Blog

  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12

    தி. இரா. மீனா      

    கதிரெம்மவே

    கதிரரெம்மய்யனின் மனைவியான இவருக்கு ரெப்பவ்வ என்ற பெயருமுண்டு. இராட்டையில் நூல் நூற்பது இவரது காயகமாகும். ”கதிரரெம்மி ஒடைய கும்மேஸ்வரா” இவரது முத்திரையாகும். சரணபதி, லிங்கபதி பாவனை, தொழிலின் உயர்வு, சரணரைப் போற்றுதல் ஆகியவை இவரது வசனங்களில் வெளிப்படுகின்றன. காயகத்தின் வழக்குகள் வசனங்களில் இடம் பெறுகின்றன.

    1. “என் இராட்டையின் குலம்சாதி என்னவெனக் கேட்பவரே,
    கீழ்ப்பலகை பிரம்மன்; நாராயணன் தோரணம்
    நின்றிருக்கும் பொம்மை சிவன்
    சிவனின் பின்புறம் சூத்திரமிரண்டு
    அறிவென்கிற நூற்புக் கயிற்றை பக்தியெனும் கையால் சுழற்ற
    சுற்றி நூல் நிறைந்தது நூல்கதிர்
    இராட்டையைச் சுழற்ற மாட்டேன் என் கணவன் கோபிப்பான்
    இனி என்செய்வேன் கதிரரெம்மியொடய கும்மேஸ்வரனே ”

    கன்னடி காயகதா அம்மி தேவய்யா

    இவருடைய  காயகம் சவரம் செய்வதாகும். ”கமலேஸ்வரலிங்க” இவரது முத்திரையாகும். காயகம் பற்றி எழுதுவதும், எந்தச் சாதி, குலத்திலிருந்து வந்திருந்தாலும் அவரவர் காயகத்திற்கும், பக்திக்கும் இழிவு வராதபடி பார்த்துக் கொள்ளவேண்டுமென்பது இவரது வசனங்களின் சாராம்சமாகும்.

     1. “எந்தக் குலம் சாதியில் பிறந்திருப்பினும்
    தம் காயகத்திற்கு பக்திக்கேற்ப
    களங்கமில்லாமலிருக்க வேண்டும்
    முக்குணத் தூய்மையோடிருக்க வேண்டும்
    அறம் பொருளின்பத்திற்கு மூக்கறுபடலாமா?
    அறிஞர் சொன்னாரென பொருத்தமற்றவை செய்யலாமா?
    எண்ணத்தில் தூய்மையாகி சென்ன பசவனின் சாட்சியாகி
    கமலேஸ்வரலிங்கம் போற்றவேண்டும்”

     2. “தீப்பந்தம் ஏந்தியவனுக்கு ஐயமிருக்கலாம்
    தீபத்திற்கு ஐயமுண்டோ?
    சம்சாரத் துன்பத்தில் காமனின் தகிப்பில்
    தவிப்பவனுக்கு கொந்தளிப்பு!
    அதிசயலிங்கமணிந்தவனுக்கு கொந்தளிப்பா?
    சென்னபசவன் சாட்சியாக இக்குணமுடையவனை
    கமலேஸ்வரலிங்கமென்பேன்”

    கன்னடி காயகத ரெம்மம்மா

    ரேமம்மா, ரெம்மவ்வா என்ற பெயர்களுடையவர். நாவிதம் இவருடைய காயகம். ”சத்குரு சங்க நிரங்கலிங்கா“ என்பது இவரது முத்திரையாகும்.

    1. “கையில் கண்ணாடியிருக்க தன்னைத்தான் பாரக்கக் கூடாதா?
    ஜங்கமரின் பிரசாதம் ஏற்கவில்லையெனில்கொல்லக் கூடாதா?
    கொன்றால் முக்தியில்லையென்போரின் வாயில்
    காவலனின் காலணியை வைப்பேன்
    விடுகதைக்கு விடைகொடுங்கள்
    உம்மிடம் விடை இல்லையெனில் அழியுங்கள்
    இறந்த நாயின் வால்போல
    சத்குருசங்க நிரங்க இலிங்கத்தில்”

    கன்னத மாரிதந்தே

    திருடனாக வாழ்ந்த இவர் இறையருளால் சரணராக மாறி நல்ல வாழ்க்கை  நடத்துகிறார். ”மாரன வைரிமாரேஸ்வரா’ இவரது முத்திரையாகும். களவுத் தொழில் பின்னணி என்பதால் அது தொடர்பான சொற்களே வசனங்களில் இடம் பெறுகின்றன.

    “இருட்டில் கன்னம் வைத்தால் என் கர்த்தனுக்கு அவமானம்
    தூங்குகின்றவர் வீட்டில் புகுந்தால் தொழிலுக்கு அவமானம்
    தூங்கியவனை எழுப்பி எடுத்த பொருளை அவனுக்குக் காட்டி
    எனக்குரியதை எடுத்துவந்தேன் மாறன வைரி மாரேஸ்வரனே”

    கம்பத மாரிதந்தே

    காயகம் மீன் பிடிப்பதாகும். ’கதம்பலிங்க’ இவரது முத்திரையாகும்.

    “பிறவிகள் பலவெடுப்பினும் உத்திகள் பல பேசினாலும்
    சாட்சிகள் பல இருந்தாலும்
    இடமறியவேண்டும்
    பேச்சறிவோமெனப் பேசாமல்
    சான்றோன் என மௌனம் காட்டாமல்
    அவ்வக்காலத்தின் நீதியறிந்து
    அறம் சார்ந்து இருப்பதே உயர்வாகும்
    கதம்பலிங்கனே”

    கரஸ்தலதா மல்லிகார்ச்சுனதேவா

    “பரமகுரு சாந்தமல்லிகார்ச்சுன “ என்பது இவரது முத்திரையாகும். இஷ்டலிங்க வழிபாடு, சிவன் பெருமை பேசுவதாக இவர் வசனங்கள் அமைகின்றன.

    1.“அகத்தில் தெளிவின்றி புறத்தில் செயலிருப்பின் என்னபயன்?
    அது பார்வையற்றவனின் வாழ்வு போன்றது
    புறத்தில் செயலின்றி அகத்தெளிவால் என்ன பயன்?

    அது சூன்யத்திலுள்ள விளக்கு போன்றது
    அகம், புறமிரண்டும் இணைய வேண்டும்
    “அகந்தர்ஞான பஹிம்கிரியா ஏகியாவோ விசேஸத”
    என்பது போல அகத் தெளிவு,புறச்செயல் உடையவன்
    பக்தன்,பிரசாதி, அடியவனாவான்
    நம் பரமகுரு சாந்தமல்லிகார்ச்சுனனுக்கு ”

    2.“கடலின் ஆலங்கட்டியைச் செதுக்கி தூணாக்கி
    வீடுகட்டி வாழ்வு நடத்த முடியுமா?
    அக்னிக்குள்ளிருக்கும் கற்பூர குடுவைக்குள்
    மணம் சேர்த்து பசையாக்க முடியுமா?
    காற்றின் மணம் பிடித்து மாலையாக்கி சூடமுடியுமா?
    கானல்நீரை எடுத்து வந்து சமைத்துண்ண முடியுமா?
    உன்னை அறிந்து தன்னை மறந்த சிவயோகிக்கு
    இன்னொரு பிறவியுண்டோ
    பரமகுரு மல்லிகார்ச்சுனனே?  “

    கருளகேதய்யா

    “சங்கேஸ்வரா” இவரது முத்திரையாகும். நோன்புக் கட்டுப்பாட்டைத் தீவிரமாகப் பின்பற்றியவர். வீரசைவரல்லாதவரோடு சேருதல், அர்ப்பணம் செய்யாததை உண்ணுதல் ஆகியன கூடாது என்ற கருத்துக்களைத் தன் வசனங்களில் வெளிப்படுத்தியவர்.

    1.“சாவு விட்டுவிடாது என்பதறிந்தும்
    ஒழுக்கம் விட்டு நாளும் மடிவதேன்?
    இலிங்கத்திற்கு மனம் அர்ப்பணித்து
    மனதிற்கினிமையான சங்கேஸ்வரனோடு இணைவீர் ”

    2.“உடல் தனக்குத் தேவையற்றதை விரும்பினால் வெட்டுவேன்
    கைகள்  தனக்கற்றதைத் தீண்டினால் சீவிவிடுவேன் உடனே
    காதுகள் தனக்கற்றதைக் கேட்டால் அறுப்பேன்
    நாசி தனக்கற்றதை முகர்ந்தால் கூராணி செலுத்துவேன்
    பார்வை தவறினால் களைந்தெறிவேன்
    மனம் மற்றது நினைத்தால் ஆன்மாவை எறிந்துவிடுவேன்
    மனதிற்கு இனிமை சங்கேஸ்வரலிங்கமே”

    கலகேதய்யா

    இவர் கிராமியக் கலைஞர். “மேகலேஸ்வரலிங்கா “ இவரது முத்திரையாகும். ”அரிஹர’, “பீமகவி”, ஆகிய காவியங்களில் இவரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

    “வேலை செய்வதைச் சொல்லி இரப்பதேன்?
    கிடைக்காத போது வைவதேன்?
    கடவுள் தருவாரெனச் சொல்லி கோயிலில்
    கூட்டத்தில் காத்திருப்பதேன்?இது பெருமையோ?
    வயிற்றை நிரப்புபவரின் வாழ்வியல் நிலை இது
    மேகலேஸ்வரலிங்கனை இவரடைய முடியாது “

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 69 (அவர்தம்)

    சேக்கிழார் பாடல் நயம் – 69 (அவர்தம்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி                           

    திருத்தொண்டர்களுள் முதலாமவராகிய திருநீலகண்டர் அருள் வரலாற்றைக்  கூறும் இப்புராணத்தில் அத்தொண்டர்தம் மனைவியார் பற்றியும், சிவநேயத்தைப்   பற்றியும்  இப்பாடல்  கூறுகிறது.

    அவ்வடியாரின் மனைவியார் அருந்ததி என்ற கற்புக்கரசிக்கிணையான மேம்பட்ட  கற்புக்கரசி ஆவார். கற்பு – கணவனார் வழி நிற்கும்பெண்ணியல்பு. “கற்பெனப்படுவது சொற்றிறம் பாமை“ என்பதுபழமொழி. அருந்ததி – வசிட்டரது மனைவி. கற்பினிற் சிறந்தவள். வரம்பெற்று அப்பெயர் பூண்ட ஒரு விண்மீனாகி நிற்கின்றாள் எனவும்,கற்பினுக் குதாரணமாகக் கொள்ளப் பெறுபவள் எனவும் புராணங்கள் கூறும்.கல்யாணச் சடங்குகளில் அருந்ததி காணும் வழக்கம் காண்க.

    உலகம் உய்யும்பொருட்டுப் பாற்கடலில் பொங்கி மேலெழுந்த விடத்தை இறைவன் அமுதுசெய்ய (அது உள்ளே சென்று மறைந்துபடாமல் எமக்கெல்லாம் அறிகுறியாக விளங்கி இருக்கும்படி) யாங்கள் செய்த தவப்பேறுதான் அம்மட்டில் நிற்கும்படி தடுத்ததோ என்று சொல்லும்படியாக இந்தக் கண்டமல்லவா அதனைத் தடுத்துத் தானே தரித்து நிற்கிறது என்ற கருத்தினாலே; சிவபெருமானாகிய எமது இறைவனது கழுத்தையே எப்போதும் எண்ணுபவராய் இவ்வடியார் திருநீலகண்டம் என்று போற்றி வருவார். நஞ்சுண்டது தேவர்களின் பொருட்டேயாயினும் அதனைக் கழுத்தளவில் நிறுத்தித் தரித்தது தமது கருணையை எல்லாப் புவனங்களிலும் உள்ள எல்லா உயிர்களும் உணர்ந்து உய்யும்பொருட்டாதலின், உய்யத்தரித்தது என்றார். இவர் இன்பத்துறையில் எளியரானாலும்  அவரே முன்னர்ச் சொல்லிய

    ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக் கூத்து ஆடும்
    நாதனார் கழல்கள் வாழத்தி வழிபடும் நலத்தின் மிக்கார்.
    பொய் கடிந்து அறத்தின் வாழ்வார்; புனல் சடை முடியார்க்கு அன்பர்
    மெய் அடியார் கட்கு ஆன பணி செயும் விருப்பில் நின்றார்;
    வையகம் போற்றும் செய்கை மனை அறம் புரிந்து வாழ்வார்;
    சைவ மெய்த் திருவின் சார்வே பொருள் எனச் சாரும் நீரார்.

    என்ற இயல்புடன் “திருநீலகண்டம்“ என்பாருமானார் என்க. தேவர்கள் சாவா மருந்தாகிய அமுதம்பெற வேண்டித் திருப்பாற் கடலைக் கடைந்தனர். அங்ஙனம் கடைவதற்கு மேருமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டனர். கடையவே வாசுகி வருத்தமிக்கு நஞ்சுமிழ்ந்தது. அது தேவர்களை வருத்திற்று. முன்னர் வெள்ளை நிறமுடைய திருமால் மேனி கறுகினர். பொன்னிறத்தவரான பிரமர் புகை நிறமாயினர். தேவர்கள் இறைவனைத் துதித்து ஓலமிட அவர் அந்த நஞ்சினை உண்டு கழுத்தளவில் நிறுத்தித் தேவரைக் காத்தனர். அந்த நஞ்சு இருத்தலின் இறைவனது கண்டம் நீலகண்ட மாயிற்று என்பது வரலாறு. இச்சரிதம் மாபுராணங்கள் எல்லாவற்றிலும் பேசப் பெற்றது.

    பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினை
    பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய்
    தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கு
    தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே

    என்பது முதலிய சைவத் தெய்வத் திருவாக்குக்கள் எங்கெங்கும் இக்கருணைத் திறத்தினைத் தேற்றம்பெறப் போற்றி முழக்குதல் காண்க. திருநீலகண்டம் என்ற இத்திருப்பெயரின் ஆணையாலே பதிக முழுதும் ஆணையிட்டு ஆளுடைய பிள்ளையார் அருளிச்செய்த திருநீலகண்டத் திருப் பதிகமுங் காண்க.

    அல்லாமலும் இவர் மனைவியார் திருநீலகண்டம் என்று சிவபெருமானைப் போற்றும் தன்மையினார் என்றும் கூறுவார். ஆனால் திருநீலகண்டத்துக் குயவனார் என்று  சுந்தரர் பாடியதாலும், இக்குயவர் ‘’திருநீலகண்டம்’’ என்ற திருப்பெயரையே எப்போதும் கூறிவந்தமையாலும் ‘திருநீலகண்டர்’ என்பதே இவர் திருப்பெயர் ஆயிற்று!  சிவனாகிய எந்தை நஞ்சுண்டதாலும் கழுத்திற்றரித்ததாலும் யாமெல்லாம் உளமாயினோம் என்ற கருத்துந்தோன்ற இங்குச் சிவனெந்தை என்ற சொல்லாற் போற்றினார்.  திருநீலகண்டத்திற் பற்று மிக்குப் பயின்ற பண்பினாலே அன்றோ மனைவியார் அதனைக் கூறி ஆணையிட்டவுடன், “தாங்கொண்ட ஆர்வ“த்தினாலே “பேதியா ஆணை கேட்ட பெரியவர்“ அதனை ஆயுள்முழுதும் கடவாது உய்த்ததும் ஆம் என்க.

    “அடியாரா மிமையவர்தங் கூட்ட முய்ய அலைகடல்வாய் நஞ்சுண்ட வமுதே“ – முதலிய பல திருவாக்குக்களும் காண்க. இனி இப்பாடல் முழுவதையும்  பயின்று பயன் பெறுவோம்.

    ‘’அவர்தங்கள்  மனைவியாரும்  அருந்ததிக்   கற்பின்   மிக்கார்
    புவனங்கள்   உய்ய ஐயர்  பொங்குநஞ்சு உண்ண யாம்செய்
    தவம்நின்று    தடுத்ததென்ன   தகைத்து தான்   தரித்தது என்று
    சிவனெந்தை   கண்டந்தன்னைத்   திருநீல  கண்டம்  என்பார்!

    இப்பாடலில் இறைவன் உண்ட நஞ்சினைத் தடுத்து கண்டத்தில் நிறுத்திய செயல் பார்வதியுடையது. அதனைத்  ‘தவம்  நின்று  தடுத்தது’  என்று கூறியதன் நுட்பத்தை அறிந்து கொள்வோம்! அவ்வாறே திருநீலகண்டரின் தவறான செயலைத் தடுத்து நிறுத்தியது, ‘’திருநீலகண்டம்‘’ என்ற சூளுரையே  ஆயிற்று! அப்பெயர்  அடியாரின் திருமந்திரமாகவும், அடியார் திருப்பெயராகவும், மனைவியரின்  சூளுரையாகவும்  விளங்கிய வலிமையை  எண்ணியெண்ணி மகிழலாம்!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-117

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-117

    நாங்குநேரி வாசஸ்ரீ

    117. படர் மெலிந்திரங்கல்

    குறள் 1161

    மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்
    கூற்றுநீர் போல மிகும்

    என் நேசம்ங்குத சங்கடத்த மத்தவங்க தெரிஞ்சுக்கிடாம நான் மறைப்பேன். ஆனா அது ஊத்துத் தண்ணி கணக்கா எறைக்க எறைக்க அதிகமாவுது.

    குறள் 1162

    கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்
    குரைத்தலும் நாணுத் தரும்

    என் நேசத்த மறைக்கவும் ஏலல. நேசம் வச்சவரு கிட்ட சொல்லவும் கூசுது.

    குறள் 1163

    காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
    நோனா உடம்பின் அகத்து

    சங்கடத்தப் பொறுத்துக்கிட ஏலாம என் உசிரயே காவடித்தண்டா வச்சிக்கிட்டு நேசம்ங்குத நோய் ஒரு பக்கமும், அதச் சொல்ல ஏலாத வெக்கம் ஒரு பக்கமும் தொங்குது.

    குறள் 1164

    காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
    ஏமப் புணைமன்னும் இல்

    காதல் என்னயச் சுத்திச்சூழ கடல் கணக்கா நின்னு சங்கடப்படுத்துது. அத நீந்திக் கடக்க பாதுகாப்பான தோணிதான் இல்ல.

    குறள் 1165

    துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
    நட்பினுள் ஆற்று பவர்

    (சந்தோசமான) சேக்காளியா இருக்கையிலயே சங்கடத்தக் குடுக்குத இவரு பகையாளியா ஆனா என்ன செய்வாரோ?

    குறள் 1166

    இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
    துன்பம் அதனிற் பெரிது

    நேசம் குடுக்குத சந்தோசம் கடல்கணக்கா பெரிசு. அது பிரிவுங்குத தொல்ல தருத நேரம் வருத சங்கடம் கடலை விடப் பெரிசு.

    குறள் 1167

    காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
    யாமத்தும் யானே உளேன்

    நேசம்ங்குத கொடும் கடல்ல நீந்தின பொறவும் என்னால கரையக் காங்க ஏலல. நடுசாமத்துலயும் ஒறங்காம நான் தனியாவே கெடந்து கலங்குதேன்.

    குறள் 1168

    மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
    என்னல்ல தில்லை துணை

    பாவம் இந்த ராப்பொழுது. இது எல்லா உசிரையும் ஒறங்கவச்சிப்போட்டு தனியாவே கெடக்கு. இதுக்கு என்னயத் தவித்து வேற தொண இல்ல.

    குறள் 1169

    கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
    நெடிய கழியும் இரா

    இந்நாளையில ராப்பொழுதுநீண்டுக்கிட்டே போவுதது கணக்கா தோணுது. நேசம் வச்சவரு பிரிஞ்சி போனதக்காட்டிலும் இந்தக் கொடும பெருங்கொடும.

    குறள் 1170

    உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
    நீந்தல மன்னோவென் கண்

    நேசம் வச்சவரு இருக்க எடத்துக்கு எம் மனசு கணக்கா போவ முடிஞ்சிச்சின்னா கண்ணீர் வெள்ளத்துல சிக்கி என் கண்ணு நீந்த வேண்டியதில்ல.

    Share
  • திருப்பூர் சக்தி விருது 2020

    திருப்பூர் சக்தி விருது 2020

    (செய்திக் குறிப்பு)
     
    வணக்கம், வாழ்த்துகள்.
     
    திருப்பூர் சக்தி விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு   வழங்கி வருகிறோம். கலை இலக்கிய முயற்சிகளுக்காகவும், சமூக மேம்பாட்டுப் பணிக்காகவும் பல்வேறு துறைகளிலும் இவ்வாண்டும் இவ்விருது வழங்கப்பட உள்ளது.
     
    பெண் படைப்பாளிகள் கடந்த இரு ஆண்டுகளில் வந்த நூல்களின் இரு பிரதிகளை (எல்லாப் பிரிவுப் படைப்பாக்க நூல்களையும்)  அனுப்பலாம். பிற துறை சார்ந்தவர்கள் பற்றிய விபரக் குறிப்புகளையும் அனுப்பலாம்.
     
    31 மார்ச், 2020க்குள் அனுப்பித் தர வேண்டுகிறோம்.
     
    திருப்பூர் சக்தி  விருது  2020  குழுவினர், திருப்பூர்
     
    (ஓசோ இல்லம்,  94, எம்ஜிபுதூர் 3ஆம் வீதி, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, திருப்பூர்  641 604 / 99940 79600)
     
     
    Share
  • உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு

    உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    ஒரு மொழி தனது இலக்கியம், கல்வெட்டு, செப்பேடு ஆகியவற்றால் அவ்வக்கால நிகழ்வுகளைப் பதிந்துகொண்டு அதை ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கும் இன்னொரு தலைமுறைக்கும் கடத்தும் ஊடகமாகத் (media) தான் திகழ்கின்றது. இது தான் எல்ல மொழிகளின் அடிப்படைப் பண்பு. இந்த நிகழ்வுப் பதிவுகள் காலம் கடக்கக் கடக்க ஒரு காலத்தின் கண்ணாடியாகவே ஆகிவிடுகின்றன. இந்த அடிப்படைக் கருத்தில் இருந்து விலகி பேராசிரியர் வீ. அரசு போன்றோர் தலித்தியம், திராவிடவியல் நோக்கில் சாதிய மொழி என்ற கருத்தாக்கத்தை ஒரு மொழியின் மீது திணிக்கின்றனர். ஒரு மொழியில் சாதி, வருணாசிரமம், தீண்டாமை ஆகியன பற்றிய பதிவு இருப்பதாலேயே அம்மொழியை சாதிய மொழி என்று அழைப்பது அத்தகையோரின் மடமையைத் தான் காட்டுகின்றது. நல்லது தீயது, உகந்ததுஉகாதது ஆகிய செய்திகளை அவ்வக்காலத்து மக்கள் தாம் ஒரு மொழியில் பதிகின்றனர். அந்த வகையில் பதிகின்ற மக்கள் தாம் அந்த செய்திகளின் விளைவிற்கு பொறுப்பாவரே ஒழிய மொழியை அதற்கு எப்படி பொறுப்பாக்க முடியும்? இந்த மடமை இவர்களோடு நில்லாமல் இவர்தம் பேச்சு, எழுத்துகளால் பிறரையும் மடமையின் பிடிக்குள் தள்ளுகின்றது என்பதே இங்கு வருத்தத்திற்குரியதாக உள்ளது. தமிழ்க் கல்வெட்டுகளில் சாதி, தீண்டாமை பற்றிய செய்திகள் இருப்பதாலேயே தமிழ் ஒரு சாதிய மொழி ஆகிவிடாது. அதன் விளைவுகள் அச்செய்திகளைப் பதிந்தோரைச் சார்கின்றது. அவர்களாலும் தம் காலச் சூழல் நிகழ்வுகளை ஒட்டித் தான் எழுத முடியும் அது அவர் தவறல்ல. இது தமிழுக்கு மட்டுமல்ல பிற மொழிகளுக்கும் பிற மொழி பேசுநருக்கும் பொறுந்தும்.

    தீண்டாமை முதன் முதலாக தமோ குணமுடைய பிணத்தை தீண்டலாகாது என்பதில் இருந்து தான் தொடங்கியது. இது தொடக்கத்தில் புத்த மதத்தாரால் தான் கடைபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் புராண மதத்தை தழுவிய போது அந்த வழக்கத்தை புராண மதத்திலும் நடைமுறைப்படுத்தினர். இதனால் சாவுத் தீண்டாமை ஒரு சமூக வழக்காக காலப் போக்கில் ஆகிப்போனது. பின்னர் இது பிணத்தைக் கையாளும் வெட்டியான் குடும்பத்தாரும் தீண்டத்தகாதவர் என்று விரிந்தது. பிணம் ஆளும் தொழில் குடும்பரீதியாய் தொடர்ந்ததே இதற்கு காரணம்.  தமிழ்க் கல்வெட்டுகளில் இப்படி தீண்டார் எனக் குறிப்பது இந்த பிணம் கையாளும் வெட்டியான்களைத் தான் எனலாம்.  ஆனால் இன்று சமூகத்தில் இத்தீண்டாமை என்பது இவர்களையும் கடந்து இன்னும் பல சாதியாரை உள்ளடக்கியதாக ஆகிவிட்டது. பறையர் என்போர் இத்தகு தீண்டாமைக்கு 16 – ம் நூற்றாண்டு முடியும் வரை ஆட்பட்டிருக்கவில்லை என்பதற்கு அவர்கள் கோவில்களில் சந்தி விளக்கு எரிக்கக் காசு கொடுத்து எரிக்க ஏற்பாடு செய்தததற்கான கல்வெட்டுகளே சான்றாகின்றன.  இப்படி விளக்கு எரிப்போர் தமது முதல் விளக்கெரிப்பின் போது கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில் சந்தி விளக்கெரித்த பறையர் கோவலுக்குள்ளே சென்று வந்தது அவர்கள் தீண்டாமைக்கு ஆட்பட வில்லை என்பதைக் காட்டுகின்றது. கீழே அது தொடர்பான மூன்று கல்வெட்டுகள் விளக்கத்துடன்.

    இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோச மங்கையில் அமைந்த மங்களநாதசுவாமி கோயில் முன்மண்டபத் தென்புறச் சுவரில் உள்ள 21 வரிக் கல்வெட்டு.

    1. சகாப்தம் 1355  ன் மேல் ஸ்ரீ கோமாரபன்மரான திரிபு
    2. வனச் சக்கரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 2 வருஷம் எதிர் வருஷம்
    3. மீந நாயற்று பூர்வ பக்ஷத்துலே தசமியும் புதன் கிழமையும் பெற்ற அத்தத்து நாள் முத்தூ
    4. ற்றுக் கூற்றத்து பிரமதேசம் மருங்கூரான பண்டித சோழ சதிர்வேதி மங்கலத்து
    5. பார்கவ கோத்திரத்து ஆஸ்ரயந சூத்திரத்து நாராயண சர்ம்மன் வீரபாண்டி
    6. ய தேவனுக்கு  தனக்கு நம்முடைய பேர் கூலிக்கு செம்பி நாட்
    7. டில் நம்முடைய உழவுப் பற்றான புறக்குளம் உட்பட்ட ப
    8. ற்றும் இவ்வூரில் புறஞ்சேரியில் தீண்டாஅடிமை உள்ளதும்
    9. உதக பூர்வ தன்மதானமாக நாம் தருகையில் _ _ _ கு எல்லையாவது கீழ்பாற்கு எல்லை நல்
    10. லாண் குடிக்கும் அஸவத்ர குடிக்கும் மேற்கு தென்பாற் கெல்லை கடம்பங்குடிக்கு வட
    11. க்கு மேற்பாற் கெல்லை வடவாலங் குளத்துக்கு கிழக்கு வடபாற் கெல்லை பனைக்குளத்து
    12. க்கும் இயற்கைக் குடிக்காலுக்கும் தெற்கும் ஆக இப்பெரு நான்கெல்லைக் குட்பட்ட ப
    13. ற்றும் மண்திடல், ஊருணி, உடைப்புகுளம், குளப்பரப்பு நன்செய், புன்செய் மேனோக்கிய
    14. மரமும் கீனோக்கிய கிணறு தீண்டா அடிமை மற்றும் எப்பேர்பட்டனவும் ஸமஸ்த ப்ராப்திகளும்
    15. கடமை வினியோகஞ் செக்கிறை தறிக்கடமை தட்டொலிப் பாட்டமும் மாவடை மரவடை
    16. பஞ்சுபீலி சந்தி விக்கிரகப்பேறு முதலாக எப்பேற்பட்டவையும் சர்வமான்யமாக நம் வரியிலார் கணக்
    17. கிலும் பதினொன்றாவது முதலுக்கு கழித்த அளவுக்கு இம்மரியாதியிலே இந்த நாள் முதலுக்கு உதக பூ
    18. ர்வ தன்ம தானமாக சந்திராதித்த வரை சந்ததிப் பிரவேசமே தான  வினியோக விசயங்களுக்கு உரித்தாக கல்லி
    19. லுஞ் செம்பிலும் வெட்டிக் கையாண்டு கொள்ளவும். இந்த உதக பூர்வ தன்ம தானத்துக்கு நம்முடைய வகை
    20. யிலுள்ளாரிலும் மற்றும் ஆராகிலும் விக்கினஞ் செய்யிர பேர்கள் கெங்கைக் கரையிலே பிரம்ம ஹத்தியும்
    21. கோ ஹத்தியும் செய்த பாவத்தை யெய்தக் கடவார்களாகவும்.

    கூலி – செய்த பணிக்கு தர வேண்டிய கூலி; உழவுப்பற்று – உரிமையுள்ள வேளாண் நிலம்; புறஞ்சேரி – ஊருக்கு வெளியே அமைந்த சேரி; அடிமை – கொத்தடிமை; உதகபூர்வ – நீரட்டி கொடு; சந்தி விக்கிரகப்பேறு – ஆவணக் கட்டணம்; சந்ததிப் பிரவேசம் – தலைமுறை தலைமுறையாக; கடவார்களாக – அடைவார்களாக.

    விளக்கம்:  சக ஆண்டு 1355 (கி.பி. 1433) குறிப்பிடப்பட்ட வீரபாண்டியனின் 3 ஆம் ஆண்டு கல்வெட்டு. இதில் வீரபாண்டியன் திரிபுவனச் சக்கரவத்திகள் என்ற பட்டப் பெயரால் குறிக்கப்படுகின்றான்.  அப்போது விஜயநகரத்தில் இரண்டாம் தேவராயரின் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் என்பதைப் பார்க்கும் போது சிறு காலப் பொழுதிற்கு இராமநாதபுரம் விஜயநகர ஆட்சியில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது. இவன் தென்காசி பாண்டியரில் இருந்து வேறுபட்டவனாக இருக்கலாம்.

    முத்தூற்றுக் கூற்றத்தில் அடங்கிய பிரம்மதேசமான மருங்கூர் என்னும் பண்டித சோழ சதுர்வேதி மங்கலத்தை சேர்ந்த பார்கவ கோத்திரத்திர கொண்ட ஆஸ்ரயன சூத்திரத்தை சேர்ந்த நாராயண சர்மன் என்ற பிராமணன் வீரபாண்டியன் என்பவனுக்கு தான் தர வேண்டிய கூலிக்கு ஈடாக செம்பி நாட்டில் தனக்கு உரிமையான புறக்குளம் உள்ளிட்ட உழவு நிலத்தையும் இதாவது, அதனுடன் சேர்ந்த மண்திடல், கிணறு, குளத்தைச் சுற்றி அமைந்த நன்செய் புன்செய் ஆகியவற்றையும் இவ்வூரின் வெளியே அமைந்த சேரியில் வாழும் தீண்டாரைச் சேர்ந்த கொத்தடிமையையும் நீரட்டி தர்மதானமாகத் தந்துவிட்டான். நிலத்தின் அமைவிடமாக அதன் நான்கு எல்லைகள் விரிவாகக் குறிக்கப்படுகின்றன. அதற்குண்டான அரச வரிஇனம், செக்குவரி, தறிவரி, ஆவணக் கட்டணம் என எந்த வகை வரியும் இல்லாமல் வரியிலார் கணக்கில் பதியப்பட்டு தசமிக்கு மறுநாளான பதினோரம் நாள் முதல் இப்படியாகச் செல்வதாக நீரட்டி தர்மதானமாக சந்திர சூரியர் உள்ள காலம் வரைக்கும் தலைமுறை தலைமுறையாக தானம் முதலானவை செய்வதற்கு பயன்படும்படி கையாண்டுவர இதை கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்ளக என்கிறான். இந்த தான தர்மத்துக்கு என்னுடைய உற்றார் உறவுகள் மற்றும் வேறு எவரேனும் தடை எற்படுத்துவாரானால் அவர் கங்கைக் கரையில் பிராமணரையும் பசுவையும் கொன்ற பாவத்தை அடைவார் என்று கூறி நிறைவு செய்கிறான்.

    கல்வெட்டில் நாராயண சர்மனுக்கும் இந்த கோவிலுக்கும் என்ன தொடர்பு என்று தெளிவாகத் தெரியவில்லை. இந்த தான தர்மத்தால் கோவிலுக்கு ஒரு பயனும் இல்லை. இவனது இந்த செம்பி நாட்டு நிலம் அரசனிடம் இருந்து நேரடியாகப் பிரம்மதேய இறையிலியாகப் பெறப்பட்டதாக இருக்கலாம். எனவே அதை விற்றால் வரி இல்லாச் சலுகை போய் ஆவணக் கட்டணமும் கட்ட வேண்டி வரும் என்பதால் தனது அந்த உரிமையை அப்படியே தர்ம தானமாக வீரபாண்டியன் என்பவனுக்கு மாற்றிக் கொடுக்கின்றான்.  நாராயண சர்மன் இப்படி செய்வதற்கு அவனுக்கு வாரிசு இல்லாமல் போனதால் அதை தான தர்மத்திற்கு பயன்படுத்த வீரபாண்டியனை ஒரு கண்காணியாக்கி (care taker) இப்படி கொடுத்திருக்கலாம் அல்லது வரியைத் தவிர்ப்பதற்காகவும் இந்த தானதர்ம முறையை கைக்கொண்டிருக்கலாம். இந்த கிராமத்தின் வருவாய் மன்னனால் இறையிலியாக கோவிலுக்கே விடப்பட்டிருந்தால் அதில் அடங்கிய இந்நிலத்திற்கு கோவிலுக்கு வரிகள் செலுத்தப்பட வேண்டும். வரிகளைக் கட்டத்தேவையில்லை என்று நாராயண சர்மன் அறிவிப்பதால் அது ஏற்கனவே கோவிலின் வரி கட்டாத வரியிலார் புத்தகத்தில் இடம் பெற்றுவிட்டதால் இச் செய்தி இக்கோவிலில் கல்வெட்டாக இடம்பெற்றுள்ளது என்பதை ஊகிக்க முடிகின்றது.

    இக் கல்வெட்டில் தீண்டார் என்று குறிப்பது இடுகாட்டில் பிணங்களைக் கையாளும் வெட்டியாரைத் தான் என்று தெரிகின்றது. ஏனென்றால் பறையர்கள் கோவிலில் சந்தி விளக்கேற்றப் பணம் அளித்துள்ளனர் என்பதற்கு பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. அதனால் விளக்கேற்றும் போது தம் குடும்பத்தோடு கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர்.  ஆகவே பறையர் தீண்டாமைக்கு உட்பட்டிருக்க முடியாது. அது 17- ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியில் ஏற்பட்ட புது வழக்கம்.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 11, பக்கம் 71-72.

    புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள மூலநாதர் கோவில் கருவறை மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள 11 வரிக் கல்வெட்டு.

    ஸ்வஸ்தி ஸ்ரீ திருமன்னி வளர  என்ற முதலாம் இராசேந்திரச் சோழனின் மெய்கீர்த்தி 1-5 வரிகளுக்கு நீளுகின்றது.  இனி 6 ஆவது வரியில் இருந்துகீழே.

    கோப்பரகேஸரிபந்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவற்கு யாண்டு 16 ஆவது. ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் பவித்திர மாணிக்க வளநாட்டு வாகூரான அழகிய சோழ சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறிப் பெருமக்களோ[ம்]. இவ்வா / ட்டை தனு நாயற்று பூர்வ பக்ஷத்து பிரிதிதஷியும் வெள்ளிக் கிழமையும் பெற்ற பூரட்டாதினாள்  நம்மூர் அழகிய சோழன் அம்பலத்தேய் இன்னாட்டு வகை செய்கின்ற உய்யக்கொண்டார் வளநாட்டு திருவழுந்தூர் நாட்டு கப்பூர் உடையார் நீலன் வெண்காடனாரும் இருந்து நம்மூர் ஏரிக்கு ஏரியாயமாக புறவூரார் இருந்து. இவ்வூர் நிலத்து நெல்லும் வரகும் கரும்பும் எள்ளும் உள்ளிட்டுப் பயிற் செதாரைப் போகங்கள்டோறும் பன்நிரு சாண் கோலால் இருநூற்றைம்பத்தாறு குழி கொண்ட / தொரு மாவாக மாத்தால் எண்ணாழி கொள்ளுங் கங்கை கொண்ட சோழன் மரக்காலால் கைய்செய் வார்த்தேய் நெல்லு இரு தூணிநெல்லும் ஆட்டாண்டுதோறும் போகங்கள் தோறும் அவ்வவாண்டு ஏரி வாரியம் செய்வாரே ஏரி ஆயமாகக் கொள்வாராகவும். புறவூர் இருந்து இவ்வூர் வரும் குடிகளை ஏரியாய மல்லாது மாற்று இறை கொள்ளப் பெறாதாராகவும். இவ்வூரிலும் இவ்வூரோடும் ஏரினவாரியங்களிலும் இருந்தாரில் தீண்டாதாரொழிய நீக்கி நின்றாரில்ப் பத்து வயஸுக்கு மேல் எண்பது வயஸு / க்கு கீழ்பட்டாரை முதலெடுத்து நாற்ச்சாண் உள்ள கோலால் இரு கோலுக்கு இரு கோல்லகலமும் ஒரு கோல் மட்டுங் கொண்டு பேரால் ஒரு குழி ஆட்டாண்டுதோறும் இவ்வூர் ஏரியிலேய் கல்லக் கடவார்களாகவும். இப்பரிசு கல்லகடவாரை அவ்வவ் ஆண்டு ஏரி வாரியஞ் செய்வாரேய் குழி கல்லுவிக்க [க]டவார்களாகவும். குழி கல்லக்கடவார் குழி கல்லாதாரை ஏரியாயமாக பேரால் காற்பொன் அவ்வவ் ஆண்டு ஏரி வாரியஞ் செய்வாரே தண்டிக் கொள்ளப் பெறுவார்களாகவும். குழி கல்லாதா / ரைத் தண்டக் கடவ பொன் அவ்வவ் ஆண்டு நேராகத் தண்டாத ஏரி வாரியஞ் செய்வாரை பேரால் கழஞ்சு பொன் ஏரியாயமாக கொள்வதாகவும். இவ்வூர் நிலம் அடுத்தபடியன்றி அடையில் அழிந்துண்டாரை ஏரியாயமாக பேரால் கழஞ்சு பொன் கொள்ள பெறுவதாகவும் ஏரியாயமாகக் கட்டுவன வெயிற்றில் ஏரிக் கணக்கன் ஒருவனுக்கு நிசதப் பதக்கு நெல்லும். இவ்வேரிக்கு வேண்டுவன வெயிறுக்குமல்லது அழிப்பாரும் இப்பரிசு செய்யாமல் காப்பாரும் திருவாணை யென்று இக்க / ப்பூரூடையார் திருவாணை கூறினமையில் இப்பரிசு செய்வதாய் இவ்வண்ணம் ஏரியாயமாகக் கல்வெட்டுவித்தோம் பெருங்குறிப் பெருமக்களோம். பணித்தார் பாக்கைச் சோமநாத கிரமவித்தனும். பாவைக்கால் நின்ற ந[ம்]பிபட்டனும். நெலவங்கன் ஸ்ரீ க்ருஷ்ணக் கிரமவித்தனும். பணியால்  உத்தமப்பிரியன் எழுத்து. யாண்டு 1[6] நாள் 30. [ஏ]ரியா[ய]ம் சுட்டி திருவாணை கூறின திருவாணை கூற்றுவிட்டேன் கப்பூர் உடையானேன்.

    பெருங்குறி பெருமக்கள் – வாரியங்களின் செயற்பாட்டைக் கண்காணிக்கும் அதிகாரமுள்ள பிராமண ஊர்ச் சபை உறுப்பினர், மூத்தோர்; அம்பலத்தே – கூட்டத்தில், மன்றத்தில்; புறவூரார் – வெளியூரார்; வகை செய்பவர் – நிலத்தின் அளவு, தரம் ஆகியன அளந்து வரி விதிப்பவர்; போகம் – பயிர் சுழற்சி, rotation of crop; பரிசு – விவரம், ஏற்பாடு, arrangement; கல்லுதல் – தோண்டுதல்; அடுத்தபடி – சார்ந்தபடி; அடை – விளைபயிர்; அழி – பயன்கொள்,செலவிடு, கழி; நிசதம் – நாள்தோறும்; காப்பார் – விலக்குவார்; கிரமவித்தன் – வேதத்தை நெறிப்படி ஆள்பவன்; திருவாணை- அரசாணை.

    விளக்கம்:  முதலாம் இராசேந்திரச் சோழனின் 16 ஆம் ஆட்சி ஆண்டுக் (கி.பி.1028) கல்வெட்டு. அன்னாளிலே வாகூரான இன்னாளய பாகூர் எனும் அழகிய சோழ ச் சதுர்வேதி மங்கலத்தின் வாரியங்களைக் கண்காணிக்கும் அதிகாரமுள்ள ஊர் சபை மூத்த உறுப்பினர்கள் ஒன்று கூடி இக்கல்வெட்டால் தெரிவிப்பது யாதெனில், “இந்த ஆண்டு தனுசு ராசியில் வளர்பிறையும் வெள்ளிக் கிழமையும் ஆன பூரட்டாதி நட்சத்திர நாளில் (மாதம் குறிக்கப்படவில்லை) அழகிய சோழன் ஊர்க் கூட்டத்தில் வரி அதிகாரியான கருப்பூருடைய நீலன் வெண்காடன் இங்கு நம்மோடு அமர்ந்து இருக்க நம்மூர் ஏரிப் பராமரிப்பிற்காக ஏரிவரியை முடிவு செய்ய உள்ளூராரும் வெளியூராரும் வந்து பங்கு கொண்டுள்ளனர்.

    இவ்வூரின் விளைநிலத்தில் நெல், வரகு, கரும்பு, எள் உள்ளிட்டன பயிர் செய்வாரிடம் ஆண்டாண்டுக்கு ஒவ்வொரு போகத்திற்கும் 12 சாண் கோலால் 256 குழிநிலம் கொண்ட பெரிய அளவு நிலப்பரப்பை உருவாக்கி அதில் எண்ணாழி கொள்ளும் கங்கை கொண்ட சோழன் மரக்காலால் மா ஒன்றுக்கு இருதூணி நெல்லை கையால் அள்ளிப் போட்டு அளந்து ஆண்டாண்டுக்கு ஒவ்வொரு போகத்திற்கும் ஏரிவாரியப் பணியை மேற்கொள்வார் ஏரிவரியாகப் பெறவேண்டும். வேற்றூரில் இருந்து இவ்வூருக்கு வரும் குடிகளிடம் ஏரிவரி தவிர வேறு எந்த வரியையும் பெறக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வூரில் குடியேறியவரில் தீண்டாதாரான வெட்டியான் குடும்பத்தவரை தவிர்த்து பத்து வயதுக்கு மேல் 80 வயதிற்குள் உள்ள ஆள் ஒவ்வொருவரும் நான்கு சாண் உள்ள கோலால் இருகோலுக்கு இரண்டு கோல் அகலமும் ஒரு கோல் மட்டத்திற்கு ஒவ்வொருவரும் குழி தோண்டித் தூர்வார வேண்டும். இந்த ஏற்பாட்டின்படி குழி தோண்டுகின்றவரை அந்தந்த ஆண்டு ஏரிவாரியத்தாரே குழி தோண்டுவதில் ஈடுபடுத்த வேண்டும்.   குழி தோண்டாதவர்களுக்காக மாற்று ஆளை (substitute) அமர்த்தி குழி தோண்டினால் குழி தோண்டாதவர் ஒவ்வொருவரிடமிருந்தும் ஏரிவாரியத்தார் கால்பொன்னை கட்டணமாகப் பெற்றுக் கொள்ளலாம். குழிதோண்டுவதில் கலந்து கொள்ளாதவரிடம் இருந்து அந்தந்த ஆண்டே திரட்ட வேண்டிய கால்பொன்னைத் திரட்டாவிடில் அதற்கு தண்டமாக (fine) ஏரிவாரிய பொறுப்பில் உள்ளவர் ஒவ்வொருவரிடம் இருந்தும் கழஞ்சு பொன்னை ஏரிவரியாகப் பெறவேண்டும். வாழக்கைக்கு இவ்வூர் விளைநிலத்தை சார்ந்திராமல் விளைபயிரை மட்டும் கொள்முதல் செய்து உண்பவரிடம் கழஞ்சு பொன் ஏரிவரியாகப் பெற வேண்டும். ஏரிவரியாகக் கட்டுவனவற்றில் இருந்து ஏரிக்கணக்கன் ஒருவனுக்கு நாள்தோறும் பதக்கு நெல் தரவேண்டும். இந்த ஏரிக்கு வேண்டியதைச் செய்யாமல் அதை பயன்படுத்த மட்டும் செய்வாரும் இந்த ஏற்பாட்டை புறக்கணித்து விலக்குவாரும் அரசாணையை மீறினவர் ஆகின்றனர். கருப்பூருடையார் அரசாணையிட்டபடியே இந்த ஏற்பாட்டை நிறைவேற்றுவதாக ஒப்புக் கொண்டோம். அதன்படியே ஏரிவரி பற்றி கல்லில் வெட்டுவித்தோம்” என்று வாரியங்களைக் கண்காணிக்கும் அதிகாரமுள்ள ஊர்சபை மூத்தோரில் சோமநாத கிரமவித்தன், நம்பிபட்டன், ஸ்ரீ கிருஷ்ண கிரமவித்தன், உத்தமப்ரியன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    இராசேந்திர சோழனின் 16 ஆட்சி ஆண்டு 30 நாளில் ஏரிவரியை முடிவுசெய்து அரசாணை அறிவிக்கும் அரசாணையை கூறிவிட்டேன் கப்பூர் உடையானேன்.

    தீண்டார் பற்றிய குறிப்புள்ள அரிய கல்வெட்டுகளுள் இதுவும் ஒன்று. கோவிலுக்கும் இந்த ஏரிவரிக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை.  இதனால் கோவிலுக்கு எந்த பயனும் இல்லாத போதும் இக்கல்வெட்டு ஏன் கோவிலில் இடம் பெற்றது என்ற கேள்வி நம்மில் எழுகின்றது. “ஏரிக்கு வேண்டியதை செய்யாமல், இந்த ஏற்பாட்டை விலக்குவோர்” ஆகிய எதிர்மறைக் கருத்துகளை இதில் குறிப்பிடுவதில் இருந்து வாரியக் கண்காணிப்பு அதிகாரமுடைய பெருங்குறி சபை உறுப்பினர்களுக்கு இந்த ஏரிவரியை நடைமுறைப்படுத்துவதில் எதிர்காலத்தில் சிக்கல் வரும் என்ற ஐயம் இருந்துள்ளதை காட்டுகின்றது. சிக்கல் எழும் போதெல்லாம் இந்த அரசாணையைக் காட்டி முரண்படும் மக்களை ஏரிவரிகட்ட உடன்படச் செய்யலாம் என்ற எண்ணம் தான் பெருங்குறி சபையாரை இக்கல்வெட்டை கோவிலில் பொறிக்க வைத்தது எனலாம். பெருங்குறி சபை மக்களும் கோவிலில் பணிபுரியும் பிராமணர் தானே!!

    பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பக் 25-28, S. குப்புசாமி, G. விஜய வேணுகோபால். புதுச்சேரி பிரெஞ்சு நிறுவன வெளியீடு. தமிழ்க் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அறிய உண்மைகள், பக் 303-304, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம்,

    செங்கற்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், பாலூர் பதங்கீசுவரர் கோவில் முன்மண்டப வடக்குச் சுவரில் பொறித்த 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு 15 வது
    2. ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஊற்றுக் காட்டுக் கோட்டத்துப் பாலையூர் நாட்டுப் பா
    3. லையூரான இராசேந்திர சோழ நல்லூர் உடையார் திருப்பதங்காடுடைய நாயநா[ர்]க்கு இக்
    4. கோயிற் காணியுடைய சிவப்பிராமணன் காக்குநாயகப் பட்டன் மகன் உய்யக் கொண்டாநாந காக்கு
    5. நாயக பட்டனேன். இந்நாயனார்க்குத் திருப்பாலையூர் கிழவன் பறையடியாரில் வாசி மகன் பெருங்காடநாந
    6. இளமைப் பெரும்பறையன் வைத்த சந்தி விளக்கு ஒன்றுக்கு நான் உபையாமாகக் கைக் கொண்ட காசு ஆறு. (கல்வெட்டு முற்றுப் பெறவில்லை)

    காணிஉடைய – பரம்பரை உரிமை உடைய; கிழவன் – கிராமத் தலைவன்; பறையடியார் – பறையர்குல வேலையாள்; சந்தி விளக்கு – பகலும் இரவும் கூடும் வைகறை, மாலை வேளைகளில் கோவிலில் எரிக்கும் எண்ணெய் விளக்கு.

    விளக்கம்:  மூன்றாம் இராசராச சோழனின் 15 – ம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1231) செயங்கொண்ட சோழமண்டலத்தில் அடங்கிய ஊற்றுக்காட்டு (வாலாஜாபாத் அருகில்) கோட்டத்தில் அடங்கிய பாலையூர் நாட்டின் ஊரான பாலையூரில் கோவிலுடைய திருப்பதங்காடு ஈசுவரன் கோவிலின் பரம்பரை பூசை உரிமை பெற்ற சிவப்பிராமணன் காக்குநாயகப் பட்டனுடைய மகன் உய்யக்கொண்டனான காக்குநாயக பட்டன் செய்யும் சத்திய பிரமாணம் யாதெனில், “இக்கோயில் இறைவர்க்கு திருப்பாலையூர் தலைவனிடம் வேலை செய்யும் பறையரான வாசி என்பாரது மகன் பெருங்காடனான இளமைப் பெரும்பறையனிடம் இருந்து அன்றாடம் ஒரு சந்தி விளக்கு ஏற்றுவதற்காக நான் உபையமாக ஆறு காசுகளை ‘அவ்வண்ணமே செய்வதாக ஒப்புக் கொண்டு’ பெற்றுக் கொண்டேன்”.

    இளமைப் பெரும்பறையன் கோவிலுக்குச் சென்று உய்யக் கொண்டான் காக்குநாயக பட்டனை சந்தி ஆறு காசு உபயம் கொடுத்து சந்தி விளக்கெரிக்கச் செய்தான். அதன் தொடக்க நாளில் அவன் கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் வழிபட்டிருக்க வேண்டும். இச்செயல் பறையர் தீண்டாமைக்கு ஆட்பட்டிருக்க வில்லை என்பதற்கு தக்க சான்றாகின்றது. இக்கல்வெட்டு மூலம் பறையர் தீண்டாதாரில் சேர்க்கப்படவில்லை என்று தெரிகின்றது.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி IX, பக். 83, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

    பறையர் சந்தி விளக்கு எரித்த மேலும் சில கல்வெட்டுகளைக் காண சொடுக்குங்கள்

    https://groups.google.com/d/msg/vallamai/w2Ov5Sd8KG0/QaXdrvWCCAAJ

    https://groups.google.com/d/msg/vallamai/BqrYqyng6uY/orQnsT4ADgAJ

    Share
  • மூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை

    மூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை

    பாஸ்கர் சேஷாத்ரி

    எங்கு திரும்பினாலும் பிண்ட புத்தி
    மயிலாப்பூரா காளத்தி ரோஸ் மில்க்
    பட்டணம் சென்றால் ரங்கவிலாஸ் காபி
    அல்லிக்கேணியில் சாம்பார் இட்லி
    பொருட்காட்சியில் பெரிதாய் அப்பளம்
    பிறப்பே புரியவில்லை ,பண்டம் மட்டும் மனப்பாடம்
    காமம் அறுத்திடலாம் வாயை கட்ட இயலவில்லை
    உதறத்தான் கிளம்பினேன்,
    நிறுத்தி கொஞ்சம் -கிருஷ்ணவிலாசம்

    Share
  • இந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது

    இந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear), கனடா

     

    Image result for westinghouse nuclear reactor ap1000

    அமெரிக்கா இந்தியாவில் கட்டும் ஆறு 1000 MWe அணுமின்சக்தி நிலையங்கள் 

    2020 பிப்ரவரி 20 ஆம் தேதி இந்திய வெளிநாட்டு அமைச்சு செயலாளர் விஜய் கோகலேயும் அமெரிக்க அகில் நாட்டுப் பாதுகாப்பு, ஆயுதக் கட்டுப்பாடு துணைச் செயலாளர் ஆன்டியா தாம்ஸன் ஆகியோர் கலந்துரையாடலில் வெளியான செய்தி இது. பொதுநல அணுசக்திப் பயன்பாட்டில் இருநாட்டுக் கூட்டுறவு உடன்பாட்டின்படி, ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்களை, அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்ட வாஷிங்டன் D.C. இல் ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது.  கடந்த பத்தாண்டுகளாக, அணுமின் உலை விபத்து இழப்பு நிதி [Indian Liability Rules] யார் அளிப்பது? அணு உலை இயக்கும் இந்தியாவா? அல்லது அணு உலை கட்டிய வெஸ்டிங்ஹவுஸா?  [இது போன்று முன்பு போபால் நச்சு வாயுக் கசிவு விபத்தில் துயருற்ற லட்சக் கணக்கான இந்தியருக்கு விபத்து இழப்பு நிதி அளிப்பதில் தர்க்கம் ஏற்பட்டு நோயாளிகள் பெருந்துயர் உற்றார்.]  இந்த ஆறு அணு மின்சக்தி நிலையங்கள் ஆந்திராவில் நிறுவகம் ஆகும்.

    Image result for westinghouse nuclear reactor ap1000

    2008 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஓபாமா உள்ள போது இரண்டு நாடுகளும் ஆரம்ப ஒப்பந்தம் செய்து கொண்டாலும், இப்போது டிரம்ப் காலத்தில்தான் அத்திட்டம் உறுதி செய்யப்பட்டது. “அமெரிக்கர் சாதனத்தை விற்பனை செய்” என்ற டிரம்ப் சுலோகத்தில் முடிவானது இந்த திட்டம்.  இந்தியா 2024 ஆண்டுக்குள் மின்சக்தி உற்பத்தியை மும்மடங்கு பெருக்க [தற்போது 6700 மெகாவாட்] முனைந்துள்ளது. சென்ற ஆண்டில் இந்தியாவும், ரஷ்யாவும் மேலும் ஆறு 1000 மெகாவாட் கூடங்குள மாடல் அணு மின்சக்தி நிலையங்கள் கட்ட ஒப்பந்தம் செய்து கொண்டன. நொடித்துப் போன வெஸ்டிங்ஹவுஸ்  நிறுவனத்தைக் கைதூக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு பிப்ரவரியில் போகும் போது, இந்த திட்டம் உறுதி ஆகும்.  ஆயினும் விபத்து இழப்பு நிதி கொடுக்கும் பொறுப்பு யாருடையது என்பது முடிவு செய்யப் படவில்லை.

    Image result for indian electric power generation

    ++++++++++++++++++++++++++++++++++++++++

    ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு உலக அணு மின்சார நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றித் தீர்மானங்கள் -1

    +++++++++++++++++

    1. http://afterfukushima.com/tableofcontents
    2. http://afterfukushima.com/book-excerpt
    3. https://youtu.be/YBNFvZ6Vr2U
    4. https://youtu.be/HtwNyUZJgw8
    5. https://youtu.be/UFoVUNApOg8
    6. http://www.cornell.edu/video/five-years-after-fukushima-lessons-learned-nuclear-accidents
    7. https://youtu.be/_-dVCIUc25o
    8. https://youtu.be/kBmc8SQMBj8
    9. https://www.statista.com/topics/1087/nuclear-power/
    10. https://www.statista.com/statistics/238610/projected-world-electricity-generation-by-energy-source/
    11. https://youtu.be/ZjRXDp1ubps
    12. https://www.thinkingpower.ca/PDFs/NuclearPower/NP_3_2_Crawford.pdf

    முன்னுரை: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமா வின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, பேரரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலை களில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் அணு மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

    உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களை ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடங்கள் என்று கருதியே இயக்கி வருகின்றன. ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை. ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படு கின்றன.  அதுபோல் ஓர் அணுமின்சக்தி நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும். மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.

    தற்போது முப்பதுக்கு மேற்பட்ட உலக நாடுகளில் 447 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபில் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) மின்சார ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டு களில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

    உலக அணு மின்சக்தி இயக்கக் கண்காணிப்புக் கூட்டுப் பேரவை [ WANO -World Association of Nuclear Operators ] விதித்த மேம்பாடு நெறி முறைகள்

    2011 புகுஷிமா பெரு விபத்துக்குப் பிறகு, பாடங்கள் கற்று நான்கில் ஒரு தலையகமாக இருக்கும் இங்கிலாந்து லண்டன்  வானோ பேரவையில் வடிக்கப்பட்ட மேம்பாட்டு நெறிப்பாடுகள் கீழே தரப்பட்டுள்ளன.  அவை சிக்கலானவை, சிரமமானவை, சவாலானவை.  அவற்றை நிறைவேற்ற மிக்க நிதிச் செலவும், நேரச் செலவும் ஏற்படும். அவற்றுக்கு மெய் வருந்திய உழைப்பும், குறிப்பணியும் அவசியம் என்று, அவற்றை வெளியிட்ட வானோ ஆளுநர், பீட்டர் புரோசெஸ்கி சொல்கிறார்.

    1. புகுஷிமா விபத்தில் கற்றுக் கொண்ட பாதுகாப்புப் பாடப் பணிகள் உலக முழுமையாக சுமார் 6000.
    2. அவற்றுள் முக்கியமானவை :  அபாய நிகழ்ச்சி காப்பு வினைகள்,  அபாய நிகழ்ச்சி உதவிகள், அபாய நிகழ்ச்சி பராமறிப்பு வினைகள், அபாய நிகழ்ச்சி அறிவிப்பு முறைகள், கதிரியக்க திரவம் சேமிப்புக் கலன்கள், பயிற்சி பெற்ற ஏராளமான பணியாளர், தோழ நாடுகள் முதல் உளவு, அடுத்த உளவு, முழு உளவு, ஆய்வு அறிக்கை வெளியீடு. வானோ உலக நாட்டு உளவு & அறிக்கை வெளியீடு.

    As of November 28, 2016 in 31 countries 450 nuclear power plant units with an installed electric net capacity of about 392 GW are in operation and 60 plants with an installed capacity of 60 GW are in 16 countries under construction.

    Country

    IN OPERATION

    UNDER CONSTRUCTION

    Number

    Electr. net output
    MW

    Number

    Electr. net output
    MW
    Argentina

    3

    1.632

    1

    25

    Armenia

    1

    375

    Belarus

    2

    2.218

    Belgium

    7

    5.913

    Brazil

    2

    1.884

    1

    1.245

    Bulgaria

    2

    1.926

    Canada

    19

    13.524

    China

    36

    31.402

    20

    20.500

    Czech Republic

    6

    3.930

    Finland

    4

    2.752

    1

    1.600

    France

    58

    63.130

    1

    1.630

    Germany

    8

    10.799

    Hungary

    4

    1.889

    India

    22

    6.225

    5

    2.990

    Iran

    1

    915

    Japan

    43

    40.290

    2

    2.650

    Korea, Republic

    25

    23.133

    3

    4.020

    Mexico

    2

    1.440

    Share
  • குருவே சரணம்

    குருவே சரணம்

    ராதா விஸ்வநாதன்

    விண்ணி லிருந்து  ஞானப்பொறி வீழ்ந்து
    மண்ணில்  நடமாடும் தெய்வமாகி வாழ்ந்து
    உண்ணா நோன்பு  நமக்காக நோற்றதும்
    எண்ணில டங்குமோ இத் தரணியில்!

    குற்றம் நிறை  மாந்தர் கூட்டத்தின்
    குறை தீர்த்து குணக்குன்றாய் நின்று
    எரிக்கவே நம் பாவத்தை  தன் தவத்தால்
    கரைந்தது நம் கர்மவினையும் கற்பூரமாய்

    அகிலமே  அவரடியில் தஞ்சமடைந்து
    அன்னை பிதா குரு நீரே என்றது
    கண்டதும் அவரது திருமுகம் அன்றே
    கருமமும் நமதாவும் தொலைந்தது

    பண்டய   வினை போக்கும்  குருவே
    கண்கொண்டு உமைக் கண்ட எமக்கு
    கண்டங்கள் இனி உண்டோ இங்கே
    தண்டங்கள்  எமது ஏற்கும் தருணமிதே

    உமைப் புகழ சொல்லுக்கும் பஞ்சம்
    உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும் கூடி
    தவமாய் தவம் கிடந்து தந்தது ஒன்றை
    ‘தவயோகி’ என்ற  தமிழ்ச் சொல்லை

    இனியும் ஒரு தெய்வம் நடமாடுமோ
    இனிய  சொல்லையும் இனி உதிர்க்குமோ
    இமை பொழுதும் எம்மை அகலாது
    இடர் சூழ் உலகில் சுடரென வருமோ

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-116

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-116

    நாங்குநேரி வாசஸ்ரீ

     116. பிரிவு ஆற்றாமை

    குறள் 1151

    செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
    வல்வரவு வாழ்வார்க் குரை

    பிரிஞ்சுபோவமாட்டன்னா எங்கிட்ட சொல்லு. இப்பம் போயிட்டு வெரசலா வாரேன்னு சொல்லணும்னா அத நீ திரும்பி வாரெயில யாரு உசிரோட இருப்பாகளோ அவுககிட்ட சொல்லு.

    குறள் 1152

    இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
    புன்கண் உடைத்தால் புணர்வு

    முன்னயெல்லாம் அவுகளக் கண்ணால பாக்குததே சந்தோசத்தக் குடுத்துச்சு. இப்பம் கூடிச்சேந்தாலும் பிரிஞ்சு போயிடுவாரோங்குத பயத்துல சங்கடமா இருக்கு.

    குறள் 1153

    அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
    பிரிவோ ரிடத்துண்மை யான்

    எல்லாத்தையும் அறிஞ்சுக்கிட்ட காதலரும் ஒருசமயம் பிரிஞ்சுபோவாருங்கதால இப்பம் பிரிய மாட்டேம்னு உறுதியா சொல்லுதத நம்ப ஏலாது.

    குறள் 1154

    அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
    தேறியார்க் குண்டோ தவறு

    பிரியமாட்டேம் பயப்படாதன்னு சொன்னவரு பொறவு பிரிஞ்சுபோனாகன்னா அவுக சொன்ன சொல்ல நம்பினதுல என்ன குத்தம் இருக்க முடியும்.

    குறள் 1155

    ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
    நீங்கின் அரிதால் புணர்வு

    நேசிக்கவரு பிரிஞ்சு போனா மறுபடி சேருதது சுளுவு இல்லங்கதால மொதவே பிரியாம காப்பாத்திக்கிடணும்.

    குறள் 1156

    பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
    நல்குவர் என்னும் நசை

    போயிட்டுவாரேம்னு சொல்லுத அளவு கல்நெஞ்சுக்காரர் திரும்ப வந்து நேசம் காட்டுவாருனு எதிர்பாக்குதது வீண்.

    குறள் 1157

    துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
    இறைஇறவா நின்ற வளை

    என்னையத் தலைவன் பிரிஞ்சுபோன சேதிய எம்முன்னங்கையிலேந்து நழுவிவிழுத வளவி ஊர் முழுக்க தூத்தி விட்டுருமே.

    குறள் 1158

    இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்
    இன்னா தினியார்ப் பிரிவு

    நேசம் இல்லாதவுக இருக்க ஊர்ல வாழுதது சங்கடம். அத விடக் கொடும மனசார நேசிக்கவரப் பிரிஞ்சு வாழுதது.

    குறள் 1159

    தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
    விடிற்சுடல் ஆற்றுமோ தீ

    கங்கு (நெருப்பு) அதத் தொட்டாதான் சுடுமேயொழிய காதல் நோய் கணக்கா எட்ட நின்னாலும் சுடுமோ?

    குறள் 1160

    அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
    பின்இருந்து வாழ்வார் பலர்

    பிரிஞ்சுபொவுததுக்கு ஒத்துக்கிட்டு அதனால வர சங்கடத்தையும் பொறுத்துக்கிட்டு தன்காரியத்த பாத்துக்கிட்டு பொறுமயா வாழுதவங்க பலபேரு இருக்காங்க.

    Share
  • குறளின் கதிர்களாய்…(289)

    குறளின் கதிர்களாய்…(289)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்… (289)

    ஆற்றி னளவறிந் தீக வதுபொருள்
    போற்றி வழங்கு நெறி.
            –திருக்குறள் –477 (வலியறிதல்)

     புதுக் கவிதையில்…

    கைப்பொருள் இருப்பின்
    அளவறிந்து அதற்கேற்ப
    அடுத்தவர்க்கு
    அள்ளி வழங்கு,
    அவ்விதம் ஈதல்
    பொருளைப் போற்றிப்
    பேணிக் காத்து
    வழங்கிவாழும் நந்நெறியாகும்…!

    குறும்பாவில்…

    ஈந்திடு கைப்பொருள் அளவறிந்து,    
    ஈதலிது பொருளைப் போற்றிக் காத்து
    வழங்கி வாழ்ந்திடும் நந்நெறியே…!

    மரபுக் கவிதையில்…

    கொடுக்கும் வகையில் தம்மிடத்தில்
         கைவச முள்ள பொருளிருப்பை
    எடுத்தே யறிந்ததன் அளவறிந்தே
         எவர்க்கு மீதல் செய்திடுக,
    கொடுத்திடு மிவ்வகை யீதலது
         கைப்பொருள் போற்றிக் காத்தேதான்
    அடுத்தவர் தமக்கும் வழங்கிவாழும்
         அருமை மிக்க நந்நெறியே…!

    லிமரைக்கூ..

    அளவறிந்தே அடுத்தவர்க்குக் கொடுத்திடு
    ஈதலிதே பொருளைப் போற்றி வழங்கிடும்
    நந்நெறி எனும்பேர் எடுத்திடு…!

    கிராமிய பாணியில்…

    செயல்படணும் செயல்படணும்
    வலிமயறிஞ்சி செயல்படணும்..

    அடுத்தவருக்குத் தருமம்செய்யியிற
    அளவுக்கு கையில இருக்குதாண்ணு
    அளவு தெரிஞ்சிக்கிட்டு
    அப்புறமா குடுக்கணும்..

    அப்புடிக் குடுக்கிறதுதான்
    இருக்கிற செல்வத்தக் காப்பாத்திக்
    குடுத்து வாழுறதுக்கும்
    வழியாவும்..

    அதால
    செயல்படணும் செயல்படணும்
    வலிமயறிஞ்சி செயல்படணும்…!

    Share
  • மறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு

    மறவன்புலவு க சச்சிதானந்தன்
    தலைவர், சிவசேனை, இலங்கை

    உண்ணா நோன்பிருக்கிறேன்

    போர்த்துக்கேயரின் அடிவருடிகள், ஊர்காவற்றுறையில் ஒளிந்திருந்த காக்கை வன்னியன் வாரிசுகள், யாழ்ப்பாண ஊடகங்களின் அச்சு இதழான வலம்புரி இதழ் அலுவலகத்துக்கு இன்று 20.02.2020 வியாழன் மாலை வந்தார்கள். 
    அடித்து நொறுக்க முயன்றார்கள்
    இடித்து அழிக்க முயன்றார்கள்
    விட்டிருந்தால் தீயிட்டுக் கொளுத்தி இருப்பார்கள்.

    ஊர்காவற்றுறையில் சைவத் தெருப்பெயர்களைக் கிறித்தவப் பெயர்களாக மாற்ற முனைகிறார்கள் எனச் செய்தி வெளியிட்டதற்காகத் தாக்கினார்கள்

    ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்ற இயேசு பெருமானின் வரிகளை மறந்து, வன்முறையில் ஈடுபடுகின்ற போர்த்துக்கேயரின் அடிவருடிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    வலம்புரி இதழ் மீது கைவைத்தால் சைவத் தமிழ் உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

    வன்முறையைத் கண்டித்து
    ஊடக சுதந்திரத்தை ஆதரித்து
    சைவத் தமிழ் பண்புகளைக் காக்க
    21.2.2020 வெள்ளி காலை தொடக்கம், யாழ்ப்பாணம் கண்டி வீதி சுண்டிக்குளி  ஆயர் இல்லத்துக்கு முன்பாக அடையாள உண்ணா நோன்பிருக்கிறேன்.

    Share
  • அமெரிக்காவின் பகுத்தறிவுப் பகலவன்!

    அமெரிக்காவின் பகுத்தறிவுப் பகலவன்!

    -மேகலா இராமமூர்த்தி

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியானது, சுதந்தரச் சிந்தனைகளின் பொற்காலம் (The Golden Age of Free thought) என்று அமெரிக்காவில் அழைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் தோன்றிய குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்களில் ஒருவர்தாம் இராபர்ட் கிரீன் இங்கர்சால் (Robert Green Ingersoll).

    நியூயார்க் மாநிலத்திலுள்ள டிரெஸ்டென் (Dresden) எனும் ஊரில்,  புரோடஸ்டாண்ட் (Protestant) மதபோதகராக விளங்கிய ஜான் இங்கர்சாலுக்கும் (John Ingersoll), மேரி அம்மையாருக்கும் (Mary Ingersoll)  1833ஆம் ஆண்டு ஆகஸ்டு 11ஆம் நாள் மகனாய்ப் பிறந்த இராபர்ட் இங்கர்சால், தேர்ந்த வழக்கறிஞராகவும், சிறந்த மேடைப் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், அனைத்திற்கும் மேலாக மூடநம்பிக்கைகளுக்குத் தீ மூட்டும் பகுத்தறிவுப் பகலவனாகவும் விளங்கி அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கோடு திகழ்ந்தவர் ஆவார்.

    அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு எதிரான நிறவெறி கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த காலமது. கறுப்பர்களை அடிமைகளாய் நடத்திக் கொடுமைப்படுத்தும் அவலத்துக்கு எதிரான போராட்டங்களில் இராபர்ட் இங்கர்சாலின் தந்தை ஜான் இங்கர்சால் கலந்துகொண்டார். இனபேதம் பாராத மனிதநேயச் சிந்தனைகளைக் கொண்டிருந்ததாலேயே மதபோதகர் பணியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இவற்றையெல்லாம் கவனித்துவந்த சிறுவன் இராபர்ட் இங்கர்சாலின் மனத்தில் கிறித்தவ மதத்தின்மீதும் அதன் கவைக்குதவாப் பழமைவாதக் கோட்பாடுகளின்மீதும் குழந்தைப் பருவத்திலேயே மிகுந்த அவநம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.

    குடும்பச்சூழல் காரணமாக இராபர்ட் இங்கர்சாலின் முறையான பள்ளிக்கல்வி சில ஆண்டுகளோடு முற்றுப்பெற்றுவிட்டது. எனினும், தாமாகவே முயன்று பல நூல்களைக் கற்றுத்தேர்ந்து தம் அறிவைப் பெருக்கிக்கொண்டார் அவர். இயல்பிலேயே நாவன்மை மிக்கவராக விளங்கிய இங்கர்சால், தம் வாழ்வை நடாத்துதற்கு நிலையான தொழிலொன்று தேவை என்பதை உணர்ந்து, வழக்கறிஞர்கள் இருவரிடம் முறையாகப் பயிற்சிபெற்று 1854இல் வழக்கறிஞரானார். தம் வாதத் திறமையால் வழக்கறிஞர்கள் பலரின் பாராட்டைப் பெற்றார் இங்கர்சால்.

    இச்சிறப்புகளால் இல்லியனாய் (Illinois) மாநில அட்டர்னி ஜெனரல் பதவி இங்கர்சாலைத் தேடிவந்தது. குடியரசுக் கட்சியில் (Republican Party) இணைந்து, ஓர் உண்மையான தொண்டனாக அரசியல் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார் இங்கர்சால்.

    மதம், கடவுள் நம்பிக்கை, பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கான வாக்குரிமை குறித்தெல்லாம் புரட்சிகரமான முற்போக்குக் கருத்துக்களை அவர் முன்வைத்த காரணத்தினால் பழமைவாதத்திலும், பெண்களை இரண்டாந்தரக் குடிமக்களாய் நடத்தும் பிற்போக்குத்தனத்திலும் ஊறிப்போயிருந்த அமெரிக்காவில் அவரால் அரசியலில் பெரும் பதவிகளைப் பெறமுடியாமற் போய்விட்டது.

    இங்கர்சாலின் இறைக்கொள்கையைப் பற்றிக் குறிப்பிடுவதானால், கடவுளின் இருப்பைப் பற்றி அலட்டிக்கொள்ளாத ஓர் எதார்த்தவாதியாக (Agnostic) தம்மை அவர் அடையாளப்படுத்திக்கொண்டார். ” The great agnostic” என்றே அமெரிக்க மக்கள் அவரை அழைத்தனர். பகுத்தறிவுக்குப் பொருந்தாத மத நம்பிக்கைகள் குறித்த பகடியும் எள்ளலும் அவருடைய பேச்சுக்களில் துள்ளி விழுந்தவண்ணம் இருந்தன.

    ஒருமுறை பெரிய மண்டபம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார் இங்கர்சால். அவர் பொழிவைக் கேட்க வந்திருந்தவர்களில் ஒருவர் திடீரென்று எழுந்து, “அன்பரே! உமக்கு ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டா?” என்று வினவினார். இங்கர்சாலும் சற்றும் தயங்காமல் “ஐயா! எனக்கு ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டு; குறிப்பாக, சோப்புப் போட்டுக் குளிக்கும் ஞான ஸ்நானத்தில் நம்பிக்கை உண்டு” என்று சொன்னதுதான் தாமதம் கைதட்டல் விண்ணைப் பிளந்ததாம்! ஞான ஸ்நானம் (baptism) என்பது கிறித்தவ தேவாலயங்களில் குழந்தைகளுக்குப் பாதிரிமார்கள் செய்யும் புனிதச் சடங்கு; அதைத் தான் அவ்வாறு கிண்டல் செய்திருக்கின்றார் இங்கர்சால். பிறப்பால் ஒரு கிறித்தவராக இருந்தபோதும் அம்மதத்தில் பின்பற்றப்படும் பொருளற்ற சடங்குகளில் அவருக்கு நம்பிக்கையில்லை என்பதையே அவருடைய இந்த வேடிக்கைப் பேச்சு நிரூபிக்கின்றது.

    மோசஸ் செய்த சில தவறுகள் (Some Mistakes of Moses (1879)) என்ற தம்முடைய நூலில், கடவுளை நம்புகிறவன் ஏன் நம்பாதவனை வெறுக்கிறான்? நாத்திகன் கடவுளுக்கு ஏதாவது ஊறுசெய்கின்றானா? இல்லையே! அவனும் மற்றவர்களைப் போல சுக துக்கங்கள் உள்ள மனிதன் தானே? அவனுக்கும் மற்ற மனிதர்களுக்கு இருப்பதுபோல் அனைத்து உரிமைகளும் உள்ளனதாமே?

    கிறித்தவ தேவாலயங்களிடம்தான் சொர்க்க, நரகத்தின் திறவுகோல் இருப்பதுபோல் அவர்கள் நடந்துகொள்வதும், மதநம்பிக்கைகளை மறுப்பவர்களைப் பாவிகளாகப் பாவிப்பதையும், மதத்திலிருந்தே அவர்களை ஒதுக்கிவைப்பதையும் தொடர்ந்தால் இந்த உலகமே வெறுப்பாலும் வேதனையாலுந்தான் நிறையும். மனிதனை வெறுப்பதும், கடவுளை நேசிப்பதும் மதங்களின் வேடிக்கையான கொள்கைகளாக இருக்கின்றன.

    பைபிளும் மற்ற புத்தகங்களைப் போலத்தான்; ஏன் அவற்றைவிடவும் பயனற்றது; ஆனால் மதபோதகர்கள் அதனைப் பொதுவில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றுகூறிப் பைபிளிலுள்ள பல கதைகளையும் அவற்றின் கருத்துக்களையும் கண்டிக்கிறார்.

    தேவாலயப் பணியாளர்கள் பைபிளில் ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டிருப்பதைக் கிளிப்பிள்ளைபோல் ஒப்பிக்கவே பணியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். புதிய சிந்தனைகள் எவற்றையும் வெளிப்படுத்த அவர்களுக்கு அனுமதியில்லை. அவர்கள் சொல்கின்றவற்றையெல்லாம் எவ்வித ஆதாரங்களும் கேட்காமல் நம்பி நடப்பவனே உண்மையான கிறித்தவன் எனப்படுவான். இவ்வாறு மக்களிடம் மூடநம்பிக்கைகள் பெருகினால் என்னவாகும்? சோதிடத்துறை வளரும்; அறிவொளி பெருகினால்? மத நம்பிக்கைகள் தளரும்!

    என்னைப் பொறுத்தவரை, அறிவியலுக்கும் மதத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை; சொல்லப்போனால், அவை ஒன்றுக்கொன்று பெரும் பகையானவை என்பேன். மெதாடிஸ்ட் கணிதம் (Methodist mathematics), கத்தோலிக்க வானியல் (Catholic astronomy), பிரெஸ்பிடேரியன் தாவரவியல் (Presbyterian botany), பேப்டிஸ்ட் உயிரியல் (Baptist Biology) என எவையேனும் இருக்கின்றனவா? பின்பு எதற்காக மதக்கல்வி போதிப்பதற்கென்றே தனியாகக் கிறித்தவ மதவாதக் கல்லூரிகளை (sectarian colleges) நாம் உருவாக்கவேண்டும்?

    மதங்களுக்கும் பள்ளிகளுக்கும் மணமுறிவு (divorce) நடக்குவரை சிறந்த கல்விநிறுவனங்களை உருவாக்குவது முயற்கொம்பே. மதங்களின் வல்லாண்மையும் ஆதிக்கமும் இருக்குவரையில் பள்ளிகளில் அறிவியல் புறக்கணிப்பட்ட ஒன்றாகவே இருக்கும். ஒருநாள் வரும்! அன்று பழைய புனிதங்கள் கட்டுடைக்கப்பட்டு இயற்கையின் உண்மை ஏற்றுக்கொள்ளப்படும். என்று மதபோதகர்களையும், அறிவியலுக்குப் புறம்பான மதநம்பிக்கைகளையும் மிகத் துணிச்சலாக விமரிசிக்கின்றார் இங்கர்சால்.

    ஷேக்ஸ்பியர், அமெரிக்காவின் மறுகட்டமைப்பு, மனிதநேயம், மதங்களின் நிலை, குடும்ப அமைப்பின் அவசியம், பெண்விடுதலை என்று அனைத்துத் தலைப்புக்களிலும் மணிக்கணக்கில் பேசக்கூடிய பேராற்றல் பெற்றவராகத் திகழ்ந்தார் இங்கர்சால். மதங்கள் குறித்த அவருடைய விமரிசனங்களை வைத்தே அமெரிக்கப் பத்திரிகைகள் அவரை மிகக் கடுமையாகத் தாக்கி எழுதியபோதும், மக்கள் மத்தியில் அவர் சொல்வாக்கிற்கிருந்த செல்வாக்கை அவற்றால் குறைக்கமுடியவில்லை. மாறாக, அவருடைய கட்டணச் சொற்பொழிவுகளுக்கும் மக்கள் அமோக ஆதரவு கொடுத்துப் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர் என்பது வரலாறு.

    இந்நாளில் சிலர் தம்முடைய சொற்பொழிவுகளுக்குக் கட்டணம் வசூல் செய்வதை விமரிசிப்போர், இஃதொன்றும் விந்தையான வழக்கமன்று! இங்கர்சால் காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்துவரும் முந்தைய வழக்கமே என்று அறிதல்வேண்டும்

    தம் மேடைப்பொழிவுகளின் மூலம் மட்டுமே இங்கர்சாலுக்கு ஆண்டுதோறும் கிடைத்துவந்த வருவாய், அன்றைய அமெரிக்க அதிபரின் ஆண்டு வருவாயைக் காட்டிலும் இருமடங்கு அதிகமானது. வேறுவிதமாக இதனைக் கணக்கிட்டுச் சொல்வதென்றால், அமெரிக்காவின் மிகச்சிறந்த சொற்பொழிவாளர்கள் இருபத்தைந்து பேர் ஒரே சமயத்தில் எவ்வளவு சம்பாதிப்பார்களோ அவ்வளவு வருமானம் இங்கர்சால் ஒருவருக்கே கிடைத்துவந்தது. ஆனால் பணத்தால் பெருமை கொள்ளவில்லை இங்கர்சால்! வாய்த்திறமையினால் தாம் ஈட்டியதைக் கைத்திறமையால் வரையாது வழங்கிய கொடையாளராக அவர் திகழ்ந்தார்.

    மனிதன், மங்கை, குழந்தை, அவர்தம் சுதந்தரம் (The Liberty of Man, Woman and Child) என்ற தலைப்பில் இங்கர்சால் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதில் இம்மூவருடைய சுதந்தரம் குறித்தும் அவர் முன்வைக்கும் கருத்துக்கள் அக்காலத்துக்கு மட்டுமன்றி எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவை.

    நங்கையர்தம் நற்சுதந்தரம் பற்றிக் குறிப்பிடும் இங்கர்சால், பெண்கள் ஒருகாலத்தில் அடிமைகளுக்கெல்லாம் அடிமைகளாக இருந்திருக்கின்றார்கள். என்னுடைய எண்ணப்படி, பெண்கள் கேவலமான அடிமைத்தனத்திலிருந்து திருமணம் செய்துகொண்டு வாழும் சுதந்தரத்தை அடையவே பல இலட்சம் ஆண்டுகள் ஆகியிருக்கவேண்டும். ஆதலால், மானிட சமுதாயத்திலேயே நான் மிகவும் புனிதச் சடங்காகக் கருதுவது திருணத்தைத்தான் என்பதை இங்கே தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அடுக்களையின்றி மானிட சமுதாயத்தின் முன்னேற்றமில்லை; குடும்பச் சுற்றமின்றி வாழ்வும் பயனில்லை. பல நல்ல குடும்பங்கள் சேர்ந்ததுதான் ஒரு நல்ல அரசாங்கம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு நல்ல அரசாங்கத்தின் கிளையாக இருப்பது குடும்பம். இந்தக் குடும்ப அமைப்பைச் சீரழிக்கச் செய்யப்படும் எந்த முயற்சியும் பேய்த்தன்மை வாய்ந்தது; களங்கமுடையது. எனக்குத் திருமண வழக்கத்தில் மிகுந்த நம்பிக்கையுண்டு. இந்த மணச்சடங்கை, திருமணம் என்னும் அமைப்பை வசைபாடுகின்ற நீள்முடி வளர்த்த ஆடவர்கள், குட்டைக் கூந்தலோடு வலம்வரும் பெண்கள் போன்றோரின் கருத்துக்களை நான் மிகக் கேவலமாகக் கருதுகின்றேன் என்கிறார் அழுத்தந்திருத்தமாக.

    ”திருமணமே பெண்ணை அடிமைப்படுத்துகின்றது; உடைத்தெறிய வேண்டிய தளை அது!” என்று தமிழகத்தின் பகுத்தறிவாளர்கள் முச்சந்திதோறும் முழக்கமிட்டிருக்க, மேனாட்டுப் பகுத்தறிவுச் சிந்தனையாளரும், தமிழகப் பகுத்தறிவு இயக்கங்களுக்கு அறிவுக்கொடை நல்கியவர்களில் முக்கியமான ஒருவராக அறியப்படுபவருமான இங்கர்சாலோ, அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, அடிமைத்தனத்திலிருந்த மகளிர்க்கு விடுதலை நல்கியதே திருமணந்தான்! குடும்ப அமைப்பினும் உயர்ந்தது வேறில்லை என்று அதனை விதந்தோதுவதைக் காண்க!

    ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பிய நூலும்,

    பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
    ஐயர் யாத்தனர் கரணம் என்ப
    (தொல்” கற்பியல் – 4) என்றுரைப்பதன் வாயிலாகத் தமிழ்ச் சமூகத்தில் கட்டுப்பாடற்ற ஆண் பெண் உறவுகளால் குற்றங்களும் ஒழுக்கக்கேடுகளும் மலிந்துவிட, அவற்றைத் தடுக்கவேண்டியே திருமணம் எனும் நடைமுறை அறிவிற் சிறந்த ஆன்றோரால் ஏற்படுத்தப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதை எண்ணுக.

    அடுத்து, குழந்தைகள் சுதந்தரம் பற்றிக் குறிப்பிடும் இங்கர்சால்,

    பெரியவர்களுக்குள்ள உரிமைகள்போலவே குழந்தைகளுக்கும் உரிமைகள் உண்டு. ஆகவே குழந்தைகளை நாம் மனிதப் பிறவிகள் எனக் கருதி நடத்தவேண்டும்; மிருகத்தனமாக நடத்தக் கூடாது. தாங்களே சுயமாகச் சிந்திக்கின்ற உரிமையை அவர்களுக்கு நாம் நல்கவேண்டும். குடும்பத்திலே சனநாயகம் நிலவவேண்டும் என்பது என் நம்பிக்கை. இந்தச் சகத்தில் மகத்தானது ஒன்று இருக்குமானால் அஃது எல்லாரும் சமமாக நடத்தப்படுகின்ற ஒரு குடும்பமே என்கிறார்.

    இசையைவிடக் குழந்தைகளின் பேச்சு எனக்கு மிகுந்த இன்பத்தைத் தருகின்றது என்றார் இங்கர்சால். இக்கருத்து,

    குழலினுது யாழினிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்
    (குறள் – 66) என்ற ஐயன் வள்ளுவனின் பொய்யாமொழியை நம் நினைவுக்குக் கொண்டுவருகின்றது.

    பழமைவாதிகளைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் இங்கர்சால், எல்லா மனிதர்களும் ஒரே மாதிரிச் சிந்திக்கவேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். உலகத்தில் எந்திரத் தொழில்நுட்பத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்ட பின்பும்கூட, இரண்டு கடிகாரங்கள் ஒரே மாதிரி ஓடுவதில்லை; ஒரே நேரத்தைக் காட்டுவதில்லை. அப்படியிருக்க, அறிவிலும், ஆற்றலிலும், கல்வியிலும், பொருளாதாரத்திலும், சுற்றுச்சூழலிலும், ஆசையிலும் வேறுபட்டிருக்கும் மானுடர் அனைவரும் ஒரே மாதிரிச் சிந்திக்கவேண்டும் என்று எப்படி நீங்கள் வற்புறுத்தமுடியும்?

    எல்லையற்ற ஆற்றலுள்ள கடவுள் ஒருவர் இருந்து, அவர் நம்மைப் படைத்திருப்பாராகில், நாம் அனைவரும் ஒரே மாதிரியே சிந்திக்கவேண்டும் என்பது அவருடைய உள்ளக்கிடக்கையாயின், அவர் ஏன் ஒருவருக்குக் குறைவான அறிவையும் மற்றொருவருக்கு அதிகமான அறிவையும் கொடுத்திருக்க வேண்டும்? என்று வினவும் இங்கர்சால், மதத்தின் பெயரால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடந்த அட்டூழியங்களை நினைந்து மனம் வருந்துகின்றார். அவரவர் விருப்பப்படி வாழும் உரிமை மாந்த சமூகத்தில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். எதையும் யார்மீதும் திணிக்கும் உரிமை யாருக்குமில்லை என்கிறார்.

    நெஞ்சில் நேர்மையும், வாழ்வில் தூய்மையும் பிறர்க்கென இரங்கும் தாய்மைக் குணமும் கொண்டவராய் வாழ்ந்து, தம்முடைய புரட்சிகரமான கருத்துக்களாலும் மனிதநேயமிக்க அணுகுமுறைகளாலும் அமெரிக்க மக்களைத் தம் வயப்படுத்திய இராபர்ட் இங்கர்சால், 1899ஆம் ஆண்டு தம்முடைய 65ஆம் அகவையில் இதயச் செயலிழப்பு நோயால் (congestive heart failure) உயிரிழந்தார்.

    மூடநம்பிக்கையே அடிமைத்தனத்தின் குழந்தையாகும். சுயமாகச் சிந்தனை செய்தால் மட்டுமே நமக்கு உண்மை புலப்படும். எல்லாரும் சுயமாய் எண்ணவும் எண்ணியதை எவ்விதத் தடையுமின்றி வெளியில் சொல்லவும் உரிமை பெற்றுவிடுவார்களேயானால் ஒவ்வொருவருடைய மூளையிலிருந்தும் சிறந்த கருத்துக்கள் தாமே வெளிவரும். பிறகு இந்த உலகமே அறிவுக் களஞ்சியத்தால் நிரம்பியிருக்கும் என்றார் இங்கர்சால்.

    இறைவனிடம் தொழுகை செய்யும் உதடுகளைவிடத் துயருற்றோரின் அழுகை போக்க உதவும் கரங்கள் உன்னதமானவை என்பது இங்கர்சாலின் கருத்து. ஆதலால் நாமும் ஒல்லும் வகையெல்லாம் அல்லலுற்றோர்க்கு உதவுவோம்! சாதி மத பேதமின்றி அனைவரிடத்தும் அன்பு பாராட்டுவோம்! அமெரிக்காவின் பகுத்தறிவுப் பகலவனாம் இங்கர்சால் வகுத்தளித்த நல்லறிவுப் பாதையில் பயணிப்போம்! 

    கட்டுரைக்குத் துணைநின்றவை:

    1. https://en.wikipedia.org/wiki/Robert_G._Ingersoll
    2. https://www.britannica.com/biography/Robert-G-Ingersoll
    3. https://www.gutenberg.org/files/38813/38813-h/38813-h.htm#Alink0009
    4. வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு – 12

     

    Share
  • சிந்தையைத் திருத்தும் சிவராத்திரி

    சிந்தையைத் திருத்தும் சிவராத்திரி

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    முன்னாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்,
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மனிதர்களை மாண்புடன் வாழச் செய்வதற்கு நல்ல நெறிகளைக் காட்டி நிற்கும் உன்னதப் பணியினைச் சமயம் ஆற்றி வருகிறது. சமயம் என்பது சமூகத்தின் ஆணிவேர் எனலாம். காட்டில் விலங்குகளுடன் வாழ்ந்த மனிதனின் வாழ்வில் காலத்தின் மாற்றத்தினால் ஏற்பட்ட பலவித வளர்ச்சிப் படியில் சமயம் என்பது மிகவும் உன்னதமானது என்று கருத முடிகிறது. விலங்குகளுடன் இருந்த மனிதன், விலங்காய் விளக்கமின்றி இருந்த மனிதன், விலங்கினத்தினின்று வேறுபட்டு மாறுபட்டு நிற்பதற்குச் சமயமும் அது சார்ந்த கொள்கைகளும் ஒரு காரணம் என்பது  மறுத்துவிடக்கூடிய விடயமன்று.

    உலகின் தொன்மையான சமயம், சனாதன தர்மம், பல வாழ்வியல் கோட்பாடுகளைத் தன்னகத்தே கொண்ட சமயம், நமது சைவ சமயம் எனும் பொழுது நாமெல்லாம் எவ்வளவு பெருமை கொள்ளுதல் வேண்டும்! பக்திப் பாடல்களைக் கொண்டிருக்கும் சமயம்கூட எங்கள் சைவ சமயமே ஆகும்! இசையினால் இறைவனை அடையலாம் என்னும் பாங்கில் பண்கள் பல கொண்ட பக்திப் பனுவல்களைத் தன்னகத்தே வைத்திருக்கும் சமயமும் எமது சைவ சமயமே ஆகும்!

    எங்கள் சைவ சமயம், இறைவழிபாட்டினை இலகுவாக்குவதற்குப் பல சுலபமான வழிகளையெல்லாம் காட்டியிருக்கிறது. அவ்வழிகள் யாவுமே ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதுதான் மிகவும் முக்கியமாகும். உணவு என்பது மிகவும் முக்கியமானது. அதேவேளை அந்த முக்கியமான உணவுகூட எங்களின் உள்ளத்தை, உடல் நலத்தைக் கூட பாதித்தும் விடலாம். அதனால் உணவின் அளவைக் குறைத்தலும், சிலவேளை தவிர்த்தலும், வாழ்வில் நல்ல ஆரோக்கியத்துக்கும் நல்ல சிந்தனைக்கும் கூட ஆதாரமாக அமையலாம் என்பதை எமது சமயம் உணர்ந்த காரணத்தால் உணவினை ஒறுத்து இருப்பதை “விரதம்” என்று உயர்வு கொடுத்து அதனுடன் தெய்வீகத்தையும் தொடர்புபடுத்தி வாழ்வியலில் முக்கிய நடைமுறை ஆக்கிவிட்டது. அந்த வகையில் சிவராத்திரி விரதம் மிகவும் முக்கியத்துவமும் பெருமையும் உடையதாக சைவர்களால் கருதப்படுகிறது.

    பசித்திரு – தனித்திரு – விழித்திரு. இவை தத்துவார்த்தமான பதங்களாகும். சொல்லுவதற்குக் கவிதை நடை போல இருந்தாலும் உயரிய பொருளினை உள்ளடக்கி நிற்கிறது என்பதைக் கருத்தில் இருத்த வேண்டும். பசித்திருவில் – ப, தனித்திருவில் – த , விழித்திருவில் – வி , இம்மூன்று எழுத்தையும் சேர்த்தால் வருவது “பதவி” என்னும் சொல்லாகும். பசித்து தனித்து விழித்து இருந்தால் என்ன பதவி கிடைத்துவிடும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? பதவிகளுக்கெல்லாம் உயர்ந்த பதவி, அதாவது இறைவனது அருள் என்னும் பதவி, மனமாசு அகன்று மனம் மாண்புறும் பதவி, ஆணவமெனும் அழுக்கு அகன்று ஆண்டவன் நினைப்பு அகத்தில் எழுந்திடும் பதவி, என்று பல பதவிகள் எமக்கு வாய்க்கும் என்று எமது சைவ சமயம் எடுத்து இயம்பி நிற்கிறது.

    சிவராத்திரி நோன்புக் காலத்தில் ஆலயத்துக்குச் சென்று அரட்டை அடிப்பதோ, வீண் வம்புகள் பேசுவதோ, மற்றவரைக் குறை சொல்லுவதோ, தவிர்க்கப்பட வேண்டியதாகும். தனித்திருங்கள். புசிப்பதைத் தவிருங்கள். இறை எண்ணத்துடன் இறை புகழ் பாடி விழித்திருத்திருங்கள். இப்படி இருப்பதுதான் சிவராத்திரிக்கு நமது சமயம் கொடுக்கும் முக்கியத்துவம் எனலாம்.

    விழித்திருக்க வேண்டும் என்பதற்காக, சினிமாப் படங்களைப் பார்ப்பதோ, நாடகங்களைத் தொலைக்காட்சியில் பார்ப்பதோ முறையல்ல. விழிப்பது முக்கியமானதுதான். ஆனால் அந்த விழித்திருக்கும் நேரத்திலும் இறை நினைப்பாய் இருப்பதுதான் விழிப்புக்கு உரிய அர்த்தமாய் அமையும் என்பதையும் யாவரும் கருத்தில் இருத்துவது அவசியமாகும்.

    கருட புராணம், அக்னி புராணம், அருணாசல புராணம், சிவராத்திரி புராணம் யாவும் சிவராத்திரியைப் பற்றி அதன் மகிமைகள் பற்றியெல்லாம் எடுத்தியம்புகின்றன. ஆலகால விஷத்தை ஈசன் உண்ட  நிகழ்ச்சியும், அடிமுடி தேடிய பிரம்மா விஷ்ணுவுக்கு ஒளிப்பிழம்பாகக் காட்சி கொடுத்த சம்பவமும், அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும், கண்ணப்பர் ஈசனுக்குத் தனது கண்ணைப் பிடுங்கி அப்பியதும் அதனால் கண்ணப்பன் மோட்சம் பெற்றதும், மார்க்கண்டேயருக்காக ஈசன் எமனைக் காலால் உதைத்ததும், குபேரன் செல்வந்தனாகியதும், என்று பல அற்புதங்கள் நிகழ்ந்த தினமாக சிவராத்திரி விளங்குகிறது என்னும் நம்பிக்கை பல காலமாக இருப்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

    மாதம் மாதம் சிவராத்திரி வருகிறது. ஆனால் மாசி மாதத்தில் வருகின்ற சிவராத்திரியைத்தான் “மகாசிவராத்திரி” என்று உயர்வுடன் அனுட்டிக்கின்றோம் . மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்குப் புராணக் கதைகளை விட, அறிவியல் ரீதியான விளக்கமே அனைவருக்கும் பயனை நல்கும் அல்லவா? ஆன்மீகம் என்பது வெறும் வார்த்தை அல்ல. ஆன்மீகம் அறிவியலுடன் இணையும் பொழுதுதான் அதன் உன்னதம் உயர்வடைகின்றது. அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே எங்கள் சமயம் தன்னை நிலைநிறுத்தி வருகிறது என்பதை மறுத்துவிட முடியாது. அந்த வகையில் மாசியில் வருகின்ற சிவராத்திரி “மகா” என்னும் உயர்நிலை எய்துவதற்கு உரிய காரணத்தை அறிவது அவசியம் அல்லவா?

    ஈத்தர் என்னும் சக்தி உலகத்தை இயக்குகிறது என்று அறிவியல் சொல்லுகிறது. இந்தச் சக்தியானது உலகம் முழுவதும், அண்டம் முழுவதும் நிறைந்தே இருக்கிறது. இந்தச் சக்தியானது பூமியை நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறதாம்.

    பூமியானது சூரியனைச் சிறிய நீள்வட்டப் பாதையிலும் பெரிய நீள்வட்டப் பதையிலுமாக இரண்டு பாதைகளில் சுற்றி வருகிறது. இவ்வாறு பூமி சுற்றி வரும்பொழுது பெரிய நீள்வட்டப் பாதையில் இருந்து சிறிய நீள்வட்டப் பாதைக்கு மாறுகின்ற நேரம்தான் “மகாசிவராத்திரி” வரும் நேரமாக அமைகிறது. ஈத்தர் சக்தியானது எப்பொழுதுமே பூமியை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரியில் மட்டுமே ஈத்தர் சக்தியின் அளவு அபரிமிதமாக இருக்கும். இப்படி அபரிமிதமாக இம்மாதத்தில் வருடத்துக்கு ஒருமுறை அமைவதால் இக்காலத்து வருகின்ற சிவராத்திரியை “மகாசிவராத்திரி” என்று உயர்வுடன் போற்றும் நிலை ஏற்பட்டது என்பதை யாவரும் கருத்திருத்தல் அவசியமானதாகும்.

    மாசி மாதத்தில் வருகின்ற ஈத்தருக்கு அதிக சக்தி காணப்படுகிறது. ஈத்தர் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகரும். பூமியானது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுற்றிக் கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழுச் சக்தியும்  கிடைக்கும் நிலை, இந்த மகாசிவராத்திரிக்கே வாய்க்கிறது. மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து கண்விழித்து முதுகை நேராக வைத்து, தியானம் செய்யும் பொழுது ஈத்தர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட்  என்ற ஆனந்தச் சுரப்பி, ஆனந்த மூளையை அடைந்து பல வித நல்ல ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. இந்த நேரத்தில் நமக்கு நாமே ஆசீர்வாதம் (Self Blessing)  செய்துகொள்ளும் பொழுது இது நமது டி என் ஏ (DNA) வில் கெட்ட பதிவுகளை (கர்மா) அழிக்கும் வல்லமையை உருவாக்குகிறது.

    ஈத்தர் சக்தி என்பது, பகலிலும் உண்டு, இரவிலும் உண்டு. பகலில் சூரிய வெளிச்சம் காரணமாக சற்றுக் குறைவாகவே காணப்படும். ஆனால் இரவில் சூரிய வெளிச்சம் காணப்படாமையினால் ஈத்தர் சக்தியின் அளவு அதிகமாகவே இருக்கும். இரவு ஒன்பது மணி தொடக்கம் அதிகாலை இரண்டு மணிவரை உடலின் இயக்கமும் வித்தியாசமாய் இருக்கும். இவ்வேளை ஈத்தர் சக்தியின் அளவும் கூடுதலாகவே அமையும் நிலை காணப்படுவதால் இவ்வேளையிலே கட்டாயம் விழித்திருப்பது அவசியமாகிறது. எனவேதான் மகாசிவராத்திரியின் முக்கிய சாமமாக இந்த நேரம் எமது சமய ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

    எமது சமயம், நல்ல நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த சமயமாகும். ஒவ்வொரு செயலுக்கும் சிறப்பான காரண காரியங்கள் இருக்கின்றன. அவற்றைச் சரியான முறையில் விளங்கிக்கொண்டு விட்டோமானால் மனத்தில் ஐயம் என்பது அகன்றே ஓடிவிடும். ஐயந்தெளிதல் வேண்டும். ஐயம் தெளிந்தால் ஆண்டவன் அருளும் எமக்கு வாய்த்துவிடும். சிந்தையினை தெளிவாக்கல், சிவன் அருள் பெற வழியாகும். சிவராத்திரி நன்னாளில் சிந்தையைத் திருத்திட, சிவனை வேண்டுவது எமது தலையாய பணியாகும்.

    ” நற்றுணையாவது நமச்சிவாயவே”

    Share
  • பழகத் தெரிய வேணும் – 4

    பழகத் தெரிய வேணும் – 4

    நிர்மலா ராகவன்

    பாட்டியின் முடி வெள்ளி, மனமோ தங்கம்.

    பொதுவாகவே, பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். அவர்களுடைய எதிர்ப்பைக் காட்டும் வழி?

    இதோ ஒரு துணுக்கு;

    எல்லா நாடுகளிலும் பெண்கள் தலைவர்களாக இருந்தால் என்ன ஆகும்?

    ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாத நாடுகள் உருவாகும்.

    கதை

    மரியாவின் மகள் தன் குழந்தைகளுடன் வேறு ஊரில் குடியிருக்கிறாள். அடிக்கடி வரும் தாய் தான் செய்யும் காரியங்களிலெல்லாம் குற்றம் கண்டுபிடிப்பதும், தன் வளர்ப்பு முறையில் குறை சொல்வதும் அவளுக்குப் பிடிக்கத்தானில்லை.

    தாய் பாட்டியிடம் காட்டிய பாராமுகம் குழந்தைகளிடமும் தொற்றிக்கொண்டதில் என்ன ஆச்சரியம்?

    என்னதான் நாம் வளர்த்த குழந்தையானாலும், வயது வந்தபின் அவர்களைச் சுதந்திரமாக விடவேண்டியதுதான். ஐந்து வயதில் கண்டித்ததுபோலவே என்றென்றும் நடத்த நினைப்பவர்களின் பாடு திண்டாட்டம்தான்.

    மகளே இப்படியென்றால், இப்படிப்பட்ட மாமியாரிடம் எந்த மருமகள் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பாள்?

    ‘எனக்கு வரும் ஓய்வூதியம் பூராவையும் மகன் குடும்பத்திற்காக செலவழிக்கிறேன்,’ என்று கணக்குப் பார்த்து, அதிகாரம் செலுத்த நினைத்தால், இரு தரப்பினருக்கும் மனத்தாங்கல்தான் வரும்.

    ‘அவரவர் பாடு!’ என்று சற்றே ஒதுங்கிவிட்டால், மரியாதை நிலைக்கும். தாய் பாட்டிக்குக் காட்டும் மரியாதையைத் தம்மையுமறியாது குழந்தைகளும் கடைப்பிடிப்பார்கள்.

    பாட்டி-தாத்தாவுடன் ஒரே வீட்டில் வசிக்கும் இளைஞர்கள், “எங்களுக்குப் பெற்றோரைவிட பாட்டி-தாத்தாவைத்தான் பிடிக்கும்,” என்கிறார்களாம். (நான் கேட்காமலேயே என்னிடம் ஒருவர் தெரிவித்தது).

    முதல் காரணம்: பெற்றோருக்குத் தம் குழந்தைகளுடன் செலவிட அதிக நேரம் கிடைத்ததில்லை; இல்லை, அவர்கள் ஒதுக்கியதில்லை.

    பணம் தேடுவதில், தம் சொந்த பொழுதுபோக்கிற்காக நேரத்தை ஒதுக்குவதில், ‘பிறர் பார்த்துக்கொள்வார்கள்’ என்ற அசிரத்தையில், அவர்கள் காலத்தைக் கழித்துவிடுகிறார்கள்.

    வளரும் குழந்தைகளுக்கு இதெல்லாம் புரியுமா? பெற்றோருக்குத் தாங்கள் இரண்டாம் பட்சம்தான் என்ற மனக்குறையுடன் வளர்கிறார்கள்.

    உடனிருக்கும் பாட்டி சிறு வயதிலிருந்தே அவர்களுக்குச் சோறு ஊட்டி, கதை சொல்லி, விளையாட்டுக் காட்டி வளர்த்திருப்பாள். எதையாவது பார்த்துப் பயந்துவிடும் குழந்தைக்கு உடனடியாக ஆறுதலளிப்பாள். பேரக்குழந்தைகளுக்கு எந்தெந்த தின்பண்டங்கள் பிடிக்கும் என்று தெரிந்துவைத்திருக்கும் பாட்டி அவர்களுடைய அன்பைப் பெறுவாள்.

    தன் குழந்தைகளையும் அப்படி வளர்த்திருக்கலாம். ஆனால் அதெல்லாம் அவர்களுக்கு நினைவிருக்காது. சொந்தக் குழந்தைகளுடனேயே போட்டி எழும். ‘என்னை இவ்வளவு அருமையாக வளர்க்கவில்லையே!’ என்று சாடுவார்கள்.

    இதில் ஓரளவு உண்மை இருக்கக்கூடும்.

    முதல் குழந்தை படும் பாடு

    ‘எல்லாவற்றிலும் சிறந்தவனாக, பார்ப்பவர்கள் பாராட்டுகிறவனாக தன் குழந்தை வளரவேண்டும்,’ என்ற தாயின் அளவுகடந்த எதிர்பார்ப்பு பாதிப்பைத்தான் உண்டாக்கும். முதல் குழந்தையின்போதுதான் இந்த வெறி.

    ‘பெற்றோருக்கு முதல் குழந்தையாக மட்டும் பிறக்கக்கூடாது!’ என்று அங்கலாய்த்தாள் ஒரு பாட்டி. (அவள் கடைசிக் குழந்தை).

    தன் மருமகள் பேத்தியை விரட்டுவதைப் பார்த்தும், எதுவும் செய்யமுடியாத நிலையில் அச்சொற்கள் வெளிவந்தன.

    ஆணோ, பெண்ணோ, குடும்பத்தின் மூத்த குழந்தைகள் இந்த நிலைக்கு ஆளாவது சகஜம்.

    கதை

    முத்து முதல் குழந்தை. இயற்கையிலேயே பொறுமைசாலி. பொறுப்பானவன். அவனுடைய நல்ல குணங்கள் தாயின் கண்ணுக்குத் தெரியாமல் போயின.

    ‘இதை இப்படிச் செய், அதை அப்படிச் செய்,’ என்ற அவளுடைய ஓயாத போதனையால் அவன் தன்னம்பிக்கை ஆட்டம் கண்டது. இதனால், மேலும் கண்டனத்திற்கு ஆளானான்.

    பாட்டி-தாத்தாவுடனும் சேர்ந்து வளர்ந்தால், பெற்றோரின் அளவுமீறிய கண்டிப்பால் உண்டாகும் பாதிப்பு குறையும். ஏனெனில், `குழந்தைகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள்,’ என்ற அனுபவம் வயதானவர்களுக்கு உண்டு. பொறுக்க முடியாது, குறுக்கிடுவார்கள். (பலன் என்னவோ இருக்காது).

    குழந்தை வளர்ப்பு என்பது எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுவான ஒரு நியதி அல்ல. குழந்தைகளின் தன்மைக்கேற்ப மாறுபடும்.

    முத்துவுக்கு அடுத்துப் பிறந்தவளோ, இரண்டாவது குழந்தைகளின் இயல்பின்படி சுறுசுறுப்பாக, தைரியசாலியாக — அதனாலேயே தந்தையின் செல்லப்பெண்ணாக — வளர்ந்தாள்.

    தாய் ஓயாது, ‘இப்படித்தான் நடக்கவேண்டும்,’ என்று போதித்தபோது, அதை அலட்சியம் செய்யும் துணிவு அவளுக்கு இருந்தது.

    ஏன் இத்தனை தடைகள்?

    ‘ஒழுக்கத்தைப் போதிக்கிறோம்’ என்ற பெயரில் குழந்தைகள் ஆசைப்பட்டுச் செய்ய முற்படும் எதையும், `வேண்டாம்’, ‘முடியாது’ என்று தடைவிதிப்பார்கள் பல பெற்றோர்.

    ஏன் கூடாது என்று விளக்குவதற்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அதையே பாட்டி-தாத்தா விளக்கும்போது, அவர்களிடம் மரியாதை எழுகிறது.

    முதியவர்கள் அத்தனை விதிமுறைகளை விதிப்பதும் கிடையாது. குழந்தைகள் எது செய்தாலும் பாராட்டுகிறவர்கள் அனேகமாக அவர்களாகத்தான் இருப்பார்கள்.

    ‘கண்டிப்பதே இல்லை. செல்லம் கொடுத்துக் கெடுக்கிறார்கள்,’ என்று பெற்றோர் முணுமுணுக்கலாம். ஆனால், தம்மை நோக்கி, கையை விரித்து ஓடிவரும் குழந்தைகளிடம் கொண்ட அன்பால் பாராட்டினாலும், அவர்களுக்குத் தம்மைப்பற்றிய நன்மதிப்பு எழ இந்தப் புகழ்ச்சி உதவுகிறதே!

    பேசுங்கள்    

    சிறு குழந்தைகள் நிறைய கேள்விகள் கேட்பார்கள். சரியோ, தவறோ, சலிக்காமல் பதில் கூறினால் பிணைப்பு இறுகும். நம் வாழ்க்கையின் சில பகுதிகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது, அவர்களும் தங்களைப் பாதித்தவைகளைப்பற்றிச் சொல்வார்கள்.

    மனம் வருந்தி, ‘இப்போதெல்லாம் என்னுடன் பேசவே உனக்கு நேரமிருப்பதில்லை. அப்படி என்ன கணினி விளையாட்டு?’ என்பதுபோல் கண்டித்தால் மாறுவார்களா?

    ஒரே விஷயத்தில் ஆர்வம் இருந்தால்தானே கலந்து பேச முடியும்? காலத்திற்கேற்ப மனதை இளமையாகவே வைத்திருக்க கணினி, இணையம் என்று கற்க வேண்டியதுதான்.

    போட்டிகள்

    ‘தாய்வழிப் பாட்டி, தந்தைவழிப் பாட்டி இருவருக்குள்ளும் போட்டி மனப்பான்மை இருக்கிறதே!’ என்று ஒருவர் கேட்டார்.

    போட்டி போடாது, இரு தரப்பினரையும் மதித்துப் பேசக் கற்றுக்கொடுப்பது சிறப்பு.

    “அந்த பாட்டி, தாத்தாவைப் பார்க்கும்போது மரியாதையாக `குட்மார்னிங்’, `குட் ஈவ்னிவ்’ என்று சொல்லுங்கள். உங்கள் பள்ளிக்கூடத்தில் நீங்கள் பெற்ற வெற்றிகளைச் சொல்லுங்கள்,’” என்று அறிவுறுத்தும்போது, ”இது தற்பெருமை இல்லை?” என்ற சந்தேகத்தை எழுப்புவார்கள்.

    “முதியவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்படி நிறைய நடப்பதில்லை. உங்களுடைய வெற்றிகளைத் தம்முடையதாக எண்ணி மகிழ்வார்கள்,” என்ற ரீதியில் கூடவே இருக்கும் பாட்டி அறிவுரை கூறும்போது, `நம் முன்னேற்றத்தில் அக்கறை காட்ட இத்தனைபேர் இருக்கிறார்களே!’ என்று சிறுவர்கள் மகிழ்வார்கள். மேலும் உயர்வார்கள்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-115

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-115

    நாங்குநேரி வாசஸ்ரீ

    115. அலர் அறிவுறுத்தல்

    குறள் 1141

    அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
    பலரறியார் பாக்கியத் தால்

    ஊருக்குள்ளார பலபேர் எங்க நேசத்தப் (காதலை) பத்தி பாடு (அலர்) பேசுததால (என் காதல் கைகூடுத) நல்லது நடக்கும்னு நெனைப்புல என் உசிரு போவாம இருக்குனு நெறையபேரு அறிஞ்சிக்கிடமாட்டாங்க.

    குறள் 1142

    மலரன்ன கண்ணாள் அருமை அறியா
    தலரெமக் கீந்ததிவ் வூர்

    பூப்போல கண்ணு இருக்க இவளோட அரும புரியாம இந்த ஊரு இவளுக்கு எம்மேல காதல்னு ஒளிச்சிமறைச்சி பாடுபேசியே எனக்கு நன்மயச் செஞ்சிட்டாவ.

    குறள் 1143

    உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
    பெறாஅது பெற்றன்ன நீர்த்து

    எங்க நேசத்தப்பத்தி ஊர்முழுக்க பேசமாட்டாகளா. அது கெடைக்காதுனு நெனைச்ச நேசம் கெடச்சது (திருமணம்) கணக்கா சந்தோசத்தக் குடுக்குமே.

    குறள் 1144

    கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
    தவ்வென்னும் தன்மை இழந்து

    ஊர்க்காரவுக பேச்சால எங்க நேசம் வளருது. அதுமட்டும் இல்லையினா அது தன்ம கெட்டு வாடிப் போவும்.

    குறள் 1145

    களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
    வெளிப்படுந் தோறும் இனிது

    எங்க நேசம் வெளிய தெரியத் தெரிய சந்தோசம் உண்டாகுதது  கள்ளு குடிச்கவன் போதை ஏற ஏற அதையே குடிக்க விரும்புதது கணக்கா ஆவும்.

    குறள் 1146

    கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
    திங்களைப் பாம்புகொண் டற்று

    காதலிச்சவுக சந்திச்சுக்கிட்டது ஒருநாள்தாம்னாலும், நிலாவ பாம்பு முழுங்கும் ங்குத சேதி கணக்கா ஊர்முழுக்க பரவிப் போச்சு.

    குறள் 1147

    ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
    நீராக நீளுமிந் நோய்

    இந்த நேசம் ஊர்க்காரவுக பேசுத பேச்ச எருவாவும், ஆத்தா சொல்லுத கடுஞ்சொல்ல தண்ணியாவும் கொண்டுக்கிட்டு செழிப்பா வளருது.

    குறள் 1148

    நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
    காமம் நுதுப்பேம் எனல்

    இந்த ஊர்க்காரவுக பாடு பேசி எங்க நேசத்த அழிச்சுப்போடலாம்னு நெனைக்கது நெய்ய மொண்டு ஊத்தி தீய அணைக்கதுக்கு சமானம்.

    குறள் 1149

    அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்
    பலர்நாண நீத்தக் கடை

    பயப்படாத நான் விட்டுப்போட்டு போவ மாட்டேம்னு அன்னைக்கு உறுதியா சொன்னவுக பாடு பேசின பலரும் வெக்கப்படுதமாரி என்னையப் பிரிஞ்சு போகையில நான் மட்டும் ஊர்க்காரவுக பேச்சுக்கு வெக்கப்படலாமா?.

    குறள் 1150

    தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
    கௌவை எடுக்குமிவ் வூர்

    நான் மனசுல நெனைக்காமாரி இந்த ஊர்க்காரவுக பாடு பேசுதாங்க. இனிமே நான் நேசிக்கவரு விரும்பினாருன்னா அவரும் ஒத்துக்கிடுவார் .(திருமணம் செய்வார்).

    Share