Tag: புவனேஷ்வர்

  • காதலிதன் நலம் பாராட்டல்!

     

    புவனேஷ்வர்

     

    சித்திரமொன்று ஜீவனுயிர் பெற்று

    முத்தொளி யன்னநீ வந்தாய் – ஒரு

    செந்திரு வன்னாயுன் சோதிமு கங்கண்டு

    சிந்தை திறை கொடுத்தேன்;

     

    நிசித்திரள் மேகமுன் ஒண்குழலாமதில்

    வசித்திடும் முழுநிலவுன் ஒளிவதனம்;

    அந்தநிலா தேய்ந்தழிந்து பின்வளரும் காண் – என்றும்

    தேயாத திலகமிட்ட திங்களடி நீ.

     

    நினைக்கின்றேன் உன்னை நான் என்

    நினைவினில் வாழ்கின் றாய்நீ;

    பனிக்காலப் போர்வை போலும்

    இனிக்கின்ற இதம் நீ என்னில்;

     

    காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண் – உயர்

    காதல் நலமெனவே களி நடமிடுவோம்;

    காதலது நல்லின்பம், காதலி தெய்வம் – அதில்

    ஊறு சுவை உண்டு அது உயிர்கட்கமுதாம்;

     

    Share
  • மகாபாரத முத்துக்கள்! (பகுதி 7)

    புவனேஷ்வர்   

    மகாபாரத முத்துக்கள் பகுதி 7 – பாண்டியனின் வீரம்

    வணக்கம் அன்பர்களே,

    சென்ற வாரம், கணினிப் பிரச்சினையால் அடியேன் மகாபாரத முத்துக்கள் பகுதியை தர இயலவில்லை. பின்னூட்டங்களுக்கும் பதில் இட்டு நன்றி தெரிவிக்கவும் இயலவில்லை. வாசகர்கள் மன்னிப்பார்களாக.

    சரி.

    ஞானியர் எங்ஙனம் மான-அவமானங்களை, இன்ப-துன்பங்களை சமமாகப் பாவிக்கிறார்களோ, அங்ஙனமே போரில் வெற்றியும் தோல்வியும் ஒன்றே என்ற மனநிலையில் சுத்த மனம் உடைய வீரர்கள் போருக்குள் போகிறார்கள். எதிரியால் கொல்லப்படுவது அவமானமல்ல. புறங்காட்டுவதே அவமானம். இது பாரத தர்மம். இதுவும் கர்ம யோகம். இதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

    சென்ற பகுதியில், பாண்டியன், அஸ்வத்தாமனால் நிராயுதபாணியாக்கப்பட்டு இக்கட்டான நிலைமையில் இருந்ததைப் பார்த்தோம். இனி என்ன நிகழ்ந்தது எனப் பார்ப்போம்.

    பாண்டியன் ஆயுதங்கள் எல்லாம் இழந்து நின்றானா, அப்போது, என்ன செய்யலாம் என்று பார்த்தான். பயந்து ஓடுவது அவன் இயல்பில் இல்லை. அப்போது பார்த்து பாண்டவர் பக்ஷத்தில் இருந்து ஒரு மதம் பிடித்த, கட்டுக்கடங்காத யானை ஒன்று தறிகெட்டு பாண்டியன் இருந்த பக்கமாக தலைதெறிக்க ஓடி வந்தது. பார்த்தான் பாண்டியன். அதன் மேல் போருக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் உபகரணங்களும் இருந்தன. உடனே, வெண்ணை இருக்க நெய்க்கு அழுவானேன் என்று மகிழ்ந்த பாண்டியன், அந்த யானைதன் கழுத்தில் தாவி ஏறினான். யானை ஏற்றமும் யானைப் போர் முறைகளும் பழுதறக் கற்று அறிந்தவன் பாண்டியன். இதை அஸ்வத்தாமன் பார்த்து போருக்கு ஆயத்தமானான்.

    மதம் பிடித்த அந்த போர் யானையின் மேல் ஏறிய பாண்டியன், அங்குசத்தால் அதனை விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்தான். அதன் பின், முன் நடந்தது எதுவுமே தெரியாது போல மீண்டும் உக்கிரமான போரைத் துவக்க ஆயத்தமானான் பாண்டியன். தன்னைக் கையறு நிலைக்கு ஆளாக்கிய அஸ்வத்தாமனைப் பழி வாங்க எண்ணி அந்த யானையின் மேலிருந்த வேற்படையோன்றைத் தனது கையாற் பற்றி எடுத்தான் பாண்டியன். அஸ்வத்தாமனது தலையைக் குறி வைத்து அந்த வேலினை வீசி, “செத்தாய்” என்று கர்ஜித்தான். ஆனால் அந்த வேலானது கழுகு, கோழிக் குஞ்சைக் கவ்வுவது போல அஸ்வத்தாமன் தலையை கொய்யாமல், மலை முகட்டை, இடி தாக்குவது போல அவனது கிரீடத்தைத் தாக்கியது. முத்துக்களாலும் வைரங்களாலும் பொன்னிழைகளாலும் அலங்கரிக்கப்பட்ட அந்த அழகிய வேலைப்பாடுகள் அமைந்த கிரீடம், பாண்டியன் வேல் பட்ட மாத்திரத்தில் சுக்கு நூறானது.

    இந்த அவமானத்தை அஸ்வத்தாமனால் பொறுத்துக் கொள்ள இயலவில்ல. காலால் மிதிக்கப்பெற்ற கருநாகம் போலச் சீறிச் சினந்து, அஸ்வத்தாமன், பொங்கிய ஆத்திரத்துடன், கண்டோர்க்கு அச்சத்தைத் தரும் யமதண்டங்களை ஒத்த பதினான்கு அம்புகளைக் கைப் பற்றி எடுத்தான். எடுத்தவுடன் ஐந்து அம்புகளால் யானையின் துதிக்கை மற்றும் கால்களைத் துண்டித்தான். அடுத்த மூன்று அம்புகளால் பாண்டியனின் இரு கரங்களையும் தலையையும் துண்டித்தான். மீதமுள்ள ஆறு அம்புகளால், பாண்டியனுக்குக் காப்பாக வந்த ஆறு வீரர்களையும் யமாலயம் அனுப்பினான்.

    சந்தனமும் தைலமும்பூசி, வைரமணியாரமும் கொற்கை முத்துவடங்களும் அலங்கரித்த பாண்டியனின் திரட்சி மிக்க கைகள் துண்டிக்கப் பெற்று நிலத்தின் மீது விழுந்து துடித்த காட்சியானது கருடனால் வதம் செய்யப்பட்ட இரு ஐந்து தலை நாகங்கள் தரை மீது புரள்வது போல இருந்ததாம். ஒளிரும் குண்டலங்கள் தரித்து சிவந்த கண்களை உடைய பாண்டியனது தலை, இரு விண்மீன்களுக்கு இடையில் ஜொலிக்கும் நிலவைப் போலத் திகழ்ந்ததாம். பத்து துண்டங்கள் ஆன யானையும் பாண்டியனும், யஞ்யத்தில் வைக்கப்பெற்ற பத்து ஹவிர் பாகங்கள் போல காட்சி அளித்தனவாம்.

    இங்ஙனம், பல்வேறு வீரர்களையும் குதிரைகளையும் யானைகளையும் கொன்று ராக்ஷசர்களுக்கும் பேய்களுக்கும் விருந்தளித்த பாண்டிய மன்னன், நீரால் அணைக்கப் பெற்ற மயான நெருப்புப் போல, அஸ்வத்தாமனால் அடக்கப்பெற்றான். பலிச்சக்கரவர்தியை திருமால் அடக்கியதும் அவரை இந்திரன் போற்றித் துதித்ததைப் போல, கௌரவப் படைகளை நாசமாக்கிக் கொண்டிருந்த பாண்டியனை அஸ்வத்தாமன் கொன்றதும் கௌரவர்கள் அவனைப் பூஜித்தனர்.

    பி. கு:

    பாண்டியனைப் பற்றி நான் எழுத விழைந்ததின் காரணம், நம் தமிழ் அரசன் அந்த நாளில் பாரத யுத்தத்தில் கலந்து கொண்டான், நம் தொல்தமிழர் பண்பாடு அன்றே வேரூன்றி இருந்தது என்று எடுத்துக் காட்டவே. அதோடு மட்டும் அல்ல, mainstream பாரத தர்மத்தோடு இயைந்தே நமது தமிழ் நாட்டவர்களும் இருந்தார்கள் என்பதை விளக்கும் முகமாகவும் இஃது அமைந்தது.

    இனி வரும் பகுதிகள் யுத்தத்தை விவரிக்காமல் சற்றே மாறுபட்டவைகலாக இருக்கும். என்ன என்று பார்க்கிறீர்களா? நான் முன்னமேயே சொன்னது போல, பாரதத்தில் தரும உபதேசங்கள் வரும் பகுதிகளை இனி எழுதுவதாக உள்ளேன். போர்க்களக் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும் ஆனாலும், சிலருக்கு மட்டுமே பிடிக்கும்.

    திருமதி. மேகலா அவர்கள் புறநானூற்றில் அரசியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் எழுதவும் எனக்கு இது தோன்றியது. ஏராளமான அரசியல் சிந்தனைகள் பாரதத்தில் உண்டு. அவற்றை இனிப் பார்ப்போம்! என்ன, பார்க்கலாமா? 🙂

    Share
  • சிலம்பு காட்டும் தமிழகத்தில் வேதமதம் – ஒரு சிறு அலசல்

    புவனேஷ்வர்

    திருமதி. மேகலா அவர்களின் உரையில் (http://www.vallamai.com/?p=38420&cpage=1#comment-8775) அவர் சொன்ன வரி அடியேன் கவனத்தை ஈர்த்தது.

    //ஒரு சாதாரணப் புலவர் அரசனையே கண்டிக்கின்றார் என்றால்….//

    சொல்லாமல் இருக்க முடியவில்லை. சிலம்பில் இதற்கு ஒரு மிக அழகிய உவமையை இளங்கோ சொல்வார்.

    ஆட்சிக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் ஆகிய பின்னும் செங்குட்டுவன் மறக்கள வேள்விகள் (போர்) செய்வதை விட்டு விட்டு அறக்கள வேள்விகளைச் செய்ய வேண்டும் என மாடல மறையோன் அறிவுரை சொல்கிறான்.

    அதனை 
    “மறையோன் மறைநா உழுது வான்பொருள்
    இறையோன் செவிசெறு வாக வித்தலின்
    வித்திய பெரும்பதம் விளைந்துபத மிகுத்துத்
    துய்த்தல் வேட்கையிற் சூழ்கழல் வேந்தன்
    நான்மறை மரபின் நயம்தெரி நாவின்
    கேள்வி முடித்த வேள்வி மாக்களை
    மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
    வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி”

    என்கிறார். அதாவது: “மாடல மறையோன் விதைத்த விதையாகிய பெரும்பொருள் விளைவாகிய உணவினை மிகுதியாகத் தந்தது. அதன் பயனை நுகர விரும்பினான் வீரக் கழல் அணிந்த சேர வேந்தன். நான்கு வேதங்களையும் குறைவற ஓதி, பொருள் உணர்ந்த,  உச்சரிப்புப் பிழை அறவே நீங்கிய நாவினை உடைய அந்தணர்களை, மாடல மறையோன் கூறிய வண்ணம் வேள்வியினைச் செய்ய ஏவினான்” என்று பொருள்.
    ilango 1
    இதில் இருந்து சில விஷயங்கள் தெரிகின்றன.

    1. புலவர்கள், அந்தணர்கள், சான்றோர் வாக்குக்கு மரியாதை தந்தார்கள் அரசர்கள்.
    2. இன்றைக்கு தென் மாவட்டங்களில் ஒரே குடும்பத்தில் கிறிஸ்தவரும் ஹிந்துக்களும் இருப்பது போல, அந்நாளிலும் ஒரே குடும்பத்தில் சமணரும் வேத மதத்தைப் பின்பற்றுபவரும் இருந்தனர். (சேரனின் உடன்பிறந்தவர் இளங்கோ, அவர் சமணர், துறவி).
    3. அந்த காலத்தில் தமிழகத்தில் ஐயத்திற்கு இடமின்றி வேத பாராயணம் இருந்தது. நான்கு மறைகளை ஓதிய அந்தணர் என்கிறார். நயம் தெரி நா – வேதத்துக்கு முக்கியம் உச்சரிப்பு. அந்த நயம் அறிந்து பிழை அற்ற உச்சரிப்பை உடைய நா முக்கியம்.

    சமணரான இளங்கோவே இப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? சமணர்கள் சத்திய வாக்குடைய விரதம் பூண்டவர்கள். சொன்ன சொல் காப்பவர்கள். அந்த வாய்மையை தலையாயதாகக் கொண்டே, தனது மதத்துக்கு நேர் விரோதமான வேத மதத்தையும், அதன் வரவளையும் வழக்குகளையும் மூடி மறைக்காமல் உள்ளது உள்ள படி, இருந்த விதத்தை சொல்கிறார் இளங்கோ.

    இங்கே மட்டுமல்ல, பல கட்டங்களில் இது வரும். மதுரைக் காண்டத்தில் “அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும்” மற்றும் “நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும், மாதவர் ஓதி மலிந்த ஓதையும்” எனும் வரிகள், காலையில் மதுரை மக்களை வேத கோஷம் எழுப்பியது என்று காட்டுகிறது. ஆகுதி என்றால் வேள்வியில் சொரியும் ஹவிஸ் – நெய். இது வேத வழக்கம்.

    அது மட்டுமல்ல.

    மகுரைக் காண்டத்தில், கட்டுரைக் காதையில் சோழதேசத்தில் வாழ்ந்த பராசரன் என்னும் வேதப் பிராம்மணன் கதையும் வருகிறது.

    “பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன்
    தாங்கா விளையுள் நன்னா டதனுள்
    வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
    குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
    வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
    திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
    காடும் நாடும் ஊரும் போகி
    நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு
    ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
    முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
    ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
    அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க
    நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப்
    பார்ப்பன வாகை சூடி ஏற்புற
    நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன்
    செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர்
    தங்கா லென்ப தூரே அவ்வூர்ப்
    பாசிலை பொதுளிய போதி மன்றத்துத்
    தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்
    பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு
    களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை
    விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி
    கடற்கடம் பெறிந்த காவலன் வாழி
    விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி
    பூந்தண் பொருநைப் பொறையன் வாழி
    மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கெனக்
    குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த்
    தளர்நடை யாயத்துத் தமர்முதல் நீங்கி
    விளையாடு சிறாஅ ரெல்லாஞ் சூழ்தரக்
    குண்டப் பார்ப்பீ ரென்னோ டோதியென்
    பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்னெனச்
    சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன்
    ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்

    பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த்
    தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது
    உளமலி உவகையோ டொப்ப வோதத்
    தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து
    முத்தப் பூணூல் அத்தகு புனைகலம்
    கடகம் தோட்டொடு கையுறை ஈத்துத்
    தன்பதிப் பெயர்ந்தனன்”

    Puhar-ILango

    அறநெறியிலே செல்லும் செங்கோலையும் வீர நெறியிலே செல்லும் வாளையும் உடையவனாக, அடைக்கலம் என வந்த புறாவின் பொருட்டு துலாக் கோலிலே புகுந்தவனான சிபியும், ஒரு பசுவுக்காகத் தனது அருந்தவப் புதல்வனையே தெரிந்து வலிய காலிலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் ஆண்ட, நீர்வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த புகார் நகரத்தை உடைய சோழ நாட்டில், அறிவில் வல்ல பராசரன் என்னும் ஒரு அந்தணன் இருந்தான்.

    அவன், பாரதப் போரில் இருதிறத்துப் படைகளுக்கும் ஒருசேர மிகுதியாகச் சோறு வழங்கிய உதியன் சேரலாதனின் வள்ளன்மையை கேள்வியுற்று அவன் சபையில் நடந்த சதஸிலே கலந்து கொண்டான்.

    அங்கு,
    “ஒன்றுபுரி கொள்கை யிருபிறப் பாளர்
    முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
    ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழி லோம்பும்
    அறுதொழி லந்தணர்”

    என அந்தணர்களுக்கு வகுக்கப்பட்டபடி, வாதத்தில், அத்வைதத்தில் ஊறிய கொள்கையை உடைய பிற அந்தணர்களை வென்று பார்ப்பன வாகை சூடி, அரசனளித்த பரிசுகளாகிய நன்கலங் கொண்டு தனது ஊருக்குத் திரும்பினான். கஹோளர் மகன் அஷ்டாவக்கிரன் vs வந்தி (வருணகுமாரன்) சரித்திரம் மகாபாரதத்தில் காண்க.

    செங்கோற் தென்னன் ஆட்சிக்குட்பட்ட  திருந்து தொழில்மறையவர் வாழும் திருத்தங்கலூர்என்னும் ஊரில், ஊர்ப்பொதுவில் இருந்த அரசமரத்து மேடையில் களைப்பாறி யிருந்தான். தன்னுடைய,

    “தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்,
    பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு
    களைந்து”

    மூவேந்தர்களையும் வாழ்த்தி இருந்தனன். அந்தணர்களுக்கு எந்த நாடும் அவர் நாடே. இது பாரத தர்மம். அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அந்தணச் சிறார்கள் அவனைச் சூழ்ந்து கொள்கின்றனர். அக்குழந்தைகளைக் கண்டு மகிழ்ந்த பராசரன், என்னோடு சேர்ந்து உச்சரிப்பு மாறாது வேதம் ஓதினால், இப்பரிசுப் பொருள்கள் அனைத்தையும் பெரிவீர்கள்” எனஅன்புடன் அழைத்தான்.

    அப்பொழுது, வார்த்திகன் எனும் அந்தணனின் புதல்வன், ‘ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்’ (ஆலமர்செல்வன் பெயர் – தக்ஷிணாமூர்த்தி) மழலை மாறாத குழந்தையாயினும் பராசரன் சொன்ன மறைகளைச் சந்தம் பிழையாது கூறினான் மறைவிளி வழாஅ) அதனால் மகிழ்ந்த பராசரன் அவனை  மிகவும் பாராட்டித் தன்னிடம் இருந்த பரிசுப்பொருள்களை ஈந்து தன் வழி சென்றான்.

    பராசரன் என்னும் பெயர் இன்றும் தமிழ்ப் பார்ப்பனர்களிடையே வழங்கி வருகின்றது. அந்தணர்களின் கோத்திரப் பெயர்களில் ஒன்றாகவும் வழங்கி வருகின்றது. மறையவர்கள் அத்வைதம் என்னும் கொள்கையராகையால், ‘ஒன்றுபுரி கொள்கை இருபிறப்பாளர்’ என்றார். ஆஹவனீயம், கார்ஹபத்யம், தக்ஷிணாக்னி எனும் முத்தீயோம்பும்அந்தணரை முத்தீ அந்தணர் எனபது வழக்கு. ஐந்து வேள்விகளை செய்பவர் ஐந்தி ஒம்புபவர்.

    அரசனிடம் தானம் வாங்கியதும் பிராமணன் சத்பாத்ரங்களுக்கு அதை தானமாக கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் பரிக்ரஹ தோஷம் (ஆசைப்பட்டு தானம் வாங்கிய தோஷம்) நீங்கும். அதை பராசரன் செய்தான்.

    இது வேத வழக்கம்.

    அறுதொழிலோர்: வேதம் ஓதுதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், செய்வித்தல், தானம் வாங்குதல், தானம் கொடுத்தல் ஆகிய ஆறு தொழில்களைச் செய்தது வேத அந்தணர்கள்.

    ஒரு சமணத் துறவியே, வேத வழக்கம் தமிழகத்தில் வேரூன்றி இருந்ததை நடுவு நிலையோடு சொல்கிறார். அவர் பிராம்மணன் ஆனால் கூட ஏதோ இட்டுக் கட்டி சொல்கிறான் பார்ப்பான் என்று வையலாம். தனக்கு ஆகாத மதமான வேத மதத்தை இவர் ஏன் இருந்ததாகச் சொல்ல வேண்டும்?  தமிழ் நாகரிகத்தில் வேதத்துக்கு இடமில்லாததாக சொல்லும் மக்கள் இதை எல்லாம் கவனிப்பார்களா?

    படங்களுக்கு நன்றி:

    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Puhar-ILango.jpg

    http://susenthilkumaran.blogspot.com/2010/11/blog-post.html

    Share
  • மகாபாரத முத்துக்கள் பகுதி 6 – பாண்டியனின் வீரம் II

    புவனேஷ்வர்

    அன்பர்களே, சென்ற வாரம், பாண்டியனை அஸ்வத்தாமன் அறைகூவி அழைத்ததை பார்த்தோம். இனி என்ன நிகழ்ந்தது என்று பார்க்கலாம்.

    கௌரவப் படையைக் காப்பாற்ற பாண்டியனைத் தானே இனி தாக்க வேண்டியது அவசியம் எனக் கருதி, அஸ்வத்தாமன் இனிய வார்த்தைகளால் பாண்டியனோடு பேசலுற்றான்.

    “நற்குலப் பிறப்பும், ஒப்பற்ற கல்வியும் வீரமும், தாமரை போன்ற கண்களையும் உடைய பாண்டிய அரசே! வாரத்திலும் புகழிலும் உனக்கு இந்திரனே நிகராவான். வலிய நினது கைகளால் வில்லைப் பற்றி நானை இழுத்து அம்புகளை நீ உன் பகைவர்கள் மீது பொழியும் காட்சி, ஊழிக்காலத்தில் காண்போர் அஞ்சும் கருமேகங்கள் மழையை போஹிவது போல உள்ளது! உனக்கு நிகராக நின்று போரிடக் கூடிய வீரனை எங்கள் படையில் என்னைத் தவிர வேறு யாரையும் நான் காணவில்லை. தன்னந்தனியாக ஒரு சிங்கம் காட்டில் மான்களை துரத்தி வேட்டையாடி அழிப்பது போல நீ தனி ஒருவனாக நின்று தேர்களையும் யானைகளையும் குதிரைகளையும் காலாட்படைகளையும் உனது வில்வன்மையால் அழிக்கிறாயே! வயல்களை அழித்து விடும் இடியுடன் கூடிய மழை மேகம் போல, உன் சிம்ம நாதங்களுடன் நீ போர் புரிந்து ஜொலிக்கிறாய். சட்டை உரித்த விஷ நாகங்களை ஒத்த உனது அம்புகளை உன் அம்புறாத்தூணியில் இருந்து எடுத்து விடுத்து, அந்தகாசுரன் முக்கண்ணனுடன் பொருதது போல நீ என் ஒருவனுடன் மட்டும் போர் இயற்ற வல்லாயோ?” என்று அறைகூவல் விடுத்தான்.

    “அப்படியே ஆகட்டும்” என்றான் பாண்டியன்.

    “தாக்கு” என்று சொல்லி விட்டு, அடுத்தக்ஷணம் பாண்டியன் மேல் சரமாரி பொழிந்தான் அஸ்வத்தாமன். கூரிய ஒரு அம்பினால் அஸ்வத்தாமனை தாக்கினான் பாண்டியன். பாண்டியனின் மர்மஸ்தானங்களைக் குறிவைத்து, நெருப்பை ஒத்த அம்புகளை விடுத்தான் அஸ்வத்தாமன். அது போதாதென்று பத்து நாராசங்களையும் எய்தான். பயமற்ற பாண்டியன் அவற்றை தனது ஒன்பது அம்புகளால் துண்டித்தான். பாண்டியனின் பெயர் பொறித்த நான்கு கணைகள் அஸ்வத்தாமனின் நான்கு குதிரைகளை முடித்தன. அஸ்வத்தாமன் அவ்வேளையில் எய்த மற்ற அம்புகளை தனது அம்புகளால் சுலபமாக தடுத்து விட்டு அச்வத்தாமனுடைய வில்லின் நாணை அறுத்தான் பாண்டியன். அதற்குள் தனது பணியாளர்களால் தனது தேருக்கு புதிய புரவிகள் பூட்டப்பெற்றதை அறிந்தவனாக அஸ்வத்தாமன் தைரியம் கொண்டு மீண்டும் நானேற்றி ஆயிரம் ஆயிரம் அம்புகளை மிக விரைவில் பாண்டியன் மீது எய்தான். இந்த வியத்தகு வில்வன்மையால் வானம் பறவைக் கூட்டத்தால் மூடப்பட்டது போல மூடப்பட்டது. கீழே அம்புகளின் நிழல் வீழ்ந்து வெயிலை மறைத்தது. அஸ்வத்தாமனின் அம்புகள் தீரா என்று நன்கு அறிந்திருந்தும், வீரச் செருக்கு கொண்ட மறத்தமிழன் பாண்டியன் அந்த அம்புகளை தனது அம்புக் கூட்டத்தால் தடுத்துத் தள்ளினான். மிகக் கவனமாக வில்லேந்தி ஒவ்வொரு அம்பையும் தடுத்து வெட்டிய பாண்டியன், இடைப்பட்ட சந்தர்ப்பங்களில் சில கூரிய வாளிகளைத் தொடுத்து அஸ்வத்தாமனின் இரு சக்ர-ரக்ஷகர்களை [1] யமாலயம் அனுப்பினான்.

    இதுவரை பாண்டியனை புகழ்ந்து கொண்டும், அவன் வில்வன்மையை ரசித்துக் கொண்டும் அவனோடு விளையாட்டாக போரிட்ட அஸ்வத்தாமன் பாண்டியனின் லாகவத்தைக் கண்ட அஸ்வத்தாமன் இப்போது எச்சரிக்கையோடு முன்னிலும் உக்கிரமாக போரில் முனைந்தான்.

    அஸ்வத்தாமன் ருத்ராம்சமாகப் பிறந்தவன். அந்தணனுக்குப் பொருந்தாத கோபக் குணம் இயல்பாகவே உடையவன். இப்போது பாண்டியனோடு புரியும் போரில் நிஜமாகவே அவனுக்கு சற்று ஆத்திரம் வந்தது.

    துரோணர் தனது மகனுக்கு அளித்த விற்போர்ப் பயிற்சி, வேலையைக் காட்டத் துவங்கியது. அஸ்வத்தாமனது வில் எப்போதும் வட்டமாக வளைந்தது போலவே காட்சிதரத் துவங்கியது. ஆலமரத்தில் தங்கும் பறவைகள் மாலை வேளையில் மரத்தை நோக்கி விரைந்து வருவது போல அஸ்வத்தாமனின் அம்புகள் பாண்டியனின் தேரை நோக்கி வர ஆரம்பித்தன. அடுத்தடுத்த அம்புகள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு வருவன போல பாண்டியன் தேரை நோக்கி விரைந்தன. பாண்டியனும் அதற்குச் சளைக்கவில்லை. தனது அம்புமழையால் அஸ்வத்தாமன் விடுத்த அம்புகளை தடுத்துக் கொண்டு போரிட்டான். ஆயினும் அவனால் அச்வத்தமனைக் காயப் படுத்த முடியவில்லை. அச்வத்தாமனாலும் பாண்டியனைத் துளைக்க முடியவில்லை. இப்படியே வெற்றி தோல்வி இல்லாமல் நேரம் போவது தெரியாமல் இருவரும் வெறி கொண்டவர்கள் போல போரிட்டார்கள்.

    கொஞ்சம் நேரமல்ல. சில நிமிஷங்கள் அல்ல, மூன்று மணி நேரம் இந்த போர் வெற்றி தோல்வி இன்றி மும்முரமாக நிகழ்ந்தது. இருவருக்குமே, எதிராளி எய்த அம்புமழையை தன் மேல் விழாமல் தற்காத்துக் கொள்வது பெரும்பாடாக இருந்ததால், தற்காப்புப் போரே முக்கிய வேலையாயிற்று. அதில் எங்கிருந்து எதிராளியைத் தாக்குவது? ஒரு க்ஷணம் எதிராளி கவனம் சிதற மாட்டானா, அதைப் பயன்படுத்தி அவனை முடித்து விடலாம் என்று இருவருமே புலி பதுங்குவது போல காத்துக் கொண்டு போரிட்டார்கள்.

    மூன்று மணி நேரத்தில் அஸ்வத்தாமன் எவ்வளவு அம்புகளை எய்தான் தெரியுமா? வண்டிக்கு எட்டு காளைகள் பூட்டிய எட்டு மாட்டு வண்டிகள் மீது வைத்து இருந்த அத்தனை அம்புகளையும் மூன்றே மணி நேரத்தில் பாண்டியன் மீது எய்து அவனைக் கொல்லப் பார்த்தான் அஸ்வத்தாமன். அத்தனையையும் தடுப்பதிலேயே பாண்டியனின் கவனம் இருந்தது. யமனைப் போல, அல்ல அல்ல, யமனுக்கே யமனைப் போல (சிவனைப் போல) அஸ்வத்தாமன் படைகளுக்குக் காட்சி அளித்தான். மாரிக்கால மேகம் மழை பொழிவது போல சரவர்ஷம் பொழிந்த துரோணரின் புதல்வனை பாண்டியன் தனி ஒருவனாக, பொங்கும் பருவகாலக்கடலை கரை தடுத்துத் தாங்குவது போலத் தாங்கினான்.

    நேரம் ஆனது. ஒரு கட்டத்துக்கு மேல் பாண்டியனுக்கு பொறுமை போய் விட்டது. மூன்று மணி நேரமாக இவன் அம்புகளைத் தடுப்பதிலேயே இருக்கிறோமே என்று சலித்து விட்டது பாண்டியனுக்கு. சலிப்பு ரௌத்ராகாரமான கோபமாக வெளிப்பட்டது.

    இது வரை மனுஷ்ய ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தினார்கள் இருவரும். பாண்டியனுக்கு சலிப்புத் தட்டியது. ஆயிரம் ஆயிரமாக வந்த அம்புகளை ஆயிரம் ஆயிரமாக அம்பு விட்டுத் தடுப்பது வீண் வேலை. இந்தப் பிராம்மணனுக்கு களைப்பு என்பதே கிடையாது, ஆகவே இவன் விடுக்கும் படைகளை ஒரே அம்பில் அழிப்போம் என்று எண்ணினான் தென்னாட்டு வீரன். வாயவ்யாஸ்திரத்தை எடுத்து மந்திரித்து விடுத்தான். கிளம்பிய புயற்காற்றில் அஸ்வத்தாமன் விடுத்த எல்லா அம்புகளும் வந்த வழியே கௌரவர் படைகளை நோக்கியே சிதறி தாறுமாறாகப் பறந்தன. கௌரவர் படை சிதறியது. புகழையும் மானத்தையும் காலத்திலேயே விட்டுவிட்டு ஓடினார்கள். இந்த உலகத்தையும் மேலுலகத்தையும் துறந்து கௌரவர் படை சிதறியது. (தோல்வியால் இவ்வுலக சுகமில்லாமல் போனது. புறம் காட்டி ஒடியதால் மேலுலகமும் – வீரஸ்வர்க்கமும் இல்லாது போனது).

    இதைக் கண்ட பாண்டியன் சிம்மநாதம் செய்து தோள்தட்டி ஆர்ப்பரித்தான். அஸ்வத்தாம மேகம் பொழிந்த மழையை பாண்டியப் புயல் சிதறடித்து கர்ஜித்தது.

    இதைப் பொறுக்காத அஸ்வத்தாமன் பாண்டியனின் சந்தனம் பூசிய தேர்க்கொடியை அறுத்துத் தள்ளினான். நொடிப் பொழுதில் அவன் குதிரைகளைக் கொன்றான். ஒரே அம்பில் பாண்டியனின் சாரதியை கொன்று, ஒரு அர்த்த சந்திர பாணத்தால் பாண்டியனின் வில்லையறுத்தான் அஸ்வத்தாமன். அதன் பின்னர் ஆத்திரத்தால் பாண்டியனின் தேரினையும் சிறு துண்டுகளாகப் பிளந்தான். பாண்டியன் தேரில் இருந்த எல்லா ஆயுதங்களையும் தனது அம்புகளால் அழித்தான். பாண்டியனைக் கொல்ல அவனுக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் பாண்டியன் நிராயுதபாணியானதாலும், பாண்டியனோடு இன்னும் கொஞ்சநேரம் போர்புரியும் ஆசையாலும் பாண்டியனை அந்த அந்தணன் கொல்லவில்லை. அந்தநேரம் பார்த்துக் சூதபுத்திரன் கர்ணன் யதேச்சையாக அங்கே வந்தான். பாண்டவர் படைகளை தனது அம்புகளால் சிதறடித்தான். அஸ்வத்தாமன், பாண்டியனைக் கொள்ளாமல் சற்று காத்திருந்தான்.

    பாண்டியன் ஆயுதமும் தேரும் எல்லாவற்றையும் இழந்தாலும் வீரம் மட்டும் இழக்கவில்லை. வலிய தனது இரு கரங்களைத் தவிர வேறு ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் நின்ற நிலையிலும், புகழும் மானமுமே பெரிதென்று வாழும் தொல்தமிழர் குடிப் பிறந்த அம்மன்னன் புறங்காட்டவில்லை. பயம் என்பதே அறியாத அம்மன்னன், அஸ்வத்தாமன் மீது மிக்க சினம் கொண்டு அம்மன்னன் சுற்று முற்றும் பார்த்தான்.

    ஆங்கிலத்தில், Fortune favours the brave என்றொரு முதுமொழி உண்டு. ஆங்கில இலக்கிய உலகத்தில் அழியாப் புகழ் பெற்ற Macbethஇல் Bellona’s bridegroom (வெற்றித்தேவதையின் காதலன்) என்று அந்த வீரனை (Macbethஐ) ஷேக்ஸ்பியர் வர்ணிப்பார். அது போல பாண்டியன் நின்றான் என்றால் மிகையன்று.

    அந்நேரம் பார்த்து அங்கே பாண்டவர் படையைச் சேர்ந்த ஒரு பெரிய யானை வந்தது. அந்த யானை மேல் எல்லா விதமான ஆயுதங்களும் இருந்தன. மதம் பிடித்த அந்த யானை, அடக்குவார் யாருமின்றி பாகனில்லாமல் அந்தப் பக்கம் தன்னிச்சையாக ஓடி வந்தது. பாண்டியன் பார்த்தான். வெண்ணை இருக்க நெய்க்கு அழுவானேன் என்று எண்ணிய பாண்டியன் அடுத்து செய்ய வேண்டியதை மனதில் நிச்சயித்துக் கொண்டான்.

    என்ன செய்தான் பாண்டியன்?

    அது அடுத்தவாரம், அன்பர்களே!

    பிரியங்களுடன்,

    புவனேஷ்

    உபரித்தகவல்கள்:

    [1] சக்ர ரக்ஷகர்கள்:

    ஒவ்வொரு மகாரதனுக்கும், அதிரதனுக்கும் அவனது வலப்புறமும் இடப்புறமும் இரண்டு புகழ் பெற்ற மாவீரர்கள் துணையாகச் செல்வார்கள். இவனுக்கு அவர்கள் சளைத்தவர்கள் அல்ல. யார் நடுவில் போவது, யார் பாதுகாப்பது என்பதை அவர்கள் பேசித் தீர்மானித்துக் கொண்டு போவார்கள். பல சமயங்கள் நெருங்கிய நண்பர்களோ, உறவினர்களோ இப்படி கூட்டாகப் போவது வழக்கம். அவனைத் தாக்கும் படையைத் தாங்களும் தாக்கி வழி உண்டாக்குவார்கள், பாதுகாப்பார்கள். இவன் தேர் உடைந்தால் அவர்கள் தேரில் ஏற்றுக் கொள்வார்கள். இவர்களும் அவன் தேரில் தேவைப் பட்டால் ஏறுவார்கள். அவன் மீது எய்யப்பட்ட ஆயுதங்களை இவர்கள் தடுப்பார்கள். இவர்களை அவன் பாதுகாப்பான். இன்றைக்கு விமானப்படையில் WING MAN என்று கூடப் போகிறார்களே, அதே தான். நினைவிருக்கட்டும், இவர்கள் சம வீரர்கள். பணியாட்கள் இல்லை. team work ஆக செயல்படுவது.

    அர்ஜுனனுக்கு என்றுமே துருபதன் மக்களாகிய உத்தமொஜசும் யுதாமன்யுவும் கூடப் போவார்கள். அவர்கள் இவனுக்கு மைத்துனர்கள், அவர்களும் மகாரதர்கள். தருமனுக்கு நகுலனும் சகாதேவனும் எப்போதும் கூடப் போவார்கள்.

    சில சமயம், தன்னிலும் உயர்ந்த வீரர்களை இப்படி துணையாக அழைத்துப் போவதுண்டு. மிகவும் பணிவாக வேண்டிக் கொள்வார்கள்! முதல் போருக்கு செல்லும் மகனாகவோ, அனுபவம் அற்ற சிஷ்யனாகவோ, மிகவும் பிரியமானவனாகவோ இருப்பின் பெரியோரே வலிய துணை செல்வதும் உண்டு.

    பீஷ்மரைக் கொல்ல சிகண்டிக்கு அருச்சுனனும் பீமனும் இப்படி துணையாக போனார்கள்,

    காலாள் வீரர்களுக்கு துணையாக போகிறவர்கள் “பாத ரக்ஷகர்கள்”. புகழ் பெற்ற சாரதி ஆனால் (அதாவது அவன் கொல்லப்பட்டால் அவனைப் போல இன்னொருத்தன் இல்லை என்ற நிலை இருப்பின்) அவனுக்கு பாதுகாப்பானவர்கள் பார்ஷ்ணி ரக்ஷகர்கள்.

    Share
  • மகாபாரத முத்துக்கள்!…(பகுதி 5)

    புவனேஷ்வர்    

     

    மகாபாரத முத்துக்கள்!…(பகுதி 5) – பாண்டியனின் வீரம்!

    சென்ற நான்கு வாரங்களாக நாம் பூரிசிரவஸ் வதத்தைப் பார்த்தோம். இந்த வாரம், நாம் நம்முடைய தமிழ் தேசத்து அரசன் பாண்டியனின் வீரத்தை பார்ப்போம். ஆம். மலையத்வஜன் பாண்டியன். இவன் நம்மவனே. மலைய பர்வதத்தை தனது கொடியில் உடையவன். தென்னாட்டவன், மலைய பர்வதத்தைத் தனது கொடியில் உடையவன் என்றே வியாசர் சொல்கிறார்.

    இவன் பாண்டவர் பக்கம் போரிட்டான்.

    நாம் பார்க்கப் போவது பதினாறாம் நாள் யுத்தம். பதினைந்தாம் நாள் பிற்பகலில் துரோணர் பிரம்மலோகம் ஏகினார். அவர் பாஞ்சாலனால் கொல்லப்படவில்லை. சமாதி நிலையில் அமர்ந்து, அந்த உத்தமர் ஜோதி வடிவமாக சென்றார். அவர் பிரகஸ்பதியின் அவதாரம். அருச்சுனன், கண்ணன், தருமன், சஞ்சயன் மற்றும் அஸ்வத்தாமன் கண்களுக்கு மட்டுமே அவர் ஜோதியாக சென்றது புலப்பட்டது. பாஞ்சாலன் வெட்டியது அவர் விட்டுப்போன உடலை மட்டுமே.

    சரி. நாம் பார்ப்பது கர்ணன் சேனாதிபதியாக அபிஷேகம் செய்யப்பட்டு போரிட்ட காலம். பதினாறாம் நாள். அருச்சுனன் அஸ்வத்தாமனோடு போரிட்டு அவனை விரட்டி விட்டு சம்சப்தகர்களை எதிர்த்து நிர்மூலம் பண்ணினான். அப்போது திடீரென்று போர்க்களத்தில் ஒரு பெரும் கூச்சல், ஆரவாரம் ஏற்பட்டது. அருச்சுனனும் கிருஷ்ணனும் என்னடா இது என்று பார்த்தனர். பார்த்தால், அங்கே யாரோ கௌரவர் படையை நாசம் பண்ணுவது புலப்பட்டது. கிட்டே போய் பார்த்தால் தெரிந்தது அது தென்னாட்டுப் பாண்டியன் என்று. தனது தேர் மேல் நின்று, சூரிய மண்டலத்தில் இருந்து கதிர்கள் வெளிப்படுவது போல, அம்புகளை எல்லா திசைகளிலும் செலுத்திக் கொண்டு, யமனே இன்னொரு உருவம் எடுத்து வந்து வாய் திறந்த அந்தகனாக போரிடுவது போல தோன்றியது. இந்திரன் அசுரர்களை அழிப்பது போல பாண்டியன் கௌரவர்களை நசித்தான். அவனது கூரிய அம்புகள் கரிகளையும், பரிகளையும் துளைத்து பூமியில் விழுந்தன. நீருக்குள் எய்த அம்பு எவ்வாறு நீருக்குள் உட்புகுமோ அது போல இரும்புக் கவசங்கள் அணிந்த எதையும் அவன் விடுத்த பலவிதமான அம்புகள் [2] துளைத்தன. அவன் முன் வந்த எதிரிகள் அவன் தேரை ஒருமுறை தான் பார்த்தனர். மறுமுறை பார்க்க அவர்கள் உயிரோடு இருக்கவில்லை. அதற்கு வாய்ப்பில்லாமல் யமன் வீட்டுக்கு விருந்தாளியாக போனார்கள்.

    இப்படி சஞ்சயன் சொல்லிக்கொண்டே வருகையில் அதைக் கேட்ட திருதராஷ்டிரன் மிக்க வியந்தான். அவனுக்கு பாண்டியனைப் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. “சஞ்சயா, உலகப்புகழ் பெற்ற பாண்டியன் பெயரை நீ முன்னொரு முறை கூறியதாக நினைவிருக்கிறது. ஆனால் அவன் புரிந்த வீரச்செயல்கள் எதையும் நீ கூறவில்லை. இப்பொழுது சொல், அவன் வலிமை எத்தகையது? அவன் வீரம் எத்தகையது? அவன் திறமை எத்தகையது? அவன் வீரச்செருக்கு எத்தகையது?” என்று கேட்டான்.

    “பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமன், கர்ணன், பார்த்தன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோரை தனுர்வேதத்தில் கரைகண்டவர்களாக நீர் நினைக்கிறீர். ஆனால் பாண்டியனோ, அவர்களிலும் மேலாந்திறமை படைத்தவனாக பெருமிதம் கொள்ளும் இயல்பினன். இங்குள்ள எந்த அரசனையும் தனக்கு இணையாக அவன் நினைத்தானல்லன். பீஷ்மரையும் கர்ணனையும் தனக்கு நிகரானவர்களாக அவன் ஒப்புக் கொள்வதில்லை. ஏன், அருச்சுனனையும் கிருஷ்ணனையும் விட தான் எந்த விதத்திலும் தாழ்ந்து விட்டதாக அவன் எண்ணவில்லை.

    பாண்டவர்களுக்கு உமது மதிகெட்ட மக்கள் இழைத்த அநீதிகளை கண்டு நெஞ்சம் பொறாதவனாய், செங்கோல் வளையாத நீதிமானான பாண்டியன்  வெஞ்சினம் மேலிட்டு, வஞ்சினமுரைத்து, கூற்றுவனே மானிட உருக்கொண்டு கொலைத்தொழில் புரிவது போல அங்கே நும் மூட மகனின் படைகளை சிதறடிக்கின்றான்.

    தேர்களும் புரவிகளும் யானைகளும் காலாட்களும் நிரம்பி வழியும் அந்த சேனா சமுத்திரம், சுழிக்காற்றுப் போன்ற அம்மன்னனின் கணைகளால் துளைக்கப்பெற்று, குயவனுடைய சக்கரம்போல அங்கே சுழன்று சிதறுகிறது! கௌரவ மேகங்களை பாண்டிய புயற்காற்று சிதறடிக்கிறது! கூரிய அம்புகளை தனக்கு நாலாப்புறங்களிலும் செலுத்தி, மூடன் துரியோதனனின் படைகளை பாண்டியன் எரிக்கும் காட்சி, ஆயிரம் கதிர்களை உடைய ஞாயிறு இருளைப் போக்குவதைப் போல உள்ளது! அதோ, கரிய பெரிய மலைமுகடுகளை இடி பிளப்பது போல, அவனது அம்புகள் யானைகளின் மத்தகங்களைப் பிளக்கின்றன. யானைகளின் மேலுள்ள கொடிகளை துண்டித்து, அதன் மேலுள்ள ஏழு வீரர்களை யமாலயம் அனுப்பி, யானைகளைப் பாதுகாக்கும் வீரர்களையும் அவர்களுக்கு துணையாக அனுப்பி யானைகளையும் கொல்கிறான் பாண்டியன். குதிரை, குதிரை மேலிருப்பவன், அவன் ஆயுதங்கள் – இவை யாவையும் ஒருசேர அழிக்கிறான் பாண்டியன்! புறம் காட்டாத புலிண்டர்கள் (குறவர்கள் – முருகன் மனைவியாரான வள்ளியின் குலம்), பாலிகர்கள் (Baluchistan காரர்கள்), நிஷாதர்கள், போஜர்கள், அந்தகர்கள், தென்னாட்டவர்கள் யாரும் அவனிடம் இருந்து தப்பவில்லை! கவசமுடைந்து ஆயுதங்கள் அழிந்து அவர்கள் உயிரை விட்டனர்.” சஞ்சயன் கண்ணிழந்த அரசனுக்கு இங்ஙனம் பாண்டியனின் வியத்தகு வீர்யத்தை உரைத்தான்.

    இந்நிலையில், பாண்டியனை அஸ்வத்தாமன் பார்த்தான். “சரிதான், இவனை இப்படியே விட்டால் கௌரவப் படை சற்று நேரத்துக்குள் நாசமாகி விடும் போலிருக்கிறதே! இவன்றன் தோள்வலியைத் தாங்கும் திறன் இப்படையில் யான் ஒருவனே படைத்துள்ளேன். இனியும் பொறுத்தல் பிழை” என்று பாண்டியனைக் கண்டு தன் படைகளை எண்ணி மிக அஞ்சிய அஸ்வத்தாமன், காற்றினும் கடிய தனது தேரில் பாண்டியனை நோக்கி விரைந்தான். பகைவன் ஆயினும், பாண்டியனை மெச்சிப் புகழ்ந்து போருக்கு அழைத்தான்.

    க்ஷத்திரியனானவன், பகைவன் அறைகூவி அழைத்தால் மறுப்பது தகாது. படைகளோடு சேர்ந்தோ அல்லது ஒற்றைக்கு ஒற்றையாகவோ பகைவன் கூறியவண்ணம், அவன் கோரிய ஆயுதத்தோடு போர் புரிவது முறை. க்ஷத்திரிய தருமமே வடிவெடுத்தது போல வில் பிடித்து தேரேறி நின்ற பாண்டியன் அந்த அறைகூவலை மறுப்பானா?

    என்ன ஆயிற்று?

    அடுத்த வாரம் பார்ப்போம்!

    உபரித்தகவல்:

    [1] சம்சப்தகர்கள்:

    யுத்தத்தில் எந்த வீரனும் வெற்றி அல்லது வீரமரணம் என்று புகுவான் ஆயினும், ஒரு குறிப்பிட்ட காரியசித்திக்காக “இன்னாரைக் கொல்லாமல் திரும்ப மாட்டோம்/இன்ன காரியத்தை செய்யாமல் திரும்ப மாட்டோம்” என்று கோரமான சபதம் பூண்டு, தங்கள் இறுதிக்கடன்களை தாங்களே செய்து கொண்டு போருள்ளுள் செல்லும் வீரர்கள் சம்சப்தகர்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட விரதம் சம்சப்தக வ்ரதம். இந்நாளில் தற்கொலைப் படையினர் உள்ளார்கள் அல்லவா? அது போல அந்நாளில் சம்சப்தகர்கள். அருச்சுனனை போர்க்களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டி கௌரவர்கள் கையாண்ட ஒரு யுத்த தந்திரம் இது.

    [2] யுத்தத்தில் பயன் படுத்தப்பட்ட அம்புகள் பலவிதம். அவற்றில் சில வகைகள்:

    1. க்ஷூரப்ரம்: கத்தியைப் போன்ற முனையை உடைய அம்பு.

    2. வத்சதந்தம்: பசுவின் பல்லைப்போல அமைந்த முனையினை உடைய அம்பு (தோசைக் கரண்டி போல என்று வைத்துக்கொள்ளலாம்)

    3. நாராசம்: ஒரு கை அளவு, அதாவது இரண்டரை, மூன்று அடி நீளமுள்ள, அம்பு. (ராக்ஷசர்களின் favourite! இறுதி யுத்தத்தில் கும்பகர்ணனும், ராவணனும் ராமன் மீது எய்ததில் பெரும்பாலும் நாராசங்களே). பீமனுக்கு மிகப் பிடித்தமான அம்பு வகை. அபிமன்யுவும் சாத்யகியும் அருச்சுனனும் இவற்றை பயன்படுத்துவது உண்டு. (கவசங்களைப் பிளக்கும் அம்புகளில் இது தலையாயது)

    4. விபதம்: தடித்த நீண்ட அம்புகள். (யானைகள், கவசங்கள் ஆகியவற்றின் மீது எய்ய மிகச் சிறந்தது)

    5. அர்த்தசந்திர பாணம்: கூறிய பிறை வடிவிலான முனை உடைய அம்பு.

    6. அஞ்சலிகம்: சற்றே, நீண்ட, வலிய, வேல் போன்ற (இலை வடிவமான) பரந்த முனை உடைய, முனையின் பக்கவாட்டிலும் மிக மிகக் கூர்மையான அம்பு. கர்ணனின் தலையை அருச்சுனன் இந்த வகை அம்பினால் தான் துண்டித்தான். சாதாரணமாக இந்த வகை அம்பினை வீரர்கள் எடுத்தவுடன் விடுப்பதில்லை. எதிராளியை மற்ற வகையான அம்புகளால் கவசம் உடைத்து, காயப்படுத்தி பலம் குன்றச் செய்து, இறுதியாக கைகளையும் தலையையும் வெட்டி விட மட்டுமே இதைப் பயன் படுத்துவது பாரத வழக்கம். நூற்றுக்கணக்கில் இந்த அஞ்சலிகங்களை சரவர்ஷமாக – அம்புமாரியாகப் பொழிந்து போரிடும் பழக்கம் கர்ணனைத் தவிர வேறு யாருக்கும் பாரதத்தில் இல்லை.

    முதலில் கூறிய நான்கும் துளைக்கும் வகையான அம்புகள். கடைசியாகக் கூறிய இரண்டும் வெட்டுவதற்கான அம்புகள். வெட்டும் முனைகள் மற்ற அம்புகளில் பொருத்தப்படலாம்.

    இவை இல்லாமல் நளிகங்கள் என ஒன்று உண்டு. அவை இந்நாளின் cluster bombs போல, பாதி வழியில் வெடித்து, பல பல சிறிய கூறிய ஆயுதங்களாக சிதறி, பொதுப்படையாக படைகளைத் தாக்கும். இதை தரும யுத்தத்தில் பயன்படுத்துவது இகழப்பட்டது. கெட்டுப்போன வீரர்கள், இழிந்த குணம் உடையோர் தான் இவற்றை உபயோகிப்பார்கள் எனபது அந்நாள் வழக்கு.

    அம்புகள் இரும்பாலோ மூங்கிலாலோ செய்யப்பட்டன. மூன்று  கழுகு (அல்லது மயில்) இறகுகள் (fletching) கட்டப்படுவது இந்நாளிலும் வாடிக்கை. That lends stability in flight. பிரசித்தமான வீரனானால் அவன் பெயர் அம்பில் பொறிக்கப் பெறும். நெய் தடவப்பெற்று (துருப்பிடிப்பதில் இருந்து) பாதுகாக்கப்பெறும். (அதியமானை புகழ்ந்து ஔவையார் பாடும் பாட்டில் கூட, பகை அரசனின் ஆயுதங்கள் நெய் பூசப்பெற்று பளபளப்பாக விளங்குவதாக சொல்வார்).

    இப்போதெல்லாம் அம்பின் பின் முனையில், notch என்று சொல்லப்படும் குழிவு இழைக்கப்படும். அது வில்லின் நாணில் அம்பினைப் பொறுத்த உதவும். இது அந்நாளிலும் இருந்தது.

    Share
  • காலகாலர் துதி

    புவனேஷ்வர்

     

    மேனி யழகும் முதன்மையெ னுந்நிலையும்

    பேணிய நாளும் நிலையோ – தேமொழிநல்  

    தோணிய வன்பதம் பிறவிக் கடல்தாண்ட

    காலகா லன்பதம் சேர்.

     

    தனமும் வாக்கும் கொண்டகு டும்பமும்

    சினம்கொண்ட கூற்றின்முன் நில்லா – தேமொழிநல்

    கணம்கொண்ட நாதனா மாலகாலம் லம்முண்ட 

    காலகா லன்பதம் சேர்.

     

    வீரமும் வெற்றிச் செருக்கும் பாரிலோர்

    தீரமுடன் சேர் தம்பியும் – தேமொழிநல்

    பூரமது போல்கரையும் கண்டாய் வாழிநீ

    காலகா லன்பதம் சேர்.

     

    கற்ற கல்வியும் பெற்ற மனைசுகமும்

    நற்றவம் போலவ ருமா   – தேமொழிநல்

    உற்றதாயும் உடன்வாராள் பற்றறுத்து

    காலகா லன்பதம் சேர்.

     

    நுண்ணிய நல்லறிவும் திண்ணிய தோள்தவழும்

    ஒண்ணுதல் பிள்ளைகளும் நிலையா – தேமொழிநல்

    புண்ணியப் பயன்றுய்த் துய்ய கண்ணுதலோன்

    காலகா லன்பதம் சேர்.

    பி.கு: குமரி மாவட்டம் பத்மநாபபுரம் வட்டம் மேலாங்கோடு என்னும் திருத்தலத்தில் உறையும் ஈசனின் திருநாமம் ஸ்ரீ காலகாலர். அவர் மீது இயற்றப்பெற்ற பாடல்.

     

    Share
  • மகாபாரத முத்துக்கள் – பகுதி 4

    புவனேஷ்வர்

    பூரிசிரவஸ் வதம்- நிறைவுப்பகுதி:

    முன்கதைச் சுருக்கம்:
    சாத்யகியைக் காக்க, எதிர்பாராத விதமாக தனது வலது கை அருச்சுனனால் வெட்டப்பட்டதை கண்ட பூரிசிரவஸ் அதிர்ச்சி உற்றான். அடுத்து சோகமும் இகழ்ச்சியும் ஊறிய மொழிகளை அவன் அருச்சுனனுக்கு சொல்லத் தொடங்கினான். இனி பார்ப்போம்.
    +++++

    “குந்தி மைந்தனே! இரக்கமற்ற ஒரு காரியத்தை நீ செய்து விட்டாயே! நான் உன்னோடு போர் செய்யாத போது, எனக்கு பின்னாலிருந்து என் கையை வெட்டி விட்டாய். உன்னைக்கேட்கிறேன், இதைப்பற்றி தர்மராஜா யுதிஷ்டிரனிடம் என்ன சொல்வாய்? “வேறு யாருடனோ யுத்தம் செய்து கொண்டிருந்த பூரிசிரவசை நான் பாணத்தால் அடித்தேன்”” என்று சொல்வாயா? எந்த முகத்தை வைத்துக்கொண்டு சொல்லுவாய்? இந்த மாதிரி ஆயுதப்ப்ரயோகத்தை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் அர்ஜுனா? இந்திரன் சொல்லிக்கொடுத்தானா? ருத்ரர் சொல்லிக்கொடுத்தாரா? இல்லை அந்த துரோணரா? அன்றி ஒருவேளை, கிருபரா? யார் சொல்லிக் கொடுத்தது?

    இந்த உலகத்தில் மற்ற எல்லாரையும் விட யுத்த நீதி அறிந்தவன் நீ. அப்புறம் ஏன் அர்ஜுனா, உன்னோடு யுத்தம் செய்யாத ஒருத்தான் கையை அவன் அறியாமல் வெட்டினாய்? அஜாக்ரதையாய் உள்ளவன், பயந்து விட்டவன், தேரை இழந்தவன், கருணை காட்டுமாறு இறைஞ்சுபவன், யுத்தத்தில் செயலறு நிலைக்கு தள்ளப்பட்டவன் ஆகியோரை தர்மம் அறிந்த க்ஷத்ரியர்கள் தாக்குவதில்லை. பின் ஏன், அருச்சுனா, இந்த மாதிரி, உன் கீர்த்திக்கும் தகுதிக்கும் நினைத்துக்கூட பார்க்க முடியாத, ஒரு கீழ்மகன் மட்டுமே செய்யும் இழிந்த காரியத்தை செய்தாய்? உலகால் போற்றப்படும் செயற்கரிய செயலை சான்றோர்கள் விளையாட்டுப்போல எளிதில் செய்து முடிப்பர். ஆனால் அப்பேர்ப்பட்ட சான்றோரும் பழிக்கு அஞ்சுவர். உலகம் இகழும் இழி செயல்களை செய்தல் அவர்க்கு இயலாத காரியம். ஒரு மனிதன் யாருடன் ஒட்டி உறவாடுகிரானோ, அவன் குணங்களை தானும் அடைகிறான். இதை நான் உன்னில் காண்கிறேன், பார்த்தா. ராஜ வம்சத்தில், அதுவும் குரு வம்சத்தில் பிறந்து, இது வரை நடத்தையில் களங்கமில்லாமல், உயரிய விரத நியமங்கள் பூண்டு புகழுடன் இருந்த நீ, இன்று க்ஷத்ரிய தர்மத்தில் இருந்து தவறி விழுந்துவிட்டாய். நீயாக இந்த மாதிரி செயலை செய்திருக்கவே மாட்டாய். எனக்கென்னவோ, வருஷ்ணி குலத்து வீரனுக்காக (சாத்யகிக்காக) நீ செய்த இந்த மூர்க்கத்தனம் இந்த வாசுதேவன் சொல்லித்தான் நீ செய்திருக்க வேண்டும் எனப்படுகின்றது. இப்படியாம்மபட்ட வீரச்செயலை செய்ய உனக்கு தானாக எங்கே தோன்றியிருக்கப்போகிறது? இந்த புன்மதியாளன் கிருஷ்ணனுடைய யோசனையைக் கேட்கும் அவன் நண்பர் குழாம் தவிர வேறு யார் தன்னோடு யுத்தம் செய்யாதவனை அடிப்பார்கள்?

    வ்ருஷ்ணிகளும் அந்தகர்களும் கெட்டுப்போன க்ஷத்ரியர்கள். சதா தீய செயல்கள் இயற்றும் கெடுமதியாளர்கள். தீயநடத்தை இவர்களுக்கு ஒரு போதை போல ஒட்டிக்கொண்டு விட்டது. நீ ஏன் அர்ஜுனா, போயும் போயும் இந்த துன்மதியாளரை உனக்கு முன்னுதாரணமாக கொள்கிறாய்?”

    இவ்வாறு பூரிசிரவஸால் யுத்த அரங்கத்தில் இகழப்பட்ட பார்த்தன் பூரிசிரவசை பார்த்து, “அரசே! முதுமையால் தங்கள் அறிவும் தளர்ச்சி உற்றது போலும். பொருளற்ற தங்கள் பேசினால் இதைத் தான் தெரிந்து கொள்கிறேன். என்னையும் ஹ்ருஷீகேசனையும் நன்கு அறிந்தவரான தாங்கள், எங்களை நன்கு அறிந்தும் எப்படி எங்களை இகழ்கிரீர்கள்? யுத்தநீதிகளையும் தர்ம சாஸ்திரங்களையும் அறிந்த நான் ஒருபோதும் பாபகாரியத்தை செய்யமாட்டேன். இது தங்களுக்கு தெரிந்தாலும் என்னை திட்டுகிறீர்கள். நண்பர்களும், படைகளும், உறவினர்களும் உதவிக்கு பின்தொடர்ந்து புடைசூழ, அவர்கள் பலத்தையும் நம்பியல்லவோ க்ஷத்ரியர்கள் சத்ருவுடன் யுத்தம் செய்கிறார்கள்? பின்தொடரும் வீரர்களும் முன்னே செல்லும் வீரர்களின் வலிமையை நம்பியல்லவோ சண்டை செய்கிறார்கள்? அப்படி இருக்கும் பொழுது, எங்கள் நன்மைக்காக தனது அரிய உயிரையும் கொடுக்க துணிந்து போராடும் எனது சிஷ்யனும், தோழனும், உறவினனுமான சாத்யகியை நான் ஏன் பாதுகாக்கக்கூடாது? யாராலும் ஜெயிக்க முடியாத இந்த சாத்யகி யுத்தத்தில் எனது வலக்கை ஆவான். கோழைகளுக்கு பயம் தரும் யுத்தத்தில், உண்மையான வீரன் சுயநலமாக தன்னை மட்டும் பாதுகாத்துக்கொள்வதில்லை. தன்னைக்காக்கவும், தனக்கு உதவவும் தன் பின்னே வரும் மற்ற வீரர்களையும் அவன் பாதுகாக்க வேண்டும். (யுத்தத்தில் தான் மட்டும் காயப்படாமல் வீடு சேரும் ஆண்மகன் இகழப்படுகிறான்). இப்படி வீரர்கள் ஒருவரை ஒருவர் காப்பதால் அங்கே மொத்தத்தில் அரசன் காக்கப்படுகிறான். ஜயிக்கப்பட்டு நிராயுதபாணியாக்கப்பட்ட சாத்யகி உங்களால் கொல்லப்படுவதை அமைதியாக நான் வேடிக்கை பார்த்திருந்தால் அந்த கொலைபாவம் என் தலையில் தான் விடிந்திருக்கும். அரசே, அப்படி இருக்க, நான் சாத்யகியை காப்பாற்றியது குறித்து தாங்கள் ஏன் கோபிக்கிறீர்கள்? “வேறு ஒருத்தனுடன் போர் செய்யும் பொது உன்னால் நான் அங்கபங்கம் செய்யப்பட்டேன்” என்று குற்றம் சாட்டுகிறீர். அது தவறு. யானைகளும் ரதங்களும் குதிரைகளும் சிம்மநாதங்களும் நிறைந்த இந்த கடல் போன்ற இந்த சத்ரு சேனையின் நடுவில் கவசம் அணிந்து தேரேறி வில் பிடித்து நாணேற்றி நான் யுத்தம் பண்ணுகிறேன்.

    அது போல, நண்பர்களும் சத்ருக்களும் கலந்த இந்த கூட்டத்தில் போராடும் சாத்யகியை எப்படி உம் ஒருவனுடன் மட்டும் யுத்தம் செய்வதாக தாங்கள் கருதலாம்? பல வீரர்களுடன் யுத்தம் செய்து ஜெயித்த சாத்யகி களைத்திருந்தான். ஆயுதங்களால் காயங்கள் பல பட்ட அவ்வீரன் மனச்சோர்வும் உற்றிருந்தான். ஆந்த சமயத்தில் தாங்கள் அவனை அறைகூவி அழைத்தீர்கள், வெற்றியும் அடைந்தீர்கள். நிராயுதபாணியாக தங்கள் காலடியில் கிடந்த அந்த வீரனின் தலையை வெட்டி ஏறிய தாங்கள் முயல, அவனை நான் காத்தேன். அதை நான் எப்படி சும்மா வேடிக்கை பார்த்திருக்க முடியும்? யுத்தத்தில் சுற்றும் முற்றும் நடப்பதை கவனிக்காமல் அசட்டையாக இருந்த தாங்கள் இவ்விஷயத்தில் தங்களையே தான் நொந்துகொள்ள வேண்டும்.. எனது இடத்தில் தாங்கள் இருந்தால் தாங்கள் என்ன செய்திருப்பீர்கள் அரசே?” என்றான்.

    இதைக்கேட்டதும் யூபஸ்தம்பத்தை தன் கொடியில் உடைய பூரிசிரவஸ் வெட்கினான். சாத்யகியை விட்டு விட்டு, பிரயோபவேசம் (வடக்கிருத்தல்) பண்ணி பிராணத்த்யாகம் செய்ய உத்தேசித்தான். சாத்யகியை விட்டு விட்டு, மகா தர்மவானான பூரிசிரவஸ், தனது இடக்கையால் தரையில் அம்புகளைப் பாயலாகப் பரப்பி, பிரம்மத்தினை த்யானித்து, யோக நிஷ்டனாக அதில் அமர்ந்தான். புலன்களை ஒவ்வொன்றாக உரிய தேவதைகளிடம் நாட்டி மௌனமானான். கண்களை சூரியன் மேல் நாட்டி, ஹ்ருதயத்தை சந்திரனிடம் நாட்டி, உபநிஷத் மகாவாக்யத்தை ஸ்மரித்து, ஓம் எனும் பிரணவத்தை உள்ளுக்குள் நிலை நிறுத்தி, சமாதி நிலையில் உடலை விடும் நோக்கத்தோடு யோக நிஷ்டனாக, மெளனமாக அமர்ந்தான்.

    அங்கிருந்த சேனாவீரர்கள் அனைவரும் அவனை புகழ்ந்து துதித்தனர். கிருஷ்ணனையும் அருச்சுனனையும் இகழத் துவங்கினர். எல்லோராலும் இகழப்பட்டாலும் அந்த இரு வீரர்களும் (அருச்சுனனும் கிருஷ்ணனும்) எந்த கடும் சொல்லையும் பேசாமல் இருந்தனர். அதே போல எல்லாராலும் புகழப் பட்டாலும் பூரிசிரவஸ் ஆனந்திக்கவில்லை. இன்ப துன்பத்துக்கு அப்பாற்ப்பட்ட ஒரு மேனிலையை அவன் அடைந்திருந்தான்.

    எல்லாரும் தூற்றுவதைக் கேட்ட பல்குணன், மேலும் ஏச்சுக்களை பொறுக்க இயலாதவனாகி (அபிமன்யுவை நினைத்தும், வீரர்களின் ஏச்சுக்களைக் கேட்டும்) அளவில்லா சோகத்துடன் அமைதியாகப் பேசலுற்றான். “பூரிசிரவசே! அரசே! காண்டீபத்தின் பாணங்களின் எல்லைக்குட்பட்ட சமர்க்களத்தில் எங்களைச் சேர்ந்த எந்த வீரனையும் ஒரு எதிரி கொல்ல நான் அனுமதிக்க மாட்டேன் என்ற எனது சபதம் உலகறிந்தது. இங்குள்ள அரசர்கள் அனைவரும் அதை அறிவர். இது அறிந்தும், நீங்கள் என்னை இகழ்வது தகாது. தருமத்தை சரியாகப் புரிந்துணராதோர் பிறரை விமர்சிப்பது தகாது. பூரிசிரவசே, நிராயுதபாணியான சாத்யகியை யுத்த தருமத்துக்குப் புறம்பாக, வாளால் தாங்கள் கொல்ல முயன்ற போது தங்கள் கரத்தை நான் பின்னால் இருந்து வெட்டியது தரும விரோதம் ஆகாது. (இங்கே என்னை இகழும்) தருமம் தெரிந்த எந்த நேர்மையான க்ஷத்ரியன் அபிமன்யு கொல்லப்பட்ட விதத்தை புகழ்வான்? பதினாறு வயது பூர்த்தி ஆகாத சிறுவன், தேர் இழந்து, வில் இழந்து, ஆயுதங்கள் தீர்ந்து, கவசம் உடைந்து, களைத்து இருந்த வேளையில் அபிமன்யு ஆறு மகாரதர்களால் பின்பக்கத்தில் இருந்தும் தாக்கப்பட்டு கொல்லப்பட்டான். என்னை இகழும் தர்மம் அறிந்த வீரர்களில் யார் அதை புகழ்வார்கள் அப்பனே?” என்றான் அருச்சுனன், பூரிசிரவசைப் பார்த்து.

    புத்திர சோகத்தோடு அருச்சுனன் பணிவுடன் சொன்ன ஆழ்ந்த பொருள் பொதிந்த அந்த வார்த்தைகளை கேட்ட பூரிசிரவஸ் மறுமொழி எதுவும் சொல்லவில்லை. வெட்கத்தில் தலை குனிந்து தரையைத் தொட்டான். அவ்வளவே. ஒன்றும் பேசவில்லை.

    அவனது அந்த நிலையை கண்ட பார்த்தன் “பூரிசிரவசே, தருமராஜர் மேலும், பீமன் மேலும், நகுல சகாதேவர்கள் மீதும் நான் வைத்துள்ள அளவு பாசம் உங்கள்மீதும் வைத்துள்ளேன். நானும் கிருஷ்ணனும் சொல்கிறோம், ஐயனே, தருமவான்களுக்குரிய உலகங்களுக்கு நீர் ஏகுவீராக. அடைக்கலம் என்று வந்த புறாவுக்காக தன் தசையையே அரிந்தளித்த வள்ளல் சிபிச் சக்ரவர்த்தி வாழும் உலகங்களுக்கு நீரும் ஏகுவீர்” என்றான்.

    வாசுதேவனும் “பூரிசிரவசே, இடையறாது யாகங்களும் அக்னிஹோத்திரமும் நியமம் காத்து செய்து வந்த தருமவானே, நீர் தாமதம் இன்றி பிரம்மா முதலிய தேவரும் விரும்பும் எனது ஒளிபடைத்த வைகுண்டத்துக்கு செல்வீராக. எனக்கு சமானமாக, கருடனால் சுமக்கப் பட்டு, நீர் வைகுண்டம் சேர்வீராக” என்றான்.

    இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் சாத்யகி களைத்துப் போய் கிடந்தான். கண்ணன் பேசி முடிக்கையில் அவன் எழுந்தான். கண் விழித்துப் பார்த்தான். அவமானத்துக்கு பழி வாங்கும் ஆத்திரத்துடன் வாளை உருவி, பூரிசிரவசின் வாழ்நாளை முடிக்க தீர்மானித்துப் பாய்ந்தான். ஐம்புலன்களையும் அடக்கி, துதிக்கை வெட்டப் பெற்ற யானை போல, அருச்சுனனால் பாதி கொல்லப்பட்டு, யோகத்தில் அமர்ந்த அரசனை கொல்ல விரைந்த சாத்யகியை கண்டு அனைவரும் அதிர்ந்தனர். “ஐயோ இந்த அதர்மம் வேண்டாம்! வேண்டாம்” என பாண்டவர் படையே கூக்குரலிட்டது. அருச்சுனனும் கிருஷ்ணனும், பீமனும், யுதாமன்யுவும், உத்தமௌஜனும் பெருங்குரலில் அவனை “இது தருமமில்லை” என்று தடுத்தனர். கௌரவர் சேனையும் “ஐயோ” என அலறியது.

    அஸ்வத்தாமனும், கிருபரும், கர்ணனும், அவன் மகன் வருஷசேனனும், ஜயத்ரதனும் “வேண்டாம்” என தடுத்தனர். இதையெல்லாம் கேட்டும் லட்சியமே பண்ணாமல், யோக நிஷ்டையில் பிரம்மத்தை த்யானித்து அமர்ந்திருந்த பூரிசிரவசின் சிரஸை தனது கத்தியால் சாத்யகி செத்த பாம்பை அடிப்பது போல வெட்டித் தள்ளினான்.

    சேனா வழக்கப்படி பாண்டவ வீரர்கள் சாத்யகியை பாராட்டவில்லை. சித்தர்களும் சாரணர்களும் இருபக்க சேனாவீரர்களும் பூரிசிரவசையும், அவன் வாழ்நாளில் புரிந்த எண்ணிறந்த தானங்களையும் யாகங்களையும் அறச்செயல்களையும் போற்றி கொண்டாடினர்.

    கௌரவர்கள் தங்களுக்குள் கசமுசா எனப் பேசத் துவங்கினர். “இது வருஷ்ணி குல சாத்யகியின் தவறல்ல. முன்பே விதிக்கப்பட்டது நடந்து விட்டது. அதனால் நாம் கோபப் படக் கூடாது. கோபமே துக்கத்துக்கு காரணம். சாத்யகி தான் பூரிசிரவசை வதைக்க வேண்டும் என்று அவன் விதி இருந்தால் நாம் என்ன செய்ய இயலும்? பிரம்மா எழுதிய எழுத்தின் படி பூரிசிரவசின் யமன் சாத்யகி என்று இருக்கையில் இது சரியா தவறா என்று நாம் விவாதிப்பதில் பயனில்லை………”

    இதைக் கேட்ட சாத்யகி கடுங்கோபத்துடன் “பாபிகளே! பசுத்தோல் போர்த்திய புலி போல தருமம் பேசும் மூடர்களே! இப்போது தருமவான்களைப் போல தருமம் பேசுகிறீர்கள். நல்லது. ஆனால், சௌபத்ரன் (அபிமன்யு) கொல்லப்பட்ட போது நேற்று ஆனந்தக் கூத்தாடியது நீங்கள் தானே? அப்போது எங்கே போயிற்று உங்கள் தர்மம்? என்னை எவன் காலால் உதைக்கிறானோ அவன் சந்நியாசி ஆனாலும் அவனை வதைப்பேன் எனபது எனது சபதம். யுத்தத்தில் நான் உயிரோடு இருக்கும் போதே நான் செத்து விட்டதாக நினைத்தது உங்கள் குற்றம். பூரிசிரவசை நான் கொன்றது தருமமே. இன்னும் சொல்லப்போனால் இந்த பார்த்தன், என் மேல் உள்ள அன்பாலும், தன் சபதத்தை காக்கும் பொருட்டும், இவன் கையை வெட்டி, எனக்குக் கிடைக்க வேண்டிய பெருமையில் பாதியை கிடைக்க விடாமல் செய்து விட்டான்! விதிக்கப்பட்டது நடக்கும். வலியது விதி. நான் என்ன பாப்பம் செய்தேன்? முன்பே ராமாயணத்தில் வால்மீகி பாடினாரே, “வானரமே, பெண்களைக் கொல்லக் கூடாது என்று நீ சொல்கிறாய், ஆனால் எதிரிகளுக்கு துன்பம் தரும் செயலை வீரர்கள் எந்தக் காலத்திலும் உறுதிகொண்டு செய்ய வேண்டும்”. (பின் குறிப்பு காண்க).

    சாத்யகியின் இந்த வார்த்தைகளைக் கெட்டு அங்கே இருந்த யாரும் – பாண்டவரும் கௌரவர்களும் – எதுவும் பேசவில்லை. ஆனால் மனதுக்குள் பூரிசிரவசை மெச்சினார்கள். சாத்யகியை மனதுக்குள் இகழ்ந்தார்கள். அங்கிருந்த ஒரு வீரன் கூட, ரிஷியைப் போன்ற பூரிசிரவசின் வதத்தை பாராட்டவில்லை. வெட்டப்பட்ட பூரிசிரவசின் கருத்த மயிரும் சிவந்த கண்களும் கொண்ட தலை, அஸ்வமேத யாகத்தில் காணப்படும் குதிரையின் தலை போல, அழகில் சற்றும் குறையாமல் ஜொலித்தது. யுத்தத்தில் வீரமரணம் அடைந்த மாவீரனும் தர்மாத்மாவுமான வள்ளல் பூரிசிரவஸ், அழியும் தேகத்தை போர்க்களத்தில் உகுத்து, அழியாப் புகழுடம்பை உலகில் நாட்டி, புண்ணியச் செயல்களால் தான் சம்பாதித்த தனது ஜோதிமயமான வடிவத்தோடு காண்போர் கண்கள் கூசும் வண்ணம், ரிஷிகளாலும் சித்தர்களாலும் தேவர்களாலும் போற்றிக் கொண்டாடப்பெற்று பிரம்மலோகம் ஏகினான்.

    பின் குறிப்பு:

    சாத்யகி சொன்ன வால்மீகி பாடிய சுலோகம் இடம்பெறும் இடம்: வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டம் – சர்க்கம் 81 – ஸ்லோகம் 28 (6-81-28)

    न हन्तव्याः स्त्रियश्चेति यद्ब्रवीषि प्लवङ्गम ||
    पीडा करममित्राणां यत्स्यात्कर्तव्यमेत तत् |

    ந ஹந்தவ்யா ஸ்த்ரியஸ்சேதி யத்ப்ரவீஷி ப்ளவங்கம|

    பீடா கரமமித்ரானாம் யத்ஸ்யாத் கர்தவ்யமேத தத்||

    “ஏ தாவும் வானரமே (ப்ளவங்கம), பெண் கொலை கூடாது என்று நீ சொல்லுவது உண்மைதான். ஆனாலும் மித்திரர் அல்லாதோரை – எதிரிகளைப் பீடிக்கும் காரியங்களை கட்டாயம் முயன்று செய்ய வேண்டும்”

    இதில் இருந்து வால்மீகி ராமாயணம் கட்டுக் கதை அல்ல என்று புலன் ஆகிறது. மகாபாரதத்தில் வால்மீகிக்கு மேற்கோள்/reference வருகிறது என்றால் ராம சரித்திரம் அநாதி காலமாக வழக்கில் இருந்து வந்திருக்கின்றது என்று தானே அர்த்தம்? மகாபாரதத்தில் ராமாயணமே முழுதாக வரும். மார்க்கண்டேயர் தருமனுக்கு, அவனை விட கஷ்டப்பட்ட ராஜாக்கள் உண்டு என்று ஒரு சமயம் தேற்றுவார். அப்போது ராமாயணம் சொல்லுவார். இருந்தாலும், வால்மீகி ராமாயணத்தில் ஒரு குறிப்பிட்ட ஸ்லோகத்துக்கு மேற்கோள் வருவது இந்த இடத்தில் தான். சாத்யகி எந்த அளவுக்கு கல்வி அறிவு பெற்றவன் என்பதும் இங்கு விளங்கும். சாத்யகியே இவ்வளவு படித்திருந்தால் பாண்டவர்களும் கண்ணனும் துரோணரும் பீஷ்மரும் கிருபரும் எவ்வளவு அறிவு உடையவர்களாக இருந்திருப்பார்கள் எனபது விளங்கும். அவ்வளவு அறிவு இருந்தும், அதர்மத்துக்குத் துணை போனதால் அவர்கள் எவ்வாறு தோற்றார்கள் என்பதும் விளங்கும்.

    பூரிசிரவஸ் வதம் முற்றிற்று.

    அடுத்த வாரம் அடுத்த பதிவில் மகாபாரதத்தில் வேறு ஒரு சுவாரஸ்யமான கட்டத்தை பார்ப்போம்.

    (தொடரும்)

    Share
  • அன்னையினருள்

     

    புவனேஷ்வர்

     

    ஸ்ரீ காமாக்ஷி துணை:

    மயங்கிய நிலை:

     

    தீதிது செய்ய நலமிதென் றறியோம்

    மோதிடு மதங்கொள் கரிபோல் மதியோம்;

    சோதியன் செவ்வடி சிந்தனை செய்யோம்

    செய்யா தன செய்வோம்;

     

    உய்யும் வழிசெயல் செய்யோம் மெய்யின்

    பொய்யா ரனுபவம் மெய்யாய்க் கொண்டே

    செய்யா தனபல செய்துழி வீழ்வோம்

    மெய்யா னதுகா ணோம்.

     

    அண்டங் கொண்டது பிண்டங் கொள்ளும்

    கண்டங் கருத்தவன் கார்முகில் வண்ணன்

    உண்டான் உலகம் உலகே ழானான்

    உண்மை யதை யுணரோம்;

     

    உய்த நிலை:

     

    போற்றியெனப் பணிந்துவிட் டோமெம் மம்மை

    பொன்னடிக்குப்பல் லாயிரம் போற்றி காண்;

    தாயெனக் கொண்டுவிட் டோம் – பெற்ற

    சேய்பண்ணும் சேட்டைகள் தாய்பொறுப் பாள்!

     

    உய்வித் தெமைக் காப்பாள்கா ணன்னை

    கொய்மலர் வண்டார் குழலிகா மாக்ஷி;

    வேறென்ற நிலை களைவா ளொருமாயத்

    திரை கிழித்தேகிடக் கரந் தருவாள் .

     

     

    படத்துக்கு நன்றி: http://blaufraustein.wordpress.com/2012/09/16/haindava-thiruvalam-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0/

     

    Share
  • மகாபாரத முத்துக்கள்!..பாகம் 3

    புவனேஷ்வர்

     

    மகாபாரதமுத்துக்கள்பூரிசிரவஸ்வதம்வலக்கைவெட்டுண்டது!

    வணக்கம் அன்பர்களே.

    சென்ற பதிவில், சாத்யகி அருச்சுனனிடம் வந்ததையும், அருச்சுனனின் அதிருப்தியையும் பார்த்தோம் அல்லவா? அதன் பின் என்ன நடந்தது என இன்று பார்க்கலாம்:-

    யுத்தத்தில் யாராலும் ஜெயிக்க முடியாதவனான சாத்யகி அருச்சுனனை நோக்கி வருவதைக்கண்ட பூரிசிரவஸ், மிக்க ஆத்திரத்துடன் சாத்வதனை (சாத்யகியை) நோக்கி விரைந்தான். அவனைப்பார்த்து “அடே சாத்யகி, நீ இன்று என் கண்ணில் பட்டது எனது அதிர்ஷ்டம் என்றே கருதுகின்றேன்.  நீண்டநாட்களாக எனது நெஞ்சில் பூட்டி வைத்திருந்த ஆசையினை இன்று உன்னுடன் போரிட்டு தீர்க்கப்போகிறேன். நீ யுத்தத்தில் பயந்து ஓடிப்போனாலோழிய உன்னை உயிருடன் இன்று தப்ப விட மாட்டேன். உன்னைப்பெரிய வீரன் என்று நினைத்து கர்வம் கொண்டுள்ள  தாசார்ஹனே, உன்னை இன்று போரில் கொன்று குருகுல வேந்தன் துரியோதனனின் மனம் மகிழப்பண்ணுவேன். நீ எனது பாணங்களால் எரிக்கபெற்று யுத்தகளத்தில் வீழ்ந்து கிடப்பதை இன்று கேசவனும் அர்ஜுனனும் காணப்போகிறார்கள். நீ என்னால் வதம் செய்யப்பட்டாய் என்று அறிந்து, உன்னை இப்படைக்குள் அனுப்பிய தருமன் தன் செயலை நினைத்து வெட்கி மாழ்கப்போகிறான். நிணமும் குருதியும் பூசப்பட்டு உன்னுடல் யுத்தபூமியில் கிடப்பதைக்கண்டு குந்திபுத்திரனான அருச்சுனன் பூரிசிரவசின் வீரத்தை அறிந்துகொள்ளப்போகிறான். பழங்காலத்தில் மகாபலியுடன் போர் புரிய இந்திரன் விரும்பியது போல உன்னுடன் போர் புரிய எனக்கு என்றுமே விருப்பம் உண்டு, சாத்யகி. கொடிய யுத்தம் என்றால் என்ன என்பதை இன்று நான் உனக்கு காட்டுவேன். ராமனின் இளவல் லக்ஷ்மணனால் இந்த்ரஜித் யமனுலகம் ஏகியது போல, என்னால் கொல்லப்பட்டு நீ கொடுங்கூற்றுக்கு இரையாகப்போகிறாய்! நீ என்னால் வதைக்கப்பட்டதை கண்டு கிருஷ்ணனும் பார்த்தனும் தருமராஜன் யுதிஷ்டிரனும் யுத்தத்தின் மேலுள்ள பற்றினை விடுவார்கள், பார். எனது கூரிய அம்புகளால் உன்னைக்கொன்று, உன்னால் கொல்லப்பட்ட வீரர்களின் மனைவிகளை நான் திருப்திபடுத்துவேன். சிங்கத்தின் கண்ணில் பட்ட சிறு மான் போல, என் கண்ணில் பட்ட நீ இன்று உயிருடன் திரும்ப இயலாது!” என சூளுரைத்தான் பூரிசிரவஸ்.

    பூரிசிரவசின் இந்த வார்த்தைகளை கேட்ட சாத்யகி சிரித்தான். சிரித்து விட்டு பூரிசிரவசைப்பார்த்து “குருகுல வீரனே, யுத்தத்தில் பயம் எனக்கு என்றமே இருந்ததில்லை. பயனற்ற வார்த்தைகளால் ஏன் என்னை பயமுறுத்த முயற்சிக்கிறாய்? அது வீண் வேலை. என்னை யுத்தத்தில் நிராயுதபாபாணியாக்கும் வல்லமை பெற்ற வீரனே என்னை யுத்தத்தில் கொல்லவியலும். என்னை கொல்லும் வீரன், இனி வரும் எல்லா யுகங்களிலும் எதிரிகளைக்கொல்லுவான்! வீணர்கள் பேசும் வீண் வார்த்தைகளை யுத்தகளத்தில் நீ பேசுவதால் என்ன பலன்? முடிந்தால் உன் வீரத்தை செயலில் காட்டு. (மழைக்கு உதவாத) வெண்மேகங்கள் கர்ஜிப்பது போல உள்ளது உன் கூச்சல். வீரனே, உன் க்ர்ஜனைகளைக்கேட்டு எனக்கு வரும் சிரிப்பினை என்னால் அடக்க இயலவில்லை! நீ நெடுங்காலமாக ஆசைப்படுவதாக சொன்னாயே, என்னுடனான அந்த போர், அது  இன்று, இப்போதே, இங்கேயே நடக்கட்டும். உன்னுடன் போர் புரிய ஆவலுடன் உள்ள எனது மனம் இனி எந்த தாமதத்தையும் பொறுக்காது. மூடனே, உனைக்கொல்லாமல் நான் இன்று போரில் இருந்து ஓயப்போவதில்லை” என்று பதில் கூறினான்.

    இப்படி சற்று நேரம் ஒருவரை ஒருவர் திட்டி விட்டு, இளம் காளைகளை ஒத்த அந்த இரு வீரர்களும் சினம் மேலிட போர் புரிய ஆரம்பித்தார்கள். ஒருவர் உயிரை மற்றொருவர் குடிக்க ஆவலோடு அம்புகளை பொழிந்தார்கள். வில்வித்தையில் தேர்ந்த அந்த இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் அறைகூவி, மதம்கொண்ட இரு யானைகள் ஒரு பெண்யானைக்காக மோதுவது போல போரிட்டார்கள்.

    இரு மேகங்கள் மழை பொழிவது போல, அவ்விரு வில் வீரர்களும் ஒருவர் மீது ஒருவர் பாணங்களை வருஷித்தார்கள். சோமதத்தனின் மகன் சினியின் பேரனை கொல்வதற்கு அவன் மீது பத்து கூரிய அம்புகளை எய்தான். அதன் பின்னும் பல கூரிய அம்புகளை சாத்யகி மீது அவனை கொல்லும் ஆவலால் ஆத்திரத்துடன் விடுத்தான் பூரிசிரவஸ். ஆனால் சாத்யகியோ மிக நிதானமாக, அந்த அம்புகள் அவனை வந்து அடையும் முன்னரே, தன் அம்புகளால் தடுத்தான்.

    தங்கள் குலங்களுக்கு பெருமைசேர்க்கும் வ்ருஷணி குல வீரனும் குருகுல வீரனும் அம்பு மழையால் ஒருவரை ஒருவர் மூடினார்கள். மகாரதர்களின் வழக்கம் போல, ஈட்டிகளையும் குறுவேல்களையும் எறிந்து ஒருவரை ஒருவர் நொறுக்கப்பார்த்தார்கள்.

    இரு புலிகள் தங்கள் நகங்களால் போரிடுவதைப்போலவும், இரு மத யானைகள் தங்கள் தந்தங்களால் போரிடுவதைப்போலவும் அவர்கள் போரிட்டனர். உடல்களில் குருதி பெருக உயிரைப்பணயம் வைத்து பரம்பரைப்பகையை நினைத்து போரிட்டனர்.

    வெற்றி அல்லது வீரமரணம் ஏதாயினும் மகிழ்ச்சி என, அந்த சூரர்கள் மோதினர். பிரம்மபதத்தினை வீரமரணம் மூலம் பெற விழைந்து கர்ஜித்தனர். இவர்கள் போரினைக்கண்டு தார்தராஷ்ட்ரர்களின் (துரியோதனின் மைந்தர்கள்)  மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது.

    இருவர் தேர்களும் உடைந்தன. இருவர் தேர்க்குதிரைகளும் மாண்டன. இருவர் விற்களும் உடைந்தன. தேரும் வில்லும் இழந்த அந்த இரு மகாரதர்கள் கத்தியும் கேடயமுமாக மண் மீது குதித்தனர்

    காளையின் தோலால் ஆன இரு பெரிய ஒளி வீசும் கேடயங்களை ஏந்தி, மின்னும் வாட்களை பற்றி சாத்யகியும் பூரிசிரவசும் யுத்தபூமியில் சுற்றி சுற்றி போரிட்டனர். வட்ட வடிவில் சுற்றி வந்தும், குறுக்கும் நெடுக்குமாக பாய்ந்தும், பக்கவாட்டில் பாய்ந்தும், மேலே குதித்தும், அவ்விரு மாவீரர்கள் வாட்போர் புரிந்தனர். எதிர்பாராத சமயம் ஒருவரை ஒருவர் வெட்டி காயப்படுத்தினர். எதிராளியை கொல்ல  சமயம் பார்த்த வண்ணம் தங்களை தற்காத்துக்கொண்டு இருவரும் செய்த லாவகமான கத்திப்போர் அற்புதமானது என வட்டமாக வீரர்கள் நின்று வேடிக்கை பார்க்க துவங்கினர். நெடுநேரம் அதி லாவகமாக பண்ணின போருக்குப்பின், படைகளுக்கு எதிரில் இருவரும் சற்றே ஓய்வெடுத்தனர். பின் புத்துணர்வுடன் போரிட ஆரம்பித்தனர். முன் நடந்த போரை விட உக்கிரமாக நடந்தது கத்திப்போர்.

    சிறிது நேரத்திலேயே நூறு பொன் நிலவுகள் பொறிக்கப்பெற்ற இரு கேடயங்களும் துண்டுகளாக சிதறின. கேடயங்கள் இல்லாமல் வாட்போர் செய்யக்கூடாது எனபது யுத்த விதி.  இருவரிடமும் ஆயுதங்கள் இல்லை. ஆகையால் மல்யுத்தம் துவங்கியது. திண்மையான மார்பும், கதைகளை ஒத்த  நீண்ட புஜங்களும் கொண்ட அந்த வீரர்கள், ஒருவரை ஒருவர் கைகளால் அடித்தும் எட்டிப்பிடித்தும், கழுத்தைப்பிடித்தும் போரிட்டனர். மல்யுத்தத்தில் அவர்கள் எடுத்த வருஷக்கணக்கான பயிற்சி அன்று வேடிக்கை பார்க்க நின்ற படைவீரர்களை மகிழ்விக்கும் விதமாக வெளிப்பட்டது. அவர்கள் போரிடும் போது, மலைகளில் இடியோசை ஒலிப்பது போல ஓசைகள் எழுந்தன. தந்தங்களின் கூரிய முனைகளால் போராடும் யானைகளைப்போலவும் கூரிய கொம்புகளால் போரிடும் எருதுகளைப்போலவும் அந்த வீரர்கள் போரிட்டனர். சிலசமயம் கைகளால் கட்டிப்பிடித்தும், சில சமயம் தலைகளால் முட்டியும், சில சமயம் கால்களால் தடுக்கியும், தோள்களை தட்டியும், சிலசமயம் நகங்களால் கிள்ளியும், சில சமயம் இறுகப்பிடித்தும், இடுப்பை சுற்றி கால்களால் பிணைத்தும், பூமியில் உருண்டும், சிலசமயம் முன்னேறியும் சில சமயம் பின்வாங்கிப்பதுங்கியும் சில சமயம் உயர குதித்தும், யுத்த சாஸ்திரத்தில் உள்ள அத்துணை வகையான தாக்குதல்களையும் செய்து ஒருவரை ஒருவர் கொல்லப்பார்த்தனர்.

    இவர்களுக்கிடையில் இவ்வாறு யுத்தம் மும்முரமாக நடந்துகொண்டிருக்கையில், அருச்சுனன் அவர்களைப்பற்றி லக்ஷியமே பண்ணாமல் ஜயத்ரதனை வதம் பண்ணுவதில் முனைப்பாக கடும் யுத்தம் பண்ணிக்கொண்டிருந்தான்.

    சாத்யகியின் ஆயுதங்கள் தீர்ந்து போன தருணம், வாசுதேவன் பார்த்தனிடம் பேசலுற்றான். “பார்த்தனே, பூரிசிரவசுடன் போராடிக்கொண்டிருக்கும் அந்த வில்வீரன் சாத்யகி தேரை இழந்துவிட்டான். உனக்காக அவன் இந்த கௌரவ சேனையை பிளந்து கொண்டு உன்னைப்பின்தொடர்ந்து வந்துள்ளான். பெருவீரத்துடன் அவன் எல்லா கௌரவ வீரர்களுடனும் மோதி விட்டான். அப்படி மோதிக்களைத்து, அவன் இப்போது யாகங்களில் சிறந்த தானங்களை அளவின்றி கொடுக்கும் அந்த தலைசிறந்த வள்ளல் பூரிரவசுடன் போரிடுகிறான்”…. கண்ணன் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே, பூரிசிரவஸ் கடுஞ்சினத்துடன் சாத்யகியை ஒரு மத யானை இன்னொரு மதயானையை அடிப்பது போல அடித்தான்.

    கண்ணனின் வார்த்தைகளை கேட்ட விஜயன், தனது போரை ஒரு நிமிஷம் நிறுத்தி விட்டு சாத்யகியின் நிலைமை என்ன என்று திரும்பிப்பார்த்தான். அப்போது வாசுதேவன் மறுபடியும் அருச்சுனனை பார்த்து, “ஒ அருச்சுனா, யாதவ குலத்துதித்த புலியைப்போன்ற சாத்யகி, அதோ பூரிசிரவசுக்கு தோற்கபோகிறான். உனக்காக செயற்கரிய வீரச்செயல்களை இன்று செய்து இங்கு வந்துள்ள உனது சிஷ்யனான யுயுதானன் (சாத்யகி) களைத்தும், தேரிழந்தும் ஆயுதங்கள் இல்லாமலும் உள்ளான். உன் படைகளிலேயே தலைசிறந்த வீரனான சாத்யகி, யாகங்கள் செய்வதில் பக்தியுள்ள, மாபெரும் வள்ளலான  பூரிசிரவசுக்கு இன்று இரையாகாமல் காக்க வேண்டியது உன் கடமை! மகாவீரனே, இப்போது சாத்யகியைக்காப்பாற்ற  என்ன செய்யவேண்டுமோ, அதை செய்யக்கடவாய்” எனக்கூறி நிறுத்தினான்.

    அதற்கு தனஞ்சயன் மகிழ்ச்சியோடு வாசுதேவனைப்பார்த்து, “அதோ பார் கிருஷ்ணா, குருகுல ஸ்ரேஷ்டனான பூரிசிரவசும் யதுகுலத்து சிங்கமான சாத்யகியும் யானையும் சிம்மமும் போரிடுவதைப்போல போரிடுகிறார்கள்”. பார்த்தன் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பூரிசிரவஸ் சாத்யகியை அடித்து மண் மேல் வீழ்த்தினான். ஒரு சிம்மம் யானையை இழுப்பது போல, தர தரவென தரையில் சாத்யகியை இழுத்தான் பூரிசிரவஸ்.

    பின், தனது வாளை உறையிலிருந்து உருவி, சாத்யகியின் தலைமயிரைப்பிடித்து இழுத்து, பரம்பரைப்பகைவனை மார்பில் உதைத்தான் பூரிசிரவஸ். அழகிய குண்டலங்கள் அணிந்த  சாத்யகியின் தலையை வெட்ட ஆயத்தமாகி வாளை உயர்த்தினான் பூரிசிரவஸ். பரம்பரைப்பகைவனை கொல்லப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் பூரிசிரவஸ், வாளை உயர்த்தி, (சாத்யகி தன்னால் ஜயிக்கப்பட்டு கிடக்கும் காட்சியை ரசித்தவாறு) அப்படியே நின்றான். அந்த நேரம், பூரிசிரவசால் மிதிக்கப்பட்டு கீழே கிடந்த சாத்யகி, தன் தலையை தன்னால் ஆனமட்டும் வேகமாக, ஒரு குயவனின் சக்கரம் போல சுழற்றி தன்னை மிதித்து, தலைமயிரைப்பற்றி இருந்த பூரிசிரவசிடம் இருந்து விடுவித்துக்கொள்ள முயன்றான்.

    அப்போது மீண்டும் வாசுதேவன் மிக்க கவலையுடன், “பார்த்தனே, அதோ பார், உன் நண்பனும் சிஷ்யனுமான சாத்யகி சோமதத்தனின் மகனுக்கு தோற்று விட்டான். வில்வித்தையில் உனக்கு சற்றும் சளைக்காத உன் சிஷ்யன் அதோ பார், பூரிசிரவசால் கொல்லப்படப்போகிறான். இதுவரை யுத்தத்தில் யாராலும் ஜெயிக்கப்படாதவன் என்ற உன் சிஷ்யனின் பெயர் பொய்யாகி விடும் போல இருக்கிறதே, அங்கே பார்.” என்று கூறினான்.

    அப்போது அருச்சுனன், பூரிசிரவசை மனத்தால் நமஸ்கரித்து பேசலுற்றான். “குருகுலத்தின் புகழை பெருக்கும் மாவீரன் பூரிசிரவஸ் சாத்யகியைக்கொல்லாமல் வெறுமனே விளையாட்டுப்போல இழுக்கிறானே, அது குறித்து நான் மகிழ்கிறேன், கண்ணா. சாத்யகியைக்கொல்லாமல் சும்மா இழுத்து அவமானப்படுத்தும் அந்த மாவள்ளலை நான் போற்றுகிறேன்” எனக்கூறி, மனத்தால் பூரிசிரவசை அருச்சுனன் மெச்சினான்.

    ஆனாலும் சாத்யகியின் கஷ்டமான நிலைமையைக்கண்டும், நிராயுதபாணியான அவனை பூரிசிரவஸ் ஆயுதத்தால் வெட்ட முயற்சிப்பதையும் கண்டு,  “வாசுதேவரே, ஜயத்ரதனைக்கொல்வதிலேயே முனைப்பாக இருந்ததினால் நான் சாத்யகியை கவனிக்க இயலாது இருந்தேன். இருந்தாலும், தங்கள் கட்டளைப்படி, இதோ யாதவ குல மாவீரனுக்காக, மிகக்கஷ்டமான ஒரு காரியத்தை பண்ணுகிறேன்” என்று சொன்னான்.

    அடுத்த கணம், காண்டீபத்தில் இருந்து கூரிய அம்பு ஒன்று புறப்பட்டது. கத்தி பிடித்த பூரிசிரவசின் வலக்கரம் ஐந்து தலை நாகம் போல, நிலத்தின்கண் வீழ்ந்தது. சாத்யகி பிழைத்தான்.

    பூரிசிரவசோ ஒரு கணம் திகைத்தான். சாத்யகியை விட்டு விட்டு, பின்னாலிருந்து தன் கண்ணுக்கு தெரியாமல் யார் இந்த இழிசெயலை செய்தது என சுற்றும் முற்றும் பார்த்தான். அந்தோ, பேரதிர்ச்சி! பீபத்சு (பார்த்தன்) தான் இக்காரியத்தினை செய்தது என்று அறிந்ததும் அவனால் நம்ப முடியவில்லை. சுதாரித்துக்கொண்டு, துக்கமும் கோபமும் கொண்டு பார்த்தனை இகழ்ந்து இடித்துரைக்கத்தொடங்கினான்

    அப்புறம் என்ன ஆனது? பூரிசிரவஸ் என்ன சொன்னான்? இது யுத்த தருமத்துக்கு விரோதமில்லையா? அருச்சுனன் என்ன சொன்னான்?

    அந்தப்பகுதி அடுத்த பதிவில்!

    (தொடரும்)

    உபரித்தகவல்கள்:

    பீபத்சு = அருச்சுனன். தகாத காரியத்தை கனவிலும் செய்யாதவன் என்று பொருள். தனக்கு கிட்டிய சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டு ஒருநாளும் தகாத காரியம் செய்ய மாட்டான், பாப காரியம் செய்ய மாட்டான் என்ற புகழால் வாய்த்த பெயர்.

    அந்தக்காலத்தில் தேர்கள் இன்றைய armour vehicles  போலத்தான் இருந்தன என்பது பாரதத்தில் தெளிவாக வரும். இன்று தொலைக்காட்சியில் காட்டுவது போல குதிரை வண்டி போல இருக்கவில்லை. நான்கு குதிரைகள் (குறைந்த பட்சம்) பூட்டப்படும். இரண்டு முன்பக்கம் பூட்டப்பெறும். இரண்டு குதிரைகள் சக்கரத்துக்கு ஒன்றாக இடது பக்கமும் வலது பக்கமும் பூட்டப்பெறும். முன்னே ஒருவர், சக்கரத்துக்கு ஒருவர் என்று மூன்று சாரதிகள் உண்டு. ரதத்தின் எல்லா பக்கமும் புலித்தோலும் மாட்டுத்தோலும் சாளரங்கள் போல வேய்ந்து, இருக்கும். Bullet proof “Kevlar” இன்று செய்யும் பணியை அன்று தோல் செய்தது. ஆயுதங்கள் supply ஏந்தி எட்டு மாட்டு வண்டிகள் தேரை பின் தொடரும். சாதாரணமாக அந்த மாட்டு வண்டிகளை வீரர்கள் தாக்க மாட்டார்கள். எந்த ரதத்தை வீரன் பயன் படுத்துகிறானோ அதை மட்டுமே உடைக்கப் பார்ப்பார்கள். மாட்டு வண்டிகள், ஆயுதம் எடுத்து கொடுப்போர், பக்க வாத்தியம் வாசித்து உற்சாகப் படுத்துவோர், வேடிக்கை பார்க்க வந்தோர், தோல்வியை ஒப்புக்கொண்டோர், கருணை வேண்டுவோர், யுத்தத்தில் தூதர்களாக வருவோர், நிராயுதபாணிகள் ஆகியோர் மீது ஆயுதப் பிரயோகம் செய்வது யுத்த விதிகளுக்கு முற்றவும் புறம்பானது. ஆனால் யுத்த சூட்டில் சில விதி முறைகள் அவ்வப்போது மீறப்பட்டன.

    கேடயங்களும் மாட்டுத்தோலால் செய்யப்பட்டவை. பொன்னால் வல்ல வடிவமாக, பிறை வடிவமாக நிலவுகள் போன்ற designs பொறிக்கப் பட்டவை. இது தமிழகத்திலும் வழக்கம், புறநானூறிலும் வரும்.

    Share
  • மகாபாரத முத்துக்கள் – பகுதி 2

    புவனேஷ்வர் 

    பூரிசிரவஸ் வதம் – பகுதி 2 – பரம்பரைப்பகைவன்!

    வணக்கம், அன்பர்களே.

    சென்ற பதிவில், நாம் துரோணருக்கும் துச்சாதனனுக்கும் இடையில் நடந்த உரையாடலை கண்டோம். பதினான்காம் நாள் யுத்தத்தில் சாத்யகியிடம் அடிபட்டு ஓடி வந்த துச்சாதனனின் நிலை கண்டு துரோணர், பாண்டவர்களோடு சமாதானம் பண்ணிக்கொள் என்று அறிவுறுத்திய கட்டம் அது. இன்று, அதே பதினான்காம் நாள் யுத்தத்தில், அடுத்து சாத்யகி பண்ணின ஒரு முக்கியமான காரியத்தை பார்க்கலாம். அது தான் பூரிசிரவஸ் வதம்.

    பரம்பரை பகை, குடும்பப்பகை என்று எல்லாம் இன்றைக்கு சொல்கிறார்களே, அதெல்லாம் அன்றைக்கும் உண்டு. இன்றைக்கு இருப்பதை விட கொஞ்சம் தூக்கலாகவே அப்போதெல்லாம் உண்டு எனத்தான் தெரிகிறது. அப்படி ஒரு பரம்பரைப்பகை தான் சாத்யகி குடும்பத்துக்கும், பூரிசிரவஸ் குடும்பத்துக்கும்.

    முதலில் இது என்ன பகை என்று ஒரு முன் கதை சுருக்கம் பார்ப்போம்.

    கண்ணன், பாண்டவர்கள் எல்லாரும் பிறப்பதற்கு முன், கண்ணனின் தாயாரான தேவகி அம்மையாருக்கு சுயம்வரம் ஏற்பாடாகி இருந்தது. அங்கே, யாதவர்களை சேர்ந்த சினி என்ற அரசன் வந்திருந்தான். அவன், அங்கிருந்த மற்ற ராஜாக்களை எல்லாம் போர் செய்து ஜெயித்து, தேவகியை வசுதேவருக்காக தனது தேரிலே ஏற்றிக்கொண்டு கிளம்பினான். இதை கண்ட மற்றொரு அரசனான சோமதத்தனுக்கு பொறுக்கவில்லை. ஆத்திரத்துடன் சினியை தன்னுடன் மல்யுத்தம் செய்ய அழைத்தான். சிறிது நேரம் மல்யுத்தம் நடந்தது. சோமதத்தன் தோற்றான். சினி, ஆத்திரத்தில் தனது வாளை உருவி உயர்த்தி, இடது கையால் சோமதத்தனின் தலை மயிரை பிடித்து இழுத்து, காலால் உதைத்து “பிழைத்துப்போ” என அவமானப்படுத்தி அனுப்பினான்.

    எல்லா அரசர்களுக்கும் முன்னால் சினியால் தான் அவமானப்படுத்தப்பட்டதை நினைந்து நினைந்து வெட்கி மாழ்கிய சோமதத்தன், மகாதேவரை குறித்து கடும் தவம் இயற்றினான். அவனது தவத்தால் மகிழ்ந்த மகாதேவரும் அவனுக்கு தரிசனம் தந்து, “உன் விருப்பத்தை நிறைவேற்றுவேன்” என வரம் கேட்க சொன்னார். இவனும், தன்னை பல அரசர்கள் முன்னிலையில் உதைத்து அவமானப்படுத்திய சினியின் மகனை அதே போல பல அரசர்கள் முன்னிலையில் உதைத்து அவமானப்படுத்தக்கூடிய மகன் தனக்கு வேண்டும் என வரம் கேட்டாம். மகாதேவரும் “அங்ஙனமே ஆகுக” என வரம் தந்தருளி அந்தர்த்தானமானார்.

    சினியின் பேரன் சாத்யகி. சோமதத்தனின் மகன் பூரிசிரவஸ். பிள்ளைப்பருவத்தில் இருந்தே, இவர்களுக்குள் அந்த பரம்பரை பகை ஓதி ஓதி வளர்க்கப்பட்டது. எத்தனை தான் சிறப்புகள் இருப்பினும் கோபமும் க்ஷாத்ரமும் (பழிவாங்கும் பண்பு/வன்மம்) க்ஷத்ரியர்களுக்கு உண்டு. க்ஷத்ரியன் என்ற பெயரே அதில் இருந்து உண்டானதுதான். சரி.

    வாள் போரில் நிகரற்றவன் பூரிசிரவஸ். கத்திச்சண்டையில் பூரிசிரவசை யாரும் ஜெயிக்க முடியாது என்பது பிரசித்தம். முன்பு கூட ஒரு முறை சாத்யகியை கத்திச்சண்டைக்கு பூரிசிரவஸ் இழுத்த போது பீமசேனன் அவசர அவசரமாக வந்து சாத்யகியை விலக்கி தன் தேரில் அழைத்துப் போய் விட்டான். பூரிசிரவசின் வாள்வீரம் அவ்வளவு பிரசித்தம். அதே போல வில்வன்மையில் சாத்யகி அருச்சுனனை ஒத்தவன் என அனைவரும் சொல்லும் அளவுக்கு சாத்யகி விற்போரில் நிபுணன். அருச்சுனனின் சீடன். (அப்பொழுது கேட்கவா வேண்டும்?)

    சரி. துச்சாதனனை தோற்கடித்த பின், துச்சாதனன் துரோணரிடம் போனானா, சாத்யகி மற்ற வீரர்களை ஒரு கை பார்த்த வண்ணம், அருச்சுனனை நெருங்கினான்.

    இனிவியாசர்சொல்லுவதைப்பார்க்கலாம்!

    சாத்யகி, தூரத்தில் அருச்சுனனின் தேரை கண்டான். தன் உயிர் நண்பனும் ஆசாரியனுமான பல்குணனை கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. உற்சாகம் மேலிட, எதிர்ப்பட்ட எல்லாரையும் துவம்சம் பண்ணிக்கொண்டு விஜயனுக்கு சகாயம் பண்ண போனான்.

    அப்போது திரிகர்த்தர்களின் விற்படை சாத்யகியை சூழ்ந்து கொண்டு தாக்கியது, தோள்தட்டும் ஓசையும், வாட்களும் ஈட்டிகளும் கதைகளும் நிறைந்த அந்த படையை தனி ஒருவனாக சாத்யகி விற்போரில் சிதறடித்தான். அருச்சுனனை கண்ட உற்சாகத்தால், அவன் வேகம் மேலும் கூடியது போல காணப்பட்டது. பகைவர்களும் அவன் வீரத்தை கண்டு அதிசயித்து வேடிக்கை பார்த்தனர். ஒரு கணம் மேற்கில் காணப்பட்ட சாத்யகி, அடுத்தகணம் கிழக்கிலும் பின் வடக்கிலும் பின் தெற்கிலுமாக தனது தேரிலே மிக்க வேகத்துடன் சஞ்சரித்து, நூறு வீரர்கள் ஒரே உருவில் போரிடுவதை போல போரிட்டான். திரிகர்த்தர்கள் படை கொஞ்ச நேரத்திலேயே ஓட ஆரம்பித்தது. இதைக்கண்டு பொறுக்காத கலிங்கர்கள் சாத்யகியை சூழ்ந்து கொண்டு, மதம் கொண்ட யானையை பாகர் கூட்டம் அங்குசத்தால் குத்துவது போல கணைகளால் துளைக்கப்பார்த்தார்கள். கொஞ்ச நேரம் அவர்களோடு போரிட்டு, அவர்களை கடந்தான் சாத்யகி. கடலிலே கரை காணாமல் நீந்திக்களைத்த ஒருவன், தெங்கும் நுங்கும் தேன்கதலிகளும் நிறைந்த கரையை அருகில் கண்டால் களிப்பது போல களிப்புற்ற சாத்யகி சிம்மநாதம் செய்தான்.

    சாத்யகி வருவதைக்கண்ட வாசுதேவன், “பார்த்தனே, அதோ உன் வழியை பின்பற்றி வரும் சினியின் பேரனைப்பார்! எதிரிகளால் வெல்லப்படாதவனே, அவன் உனது சிஷ்யனும் நண்பனுமாவான். எதிர்த்து வந்த மாபெரும் வீரர்களை எல்லாம் துரும்பென மதித்து அந்த இளம் காளை உனக்காக வருகிறான்! எதிரிகளுக்கு பலத்த சேதம் உண்டாக்கி விட்டு, உனக்கு உயிரினும் பிரியமான நண்பன் சாத்யகி வருகிறான், அதோ பார்! துரோணரையும் போஜ ராஜனான க்ருதவர்மனையும் தனது பாணங்களால் நொறுக்கி விட்டு, இந்த சாத்யகி உன்னிடம் வருகிறான்! ஆயுதப்பயிற்சியில் குறையற்றவனும் தருமபுத்திரனுடைய நலனையே குறிக்கோளாக கொண்டவனுமான இந்த சாத்யகி, சிறந்த பல வீரர்களை கொன்று விட்டு உன்னிடம் வருவதைப்பார்! யுத்த அரங்கத்தில் ஒரு செயற்கரிய செயலை செய்து முடித்து விட்டு, உன்னைக்காண வரும் சாத்யகியை பார்! துரோணரை தலைமையாக கொண்ட பல மகாரதர்களுடன் ஒரே தேரில் நின்று, வேறு துணையின்றி போரிட்டு ஜெயித்து, அதோ, உன்னைக்காண வரும் சாத்யகியை பார்! தன் தோள்வலியால் கௌரவப்படையை துளைத்து, யுதிஷ்டிரனால் அனுப்பப்பட்ட சாத்யகி வருகிறான், அதோ பார்! கௌரவர்களிடையே தனக்கு ஈடான ஒரு வீரனும் இல்லாத சாத்யகி, எண்ணிறந்த வீரர்களை எமனுக்கு விருந்தாக்கி விட்டு உன்னை நாடி வருவதை காண்! பசுக்கூட்டங்களில் இருந்து ஒரு சிம்மம் வெளிப்படுவது போல கௌரவப்படைகளுக்குள் இருந்து வெளிப்படும் சாத்யகியைப்பார்! தாமரை போன்ற அழகிய முகங்களுடைய பல அரசர்களின் தலைகளை பூமியின் மேல் பரப்பி விட்டு உன்னிடம் வரும் சாத்யகியை பார்! துரியோதனனையும் அவன் சகோதரர்களையும் யுத்தத்தில் வென்று, ஜலாசந்தனை கொன்று விட்டு உன்னிடம் வரும் சாத்யகியைப்பார்! கௌரவர்களை துரும்பென மதித்து, ரத்த ஆற்றினை இன்று உண்டாக்கிய சாத்யகி, உன்னை நோக்கி களிப்புடன் வருவதைப்பார், அருச்சுனா!” என்று சொன்னான்.

    பார்த்தனோ, சாத்யகியைக்கண்டு மகிழ்ச்சி அடையாமல், பெருத்த அதிருப்தியே அடைந்தான். கண்ணனிடம் அவன், “திண்மை பொருந்திய அழகிய தோள்களை உடைய கண்ணா, சாத்யகியின் வருகை எனக்கு சிறிதும் திருப்தி அளிப்பதாக இல்லை. கேசவனே, தருமராஜரை தனியாக விட்டு விட்டு இவன் இங்கு வந்து விட்டானே, யுதிஷ்டிரரின் நலம் பற்றி எனக்கு கவலையாக உள்ளது. (அவரைப்பிடிக்க வேண்டும் என முனைப்புடன் உள்ள துரோணரின் சபதத்திலிருந்து அவரைக்காக்க சாத்யகியை நியமித்து விட்டு ஜயத்ரதனை முடிக்க நான் வந்தேன், இவனோ அவரை தனியாக விட்டு விட்டு எனக்கு உதவி செய்ய வருகிறானே) இவனை பிரிந்து அவர் அங்கே யுத்த களத்தில் உயிரோடு உள்ளாரா என சந்தேகமாக உள்ளது.

    இவன் அங்கு தருமரை பாதுகாத்துக்கொண்டல்லவோ இருந்திருக்க வேண்டும்? இவன் எதற்காக கேசவா, என்னைப்பின் தொடர்ந்து வருகிறான்? பாதுகாக்க ஆளின்றி தருமராஜர் துரோணர் வசம் அனாதையைப்போல விடப்பட்டு விட்டாரே!

    நானோ இன்னும் ஜயத்ரதனை கொன்று முடிக்கவில்லை. அதோ பார், பூரிசிரவஸ் சாத்யகியை போருக்கு அறைகூவி அழைக்கிறான்! நான் இப்போது ஜயத்ரதனை கொல்ல முனைவேனா இல்லை இந்த சாத்யகியை காப்பாற்ற முனைவேனா? சூரியன் வேறு அஸ்தமிக்கத் துவங்கி விட்டான்.

    சாத்யகியைப் பொறுத்த வரை, அவன் மகாவீரன் தான், ஆனாலும், என் உயிரை விடப்பிரியமான உண்மை நண்பனான அவன் எனக்காக நாள் முழுக்க போராடி மிகவும் களைத்துள்ளான்.  அவன் தேரில் உள்ள ஆயுதங்கள் குறைந்து உள்ளன, அவனது குதிரைகளும் சாரதிகளும் களைத்து உள்ளார்கள். பூரிசிரவசோ, நன்கு இளைப்பாறி, முழு பலத்துடனும் படைபலத்துடனும் உள்ளான். இந்த போரில் வெற்றி சாத்யகி பக்கம் இருக்குமா கேசவனே? எனக்கு சந்தேகமாக உள்ளது!

    கௌரவர் படை எனும் பெரும் சமுத்திரத்தினை அனாயாசமாக கடந்த எனது நண்பன், சினியின் பேரன் சாத்யகி, பூரிசிரவஸ் எனும்  ஒரு பசுவின் குளம்படிக்குட்டையில் மூழ்கி விடுவானோ என எனக்கு அச்சமாக உள்ளதே, ஜனார்த்தனா!

    குருகுலஸ்ரேஷ்டனும், ஆயுதங்களில் தேர்ந்தவனும் மகாத்மாவுமான பூரிசிரவசுடன் இப்போது செய்யப்போகும் போரில் சாத்யகி வெற்றியைத்தழுவுவானா?

    இவனை இங்கு எனக்காக அனுப்பியது தரும ராஜா யுதிஷ்டிரர் எடுத்த பிழையான முடிவு என நினைக்கிறேன், கண்ணா. த்ரோணரைப்பற்றிய எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல், என் மீது கொண்ட அளவற்ற அன்பினால், இவனை எனக்கு சகாயமாக அனுப்பி இருக்கிறார் எனவே நினைக்கிறேன்.

    இறைச்சியையே விரும்பும் கழுகு வானத்தில் வட்டமிடுவது போல, யுதிஷ்டிரரையே பிடிக்க முனைந்து அங்கே துரோணர் முயற்சிக்கிறாரே! அரசர் பாதுகாப்பாக இருக்கிறாரா என்ற சந்தகம் எனக்குள் வந்துவிட்டது மாதவா!”, என்று அருச்சுனன், அதிருப்தியும் கவலையும் கலந்த தொனியில் வாசுதேவனிடம் கூறினான்.

    அதே சமயம், பரம்பரைப்பகையை நினைத்து மிக்க ஆத்திரத்துடன் பூரிசிரவஸ், களைத்து இருந்த சாத்யகியை நோக்கி போருக்கு அறைகூவி விரைந்தான்.

    அப்புறம் என்ன நடந்தது?

    அது அடுத்த பதிவில், அன்பர்களே.

    உபரித்தகவல்: பல்குணன் = அர்ஜுனன். அவன் பிறந்த உத்தர ஃபால்குணீ நக்ஷத்திரத்தின் பெயராலேயே அழைக்கப்பெற்றான். இந்த நக்ஷத்திரத்தை தமிழில் உத்தரம் (கன்னி ராசி) என்கிறோம். இதை அவனே, உத்தர குமாரனிடம் விராடபர்வத்தில் கோஹரன சண்டையின் போது  சொல்கிறான். இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வரும் மாசம் ஃபால்குணி மாசம். தமிழில் பங்குனி. பல்குணன் என்ற பெயர் அல்லாமல் அர்ஜுனனின் பிற பெயர்களாவன ஜிஷ்ணு, கிரீடி, ஸ்வேதவாஹணன், பீபத்ஸு, விஜயன், கிருஷ்ணன், சவ்யசாசி, தனஞ்சயன். குந்தியின் மைந்தனாதலால் கௌந்தேயன். பார்த்தன் என்னும் பெயரும் அதே அர்த்தம் தான். குந்தியின் இயற்பெயர் ப்ருதை. ஆக, அவள் மைந்தன் பார்த்தன். பாண்டு மைந்தன் ஆதலால் பாண்டவன். இவை இரண்டும் பாண்டவர் ஐவருக்கும் பொதுவான பெயர்கள். பாண்டவன் என்றால் ஐவர் நினைவும் வரினும் பார்த்தன் என்றால் அர்ஜுனன் நினைவு தான் வரும். இதிலிருந்து, கீர்த்தியும் புகழும் வாய்ந்த மைந்தன் தந்தையின் புகழைவிட, குறிப்பாக தனது தாயின் புகழை பெருக்குவான் என்பது தெள்ளென விளங்குகிறது. தாய்மை வாழ்க.

    (தொடரும்)

    Share
  • புதிய சுதந்திரப் பள்ளு

     

    புவனேஷ்வர்

     

    பல்லவி:th_india_flag

    ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே – புத்தி

    ஆழத்தில் சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று

    (ஆடுவோமே)

    சரணங்கள்:

    எங்கள்ம றைகளைப் போற்றி யறிவோம் – நல்ல

    முன்னோரின் சொல்வார்த்தை நம்பிநடப் போம்;

    அன்னியர்தம் கட்டுக்கதை தள்ளிடுவோமே – எம

    துண்மைவர லாற்றைப்பறைக் கூத்திடு வோமே.

    (ஆடுவோமே)

    செய்தொழிலை யீசனுக்கு என்றுகொடுப் போம் – அதில்

    இந்தத்தொழில் மட்டமென்று சொல்ல லொழிப்போம்;

    சொந்தத்தொழில் செய்துநம துள்ளம்நிறைப் போம் – பிறர்

    மண்ணுக்கினி ஏவற்ப்பணி செய்து மாயோம்.

    (ஆடுவோமே)

    நாம்வாழும் தேசம்நம தென்று அறிந்தோம் – இந்த

    மண்ணில்விளைப் பண்டமது நம்மதுணர்ந் தோம்;

    மேலையவர் சந்தைக் கதை விலைபேசோம் – அவர்

    ஆசைவார்த்தை கேட்டுமோசம் போக மாட்டோம்;

    (ஆடுவோமே)

    ஆறுமலைக் காடுயிங்கு பொதுவினில்வை ப்போம் – அதில்

    ஆருக்குமிங் குரிமையுண்டு என்று விதிப்போம்;

    வீறுகொண்டே தூய்மை பேணிடுவோமே பண்டை

    வீரரைப்போ லேயுறுதி மானம் வளர்ப்போம்.

    (ஆடுவோமே)

    சேற்றதனில் கால்பதிக்க அஞ்சுதல்செய் யோம் – நல்ல

    கொல்லைதனில் காய்கிழங்கு கீரை வளர்ப்போம்;

    பாலைத்த ரும்நல்ல பசுவளர்த் தேயவள்

    தாயெனவே கும்பிட்டுநாம் கொஞ்சி மகிழ்வோம்;

    (ஆடுவோமே)

    மேற்கிலவர் சொல்லுவதை யாய்ந்துதெளி வோம் – அதில்

    கொள்ளுவன கொண்டுமிச்சம் தள்ளிநடப் போம்;

    நம்வேர்கள் நாமறிந்து நலஞ்செய்குவோம் – பிறர்

    வஞ்சனைகள் பகுத்தறிந்து வழிகாணு வோம்;

    (ஆடுவோமே)

    பொருளீட்டல் குடும்பத்துக் கென்று வுணர்வோம் – வெறும்

    தொழில்மட்டும் வாழ்க்கையில்லை என்றுதெளி வோம்;

    உற்றவு றவுகளை நெஞ்சிற்சுமப் போம் – ஒரு

    தீங்குவர மாட்டாது பகிர்ந்துண்ணு வோம்;

    (ஆடுவோமே)

    மாதர்கு லத்துக்குப் போற்றுதல் செய்வோம் – பிறர்

    பெண்டிரும்நம் பெற்றவளும் ஒன்றெனச் சொல்வோம்;

    கொண்டவுயிர்க் கோமகளே நிறைகுடமென்னக் – கூடிக்

    கற்புநெறி நெஞ்சொழுகத் தோழமைகொள் வோம்;

    (ஆடுவோமே)

    கொண்டவனை நம்பியுயிர் நட்பாகு வோம் – அவன்

    வில்லாக நாணாகி நாம்வாழு வோம்;

    தாரமவள் தாயுமென நெஞ்சமுரைப் போம் – அவன்

    சக்கரம்நாம் மையத்திலே யச்சாகு வோம்;

    (ஆடுவோமே)

    காதல் வாழ்கவென்று கூத்திடுவோம் காண் – நல்ல

    காதல் நலமெனக ளித்தாடு வோம் ;

    காதலது நல்லின்பம் காதலி தெய்வம் – அதில்

    ஊறுசுவை யுண்டதுநல் லுயிர்க் கமுதாம்!

    (ஆடுவோமே)

    Share
  • மகாபாரத முத்துக்கள்!

    புவனேஷ்வர்

    வியாசர் இயற்றிய மகாபாரதத்தில் இருந்து எனக்குப் பிடித்த சில சுவையான பகுதிகளை “மகாபாரத முத்துக்கள்” என்ற பெயரில் கடந்த ஓராண்டாக எழுதி வைத்துக்கொண்டு வருகிறேன். அவற்றை வல்லமை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வியாசர் சொன்னதைத்தான் தமிழில் ஓர் கதைசொல்லியாக சொல்லுகிறேன். மொழிபெயர்ப்பு + கதைசொல்லல் என்று கூட சொல்லிவிடலாம்.

    பாரத நாட்டுக்கே உரிய பண்பாடு, நாகரிக கோட்பாடுகள் ஆகியவை அந்நாளில் எங்ஙனம் இருந்தது என்பதை இக்காலத்தில் உள்ளோர் அறிந்து கொள்ள இவை உதவும். வெறும் கதையாக இல்லாமல் வாழ்வியல் நெறிகளையும் குறைவறக் கூறும் பண்டை நூற்கள் உற்ற தோழர்களே.
    முதல் பாகமாக, பூரிசிரவஸ் வதம் என்னும் பகுதியைக் காணலாம். இது நான்கு பாகங்களாக வரும். ராமாயணத்தில் வாலி வதம் போல மகாபாரதத்தில் பூரிசிரவஸ் வதம் சர்ச்சைக்குரிய ஒன்று (அபிமன்யு வதம் தார்தராஷ்டிரர்கள் பண்ணினது. இது பாண்டவர் பக்கம் செய்த ஒன்று).

    அதில் முதல் பாகம் – துரோணரின் அறிவுரை:

    அன்புடன்,
    புவனேஷ்வர்

    மகாபாரத முத்துக்கள்: பூரிசிரவஸ் வதம் – பகுதி 1 – துரோணரின் அறிவுரை!

    அபிமன்யு அநியாய விதமாக ஜயத்ரதனால் கொல்லப்பட்டதை அறிந்த அருச்சுனன் ரௌத்ராகாரமாக “நாளை மாலைக்குள் ஜயத்ரதனை கொல்வேன்; அவன் உயிருக்குப் பயந்து ஓடியோ, அல்லது தரும புத்திரரிடமோ க்ருஷ்ணணிடமோ சரண் அடைந்தாலோ அன்றி, நாளை மாலைக்குள் அவன் உயிரை காண்டீபம் குடிக்கும். இல்லையேல் ஜொலிக்கும் தீயினில் பாய்ந்து மகன் சென்ற உலகுக்கு நானும் செல்வேன், இது சத்தியம்” என கோரமான சபதம் பண்ணினான்.

    ஜயத்ரதனை முடிக்க முனைந்து அருச்சுனன் சென்றான். வில்லை இரு கைகளாலும் பிடித்து இடது கையாலும் அம்பெய்யும் திறமையை பெற்றவன் அர்ஜுனன் (சவ்யசாசி) என்று எல்லாரும் அது நாள் வரை கேள்விப்பட்டுத்தான் இருந்தார்கள். அன்று தான் கண்கூடாக பார்த்தார்கள்.

    இது வரை பதின்மூன்று நாட்கள் யுத்தத்தில் கூட, அருச்சுனன் வந்தால் எவரும் அவன் முன்னால் நிற்க முடியாது என்ற நிலை இருந்தது தான். வாய் திறந்த அந்தகனை போல அவன் எதிரிகளுக்குக் காட்சி தந்தான். ஆனால் அதுவரை கௌரவப்படை கண்ட அருச்சுனன் ஒன்றுமே இல்லை என்று ஆக்குவது போல அன்று காண்டீபம் தன் முழுப்பண்பையும் காட்ட ஆரம்பித்தது. பாணங்களை எடுப்பதும் தொடுப்பதும் விடுப்பதும் கண்ணுக்குத் தெரியவில்லை. அர்ஜுனனின் வில்வன்மையும் கண்ணனின் சாரத்யமும் சேர்ந்து, பயம் கொண்ட கௌரவப்படைகளுக்கு ஒரு அர்ஜுனன் அல்ல, நூறு நூறு அருச்சுனர்கள் தெரிய ஆரம்பித்தார்கள். “இதோ அருச்சுனன், இதோ விஜயன்” என கத்தி தங்களுக்குள்ளேயே வெட்டி மடிந்து பைத்தியம் கொண்டவர்கள் போல அப்படை குலைய ஆரம்பித்தது.

    யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சகாயம் செய்ய சாத்யகி போகிறான். வருஷ்ணி குலத்தவனும் அருச்சுனனின் உயிர் நண்பனும், சீடனும் ஆவான் சாத்யகி. அர்ஜுனனை மிஞ்சும் அளவுக்கு வில் வன்மை கொண்டவன் என வியாசர் அவனை புகழ்வார். துரோணருடன் புரிந்த போரில் அவரிடமே பாராட்டு பத்திரம் வாங்கின வீரன். போரில் அவர் வில்லை ஒரு அம்பால் உடைத்தான் சாத்யகி. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அடுத்த வில்லை பிடித்து நின்றார் ஆசாரியர். அடுத்த கணம் கழுகு இறக்கைகள் பூட்டிய அம்பு ஒன்று அந்த வில்லை கைப்பிடியில் துண்டாக்கியது. அடுத்த வில்லை நாணேற்றினார் துரோணர். நாணேற்றும் போதே அதுவும் உடைந்தது. அதற்கு அடுத்த வில்லை நாணேற்ற கூட நேரம் தராமல் சாத்யகி ஒரே அம்பால் சேதித்தான். இப்படி தொண்ணூற்றாறு விற்களை ஆசாரியர் எடுக்க எடுக்க எடுத்ததும் உடைத்தான் யாதவ குல வீரன். பின் நடந்த யுத்தம் மயிர்க்கூச்செறியும் படி நடந்தது. இவன் சாதாரணமானவன் அல்ல என திவ்ய அஸ்திரங்களை விடுத்தார் பிராமணர். பயப்படாமல், அவர் பிரயோகித்த ஒவ்வொரு அஸ்திரத்துக்கும் பதிலடி கொடுத்தபடி சளைக்காமல் போரிட்டான் சாத்யகி. “யுத்தத்தில் இந்த சாத்யகி ஸ்ரீ ராமனையும், பரசுராமனையும், அர்ஜுனனையும், கார்தவீரியார்ச்சுனனியும் போல போர் புரிகிறான். அவர்களின் வில்வன்மையை நான் இவனுடன் காண்கிறேன்” என்று ஆசாரியார் மகிழ்ந்து பாராட்டினார். எதிரியாக வந்தாலும் வீரனின் மித்தையை ரசித்து பாராட்டும் ஆசாரியரின் உயர்ந்த பண்பு தான் என்னே! சஞ்சயனும் “இன்றைய உலகில் ஸ்ரீ கிருஷ்ணனும், அருச்சுனனும், சாத்யகியுமே சிறந்த வில்லாளிகள். நான்காவது யாரும் கிடையாது” என கண்ணிழந்த மன்னனிடம் பாராட்டினான்.

    அந்த சாத்யகி யுத்தத்தில் அதாகதம் பண்ணுகையில் அவனை எதிர்க்க கர்ணன் சென்றான். தோற்றான். கர்ணனை தான் கொல்வதாக அர்ஜுனனின் சபதத்தை நினைத்து அவனை கொல்லாமல் அனுப்பினான் சாத்யகி. க்ருதவர்மன் சென்றான். மயங்கி கிடந்தான். சில பல வீரர்கள் சென்றார்கள். சென்ற வேகத்திலேயே யமனுக்கு விருந்தாளியாக சென்றார்கள்.

    பின்னர் துச்சாதனன் போனான். கொஞ்ச நேரம் யுத்தம் நடந்தது. கர்ணனையும் துரோணரையும் தோற்கடித்த சாத்யகிக்கு துச்சாதனனை கர்வபங்கம் பண்ண அதிக நேரம் பிடிக்குமா என்ன? தேரிழந்து வில்லிழந்து ஆயுதங்கள் அழிந்து புறங்காட்டினான் துச்சாதனன். பீமனின் சபதத்தை எண்ணி அவனை உயிரோடு விட்டான் சாத்யகி.

    ஓடி வந்தவன் நேரே துரோணரிடம் வந்தான். அவனை துரோணர் நன்றாக திட்டி, சமாதானம் பண்ணிக்கொள், இப்போதும் கூட ஒன்றும் பாழாகவில்லை என கூறினார். போர்க்களத்தின் நடுவே துரோணர் உபதேசித்த வார்த்தைகள் இனி. வருபவை. இவை வியாசரின் வார்த்தைகள். தமிழ் நடைக்கு மட்டுமே நான் பொறுப்பு!

    “துச்சாதனா, ஏன் இந்த ரதங்கள் சிதறி ஓடுகின்றன? அரசன் நலம் தானே? சிந்து தேசத்தரசன் ஜெயத்ரதன் நலம் தானே? நீ ஒரு இளவரசன். நீ ஒரு அரசனின் சகோதரன். நீ ஒரு தேர் வீரன் தானே? ஏன் இப்படி யுத்தத்தில் பயந்து புறங்காட்டி பறந்தோடி வருகிறாய்? யுத்தத்தில் ஜெயித்து நீ இளவரசனாக வேண்டியது தானே?

    முன்னொரு நாளில் நீ பதிவ்ரதையான குற்றமற்ற திரௌபதியிடம் சொன்னாயே நினைவிருக்கிறதா? “சூதாட்டத்தில் ஜெயிக்கப்பட்ட நீ எங்கள் அடிமை, உன் கணவர்களுக்கு கட்டுப்படாமல், உன் கற்பை கழற்றி வீசி விட்டு துரியோதனனின் ஆடைகளை சுமந்து வா; உன் கணவர்கள் இறந்து விட்டவர்களுக்கு சமம், விதை அற்ற எள்ளுக்கு சமானமான அற்பர்கள் உன் கணவர்கள்” என கூசாமல் தைரியமாக அந்த பெண்ணிடம் சொன்னாயே, இப்போது ஏன், ஓ துச்சாதனா, யுத்தத்தில் தைரியம் கெட்டு மானமில்லாமல் ஓடி வருகிறாய்?

    நீ தானே இந்த கொடும் பகையை பாண்டவர்களுடனும் பாஞ்சாலர்களுடனும் மூட்டி விட்டாய்? மூடனே, இப்போது சாத்யகியை கண்டே தொடை நடுங்குகிறாயே? அன்றைக்கு உருட்டிய பகடைகள் சட்டை உரித்த விஷ சர்ப்பங்களை ஒத்த கூரிய அம்புகளாக உருமாறி தாக்கும் என உனக்கு அன்று புரியவில்லையா?

    ஒரு குற்றமும் அறியாத பாண்டவர்களை கேவலமான பல வார்த்தைகளால் சகோதரர்கள் எனவும் பாராது திட்டியவன் நீதானே?

    பாஞ்சாலியின் துயரங்கள் உன்னையே வேராக கொண்டவை. அன்று காட்டிய உனது மமதையும் கர்வமும் இப்போது எங்கே? அன்று பாண்டவர்களை சீண்டிய நீ இப்போது ஏன் புறங்காட்டி ஓடுகிறாய்?

    பயந்து போன இந்தப் படைகளை காக்காமல் ஏன் நீயே ஓடி வருகிறாய்?

    சாத்வத குலத்தை சேர்ந்த சாத்யகி ஒருத்தனை கண்டே உன் மனம் கோழைத்தனத்தை அடைந்து விட்டதே, நீயெல்லாம் காண்டீபத்தை கண்டால் என்ன செய்வாய்? பீமசேனனை கண்டால் என்ன செய்வாய்? இரட்டையர்களை (நகுல சகாதேவர்களை) கண்டால் என்ன செய்வாய்?

    நீ கண்டு பயந்து ஓடி வந்தாயே, அந்த சாத்யகி எய்த அம்புகள், சூரியனைப் போல யுத்தத்தில் எரிக்கும் அருச்சுனன் கையில் உள்ள காண்டீபத்தில் இருந்து வெளிப்படும் அம்புகளுக்கு சிறிதும் நிகராக மாட்டா, தெரிந்து கொள். நீயெல்லாம் காண்டீபத்தைக் கண்டால் என்ன செய்வாய்?

    இவ்வளவு பயந்து ஒடுபவனாக இருக்கிறாயே!

    உன் நன்மையை கருதி சொல்லுகிறேன், கேள். தருமராஜன் நல்லவன், நீதி தவறாதவன். அனைவருக்கும் இனியவன், எதிரிகளையும் அன்பால் கவர்பவன். அவனை போய் பகைக்கிறாயே. உன் அண்ணன் அவன். அவனுக்கு ராஜ்யத்தை கொடுத்து சமாதானம் பண்ணிக்கொள்.

    சட்டை உரித்த விஷ நாகங்கள் புற்றுக்குள்ளே நுழைவது போல போல ஒப்பற்ற பல்குணனின் (அர்ஜுனனின்) அம்புகள் உன் உடலுக்குள் புகும் முன், பாண்டவர்களோடு சமாதானம் செய்து கொள். மகாத்மாக்கள் பாண்டவர்கள் உன் நூறு சகோதரர்களையும் கொன்று ராஜ்யத்தை அடைவதற்கு முன், நீ அவர்களோடு சமாதானம் செய்து கொள்.

    இன்னும் கோபப்படாத யுதிஷ்டிரன் கோபப்படும் முன் சமாதானம் பண்ணிக்கொள். யுத்தத்தில் களிப்பவனான கிருஷ்ணன் ஆத்திரப்ப்படுமுன், தோள்வலியில் நிகரற்ற பீமசேனன் இந்த படைகளுக்குள் புகுந்து உன் சகோதரர்களையும் உன்னையும் யமனுக்கு விருந்தாளிகள் ஆக்குவதற்கு முன் சமாதானம் செய்து கொள்.

    பாண்டவர்களை யுத்தத்தில் ஒருத்தராலும் ஜெயிக்க இயலாது, அவர்களோடு சமாதானம் பண்ணிக்கொள் என ஒப்பற்ற பேரறிவுடைய பீஷ்மர் உன் அண்ணனுக்கு (துரியோதனுக்கு) சொன்னார். மூடனும் கொடியவனுமான உன் அண்ணன் அவரது நன்மொழிகளை கேட்கவில்லை.”

    இதையெல்லாம் கேட்டு அப்புறமாவது துச்சாதனன் திருந்தினானா என்றால், அது தான் இல்லை. துரோணர் சொன்னது எதுவுமே தனக்கு காதில் விழாதது போல, அங்கிருந்து நழுவி சண்டைக்கு சென்றான். அவன் ஆயுள் துரோணர் சொன்னது போல பீமனின் வாளின் முனையில் மூன்று நாட்களில் முடிந்தது என்பது வேறு விஷயம்.

    (தொடரும்…)

    Share
  • கவியின் காதல்!

     

    -புவனேஷ்வர்

     

    நல்ல புகழுடைய வீணை யதன்

    நாதமெ னக்குச்சுவை யில்லை – அரும்

    மெல்லியலே திருக் குவையே! உயிர்ச்

    சோதியு னக்குவய மானேன்!

     

    கொல்லைப் பசுகொடுத்த பாலும் நல்ல

    மாமி தந்தஉண வேதும் – மிக

    நல்ல தாய்கொடுத்த பாகும் எனக்கு

    சிந்தை மகிழ்வுதர வில்லை;

     

    நல்ல நினைப்புடைய தோழர் அவர்

    சொல்லில் எரிச்சலுமுண் டாச்சு – ஒரு

    கள்வெறி போலிது வாச்சு வந்து

    தெள்ளமு தேயருள் வாயோ?

     

    சோலை மரநிழலில் மாந்தர் மகிழ்

    சோடி யாச்செல்லற் கண்டா லுன்

    னோடி ணைந்திடற் கெங்கும் எனக்

    கோடி தள்ளுதற் செய்வாய்?

     

    ஓய்வு ஒழிதலில் லாமல் லுன்றன்

    உறவைநி னைந்திரங்கு வேனோ – ஓர்

    வாழுமு றைமையறியேன் நான் வந்

    திருந்தென் கலிதொலைத் திடாயோ?

     

    அஞ்சு மானொத்த பெண்ணே இது

    வஞ்சக மன்று நீ கண்டாய் – இனி

    நெஞ்ச மறப்பதில்லை யுன்னை யொரு

    தஞ்சமென் பேன்மறுக் காதே!

     

    அருளில் பெரியவராம் மாதர் என்று

    நாலும றைசொல்லக் கேட்டேன் – தனி

    யிருளுன் னவனென்னை கொண்டால் அது

    ஏலா துனக்கது சொல்வேன்;

     

    திங்கள் முகம்பதிந்த நெஞ்சில் சிறு

    தீப்பொறி தங்கிடு மோடீ? உனைக்

    கண்டு மணந்திடவே வந்தேன் – இது

    பண்டைமு றைமையடி கண்ணே!

     

    வண்டு லாவுசோ லையில்நாம் இனிக்

    கண்டுமனம் கலந்தே யிணைவோ மணம்

    கொண்டு மறைவழி நின்றே புகழ்

    மண்டு மனையறம் செய்வோம்!

     

     

    Share