Blog

  • சமஸ்கிருதம், செத்த மொழியா? – மதுமிதா நேர்காணல்

    சமஸ்கிருதம், செத்த மொழியா? – மதுமிதா நேர்காணல்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான மதுமிதா, பல நூல்களின் ஆசிரியர். சமஸ்கிருதத்திலிருந்து சுபாஷிதம் (மகாகவி பர்த்ருஹரியின் கவிதைகள்), மேகதூதம், ருதுசம்ஹாரம் உள்ளிட்ட நூல்களைத் தமிழில் பெயர்த்துள்ளார். சாகித்திய அகாதெமிக்காக, ஒடியக் கவிஞர் பிரதீபா சத்பதியின் கவிதைகளை ‘வசீகரிக்கும் தூசி’ என்ற பெயரில் தமிழில் பெயர்த்துள்ளார். கன்னடத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் சிற்சில நூல்களைத் தமிழுக்குப் பெயர்த்துள்ளார். மொழிகளுடனான அவரது பயணம் குறித்தும் சமஸ்கிருத மொழியின் தனித்தன்மைகள் குறித்தும் தமிழ்-வடமொழிக்கு இடையிலான உறவுகள் குறித்தும் இந்த நேர்காணலில் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

    சமஸ்கிருதம், செத்த மொழியா?, ஆலயங்களில் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஒலிப்பது ஏன்? சொற்கள் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றனவா? வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்தனவா? மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறீர்களா? இந்திப் படிப்பதால் என்ன பயன்? போன்ற சர்ச்சைக்குரிய பல கேள்விகளுக்கு நயமாகப் பதில் அளித்துள்ளார். இந்த அர்த்தமுள்ள நேர்காணலைக் காணுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 12

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 12

    -மேகலா இராமமூர்த்தி

    தந்தைக்கு ஆற்றவேண்டிய நீர்க்கடன்களை ஆற்றிமுடித்த இராமன், பரதனின் மரவுரிக் கோலங்கண்டு மனம்பதைத்து, ”இவ் விரதக் கோலம் நீ புனைந்ததேன் பரத!” என்று வேதனையோடு வினவ,

    நோவது ஆக இவ் உலகை நோய் செய்த
    பாவகாரியின் பிறந்த பாவியேன்
    சாவது ஒர்கிலேன் தவம் செய்வேன் அலேன்
    யாவன் ஆகி இப் பழிநின்று ஏறுவேன்.
    (கம்ப: திருவடிசூட்டு படலம் – 2562)

    ”இந்த உலகத்தை (இங்கே கோசலத்தைக் குறிக்கும்) துன்புறுத்திய பாவச்செயலைச் செய்தவளிடத்தில் பிறந்த பாவியேனாகிய நான், சாகத் துணிந்தேனில்லை; தவம் செய்வதற்குத் தகுதியுடையேனும் அல்லன். பின்பு எப்படித்தான் எனக்கு ஏற்பட்டுள்ள பழியிலிருந்து நான் விடுபடுவது?” என்று கண்ணீர் உகுத்த பரதன், இராமனை முடிசூட்டிக் கொள்ளுமாறு வற்புறுத்துகின்றான். அவனைத் தொடர்ந்து வசிட்டரும் பரதனின் கருத்தை வழிமொழிய, இராமன் அதனை மறுத்துத் தாய் தந்தையர் இட்ட கட்டளையை நிறைவேற்றத் தவறுவது அறமன்று! ஆதலால் அரசப்பதவியை என்னால் ஏற்றுக்கொள்ள வியலாது என்று திட்டவட்டமாக மறுத்துவிடுகின்றான்.

    அப்போது தேவர்கள் வானில் தோன்றி, பரதன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். கோசலத்தின் ஆட்சிப்பொறுப்பை யார் ஏற்பது இராமனா? பரதனா? என்ற விவாதம் வளர்ந்துகொண்டே போவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே இவ்விடத்தில் தேவர்களைப் பரதனுக்குச் சார்பாகக் கருத்துக்கூற வைக்கின்றார் கம்பர். இக்காட்சி வான்மீகத்தில் இல்லை.

    தேவர்களின் இக்கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கது என்று இராமன் பரதனிடம் கூற, அதன்பின்னரும் பரதனால் மறுத்துரைக்க இயலவில்லை. அவன் இராமனிடம்,

    “ஐய! நீ பதினான்கு ஆண்டுகளில் திரும்பிவந்து அயோத்தியின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளாவிடில் நான் எரியில் (நெருப்பு) விழுந்து உயிரை விடுவேன்; இது என் ஆணை!” என்று ஆட்சிப்பொறுப்பை ஒரு நிபந்தனையோடு ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கின்றான்.

    ஆம்எனில் ஏழ்இரண்டு ஆண்டில் ஐய நீ
    நாமநீர் நெடுநகர் நண்ணி நானிலம்
    கோமுறை புரிகிலை என்னின் கூர்எரி
    சாம்இது சரதம்நின் ஆணை சாற்றினேன்.
    (கம்ப: திருவடிசூட்டு படலம் – 2596)

    இராமனும் பரதனின் நிபந்தனையை ஏற்றுக்கொள்கின்றான். அதைத் தொடர்ந்து இராமனின் திருவடி நிலைகளை (காலணிகள்) கேட்டுப் பெற்றுக்கொண்டு அவற்றைத் தலையில் சுமந்தபடி இராமனிடம் விடைபெற்றுக் கொண்டான் பரதன்; அவனோடு வந்தவர்களும் அங்கிருந்து அகன்றனர்.

    சித்திரகூடத்திலிருந்து புறப்பட்ட பரதன் நேரே அயோத்திக்குச் செல்லவில்லை. அதற்கு அணித்தேயிருந்த நந்தியம்பதி எனும் கிராமத்தில் தங்கி இராமனின் காலணிகளையே, அவன் சார்பாக, அரியணையில் வைத்து ஆட்சிசெய்து வந்தான்.

    “அண்ணன் எப்போது சாவான்; திண்ணை எப்போது காலியாகும்?” என்ற சொலவடைக்கேற்ப அண்ணனின் இடத்தைக் கைப்பற்றத் துடிக்கும் சராசரித் தம்பியாக இல்லாமல் உயர்ந்த விழுமியங்களையும், சிறந்த மானுடப் பண்புகளையும் கொண்ட உன்னத உடன்பிறப்பாகப் பரதன் திகழ்கின்றான்.

    இனி, காப்பியத்தின் இறுதியில் வருகின்ற ’மீட்சிப் படலத்தில்’தான் நாம் பண்பில்உயர் பரதனை மீண்டும் சந்திக்கமுடியும்!  

    இராமனும் இலக்குவனும் சீதையும் தெற்குநோக்கித் தம் பயணத்தைத் தொடங்கினர். அத்திரி முனிவரின் ஆசிரமத்தை அடைந்து அவரையும் அவருடைய மனைவி அனசூயையையும் (அனசூயை = அசூயை அற்றவள் என்று பொருள்) தரிசித்தனர். அனசூயை சீதைக்கு நல்லாடைகள், அணிகள், வாசனைப் பொருள்கள் முதலியவற்றை அன்போடு அளித்தாள்.

    அங்கிருந்து தண்டக வனம் எனும் பகுதிக்கு வந்துசேர்கின்றனர் மூவரும். அவ்விடத்தில் அவர்களை முதலில் எதிர்கொண்டவன் விராதன் எனும் அரக்கன். அவன் திடீரென்று சீதையைத் தூக்கிக்கொண்டு செல்லவும் எதிர்பாராத இந்த நிகழ்வால் அதிர்ச்சியடைந்த இராமன், விராதன்மீது அம்புகளைச் செலுத்த, அவன் சீதையைக் கீழே இறக்கிவிட்டு இராமனோடு போர் புரிகின்றான். இறுதியில் அவ் அரக்கனை வீழ்த்தி மண்ணில் புதைக்கின்றனர் இராம இலக்குவர். புதைந்த அவன் கந்தருவ வடிவில் உயிர்த்தெழுந்து தான் அரக்கனாகச் சாபம் பெற்ற வரலாற்றை விளக்கி, இராமனால் மீண்டும் பழைய வடிவம் கிடைக்கப் பெற்றதற்கு நன்றிகூறிச் செல்கின்றான்.

    அத் தண்டக வனத்திலேயே பத்தாண்டுக் காலத்தைக் கழிக்கின்றனர் இராம, இலக்குவரும் சீதையும். பின்பு அகத்திய முனிவரைக் காணும்பொருட்டு அங்கிருந்து புறப்படுகின்றனர். தம்மைக் காண இராம இலக்குவர் சீதையோடு வருவதை அறிந்தார் ’என்றுமுள தென்றமிழை இயம்பி இசைகொண்ட’ அகத்திய முனிவர்; அவர்களைத் தாமே எதிர்கொண்டு வரவேற்றார்.

    இங்கே அகத்தியரின் செயற்கரிய செயல்களைப் பட்டியலிடுகின்றார் கம்பர். அதில் ஒரு பாடலில் விண், குரங்கு, புன்னை, நற்றூசு (நல்லாடை), மலைப்பாம்பு, யானை எனும் பல்பொருள் கொண்ட ’நாகம்’ என்ற சொல்லைக் கம்பர் கையாண்டிருக்கும் விதம் நம்மைச் சொக்கவைக்கின்றது.

    யோகமுறு பேர்உயிர்கள் தாம் உலைவுறாமல்
    ஏகுநெறி யாது என மிதித்து அடியின் ஏறி
    மேகநெடு மாலை தவழ் விந்தம்எனும் விண்தோய்
    நாகம்அது நாகம்உற நாகம்என நின்றான். (கம்ப: அகத்தியப் படலம் – 2760)
    அகத்திய முனிவர் தென்னாடு வந்தபோது விந்திய மலையானது இமயமலைக்குப் போட்டியாக வளர்ந்துகொண்டிருந்ததாம். அதனைக் கண்ட யோகியர் அகத்தியரிடம், இவ்வாறு வளர்ந்துகொண்டே செல்லும் இந்த விந்திய மலையை நாங்கள் கடந்துசெல்வதற்கு உதவ வேண்டும் என்று கேட்க, அகத்தியர் வானளாவி நின்ற விந்திய மலையின் மீதேறி, கீழேயுள்ள பாதாள உலகமாகிய நாக லோகத்தை அம்மலை அடையுமாறு அதனைத் தம் காலால் அழுத்தி, அதன்மேல் யானைபோல் கம்பீரமாக நின்றாராம்!

    இதனையே நாகமது (மலையானது), நாகமுற (நாக லோகத்தை அடையுமாறு), நாகமென (யானை போன்று) நின்றான் (அகத்தியன்) என்கிறார் கம்பர்.

    கவிஞர்களுக்குக் கற்பனைவளத்தோடு மொழியாளுமையும் இணைந்திருக்கும்போது அவர்தம் பாடல்களுக்குக் கூடுதல் நயத்தையும் சுவையையும் அவை அளித்துவிடுகின்றன!  

    அகத்திய முனிவரின் ஆசியையும், கூடவே சில படைக்கலங்களையும் அன்பளிப்பாய்ப் பெற்ற இராமன், தாங்கள் தங்குவதற்கு ஏற்ற இடத்தை அவரிடம் கேட்டபோது, இயற்கையெழில் கொஞ்சும் ’பஞ்சவடி’ எனும் இடத்தைக் குறிப்பிட்ட முனிவர், அதன் இயல்பை வருணிக்கின்றார்.

    ”இளம் வாழைக் கனிகள் தொங்கும் வாழை மரங்களும், ஒளிபொருந்திய நுனியையுடைய செந்நெல் வயல்களும், தேனொழுகு பூக்களும் ஆங்கே உள. தெய்வத்தன்மை பொருந்திய பொன்னி எனும் ஆற்றையொத்த கோதாவரி எனும் ஆறு ஆண்டுளது; அதுமட்டுமா? பொன்னொத்த சீதையோடு விளையாட பெருநாரைகளும் அன்னங்களும் உண்டு! ஆதலால் பஞ்சவடியை அடைவாய் மஞ்ச(மைந்தன்)!” என்று அகத்திய முனிவர் இராமனை ஆற்றுப்படுத்துகின்றார்.

    கன்னி இள வாழை கனி ஈவ கதிர் வாலின்
    செந்நெல் உள தேன் ஒழுகு போதும் உள தெய்வப்
    பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள போதா
    அன்னம் உள பொன் இவளொடு அன்பின் விளையாட
    . (கம்ப: அகத்தியப் படலம் – 2779)

    [பஞ்சவடி என்பது ஐந்து ஆலமரங்கள் கூட்டமாய் வளர்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். இஃது அகண்ட கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.]

    முனிவரை வணங்கி விடைபெற்ற மூவரும் தம் பயணத்தைத் தொடர்ந்தனர் பஞ்சவடியை நோக்கி!

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

    Share
  • பழகத் தெரிய வேணும் – 33

    பழகத் தெரிய வேணும் – 33

    நிர்மலா ராகவன்

    முடியும் என்ற நம்பிக்கை வேண்டாமா?

    ஒவ்வொரு பள்ளியிலும் என்னிடம் ஏதாவது கோரிக்கை விடுக்க தமிழ்ப்பெண்களை அனுப்பிவிட்டு, நான் என்ன பதிலளிக்கப்போகிறேன் என்று சீன மாணவிகள் ஆவலுடன் கவனிப்பார்கள்.

    அந்த வருடமும், பள்ளி இறுதியாண்டிற்கு நான் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தபோது, இருவர் என் மேசைக்கு அருகில் வந்தார்கள்.

    “டீச்சர்! இறுதிப் பரீட்சைக்கு எதுவரை படிக்கவேண்டும்?” என்று தெரியாதவள்போல் பத்மா கேட்டாள். அவளுக்குத் துணையாக இன்னொருத்தி.

    ‘ஏற்கெனவே தெரிவித்திருந்தேனே! இது என்ன கேள்வி!’ என்ற தொனியில், அலட்சியமாகக் கூறினேன்: “இரு வருடப் பாடங்களையும்தான்!”

    அவள் உடலைச் சிலிர்த்துக்கொண்டு, “ரொம்ப கஷ்டம், டீச்சர்,” என்றாள்.

    ‘ஓகோ! பேரம் பேச உன்னை என்னிடம் அனுப்பியிருக்கிறார்களா?’

    “You want it easy, go to standard one! (உனக்கு எளிதாக வேண்டுமானால், முதல் வகுப்பிற்குப் போ!”) என்றேன், சூடாக.

    அவள் அதிர, “நான் மொதல்லேயே சொல்லலே?” என்று மற்றவள் முணுமுணுத்தபடி போனாள்.

    அரசாங்க முழுப்பரீட்சைக்கு மூன்றே மாதங்கள்தான் இருந்தன. அதற்கு முதலிலேயே தயார்ப்படுத்த எண்ணினேன். அது அவர்களுக்குப் புரியவில்லை.

    ‘பெரியதாக ஒன்றை ஆரம்பித்து, எப்படி முடிக்கப்போகிறோம்!’ என்ற மலைப்பு எவருக்கும் எழுவதுதான்.

    பிரச்னைகளிலிருந்து ஓடி ஒளிந்தாற்போல் அவை மறைந்துவிடுமா?

    ‘கடினம்!’ என்று பயந்து விலகுபவர்கள் சாதிக்க முடியாது. எல்லாவித தடங்கல்களையும் எதிர்ப்புகளையும் சமாளிப்பவர்கள்தாம் வெற்றி பெறுகிறார்கள்.

    கதை

    எனக்கு அப்போது பதின்ம வயது. நிறைய எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு, பத்திரிகைகளில் எந்த சிறு போட்டி அறிவித்திருந்தாலும், “நானும் பதில் எழுதட்டுமா?” என்று ஓயாது கேட்பேன்.

    “இவள் ஒருத்தி, சரியான போர்!” என்று என் ஆசைக்கு தடை விதிக்கப்பட்டது. (நான் பாட்டி வீட்டில் சில காலம் தங்கியிருந்தபோது, சித்தி சொன்னது).

    உருப்படியான எதுவுமே எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. எதையுமே பல முறை செய்துபார்த்தால்தான் வெற்றி கிடைக்கிறது.

    முயற்சி செய்யாவிட்டால் வெற்றி எப்படிக் கிடைக்கும்?

    என்னிடம் ஒரு நல்ல குணம்: யார் சொல்வதையும் கேட்க மாட்டேன். (சிரிக்காதீர்கள்). எனக்குச் சரியென்று பட்டதை செய்தே தீருவேன். `என்னால் முடியும்!’ என்ற நம்பிக்கை (அல்லது அசட்டுத் தைரியம்) எனக்கு இருந்தது. பிறரது ஆமோதிப்பு எதற்கு?

    ஒரு காரியம் நமக்குப் பிடித்ததாக இருந்தால், அரைகுறையாக விட்டுவிடத் தோன்றாது. அப்போது கண்டிப்பாகத் தவறுகளும் நிகழும்.

    ‘எதற்கு இந்த வீண்வேலை! என்ற கசப்போ, எடுத்த காரியத்தில் அசிரத்தையோ ஏற்படாமல் இருந்தால் வெற்றி நிச்சயம்.

    சில வருடங்களிலேயே, தமிழ்நாட்டில் பிரபலமான ஒரு பத்திரிகையில் என் முதல் கதை வெளியாகியது.

    “உருப்படியா ஏதாவது செய்யேன்! சரியான வேண்டாத வேலை! இதுவா நாளைக்கு உனக்கு சோறு போடப்போகிறது?” என்று பலமுறை கெஞ்சியிருந்த அம்மா அகமகிழ்ந்துபோனாள்.

    “எனக்கு அப்போதே தெரியும். உனக்கிருந்த ஆர்வத்துக்கு..!” என்ற பாராட்டு கிடைத்தது பலரிடமிருந்து.

    பணமா பிரதானம்?

    பணம்தான் பிரதானம் என்று ஒவ்வொரு காரியத்தையும் செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு, `ஏன் நாம் மகிழ்ச்சியாகவே இல்லை?” என்ற வருத்தம் வருகிறது.

    விடுமுறை நாட்களிலாவது தமக்குப் பிடித்த காரியங்களை தனியாகவோ, குடும்பத்துடனோ, அல்லது நண்பர்களுடன் சேர்ந்துகொண்டோ, செய்யலாமே! கலை, விளையாட்டு, வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு ஊர் சுற்றுவது என்று எத்தனை இருக்கின்றன!

    ஈடுபாட்டுடன் பொழுதைக் கழித்தால் இன்னொரு சலிப்பான வார நாட்களை  எதிர்கொள்ளும் உற்சாகம் பெருகும்.

    ஆனால், ஒவ்வொரு விடுமுறை நாளையும் ஒரேமாதிரி செலவிட்டால், அதுவும் விரைவில் அலுப்பு தட்டிவிடும்.

    அலுப்பு சலிப்பெல்லாம் செய்யும் காரியங்களில் மட்டுமல்ல. உறவுகளிலும் இதே பிரச்னைதான்.

    உறவுகளில் சலிப்பு

    “எங்களுடையது காதல் திருமணம்தான். இரண்டு வருடங்கள் பெருமகிழ்ச்சியாக இருந்தது. அதற்குப்பின் — உவ்வே!” என்று என்னிடம் தெரிவித்தாள் ஒரு ஆங்கிலப் பெண்.

    அவளுடைய தோழிகளிடம் கணவர் மரியாதையாகப் பழகினார். நல்லவர் என்றுதான் எனக்குப் பட்டது.

    இருந்தாலும், நெருங்கியே இருந்தால் சலிப்புதான் ஏற்படும்.

    இப்போது ஐந்து வருடங்கள் கணவருடன் ஒன்றாகவே கழித்த சாதனா சொல்வதைக் கேளுங்கள்:

    “நாங்களிருவரும் சேர்ந்து இருந்தபோது, உற்சாகம் வடிந்ததுபோல் இருந்தது,” என்று ஆரம்பித்தவள், “ஆனால் சண்டை எதுவும் கிடையாது,” என்று சேர்த்துக்கொண்டாள்.

    காதலித்து மணந்தவர்கள். அவளை நன்றாகவே புரிந்துகொண்டிருந்த கணவர் விட்டுக்கொடுத்துவிடுவார். அதனால் சண்டைக்கே இடமில்லை.

    “இப்போது வேலை நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் இருக்கிறோம். மாதம் ஒருமுறைதான் சந்தித்துக்கொள்ள முடிகிறது. ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று மேலும் பகிர்ந்துகொண்டாள் சாதனா.

    (‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’ என்று நான் அவளைக் கேட்கவேயில்லை).

    கதை

    `நான் காதலித்துத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்!’ என்று உறுதியாக இருந்தான் தம்பிராஜா. அப்படியே செய்தும் காட்டினான்.

    ஓரிரு ஆண்டுகள் இனிமையாகக் கடந்தன. அதற்குப்பின், அலுவலகம், மனைவி, குழந்தைகள் என்று இயந்திர கதியில் வாழ்க்கையைக் கடக்க, அலுப்புத் தட்டியது.

    ‘மனதுக்கு உற்சாகம் அளிக்கும்’ என்று நண்பர்கள் ஆசைகாட்ட, சூதாட்டத்தில் இறங்கினான்.

    எந்த மனைவி பொறுப்பாள்?

    அவள் சண்டை பிடிக்க, இவன் இன்னும் விலகிப்போனான்.

    ‘எனக்கும் என் கணவருக்கும் சண்டை, பூசலே வந்தது கிடையாது,’ என்று ஒரு பெண் சொன்னால், அதை நம்புவதற்கில்லை. அல்லது, அவர்கள் உறவு உப்பு சப்பின்றி இருக்கும்.

    நிச்சயிக்கப்பட்ட கல்யாணமோ, காதல் மணமோ, அதன் வாழ்க்கை ஈராண்டுகள்தான்.

    அதன் பின்னரும் அந்த உறவு குலையாமலிருக்க முயற்சிகள் செய்தால்தான் முடியும். மனைவி அலுத்துவிட்டாளென்று இன்னொரு பெண்ணைத் தேடிப்போகிறவனுக்கு அந்த இன்னொருத்தியும் விரைவில் அலுத்துவிட மாட்டாளா?

    எல்லா உறவுகளிலும் இம்மாதிரி சண்டை சச்சரவு உண்டு. காரணங்கள்தான் மாறுபடும்.

    “விரிந்த உறவை ஒட்டுவதைப்பற்றி உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்கிறீர்களா?

    நானும் என் கணவரும் போடாத சண்டையா!

    Share
  • அக இலக்கியச் சிறு பாத்திரங்கள் – 13 (அகவன் மகள்)

    அக இலக்கியச் சிறு பாத்திரங்கள் – 13 (அகவன் மகள்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த் துறைத்தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    அகஇலக்கியச் சிறுபாத்திரங்களின் அகரவரிசைப் பட்டியலில் முதலில் இடம் பெற வேண்டிய பாத்திரம் அகவன்மகள் ஆவாள். தொல்காப்பியம் அகவன்மகள் பற்றிப் பேசவில்லை. தொகைஇலக்கியம் அகவன் மகளை ஒரு பாடலில் நேரடியாகக் காட்சிப்படுத்துகிறது. கட்டுவிச்சி என்னும் அகவன்  மகளிடம்   தோழி  பேசுகிறாள்.

    அகவன்மகளின் தோற்றம்

    தோழி அகவன்மகளிடம் நேரடியாகப் பேசும் பாடல் மட்டுமின்றி; தலைவியிடம் தலைவனின் மனநிலையை விளக்கக்  கையாளும் உவமையில் அகவன்மகளிர் எனும்  தொகைப் பாத்திரம் இடம்பெறும் பாடலும் ஒன்று உளது. இதன் மூலம்  அகவன்மகளின் தோற்றம்  தெளிவாகிறது.

    அகுதை தந்தையிடம் அகவன்மகளிர் பரிசிலாகப் பெண்யானை பெற்றனர்.

    “வெண்கடைச் சிறுகோல் அகவன்மகளிர்” (குறுந்தொகை- 298)

    என அவர்களது தோற்றம் வருணிக்கப்  பெற்றுள்ளது. வெள்ளிய முனையினை உடைய சிறிய கோலைக் கையிலேந்தியவராய் அவர்கள் காட்சி அளிக்கின்றனர். அவளைக் கட்டுவிச்சி என்று விதந்தோதும் பொ. வே. சோமசுந்தரனாரின் உரையும் இதனால் பொருத்தமாகிறது. இன்றைய சமுதாயத்திலும் குறி சொல்பவர் கையில் கோலுடன் இருப்பதைக் காண்கிறோம்.

    தோழி நேரிடையாகப் பேசும் அகவன்மகள் முதியவளாகக் காட்டப் படுகிறாள். அவளது நரைத்த கூந்தல் சங்குமணியைக் கோத்தது போல் வெண்மையாக நீண்டு இருந்தமை;

    “மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
    அகவன்மகளே” (குறுந்.- 23)

    என்ற பாடலடிகளால் தெரிகிறது. இவ்வொப்புமைக்குச் சங்கின் வெண்மை காரணமாக அமைகிறது. அத்துடன் அவளது கூந்தல் சுருண்டு இருந்த தன்மையும் நம் மனக்கண்களுக்குப் புலனாகிறது.

    தோழியின் சொல்வன்மையைக் காட்டுவதற்குரிய கருவி

    தன் மகளின் உடல்மெலிவிற்கும் சோர்விற்கும் காரணம் தேடும் அன்னை கட்டுவிச்சியை அழைத்துக் குறிகேட்கிறாள். கட்டுவிச்சியோ தன் மரபு மாறாமல்; பிறந்த மலை, வழிபடும் தெய்வத்தின் மலை என ஒவ்வொரு மலையையும் வாழ்த்தித் தொடர்கிறாள். தலைவியின் காதல் ஒழுக்கம் பற்றிச் செவிலியிடம் அறத்தொடு நிற்க எண்ணிய தோழி சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்கிறாள்.

    “அகவன்மகளே அகவன்மகளே…
    மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
    அகவன்மகளே  பாடுக பாட்டே
    இன்னும் பாடுக பாட்டே அவர்
    நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே” (மேற்.)

    என்று அகவன்மகளிடம் பேசுவதன் மூலம் தலைவியின் காதலைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறாள். கட்டுவிச்சி பாடிய பாட்டு தலைவனின் மலை பற்றிய பாட்டு. அதை மீண்டும் மீண்டும் பாடச் சொல்லி வற்புறுத்துவது செவிலியின் மனதைத் தெளிவிப்பதற்காகவே ஆகும். தலைவி காதல்நோயால் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறாள் என்ற உண்மையைச் சொல்லாமலே புரியவைக்கும் முயற்சிக்கு அகவன்மகள் பாத்திரம் ஒரு கருவியாக எடுத்தாளப்பட்டுள்ளது. அகவன்மகள் பதிலளிப்பதாகப் பாடல் இல்லை எனினும்; அவள் பாடியமையே  தோழியின் கூற்றுக்கு ஆதாரம் ஆகிறது. சொல்வன்மையையும் காட்டுகிறது.

    அகவன்மகளை மீண்டும் மீண்டும் அழைப்பது நாட்டார் வழக்காற்றின் தலையாய தன்மை ஆகும். மறித்து வரும் தொடர்களைத் தமிழக நாட்டார் பாடல்கள் பலவற்றிலும் காணலாம்

    கட்டுவிச்சியிடம் குறி கேட்கும் நம்பிக்கை ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது என்பதை இப்பாடல் மூலம் அறிகிறோம்.

    முடிவுரை

    வெள்ளிய முனையினை உடைய சிறிய கோலைக் கையிலேந்திய அகவன்மகளிடம் குறி கேட்கும் நம்பிக்கை ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது. தோழியின் சொல்வன்மையைக் காட்டுவதற்குரிய கருவியாக அகவன்மகள் பாத்திரம் எடுத்தாளப்பட்டுள்ளது.

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 7

    எட்டுக் கோணல் பண்டிதன் – 7

    தி. இரா. மீனா

                      அத்தியாயம் ஐந்து

    உலகமும், உலக அனுபவங்களும் கற்பனையென்று உணர்ந்து அனைத்திலும் சமத்துவமுற்று சொரூபத்தில் கரைந்து போ என்று ஜனகருக்கு ஷ்டவக்கிரர் உபதேசிப்பது இவ்வத்தியாயமாகும்.

    1.எதனோடும் பற்றும் உனக்கில்லை; தூயவனாகிய நீ துறக்க விரும்புவதேன்? அனைத்துணர்வுகளையும்  கரைத்து நீ அவ்வாறே கரைந்து போ.

    2. கடலிலிருந்து எழும் குமிழிகள் போல உலகம் உன்னிலிருந்து உதிப்பதில்லை. ஒன்றாகிய ஆத்மாவை உணர்ந்து நீ அவ்வாறே கரைந்து போ.

    3. கயிற்றிலரவு போல வெளிப்படையாகக் கண் முன் தோன்றினாலும் அது ஒரு தனிப்பொருள் இல்லாததால் உன்னிடம் உலகில்லை என்று இவ்வாறே நீ கரைந்து போ.

    4. இன்ப ,துன்பங்களிலும் ஆசை நிராசைகளிலும் ,வாழ்விலும் சாவி லும் கூட சமமாகப்  பூரணமாக இவ்வாறே நீ கரைந்து போ.

        அத்தியாயம் ஆறு

    வரையுற்ற ஜடவுலகிற்கு ஆதாரமாக இருப்பவனே நான். ஆதலால் அதைத் தள்ளுவதும், ஏற்றுக் கொள்ளுவதும் ,ஒழிப்பதும் இல்லையென ஜனகன் கூறுவது இந்த அத்தியாயமாகும்.

    1. வானம் போல எல்லையற்றவன் நான், உலகம் குடம் போன்ற ஜடம் என்னும் இதுவே ஞானம். ஆதலால் இதைத் தள்ளுவதும், கொள்ளுவதும், ஒழித்தலுமில்லை.

    2. மஹா சமுத்திரம் போன்றவன் நான்; உலகமோ அலை போன்றது. இதுவே ஞானம். ஆதலால் இதைத் தள்ளுவதும், கொள்ளுவதும், ஒழிப்பதுமில்லை.

    3. கிளிஞ்சல் போன்றவன் நான்; உலகக் கற்பனை வெள்ளி போன்றது. இதுவே ஞானம். ஆதலால் இதைத் தள்ளுவதும், கொள்ளுவதும், ஒழிப்பதுமில்லை.

    4.அகிலப் படைப்பிலும் உள்ளவன் நானே; மேலும் அகிலப் படைப்பே என்னிடம் உள்ளது. இதுவே ஞானம். ஆதலால் இதைத் தள்ளுவதும், கொள்ளுவதும் ,ஒழிப்பதுமில்லை.

                          அத்தியாயம் ஏழு

    அகண்ட அனுபவத்தே நிலை பெறின், உலகத் தோற்றத்தால் சாதக பாதகங்கள் எதுவுமில்லையென்றும், அதனிடம் விருப்பமோ வெறுப்போ உண்டாகாது என்று ஜனகன் கூறுவது இவ்வத்தியாயமாகும்.

    1. எல்லையில்லாக் கடலாம் என்னிடம் உலகக் கப்பல் மனக்காற்றால் இங்குமிங்கும் அலைகிறது. அதனால் எனக்கொன்றும் வருத்த மில்லை.

    2.எல்லையில்லாக் கடலாம் என்னிடம் உலகத்திரை உண்டானாலும், ஒடுங்கினாலும், அதனால் வளர்வும் தேய்வும் எனக்கில்லை.

    3. எல்லையில்லாக் கடலாம் என்னிடம் ஜகம் ஒரு கற்பனையே; நான் அமைதியானவன்; வடிவற்றவன் என்னும் ஞானத்தில் நான் நிலை பெற்றேன்.

    4. ஆத்மா விஷயங்களில் இல்லை; வரையற்ற, மாசற்ற அங்கே விஷயமில்லை – என்று பற்றற்று, அவாவற்று அமைதியுடைய நான் இதனில் நிலை பெற்றேன்.

    5. நானோ ஞானமயமானவன்; உலகமோ இந்திரஜால நிகர். ஆதலால் எவ்வாறு எதனிடம் எனக்கு வேண்டல் வெறுத்தல் உண்டாம்?

                      அத்தியாயம் எட்டு

    ஜனகருக்கு பந்தங்களின் இயல்பைக் கூறி ,அகந்தையில்லாமல் எதையும் ஏற்றுக் கொள்ளாதும், தள்ளாதும் இருக்க வேண்டுமென  ஷ்டவக்கிரர் கூறுதல்

    1.எப்போது மனம் ஏதோ ஒன்றை விரும்புவதும், வருந்துவதும், தள்ளுவதும், உவப்பதும் சீறுவதும் உண்டோ, அப்போதே பந்தம்.

    2. எப்போது சித்தம் எதையும் விரும்பாது வருந்தாது தள்ளாது மகிழாது சீறாதிருக்குமோ, அப்போதே முக்தி.

    3. எப்போது மனம் சில விஷயங்களில் பற்றுமோ அப்போதே பந்தம். எப்போது சித்தம் எவ்விஷயத்திலும்  தோயாதோ, அப்போதே வீடு.

    4. நானற்ற போது விடுதலை, நானுற்ற காலை பந்தம் என்று   விளையாடல் போலறிந்து எதையும் ஏற்றுக் கொள்ளாமல், தள்ளாமலிரு.

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 96 (மெய்யெலாம்)

    சேக்கிழார் பாடல் நயம் – 96 (மெய்யெலாம்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    மெய்யெலாம்   நீறுபூசி வேணிகள் முடித்துக்கட்டி
    கையினில் படைகரந்த புத்தகக் கவளிஏந்தி 
    மைபொதி விளக்கேஎன்ன மனத்தினுள் கறுப்புவைத்து
    பொய்தவ வேடம்கொண்டு புகுந்தனன் முத்தநாதன்.

    பொருள் 

    தன் உடம்பெல்லாம் திருநீறு பூசிக்கொண்டு, சடைகளை முடித்துக் தொட்டுக்கொண்டு, கையிலே படையை மறைத்து வைத்துப் புத்தகம் போற்கட்டிய புத்தகப்பையை எடுத்து ஏந்திக்கொண்டு, மையினை உள்ளே பொதிந்து வைத்து வெளியே ஒளியினைச் செய்யும் விளக்கே என்று சொல்லும்படி, மனத்தினுள்ளே வஞ்சனையைப் பொதிந்து வைத்துப் பொய்யினை மறைத்த தவவேடங் கொண்டு அந்நகரினுள்ளே முத்தநாதன் என்ற அவ்வரசன் புகுந்தனன்.

    விளக்கம்

    நீறு – வேணி – புத்தகம் இவை சிவசாதனங்களாய், அன்புடையாரை ஆட்படுத்தும் இயல்புடைய அடையாளங்கள். நீறும் வேணியும் காண்டிகையுமே திருவடையாளமாக வைத்து அரசாண்ட மூர்த்தி நாயனார் சரிதமுங் காண்க.

    மெய்யெலாம் நீறு பூசி – முழுத்தவ வேடம் பூண எண்ணினான்  ஆதலின் முழு நீறு பூசிய முனிவர்போல உடம்பெங்கும் நீறு பூசினான். இதற்கு முன்னர் நீறு பூசியவன்   அல்லன்   ஆதலின் தரிக்கக்தக்க இடமிது தகாத இடம் இது என்று அறியாதவனாய் மெய்யெலாம் பூசினான் என்ற குறிப்புமாம். வேணிகள் முடித்துக் கட்டி – தனது குடுமியினைச் சடைகள் போலத் திரித்து அவற்றைத் தொகுத்துச் சடைமுடியாக்கி. முடித்துக் கட்டுதல் – தலைமேல் முடிபோலக் கூப்பி நிற்கும்படி கட்டி முடிதல். வேணி – சடை . நீறும் வேணியும் முன்னர் இவன் சடையனாயின், அவை சைவ அடையாளமாதலின், நாயனார் அவ்வேடத்தை வழிப்பட்டு ஒழுகியிருப்பாரேயன்றிப் பகைப்பட்டுப் போர் செய்திரார்; எனவே, இவற்றை இவன் புதிதாகத் தாங்கினவனாம். நாடிழந்தவன் பலநாள் காட்டில் மறைந்து சடை வளர்த்தான் என்பாருமுண்டு.

    படைகரந்த புத்தகக் கவளிஏந்தி – தான் நினைத்த வஞ்சனைச் செய்கையைச் செய்தற்குக் கருவியாகிய படையை மறைத்து அதனையே ஒருபுத்தகம் போல கவளிகையிற் கட்டி எடுத்து. படையை மறைத்தற்கும்,இதுவும் ஒரு சைவ அடையாளமென வஞ்சித்தற்கும் என இருவகையும் கருதிப் படைகரந்த கவளியாக்கினான் என்பதாம்.

    மைபொதி விளக்கே யென்ன மனத்தினுட் கறுப்பு வைத்து – மையாகிய நீல நிறத்தைத் தனக்குள் வைத்தும், அதனைச் சுற்றி விளக்கத்தினைச் செய்து ஒளிரும் விளக்குப்பேல, மனத்தினுள்ளே கறுப்பாகிய வஞ்ச எண்ணம் பொதிந்து வைத்துக் கொண்டு விளக்கஞ் செய்யும் நீறு முதலிய தவவேடத்தைப் புறத்தே விளங்க வைத்தானென்க. எரியும் திரியைச் சுற்றிப் பெரிய நீலக்குப்பாயம் போன்று குவிந்து மேனோக்கியதொரு மை சூழ்ந்துகொண்டிருப்பது காணலாம். அதன் வெளியிற் சூழ்ந்து விளக்கின் சிவந்த சுடர் எரிவதும் காணலாம். அந்த சிவந்த எரிசுடரின் மேற் பகுதியினைச் சுற்றி வெண்சுடர்க் கொழுந்தையும் காணலாம். எனவே ஒவ்வொரு விளக்கின் சுடரும் திரியினைச் சுற்றிய நீலக்குப்பாயம், அதன் மேற் செஞ்சுடர், அதன்மேல் வெண்சுடர் என மூன்று பகுதிகளையுடையது. விளக்குச் சுடர் எரிவதற்கு ஆதரவானது நெய். அது உருகி நெய்யாவியாக மாறும். அது நீல நிறத்துடன் நின்று திரியைச் சுற்றிய சுடரினது உட்பாகமாய், நெருப்புக்கு விறகு உதவுவதுபோல, விளக்குச்சுடர் எரிவதற்குக் காரணமாய் உதவுகின்றது. ஆகவே சுடரின் நிலைப்பகுதியான உட்கறுப்பே அதன் விளக்கத்துக்குக் காரணமாம். இங்கு முத்தநாதன் கொண்ட தவ வேடத்திற்கு அவன் தனது மனத்தினுட் கொண்ட வஞ்சக் கறுப்பே காரணமாயிற்று என இவ்வரிய வுவமத்தின் அழகினை விரித்துக் கண்டுகொள்க.

    “நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீலமணி மிடற்றான்“ முதலிய திருவாக்குக்கள் காண்க. விளக்கும் இருளும் என்ற முரண்பட்ட இரண்டு பொருளுக்கு ஏற்ற இந்த விளக்கு என்ற  அரிய உவமானம் ஆசிரியர் சேக்கிழார் பெருமானது தெய்வமணக்கும் செய்யுற்களிற் காணும் அரிய உவமங்களில் ஒன்று. இஃது வேறு எந்தக் கவிகளிடத்தும் காணுதலரிது.

    இவ்வாறன்றி மை – என்பதற்கு நிழலாகிய இருள் என்று பொருள்கொண்டு தன்கீழே இருளாகிய நிழலைக் கொண்ட விளக்கு என்றுரைப்பாருமுண்டு; விளக்குள்ள பக்கம் நிழலுண்டு என்ற பழமொழியுங் காட்டுவர். மற்றுஞ் சிலர் இதனை இல்பொருள் உவமையென் றொதுக்கினர். சுடருட் பொதிந்து மறைந்து நிற்கும் மைந்நிறங்கொண்ட புகையினை உட்கொண்டு என்பாருமுண்டு.

    பொய்தவ வேடம் – பொய்த்தவம் என்றது எதுகை நோக்கிப் பொய்தவமென நின்றது. பொய்யானது தடவேடங்கொண்டு இவனுடன் வந்ததென்க. பொய்யினைக் கொண்டு உதவிசெய்து கொள்ளத் தவவேட முடன்வந்தது என்றலுமாம். நீறு – வேணி என்னும் சைவத் தெய்வத் தவவேடம் என்றும் மெய்யேயாம்; அவ்வேடம் பொய்யாவதில்லை.

    “மெய்த்தவவேடமே மெய்ப்பொருளெனத் தொழுது வென்றார்“ (481) என்று இச்சரிதத்தத்துவத்தினையும் உண்மையினையும் பின்னர்ச் சுட்டுவதும் காண்க. “நற்றவத்தவர் வேடமே கொடு“ (447) என்ற இடத்துங் காண்க.

    முத்தநாதன் – இஃது அந்த மாற்றலனாகிய அரசன் பெயர். இவன் கடையனாம் என்று குறிப்பார் இங்கு அவன் செய்தியைக் கூறிய மூன்று பாட்டினும் பொய் எனத் தொடங்கும் அடியின் கடையில் இவன் பெயரை ஆசிரியர் வைத்துக்காட்டிய அழகு குறிக்க. இவ்வாறன்றி முத்தன் – முக்தன்- மூடன் அறிவினின்றும் விடுபட்டவன் – விலகியவன் என்றும், இது அவன் பெயறன்ரென்றும், ஆசிரியர் இவ்வாறு தானே அவனுக்கு ஒரு பெயர்தந்து கூறினாரென்றும் கொள்வர் திரு. ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள்.

    ஆசிரியர் இவ்வாறு அவனுக்கு ஒரு புனை பெயர் தந்து கூறப் போதிய காரணம் இல்லை எனவும்,ஆசிரியர் வைத்துக் கூறுவதாயின் இப்பெயராற் புனைந்துரைக்க இயைபில்லை எனவும் தோன்றுகிறது. இது அந்நாளிற் புறச்சமயிகள் தம் வழக்கிற் கொண்ட பெயர்களில் ஒன்றுபோலும்.

    இங்குத் திருநீறு எரிக்குந் தன்மையாலே மாயாமலத்தையும்,விரிந்த சடையை முடித்தலால் விரிந்து செல்லும் கன்ம மலத்தையும், ஞானத்தின் உறையுளாகிய புத்தகத்தால் அறியாமையாகிய ஆணவமலத்தையும் போக்குவதாகிய ஞானாசாரிய அடையாளங்களைத் தாங்குவதே இத்தவ வேடமாம் என்ற கருத்தும் இங்கு வைத்துக்காண்பர். இவை யெல்லாம் உரிய தேசிகர்பாற் கேட்டுணரத்தக்கன. தாம் பாசத்தினீங்கி நல்லுணர்வு பெற்றாரே பிறரை வழிப்படுத்தத் தக்கார். அல்லாதார்

    “குருடுங் குருடுங் குருட்டாட்டமாடிக்,
    குருடுங் குருடுங் குழிவிழுமாறே“,

    “தன்னை யறிந்த தத்துவ ஞானிகள்,
    முன்னை வினையின் முடிச்சையவிழ்ப்பர்கள்,
    பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்,
    சென்னியில் வைத்த சிவனரு ளாலே“

    என்பன திருமூலர் திருமந்திரங்கள். அங்ஙனமாகவும் இங்கு இம்மாற்றலன் கொண்ட பொய்த்தவவேடம் நற்பயன் தந்த தெங்ஙனமோ? எனின், இங்குப் பயன் செய்தது வேடமேயன்றி அவனன்று. அவ்வேடத்தினைத் தாங்கும் குற்றி அல்லது புல்லுருவம் போன்றே அவன் நின்றான். வேடத்தின்பாலே நாயனார் கொண்டொழுகிய அன்பின் உறைப்பானது இவன் செயலால் பின்னரும் உறுதிபெற்றுப் பயன்கொடுத்து நின்றது என்க.

    முத்திநாதன் – புத்திநாதன் – என்பனவும் பாடங்கள்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 19

    கதை வடிவில் பழமொழி நானூறு – 19

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 39

    தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்
    மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்
    ‘ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக்
    கூற்றமாய் வீழ்ந்து விடும்’.

    ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக் கூற்றமாய் வீழ்த்து விடும்

    இன்னிக்குத் திரும்ப அதே ஊருக்குப் போயிட்டிருக்கேன். அதுவும் கல்லூரிப் பேராசிரியர் வேலையை ஏத்துக்கிடறதுக்கு. மனசு சந்தோஷமாக இருந்தது. இருந்தாலும் ஒரு ஓரத்தில் பழைய நினவுகள் வருத்தின.

    எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் அந்த ஊர்ல. அப்பா இறந்தவொடனே வேற வழியில்லாம பள்ளிப்பட்டிப்பத் தொடர முடியாமப் போயிருச்சு. அம்மாவோட ஆப்பக்கடை வருமானத்த வச்சி ஒண்ணும் பண்ண முடியல. அப்போதான் அந்த பழக்கடைக்காரர் அம்மாவ ஆசை காட்டி பத்தே வயதான என்னயக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாரு.

    அப்டி ஒண்ணும் அது பெரிய கடையில்ல.. அவர் வீட்டு வாசலக் கடையா மாத்திருந்தாரு. எனக்கு அங்க எடுபிடி வேல. ஆனா சம்பளத்த சரியா அம்மாகிட்ட குடுத்துடுவாரு. காலையில எழுந்ததிலேந்து அவர்கிட்ட குட்டு அடி வாங்கிக்கிட்டே கடையைப் பெருக்கி, பழங்களைஅடுக்கி வச்சி, ஜூஸ் போடற டம்ளர்களக் கழுவி தொடைச்சி வச்சி அப்பாடானு கொஞ்சம் ஒக்காந்தா அவரு சம்சாரம் கூப்பிட்டிடும்.

    அவங்க செல்ல மகன பள்ளிக்கு அனுப்பறதுக்காக அவன் பின்னால நான் நிக்கணும். அவன் ஆறுவயசு சின்னப் பையன்தான்.  அவனக் குளிப்பாட்டி சீருடை போட்டுவிட்டு அவனோட ஷூவப் பாலிஷ் போட்டு வச்சு பஸ்ல ஏத்திவுடற வர எனக்கு வேலைதான். அதுக்கப்புறம்தான் மிச்சம்மீதி இருக்கறதச் சாப்பிடத் தருவாங்க. ரெண்டுவேளச் சாப்பாடுதான். காலையில ஆறுமணிக்கு வந்தா ராத்திரி எட்டுமணிக்குதான் வீட்டுக்குப் போகமுடியும்.

    நான் செஞ்ச புண்ணியம். கடைக்குத் தினமும் ஜூஸ் குடிக்க வந்த சின்னசாமி ஐயா உனக்கு படிக்க விருப்பம்னா சொல்லு உம் முதலாளிக்குத் தெரியாம நான் படிக்க வைக்கறேன்னாரு. எட்டாம் வகுப்புவரைக்கும் படிச்சிருக்கறதால திறந்த நிலைத்தேர்வு எழுதி பத்தாம்வகுப்புல தேர்ச்சிபெறலாம். அதுக்கப்புறமும் உனக்கு விருப்பம் இருந்தா முழுநேரப்பள்ளிக்கூடத்துல சேத்துவிட்டு மேல படிக்கவைக்கிறேன். என்ன சொல்றன்னு கேட்டவொடனே யாராச்சும் உதவ மாட்டாங்களானு காத்துக்கிட்டிருந்த எனக்கு கேக்கவா வேணும்.  அப்புறமும் விசயம் தெரிஞ்சு பழக்கடை முதலாளி என்னபாடு படுத்தினார். பொறுமையா எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டேன். இப்போ சின்னசாமி ஐயா ஆசிர்வாதத்தோட கல்லூரிப்பேராசிரியராவும் ஆயிட்டேன்.

    யோசித்துக்கொண்டிருக்கும்போதே கல்லூரியின் நிறுத்தம் வரவே. இறங்கி உள்ளே நுழைந்தேன். முறைப்படி செய்ய வேண்டிய வேலைகள் முடிந்தவுடன் மனத்திற்குக் கட்டுப்பட்டு பழக்கடை முதலாளியைப் பார்க்கச் சென்றேன்.

    என்ன ஆச்சர்யம். அதே வீடு. எந்த மாற்றமும் இல்லை. உள்ளே மாலை போடப்பட்ட அவரது மனைவியின் புகைப்படம்.

    வாங்க சார். எனப் பணிவாக வரவேற்று தன் முன் கையைக் கட்டிக்கொண்டு நிற்கும் இவன் யார். யோசிக்கும் முன்பே அவனாகவே தொடர்ந்தான். நீங்க வரப்போறதா சின்னசாமி ஐயா சொன்னாரு. அப்பாவுக்கு வாதம் வந்து நாக்கு இழுத்துக்கிச்சு. பேசமுடியாது. உள்ள படுத்திருக்காரு. நான் நீங்க வேலைக்குச் சேந்த கல்லூரியில பியூனா இருக்கேன். என்ன செய்ய. எல்லாம் விதி. எனக்குச் சரியா படிப்பு வரல. அத விடுங்க.

    மொதமொதல்ல எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க. என்ன சாப்பிடறீங்க கேட்டுக் கொண்டே உள்ளே சென்ற அவனை இமைக்காமல் பார்த்துக்கொண்டு நிற்கிறேன். ஓ இதத்தான்  ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக் கூற்றமாய் வீழ்த்து விடும்னு பழமொழியாச் சொல்லுவாங்க போல. எளியாரை வருத்த அவர் கண்ணீர்

    வருத்தியவரை அழித்து விடும்னு தமிழ்ல படிச்சது என் நினைவுக்கு வருது.

    பாடல் 40

    ஆற்றவும் கற்றவும் அறிவுடையார்; அஃதுடையார்
    நாற்றிசையும் செல்லாத நாடில்லை – அந்நாடு
    வேற்றுநா டாகா; தமவேயாம் ஆயினால்
    ‘ஆற்றுணா வேண்டுவ தில்’.

    பழமொழி -‘ஆற்றுணா வேண்டுவது இல்’

    என்ன சார் மலேசிய மாநாடு எல்லாம் சிறப்பா நடந்ததா. கேட்டுக் கொண்டே உள்ளே வருகிறார் தெரிந்த மனிதர். அவரை அப்படித்தான் சொல்ல வேண்டும். நண்பன்னு சொன்னா அது அந்த சொல்லுக்கே அவமானமாப் போகும். எப்படா கீழ விழுவேன் கைகொட்டி சிரிக்கலாம்னே காத்துக்கிட்டு இருக்குற மனுசன். என்கிட்ட மட்டுமில்ல. இன்னும் பலபேர் இவரப்பத்தி இப்டித்தான் பேசிக்கிறாங்க.

    இன்னதுன்னு இல்லாம எல்லாத்துக்கும் எடக்கு. யாரப்பாத்தாலும் வயித்தெரிச்சல். நாலுவீடு தள்ளி குடி இருக்கிற இவர் அரசு அலுவலகத்துல குமாஸ்தாவ வேல பாத்து ரிடையர்ட் ஆனவர். அப்பப்ப நியூஸ்பேப்பர் கேட்டுவந்து தானே பழகிக்கிட்டாரு அவ்வளவுதான். வயசில பெரியவர்னு மரியாதை குடுத்தது தப்பாப்போச்சு.

    என்னசார் மாநாடு எப்டி நடந்ததுனு கேட்டேன். நீங்க மாநாட்டுக்குப் போயிருக்கீங்கனு சங்கரன் சொன்னதிலேந்து ஆச்சரியம். வாயத்திறந்து நாலுவார்த்த தொடர்ந்து பேச மாட்டேங்கிறீங்க. நீங்க எப்படினு. என்னதான் பேராசிரியரா இருந்தாலும் வகுப்பறை வேற. மாநாட்டில பார்வையாளர்கள் வேறதானே. என்ன நான் சொல்றது.

    என்னயப் பத்தி நான்சொல்றதுக்கு முன்னயே தானே நான் இப்டித்தான்னு ஊகிச்சு அத என்கிட்டயே புரூவ் பண்ணிட்டு இருக்கிற சன்மம் இவர்.

    நான் என்ன சொல்லி என்ன ஆகப்போறது. மௌனம் சாதித்து விட்டேன். அவர் தொடர்ந்து கொண்டே போனார்.

    புரியுது புரியுது போன எடத்துல பணம் அதிகம் செலவு ஆகியிருக்கும். இப்பயெல்லாம் ஹோட்டல்கள்ல சாப்பாடா போடறான். நம்ம ஊர்லயே ஒரு தோசை தொண்ணூறு ரூபாய் விலை சொல்றான். அஞ்சு நாள் தங்கிட்டு வந்திருக்கீங்க. சும்மா செலவு பிச்சிக்கிட்டு போயிருக்கும்.

    நீங்க ஒண்ணு செய்யுங்க சார். அடுத்த முறை போகறதுக்கு முன்ன என்கிட்ட சொல்லுங்க. எனக்கு நிறைய நண்பர்கள் வெளிநாட்டுல இருக்காங்க. சாப்பாட்டுக்கு அவங்ககிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணிடறேன். கொஞ்சம் செலவு மிச்சமாகும் பாருங்க. அவர் பேசிக்கொண்டே போக எனக்கு எரிச்சல் தலைக்கு ஏறியது.

    நல்ல வேளை. சங்கரன் வந்துவிட்டார். இந்த ஆளுக்கு அவர்தான் சரி. பதிலுக்கு பதில் நல்லா குடுப்பாரு.

    என்ன இங்க பிரசங்கம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. ஒருவழியா நம்ம பேராசிரியருக்கு கிடைச்ச மரியாதய ஒத்துக்கிட்டீங்களா. இனிமே அவர்கிட்ட பாத்தே பேசுங்க.  சும்மாவா கருத்தரங்கத்த தலைமை வகிச்சு நடத்திட்டு வந்திருக்காரு. ‘ஆற்றுணா வேண்டுவது இல்’னு பழமொழியே இருக்கே. படிச்ச அறிவாளிகளுக்கு போற எடத்துக்கு கட்டுச்சோறு கொண்டுபோகணும்னு அவசியம் இல்லங்கறது அதோட அர்த்தம். . எல்லாரும் தானா வந்தே உபசரிப்பாங்களாம். என்ன சார் உங்களுக்கும் விருந்து உபசாரம் எல்லாம் தடபுடலா நடந்திருக்குமே. எந்த ஓட்டல்ல தங்க வச்சாங்க.

    பட்டுசால்வ எல்லாம் போத்தி அசத்தியிருப்பாங்க. உங்களுக்குக் கிடைச்ச பரிசுப்பொருள் சால்வை எல்லாம் எடுத்துட்டு வாங்க. அப்டியே எடுத்த போட்டோக்களையும் காட்டுங்க. அதப்பாத்தாவது நாங்க சந்தோசப்பட்டுக்கிறோம்.

    அவர் பேசிக்கொண்டே போக, தெரிந்த மனிதரா அறிமுகப்படுத்தப்பட்ட நம்ம ஆளு முகத்தப் பாக்கணுமே. அசடு வழியறத மறச்சிக்கிட்டே தனக்கு ஏதோ முக்கிய வேலை இருக்கறதா பாவ்லா பண்ணிக்கிட்டு எழுந்தரிச்சு போக முயற்சி செய்யறாரு.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 275

    படக்கவிதைப் போட்டி – 275

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    எம்.மோகன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (13.09.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 274இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 274இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    மரக்கிளையில் ஒயிலாய்ச் சாய்ந்திருக்கும் முருங்கை இலைகளைப் படமெடுத்திருப்பவர் அண்ணாகண்ணன். இப்படத்தைத் தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 274க்கு வழங்கியுள்ளனர், வல்லமையின் ஆசிரியர் குழுவினர் . படப்பதிவாளருக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!

    மர வகைகளில் முருங்கை வலிமையற்ற ஒன்றாகும். அதனால்தான் அதனை ”நாரில் முருங்கை” என்கின்றது அகநானூறு.

    “”…அலங்குசினை
    நாரில் முருங்கை நவிரல் வான்பூச்
    சூரலங் கடுவளி எடுப்ப ஆரூற்று
    உமைதிரைப் பிதிர்வில் பொங்கி…” (அகம்: 1)

    நார்த் திசுக்களே ஒரு மரத்திற்கு வலிமை தருவன. அவை இல்லாமையாலேயே முருங்கை மரம் வலியற்றிருக்கின்றது என்கிறது அறிவியல்.

    ’முருங்கை’ என்ற தமிழ்ச் சொல்லானது ’முருங்கா’ என்ற சிங்களச் சொல்லிலிருந்து வந்ததாகத் திறனாய்வாளர்கள் சிலர் கருதுகின்றனர். ”அது தவறு! முருங்கை என்பது தமிழ்ச்சொல்லே என்பதற்குச் சங்க இலக்கியத்தில் அச்சொல் பயின்றுவந்திருப்பதே சான்று” என்பார் தமிழண்ணல்.

    இனி, படத்தில் காணப்படும் முருங்கை இலைகளுக்கு நம் கவிஞர்கள் தீட்டவிருக்கும் கவி வண்ணங்களைக் காண்போம்!

    *****

    ”பச்சை இலைகள் பழுத்துவீழ்வது இயல்பானது; அதனால் மரத்திற்குப் பாதகம் ஏதுமில்லை” எனும் வாழ்க்கைப் பாடத்தை இவ் இலைகள் தமக்கு உணர்த்துவதை நமக்கும் அறியத்தருகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வாழ்க்கைப் பாடம்…

    பச்சை இலையுடன் முருங்கையிலே
    பழுத்தே யுதிரும் இலைகளெல்லாம்
    நிச்சய மாக ஓரிடத்தில்
    நிலைத்தே யென்று மிருப்பதில்லை,
    இச்சை கொண்டே கீரையாயினும்
    இயல்பாய்ப் பழுத்து வீழ்ந்திடினும்
    அச்ச மில்லை மரத்திற்கே
    அதுதான் வாழ்க்கைப் பாடமதே….!

    *****

    பல்விழுந்த கிழவிபோல் காட்சிதரும் பழுத்த இலைக்காம்பும், பச்சைப் பட்டுடுத்திய பருவப்பெண்போல் மினுமினுக்கும் பச்சை இலைக்காம்பும் தமக்குள் நிகழ்த்திய உரையாடலைச் சுவையான கவிதையாக்கியிருக்கின்றார் திரு. கோ. சிவகுமார்.

    இளமையும் முதுமையும்

    பல் விழுந்த‌
    கிழவி போல்
    பரிதாபமாய்ப்
    பழுத்த இலைக் காம்பு!
    பக்கத்தில்
    பச்சைப் பட்டுடுத்திய
    பருவப் பெண் போல்
    பச்சை இலைக் காம்பு!

    இலைக் காம்புகளுக்கிடையே
    ஏதோ சலசலப்பு.
    உற்றுப் பார்த்து
    ஒட்டுக் கேட்டேன்.
    பச்சை இலைக் காம்பு பரிகாசத்துடன் பேசியது,

    “பழுத்த இலைக் காம்பே,
    நான்
    பசியால் வாடும்
    உயிரினங்களுக்கு
    உணவாகப் போகின்றேன்!
    நீயோ,
    மேலும் பழுத்து
    யாருக்கும் பயனின்றி
    மண்ணில் புதையுண்டு
    மாளப் போகின்றாய்!”

    பதிலுக்குப்
    பழுத்த இலைக் காம்பு‌
    பணிவுடன்,
    “என்னைத் தாங்கிய
    மரத்தை வளர்த்த
    பூமித்தாய்க்கு
    என் பழுத்த இலைகளால்
    அர்ச்சனை செய்து
    புண்ணியம் தேடிக்கொள்வேன்”
    என்றது!

    பச்சை இலைக் காம்பு
    வெட்கித்
    தலைகுனிந்தது!

    இளமை
    இறுமாப்பு கொண்டு
    முதுமையைப் பழித்தல்
    முற்றிலும் தவறென்று
    இலைக்காம்புகளின்
    உரையாடல்
    இவ்வுலக மானிடருக்கு
    உணர்த்துகின்றதோ!

    *****

    ”ஒடித்து வளர்த்தும் அதற்காக வருந்தாது காய் தருகின்ற நீ, ஏன் கனி தருவதில்லை? உன்னைக் காயிலேயே நாங்கள் காயப்படுத்துவதாலா?” என்று முருங்கையை நோக்கிக் கேள்விக்கணை விடுக்கிறார் திரு. சீ. காந்திமதிநாதன்.

    பிள்ளையை
    அடித்து வளர்
    முருங்கையை
    ஒடித்து வளர்

    அகிம்சைப் பாடம்
    நடத்துகிறாய்
    இம்சை செய்பவருக்கும்
    பலன்கள் தருகிறாயே!

    பெயரில் தான்
    இருக்கிறதே கை
    ஏன் நீட்ட மறுக்கிறாய்?

    மரம் என்பதாலே
    மனித இனம்
    ஒடிக்கிறது
    நீ வளர!

    புரிந்து தான்
    தெரிந்து தான்
    பலன்கள் தருகிறாயே!

    உன்னிடம்
    ஒரு கேள்வி…

    நீ ஏன் கனி தருவதில்லை?

    காயிலேயே
    காயப்படுத்தி
    விடுகிறோம்
    என்பதாலா?

    உன்னிடம்
    கற்க வேண்டியவை
    ஏராளம் ஏராளம்!

    கீரை வகைகளில்
    கறிவேப்பிலை யாக
    மரமானவனே!

    இலை ஆகட்டும்
    பூ வாகட்டும்
    காய் ஆகட்டும்
    ஒவ்வொன்றும்
    ஒவ்வொரு
    மருத்துவ குணம்!

    சமூகத்திற்கும்
    வீட்டிற்கும்
    நாட்டிற்கும்
    மனிதனாகப்
    பிறந்தால்
    பயன்பட வேண்டும்
    நீ கற்றுத்தரும்
    பாடம்!

    நான்
    கற்றுக்கொண்ட
    பாடம்!!

    *****

    ”தோட்டத்தின் அழகுதனை நிர்ணயிக்கும் முருங்கையின் பசுமை இலையில் பறவைகளும் வந்தாடுகையில் ஏற்படும் குதூகலத்துக்கு அளவில்லை” என்று மகிழ்ந்துரைக்கும் திருமிகு. சுதா மாதவன்,  ”பசுமைத் தாயகமான இந்தியாவில் பசுமைப் புரட்சி ஏற்படுத்துவோம்!” என்று  மக்களுக்கு அன்பு வேண்டுகோளும் விடுக்கிறார்.

    பச்சைப்பசேல் இலைத்துளிகள்
    சார்ந்து வளரும் செடிகொடிகள்
    பார்ப்பதற்குக் கண் குளிர்ச்சிதான்
    மண் வளத்தைக் குறிக்கும் அது சிறப்புதான்!

    தோட்டத்தின் அழகுதனை
    நிர்ணயிக்கும் பசுமை இலை
    வளமான சுற்றுச்சூழல் என
    வார்த்தையிட்டுச் சொல்லிடலாம்!

    பறவைகளும் அதனூடே
    பறந்து வந்தாடுகையில்
    குதூகலமோ குறைவில்லை!
    நறுமணமும் நலியவில்லை!

    பசுமைத் தாயக இந்தியாவில்
    பசுமைப் புரட்சி ஏற்படுத்திப்
    பசுமையோடே காத்திடுவோம்!

    *****

    மரத்தின் ஆதாரம் தளிரா? தளிரின் ஆதாரம் மரமா? என்றோர் ஆய்வுசெய்து அதனோடு மனித உறவுகளையும் சமூகத்தையும் நயமாகப் பொருத்திக் காட்டியிருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    சுற்றம்

    தளிரா? மரமா?
    தனி மனிதனா? சமூகமா?

    விதை வீழ்ந்து
    சிறுமுளை விட்டு
    நாற்றாகி, தளிராகி,
    சேற்றில் கால் பரப்பிச் செடியாகி,
    கிளை விரிந்து பெரு மரமாகி நின்றாலும்
    தளிர் இல்லா மரத்தை யாரும் கண்டதுண்டோ?
    ஆகையின்…
    தளிரே மரத்தின் ஆதாரமோ?

    எனில்…
    பற்றும் கிளையின்றி, தண்டின்றி
    உணவளிக்கும் வேரின்றி
    மரத்தின் துணையின்றி
    தளிருக்கு வாழ்வு ஏது?
    ஆகையின்…
    மரமே தளிருக்கு ஆதாரமோ?

    மரமின்றித் தளிரில்லை
    தளிரின்றி மரமில்லை

    அதுபோன்று
    பிறப்பு முதல் இறுதிவரை
    உருத்துக் காட்டும் உறவு வேண்டும்
    பொறுப்பு கொண்டு காத்து நிற்கும்
    சிறப்புக் கொண்ட சுற்றம் வேண்டும்
    மனிதம் வாழ நற்சமூகம் வேண்டும்
    சமூகத்தில் நல்ல மனிதன் வேண்டும்

    ஒன்றில்லாமல் மற்றொன்று இருப்பதில்லை!
    சுயநலத்தால் சுற்றம் என்றும் வாழ்வதில்லை!

    *****

    பலன்கள் பல நல்கும் முருங்கையின் அருமை அறியாத மாந்த சமூகம், பலனற்ற குரோட்டன்ஸ் செடிகளைக் கொண்டாடி மகிழ்வதை மென்மையான மொழிகளில் இடித்துரைத்திருக்கின்றார் திருமிகு. ஜெயஸ்ரீ.

    துரித சுவைகளின்
    அடிமை நாக்குகள்
    சிவந்த நஞ்சு நாவின்
    நிறமே பிடித்து உண்ணும்

    பிறிதோர் உயிர்க்குருதி
    காணும் குரூரப் பேருவகை
    பெருவெளியில் நீயோ
    பழுத்தும் பழுக்காமலும்
    பயனின்றி உதிர்கிறாய்

    கொல்லையில் ஊன்றினால்
    குழம்பு காய் கூட்டோடு
    குலம் தழைக்க வைப்பாய்
    வித்துக்களை உருவாக்கும்
    சத்துக்களைக் கொண்டதால்
    பிரம்ம விருட்சம் நீ!

    இருந்தும் என்ன?
    வேருக்கு நீரூற்ற நேரமில்லை
    எங்களுக்கே தாகம் தீர்க்க
    நெகிழிநீர் போதவில்லை
    முற்றியது கலி!

    நீயாகவே காய்ந்து போ!
    இல்லை கண்ணைப் பறிக்கும்
    வண்ணக் குரோட்டனாய் மாறு!
    அப்போது நாங்கள் ஆராதிப்போம்!

    *****

    முருங்கை இலையையும் மரத்தையும் ஆய்ந்து, பல்வேறு வாழ்வியல் உண்மைகளை உரக்கச் சொல்லியிருக்கின்றார்கள் சீரிய சிந்தனையாளர்களான நம் கவிஞர்கள்; அவர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    வாழ்க நீ!

    முருங்கையே! உன் இதழ் சிந்தும் புன்னகைக்கு வணக்கம்!
    சமதர்மத்தை நிலைநாட்டி நிற்கும் நீ மரம் அல்ல
    உச்சி முதல்அடி வரை உன்னதத்தை மறைத்து வைத்துள்ள
    கற்பகத்தரு! மனிதாபிமானத்தின் மறுவுரு!

    ”முறித்துப் போட்டாலும் முளைத்துவிடு!
    வெட்டிப்போட்டாலும் விதையாய் விழுந்து விருட்சமாய் எழுந்துவிடு!” என்ற தன்னம்பிக்கையைத் தழைக்கச் செய்யும் குரு நீ!
    சத்துக்களைச் சத்தமிடாமல் தந்து கொண்டிருக்கிறாய் – அன்றாட
    வீடுகளில் வெந்து கொண்டிருக்கிறாய்!

    காற்றோடு ஆடுகிறாய்; புயல்காற்றோடு ஓடுகிறாய்!
    எத்தனை முறை உன்னை அசைத்துப்போட்டாலும்
    அசந்து போகாத பூமித் தாயின் வீர மகன் நீ!

    முருங்கையே உன் கை ஏழைகளின் நம்பிக்கை!
    ஒட்டிய வயிறுகளைத் தட்டி எழுப்பும் கை!
    புரட்சியாளர் பிடல்காஸ்ட்ரோவுக்கும் பிடித்த கை!
    உழைத்து உழைத்து உலகுக்குச் சோறூட்டும்
    பாட்டாளிகளுக்கும் உனக்கும் உள்ள வேறுபாடு…
    நீ மரம்! அவன் மனிதன்!

    உன் கரம் துண்டிக்கப்பட்டால் முளைத்து விடும்
    அவன்கரம் துண்டிக்கப்பட்டால் சோற்றுக்கு அலையும் நாள்வரும்
    அந்த நாள் வந்துவிடக்கூடாது என்றுதானே
    வறுமையெனும் கொள்ளைக்காரனிடமிருந்து
    பாட்டாளியைக் காக்கக் காவலனாய் நிற்கிறாய் அவன் இல்லத்தில்!
    உன்பசுமையான இதழ்களுக்குச் சத்தமில்லாத முத்தமே
    என் அன்புக் காணிக்கை! வாழ்க நீ ! வளர்க நீ!

    ”முருங்கையே! முறித்துப் போட்டாலும் முளைத்துவிடு; வெட்டிப்போட்டாலும் விதையாய் விழுந்து விருட்சமாய் எழுந்துவிடு! என்ற தன்னம்பிக்கையைத் தழைக்கச் செய்யும் குரு நீ! உன் கை ஏழைகளின் நம்பிக்கை; ஒட்டிய வயிறுகளைத் தட்டி எழுப்பும் கை!” என்று முருங்கையின் பெருமைகளைத் தம் கவிதையில் திறம்பட உரைத்திருக்கும் முனைவர் செ. நீதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.   

     

    Share
  • இலங்கையில் பசு வதைத் தடைச் சட்டம்

    இலங்கையில் பசு வதைத் தடைச் சட்டம்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    சிவ சேனை

    பிரதமர் மகிந்த இராசபட்சரையும் அரசையும் பாராட்டுகிறேன்

    சிவ சேனையின் கோரிக்கையை ஏற்று  இலங்கைப் பிரதமர் மகிந்த இராசபட்சர், பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டு வரப் போகிறார்.

    இலங்கைச் சைவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். இலங்கையில் வாழ்கின்ற 30 லட்சம் சைவப் பெருமக்கள் அனைவரும் நன்றியைப் பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறோம்

    கடந்த சில ஆண்டுகளாக சைவர்கள் இடையே பசுப் பாதுகாப்புத் தொடர்பான எண்ணங்களை விதைத்து, போராட்டங்கள் நடத்தி, மாட்டிறைச்சிக் கடைகளுக்கு ஏலம் விடாமல் பல்வேறு பிரதேச சபைகளைத் தடுத்து. முயன்று வந்தது சிவசேனை அமைப்பு.

    இலங்கைச் சைவர்கள் சார்பில் பிரதமரைப் பசு வதைத் தடைச் சட்டம் கோரியிருந்தது.

    இச்சட்டத்தைக் கொண்டு வருவதாக அரசாங்க நாடாளுமன்றக் குழுவில் முன்மொழிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

    இலங்கை மண்ணில் 10 ஆயிரம் ஆண்டுக் கால வரலாற்றில் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகத் தான் மாட்டு இறைச்சி உணவாகி வருகிறது.

    ஒல்லாந்தர் காலத்தில் மாட்டிறைச்சி உணவை எதிர்த்த செல்வந்தரான சைவப் பழம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஞானப்பிரகாசர், யாழ்ப்பாணத்தில் உள்ள தம் சொத்துகள் அனைத்தையும் விற்றுப் பணத்தை எடுத்துக்கொண்டு சிதம்பரத்துக்குச் சென்றார்.

    மலையகச் சைவத் தமிழ் மக்கள்
    மேற்கு மாகாண வடமேல் மாகாணச் சைவத் தமிழ் மக்கள்
    கிழக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள்
    வடக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்கள் யாவரும் ஒரே குரலில் பிரதமர் மகிந்த இராசபட்சவின் பசு வதைத் தடை முயற்சியைப் பாராட்டுகிறார்கள், போற்றுகிறார்கள்.

    பசுவதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவது போலவே அரசு சார்பற்ற மதமாற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து மதமாற்றத்தைக் குறைக்கவும்
    மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வரவும் பிரதமர் மகிந்த இராசபட்சர் முயல்வார். இலங்கையில் வாழ்கின்ற 30 இலட்சம் சைவத்தமிழ் மக்கள் அனைவரும் அவரது முயற்சிக்கு ஆதரவு கொடுப்பார்கள்.

    Share
  • பெருஞ்சித்திரனாரும் வள்ளலாரும் – பேராசிரியர் அரசேந்திரன் நேர்காணல்

    பெருஞ்சித்திரனாரும் வள்ளலாரும் – பேராசிரியர் அரசேந்திரன் நேர்காணல்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    தமிழறிஞரும் வேர்ச்சொல் ஆய்வு வல்லுனருமான கு.அரசேந்திரன் அவர்களை அவரது இல்லத்தில் (08.09.2020) சந்தித்தேன். அரசேந்திரன், சென்னை, தாம்பரம், கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்து, ஓய்வு பெற்றவர். இவர் ஆக்கிய கால் அடி தாள் சொல் வரலாறு, உலகம் பரவிய தமிழின் வேர்-கல் ஆகிய ஆய்வு நூல்கள், பெரும் புகழ் பெற்றவை. கம்பராமாயணத்தில் அணிகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பாவலர் பெருஞ்சித்திரனாரின் மாணவர். தமிழ்த் தேசிய உணர்வு கொண்டவர். வள்ளலார் வழி நடப்பவர்.

    இந்த நேர்காணலில் பெருஞ்சித்திரனாரையும் வள்ளலாரையும் தம் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டது ஏன் என்று விளக்குகிறார்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 23

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 23

    மீனாட்சி பாலகணேஷ்

    (கழங்காடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்பாற் பிள்ளைத்தமிழின் இன்னுமொரு இனிய பருவம் கழங்காடற் பருவமாகும். இதனைப் பெதும்பை எனும் (எட்டுமுதல் பதினோரு ஆண்டு வயதுவரை உள்ள) பெண்மக்கள் விரும்பி விளையாடுவதாகக் கூறுவர்.

    கழங்காடல் அனைத்து வயது மகளிரும் விளையாடும் விளையாட்டுகளுள் ஒன்றாகும். ஆயினும் இது பெதும்பைப்பருவப்பெண்களின் விளையாட்டென்று உலா இலக்கியங்கள் கூறும். விளையாடும் முறைகளையும் விளக்கும். ஏழுகாய்களைக் கொண்டு விளையாடப்படுவது கழங்கு. இது அம்மானை ஆட்டத்தினின்றும், பந்தாட்டத்தினின்றும்  மிகவும் வேறுபட்டதாகும்.

    பந்தாடிக் களைத்த சங்ககால மகளிர் ஆற்றங்கரை மணலில் கழங்காடினர் என்பதனை,

              ‘கைபுனை குறுந்தொடி தத்த, பைபய,
             முத்த வார்மணல் பொற்கழங்கு ஆடும்
       பட்டின மருங்கின் அசையின்1…,’ எனும் பெரும்பாணாற்றுப்படை வரிகளால் அறியலாம். அதாவது, ‘கையிலணிந்த வளையல்கள் குலுங்க, மென்மையான சிறுமுத்துக்களையொத்த பொடிமணலில் பொன்னாலான கழங்குகளைக் கொண்டு விளையாடும் பட்டினத்தின் ஒரு பக்கம்…..’ எனப்பொருள் கொள்ளவேண்டும்.

    பெருத்த முத்துக்கள், மரக்கட்டையில் கடைந்தெடுத்த  உருண்டைகள், பொன்னால் செய்யப்பட்ட பொற்கழங்குகள் முதலானவை கழங்காடப் பயன்படுத்தப்பட்டன. செடியிலிருந்து கிடைக்கும் கழற்சிக்காய் என்பதும் பயன்படுத்தப்பட்டது.

    இன்றும் கிராமிய விளையாட்டாக, அச்சாங்கல் (ஐந்து காய்களை வைத்து விளையாடுவது) ஏழாங்கல் (ஏழு காய்களைக் கொண்டு ஆடுவது), சுங்கரக்காய் (பல காய்களைக்கொண்டு ஆடுவது) என கூழாங்கற்கள் அல்லது கருங்கற்களைக்கொண்டு இவ்விளையாட்டு விளையாடப்படுகின்றது.

    அம்மானை, கழங்கு ஆகிய விளையாட்டுகள் ஆயமொடு (தங்கள் தோழிமார், விளையாட்டுக் குழுக்களுடன்) ஆடப்பெறும் என்பதனை சங்க இலக்கியங்களிலிருந்து அறியலாம்.

                ‘இனந்துணை ஆயமொடு கழங்குடன் ஆடினும்2,’

                ‘கழங்கா டாயத் தன்றுநம் மருளிய3,’ எனும் பாடலடிகள் இதனை விளக்கும்.

                ‘கூறை நன்மனைக் குறுந்தொடி மகளிர்
             மணலாடு கழங்கின் அறைமின்சத் தாஅம்4,’

    எனும் பாடலடிகள் மகளிர் மாடத்து முற்றங்களில் மணலைப்பரப்பிக் கழங்காடினர் என விளக்கும். விளையாடும் முறையாவது தரையில் பொடிமணலைப்பரப்பி, அதன்மீது கழங்குகளை வைத்து, கையாலெடுத்துத் தூக்கிப்போட்டுப் பிடித்து விளையாடுவதாகும்.

    கழங்காடும் பொழுது ஏழு காய்களையும் தரையில் பரப்பி வைத்துப் பின் ஒவ்வொரு காயாக எடுத்து மேலெறிந்து, அடுத்து இரண்டிரண்டு காய்களாக எடுத்து மேலெறிந்தும் இவ்வாறு ஏழு வரை மேலெறிந்து, மேலேசென்ற காய் கீழே விழுவதற்குள் மற்றொரு பகுதியை மேலெறிந்துவிட்டுக் கீழேவரும் காய்களைக் கையில் பிடித்து ஆடினால், ஆடினவரே தொடர்ந்து ஆடலாம். கீழேவரும் காய் தரையில் விழுந்துவிட்டால் ஆட்டம் மற்றவர்களுக்கு உரித்தாகிவிடும். இவ்வாறு ஆடும்பொழுது, ஒன்றொன்றாகக் கழங்குகளை மேலே எறிகையில் ஒன்றுமுதல் ஏழுவரை உள்ள பொருட்களைப் பாடிக்கொண்டே ஆடுவார்கள். அவையே ஏழு கண்ணிகளில் உலா இலக்கியங்களில் காணப்படும்.

    பெண்மக்களைப் பருவவகையால் பிரிப்பதனையும், அவர்களின் பருவத்துக்கேற்ற செயல்களையும் நாம் உலா இலக்கியங்களில் காணலாம். கழங்காடும் பெதும்பை எனும் பெண் பாதி பேதைக்குணமும் பாதி மங்கைக்குணமும் கலந்தவள் என்கிறது உலா இலக்கியம். இது எட்டு முதல் பதினோரு ஆண்டு நிரம்பிய சிறுமி என்பதற்குப் பொருத்தாமாயுள்ளது. (கடம்பர்கோயில் உலா) ஆடும் கழங்குகளின் நிறமும் பெருமையும் விளக்கப்படுகின்றன:

    பத்து வயது நிரம்பிய சிறுபெண்ணொருத்தி கைகளில் ஏழுவிதமான கழற்சிக்காய்களை எடுத்துக்கொண்டு கழங்காடுகிறாள். அக்காய்களை வெகு லாவகமாக மேலே வீசுகிறாள்! மேகத்தின் கருநீல நிறத்தையொத்த நீலக்கழங்கொன்று; களங்கமற்ற சந்திரன் போலும் வெளேரென்ற முத்தாலான கழங்கொன்று; எந்தை சிவபிரானின் பாதியுடலைக் கொண்ட பார்வதியைப் போலும் பச்சைநிறம் பொருந்திய மரகதத்தாலான கழங்கு ஒன்று; மறுபாதியான ஐயனின் தகதகக்கும் செம்பவள நிற உடல்போன்ற மாணிக்கத்தாலான கழங்கு இன்னொன்று; மலர்ந்த கொன்றைப் பூக்களின் தேன்போன்ற நிறங்கொண்ட கோமேதகக் கழங்கொன்று; பொருந்திய கங்கைநீர்போல் பளபளக்கும் வயிரக் கழங்கொன்று; மன்றுள் நின்றாடும் எம்பிரானின் சிவந்த சடைபோன்ற மென்மையான செம்பவழக் கழங்கொன்று என ஏழுவிதக் கழங்குகளைக் கையிலெடுத்து ஆடுகிறாள் இப்பெதும்பை எனப்படும் சிறுமி.

                ‘கந்தரம்போல் நீலக் கழங்குங் களங்கமில்லாச்
             சந்திரன்போல் முத்தின் தனிக்கழங்கும்–எந்தையுடற்
             பாதியன்ன பச்சைப் பசுங்கழங்கும் பாதியெழிற்
             சோதிமா ணிக்கச் சுடர்க்கழங்கும்–தாதலரும்
             கொன்றையந்தே னன்னநிறக்கோமே தகக்கழங்கும்
             துன்றுகங்கை போல்வயிரச் சொற்கழங்கும்–மன்றுடையான்
             வேணியன்ன செம்பவழ மென்கழங்கும் பங்கையப்பூம்
             பாணி யதனில் பரிந்தெடுத்து5..’

    ஒவ்வொரு கழங்கை மேலே வீசும்போதும் பாகைப் பழிக்கும் தீங்குரலில் ஒன்றிலிருந்து ஏழுவரை அமைந்த இறைவனின் திருத்தலங்களைப் பற்றிப் பாடுகிறாள் இப்பெண். என்னெவெல்லாம் கூறுகிறாள் எனச் சிறிதே கேட்போமா?

    ஒன்றை எடுத்தவள்  ஏகம் (ஒன்று, அனைத்தும் ஒன்று) எனும் ஏகாம்பரத்தைப் பற்றிப் பாடுகிறாள். கச்சி ஏகாம்பரநாதரைப் பற்றிப்பாடுகிறாள்.

                ……………………………………… ‘நீணிலத்துப்
             பாகாங் குதலைமொழிப் பாவைகுறித் தொன்றையெடுத்
             தேகாம் பரத்தினிசைபாடி5  ………. ‘

    பிறகு இரண்டு கழங்குகளை எடுத்துக்கொண்டு அன்றொருநாள், பிரமன், திருமால் ஆகிய இருவர் சிவபிரானின் அடியும் முடியும் தேடிக் கொண்டாடிய அண்ணாமலையைப் பாடிப் போற்றுகிறாள்.

                ………………………………………  வாகாகக்
             கூடு மிரண்டெடுத்துக் கொண்டாடி யன்றிருவர்
             தேடு மலையின் செயல்பாடி5 ……………..’

    மூன்று கழங்குகளை எடுத்து, புகழ்வாய்ந்த திரிசிராப்பள்ளி எனும் தலத்தைப் பாடுகிறாள். இது திரிசிரன் எனும் மூன்றுதலை அரக்கன் சிவபிரானைப் பூசித்து வழிபட்ட தலமாம்.

                ……………………………  ‘நாடரிய
             வள்ளிதழி மூன்றெடுத்து மன்னு திரிசிராப்
             பள்ளியெனுந்தலத் தைப்பாடி5 ………….’

    விளையாட்டில் உள்ளம் மிக்க மகிழ்ச்சியில் திளைப்பதனால் நான்குகாய்களை எடுத்துக் கொண்டு நான்மாடக்கூடலான மதுரையம்பதியின் வளத்தைப் பாடியாடுகிறாளாம்.

                …………………………… ‘உள்ளமகிழ்
             வாடலா னாலென் றடுத்தெடுத்து நான்மாடக்
             கூடல்வளம் பாடிமிகக்கொண்டாடி5 …………’

    இதழ்கள் மலர்ந்தவிழும் சிவந்த மலர்போலும் வாய் கொண்ட கிளியின் மொழி பேசும் அப்பெண் ஐந்து காய்களைக் கையில் எடுத்துக்கொண்டு பஞ்சநதித்தலமான திருவையாற்றின் பெருமைகளைப் பாடிக் கழங்காடுகிறாள்.

                …………………………………………….. ‘தோடவிழும்
             கிஞ்சுகப்பூஞ் செவ்வாய்க் கிளிமொழியா ளைந்தெடுத்துப்
             பஞ்சநதி மான்மியத்தைப் பாடியே5 ………………’

    காய்களுடன் கண்களும் மேலும் கீழும் சென்றுவர, அவ்வண்ணமே ஆறு காய்களைக் கையில் எடுத்தவள், அன்றொருநாள் ஆறுபெண்கள் அட்டமாசித்திகள் பெற்ற மெய்த்தலமான பட்டமங்கையின் பெருமைகளைப் பாடுகிறாளாம்.

                …………………………………… ‘கஞ்சவிழி
             அத்திறத்தால் ஆறெடுத்து அன்று ஆறு மின்னார் அட்டமா
             சித்திபெற்ற மெய்த்தலத்தின் சீர்பாடி5…………’

    இதனைப் பாடி மகிழ்ந்த பெண்ணரசி, அடுத்து ஏழு கழங்குகளைக் கையிலெடுத்துக் கொண்டு, ஏழு உலகங்களிலும் எம்பெருமானாகிய சிவபிரான் இசைந்து உறையும் இடங்களைப் பற்றிப் பாடியாடுகிறாளம்.

                …………………………….. ‘கைத்தலத்தில்
             ஏழெடுத்துப் பாரிடத்தி லித்தலங்களாதியா
             ஏழுலகத் தெம்மா னிசைதலங்கள்5

    இவ்வாறு ஆடுபவள் தன் பாடலில், “இத்தகைய தலங்களில் கிட்டும் பேறுகளெல்லாம் எம்மான் உறையும் இந்தக் கடம்பநகரை அடைந்தோர்க்குக் கிடைக்கும்,” என்றுகூறி எல்லாக் கழங்குகளையும் சேர்த்தெடுத்து மேலே வீசியெறிந்து பிடிக்கிறாள். அவ்வாறு செய்யும்போது, அவளுடைய மூக்குத்தி அசைந்தாடுகிறது; கழுத்திலணிந்த முத்து வடம் சரிந்தாடுகிறது; கண்கள் இரண்டும் மேலும் கீழுமாகக் கழங்குகளோடு ஓடியாடுகின்றன. அவளுடைய கொடியிடையும் உடனாடுகின்றது.

                                            ‘-சல்லாப
             மூக்குத்தி முத்தாட முத்து வடமாட
             நோக்கிரண்டு மாட நுசுப்பாட–ஆக்கமகள்
             கொண்டாட மாதுசெங்கை கொண்டாடும் போதிலே5

    எனக் கைகளில் கழங்கினை எடுத்து ஆடுகிறாள் அவள்.

    இக்காட்சி கடம்பர்கோயில் உலாவில் காணப்படுவது. பாடிய புலவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் ஏழு கழங்குகளுக்கும் பாட்டுடைத்தலைவனாம் சிவபிரானின் ஏழுதலங்களின் சிறப்புகளைப் பாடியுள்ள அழகான உத்தி படித்து ரசிப்பதற்கு சிறப்பாக உள்ளது.

    இவ்வாறு சில உலாப் பிரபந்தங்களில் கழங்காடுதல் பற்றிய அருமையான பாடல்களைக் கண்டு மகிழலாம். காளமேகப்புலவர் பாடிய திரு ஆனைக்கா உலா6 எனும் பிரபந்தம் சிறப்பாகப் பெதும்பை ஆடும் ஏழு கழங்குகளுக்குமாக ஈசனின் செயல்களை அழகுற விவரிக்கின்றது.

    சேறைக்கவிராச பிள்ளையும் தாமியற்றியுள்ள வாட்போக்கியுலா7 எனும் நூலில் கழங்காடும் முறையினை நன்கு விளக்கியுள்ளார். இங்கு தலங்கள் இல்லாது ஒன்றுமுதல் ஏழுவரையிலான இறைவனின் பெருமைகளைக்கூறிப் பெதும்பை கழங்காடுகிறாள் எனப்பாடியுள்ளார்.

    கழங்காட்டம் பற்றிய இத்துணை விரிவான விளக்கத்தின்பின்பு, பிள்ளைத்தமிழ் நூல்களுக்குச் செல்லலாமா?

    சிவயோகநாயகி பிள்ளைத்தமிழ் நூல் பத்துப்பருவங்களையே கொண்டதாயினும் சிறிது வேறுபட்டு கழங்கு, அம்மானை ஆடுதல் இரண்டினையும் முறையே எட்டாவது ஒன்பதாவது பருவங்களாகக் கொண்டுள்ளது. இதிலிருந்தும் கழங்காடுவதென்பது அம்மானையாடும் விளையாட்டிலிருந்து வேறுபட்டதென அறிகிறோம். இந்த பிள்ளைத்தமிழ் நூலில் அம்மை கழங்காடுவது மிகவும் நயமான விதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

    மேலெறியும் ஒவ்வொரு கழங்கிற்கும் உண்டான எண்ணிக்கையில் பாடுவார்கள் என அறிந்தோமல்லவா? அதுபோன்றே அம்மையின் ஒவ்வொரு கழங்குக்கும் புலவர் அருமையான விளக்கம் தருகிறார்.

    உனக்குரிய நினது மணாளன்மீது நீ வைத்துள்ள பக்தி (அன்பு) என ஒரு கழங்கை மேலெறிகின்றனை!

    நீ, உனது தலைவனாகிய ஈசன் என நீவிர் இருவரும் உறைகின்ற உடல்கள் சிவம் சக்தி என இருவகைப்படும் எனக்கூறும் விதமாக இரு கழங்குகளை வீசுகின்றனை!

    மேலுலகு, இவ்வுலகு, பாதாள உலகங்கள் என மூன்று உலகங்களைப் படைத்து அவற்றைக்க் காத்தருளும் திருப்பாதங்கள் முறையே இரண்டு உன்னுடையனவும் இரண்டு ஐயனுடையனவாகவும் நான்காகும் எனும்படி மூன்று, நான்கு எனக் கழங்குகளை வீசுகின்றனை!

    நீ செய்யும் தொழில்கள் ஐந்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) எனக்கூறி ஐந்து கழங்குகளையும், உலக உயிர்களுக்கு உள்ள குணங்களான காமம், குரோதம், மதம், மோகம், உலோபம், மாற்சர்யம் இவை ஆறெனவும், சீவித்து வாழும் உயிர்களுக்கெல்லாம் உண்டாகும் பிறப்பு ஏழுவகை என்று உணர்த்தும் வகையாக ஏழு கழங்குகளையும்  வரிசைமுறையில் வைத்துப் பாடியாடி அருளுவாயாக!

    உனது திருவருள் விளங்குமாறு பசியநிற மேனியை உடைய நீ, உனது சிவந்தகையினில் ஏந்தியுள்ள நீலமணிக் கழங்கானது குளிர்ச்சியான பொய்கையின்கண் அலர்ந்த செந்தாமரைமீது கரியநிறம் படைத்த வண்டானது ஆடுவதுபோல உள்ளது. பெருந்துறைச் சிவயோகவல்லியே! நீ கழங்காடியருளுகவே!’ என வேண்டும் பாடலிது.

                உரியநின் கேள்வர்மேல் வைத்திடும் பத்தியொன்
                                றுறைகின்ற மேனி களிரண்டு
                       …………………………………………………
                                சீவிக்கு மாவிக்கெலாந்
                       தேகங்கொடுத்த குறியொரே ழெனக் கொண்டு
                                சீர்வைத் துடன்பாடியே
             ……………………………………………
             கரியவண்டாடுமா போலவே நீலக்கழங் கெடுத்
                                தாடி யருளே
                       கவுரீ பெருந்துறைச் சிவயோக வல்லி
                                கழங்குநீ யாடியருளே8.

    என்பன பாடல்வரிகள்.

    ‘ஒருகாயை மேலெறிந்து ஆறினைக் கீழ்வைத்து, இரண்டினை எறிந்து ஐந்தினை வைத்து (உய்த்து) மூன்றினை எறிந்து நான்கினை வைத்து, நான்கினை எறிந்து மூன்றினை வீசி, ஐந்தினை வீசி இரண்டினை வைத்து, இரண்டினை எறிந்து ஒன்றினை வைத்து  ஏழினையும் வீசிப்பிடித்து,’ எனக்கூறுபவர், இன்னும் வெவ்வேறுவிதமான எண்ணிக்கைகளில் வீசியும் வைத்தும் கைகள் சிவக்குமாறு தாயே நீ கழங்கு ஆடியருளே,’ என வேண்டிப்பாடியுள்ள பாடல் நயம் கருத்தைக் கவருவதாகும்.

                ‘ஒன்றெறிந் தாறுவைத் துய்த்திரண் டைந்துவைத்
                                துய்த்துமூன் றிட்டுநான்
                       குய்த்துநான் கிட்டுமூன் றுய்த்தைந்
                                ……………………………
             ஒன்றொடா வேழுமேத்தர முழங்கைப் பெறும் கைத்தலம்
             …………………………………………
                 கவுரீ பெருந்துறைச் சிவயோக வல்லி
                       கழங்குநீ யாடியருளே9,’ என்பன பாடல்வரிகள்.

    இதில் விளையாடும் முறைமையை விளக்கியுள்ளார் புலவர். இங்ஙனம் அமைந்துள்ள பத்துப்பாடல்களும் நயக்கத் தக்கவையாகும்.

    அடுத்து நாம் காண்பது தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ். இதில் நமக்குக் கிடைத்துள்ளன இரண்டே பாடல்கள்தாம். இரண்டுமே அரிய முத்துக்களாலான கழங்குகள்தான்!

    சிவகாமி அன்னையாகிய பெதும்பை ஆடும் கழங்காட்டம் எதையெல்லாம் ஒத்துள்ளது எனச் சுவைபட விவரிக்கிறார்.

    கழங்கு விளையாடும் சிறுமியர் கண்ணிமைக்கும்பொழுதில் ஒன்று, இரண்டு, மூன்று எனக் கழங்குகளை எடுத்தெடுத்து வீசியாடுவர். பார்ப்போர் கண்களுக்கு இவை பல்வகையாகத் தோற்றமளிக்கின்றனவாம்.

    அந்நாளில் தம்மை நாடிவரும் பாணர்களுக்கு அரசர்கள் பொன்னால் செய்யப்பட்ட தாமரைமலரைப் பரிசிலளிப்பர். சில சமயம் அம்மலரின் இதழ்களில் சிகப்பு நாகமாணிக்க மணிகள்  பதிக்கப்பெற்றும் தண்டில் மரகதமணிகளும் பதிக்கப் பட்டிருக்கும். இவற்றிலிருந்து பொங்கும் ஒளி ஒன்றையொன்று தாக்கி எதிரொளித்தால் எவ்வாறு இருக்கும்? கண்ணைப் பறிக்காதா?

    மாவின் இளம்பிஞ்சுகள் (மாவடுக்கள்) காற்றிலசைந்து மாந்தளிரின்மீது மோதியாடினால் எப்படி இருக்கும்?

    இளம்மகளிரின் வேல்விழிகள் பல நவரத்தினங்கள் பதித்த காதணிகளில் (கொப்பில்) பட்டுத் திரும்பினால் எவ்வாறு இருக்கும்?

    நறுமணம் கலந்து சந்தனம் மணக்கும் அம்மையுனது இளங்கொங்கைகள்மீது உன் கணவராகிய சிவபிரானின் கண்கள் தாவி விளையாடுவது எவ்வாறு இருக்கும்?

    அழகான கருவண்டுகள் தேன் உண்ணுவதற்காகச் செங்காந்தள் மலரை இடைவிடாது மொய்ப்பது கண்கொள்ளாக் காட்சியன்றோ?

    இந்திரநீலக் கற்களைக்கொண்டு வடிவமைக்கப்பெற்ற கழங்குகளைக்கொண்டு அன்னை கழங்காடுவது இவையனைத்தையும் போலுள்ளது எனப் பூரிக்கின்றனர் அடியவர்கள்.

               பாந்தள் மாணிக்கமணி பொற்பூவின்
                       மரகதம்பத்தி பாய்ந்தாடல் எனவும்
             ………………………………………………..
             மழை மதரரிக் கண்கள் பன்மணிக்
                       கொப்பில் மறிந்து விளையாடல் எனவும்
             ………………………………………
             தண்டாது வரிவண்டு செங்காந்தள்
                       மலர்மீது தண்தாது நுகர்வது எனவும்
             ……………………………………………
             …………………………………. இந்திர
                       நறுநீலக் கழங்கு விளையாடி அருளே!
             கனக சிற்சபையில் வாழ் சிவகாம
                       சுந்தரி கழங்கு விளையாடி அருளே10!

    மிக அழகான உவமைகள் நிறைந்ததொரு பாடல் இது. இயற்கையின் செயல்கள் அனைத்திலும் அன்னையின் கழங்காட்டத்தைக் கண்டு உருகும் அடியவர் இப்பெரும்புலவர்.

    இரண்டாம் பாடல் அன்னை விளையாடும் பலவிதமான ஆடல்களையும் தொகுத்துக் கூறுகிறது. கழங்கு விளையாடவேண்டிக் கொள்வதுடன் நிறைவுறுகின்றது.

    சொற்கள் பழகும் இளங்கிளியோடு சில பொழுது கொஞ்சி மகிழ்கிறாள் இப்பெண்!

    பொற்கூண்டில் வளரும் பூவைப்பறவைக்கு மென்மையான சொற்களைப் பயிற்றுவிக்கிறாள்.

    ரத்தினங்கள் பதித்த சிறு பாவைகளுக்கு (பொம்மைகளுக்கு) குழமணம் மொழிந்தும், சிறுவீடு கட்டியும், நறுமணப்பொடிகளைத் தோழியர்மீது வீசி எறிந்தும், யாழினைமீட்டி, இனியகுரலில் இன்னிசைப் பாடல்களைப் பாடியும், மலர்களால் செய்யப்பட்ட பந்துகளை வைத்து விளையாடியும், இனிய தோழிமாருடன் நீரில் திளைத்து விளையாடியும், அப்போது நறுமணப்பொடி கலந்த நீரினை இறைத்துக் களித்தும், நீலமயில்மீது     ஏறியமர்ந்து விளையாடியும் மகிழும் பெண்ணே!

    சங்கத்தமிழில் முத்தமிழ்ப் பாடல்களைப் பாடிக் கழங்கு ஆடிடுக! என வேண்டும் பாடலிது.

                பழகுசொல் பச்சிளம் கிள்ளையொடு
                       கொஞ்சியும் பஞ்சரம் வளர் ……
             ……………………………………………….
             குழமணப் பிள்ளைகொடு வண்டல்
                       விளையாடியும்……………………
             கொடுங்கையாழ் குரலிசை நரம்பினொடு
                       ……………………………………
             கழகு முத்தமிழ் பாடும் இகுளையரொடும்
                       பொற்கழங்கு விளையாடி அருளே11!

    என்பன பாடல் வரிகள்.

    இளமகளிரின் ஆடல் பாடல்களைச் சித்தரிப்பதில் உலா இலக்கியங்களும் பிள்ளைத்தமிழ் பிரபந்தங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது மிகையேயல்ல எனலாம்.

    (தொடரும்)

     பார்வை நூல்கள்:

    1. பெரும்பாணாற்றுப்படை
    2. அகநானூறு. பா. 17. வரி.2
    3. அகநானூறு, பா.66. வரி.24
    4. நற்றிணை, பா.79, வரி-2-3.
    5. கடம்பர் கோயில் உலா
    6. காளமேகப்புலவர்- திரு ஆனைக்கா உலா
    7. சேறைக் கவிராச பிள்ளை- வாட்போக்கியுலா.

           8, 9. சிவயோகநாயகி பிள்ளைத்தமிழ்

    10, 11. நல்லதுக்குடி கிருட்டிணையர்- தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-40

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-40

    தி. இரா. மீனா

    அக்கம்மா

    கல்யாணைச் சேர்ந்தவர். ’ஆசாரவே பிராணவாத இராமேஸ்வரலிங்கா’ என்பது இவரது முத்திரையாகும்.

    1. “பற்றற்றவனுக்கன்றி ஆசையுள்ளவனுக்கு விரதமுண்டோ?
    அமைதியுடையவனுக்கன்றி சினமுடையவருக்கு விரதமுண்டோ?
    கொடையாளிக்கல்லாமல் கருமிக்கு விரதமுண்டோ?
    தன்னாற்றலுக்கு ஏற்றாற்போல் மனத்தூய்மையுடன்
    இருக்கும் மாயபக்தனே உலக வினைகளற்ற சரணர்
    அவர் பாதம் என்னுள்ளத்தில் வார்ப்புப் போலுள்ளது.
    சரணரின் மாட்டுக் கொட்டகையாம்
    ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கம்“

    2. “குருவாக இருந்தாலும் ஒழுக்கக் கேடுடையவனெனில்
    பின்பற்ற முடியாது.
    இலிங்கமாயிருப்பினும் ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டிருப்பின்
    வழிபட முடியாது.
    ஜங்கமனாயிருப்பினும் ஆசாரத்தைப்
    பின்பற்றவில்லையாயின் சேர இயலாது.
    ஆசாரமே பொருள், விரதமே உயிர்,செயலே அறிவு
    அறிவே ஆசாரம்
    ஆச்சாரமே பிராணவாத இராமேஸ்வர இலிங்கம் அதுவே“

    3. “தான் மூழ்கிய பின்னர் கடலின் ஆழம் தனக்கேன்?
    தான் ஆயுதமொன்றில் அகப்பட்ட பின்னர்
    தன்னுடலை ஆயுதங்கள் பல தளைப்படுத்தினாலென்ன?
    ஒரு முடிவுக்கு வந்த பின்னர்
    இந்த உலகோருடன் வேறு பேச்செதற்கு?
    இது கட்டுப்பாடுடன் கூடிய நியமம்
    நியமத்தால் வந்த முடிவு
    ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கத்தின் விருது.“

    4. “பக்தன் வீட்டிற்கு அடியார் வந்தால்
    திருமண  மகிழ்ச்சியை விட அதிகமென நினைத்து
    உடலுருகி மனமிணைந்து கண்கள் நிறைந்து
    வஞ்சனை ஐயம் தோன்றாமல்
    ஐயமற்றவனாகிச் செய்கின்ற பக்தனுடைய
    முற்றத்தின் வாசலே
    ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கத்தின் சிரமாம்.”

    5. “ஐயமுள்ள வரையில் தவமிருப்பவன் இல்லை
    வாள்முனைக்கு அஞ்சும் வரையில் வீரமுடைய வீரனல்ல.
    மூவகையுடல்  உள்ளவரையில் இலிங்கமுள்ள
    அங்கமுடையவனல்லன்.
    நிந்தனை வந்தபின்னும் அங்கத்தை விடவில்லையெனில்
    ஒழுக்கமுடையவன் அல்லன்.
    இந்த நியமங்களில் உட்பட்டவனுக்கு
    அங்கிங்கெனும் பயமெங்குமில்லை.
    ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வரலிங்கத்திலுமில்லை.”

    உரிலிங்க பெத்தியின் புண்ணியஸ்திரி காளவ்வே

    உரிலிங்க பெத்தியின் மனைவி.’உரிலிங்க பெத்தியிகளா அரசா ’இவரது முத்திரையாகும்.

    1. “கடமை காயகமற்றவர் பக்தரல்லர்
    வாய்மை தூய்மையற்றது காயகமல்ல
    ஆசையென்பது பிறப்பின் மூலம்
    ஆசையற்றது நித்திய முக்தியாம்
    உரிலிங்கப் பெத்திகளரசனுள், சுலபமல்ல காண் தாயே.”

    3. “தும்பையின் கொள்ளிபோல் எரிகின்றவன் பக்தனா?
    பொய்யுரைத்துப் பெற்றுச் செய்பவன் பக்தனா?
    பக்தர் குலத்தை இகழ்பவன் பக்தனா?
    தன்னுயிருக்குத் துன்பம் வரினும் இவரைவிடவேண்டும்
    விடவில்லையெனில் உரிலிங்கப் பெத்திகளரசன்
    விரும்பான் தாயே“

    எடேமட நாகிதேவய்யாவின் புண்ணியஸ்திரி மசணம்மா 

    ’ நிஜகுணேஸ்வர ’இவரது முத்திரையாகும்.

    “காகம் நாய் இரண்டையும் உண்டவரில்லை;
    விரதம் கெடுத்தவரோடு இணைந்தவரில்லை;
    நாய்க்கு ஆரஞ்சு செரிக்குமா?
    உலக மாந்தருக்கு விரதம் பொருந்துமா ,
    சிவமூலத்துக்கன்றி?
    நிஜகுணேஸ்வர இலிங்கத்தில் தாங்களே சாட்சி“

    எச்சரிகே காயகதா முக்திநாதய்யா :

    இவருக்கு முத்தண்ணா  என்ற பெயருமுண்டு.காயகம் இரவுநேர காவலாளி. ’சுத்த சித்த பிரசித்த பிரசன்ன குரங்கேஸ்வரலிங்கா’ என்பது இவரது முத்திரையாகும்.

    “உடல் மாற்றம் போதும் எழுக,
    வஞ்சகச் செயல்கள் பல மறந்தெழுக,
    பக்தியும் முக்தியும் உமக்களிக்கும் இலிங்க நட்பை
    நினைத்தெழுக.
    உமது குருவின் ஆணை
    உமது பற்றற்ற அறிவின் விழிப்புணர்வறிந்தெழுக.
    சுத்த சித்த பிரசித்த பிரசன்ன குரங்கேஸ்வர
    இலிங்கத்துடன் இணைய வேண்டுமெனில்.”

    [தொடரும்]

    Share
  • தமிழ், கூகுளின் அலுவல் மொழியா?

    தமிழ், கூகுளின் அலுவல் மொழியா?

    அண்ணாகண்ணன்

    கூகுள் நிறுவனம், தமிழ் மொழியைத் தன்னுடைய அலுவல் மொழியாக (Official language) அங்கீகரித்துள்ளது என்ற செய்தி, பல மாதங்களாக, சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வாட்ஸாப் செய்திகளாகவும் சுற்றி வருகிறது. இதன் உண்மைத் தன்மை என்ன என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒரு ஜனாதிபதியின் சாக்கடை மனம்

    ஒரு ஜனாதிபதியின் சாக்கடை மனம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    1947-இல் இந்திய உபகண்டத்திற்குச் சுதந்திரம் கொடுத்தபோது பிரிட்டன் அதை இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகளாக – ஜின்னா போன்ற முஸ்லீம் தலைவர்களின் பிடிவாதத்தால் – பிரித்தது.  பாகிஸ்தான் இரண்டு பிரிவுகளாக நிலத் தொடர்பில்லாமல் இருந்தது.  அதிகமாக முஸ்லீம்கள் வாழும் பகுதி என்ற ஒரே காரணத்திற்காக கிழக்கு பாகிஸ்தான் என்னும் பகுதி பாகிஸ்தானோடு இணைக்கப்பட்டது.  மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தானுக்கு மொழி உட்பட எல்லா வகையிலும் சம உரிமைகள் கொடுக்காததால் கிழக்கு பாகிஸ்தான் தலைவர்கள் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பினர்.  இதனால் மேற்கு பாகிஸ்தான் மத்திய அரசு கிழக்கு பாகிஸ்தான் மக்களை அடக்குவதற்காக அங்கு ராணுவத்தை அனுப்பி நிறைய கொடுமைகள் புரிந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் கொடுமைக்கு அஞ்சி லட்சக் கணக்கில் பலர் இந்தியாவுக்குள் அகதிகளாக வந்தனர். இதைத் தடுக்க வேண்டியும் கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டியும் இந்தியா கிழக்கு பாகிஸ்தானுக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவத்தோடு போர்புரிந்து அதைப் பணியவைத்தது. கிழக்கு பாகிஸ்தானும் தனி நாடாக ஆகி பங்களாதேஷ் ஆனது.

    1949-இல் மாசேதுங் சீனாவில் ஆட்சியைப் பிடித்து கம்யூனிஸ ஆட்சியை அங்கு நிறுவிய பிறகு 22 வருடங்களாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் எந்த உறவும் இல்லாமல் இருந்தது. அதை அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் மாற்ற விரும்பினார். அப்போது பாகிஸ்தான் சீனாவோடு நல்ல உறவில் இருந்தது. பாகிஸ்தான் அதிபர் யாஹியா கானின் உதவியோடு சீனாவோடு உறவை வளர்த்துக்கொள்ள நிக்ஸன் விரும்பினார். கிழக்கு பாகிஸ்தானில் மனித உரிமைகள் சிதைக்கப்பட்டபோது அதைத் தட்டிக் கேட்குமாறு இந்தியா அமெரிக்காவிடம் கேட்பதற்காக இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அமெரிக்காவுக்கு வந்தபோது நிக்ஸன் அவரிடம் பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று கூறினார்.  அமெரிக்காவின் யோசனைக்குச் செவிமடுக்காத இந்திரா காந்தி கிழக்கு பாகிஸ்தானுக்குள் இந்திய ராணுவத்தை அனுப்பி கிழக்கு பாகிஸ்தானை மேற்கு பாகிஸ்தானிலிருந்து விடுவித்தார்.

    ஒரு பெண் – அப்போது உலக அரங்கில் வெகு சில பெண்களே தலைமைப் பதவியில் இருந்தனர்; அதிலும் இந்திரா காந்தி அமெரிக்காவில் எடுத்த கருத்துக் கணிப்பின்படி 1971-இன் தலைசிறந்த, வலிமையான பெண் என்று பெயர் எடுத்திருந்தார் – தான் கொடுத்த யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று நிக்ஸனுக்கு மிகவும் கோபம். கிஸிஞ்சரிடம் பேசும்போது, ‘இவள் ஒரு தேவ .  .  ..ள் என்றாராம். மேலும் அந்தச் சின்ன புத்தி படைத்த அமெரிக்க ஜனாதிபதி, ஆசியர்களையும் மிகவும் கீழ்த்தரமாக நினைத்தார்.  இந்தியர்களை ஒட்டுமொத்தமாக தேவ .  .   .  . மகன்கள் என்றாராம். (என்றானாம் என்று சொல்லத் தோன்றுகிறது) அவருடைய ஆணாதிக்கமும் இனவெறியும் அவர் இந்தியர்களைப் பற்றி இழிவாகப் பேசியதிலிருந்து தெரிகிறது. 1971 ஜூன் மாதம் அவரும் அவருடைய வெளியுறவு மந்திரி கிஸிஞ்சரும் வெள்ளை மாளிகை பிரதான அதிகாரியும் கலந்துகொண்ட உரையாடல்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன. நிக்ஸன் வெள்ளை மாளிகையில் தன்னோடு பிறர் பேசுவதையெல்லாம் ஒலிநாடாவில் பதிவுசெய்யும் முறையைப் புகுத்தியிருந்தார்.

    அப்படிப் பதிவுசெய்யப்பட்ட பேச்சில், ‘சந்தேகமில்லாமல், எந்தவிதக் கவர்ச்சியும் இல்லாதவர்கள் இந்த இந்தியப் பெண்கள்’ என்ற நிக்ஸன் தொடருகிறார்; ‘கருப்பு ஆப்பிரிக்கப் பெண்களிடம் கவர்ச்சியே இல்லை என்று சிலர் சொல்வார்கள்; ஆனால் அவர்களிடம்கூட மிருகங்களிடம் இருப்பது போன்ற ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லலாம்; ஆனால் இந்த இந்தியப் பெண்கள் …. நினைத்தாலே குமட்டுகிறது’.  மேலும் அவர் கிஸிஞ்சரிடம் எந்த ஆண்களுக்கு இவர்களைப் பார்த்தால் இனக்கவர்ச்சி ஏற்படும்? இந்த இந்தியர்கள் எப்படி இனப்பெருக்கம் செய்கிறார்கள்?’ என்று கேட்கிறார்.

    இந்தியாவின் அமெரிக்கத் தூதர், பாகிஸ்தான் தன் நாட்டு மக்களையே கொன்றுகொண்டிருக்கிறது என்று நிக்ஸனிடமும் கிஸிஞ்சரிடமும் கூறியபோது நிக்ஸனுக்கு அவர்மேல் அப்படி ஒரு கோபம் வந்தது. ‘இந்த 70 வயது கிழவருக்கு அந்தப் பெண்களிடம் என்ன கவர்ச்சி தோன்றியது?’ என்று கேட்டார். கிஸிஞ்சர் நிக்ஸனிடம், ‘600 வருஷங்கள் இந்த இந்தியர்கள் பிரிட்டிஷ்காரர்களின் கால்களை வருடி வருடியே காலத்தைக் கடத்தினார்கள். இவர்கள் முகஸ்துதி செய்வதில் வல்லவர்கள்’ என்றார்.

    இந்திரா காந்தி தன் அறிவுரையைக் கேட்கவில்லை என்ற கோபம் எப்படியெல்லம் நிக்ஸனைப் பேசத் தூண்டியிருக்கிறது! அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இப்படிப்பட்ட இனத்துவேஷமும் இந்தியப் பெண்கள் பற்றிய மிக கீழ்த்தரமான எண்ணமும் கொண்டிருந்தார் என்பதை அறியும்போது மிகுந்த கோபம் ஏற்படுகிறது. இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் ஒரு அமெரிக்க ஜனாதிபதியை அமெரிக்க மக்கள் ஒரு முறை அல்ல இரண்டு முறை தேர்தெடுத்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது அமெரிக்க மக்களின் தரத்தை உணர முடிகிறது.

    Share