆனந்தத்தின் உச்சத்தில் அமர்ந்திருக்கிறார்.  ஏனையோர் அவராக அதிலிருந்து வரட்டும் என்று அவர் முகம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். நண்பர்களே! அறிவும் அன்பும் கலக்கும் அனுபவம் அங்கு நடந்து கொண்டிருக்கின்றது. நண்பர்களே! எப்போது நீங்கள் குற்றாலம் சென்றாலும் பொதிகைத் தென்றல், அந்நல் நட்பின் பண்பைப் பகரும். உணர்வீர்கள் நண்பர்களே!

    பூரணஹரியும்  பூரண ரசிகமணியும்::

    சென்ற திங்கட்கிழமை கண்ணன் பிறந்த நாள். அந்தத் திங்கட்கிழமையே தமிழ்க் கவிதை தரும் மகிழ்ச்சியின் ரகசியம். தமிழ் வசன நடை முன்னேற்றத்தின் ரகசியம். தாளமும் ராகமும் சேர்ந்த நல்லிசையின் ரகசியம். தெய்வ பக்தி தரும் நிம்மதியின் ரகசியம். அன்பின் பரம மகிழ்ச்சி, வேஷங்களின் பொய்ம்மை, அனைத்தும் நன்றாகக் கண்ட பூரண ரசிகமணி டி.கே.சி. பிறந்த நாளும்,

    ஹரியின் பூரணாவதார கண்ணனின் ஜன்ம நட்சத்திரமும், டி.கே.சியின் ஜன்ம நட்சத்திரமும், ஒன்றாய்ச் சேர்ந்த திருவிழாவை மகிழ்ச்சியுடன் சென்ற திங்கட்கிழமை கொண்டாடினோம். இந்தத் திருவிழாக்கள் ஞானமும் அன்பும் நாட்டில் வளரச் செய்யும்.

    கண்ண பகவான் ரோஹிணி நட்சத்திரத்தில் அவதரித்தான். ரோஹிணி நட்சத்திரக் கூட்டம் சகடத்தைப்போல் இருப்பதாகக் கண்டு அதற்குப் பெயரும் சகடம் என்றே சொல்வது வழக்கம். வண்டியின் முக்கிய பாகம் அச்சு மரம். அச்சு மரத்துக்கு வடமொழி ‘அக்ஷ’. அதன் கீழ் பிறந்தான் கண்ணன்  என்று விஷ்ணுவுக்குப் பீஷ்மாச்சாரியார் தந்து பாடிய ஆயிர நாமங்களில் ‘அதோகஜ’ என்பதும் ஒன்று. அதாவது அச்சு மரத்தடியில் அவதரித்தான் என்று.

    இந்த அச்சு மரத்தடியில் மற்றொருவர் அவதரித்தார். தமிழ்க் கவிக் காதலர் டி.கே.சி. என்று பெயரைப் பெற்ற மகான் சிதம்பரநாத முதலியார் அவர்கள். இவர்தான் ‘கல்கி’ கூட்டத்தின் குலபதியாக இருந்து பல்லாண்டு அந்தப் பத்திரிகையையும், அதை நடத்தியவர்களையும், படிப்பவர்களையும் ஆசீர்வதித்து வந்தார். அவரைக் கல்கி மறக்கமுடியுமா? சிரீஜயந்தி என்றால் கண்ணன் பிறந்தநாள். டி.கே.சி. பிறந்தநாள் என்றும் தமிழர் கொண்டாடும் நாள்.

    பூரண ஹரியும் பூரண ரசிகமணியும் (ரசிகமணி கட்டுரைகள், மித்ர ஆர்டிஸ் கிரியேஷன்ஸ் 32/9 கஷ்காடுகாரை, சென்னை 24& முதற்பதிப்பு &2004.

    Share
  • பெயரற்ற பிரியம்

    தி. சுபாஷிணி

    வழக்கத்திற்கு மாறாக சுந்தரம் பெரியப்பாவின் வீடு மிகவும் சுத்தமாக, பிரகாசமாகத் தெரிந்தது சுப்ரமணியத்திற்கு. பெரியப்பாவின் வீடு இரு வாசல்களுடன், மூன்றடி உயரத்தில் காம்பவுண்ட் சுவர் கொண்ட வீடு.  வீட்டின் முன்னும் பின்னும் மரங்களும் செடிகளும் சுதந்திரமாய் வளர்ந்திருக்கும்.  கொடுக்காய்ப் புளி மரத்தின் இளஞ்சிவப்புக் காய்களுக்காக வரும் கிளிகள் சந்தோஷமாய் வந்து போகும். வாதாமரங்களில் அணில்கள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும். காகங்களின் கூட்டங்கள் பெரியப்பாவிற்கு காலத்தைக் கூறிக் கொண்டிருக்கும்.  வீடு சுற்றிலும் பழுப்பு இலைகளும் காய்ந்த பூக்களும், கனிகளும் கலந்து கிடந்து ஒரு தனி அழகை அளித்துக் கொண்டிருக்கும்.

    ஆனால் இன்று…! இருவாசல்களும் அழகாய்ப் பெருக்கிக் கோலமிட்டிருந்தது. இரண்டாவது வாசல் கதவு திறந்திருந்தது. அதன் வழியே சூரியன் தாராளமாகச் சென்று கொண்டிருந்தான். அன்றைய தினம் காலை வெய்யில் வீட்டையே பிரகாசமாக்கிக் கொண்டிருந்தது. சுப்ரமணியம் ஒரு கணம் எல்லாவற்றையும் நின்று அனுபவித்துவிட்டு, பெரியப்பாவின் வீட்டிற்குள் நுழைந்தான். அன்று வந்த தினசரிகள் அழகாய் மேசை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பெரியப்பாவைக் கூப்பிட யத்தனித்தான் சுப்ரமணியம்.

    அதற்குள், “அடடே! சுப்ரமணியமா? வாப்பா! வா! நீ வந்து பல நாட்கள் ஆகிவிட்டனவே!” என்று கூறிக் கொண்டே அவனுக்கு ஒரு நாற்காலியைப் போட்டுவிட்டுத் தன் நாற்காலியில் அமர்ந்து கொண்டார் சுந்தரம்.

    “ஆமாம் பெரியப்பா! கிட்டதட்ட இரு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இங்கு வந்து, வருடக் கடைசியல்லவா! ஆடிட்டிங்கு ஒவ்வொரு ஊராய்ப் போனதில் நாட்கள் கடந்ததே தெரியவில்லை பெரியப்பா! நேற்று இரவு தான் வீடு வந்து சேர்ந்தேன். வீட்டில் வள்ளி தான் உங்களை உடனே பார்த்து வருமாறு கூறினாள். அவளுக்கும் இரண்டு சிறுகுழந்தைகளை வைத்துக் கொண்டு, உங்களைப் பார்க்கவே வரமுடியவில்லையாம். மிகவும் வருத்தப்பட்டாள் பெரியப்பா!  சின்னவனுக்கு உடம்பு இலேசாக சுரம் போலிருக்கு இல்லாவிட்டால் அவளும் உங்களைப் பார்க்க என்னுடன் வந்திருப்பாள்” என்று மனம் வருந்திக் கூறினான்.

    “அப்புறம்! எப்படிப் பெரியப்பா இருக்கிறீர்கள்!” என்று சுப்ரமணியம் வினவ,
    “அதுதான் நீ வந்துட்டாயே, எனக்கு சந்தோஷமாக இருக்கிறது” என்று பெரியப்பா சொல்லி முடிப்பதற்குள், ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியொருத்தி நல்ல வாசனையான மோரைக் கொணர்ந்து வைத்தார்கள்.

    அந்த இளம் வெய்யில் நேரத்திற்கு அது மிகவும் இதமாக இருந்தது சுப்ரமணியத்திற்கு. அவனுடைய மனம் இந்த பெண்ணின் இருப்பை இரண்டாவது அதிசயமாய்ப் பார்த்தது. சுந்தரம் பெரியப்பாவின் வீட்டுப் பிரகாசத்திற்குப் பொருள் புரிந்துவிட்டது.

    சுந்தரமும், சுப்ரமணியம் மோர் குடிக்கும் வரைக் காத்திருந்தார்.  பின், ஊர் நிலவரம், குடும்ப நலம், அலுவலக சூழ்நிலை, அரசியல் என்று பேச்சு போய்க் கொண்டிருந்தது. சுப்ரமணியத்திற்கு செல்வி ஒரு சில சாமான்கள் மதிய சாப்பாடு தயாரிக்க வாங்கிவரச் சொன்னது நினைவுக்கு வரவே, சுப்ரமணியம் பெரியப்பாவிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினான். சுந்தரமும் வாசல்வரை அவனை வழியனுப்பினார். சுந்தரமும் மோர் தந்த மகராசியை அறிமுகப்படுத்தவில்லை,  சுப்ரமணியமும் அவரிடம் கேட்வில்லை. இயல்பாகவே, சுப்ரமணியத்திற்கு தனக்கு எவ்வளவு நெருக்கமாய் இருந்தாலும் அவர்கள் விஷயத்தில் தானாகப் போய் எதுவும் கேட்கமாட்டான்.  அவர்களாகச் சொன்னாலும் கேட்டுக் கொள்வதோடு சரி. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு என்று தெரிந்து இருப்பவன் சுப்ரமணியம்.

    சுப்ரமணியம் வந்து போனதிலிருந்து சுந்தரத்திற்கு அவனது நினைவாகவே இருந்தது. தன் நாற்காலியில் வந்து அமர்ந்து தினசரியை கையிலெடுத்து ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினார்.  அவரது நினைவுகளும் பக்கம் பக்கமாய் திரும்பத் தொடங்கின.

    கல்லூரிப் படிப்புத் தொடங்கும் காலத்தில், சுப்ரமணியத்தின் சகோதரர்கள், நண்பர்கள் அனைவரும் ஸயின்ஸும் மேத்ஸும் எடுத்துப் படித்தனர். சுப்ரமணியம் மட்டும், சுந்தரம் கூறினார் என்பதற்காக ‘காமர்ஸ்’ எடுத்துப் படித்தான்.  அவனுக்கு அந்தப் பெரியப்பாதான் ரோல் மாடல். கல்லூரிக்கு செல்லும் நேரங்களைவிட்டால், மீதி நேரங்கள் எல்லாம் இவர் வீடே கதியென்று கிடப்பான். சுந்தரத்தின் கிளையண்ட்ஸ் எல்லோரும் இவனது நண்பர்கள். வசந்தா பெரியம்மா இவனுக்கு அம்மாவிற்கும் மேல் என்றுதான் கூற வேண்டும்.

    அவன் வீட்டிலிருந்து ஆள் வந்தால்தான் இவனே தன் வீட்டிற்குக் கிளம்புவான். அதுவும் மனசே இல்லாமல்தான்.  பெரியப்பாவின் வழிகாட்டுதலில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஆடிட்டர் தேர்விலும் வெற்றி பெற்று பெயர் சொல்லும்படியான ஆடிட்டராகி விட்டிருந்தான் இன்று. சுப்ரமணியத்திற்கு, வசந்தா பெரியம்மாவின் உறவுக்காரப்பெண் செல்வியை மணம் முடித்து வைத்ததும் சுந்தரம் பெரியப்பா தான். இதில் சுப்ரமணியத்திற்கு பெருமையெனில், அவனது பெற்றோருக்கு பெரும் மகிழ்ச்சி.

    காலத்தின் வேகத்திற்கு வசந்தா பெரியம்மாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. சுப்ரமணியம் தன் கணவரைப் பார்த்துக் கொள்வான் என்னும் நம்பிக்கையில் விரைவில் சிவபதம் அடைந்து விட்டாள். அவளது நம்பிக்கையை இன்றளவும் சுப்ரமணியம் காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கின்றான். சுந்தரம் பெரியப்பாவின் சொத்து விஷயங்கள், வரவு செலவு, வரி கட்டுதல் போன்ற வெளி வேலைகள் முழுவதும் சுப்ரமணியத்தின் கவனிப்பில்தான் நடந்து வருகின்றன.

    பெரியப்பாவின் தேவைகள் அனைத்தும் அவர் நினைக்குமுன் அவர்முன் வந்து நிற்கும். இருபது பேர்கள் கொண்ட கம்பெனியை நடத்துகின்றான் சுப்ரமணியம். அதனால் பெரியப்பாவின் வேலைகளைக் கவனிப்பதில் சிரமமில்லை.  மாறாக மிகவும் சந்தோஷமாக செய்வான் சுப்ரமணியம். இம்முறைதான் இவ்வளவு இடைவெளி விழுந்து விட்டது. இருப்பினும் அவரது தேவைகளை அவனது கம்பெனி ஆட்கள் கவனித்து வந்தார்கள். அவனது நினைவு-களில் எப்போதும் பெரியப்பா இருப்பார்.  அவர்களுக்கிடையில் ஒரு தோழமை இருந்து வந்து கொண்டிருக்கிறது. அவரது தனிமையைப் பற்றி பலமுறை விவாதித்திருக்கின்றனர். தன்னால், தன் குடும்பத்தால் அதை நிரப்ப முடியுமா என்றெல்லாம் யோசித்து இருக்கின்றான்.

    இந்த சுப்ரமணியத்திற்காக ஒருநாள் தன் வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு காத்திருக்கிற சமயம், காம்பவுண்ட் வாசல் கதவு அருகில் நிழல் தட்டியது.  சுப்ரமணியமாகத்தான் இருக்கும், வேறு யார் என்னைத் தேடி இப்பொழுது வரப்போகிறார்கள் என சுந்தரம் தன் அருகில் இருக்கும் நாற்காலியைச் சரியாகப் போட்டார். கதவு திறக்கும் சப்தம் மெதுவாக கேட்டது. சுப்ரமணியம் திறந்தால் இப்படி இருக்காதே என தலையை நிமிர்த்தி வாசல் பக்கம் பார்த்தார்.

    ஒரு பெண்மணி இவரை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

    இருந்தும் இல்லாத வெளிச்சத்தில் அவளது நிதானத்தையும் தெளிவான ஒரு முடிவோடு நிற்பதையும் சுந்தரத்தால் உணர முடிந்தது. அவள் குட்டையில் சேர்த்தியில்லை. நெட்டையென நெடுமூச்சு விட இயலாது. நாற்பது வயது தக்க உடல் அமைப்பு. வயதின் காரணமாகவோ இல்லை வாழ்க்கை அனுபவத்தினாலோ அவள் வாய்மொழியில் ஒரு கனிவு ததும்பி இருந்தது. ரொம்ப அழகு என தூக்கிக்கொண்டாட முடியாவிட்டாலும் அழகற்றவள் என ஒதுக்கிட இயலாது. இந்த நிலையே அவர் வயது தந்ததாகத்தான் இருக்க வேண்டும். அந்த குறைந்த ஒளியிலும் அவரது முகம் துலக்கி வைத்த வெண்கலச் செம்புபோல் தோற்றமளித்தது-. அவள் நெற்றியிலிருந்த திலகம் கறுப்பா சிவப்பா என அறிய முடியவில்லை சுந்தரத்திற்கு. அவள் அள்ளி முடித்த கூந்தல், ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாய் அவளைக் காட்டியது. இவையெல்லாம் க்ஷண நேரம் அளந்ததுதான்.
    சுந்தரம் தான் மௌனத்தைக் கலைத்தார்.

    “என்ன தாயி! யார் வேண்டும்! இந்தா இந்த நாற்காலியில் உட்கார்ந்து கொள்” என சுப்ரமணியத்திற்காக போட்ட நாற்காலியில் அவளை அமரச் செய்தார்.

    “ஜயா! நான் இந்த ஊருக்குப் புதுசு. இந்த ஊர் லைப்ரரி ஐயா தான் நான் தங்குவதற்கு இடம் தேடி அலைந்தபோது உங்களைப் பார்க்கச் சொன்னார். உங்கள் வீட்டில் ஒரு பகுதி காலியாக இருக்கின்றது. ஆனால் நீங்கள் வாடகைக்கு விடுவீர்களா என்று தெரியாது. இதுபற்றி உங்களிடமே விசாரித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டார்” என்று சிறிது நிறுத்தினாள் வந்தவள்.

    “ம்…ம்… அப்படியா? ஆமாம். நான் ஒருபோதும் அறை வாடகைக்கு விடனும்னு நினைக்கலைதான்.  சரிதாயி! எவ்வளவு காலம் வேண்டுமோ உன் விருப்பம்போல் தங்கிக்கொள்.  உன்னிடம் வாடகை வாங்கி நான் வாழ வேண்டிய அவசியம் இல்லை. அதோ?  அந்த சுவற்றின் ஆணியில் சிவப்பு நாடாவில் தொங்குகிறதே, அதுதான் அந்த வீட்டு திறவுகோல். ம்…ம்.. வசந்தா போனதற்கப்புறம் அந்த கதவையே திறந்ததில்லை. ம்.ம்.. போய்ப்பாரு தாயி. வசதிப்பட்டால் எனக்கொரு ஆட்சேபமில்லை” என்றார் சுந்தரம்.

    இவள் யார்?  எந்த ஊர்! எதற்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறாள்! இவள் உறவு எங்கிருக்கின்றது,  வேண்டாம் என்று உறவை விட்டு விலகி வந்திருக்கிறாளா? இல்லை உறவு அற்றுப்போய் கால் போன வாக்கில் இங்கு தங்கி விட்டாளா! & இவற்றில் ஒன்றைக்கூட சுந்தரத்திற்கு கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை. அவள் கேட்டாள், இவர் இடம் கொடுத்து விட்டார் அவ்வளவுதான்.

    சுப்ரமணியம் இனிமேல் வருவாளா? என்ற யோகாவில் ஆழ்ந்தார் சுந்தரம். பக்கத்து வீடு பெருக்கித் துப்புரவு செய்யும் சப்தம் கேட்டது. கம்மென்று மின்னொளி பாய்ந்ததை உணர்ந்தார்.  ஆம், பக்கத்து வீடு மஞ்சள் ஒளியில் மிளிர்ந்தது. அவ்வொளி இவரது அகத்தின் ஒளியாய் பிரகாசித்ததை உணர்ந்தார். அவருக்கு இது மிகவும் வியப்பை அளித்தது. ஒன்றும் தோன்றாமல் அப்படியே அந்த மின்னொளியின் மஞ்சளில் தன்னைக் கரைத்துக் கொண்டிருந்தார்.

    பக்கத்து வீட்டிலிருந்து அடுப்பெரியும் ஓசையும் வாசனையும் வந்தது. வசந்தா இறந்து போனதற்கப்புறம் இந்த வீட்டில் அடுப்பு பற்றவைக்கவே இல்லை. பல வருடங்களுக்குப்பின் வந்த இந்த அடுப்பின் மணம் தன் தாயை, தன் தாரத்தை அவரிடம் அழைத்து வந்தது. அன்பை அள்ளி அள்ளி இவர் மீது வைத்தாள் தாய். அரவணைத்து அத்துணை சந்தோஷத்தையும் அளித்தாள் வசந்தா. ஒருநாள் கூட இவ்வீட்டை விட்டு இவர் பிரிந்து இருந்தது இல்லை. பிறந்தது முதல் இவ்வீட்டின் வாசனையுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். மெல்ல மெல்ல ஒரு காரமான இனிமையான வாசனை வீட்டில் பரவி ஆக்கிரமித்தது.

    ஐயா! எனக் குரல் வந்த திக்கில் தலை திருப்பினார்.  வந்தவள் தான் அழைத்தது.
    வீட்டிலிருந்து ஸ்டூல் ஒன்றை அவர் முன் இட்டாள். சொம்பு நீரைக் கொடுத்து கைகழுவுமாறுக் கூறினாள். கமகமவென உப்புமாவும் தேங்காய்ச் சட்டினியும் ஒரு தட்டிலிட்டு அந்தஸ்டூலில் வைத்தாள்.

    சுந்தரத்திற்கு இது கனவா! நனவா என்று புரியவில்லை. ஆனால் அந்த மணத்தின் அழைப்பால் அவளிடம் ஒரு மறுப்பும் சொல்லாமல், இவள் என்னவோ காலம் காலமா இவருக்கு பரிமாறிக் கொண்டிருப்பவள்தான் என்கிற மாதிரி சாப்பிடத் தொடங்கினார். உப்புமா அருமையாக இருந்தது. இந்த உப்புமாவை இவ்வளவு அருமையாக செய்ய முடியுமா என்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாள்.  தாயின் ருசியும் தாரத்தின் மணமும் அந்த உப்புமாவில் கலந்து, அவரைக் கரைத்து விட்டது.

    அந்தக் கணம் முதல் சுந்தரம் வீடு பெண்ணால் பூவாய் மலர்ந்தது. வீடு முற்றமும், கொல்லைப் புறமும் திருத்தி நேர்த்தியாய் மாறியது-. வீட்டிற்குள் ஒவ்வொரு பொருளும் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டு, அந்த வீட்டின் எழிலைப் பேரெழிலாக்கி விட்டன.

    பக்கத்து வீட்டிற்காக வந்தவள் மெள்ளமெள்ள முழு வீட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டாள்.  சுந்தரத்தின் தேவைகள் சரியான நேரத்தில் சரியானபடி கவனிக்கப்பட்டு வந்தன.

    எல்லாவற்றையும் அவளே எடுத்துச் செய்யத் தொடங்கி விட்டாள். இருவருக்கும் பேச்சு, உரையாடல் சில சொற்கள் தாம் இருக்கும். ஒருவருக்கொருவர் மீது அக்கறை அதிகமாக இடம் பெற்றது.  நாட்கள் மாதமாகியது.  அப்படியும் சுந்தரம் அவளிடம் அவள் யார் என்று கேட்கவில்லை.
    இருவாசல் வீடு மீண்டும் ஒரு வாசலாகியது. பக்கத்து வீட்டில் கோலமிடுவதோடு சரி.  மற்றபடி புழக்கமெல்லாம் பிரதான வாசல் மூலமாகவே இருந்தது. இந்த ஒரு மாத காலமும் சுந்தரத்திற்கு தனிமை கழன்று போய் இருந்தது. ஒரு புது உற்சாகம் பிறக்கத் தொடங்கியது. ஆனால் இன்னமும் அவள் பெயரை அவள் கூறவில்லை, இவரும் கேட்கவில்லை.

    இருவர் மனத்தின் இடைவெளி குறையத் தொடங்கியது. இருவரின் தனிமை தணிந்தது. அவளும் சந்தோஷத்தில் பூரித்துப் போனாள். ஏதோ அவள் வாழ்வு இங்கு அர்த்தமானது போல் மகிழ்ந்து இருந்தாள். உள்ளங்களிடையே இடைவெளி இல்லாதபோழ்து, பிற விஷயங்கள் ஒன்றுமில்லை என்று ஆகிவிடுகிறது. அன்று இரவு இதன் பொருளை இருவருக்கும் உணர்த்தியது. காலை சுந்தரம் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும்போது, காபியைக் கொணர்ந்தாள். அதன் மணத்தில் அவள் மனமும் மணந்தது. காபியை சுந்தரம் எடுத்து சுவைத்தார். அது கசப்பும் இனிப்புமாக புதிய  சுவையில் இருந்தது. அவர் நிமிர்ந்து பார்த்தபோது அவள் தன்னையே பார்ப்பது தெரிந்தது. ஒரு கணம் இருவர் பார்வையும் ஓரிடத்தில் நின்று நிலைத்தது. இருவர் வயது, இருவர் நிலை தாண்டி நின்ற நிலையும் அதை உணர்த்தியது. அதில் அவள் தெளிவைக் கண்டு நிலை கொண்டது போல் இருந்தது.

    சுந்தரத்திடமிருந்து காபி டம்ளரை வாங்கிச் சொன்றாள் அவள். அப்போது மேசையின் மீது ஒரு காகிதம் பறந்து அவரது மடியில் விழுந்தது. அது யாரோ எழுதிய கவிதை:

    அவன்:
    சொப்பனத்தில் வந்து
    சோதனைகள் செய்தால்
    எப்படித் தாங்குவேன்
    என் இனியவளே!

    அவள்:
    அப்படித்தான் செய்வேன்!
    அதில் என்ன குறை கண்டீர்?
    இப்படியே இருக்கட்டும்
    என்றும் நம் உறவு.

    Share
  • சொல் ஒன்று வேண்டும்!

    தி. சுபாஷிணி

    அது ஒரு குக்கிராமம். அங்கு செல்லவே இரண்டாம் ஜாமம் ஆயிற்று. நேராக அந்தக் கோயிலுக்குத்தான் சென்றோம். என்னுடன் மன்னிக்கவும் என்னைக் கூட்டி வந்தவர்கள் என் மாமியார், அவரது தம்பி, தங்கை ஆவார்கள். இரவை அங்குதான் கழிக்க வேண்டும். கோயிலில் சுற்றி ஓலைக் கூரை வேய்ந்த பிரகாரம். அதில்தான் அனைவரும் படுத்துறங்க வேண்டும். எங்களைப் போல் இன்னும் பத்து இருபது பேர் உறங்கிக் கொண்டிருந்தார்கள். என்னுடன் வந்தவர்கள் அப்படியே படுத்தனர். அவர்கள் உறங்கினார்களா? உறங்கியதுபோல் விழித்திருந்தார்களா என்பதை நான் கவனிக்கவில்லை. அதில் என் மனமும் செல்லவில்லை. நான் முற்றிலும் என்னைச் சுற்றியிருந்த இருட்டுடன் இருந்தேன். என்னவோ அந்த வெட்டவெளி இருட்டு முதலில் பயமுறுத்தினாலும், நேரம் செல்லச்செல்ல பழகிவிட்டது.

    எனக்கு அது தோழிபோல் என்னுடன் உறவாடயத்தனித்தது. இரவின் மடி நம் தாய் மடி போன்றது. அது தன் மடியில் நம்மைப்போட்டு, தலை வருடிக் கொடுக்கும். அது என் தலைவருடியது. அது என்னை வருட வருட என் கண்கள் அருவியாய்க் கொட்டியது. எங்கிருந்து இவ்வளவு கண்ணீர் என்றே புரியவில்லை. காதருகே குனிந்து வந்து ‘அழாதே’ என்றது. என் அம்மா பேச்சைக் கேட்காத பலனை இப்போது அனுபவிக்கிறேன் என்றேன். ‘கலக்கமுறாதே! எல்லாம் சரியாகிவிடும், கண்ணுறங்கு’ என்றது அது. மெல்ல மெல்ல இமை கனத்தது. தூக்கம் தழுவியது. அதன் பாதுகாப்பில் கண்ணயர்ந்தேன். இருட்டும் மெல்ல மெல்ல விலகி விடியலின் நம்பிக்கை மலரத் தொடங்கியது. பிரிந்தும் பிரியாத இருளில் விழிப்பு வந்து விட்டது. ஆனால் கலக்கமில்லை, தயக்கமில்லை, மயக்கமில்லை. அங்கு படுத்துறங்கியவர்கள் ஒவ்வொருவராய் எழத் தொடங்கவே, நாங்களும் எழுந்தோம். கோயில் முன் இருக்கும் குளத்தில் குளிக்கக் கிளம்பினோம். குளத்தில் இறங்கி தலை அமிழ்த்தினேன். உடல் அமிழ அமிழ உடலும் உள்ளமும் குளிர்ந்தது. இறுதியில் மூன்றுமுறை அமிழ்ந்து எழச் சொன்னார்கள் என் மாமியார். அப்படியே செய்தேன். ஒரு பதில், ஒரு சொல் இதுவரை அவர்களிடம் பேசவில்லை.

    அது அவர்களைச் சுட்டு இருக்கும். அது அவருடைய முகத்தில் தெரிந்தது. என்னால் அதற்கு ஒன்றும் செய்ய இயலவில்லை. ஈரத்துணியோடு குளத்திலிருந்து வெளிப்பட்டு குளக்கரையில் விற்கும் அர்ச்சனைத் தட்டு ஒன்றை வாங்கினேன். பணம் கொடுக்க அவர்கள் முன் வந்தார்கள், மறுத்துவிட்டேன். நானே 50 ரூபாய் கொடுத்து அதைப் பெற்றுக் கொண்டேன். தட்டில் 51 ரூபாய் தட்சிணை வைக்கச்சொன்னார்கள். பணத்தை வைத்தேன். அனைவரும் ஈரத்துணியை மாற்றிக் கொண்டோம். கோயிலுக்குள் சென்றோம். கர்ப்ப கிரகத்திலுள்ள சாமியை தரிசித்தோம். பின் நாங்கள் யாரைப் பார்க்க வந்தோமோ அவரைக் காண கோயில் பிரகாரம் வந்தோம். எங்களுக்கு முன் 10 பேர்கள் நின்றிருந்தனர்.

    ஒவ்வொரு முகம் ஒவ்வொரு விதமாய் உணர்வுகளை உமிழ்ந்து கொண்டிருந்தன. பதினோராவது ஆளாய் நாங்கள் நின்றோம். ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆசனத்தில் அமர்ந்து இருந்தார். அவர் அருகில் சற்றே 2 அல்லது 3 வயது குறைவில் ஒரு அம்மா அமர்ந்து இருந்தார்கள். அவருடைய மனைவி என்றனர். இந்தக் கோயிலில் குடியிருப்பது 7 கன்னிகைகள் என்றும் அந்த ஏழு கன்னிகைகளும் இவர் மீது வந்தமர்ந்து, அவரது வாக்கு மூலம் நம் குறைகளை தீர்ப்பார் என்றனர். மேலும் காணாமல் போன பொருட்கள், யார் எடுத்துச் சென்றது?, அவை கிடைக்குமா கிடைக்காதா என்பதிலிருந்து மக்கட்பேறு உண்டா, அதற்கு நிவர்த்தி உண்டா என்பது வரை அவர் சொல்லும் ‘குறி’யில் தெரிந்து விடும் என்றனர். நமக்கு அதில் ஐயம் இருப்பின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் அந்த அம்மா அவர்களிடம் கேட்டுச் சொல்வார்கள். மேலும் பலருடைய அனுபவங்கள் எல்லாம் வரிசையில் நிற்கும்போது செவிகளில் விழுந்தன.

    என் கவனம் முழுவதும் அந்த தெய்வத்திடம் இருந்தது. அன்று அம்மா எவ்வளவு தூரம் எடுத்துச் சொன்னார்கள். “உனக்கு திருமண வயதே வரவில்லை. சிறுபிள்ளைத்தனமாய் இப்படி அவர்தான் வேண்டும் என பிடிவாதம் பிடிக்காதே. அவர்கள் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. படிக்காத குடும்பம். பையனுக்கும் நிரந்தர வேலை இல்லை. நீயோ பல வேலைகள் தெரியும் என்கிறாய். ஏதாவது ஒரு வேலையில் தொடர்ந்து வேலை பார்த்திருக்க வேண்டாமா! உன்னை பெரியம்மாவுடன் இருக்க அனுப்பியதே அங்கு போய் உலக விவரம் கற்றுக் கொள்வாய் என்று. இம் முடிவை அவர்களிடம் கூறினால் பெரியம்மாவின் மனம் எப்படிப் பாடுபடும்?” என்று அம்மா மனம் நொந்து கூறியதெல்லாம் புத்திக்கு எட்டவில்லை. பிரகாரத்தில் வரும் வெய்யில் கொஞ்சம் கொஞ்சமாக மேலே விழுகின்றது.

    ‘பெரியம்மா!’ நினைப்பு வந்ததும், அழுகைப் பொங்கிப் பொங்கி வந்தது. பெரியம்மா… நிஜம்மாலும் அவங்க பெரியம்மாதான்… தன் குழந்தைகளுக்கு இணையாக என்னையும் வளர்த்தார்கள். நானும் அவர்கள் குழந்தைகளை மிகவும் பத்திரமாய் பார்த்துக் கொண்டேன். என்னை நம்பி என் பாதுகாப்பில் பல வாரங்கள் கூட வீட்டில் விட்டுச் செல்வார்கள். ஷம்மிம்பானு (அதுதான் என் உண்மையான பெயர். திருமணத்திற்குப்பின் மல்லிகாவாக மாறிவிட்டேன்). உனக்கு இன்னும் இரண்டு வருடத்தில் திருமணம் செய்யணும். பார்! இதெல்லாம் உனக்காகத்தான் சேர்த்து வைத்திருக்கிறேன் என்று ஒரு சிறிய நகைப்பெட்டியைக் காண்பித்தார்கள். ஏதேனும் நல்ல பொருட்களைப் பார்த்தால் இது! எங்கள் ஷம்மிமுக்கு என்று எடுத்து வைப்பார்கள். ஐயோ! பெரியம்மா! உங்களை நான் புரியாமல் போய் விட்டேனே! பெரியம்மா!

    நீங்கள் என்னை அம்மாவிடம் அனுப்பாமல் இருந்தது, அனுப்பினாலும் ஓரிரவு கூட அங்கு தங்க விடாதது ஆகியவையெல்லாம் நீங்கள் என்மேல் வைத்திருந்த அன்பு என்று எப்படி பெரியம்மா தெரிந்து கொள்ளாமல் போனேன்! அதை நீங்கள் அடிமையாய் என்னை நடத்துவதாகவும்; என்னுடைய சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டதாகவும் நினைத்து, ஏதோ விடுதலை பெற்றுப் போவதாய் நினைத்து…! காதலுக்கு கண் இல்லை என்பதை இப்போது புரிந்து கொண்டேன். எனினும் நான் எடுத்த வாழ்க்கை என்று அதில் வைராக்கியமாய் இருக்கிறேன் பெரியம்மா. இதோ! இந்த இடத்தில் ஒரு பழியை சுமந்து கொண்டு நிற்கின்றேன் என்றால் உங்கள் உங்கள் மனம் எப்படி வேதனைப்படும்.

    பெரியம்மா! எனக்கு அம்மாவிற்கும் மேலாய் இருந்தீர்கள். எப்படி வளர்த்தீர்கள்! தலையில் முக்காடு விலக அனுமதிக்கமாட்டீர்கள். அதிர்ந்து பேச, அதிர்ந்து நடக்க ஒப்பமாட்டீர்கள். அனைவரையும் நேசிக்கக் கற்றுக் கொடுத்தீர்கள். அம்மாவும் நீங்களும் எந்த நிலையிலும் பொய் சொல்லுதலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படுத-லும் கூடாது என்றல்லவா என்னை வளர்த்தீர்கள். பெரியம்மா! இந்த கணம்வரை நான் உங்கள் பெண்ணாகத்தான் இருக்கின்றேன். ஆனால் இவர்கள் பெரும்பழி சுமத்தி விட்டார்கள் பெரியம்மா!

    திருமணத்திற்கு பின்தான் எனக்குத் தெரியவந்தது. என் கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு என்று. அவரது அப்பாவும் குடிப்பாராம். என்ன சொல்வேன் பெரியம்மா?- எதை எப்படிச் சொல்வேன்! அவசரப்பட்ட வாழ்க்கை, அவசரத்தில் அள்ளித் தெளித்த நீர் போல்தான் ஆழமில்லாது இருக்கின்றது. தரையும் நனையவில்லை. தெளித்த கையும் நனையவில்லை. அவர் கொண்டு வரும் சம்பளம் பத்தவில்லை. பாதி நாட்கள் வேலைக்கே போவதில்லை. மதுபானக் கடை தான் கதியென்று கிடக்கும் வயதா பெரியம்மா! அங்குதான் மாலையில் அவரது நட்பு வட்டம் கூடுகிறது. இரவு முழுவதும் அடியும், வாயில் வரக்கூடாத வார்த்தைகள் எல்லாம் வந்து விழுகின்றன. வெளியில் என்னை அனுப்பாது வீட்டுக்குள் பொத்தி பொத்தி வளர்த்தீர்களே பெரியம்மா! உங்களுக்குத் தெரியுமா! நான் எக்ஸ்போர்ட் கார்மெண்ட்ஸில் வேலைக்குப்போய்க் கொண்டு இருக்கின்றேன். அதுதான் நம் சமீரா காலேஜுக்குப் போகும் போது நானும் அவ்வழியில்தான் போகிறேன். நாங்கள் இருவரும் பார்த்துக் கொண்டே செல்கிறோம். ஆம்! அவள் ஆட்டோவில் செல்கிறாள். நான் சைக்கிளில் செல்கின்றேன். அதுசரி இங்கு இந்த நிலை ஏன் என்று கேட்கிறீர்களா! முழுக்க நனைந்தாகிவிட்டது இனி முக்காடு எதற்கு! சொல்வது என தீர்மானித்தபின், எல்லாவற்றையும் சொல்வதுதானே நியாயம்.

    பெரியம்மா! என் மாமியாரின் தங்கை இருக்கிறார்களே, (அவர்களும் என்னுடன்தான் இந்த வரிசையில் நிற்கிறார்கள்) அவர்கள் பூர்விக நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்று தன் அக்காவான என் மாமியாரிடம் உதவி கேட்டு போன மாதம் வந்தார்கள். நான், மாமியார் எல்லோரும் வீட்டில் இருக்கும் நகையை அடகு வைத்து ஒரு லட்சம் கொடுத்து உதவினோம். உடன் பிறப்பிற்குள் இந்த உதவிகூட இல்லைன்னா எப்படி பெரியம்மா! அதுவும் என் திருமணத்திற்கு அவர்கள் பணம் கொடுத்து உதவினார்களாம். அது முடிந்த கதை. அதன்பின் அவர்கள் வீட்டு நகைளை விற்றுத் தரச் சொன்னார்கள். நானும் மாமியாரும் அவர் இருக்குமிடம் சென்று, அங்குள்ள சேட்டுக் கடையில் விற்று மொத்தம் 46000 ரூபாய் வாங்கிக் கொடுத்துவிட்டு, பத்திரமாக அவர்களை அவரது வீட்டிற்கு கொண்டு விட்டு விட்டு நாங்கள் இங்கு கிளம்பி வந்துவிட்டோம். பின் நான்கு நாட்கள் போயின. என்னுடைய இளைய மாமியாரிடமிருந்து போன் வந்தது. என் மாமியார் முகம் மிகவும் கருத்து சிறுத்துப் போயிற்று. சரி. அவர்கள் அக்கா தங்கைக்குள் ஆயிரம் இருக்கும் என்று நான் விட்டு விட்டேன்.

    இரண்டு நாட்கள் கழிந்தன. நான் என் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு நாட்களும் என் கணவர் குடிக்காது, வேலைக்குப் போய்வந்து கொண்டிருந்தார். மூன்றாவது நாள் நான் வேலையிலிருந்து வரவும் என்மாமியார், கணவர், என் மாமனார், நாத்தனார் ஆகிய நால்வரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். நான் வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்கள் பேச்சை நிறுத்தினர். என்னையே அனைவரும் பார்த்தனர். நானும் விளையாட்டாக,
    “என்ன அத்தை! ஏதோ பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் வந்ததும் நிறுத்தி விட்டீர்கள்!” என்று கேட்டேன்.

    அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. திகைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டு இருந்தனர். பின் மாமனார்தான் பிரச்சனையைச் சொல்லத் தொடங்கினார். மல்லிகா! மருமகளே! நாங்கள் உன்மேல் எந்த தவறையும் பழியையும் சுமத்தவில்லை. ஆனால் இப்படியொரு காரியத்தை உன்னுடைய அத்தையின் தங்கை லல்லி கூறுகிறாள். இதை எப்படி உன்னிடம் கூறுவது என்று விழித்துக் கொண்டிருக்கின்றோம்.

    “அப்படியென்ன பெரிய பிரச்சனை மாமா! ஏதாஇருந்தாலும் சொல்லி விடுங்கள்” என்றேன் நான். “சொல்ல நாக்கூசுகிறது அம்மா! நீ லல்லி விட்டுக்குப் போயிருந்தபோது அவர்கள் வைத்திருந்த பணத்தில் 4000 -ரூபாய் காணவில்லையாம். உங்கள் மருமகள் வந்து போனதற்குப் பின்தான் காணவில்லை என்று அடித்துக் கூறுகிறாள் அம்மா”. எனக்கு ஒரு நிமிடம் பெரியம்மா என் மூச்சே நின்று விட்டது. என் இஷ்டப்படி திருமணம் செய்து கொண்டேன் என்பதைத் தவிர வேறு ஒரு தவறும் செய்ததில்லை பெரியம்மா.

    அல்லா சத்தியமா சொல்றேன் பெரியம்மா! இவங்க இப்படியொரு பழியை என்மேல் போடுவாங்கன்னு நினைக்கல. அவங்க என் கம்பெனி வாசலில் பைத்தியம் மாதிரி நின்னுகிட்டு இருந்தாங்க பெரியம்மா! காலையிலிருந்து சாப்பிடலை மல்லிகா! வீட்டை ஆரம்பித்துவிட்டேன். எப்படி முடித்து சமாளிக்கப் போறேன்னு தெரியலைன்னு புலம்பினாங்க. நான்தான் சமாதானம் பண்ணி, சாப்பாடு வாங்கி சாப்பிடச் சொல்லி அத்தைகிட்ட பேசி கடனுக்கு ஏற்பாடு பண்ணிக் கொடுத்து எல்லாம் பண்ணினேன். இவ்வளவு ஏற்பாடு பண்ணுகிறவங்க எங்கேயாவது 4000 ரூபாயை எடுப்பாங்களா! நான் உறைந்து போய் விட்டேன் பெரியம்மா! ஒரே வார்த்தைதான் சொன்னேன். “என்னை எங்க அப்பா அம்மா, பெரியம்மா அப்படி வளர்க்கலை. அத்தை! மாமா! நீங்க எதிர்பார்க்கின்ற மாதிரி சீர் செனத்தி கொண்டு வரலைதான. ஆனால் எங்க அப்பா அம்மா உண்மையையும் நேர்மையையும் அன்பையும்தான் சீராக கொடுத்திருக்காங்க. எல்லா மதமும் அதைத்தான் சொல்லுது என்று சொல்லும்போது என் இரண்டரை வயது குழந்தை ஷாலினி வந்தாள். “அம்மா” என்று கட்டிக் கொண்டாள். அவர் கும்பிடும் நடு வீட்டு சாமி எதிரில் என் குழந்தை தலையின் மேல் சத்தியம் செய்தேன் பெரியம்மா “எவ்வளவு தாழ்ந்தாலும் திருடி என் வயிற்றை வளர்க்க மாட்டேன். நான் அந்தப் பணத்தை எடுக்கவில்லை” என்று.

    உடனே என் மாமியார், “அய்யோ! குழந்தைமேல் சத்தியம் பண்ணாதே குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும்” என்று அலறினாள். “ஏன் அத்தை நீங்க பயப்படறீங்க? நான் பொய் சொன்னால்தான் குழந்தையை பாதிக்கும். நான் ஒருபோதும் அந்த இழிவான செயலைச் செய்யமாட்டேன். உங்களுக்குத்தான் தெரியுமே எனக்கு உரிமையான கணவன் பர்ஸிலிருந்தே எடுக்க மாட்டேன்”. நான் சலனமே இல்லாது அன்றைய வேலையை செய்யப் போய்விட்டேன். ஆனால் என்மேல் பழி போட்டாங்களே! அவங்க மேல் எவ்வளவு இரக்கப்பட்டு எல்லாம் செய்தோம். ஏன் இந்த நிலை எனக்கு என்று யோசனை ஓடிக்கொண்டே இருந்தது.

    மறுநாள் கம்பெனிக்கு போன் வந்தது. நீ மாலையில் சீக்கிரம் புறப்பட்டு வா. லல்லி அத்தை வீட்டுக்கு வந்திருக்காங்க. நாங்கள் சென்றமாதம் வேலூர் கிட்ட ஒரு கிராமத்தில் ஒரு பழங்காலத்துக் கோயில் ஒன்று உண்டு. அங்க என் கணவரின் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்ட அங்குள்ள பூசாரியிடம் குறி கேட்கலாம் என்று என்னை என் மாமியார் கூட்டிச் சென்று இருந்தார்கள். சென்ற மாதம் முழுவதும் என் கணவர் திமிரில் குடித்துவிட்டு ஆட்டம் போட்டார். பாவம்! பாழும் மனசு அம்மாவிற்கு, என்னசெய்ய! அவனுக்கு நேரம் சரியில்லை அதான் என்று புலம்பவே அங்கு சென்றிருந்தோம். ஆனால் அங்குபோய் அவர் முன் பிரச்சனையை சொன்னவுடனே அவர் கூறிவிட்டார். உன் பையன் சோம்பேறி. முதலில் வேலைக்குப் போகச் சொல்லு. அவன் நீ இருக்கும் தைரியத்தில் இப்படிச் செய்கிறான். நீதான் கெடுக்கிறாய். அடுத்த மாதம் வா. ஒரு சாமியாரிடம் அனுப்புகிறேன். அவர் முடிகயிறு போட்டு விடுவார். அதன் பின் அவன் குடித்தால் அவனுக்கு மரணம்தான் என்று சொல்லி அனுப்பி விட்டார். எனக்கு மனத்திற்குள் சந்தோஷம். இப்போதாவது அத்தை உண்மையை உணருவார்களா! குடிப்பதற்கு இவங்களே பணம் கொடுத்து விட்டு, கலாட்டா பண்ணும்போது புலம்புவார்கள்.

    “அந்த வேலூர் சாமி கிட்ட உன்னைக்குறி கேட்கக் கூப்பிடுது அவர் நீ எடுக்கலென்னு சொன்னால்தான் நம்புவாங்களாம்” என்றது அந்த போன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த 4000த்தில் நாம் அப்படி என்ன செய்துவிடப் போகிறோம். ஒரு மாதம் உழைத்தால் இதைவிட ஒன்றரை மடங்கு சம்பளம் எனக்கு. மடியில் இருந்தால்தானே கனம். என்ன! நல்லவேளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. கம்பெனிக்கு லீவு போட வேண்டாம். குழந்தை ஷாலினியை என் நாத்தனாரும் அவரும் பார்த்துக் கொள்ளட்டும் என யோசனை ஓடியது.

    வீட்டில் போனதும், மாமியார் முகம் வாடியிருந்தது. நம் மருமகளை வீணாகப் பழி போடுகிறாளே என்று. ஆனால் லல்லி அத்தையோ, வந்ததும் வராததுமாக கிளம்பு கிளம்பு நான் உன்னை நம்பத்தயாராக இல்லை. அந்த சாமிக்கிட்ட வா! அது உன்னை காட்டிக் கொடுத்து விடும் என்று குதிகுதின்னு குதித்தாள். நான் பேசவே இல்லை பெரியம்மா! முந்தின இரண்டு நாட்களாக ஷாலினிக்கு மூச்சிரைப்பு. ஆஸ்பத்திரிக்குப் போய், இராத்தூக்கம் முழித்த அலைச்சல். என் உடம்பும் முடியலை ‘அம்மா’ என்று அம்மாவின் மடியில் படுத்துவிட மாட்டோமா என்று இருந்தேன் பெரியம்மா! தவறு செய்யாவிட்டாலும் இப்படி அவமானம் ஏன் வருகிறது. நம் குரானில் இருக்கிறதா சொல்லுங்கள் பெரியம்மா! என் விதியை நொந்து கொண்டே கிளம்பினேன். பெரியம்மா! நான் முந்தாநாள் மதியம் சாப்பிட்டது. இன்னமும் ஒரு சோற்றுப் பருக்கைக்கூட உள்ளே போகவில்லை. என்னதான் அறிவு தைர்யப்படுத்தினாலும், மனசு புடுங்கி, வயிற்றில் ஒரு குமட்டல் இருக்கிறது பெரியம்மா! அந்தக் குமட்டல் இந்த சன்னிதானத்தில் கொஞ்சம் அடங்கி இருக்கு பெரியம்மா!

    இதோ! என் கண்முன் கோயிலின் கர்ப்பகிரகத்தில் அந்த கன்னித்தெய்வங்கள் இருக்கிறார்கள். அவர்கள் என் பெரியம்மாவாகத்தான் தெரிகிறார்கள். தாயைவிட வேறு யாருக்கு குழந்தையைத் தெரியும். வாய் பெரியம்மா! என்று அரற்றுகிறது.

    அதற்குள் என் முறை வந்துவிட்டது. அந்த பூசாரிமுன் என்னை அமரச் சொன்னார்கள். என்னுடன் வந்தவர்கள் என் பக்கவாட்டில் அமர்ந்து இருந்தனர். நான் என் மனதை ஒரு நிலைப்படுத்தி அவரை என் தாயாக எண்ணிக் கும்பிட்டேன். நான் அந்தப் பணத்தை எடுக்கலை சாமி! நீதான் அவர்களுக்குத் தெரியப்படுத்தணும்னு வேண்டிக்கிட்டேன்.

    சாமியார் புன்னகைத்தார். தட்டில் இருக்கும் தேங்காயை உடைத்தார். “அம்மா! பெற்ற குழந்தை மேல் சத்தியம் பண்ணியுமா அவர்கள் உன்னை நம்பாது இங்கு என்னிடம் அழைத்து வந்திருக்காங்க. என்னம்மா! நான் உனக்கு உன் பெரியம்மாதான். சந்தேகம் வேண்டாம். பெரியம்மாவின் காலடியில் உன்னை அர்ப்பணித்து விட்டாய். கலங்காதே! இந்தப் பணம் அவர்களே செலவழித்துவிட்டு, அந்த நாலு சுவத்துக்குள் திட்டம் போட்டு நடத்தி விட்டு, பழியை உன்மேல் போட்டு விட்டார்கள். உனக்கு நான் உடனிருப்பேன் என்றும். தாய்முன் மதம் ஒன்றுமில்லையம்மா. போ. உனக்கு அவங்களை சபிக்க வேண்டுமென்றால் என் கோவில் முன் உள்ள மண்ணை அள்ளித் தூவி கோபத்தைத் தீர்த்துக்கொள்.”

    அய்யய்யோ! சாமி! வேண்டாம் சாமி! எனக்கு வேண்டியது நான் எடுக்கலை என்கின்ற சொல் ஒன்றுதான். அதை அவர்களுக்கு நிரூபிக்கணும். அவ்வளவுதான் சாமி! எப்படிசாமி. என் பெரியம்மாவிடம் புலம்பியதை நீங்கள்…

    போ தாயி! எல்லாம் நல்லபடியா நடக்கும். எப்போதும் இப்படியே தெளிவா இரு தாயி. உன்ன இந்த கன்னியம்மா எப்போதும் காப்பாத்துவாள். என்று கூறி ஆசி வழங்கினார். எனக்கு அப்போதுதான் நிம்மதி வந்தது. நான் அவரை வணங்கி எழுந்து அவ்விடத்தை விட்டு வருவதற்குள் லல்லி அத்தையைக் காணோம். என்ன அவளையா பார்க்கிறாய்! அவ ஓடிப் போய்ட்டாம்மா! அவளால் எப்படி நிக்க முடியும். வா! நாம் வீட்டிற்குப் போகலாம். என் மேல் உனக்கு வருத்தம் இல்லையே. நான் என்ன சொல்லட்டும்? எதுவும் பேசவில்லை. நான் வாய் திறந்து பேசியே ஒன்றரை நாட்களுக்கு மேலாகி விட்டது.

    அனைவரும் வீடு செல்ல பஸ்ஸில் அமர்ந்தோம். என் மாமியாரின் தம்பி அவருடைய குடும்ப பிரச்சனைக்கு குறி கேட்க வந்திருந்தார். அதற்கு ஒரு தீர்வும் அவருக்கு கிடைத்தது. அவர், அவர் பிரச்சனையில் மூழ்கியிருந்தார். அவரும் என்னிடம் எதுவும் பேசவில்லை. என்மேல் விழுந்த பழி எப்படி விலகப் போகிறது என்று இந்தக் கோயிலுக்கு வரும்போது இருந்தது. அந்த சஞ்சலமும் இல்லை. பஸ் புறப்பட்டது. ஒரு மணி நேரம் கழிந்தது. அடடா! நான் குளித்துக் களைந்த ஆடையை அங்கேயே விட்டுவிட்டது தெரிந்தது. சரி போகட்டும். அந்த பழையதுணி மாதிரி என் பழியும் நீங்கிவிட்டது. அதற்காக சங்கடப்பட வேண்டாம்.

    இந்த மனசு அமைதியாயிற்று. அதோடு நிற்கிறதா! அறிவு விழித்துக் கொண்டது. இந்த சாமி, சாமியார் எல்லாம் செய்தித்தாளில் வரும் செய்திபோல் ஏமாற்று வேலையாய் இருந்திருந்தால்…. அம்மாடி என நான் கத்தவும், பஸ் எதிரில் சாலையை திடீரென்று கடந்த ஆட்டுக்குட்டிக்காக பிரேக் போடவும் சரியாக இருந்நதது. நல்லவேளை அந்த சத்தத்தில் என் சத்தம் எடுபடவில்லை.

    சரி! எதற்கு நடக்காத ஒன்றை நினைத்து மனம் உருகுவானேன். பாவம்! லலிதா அத்தை! ஏதோ பணக்கஷ்டத்தில், அவர்கள் புத்தி வேலை செய்து விட்டது. குறுக்குவழியை நாடிவிட்டது. என்ன ஒரு லட்ச ரூபாய் ஏற்பாடு பண்ணிக் கொடுத்த தன் அக்கா ஒரு 4000 -ரூபாயைத் தரமாட்டங்களா! உண்மையைச் சொல்லியிருந்தால்… விட்டுவிடுவோம். மறந்து விடலாம்தானே பெரியம்மா!

     

    Share
  • ஓடிப் போன புத்தர்

    தி.சுபாஷிணி

    பள்ளி கொண்டிருந்த அந்த புத்தர் சிலையைக் சென்ற வருடம் மைசூர் தசராவிற்கு சென்றபோது வாங்கி வந்தது. அதில் செரியால் ஓவியத்தின் அழகு படிந்து இருந்தது. முகத்தின் அமைதியில் அன்பான ஆக்கிரமிப்பு தெரிந்தது. குவிந்த உதடு உமிழ்ந்த சிரிப்பில் புத்தர் ஓவியத்தை நினைவூட்டியது. வந்தவுடன் அதை மிகவும் பத்திரமாக எடுத்து தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் வைத்தேன். அப்படி வைத்த சில நிமிடங்களில் அந்த அறையே சாந்தத்தின் அழகில் மிளிரத் தொடங்கி விட்டது. பக்கத்துவிட்டு சாரதாம்மா வந்திருந்தாங்க. அவங்களையும் அந்த புத்தர் சிலையைக் கவர்ந்தது. வந்ததும் என் மைசூர் பயணத்தைப் பற்றி விசாரித்தலும், உதடுகள்தான் என்னிடம் பேசிக் கொண்டிருந்தன. அவரது கண்கள் புத்தரின் அழகில் வயித்துப் போயிருந்தன.

    சாரதாம்மா எனக்கு ஒரு வரப்பிரசாதம். நான் இம்முறை இந்தியா வந்தபோது, அதிர்ஷ்ட வசமாக அவர்கள் வீட்டின் பக்கத்து வீட்டில் போயிருந்தேன். நான் காலையில் எழுந்து , பால் வாங்கி வரும்போது அவர்கள் எனக்குப் பழக்கமானார்கள். தினந்தோறும் காலையில் அவர்கள் வீட்டிற்குச் சென்று காபி குடிப்பது வழக்கமாகிவிட்டது. நல்ல டிக்காஷன் காபி. சரியான விகிதத்தில் பாலும் டிக்காஷனும் கலந்து, அளவான சர்க்கரையும் போட்டு, கசப்பும் தெரிந்த களிப்பான கமகமக்கும் மணமாக காபியைத் தரும் போது, அவர்களது தோழமையின் பரிவின் வாசனை மேலோங்கித் தெரியும். தன் கணவரோடு, மகன், மருமகள், 2 வயது பேத்தி என அளவிற்கு சிறிய குடும்பம் அவர்களுடையது. அவரைப்போலவே அவரது மருமகளும் என்னிடம் மிகவும் பிரியமாய் இருப்பாள். காபியில்தான் தொடங்கியது எனக்கும் சாரதாம்மாவிற்கும் உள்ள நட்பு. பின் காலை உணவு என்று நீண்டது. விதவிதமான சிற்றுண்டி தயாரிப்பதில் வல்லவர் அவர். மாதம் ஒரு தொகை வாங்கிக் கொண்டால்தான் நான் இந்த உதவியைப் பெற்றுக் கொள்வேன் என்று நான் சொன்ன அழுத்தத்தில், அவர்களது குடும்பம் ஒத்துக் கொண்டது. இப்படித்தான் பல நாட்களில் நிச்சயமாக எனக்கு அங்குதான் விருந்து நான் வெளியில் சென்றாலும், வெளி ஊருக்குச் சென்றாலும் இந்தியால் எனக்காக கவலைப்படும் ஜீவன் சாரதாம்மா தான். பல சமயங்களில் வெய்யிலில் அலைந்து திரிந்து ‘அப்பாடா’ என அவரது வீட்டில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டுதான் என் வீடு செல்வேன். அப்பொழுதெல்லாம் அவர்களது பரிவு என்னை உருக்கி எடுத்துவிடும். சாரத்மாவின் பேத்தி படு சுட்டி. அவளுக்கு பாட்டுப் பாடுவேன் இரண்டு வயது ஆகிறது. . நேரம் கிடைக்கும் போதெல்லாம் அக்குழந்தையை என் வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுவேன். அதற்காக விளையாட்டு சாமான்கள் கொடுத்து, அவளுடன் விளையாடுவேன். அக்கம் பக்கத்திலுள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் பேசக் கற்றுக் கொடுப்பேன். அப்போது அக்குழந்தை பக்கத்திலிருந்து அமைதியாய் அனைத்தையும் கவனிதர்துக் கொண்டிருப்பாள். சாரதம்மாவிற்கு அது பேருதவியாக இருக்கிறது என்பார். சாரதம்மா தன் மருமகளை சொந்த மகள் போல் பாதுகாப்பாள். அதில் அவ்வளவு அன்பும் அக்கரையும் தெரியும். மருமகளும் பண்பும் பணிவும் உடையவளாய்த் திகழ்ந்தாள். . ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறாள். வேலை நேரம் போக மாமியருக்கு உதவும் இயல்புடையது.

    ஆனால் சாரதம்மாவோ, அவள் பள்ளியிலிருந்து எடுத்து வரும் வேலைக்குத், தன் பேத்தியால் பங்கம் வராது பாதுகாப்பு அளிப்பார். எனக்கு மட்டுமல்லாது என்னைத் தேடி வருபவர்களையும் உபசரிப்பதில் மகிழ்ச்சிக் கொள்வார். அவர்களை வரவேற்றல், என் தபால்களை பார்த்து பதில் அளித்தல், இவை , அனைத்திலும், உபசரிப்பு, உதவும் குணம் எல்லாமே இயல்பாக இருக்கும். எனக்கு நம் கோயில் அமைப்பு, அவற்றோடு கூடிய தெய்வ வழிப்பாடுகள், விழாக்கள், தெருக்கூத்து எல்லாம் மிகவும் பிடிக்கும். இவ்வாறெல்லாம் எங்கு நடக்கும் என்று தேடி பிடித்துப் பார்க்கப் போய்விடுவேன். சாரதாம்மாவிற்கு இது தெரியும் என்பதால், ஒரு முறை அவர்கள் சொந்த ஊரில் நடந்த பூக்குழித் திருவிழாவிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த ஊரில் அனைவரும் “சாரதம்மா சாரதாம்மா’ என அத்தனைப் பிரியமாகய் இருந்தார்கள். சாரதம்மாவும் தன் பிரியம் அனைத்தையும் அங்கேயே கொட்டிக் கவிழ்த்து, அவர்களை அபிஷேகம் பண்ணினார்.

    நான் அமெரிக்கா திரும்பும் நாட்களைப் பற்றி எண்ண, மனமில்லைதான். எவ்வளவுதான் சுதந்திர தாகம் எடுத்து அலைந்து திரிந்தாலும், இயல்பாய் இருக்கும் பெண்மைத் தன் குடும்ப அக்கரையில் சுருண்டு படுத்து விடும். அங்கிருந்து மகளும் மகனும் அழைக்கத் தொடங்கி விட்டனர். சாரதம்மாவிற்கு, அவர்கள் குடும்பத்திற்கு அவ்வப்போது ஏதாவது பரிசும் உண்டு. அவர்கள் ஒன்றும் பணக்காரர்கள் இல்லை. அதற்காக சாப்பாட்டிற்குத் திண்டாடும் ரகமும் இல்லை. காஞ்சிபுரம் சென்றபோது அவருக்குப் பட்டுப்புடவை வாங்கி வந்து கொடுத்தேன். அவர்களது பேத்திக்குப் பட்டுப் பாவாடை நிச்சயம் கொடுத்திருப்பேன் என்பதை நீங்கள் நான் சொல்லாமலே அறிந்து கொள்வீர்கள் தானே! வீட்டில் உள்ள சில பொருட்கள் அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவிட்டேன். தஞ்சாவூரில் ஒரு திருமணம் இருந்தால், மழைக்காலம் என்பதால் வீட்டு சாவியை அவர்களிடம் கொடுத்து விட்டுச் சென்றேன். மழைவந்தால் வீட்டை திறந்து பாருங்கள் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். அவர்கள் மறுக்கும் பண்பு உடையவரல்லர். நானும் திருமணத்திற்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து திருச்சி, மதுரை என ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரத் தாமதமாகி விட்டது. வந்ததும் அவர்களிடமிருந்து காவியைப் பெற்றுக் கொண்டு விட்டிற்குச் சென்றேன்.

    வீடு படுசுத்தமாக காணப்பட்டது. சாரதம்மாதான் அடிக்கடி வந்து கவனித்திருப்பார்கள் என நினைக்கிறேன். இரண்டு நாட்கள் ஊரிலிருந்து எடுத்து வந்த ஞாபகம் அப்படியே இருந்தது, அலுப்பில் ஓய்வெடுத்துமுக் கொண்டேன். பின் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கினேன. என் படுக்கையறையில் என்னுடைய அம்மா கொடுத்த இரண்டு பட்டுப் புடவைகள் அப்படியே போட்டுவிட்டுச் சென்றிருந்தேன். அதைக் காணவில்லை சரி, பீரோவில் இருக்கும் என்று விட்டுவிட்டேன். மூன்று நாட்களுக்குப்பின், சமைலயறையில் இருந்த சிலப் பாத்திரங்கள் கண்ணில் படவில்லை. மனதில் ஏதோ நெருடியது. பீரோவைத் திறந்து அந்தப்புடவைகளைத் தேடினேன். கண்ணுக்குப் புலப்படவில்லை. மனம் பதட்டப்பட்டு விட்டது. என்னையறியாது ஓர் அச்சம் வெளிப்பட்டது. உடலும் உள்ளமும் வியர்த்துக் கொட்டியது. புடவைகள் காணாமல் போயின என்பது உரைத்தது. எனக்கு எதுவும் சொல்லவோ, நினைக்கவோ தோன்றவில்லை. வீட்டுச்சாவி சாரதம்மாவிடம்தான் இருந்தது. அவர்களை நான் தான் வீட்டை அவ்வப்போது திறந்து கவனித்துக் கொள்ளச் சொன்னேன். ஆனால் இப்படியொரு நிகழ்வை ? நினைக்கவே கூசுகிறது. இது மனதில் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருந்தது சாரதம்மாவிடம் கேட்கும் துணிவு என் உள்ளத்திற்கும் இல்லை. உரைக்க உதடுகளுக்கும் தைரியம் இல்லை.

    சஞ்சய் சுப்பரமணியம் கச்சேரி என்றால் எனக்கு பைத்தியம். ஒருநா£ள் அவரது கச்சேரி காலையில் ஆஸ்திக் சமாஜத்தில் நடந்தது. ஒரு இசை இலக்கியக் கூட்டம். அதில் சஞ்சய் கலந்து கொண்டு “ஓர் ஆய்வு” நிகழச்சியை நடத்தினார். அவரது வாய்ப்பாட்டின் மயக்கதில் அமிழ்ந்து, அவரது இசை நுணிக்க அறிவையும், துய்த்துவிட்டு வீடு வந்து சேர முற்பகல் 11.30 ஆகிவிட்டது. வழக்கம்போல் சாரதம்மாவின் வீட்டிற்குப் போய் அமர்ந்தேன். இன்னும் சஞ்சய் சுப்ரமணியத்திடமிருந்து நான் விலகவில்லை. சாரதம்மா குழந்தையை குளிப்பாட்ட பாத்ருமிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். ஆதனால் அவரின் ஹாலில் என்ன அமரச் சொல்லிவிட்டுக் குழந்தையைப் குளிப்பாட்டி விட்டு வருகிறேன் என்றார். எனக்கும் கொஞ்சம் ஆசுவாசம் தேவைப்பட்டது.

    அவர்கள் வீடு, எப்படி இருக்குமெனில், ஒரு குறுகிய வழி இருக்கும். முதலில் இரு அறைகள் உண்டு. ஒரு அறைதான் வசிக்கும் அறை. அதனுள் நுழைந்தால் அவர்கள் வீட்டுச் சமையலறை அடுத்து ஓர் அறை வாசல். நான் குளியலறைக்கு முதல் அறையில் இட்டு செல்லும் இடத்தில் நின்று விடுவேன். அதில் ஓரு பெரிய சோபா போட்டிருப்பார்கள். அங்கு உட்கார்ந்திருந்தால் அவர்களது சமயறையில் முழுப் பார்வையும் கிடைக்கும். எப்போது சோபாவின் நடுப்பகுதியில் உட்கார்வதால் சமையலறையின் இடதுபக்கம் பார்க்க முடியாது. இன்று வந்ததும் வராததுமாய் சோபா தொடங்கும் இடத்தில் அமர்ந்தேன். களைப்பும் இசை மயக்கம் இருந்ததால் முதலில் கண்மூடி, களைப்பின் …. மயக்கத்தின் கிறக்கத்தையும் அனுபவித்தேன். இப்படி ஒரு 5 நிமிடங்கள் சென்று இருக்கும். என் கண்கள் விழித்தன. முதலில் கண்டது அந்த வீட்டுச் சமையலறையின் இடது பக்கம். இதுவரை நான் அந்தப் பகுதியைக் கண்டதில்லை. அங்கு குளிச்சாதனப் பெட்டி ஒன்று இருந்தது. அதன் பக்கத்தில் ஒரு சிறிய பெஞ்ச் ஒன்று இருந்து. அதில் பாத்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலமாரி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பின் மிக்ஸி ஒன்று இருந்தது. அதனையொட்டி கிரைண்டரும் இருந்தது. பின் என் பார்வை மீண்டும் குளிர்சாதனப் பெட்டிகள் மேல் சென்றது. அவ்வளவுதான்! என்ன சொல்லேன்! என் இருதயம் துடிப்பை மறந்தது. மூச்சுத்திணறல் உண்டு பண்ணியது! அந்த குளிர்சாதனப் பெட்டியின் மேல் நான் மைசூரிலிருந்து வாங்கி வந்த அழகான அந்த செரியால் ஓவியம் வடிவத்திலமைந்த அந்த புத்தரின் பள்ளிக் கொண்ட சிலை புத்தர் எப்படி என் வீட்டிலிருந்து இங்கு வந்ததது! மனம் இதனால் செயல் இழந்தது.

    சாரதம்மா! நீங்களா இப்படி என்னிடம் கேட்டிருக்கலாமே! இரத்தம் அழுத்தம் அதிகரித்தது…………. என்ன செய்யலாம்? அப்படியே விட்டுவிடுவோமா! இதை நான் பார்க்கவில்லை என்ற அந்த மனதை சமாதானமாய் கொல்லச் செய்வோமா! என்ன செய்யலாம்! இதற்காக சிவசிவா, இது நாளுக்குப் பின்னும் தொடரும் நட்பை முறியடிப்பதா? என் நடபு முக்கியம். அப்படியெனில் அந்தப்புடவைகள், பாத்திரங்கள்… சாரதம்மா! ஏனிப்படி! கலக்கமாகி நிற்கிறீர்கள். சிலை உங்களைக் கவாந்தது எனக்கு எப்படி தெரிந்தது! இந்த புத்தரின் பால் உள்ள ஆசை திரும்பி பார்க்கச் செய்ததா? அடடா! என் கண்முன் ஏன் வைத்தீர்கள்! வீட்டில் பீரோவில் வைத்திருக்கலாமே! என் வீட்டின் வெறுமையை உணராதே போயிருப்பேனே! இந்த நிமிஷம் வரை அது வீட்டில் இல்லை என்கிற உணர்வே இல்லாமல் இருந்தேனே! அப்படியே என்னை விட்டிருக்கலாமே சாரதாம்மா! சாரதாம்மா! உங்கள் அன்பையும் நட்பையும் ஒருக்காலும் இழக்கமாட்டேன். அது என்னுடனே இருக்க வேண்டும். ஆனாலும் நீங்கள் செய்த இந்த காரியம் சரியில்லையே சாரதம்மா! அறிவு அச்சுறுத்தியது சாரதம்மா குழந்தையைக் குளிப்பாட்டி விட்டு சில நிமிடங்கள் வந்த விடுவார்கள். தயவு செய்து ஏதாவது செய்து அகற்று உடனே என்றது அறிவு.

    சட்டென்று எழுந்தேன்! வேகமாக உள்ளே நுழைந்தேன். பட்டென்று பற்றினேன் புத்தரை. என் பையில் போட்டுக்கொண்டு நான் அமர்ந்த இடத்திற்கு வந்து மீண்டும் அமர்ந்து விட்டேன். இதயம் படபடத்தது. ஏதோ பெரிய காரியம் முடித்தது போல் அமைதியாய் இருக்க முயன்றேன். நிமிடங்கள் கரைய கரைய நானும் இயல்பாகி விட்டேன். என்னை சரியாக்கி இயல்பாக்கி கொள்வதற்குகுள் சாரதம்மா வந்து விட்டார்கள். கமகமக்கும் குழந்தை சோப்பின் மனத்தோடு குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு எனக்கு காபி கொடுத்தார்கள். நானும் குழந்தையைக் கொஞ்சியவாறே காபியை கொடுத்துவிட்டு சாரதம்மாவிடம் விடைப்பெற்று கொண்டு என் வீட்டிற்கு கிளம்பினேன்.
    நான் மதிக்கும் நட்பை, புத்தர் இருந்த இடத்தில் வைத்துவிட்டு, புத்தர் இருந்த பையை மறக்காது என்னுடன் எடுத்துக் கொண்டு அடுத்த வீடாகிய என் வீட்டினுள் நுழைந்தேன்.

     

    படம் உதவி:  https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/521972_578076128869715_666810801_n.jpg

     

    Share