நாங்குநேரி வாசஸ்ரீ

 116. பிரிவு ஆற்றாமை

குறள் 1151

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை

பிரிஞ்சுபோவமாட்டன்னா எங்கிட்ட சொல்லு. இப்பம் போயிட்டு வெரசலா வாரேன்னு சொல்லணும்னா அத நீ திரும்பி வாரெயில யாரு உசிரோட இருப்பாகளோ அவுககிட்ட சொல்லு.

குறள் 1152

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு

முன்னயெல்லாம் அவுகளக் கண்ணால பாக்குததே சந்தோசத்தக் குடுத்துச்சு. இப்பம் கூடிச்சேந்தாலும் பிரிஞ்சு போயிடுவாரோங்குத பயத்துல சங்கடமா இருக்கு.

குறள் 1153

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்

எல்லாத்தையும் அறிஞ்சுக்கிட்ட காதலரும் ஒருசமயம் பிரிஞ்சுபோவாருங்கதால இப்பம் பிரிய மாட்டேம்னு உறுதியா சொல்லுதத நம்ப ஏலாது.

குறள் 1154

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க் குண்டோ தவறு

பிரியமாட்டேம் பயப்படாதன்னு சொன்னவரு பொறவு பிரிஞ்சுபோனாகன்னா அவுக சொன்ன சொல்ல நம்பினதுல என்ன குத்தம் இருக்க முடியும்.

குறள் 1155

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு

நேசிக்கவரு பிரிஞ்சு போனா மறுபடி சேருதது சுளுவு இல்லங்கதால மொதவே பிரியாம காப்பாத்திக்கிடணும்.

குறள் 1156

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை

போயிட்டுவாரேம்னு சொல்லுத அளவு கல்நெஞ்சுக்காரர் திரும்ப வந்து நேசம் காட்டுவாருனு எதிர்பாக்குதது வீண்.

குறள் 1157

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை

என்னையத் தலைவன் பிரிஞ்சுபோன சேதிய எம்முன்னங்கையிலேந்து நழுவிவிழுத வளவி ஊர் முழுக்க தூத்தி விட்டுருமே.

குறள் 1158

இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு

நேசம் இல்லாதவுக இருக்க ஊர்ல வாழுதது சங்கடம். அத விடக் கொடும மனசார நேசிக்கவரப் பிரிஞ்சு வாழுதது.

குறள் 1159

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ

கங்கு (நெருப்பு) அதத் தொட்டாதான் சுடுமேயொழிய காதல் நோய் கணக்கா எட்ட நின்னாலும் சுடுமோ?

குறள் 1160

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்

பிரிஞ்சுபொவுததுக்கு ஒத்துக்கிட்டு அதனால வர சங்கடத்தையும் பொறுத்துக்கிட்டு தன்காரியத்த பாத்துக்கிட்டு பொறுமயா வாழுதவங்க பலபேரு இருக்காங்க.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *