Blog

  • என்னை நான் தேடித் தேடி.. (சிறுகதை)

    என்னை நான் தேடித் தேடி.. (சிறுகதை)

    திவாகர்

    ஓ.. கொரோனா வந்ததே உங்களுக்குத் தெரியாது என்பதை மறந்துவிட்டு நான் அதையே பேசிண்டிருக்கேன். ஆறு மாசம் ஓடிப்போயிடுச்சு. சரி, விடுங்க..”உங்களை ஆறு மாசம் முன்னாடி ஜாகேஷ்வர்ல பார்த்தப்போ என்னவோ தோணிச்சு, மறுபடியும் இங்கே எங்கேயோ உங்களைப் பார்ப்பேன்னு.. உங்களுக்கும் அப்படிப் பட்டுதா?”

    நான் அவளைப் பார்த்துச் சிரித்தேன்.. கொஞ்சும் மழலைத் தமிழில் இவள் பேசுவது எத்தனை அழகாகக் கேட்கிறது. “இல்லைம்மா! அப்ப நீ பார்க்கறச்சே நான் இருந்த மனநிலை வேற. இப்போ உன்னை அடையாளம் கண்டுபிடிச்சுப் பேசறதே எனக்குப் பெரிசு. ஆனா அடுத்த முறை இங்கே எங்கேயாச்சும் பார்த்தேன்னு வைச்சுக்கோ.. உடனே ஞாபகம் வந்துடும்.”

    அவளும் சிரித்தாள். கள்ளமில்லா சிரிப்பு.. ஆறு மாதம் முன்பு ஜாகேஷ்வரில் அவளைப் பார்த்துப் பேசியதெல்லாம் நினைவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. பெரிய பணக்காரவீட்டுப் பெண். அம்மா இல்லை இவளுக்கு.. சின்ன வயதில் இருந்து ஹாஸ்டல் வாசம்.. ம்ம்.. இன்னும் என்னென்னவோ சொன்னாளே.. ஓ மறந்துவிட்டேனே.. இந்த சிறிய வயதில் அதுவும் வாழ்க்கையின் அனுபவ வாசலில் நுழையப்போகும் தருணத்தில் அடிக்கடி ஜாகேஷ்வர் வந்துவிடுவாளாம். மாதக் கணக்கில் இருப்பதாகச் சொல்வாள். இந்த மலைப்பக்கம் சுற்றுவட்டாரம் எல்லாம் தெரியும் என்று கூடச் சொன்னாள். இன்னும் ஏதேதோ சொல்லி இருக்கிறாள். நினைவில்லை. அப்போது நான் இருந்த மனநிலையில் இவள் பற்றிய இத்தனை நினைப்புகளும் இன்னமும் என் ஞாபகத்தில் இருப்பதே ஆச்சரியம்தான்.

    ’என்ன ஆண்ட்டி! எதுவும் பேசவே இல்லை.. ஆமாம்.. உங்களை ஆண்ட்டி என்று கூப்பிடலாமா இல்லை அக்கா என்று கூப்பிடட்டுமா?”

    ’வேண்டாம்மா.. என்னை மங்களா என்று எங்கப்பா வெச்ச பேரைச் சொல்லியே கூப்பிடு.. இந்த உறவு முறைல்லாம் எதுக்கப்பா.. உறவுகளை ஒதுக்கிவிட்டுதான் வந்தாச்சே..”

    ”இது நல்லா இருக்கே மங்களா.. மங்களகரமான முகத்துக்கு மங்களம்னுதான் பேர் வெக்கணும். உங்கப்பா செஞ்சது சரி.. எங்கப்பாவுக்கு இதெல்லாம் தெரியாது.. மேடைல வக்கணையா பேசுவார்.. கீழே இறங்கிவந்தா என்ன பேசினார்னு உடனேயே மறந்துடற நல்ல மனசு அவருக்கு. வர்ஷினி’ன்னு பேர் யார் வெச்சுருக்கார்’னு அவருக்கே ஞாபகம் இல்லே.. மங்களா! நீங்க எனக்கு அன்னிக்கு பேசினதெல்லாம் இன்னமும் ஞாபகமிருக்கு. உங்க குடும்பம் ரொம்பப் பெரிசு. ரொம்ப பிளான்லாம் பண்ணிதான் இங்க வந்தீங்கன்னு சொன்னீங்க.. சரிதானே?  பாருங்க.. இந்த மலை இங்கேதான் கொஞ்சம் சமானநிலம். கொஞ்சதூரம் இப்படியே போயிட்டே இருந்தா அப்புறம் பெரிய பள்ளம். அதுக்கு முன்னாடி ஒரு சில குடும்பங்கள் கூட்டமா இருக்கும். சுட்ட கிழங்கு அப்படியே சுடச்சுட கொடுப்பாங்க. நான் போன வருஷம் பார்த்தேன். இப்ப அங்கேயே இருக்காங்களோ இல்லையோ… பார்க்கத்தானே போறோம்..”

    ”ஓ.. வர்ஷினி நான் கொஞ்சதூரம்தான் உன்னோட வருவேன் போல இருக்கே. இந்த மலையிலேர்ந்து கிழக்கே கீழே இறங்கிடுவேன். அங்கயும் ஒரு சின்ன கிராமம் இருக்கு. அங்கதான் எங்க குரு இருக்கார். அவரைப் பார்க்க வரச் சொல்லியிருக்கார். அதனாலதான் இந்தப் பயணம்.”

    ”பரவாயில்லை மங்களா.. நானும் உங்களோட வர்ரேனே.. எனக்கு எந்த ஒரு வேலையும் கிடையாது. இப்படி நடந்துண்டே போவேன். எங்காவது இடம் கிடைச்சா தங்குவேன். போய்க்கொண்டே இருப்பேன். புகலிடம் எங்கேன்னு தெரியலே.. இன்னிக்கு உங்க கூட வரதுல உங்களுக்கு ஏதாச்சும் கஷ்டமா?.”

    சட்டென அவளை நிறுத்தினேன். ”வர்ஷினி.. தாராளமா என்னோட வாம்மா.. எனக்கு எந்த வித கஷ்டமும் இல்லே. உனக்குப் பிடிச்சுதுன்னா எங்க கூடவே தங்கலாம்”

    அவள் குதூகலித்தாள். அந்த குதூகலம் அவள் துள்ளல் நடையில் தெரிந்தது.

    ’மங்களா இந்த ஆறு மாசத்துல  உங்க குடும்ப ஞாபகமே இல்லாம இருக்கீங்களா.. நல்ல வைராக்கியசாலிதான்.. எனக்கு அதெல்லாம் போறாது.. கொஞ்ச நாள் இங்கே வருவேன்.. தைரியமா நடப்பேன்.. எங்கேயாவது வாகான இடம் கிடைச்சால் சாதனா செய்வேன். திடீர்னு ஊர் ஞாபகம் வந்துடுச்சுனா போச்சு.. திரும்பி ஏதாவது ஷார்ட்கட்லே போயி எப்படியாவது ஊருக்குப் போயிடுவேன்.. உங்களை மாதிரி வைராக்கியம் வரணும்னு தேவிகிட்டே இன்னிக்கு சாயந்திரம் வேண்டிக்கிறேன்’.

    “அதென்ன சாயந்திரம்?”

    “அது அப்படித்தான்.. சாயங்காலம்தான் எனக்கே தோணும். வேண்டிக்குவேன்.. உடனே அவளும் நான் கேட்பதையெல்லாம் தந்துடுவாள், ஒரே ஒரு விஷயம் தவிர”

    சிரித்தாள் அவள். உள்ளம் போலவே பளிச்சிட்டன. அந்த ஒரே ஒரு விஷயம் என்ன என்று கேட்கவில்லை. நான் கூட இவளை மாதிரிதானே.. என்னவோ பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக மனதுள் வலம் வந்தன. அதற்கேற்றாற்போலவே இவளும் கேட்கிறாள். குடும்ப ஞாபகம் வந்ததா என்று இவளுக்கு சொல்லலாமா.. சொல்லலாம்.. கடந்த காலத்தை நினைவுப்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

    ”வர்ஷினி.. உன் பெயர் நல்ல பெயர்தான்.. நன்மையே பொழிபவள் என தேவிக்கு வர்ஷினி, வர்ஷா என்பார்கள். எனக்கு என் குடும்ப ஞாபகம் எல்லாம் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். பலவந்தமாக மறக்க முயன்றாலும் அதெல்லாம் முடியாதுதான். குடும்ப பந்தம் என்பது சாமான்யமான விஷயம் இல்லைம்மா.. சட்டென அத்தனையும், அத்தனை பந்தங்களையும் உதறிவிட்டு ஓடி வர முடியுமா.. அதுவும் நல்லதொரு குடும்பத்தைக் கட்டிக் காத்து வரும் பெண்ணால் முடியுமா.. அப்படிப்பட்ட கட்டுக்கோப்பான குடும்பப் பெண், அதுவும் பொறுப்புள்ள குடும்பப்பெண் திடீரென காணாமல் போனாள் என்று எல்லோரும் தேடுவார்களே என்ற கவலையும் பயமுமாய் இருப்பவள் இப்படி எல்லாவற்றையும் உதறி வரமுடியும் என் நினைக்கிறாயா.. இல்லையம்மா.. நான் வணங்கும்தேவி அவளருள் குருவின் அருளாய் கட்டளையாக வந்ததாய் எனக்குத் தோன்றியது.. வந்துவிட்டேன். அவ்வளவுதான்.!”

    நிதானமாகத்தான் அவளுக்குச் சொன்னேன். அவளுடன் மெல்ல நடந்துகொண்டே இருக்கும்போதே என் மனம் ஆறு மாதங்களுக்கு முன்னால் நடந்ததையெல்லாம் அசை போட ஆரம்பித்துவிட்டதுதான். மனம் தூண்டப்பட்டாலும் கூட மனத்தை அடக்கும் சக்தியை என்றாவது ஒருநாள் தேவி அருளத்தான் செய்வாள். அதுவரை மனம் தன் இஷ்டப்படி எதை வேண்டுமானாலும் நினைக்கட்டுமே..

    உண்மைதானே.. என்னால் எப்படி அத்தனை உறவுகளையும் ஒரே நாளில் சட்டென உதறி வரமுடியும்? அந்த நாளுக்காகவே ஒரு வருடமாக நான் காத்திருந்தேனே.. என்ன குறையை எனக்கு என் வாழ்வில் வைத்தாள் என் தேவி. எதுவும் இல்லையே.. ஆரோக்கியமான கணவன், இரண்டு பிள்ளைகள், ஒரு பெண் எல்லோருமே என்னுடன் அன்று வரை பிரியமாகத்தானே இருந்தார்கள். கணவர் அவருக்கு உலகத்தின் உண்மை சொரூபம் தெரியாதோ இல்லை தெரிந்தாலும் அலட்சியப்படுத்தும் மனநிலையோ.. கொஞ்சம் படாடோபக்காரர்தானே.. தான் எப்போதும் செல்வச் செழிப்போடு, வளமான ஆரோக்கியமாக இருக்கவேண்டும், மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவது என்பதை எப்போதும் விரும்பமாட்டார். தான் உண்டு தன் ஷட்டில்காக் விளையாட்டு உண்டு,  படிக்கிறாரோ இல்லையோ ஆனால் கையில் எப்போதும் ஆங்கில புதினங்கள் உண்டு, தன் பணக்கார நண்பர்களோடு அரசியல் பேசிக்கொண்டும், ஹாஹாவென பெரிதாகக் கத்திச் சிரித்துக்கொண்டும் கொண்டாடிக்கொண்டும், மற்றவர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என எவ்விதக் கவலையுமில்லாமல் வாழ்ந்து வருபவர். அப்படிப்பட்டவர் திடீரென நான் கோயிலுக்கு அந்தக் கடைசி நாள் போகும்போது கூடவே தானும் வருவதாக பிடிவாதமாக காரில் ஏற்றிக்கொண்டு போனாரே…

    நான் காரில் கோயில் செல்வது இல்லை. வீட்டில் இருந்து சரியாக ஐந்து கிலோமீட்டர் தூரம் உள்ள என் தேவியின் கோயிலுக்கு நடந்தே தினம் செல்வேன். சரியாக ஒன்றேகால் மணிநேரம் ஆகும். அதைப் போல அங்கே பொது தரிசனம்தான் செய்வேன். அங்கேயே ஏறத்தாழ ஒருமணி நேரம் ஆகும். ஒரு சில நாட்கள் இன்னும் தாமதமானாலும் கூட பொறுமையாக இருந்து அவளைத் தரிசனம் செய்வேன். தட்டில் போடும் அந்த பத்து ரூபாய்தான் மொத்த செலவு. மறுபடி திரும்பி வரும்போது நடைதான். ஒன்றேகால் மணி நேரம்.. இது என் நித்திய வேலை வீட்டிலே கூட எல்லோருக்கும் தெரியும்தான். அவர்களுக்கும் பழகிவிட்டது. ஆனால் இவரென்ன காரில் போகவேண்டுமென்று சொல்கிறார். சரி, இன்று கடைசி நாள். தேவியின் திருவுள்ளம் கணவரோடு ஒருநாள் சேர்ந்து வர வேண்டுமென்றிருக்கிறது போலும். வாழ்நாளில் இவரோடு ஒருநாள் கூட சேர்ந்து கோயிலுக்குச் சென்றதே இல்லையே..

    அவரே காரை ஓட்டினார். பத்தே நிமிஷத்தில் கோயில் வந்தோம். பெரிய மாலையை வாங்கிக்கொண்டார். தலையை நிமிர்த்தி ஒரு தனவந்தருக்கான தோரணையோடு கையில் மாலையோடு சென்றவரை அங்குள்ளோர் வியப்பாக பார்த்திருக்கலாம். சிறப்பு டிக்கெட் எடுத்துக் கொண்டார். முன்னூறு ரூபாய் கொடுத்தால் தேவியின் அருகாமைக்குக் கொண்டு சென்று காண்பிப்பார்கள்தான். ஆனால் நான் அப்படிப் பழகவில்லை. சாதாரண பக்தையாகத்தானே இத்தனை நாள் சென்றவள். ஏனோ தேவியை அருகே பார்ப்பதை விட வழக்கப்படி  சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் என்ன என்று மனதுக்குள் தோன்றியது. ஆனால் இவரோ கையைக் கூப்பியபடி தேவியைக் கும்பிட்டார். வீட்டில் பூஜை அறைப் பக்கம் தலை வைத்துப் படுக்காதவர். எனக்கு அதிசயமாகத்தான் இருந்தது. ஏதும் பேசவில்லை. தேவியையே பார்த்துக்கொண்டிருந்தேன். அர்ச்சகர் வந்ததும் எங்களை தடபுலடாகக் கவனித்தார். பெரிய மாலையை வாங்கிக்கொண்டார். கோத்திரம் கேட்டார்.. இவருக்கு அதெல்லாம் சொல்லத் தெரியாது. நானே சொன்னேன். உள்ளே சென்று மாலை சார்த்தி அட்டகாசமாக ஸ்தோத்திரம் சொல்லி பூஜை செய்தவர் அம்பாளின் மேல் சார்த்தியிருந்த அந்தப் பெரிய மாலையைக் கஷ்டப்பட்டு எடுத்தார். கொஞ்சம் மல்லிகைச் சரத்தையும் எடுத்துக் கொண்டு எங்களிடம் வந்தார். பெரிய குரலில் ஆசீர்வசனம் சொல்லி அந்தப் பெரிய மாலையை என் கணவர் கழுத்தில் போட்டார். எனக்கு மல்லிகைச் சரத்தைக் கொடுத்தார். இவர் தன் பர்ஸிலிருந்து இரண்டு புது ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து அர்ச்சகர் தட்டில் வைத்தார். அர்ச்சகர் கண்கள் பெரிதாகின. சௌஜன்யமாக எங்களைப் பற்றி விசாரித்தார். அடிக்கடி கோயிலுக்கு வரவேண்டும் என்று என்னிடம் ஆதரவாகப் பேசினார். எனக்குச் சிரிப்புதான் உள்ளுக்குள் வந்தது. நிதம் வருகிறேன். சாதாரணமான  பக்தர்களுடன் வருகிறேன். பத்து ரூபாய் போடுகிறேன். ஆனால் நான் போடுவதைப் பல சமயங்களில் அவர் பார்ப்பது கூட கிடையாது. குங்குமம். மட்டும் அவர் கையிலிருந்து எங்கள் கைகளில் போட்டுக்கொண்டே வருவார். ’சீக்கிரம் நகருங்கோ, தரிசனம் ஆயிடுத்து இல்லையா.. பின்னாடி நிறைய பேர் இருக்காங்களே.’. என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அப்படிப்பட்டவர் இன்று எங்களுக்கு ஆசீர்வசனம் மாலை போட்டு மரியாதை தருவதோடு என்னையும் நித்யம் வருமாறு அழைக்கிறார். இவர் கவனமே இப்போதுதான் என் மீது விழுந்தது. இருக்கட்டும்.

    கோயிலைச் சுற்றி வந்த என் கணவர் அங்கே பக்தர்கள் அதிகம் கூடாத ஒரு இடம் பார்த்து சப்பணம் போட்டு உட்கார்ந்துகொண்டார். என்னை அங்கே உட்காரச் சொல்லி சைகை செய்தார்.

    ”மங்களா, ஏதோ சின்ன வயசுல கோயிலுக்கு வந்திருக்கேன். கல்யாணம் ஆனதிலேர்ந்து உன் கூட கோயிலுக்குன்னு வந்தது இல்லேதான். ஆனாலும் இன்னிக்கு ஏன் வந்தேன்னா ஒரு காரணம் இருக்கு. அந்தக் காரணமே நீதான்”.

    என்ன இவருக்கு எல்லாம் தெரிந்து விட்டதா.. நான் நாளைக் காலை வண்டிக்கு டில்லிக்கு ஒரு குழுவோடு பிரயாணம் செய்வது தெரிந்து விட்டதோ.. அங்கிருந்து ஜாகேஷ்வர் செல்கிறோம். அந்த யாத்திரை விஷயத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை. குழுவுடன் ஜாகேஷ்வர் வரைதான் என் பயணம். அதற்கடுத்த பயணம் எனக்கே தெரியாதே. தேவியை நம்பித்தானே செல்கிறேன். சென்றவருடம் சென்றபோதுதான் அந்தக் கட்டளை  எனக்கே வந்தது என்ற உண்மையை இவரிடம் சொல்லிவிடலாமா?

    சென்ற வருடம் எனக்கு ஏற்பட்ட ஒரு அபூர்வ அனுபவம்தான் இந்த அபூர்வ நிகழ்ச்சிக்கும் வித்திட்டது, ஜாகேஷ்வரில் நான் இருந்த அந்த ஒரு வாரத்தின் கடைசி நாளில்தான் அவர் தரிசனம் கிடைத்தது. என்னை விட வயதில் இளையவர்தான் எனினும் என்னைப் பார்த்ததும் தனிக் கனிவோடு பேசினார். அவர் முகத்தில் இருந்த காந்த ஒளியை என்னால் வர்ணிக்கவே முடியாது. அவர் பேச்சு உடனடியாக என்னை ஈர்த்தது. குருவானவர் எப்படி எந்த உருவில் வேண்டுமானாலும் வருவார் என்று சூசகமாகச் சொன்னவர் என்னை நானே தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார். ’இங்கேயே இருந்து விடுவாயா’ என்று கேட்டார்’. மனதுக்குள் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி. ’உடனே ஒப்புக்கொள்’ என்றது மனம். ஆனால் வாய் மட்டும் கொஞ்சம் கால அவகாசம் கேட்டது. ’சரி ஒரு வருடம் உன்னைத் தயார் படுத்திக்கொண்டு வந்து விடு. நீ வரவேண்டிய நேரம்கூட சரியாக அமையும்தான்’ என்று ஆசிர்வதித்துப் போனவர் திரும்பி வந்து ’நான் உன்னைக் கண்காணித்துக் கொண்டே இருப்பேன். கவலையே பட வேண்டாம். தேவியின் அருள் உனக்கு உண்டு’ என்றார். இந்த ஒருவருடம் என்னை நானே ஒவ்வொரு கணமும் தயார்படுத்திக்கொண்டேன். அனுதினமும் இரவில் சாதனா செய்தேன். அவ்வப்போது நான் ஏதாவது மனதுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டும் சந்தேகம் எழுப்பிக்கொண்டும் இருக்கும்போது கூட அதற்கேற்றாற்போல சமாதானமும் அதே மனதுள் கிடைக்கும். சென்ற வருட நிகழ்வை நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்ல. இவரிடமும் கூட.

    நாளைய பயணத்தையும் இவரிடமும் சொல்லவில்லை. தேவையில்லை என்று மனம் உறுதியாகக் கூறியதால் நான் வீட்டில் கூட யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. தேவி அவள் பார்த்துக் கொள்வாள். என் மனதில் இருந்து ஆட்டுவிக்கும் குரு பார்த்துக் கொள்வார்.

    இத்தனைக்கும் சென்றவருடம் இந்த ஊர் கோஷ்டியோடு நான் ஜாகேஷ்வரம் செல்லும்போது எல்லோருக்கும்  சொல்லிவிட்டுத்தானே சென்றேன். காரில் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இவர் வந்து வழி அனுப்பி வைத்தாரே. நான் திரும்பி வரும்போது கூட காத்திருந்து அழைத்து வந்தாரே.. ஒருவேளை நான் எப்போது திரும்புவேன் என்று இப்போது இவர் கேட்டால் என்ன சொல்வது?

    ஆனால் கணவர் என் சிந்தனைகளை சீண்டவில்லை. “நான் உன்னிடம் வீட்டில் சரியாகப் பேசக்கூட முடிவதில்லை. உனக்குதான் தெரியுமே.. என் வேலையே தனி.. நான் உண்டு, என் வேலையுண்டு என்றுதானே இருப்பேன். இரண்டு நாள் முன்புதான் சேதி தெரிந்தது.. நேத்திக்கே உன்னிடம் பேசணும்னு நினைச்சேன். ஆனால் நேத்துக் காலைலேயே எழுந்து வழக்கம்போல கோயில் கிளம்பிப் போயிட்டே.. நீ வரும்போது நான் இல்லே. நேத்துப் பார்த்து ஒரே நண்பர்கள் தகராறு. அதுலேயே டைம் பாஸ் பண்ணிட்டேன். ராத்திரி படுக்கவரச்சே லேட்டாயிடுச்சு. சரி, கார்த்தாலே கோயிலுக்கு நானும்தான் உன்னோடு போகலாமேன்னு ஒருநாள் ஷட்டில்காக் விளையாட்டை விட்டுட்டு இதோ உன்கூட உட்கார்ந்திருக்கேன்.. சரி சொல்லு.. ஏன் இப்படி செய்தே.. பொண்ணு அழுதுண்டே உருகிப்போய் சொல்லறச்சே என் மனசு கூட கஷ்டமா இருக்கு.!’”

    ஓ.. இவ்வளவுதானா.. அதாவது என்னிடம் இருந்த நாற்பது லட்சம் ரூபாய் வைப்பு நிதியை அவளுக்கு எழுதிக் கொடுத்துவிட்டேன். அவள் புருஷன் ஏதோ பிஸினெஸ் பண்ண ஆசைப்பட்டான் என்றாலும் இது அதிகம் என்று எனக்குத் தெரியும். ஆனால் அந்தப் பணத்தையெல்லாம் நான் இனி என்ன செய்யப் போகிறேன். சந்தர்ப்பம் சரியாக அமைந்தது. தேவையும் சரியெனப் பட்டது. இருந்த பணத்தையெல்லாம் கொடுத்துவிட்டேன். அவ்வளவுதான். இதை எப்படி சொல்வது.. இவரிடம். மகளே சொல்லியிருப்பாளே..

    அவரும் அதைத்தான் சொன்னார். ”மங்களா.. அவங்க பிஸினஸுக்குத் தேவை என்றால் ஒரு பத்து லட்சம் கொடுத்திருக்கலாம். இல்லை நான் இருக்கிறேனே. என்னிடம் கேட்டால் ஏதாவது செய்வேனே.. எனக்கு அறுபத்தெட்டு வயசாகிறது. உனக்கும் அறுபத்து நாலு வரப் போகுது. எட்டு வருடம் முன்பு உன் எதிர்கால வாழ்வில் ஒரு வேளை நான் முன்னாடி போய்ச் சேர்ந்துவிட்டால் உனக்கென்று பணம் இருக்கணும், அது உன்னை வைத்துக் காப்பாத்தும் என்கிற நம்பிக்கையினால்தான் அந்த நாற்பது லட்சம் டிபாசிட் செய்தேன். இன்று அதன் மதிப்பு எண்பது லட்சமாக்கும், அப்படியே உன் பொண்ணுக்கு மாற்றிக் கொடுத்துவிட்டாயே.. சரி போகட்டும் நாளை உன் பேரில் இருபது லட்சம் டிபாசிட் செய்கிறேன். அது உன்னுடைய தனிப்பட்ட எதிர்காலத்துக்காகத்தான். நான் இருக்கும் வரை உனக்கு எந்தக் கவலையுமில்லை. இதோ பார்.. ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள். பணம் மட்டுமே உன்னைக் காப்பாத்தும். இந்த மகன் மகள் உறவு எல்லாம் உன் கடைசி காலத்தில் உதவமாட்டார்கள். என்ன.. சொல்லறது புரிஞ்சுதா?”

    நான் சிரித்தேன். ”எனக்காக எதையும் செய்யவேண்டாம்.. செஞ்சதெல்லாம் மனநிறைவோடு நீங்கள் செய்தீர்கள். நானும் அதே மனநிறைவோடுதான் கொடுத்தேன்..”

    திடீரென என் கழுத்தைப் பார்த்தார், சற்று அதிர்ச்சியானார். “உன் தாலிச் செயின் எங்கே.. செக்யூரிட்டின்னு உள்ளே கழட்டி வைத்துவிட்டாயா? ஐய்யோ இந்த மஞ்சள் கயிறு எல்லா நல்லாவே இல்லே.. தாலிச்செயின் பத்து சவரனாக்கும். .அது வேணாம்னா  ரெண்டு சவரன்லயாவது சின்ன சங்கிலி போட்டிருக்கலாம்.. உன் மோதிரம் வளையல்லாம் எங்கே?.. உடம்புல பொட்டு தங்கம் இல்லாம உன்னை இப்படிப் பாக்கறது என்னால தாங்க முடியலே.. யாராவது தெரிஞ்சவங்க உன்னையும் என்னையும் சேர்த்துப் பார்த்தா அவ்வளவுதான்.. என் மானமே போயிடும்.. ஏன் இப்படி பண்றே?”

    ”இப்போ எதுக்குங்க அதெல்லாம் கேட்கறீங்க? எல்லாம் ஜாக்கிரதையாதான் இருக்கு.!” நான் மருமகளிடம் கொடுத்து அவள் பீரோவில் ஜாக்கிரதையாக என் நகைகளை வைக்கும்படி சொன்னதைச் சொல்லவில்லை.

    அவர் கொஞ்சம் ஆசுவாசப்பட்டார். ‘எங்கே அதையும் உன் மகளுக்குக் கொடுத்திட்டியோன்னு நினைச்சேன். வெளிலே நடந்து போகறச்சே நகை போட்டா பாதுகாப்பில்லேதான். ஆனாலும் கொஞ்சம் கொஞ்சம் நகையைப் போட்டுக்கறது பெண்பிள்ளைகளுக்கு நல்லதுதான். ஏதோ சொல்லிட்டேன்.. நாளைலேர்ந்து கழுத்துல காதுல நகையைப் போட்டுண்டு என் காரை எடுத்துண்டு கோயிலுக்கு வா.. இப்போ நமக்குக் கிடைத்த மரியாதையை பார்த்தியா.. நீ பொதுபக்தர்களோட வரதுன்னாலே அவருக்கு அடையாளம் தெரியலே.. நாம் கொஞ்சம் பகட்டா காண்பிச்சாதான் இந்த உலகத்துல மதிப்பு. பத்துரூபாயெல்லாம் போடாதே.. குறைஞ்சது நூறு ரூபாயாவது போடு. சிறப்பு டிக்கெட் எடுத்துக்கோ.. இதெல்லாம் இனிமே என் பணத்துலேயே செலவு செஞ்சுக்கோ.. தெரியறதா.. சொல்லிட்டேன்.”

    சொன்னவர் ஏதோ கணக்குப் போட்டார். ”என்ன செலவாயிடப்போகுது? மிஞ்சிப் போனா தினம் ஐந்நூறு ரூபாய் ஆகும்.. மாசத்துக்கு பதினஞ்சாயிரம் ஆகும்.. ஆகட்டுமே!” குரலில் சுரத்து அவ்வளவாக இல்லைதான்.

    சிரித்தேன் அவரைப் பார்த்து. “ஒரு வருஷமா தினம் கோயிலுக்கு நாள் தவறாம வர்ரேன். நீங்க சொல்லறபடி கார்ல வந்து சிறப்பு டிக்கெட் வாங்கி கிட்டக்கப் போய் தர்சனம் பண்ணி, தட்டுலயும் நூறு ரூபாய் போட்டேன்னா இப்ப வரைக்குமே என்னாலே கிட்டதட்ட ரெண்டு லட்சம் ரூபாய் செலவு ஆகியிருக்குமே.. கவலை வேண்டாமே.. நான் வழக்கப்படிப் போய்க்கறேன்”

    ஒரு முறை ஏளனமாக என்னை ஒரு ஓரப்பார்வை பார்த்தார். ஆனால் அவர் குரலில் ஒரு நிம்மதி இப்போது தெரிந்தது. “சரி மங்களா.. ஏதோ உன் நல்லதுக்கு சொன்னேன், உன் இஷ்டம். நான் என்னிக்காவது உன் வேலையிலே தலையிட்டிருக்கிறேனோ.. நீயும் அப்படித்தான்.. எனக்குத் தெரியும். இருந்தாலும் புருஷன் தன் கடமையை ஒழுங்காகச் செய்யணும். அதுவும் பண விஷயத்தில் சரியாச் செய்யணும். நாளைக்கு பணம் ஒண்ணே காப்பாத்தும்.. ஞாபகம் வெச்சுக்கோ”.

    எழுந்துகொண்டார். அப்போதுதான் ஒன்று கவனித்தேன். நான் நிதமும் இந்தக் கோயில் வரும்போது தலைவாசலில் இருந்து என் வாய் அவள் நாமத்தையே முணுமுணுத்துகொண்டே இருக்கும். திரும்பும்போதும் அதே தலைவாசலில் அந்த நாமத்தினை முடித்துவிட்டு அவளுக்கு ஒரு நமஸ்காரமும் செய்துவிட்டு மனம் நிம்மதியோடு வெளியே வந்து நடை போட ஆரம்பிப்பேன். ஆனால் இன்று பார்த்து இப்போது வரை ஒரு முறை கூட என் வாயில் அவள் பெயரே வரவில்லை. எத்தனை அருகிலிருந்து அவளைத் தரிசித்தேன். ஊம்ஹூம்.. இல்லை. அவளை நான் கூப்பிடவே இல்லை. தேவி அப்படி என்னைக் கூப்பிட வைக்கவில்லை.. தாயே இது என்ன கொடுமை.. உடனடியாக நாவில் அவள் நாமம் சொல்லிக்கொண்டே தலைவாசல் வரை சென்று அவளுக்கு நமஸ்கரித்துவிட்டு வெளியே அவருடன் வந்தேன். காரில் வீடு சென்றோம். ஏதோ அவரின் தலையாய கடமை ஒன்று முடித்து விட்ட திருப்தியில் அவர் வேலைகளைப் பார்க்க சென்றுவிட்டார்.

    அடுத்த நாள் காலைப் பயணம். ஒரு பூஜைப் பையில் என்னுடைய ஜீன்ஸ் பேண்ட் ஒன்றும் ஒரு முழுக்கை காக்கிச் சட்டையும் வைத்துக்கொண்டேன். இந்த டிரஸ் மூன்றாம் வருடம் லண்டனில் இருக்கும் மகனைப் பார்க்கப்போன போது விமானப் பயணத்துக்கு சுலபமானது என்று வாங்கித் தந்தான்.. இங்கிருந்து ஆட்டோவுக்கு முந்நூறு ரூபாய் தேவைப்படும். ஐந்நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொண்டேன். என் பீரோவில் மீதி இருந்த ரொக்கத்தையெல்லாம் மருமகளிடம் கொடுத்து வழக்கப்படி அவள் பீரோவில் வைக்கச் சொன்னேன். ஆச்சரியமாகப் பார்த்தாள்.. ஆனாலும் சொன்னபடி செய்தாள். சாப்பிட்டேன். இரவு தேவியை நினைத்து வழக்கப்படி செய்யும் சாதனாவை செய்துவிட்டுத் தூங்கினேன். காலை குளித்துவிட்டு வழக்கம்போல் அந்த பூஜைப் பையை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

    பேரன் எதிரே வந்தான். ‘என்ன பாட்டி! ஜாலியா கையை வீசிண்டே கோயிலுக்கு தினம் வாக்கிங் போவே.. இன்னிக்கு என்ன புதுசா கையிலே பை?. தேங்காய்ப் பழமா?’ என்று கேட்டான். அத்தோடு இல்லாமல் புதிதாக கையில் ஒரு சாக்லேட் கொடுத்தான். ’ரோடுல போகறச்சே சாப்பிடு. திடீர்னு சுகர் ஏறினா குறையும்’னு சொல்லி சிரித்தான். வாங்கிக்கொண்டேன். இந்தக் காலத்தில் சின்னப்பசங்களுக்கெல்லாம் அறிவு ஜாஸ்திதான்.

    ”எனக்கு சாக்லேட் கொடுத்தே இல்லே.. பதிலுக்கு இந்த என்னோட மொபைல் போன் எடுத்து வெச்சுக்கோ.”

    ”ஐய்யோ பாட்டி! வேணவே வேணாம்’. என்று மறுத்துக்கொண்டே அவன் நீட்டிய கையில் அந்த கைபேசியை கெட்டியாக அழுத்திக் கொடுத்தேன்.

    ”பாட்டி, எனக்கே எனக்கா?” சந்தேகத்தோடு கேட்டான். சிரித்தேன் நான். ”ஆமாம்.. நீயே வெச்சுக்கோ!” அவனுக்குப் பரம சந்தோஷம். எனக்கும்தான். என் கடைசித் தொடர்பையும் துண்டித்தாயிற்று. “ஆஹா.. ஒரே ஒரு சாக்லெட்டுக்கு ஆப்பிள் போன் கொடுத்திருக்கே.. நீ ரொம்ப கிரேட் பாட்டி..”

    ”ஆனா இது மூணு வருஷம் முந்தைய ஆப்பிள் மாடல்!”

    ”பாட்டி.. மரத்துல ஆப்பிள் எப்போ காய்ச்சினா என்ன?.. நம்ம கையிலே வரச்சே அது பளபளன்னு அழகா பழமா ருசியா இருந்தா போதும்.. ரொம்ப தேங்க்ஸ்.” சொல்லிவிட்டு அதை நோண்ட ஆரம்பித்துவிட்டான். பத்து வயசுப் பையன் சர்வ சாதாரணமாக ஒரு யதார்த்தத்தை அழகாகச் சொல்லியவன் எனக்கு கையைக் காட்டி வழி அனுப்பினான். ”கோயிலுக்கு போயிட்டு வந்தவுடன் திருப்பிக் கேட்கமாட்டே இல்லே?”

    ”இது உனக்கே உனக்குதான்”. நிதானமாக சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன். சாலையில் சென்ற ஆட்டோவைப் பிடித்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அங்கிருந்த ஜாகேஷ்வர் பக்திக் கும்பலோடு சேர்ந்துகொண்டேன். ஏற்கனவே ரயில் பயணம் மற்ற ஏற்பாடுகளுக்கெல்லாம் பணம் கட்டிவிட்டதால் நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள்.

    ஜாகேஷ்வர் வந்தவுடன் சூசகமாக என்னுடன் வந்த தெரிந்த இருவரிடம் நான் திரும்ப அவர்களுடன் வரப் போவதில்லை என்பதையும் அவர்கள் ஊர் திரும்பியதும் என் வீட்டாரிடம் சொல்லிவிடலாம் என்றும் சொன்னேன். அவர்கள் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார்கள். ஏதேனும் குடும்பப் பிரச்னையா என்று ஒருவர் மெல்லக் கேட்டார். ’அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஜாகேஷ்வரில் ஒரு சில மாதம் இருப்பேன். அதன் பிறகு எதுவும் சொல்வதற்கில்லை’ என்று மட்டும் சொன்னேன். ஆனால் அவர் அவசரக்குடுக்கை போலும். தன் கைபேசியின் மூலம் உடனடியாக என் வீட்டுக்குப் பேசிவிட்டார். அவர்களும் பதட்டப்பட்டார்கள் என்பது அவர் பேசிய முகபாவத்திலிருந்தே தெரிந்தது. ’உங்களிடம் ஒருமுறை பேசவேண்டும் நீங்கள் வீடு திரும்பவில்லை என்றதும் எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.. நீங்கள் ஜாகேஷ்வர் பயணத்தையே சொல்லவில்லையா’ என்று கேட்டார். கொஞ்சம் உங்கள் மகனிடம் பேசுங்கள்’ என்றார். நான் பேச மறுத்து விட்டேன். மேலும் யாரும் இங்கே என்னைத் தேடி வரத் தேவையில்லை என்றும் ஜாகேஷ்வரில் கூட நான் தங்கப்போவதில்லை என்பதையும் சொல்லிவிட்டேன். ஆச்சரியமாக அவருக்குப் பதில் செய்தி கிடைத்தது. அம்மாவின் மனது புரிகின்றது, அம்மாவின் நலம்தான் முக்கியம் என்றும் அம்மாவை சில நாட்களோ அல்லது ஒரு மாதமோ தங்கவைப்பதில் ஆட்சேபணை இல்லை என்றும் அம்மா திரும்பி வரும்போது ஒரு தகவல் மட்டும் சொன்னால் போதும், தாங்களே அங்கே வந்து அழைத்துச் செல்வதாகவும் சொல்லிவிட்டார்கள். அவர்கள் என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அம்மாவின் ஆன்மீக ஆசைக்குக் குறுக்கே நிற்கவும் மாட்டார்கள். அதே சமயம் என்னைப் பிரியவும் சம்மதிக்கமாட்டார்கள். ஆனால் இவர்கள், இந்தக் குழுவினர் இனி இதைப் பற்றிப் பேசமாட்டார்கள்.

    இங்கேதான் அமைதியான இந்த அழகிய பெண் வர்ஷினியைப் பார்த்தேன். இவளுடன் எப்படி பரிச்சயம் ஆரம்பம் என்பது நினைவில்லை என்ற அளவுக்கு பூர்வஜன்ம பழக்கம் போல எங்கள் பரிச்சயம் அமைந்தது. அங்கு இருந்தவரை என்னுடன் ஒட்டிக்கொண்டு என்னோடு ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள். ஏனைய நேரம் என்னைப் போலவே சாதனா செய்ய ஆரம்பித்துவிடுவாள். அதிசயமான பெண். ஒருவாரம் இருந்து அவர்களிடம் பிரிந்து எங்கே போவது என்று முழித்தது வாஸ்தவம்தான். ஆனால் சரியாக எல்லோரும் போன இரண்டாம் நாளே என் வழிகாட்டியை என் தேவி அனுப்பி வைத்துவிட்டாள். அவருக்கும் பரம சந்தோஷம். ‘பழம் ஒன்று பழுத்து தானே அதைப் பரமானந்தமாய் ருசிக்க வந்துவிட்டது’ என்றார். அன்று முதல் அவரோடும் அவர் இல்லாமலும் இந்த மலைப் பகுதியில் நானே என் தேடல் முடிந்த திருப்தியோடு இங்கு திரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இந்த நிம்மதிக்கு ஒரு அளவே இல்லை.

    ”என்ன வர்ஷினி.. போதுமா என் பூர்வ கதை.. இன்னும் என் கல்யாணத்திலிருந்து ஆரம்பிக்கட்டுமா?”

    அவள் தீர்க்காலோசனையில் ஆழ்ந்துவிட்டாள் போலும். திடீரென விழித்துக்கொண்டவள் கண்களில் கண்ணீர் வந்தது.

    நான் பதறிவிட்டேன். ”ஏனம்மா.. ஏன் அழுகிறாய்? என் கதை அழுகைக் கதையா என்ன.. ஜாலியாக கேட்க வேண்டிய கதை.. என்னால் யாருக்கும் கஷ்டமோ நஷ்டமோ இல்லை பார்த்தாயா.. இன்னொன்றும் தோணுகிறது. என் வீட்டவர்கள் ஏன் என்னைத் தேடி வரவில்லை என்றால் நீ சொன்ன கரோனாவும் காரணம் இருக்கலாம் இல்லையா. நான் எங்கோ ஜாலியாக இந்தப் பயமே இல்லாமல் இருப்பது நல்லது என்று அவர்கள் நினைத்திருக்க வாய்ப்புண்டு”.

    வர்ஷா கண்களைத் துடைத்துக்கொண்டே சொன்னாள். ‘மங்களா.. உங்க தேடல் இங்கே முடிஞ்சா மாதிரி என் தேடலும் இங்கேதான் முடியணும் நு எனக்கு ஆசி கொடுங்க..”

    ’அதுக்கு என்னம்மா.. என்னோட பரிபூரண ஆசி எப்போதும் உனக்கு இருக்கும். அதுக்கு எதுக்கும்மா அழுகை..?”

    அவள் சற்று நிதானித்தாள். நடை கொஞ்சம் தளர்ந்தது போல பட்டது. ”உன் தேடலுக்கு என் உதவி தேவைன்னா என்னால என்ன முடியுமோ அதைச் செய்யறேன் வர்ஷினி.. உன்னை நான் எப்பவுமே சிரிச்ச முகத்தோடதான் பார்க்கணும். உன் தேடல்னா அது என்ன வகையானது சொல்லேன்’

    அவள் என்னோடு கை கோர்த்துக் கொண்டாள். அந்தப் பிடிப்பில் ஏதோ ஆறுதல் தேடுவது போல எனக்குப் பட்டது. நிதானமாகப் பேசினாள்.

    ”நான் எனக்கு அம்மா இல்லேன்னு சொன்னேன் இல்லையா.. ஆனா அம்மா உயிரோட எங்கேயோ இருக்காங்க.. என் முகம் அவங்க பார்க்கலே.. அவங்க முகம் நான் பார்க்கலே.. எங்கப்பாவோட கொடுமை தாங்கமுடியாம நான் பிறந்தவுடனே அப்படியே கட்டில்ல என்னைத் தனியே விட்டுட்டு அவங்க போயிட்டாங்க.. நான் பெரிசா வளர்ந்து படிக்கறச்சேதான் எனக்கு விஷயம் எல்லாம் தெரிய வந்தது.”

    மறுபடியும் அவள் கண்களில் வழிய ஆரம்பித்துவிட்டது. துடைத்துக்கொண்டே பேசினாள்.. ”எங்கப்பா ரொம்பக் கொடியவர். அந்தக் காலத்துலேயே ஏரியா ரவுடியா பேர் வாங்கின அரசியல்வாதி.. எங்கம்மாவை பெண் கேட்டிருக்கார். அவங்கம்மா அப்பா பயந்துபோய் வேற யாருக்கோ பேசி கல்யாணம் வரைக்கும் வரச்சே கல்யாண மேடையிலே கத்தியால அந்த மாப்பிள்ளையை வெட்டிப் போட்டுட்டு எங்கம்மாவை இவர் தாலி கட்டியிருக்கார். அம்மாவோட வாழ்வே இவரோட ஒரு வருடம்தான்.. ரொம்ப கொடுமை பண்ணுவார்னு நான் நிறைய கேள்விப்பட்டுருக்கேன். என்னை வயத்துல சுமந்துகொண்டே குடிகாரரான இவர்  கொடுக்கற அடிகளையும் உதைகளையும் எப்படித்தான் அம்மா தாங்கினாளோ? ஐய்யோ.. நினைச்சுப் பார்த்துப் பார்த்து அழுவேன்.. அத்தோட மட்டுமா விட்டுருக்கார்? அது எலெக்‌ஷன் டைம். பரிதாப அலை தன் மேல அதிகம் விழணும்னு நான் பிறந்தவுடனே எங்கம்மாவை கொலை செய்ய பிளான் பண்ணிருக்கார். பொண்டாட்டி பிரசவத்துல போயிட்டாள்னா பரிதாபத்துல ஓட்டு வந்து விழுமாம். விஷம் கொடுக்கவேண்டிய அந்த நர்ஸம்மா மனசு வராம விஷயத்தை எங்கம்மாகிட்டே சொல்லி எங்கேயாச்சும் ஓடிப்போயிடுன்னு தப்பிக்க வெச்சுருக்காங்க. இவ்வளோ கொடுமையையும் எங்கம்மா எங்கப்பாகிட்ட அனுபவிச்சுருக்காங்கன்னா அவங்க தப்பிச்சது நல்லதுக்குதானே.. எங்கேயோ போயிட்டாங்க.. ஆனா எங்கன்னு எங்கம்மாவைத் தேடுவேன்.. தெரிந்த இடத்துல அவங்க உறவுக்காரங்ககிட்டே எல்லா இடத்துலயும் தேடியாச்சு. வேஸ்ட். எங்கப்பாகிட்டே அடிக்கடி கேட்பேன்.. அவர் கட்சிக்காரங்ககிட்டே சொல்றாமாதிரியே எங்கிட்டயும் சொல்வார். ‘உங்கம்மா வருவாம்மா.. எங்க போயிருப்பா.. நானும் எல்லா இடத்துலயும் ஆட்கள்கிட்ட சொல்லி வெச்சுருக்கேன்.. பார்ப்போம்” இப்படி சொல்லிச் சொல்லியே இந்த இருபத்து நாலு வருஷமா என்னை வளர்த்துண்டு வர்ரார். நடுவுல ஒருநாள் என்னை விட பத்து வயசு ஜாஸ்தியான பெண்ணைக் கூப்பிட்டுண்டு வந்தார். ’இவதான் உன் சித்தி’ அப்படின்னார். ஆனா அந்த சித்தி என் கூட இருந்து என்னை வளர்க்க விரும்பலே. அவளுக்குன்னு தனியா அவ ஊர்லயே பெரிய பங்களா கட்டிக்கொடுத்தார். இவர்தான் அடிக்கடி அங்க போயி தங்குவார். நடுவுல ஒரே ஒரு தடவை என்னையும் அழைச்சுண்டு போய்க் காண்பிச்சார். ஏதோ விருந்தாளி மாதிரி இருந்தாலும் என்னால அங்க தங்கமுடியலே. ‘அப்பா.. எங்கம்மா விஷயம் ஏதாவது முயற்சி பண்றீங்களான்னு கேட்டேன். முயற்சி பண்ணிண்டே இருக்கேன்மா.. அப்படின்னு வழக்கப்படி சொல்லிவிட்டு திரும்ப அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.”

    ’வர்ஷினி” என்று ஆதரவாக அணைத்துக்கொள்ளத்தான் முடிந்தது என்னால்.

    ”கொஞ்சம் மாசம் முன்னாடி எங்கப்பா எனக்கு இன்னொரு கொடுமையை செய்ய முன்வந்தார். அவர் கல்யாணம் பண்ணிண்ட பொண்ணுக்கு ஒரு தம்பி இருக்கானாம். அந்த தம்பிக்கு என்னைக் கல்யாணம் பண்ணப்போறாராம். சொத்தெல்லாம் ஒரே இடத்துல இருக்கும்னு அந்த பொண்ணு ஏதோ திட்டம் போட இவர் என்னைக் கேட்டுருக்கார். நான் முடியாதுப்பா’ன்னு சொன்னேன். ’சரிம்மா.. படிப்பு முதல்ல முடியட்டும், கல்யாணத்தை அப்புறம் வெச்சுப்போம்’னு சமாதானம் சொல்லி இருக்கார்,”.

    தேவி.. இது என்ன சோதனை.. எனக்கு இனிமையான வாழ்வைக் கொடுத்த நீ ஏன் இந்தக் குழந்தை வாழ்வை இப்படிச் செய்கிறாய். ஓ.. சினிமாக் கதை போல இருக்கு. ஆனா சினிமாக் கதை எல்லாம் ஹீரோ தான் ஜெயிப்பார். வில்லன் தோத்துப்போவான். இங்கே வில்லனுக்கு வெற்றி மேல் வெற்றி.. அவளிடம் ஆதுரமாகக் கேட்டேன், ”ஏன்மா.. உங்கம்மாவோட தம்பி தங்கைகள்னு யாருமே உனக்கு உதவலியா?”

    வெறுப்புடன் சிரித்தாள். ”அவர்களுக்கு என் மீது நல்ல அன்பு உண்டு. ஆனால் அப்பாவிடம் பயம். அவரை மீறிக்கொண்டு அவர்களால் ஏதும் செய்யமுடியவில்லை. மேலும் எங்கப்பாவோட பொஸிஷன் ஏற ஏற அவங்க ரொம்ப பயந்துட்டாங்க. அவர்களுக்கு அம்மா இருக்குமிடம் தெரியும் என்கிற சந்தேகம் எப்போதும் என்னிடம் உண்டு. ஆனால் அவள் திரும்பிவந்தால் இவர்களுக்கும் கஷ்டம் என்று நினைக்கிறார்களோ என்னவோ. அதனால் அம்மாவின் விஷயத்தில் அவர்கள் கூட கண்டுகொள்ளாமல் எதுவும் பேசுவதில்லை.  விட்டுவிட்டார்கள். இவர்களும் சப்போர்ட் செய்யமுடியாத நிலையில் எங்கே என் அம்மா போயிருப்பாள்? தற்கொலை செய்திருப்பாளோ என்று கூட நினைத்துக் கொள்வேன். பிறகுதான் எனக்கு அந்தச் செய்தி கிடைத்தது. ஒரு ஐந்து ஆண்டுகளாக ஜாகேஷ்வரம் பகுதியில்தான் எங்கோ இருக்கிறாள் என்ற நம்பத் தகுந்த செய்தியை என் பெரிய மாமா, என் அம்மாவுக்கு மூத்த அண்ணன், மிக ரகசியமாக ஆனால் இன்னொருவர் மூலமாகச் சொன்னார். அதனால்தான் ஐந்து ஆண்டுகளாகவே ஒரு முகம் தெரியாத அம்மாவைத் தேடி அடிக்கடி இங்கு வருகிறேன்!”,.

    ’ஆனால் மங்களா.. இப்போது தேவி என் விஷயத்தில் கருணை காட்டத் தொடங்கிவிட்டாள் என்றுதான் நினைக்கிறேன். படிப்பு முடிந்தவுடன் கல்யாணம் என்று சொன்னார் அல்லவா.. கரோனா வந்து உதவி செய்தது. இப்போதைக்குப் பரிட்சை இல்லை. இந்த கரோனா இன்னொரு உதவியும் செய்திருக்கிறது. இந்த உதவி மட்டும் முழுமையடைந்தால் எனக்கு இந்தக் கொடுமைகளிலிருந்து பூரண விடுதலை கிடைக்கும். என்ன பார்க்கிறீர்கள். கொரோனாவினால் உதவியா என்றா கேட்க வருகிறீர்களா மங்களா? ஆமாம். ஒரே வீட்டில் இருந்ததால் அப்பாவுக்கு, அவர் இரண்டாம் மனைவிக்கு அந்த மனைவியின் தம்பிக்கு, அவர்கள் வீட்டு சமையல்காரனுக்கு, டிரைவருக்கு என எல்லோருக்கும் கரோனா வந்து இப்போது அத்தனை பேரும் ஆஸ்பத்திரிவாசம். அங்கே என் அப்பா தப்பிப்பாரா என்பது சந்தேகம்தான் அந்த தம்பியும்தான்.. அப்படித்தான் சொல்லறாங்க. கோடி கோடியாக கள்ளத்தனமா சொத்து சேர்த்தவங்க இலவசமா ஆயிரத்தெட்டு நோய் கூட வாங்கி வைத்திருக்கிறார்கள். குடிகாரக் கும்பல்கள்..”

    சோகமா வந்ததா இல்லை சந்தோஷமாகச் சொன்னாளா என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த கரோனாவைப் பற்றிப் பேசும்போது நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற பேதம் இந்த தொத்து வியாதிக்குக் கிடையாது என்று முதலிலேயே சொன்னவள்தான்..

    ”’எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும் நம்மைப் பொறுத்தவரை அவர்களை மன்னிக்கவேண்டும் வர்ஷினி. உன்னை இத்தனை வருடம் வளர்த்திருக்கிறார் இல்லையா?’ அன்போடுதான் சொன்னேன்.

    ”இல்லை மங்களா! அவர் என்னை வளர்த்த காரணம் எல்லாம் பணம் சொத்து மேல் உள்ள பிடிப்புதான். என் பெயரில் உள்ள சொத்துகள் ஏராளம். எல்லாம் அவருடையதுதான். என் மேல் உள்ள அன்புக்கு அதுதான் காரணம். மகள் பாசம் எல்லாம் வெளிவேஷம். அவர் ஒரு கொடியவர் என்று நான் சொன்னதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டாம். கொண்ட பெண்டாட்டியைக் கொலை செய்யத் தயங்காதவர் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவும். இவர் அரசியல் கொடுமையைக் கேட்டு இன்னமும் ஜனங்கள் நடுங்குவார்கள்.  நான் அவரைப் பற்றியெல்லாம் சிந்தித்து என் மன அமைதியைக் கெடுத்துக் கொள்வதில்லை. ஏன் எப்போது அம்மா இவரிடம் அனுபவித்த கொடுமை விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரிய வந்ததோ அன்றிலிருந்தே அவர் எனக்கு உறவில்லாதவர், யாரோ வேறு ஒரு கொடியவர்.. அவர் வெறுக்கத்தக்கவர் என்ற முடிவுக்கு நான் வந்தாயிற்று. அவர் உயிரோடு வந்தாலும், வராவிட்டாலும் எனக்கு அந்த குடும்பத்தைப் பற்றியோ அவரைப் பற்றியோ எவ்விதக் கவலையுமில்லை. அவரால் எனக்கு எந்தவித கஷ்டமும் தரமுடியாது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நான் தேவியை வேண்டிக்கொள்கிறேன். அவள் உதவுவாள். அம்மா விஷயத்திலும் என்றாவது ஒருநாள் உதவாமலா போய்விடுவாள்?”.

    ”வர்ஷினி! என் அனுபவக் கதைக்கு முற்றிலும் மாறுபட்ட மிகக் கொடிய வாழ்வை இந்த சின்ன வயதில் அனுபவித்திருக்கிறாய். எனக்கு இந்த ஆறு மாத காலத்தில் நிறைய சாதுக்கள் பரிச்சயம் ஆனார்கள். பல சாதுக்கள் எதிர்காலத்தையும் போன பிறவிகளையும் அறிந்த பெரியவர்கள். ஆனால் நாம் கேட்காமல் அவர்களே சொல்லவேண்டும். கேட்டால் அதைப் பற்றிப் பேசமாட்டார்கள். விசித்திரமானவர்கள். ஒருமாதம் முன்பு ஒரு சாது என்னைப் பார்த்து தான் எங்கேயோ பார்த்தவளாய் தெரிகிறாய்’ என்றார். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அவரை இதுவரைப் பார்த்ததில்லை என்று அழுத்திச் சொன்னேன். அதற்கு அவர் ‘அதற்கென்னம்மா.. இந்த ஜென்மத்தில் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் போன ஜென்மத்தில் பார்த்திருக்கிறாய்.. ஜென்ம ஜென்மப் பலன் மட்டுமே உன்னை இங்கே இழுக்கும்” என்றார். நான் கொஞ்சம் அதிசயப்பட்டேன். ஆனால் அதுதான் உண்மை என்பதையும் உணர்ந்தேன். தேவியின் மகிமையே வேறு. அவள் உனக்கு நிச்சயம் அருள்புரிவாள். என்னை நம்பு.. இன்றோடு உன் கஷ்டமெல்லாம் விலகட்டும்.’ என்று அவள் தலையில் கை வைத்துச் சொன்னேன். ஏனோ அப்படிச் சொல்லத் தோன்றியது.

    மலை இறக்கத்தில் கிழக்குப் பக்கமாக கீழே இறங்கமுற்பட்டோம். வர்ஷினி என் வார்த்தையில் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கவேண்டும். தான் ஒவ்வொருமுறை எப்படி அப்பாவை ஏமாற்றி ஜாகேஷ்வரம் ஓடி வருவதையெல்லாம் சிரித்துக் கொண்டே சொன்னாள். இவள் பெயரில் ஏராளமாக கள்ளப்பணங்கள் சேர்த்துப் போட்டிருப்பதையும் அவர் ஆடிட்டர் மூலம் தனக்கு ஒரு வங்கி அட்டை இருப்பதையும் சொன்னாள். ஆனால் தான் தேவைப்பட்டாலொழிய அந்த அட்டையை பயன்படுத்துவதில்லை என்றும் சொன்னாள்.

    ”வெளிநாடு சென்று படிக்க விருப்பம். அதற்கு வேண்டுமானால் இனி அதைச் செலவு செய்யலாம் என்றிருக்கிறேன். இந்தமுறை ஏதோ பிடிவாதம்.. என் தேடலுக்கு ஒரு முடிவு தெரியாமல் திரும்பக்கூடாது என்று எனக்குள் சொல்லிக்கொண்டுதான் புறப்பட்டேன். இல்லாவிட்டால் இங்கேயே மலைமேலாக ஏறிக்கொண்டே இருக்கவேண்டும். கீழே இறங்காமல் தேவியை எங்கேயோ மேலே உயரத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஏணிப்படியில் ஏறுவது போல அவளை நினைத்துக்கொண்டே ஏறிக்கொண்டே இருக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் முதலில் அம்மா கிடைக்கவேண்டும். அதன் பிறகுதான் இந்த எதிர்கால திட்டங்கள் எல்லாம்.”

    ”அதுவரை பணத்துக்கு என்ன செய்வாய்?

    ‘நீங்கள் என்ன செய்வீர்களோ அதையேதான் நானும் செய்வேன் மங்களா.. எனக்குத் தெரியும் இங்கே பணத்துக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை என்பது.. என்னிடம் பாருங்கள்.. ஒரு பைசா இல்லை.. நகை இல்லை.. மொபைல் இல்லை.  எல்லாமே உங்களைப் போலத்தான். கிடைத்தால் சாப்பிடுவது.. இல்லையேல் பட்டினி கிடப்பது.. ஆனாலும் இங்கே என் வாழ்க்கை இனிமையாகத்தானே போகிறது.. நீங்கள் அருள் புரியுங்கள் ஆசீர்வாதம் செய்யுங்கள்.. ஒன்று அம்மா கிடைக்கவேண்டும், இல்லையேல் பரிபூர்ணமாக என் மனது இங்கேயே குடியேற விரும்பவேண்டும் என்று ஆசி கூறுங்கள்.’ என்று சட்டென குனிந்து என் காலைத் தொட்டாள்.

    நான் ஏதும் சொல்லாமல் மனதில் தேவியை நினைத்துக்கொண்டு அவளைத் தொட்டு ஆசிர்வதித்தேன்.. எனக்கென்ன தெரியும்? என் குருநாதருக்குத் தெரியும்.. அவரிடமே கேட்கலாமோ.. வேண்டாம் நான் அவரிடம் என்னைப் பற்றி ஏதும் கேட்காமலே அல்லவா அழைத்துக் கொண்டார்?

    மாலை மங்கும் சமயத்தில்தான் அந்த கிராமத்துள் நுழைந்தோம்.. இருட்ட ஆரம்பித்துவிட்டது.. மலையின் கிழக்குப் பக்கங்கள் சீக்கிரம் இருட்டிவிடும். மலையின் மேற்குப் பகுதியில் இந்நேரம் பளிச்சென்று இருக்கும். இயற்கையின் அழகை ரசிக்கவேண்டும். எங்கள் இருவரைக் கண்டதும் யாரோ ஒரு ஆதிவாசி சிரித்துக்கொண்டே நாங்கள் போகவேண்டிய இடத்தைச் சுட்டிக் காட்டினார். அவருக்கு எப்படித் தெரியும் நாங்கள் வருவது என்பது போல வர்ஷினி என்னைப் பார்த்தாள். இங்கு எதுவுமே அதிசயமில்லை என்பதாக நான் அவளைப் பார்த்தேன்.

    தூரத்தில் சங்கு ஊதும் சப்தம் கேட்து. இரண்டு நிமிஷம் மேலாக அந்த சங்கு ஊதிக்கொண்டே இருந்ததைக் கேட்டோம். அந்த சங்கூதல் வர்ஷினியை சமாதானப்படுத்தியதோ என்னவோ.. மிகவும் சந்தோஷப்பட்டாள்.

    ’மங்களா.. அந்த சங்கூதலைக் கேட்டீங்களா.. சாதாரணமா ஒரு நிமிஷம் தொடர்ச்சியா ஊதினாலே மூச்சிரைக்கும். நானும் முயற்சி பண்ணியிருக்கேன். ஒரு நிமிஷம் மேலே முடியலே.. யாரோ சாது இன்னும் ஊதிண்டே இருக்கார் பார்த்தீங்களா.. நல்ல சாதனா போல…. தினம் நான் ரெண்டு மணி நேரம் பண்றேன்.. இன்னும் நிறைய நேரம் பண்ணினா நானும் ஒருநாள் ரெண்டு மூணு நிமிஷத்துக்கு இந்த சங்கை ஊதுவேன்..”

    ”ஆமாம்மா! என் குருநாதர்தான் சங்கு ஊதுவார். நீ சொல்லறது சரி.. நான் இதுவரை அதெல்லாம் பண்ணியதில்லே. ஆனா சாதனா மாத்திரம் தினம் முடிஞ்ச அளவுக்குப் பண்ணனும்… இன்னிக்கு அந்த கிராமத்துல என்னோடு தங்குவே இல்லையா, நானும் நீயும் சேர்ந்து பண்ணலாம்”.

    நான் வர்ஷினியைப் பக்கத்தில் வைத்து அணைத்துக்கொண்டேன். சங்கு ஊதல் நின்றது. இன்னும் நடந்து கொஞ்ச தூரம் சென்றதும் அங்கே சிலர் கூடி உட்கார்ந்து நெருப்பு வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். தூரத்திலேயே நின்றோம். குருநாதர் கூப்பிடுவார்.. அப்போது போகலாம் என்று வர்ஷினியிடம் சொன்னேன்.

    வர்ஷினியின் கூரிய கண்களுக்கு அங்கே மூன்று சாதுக்கள் தென்பட்டதைத் தெரிவித்தாள். அதில் ஒருவர் பெண் சாது,  மற்ற இருவரும் ஆண் சாதுக்கள்’ என்றாள்.. ஆண் என்றும் பெண் என்றும் ஆன்மீகத்தில் அதுவும் இங்குள்ள சாதுக்களில் வேற்றுமை ஏது என்று பதிலுக்கு நான் சொன்னேன். என் காதில் வந்து மெல்ல வர்ஷினி ஓதினாள்.

    “அந்த இருவரில் யார் உங்கள் குருநாதர்?”

    நானும் மெல்லச் சொன்னேன். ’அவர்கள் இருவருமில்லை. மாதாஜிதான் என் குருநாதர், எனக்கு மட்டுமல்ல, மற்ற இருவருக்கும் கூட குரு”

    ”ஓ.. அப்போ சங்கு ஊதியது மாதாஜியா.. அவங்ககிட்ட இந்தப் பயிற்சியைக் கத்துக்கணுமே..” .

    இருளும் வெளிச்சமும் போட்டி போட்டுக்கொண்டு ஒன்றை ஒன்று வெல்லும் அந்தத் தருணத்தில் இருளே வென்றாலும் மெதுவாக ஏற்றப்பட்ட நெருப்பு கொஞ்சம் வளர்ந்து எங்கள் நால்வரையும் மங்கலாகத்தான் முகம் பார்க்க வைத்தது. மாதாஜி எங்களை அருகில் அழைத்தார். முதலில் சென்றவள் மாதாஜிக்கும் மற்ற இருவருக்கும் நமஸ்காரம் செய்தேன். வர்ஷினியும் அந்த மூவரையும் என்னையும் சேர்த்து வணங்கிவிட்டு எழுந்தாள்.

    நான் அவர்களிடம் வர்ஷினியை அறிமுகம் செய்தேன். அன்னையைத் தேடிய அபலை இவளுக்கு அந்த மூவரின் ஆசிகளையும் அள்ளித் தரவேண்டுமென பணிவாக மெதுவான குரலில் கேட்டுக்கொண்டேன். சாதுக்கள் ஏதும் பேசவில்லை. அவளையும் சேர்ந்து அவர்களுடன் உட்காரச்சொன்னார்கள்.

    மாதாஜி சற்றே முறுவலித்தது எனக்குத் தெரிந்தது. அவர் வர்ஷினியைத் தன் பக்கத்தில் அழைத்துக்கொண்டார். வர்ஷினி ஆவலுடன் அவரிடம் ஒட்டிக்கொண்டாள். எனக்கு எப்படியாவது மாதாஜி வர்ஷினியின் மனவருத்தத்தைப், போக்க வழி செய்யவேண்டும் என்று மனதுள் என் தேவியை வேண்டிக்கொண்டேன். நான் தேடாமலே என்னைத் தேடி வந்து என் குருவாக அமைந்து என்னை ஆட்கொண்டவர்.. என்னையே நான் யார் என எனக்கு அறிமுகம் செய்தவர்.. என் தேடலுக்கும் முடிவு கட்டியவர் ஆயிற்றே.. இந்தச் சின்னப் பெண்ணின் தேடலுக்கும் ஒரு தீர்வு சொல்லவேண்டும். இதையெல்லாம் என் மனதுக்குள்தான் வேண்டிக்கொண்டேன். என் மனதில் இருப்பவர் இல்லையா.. அவருக்குத் தெரியும்..

    மாதாஜியின் கண்கள் அந்தப் பெண்ணிடமே நிலைகொண்டன. என்னை எப்படி முதல்முறை பார்த்தாரோ அதே காந்தப் பார்வை இப்போதும் அவரிடம் இருந்தது.

    என்னவோ தெரியவில்லை. நான் பிறந்தது முதல் எந்தக் கஷ்டமும் படாமல் வளர்ந்து எவ்வித பெரிய துன்பமும் இல்லாமல் திருமண வாழ்க்கையில் புகுந்து அதே போல எவ்வித துன்பமும் இல்லாமல் இதோ இங்கே வந்தாயிற்று. ஒருவேளை விதி தடம் மாறி  இந்த வர்ஷினி போன்ற நிலையில் நான் இருந்தாலும் சரி, அல்லது அவள் தாய் இருந்த நிலையில் நான் தள்ளப்பட்டிருந்தாலும் சரி, நான் எப்போதோ தற்கொலை செய்து உயிர் விட்டிருப்பேன் என்பது மட்டும் நிச்சயம் என மனதில் பட்டது. வர்ஷினியும் சரி, வர்ஷினியின் தாயும் சரி… எத்தனை உறுதி படைத்தவர்கள்.. தனக்கு தேவி அப்பேர்ப்பட்ட தண்டனையை வழங்கவில்லை.. ஆனால் இனியும் வர்ஷினிக்கு எந்தக் குறையும் வரவிடக்கூடாது. அதற்கு மாதாஜியின் அருள் அவளுக்குப் பரிபூரணமாக அமையவேண்டும்.

    என்ன இது, நாற்பது வருடங்களுக்கு மேல் தாம்பத்யத்தோடு வாழ்ந்த கணவர் மீதோ, பெற்றெடுத்த பிள்ளைகள் மீதோ வராத பரிவு இந்தப் பெண்ணிடம் தனக்கு ஏன் வரவேண்டும்?.. பற்று என்பதை மிகச் சுலபமாக தேவியின் அருளோடு அறுத்தெறிந்துவிட்டுத்தானே இங்கு வந்தேன். ஆனால் இந்தப் பெண்ணின் மேல் ஏன் பிடிப்பு அதிகமாகவேண்டும்.. இல்லை..இல்லை.. இவள் அனுபவித்த வேதனைகள் பரிதாபமாக மாறுகின்றன.. அது பந்தமாக மாற வழியில்லை என்று என் மனதுள் கூறிக்கொண்டேன்.

    மாதாஜி அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டே என்னைப் பார்த்துப் பேசினார். ”இன்னும் சற்று நேரத்தில் பிரசாதம் வந்துவிடும். உண்டு விட்டு உன் சாதனாவை நீ ஆரம்பித்து விடு மங்களா.. உனக்கு தனியாக ஒரு குடிசை கொடுக்கச் சொல்கிறேன். இந்தப் பெண் இந்த இரவு என்னோடு இருக்கட்டும். என் வழக்கமான தியானம் முடிந்தவுடன் நான் என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்.. நீ கவலையே படாதே..!”

    ஆஹா,, குருநாதருக்குத் தெரியாதா என் மனத்தின் நினைவுகள். என் மனதுள் என்றும் இருந்து ஆட்டுவிக்கும் சக்தி மாதாஜி அல்லவா.. அவர் பாதம் தொட்டு வணங்கி நான் எழுந்து கொண்டேன். மற்ற இரு சீடர்களுக்கும் மாதாஜி விடை கொடுத்தார்,

    அடுத்த நாள் காலை எழுந்ததும் என் சாதனா முடிந்தநிலையில் மாதாஜியைக் காண அவர் குடிசைக்குள் நுழைந்தேன். அங்கு ஆச்சரியமான ஒரு நிலை. மாதாஜியின் மடியில் தலை வைத்து வர்ஷினி நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள்.

    மாதாஜி உறங்கவில்லை போல. ஆனால் இது அவருக்கு சகஜநிலைதான். மாதாஜியால் நாட்க்கணக்கில் கூட உறங்காமல் இருப்பதை நானே பார்த்திருக்கிறேன். தேவியின் சாட்சாத் மனித உருவம் அவர். இரவு முழுதும் தூங்கவில்லையென்றாலும் அவர் முகம் மிகப் பிரகாசமாக அந்தக் காலை வேளையில் இருந்ததால் ஒரு பரவசத்தோடு அவர் முன் நமஸ்கரித்தேன். அவர் என்னைத் தன் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டார். மிக மெல்லமாகப் பேசினார்.

    ”வர்ஷினியை, அவள் எழுந்ததும் நீ ஜாகேஷ்வர் வரை அழைத்துச் சென்று விட்டு வா. செல்லும் வழியில் அவளோடு பேசு. இனி இவள் உன் சிஷ்யை என்று ஏற்றுக்கொள். அவள் உள்ளத்தில் இனி நீ எப்போதும் இருந்து அவளைக் கரையேற்ற நான் தேவியை வேண்டிக்கொள்கிறேன்”

    சந்தோஷமாகக் கேட்டேன்.  ”ஓ.. இனி வர்ஷினி இங்கேயே எங்காவது இருக்க வேண்டுமா.. அவள் அதைத்தான் என்னிடம் நேற்று கேட்டாள்.” மெதுவான குரலில்தான் கேட்டேன்.

    ‘இல்லை மங்களா! இவளுக்கு அந்தக் காலம் இன்னும் வரவில்லை. ஆனால் உனக்கு ஒரே ஒரு ரகசியம் சொல்கிறேன். இவளிடம் கூட சொல்லாதே.. இனி இவள் வாழ்க்கையில் கவலை என்பதே இருக்காது. உனக்கு எப்படி எல்லாம் சீராக உன் வாழ்க்கை இதுவரை சென்றதோ அதே நிலை இவளுக்கும் தொடரும். இவளும் வருவாள். இப்போதல்ல.. உன்னைப்போலவே தன் கடமைகளை முடித்துவிட்டு வருவாள். ஆனால் அடிக்கடி உன்னைப் பார்க்க ஜாகேஷ்வர் வருவாள். தவறாமல் பார்த்து இவளுக்கு சந்தோஷத்தைக் கொடு. போகும் வரை போகட்டும்.. அடுத்து நடப்பது அனைத்தும் தேவியின் கையில் இருக்கும்போது நமக்கேன் கவலை. நாமெல்லாருமே அவள் குழந்தைகள். நம் எல்லோருக்குமே அவள்தான் தாய்.”

    நான் கையெடுத்துக் கும்பிட்டேன். மாதாஜியின் கை தன் மடி மீது தலைவைத்து நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்த வர்ஷினியின் முடிக்கற்றைகளை வருடியது.

    ’ஜீ! இவள் உங்கள் மடி மீது..” தயக்கமாய்தான் குருநாதரிடம் கேட்டேன். அவர் சிரித்தார்.

    ”இரவு முழுதும் பேசிக்கொண்டிருந்தோமா.. அவள் இனி என்ன செய்ய வேண்டும் என்று விவரமாக சொல்லி இருக்கிறேன். அழுதழுது ஓய்ந்திருந்தாள். அவளுக்கு சற்று நேரம் முன்புதான் உறக்கம் வந்தது போலும். என்னைக்  கேட்டாள். ’அம்மா ஒருமுறை உன் மடியில் தலைவைத்துப் படுக்கும் உரிமையைக் கொடு’ என்றாள். இதைக் கூட ஒரு பெற்ற தாய் செய்யாவிட்டால் எப்படி?.. வாம்மா.. வந்து படுத்துக் கொள்!’ என்றேன்.. ஆனந்தமாகப் படுத்தாள். உடனே உறங்கி விட்டாள். பார் அவள் கை என் கையை எப்படி இறுகப் பற்றியிருக்கிறது..”

    என் ஆச்சரியம் எல்லை கடந்தது.

    ”மாதாஜி! அப்படியானால் அந்த உத்தமத் தாய் நீங்களா? தேவி.. தாயே. உன் மகிமையை என்ன சொல்வது?”.

    மாதாஜியின் மலர்ச்சியான முகம் மேலும் ஒளி வீச வாயில் ஒரே ஒரு சிறு புன்னகை மட்டும் எனக்கு பதிலாய் வந்தது..

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 8

    பரிமேலழகர் உரைத் திறன் – 8

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    “மோப்பக்  குழையும்  அனிச்சமும்  நோக்கக் குழையும்  விருந்தும்”

    முன்னுரை

    திருக்குறளில் ‘ஒன்று மற்றொன்றை விடச் சிறந்தது, ஒன்று மற்றொன்றைவிடத் தாழ்ந்தது’ என்பன போன்ற பதிவுகள் வரும். ஆனால் அவை எப்படிச் சிறந்தது? எப்படித் தாழ்ந்தது? என்பதற்கான காரணத்தைத் திருவள்ளுவர் கூறமாட்டார். அவற்றிற்கான காரணங்களைக் கண்டறிவது கற்பார் கடன். அல்லது உரையாசிரியர் பணி. இது ஓர் உரை நெறி. இந்நெறியில் பரிமேலழகர்  உரை தனித்தன்மை பெற்றது. “பெண்ணின் பெருந்தக்க யாவுள?” என்னும் திருவள்ளுவரின் வினாவிற்கு விடையிறுத்த பரிமேலழகர், “கற்புடையாள்போல் அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் யாவுள?” (54) என்றார் என எழுதுவதையும், “செல்லா இடத்து சினம் பயப்பது இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே! ஏனையது இம்மைக்கண் பழியும் மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீய பிற இல்லை என்றார்” (3020) என எழுதுவதும் காண்க. இந்த வகையில் எதிர்பாராச் சூழலில் இல்லத்திற்கு வரும் விருந்தின் இயல்பு  அனிச்சப்பூவினும் மென்மையானது என்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து கூறும் பரிமேலழகரின் உரைத்திறன் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.

    திறனறியப்படும் குறளும் உரையும்

    திருக்குறள் அறத்துப்பாலில் ஒன்பதாவது அதிகாரத்தின் பத்தாவது இறுதிப் பாடலாக அமைந்தது,

    “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து” (90)

    என்னும் குறட்பாவாகும். இதற்கு,

    • அனிச்சம் மோப்பக் குழையும் — அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது
    • விருந்து முகந்திரிந்து நோக்கக் குழையும் – விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர் எனப் பரிமேலழகர் பொழிப்புரை எழுதியிருக்கிறார்.

    பொழிப்புரையின் நுட்பம் காண்பதற்கு முன்பாக இவ்வதிகாரத்தின் பொருட் பாகுபாடுகளை அறிந்து கொள்வது இந்தக் குறட்பாவின் மையக்கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிந்த நெறி புலப்பட உதவக் கூடும்.

    அதிகாரக் கருத்துப் பகுப்பு

    ஒவ்வொரு அதிகாரத்து உட்பொருளையும் பாகுபடுத்திக் கொள்ள பரிமேலழகர் பெரிதும் முயன்றிருக்கிறார். இந்தப் பகுப்புத்தான் திருக்குறளுக்கான புத்துரைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்குகின்ற உரைத்தளவாடங்கள் ஆகும். பரிமேலழகர் வகுத்துக் காட்டும் பகுப்புமுறையைப் புறந்தள்ளித் திருக்குறளுக்கு உரைசொல்லப் புகுந்தால் ஒவ்வொரு அதிகாரத்திலும் அதிகாரத் தலைப்புக்குப் பொருத்தமில்லாத குறட்பாக்கள் இருப்பதைக் காட்டிவிட இயலும். ‘கடவுள் வாழ்த்து’ என்ற அதிகாரத் தலைப்பிற்கும் “இறைவனடி சேராதார் பிறவிக்கடலை நீந்தார்” என்பதற்கும் என்ன தொடர்பு? ‘ஒழுக்கமுடைமை’ என்ற அதிகாரத் தலைப்பிற்கும் “மறப்பினும் ஓத்துக் கொளலாகும், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் என்பதற்கும்” என்ன தொடர்பு?” என்று ஆயிரம் வினாக்களைத் தொடுத்துவிட முடியும். “ஒரு தலைப்பின் கீழ் அதுபற்றிய பன்முகப் பரிமாணங்களைத் திருவள்ளுவர் ஆராய்ந்திருக்கிறார்” என்பதுதான் பரிமேலழகரின் உரைப்பணியின் தொடக்க நிலையாகும்.

    1. விருந்தோம்பலின் சிறப்பு (1-2)
    2. விருந்தோம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் (3-5)
    3. விருந்தோம்புவார் மறுமைக்கண் எய்தும் பயன் (6)
    4. இருமைப் பயனுக்கான காரணம் (7)
    5. விருந்தோம்பாவழிப் படும் குற்றம் (8-9)
    6. விருந்தோம்புவார்க்கு வேண்டிய இன்முகம் (10)

    எனப் பகுத்துக் காட்டி, விருந்தோம்பலின் பன்முகப் பரிமாணத்தை எடுத்து விளக்கியதால்தான், ‘இத்தகைய சிறப்புக்கள் உடைய விருந்தினை ஓம்புவார்க்கு இருக்க வேண்டிய எளிய ஆனால் தலையாய இயல்பு இன்முகமே’ என்பதை அவரால் இறுதிக் குறட்பாவிற்கான விளக்கமாக்க முடிந்தது.

    பொழிப்புரை நுட்பம்

    • ‘அனிச்சம் குழையும்’ என உடன்பாட்டில் குறளிருக்க ‘மோந்துழியன்றிக் குழையாது’ என எதிர்மறை வாய்பாட்டில் உரை காண்கிறார். அதிகாரம் விருந்தோம்பல். விருந்தினர் மனம் குழைவதே பரிமேலழகரின் கருத்தில் நின்றதாதலின் உடன்பாட்டு உவமத்தை எதிர்மறை வாய்பாட்டிலும் பொருளை உடன்பாட்டிலும் வெளிப்படுத்துகிறார். ‘(காண்டல் தொடுதல் அன்றி,) மோந்தால்தான் அனிச்சம் குழையும்., திரிபு நோக்கினாலேயே விருந்து குழையும்’ என்பது கருத்து.
    • ‘திரிதல்’ என்பது இலக்கணத்துள் மூவகை விகாரங்களுள் ஒன்று. இயல்புதான் திரியும். விருந்தோம்புதற்குரியார், விருந்து வருவது கண்டு மகிழ்வதற்கு மாறாக தமது இசைவின்மையை (விருப்பமின்மையை), முகத்தால் மாறுபட நோக்கின், வந்தவர் மனம் குழைந்துவிடுமாம். நுட்பம் என்னவென்றால் இயல்பாக இருப்பதைச் செயற்கையாக மாற்றிக்கொள்வதைக் ‘கண்டுழி’ “முகம் வேறுபட்டு நோக்குதல்” என்னும் சொல்லாட்சிகளால் பரிமேலழகர் உணரவைப்பதுதான்.

    விளக்கவுரை

    ‘அனிச்சம்’ ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் எனப்து கூறப்பட்டது.

    விளக்கவுரையில் கண்ட உரை நுட்பம்

    • திருக்குறளில் ‘அனிச்சம்’, ‘குவளை’ ஆகிய இரண்டு பூக்கள், முறையே மென்மைக்கும் கண்ணுக்கும் ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளன. ‘வாழி அனிச்சமே’ (1111) (மென்மையால்), ‘அனிச்சப்பூ’ கால்களையாள்’ (1115) (மென்மை கருதாது) ‘அனிச்சமும்’ (1120) (மென்மைக்காக எடுக்கப்பட்ட) என்னும் இடங்களிலெல்லாம் ‘அனிச்சம்’ என்னும் சொல் தலைமகன் தலைமகள் நலத்தைப் புகழ்வது ஆதலின் பூவை நேரடியாகக் குறித்தது. இக்குறட்பா ஆசிரியர் கூற்றாக அமைந்ததாதலின் ‘அனிச்சம்’ என்னும் மரத்தின் பெயர் மலருக்கு ஆகுபெயர் ஆயிற்று. அதாவது தலைவன் மரத்தைப் பற்றிப் பேசாது மலரைப் பற்றித்தான் பேசுவான் என்பது குறிப்பு. பாட்டில் ‘குழையும்’ என்ற வினையால் ‘அனிச்சம்’ ஆகுபெயராயிற்று, குழைவது மரத்திற்கின்மையின். தலைமகன் கூற்றில் அனிச்சம் ஆகுபெயராகாததற்கு அவன் கருத்தில் அனிச்சப் பூ மட்டுமே நின்றதனான் என்க.
    • மேம்போக்காக இந்தப் பாடலைக் கண்ணுறுவார் இதனை எடுத்துக்காட்டுவமமாகவே கொள்ளக் கூடும். மோந்தால் அனிச்சம் குழையும் (மாறுபட்ட) நோக்கினால் விருந்து குழையும்’ என்னும் பாட்டின் கிடக்கை நிலையும் அவ்வாறு கொள்ளுமாறு அமைந்திருப்பதும் உண்மை. ஆனால் பரிமேலழகரின் சிந்தனையாற்றலால் பாட்டில் வெளிப்படும் நுண்ணியம் இறுதியில் விளக்கப்படும்.
    • மென்மைக்கு எடுத்துக்காட்டு அனிச்சப்பூ. ‘பூ’ என்னும் சொல்லுக்கே ‘மென்மை’ என்பது பொருள். ‘பூந்தென்றல்’, ‘பூங்கோதை’, ‘பூங்கதவு’ என்பன காண்க. அனிச்சம் பூக்களில் மென்மையானது. அதனினும் விருந்தினர்கள் மென்மையானவர்கள் என்றுதான் வள்ளுவர் சொல்ல வருகிறார் என்பது பரிமேலழகர் அனுமானம். பாட்டில் அதற்கான காரணம் வெளிப்பட இல்லை. அக்காரணத்தை ‘மோப்ப’, ‘நோக்க’ என்னும் இரு சொற்களைக் கொண்டு கண்டறிய முற்படுகிறார். முற்பட்டு ‘மோத்தல்’ என்பது ‘காண்டல், தொடுதல், மோத்தல் என்னும் நிரலில் மூன்றாவதாகவும் ‘நோக்குதல்’ என்பது அவற்றின் தொடக்க வினையாகவும் அமைந்திருப்பதை அறிகிறார். கண்ணால் காணுகிறபொழுது அனிச்சம் வாடாது. விரல்களினால் தீண்டுகிறபோதும் வாடாது. மூக்கினால் மோந்தால்தான் அது வாடும். தொலைவில் வரும் விருந்தினர்களைக் காண்பது ஒரு வினை. அவர்களை இன்சொல்லால் வரவேற்பது அடுத்த வினை. அவர்களை அறுசுவை உண்டியளித்து ஓம்புதல் அவற்றின் தொடர்வினை. ஓம்புபவர் தொலைவில் வரும் விருந்தினர்களைத் தம் பார்வையால் மாறுபட்டு நோக்கினாலேயே மனம் வாடுவர். எனவே மூன்றாம் நிலையில் வாடும் அனிச்சப் பூவினும் முதல் நிலையிலேயே வாடிவிடும் விருந்தினர் மென்மையானவர் என்னும் உண்மையைப் பதிவு செய்கிறார் பரிமேலழகர். இதனைச் “சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்முகமும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின் தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம்” என்னும் பகுதி உணர்த்துவது காண்க.
    • அதிகார உள்ளடக்கக் கருத்துப் பகுப்பில் பெரிதும் நம்பிக்கை கொண்ட பரிமேலழகர் விருந்தோம்புவார்க்கு முதற்கண் வேண்டுவது இன்முகம் என்பதை வலியுறுத்தவே இக்குறள் இறுதியாக வைக்கப்பட்டுள்ளது எனக் கருதுகிறார். கருதி, “இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது” எனக் குறட்பாவின் மையக்கருத்தினைப் புலப்படுத்துகிறார்.

    விருந்து பற்றிய விளக்கம்

    இல்லறத்தான் ஓம்புகின்ற அறங்களுள் விருந்து சிறந்தது. ‘விருந்து’ என்னும் சொல் விருந்தினரைக் குறித்தாலும் இவ்வறம் பற்றிய அனைத்துச் சிந்தனைகளும் ஓம்புவாரையே களமாகக் கொண்டுள்ளன என்பதைக் கருத்திற் கொள்ளல் வேண்டும். அதாவது விருந்தோம்பலில் ஓம்புகிறவனே தலைமகன், அறம் செய்வானும் அதற்கான அனைத்துப் பயன்களையும் அனுபவிப்பவன் அவனேயாதலின். தேனும் மீனும் கொடுத்து ஓம்பிய குகனைப் (தெய்வத்தை ஓம்பிய அடியவன்) பற்றியே இராமாயணம் பேசுகிறது. குசேலனை ஓம்பிய கண்ணனைப் (மானுட நண்பனை ஓம்பிய இறைவன்) பற்றியே குசேலோபாக்கியானம் பேசுகிறது. சிவனடியாரை மழையிரவில் ஓம்பிய இளையான்குடி மாறனாரையே (சிவனை ஓம்பிய சிவனடியார்) பெரியபுராணம் பேசுகிறது. விருந்தோம்பலில் ஓம்புகிறவன் (அறம்) செய்பவனாகவும் விருந்து செயப்படுபொருளாகவும் அமைந்துவிடுவதே இதற்குக் காரணம்.  விருந்தோம்பலாகிய அறத்தில் பயன் செய்பவனுக்கே என்பது குறிப்பு. ஓம்புகிறவன் உயர்ந்தவன் என்பது தத்துவம். இந்தப் பின்புலத்தில் பரிமேலழகர் உரையருமையை நோக்கினால் அதன் நுட்பம் புரியக்கூடும்.

    பரிமேலழகரின் உரையருமை

    • ‘விருந்தோம்பல்’ என்னும் பொருண்மை திருக்குறளின் ஒன்பதாவது அதிகாரத்தில் ஆராயப்படினும் ஐந்தாவது அதிகாரத்தின் 43 ஆவது குறட்பாவிலிருந்தே இது பற்றிய சிந்தனையைப் பரிமேலழகர் தொடங்கிவிடுகிறார். இதனை “இருவகை விருந்தினரையும் புறந்தருதல். தென்புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் (தென்புலத்தார், தெய்வம்) கட்புலனாகாதன நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் (ஒக்கல், தான்) பிறர்க்கு ஈதல் அன்மையானும் இடைநின்ற விருந்தோம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்களுக்கு முதலாயிற்று.” என்னும் அதிகாரப் பொருண்மை விளக்கத்தினால் உணர முடியும்.
    • ‘அறிந்து வருவது’, ‘அறியாது வருவது’ என்னும் இருவகையில் எவ்வகையாயினும் எதிர்பாராமல் வருவதே ‘விருந்து’ எனப்படும். ‘விருந்தே புதுமை’ என்பதற்கு அதுதான் பொருள்! அவ்வெதிர்பாராச் சூழலில் வருகின்ற விருந்தினை ஓம்புங்கால் இன்முகமே தலையாயது என்பதனையே திறனறியும் குறட்பாவின் (90) மையக்கருத்தாகப் பரிமேலழகர் கொள்கிறார். விருந்தோம்புவார்க்குரிய முகமலர்ச்சியே இவ்வதிகாரத்தில் கண்ட அனைத்துப் பயன்களையும் தரும் என்பது குறிப்பு. மேற்கண்ட விளக்கங்களையெல்லாம் உள்ளடக்கி “விருந்து என்பது புதுமை. அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது.  அவர் இரு வகையர். பண்டு அறிவுண்மையின் ‘குறித்து’ வந்தாரும் அஃது இன்மையின் ‘குறியாது’ வந்தாரும் என.” என்னும் விளக்கத்தாலும் இவ்வைந்து அறங்களுள் விருந்தோம்பலையே இல்லறத்தின் தலையாய அறமாக விதந்தோதிய திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கை அறிந்த நுட்பத்தானும் உணர்க.

    ஒரே அலைவரிசையில் “திருவள்ளுவர் – பரிமேலழகர் — பாவேந்தர் “

    குறிப்பிட்ட குறட்பாவிற்குரிய பரிமேலழகர் உரைத்திறனை மட்டும் எதிர்பார்க்கின்ற சிலர் இந்தப் பகுதியில் இவ்வளவு விளக்கமும் எடுத்துக்காட்டுக்களும் சான்றுகளும் தேவையா என எண்ணக் கூடும். பழந்தமிழ்  உரையாசிரியப் பெருமக்களின் ஒரு பொருள் பற்றிய சிந்தனை, பல தளங்களிலும் வேர்கொண்டிருந்தது என்பது ஓர் இன்றியமையாக் குறிப்பு. ‘விருந்தோம்பல்’ என்பது தமிழர்களின் தலைசான்ற பண்பாட்டுக் குறிப்பு. உலக நீதி உரைக்க வந்த திருவள்ளுவரே “இன்மையுள் இன்மை விருந்தொரால்” (153) என்றும், “உடைமையுள் இன்மை விருந்தோம்பா மடமை” (89) என்றும் இருவகை வாய்பாட்டில் நுட்பமாக இத்தமிழ்ப் பண்பாட்டை ஆராய்ந்திருக்கிறார்.

    கணவனைப் பிரிந்துறைந்த நாளில் தான் இழந்த அறங்ளை நிரல்படுத்திய கண்ணகி விருந்தோம்ப இயலாமையைச் சுட்டி வருந்துவதை இளங்கோடிவகள்  “தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடல் இழந்த என்னை” (சிலம்பு. கொலைக்களக்காதை – 73) என்னும் வரிகளில் கண்ணகி வாய்மொழியாகவே பதிவு செய்திருக்கிறார் என்பதும் அசோகவனத்தில் தனிமைச் சிறையில் வாடிய சீதை வனத்தில் இராமனின் நிலையெண்ணி வருந்தியபோது, ‘விருந்து கண்டபோது என்னுறுமோ என விம்மும்” (கம்ப…சுந்தரகாண்டம் – 5083) எனக் கம்பர் பதிவு செய்திருப்பதும் பலராலும் அறியப்பட்டவையே.

    விருந்தோம்பலாகிய மரபுவழிப் பண்பாட்டைத் திருவள்ளுவர் வழி நின்று விளக்கியவர் பரிமேலழகர் என்பது மேற்சொன்ன விளக்கங்களால் புலப்படக் கூடும். திருவள்ளுவரையும் பரிமேலழகரையும் முற்றும் உள்வாங்கிய பாவேந்தர் தமக்கே உரிய தமிழ்ப் பண்பாட்டு உணர்ச்சியுடன் எழுதிய ‘குடும்பவிளக்கு’ என்னும் அரிய காப்பியத்தில் ‘விருந்தோம்பல்’ என்பதை இரண்டாவது பகுதியாக  வைத்திருக்கிறார். அது மட்டுமன்று. குடும்பத்தலைவியாகிய தங்கம் விருந்து வரக் கண்டபோது அடைந்த மகிழ்ச்சியைச்,

    “சுடுவெயிலில் காயவைத்த சோளம் துழவி
    உடல் நிமிர்ந்தாள்., கண்கள் உவந்தாள். —  நடைவீட்டைத்
    தாண்டி வரும்விருந்தைத் தான்கண்டாள்! கையேந்திப்
    பூண்ட மகிழ்வாள் புகழேந்தி – வேண்டி
    வருக!  அம் மாவருக! ஐயா வருக!
    வருக! பாப்பா தம்பி என்று – பெருகன்பால்
    பொன்துலங்கு மேனி புதுமெருகு கொள்ள, முகம்
    அன்றலர்ந்த செந்தாமரையாக – நன்றே
    வரவேற்றாள்” (பாரதிதாசன் குடும்பவிளக்கு “விருந்தோம்பல்”)

    என வெளிப்படுத்துவதில் பரிமேலழகருக்கு உரையெழுதுகிறார். மாவரசர், மலர்க்குழலி, நாவரசு நகைமுத்தும் வந்திருக்கிறார்கள் எனக் கேட்டவுடன் மகிழ்ந்த தங்கத்தின் மாமன், மாமி மகிழ்ந்து மருமகள் தங்கத்திடம் விருந்தோம்பலின் சிறப்பைக் கூறுவதில் திருவள்ளுவர், பரிமேலழகர் வார்த்தெடுத்த தமிழ் மரபுப் பாவேந்தரிடம் குடிகொண்ட பாங்கினை வெளிப்படுத்துவதாக உள்ளது.

    “வீட்டுக்கு வந்த விருந்தோம்பு! நாட்டிலுறு
    நற்றமிழர் சேர்த்த புகழ் ஞாலத்தில் என்னவெனில்
    ‘உற்ற விருந்தை உயிரென்று — பெற்றுவத்தல்’
    மோந்தால் குழையும் அனிச்சம்பூ முகமாற்றம்
    வாய்ந்தால் குழையும் வருவிருந்தென்று – ஆய்ந்த திரு
    வள்ளுவனார் சொன்னார்! அதனைநீ எப்போதும்
    உள்ளத்து வைப்பாய்! ஒரு போதும் – தள்ளாதே!
    ஆண்டு பல முயன்றே ஆக்குவை ஊண் எனினும்
    ஈண்டு விருந்தினர்க்கும் இட்டுவத்தல் வேண்டுமன்றோ?
    வந்தாரின் ‘தேவை, வழக்கம்’ இவையறிய
    நந்தா விளக்குன்றன் நல்லறிவே! செந்திருவே!
    இட்டுப்பார்! உண்டவர்கள் இன்புற்றிருக்கையிலே
    தொட்டுப்பார் உன் நெஞ்சைத் தோன்றுமின்பம்!
    கரும்பென்பார் பெண்ணைக் கவிஞரெலாம் வந்த
    விருந்தோம்பும் மேன்மையினால் அன்றோ?”

    (பாரதிதாசன் குடும்பவிளக்கு “விருந்தோம்பல்”)

    தமிழிலக்கியத்தில் விருந்தோம்பல் என்னும் தலைப்பில் சிந்தித்து எழுதப்படும் படைப்பு எதுவாக இருந்தாலும் அது பாவேந்தர் சித்திரித்துக் காட்டிய குடும்ப விளக்குக்குப் பிறகுதான் என்பதை இந்தப் பகுதி காட்டும். வள்ளுவரை மனக்கோயிலில் வைத்துக் கொண்டாடும் பாவேந்தர் பரிமேலழகரின் உரைநயத்தையும் ஆழத்தையும் உள்வாங்கியே இந்தப் பகுதியை எழுதியிருக்கிறார் என்பதைக் கற்பார் உணரக்கூடும். “தொல்லோர் சிறப்பின்’ என்ற தொடருக்கு “நற்றமிழர் ஞாலத்தில் சேர்த்த புகழ்” என்று கவிதையில் உரையெழுதுகிறார் பாவேந்தர். விருந்து கண்டவுடன் தங்கத்தின் மேனி பூரித்தது என்பதைப் “பொன்துலங்கு மேனி புதுமெருகு கொள்ள, முகம் அன்றலர்நத செந்தாமரையாக” என்று வண்ணனை செய்கிறார். உரைத்திறன் அறியும் இந்தக் குறட்பாவை  முற்றாக எடுத்தாள்கிறார்.  எல்லாவற்றையும் விட திருக்குறளில் சொல்லாத ஆனால் பரிமேலழகர் சொன்ன (சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும் என்னும் முதல் நிலை தவிர்த்து) நண்ணியபழி இன்சொல்லும், உடன்பட்டவழி நன்றாற்றலும் என்ற விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதனவாகிய மற்ற இரண்டு கடமைகளையும் இல்லறக் காட்சிகளாகவே சித்திரித்துக் காட்டியுள்ளார். இதனால் பரிமேலழகர் உரை பாவேந்தரை எப்படிப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். திருவள்ளுவர் இல்லறத்தின் தலையறமாக விருந்தோம்பலை விதந்தோத, அதற்குப் பரிமேலழகர் ஆழ்ந்த உரையெழுதினார். குறளையும் பரிமேலழகர் உரையையும் செரித்துக் கொண்ட மரபுவழிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அதனைக் குடும்ப விளக்கில் எல்லாருக்குமாகச் சித்திரித்துக் காட்டினார். “வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட மரபு” என்றால் இப்படித்தான் இருக்கும்!

    நிறைவுரை

    பொருட்பகுப்பில் தெளிவு கொண்ட பரிமேலழகர் விருந்தினர்க்கு உவமமாக்கிய அனிச்சத்தின் திறமறிகிறார். அறிந்து ‘அனிச்சத்தை விருந்துக்கு ஒப்பாக்கவில்லை’ என்னும் உண்மை உணர்கிறார். உணர்ந்து ‘ஒப்பு நிலை மாற்றி உறழ்வு நிலையில்’ உரை காண்கிறார். கண்டு ‘அனிச்சமும் விருந்தினரும் ஒப்பு’ என்னும் கருத்தியலைப் பின்னுக்குத் தள்ளுகிறார். தள்ளி, மூன்றாம் நிலையில் வாடுகின்ற அனிச்சத்தினும் முதல் நிலையிலேயே வாடிவிடும் விருந்தினரின் மென்மையின் உயர்ச்சியை வேறுபடுத்தி விளக்குகிறார். இந்த விளக்கத்தால் பெரும்பாலோர்க்கு எடுத்துக்காட்டுவமமாகத் தோன்றும் இந்தப் பா வேற்றுமையணியாக தனது உண்மை உருவத்தைக் காட்டி நிற்கிறது. இதுவே இக்குறட்பாவில் பரிமேலழகர் உரைத்திறனாகும்.

    (தொடரும்…)

    Share
  • பிறந்த வாழ்வு பெருமையில் மூழ்கும்

    பிறந்த வாழ்வு பெருமையில் மூழ்கும்

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, 
    மெல்பேண், ஸ்திரேலியா

    நாலும் தெரியாது இரண்டும் தெரியாது 
    காலம் பறிபோகும் கணக்கும் புரியாது 
    ஆழந் தெரியாது அகலம் விளங்காது
    காலை விடும்வேளை கணக்கு மழிந்துவிடும்

    உறவும் தெரியாது பகையும் தெரியாது
    வரவும் தெரியாது செலவும் புரியாது
    குறைவும் தெரியாது நிறைவும் தெரியாது
    முடிவு வரும்வேளை முழுதும் இருளாகும்

    பக்தி உணராது புத்தி தெளியாது
    சக்தி எதுவென்று சலனம் மிகுவாகும்
    சித்தம் நிலைகுலைந்து செய்கை சிதைந்தோட
    கத்தி முனையாகக் காலன் வருவானே

    பிறந்த பிறப்பை பேறாய் எண்ணு
    குறைந்த செயலைக் குழியிட்டு மூடு
    நிறைந்த மனத்தை நித்தமும் தேடு
    பிறந்த வாழ்வு பெருமையில் மூழ்கும்

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 18

    கதை வடிவில் பழமொழி நானூறு – 18

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 38

    எமரிது செய்க எமக்கென்று வேந்தன்
    தமரைத் தலைவைத்த காலைத் – தமரவற்கு
    வேலின்வா யாயினும் வீழார் மறுத்துரைப்பின்
    ‘ஆல்என்னிற் பூல்என்னு மாறு’.

    ‘ஆல் என்னிற் பூலென்னுமாறு’

    என்னடா ஊர்லேந்து வந்ததுலேந்து நானும் பாக்கறேன் அது முன்ன உக்காந்து ஜபம் பண்ணிக்கிட்டே  இருக்கயே. என்ன ஆச்சு. வேலையில எதுவும் பிரச்சினையா. சம்பளம் எல்லாம் ஒழுங்காவருதில்ல. பாட்டி எல்லாம் சரியாப் போயிட்டிருக்கு. நான் லேப்டாப்ல வீடியோ கான்பிரன்சிங் அட்டெண்ட் பண்றேன். அப்புறமா பேசலாம். குரல் கொடுத்துவிட்டு மீண்டும் கலந்தாலோசிப்பில் மூழ்கினேன். எல்லாம் ஒரு வழியா முடிச்சாச்சு. நாளைக்கு ரிப்போர்ட் ரெடி பண்ணி அனுப்ப வேண்டியதுதான். அப்புறம் ஐயாக்கு ஜாலிதான். யோசித்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் பாட்டியின் குரல்.

    டேய் சூடா கொழக்கட்ட பண்றேன். வந்து சாப்பிட்டு வேலயப் பாரு.

    வந்ததே அதுக்காகத்தானே. சாப்பிடற வேலய ஒழுங்காப் பாக்கலாம். நாளையிலேந்து ரெண்டுநாள் பாட்டிக்கு என்னன்ன சமைக்கணும்னு சொல்லி செய்யவச்சு சாப்பிட்டுட்டுப் போகணும். தீர்மானித்தேன். எந்தப்பொருளும் அதுக்கேத்த இடத்துல இருந்தா ரொம்ப அழகா தெரியுமில்லயா. அதுமாதிரிதான் இந்த கிராமத்து சாப்பாடும். இத நகரத்து ஓட்டல்களில் உக்காந்து சாப்பிட்டா ருசிக்காது.

    சரி சரி சாப்பிடும்போது ரொம்ப யோசிக்காத. இன்னும் ரெண்டு போட்டு சாப்பிடு.பாட்டி விரட்ட மனம் ஒருநிலைக்கு வந்தது.

    ஆமா நீ இங்க என்னவேலையா வந்திருக்க. வெளிய எங்கேயாவது போகணுமா? பாட்டி கேட்கிறாள்.

    உனக்கு நான் சொன்னாப் புரியுமான்னு தெரியல. இருந்தாலும் சொல்றேன். ஆரம்பித்தேன். எங்க கம்பெனியிலேந்து மூணு என்ஜினியர்கள் வந்திருக்கோம். நம்ம மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கம் காற்றாடிகள் சுத்திக்கிட்டிருக்கு இல்லயா. அதோட பாகங்களத் தயாரிக்கறதுதான் எங்க கம்பெனி வேல. அதுல ஏதாவது புதுவித மாற்றம் செய்ய முடியுமானு ஆராய்ச்சி செய்யறதுக்காக எங்கள அனுப்பியிருக்காங்க. நாங்க ஒரு மாசம் தங்கி புது மாதிரி வடிவங்கள உருவாக்கி மத்ததோட ஒப்பிட்டுப் பாக்கணும். மொதல்ல கேக்க நல்லாத்தான் இருந்திச்சு. ஆனா செய்ய ஆரம்பிச்சவொடனே ரொம்ப சங்கடமா இருக்கும்னு தோணுது. ஒவ்வொரு முறையும் மாதிரி வடிவம் செஞ்சு எடுத்துக்கிட்டுவர சென்னைக்குத்தான் போயாகணும். அலைச்சல் அதிகமாகும். இங்க இருக்கற நேரமும் பொழுது போகறதுக்கு சினிமா தியேட்டர் கூட இல்ல. இதத்தான் மூணுபேரும் சேந்து பேசி முடிவெடுத்தோம்.

    நாளைக்கு எங்க கம்பெனிக்கு ஒரு மெயில் அனுப்பிடுவோம். இடத்தைப் பார்வையிட்டோம். நாம செய்ய நினைத்த ஆராய்ச்சிக்கு இது ஏற்ற இடமில்லனு. அப்புறம் அவங்க வேற இடம் தேட ஆரம்பிப்பாங்க. அதுக்குள்ள புது கம்பெனியில வேலைக்குப் போட்டிருக்கேன். அதுலேந்து தகவல் வந்தா அதுல சேந்திடுவேன். அந்தவேலை ஒரு அறைக்குள்ள உக்காந்து கம்ப்யூட்டர் உபயோகிச்சு செய்ய வேண்டிய வேலை. அலைச்சல் இல்லபாரு.

    நான் பேசப்பேச பாட்டிக்குக் கோபம் தலைக்கேறியது. இதத்தான் எங்க ஊர்ல ‘ஆல்’ என்று சொல்லப் ‘பூல்’ என்று மறுத்துச் சொல்றதுனு சொல்லுவாங்க.  இதோட பொருள் நம்பி அரசன் ஒரு வேலையை ஒப்படைச்ச பின்னாடி வேல் முனையில வீழ்ந்தாவது அதனை நிறைவேற்றணும். அதை விட்டுட்டு செய்யமாட்டேன்னு மறுத்துக் காரணம் சொல்றது ‘ஆல்’ என்று சொல்லப் ‘பூல்’ என்று மறுத்துச் சொல்றதுக்குச் சமானமாம்.

    இவ்வளவு படிச்ச பசங்க நீங்க. இப்டி பண்ணலாமா. தப்பில்லயா. கேட்டுக்கொண்டே பாட்டி வேலையைத் தொடர்கிறாள். நான் யோசிக்க ஆரம்பிக்கின்றேன்.

    பாடல் 38

    விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும்
    வருந்தும் பசிகளையார் வம்பர்க்(கு) உதவல்,
    இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! ‘ஆற்றக்
    கரும்பனை அன்ன துடைத்து’.

    ‘ஆற்றக் கரும்பனை அன்னது உடைத்து’

    வாங்க வாங்க உக்காருங்க. என்ன சாப்பிடறீங்க காபி, டீ.

    யாரை இப்படி மரியாதையாக உபசரிக்கிறாள் அம்மா. உள்ளறையில் கதை எழுதிக்கொண்டிருந்த நான் எழுந்து வெளியில் வந்தேன். ஐம்பது வயது மதிக்கத்தக்க நபரும் அவருடன் கல்லூரி மாணவன் போன்று விளங்கும் பையனும் சோபாவில் அமர்ந்திருந்தார்கள்.

    மரியாதைக்கு வணக்கம் சொல்லிவிட்டு மேல் பனியனுடன் அமர்ந்தால் நாகரிகம் அல்ல என நினைத்து சட்டை போட்டுக்கொள்ள உள்ளறைக்குச் சென்றேன்.

    சமையலறையில் அம்மா அக்காவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

    உங்க தோப்புக்கார சித்தப்பா இந்தப் பையனத்தான் படிக்க வைக்கிறாராமா. ஏதோ என்ஜினியரிங் படிக்கிறான் போல. அநாதைப் பையனாம். கூட வந்திருக்கிறவர் அவன் கல்லூரிப் பேராசிரியராம்.

    உங்க சித்தப்பா நம்ம அப்பாவப் பத்தி ரொம்ப பெருமையா சொல்லியிருப்பார்போல. அதனால மரியாதைக்கு இந்தப் பையனும் அவன் பேராசிரியரும் நம்மளப் பாத்து நன்றி சொல்லிட்டுப் போலாம்னு வந்திருக்காங்க. அந்தப் பையனுக்கு உங்க அப்பா போட்டோ ஒண்ணு வேணுமாம். ஏதும் இருந்தாப் பாரேன்.

    தம்பிகிட்ட இருக்கு. நான் எடுத்துக்கிட்டு வரேன். அடுத்த அறையான என் அறைக்குள்

    நுழைந்த அக்காவைத் தடுத்து நிறுத்தினேன். தீர்மானத்துக்கு வந்தவனாய் போட்ட சட்டையைக் கழட்டிவிட்டு மீண்டும் கதை எழுதுவதைத் தொடர்ந்தேன்.

    ஒருவழியாக அவர்கள் இருவரையும் பேசி அனுப்பிய அம்மா ஏண்டா என்ன ஆச்சு உனக்கு மட்டு மரியாத கிடையாதா. நீ பாட்டுக்கு உள்ளுக்குள்ளயே உக்காந்துட்ட. அவங்க என்ன நினைச்சுப்பாங்க…..தொடர்ந்து புலம்பிக்கொண்டே சமையலறை நோக்கிச் சென்றாள்.

    என் மனம் யோசிக்க ஆரம்பித்தது. அப்பா இறந்து எட்டு வருடம் ஆகி விட்டது.  தன்னய அப்பா சொந்தப் பையன் போல வளர்த்து படிக்க வச்சதா சித்தப்பா சொல்லிட்டுத் திரியுவாரு. நல்லா படிச்சு நல்ல வேலையில டில்லியில் இருக்கார். போதாததுக்கு தான் சேத்துவச்சதுல ஒரு பனந்தோப்பு வேற வாங்கிப் போட்டிருக்கார். எதுக்குமே அவர்கிட்ட பண உதவி எதிர்பாக்காமதான் அம்மா எங்க ரெண்டு பேரையும் படிக்க வச்சாங்க. ஆனா ஒரு புத்தகக்கடை வைக்கணும்னு நான் பண உதவி கேட்டப்போ நீயே சம்பாதிச்சு வச்சுக்கோனு சொல்லிட்டார். இப்ப என்னடான்னா யாரோ ஒரு பையனுக்கு உதவி செய்யறாராம்.

    ஆற்றக்கரும்பனை அன்னது உடைத்துங்கற பழமொழி சரியாத்தான் இருக்கு. தன்னய வளத்தவனுக்கு பலன் கொடுக்காம நீண்டகாலத்துக்கப்புறம் யாரோ புதியவனுக்கு பலன்குடுக்கற பனை மரம் மாதிரிதான் இந்த சித்தப்பாமாதிரி ஆளுங்க. இவங்களப்பத்தி நினைக்கறதே நேரவிரயம் தான்.

    அம்மாவும் அக்காவும் பேசுவதைப் பொருட்படுத்தாமல் என் கதையில் மூழ்கினேன்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(317)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(317)

    ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
    போகா றகலாக் கடை.

    -திருக்குறள் – 478 (வலியறிதல்)

    புதுக் கவிதையில்...

    செல்வம்
    செலவாகும் வழி பெரிதாகாமல்
    சிறிதாகவே வைத்திருந்தால்,
    அரசர்க்கு
    அச்செல்வம் வரும்வழி
    சிறிதானாலும்
    அதனால் பெருந்தீமை
    ஏதும் வந்திடாதே…!

    குறும்பாவில்...

    பெரிதாகாமல் பார்த்துக்கொண்டால்
    பொருள் செலவாகும் வழி, தீதில்லை
    சேரும்வழி சின்னதானாலும் மன்னர்க்கு…!

    மரபுக் கவிதையில்...

    சேர்த்து வைக்கும் செல்வமதைச்
    செலவு செய்யும் வழியதனைப்
    பார்த்தால் பெரிதாய் ஆகாமல்,
    பக்கம் நிலைக்கும் பொருளதுவே,
    மார்க்க மிதனைச் செயல்படுத்தும்
    மன்னர் தமக்குத் தீதில்லை
    சேர்க்கும் பொருளின் வரவுவழி
    சின்ன தாகப் போயினுமே…!

    லிமரைக்கூ..

    கவனம்கொண்டு செலவுவழி மீதே
    பெரிதாகாமல் பார்த்திடும் அரசனுக்கு, வரவுவழி
    சிறிதானாலும் வருவதில்லை தீதே…!

    கிராமிய பாணியில்...

    கொறச்சிக்க கொறச்சிக்க
    செலவயெல்லாம் கொறச்சிக்க,
    வரவுக்குள்ள செலவுசெஞ்சா
    வந்திடுமே வலிம ஒனக்கு..

    செலவு செய்யிற வழியெல்லாம்
    பெருசாகாம
    பாத்துக்கிற ராசாவுக்கு
    வரவுவழி
    சிறுசாப் போனாலும்,
    வராது ஒருநாளும்
    வாழ்க்கயில கெடுதியே..

    அதால
    கொறச்சிக்க கொறச்சிக்க
    செலவயெல்லாம் கொறச்சிக்க,
    வரவுக்குள்ள செலவுசெஞ்சா
    வந்திடுமே வலிம ஒனக்கு…!

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 11

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 11

    -மேகலா இராமமூர்த்தி

    இராமன் காட்டுக்குச் செல்கையில் தங்கியிருந்த பொழிலிலேயே பரதனும் சத்ருக்கனனும் சேனையொடு தங்கினர். இராமன் நடந்ததே சென்றதறிந்து தேரில் வந்துகொண்டிருந்த பரதனும் அதனை நீத்துக் கால்நடையாகவே பயணப்படலானான்.

    கங்கையின் வடகரையை அடைந்தான் பரதன். அவனுடைய படையரவத்தைக் கேட்டான் கங்கையின் தென்கரையில் நின்றிருந்த கூற்றினையொத்த ஆற்றலானும், நாவாயோட்டும் வேட்டுவனும், இராமனை ஏற்கனவே சந்தித்து அவன்பால் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவனுமான குகன். இராமனை அழிக்கவே இந்தச் சேனை வருகின்றதோ என்ற ஐயத்தினால் சீற்றம் எழவே, அவன் கண்கள் கனலைக் கக்கின; நாசியிலிருந்து புகை கிளம்பிற்று!

    ”வலிமை நிரம்பிய உலகில் வாழுகின்ற, கூரிய நகத்தையுடைய புலிகளெல்லாம் ஒரே இடத்தில் வந்துசேர்ந்தன எனும்படியாக ஒலியெழுப்பும் இந்தப் படையானது என்னைப் பொறுத்தவரை வெறும் எலிப்படை; நான் இந்த எலிகளைக் கிலிகொண்டு ஓடச்செய்து அழித்தொழிக்கும் அரவு” என்று சேனையைக் கண்டு உவகைகொண்டான் குகன்.

    எலி எலாம் இப் படை அரவம் யான் என
    ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான்
    வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்ப்
    புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே.
    (கம்ப: கங்கைகாண் படலம் –  2400)

    எலிக்கு நாகம் பகை என்பதால்தான் இங்கே எதிராளிகளை எலிப்படை என்றும் தன்னை அரவம் என்றும் கூறிக்கொள்கின்றான் குகன்.

    இதே உவமையை நாம் வள்ளுவத்திலும் காணலாம்.

    ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
    நாகம் உயிர்ப்பக் கெடும்.
    (படைமாட்சி – 763)

    எலியாய பகை திரண்டு கடல் போல ஒலித்தாலும் நாகத்திற்கு அதனால் என்ன ஏதம் வரும்? அந்நாகம் உயிர்த்த அளவில் அப்படையானது தானே கெடும். எனவே படையின் பெருக்கத்தைவிட அதன் போர்த்திறனே அதற்கு மாட்சிதரும் என்கிறார் வள்ளுவர் இக்குறளில்!

    குறளின் கருத்துக்கள் கம்பராமாயணத்தில் பல இடங்களில் பொருத்தமுற எடுத்தாளப்பெற்றுள்ளன; அவற்றில் இதுவும் ஒன்று!

    குகன் மனநிலை இவ்வாறிருக்க, அக்கரையில் பரதன் அருகில் நின்றிருந்த சுமந்திரனோ எதிர்க்கரையில் நின்ற குகனைப் பார்த்துவிட்டுப் பரதனிடம், “இவன் உன் அண்ணனாகிய இராமனிடம் கரைகாணாக் காதல் கொண்டவன்; இராமனை வரவேற்கச் செல்லும் உன்னை எதிர்பார்த்தே அங்கே நிற்கின்றான்” என்று கூறுகின்றான். குகனின் சீற்றத் தோற்றம் வெகுதொலைவில் நின்றதனால் சுமந்திரன் கண்களுக்குப் புலப்படவில்லை போலும்!

    சுமந்திரன் மொழிகேட்ட பரதன், குகனை உடனே காணும் ஆவலில் விரைந்து புறப்படச் சத்ருக்கனனும் உடன்சென்றான். போருக்குத் தொடைதட்டிக் காத்துக்கொண்டிருந்த குகன், தொலைவில் வந்துகொண்டிருந்த பரதனைக் கண்டதும் திடுக்குற்றான்.

    மரவுரியணிந்து புழுதிபடிந்த அவன் மேனியும், ஒளியிழந்த மதிபோன்ற வதனமும், கல்லும் கனியும் வகையில் துயரம் தோய்ந்த தோற்றமும் குகனின் நெஞ்சில் பெருங் கலக்கத்தை விளைவிக்க, அவன் கையிலிருந்த வில் அவனையறியாமல் தரையில் நழுவி வீழ்ந்தது.

    வற்கலையின் உடையானை
         மாசு அடைந்த மெய்யானை
    நற்கலை இல் மதி என்ன
         நகை இழந்த முகத்தானை
    கல் கனியக் கனிகின்ற துயரானைக்
         கண்ணுற்றான்
    வில் கையினின்று இடை வீழ
         விம்முற்று நின்று ஒழிந்தான். (கம்ப: கங்கைகாண் படலம் – 2419)

    பரதனைத் தானே கண்டு உண்மை அறிய விரும்பிய குகன், நாவாயில் ஏறித் தமியனாய்க் கங்கையின் வடகரையை அடைகின்றான். அண்ணனுக்கு அரசாட்சியை அளிப்பதன் பொருட்டே பரதன் கானகம் வந்துள்ளான் என்பதையறிந்து நெகிழ்கின்றான்; அவனைத் தொழுகின்றான்!

    ”தாய்கேட்ட வரங்களின்படித் தந்தை உனக்களித்த ஆட்சியை ஏற்காமல், அது தீவினையால் வந்தது என்று அதனை உதறிவிட்டு வந்திருக்கும் உன் செயலைக் காண்கையில், ஆயிரம் இராமர்கள் இருந்தால்கூட அவர்கள் உன் ஒருவனுக்கு ஈடாகமாட்டார்கள்!” எனப் பரதனைப் புகழ்கின்றான் குகன்.

    தாய் உரைகொண்டு தாதை உதவிய
         தரணிதன்னை
    தீவினை என்ன நீத்து
         சிந்தனை முகத்தில் தேக்கி
    போயினை என்றபோழ்து புகழினோய்
         தன்மை கண்டால்
    ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ
         தெரியின் அம்மா.  (கம்ப: கங்கைகாண் படலம் – 2425)

    வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பரதனைப் பிறர் வாயிலாகப் புகழ்வதைக் கம்பர் தம் காப்பியத்தில் தொடர்ந்து செய்வதைக் காணமுடிகின்றது.

    முன்பு கோசலை ”உங்கள் அனைவரை விடவும் நிறைகுணத்தன்; நின்னினும் நல்லன்” என்று பரதனை இராமனிடமே புகழ்ந்ததைக் கண்டோம். இங்கோ ஆயிரம் இராமர்கள் வந்தால்கூட அவர்கள் ஒரு பரதனுக்கு ஈடாகமாட்டார்கள் என்று குகன் புகழ்வதைக் காண்கின்றோம். இப் பாராட்டுரைகள் பரதனின் தன்னேரிலா உயர்குணங்களுக்கு ஏற்புடையவையே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    தன்னோடு புறப்பட்ட குகனையும் அழைத்துக்கொண்டு இராமனைக் காணச் செல்கிறான் பரதன். வழியில் பரத்துவாசர் ஆசிரமத்தில் ஓரிரவைக் கழித்துவிட்டு மறுநாள் மீண்டும் பயணத்தைத் தொடங்கி இராமன் தன் இளவலோடும் மனைவி சீதையோடும் தங்கியிருக்கும் சித்திரகூடத்தை அடைந்தான்.

    குகனைப் போலவே சேனையொடு பரதன் வருவதைக் கண்ட இலக்குவனும் பரதன் இராமனைத் தாக்கவே படைகொண்டு வந்திருப்பதாக எண்ணிச் சினந்தான்.

    ’பரதனோடு வரும் படைகளைக் கலக்குவேன்; அவனை நரகுக்கு அனுப்புவேன்” என்று சூளுரைத்துக் கொண்டிருந்த இலக்குவனை நோக்கிய இராமன், ”பொறு இலக்குவா! என்மீது கொண்ட அன்பின் மிகுதியால் பரதனின் இயல்பறியாது இயம்புகின்றனை! தந்தையின் விருப்பப்படி என்னை அழைத்துப்போகவே அவன் வந்திருக்கக் கூடும்! வேறுவிதமாக நாம் எண்ணுவது பிழை!” என்றான்.

    தொழுத கையொடும், அழுத கண்ணொடும் அருகில்வந்த பரதனைக் கண்ட இராமன், ”அயோத்தியில் தந்தை நலந்தானே?” என்று கேட்கவும், ”என் தாய் கேட்ட வரமெனும் சத்தியத்தை மண்ணில் நிலைநிறுத்தி, நித்திய வாசம் செய்ய விண்ணுலகு ஏகினன் தந்தை!” என்று பரதன் துயரொடு செப்பிய மொழிகேட்டு, ” இனி வாய்மைக்கு ஆருளர் மற்று?” என்று அழுதபடி மண்ணில் வீழ்ந்தான் இராமன்.

    இராமனின் கையறுநிலை கண்டு, பரதனோடு வந்த குலகுருவான வசிட்டர் அவனுக்கு வாழ்வின் நிலையாமையை விளக்குகின்றார்.

    ”பிறத்தலும் பிறந்த உயிர்கள் பின்னாளில் இறத்தலும் வாழ்வின் இயற்கையே என்பதை மறைகளின் எல்லையை உணர்ந்த நீ மறந்தனையோ?

    மானுட வாழ்க்கையானது சில காலம் ஒளிவிடும் விளக்குப் போன்றது. அந்த விளக்கு எரிவதற்குத் தேவையான நெய்யாகவும், திரியாகவும், தீயாகவும் இருப்பவை மனிதனுடைய நல்வினைப்பயனும் (புண்ணியம்), காலமும் (வயது), ஊழும் ஆகும். (நெய்யும் திரியுமாகிய) நல்வினைப்பயனும், காலமும் முடிந்துபோனால் வாழ்க்கையெனும் விளக்கும் அவிந்துபோவதில் ஐயமில்லை.

    நல்வினையும் விதியும் முடிந்தபொழுது உயிர்வாழ்க்கை
    முடிந்துபோகும்; காலத் திரியானது விதி எனும் நெருப்பில் எரிந்து போகும்; புண்ணியம் அனுபவித்து வற்றும்; உயிர் உடலைப் பிரியும்; இஃது இயற்கை
    நியதி” என்றார் வசிட்டர்.

    புண்ணிய நறுநெயில் பொருஇல் காலம்ஆம்
    திண்ணிய திரியினில் விதி என் தீயினில்
    எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால்
    அண்ணலே அவிவதற்கு ஐயம் யாவதோ.
    (கம்ப: திருவடிசூட்டு படலம் – 2538)

    ”ஆதலால் உன் துயரை மாற்று; மேலுலகு எய்திய தந்தைக்குச் செய்யவேண்டிய நீர்க்கடன்களை ஆற்று” என்று இராமனை ஏவினார்.

    அழகிய உவமைகளால் மனித வாழ்வின் இயல்பைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் விளக்கியிருக்கும் பாங்கு மனங்கவர்கின்றது.

    சிட்டரான வசிட்டரின் மொழிகளால் தெளிவுபெற்ற இராமன், தந்தைக்கு நீர்க்கடன்கள் ஆற்றலானான்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

     

     

    Share
  • திருவள்ளுவர் யார்? – 8

    திருவள்ளுவர் யார்? – 8

    புதுக்கோட்டை பத்மநாபன்

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவனடி சேரா தார்

    என்பது இந்த அதிகாரத்தின் கடைசிக் குறட்பா.

    பகவானின் திருவடியை அடைந்தவர்களே பிறவிப் பெருங்கடலை நீந்தி, பிறவியில்லாப் பெருவாழ்வான மோக்ஷத்தை அடைவார்கள் என்பது இக்குறட்பாவின் கருத்து.

    “विष्णोर्यत्परमं पदं” (ரிக்-1-22-6) என்று திருமாலின் உலகையே மோக்ஷலோகம் என்று ரிக்வேதம் முழங்குகிறது. “विज्ञानसारथिर्यस्तु मनः प्रग्रहवान्नरः।सोऽध्वनःपारमाप्नोति तद्विष्णोःपरमं पदम्॥” (எவனொருவன் புத்தியை ஸாரதியாகவும் மனதைக் கடிவாளமாகவும் கொண்டு இந்திரியங்கள் என்ற குதிரைகள் பூட்டப்பட்ட இந்த உடல் என்னும் தேரைச் செலுத்துகிறானோ அவன் இந்த ஸம்ஸாரக் கடற்பயணத்தின் அக்கரையிலிருக்கும் விஷ்ணுவின் அந்தப் பரமபதத்தை அடைகிறான்) என்று கடோபநிஷத்தும் (கட-1-3-9) விஷ்ணுவின் பரமபதமே ஸம்ஸாரக் கடலைக் கடந்தவர்கள் சென்றடையும் இடம் என்று சொல்கிறது.

    “ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पराः।अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते॥तेषामहं समुद्धर्ता मृत्युसंसार सागरात्।भवामि न चिरात्पार्थ मय्यावेशितचेतसाम्॥” (பார்த்தா! எவர்கள் எல்லாக் கர்மங்களையும் என்னிடம் அர்ப்பணம் செய்து, என்னை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மற்றொன்றை மனதில் நினைக்காத யோகத்தினால் என்னைத் தியானித்து உபாஸனை செய்கிறார்களோ, அவர்களை ஜனன மரணங்களாகிய ஸம்ஸாரக் கடலிலிருந்து உடனே கரை சேர்த்துவிடுவேன். கீதை-12-6,7) என்று கீதையில் பகவானும் சொல்கிறான்.

    (“மாஅயோயே மாஅயோயே மறுபிறப்பறுக்கும் மாசில் சேவடி மணிதிகழ் உருவின் மாஅயோயே” (பரிபாடல்-3), “நாறிணர்த்துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்” (பரிபாடல்-15) என்ற சங்க இலக்கிய வரிகள் திருமாலின் மாசில்லாத திருவடியே பிறவியில்லாப் பெருவாழ்வான மோக்ஷத்தை அளிக்கும் என்றும் திருமால் ஒருவனே வீடுபேற்றை அளிக்கமுடியும் என்றும் கம்பீரமாக முழங்குகின்றன. ஆகவே பரம வைதிகரும் சங்கத் தமிழருமான திருவள்ளுவர் இக்குறட்பாவில் இறைவன் என்ற சொல்லால் திருமாலையே குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகிறது.

    இங்கு நாம் எடுத்துக் காட்டிய கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள பத்துக் குறட்பாக்களிலும் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தக் கருத்துகள் நிறைந்து இருப்பதை நாம் காண முடியும். நற்றாள் தொழாஅர், மாணடி சேர்ந்தார், அடி சேர்ந்தார்க்கு, தாள் சேர்ந்தார்க்கு, தாளை வணங்காத் தலை, அடி சேராதார் என்ற சொற்றொடர்களால் பகவானது திருவடியைப் பற்றியே பேசுகிறார் திருவள்ளுவர்.

    பகவானது திருவடியில் சரணாகதி செய்வது என்பது, ஸ்ரீவைஷ்ணவ ஸிந்தாந்தக் கோட்பாடுகளில் முக்கியமான ஒன்று. ஸ்ரீவைஷ்ணவத்தில் பகவானின் மற்ற அங்கங்களைவிட அவனது திருவடிக்கே பெருமை அதிகம். இக்கருத்தையே “நின்னின் சிறந்த நின் தாள் இணையவை” (பரிபாடல்-4) என்று சங்க இலக்கியமும் கூறுகின்றது. மேலும் பாஞ்சராத்ர ஸ்ரீவைஷ்ணவ ஆகமத்தின் தத்துவமே இந்த பத்துக் குறட்பாக்களிலும் காணப்படுகிறது.

    பாஞ்சராத்ரம் மிகத் தொன்மையான ஆகமம் என்பதைக் கல்வெட்டு ஆதாரங்கள், வரலாற்று ஆவணங்கள் இவற்றின் மூலம் அறிய முடிகிறது. பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களிலும் பாஞ்சராத்ரத்தின் கூறுகள் காணப்படுவதால் அதன் தொன்மையைத் தெளிவாக அறிய முடிகிறது. பரம், வ்யூஹம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி என்று ஐந்து நிலைகள் பகவானுக்கு இருப்பதாகப் பாஞ்சராத்ரம் கூறுகிறது. இந்த ஐந்து நிலைகளையும் இந்தப் பத்துக் குறட்பாக்களிலும் காட்டுகிறார் திருவள்ளுவர்.

    “தனக்குவமை இல்லாதான்”, “கோளில் பொறியில்”, “பிறவிப்பெருங்கடல்” என்ற குறட்பாக்கள் மூலம் பகவானின் பரநிலையையும், “அகரமுதல”, “கற்றதனால் ஆயபயன்” என்ற குறட்பாக்களால் வியூக நிலையையும், “வேண்டுதல் வேண்டாமை”, “இருள்சேர் இருவினையும்”, “பொறிவாயில்” என்ற குறட்பாக்களில் விபவ நிலையையும், “அற ஆழி அந்தணன்” என்ற குறட்பா மூலம் அர்ச்சை நிலையையும், “மலர்மிசை ஏகினான்” என்ற குறட்பா மூலம் அந்தர்யாமி நிலையையும் காட்டுகிறார்.இது தவிர முற்றும் துறந்த தவ யோகிகள் சென்றடையும் மோக்ஷலோகம் தாமரைக்கண்ணனான செங்கண்மாலின் உலகமே என்று “தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக்கண்ணான் உலகு” என்ற குறட்பாவின் மூலம் மிகத்  தெளிவாகக் குறிப்பிடுகின்றார் திருவள்ளுவர்.

    இக்குறட்பாவில் பகவானைத் “தாமரைக்கண்ணான்” என்று குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. “தாமரைக்கண்ணன்” என்பது திருமாலுக்குரிய சிறப்பான திருநாமங்களில் ஒன்று. மேலும் இக்குறட்பாவின் மூலம் சிற்றின்பத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் மோக்ஷலோகமான செங்கண்மால் உலகை அடைய முடியாது என்பதையும் நிரதிசய இன்பமான மோக்ஷ இன்பத்தை விழைபவர்கள் உலகியல் இன்பங்களிலிருந்து முற்றிலும் விடுபட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டார்.  ஒரு பெண்பித்துப் பிடித்தவனின் கூற்றாக இக்குறளை அமைத்திருக்கிறார்.

    நிரதிசய இன்பமான மோக்ஷம் என்பது திருமாலின் உலகுதான் என்பது திருவள்ளுவருக்குத் தெரிந்திருந்ததால்தான் மோக்ஷத்தைப் பற்றிய பேச்சு வருமிடத்தில் “தாமரைக்கண்ணான் உலகு” என்ற சொற்றொடர் மூலம் செங்கண்மால் உலகைக் காட்டுகிறார். மோக்ஷத்திற்கு சிற்றின்பம் எதிர்தட்டானது என்பதைக் காட்டவே இக்குறட்பாவைக் காமத்துப்பாலில் வைத்தார். உலகியல் ஆசைகளில் மூழ்கியிருப்பவனுக்கு மோக்ஷத்தின் அருமை தெரியாதென்பதும் மோக்ஷத்தை விரும்புவோர் உலகியல் ஆசைகளை அறவே விடவேண்டும் என்பதும்தான் இந்தக் குறட்பா நமக்குத் தரும் செய்தி.

    பிறவித் தளையிலிருந்து விடுதலை என்று சொல்லக்கூடிய மோக்ஷம் என்பதைத் திருமால் தான் கொடுக்க முடியும் என்ற சங்கத் தமிழரின் கோட்பாட்டை அப்படியே வழிமொழிந்திருக்கிறார் திருவள்ளுவர்.

    நிறைவுப் பகுதி 

    திருவள்ளுவர் தனது நூலில் குறிப்பிடும் தெய்வங்கள் எல்லாமே வைதிக தெய்வங்கள்தான். அந்தத் தெய்வங்களுள் அவர் மனதில் நிறைந்து நின்ற தெய்வங்கள் திருமாலும் திருமகளும்தான். சங்கத் தமிழரின் மரபுப்படி தனது நூலில் திருமாலையே பரம்பொருளாக முழங்கியிருக்கும் திருவள்ளுவர், பெரிய பிராட்டியாரான திருமகளின் அனுக்ரஹம் பற்றியும் சில குறட்பாக்களில் குறிப்பிடுகிறார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற பொழுது அவர் அப்பழுக்கற்ற சிறந்த ஸ்ரீவைஷ்ணவர் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

    தனது நூலில் வேதம், வைதிக கர்மங்கள், வேதம் ஓதும் அந்தணர்கள், இவற்றின் சிறப்பையெல்லாம் தெளிவாக எடுத்துரைக்கும் திருவள்ளுவர் ஸ்ரீவைஷ்ணவக் கோட்பாடுகளையும் ஆங்காங்கே காட்டுவதால் அவர் ஒரு ஸனாதன வைதிக நெறியைப் பின்பற்றும் ஸ்ரீவைஷ்ணவ அந்தணர் தான் என்பதே அவரது நூலிலிருந்து வெளிப்படுகிறது. ஆகவே அவருக்கு ஒரு உருவம் கொடுக்க வேண்டுமென்றால், நெற்றியிலும் உடலிலும் பன்னிரண்டு திருமண்காப்புகள், தூய மெல்லிய வெண்ணிற ஆடை, கழுத்தில் தாமரை, துளசி மணிமாலைகள், மார்பில் யஜ்ஞோபவீதம் (பூணூல்) இவற்றுடன் கூடிய ஒரு உருவத்தைத்தான் கொடுக்க முடியும். அவ்வுருவம் தான் அவருடைய நூலில் சொல்லப்பட்ட கருத்துகளுக்குப் பொருத்தமான உருவமாக இருக்கும். வேறு எந்த உருவத்தைக் கொடுத்தாலும் அது அவரது நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களுக்கு முரணாகத்தான் இருக்கும்.

    ஆகவே திருவள்ளுவர் ஸனாதன வைதிக மதத்தைப் பின்பற்றும் ஒரு ஸ்ரீவைஷ்ணவ அந்தணர்தான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஒருவனுடைய குலத்தை அவனது வாய்ச்சொல்லே காட்டிவிடும் (குறள்-959) என்று திருவள்ளுவரே கூறியிருப்பதால் அவரது சொல்லான திருக்குறளே இதற்குச் சான்று. திருக்குறளுக்குப் பண்டைக் காலத்தில் பல உரைகள் இருந்தாலும் பரிமேலழகரின் உரைதான் சிறந்ததாகக் கொள்ளப்பட்டது. திருவள்ளுவர் வைணவராகவும் திருக்குறள் வைணவ நூலாகவும் இருந்ததால் தான் பரம வைணவரான பரிமேலழகர் அதற்கு உரை எழுதினார். வைணவ ஆசார்யர்களில் பலர் தங்களது தத்துவ விரிவுரைகளில் திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கின்றனர்.

    காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோயில் அர்ச்சகராக இருந்தவர் பரிமேலழகர். திருவள்ளுவரின் திருவுள்ளத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு திருக்குறளுக்கு உரை எழுதியவர் அவர். ஆனால் அவரது உரை, சிலருக்குப் பிடிக்காது. ஏனெனில் உண்மையைச் சொன்னால் சிலருக்குப் பிடிக்காது என்பது உண்மைதானே? ஆரியச் சார்போடு உரை எழுதிவிட்டார் என்று அவரைச் சாடுவார்கள். “ஆரியன்” என்றால் “உயர்ந்தவன்”, ”அறிவாளி” என்று பொருள். திருவள்ளுவரும் பரிமேலழகரும் ஆரியர்களே.

    “ஆய்வு” என்ற பெயரில் தங்கள் எண்ணத்துக்கு முரண்பாடான குறட்பாக்களையெல்லாம் இடைச்செருகல் என்பார்கள் சிலர். திருக்குறள் மேல் தங்களின் எண்ணம் என்னும் வண்ணத்தைப் பூச அந்நூலில் உள்ள சொற்களுக்கு நேர்மையற்ற முறையில் வலிந்து பொருள்கொண்டு இன்றும் எத்தனையோ பேர் புதிது புதிதாக உரை எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும்படியாக இவர்கள் உரை எழுதிவிட்டதால் திருக்குறள் இவர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் நூலாகிவிடாது. திருவள்ளுவரும் இவர்களைச் சேர்ந்தவர் ஆகிவிடமாட்டார்.

    மேலும் மாட்டுக்கறி, ஆட்டுக்கறி முதலிய புலால் வகைகளை உண்ணுதல், விதவிதமான மதுபானங்களை அருந்துதல், சுயஒழுக்கம் இல்லாமல் வைப்பாட்டிகளோடும் விலைமாதரோடும் இன்பம் துய்த்தல், பெண்களின் சுதந்திரத்துக்குக் கற்பு, ஒழுக்கம் இவையெல்லாம் தடையாக உள்ளவை என்று பிரசாரம் செய்தல், அடுத்தவன் மனைவியை ஒருவன் விரும்புவதும், ஒருவனின் மனைவி வேறொருவனை விரும்புவதும் தவறில்லை என்று பிரசாரம் செய்தல், இறை நம்பிக்கை இல்லாமல் ஸனாதன மதத்தில் உள்ள தெய்வங்களை இழிவுபடுத்துதல்- இவையே இன்று “பகுத்தறிவு”வாதிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்களின் பண்புநலன்கள்.

    இந்தப் “பகுத்தறிவு”வாதிகள் கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, ஒழுக்கமுடைமை, பிறனில்விழையாமை, கற்பு, இறை நம்பிக்கை முதலிய நல்லறங்களைப் போதிக்கும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் உரிமை கொண்டாடுவதற்கு என்ன யோக்யதை இருக்கிறது? திருக்குறளையும் திருவள்ளுவரையும் பற்றிப் பேசுவதற்குக் கூட இவர்களுக்குத் தகுதி இல்லை. இவர்களின் பண்புகளுக்கும், திருக்குறளின் கொள்கைக்கும் ஏதாவது ஸம்பந்தம் உண்டா? இன்று, பசுவதை செய்து மாட்டுக்கறி தின்பதை ஆதரிப்பவர்களும், குடிகாரர்களும், கூத்தியருடன் கும்மாளம் அடிப்பவர்களும், ஸநாதன மதத்தின் தெய்வங்களை இழித்துரைப்பவர்களும் “திருவள்ளுவர்“ எங்கள் தமிழ் இனத்துக்கே தலைவர்”, ”எங்கள் பாட்டன்”, ”எங்கள் பூட்டன்”, “எங்கள் ஐயன்” என்றெல்லாம் சொல்லித் திருவள்ளுவரைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு திரிகிறார்களே, இவர்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட வெட்கம் இல்லையா?

    ஆகவே இந்தப் “பகுத்தறிவு”வாதிகளும், இவர்களது கொள்கைளையும் நடைமுறைகளையும் பின்பற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாடுவது என்பது மிகவும் வெட்கக்கேடான விஷயம் என்பதோடு திருவள்ளுவரையும் திருக்குறளையும் அசிங்கப்படுத்தும் விஷயமும் ஆகும். திருவள்ளுவரை வைத்து இவர்கள் செய்வது ஈனத்தனமான அரசியல் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? திருவள்ளுவரையும் திருக்குறளையும் பெருமைப்படுத்த விரும்புவோர் திருக்குறளில் சொல்லப்பட்ட அறங்களைத் தங்கள் வாழ்வில் முடிந்த அளவு பின்பற்ற முயல வேண்டும். அது ஒன்று தான் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும்.

    -முற்றும்-

    Share
  • பழகத் தெரிய வேணும் – 32

    பழகத் தெரிய வேணும் – 32

    நிர்மலா ராகவன்

    என் செல்லமே!

    “குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கலாமா, மாமி?” ஓர் இளம் தாய் என் அம்மாவைக் கேட்டாள்.

    பதில்: “படிப்பிலே மட்டும் கூடாது”.

    எது எதற்கோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், சரியான முறையில் ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

    ஒரு குழந்தையைப்போல் இன்னொன்றை நடத்தமுடியாது. இது இன்னொரு குழப்பம்.

    அன்பைக் கொட்டி வளர்க்கப்படும் குழந்தை நல்லவனாக வளர்வான் என்றால், எத்தனை அன்பு என்ற கேள்வி எழுகிறது.

    சில குடும்பங்களில் மூத்த குழந்தை செல்லமாக வளரும். ஒரு தலைமுறைக்கு முன்புதான் வீட்டில் குழந்தை தவழ்ந்திருக்கும். அதனால், இது வரவேற்கத்தக்க அனுபவமாகிவிடுகிறது.

    “என் மூத்த பிள்ளைக்குப் பத்து விரல்களிலும் தங்க மோதிரம் போட்டு அருமையாக வளர்த்தேம்மா. இப்படிக் கெட்டுவிட்டானே!” என்று ஒரு முதியவர் என்னிடம் சொல்லிப் புலம்பினார்.

    “அதனால்தான்!” என்றேன், அசுவாரசியமாக.

    சிறு வயதிலிருந்தே அந்தப் பையன் என்ன செய்தாலும் யாரும் கண்டிக்கவில்லை. அத்துடன், அவன் கேட்டபோதெல்லாம் பணம் கிடைத்தது. அதனால், மனம் போனபடி வளர்ந்து, பதின்ம வயது முடிவதற்குள் எல்லாவித தீய பழக்கங்களும் வந்தடைந்தன.

    ‘அளவுக்கு மிஞ்சினால்’ என்று சொல்லிவைத்திருப்பது அமுதத்திற்கு மட்டுமல்ல.

    ஆனால், குழந்தைகளே அப்படிக் கவனிக்கப்பட்டால்தான் பிறருக்குத் தன்மேல் அன்பு என்று தவறாக நினைப்பார்கள். கண்டிக்கும் உறவினர்கள் வேண்டாதவர்கள் ஆகிவிடுவார்கள்.

    அவர்களுக்குத்தான் அறியாமை என்றால், பெரியவர்களுக்கு புத்தி எங்கே போயிற்று?

    கதை

    சிறு வயதில் காரமாக ஏதாவது சாப்பிடுகையில், குடிக்க நீர் வேண்டுமென்று அலறுவேன்.

    ஓரிரு முறை அம்மா கொண்டுவந்து கொடுத்தாள். அதன்பின், “முதலிலேயே எடுத்து வைச்சுக்கறதுக்கென்ன?” என்றுவிட்டாள்.

    எங்கள் குடும்ப வழக்கப்படி, பாதி சாப்பிடும்போது கண்டிப்பாக எழுந்திருக்கக் கூடாது. ஒவ்வொருமுறையும் எனக்கும் முன்னேற்பாடாக குடிநீர் எடுத்து வைத்துக்கொள்ளவும் தோன்றாது.

    இப்படியே பலமுறை ஆனபிறகு, நான் சாப்பிடும்போது இடையில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டேன்.

    அம்மா காட்டியது ஆக்ககரமான கட்டொழுங்கு. மறைமுகமாக, `எல்லாவற்றிற்கும் பிறரை நம்பிக்கொண்டு இருக்காதே!’ என்று போதித்திருக்கிறாள்.

    வேறு சிலர் தாம் வளர்க்கும் குழந்தைகள் எந்த ஒன்றிற்கும் தம்மை எதிர்பார்ப்பது பெருமைக்குரிய விஷயம் என்று நினைக்கிறார்கள், அது எங்கு கொண்டுவிடும் என்று உணராது.

    கதை

    “ஒரு வயசிலிருந்தே பாபு  எங்கிட்டதான் இருக்கான். அவன் அம்மா இங்கே வந்திருந்தபோது, அவகூட போகமாட்டேன்னு என்னைக் கெட்டியாப் பிடிச்சுண்டான்,” என்று பெருமை பேசுவாள் பாட்டி.

    அந்த வயதுக் குழந்தைக்கு அவ்வளவெல்லாம் தெரியுமா என்பது சந்தேகம்தான்.

    பாபுவின் தாய் அகாலமாக இறந்தது பாட்டிக்கு சௌகரியமாகப் போயிற்று. தனக்குத் தோன்றியபடி வளர்த்தாள். அவன் கேட்டதெல்லாம் கிடைத்தது.

    என்ன தவறு செய்தாலும், `குழந்தைதானே!’ என்ற மன்னிப்பு கிடைத்துவிடும். அதுவே அசட்டுத்துணிச்சலுக்கு வழிகோலியது.

    அரை மணிக்கு ஒருமுறை கேட்டு, காப்பி குடித்தான். ஆனால், சுறுசுறுப்பு கிடையாது. அவனுடன் சோம்பலும் வளர்ந்தது. சற்றே பெரியவனாக ஆனதும், அவனால் செய்யக்கூடிய எளிய வேலைகளைக்கூட பாட்டிதான் செய்யவேண்டும்.

    “கெஞ்சறான். பாவமா இருக்கு!” என்பாள் பாட்டி.

    தான் பார்ப்பவர்கள் எல்லாரும் தன்னை அப்படி நடத்தமாட்டார்கள் என்று புரிந்தபோது, பாபுவிற்குத் தன்னிரக்கம் மிகுந்தது.

    ‘ஏனோ என்னை யாருக்குமே பிடிக்கவில்லை,’ என்று அழுவான்.

    ‘செல்லமான வளர்ப்பு’ என்ற பெயரில் தன்னைப் பிறரது ஏளனத்திற்கு ஆளாகும்படிச் செய்த பாட்டியின்மேல் வெறுப்புதான் எழுந்தது.

    தான் எங்கு தவறிழைத்தோம் என்று அந்த பாட்டிக்குப் புரியவில்லை. `எவ்வளவு அருமையா வளர்த்தேன்!’ என்று புலம்பினாள்.

    பாபுவைப்போல் வளர்க்கப்படும் குழந்தைகளால் சிறிய மனப்பளுவைக்கூடத் தாங்கமுடியாமல் போய்விடும். எப்போதும் யாரையாவது சார்ந்து இருந்தால்தான் தைரியமாக உணர்வார்கள். இதனாலேயே நிறைய வாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.

    எவருக்கும் சில சமயங்களில் பிறரை நாட வேண்டியிருக்கும். அதற்காக, எப்போதும் பிறரை நாடுவது ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும்.

    கதை

    ஆயிஷா எங்கள் பக்கத்து வீட்டுப்பெண். ஆறு அண்ணன்மார்களுக்குப்பிறகு பிறந்த குழந்தை. தன்னைக் கொஞ்சிய தந்தையிடம் அவளும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவாள்.

    மூத்தவர்கள் உள்பட, குடும்பத்தில் அனைவரும் அவளைத் தாங்கினார்கள். மகாராணிபோலவே நடந்துகொண்டாள். ஒரு அண்ணனை மரியாதையின்றி பேசுவதையும், அவன் பொறுத்துப்போவதையும் பார்த்திருக்கிறேன்.

    பிடிவாதம், சோம்பல் என்று பல வேண்டாத குணங்கள் வந்தபோதும், யாருக்கும் அவளை தரக்குறைவாக நினைக்கத் தோன்றவில்லை.

    ஆண்களிடம் எப்படிக் குழைந்து நடப்பது என்று புரிந்திருந்ததால் அப்பாவி ஒருவனை மயக்குவது ஆயிஷாவுக்குக்  கடினமாக இருக்கவில்லை.

    ‘பாவம்!’ என்று நாங்கள் அவனுக்காகப் பரிதாபப்பட்டோம்!

    ‘நான் உனக்காக எதுவும் செய்யமாட்டேன். எப்போதும் நீதான் விட்டுக்கொடுக்க வேண்டும்,’ என்று தம்பதியரில் ஒருவர் மட்டும் அதிகாரமாக நடந்தால், தாம்பத்தியம் எப்படி மகிழ்ச்சியாக இருக்கும்?

    கதை

    இடம்: பள்ளிக்கூட ஆசிரியர்களின் அறை.

    வம்புக்கான நேரம். (பெண்கள் பொது அறிவு பெறுதல், ஒருவருடன் ஒருவர் பழகக் கற்பது என்றுகூட வைத்துக்கொள்ளலாம்)

    பிரசவமானதும் பத்தியச் சாப்பாடு, உடல் நோவு, ஓய்வே இல்லாமல் சிசுவைக் கவனிக்க வேண்டியிருப்பது என்று நாங்கள் எதிர்மறையாகவே அடுக்கியபோது, மிஸஸ் சிங் மட்டும் மாற்றுக்கருத்து தெரிவித்தாள்:

    “பிள்ளை பெற்றபிறகு எல்லாரும் என்னை மிகுந்த கரிசனத்துடன் நடத்துவார்கள். எனக்குப் பிடித்த விஷயம் அது!” என்று அவள் கூற, உடன் இருந்தவர்கள் எல்லாரும் சிரித்தோம்.

    சிறு வயதிலேயே தாயை இழந்தவள் அவள். தந்தை மறுமணம் செய்துகொண்டு, அவளை ஏதோ காப்பகத்தில் விட்டுவிட்டார். மாதாமாதம் பணம் கட்டுவதோடு அவருடைய பொறுப்பு முடிந்தது என்று எண்ணியிருந்திருப்பார்.

    அவள் வளர்ந்தபோது, அத்தியாவசியத் தேவைகள் கிடைத்தன. ஆனால், அன்புடன் கவனிக்க ஒருவரும் இல்லையே என்ற ஏக்கம் அவளுக்குள் இருந்திருக்கிறது.

    கரிசனமான கணவன்

    அன்பான கணவன் — அவ்வப்போது

    மனைவியின் உடல்நலம் கெட்டிருக்கும்போது அவள்மீது பரிவு காட்டி, `ஐயோ! உனக்கு ஏதாவது ஆகிவிட்டால், என் கதி!’ என்று கணவன் கலங்குவது அவளுக்குப் பெருமையை அளிக்கலாம்.

    ஆனால், பிற சமயங்களில் அதிகாரமாக, இல்லை, அலட்சியமாக நடத்தும் அவன் அப்போது மட்டும் அன்பாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டால், அவள் நிரந்தர நோயாளியாகிவிடும் அபாயமும் உண்டு.

    பணமே பலம்

    ‘குழந்தைக்காகச் செலவிட நேரம் கிடைக்கவில்லை,’ என்ற குற்ற உணர்ச்சியைப் போக்கிக்கொள்ள பணத்தால் ஈடு செய்கிறார்கள் பல பெற்றோர்.

    இதனால் குழந்தை புரிந்துகொள்வது: என்ன தவறு செய்தாலும் பணத்தால் ஈடுகட்டிவிடலாம்.

    தேவைக்கு அதிகமாகப் பணம் கொடுப்பதோ அவனுக்காகச் செலவழிப்பதோ அன்பில்லை. அது நம் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வழி.

    அன்புடன் கண்டிப்பும் சேர்ந்திருந்தால்தான் ஒரு குழந்தை சுயநலம் ஒன்றே குறிக்கோளாக இல்லாது, பிறர் மதிக்க வளரும்.

    ‘என் குழந்தை ஒரு நாள் பெரியவனாக ஆவான். அப்போது, அவனுக்கு இந்தக் குணங்கள் வேண்டியிருக்கும்’ என்று சற்றே யோசித்தால், நல்ல பழக்கங்களை விதைக்கமுடியுமே!

    அப்படி வளர்த்தவர்களை அவன் என்றும் மறக்கமாட்டான். நன்றியுடன் நினைவுகூர்வான்.

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 6

    எட்டுக் கோணல் பண்டிதன் – 6

    தி. இரா. மீனா

                         அத்தியாயம் மூன்று

    இந்த அத்தியாயத்தில் ஷ்டவக்கிரர் அகப்பற்றையும், புறப் பற்றையும் நிந்தித்து ஞானியின் இயல்பை ஜனகருக்கு விளக்குகிறார்.

    1. அழிவில்லாத ஒன்றாகிய ஆத்மாவை உண்மையில் உணர்ந்த ஆத்ம ஞானியும் தீரனுமாகிய உனக்குப் பொருள் தேடுவதில் எப்படி மகிழ்ச்சி உண்டாக முடியும் ?
    2. கிளிஞ்சல் என்று அறியாததால் வெளித் தோற்றத்தில் ஆசை ஏற்படுவது போல, ஆத்மாவை உணராத போது மோகத்தால் காணும் விஷயங்களில் விருப்பமுண்டாகும்.
    3. கடலில் அலைகள் போல எதனிடம் இந்த உலகம் விளங்குமோ அதுவே நான் என்று அறிந்த பிறகும் ஏழை போல நீ பதறுவது எதற்காக?
    4. ஒருவன் அழகான தூய அறிவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பினும், தனது அதிகமான சிற்றின்பப் பற்று இயல்பால் மாசுடையவன் ஆகிறான்.
    5. தன்னிடம் படைப்பு அனைத்தையும், படைப்பனைத்திலும் தன்னையும் காணும் முனிவனுக்கு, நான் அல்லது என்னுடையது என்ற மமகாரத் தொடர்பிருப்பது மிகுந்த அதிசயமே.
    6. அத்வைத உயர்நிலையை நாடும் யோகி, காமவயப்பட்டுக் காதல் கொண்டு சீரழிதல் விந்தையானதாகும்.
    7. ஒருவன், பலம் மிகக் குறைந்து முடிவு காலத்தை நெருங்கியிருந்தும் ஞானப் பகையானது என்றறிந்த காமத்தை விரும்புவது விந்தையே.
    8. விவேகம் கொண்டும், இம்மை மறுமைகளில் விருப்பமற்றும் உள்ள யோகிக்கு முக்தியின்பால் பயமேற்படுதல் விந்தையே.
    9. ஆத்மாவையே என்றும் காண்பவனாக உள்ள தீரன் உபசரிக்கப்பட்டாலும், துன்புறுத்தப்பட்டாலும் மகிழ்ச்சியும் கோபமும் அடைவதில்லை.
    10. இயங்கும் தன்னுடலைப் பிறர் உடலெனக் காண்பவன் புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் குழம்புவதில்லை.
    11. மாயமயமாக இந்த உலகத்தை மகிழ்ச்சியின்றிப் பார்க்கும் அறிவுடையோன் தன்னை இறப்பு நெருங்கும் போது அச்சமடைவானோ?
    12. ஆத்மஞான நிறைவு கொண்டு, ஆசை- நிராசைகளிலிருந்து விடுபட்டு, பற்றற்ற மனமுடையவனாக வாழ்பவனுக்கு யார் நிகராக முடியும் ?
    13. தனது இயல்பினாலேயே தோன்றுவதேயன்றி வேறொன்றுமில்லை என்றுணர்ந்த அறிவுடையவன், தான் ஏற்றுக்கொள்ளுவதற்கும், ஒதுக்குவதற்கும் உரிய பொருளாக எதையும் காண்பதில்லை.
    14. இருமையும், மனவெழுச்சியும்,உள்ளத்தில் அழுக்கும் இல்லாதவனுக்குத் தானாக ஏற்படும் அனுபவத்தால் இன்பமுமில்லை, துன்பமுமில்லை.

                அத்தியாயம் நான்கு

    இந்த அத்தியாயம் ஜனகர், தானுணர்ந்த ஞானநிலையின் பெருமையை ஷ்டவக்கிரரிடம் சொல்வதாக அமைகிறது.

    1. விஷய அனுபவங்களுடன் செயல்படும் ஆத்மஞானியை, சம்சார பந்தத்தைச் சுமக்கும் பாமரருடன் ஒப்பிடுதல் பொருந்தாது.
    2. இந்திரன் முதலான தேவர்கள் தீனர்களாக எந்த நிலையை அடைய விரும்புவார்களோ அந்த நிலையைத் தன் பயிற்சியால் அடைந்த போதிலும் ஒரு யோகி அதனால் மகிழ்ச்சி அடைவதில்லை.
    3. பாவ, புண்ணியங்களின் தன்மை ஞானியின் உள்ளத்தைத் தீண்டுவதில்லை, வானத்தில் புகை படிந்தது போலக் காணப்பட்டாலும், படியாதது போல.
    4. இந்தவுலகம் முழுவதும் ஆத்மாவே என்றுணர்ந்து சுதந்திரமாக வாழ்பவரைத் தடை செய்யும் தகுதி யாருக்கிருக்கிறது?
    5. பிரமன் முதல் புழு வரையுள்ள நான்கு வகை படைப்புக் கூட்டத்தில் விருப்பு வெறுப்புகளை விலக்குகிற திறமுடையவன் மெய்யறிவு ஞானி ஒருவனே.
    6. உலகிறையாகிய இரண்டில்லாப் பொருளே தானென்று யாரோ ஒருவன் உணர்கிறான். அவன் சித்தம் போல வாழ்பவன். அவனுக்கு எந்தப் பயமுமில்லை.

    தீரன் – வடமொழியில் இச்சொல்லுக்கு புலன் செயல்பாடுகளுக்கோ, வாழ்க்கையின் பல்வகையான போக்குகளுக்கோ ஆட்படாமல்  உறுதியாகவும் தெளிவாகவும் செயல்படக் கூடிய யோகி என்பது பொருள்.

    [தொடரும்]

    Share
  • படக்கவிதைப் போட்டி – 274

    படக்கவிதைப் போட்டி – 274

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    அண்ணாகண்ணன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஆசிரியர் குழுவினர் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (06.09.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 273இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 273இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    மரக்கிளையில் அழகாக அமர்ந்திருக்கும் மஞ்சள் வண்ணத் தேன்சிட்டைப் படம்பிடித்து வந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டு இப்படம் படக்கவிதைப் போட்டி 273க்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஒளிப்பதிவாளருக்கு என் நன்றி!

    காணத் தெவிட்டாத இந்தத் தேன்சிட்டை நம் வீட்டருகில் காணவேண்டுமானால் நிறைய மரம் செடிகொடிகள் நம் வீட்டைச் சுற்றி இருக்கவேண்டும்.

    இத்தொல்லுலகில் பல்லுயிர்களுக்கும் அடைக்கலம் தரும் அன்னையாகத் திகழ்பவை மரங்களே. எனவே மரங்களை அழியாமல் காப்பதன் வாயிலாக இந்தச் சின்னஞ்சிறு வன்ன (அழகிய) குருவிகளையும் நாம் காக்கமுடியும்!

    கண்கவர் சிட்டைப் படத்தில் நோக்கியதால், கவிபாட, பல்வேறு கற்பனைகளை மனத்தில் தேக்கிவைத்துக் காத்திருக்கும் கவிஞர்களே வருக! உம் கற்பனைகளைக் கட்டவிழ்த்து விடுக!

    *****

    ”எல்லைகள் தாண்டியே தொல்லையில்லாப் பயணம் செய்கிறாய்! உடைமைகள் மீது ஆசைகொள்ளும் மடமை உனக்கில்லை” என்று சிட்டுக்குருவியின் சுதந்தர வாழ்வை விதந்தோதுகின்றார் திரு. காந்திமதிநாதன்.

    சுதந்திர பறவை

    எங்கு வேண்டுமானாலும்
    எப்பொழுது வேண்டுமானாலும்
    எல்லைகள் தாண்டியே பயணம்

    உடைமை கொண்டாட்டமில்லை
    மடமை கொண்டாடுவதில்லை

    ஆசைகள் பிறப்பதில்லை
    யாரையும் பின்பற்றுவதில்லை

    என்னை வழிநடத்துபவன் என்
    என்னுள்ளே இருப்பதால்
    சூழ்ச்சி வலையில்
    வீழ்ச்சிக்கு வழியில்லை

    என்னைக் கேட்டுத்தான்
    எல்லாமே நடக்கணும்
    சர்வாதிகார சிந்தனை
    சந்நதிக்கே இல்லையப்பா

    மானிடா
    உங்களுக்குள்ளே
    எத்தனை எத்தனை பிரிவுகள்

    பிரிவுகளுக்குள்ளே
    எத்தனை எத்தனை
    உட்பிரிவுகள்

    வளர்கிறோமே
    வாதாடுவாய்

    சாதனைகள்
    பட்டியலிடுவாய்

    ஒரே கேள்வி

    நிம்மதியாக
    வாழ்கிறாயா?

    *****

    ”மரக்கிளையில் கூடுகட்டி மறைவாக வாழ்ந்தாலும் இரக்கமற்ற மனிதனால் அதற்கும் ஆபத்து வந்துவிடுவதைக் கலக்கத்தோடு பார்த்திருக்கும் பறவை இது” என்று பறவை வாழ்வின் பரிதாபநிலையை விளக்குகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அவன் செயல்…

    சிறகில்
    சுதந்திரத்தைக் கட்டிப்
    பறக்கும் பறவைக்கு
    வசப்பட்டுவிடுகிறது
    வானம்..

    மண்ணில்தான்
    மாறுபாடாகிறது மனிதனால்..

    உயர்ந்த மரக்கிளையில்
    ஓவியமாய்க் கூடுகட்டி
    இனத்துடன்
    ஒற்றுமையாய் வாழ்ந்தாலும்
    இடர்ப்பாடு வந்துவிடுகிறது
    இவனால்-
    மரத்தையே வெட்டிவிடுகிறானே
    அடியோடு..

    கலக்கத்துடன்
    பார்த்துக்கொண்டிருக்கிறது
    பறவை யொன்று…!

    *****

    ”துணையைப் பிரிந்த தாபமோ? குருவிக்கூட்டம் தள்ளிவைத்ததால் வந்த கோபமோ? எதுவாக இருந்தாலும் தன்னம்பிக்கை தளராதே!” என்று சிட்டுக்குத் துணிவூட்டுகின்றார் திரு. கோ. சிவகுமார்.

    தன்னம்பிக்கை

    தன் துணை
    தனிமைப்படுத்தியதின்
    தாபமோ!

    தன் கூட்டம்
    தள்ளி வைத்ததின்
    கோபமோ!

    தன்னந்தனியாய்
    தண்ணீருக்கான
    தேடலோ!

    தனியொரு பறவையாய்த்
    தடித்த மரக்கிளையில்
    தவிக்க விட்டது
    தலைவிதியென்று
    தளராதே குருவியே!

    தன்னம்பிக்கையையும்
    தைரியத்தையும்
    தடைகளைத்
    தகர்த்திடும் ஆயுதங்களாக்கு!

    தவிக்க விட்ட
    சொந்தங்கள்
    தன்னால் வரும்
    உன் பின்னால்!

    *****

    ”ஆட்டம் காட்டும் கிளை அமர்ந்தும் வாட்டம் முகத்தில் காட்டிவைத்து
    அழுது பொழுதைப் போக்காமல் நிலையாய் நிற்கும் உறுதி சொன்னாய்” என்று சிட்டுக்குருவி தனக்குச் சொன்ன நல்ல சேதியை நமக்கும் சொல்லியிருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    சிட்டுக்குருவிகள் சொல்லும் சேதி

    காலை எழுந்து கடமையைச் செய்ய
    மாடத்தில் தினமும் கூவிடுவாய்
    மாலை நேரமாய் வீடுவந்து
    சொந்தம் கூடி வாழச் சொல்லிடுவாய்

    சோம்பித் திரிந்து வாடிடாமல்
    உழைப்பைக் கொண்டே உலகைச் சுற்றி
    உண்மைக் களிப்பைப் பெற்று வாழும்
    சிறப்பைத் தினமும் காட்டிடுவாய்

    படைப்பின் நியதிகள் மீறிடாமல்
    அடைந்து கிடந்து தேங்கிடாமல்
    சிறகை விரித்துப் பறந்து செல்லும்
    விடுதலை வேட்கை விதைத்திடுவாய்

    ஆட்டம் காட்டும் கிளை அமர்ந்தும்
    வாட்டம் முகத்தில் காட்டி வைத்து
    அழுது பொழுதைப் போக்காமல்
    நிலையாய் நிற்கும் உறுதி சொன்னாய்

    சின்னச்சின்ன குருவி நீயும்
    சொல்லும் சேதிகள் ஏராளம்
    எண்ணத்தில் அவற்றை நிலையிருத்தி
    முன்னேற்றம் நாங்களும் கண்டிடுவோம்…

    *****

    குருவியின் படத்துக்குப் பொருத்தமாய்க் கருத்து அருவிகளைப் பாயவிட்டிருக்கும் கவிஞர்களை நேயத்தோடு பாராட்டுகின்றேன்.

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது அடுத்து…

    மஞ்சள் வெல்வெட்டில்
    கருப்புநிறக் கருகுமணி உன் கண்கள்!
    பேனாவின் கூர்மை கொண்ட உன் அலகு!
    பதிய வைத்த கால்களுடன்
    மரக்கிளையில் நீ ஊஞ்சலாடும் அழகு
    நளினத்தின் நளினம்!

    இயந்திர நகர நரக வாழ்க்கையில்
    உன்றன் குரலை மறந்திருந்தோம்!
    ஊரடங்கில் உன்றன் குரல்
    கேட்கக் கேட்க எத்தனை இனிமை!
    அமைதியினிடையில் ஆனந்தம் தந்ததே…
    இறுகிய மனத்தூடே இனிமை தந்ததே…
    உன்னிசையைத் தந்து கொண்டேயிரு
    நாங்கள் குதூகலிக்க!
    மஞ்சள் மைனாவே
    மறவாதே எங்களை!!

    ”மஞ்சள் வெல்வெட்டில் கருகுமணிகளாய் மின்னும் கண்களோடும், பேனாவின் கூர்மைகொண்ட அலகோடும் மரக்கிளையில் நீ ஊஞ்சலாடும் அழகே அழகு! உன்னிசையைக் கேட்டுமகிழும் இன்பத்தை நித்தமும் எமக்குத் தா” என்று மஞ்சள் சிட்டைக் கொஞ்சி அழைக்கும் இந்தக் கவிதையின் ஆசிரியர் திருமிகு. சுதா மாதவனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • திருவள்ளுவர் யார்? – 7

    திருவள்ளுவர் யார்? – 7

    புதுக்கோட்டை பத்மநாபன்

    “பொறிவாயில் ஐந்தவித்தான்”

    “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறி நின்றார் நீடு வாழ்வார்”

    என்பது அடுத்த குறட்பா.

    ஐம்பொறிகளை அடக்கிய இறைவனின் பொய்யில்லாத ஒழுக்கத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் என்பது இக்குறட்பாவின் கருத்து.

    விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் “ஜிதேந்த்ரிய:” என்ற ஒரு நாமமுண்டு. அதற்கு ‘புலன்களை வென்றவன்’ என்று பொருள். பகவான் மனிதனாக அவதாரம் செய்தாலும் சராசரி மனிதனுக்குள்ள புலன் விஷயங்கள் அவனிடம் நெருங்குவதில்லை. ராமாவதாரத்தில் அவன் வாழ்ந்து காட்டிய நெறிமுறைப்படியும் கிருஷ்ணாவதாரத்தில் அவன் உபதேசித்த நெறிமுறைப்படியும் வாழ்பவன் இவ்வுலகில் நீண்டகாலம் வாழ்வான் என்பதே திருவள்ளுவர் இங்கு கூற வரும் கருத்து.

    ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. ’பொறி’ என்ற சொல்லுக்கு ‘தீப்பொறி’, ‘அழகு’ என்ற பொருள்களும் உண்டு. ப்ரளய காலத்தில் தீப்பொறிகளை உமிழ்கின்ற அல்லது அழகான தனது திருவாயில் (‘திருப்பவழச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ’ என்று கோதையார் அனுபவித்த கோலத்திருவாயன்றோ அது!) ஐந்தின் மடங்கான தத்துவங்களை எல்லாம் உள்ளடக்கிய ப்ரபஞ்சத்தை அவித்துக்கொள்ளும் அல்லது விழுங்கிவிடும் திருமால் என்ற பொருளும் உண்டு. தனது அடியார்களின் புலன் விஷயமான உணர்வுகளை அறவே அழித்துவிடுபவன் என்றும் பொருள் கொள்ளலாம். இதைத்தான் “ஐந்து இருள் அறநீக்கி நான்கினுள் துடைத்து தம் ஒன்றாற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுதேத்தி, நின் புகழ் விரித்தனர்” (பரிபாடல்-4) என்று சங்க இலக்கியமும் கூறுகிறது. ஆகவே இந்தக்குறட்பாவும் திருமாலைப் பற்றியே பேசுகிறது என்பது தெளிவாகிறது.

    “தனக்குவமை இல்லாதான்”

    அடுத்த குறட்பாவில் பகவானைத் “தனக்குவமை இல்லாதான்” என்று அழைக்கிறார் திருவள்ளுவர். “न ते विष्णो जायमानो न जातो देव महिम्नःपरमन्तमाप” (ந தே விஷ்ணோ ஜாயமானோ ந ஜாதோ தேவ மஹிம்ந பரமந்த மாப-ரிக் வேதம்-7-99-2) என்று ரிக்வேதம் பகவானைத் துதிக்கிறது. “பகவானே! விஷ்ணோ! பிறக்கின்றவனும் பிறந்தவனும் உன் பெருமையின் மேல்எல்லையை அறியவில்லை” என்பது இந்த ரிக்வேத வாக்யத்திற்குப் பொருள்.

    விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் ‘அனுத்தம’, ‘அதுல:’ என்று இரண்டு நாமங்கள் வருகின்றன. ‘அநுத்தமன்’ என்றால் ‘தனக்குமேல் உயர்ந்தவன் இல்லாதவன்’ என்று பொருள். ‘அதுலன்’ என்றால் ‘தனக்கு ஸமமானவன் எவனும் இல்லை’ என்று பொருள். “न त्वत्समोऽस्त्यभ्यधिकःकुतोऽन्यो लोकत्रयेऽप्यप्रतिमप्रभाव”(ந த்வத் ஸமோஸ்த்யப்4யதி4க:குதோந்யோ லோகத்ரயேப்யப்ரதிம ப்ரபா4வ -கீதை-11-43) என்று கீதையிலும் சொல்லப்பட்டது. “மூவுலகிலும் உனக்கு ஸமமானவன் இல்லாதபோது உயர்ந்தோர் எங்கிருப்பர்” என்பது இந்த கீதை வசனத்தின் பொருள்.

    “இன்னோர் அனையை இனையயால் என அன்னோர் யாம் இவண் காணாமையின்” (பரிபாடல்-1) என்றும் “நின்னைப்புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ முன்னை மரபின் முதுமொழி முதல்வ” (பரிபாடல்-3) என்றும் எம்பெருமான் விஷயமாகச் சங்க இலக்கியம் பேசுகின்றது. அதனால் திருவள்ளுவர் குறிப்பிடும் தனக்குவமை இல்லாதான் திருமால்தான் என்பதில் ஐயமில்லை.

    “அற ஆழி அந்தணன்”

    அடுத்த குறட்பாவில் பகவானை “அற ஆழி அந்தணன்” என்று குறிப்பிடுகிறார். இதன் மூலம் பகவானின் அஸாதாரண அடையாளமான ஆழிப்படையை நினைவுபடுத்துகிறார் திருவள்ளுவர். பகவான் தன் கையில் வைத்திருக்கும் ஸுதர்ஶனச் சக்கரத்தால் உலகில் தர்மத்தைக் குலைக்கும் துஷ்டர்களை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டுகிறார். உலகில் தர்மத்தை நிலைநாட்டவே சக்கரத்தைத் தனது கையில் தரித்திருக்கிறான் பகவான். அதனாலேயே “அறஆழி” என்று குறிப்பிட்டார்.

    “चतुर्भिस्साकं नवतिञ्च नामभिश्चक्रं न वृत्तं व्यतीनवीविपत्” (தனது ஸுதர்ஶனச் சக்கரத்தைச் சுழற்றுவதுபோல், தொண்ணூற்று நான்கு அவயவங்களைக் கொண்ட காலச் சக்கரத்தையும் விஷ்ணு தன் கையில் வைத்துக்கொண்டு சுழற்றுகிறார்) என்று ரிக்வேதம் (ரிக்-1-155-6) கூறுகிறது. இதனால் ஸுதர்ஶனமே காலச் சக்கரமாகவும் இருக்கிறது என்பது தெளிவாகிறது. “மாநிலம் இயலா முதல்முறை அமையத்து நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய்மொழி மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே”(பரிபாடல்-3) என்று எல்லா உலகத்தின் பாதுகாப்பும் பகவானது திருச்சக்கரத்தின் நிழலில் தான் உள்ளது என்று சங்க இலக்கியமும் கூறுகிறது.

    உலகில் அந்தணர்களையும் அவர்களது தர்மமான வைதிக நெறியையும் ஒரு மன்னன் பாதுகாக்க வேண்டும் என்று ‘ஆபயன் குன்றும்’ ‘அந்தணர் நூற்கும்’ என்ற குறட்பாக்கள் மூலம் திருவள்ளுவரே கூறுகிறார். வேத வைதிக நெறியான அந்தணரின் அறம் தான் உலகில் உள்ள மற்றவர்களின் அறங்களுக்கும் அடிப்படையாக உள்ளது. உலகில் அந்தணருக்கும் அவர்களது அறத்திற்கும் நலிவு ஏற்படுகின்ற பொழுது அதர்மம் தலைதூக்கி விடுகிறது. பகவான் அந்த அறத்தை நிலைநாட்டி உலகத்தைக் காக்கவே தனது அவதார காலங்களில் அந்தணர் வடிவிலும் தோன்றியிருக்கிறான். அதனால்தான் ‘அந்தணன்’ என்று பகவானைக் குறிப்பிட்டார் திருவள்ளுவர். அதனால் இக்குறட்பாவும் திருமாலைப் பற்றியே பேசுகிறது என்பது தெளிவாகிறது. 

    எண்குணத்தான்

    அடுத்த குறட்பாவில் பகவானை எண்குணத்தான் என்ற சொல்லால் அழைக்கிறார் திருவள்ளுவர். சாந்தோக்ய உபநிஷத்தில் “एष आत्माऽपहतपाप्मा विजरो विमृत्युर्विशोको विजिघत्सोऽपिपास्सत्यकामः सत्यसंकल्पः” (பாபமற்றவன், கிழத்தன்மையற்றவன், மரணமற்றவன், ஶோகமில்லாதவன், பசியற்றவன் தாக மற்றவன், உண்மையான எல்லா இன்பங்களையும் உடையவன், வீணாகாத ஸங்கல்பத்தை உடையவன்) என்று பரமாத்மாவுக்கு எட்டு குணங்கள் இயல்பாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதை குணாஷ்டகம் என்று கூறுவர். முக்தி பெற்ற நிலையில் தான் ஜீவாத்மாவுக்கு இக்குணங்கள் ஏற்படுகின்றன.

    கோரர் என்ற ரிஷி, ஒரு க்ருஷ்ண பக்தர். ஸ்ரீ கிருஷ்ணனைப் பரமாத்மா எனப் புரிந்துகொண்டு தன் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீகிருஷ்ண உணர்வில் ஈடுபட்டிருந்ததால் அவரது இறுதிக் காலத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணனைக் காணும் பேறு பெற்றதுடன் மேற்படி எட்டு குணங்களை அடைந்து முக்தரானார் என்ற விஷயம் மேற்படி உபநிஷத்திலேயே சொல்லப்படுகிறது. பகவான் அநந்த கல்யாண குணங்களை உடையவன். அவனது குணங்களை எண்ண முடியாது. முக்தி பெறும் ஜீவாத்மாக்கள் பகவானிடமுள்ள பல்வேறு குணங்களில் குறிப்பாக எட்டு குணங்களை மட்டும் அடையும் தகுதி பெறுகிறார்கள் என்பதை உணர்த்தவே மேற்படி எட்டு குணங்களை மட்டும் உபநிஷத் எடுத்துக் காட்டுகிறது. அதுவே குணாஷ்டகம் என்று ப்ரஸித்தி பெற்றுவிட்டது. முக்தி பெற்றோருக்குத் தனது எட்டு குணங்களை மட்டும் அநுக்ரஹிப்பவன் என்பதால் தான் பகவான் “எண்குணத்தான்” என்றும் ப்ரஸித்தியடைந்தான்.

    பரமாத்மாவின் இந்த எட்டு குணங்களை மட்டும்தான் முக்தி பெற்ற நிலையில் ஒரு ஜீவாத்மா பெற முடியுமேயொழிய பகவானின் மற்ற குணங்களைப் பெற முடியாது. அதனால் முக்தி பெற்ற நிலையில் ஒரு ஜீவாத்மா, பரமாத்மாவோடு எல்லா வகையிலும் ஸாம்யத்தை அடைந்து விட முடியாது. இதுவே வேதாந்தத்தின் முடிவு. பரம வைதிகரான திருவள்ளுவர் அதை மனதிற் கொண்டுதான் பகவானை எண்குணத்தான் என்கிறார்.

    பகவானது குணங்களை எண்ணினால் எண்ணிக்கொண்டே இருக்கலாம். அதற்கு முடிவில்லை. அதனாலும் எண்குணத்தான் என்பது பொருத்தம்தான். ‘எண்பதத்தான்’(குறள்-548) ‘எண்பதத்தால்’ (குறள்-991) என்ற இடங்களில் போல பகவானின் ஸௌலப்ய குணத்தைக் குறிப்பிடுவதற்காகக் கூட ‘எண்குணத்தான்’ என்று சொல்லலாம். இவ்விடத்துக்கு உரை செய்த பரிமேலழகர் எண்வகைப்பட்ட குணங்களை உடையானது என்று பொதுவாகச் சொல்லிச் செல்கிறாரேயொழிய அந்த குணங்கள் எவை என்னும் விஷயத்தில் தன் கருத்தாக எதையும் குறிப்பிடவில்லை.

    இது குறித்துப் பலருடைய கருத்தை வெளிப்படுத்துமிடத்தில் ஶைவ ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளதையும் குறிப்பிடுகிறார் பரிமேலழகர். ஶைவாகமத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று தான் கூறுகிறாரேயொழிய, திருவள்ளுவர் ஶைவாகமத்தைப் பின்பற்றியே எண் குணத்தான் என்று கூறினார் என்று அவர் சொல்லவில்லை. ஏனெனில் ஶைவாகமம், ஶைவ ஸித்தாந்தம் இவையெல்லாம் திருவள்ளுவர் காலத்தில் தமிழ்நாட்டில் இல்லை.

    திருவள்ளுவர் சங்கத் தமிழர்களின் மரபில் வந்தவர். சங்கத் தமிழர்கள் இடம் சார்ந்து பல தெய்வங்களை வழிபட்டிருந்தாலும் வைதிக தெய்வமான திருமாலையே பரம்பொருளாகக் கருதி வழிபாடு செய்தனர். வேறொரு தெய்வத்தை அவர்கள் பரம்பொருளாகக் கருதவில்லை. இதற்கு சங்க இலக்கியங்களே சான்றாக உள்ளன. சங்க இலக்கியங்கள் முழுவதிலும் திருமாலின் அவதாரச் செய்திகளும் பரத்வமும் தான் பேசப்படுகின்றன.

    ருத்ரனைக் குறித்த சில குறிப்புகள் சில இடங்களில் வருகின்றனவேயொழிய ஶைவாகமம் ஶைவ ஸித்தாந்தம் இவற்றில் கூறப்படும் ஶிவனைப் பற்றிய ஒரு சிறு குறிப்புக் கூடச் சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. ஶிவன். ஶைவம் என்ற சொற்களே சங்க இலக்கியங்களில் இல்லை. சங்கத் தமிழர்கள் வேத வைதிக நெறியையும் அதைப் பின்பற்றும் அந்தணர்களையும் ஆதரித்துப் போற்றியவர்கள் என்பதைச் சங்க இலக்கியங்களிலிருந்து நாம் அறிய முடிகிறது. அந்த வகையில் இந்தக் குறட்பாவில் சொல்லப்படும் எண்குணத்தான் என்பது தமிழர்களின் வைதிக தெய்வமான திருமாலைத்தான் குறிக்கும் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

    தொடரும்…

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 12 (சேரிமக்கள்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 12 (சேரிமக்கள்)

    ச. கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர் & தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    சிறுபாத்திர வரிசையில் அடுத்து இடம்பெறுவது சேரிமக்கள்  என்னும்   தொகைப்பாத்திரம் ஆகும். ‘சேரிமக்கள்’ என்னும் தொடர் ஒரு பாடலிலும் இல்லை. பாடல் காட்சியில் சேரி மக்கள் நேரில் இடம் பெறவுமில்லை. ‘சேரி’ என்னும் இடவாகு பெயர் சேரிமக்கள் அனைவரையும் குறிப்பாகச் சுட்டுகிறது. தொல்காப்பியரின் ‘பாடல் சான்ற புலனெறி வழக்கி’ல்  சேரிமக்கள் கூற்றிற்கு உரியவராக   இடம் பெறவில்லை. அகப்பாடல்களில் தோழி,   தலைமக்கள் ஆகியோர்  கூற்றில் அவர்கள் பேசியவராக இடம் பெறுகின்றனர்.

    இடவாகுபெயர்ச் சிறுபாத்திரம்
    செவிலித் தாயிடம் அறத்தோடு நிற்கும் தோழி;
    “……………………………. அலர்வாய்
    அம்மென் சேரி கேட்பினும் கேட்க” (அகம்.- 110)

    என்கிறாள். ‘வேண்டுமாயின் அலர் தூற்றும் சேரிமக்களிடம் சென்று கேட்டுக்கொள்; நாங்கள் கடலில் ஆடி; சிற்றில் இழைத்து; சிறுசோறு சமைத்து ஆயத்தோடு விளையாடிய போது; அவன் தான் விருந்துண்ண வரட்டுமா? என்று கேட்டான். இது இழிந்த மீனுணவு; உன்னால் உண்ணலாகாது என்று தான் பதிலிறுத்தோம்…’ எனத் தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் விதமாகப் பேசும் தோழி சேரியை நமக்கு அலர் தூற்றும் மக்கட்கூட்டமாகத் தான் அறிமுகப் படுத்துகிறாள்.

    “கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
    அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய”த் (அகம்.- 347)

    தலைவன் பிரிந்து செல்கிறான் என்று தோழியிடம் வருந்துகிறாள் தலைவி. ‘சேரிமக்கள் பழி கூற; அது கமுக்கமான அம்பலாகத் தொடர்ந்து; ஊர்மக்களால் ஆரவாரமிக்க அலராவதை நாம் மட்டுமே எதிர்கொள்ளும்படி; நம்மைத் தவிக்கவிட்டு நீங்குகிறான்’ என்கிறாள். இங்கும் சேரி இடவாகு பெயராயிற்று.

    தலைவியின் பண்பைத் துலக்கும் சேரி

    தலைவியின் பாத்திரப் படைப்பைத் துலங்க வைக்க சேரி என்னும் இடவாகு பெயர்ச் சிறுபாத்திரம் பயன்பட்டுள்ளது.

    “சேரியும் மறைத்தாள் என்தோழி” (கலி.- 44)

    எனத் ‘தன் துன்பத்தைச் சேரிமக்கள்  அறியாவண்ணம் பொறுத்துக் கொண்டு மறைத்து வாழ்ந்த தலைவி; தலைவனுக்கு அவப்பெயர் வராமல் காத்தவள் என்னும் பெருமைக்கு உரியவள்’ என்பது தோழி கூற்றாக இடம்பெறும் தலைவி பற்றிய புகழ்மொழி ஆகும். இங்கும் சேரி இடவாகு பெயராக அங்கு வாழ்ந்த மக்களைக் குறிக்கிறது.

    இடப்பெயராகும் சேரி

    பல பாடல்களில் சேரி  இடப்பெயராக அமைந்துள்ளது.

    “ஊரும் சேரியும் ஓராங்கு அலர்எழ”த்  (அகம்.- 383)

    தன் மகள் சென்று விட்டாளே எனச் செவிலித்தாய் புலம்புமிடத்து; சேரி இடப்பெயராகவே பயின்று வருகிறது.

    “வருகதில் அம்ம எம் சேரி” (அகம்.- 276)

    என்று பரத்தை கூறுமிடத்தும்; ‘குதிரையின் மேல் ஏறி எம் சேரிக்கு வந்து தன் தாரும் கண்ணியும் காட்டினான்’ என்று பரத்தை தலைவர்க்குப் பாங்காயினோரிடம் கூறும் போதும் சேரி இடப்பெயரே.

    “கலிமா கடைஇ வந்து எம் சேரி
    தாரும் கண்ணியும் காட்டி” யதால் (நற்.- 150)

    நான் அவனிடம் மயங்கினேன் என்கிறாள் பரத்தை.

    சேரியின் தன்மைகள் 

    சேரி ஊர்ப்புறத்தில் இருந்தது. ஊரை ஒட்டி அமையாத சேரிகள். ஒன்றுக்கு மேற்பட்டனவாய்ச் சேர்ந்து சீறூர் எனப்பட்டன. சேரி புல் வேய்ந்த  குடிசைகளுடன் வளம் மிகுந்ததாகத் தலைவருடன் இருந்தது.

    “ஊர் அலரெழச் சேரி கல்லென” (குறுந். – 262)

    எனும் போதும்; இரவுக்குறி வந்து நீங்கும் தலைவனை எதிர்ப்படும் தோழி;

    “ஊரும் சேரியும் உடனியைந்து அலர் எழ” (அகம்.- 220)

    எனச் சூழலை உணர்த்தும் போதும்; ஊரும் சேரியும் அடுத்தடுத்து இருந்தமை உறுதிப்படுகிறது.

              “…… நல்லூர்……
    ……தமர்தம் அறியாச் சேரியும் உடைத்தே” (நற்.- 331)

    எனத் தலைவனை இரவுக்குறிக்கு ஊக்கும் தோழி ‘இவ்வூரைச் சார்ந்த சேரியில் இரவில்  இவர் நம் உறவினர் என்று கூட  அடையாளம் காண இயலாது; ஆகையால் அயலானாகிய நீ தயங்காமல் வா’ என்கிறாள். இங்கும் ஊரும் சேரியும் அடுத்தடுத்து இருந்தமை தெளிவாகிறது.

    “உறைக்கிணற்றுப் புறச்சேரி” (பட்டி.- அடி- 76)

    என்ற தொடர் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.

    “ஊரலம் சேரி சீறூர்” (நற்.- 77)

    எனத் தலைவன் தன் நெஞ்சோடு கூறும் போது; ஊரளவு பெரிதாக இல்லாமல் ஒன்றோடொன்று சேர்ந்த சேரிகள் சீறூர் என்று சொல்லத்தக்க அளவு நிலவின என அறிகிறோம். அதனால் தான்;

    “நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
    கொள்ளீரோ எனச் சேரிதொறும்” (அகம்.- 390)

    பண்டமாற்றுக்குக் குரல் கொடுக்கும் உமட்டி சிற்றூரின் ஒவ்வொரு சேரியிலும் ஓங்கிக் கூவியதாகத் தலைவன் பாங்கனிடம் விவரிக்கிறான்.

    “புலாலம் சேரி புல்வேய் குரம்பை” (அகம். 200)

    என்று சுட்டுவதில் சேரி புல்வேய்ந்த குடிசைகளுடன் இருந்தமை தெரிகிறது.

    “மல்லல் எம் சேரி கல்லெனத் தோன்றி
    அம்பல் மூதூர் அலரெழ” (நற்.- 249)

    என்ற தலைவியின் கூற்றில் சேரியின் வளம் முதன்மை பெற்றுக் கௌவை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    சேரியின் தலைவரும் இருந்தனர். அகப்பாடல் தலைவி தன்னை;

         “சேரி கிழவன் மகளேன் யான்” (கலி.- 91)

    என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறாள்.

    இரவுக்குறியை மறுக்கும் தோழி;

    “அம்பல் சேரி அலர் ஆங்கட்டே” (ஐங்.- 279)

    எனச் சேரிமக்களின் தன்மையை நறுக்குத் தெறித்தாற் போல உணர்த்துகிறாள். ‘தம்முள் முகிழ்த்த பழிச்சொல்லை யாவரும் அறியச் சென்று தூற்றும் மக்கள் வாழுமிடம்’ என்ற இவ்விமர்சனம் ஊர்மக்களுக்கும் பொருந்துவதே.

    சேரியின் வகைகள் காட்டும் சமூகநிலை

    வாழும் மக்கள் அடிப்படையில் பரதவர் சேரி, பரத்தையர் சேரி, கூத்தர் சேரி, பாணர் சேரி, மறவர் சேரி எனச் சேரிகளைத் தொகைநூல்கள் வகைப்படுத்துகின்றன.

    “வாலிழை மகளிர் சேரி” (நற்.- 380)

    என்ற பயன்பாடு பரத்தையர் சேரி இருந்தமையை உணர்த்துகின்றது.

    “ஒள்ளிழை மகளிர் சேரி” (அகம்.- 146);

    அதே பரத்தையர் சேரியை மாற்றுச் சொற்களால் உரைக்கிறது.

    “புன்னை ஓங்கிய புலாலம் சேரி” (குறுந்.- 351);

    “புன்னையம் சேரி” (குறுந்.- 320)

    என்றெல்லாம் பரதவர் சேரி பாடப்பெற்றுள்ளது. அங்கு சங்கு வளையல் செய்வோரின் குடியிருப்பு;

    “இலங்குவளை இருஞ்சேரி” (மது.- அடி- 136)

    எனப் பெயர் பெறுகிறது.  வையை வெள்ளம்

    “ஆடுவோர் சேரி அடைந்தென”ப் (பரி.-7)

    பாடப்படுவதால் கூத்தர் சேரி இருந்தமை அறிகிறோம். பாணர் சேரியை;

    “மீன் சீவும் பாண்சேரி” (புறம்.- 348& மது.- அடி- 269)

    என்கிறது செவ்விலக்கியம். பொருநர் என்று ஆங்காங்கு சுட்டப்படும் வீரர் வாழ்ந்த சேரி;

    “மறம்கொள் சேரி” (மது.- அடி- 594)

    ஆயிற்று.   வயலில் பணிசெய்யும் உழவராகிய  திணைமாந்தரும் பிறரும் ஊரில் வாழச்; சேரியில் பிற தொழில் செய்பவர் வாழ்ந்தமை அறிகிறோம். வேளாண்மை செய்வோர் ஊர்மன்றங்களில் எல்லாம் விழாக் காலங்களில் குரவை அயர்ந்ததாகப் பாடும் தொகைநூல்கள்; சேரியில் துணங்கைக்  கூத்து நிகழ்ந்ததாகப் பாடுவது; ஊர்மக்களுக்கும் சேரிமக்களுக்கும் இடையில் இருந்த கலாச்சார வேறுபாட்டைச் சுட்டுவதாக அமைகிறது.

    “துணங்கை அம்தழூஉவின் மணம்கமழ் சேரி” (மது.- 329);

    “மன்றுதொறும் நின்ற குரவை
    சேரிதொறும் உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ” (அகம்.-390) போன்ற தரவுகள் ஒப்பீட்டு ஆய்விற்குரியன.

    முடிவுரை 

    சேரிகள் ஊர்ப்புறத்தில் இருந்தன. ஊரை ஒட்டி அமையாத சேரிகள் ஒன்றுக்கு மேற்பட்டனவாய்ச் சேர்ந்து சீறூர் எனப்பட்டன. சேரி புல் வேய்ந்த  குடிசைகளுடன் வளம் மிகுந்ததாகத் தலைவருடன் இருந்தது. பல பாடல்களில் சேரி  இடப்பெயராக அமைந்துள்ளது. வயலில் பணிசெய்யும் உழவராகிய  திணைமாந்தரும் பிறரும் ஊரில் வாழச்; சேரியில் பிற தொழில் செய்யும் பரதவரும், பாணரும், பொருநரும், ஆடல் கலைஞரும், பரத்தையரும் வாழ்ந்தனர். வாழும் மக்கள் அடிப்படையில் சேரிகளைத் தொகை இலக்கியம் வகைப்படுத்துகிறது.  ஊர்மன்றங்களில் எல்லாம் விழாக் காலங்களில் குரவை அயர; சேரியில்  துணங்கைக் கூத்து நிகழ்ந்தமை; ஊர்மக்களுக்கும் சேரிமக்களுக்கும் இடையில் இருந்த கலாச்சார வேறுபாட்டைச் சுட்டுவதாக அமைகிறது. சேரிமக்கள்  என்னும்  தொகைப்பாத்திரம் தலைவியின் பண்பைத் துலங்க வைக்கும் இடவாகு பெயர்ச் சிறுபாத்திரமாகவும்; அலர் தூற்றும் மக்கட்கூட்டமாகவும் இடம்பெறுகிறது.

    Share
  • மயக்கம் எனது தாயகம்

    மயக்கம் எனது தாயகம்

    பாஸ்கர் சேஷாத்ரி

    காலையில் எழுந்து அழகான பெண்கள் முகத்தைப் பார்

    தாயோ, மகளோ, மனைவியோ யாராக இருப்பினும் சரி

    ஒரு குழந்தையின் சிறு கைப்பிடியில்

    உன் ஆள்காட்டி விரலைச் செருகு

    அதன் கட்டில் சில விநாடிகள் இரு.

    சிரிப்பை ரசி

    விரலை எடுக்கமாட்டாய்.

    ஓங்கி வளர்ந்த மரத்தைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடு

    பூவைக் கிள்ளாமல் விரல் ஸ்பரிசத்தில் மேலும் மலரச்செய்.

    பச்சைத் தண்ணீரில் தலை நனையக் குளி.

    வானம் பார்த்துக் கண்களை விரி.

    முடிந்தால் ஒரு பூனைக்குட்டியை மடியில் கிடத்தி அதன் ரோமம் தடவு.

    வசதியிருப்பின் திண்ணையில் அடங்கு.

    உன் கண்கள் தானாய் மூடிக்கொண்டால்

    என்னைக் குறை சொல்லாதே.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-39

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-39

    தி. இரா. மீனா

    ஹெண்டத மாரய்யா

    கள் விற்கும் தொழிலைச் செய்து வந்த இவர் சரணராக மாறியவர். ’தர்மேஸ்வரலிங்கா’ இவரது முத்திரையாகும்.

    “மண்ணெனும் குடத்தின்  நடுவே
    பொன்னெனும் கள் உற்பத்தியானது
    பெண்ணெனும் வட்டிலில் பருக போதை தலைக்கேறியது.
    இந்த போதையில் மூழ்கியவர்களை
    எப்படி மிக உயர்ந்தவர்களென்பது?
    பக்தி பற்றற்றவன் என்பது இப்பக்கமே எஞ்சியது
    தர்மேஸ்வரலிங்கத்தை எட்டவில்லை“

    ஹொடே ஹூல்ல பங்கண்ணா

    புல் விற்கும் காயகம் இவரது.’ கும்பேஸ்வரலிங்க ’இவரது முத்திரையாகும்.

    1. “கட்டையை நெருப்பில் வைக்க
    ’நான் இருக்கிறேன், வேண்டாமென’
    உள்ளிருந்த நெருப்பு உரைத்ததோ?
    தான் உள்ளிருந்து உணவானது புறமிருந்த கட்டைக்கு
    இங்ஙனம், பிறருக்குத் தன்னுள் இடந்தராதவனுக்குப் பதிலில்லை
    கும்பேஸ்வர இலிங்கத்துள்ளிருக்கும்
    ஜெகந்நாதவனை அறிந்தவருக்கு“

    2. “கூலி வேலை செய்தும் விவசாயம் செய்தும்
    தூய மனத்துடன் குரு, இலிங்கம் ஜங்கமனுக்குக்
    காயகம் ஆற்றுவோனின் நிலை எப்படிப்பட்டதெனில்;
    தானாற்றும் செயலைப் பிறரிடம் செய்ய வைக்கமாட்டான்,
    தான் பெற்றது பிரசாதம், பிறர் பெற்றது
    உணவெனச் சொல்ல மாட்டான்.
    எஞ்சிய உணவுக்கும் பிரசாதத்துக்கும்
    வேற்றுமை பார்க்க மாட்டான்; இரண்டும் சமமென்பான்.
    இத்தகைய பிரசாதி கொடுக்கும் பிரசாதம் தூய்மையானது.
    அது இலிங்கமெனும் உடலில் நிலைத்த பிரசாதம்
    இங்ஙனம் வேற்றுமை காட்டாத அருவத்தின் பிரசாதியை
    கும்பேஸ்வர இலிங்கத்திலுள்ள ஜெகந்நாதன் சாட்சியாக
    நமோ நமோ என்பேன்!“

    ஹேமகல்ல ஹம்ப்பா

    ’ பரமகுரு படுவிடு சித்தமல்லி நாத பிரபுவே ’ இவரது முத்திரையாகும்.

    1. “உணவின் தேவையில்லாதவனுக்கு
    உழவின் தொடர்புண்டோ?
    வானில் பறப்பவனுக்கு
    பூமியில் நடமாடும் ஆசையேன்?
    வைரக் கவசமணிந்தவனுக்கு
    அம்பின் பயமுண்டோ ஐயனே?
    மாயமற்றவனுக்கு மாயையின் தயவேன்?
    பரமகுரு படுவிடி சித்தமல்லிநாதனுள் இணைந்தவனுக்கு
    பிறதெய்வங்களின் தயவேன்? “

    2. “நடக்க முடியாதவனுக்கு அழகிய மனைவி வாய்த்தால்
    அவர்தம் இல்லறம் நடப்பதெங்ஙனம் ஐயனே?
    பேச்சு வராதவருக்கு அரசுப் பட்டம் கிடைத்தால்
    குடிமக்கள் பரிவாரம் அரசு நடத்த முடியுமா ஐயனே?
    அஞ்ஞான குணத்தின் மாயாவி போகும் வரையில்
    மெய்ஞ்ஞான சம்சாரமுண்டோ ஐயனே?
    சம்சாரகுணம் உள்ளவரையில் பரமாத்மாவின் எண்ணமிகுமோ
    சம்சார மாயை உயிராயிருப்பவருக்கு
    தூய சம்சாரமுண்டோ ஐயனே?
    பரமகுரு படுவிடி சித்தமல்லிநாதப் பிரபுவே ”

    3. “படகு பாய்மரம் நம்பியோர்
    கடல் ஆறு தாண்டமாட்டார்களா ஐயனே?
    வில் வாளேந்தி போர்க்களம் புகுந்தோர்
    போரினை வெல்ல மாட்டார்களா ஐயனே?
    குருவை நம்பியோர் பிறப்பை வெல்லமாட்டார்களா ஐயனே?
    பரமகுரு படுவிடி சித்தமல்லிநாதப் பிரபுவே.”

    கரஸ்தல மல்லிகார்ஜூனதேவா

    ’பரமகுரு சாந்தமல்லிகார்ஜூனா ’இவரது முத்திரையாகும்.

    1. “அகத்தில் தெளிவில்லாதவனுக்கு
    புறத்தில் செயலிருந்து பயனென்ன?
    பார்வையற்றவனின் வாழ்வு போலாம் அது.
    புறத்தில் செயலின்றி அகத்தில் தெளிவிருந்து என்ன பயன்?
    அது சூன்யத்தின் தீபம் போலாம்
    அகத்தின் தெளிவு, புறத்தின் செயல்
    இவ்விரண்டும் இணையவேண்டும்.
    அது எங்ஙனமெனில் அகத்தில் தெளிவு புறத்தில் செயலுள்ளவனே
    பக்தனாம் மகேஸ்வரனாம் பிரசாதியாம்
    பிராணலிங்கியாம் ஐக்கியமான அடியவனாம்
    நம் பரமகுரு சாந்த மல்லிகார்ஜூனன் தானாம்.”

    2. “கடலிலுள்ள ஆலங்கட்டியைச் செதுக்கி
    தூணாக்கி வீடு கட்டிக் கொண்டு
    குடித்தனம் செய்ய முடியுமா ஐயனே?
    நெருப்பினுள்ளிருக்கும் கற்பூரத்தின் குடுவையுள்
    நறுமணம் நிரப்பி பசையாக்கி
    மகிழ முடியுமா ஐயனே?
    காற்றிலுள்ள மணம்பிடித்து
    மாலைகட்டித் தலையில் சூட முடியுமா ஐயனே?
    பாலையின் கானல் நீரைக் குடத்திலேந்தி
    சுமந்து வந்து சமைத்துண்ண முடியுமா ஐயனே?
    உமது மேன்மையறிந்து நிறைமனதுடன் பரவசமாகி
    தன்னை மறந்த பரசிவயோகிக்கு
    மறுபிறவி மீண்டுமுண்டோ?
    பரமகுரு சாந்தமல்லிகார்ஜூனனே?”

    [தொடரும்]

    Share