வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12

0

தி. இரா. மீனா      

கதிரெம்மவே

கதிரரெம்மய்யனின் மனைவியான இவருக்கு ரெப்பவ்வ என்ற பெயருமுண்டு. இராட்டையில் நூல் நூற்பது இவரது காயகமாகும். ”கதிரரெம்மி ஒடைய கும்மேஸ்வரா” இவரது முத்திரையாகும். சரணபதி, லிங்கபதி பாவனை, தொழிலின் உயர்வு, சரணரைப் போற்றுதல் ஆகியவை இவரது வசனங்களில் வெளிப்படுகின்றன. காயகத்தின் வழக்குகள் வசனங்களில் இடம் பெறுகின்றன.

1. “என் இராட்டையின் குலம்சாதி என்னவெனக் கேட்பவரே,
கீழ்ப்பலகை பிரம்மன்; நாராயணன் தோரணம்
நின்றிருக்கும் பொம்மை சிவன்
சிவனின் பின்புறம் சூத்திரமிரண்டு
அறிவென்கிற நூற்புக் கயிற்றை பக்தியெனும் கையால் சுழற்ற
சுற்றி நூல் நிறைந்தது நூல்கதிர்
இராட்டையைச் சுழற்ற மாட்டேன் என் கணவன் கோபிப்பான்
இனி என்செய்வேன் கதிரரெம்மியொடய கும்மேஸ்வரனே ”

கன்னடி காயகதா அம்மி தேவய்யா

இவருடைய  காயகம் சவரம் செய்வதாகும். ”கமலேஸ்வரலிங்க” இவரது முத்திரையாகும். காயகம் பற்றி எழுதுவதும், எந்தச் சாதி, குலத்திலிருந்து வந்திருந்தாலும் அவரவர் காயகத்திற்கும், பக்திக்கும் இழிவு வராதபடி பார்த்துக் கொள்ளவேண்டுமென்பது இவரது வசனங்களின் சாராம்சமாகும்.

 1. “எந்தக் குலம் சாதியில் பிறந்திருப்பினும்
தம் காயகத்திற்கு பக்திக்கேற்ப
களங்கமில்லாமலிருக்க வேண்டும்
முக்குணத் தூய்மையோடிருக்க வேண்டும்
அறம் பொருளின்பத்திற்கு மூக்கறுபடலாமா?
அறிஞர் சொன்னாரென பொருத்தமற்றவை செய்யலாமா?
எண்ணத்தில் தூய்மையாகி சென்ன பசவனின் சாட்சியாகி
கமலேஸ்வரலிங்கம் போற்றவேண்டும்”

 2. “தீப்பந்தம் ஏந்தியவனுக்கு ஐயமிருக்கலாம்
தீபத்திற்கு ஐயமுண்டோ?
சம்சாரத் துன்பத்தில் காமனின் தகிப்பில்
தவிப்பவனுக்கு கொந்தளிப்பு!
அதிசயலிங்கமணிந்தவனுக்கு கொந்தளிப்பா?
சென்னபசவன் சாட்சியாக இக்குணமுடையவனை
கமலேஸ்வரலிங்கமென்பேன்”

கன்னடி காயகத ரெம்மம்மா

ரேமம்மா, ரெம்மவ்வா என்ற பெயர்களுடையவர். நாவிதம் இவருடைய காயகம். ”சத்குரு சங்க நிரங்கலிங்கா“ என்பது இவரது முத்திரையாகும்.

1. “கையில் கண்ணாடியிருக்க தன்னைத்தான் பாரக்கக் கூடாதா?
ஜங்கமரின் பிரசாதம் ஏற்கவில்லையெனில்கொல்லக் கூடாதா?
கொன்றால் முக்தியில்லையென்போரின் வாயில்
காவலனின் காலணியை வைப்பேன்
விடுகதைக்கு விடைகொடுங்கள்
உம்மிடம் விடை இல்லையெனில் அழியுங்கள்
இறந்த நாயின் வால்போல
சத்குருசங்க நிரங்க இலிங்கத்தில்”

கன்னத மாரிதந்தே

திருடனாக வாழ்ந்த இவர் இறையருளால் சரணராக மாறி நல்ல வாழ்க்கை  நடத்துகிறார். ”மாரன வைரிமாரேஸ்வரா’ இவரது முத்திரையாகும். களவுத் தொழில் பின்னணி என்பதால் அது தொடர்பான சொற்களே வசனங்களில் இடம் பெறுகின்றன.

“இருட்டில் கன்னம் வைத்தால் என் கர்த்தனுக்கு அவமானம்
தூங்குகின்றவர் வீட்டில் புகுந்தால் தொழிலுக்கு அவமானம்
தூங்கியவனை எழுப்பி எடுத்த பொருளை அவனுக்குக் காட்டி
எனக்குரியதை எடுத்துவந்தேன் மாறன வைரி மாரேஸ்வரனே”

கம்பத மாரிதந்தே

காயகம் மீன் பிடிப்பதாகும். ’கதம்பலிங்க’ இவரது முத்திரையாகும்.

“பிறவிகள் பலவெடுப்பினும் உத்திகள் பல பேசினாலும்
சாட்சிகள் பல இருந்தாலும்
இடமறியவேண்டும்
பேச்சறிவோமெனப் பேசாமல்
சான்றோன் என மௌனம் காட்டாமல்
அவ்வக்காலத்தின் நீதியறிந்து
அறம் சார்ந்து இருப்பதே உயர்வாகும்
கதம்பலிங்கனே”

கரஸ்தலதா மல்லிகார்ச்சுனதேவா

“பரமகுரு சாந்தமல்லிகார்ச்சுன “ என்பது இவரது முத்திரையாகும். இஷ்டலிங்க வழிபாடு, சிவன் பெருமை பேசுவதாக இவர் வசனங்கள் அமைகின்றன.

1.“அகத்தில் தெளிவின்றி புறத்தில் செயலிருப்பின் என்னபயன்?
அது பார்வையற்றவனின் வாழ்வு போன்றது
புறத்தில் செயலின்றி அகத்தெளிவால் என்ன பயன்?

அது சூன்யத்திலுள்ள விளக்கு போன்றது
அகம், புறமிரண்டும் இணைய வேண்டும்
“அகந்தர்ஞான பஹிம்கிரியா ஏகியாவோ விசேஸத”
என்பது போல அகத் தெளிவு,புறச்செயல் உடையவன்
பக்தன்,பிரசாதி, அடியவனாவான்
நம் பரமகுரு சாந்தமல்லிகார்ச்சுனனுக்கு ”

2.“கடலின் ஆலங்கட்டியைச் செதுக்கி தூணாக்கி
வீடுகட்டி வாழ்வு நடத்த முடியுமா?
அக்னிக்குள்ளிருக்கும் கற்பூர குடுவைக்குள்
மணம் சேர்த்து பசையாக்க முடியுமா?
காற்றின் மணம் பிடித்து மாலையாக்கி சூடமுடியுமா?
கானல்நீரை எடுத்து வந்து சமைத்துண்ண முடியுமா?
உன்னை அறிந்து தன்னை மறந்த சிவயோகிக்கு
இன்னொரு பிறவியுண்டோ
பரமகுரு மல்லிகார்ச்சுனனே?  “

கருளகேதய்யா

“சங்கேஸ்வரா” இவரது முத்திரையாகும். நோன்புக் கட்டுப்பாட்டைத் தீவிரமாகப் பின்பற்றியவர். வீரசைவரல்லாதவரோடு சேருதல், அர்ப்பணம் செய்யாததை உண்ணுதல் ஆகியன கூடாது என்ற கருத்துக்களைத் தன் வசனங்களில் வெளிப்படுத்தியவர்.

1.“சாவு விட்டுவிடாது என்பதறிந்தும்
ஒழுக்கம் விட்டு நாளும் மடிவதேன்?
இலிங்கத்திற்கு மனம் அர்ப்பணித்து
மனதிற்கினிமையான சங்கேஸ்வரனோடு இணைவீர் ”

2.“உடல் தனக்குத் தேவையற்றதை விரும்பினால் வெட்டுவேன்
கைகள்  தனக்கற்றதைத் தீண்டினால் சீவிவிடுவேன் உடனே
காதுகள் தனக்கற்றதைக் கேட்டால் அறுப்பேன்
நாசி தனக்கற்றதை முகர்ந்தால் கூராணி செலுத்துவேன்
பார்வை தவறினால் களைந்தெறிவேன்
மனம் மற்றது நினைத்தால் ஆன்மாவை எறிந்துவிடுவேன்
மனதிற்கு இனிமை சங்கேஸ்வரலிங்கமே”

கலகேதய்யா

இவர் கிராமியக் கலைஞர். “மேகலேஸ்வரலிங்கா “ இவரது முத்திரையாகும். ”அரிஹர’, “பீமகவி”, ஆகிய காவியங்களில் இவரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

“வேலை செய்வதைச் சொல்லி இரப்பதேன்?
கிடைக்காத போது வைவதேன்?
கடவுள் தருவாரெனச் சொல்லி கோயிலில்
கூட்டத்தில் காத்திருப்பதேன்?இது பெருமையோ?
வயிற்றை நிரப்புபவரின் வாழ்வியல் நிலை இது
மேகலேஸ்வரலிங்கனை இவரடைய முடியாது “

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *