Blog

  • வெள்ளை இராச்சியத்தில் ஒரு கறுப்புப் புயல்

    வெள்ளை இராச்சியத்தில் ஒரு கறுப்புப் புயல்

    சக்தி சக்திதாசன்

    “இங்கிலாந்து”, “லண்டன்”, “ஐக்கிய இராச்சியம்” என்றதுமே பெரும்பான்மையான உலக மக்களின் மனங்களில் முன்னிற்பது ஐக்கிய இராச்சியம் அன்றி பெரிய பிரித்தானியா என்றழைக்கப்பட்ட நாட்டின் இராஜ குடும்பமே!

    இராஜ குடும்பத்தை அதாவது நாட்டின் கெளரவத் தலைவராக ஒரு இராஜாவையோ அன்றி ஒரு ராணியையோ கொண்டிருக்கும் ஒரு சில உலக நாடுகளில், முன்னணியில் இருப்பது ஐக்கிய இராச்சியம் என்றால் அது மிகையில்லை.

    எனது 45 வருட கால ஐக்கிய இராச்சிய வாழ்க்கை அனுபவத்தில் நான் கண்ட உண்மை, கலாச்சார விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாதுகாத்து வரும் நாடுகளில் ஐக்கிய இராச்சியம் முதன்மையானது என்பதுவே.

    இந்த இராஜ குடும்பத்தினைப் பராமரிப்பதனால் நாட்டிற்கென்ன நன்மை எனும் கேள்வி எழலாம். 2017ஆம் ஆண்டு ஒரு நிதியறிக்கை சமர்ப்பிக்கும் ஸ்தாபனத்தின் கணிப்புப்படி இராஜ குடும்பத்தினால் சுமார் 330 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ஸ் உல்லாசப் பிரயாணிகளின் வரவினாலும் மேலும் சுமார் 150 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ் இராஜ குடும்பத்தினரின் தாக்கத்தினால் கிடைக்கும் வர்த்தக உடன்படிக்கைகளினாலும் நாட்டின் நிதிக் களஞ்சியத்துக்குக் கிடைக்கிறது என்கிறது.

    அப்படிப் பார்க்கையில் இராஜ குடும்பத்தினரால் நாட்டிற்கு நன்மை இல்லாமல் இல்லை. ஆனால் அந்த இராஜ குடும்பத்தைத் தகுந்த முறையில் பராமரிப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இது சாதாரண மக்களின் வரிப்பணத்தில் இருந்தே ஒதுக்கப்படுகிறது.

    இந்த 21ஆம் நூற்றாண்டில் உலகம் அபார வேகத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் நிலையில் இத்தகைய ஒரு வெறும் சம்பிரதாயத்துக்காக மட்டும் இத்தனை செலவு செய்து இராஜ குடும்பத்தைப் பேணுவது அவசியமா? எனும் கேள்வி முடியாட்சிக்கு எதிரானவர்களிடம் இருந்து பலமுனைகளில் எழுவதையும் நாம் பார்க்கக் கூடியதாக உள்ளது.

    இந்நிலையில் தான் தற்போது ஐக்கிய இராச்சியத்தின் இராஜ குடும்பத்தினுள் ஏற்பட்டுள்ள சலசலப்பு எங்கே இதுதான் இராஜ குடும்பத்தின் சிதைவுக்கு வழிகோலிவிடுமோ என்று பல இராஜ குடும்ப ஆதரவாளர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி விட்டுள்ளது.

    எது எப்படி இருந்தாலும் ஐக்கிய இராச்சியத்தின் சம்பிரதாயத் தலைவியாக இருக்கும் இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் திடகாத்திரமான வழிநடத்துதலையும், உறுதியான நிலைப்பாட்டையும் கண்டு பிரமிக்காமல் இருக்க முடியாது.

    நான்கு குழந்தைகளுக்குத் தாயாரான எலிசபெத் மகாராணியாரின் மூத்த புதல்வரும் மகாராணிக்கு அடுத்து முடியுரிமை கொண்டவருமான இளவரசர் சார்ல்ஸ் 1981ஆம் ஆண்டு டயானா அவர்களை மணம் முடித்தார். அதேபோல மகாராணியாரின் இரண்டாவது புதல்வரான இளவரசர் ஆண்ட்ரூ 1986ஆம் ஆண்டு சாரா அவர்களை மணம் முடித்தார்.

    1992ஆம் ஆண்டு எலிசபெத் மகாராணியாரின் பிரச்சினைகள் பூதாகாரமாகின. 1992 மார்ச் மாதம் மகாராணியாரின் இரண்டாவது புதல்வரான ஆண்ட்ரூவும், அவரது மனைவியும் தாம் பிரிந்து செல்வதாக அறிவித்தனர். அவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் இருந்தனர். அதே வருடம் டிசம்பர் மாதம் மகாராணியாரின் மூத்த புதல்வரும் முடியுரிமை கொண்டவருமான இளவரசர் சார்ல்ஸும் அவரது மனைவியும் சமரசமாகப் பிரிந்து செல்வதாக அன்றைய பிரதமர் டோனி பிளேயர் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். அவர்களுக்கு வில்லியம், ஹாரி என்று இரண்டு ஆண்குழந்தைகள் இருந்தனர்,

    1993ஆம் ஆண்டு நாட்டிற்கான புதுவருடச் செய்தி அளித்த எலிசபெத் மகாராணியார், நடந்து முடிந்த 1992ஆம் ஆண்டை “Annus Horriblis“ என்று வருணித்தார். லத்தீன் மொழியில் மிகவும் பாரதூரமான வருடம் என்று குறிப்பதாகும். அதைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு முதலில் இளவரசர் ஆண்ட்ரூவும், அடுத்து இளவரசர் சார்ல்ஸ்ம் தமது மனைவியரை விவாகரத்து செய்தார்கள்.

    இளவரசர் சார்ல்ஸின் மனைவியான லேடி டயானா விவாகரத்தின் பின்னாலும் ஊடகங்களின் பரிசோதனைக்கு உள்ளானார். அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் ஊடகங்களில் அவதானிக்கப்பட்டு, அதன் தாக்கங்களை இராஜ குடும்பத்தினர் எதிர்கொள்ள வேண்டியதாகியது.

    இவையனைத்தையும் தனக்கேயுரிய மனோதைரியத்துடன் எதிர்கொண்டார் எலிசபெத் மகாராணியார். விவாகரத்து பெற்ற டயானா, காதல் விவகாரத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட எதிர்மறையான விளைவுகளை மகாராணியார் தனது குடும்பத்தின் சார்பில் எதிர்கொள்ள வேண்டிய தேவையேற்பட்டது.

    பாரிஸ் நகரத்தில் 1997ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த டயானா அவர்களின் மீது வீசிய மக்களின் அனுதாப அலையின் தாக்கத்தினால் மகாராணியார் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். அதுவும் அவரைக் கடந்து போகும் வகையில் உறுதி குலையாமல் தனது விவகாரங்களைக் கையாண்டார்.

    இங்கே எலிசபெத் மகாராணியரைப் பற்றி முக்கியமான விடயத்தைக் குறிப்பிட வேண்டும். 93 வயதான எமது மகாராணியார் 21 வயதில் திருமணமாகி அவரது தந்தையின் திடீர் மறைவுக்குப் பின்னால் 27 வயதாகும் போது இங்கிலாந்தின் மகாராணியானார். அந்த இளம் வயதில் போதிய அனுபவமின்றிப் பாரிய பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அவர், தனது இங்கிலாந்தின் மகாராணி எனும் பாத்திரத்தினுள் தன்னை வளர்த்துக்கொண்டார். வெறுமனே வளர்த்துக்கொண்டது மட்டுமில்லாமல் தன்மீது எவ்விதமான பாதகமான விமர்சனம் வராமல் நடந்துகொண்டார்.

    இங்கிலாந்து மட்டுமல்ல பொதுநலவாய நாடுகள் அனைத்துக்கும் தலைமைப் பதவியேற்று, தமது தலைமையின் கீழ் அவரது முடியாட்சியிலிருந்து விடுபட்டு குடியாட்சி பெற்ற நாடுகளை அனுசரித்து அரவணைத்துக் கொண்டார்.

    இத்தகைய பின்னணியில் ஐக்கிய இராச்சியத்தின் சரித்திரத்தில் அதிக காலம் அரசிலமர்ந்தவர் எனும் சாதனை படைத்த எலிசபெத் மகாராணியார், அவரது 93ஆவது வயதில் புதுச் சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

    மகாராணிக்கு பின்னால் அரசிலமரும் உரிமை கொண்டவர், இளவரசர் சார்ல்ஸ். இவரது இரண்டாவது புதல்வர் இளவரசர் ஹாரி. இவர் மணந்துகொண்டது கலப்பின மங்கையான மெகேன். இவர் கனடா குடியுரிமை பெற்றவர். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அமெரிக்க ஹாலிவுட்டில் நடிகையாயிருந்தவர். விளம்பரங்களில் இடம்பெற்ற ஒரு மாடல் ஆவார்

    இவர்தான் ஐக்கிய இராச்சிய இராஜ குடும்பத்தில் இணைந்த முதலாவது கலப்பு இனத்தவர் ஆவார். இவரின் தந்தை, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வெள்ளை இனத்தவர், இவரின் தாயார் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த அமெரிக்கராவார். இவர் தன்னை ஒரு கறுப்பு இனப் பெண்மணி என்று கூறிக்கொள்வதில் பெருமையடைபவர்.

    இவர்களின் திருமண வைபவமே சிறிய சலசலப்புடன்தான் நடந்தேறியது. வழக்கமான ஐக்கிய இராச்சிய அரச குடும்பத் திருமணங்கள் ஆங்கில கிறீஸ்தவ பாதிரிமாரால் நடத்தப்படும். ஆனால் இவர்களது திருமணம் கறுப்பு இனப் பாதிரியொருவரால் இவஞ்சலிக்கல் சேர்ச் எனும் முறையில் கிறீஸ்தவ பாடல்களுடன் கூடிய நிகழ்வாக இருந்தது. அத்துடன் வழக்கம் போலல்லாது அப்பாதிரியாரின் வைபவப் பேச்சு நீண்ட நேரத்திற்கு நிகழ்ந்தது, பலரின் புருவத்தையுயர்த்தியது. இத்திருமண வைபவத்தில் மணமகளான மெகன் மார்க்கல் அவர்களின் விருப்பமே முதலிடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய உலகம் பல மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. காலத்தின் கட்டாயமாக இங்கிலாந்து அரச குடும்பமும் காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டால்தான் தம்மைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது உண்மையே. அதற்கேற்ப அவர்கள் தமது நிர்வாகத்தில் மாற்றங்களைச் செய்து வருகிறார்கள் என்பதும் உண்மையே.

    ஆனால் இம்மாற்றங்கள் எனும் பெயரில் இக்காலாச்சார விழுமியத்தின் அடிப்படையையே ஆட்டிப் பார்க்க முயல்கிறார்களோ எனும் எண்ணம் ஏற்படாமல் இல்லை. மெகன் மார்க்கல் அவர்களின் வருகை, அரச குடும்பத்தினுள் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. முதலாவதாக இளவரசர் சார்ல்ஸ்க்கு அடுத்து முடியுரிமை கொண்டவரான இளவரசர் வில்லியம் அவர்களுக்கும் அவரது சகோதரர் இளவரசர் ஹாரிக்கும் இடையிலான உறவில் சிறு விரிசல் விழுந்துள்ளது என்கிறார்கள், அரச அவதானிகள். இரு சகோதரர்களும் இணைந்து நடத்திய தன்னார்வத் தொண்டு நிறுவனத்திலிருந்து இளவரசர் ஹாரி தாம் விலகிக் கொள்வதாகக் கூறியது இதற்குச் சான்றாகிறது.

    ஐக்கிய இராச்சியத்தின் வெள்ளை இனத்தவரிடையே தேசியவாத மனப்பான்மை கொண்ட பலர் இருக்கிறார்கள். ஐக்கிய இராச்சியம் உலகில் பல நாடுகளை வெற்றிகொண்டு உலகின் அதிமுக்கிய நாடாக வலம் வந்த நாட்களே தமது நாட்டிற்குப் பெருமை சேர்த்தவை என்றே இவர்கள் எண்ணுகிறார்கள். தேசியவாதத்திற்கும், இனவாதத்திற்கும் உள்ள எல்லைக்கோடு மிக மெல்லியதே.

    இத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் மனத்தில் தமது இராஜ குடும்பத்தின் மீது கொண்டிருக்கும் அபிமானம், ஒரு பக்தி என்றே கூறலாம். அந்த இராஜ குடும்பம், கலப்பில்லாத ஒரு வெள்ளை இனத்தவரின் வெளிப்பாடு என்பதில் இவர்களுக்குப் பெருமை இருந்தது.

    ஐக்கிய இராச்சியத்தில் பல இனத்தவர் குடியேறி இன்று அது ஒரு பல்கலாச்சார நாடாகக் கருதப்பட்டாலும் தமது இராஜ குடும்பம், தமது நாட்டின் தனித்தன்மையைப் பழமையை எடுத்துக் காட்டுகிறது என்றே அவர்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது

    இந்நிலையில்தான் இளவரசராக இருந்த ஹாரி, இராஜ குடும்பத்தின் ஒரு முக்கிய உறுப்பினர், ஒரு கலப்பு இனத்துப் பெண்மணி, அதுவும் தன்னைக் கறுப்பு இனப்பெண்மணி என்று இனங்காட்டிக் கொள்ளும் ஒரு பெண்ணான மெகன் மார்க்கல் அவர்களை மணமுடித்து இராஜ குடும்பத்தில் இணைத்துள்ளார்.

    வெள்ளை இனத்தவரின் மேன்மையே தமது தேசியவாதத்தின் அடிப்படை எனக் கொண்டவர்களால் இதனை ஜீரணிக்க முடியுமா என்ன? மெகன் மார்க்கல் பற்றிய விமர்சனங்கள், அவரின் பின்னணி, குடும்ப உறுப்பினர்களின் கருத்து எனப் பலதரப்பட்ட விடயங்கள் ஊடகங்களிலே ஆராயப்பட்டன.

    இவை ஒருபுறமிருக்க, புதிதாய் இராஜ குடும்பத்தில் இணைந்துகொண்ட மெகன் மார்க்கல் அவர்களின் செயற்பாடுகள் இவ்வூடகத்துறையின் விமர்சனங்களுக்கு வலுச் சேர்ப்பவையாக இருந்தன, இந்தக் குடும்பத்தில் தான் ஒரு வித்தியாசமானவராக நடப்பதற்கு எத்தனித்தார். இராஜ குடும்பத்தின் காலந்தோறும் கடைப்பிடிக்கப்பட்ட பொது நடைமுறைகளை விமர்சித்து தான் அதனை ஏற்றுக்கொள்ளாதது போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தார்

    இளவரசர் ஹாரியும் தம் மனைவியின் விருப்புக்கு எதிராக நடக்க விரும்பாதவராக, தானும் இராஜ குடும்பத்தின் அடையாளங்களிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

    இளவரசர் ஹாரி, போரினால் அங்கவீனர்களாக்கப்பட்ட முன்னாள் போர்வீரர்களை உள்ளடக்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து, அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவ்வமைப்பின் தூதுவராகச் செயற்படுகிறார். அதேபோல மெகன் மார்க்கல் ஆப்பிரிக்க நாட்டின் வறுமை ஒழிப்புக்கான நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

    இந்நிலையில் இத்தம்பதியருக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. மெகன் மார்க்கல் அவர்களைப் பற்றி ஒரு சாராருக்கு விமர்சனங்கள் இருந்தாலும் இராஜ குடும்பத்தின் புதிய வரவினை , வம்ச விருத்தியை நாடு முழுவதும் கொண்டாடியதோடு உலக நாடுகளும் மிகவும் ஈடுபாடு கொண்டு நிகழ்வுகளை அவதானித்தன.

    வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் இராஜ குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் மகாராணியார் இல்லத்தில் ஒன்றுகூடுவார்கள். மெகன் மார்க்கல் அவர்களின் வரவு, இக்கலாச்சார நடைமுறைக்கு முட்டுக்கட்டையானது. முதன்முறையாக இளவரசர் ஹாரி, மெகன் மார்க்கல் அவர்களது குழந்தை கிறிஸ்துமஸ் சமயத்தை, மெகன் மார்க்கல் வளர்ந்த நாடான கனடாவில் 2019ஆம் ஆண்டு கழித்தார்கள்.

    இதைப் பற்றிப் பல கருத்துகள் ஊடகங்களில் விவாதங்களாகவும் விமர்சனங்களாகவும் இடம்பெற்றன..

    இதைத் தொடர்ந்து இளவரசர் ஹாரியினதும், மெகன் மார்க்கலினதும் அறிவித்தல் தான் அனைவரின் மனங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தான் இராஜ குடும்ப சம்பிரதாயங்களிலிருந்து முற்றாக விலகப் போவதாகவும், இராஜ குடும்ப உறுப்பினர்கள் அல்லாமல் சாதாரண மனிதர்களாகத் தமது எஞ்சிய வாழ்க்கையை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்தார்கள்.

    தமக்கான தமது உத்தியோக இல்லத்தை 25 மில்லியன் பவுண்ட்ஸ் கொடுத்து திருத்தியமைத்தார்களே அது பொதுப் பணமல்லவா? எப்படி அவர்கள் திடீரென இப்படி அறிவிக்கலாம் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. அப்பணத்தைத் தாம் திரும்ப அரசாங்கத்துக்கு அளிக்கப் போகிறோம். அத்தோடு இனி தமது சொந்தப் பணத்தில்தான் வாழ்க்கை நடத்தப்போகிறோம் என்று அறிவித்து தாம் கனடா தேசத்தில் வாழ்வை அமைத்துக்கொள்ளப் போவதாக அறிவித்தார்கள்..

    இவ்வறிவித்தல்களுக்கு உத்தியோகப்பூர்வமாக பதிலிறுக்க வேண்டிய நிலைக்கு மகாராணியார் தள்ளப்பட்டார். இளவரசர் ஹாரியினதும், அவரது மனைவியினதும் விருப்பத்தைப் புரிந்து கொள்கிறோம். இளவரசர் ஹாரி உத்தியோகப்பூர்வமாக தாம் இராஜ குடும்பத்தினர் எனும் அடையாளத்தை உபயோகிக்க முடியாது என்று அறிவித்தார்கள். ஹாரி அவர்கள், இராஜ குடும்பத்தின் சார்பாகப் பங்கு கொள்ளவிருக்கும் அனைத்து உத்தியோகப்பூர்வமான நிகழ்வுகளிலிருந்தும் ஒதுங்கிக்கொள்கிறார் என்றும் அறிவித்தார்.

    அனைத்தும் ஓரளவு சுமூகமாக நடந்தேறி விட்டது என்று இருக்கும்போது சிலநாட்களின் முன்னாள் இளவரசர் ஹாரியினதும் அவர் மனைவியினதும் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கை திரும்ப சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது. தம்மை இராஜ குடும்பத்தினர் அதாவது ஆங்கிலத்தில் Royals என்றழைக்க முடியாது என்று சொல்லும் உரிமை, இராஜ குடும்பத்துக்கு இல்லை என்று அந்த அறிக்கை கூறியதோடு, இராஜ குடும்பத்தின் தூரத்து உறவுகளே தம்மை இராஜ குடும்பத்தினர் என்று அழைக்கும்போது நாம் அழைப்பதில் என்ன தப்பு என்கிறார்கள்.

    இத்தனையையும் மெளனமாக எதிர்கொண்டு எந்த விதமான கருத்துகளையும் பொதுவில் கூறாமல் அனைத்தையும் சாதுரியமாக நாகரீகமாக கையாண்டு கொண்டிருக்கும் 93 வயதான எமது எலிசபெத் மகாராணியார் இராஜதந்திரத்துக்கே ஓர் எடுத்துக் காட்டாகிறார்.

    இளவரசர் ஹாரியின் நடவடிக்கைகளுக்குக் காரணமிருக்கலாம். அவரது அன்னையும், இளவரசர் சார்ல்ஸ் அவர்களின் முன்னைநாள் மனைவியும் மறைந்தவருமான லேடி டயானா அவர்களின் மீதான தொடர்ந்த ஊடகங்களின் ஆர்வமும், விமர்சனங்களுமே அவரது மறைவுக்குக் காரணம் என்று கருதப்படுகிறது. தன்னுடைய மனைவியும், குழந்தையும் அத்தகைய ஒரு ஊடகத் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடாது என்பதே அவரது நோக்கமாக இருக்கலாம். அது நியாயமானதாகக் கூட இருக்கலாம்.

    ஆனால் இங்கே பல கேள்விகள் முன்னெடுக்கப்படுகின்றன.

    ஐக்கிய இராச்சியத்தின் இராஜ குடும்பம் என்பது ஒரு சாதாரண கலாச்சார விழுமியமில்லை. நாட்டின், மக்களின், கலாச்சாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. வெளிநாட்டவரின் ஐக்கிய இராச்சியத்தின் மீதான பார்வைக்கு ஓர் அத்திவாரமாகிறது. இத்தகைய ஒரு குடும்பத்தோடு இணையும் போது அதனோடு சேர்ந்து வரும் ஊடகங்களின் உபத்திரவத்தை எதிர்பார்க்காமலா மெகன் மார்க்கல் அவர்கள், இளவரசர் ஹாரி அவர்களை மணமுடிக்க விரும்பியிருப்பார்?

    ஒருநாட்டின் பாரம்பரிய கலாச்சார விழுமியத்துடன் இணைகையில் தாமும் அந்நாட்டினுடன் தம்மை இணைத்துக்கொள்கிறோம் என்பதை அறியாமலா மெகன் மார்க்கல் இருந்திருப்பார்?

    இதையெல்லாம் அறிந்துகொண்டு ஐக்கிய இராச்சியத்தின் இளவரசரரை மணந்துகொண்ட மெகன் மார்க்கல், அக்குடும்பத்தின் நல்ல மருமகளாக அக்குடும்பப் பெருமைகளைக் காப்பாற்ற முடியாமல் தமது இச்சைக்கு ஏற்ப, தொன்மை மிக்க இராஜ குடும்பத்தினையே மாற்றியமைக்க முயல்வது போலத் தென்படுகிறது.

    இத்தகைய செயற்பாடுகள் நடுநிலையாக இருக்கும் வெள்ளை இனத்தவர் பலரைக்கூடக் கொஞ்சம் இனவேற்றுமை எனும் நிலைக்குத் தள்ளுகிறது. இதுவரை தமது விதிமுறைகளைக் கடைப்பிடித்து வந்த இராஜ குடும்பத்தினுள் நுழைந்த வேற்றுநிறப் பெண்மணி, குழப்பத்தை உண்டாக்குகிறார் எனும் வகையில் எண்ணுகிறார்கள்.

    இத்தகைய எண்ணம் பொதுவாக நாட்டில் நிலவும் நிறத் துவேஷத்தினை அதிகரிக்கச் செய்கிறது போலவும் தோன்றுகிறது. நாட்டில் கலக்கும் வேற்று இனத்தவரால் நாட்டின் பாரம்பரியத் தன்மை மாற்றப்படுகிறது எனும் இவர்களது வாதத்துக்கு வலுச் சேர்க்கிறது.

    ஐக்கிய இராச்சியத்தின் இராஜ குடும்ப அமைப்பினை முற்றாகக் கலைத்து விடவேண்டும் எனும் கருத்துக் கொண்ட பலர், அரசியல்வாதிகள் உட்பட இருக்கிறார்கள். ஹாரி தம்பதியினரின் செயற்பாடு அவர்களுக்கெல்லாம் மேலும் உந்துசக்தியாக இருக்கப் போகிறது.

    இந்தச் செயற்பாடுகளின் விளைவுகளை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு நாட்டின் கலாச்சாரமே அதன் மக்களின் செயற்பாடுகளுக்கு அடிப்படையாகிறது. அத்தகைய வழியில் சட்ட திட்டத்தை மதிக்கும் ஒரு சமூகத்தை வளர்த்தெடுக்க உதவிய கலாச்சார அடிப்படையை அழித்துவிடுவது அந்நாட்டின் அத்திவாரத்தையே அசைத்துப் பார்ப்பது போலாகாதா?

    எது எப்படியிருப்பினும் தமது அறிவித்தலை இவர்கள் தெரிவித்தது ஒரு சரியான நேரமா? எனும் கேள்வி எழத்தான் செய்கிறது.

    நாடு ப்ரெக்ஸிட் எனும் ஒரு நிகழ்வுக்கு முகம் கொடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளிவந்துள்ளது.

    நாட்டின் மக்களிடையே இந்நிகழ்வு கொடுத்த பிரிவினையின் அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை.

    ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வு ஏற்படுத்திய ஒரு இனத்துவேஷ உணர்வு இன்னும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இம்முடிவில் மெகன் மார்க்கல் வகித்த பங்கு, எரிகின்ற இந்த இனத்துவேஷ நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போலாகாதா?

    இராஜ குடும்பக் கலாச்சாரக் கட்டுப்பாடுகளில் இருந்து ஒதுங்கிக்கொள்வது இளவரசர் ஹாரியினது தனிமனித உரிமைக்கு உட்பட்டது என்றாலும் இதனை இக்காலக்கட்டத்தில் கொஞ்சம் தவிர்த்து தமது இராஜ குடும்பத்து ஈடுபாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து மெதுவாக இதனைச் செய்திருக்கலாம்.

    இந்தத் தலைமுறை, கொஞ்சம் தடுமாறத்தான் செய்கிறதோ?

    Share
  • சென்றதினி மீளாது

    சென்றதினி மீளாது

    பாஸ்கர் சேஷாத்ரி

    நீங்கள் தமிழுக்குத் தாலாட்டு என்றீர்கள்
    கைகள் இன்னும் ஆட்டிக்கொண்டு இருக்கின்றன.
    இந்திக்கு என்றும் வாலாட்டு என்றீர்கள்
    வால் வளர்ந்து முகமே மூடிப்போனது.
    சேட்டுக்கடையில் வாங்காதே என்றுரைத்தீர்
    அண்ணாச்சிக்கடையே ஆஸ்தானமாய்ப் போனது.
    பல்லுடைத்துப் பார் பார்ப்பானை என்றே கூவினீர்
    நாங்கள் இங்கு பொக்கை வாயுடன் நிற்கிறோம்.
    மேல்துணியில் கைதட்டிக் குதித்த போது
    கொடியேற்ற நீங்கள் புழுதி பறக்க வந்தீர்கள்.
    கண்களில் விழுந்த மண்ணை விலக்கும் முன்
    கும்பலாய் வந்த ப்ளஷரில் ஏறிப் பறந்தீர்கள்.
    பீடி இழுத்த உடலுக்கு, கொடியே இன்று பெருந்துணி
    கோஷமிட்டே வருஷமெல்லாம் கரைந்தே போயின
    கட்டாந்தரையில் இன்றும் கிடக்கிறோம் நாங்கள்
    கட்டிபோட்ட பேச்சால் கனவிழந்து நிற்கிறோம்
    மல்லாக்கக் கிடக்கும் எமைக் கட்டித் தழுவ வேண்டாம்
    கொடியே கொண்டாரும்-உடலே சுருங்கிப் போச்சு
    நிர்வாணம் நாங்கள் – கொடியாவது மறைக்கட்டும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-119

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-119

    நாங்குநேரி வாசஸ்ரீ

    119. பசப்புறு பருவரல்

    குறள் 1181

    நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
    பண்பியார்க் குரைக்கோ பிற

    என்னைய நேசிச்சவரு பிரிஞ்சி போவுததுக்கு சம்மதிச்சிட்டேன். இப்பம் தாங்கமாட்டாம எம் மேனி பசலை படந்து கெடக்கத யார் கிட்ட போய் சொல்லுவேன்?

    குறள் 1182

    அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
    மேனிமேல் ஊரும் பசப்பு

    நேசிச்சவரு உண்டாக்கி உட்டதுங்குத தலகனத்துல பசலை வண்ணம்  எம் மேனி முழுக்க ஊர்ந்து பரவுது.

    குறள் 1183

    சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
    நோயும் பசலையும் தந்து

    நேசங்குத நோயையும் பசலை வண்ணத்தையும் தந்துபோட்டு என் அழகையும் வெக்கத்தையும் எடுத்துக்கிட்டு போயிட்டாக.

    குறள் 1184

    உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
    கள்ளம் பிறவோ பசப்பு

    நான் நெனைக்கதும், சொல்லுததும் அவரோட நல்ல தன்மயத்தான். அங்ஙன இருக்கையில பசலை நோய் வந்தது வஞ்சகமோ. வேறு ஏதாமோ?

    குறள் 1185

    உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்
    மேனி பசப்பூர் வது

    என் காதலர் அங்ஙனகூடி பிரிஞ்சு போவுததுக்குள்ளார இங்ஙன பசலை வண்ணம் எம் மேனியில வந்து அப்பிக்கிடுது.

    குறள் 1186

    விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்
    முயக்கற்றம் பார்க்கும் பசப்பு

    விளக்கு ஒளி சொல்பமா மங்குத சமயம்பாத்து இருட்டு பரவுதது கணக்கா நேசிக்கவரு தழுவுதத எப்பம்  தளத்துவாருனு காத்துக்கெடக்கு  பசலை படருததுக்காவ.

    குறள் 1187

    புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
    அள்ளிக்கொள் வற்றே பசப்பு

    அணைச்சுக்கிட்டுக் கெடந்தேன். பொறவு செத்த வெலகினேன். அங்ஙனக்குள்ளார பசலை வண்ணம் என்னய அள்ளிக்கிட்டுப் போயிடுச்சு.

    குறள் 1188

    பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
    துறந்தார் அவரென்பார் இல்

    இவ மேனியில பசலை படர்ந்து கெடக்குனு பழிக்குதாகளே ஒழிய நேசிச்சவரு பிரிஞ்சு போனதப் பத்தி பேச்சேயில்ல.

    குறள் 1189

    பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
    நன்னிலையர் ஆவர் எனின்

    பிரிஞ்சுபோவுததுக்கு என்னயச் சம்மதிக்க வச்சவுக நல்லா இருப்பாகன்னா எம் மேனி பசலை படர்ந்துக்கிட்டுக் கெடக்கட்டும்.

    குறள் 1190

    பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
    நல்காமை தூற்றார் எனின்

    பிரிவுக்கு சம்மதிக்க வச்ச என் காதலர நேசங்கெட்டவருனு தூத்த மாட்டாகன்னா நான் பசலை படர்ந்தவனு பேர் எடுக்கதும் நல்லதுதான்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(290)

    குறளின் கதிர்களாய்…(290)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(290)

    அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு
    மூதியமுஞ் சூழ்ந்து செயல்.

           – திருக்குறள் –461 (தெரிந்து செயல் வகை)

    புதுக் கவிதையில்…

    செயலொன்றைச்
    செய்யத் தெடங்குமுன்
    அரசன்
    அச்செயலால் எற்படும்
    அழிவு ஆக்கம்
    அதன்வழி வரும் ஊதியம்
    ஆகியவற்றை ஆய்ந்தறிந்து,
    சிறந்ததாயின்
    செய்ய வேண்டும்…!

    குறும்பாவில்…

    செயலொன்றால் வரும் அழிவுடன்
    ஆக்கம் அதனால்பெறும் ஊதியம் இவற்றை
    ஆய்ந்தறிந்து செயலில் இறங்கிடு…!

    மரபுக் கவிதையில்…

    செயல தொன்றைத் தொடங்குமுன்னே
         செய்ய வேண்டும் சிலவற்றை,
    செயலதால் வந்திடும் அழிவினையும்
         செயலது தன்னால் ஆவதையும்
    செயலின் வழிவரும் ஊதியமும்
         சேர்ந்த யிவற்றை ஆய்ந்தறிந்து
    செயல்படச் சிறந்ததைத் தேர்ந்தெடுத்தே
         செயலி லிறங்கித் தொடர்வாயே…!

    லிமரைக்கூ..

    செயல்படத் தொடங்கிடும் முன்னே
    ஆய்ந்தறி செயலால்வரும் அழிவாக்கம் ஊதியமெலாம்,
    செயல்படு நன்கறிந்த பின்னே…!

    கிராமிய பாணியில்…

    செயல்படணும் செயல்படணும்
    தெரிஞ்சி செயல்படணும்,
    செய்யுமுன்னே நல்லதா கெட்டதாண்ணு
    நல்லாத் தெரிஞ்சி செயல்படணும்..

    ஒருசெயலச் செய்யத்
    தொடங்குமுன்னாலயே அதால வருற
    நல்லது கெட்டது ஆதாயம்
    எல்லாத்தையும்
    அலசி ஆராஞ்சி,
    அதுல நல்லதாப் பாத்துத்
    தெரிஞ்சிச்
    செயல்பட ஆரம்பிக்கணும்..

    அதால
    செயல்படணும் செயல்படணும்
    தெரிஞ்சி செயல்படணும்,
    செய்யுமுன்னே நல்லதா கெட்டதாண்ணு
    நல்லாத் தெரிஞ்சி செயல்படணும்…!

    Share
  • திருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை

    திருவள்ளுவர் கல்லூரியில் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை

    “தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” என்ற தலைப்பில், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 25.01.2020 அன்று நடைபெற்ற ஒருநாள் பயிலரங்கத் தொடக்க விழாவில், முனைவர் அண்ணாகண்ணன் வழங்கிய மையக் கருத்துரை.

    ———————————————————————————————-

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மகிழ்ச்சியோடு வாழ வழிகாட்டும் மனவளக்கலை நிபுணர் – எக்கார்ட் டாலே (Eckhart Tolle) 

    மகிழ்ச்சியோடு வாழ வழிகாட்டும் மனவளக்கலை நிபுணர் – எக்கார்ட் டாலே (Eckhart Tolle) 

    -மேகலா இராமமூர்த்தி

    1948ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தவரும் இப்போது கனடாவில் வசித்து வருபவருமான உல்ரிச் லியொனார்டு டாலே (Ulrich Leonard Tölle), இன்றைய உலகின் குறிப்பிடத்தக்க ஆன்மிக வழிகாட்டிகளில் ஒருவர். இவரை ஆன்மிக வழிகாட்டி என்பதைவிடவும் மனித மனத்தை வளப்படுத்தி வாழ்க்கையைச் செம்மைப்படுத்த உதவும் மனவளக்கலை நிபுணர் (Expert in the art of living) என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

    இவருடைய பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் சென் புத்தமதம் (Zen Buddhism), சூபித் தத்துவம் (Sufism), இந்துமதம் (Hinduism) மற்றும் கிறித்தவ மதம் (Christianity) போன்றவற்றின் சிறந்த சிந்தனைகள் இடம்பெற்றிருந்தாலும், இச்சிந்தனைகளை இவர் மதம் பரப்பில் நோக்கில் பயன்படுத்தாமல், வாழ்வுக்கு உதவும் நற்கருத்துக்கள் இவை என்ற அடிப்படையிலேயே பயன்படுத்துவது, எவ்வித மத அடையாளமும் அற்ற மனவளக் கலை நிபுணராக மேற்குலக மக்களிடம் இவரை அடையாளப்படுத்தியிருக்கின்றது.

    தம்முடைய ஆன்மிக ஆசான்களாக கௌதம புத்தமர் (Gautama Buddha), இரமண மகரிஷி (Ramana Maharshi), ஜித்து கிருஷ்ணமூர்த்தி (Jiddu Krishnamurti), மற்றும் ரூமி (Rumi) ஆகியோரை குறிப்பிடுகின்றார் எக்கார்ட் டாலே.

    டாலேயின் இளமைக்கால வாழ்வை ஆராய்ந்தால், நான் தென்றலைத் தீண்டியதில்லை; ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்என்ற பராசக்தி வசனந்தான் நம் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு அவருடைய இளமைக்காலம் துயர் நிறைந்ததாக இருந்திருக்கின்றது. ஜெர்மனியில் அவர் கழித்த குழந்தைப்பருவ நாள்களில் அவருடைய தாய்க்கும் தந்தைக்கும் இடையே நடந்த சண்டைகளையும் அதைத் தொடர்ந்து அவர்களிடையே ஏற்பட்ட மணமுறிவையும் காணக்கூடிய அவலநிலை அவருக்கு வாய்த்திருக்கின்றது.

    தம் பதின்மூன்றாம் வயதில் தந்தையோடு ஸ்பெயினுக்குச் சென்றார் டாலே. தந்தையார் அவரைக் கல்வி கற்க வற்புறுத்தாத நிலையில் தாமாகவே முயன்று இலக்கியம், வானியல், பிற மொழிகள் போன்றவற்றை வீட்டிலிருந்தபடியே கற்றிருக்கின்றார். தம் பதினைந்தாவது வயதில் ஜெர்மனியின் ஆன்மிகச் சிந்தனையாளரான பொ இன் ராவின் (Joseph Anton Schneiderfranken, aka Bô Yin Râ) புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிய டாலே அவற்றில் ஆழ்ந்துபோனார்.

    பத்தொன்பது வயதில் இங்கிலாந்திலுள்ள இலண்டனுக்குச் சென்ற டாலே, அங்கிருந்த மொழிப்பாடங்கள் நடத்துகின்ற பள்ளியில் (London school for language studies) ஸ்பானிஷ் மற்றும் ஜெர்மானிய மொழிகளைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது இனம்புரியாத அச்சமும் மனஅழுத்தமும் அவரைக் கடுமையாகத் தாக்கவே  தம் எதிர்கால வாழ்வு குறித்த கவலையில் ஆழ்ந்திருக்கின்றார்.

    மனத்தைத் திசை திருப்ப, இலண்டன் பல்கலைக்கழத்தில் தத்துவம், உளவியல், இலக்கியம் உள்ளிட்ட பாடப்பிரிவில் சேர்ந்து பயின்று பட்டம் பெற்றார். முதுகலைப் படிப்பை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொடர அவருக்கு அரசின் உதவித்தொகை கிடைத்தும் அதனைத் தொடராது பாதியிலேயே கைவிட்டிருக்கின்றார்.

    தம்முடைய இருபத்தொன்பதாவது வயதில் மீண்டும் கடுமையான மனஅழுத்தத்திற்கு ஆளாகி அவர் துயருற்றுக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகக் கிடைத்த அக விழிப்பால் (spiritual awakening) தம் வாழ்வின் துன்ப நினைவுகளிலிருந்து மீண்டிருக்கின்றார். மறுநாள் முதலே தம் வாழ்வு கலக்கமற்ற அமைதிப் பூங்காவாகத் தோற்றமளித்தது என்றுகூறி நம்மை அதிசயிக்க வைக்கின்றார்!

    அதனைத் தொடர்ந்துவந்த காலங்களில் தியானத்திலும், அகத்தாய்வுப் பயிற்சிகளிலும் (meditation and intense contemplation) அவர் ஈடுபடத்தொடங்கவே அவரைப் பொறுப்பற்றவர் என்றும் பைத்தியக்காரர் என்று முத்திரை குத்திப் பகடி செய்திருக்கின்றது அவருடைய குடும்பம். அதைப் பொருட்படுத்தாத அவர் அங்கிருந்த புத்த மடத்திலும், இலண்டன் ஹித் எனப்படும் பரந்த புல்வெளிப் பிரதேசத்திலுமாகத் தம் வாழ்க்கையைக் கழித்திருக்கின்றார்.

    அந்தக் காலக்கட்டத்தில் உல்ரிச் (Ulrich) என்ற தம்முடைய முதற்பெயரை எக்கார்ட் (Eckhart) என்று அவர் மாற்றிக்கொண்டிருக்கின்றார். மெயிஸ்டர் எக்கார்ட் (Meister Eckhart) எனும் ஜெர்மானியத் தத்துவ அறிஞருக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் இதனை அவர் செய்திருக்கின்றார் என்று அறிகிறோம். அதுமுதல் உல்ரிச் டாலே, எக்கார்ட் டாலே ஆனார்.

    அகத்தாய்வுப் பயிற்சிகளால் அவரடைந்த மனவளத்தை அறிந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணாக்கர் பலர், மனநல ஆலோசனைகள் வேண்டி அவரிடம் வரத்தொடங்கினர்.  டாலேயின் புகழ் அமெரிக்காவிலும் பரவவே அங்கும் மனவளக்கலை தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்த அடிக்கடிச் சென்றுவரலானார். சில ஆண்டுகளுக்குப் பிறகு தம்முடைய இருப்பிடத்தைக் கனடாவிலுள்ள வான்கூவர் (Vancouver)  நகருக்கு நிரந்தரமாக  மாற்றினார் டாலே. தம்முடைய வருங்கால மனைவியான கிம் எங்கை (Kim Eng) அவர் சந்தித்ததும் அங்கேதான்!

    மனிதர்கள் அந்தந்த நொடிக்கான வாழ்வை வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் எக்கார்ட் டாலே எழுதி, 1997இல் வெளிவந்த ’The Power of Now: A Guide to Spiritual Enlightenment’ என்ற நூலும், பொருளைத் துரத்திக்கொண்டு ஓடாமலேயே பொருள்பொதிந்த வாழ்க்கையையும் புத்துலகையும் படைக்கலாம் என்பதை விளக்கும் வகையில் அவர் எழுதி 2005இல் வெளியான ’A New Earth: Awakening to Your Life’s Purpose’ என்ற நூலும் மிகவும் புகழ்வாய்ந்தவை.

    ’The Power of Now’ புத்தகத்தைப் படித்த பிரபல தொலைக்காட்சித் தொடர் நடத்துநரும், தயாரிப்பாளருமான ஓப்ரா வின்பிரே (Oprah Winfrey), எக்கார்ட் டாலேயைத் தன்னுடைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி, அவருடைய ’The Power of Now’ நூலை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்று பரிந்துரைக்க, டாலே ஒரேநாளில் உலகறிந்த மனவளக்கலை நிபுணரானார். இந்நூல் அரேபிய மொழி உட்பட உலகின் 33 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    2009 வாக்கில் ’The Power of Now’ புத்தகம் அமெரிக்காவில் மட்டும்  3 மில்லியன் படிகளும்,  ’A New Earth’  புத்தகம் 5 மில்லியன் படிகளும் விற்று அதிகம் விற்பனையான புத்தகங்கள் (the best sellers) என்ற புகழை அடைந்திருக்கின்றன. 

    டாலேயின் புகழ்பெற்ற நூல்களான ‘The power of Now’விலிருந்தும்A New Earth’இலிருந்தும் சில செய்திகளை நாம் அறிந்துகொள்வது வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.

    ‘The Power of Now’ புத்தகத்தின் தொடக்கத்தில் தம்முடைய  கடந்தகாலக் கசப்பான அனுபவங்களை ஒளிவுமறைவின்றி விவரிக்கும் டாலே, அன்பாகவும் அமைதியாகவும் வாழவே நாம் இயற்கையால் படைக்கப்பட்டிருக்கின்றோம். ஆனால் நாமோ வலிகளால் நம்மை நிரப்பிக்கொண்டு அவதிப்படுகின்றோம். வலி என்பது இன்னொரு வலியைத்தான் தருமே தவிர அதிலிருந்து மகிழ்ச்சி கிடைக்க வழியில்லை. அதனால் வலிதரும் கடந்த கால அனுபவங்களையே மனிதர்கள் அசைபோட்டுக்கொண்டிருப்பது எவ்வகையிலும் அவர்களுக்கு மகிழ்ச்சியையோ மன நிம்மதியையோ தரமுடியாது. அவற்றைத் தூக்கிச் சுமப்பதிலும் பயனில்லை என்கிறார்.

    அதுபோல் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்றெண்ணிக் கலங்குவதும் எவ்வித நன்மையையும் தரப்போவதில்லை.  எனவே கடந்துபோன கசந்த காலத்தையும், புதிரான எதிர்காலத்தையும் எண்ணிக் கலக்கமும் குழப்பமும் அடைவதைவிட்டு, மனிதர்களே… நிகழ்காலத்துக்கு வாருங்கள். கடந்துசெல்லும் நொடிகள் எவையும் திரும்ப வாரா என்பதை உணர்ந்து இந்த நொடிக்கான வாழ்வை வாழுங்கள் என்று குறிப்பிடும் டாலே, ”எனக்கு நானேதான் பிரச்சினையாகி வருகிறேன்” (I have become a problem to myself) என்று கத்தோலிக்க மதபோதகரான புனித அகஸ்டின் (Saint Augustine) சொன்ன வாசகத்தை கோடிட்டுக் காட்டுகிறார்.

    இச்செய்தி ”தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற புறநானூற்றுப் புலவன் கணியன் பூங்குன்றனின் மணிமொழியை நம் நினைவுக்குக் கொண்டு வருகின்றது.

    “நாம்” என்பது நம்முடைய பெயரோ பதவியோ பொருளோ புகழோ நாம் சார்ந்திருக்கும் மதமோ அல்ல. இவையெல்லாம் நம்முடைய அகந்தையால் இவைதாம் நாம் என்று தவறாக நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்பவையே என்று தெரிவிக்கும் டாலே, இலக்குகளை உருவாக்கி அவற்றை அடைவது குறித்தே சிந்திப்பதையும் அவற்றை அடைந்தால்தான் வாழ்வில் வெற்றி என்று நினைப்பதையும் நிறுத்துங்கள். இவையே உங்களை மன அழுத்தத்தில் தள்ளுபவை. அதற்கு மாறாக இந்த நொடியில் உங்கள் வாழ்க்கை – நீங்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை – எவ்வாறிருக்கின்றதோ அதனை ஏற்றுக்கொண்டு வாழப் பழகுங்கள்!  விழிப்புணர்வு உடையதாகவும், அதே சமயம் அவசியமில்லா எண்ணங்கள் அற்றதாகவும் உங்களின் இப்போதைய பொழுது அமையட்டும்!

    முதுமை என்பது நம்முடைய புறவுடலுக்குத்தானேயன்றி அகவுடலுக்கு இல்லை; அகத்தினை மேம்படுத்தும் மனவளப் பயிற்சிகளால் முதுமையைத் தள்ளிப்போடவும் நம் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தவும் முடியும் என்கிறார்.

    ஞானம் பெறுதல் என்பது நம் எண்ணங்களை மேம்படுத்துவதும், நாம் யார் என்பது குறித்த தெளிவான விழிப்புணர்வை அடைவதுமே ஆகும். அஃது ஏதோ பகுத்தறிவுக்குப் புறம்பான விந்தைச் செயலன்று என்கிறார்.

    டாலேயின் கருத்துக்கள் பலவும் நம் தமிழகத்துச் சித்தர்களின் ஆன்மிகக் கருத்துக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கக் காண்கின்றேன்.

    தமிழகத்தின் முதல் சித்தரான திருமூலர், உடலைப் பேணவும் நோய் நொடியின்றி வாழவும் யோகாசனப் பயிற்சிகள், தியானம் உள்ளிட்ட எட்டுவகையான வாழ்வியல் முறைகளை வலியுறுத்துகின்றார். இதனையே ’அட்டாங்க யோகம்’ என்கிறது திருமந்திரம்.

    எக்கார்ட் டாலே திருமந்திரத்தைக் கற்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்றிருந்தால் நிச்சயம் திருமூலரையும் தம்முடைய ஆசான்களின் வரிசையில் சேர்த்திருப்பார் என்பது துணிபு.

    ’A New Earth’  என்ற  தம்முடைய மற்றொரு நூலிலும் மனித மனம் தன்னைப் பற்றியும் தன்னுடைய புறச்சூழல் பற்றியும் விழிப்போடு இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.

    மனிதனின் எண்ணங்கள் மிகவும் வலிமை வாய்ந்தவை, மனநோய்களையும் உடல்நோய்களையும் குணப்படுத்துவதில் எண்ணங்கள் இன்றியமையாப் பங்கு வகிக்கின்றன என்று உறுதிபடத் தெரிவிக்கும் டாலே, நம்முடைய மகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சியின்மைக்கும் நம்முடையே எண்ணங்கள்தாம் காரணமேயன்றிச் சூழ்நிலைகள் அல்ல என்கிறார் திடமாக. தன்னை ஒருவன் சுயபரிசோதனை (introspection) செய்து செம்மைப்படுத்திக் கொள்வதன் மூலமும், தனக்கென்று போலியாக எந்த பிம்பத்தையும் உருவாக்கிக் கொள்ளாமல் இயல்பாக இருப்பதன் மூலமும் நல்ல மாற்றங்களையும் மகிழ்ச்சியையும் தன்னுடைய சொந்த வாழ்விலும் சமுதாயத்திலும் ஏற்படுத்த முடியும் என்பது டாலேயின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

    இந்த நூலில் இறுதிப் பகுதியான ‘புதிய பூமி’ (A New Earth) என்பதில் முத்தாய்ப்பாக அவர் முன்வைக்கும் செய்தி இதுதான்: ”நாம் சாதாரண மனிதர்கள்தாம்; ஆனால் நம்முடைய செயல்களால் ஓர் அசாதாரணமான புத்துலகை நம்மால் படைக்கமுடியும்!”

    நகைச்சுவை உணர்வும் நிரம்பப் பெற்றவர் டாலே என்பதை அவருடைய மேடைப் பேச்சுகள் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

    இன்றைய எண்ணிம உலகத்துக் கண்டுபிடிப்பான கைப்பேசி குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் எக்கார்ட் டாலே, தொலைபேசிகள் பயனுள்ளவைதாம். ஆனால் இன்றைய கைக்கு அடக்கமான கைப்பேசிகளோ நம்மை ஏவும் முதலாளிகள் ஆகிவிட்டன; நாமோ அவை சொல்வதைக் கேட்கும் அடிமைகளாகிவிட்டோம். அவற்றால் வசியம் செய்யப்பட்டுவிட்ட நாம் அடுத்து என்ன நிகழும் என்ற காத்திருப்போடு அவற்றையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

    நம்முடைய இச்செயல், கிரேக்கப் புராணங்களில் வரும் ஆணழகனான நார்சிசஸ், (Narcissus) நீர்நிலையில் தெரிந்த தன் அழகிய தோற்றத்தைக் கண்டு அதிலேயே இலயித்துப் போன செயலுக்கு ஒப்பானது.  அதுதான் உலகத்தின் முதல் செல்பி (selfie) என்றுகூடக் கூறலாம்.  கைப்பேசிகளின் உதவியால் சமூக வலைத்தளங்களில் புதிய புதிய மனிதர்களோடு நாம் தொடர்புகளை உருவாக்கிக் கொள்கிறோம். அம்மனிதர்கள் கூறுகின்ற கருத்துக்கள் நமக்கு உடன்பாடானவையாக இல்லாதபோது, அறிவற்ற வகையில், அவர்களிடம் சீற்றமும் சினமும் கொண்டு நம் மனஅழுத்தத்தைக் கூட்டிக் கொள்கிறோம்.

    ஓர் உணவகத்துக்குப் போனால்கூடக் கைப்பேசியையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறோமே தவிர எதிரில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தக்கூட அல்லவா மறந்துபோய்விட்டது நமக்கு? என்று கேட்கிறார். 

    அமெரிக்காவின் மத்தியமேற்கு மாநிலங்களைச் சார்ந்த ஒன்பது நடுநிலைப்பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 94 விழுக்காடு ஆசிரியர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து வெளியிட்டிருக்கின்றது பள்ளிகளின் உளவியலை ஆராயும் அறிவியல் இதழான ஜர்னல் ஆப் ஸ்கூல் சைக்காலஜி (Journal of School Psychology).

    இதற்கெல்லாம் தீர்வு, மனிதர்கள் தம் மனத்தில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேரிய எண்ணங்களால் மனத்தை நிரப்புவதே. அதனைப் பெறுவதற்கான தக்க வழி, மேற்குலக மனவளக்கலை நிபுணரான எக்கார்ட் டாலேயும், நம் தமிழ் மண்ணின் சித்தர்களும் பரிந்துரைத்திருக்கும் யோகமுறைகளும் ஆழ்நிலை தியானப் பயிற்சிகளுமே. சொல்லப்போனால் உண்மையான ஆன்மிக நெறி என்பதும் இதுவே!

    .அன்றாடம் பல்வேறு வகைகளில் மன உளைச்சலுக்கும் அழுத்தத்துக்கும் ஆளாகும் நாமும் மன ஒருமைப்பாட்டையும் அமைதியையும் அளிக்கவல்ல தியானப் பயிற்சிகளை மேற்கொண்டு நம் மனத்தை நல்லெண்ணங்களால் நிரப்புவோம்; அதனால் நம் அகத்துள் பூக்கும் மகிழ்ச்சியை அகிலமெங்கும் பரப்புவோம்!

    *****

    கட்டுரைக்கு உதவியவை:

    https://en.wikipedia.org/wiki/Eckhart_Tolle
    https://www.philosophyforlife.org/blog/eckhart-tolle-the-forrest-gump-of-spirituality
    https://en.wikipedia.org/wiki/The_Power_of_Now
    https://www.sloww.co/eckhart-tolle-a-new-earth-101/

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-118

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-118

    நாங்குநேரி வாசஸ்ரீ

    118. கண் விதுப்பழிதல்

    குறள் 1171

    கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
    தாங்காட்ட யாங்கண் டது

    கண்ணால அவரப் பாத்ததுங்காட்டி எனக்கு நேசம் உண்டாச்சு. அங்ஙன காட்டின கண்ணு இன்னிக்கு வெசனப்பட்டு அவரக் காட்டச்சொல்லி அழுவுதது ஏன்?

    குறள் 1172

    தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
    பைதல் உழப்ப தெவன்

    நடக்கப்போவுதத அறிஞ்சிக்கிடாம அன்னிக்கு நேசம் வச்ச கண்ணுங்க இன்னிக்கு பிரிஞ்சுபோன சங்கடத்துக்குக் காரணமும் தாங்கதாம்னு உணந்துகிடாம கெடந்து தவிக்குதது ஏன்? .

    குறள் 1173

    கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
    இதுநகத் தக்க துடைத்து

    அன்னிக்கு நேசம் வச்சவர வெரசலா போய்ப் பாத்து சந்தோசப்பட்ட கண்ணுங்க இன்னிக்கு தாங்களே அழுவுதது பாக்க சிரிப்பாணியா இருக்கு.

    குறள் 1174

    பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
    உய்வில்நோய் என்கண் நிறுத்து

    என் ரெண்டு கண்ணும் தப்பிப் பொழச்சுக்க ஏலாத நேசங்குத நோய எனக்குத் தந்துபோட்டு இப்பம் தாங்களும் அழுவ ஏலாம தண்ணி வத்திக் கெடக்கு.

    குறள் 1175

    படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக்
    காமநோய் செய்தவென் கண்

    அன்னிக்கு கடல் கூட பொறுத்துக்கிட ஏலாத அளவு நேசங்குத நோய உண்டாக்கின என் கண்ணுங்க இப்பம் ஒறங்க ஏலாம சங்கடத்தால வாடுதுவ..

    குறள் 1176

    ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண்
    தாஅம் இதற்பட் டது

    எனக்கு இந்த நேசங்குத நோய உண்டாக்கின கண்ணுங்க தானும் கெடந்து சங்கடப்படுதது எனக்கு சந்தோசம் தான்.

    குறள் 1177

    உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
    வேண்டி அவர்க்கண்ட கண்

    அன்னிக்கு ஆசையால இழைஞ்சு நேசம் வச்சிருக்கவரப் பாத்த கண்ணுங்க இன்னைக்கு அவரு பிரிஞ்சு போனதுக்காவ ஒறங்காம சங்கடப்பட்டு சங்கடப்பட்டு கண்ணீர் அத்து போவட்டும்.

    குறள் 1178

    பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
    காணா தமைவில கண்

    நெஞ்சுக்குழியில நேசமில்லாம மேல்டாப்ல இனிக்கப் பேசுத ஒருத்தர் இருக்காரு, அவரப் பாக்காம என் ரெண்டு கண்ணுக்கும் அமைதியான ஒறக்கம் இல்ல.

    குறள் 1179

    வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
    ஆரஞர் உற்றன கண்

    நேசம் வச்சவரு வாராம போனாகன்னா ஒறக்கமில்ல. வந்த பொறவும் ஒறக்கமில்ல. இந்த ரெண்டு வழியிலயும் என் கண்ணுக்கு ஒறக்கம் இல்லாம இருக்கது சங்கடந்தான்.

    குறள் 1180

    மறைபெறல் ஊராhக் கரிதன்றால் எம்போல்
    அறைபறை கண்ணார் அகத்து

    பறை அடிக்கது கணக்கா மனசுக்குள்ளார இருக்கத வெளிய காணிச்சிக்குடுக்குத  கண்ணு இருக்க என்னய ஒத்தவுககிட்ட இரகசியம் தெரிஞ்சுக்கிடது ஒண்ணும் ஊர்க்காரவுகளுக்கு சங்கடமில்ல.

    Share
  • பாராட்டா, வசவா?

    பாராட்டா, வசவா?

    நிர்மலா ராகவன்

    (பழகத் தெரிய வேணும் – 5)

    என் பாட்டி என்னை வசை பாடிக்கொண்டே இருப்பார். இத்தனைக்கும், நான் பெண்வழிப் பேத்தி. என் தந்தைக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்பதுதான் காரணம்.

    இன்றுவரை சிலர் என்னைக் கேட்கிறார்கள்: “உங்கள் பாட்டி உங்களைத் திட்டிக்கொண்டே இருப்பார்களாமே?”

    நானும் இதைப்பற்றி நிறைய யோசித்திருந்ததால், உடனே பதில் கூற முடிந்தது. “திட்டினாலோ, அடித்தாலோ மட்டும்தான் ஒருவரின் திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டுவர முடியும் என்று அந்தத் தலைமுறையில் பலரும் நம்பினார்கள்”.

    மாறாக, ஒருவர் என்ன செய்தாலும் அதைப் பொருட்படுத்தாது அலட்சியம் செய்தால், ‘எக்கேடோ கெடட்டும்,’ என்று அர்த்தம்.

    என் பதின்ம வயதில், விடுமுறை நாட்களுக்கு சென்னையிலிருந்த பாட்டி வீட்டுக்கு அனுப்புவாள் அம்மா.

    நான் பாட்டிக்கு ஒத்தாசையாக வேலை செய்துகொண்டே இருக்கையில், “இது ஒரு வேலையும் செய்யாதுடி. கண்ணாடி முன்னாடி ஒக்காந்து அழகு பாத்துண்டு இருக்கும்!” என்ற பழிச்சொற்கள் எழும்.

    நான் குளித்துவிட்டு, கண்ணுக்கு மை, நெற்றியில் பொட்டு என்று அலங்காரம் செய்துகொண்டதுடன் சரி. அதுகூட முடியாததால், விதவையான பாட்டிக்குத் தன் இழப்பு பெரிதாகத் தோன்றியிருக்கும் என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது.

    விதவைகளுக்குச் செய்யப்பட்ட அநீதி

    அந்தக் காலத்தில், விதவைகள் கணவனுடன் பூவையும் பொட்டையும் மட்டும் இழக்கவில்லை. வெள்ளைப்புடவை அணியாதவர்களின் ரவிக்கையாவது வெள்ளையாக இருக்கவேண்டும். தலையில் எண்ணை, உடம்பிற்கு சோப் — ஊகும். நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இதன் விளைவு: வியர்வையால் உடலில் அரிப்பு, முதுகெல்லாம் கொப்புளங்கள்.

    வாசனைத் திரவியங்களைத் தவிர்த்தால், உடலையும் மனத்தையும் கட்டுப்பாடாக வைத்திருக்கலாம் என்று ஆணாதிக்கத்தில் குருட்டு நம்பிக்கைகொண்ட எவனோ ஆரம்பித்துவைத்த நியதி (சதி?) இது. உடலில் எப்போதும் அரிப்பும் வலியுமாக இருந்தால், எரிச்சலாக இருந்திருக்காதா! (அவர்கள் எதிர்த்துப் பேசாவிட்டால், அருகிலிருக்கும் யார்மேலாவது ஆத்திரமாக மாறும். அப்படித்தான் நான் மாட்டிக்கொண்டேன்).

    பாட்டியின் முதுகைச் சீப்பால் வாரி, சீழ் பிடித்திருக்கும் கொப்புளங்களை உடைப்பது என் வேலை. ‘கொடுமை’ என்று என் கண்ணில் நீர் பெருகும். ‘வேண்டாம் பாட்டி,’ என்று கெஞ்சுவேன். பாட்டியோ, ‘என்னமா முதுகுசொரியறது! ஒரு அரிப்பில்லை,’ என்று பலரிடமும் என் ‘திறமை’பற்றிச் சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள்.

    திருமணமாகி, நான் அயல்நாடு செல்ல ஆயத்தமானதும், “எனக்கு அஞ்சு ரூபா குடுத்து ஒனக்கு லெட்டர் எழுத வெச்சுட்டியே! ஒன்னை எனக்குப் பிடிக்கலே, போ!” என்று அழுதார்கள் பாட்டி.

    பாட்டியிடமிருந்து சமையல் கற்றதால், இன்றுவரை பாரம்பரிய சமையல்தான். மலேசியாவிலிருந்து இந்தியா போன ஒருவர், நான் குடித்தனம் செய்யும் நேர்த்தியைப் பாட்டியிடம் புகழ்ந்து கூற, பாட்டி என் தாய்க்கு ஒரு கடிதம் எழுதினாராம்: ‘நான் வளர்த்த எந்தக் குழந்தையும் சோடை போனதில்லை!’ என்று!

    வசவா, செல்லமா?

    எல்லாருடைய கொஞ்சலிலும் வளர்ந்தவர்கள் பிறருடைய சுடுசொற்களைத் தாங்கமாட்டார்கள். அப்போது, அன்பைக் கொட்டி, தம்மை இவ்வளவு பலகீனமாக்கிவிட்டவர்கள் மீது ஆத்திரம் எழுமாம். (அப்படிப்பட்டவர் ஒருவர் என்னிடம் தெரிவித்தது). இவர்களுக்கு குழந்தைத்தனம் மாறுவதேயில்லை.

    அதற்காக, காரணமின்றித் திட்டித் தண்டிக்க வேண்டுமா?

    கைம்பெண்ணாக நடித்தபோது

    மலேசியாவில் ஒளிபரப்பான ஒரு தொலைகாட்சி குறும்படத்தில் எனக்கு முக்கியமான தாய் வேடம். ‘வசனம்’ என்ற தலைப்பில் என் பெயரும் இடம் பெற்றிருந்தபோதும், நான் அதிகம் பேசவில்லை.

    நான் அருகிலிருந்த கோயிலுக்குச் சென்றபோது, அர்ச்சகர் என் நெற்றியை நோட்டமிட்டுவிட்டு, எனக்கு குங்குமம் கொடுக்காது அப்பால் நகர்ந்தார். பட்டையாகப் பூசியிருந்த விபூதியைக் கலைக்காமல் போயிருந்தேனே!

    எனக்கு முதலில் வேடிக்கையாக இருந்தது. யோசித்துப் பார்த்தபோது, இப்படியெல்லாம் ஒடுக்கி, ஒதுக்கி வைக்கப்பட்டால், கைம்பெண்கள் நாளடைவில் எத்தனை வேதனையை அனுபவிப்பார்கள் என்று புரிந்தது. செய்யாத குற்றத்திற்கு ஏதோ குற்ற உணர்ச்சி, சிறுமை. ஆணுடன், சமூகத்தின் மதிப்பையும் இழந்துவிடுவது எத்தனை கொடுமை!

    என் மனம் கனத்திருந்தது. விதவைத்தாயாக நடிக்கையில், எனக்குள் அதைக் கொண்டுவந்தேன்.

    ‘நீங்கள் இவ்வளவு சிறப்பாக நடிக்க எங்கு கற்றீர்கள்?’ என்று ஒருவர் பாராட்டியபோது, ‘வாழ்க்கையில்,’ என்று நினைத்துக்கொண்டேன்.

    எதையும் தாங்கலாம்

    எப்போதும், எல்லோரையும் வைதுகொண்டே இருந்த ஒரு தலைமை ஆசிரியை, ‘இவள் என்ன டைப்? புரிந்துகொள்ளவே முடியவில்லையே!’ என்று என்னைக் குறித்துக் கேட்க, ‘இந்த எழுத்தாளர்களையே புரிந்துகொள்ள முடியாது!’ என்று அந்த ஆசிரியை பதிலளித்தாளாம்.

    நான் சிரித்துக்கொண்டேன், பாட்டி என்னைத் திட்டியதைவிடவா!

    அடித்து வளர்ப்பது

    தினசரியில் ஒரு சீனப்பெண் விளக்கம் கேட்டு எழுதியிருந்தாள்: என் தாய் எங்கள் இரண்டு வயது மகளைப் பார்த்துக்கொள்கிறாள். குழந்தையை பிரம்பால் அடித்தாலும் நாங்கள் கேள்வி கேட்பதில்லை. (அப்படித்தானே நாங்களும் வளர்ந்தோம்!) என் மூத்த மகன் சிறுவனாக இருந்தபோது எவ்வளவு அடித்தாலும் அழமாட்டான். ஏனெனில், ஆண்கள் அழக்கூடாது என்று சொல்லிக்கொடுத்திருக்கிறோம். ஆனால், மகளோ, இரவு முழுவதும் விசும்புகிறாள். பெண்கள் ஏன் இப்படித் தொட்டாச்சிணுங்கியாக இருக்கிறார்கள்?

    அடித்தால், ‘தண்டித்து விட்டார்களே!’ என்று மனம் நோக அழுவது இயற்கை. இதில் ஆணென்ன, பெண்ணென்ன? மேலும், பிரம்பால் அடித்தால்தான் ஒரு குழந்தை நல்லவிதமாக வளரும் என்ற எண்ணமே தவறு.

    அழக்கூடாது என்று சொல்லியே ஆண்களை உணர்ச்சிக் குவியலாக ஆக்கிவிடுகிறோம். கோபம், ஆத்திரம், அவுட்டுச் சிரிப்பு -– இவை மட்டும்தானா அவர்கள் வெளிக்காட்டக்கூடிய உணர்ச்சிகள்?

    “பதின்ம வயதான மகன் காலையில் எழுப்பியவுடன் எழுந்திருக்காவிட்டால் அடி” (என் சக ஆசிரியை பெருமையுடன் கூறியது).

    தடுக்கி விழுந்தால் கையால் ஓங்கி அடி. இப்படி ஒரு தாத்தா தன் பேத்தியை அடித்தபோது, நான் அதிர்ச்சியுடன் பார்த்தேன். அவருக்கே என்னமோபோல் ஆகி, குழந்தையைத் தூக்கிக்கொண்டார்.

    உங்கள் கையில்

    தகுந்த காரணமின்றி வசைச்சொற்களை வீசுவதும், அடிப்பதும் ஒரு குழந்தைக்கு குழப்பத்தைத்தான் உண்டுபண்ணுகிறது. ‘ஏனோ பெரியவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை!’ என்று புரியாதுபோக, அழுமூஞ்சித்தனம் வருகிறது.

    குழந்தை பயங்கொள்ளியாக வளர்வதோ, மகிழ்ச்சியுடன் கற்பனைத்திறனும் சிறக்க வளர்வதோ பெரியவர்கள் கையில்தான் இருக்கிறது. ஒரு குழந்தை முகத்தில் பயமோ வருத்தமோ தெரிந்தால் அந்த வளர்ப்புமுறை தவறானது.

    அவனுடைய பிடிவாதத்தையும், கோபத்தையும் நகைச்சுவையாக மாற்றினால், அவனும் விஷமத்தை மறந்து, சிரிப்பான். நான்கு வயதுவரை இப்படிக் கண்டித்தால், அவனுக்குத் தன் எல்லை புரிந்துவிடும்.

    கதை

    என் பேரன் எட்டுமாதக் குழந்தையாக இருந்தபோது தவழ்ந்து, மிகுந்த பிரயாசையுடன் ஒரு பூச்சியைப் பிடித்திருந்தான். அடுத்து, அவன் செய்யப்போவதைத் தடுக்க குரலை உயர்த்தினேன்.

    “ஏம்மா குழந்தையை அழவிடறே?” என்று என் மகள் வருத்தத்துடன் கேட்டாள்.

    “கையில ஒரு பூச்சியைப் பிடிச்சு வெச்சிருக்கு. ‘தின்னுடா’ன்னு விட்டுடட்டுமா?”

    அதற்குத் தண்டனை அடிதான். பேசினால் புரியாத நிலையில், அவனுடைய இறுக மூடிய பிஞ்சுக் கையின்மேல் ஆள்காட்டி விரலால் தட்டினேன். அதுதான் அடி

    பாராட்டுங்கள்

    ஒரு முறை நான் ரயிலில் நீண்ட பயணம் செய்துகொண்டிருந்தபோது, “எங்கப்பா குழந்தைகள் என்ன செய்தாலும் புகழ்வார்,” என்று பொதுவாகத் தெரிவித்தான் இளைஞன் ஒருவன்.

    உடன் அமர்ந்திருந்த சிலர் அவனை சிகரெட் பிடிக்கும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தனர். அவன் மறுத்தான். “ஒங்கப்பாகிட்ட சொல்லமாட்டோம்,” என்ற கேலிக்குரலை லட்சியம் செய்யவில்லை.

    ஒருவரால் சிறு வயதிலிருந்து பாராட்டப்படும் குழந்தை ‘தவறு’ என்று அவர் சொல்லியிருக்கும் காரியத்தைச் செய்யாது. சொன்னவர் அருகில் இருந்தாலும், மறைந்துவிட்டாலும். இப்படித்தான் நல்லொழுக்கம் பழக்கமாகிறது.

    பெண்களுக்கு உலகின் போக்கு புரிய

    ஒருமுறை, விடுமுறை முடிந்து, வீடு திரும்பியவுடன், பொறுக்கமுடியாது, அம்மாவைக் கேட்டேன்: “பாட்டி ஏம்மா என்னை இப்படித் திட்டறா?”

    “உறவுக்காரா அழ அழச் சொல்லுவா. அப்போதான் ஊர்க்காரா நம்பளைப் பாத்துச் சிரிக்கமாட்டா!” என்ற விளக்கம் வந்தது.

    ‘எது செய்தாலும் சரிதான்!’ என்று குடும்பத்தில் விட்டுக்கொடுக்கலாம். ஆனால், உலகமும் அப்படியே விடுமா, என்ன?

    சமூகத்தில் பெண்கள் எப்படியெல்லாம் வதைபடக்கூடும், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று பதின்ம வயதுப் பெண்களுக்குப் போதித்தால், பிற்காலத்தில் அதிர்ச்சி கொள்ளாது, சமயோசிதமாகச் செயல்பட முடியும்.

    ‘கொஞ்சகாலம்தான் அவர்கள் பெற்றோருடன் இருப்பார்கள்; புக்ககத்தில் என்ன பாடுபட நேரிடுமோ,’ என்ற பரிதவிப்புடன், பெண் குழந்தைகளுக்கு நிறைய `இடம்‘ கொடுத்து வளர்ப்பது நல்லதல்ல.

    அருமையாக வளர்க்கலாம். அதே சமயம், உலகின் போக்கையும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டுவது அவசியம். இல்லாவிட்டால், புத்தர் கதைதான்.

    Share
  • ஒடாங்குட்டான் பாடல் – வைரமுத்து

    ஒடாங்குட்டான் பாடல் – வைரமுத்து

    ஒரு புதுப்படம்; எல்லோரும் இளைஞர்கள். பெரியவர் சிறியவர் பார்த்துத் தமிழ் வினைப்படுவதில்லை. எந்தச் சிப்பியில் எந்த முத்தோ? பெரும்படம் போலவே இந்தச் சிறுபடத்திற்கும் ஒரு காதல் பாடல்.  இசை – மாரிசக்தி, இயக்கம் – மகிமைதாஸ், பாடகர்கள் – யது – ஜாஹ்நவி , படம் – ஒராங்குட்டான்.

    பாடல்

    நண்பா!
    எப்போது காதல் வாய்த்தது?
    அப்போது என்ன நேர்ந்தது?

    ஒரு சூறாவளி
    இதயச் சிறுகூட்டில் சுழன்றதா?
    ஒரு கோதாவிரி
    முதுகின் நடுக்கோட்டில் நகர்ந்ததா?

    இலவம்பஞ்சு போலே
    உடல் மிதந்து போகாதோ
    உன்னை நினைத்தால்

    வார்த்தை மொழியிழந்து போகும்
    சொல் தீர்ந்து போனாலும்
    உரையாடல் தீராது

    கண்ணா! வினோத வேதனை
    கண்தூங்கும் போதும்
    காதல் சிந்தனை

    Share
  • கதைசொல்லும் மரபை மீட்டெடுக்க வேண்டும்

    கதைசொல்லும் மரபை மீட்டெடுக்க வேண்டும்

    சுப்ரபாரதிமணியன்

    ‘கனவு இலக்கிய வட்டம்’ சார்பில் ஆண்டுதோறும் குழந்தைகளுக்கான கதை எழுதும் “கதைசொல்லி..“ போட்டியை நடத்தி வருகிறது. இவ்வாண்டில் அப்போட்டிக்கு தமிழகம் முழுவதுமிருந்து131 கதைகள் வந்திருந்தன. அதில் 20 கதைகள் தேர்வு செய்யப்பட்டு ரூ5000 பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு. தபாலில் பரிசுகள் அனுப்பபட்டன.

    திருப்பூர் பகுதிப் பள்ளிகளில் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு  26/2/2020 காலை. முருகு மெட்ரிக்குலேசன் பள்ளி, கூத்தம்பாளையம், அண்ணாநகர் விரிவு, பி.என். சாலை, திருப்பூரில் நடைபெற்றது. எழுத்தாளர் நாமக்கல் நாதன் பரிசுகள் வழங்கினார். அவர், பாண்டியன் நகர், கூத்தம்பாளையம் பிரிவு, பெருமாநல்லூர் பகுதிகளைச் சார்ந்த குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்கினார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், பள்ளி நிர்வாகி பசுபதி உட்பட்டோர் கலந்துகொண்டனர். கதைகளைத் தேர்வு செய்தவர்கள்கவுரவிக்கப்பட்டனர்.

    “கதை சொல்லும் பயிற்சியைப் போல் கதை எழுதும் முறைகளைக் குழந்தைகள் கடைப்பிடிக்க வேண்டியது பற்றி எழுத்தாளர் நாமக்கல் நாதன் பரிசுகள் பேசினார். கதைகள், இலக்கியம்- வாழ்க்கையைப் பிரதிபலிப்பவை. வழிகாட்டுபவை. இலக்கியத்தை நிராகரிப்பவன் பகுத்தறிவு இல்லாத மிருகமாகவே  வளர்வான்“ என்றார், எழுத்தாளர் நாமக்கல் நாதன்.

    ”கனவு இலக்கிய வட்டம்“ சார்பில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசியது:

    “பாட்டிகள் மடியில் உட்கார்ந்து கதை கேட்ட தலைமுறை இன்றில்லை. பாட்டிகளும்முதியோர் இல்லத்தில். குழந்தைகளும் டிவி முன்னால் உட்கார்ந்து கதைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். முன்னர் பத்திரிகைகள் கதைகள் சொல்லின. இப்போது  அதில் பெரும் பகுதி டிவிதான். கதை சொல்லும் மரபைக் கடைப்பிடிக்கவும், குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும், பேச்சில் கூச்சம் இல்லாமல் இருக்கவும், சிந்தனையை வளர்க்கவும் இக் கதை சொல்லும் நிகழ்ச்சி உதவுகிறது.

    “கதை சொல்லும் மரபு விடுபட்டுவிட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும். பாட்டிகளும் முதியோர்களும் முதியோர் இல்லங்களில் தஞ்சமடைகிறார்கள். தொலைக்காட்சிகள் அந்த இடத்தை  எடுத்துக்கொள்ள முடியாது. கதைசொல்லலில் கற்பனைத் திறன் வளரும். பேச்சில் கூச்சம் இல்லாமல் போகும். தன்னம்பிக்கைவளரும். கதை கேட்காத, கதை சொல்லாத தலைமுறைகளால் மொழித் திறன் வளராமல் போகும். மேலை நாடுகளில் கதை சொல்லல், பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக உள்ளது. பாடப் பகுதிகளை கதைகளாகச் சொல்வதும் மாணவர்களுக்குப் பாடங்களை எளிதில் புரிய வைக்க உதவும். இலக்கியப் பகுதிகளைக் கதைகளாக்கி, பாடங்களை மனப்பாடம் செய்வதைத் தவிர்க்கலாம் என்றார்.

    தாளாளர் பசுபதி வாழ்த்திப் பேசினார்.

    Share
  • படக்கவிதைப் போட்டி – 247

    படக்கவிதைப் போட்டி – 247

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    PicturesQueLFS எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (01.03.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி 

    திரு. முகம்மது ரபியின் இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 246க்கு வழங்கியிருப்பவர் திருமிகு. சாந்தி மாரியப்பன். படக்கலை நிபுணர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

    அலையெனவே அலைந்தாடும் மனித மனங்கள் அவா அறுக்கும் கலையறிந்து அடக்கத்தோடு வாழ்ந்தால் வாழ்வில் இன்பம் கோபுரமாய் உயர்ந்துநிற்கும் எனத் தோன்றுகின்றது இப்படக் காட்சியைக் காண்கையில். ஆயினும் அவ் உயர்நிலை வாய்க்கக் கடும் பயிற்சியும் விடா முயற்சியும் தேவை.

    இப்படக்காட்சியைக் காணும் கவிஞர்களின் உள்ளத்தில் கவிதை வெள்ளம் பொங்கிப் பெருகும் என நினைக்கிறேன். அவ்வெள்ளத்தில் நீந்தி மகிழும் நல்வாய்ப்பை எமக்களிக்க வாரீர் எனக் கவிஞர்களை அன்போடு அழைக்கிறேன்!

    *****

    அசைந்தாடும் நதிநீரை, அந்நீரின் பளபளப்பை, ஓரம்நின்று இரசிக்கும் படகுகளை, கட்டடங்களின் பின்னே மறைந்து நின்று சிரிக்கும் மரங்களை எனப் படத்தில் தெரிகின்ற அனைத்தையும் தன் கவிதைக்குள் கவினார் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    அசைந்தாடும் நதிநீரை
    அணைத்தபடி கட்டடங்கள்
    அழகழகாய்த் தெரிகிறதே
    அதில் நம் மனமும் லயிக்கிறதே

    இடைவிடாது ஓடுகின்ற
    இந்நதி நீரின் பளபளப்பு
    இறைவன் தந்த பரிசளிப்பு
    நம்மிரு கண்ணில் ஜொலிஜொலிப்பு

    மரங்களும் தான் தெரிகிறதே
    மறைக்கும் கட்டடங்கள் பின்புறத்தில்
    சில்லென்று காற்றடிக்கச்
    சீறியெழச் சிரிக்கிறதே!

    கதிரவனின் ஒளிவீச்சால்
    தங்கக்குவியலாய் இந்நதிநீரோ
    அதனுடே நீலநிறம்
    அதற்குத்தான் முத்தாய்ப்போ?!

    படகுகளும் ஓரம் நின்று
    நதியைத்தான் ரசிக்கிறதோ
    ஆலயங்கள் கரைமீது
    அமைதியைத்தான் தருகிறதோ!

    அழகென்று எதைச் சொல்ல…?
    அற்புதப் படப்பதிவில்
    அருமையான காட்சியே என்று
    அறுதியிட்டுக் கூறுகின்றேன்!

    *****

    ”அலைகடலே அடங்கிக் கிடப்பாய்! அடங்காது ஆடும் அறிவற்ற மனிதனுக்கு, நேற்றிருந்தோர் இன்று இல்லை எனும் நிலையாமையை நீ உரைப்பாய்!” என்று கடலை வேண்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மனிதனுக்குப் பாடம்…

    ஆற்றல் மிகுந்த அலைகடலே
    அடங்கிக் கிடப்பாய் நிலையாக,
    ஏற்றம் வந்தால் மனிதனவன்
    ஏதும் தெரியா தாடுகின்றான்,
    கூற்றின் வரவு தெரியாதே
    குற்றம் பலவும் செய்கின்றான்,
    நேற்றுச் செய்தோர் இன்றில்லை
    நெறியாம் பாடம் சொல்வாயே…!

    *****

    ”யாத்திரை என்றதும் நினைவில் வரும் திருத்தலம் காசி; முதுமைவந்து முத்தமிட, அமைதி தேடும் மனங்களுக்குப் புகலிடமும் இந்தக் காசியே” என்று காசினி போற்றும் காசியின் புகழ்பாடுகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    பஞ்சபூதங்களில்
    நிலமும் நீரும்
    வீசும் காற்றும் வானும்
    வந்து நின்று போஸ் கொடுக்க
    தீமை விலகி நன்மை பெருகத்
    தீ மட்டும் விலகிச் சென்றதோ?

    நித்திரையில் கூட
    யாத்திரை என்றதும்
    நினைவில் வரும்…. காசி
    கங்கையில் தினம்
    கறைகள் நீராட
    புனிதமாய் மாறி
    புண்ணிய ஸ்தலமானதோ?

    குற்றங்கள் பெருகிப் பாவங்கள் நிறைந்திட
    புனித நீராடி
    பாவங்களைத் துறந்து பரிசுத்தம் ஆகும்
    நம்பிக்கையைப்
    பலர் நெஞ்சில் விதைத்தவன்
    தன்னம்பிக்கை விதைக்க மறந்ததென்ன?

    எதிர்காலம் பற்றிச்
    சிந்தையேதும் இன்றியே
    பொருள் தேடி ஓடியே
    இளமை முழுதும் கழியுமே
    வந்து போக மனமின்றி
    தங்கிவிட்டச் சக்தி யாவும்
    ஒன்று சேர்ந்து உருவான ஊரு இது!

    முதுமை வந்து முத்தமிட
    அமைதி தேடி அலைந்திடும்
    மனங்கள் அனைத்திற்கும்
    புகலிடமாய் அமைந்திடும்
    காசி எனும் இத்தலமே!

    *****

    ”புலன்களால் ஏறிய புழுதியைப் படித்துறையில் துலக்கி, பக்திக்கடலில் மூழ்கி, முக்தியெனும் முத்தெடுக்கக் காத்திருக்கும் கட்டங்கள் இவை” என்கிறார் திருமிகு. சக்திப்ரபா.

    புலன்களால் புழுதியேறி
    அடர்ந்திருந்த அழுக்காற்றுக் கறையைப்
    படித்துறையிலே துலக்கி,
    சினம் தொலைத்து, மோகம் களைந்து,
    பக்தியெனும் கடலில் மூழ்கி,
    முக்தியெனும் நல்முத்தெடுக்க,
    தமது முறைக்காக
    வரிசையில் காத்திருக்கும்
    கட்டடங்கள்.

    *****

    ”வானோங்கி நிற்கும் இக் கட்டடங்கள் நிலைத்திருக்க, கடலது கரை தாண்டாமல் கண்ணியம் காக்கவேண்டும்” என்ற உண்மையை விண்டுரைக்கின்றார் திருமிகு. சத்தியா இரத்தினசாமி.

    வல்லென மனிதன் வனைந்த கட்டடங்கள் வானம் தொட.
    முனைந்து நிற்கும் இவ்வகையைப் பார்க்கையிலே….
    உள்ளூர ஓர் உணர்வெழுகின்றது.
    இக் கட்டடக் காட்சியெல்லாம் கரையிலே நிலைத்திருத்தல்,
    கண்ணியம் காக்கும் கடல் கரை தாண்டா வரையிலேயே…

    *****

    நீரையும் நீரைச் சார்ந்துநிற்கும் ஏனைய பொருள்களையும் அழகாய்த் தம் கவிதைகளுக்குள் அடக்கி, வாழ்வியல் உண்மைகளை அவற்றோடு தொடர்புபடுத்தி வழங்கியிருக்கும் வித்தகக் கவிஞர்களுக்கு என் அகங்கனிந்த பாராட்டுக்கள்!

    அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வுசெய்யப்பட்டிருப்பது…

    ஜீவநதி!

    காட்சிகள் மாறினாலும்
    காலங்கள் மாறினாலும்
    மாட்சிமை(யை) நிலத்து நிற்க
    மன அழுக்கை அடித்து ஓட்டு!

    சலசலத்துப்
    பொங்கியோடி
    வையகத்தின் வளம் சேர்க்கத்
    தினம் தினம் புதிப்பித்துக் கொள்!

    ஓரிடத்தில் ஒடுங்கி
    பழமை சேர்ந்து
    பாசி படிந்து
    குட்டையாய்த் தேங்கிடாமல்
    ஜீவநதியாய் ஓடிக்கொண்டே இரு!

    ”மனிதா! மாட்சியோடு என்றும் நிலத்தில் நிலைத்துநிற்க, உன்னை நித்தமும் புதுப்பித்துக்கொள்! குட்டையாய்த் தேங்கிடாமல் ஜீவநதியாய் ஓடிக்கொண்டே இரு!” என வாழ்வின் வெற்றி இரகசியத்தை எளிமையாய் உரைத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

     

    Share