நாங்குநேரி வாசஸ்ரீ

117. படர் மெலிந்திரங்கல்

குறள் 1161

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகும்

என் நேசம்ங்குத சங்கடத்த மத்தவங்க தெரிஞ்சுக்கிடாம நான் மறைப்பேன். ஆனா அது ஊத்துத் தண்ணி கணக்கா எறைக்க எறைக்க அதிகமாவுது.

குறள் 1162

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலும் நாணுத் தரும்

என் நேசத்த மறைக்கவும் ஏலல. நேசம் வச்சவரு கிட்ட சொல்லவும் கூசுது.

குறள் 1163

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பின் அகத்து

சங்கடத்தப் பொறுத்துக்கிட ஏலாம என் உசிரயே காவடித்தண்டா வச்சிக்கிட்டு நேசம்ங்குத நோய் ஒரு பக்கமும், அதச் சொல்ல ஏலாத வெக்கம் ஒரு பக்கமும் தொங்குது.

குறள் 1164

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்

காதல் என்னயச் சுத்திச்சூழ கடல் கணக்கா நின்னு சங்கடப்படுத்துது. அத நீந்திக் கடக்க பாதுகாப்பான தோணிதான் இல்ல.

குறள் 1165

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்

(சந்தோசமான) சேக்காளியா இருக்கையிலயே சங்கடத்தக் குடுக்குத இவரு பகையாளியா ஆனா என்ன செய்வாரோ?

குறள் 1166

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது

நேசம் குடுக்குத சந்தோசம் கடல்கணக்கா பெரிசு. அது பிரிவுங்குத தொல்ல தருத நேரம் வருத சங்கடம் கடலை விடப் பெரிசு.

குறள் 1167

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்

நேசம்ங்குத கொடும் கடல்ல நீந்தின பொறவும் என்னால கரையக் காங்க ஏலல. நடுசாமத்துலயும் ஒறங்காம நான் தனியாவே கெடந்து கலங்குதேன்.

குறள் 1168

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்ல தில்லை துணை

பாவம் இந்த ராப்பொழுது. இது எல்லா உசிரையும் ஒறங்கவச்சிப்போட்டு தனியாவே கெடக்கு. இதுக்கு என்னயத் தவித்து வேற தொண இல்ல.

குறள் 1169

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா

இந்நாளையில ராப்பொழுதுநீண்டுக்கிட்டே போவுதது கணக்கா தோணுது. நேசம் வச்சவரு பிரிஞ்சி போனதக்காட்டிலும் இந்தக் கொடும பெருங்கொடும.

குறள் 1170

உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்

நேசம் வச்சவரு இருக்க எடத்துக்கு எம் மனசு கணக்கா போவ முடிஞ்சிச்சின்னா கண்ணீர் வெள்ளத்துல சிக்கி என் கண்ணு நீந்த வேண்டியதில்ல.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *