Blog

  • இந்த வார வல்லமையாளர் (254)

    இவ்வார வல்லமையாளராக சிற்பி இராசன் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்கிறோம்.

    இவரை பற்றி பதிவு எழுதி அறிமுகபடுத்தியுள்ள சண்முகநாதன் அவர்கள் குறிப்பிடுவதாவது

    `சிற்பி ராஜன்’ என்ற பெயர் பதிக்கப்பட்ட ஐம்பொன் சிற்பங்களுக்கு, உலக கலைப்பொருள் வர்த்தகத்தில் பெரும் மரியாதை உண்டு. இறை மறுப்பாளரான ராஜன் கைபட்டு உருவாகும் சிற்பங்களில் தெய்வீகம் ததும்புகிறது. பாரம்பர்ய செறிவு மாறாமல், நவீன உத்திகள்கொண்டு அவர் உருவாக்குகிற இறைச் சிற்பங்கள், உலகின் பெரும்பாலான மியூசியங்களில் இந்தியக் கலாசாரத்தின் சின்னங்களாக இருக்கின்றன. காஞ்சி சங்கர மடம் முதல் குஜராத்தில் உள்ள சுவாமி நாராயண் கோயில் வரை இந்தியாவெங்கும் உள்ள பெரும்பாலான கோயில்களின் உற்சவர்கள் தயாரானது, இந்த பெரியார் தொண்டரின் பட்டறையில்தான்.

    பரம்பரை ஸ்தபதிகளே நிறைந்திருக்கும் சிற்பத் தொழிலுக்கு, தறி ஓட்டுபவரையும், விவசாயத் தொழிலாளரையும், செங்கல்சூளையில் வேலை செய்தவரையும் கொண்டுவந்து, ஒளிவுமறைவில்லாமல் முழுக் கலையையும் கற்பித்து தனி அடையாளங்கள்கொண்ட சிற்பிகளாக ராஜன் அவர்களை உருவாக்கியிருக்கிறார். ராஜனின் பட்டறையில் தொழில் பழகிய 216 சிற்பிகள் சுவாமிமலை மட்டுமின்றி, தமிழகத்தின் பல பகுதிகளில் சோழர் காலத்துச் சின்னங்களான ஐம்பொன் சிற்பங்களைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர், தலித்துகள். சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையே சமஸ்கிருதம்தான். ராஜன், அதைப் பயின்றிருக்கிறார். அவரது மாணவர்களுக்கும் பயிற்றுவித்திருக்கிறார்.

    “நிறைய பேர் கேட்பாங்க… `கடவுளே இல்லைனு சொல்ற பெரியார் கட்சி ஆளு, ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தீங்க?’னு. நான் எந்தத் தொழிலுக்குப் போயிருந்தாலும் பெரியார் தொண்டன்தான். ஐம்பொன் சிற்பம் செய்றது என்னோட தொழில். என் பார்வைக்கு இது, கலை வடிவான சிலை. இதை வாங்குறவர் கடவுளாகப் பார்க்கிறார். என் பட்டறையோட முகப்பிலேயே பெரியார், அம்பேத்கர் படங்களைப் பெருசா ஃபிரேம் பண்ணி மாட்டிவெச்சிருக்கேன். நாத்திகம் பேசித்தான் சிற்பத்தை வியாபாரம் பண்ணுவேன். ஆயுதபூஜை, தீபாவளியெல்லாம் எங்க பட்டறையில கொண்டாடுறதே இல்லை. பெரியார் பிறந்தநாள், அம்பேத்கர் பிறந்தநாள், மே தினம் இந்த மூணு நாளையும் ரொம்பவே சிறப்பா கொண்டாடுவோம். அன்னைக்கு எல்லாருக்கும் மாட்டுக்கறி பிரியாணி விருந்து நடக்கும். முக்கியமான ஆளுமைகள் வந்து, எங்க பிள்ளைகள் மத்தியில பேசுவாங்க. என்கிட்ட சிற்பம் கத்துக்கிட்டுப்போன 216 பிள்ளைகளும் அப்படித்தான் இருக்காங்க. அவங்க மூலமா உருவாகுற அடுத்த தலைமுறையும் அப்படித்தான் இருக்கும்” – புத்தனைச் செதுக்கியபடி புன்னகை மாறாமல் பேசுகிறார் ராஜன்.

    உலகில் எந்த நாட்டில் கண்காட்சி நடந்தாலும் ராஜனையே பிரதிநிதியாக அனுப்புகிறது இந்திய அரசு. லண்டன், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி என உலகம் சுற்றுகிறார். வெளிநாடுகளுக்குப் போய் அங்கிருப்பவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார். சிற்பத் திறனைப் பாராட்டிக் கிடைத்த விருதுகள், அங்கீகாரங்களை எல்லாம், `இது எனது தொழில்; நான் எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கவில்லை’ என்று புறம் தள்ளியிருக்கிறார்.

    “எங்களோடது ரொம்பவே செழிப்பான குடும்பம். அப்பா பெரிய விவசாயி. மொத்தம் 12 பிள்ளைங்க. நான் பதினோறாவது ஆளு. எல்லாப் பசங்களும் நல்லாப் படிச்சு பெரிய வேலைக்குப் போனாங்க. ஒருத்தன் பேராசிரியர். ஒருத்தன் பெல் நிறுவனத்துல பெரிய அதிகாரி… நானும் நல்லாப் படிக்கணும்னு வீட்டுல எதிர்பார்த்தாங்க. பி.யூ.சி இங்கிலீஷ் மீடியத்துல ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணினேன். `இன்னும் ஒரு வருஷம் மட்டும் படிடா’னு சொன்னாங்க. ஆனா, அதுக்கு மேல எனக்குப் படிப்புல நாட்டம் இல்லை. எனக்குனு ஒரு வாழ்க்கை… மனசுக்குப் பிடிச்ச தொழில்னு தேட ஆரம்பிச்சுட்டேன். அந்த வயசுலயே, ரோட்டுல இருந்து எடுத்த தார்ல, களிமண்ணுல உருவங்கள் செஞ்சு ஸ்கூல்ல வைப்பேன்.

    அப்போ சினிமாவுல `கலைகங்கா’னு ஒரு ஆர்ட் டைரக்டர் இருந்தார். அவரோட சகலைக்கு எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் வீடு. நான் தார் உருண்டையில செஞ்சு வச்சிருந்த சிலையைப் பார்த்துட்டு, `இவனை கலைகங்காக்கிட்ட சேர்த்துவிடுறேன். பெரிய கலைஞனா வருவான்’னு சொன்னார். `இனிமே நீ வீட்டுப்பக்கம் வரக் கூடாது’னு அவரை விரட்டி விட்டுட்டாங்க. நான் தனியாப் போய் அவரைப் பார்த்து, `எப்படியாவது என்னை அவர்கிட்ட சேர்த்து விட்டுடுங்க’னு கெஞ்சினேன். கூட்டிட்டுப் போனார்.

    நான் பண்ணின சிற்பத்தையெல்லாம் பார்த்த கலைகங்கா, `நான் உன்னை இப்ப சினிமாவுல சேர்த்துவிட்டா, மாசம் 600 ரூபாய் சம்பளம் கிடைக்கும். ஆனா, நீ வளர முடியாது. நேரா சுவாமிமலை போ… அங்கே ஐம்பொன் சிற்பம் செய்யக் கத்துக்கொடுக்கிற கல்லூரி இருக்கு. அதுல சேர்ந்து முழுசா கத்துக்கோ, நல்லா வருவே’னு சொன்னார்.

    அப்போ எனக்குப் பதினாறரை வயசு. சுவாமிமலையில பூம்புகார் பயிற்சி நிறுவனத்துல, `எங்க அப்பா விஸ்வகர்மா’னு பொய் சொல்லி சேர்ந்தேன். இல்லைன்னா சேர்க்க மாட்டாங்க. ஆனா, நான் விஸ்வகர்மா இல்லேன்னு தெரிய வந்தபிறகு, என்னைப் பட்டறைக்குள்ளேயே விடலை. `பேங்க்குக்குப் போ’, `கறி வாங்கிட்டு வா’ன்னு வெளிவேலைக்கு அனுப்பினாங்க. ஆனா, எனக்கிருந்த வேகமும் வெறியும் ரொம்ப சீக்கிரமே கலையைக் கத்துக் கொடுத்திடுச்சு. மாசம் 30 ரூபா உதவித்தொகை. பயிற்சி முடிஞ்சதும், ஒரு பட்டறையில போய் வேலை செய்வேன். அங்கே தினமும் ஒண்ணரை ரூபா கொடுப்பாங்க. மொத்த மாத வருமானம் 75 ரூபா. வளமான வாழ்க்கையை மறந்துட்டு அதுக்குள்ளயே வாழப் பழகிட்டேன். அந்த அளவுக்கு கலை தாகம்.

    பயிற்சி முடியுற தருணத்துல, ஆர்ட் தொடர்பான படிப்புப் படிக்கிறவங்களுக்கு உதவித்தொகை கொடுக்கிறாங்கனு ஒரு செய்தி படிச்சேன். ஆங்கில மீடியம் படிச்சதால, எனக்கு அது ஒரு அற்புதமான வாய்ப்பா அமைஞ்சது. எழுபத்தஞ்சாயிரம் ரூபாய்க்கு சிலை செய்ய அரசு ஆர்டர் கிடைச்சுச்சு. சின்னதா ஒரு வீட்டை வாடகைக்குப் பிடிச்சு பட்டறையை ஆரம்பிச்சுட்டேன்.

    அப்போ போன டெல்லிப் பயணம் எனக்குள்ள பல கதவுகளைத் திறந்துச்சு. ஐம்பொன் சிற்பத்துக்கு உலக அளவுல பல்லாயிரம் கோடிக்கு வணிகம் இருக்கு. ஆயிரம் ஆண்டு பழமையான மரபுங்கிறதால ஐம்பொன் சிலைகளை வாங்க சர்வதேச சமூகம் ரொம்பவே ஆர்வமா இருக்கு. ஆனா, அந்தத் தேவையை ஈடுகட்டுற அளவுக்கு உற்பத்தி இல்லை. வெறும் 11 பட்டறைகள்தான் சுவாமிமலையில இருக்கு. எல்லோரும் தலைமுறையா தொழில் செய்யிற கலைஞர்கள். ஒரு சிலை ஆர்டர் கொடுத்தா நாலு மாசமோ, அஞ்சு மாசமோ கழிச்சுத்தான் கிடைக்கும்.

    ஒரு பக்கம், இவ்வளவு பெரிய வணிகம் இருக்கு. இன்னொரு பக்கம், சமூக ஒடுக்குமுறைகளைத் தாங்கிக்கிட்டு, அவச்சொற்களைத் தாங்கிக்கிட்டு ஒரு சமூகம் பின்தங்கிப் போய்க்கிட்டே இருக்கு. கலை, பிறப்பு சார்ந்ததோ, மரபு சார்ந்ததோ இல்லை. அதைத்தான் பெரியார் படிப்பிச்சுக்கிட்டே இருக்கார். திறமையும் ஆர்வமும்கொண்ட யாரும் கலைஞனா உருமாற முடியும். இங்கிருக்கிற சிலர் மட்டுமே இதைச் செய்றாங்க; எல்லாரும் கத்துக்கிட்டா பெரிய அளவுல வணிகம் நடக்கும்; சமூக மரியாதையும் மாறுமேனு யோசிச்சேன்.

    தனியா சிற்பப் பட்டறை தொடங்கும்போதே, `உணவு, தங்குமிடத்தோடு இங்கே சிற்பம் கற்றுத் தரப்படும்’னு அறிவிப்புப் பலகையை மாட்டிட்டேன். முதன்முதல்ல, இந்தப் பகுதியோட போஸ்ட்மேன், `சும்மா ஊர்ல சுத்திக்கிட்டிருக்கான்; இவனுக்கு ஒரு வழிகாட்டுங்க’னு ஒரு பையனைக் கொண்டு வந்துவிட்டார். அந்தப் பையன் இன்னும் மூணு பேரை அழைச்சுக்கிட்டு வந்தான். இப்படித்தான் என்கிட்ட பசங்க வந்து சேர்ந்தாங்க.

    பொதுவா, சிற்பக்கலைக்குக் குறைந்தபட்சம் ஓவியமாவது வரையத் தெரியணும்னு சொல்வாங்க. என்கிட்ட வந்து தொழில் கத்துக்கிட்டு, இன்னைக்கு உலக அளவுல வர்த்தகம் பண்ற 99 சதவிகிதம் பேருக்கு, ஆரம்பத்துல சின்னக் கோடுகூட நேராப் போடத் தெரியாது. நிறையப் பேர், எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்காங்க. யாரெல்லாம் கிராமங்கள்ல புறக்கணிக்கப்பட்டாங்களோ, அவங்களை எல்லாம் தேடிப்போய் அழைச்சுக்கிட்டு வந்து தொழில் கத்துக்கொடுத்தேன்.

    நாங்களே சமைப்போம்… சாப்பிடுவோம்… குடிப்போம்… சிற்பமும் செய்வோம். எந்த ஒளிவு மறைவும் இல்லாம, எல்லா நுணுக்கங்களையும் கத்துக் கொடுத்தேன். பயிற்சி முடிச்சப் பசங்க அடுத்தடுத்து பட்டறைகளை ஆரம்பிச்சாங்க. ஆனா, இதை அவ்வளவு எளிதா மத்தவங்க ஜீரணிக்கலை. இரவு நேரத்தில் பட்டறையில கல் எறிவாங்க. நாலைஞ்சு பேர் குடிச்சுட்டு வந்து, `நாளை காலைக்குள்ள ஊரைக் காலி பண்ணலைனா, வெட்டிடுவோம்’னு மிரட்டுவாங்க. எல்லாத்தையும் புறம் தள்ளிட்டு எங்கப் பாதையில நாங்க போய்க்கிட்டே இருந்தோம்…”

    நாத்திகராக இருந்தாலும், நாத்திகம் பேசியே விற்பனை செய்தாலும், ராஜனுக்கு விற்பனை படிப்படியாகப் பெருகியதுதான் வியப்பு. தஞ்சைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ராஜனின் பட்டறைக்கும் வரத் தொடங்கினார்கள். ஏற்றுமதியையும் வியாபாரிகளுக்கு விட்டுத்தராமல் தானே செய்தார். நியாயமான விலை, அற்புதமான சிற்ப நேர்த்தி எனப் பல்வேறு தனித்தன்மைகள் இருந்ததால், உள்ளூர் ஆட்களும் ஆர்டர் கொடுத்தார்கள். வெகு சீக்கிரமாகவே ஒரு ஏக்கரில் பட்டறையை விரிவுபடுத்தி நல்ல முறையில் வணிகம் செய்து வருகிறார்.

    இவரது உழைப்பையும், ஆர்வத்தையும், சிற்பக்கலையை பட்டியல் சாதி மக்களிடமும் கொண்டுபோய் சேர்த்ததையும் பாராட்டி இவரை வல்லமையாளராக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171225 - Tiruppavai 10 -Tulasipriyam watercolour 24x32 lr (Discussion on TriguNas - Ravana, Kumbhakarna and Vibheeshana) Andal pleads with the guru to open the doors to impart knowledge (the mouth, the mind and the hearts.)
    171225 – Tiruppavai 10 -Tulasipriyam watercolour 24×32 lr (Discussion on TriguNas – Ravana, Kumbhakarna and Vibheeshana) Andal pleads with the guru to open the doors to impart knowledge (the mouth, the mind and the hearts.)

    தீதண்டும் நேரத்தில் கோதண்டம் கொள்வோனை
    வா!தெண்ட னிட்டின்று வாழ்த்துவோம் -தூதன்தன்
    தோளிருந்து ராவணணை துண்டித்த ராகவனின்
    தாளிரெண்டைக் கொள்வோம் துணை….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி (141)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    26034585_1516492711738256_1208685319_n
    ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (30.12.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 140-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    fishing net

    மீன்வலை தைக்கும் மீனவ நண்பர்களைக் கலைநயத்துடன் படம்பிடித்து வந்திருக்கின்றார் திரு. லோகேஸ். இப்படத்தைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் நன்றியுடையேன்!

    தரைமேல் பிறந்து தண்ணீரில் பிழைக்கும் பரதவர் (மீனவர்) வாழ்க்கை நிலையில்லாததாகவும் இரங்கத்தக்கதாகவுமே இருந்திருக்கின்றது அன்று. நெய்தல் நிலத்தின் உரிப்பொருளாகத் தமிழ் இரங்கலைத் தேர்ந்தெடுத்ததும் அக்காரணம் பற்றித்தான். ஆனால் தொழில்நுட்பமும் அறிவியலும் போட்டிபோட்டு வளர்ந்திருக்கும் இன்றைய சூழலிலும் அந்த அவலநிலை தொடர்வது நெஞ்சில் வேதனையைப் படரச்செய்கின்றது.

    வலையொடு பின்னிப் பிணைந்திருக்கும் பரதவர் வாழ்வு குறித்துப் பாடக் காத்திருக்கும் கவிஞர்களை வரவேற்போம்!

    *****

    அலையோடு விளையாடி வலையோடு போராடும் வலைஞரின் வாழ்வைக் கலப்படமின்றி படம்பிடிக்கும் ஒரு கவிதை, தமிழக மீனவன் இந்திய மீனவனாய் அடையாளப்படுத்தப்படும் நாளே அவன் களையிழந்த வாழ்வின் களையெடுத்து, அவனையும் ஒரு மனிதனாய்த் தலையெடுக்க வைக்கும்நாள் எனும் எண்ணத்தை வெளிப்படுத்தும் மற்றொரு கவிதை என இரு அழகிய கவிதைகளைப் படைத்தளித்திருக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.  

    வலைஞரின் வாழ்க்கை
    மீன்பிடி வலைதன்னில் முந்தினத்தில் ஏற்பட்ட

    முக்கியப் பழுதுகளை முத்தாய்ப்பாய் சரிசெய்து
    பாய்மரச்சீலை விரித்து பக்குவமாய் வடம்பிடித்து
    கடலோடு உறவாடி அலையோடு விளையாடி 
    காற்றோடு கவிபாடி வலையோடு போராடி
    கட்டுமரத் தொட்டிலையே கடலலைகள் தாலாட்ட…

    நெகிழியிழைப் படகோடு நெஞ்சமெல்லாம் நிறைவோடு
    தோணிகளின் துணையோடு தோழர்களின் படையோடு
    வள்ளங்கள் மரக்கலங்கள் விசைப்படகின் இசைவுடனே 
    எங்கும் நிறைந்திருக்கும் எல்லையில்லாப் பெருங்கடலில் சங்கும் முத்துச்சிப்பியும் அரியபலவும் மீனுங்கொணர
    வலைஞர் விரைந்திடுவர் வான்குலவும் கடலாட…

    ஆழ்கடலில் வலைவிரித்து அகப்பட்ட மீனையெல்லாம்
    அயர்ச்சியென்றும் இல்லாமல் முயற்சிக்கிழுக்கு நேராமல்
    மழையென்றும் வெயிலென்றும் புயலென்றும் பாராமல்
    முறையாகப் பாதுகாத்து முனைப்புடனே கரைசேர்த்து
    காத்திருக்கும் வணிகரின் கூடையெல்லாம் மீன்நிரம்ப – எதிர்
    பார்த்திருக்கும் மக்களின் பசிபோக்க முனைந்திடுவர்…

    இளைப்பாற வலையுலர்த்த உதவிற்ற கச்சத்தீவை
    இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அளித்ததனால்
    தமிழக மீனவர்கள் பரிதவித்து நிற்கின்றார்
    தரங்கெட்ட சிங்களனும் செய்நன்றி மறந்துவிட்டுத்
    தமிழனின் வலையறுத்துச் சிறைப்பிடித்து மகிழ்கின்றான் – இதைத்
    தட்டிக்கேட்க நாதியற்றுத் தமிழன்தன்னுயிரைக் கொடுக்கின்றான்…

    *****
    மீனவன்
    இன்று

    கடந்துவந்த பாதையின் கசப்பான நினைவுகளோடு
    மீன்பிடித் தடைக்காலம் நீங்குமுன்னே
    பழுதுப்பட்ட வலைகளைச் சரிசெய்தான்
    எதிர்வரும் பருவத்தை மனதிற்கொண்டு…

    அலை மோதும் கடலினிலே
    வலை வீசும் மீனவனின் – உயிருக்
    குலை வைக்கும் போராட்டம்
    மலை போல ஏராளம் – அதை
    சிலை போல தாங்கி – நிதம்
    நிலை குலையாது இருந்திடுவான்…

    […]

    அன்று
    காற்றழுத்தத் தாழ்வுநிலையின் சீற்றம் தாளாமல்
    சிதைவுற்ற வலையோடு மீனின்றிக் கரைசேர்ந்தான்…
    இழையோடும் சோகத்தால்
    களை இழந்து காணப்பட்டான்…

    நெகிழி இழை கொண்டு
    நேர்த்தியுடன் பின்னப் பட்ட
    பெரிய வலை எடுத்து
    புறப்பட்டான் ஆழ் கடலுக்கு…மீனோடு வரும்
    மணாளனை எதிர்நோக்கி
    மனையாள் காத்தி ருந்தாள்
    அன்று
    […]
    இனிவரும் காலங்களில்
    தமிழக மீனவன் சுடப்பட்டான்
    தமிழக மீனவன் சிறைப்பட்டான்
    என்று செய்திசொல்லும் நிலைமாறி
    இந்திய மீனவன் சுடப்பட்டான்
    இந்திய மீனவன் சிறைப்பட்டான்
    என்று சொல்லிடும் நிலைவேண்டும்…
    அப்போதேனும் கன்னடர்க்கும் காசுமீரிக்கும் 
    மத்திய அரசுக்கும் மளையாளிக்கும் – நெஞ்சில்
    சற்றேனும் ஈரம் பிறக்கும்….!

    *****

    ”வாழ்வாதாரமாகும் வலையே மீனவர்க்குக் கவலை எனும் சேதாரத்தையும் தருகின்றது. கவலையில்லா வாழ்வை மீனவர்க்கு வலை கொண்டுவருவது எந்நாளோ? என்று வினா எழுப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    (க)வலையா…

    வலை,
    வாழ்வாதாரமாகிறது
    மீனவர்களுக்கு..

    சிலநேரம் அது
    கவலையைக் கொண்டுவருகிறதே-
    கடலில் மீன்பிடிக்கச் சென்றால்..

    மீன் கிடைக்கவில்லை என்பது
    சிறு கவலை,
    மீனவனே கிடைக்கவில்லை என்பது
    மீளமுடியாக் கவலை..

    கவலையேயில்லா வாழ்வைக்
    கொண்டுவருமா வலை-
    காத்திருப்போம்…!

    *****

    மீன்களோடும் விண்மீன்களோடும் நடுக்கடலில் உறவாடி, மாதம்பாதி மண்ணிலும் மீதம்பாதித் தோணியிலும் வாழ்க்கையைக் கடத்தி விடியலைத் தேடும் மீனவ நண்பர்கள் வாழ்க்கையைப் பாங்காய்ப் படம்பிடித்திருக்கிறார் திருமிகு. ஹேமா வினோத்குமார்.

    விடியலை நோக்கி!!!

    கட்டுமரங்கட்டி
    கவனத்தோடு வலைபின்னிச்
    சொந்தங்களுக்குப்
    பிரியா விடையளித்து
    நடுக்கடல் நோக்கி…!!
    பகலெல்லாம் பாடுபட்டு
    இரவெல்லாம் கண்விழித்து
    மாதம்பாதி மண்ணிலும்
    மீதம்பாதித் தோணியிலும்
    அப்பா வருவார் என்று மகளும்
    ஐயா வருவார் என்று மகனும்
    ஆசையாய் மலர்சூடி
    அத்தான் வருவார் என்று என்னவளும்
    அன்புடன் தமையாளும்
    பிரார்த்தனையோடு பெற்றோரும்
    எனக்காக!!
    என் பாதச்சுவடுகளுக்காக!!
    வழியின் மேல் விழி வைத்து!!
    வழியின் மேல் விழி வைத்து…
    உப்புக்காற்றில் கரைந்து
    எம்மக்கள் நினைவுகளோடு
    கட்டுமரத்தில் அயர்ந்து
    வயிற்று பிழைப்பிற்காக
    ஆயிரம் ஆயிரம்
    மீன்களோடும் விண்மீன்களோடும்
    நடுக்கடலில்…!!
    காற்றோடு கவிபாடி
    வலையோடு விளையாடி
    சிற்றுயிர் கொய்து
    பாவஞ்சுமந்த மனதுடன்
    கரையை நோக்கிக்
    கட்டுமரத்தில் நான்!!
    வழிபுரளாமல்
    எல்லை தாண்டாமல்
    பெருங்கவனத்துடன்
    அலைகளோடு புரண்டு
    சுடுமணலில் கால்பதிக்க
    ஓடத்துடன் ஓடி
    இரண்டாஞ்சாமத்தில் கிழியோடு
    கட்டுமரத்தில்!!
    சின்னஞ்சிறு ஆசைகளை
    சுமந்து…!!!

    மீனவனாய்!!

    விடியலை நோக்கி!!

    *****

    அலை குதிரைகளில் சவாரி செய்யும் சமுத்திர ராசனின் செல்லப்பிள்ளைகளாம் மீனவ நண்பர்களின் வலையில் மீன் சிக்கினால் வீட்டில் உலை கொதிக்கும்; இல்லையேல் வயிற்றுத் தீயால் அவர் உடல்கொதிக்கும் என்று உணர்வுபூர்வமாய்க் கவி வடித்திருக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    கண்ணீர்க் கடல்:

    அலை குதிரைகளில் சவாரி செய்யும் மன்னர்கள்!
    சமுத்திர ராசனின் செல்லப் பிள்ளைகள்!
    ஆழ்கடல் பயணம் அனுதினம் போய் வரும்
    மீனவ நண்பர்கள்!
    உயிரைப் பணயம் வைத்து, மீன்களை நமக்குத்
    தரும் கர்ம வீரர்கள்!
    வலையில் மீன்கள் சிக்கினால் தான்!
    மீனவன் வீட்டில் உலை கொதிக்கும்!
    மீன் கிடைக்காத நாட்களிலே!
    பசிக் கொடுமையினால் உடல் கொதிக்கும்!
    கிழிந்த வலையில் மீன் சிக்காது!
    மீனவன் வாழ்வில் என்றும் மகிழ்விருக்காது!
    கடலருகில் வலை போட்டால் மீன் கிடைக்காது!
    ஆழ்கடல் சென்றாலோ உயிருக்கு
    உத்தரவாதம் இருக்காது!
    கடல்நீர் ஏன் உப்பென்று காரணம்
    இன்று தான் புரிந்தது!
    மீனவப் பெண்டிர் வடித்த கண்ணீர் தான்
    கடல் நீரை உப்பாய் மாற்றியது!!!
    கிழிந்த வலையைத் எளிதாய்த் தைத்து விடலாம்!
    தொலைந்த இவர்கள் வாழ்வை
    நாம் முயன்றால் தேடிக் கொடுத்து விடலாம்!

    *****

    ஆழிசூழ் உலகாம் நெய்தல் திணையின் பிள்ளைகள், புயலுக்கும் மழைக்கும் அந்நியரின் கொலைவெறிக்கும் ஆட்பட்டுக் கதறும் அவலத்தை உளம்தொடும் பாவாக்கியிருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    கடலோடியின் கதறல்..! 

    கடலால் சூழ்ந்திடும் மண்ணுலகம் இருப்பதாலே..
    ……….கடல்சார்ந்து வாழ்வதுதான் கடலோடியின் நிலை.!
    அடலேறுபோல உடலுறுதி கொண்டவரே யாயினும்..
    …….அலைநடுவே ஆபத்துடன் கழிப்பதேயம் வாழ்வு.!
    இடர்ப்படும் துன்பமும் தொல்லையுமெம்
    உடன்பிறப்பு..
    ……….இல்வாழ்வில் இன்பமென்றால்
    யாருக்கும் தெரியாது.!
    கடலுக்கும் கரைக்குமுள்ள
    தூரத்தாலே எங்களது..
    ……….உடலுக்கும்
    உயிருக்குமொரு உத்திர வாதமில்லை.!.

    .
    வலைவீசி மீனுக்காகக் காத்திருக்கும் வேளையில்..
    …….வஞ்சகர்கள் வீசும் வலையிலும்யாம்
    வீழ்வதுண்டு.!
    அலைமேலேறித் தாவும்
    பெருந்திமிங்கிலம் போல்..
    ……….ஆயிரமைல்
    வேகத்தில் வருமன்னியப் படையது.!
    வலையறுக்கும்!
    படகுடைக்கும்! பகை விலக்கியாம்..
    …….தொலைதூரம் சென்றால்?எல்லை
    தாண்டினாயென..
    கொலையும் செய்வார்! கொடும்
    பாவியரப்போது..
    ……….அலைதான் எங்களுக்கெலாம்
    ஆறுதல் சொல்லும்.!.

    .
    காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி?எனக்..
    …….கருத்துக் கவிபுனைந்தான் கவியரசு
    கண்ணதாசன்.!
    காற்றுடனும் அலையுடனும் போராடி
    உறவாடும்..
    ……….கண்ணீரும் கடல்நீரும்
    வற்றாதென்பது இயற்கை.!
    காற்றழுத்தம் வரும்
    போதலையின் சீற்றத்தால்..
    ……….காய்ந்த கருவாடு
    போலநாளும் கரைசேருவோம்.!
    மாற்றுவழி
    வாழவொரு வழியில்லை ஆற்றாதழுத..
    …….மனதைக் கல்லாக்கி தேற்றியும்யாம் வாழுகிறோம்.! 

    *****

    சமீபத்தில் ’ஒக்கி’ புயலில் சிக்கி, விக்கிநிற்கும் குமரி மாவட்ட மீனவரின் அவல வாழ்வியல் நிகழ்வுகள் கவிஞர்கள் அனைவரின் கவிதைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கக் காண்கிறேன். காலத்துக்கேற்ற வகையில் கவிவடித்திருக்கும் உங்களுக்கு என் உளங்கனிந்த பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    வலைப்பதிவு

    தண்ணீரில் நித்தமும் நீந்திச் செல்லும் என்னால்
    கண்ணீரில் நிற்க முடியாது தத்தளிக்கிறேன்

    பெற்ற மகனையும் கட்டிய கணவனையும்
    பேரலை வந்து அள்ளிச்சென்றதெனக் கேட்டு
    பேரதிர்ச்சியில் கதறி அழும் பந்தங்களின் கண்ணீரில்

    அப்பா எப்போது வருவார்; முத்தம் தருவார்;
    அள்ளி அணைத்து அழகிய புத்தாடை வாங்கித் தருவார் என
    ஆயிரம் கனவுகளுடன் ஏங்கிக் கிடக்கும்
    அல்லி மலர்களின் கண்ணீரில் –

    தத்தளிக்கிறேன்.. தவிக்கிறேன்..
    கரைபுரண்டோடும் வெள்ளத்தில் நீந்தி மகிழும் என்னால்
    கவலையில் ஊற்றெடுக்கும் இக் கண்ணீரில் நொடி கூட நிற்க முடியவில்லை..

    நானே வருகிறேன் தலைவா.. எனை நம்பி வாழ்வை நடத்தும் என் தலைவா..
    காலங்காலமாக உனக்காய் மீன்களை பிடித்துத் தரும் என்னால்,
    காப்பாற்ற ஆளில்லாமல் பரிதவிக்கும் உனை
    காக்க முடியாதென்று நினைத்தாயோ?!
    எவரும் வேண்டாம் என் வேந்தனே..
    இதோ நான் வருகிறேன்..
    உனைக் காப்பாற்றிக் கரை சேர்க்க..
    உற்றவரிடம் உனைக்கொண்டு சேர்க்க…!

    கடலன்னை புயலாய்ச் சீற்றங்கொண்டால் தன் பிள்ளைகளென்றும் பாராமல் பரதவரையும் பந்தாடிவிடுகின்றாள். அவளின் அடாத செயல்கண்டு துடிதுடித்து நிற்கும் பரதவர் வடிக்கும் கண்ணீர், உயிரற்ற மீன்வலையையும் உயிர்கொண்டு உதவச் செய்திடும் ஆற்றலுடையது எனும் புதிய சிந்தனையைத் தன் பாட்டில் பதியமிட்டிருக்கும் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.  

    Share
  • மீட்பர் இயேசு

     

    images (2)
    °°°°°°°°°°°°°°°°°°

    காட்சிக் கினிய கண்கவர் அழகொடு
    மாட்சி பொருந்திய வல்லமை யுடைய
    தாட்சி யோடு வானோர் பணிய
    மாட்டுத் தொழுவத்தில் ஏசு பிறந்தார்!

    ஞானம் கொண்ட மரியாள் மைந்தன்
    வானத் தளவு கருணை கொண்டு
    தேனினை யொத்தநல் கருத்து களோடு
    போதனை செய்து காலம் கழித்தார்!

    பன்னிரு சீடர் பக்கத்தில் இருக்க
    பரிவுள்ளம் கொண்டு மானிட குலத்தின்
    பாவச் செயல்களைப் போக்கி மீட்டு
    பரிசுத்தம் அடைய வழிவகை செய்தார்!

    போதனை விரும்பா உரோம அரசு
    யூத மதத் தலைவரொடு சேர்ந்து
    யூதாசையணுகி முப்பது வெள்ளி கொடுத்து
    ஏசுவைக் கொல்லத் திட்டம் தீட்டினர்!

    காசுக் காசைப் பட்டு யூதாசு – ஏசுவைக்
    காட்டிக் கொடுத்து பாவம் செய்தான்!
    குற்ற மில்லா இறைவனின் தூதனை
    கொடிய சிலுவையிலறைந்து கொன்றனர் பாவிகள்!

    சிலுவையில் மரித்துப் பின்மூன்றாம் நாளில் – தன்
    சீடர்கள் முன்பு உயிர்த்து எழுந்து
    காட்சி தந்து பின்னர் மறைந்தார்! – பல
    கோடி மக்களின் உள்ளத் துறைந்தார்!!

    – ஆ. செந்தில் குமார்.

    Share
  • Yoga, India’s Gift to the World!

    -DR.C.N.VIJAYAKUMARI

    The International Yoga Day on June 21 is a reminder to the whole world of the vital role Yoga, if practiced daily, can play in an individual’s, and a nation’s life. A voluntary discipline, tailored to an individual’s needs, Yoga aims at the total growth – physical, mental, intellectual and spiritual – of a person.

    As the opening prayer above, a salutation to Sage Pathanjali who compiled the Yoga Sutra, indicates Yoga helps remove the impurities from a practitioner’s mind (thoughts), speech (words) and body (deeds). The daily practice of Yoga helps remove the internal and external impurities and bring in an order, balance and calm in an individual practitioner.

    As Lord Krishna told Arjuna in the Bhagavath Geeta, Yoga is dexterity, balance and coolness combined. Rife with tension, anxieties and lifestyle diseases, living today has become a terrible rat race. A peaceful, happy and contented existence has become almost a thing of the past. It’s here Yoga comes to our rescue.

    Our forefathers, over centuries, have figured out the unique relation between nature and man and have thought up a very simple system of physical, mental and spiritual discipline which we call Yoga today. Yoga aims at overall ‘swasthya,’ disease-free health of a practitioner. In 196 sutras (aphorisms), Sage Pathanjali’s Yoga Sutra, guides us through a series of physical, mental and spiritual practices that has mainly three parts, namely, pranayama, asanas and meditation. Breath is the bridge between our body and mind. Our entire life is conceived and planned first at the mental level. Body just executes the directive from the mind.

    Our forefathers knew this long time ago that the human body is but only an aide to the mind. Everything in our life happens first at the mental level. Without the mind, body is helpless. This awareness is central to the entire Yoga discipline. In that sense, Yoga is not just a physical exercise alone. It’s physical, mental, intellectual and spiritual. If practiced daily, the pranayamaasana and dhyana, will put the practitioner onto the right path of Swasthya. The practitioner has to take care of his/her food and rest too. He/she may not indulge in too much of either.

    So, our forefathers had thought up a perfect system that guaranteed our physical, mental, intellectual and spiritual growth. A daily yoga practitioner is ready to tackle any adversity. Nothing scares him/her. Yea, he/she will always be cool and active. And, most importantly, a daily Yoga practitioner will always be contented. He/she will have no interest in the daily rat race going on around.

    Yoga is especially a great health tool to our young ones. Living in often volatile and violent environments, many of our young ones are crying for help. The help these young ones need first and foremost is awareness about themselves, their surroundings, their potentialities and possibilities. A young person, practicing Yoga daily, will be completely at ease with his surroundings because nothing scares him/her. He/she can always find a solution through cool and bold thinking. He/she is aware of himself/herself. A daily Yoga/pranayama practitioner slowly gets steadiness of mind by restraining respiration and asana practices. When one learns to control breathing, one learns to control one’s mind, and through the mind, one’s body. It’s that simple. Daily pranayama and Yoga helps keep one’s youthfulness even when one hits 70.

    Yoga/Pranayama practitioners must be disciplined in their eating, sleeping and recreational activities, too. They must eat right, sleep/rest right and play right. Too much of any of these can cut their achievements from the daily Yoga/Pranayama/dhyana practices. As the United Nation’s World Health Organization says overeating is more dangerous than starvation.

    Remember what Lord Krishna told Arjuna in the Bhagavad Geetha:
    yuktahara-viharasya
    yukta-cestasya karmasu
    yukta-svapnavabodhasya
    yogo bhavati duhkha-ha

    At a time, harmful fast-foods are the “in thing” for the youth; satvik vegetarian food can keep a person healthier in the long run. Satvik food also helps one improve one’s emotional health. Clean eating guarantees a clean body and a clearer mind.

    Mahatma Gandhi and Sri Aurobindo and several others were well known for promoting the daily practice of Yoga and satvik lifestyle. Who can forget that famous picture of a smiling Gandhiji, sitting in Gomukha Asana and turning the charka wheel. Similarly there are several asanas, Padma Asana, for instance, one can use in their daily life, whether they are watching a television or doing some household chores. The famous Yoga Vasishta contains Sage Vasishta’s advice and counseling to Lord Rama when he was young. Bhagavad Geetha, too, is a counseling treatise containing advices Lord Krishna gave to his dear disciple Arjuna.

    One needs hardly an hour for the daily practice of Yoga/pranayama/dhyana. That is not too much for one’s self-improvement and a contented, happy living. An individual’s overall growth is what daily Yoga and pranayama practices, one of the greatest contributions from India to the world. Air, health and contentment have no caste or creed or religion. Yoga is secular in the sense it helps all people living anywhere in the world. A healthy individual contributes to a healthy family, society, nation and a world. Everybody, irrespective of religion and other man-made divisions benefit from practicing Yoga and Pranayama. Who doesn’t want peace and happiness in this world?

    Ref:

    1. Bhagavad Geetha
    2. Yoga Sutra by Sage Patanjali
    3. Hatha yoga Pradipika (trans. by Pancham Sinh, 1914)
    4. Yoga Vasistha by Sage Vasishta 

    *****

    The Writer is an:
    ASSISTANT PROFESSOR
    DEPARTMENT OF SANSKRIT
    UNIVERSITY OF KERALA
    KARYAVATTOM.P.O
    PIN 695581
    Email.vijayaisavasyam@gmail.com

    Share
  • ஓயாத கள ஆய்வில் விளைந்த நல்முத்துக்களான ஆவணத் தொகுப்புகள்!

    பவள சங்கரி

    IMG_20171221_125231332

    rasu

    கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, தனிப்பாடல், இலக்கியம் ஆகிய அனைத்துத் தளங்களிலும் ஓய்வில்லாமல் தொடர்ந்து இயங்கிவரும் கல்வெட்டறிஞர் புலவர் இராசு அவர்களின் தமிழ்ப்பணி பாராட்டுதலுக்குரியது. முனைவர் புலவர் செ. இராசு அவர்கள், தென்னிந்தியத் திருச்சபை சமுதாய உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை முன்னாள் ஆய்வாளரும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டு – தொல்லியல் துறை முன்னாள் தலைவரும், தமிழ்நாடு அரசின் முதல் உ.வே.சா.விருது (2012) பெற்றவரும், கொங்கு ஆய்வு மைய அமைப்பாளருமாகிய இவர் இதுவரை எழுதியும், தொகுத்தும் பதிப்பித்த நூல்கள் 150ம் மிகச்சிறந்த, பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படக்கூடியவை.

    சமீபத்தில் இவருடைய , ‘தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள்’ என்ற 150வது நூல் ஈரோடு கொங்கு ஆய்வு மையம் மூலமாக வெளியிடப்பட்டது. ஈரோடு சக்தி மசாலா நிறுவனத்தார் மூலமாக இந்நூல் மிகச்சிறப்பான வடிவமைப்புடன், உயர்ரகத் தாள்களுடன் ஆவணப்படங்களுடன், வெளியிடப்பட்டுள்ளது. தொல்பொருள் சிறப்பும், வரலாற்றுப் பெருமையும், இலக்கியப் புகழ், தொழில் வளர்ச்சியில் மாநிலத்திலேயே இரண்டாம் இடம், ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்கும் ஈரோடு மாநகரம் குறித்து, கொங்கு நாட்டிலேயே பிறந்து, கொங்கு நாட்டிலேயே 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் எனக்கும் பல தகவல்கள் புதுமையாகவே உள்ளன. 112 பகுதிகளையும், 136 பக்கங்களையும் கொண்ட இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் கொங்கு நாட்டின் வியப்புக்குரிய பெருமைகளைச் சுருக்கமாக அதே சமயம் மிகச்சுவையாக வழங்கப்பட்டுள்ளன.

    IMG_20171225_000234707_HDR
    புலவர் இராசு அவர்கள் வரலாற்றுத் துறையில் தமது ஆர்வமும், அது தொடர்பான அவர்தம் பணிகளையும், தாம் கடந்து வந்த பாதைகள் குறித்தும் மிக ஆர்வமாக எடுத்துரைத்தார். 1967 ஆம் ஆண்டில் தாம் முதன் முதலில் வெளியிட்ட, ‘எங்கள் பவானி’ எனும் நூல் பற்றிய தமது அனுபவங்களை அவர் கூறியது மிகச்சுவாரசியமாக இருந்தது. கோவை கைத்தறி அச்சகத்தார் வெளியிட்டுள்ள இந்நூலை பதிப்பிப்பதற்கு அன்று அவர் பட்ட துயரங்களையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியது, இன்றைய காலங்களுக்கும் அது அத்துணை பொருந்தும் என்பதை எழுத்தாளர்கள் உணர்வார்கள். ஆம், பள்ளி ஆசிரியராகப் பணியில் இருந்துகொண்டு குடும்பத்தையும், தமது தமிழ் ஆய்வுப் பணிகளையும் இரு கண்களாகப் போற்றியவருக்கு அன்று, திருநணா எனும் பவானி சங்கமேசுவரர் ஆலயத்தின் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவின்போது தமது முதல் நூலான, ‘எங்கள் பவானி’ என்ற நூலை வெளியிட பேராவல் கொண்டவர் அதற்குரிய பணம் கையில் இல்லாமல் பெரும் சிரமத்திற்கிடையே நண்பர்களிடம் கடனாகப் பெற்று அந்நூலை வெளியிட்டுள்ளார். 3000 பிரதிகள் ரூ 300/ க்கு, அதாவது ஒரு பிரதி 10 பைசாவிற்கு அச்சிடப்பட்டுள்ளது. திருப்பேரூர் அருள்திரு சாந்தலிங்க அடிகளார் அவர்களுக்குக் காணிக்கையாகப் படைக்கப்பட்டிருக்கும் இந்நூலை விற்பது அத்துணை எளிதான காரியமல்ல என்று நண்பர்களும், குடும்பத்தினரும் அச்சமூட்டியபோதும் தன்னம்பிக்கையுடன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, சுப்பிரமணியம் என்ற ஜவுளி விற்பனையாளர் நண்பர் தாம் விற்றுத் தருவதாக வாக்களித்து சொன்னபடியே 2,800 பிரதிகளை விற்றும் கொடுத்திருக்கிறார். ஒரு நூல் 50 பைசாக்கள் என்ற விலையில் 2,800 பிரதிகள் விற்பனையானதில் அமோகமாக இலாபமும் கிடைத்த மகிழ்ச்சியில், 200 ரூயாய் தருவதாக ஒப்புக்கொண்டிருந்த விற்பனையாளர் நண்பருக்கும் மனமுவந்து ரூ.450 கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் வந்திருக்கிறார். இந்த உற்சாகம் கொடுத்த நம்பிக்கையில் அவருடைய தமிழாய்வுப் பணிகளும், கல்வெட்டுகள், செப்பேடுகள் என்ற களப்பணிகளும் தொடர்ந்து அனைத்தும் அற்புதமான ஆவணங்களாக நூல் வடிவம் பெற்று தற்போது 150 என்ற சிகரத்தைத் தொட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது! ஆய்வுப் பணிகளுக்கான தகவல் வேண்டுவோருக்குத் தேவையான தகவல்கள் அனைத்தும் இவர்தம் நூல்களில் கொட்டிக்கிடப்பதோடு, நேரில் சென்று தகவல் பெறுவோருக்கும் தம் முதுமையையோ, இயலாமையையோ எதையும் காரணம் காட்டாமல் இயன்ற அளவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்கி வருவது இவருடைய தனிச்சிறப்பு. ஐயா அவர்களின் நினைவாற்றல் மிகவும் வியப்புக்குரியது.

    எங்கள் பவானி

    அன்பு நண்பர் தமிழன்பன் என்கிற புலவர் ந. செகதீசன் புலவர் செ.இராசு அவர்களுக்கு வழங்கிய அருமையான பாராட்டுரையுடன் துவங்குகிறது இந்நூல்.

    வாகை பெறுக

    1. கல்வெட்டுக் காதலர்நற் பழைய ஏட்டில்
    கண்செலுத்தும் நுண்ணோக்கர் எங்கள் நண்பர்
    செல்லரிய இடத்திற்கும் செல்ல ரிக்கும்
    இடத்திற்கும் சென்றுசென்றே ஆய்வு செய்யும்
    வல்லமைகை வரப்பெற்ற இராசு செய்த
    வரலாற்றுத் தேன்படைப்பை, கொங்கு நாட்டு
    நல்லநணாச் சீர்காட்டும் நூல்வி ளக்கை
    நான்கண்டேன் நனிபுதிய செய்தி கண்டேன்!

    2. உழைப்பாலே கனிந்திட்ட பலாப்ப ழத்தில்
    உரித்தெடுத்த சுளைகளைத்தேன் குடத்தில் போட்டே
    அழைத்தெடுத்துத் தருகின்றார் கனிவாய் நண்பர்!
    அவராலே வருநாளில் இனியும் உள்ளே
    நுழைந்திருக்கும் வரலாற்றுப் புதையல் யாவும்
    நுட்பமாக வெளிப்படுதல் உண்மை! இன்னும்
    பிழைதிருத்தார் திருத்துவணம் சான்று காட்டப்
    பிழைத்திருப்பார் நெடுநாட்கள் எங்கள் நண்பர்!

    3. மறைப்புக்கள் மழுப்பல்கள் இன்றி யாரும்
    மறுக்கவொணா முறையினிலே நமது நாட்டின்
    கறைபடியாப் பண்பாட்டை, பழகுசி றப்பைக்
    காட்டுதற்கு நூல்வேண்டும்! கிடைத்தி டாமல்
    சிறைபட்டுக் கிடக்கின்றது ஏடு கள்சீர்ச்
    செப்பேடு கல்வெட்டு காண நாளும்
    நிறைமுயற்சி கொண்டிருக்கும் எங்கள் நண்பர்
    நெஞ்சார வாழ்த்துகிறேன் பெறுக வாகை!

    சுவடியிலிருந்த இன்தமிழ் படைப்புகளை வாசிக்க வகையறியாதவர்களுக்காக எளிமையாக வாசிக்கும் வகையில் அதனை எடுத்துக்கொடுத்துதவியர்களில் ‘ஐயா வித்துவான் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் என்பாரும் ஒருவர். கொங்கு மண்டல சதகப்பாடல் இவர் மூலம் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது, இந்நூலிலும் இடம் பெற்றுள்ளது. 35 பக்கங்களேக்கொண்ட மிகச்சிறிய அளவிலான கையேடு என்றாலும் பவானி பற்றிய பல அரிய வரலாற்றுத் தகவல்களைத் தாங்கியுள்ள நூல் இது என்பதும் ஒரே மூச்சில் வாசிக்கத்தூண்டும் அருமையான நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக,

    “இத்திருப்பணி ஒரு ‘மாமாங்கம்’ (சுமார் 12 ஆண்டுகள்) நடைபெற்றிருக்கின்றது. இது நீண்ட காலம் என்று கூறுவதற்கில்லை. அரிகேசரி பராக்கிரம பாண்டியன் கட்டிய தென்காசி விசுவநாதர் கோயில் கி.பி.15 ஆம் நூற்றாண்டிலேயே 17 ஆண்டுகள் திருப்பணி நடைபெற்றிருக்கின்றது. அரசன் திருப்பணியே 17 ஆண்டுகள்; இவ்வடியார் திருப்பணி 12 ஆண்டுகளில் முடிந்தது விரைவெனவே சொல்லத் தோன்றுகின்றது.

    இத்திருப்பணியில் நாள்தோறும் பாண்டிய நாட்டுக் கல் வேலைக்காரர்கள் 140 பேர் சிற்ப சாத்திரத்தில் தேர்ச்சியும் புலமையும் கொண்ட ஒரு ஸ்தபதியின் கீழ் வேலை செய்து வந்தார்கள். சிற்பக் கலையில் கைதேர்ந்த சிற்பிகள் உயரிய வேலைப்பாடுகளுடன் கூடிய அமர சிற்பங்களைப் பெரிய கல் தூண்களில் சிற்றுளியால் செதுக்கியிருக்கிறார்கள். உயிரற்ற கற்பாறைகளிலும் நவரசங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். மெழுகைக் குடைவதுபோல் பாறையைக் குடைந்து, சிந்திக்கவும் முடியாத வகையில் சிற்றுளிகளை ஏவி நல்ல உயிர்ச் சிற்பங்களை வடித்திருக்கிறார்கள். தங்கள் கைத்திறமையையும் மன ஆற்றலையும் காண்பித்துக் கல்லிலே கனவுகளை மெய்ப்பித்திருக்கிறார்கள். இச்சிற்பங்களை எதிர்காலத்தில் சிற்பக்கலைக்கு மதிப்பும், கலையன்பர்களுக்கு மகிழ்ச்சியும் அளிக்கும் முறையில் செதுக்கியிருக்கிறார்கள். இப்படி பலப்பல அரிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.

    திருநணா அமைந்துள்ள ‘கொங்கு நாடு’ பற்றிய விளக்கமும், அதன் பெருமையும் அழகுற எடுத்தியம்பப்பட்டுள்ளது. சங்க காலத்தே தனித்து விளங்கிய நாடு கொங்கு நாடு என்பதற்குப் பல ஆதாரங்களையும் காட்டியுள்ளார். பவானியாற்றின் பழம்பெயர் ‘வானி’ என்பதாம். இந்த வானி ஆற்றின் பெயரே பவானி என்று ஊரின் பெயரானது என்கிறார். பவானியாற்றின் பழம்பெயர், ‘பூவானியாறு’ என்று புலவர் அ.மு. குழந்தை அவர்களின் கருத்து என்று குறிப்பிடுகிறார்.

    மேற்குத் தொடர்ச்சி மலையில் பாலக்காட்டுக்குத் தெற்கே தோன்றும் ஆறுகள் ‘பொருநை’ என்ற பொதுப்பெயரைப் பெற்று விளங்குவதும், பாலக்காட்டுக்கு வடக்கே தோன்றும் ஆறுகள் ‘வானி’ என்ற பொதுப்பெயரைப் பெற்று விளங்குவதும் வரலாறு காட்டும் உண்மை என்கிறார்.

    சத்தியமங்கலத்தின் மேற்கே 4ஆவது கல்லில் பவானியாற்றைத் தடுத்து அணை கட்டினால் தாராபுரம், பல்லடம், அவிநாசி தாலூக்காக்களில் 50,000 ஏக்கர்கள் பாசனவசதி பெறும் என்று 1828இல் மான்ட்கோமரி கூறியதையும், 1834இல் பவானியாற்றில் நீலகிரி மாவட்டத்தில் அணை கட்ட வேண்டுமென்று சர் ஆர்தர் காட்டன் யோசனை கூறியதையும், மீடு பென்னிகுக் அட்ரி குழுவினர் பவானியாற்றில் பல தடுப்புக்கள் (கலிங்குகள்) ஏற்படுத்திப் பாசனத்தைப் பெருக்க வேண்டும் என்று 1878 ஆம் ஆண்டு பரிந்துரை செய்தனர் என்றும் குறிப்பிடுகிறார்.
    ஊராட்சிக்கோட்டை உயர்மலை, காளிங்கராயன் அணை வரலாற்றுக் குறிப்புகளோடு நூல் நிறைவு பெறுகின்றது.

    1967ஆம் ஆண்டில் புலவர் இராசு அவர்கள் வெளியிட்ட ‘எங்கள் பவானி’ என்ற முதல் நூலுக்கும் 2017 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள, ‘தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள்’ என்ற 150வது நூலுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. உயர் ரக காகிதம் முதல் ஆவணப்படங்கள், கால மாற்றத்தின் ஊடான வரலாற்றுத் தகவல்கள், எழுத்துரு வரை பல்வேறு மாற்றங்கள் இருந்தாலும் மிகச்சுருக்கமாக அதே சமயம் தெளிவான, முக்கியமான தகவல்களுடன் சிறப்பாக அமைந்துள்ள நூல் என்பதற்குச் சான்றாக, ஈரோடு மாவட்ட ஆட்சியர், முனைவர் எஸ்.பிரபாகர் இ.ஆ.ப., அவர்கள் தம் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ள,

    “வரலாறு படிக்காமல் வரலாறு படைக்க முடியாது
    ஆனால் இந்நூலே
    வரலாறாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை”

    என்று குறிப்பிட்டிருப்பதைக் கூறலாம்! பல ஆண்டுகளாக ஈரோடு பெற்று வந்த சமூக பொருளாதார வளர்ச்சியை அடிப்படைக் கட்டமைப்புகளில் பெற்ற மாற்றங்களை விளக்கும் வரலாற்று ஆவணமாய் விளங்கும் நூல் என்ற கருத்தும் ஏற்புடையது. பேரழிவிற்கு உள்ளாகி 400 இடிந்த வீடுகளை மட்டுமே ஊராகக் கொண்டிருந்த ஈரோடு நகரின் இன்றைய வளர்ச்சியின் மூலமாக ஒரு மாவட்டத்திற்கே தலைநகராக நிமிர்ந்து நிற்பதையும் வியப்புடன் குறிப்பிட்டுள்ளார்.
    சக்தி மசாலா நிறுவனத்தின் நிறுவனர்கள், முனைவர் பி.சி.துரைசாமி, முனைவர் சாந்தி துரைசாமி, தங்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளதற்கிணங்க நமது தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் நமது ஈரோடை மாநகருக்கு நான்கு முறைகள் வந்து சென்றுள்ளார்கள் என்பதும், ஈரோடு இலக்கியச் சங்கம் என்ற சங்கத்தைத் துவக்கியவர் எச்.ஏ.பாப்லி என்ற ஆங்கிலேயர்தான் என்பது போன்ற அரிய தகவல்களைத் தொகுத்துக்கொடுத்துள்ள அருமையான நூல் என்பதையும் அறியமுடிகிறது. கொங்கு நாட்டின் அடையாளங்களாக இருப்பது மஞ்சள் விளைச்சலும், கைத்தறியும், விசைத்தறியும் கூடிய ஜவுளித்துறையும்தான்.

    1792 ஆம் ஆண்டில் 3000 வீடுகளுடன் முக்கிய வணிக நகரமாக விளங்கிய ஈரோடு பெரும் அழிவைச் சந்தித்து பாழடைந்த 400 இடிந்த கட்டிடங்களுடன் வெறிச்சோடியிருந்துள்ளது. தமிழகத்தைத் தாக்கப் படையுடன் வந்த அந்நியர்களின் மூன்று பெரும் வழிகளாக இருந்தது இம்மாவட்டத்தின் வடக்கு, மேற்கு எல்லைகளிலேயே உள்ளன என்கிறார்.

    கால்நடைச் செல்வங்கள், நீர் வளங்கள், நில வளங்கள் என செழிப்படைந்திருந்த காரணத்தால் இரட்டரும், கங்கரும், சேரரும், சோழரும், பாண்டியரும், போசளரும், விசயநகராரும், உம்மத்தூர்த் தலைவர்களும், மதுரை நாயக்கர்களும், மைசூர் உடையாரும், ஐதரும், திப்புவும், கிழக்கிந்தியக் கம்பெனியாரும் அதிகாரம் செலுத்த போட்டிப் போட்டுக்கொண்டிருந்த வரலாறையும் குறிப்பிட்டுள்ளார். அணுகுண்டு வெடிப்பிற்குப் பிறகு ஜப்பான் பெற்ற எழுச்சிக்கு நிகராக ஈரோடு மாநகரின் எழுச்சியும் கடுமையான உழைப்பிற்கு ஆதாரமாக உள்ளதையும் எடுத்துக்காட்டுகிறார்.

    ஈரோடு மாநகரின் சிறப்புகளாக 112 முக்கியமானச் செய்திகளை 112 பகுதிகளில் சுருக்கமாகவும் அதே சமயம் மிகச்சுவையாகவும், அழகு தமிழ் நடையில் பழமையான சித்திரங்களையும் ஆதாரமாக இணைத்து வடிவமைத்துள்ள பாங்கு வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமன்றி மாணவர்கள், சாமான்ய மக்கள் என அனைவரையும் ஒருசேரக் கவரக்கூடியதாக உள்ளது.

    குறிப்பாக, ஈரோடு என்ற ஊரின் பெயரின் ஆங்கில உச்சரிப்பில் பல வகையிலும் மாற்றம் பெற்று வந்தாலும் இன்றும் தவறாகவே எழுதப்படுவதைக் குறிப்பிடுகிறார். சரியான உச்சரிப்புடன் எழுதியவர், 7.8.11.1800 அன்று ஃபிரான்ஸ் புக்கானன் மட்டும்தான் என்கிறார். இவர் ERODU என்று சரியாக எழுதினாராம். தாமஸ் மன்றோ தமது குறிப்பில் HERROAD என்றும், கம்பெனி வரைபடத்தில் EROAD என்றும், மக்கென்சி ஆவணத்தில் IRODU என்றும், தற்போது ERODE என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. ERODU என்ற சரியான உச்சரிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

    கி.பி.1800 இல் ஈரோட்டின் நிலை, ஈரோடு மாவட்டம் ஆனது, மாவட்டம் ஆகும் முன்பே மாவட்ட நிறுவனங்கள் தொடங்கப்பட்டவை, மூக்கறுப்புப் போர் போன்ற ஈரோட்டுப் போர்கள், தொல்பழங்காலச் சின்னங்களான முதுமக்கள் தாழிகள், நடுகற்கள், காணக்கிடைக்காத கழுமரம், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஆலயங்களின் புராதனச் சிலைகள், பண்டைய மகளிர் பெருமைகள், சாதனைகள், அகத்தியர் ஈரோடு வருகை, பழம்பெரும் ஆலயங்கள், தர்கா, நாய்க்கும் நடுகல், 17ஆம் நூற்றாண்டில் நாடகம், ஈரோட்டார் வெளியிட்ட இதழ்கள், காரைவாய்க்காலும் – கோணவாய்க்காலும், 13 ஆம் நூற்றாண்டுப் பாலங்கள், பெரியார், பேரறிஞர். அண்ணா, ஈசுவரன் ஏற்படுத்திய கீழ்பவானித் திட்டம், சுதந்திரப்போராட்ட வீரர்கள், போன்று பலப்பல சுவையானச் செய்திகளின் குவியலாக அமைந்ததிந்த நூல்!

    ஆங்கிலேயர் ஆட்சியில் நன்மைகள் பல நடந்துள்ளதையும் மறுக்க இயலாது என்பதையும் உறுதிப்படுத்தும் செய்தி இது. எச்.ஏ. பாப்லி என்ற ஆங்கிலேயர் ஈரோடு லண்டன் மிஷன் திருச்சபையில் பணியாற்றியவர். சிறந்த தமிழறிஞர். ‘ஈரோடு இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். பஞ்சகச்ச வேட்டி கட்டி கையில் சப்பளாக் கட்டையுடன் தமிழில் கதாக்காலட்சேபம் செய்வாராம். 1932 இல் திருக்குறள் அறத்துப்பாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ‘நவீனக்கல்வி’ என்ற இதழ் நடத்தினார். ஒரு முறை மேல்நாடு சென்று திரும்பியிருந்த தமிழர் ஒருவர், தம் பயண அனுபவம் குறித்து மேடையில் பேசும்போது, தனக்கு ஆங்கிலத்தில்தான் பேச முடியும், தமிழில் பேச இயலாது என்று கூறிவிட, பாப்லி அந்த உரையை அழகுத் தமிழில் மொழிபெயர்த்தாராம்!

    ஈரோடு மாநகரைப் பற்றியச் செய்திகள் ஆதியோடு அந்தமாக சுவையானச் சாரங்களாக வழங்கப்பட்டிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. ஈரோடு மண்ணின் பெருமை, மக்களின் பண்பாட்டு நலம், நிலத்தின் வளம், பண்டைய கலாச்சாரம் போன்றவற்றை அறிந்துகொள்ள விளைபவர்களும், வரலாற்று ஆய்வாளர்கள், ஆர்வலர்களும் அவசியம் பாதுகாக்க வேண்டிய அரிய பொக்கிசம் இந்நூல் என்றால் அது மிகையல்ல!

    136 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை : ரூ 130/

    புலவர் இராசு அவர்களின் அனைத்து நூல்களும் கிடைக்குமிடம்:

    கொங்கு ஆய்வு மையம்
    58/2, பாலக்காட்டுத் தோட்டம்
    புதிய ஆசிரியர் குடியிருப்பு வழி
    ஈரோடு – 638011
    தொ.பே. எண்கள்:
    0424 – 2262664
    95009 38384
    97900 38380

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -10

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருசாலக்ராமம்  (முக்திநாத்) அருள்மிகு மூர்த்திப் பெருமாள் கோவில்

    images (2)

    பந்தங்கள் துறந்து முக்தியை நாடும்

    பக்தர்கள் வாழ்வில் பரவசம் கொடுக்க

    பனிமலை நடுவினில் பரிவுடன் அமர்ந்து

    பிறவிகள் விலக்கும் மூர்த்தியே ! முகுந்தா !

     

    முன்னொரு பிறப்பில் முடியாக் காதலை

    பின்னொரு பிறப்பில் பகிர்ந்திட வந்தாய்

    தன்னொரு உறவைத் தேடிய துளசியை

    இன்னொரு உறவாய் மார்பினில் அணிந்தாய் !

     

    கண்டகி நதியில் காதலின் சின்னம்

    கண்டவர் வியக்கும் கல்லாய் வடிவம்

    கண்டதும் கொடுக்கும் கனிவுடன் முக்தியை

    கண்ணனின் கருணையைக் காலங்கள் போற்றிடும் !!

     

    பனிமலை நடுவில் பளிச்செனக் கல்லாய்

    பாற்கடல் நடுவில் பாம்புடன் துணையாய்

    பாவங்கள் அழிக்கப் பாதியில் சிங்கமாய்

    பாலங்கள் அமைத்தாய் படைப்புக்கள் அனைத்திலும் !

     

    எச்சில் பழத்தை இனிதே ருசித்தாய்

    ஏழை குசேலன் அவலினை ஏற்றாய்

    எளிய குகனை இதயத்தில் அணைத்தாய்

    ஏங்கிடும் உள்ளங்கள் தாங்கிடும் தயாளா !

     

    பூமகள் அமர்ந்தே போற்றிய திருவடி

    புவியுடன் வானையும் அளந்த பொன்னடி

    பரதனின் அரியணை அமர்ந்த காலடி

    பாவங்கள் விலக்கிடும் பார்தததும் சேவடி !

     

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (87)

    நிர்மலா ராகவன்

    கட்டுப்படுத்துதல் அன்பா? (கட்டுரை)

    நலம்-1-2-1-1
    ”நான் வாங்கிக்கொடுத்த புடவையை கட்டிக்கொண்டால்தான் உனக்கு என்மேல் அன்பு இருக்கிறதென்று அர்த்தம்!” கணவனின் `அன்பு’க் கட்டளை.

    அவளுக்கும் அந்தப் புடவை பிடிக்குமா என்று அவன் யோசிப்பதில்லை. இதில் அன்பில்லை. மனைவியைக் கட்டுப்படுத்தும் முயற்சிதான் இது.

    ஆரம்பத்தில் விட்டுக்கொடுப்பவள், போகப் போக தான் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் கணவன் தலையிடும்போது, `அவர் என்ன சொல்வாரோ?’ என்று எதைச் செய்யும்போதும் யோசிக்க ஆரம்பித்து, அவனைக் கேட்கிறாள். இப்போது சலித்துப்போய், `உனக்கு சுயபுத்தியே கிடையாதா?’ என்று கணவன் ஏசக்கூடும்.

    ஆனால், எல்லாப் பெண்களும் விட்டுக்கொடுத்துப் போவதில்லை.

    கதை

    “கல்யாணத்திற்குமுன் நாங்கள் மூன்று வருஷங்கள் பழகினோம். அப்போது லதா நான் சொல்வதையெல்லாம் கேட்பாள். இப்போது ஏறுக்கு மாறாகச் செய்கிறாள்!” என்று என்னிடம் முறையிட்டான் ஓர் இளைஞன்.

    `என் மனைவி நான் சொல்கிற பேச்சைத் தட்டுவதில்லை!’ என்று நெருங்கிய நண்பர்களிடம் பெருமை பேசிக்கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கமோ!

    `காதல்’ என்ற பெயரில் கட்டுப்படுத்துபவருக்கு தான் பெரிய பராக்கிரமசாலி என்ற கர்வம் எழலாம்.

    ஆனால் கணவர் சொல்கிறபடியெல்லாம் ஆடினால் தனக்கு சுதந்திர உணர்ச்சியே போய்விடும் என்று லதாவுக்குப் புரிந்திருந்தது.

    ஏன் கட்டுப்படுத்துகிறார்கள்?

    தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள இயலாதவர்கள் பிறரைக் கட்டுப்படுத்தி, அதிலேயே நிறைவு அடைந்துவிடுகிறார்கள்.

    அவர்கள் விரும்பியபடி வாழ்க்கை அமையவில்லை என்ற ஏமாற்றமே அடிப்படை காரணம்.

    கதை

    குடும்பப் பொறுப்பைச் சுமக்க விரும்பாது, மனைவியையும், ஆறு குழந்தைகளையும் நிர்க்கதியாக விட்டுச் சென்றவர் ரவியின் தந்தை. மூத்த மகன் ஆனதால், பதின்ம வயதிலேயே வேலை பார்த்துக்கொண்டு, அவருடைய இடத்தைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ரவிக்கு ஏற்பட்டது.

    தம்பி, தங்கைகளைக் கட்டுப்பாட்டுடன் வளர்க்கப் பிரயத்தனப்பட்டதில், எவருடன் நெருங்கிய உறவு வைத்துக்கொண்டாலும், அப்பாவைப்போல் அவரும் தன்னை விட்டுப் போய்விடுவாரோ என்று மனத்தடியில் ஏற்பட்ட பயம் நிலைத்தது. எவரையும் நம்ப முடியவில்லை ரவியால்.

    திருமணம் ஆனபின்னரும், மனைவி மக்கள் தான் சொல்வதை அப்படியே கைப்பிடிக்க வேண்டும் என்ற பிடிவாதம். அவர்கள் கேட்காவிட்டாலோ, முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருப்பான்.

    காதலியோ, மனைவியோ, தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்ற பயத்தில் அவள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும், அவளுடன் பழகும் ஒவ்வொருவரையும் கவனிப்பது உறவுகளை பலகீனமாக்கிவிடுகிறது.

    மேற்காணும் கதையில் `ரவி’ என்ற பெயருக்குப் பதிலாக `ரமா’ என்று போட்டாலும், விளைவு ஒன்றுதான். அவநம்பிக்கை, சிறுபிள்ளைத்தனமான பிடிவாதம், நாட்கணக்கில் மௌனம் சாதிப்பது எல்லாம் இருபாலருக்கும் பொதுவான குணங்கள்தாமே? பெண்களுக்குக் கூடுதலான ஓர் ஆயுதம் உண்டு – கண்ணீர்!

    தான் ஒருவரை மிஞ்ச முடியாவிட்டால், அவரைக் கட்டுப்படுத்தி, கெஞ்சல், கொஞ்சல், மிரட்டல் என்று பலவித அஸ்திரங்களையும் பிரயோகித்து, அவரைக் கீழே கொண்டுவர வேண்டும் என்ற மனநிலை உடையவர்களும் உண்டு. அதன்மூலம் சுயக்கட்டுப்பாடு அற்ற தங்கள் குறையை ஈடு செய்ய நினைக்கிறார்கள். தாங்கள் செய்வது பிறரை எப்படிப் பாதிக்கும் என்ற யோசனையோ, அக்கறையோ இவர்களுக்குக் கிடையாது.

    கதை

    தன்னைவிட படிப்பிலும் அந்தஸ்திலும் உயர்ந்த பெண்ணை மணந்துவிட்டோம் என்ற சந்திரனுடைய கர்வம் விரைவிலேயே மறைந்தது. எல்லாம் நண்பர்களின் தூண்டுதலால்தான். `அவளை இப்படியே வளரவிடாதே. அப்புறம் உன்னை எங்கே மதிக்கப்போகிறாள்!’ என்று தூபம் போட்டார்கள்.

    மனைவி தாராவை ஓயாது மட்டம் தட்டினான். பிறர் முன்னிலையிலும் பழித்தான். விரைவில், அவளுடைய உடல்நிலை கெட்டது. அதிசயமாக, அப்போது தன் போக்கை மாற்றிக்கொண்டான் சந்திரன். அவள்மேல் அன்பைப் பொழிந்தான்.

    கணவனின் அன்பைப் பெற தான் நோய்வாய்ப்பட வேண்டும் என்று அவளையுமறியாமல் மனதில்பட, தாரா அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள். பல முறை இப்படி ஆனபின், நடந்ததில் தன் தவறு எதுவுமில்லை என்று தெளிந்தாள். தானும் உயரலாம் என்ற உத்வேகம் அவனிடம் இல்லை என்று புரிந்தது. தன் தேக ஆரோக்கியம் கணவனது அன்பைவிட முக்கியம் என்று உணர்ந்தபின், கணவனது ஏச்சுப் பேச்சை அசட்டை செய்ய முடிந்தது.

    அக்கறையா, சந்தேகமா?

    தம்பதியரில் ஆணோ, பெண்ணோ, மற்றவரின் ஒவ்வொரு நிமிடமும் எப்படிக் கழிந்தது என்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

    `இன்று நீ வேலைபார்க்கும் இடத்தில் என்ன நடந்தது?’ என்று கணவன் விசாரித்தால், அவருக்குத்தான் தன்மேல் எவ்வளவு அக்கறை என்ற மிதப்பு ஆரம்பத்தில் ஏற்படக்கூடும். போகப் போக, தன்மேல் உள்ள கரிசனத்தால் அவர் இப்படிக் கேட்கவில்லை, பொறாமையும் சந்தேகமுமே இதன் அடிப்படை என்று புரிய, கசப்பு ஏற்படும். ஒருவரது

    கைத்தொலைபேசி, மின்னஞ்சல்வழி யார் யாருடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று பார்ப்பதும் பரஸ்பர நம்பிக்கை இல்லாததால்தான்.

    எப்படிச் சமாளிப்பது?

    தம்மைக் குறைவாக எடைபோடுகிறவர்களுக்கு எப்போதும் பாராட்டும், புகழ்ச்சியும் தேவைப்படுகிறது. தனித்துப்போய்விடுவோமோ என்று பயப்படுகிறவர்களுக்கு, `நான் உங்களை விட்டுப் போகமாட்டேன்!’ என்ற உறுதி அவசியமாகிறது.

    கட்டுப்படுத்த எத்தனையோ வழிகள். பெற்றோரையும் அது விட்டு வைப்பதில்லை.

    கதை: என்னை விட்டுப் போகாதே!

    என்னுடன் வேலைபார்த்த ஸலேஹா தன் மனக்குறையை யாரிடமாவது தெரிவிக்க வேண்டும் என்று எண்ணியிருக்க வேண்டும். தானே என்னிடம் வந்து முறையிட்டாள்: ”எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. என் காதலர் என்னை வெளியே அழைத்துப்போக அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார்,” என்று ஆரம்பித்தவள் உணர்ச்சிவசப்பட்டாள். “ஒவ்வொரு முறையும், என் அம்மா, `நெஞ்சு வலி,’ `மண்டையிடி’ என்று ஏதாவது வியாதி சொல்வார். நானும் அம்மாவைக் கவனித்துக்கொள்ள வீட்டிலேயே தங்கிவிடுவேன். இப்படிப் பலமுறை நடந்தபின், என் தாயிடம் அழுதேன், `நான் கல்யாணம் பண்ணிக்கொள்ளக்கூடாது என்றால் வெளிப்படையாகச் சொல்லிவிடு,’ என்று”.

    தந்தையை இழந்த பெண். சம்பாதிப்பவள். மகளும் தன்னைவிட்டுப் போய்விடுவாளோ என்ற பயம் வந்திருக்கலாம் தாய்க்கு.

    கட்டுப்படுத்துதலும் வதையே, அன்பில்லை!

    நான்கு வயதுச் சிறுவன் ராமு ஒரு பெரிய தட்டில் குவித்து வைத்திருந்த சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு, “அம்மா! முடித்துத்தேன்!” என்று தான் முடித்துவிட்டதைப் மகிழ்ச்சியுடன், மூச்சிறைக்க, அறிவித்தான். தான் அம்மாவை மகிழ்விக்க வேண்டுமானால் அவள் என்ன, எப்போது, எவ்வளவு உணவளித்தாலும் சாப்பிட வேண்டும் என்று அவன் மனதில் பதிந்திருந்தது.

    பள்ளிக்கூடத்தில், `குண்டு’ என்று நண்பர்கள் கேலி செய்யும்போது, ராமுவைப்போன்ற குழந்தைகள் ஒடுங்கிப்போகிறார்கள்.

    ராமுவைத் தற்காப்புப் பயிற்சியில் சேர்த்தார்கள். வளைய, ஓட, குதிக்க, உதைக்க, தாண்ட என்ற எல்லாவித பயிற்சிகளும் பெற உடல் ஒத்துழைக்க வேண்டாமா! அவனையொத்தவர்களைவிட மிகவும் கீழ்நிலையில்தான் இருக்க முடிந்தது. அவர்கள் கேலியாகச் சிரிக்க, அந்த முயற்சியில் ஆர்வம் போயிற்று.

    பதின்ம வயதில், ராமுவை மருத்துவரிடம் அழைத்துப்போனார்கள் – `ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறான். படிப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடிவதில்லை!’ என்று.

    `அவன் பருமனாக இருப்பதைப்பற்றியே பேசாதீர்கள். மனம் நொந்துவிடுவான்!’ என்றாராம். (தாய் என்னிடம் கூறியது).

    `அன்பான கவனிப்பு’ என்ற பெயரில் அளவுக்கு மீறி உணவளித்தது தன் தவறு என்று அவள் ஒப்புக்கொள்ளத் துணியவில்லை.

    தாம் சொல்வதைக் கேட்டு அப்படியே நடக்கும் குழந்தைகள்தாம் தம்மீது அன்பு செலுத்துபவர்கள் என்ற தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் கட்டுப்படுத்தும் தாய்மார்கள். ஆகவே, பல குழந்தைகள் இருந்தாலும், அவர்களில் ஒரு குழந்தை துணிந்து, தன்னிச்சைப்படி நடக்கும்போது, தன்னை அவள் மதிக்கவில்லை என்ற ஆத்திரம் எழுகிறது.

    மாறாக, தங்களைச் சார்ந்தவர்களைச் சற்று சுதந்திரமாக விட்டு, அவர்களுடைய போக்கிற்கு மதிப்புக் கொடுத்து நடத்தினால் அன்பும் மரியாதையும் நிலைக்கும். ஆனால், தங்களிடம் குறை இருக்கிறது என்று யார்தான் ஒப்புக்கொள்வார்கள்!

    தொடருவோம்

    Share
  • காவியத் தலைவன் கர்ணன்

     

    karna (2)
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

    Senthil

    ஈகரையும் காணாத கங்கையில்
    ஈன்றவள் புறக்கணித்து – நெஞ்சில்
    ஈரமின்றி மிதக்கவிட!
    ஈனவர் கௌரவர்
    ஈர்த்தனர் கர்ணனையே!
    ஈர்த்தவர் என்றாலும்
    ஈரப்பற்று மிகுதியால்
    ஈன்றவராய் கொண்டானே!
    ஈகையும் வீரமும்
    ஈர் கண்னெனக் காத்தானே!

    ஈவோன் துரோணரும்
    ஈடன் கர்ணனை
    ஈடறவு எனப் புறக்கணித்தார் – எனினும்
    ஈடிலான் ஆதவனை
    ஈவோனாய்க் கொண்டானே!
    ஈவோன் பரசுராமர்
    ஈகையாளன் மடிதுயில
    ஈயின வண்டொன்று
    ஈட்டியெனத் துளைத்தபோதும்
    ஈட்டி மரமென் றசையாதிருந்தானே!

    ஈடர் பாண்டவர் அணிசேர
    ஈன்றவள் வந்தழைத்த போதும்
    ஈறிய நெஞ்சம் கொண்டான்
    ஈர்தாரை விலகேன் என்றான்!
    ஈயாடவில்லை குந்தி முகத்தில்!
    ஈடினையில்லா குருசேத்திரத்தில்
    ஈண்டெனப் போர் மூண்டது!
    ஈசுவை கொண்ட கௌரவர்க்கும் 

    ஈகையாளர் பாண்டவர்க்கும்!
    ஈடற்ற வெற்றி பாண்டவர்க்கு!

    ஈ என இரந்தோர்க்கு
    ஈயேன் எனச் சொன்னதில்லை!
    ஈடிகை மார்பில் தைத்த
    ஈரம் கூடக் காயவில்லை!
    ஈகையின் துணைக்கொண்டு
    ஈத்தக் கொடையனைத்தும் 
    ஈ என கண்ணன் கேட்டபோதும் 
    ஈண்டெனக் குருதி கொடுத்தானே!
    ஈடில்லா இறைவனின்
    ஈரடி நிழல் சேர்ந்தானே!

      – ஆ. செந்தில் குமார்.

     

    பொருள் :-
    ஈகரை – இரண்டு கரைகள்
    ஈன்றவள் – தாய்
    ஈரம் – இரக்கம்
    ஈனவர் – இழிந்தோர்
    ஈர்த்தல் – சேர்த்துக்கொள்ளுதல்
    ஈரப்பற்று – அன்பு
    ஈன்றவர் – பெற்றோர்
    ஈகை – கொடை
    ஈர் – இரண்டு
    ஈவோன் – ஆசிரியர், குரு
    ஈடன் – ஆற்றலுடையவன்
    ஈடறவு – பெருமைக் கேடு
    ஈடிலான் – இறைவன்
    ஈரிய நெஞ்சம் – அன்பு நெஞ்சம்
    ஈசுவை – பொறாமை
    ஈடிகை – அம்பு
    ஈ – கொடு
    ஈத்த – கொடுத்த
    ஈரடி – இரண்டு திருப்பாதங்கள்
    ஈண்டென – விரைவாக

    Share
  • குறளின் கதிர்களாய்…(197)

    -செண்பக ஜெகதீசன்

    ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற்
    காத்தோம்பற் சொல்லின்கண் சோர்வு. (திருக்குறள் -642: சொல்வன்மை) 

    புதுக் கவிதையில்… 

    நல்வாழ்வும் கெடுதலும்
    நாம் சொல்லும்
    சொல்லினால் வருவதால்,
    சொல்லில்
    சோர்வு வராமல் பார்த்திடல்
    நலம்தரும்…! 

    குறும்பாவில்… 

    நல்லதும் கெட்டதும்
    நம் சொல்லால் வருவதால்,
    சோர்வுவேண்டாம் சொல்லில்…!      

    மரபுக் கவிதையில்… 

    அரசியல் மற்றும் மனிதவாழ்வில்
    -ஆக்கம் கெடுதல் வருவதெல்லாம்
    ஒருவர் சொல்லும் சொல்லாலே
    -உரைக்கும் சொல்லின் வன்மையாலே,
    கருத்தில் இதனைக் கொண்டேதான்
    -காத்திட வேண்டும் சொல்லினையே
    வருந்திட வைக்கும் சோர்வதுதான்
    -வார்த்தையில் வந்து விடாமலேயே…! 

    லிமரைக்கூ… 

    சொல்லால்வரும் ஆக்கமுடன் கேடு,
    கொண்டே இதனைக் கருத்திலே
    சொல்லில் சோர்வின்மை நாடு…! 

    கிராமிய பாணியில்… 

    நல்லதும் கெட்டதும் வருவதெல்லாம்
    நாம சொல்லுற சொல்லால,
    நாட்டுக்கும் ஊட்டுக்கும்
    நல்லசேதி இதுதானே…

    அதால
    பாத்துக்கோ பாத்துக்கோ
    சொல்ல நல்லதா பாத்துக்கோ,
    சொல்லுற சொல்லுல
    சோர்வு வராம காத்துக்கோ…!

     

     

    Share
  • மெய்ஞ்ஞானம் பிறந்ததம்மா!

    -நிலவளம் கு.கதிரவன்

    முன்னுரை

    kathirஆயர் குல விளக்காம் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்கள் முப்பதும் சரணாகதித் தத்துவத்தைப் போற்றுவதாகும்.  எட்டாம் பாடலான ’கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு’ என்ற பாடலின் பொருளையும், விளக்கத்தையும், இப்பாடலில் பொதிந்துள்ள உள்ளுறை கருத்துக்களையும் நாம் காணப்போகிறோம்.    

    அவதாரிகை                                          

    திருப்பாவை பாசுர வரிசையில் எட்டாவது வரிசையில் வரும் கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு என்ற பாசுரம் தமோ குணம் நீங்கி சத்வ குணம் வருவதையும், அத்தகைய சத்வ குணத்தினால் அஞ்ஞானம் விலகும். மெய்ஞானம் பிறக்கும் என்பதை ஆண்டாள் நமக்கு உள்ளுறையாக விளக்குகிறாள். மேலும் இப்பாசுரம் ஸ்வாமி நம்மாழ்வார் எழுப்பப் பாடுவதாகவும், சிலர் பூதத்தாழ்வாரை எழுப்பப் பாடுவதாகவும் கூறுவர். தவிரவும் ஆசார்ய சம்பந்தம், மோட்சம் போன்ற அம்சங்களையும் இப்பாசுரம் ஆய்ந்து விளக்குகிறது.                       

    திருப்பாவை எட்டாம் பாசுரம்

    கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
    மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
    போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
    கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
    பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
    மாவாய் பிளந்தானை மல்லரைமாட்டிய
    தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
    ஆவாவென்றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்! 

    பாசுரப் பொருள் விளக்கம் 

    இப்பாசுரத்தில் எழுப்பப்படும் பெண் பகவான் கிருஷ்ணரால் மிகவும் விரும்பப்பட்டவள்.  ஆகையாலே கோதை அவள் இல்லம் சென்று, கீழ்வானம் வெளுத்துவிட்டது, எருமைகள் எல்லாம் சிறுவீடு மேய சென்றுவிட்டது என்பதால் நாங்கள் உன்னை எழுப்புவதற்காக கோஷ்டியாக வந்துள்ளோம்.  நீ ஏன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய்? திருவேங்கட யாத்திரை செல்லும் குழுவினரையும் உனக்காக நிறுத்தி வைத்துள்ளோம்.  கிருஷ்ணரால் மிகவும் விரும்பப்பட்ட பெண்ணே சீக்கிரம் எழுந்திரு.  கேசி என்ற அசுரன் குதிரை உருவத்திலும், பகாசுரன் கொக்கு வடிவத்திலும் வந்தபோது அவர்களின் வாயைக் கிழித்தவனும், சாணுரன், முஷ்டிகன்  என்ற மல்லர்களை மாய்த்தவனுமான, தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்கக் கூடிய எம்பெருமானின் மகாத்மியங்களை பாடிக்கொண்டு அவனை நாம் சேவிப்போம்.  அப்படி சேவித்தால் எம்பெருமான் நம்மிடம் வந்து, நமது குறைகளை ஆராய்ந்து, அனுதாபப்பட்டு நமக்கு அருள்செய்வான்.  எனவே எழுந்திரு தோழியே எனத் தோழியின் வீட்டுக் கதவை கூடியிருந்து தட்டியெழுப்புகின்றனர்.    

    தோழியை எழுப்புதல் 

    பாவை நோன்பிற்காக வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் பெண் பிள்ளையை, கீழ்வானம் வெளுத்து, சூரிய  உதயம் ஆகிறது.  இன்னும் நீ எழுந்திருக்கவில்லையா? என்று ஆண்டாளும், தோழியர்களும் அழைக்கிறார்கள்.  இங்கு கீழ்வானம் என்பது ஆகாயத்தைக் குறிக்கும். அதேபோன்று ஒவ்வொரு ஜீவாத்மாவுக்குள்ளும் இருக்கும் மனத்தின் உள் வெளியை குறிக்கிறது.  அந்த உள்வெளி சுத்தமாக இருந்தால்தான் சுடர்விட்டு ஒளிரும். பரமாத்மாவைக் கண்டுகொள்ள முடியும், என உள்ளுறையாக கூறப்பட்டுள்ளது.    

    கீழ்வானம் வெளுத்ததைத் தொடர்ந்து, எருமைகள் எல்லாம் சிறுவீடு மேயச் சென்றுவிட்டன. சிறுவீடு மேய்வது என்பது பனித்துளி படர்ந்த புற்களை மேய விடிந்தும், விடியாத காலையில் புறப்பட்டுச் செல்லும் நேரமாகும்.  எருமைகள் சென்றதைத் தொடர்ந்து மற்ற பிள்ளைகளும் செல்லத் தொடங்கிவிட்டனர். போவதற்காக போகின்றவர்கள் அதாவது பரமனைக் காணப் போவதாகிய செயலே போதுமானது என்றும், அப்பரமனே உபாயமும், உபேயமுமாகக் கொண்டு செல்கின்றனர்.  அவர்களை நிறுத்தி உனக்காக காத்திருக்கச் சொல்லியிருக்கின்றோம்.  அப்படி அவர்களை நிறுத்தி வைத்துவிட்டு, உன் வீட்டுவாசலில் உன்னை எழுப்புவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றோம்.  பகவான் கிருஷ்ணனால் விரும்பப்பட்டவளும், உன்னால் விரும்பப்பட்ட கிருஷ்ணனுமாகிய அப்பெருமானின் கல்யாண குணங்களைப் பாடி, பறைகொண்டு சேவிக்கலாம்.  அதனால் நீ எழுந்திரு தோழி என்று எழுப்புகிறார்கள்.  

    தோழியின் பதில் 

    ஆண்டாளும், மற்றவர்களும் எழுப்பும்போது, தோழி சொல்கிறாள்.  கீழ்வானம் வெளுக்கவில்லை. பொழுதும் விடியவில்லை.  கிருஷ்ணனைச் சென்று சேர்வதற்காக எப்போது பொழுது விடியும் என்று கிழக்குத் திசையையே பார்த்துப் பார்த்து உங்கள் முகத்தினொளியின் பிரதிபலிப்பே கீழ்வானம் வெளுத்ததுபோல் தெரிகின்றது.  அதே போன்று நீங்கள் எருமைகள் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்களே அது எருமைகள் அல்ல, உங்கள் முகத்தின் ஒளிபடரப் படர இருளானது விலகிக் கொண்டே செல்லும்.  அந்த இருள் திரளானது உங்களுக்கு எருமைகள் போல் தெரிகிறது. எனவே இன்னும் பொழுது புலரவில்லை. இப்படிக் கூறியவளை இடைமறித்து, சரி.  பொழுது புலரவில்லை என்று கூறுகிறாய்.  அப்படியென்றால் விடியலுக்கு வேறு என்னதான் அடையாளமாக நீ கேட்கிறாய் என்றார்கள் பிற தோழியர்கள்.  அதற்கு அவள், ஆய்ப்பாடியில் ஐந்து லட்சம் குடியில் உள்ளவர்களில் எத்தனைபேர் இங்கு வந்துள்ளார்கள்?  அப்படி அனைவரும் வரவில்லையெனில் மற்றவர்கள் இன்னும் உறங்கிக் கொண்டுதானே இருக்கின்றார்கள்.  இச் செயலே தெரியவில்லையா? இன்னும் விடியவில்லை என்று மறுமொழியிட்டாள் தோழி.  

    தோழிக்கு பதில்     

    தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றாய் தோழி.  நாங்கள் முன்னமே சொன்னதுபோல்தான், விடியலைக் கண்டு எருமைகள் சிறுவீடு சென்றுவிட்டன, அதைத் தொடர்ந்து மற்ற பெண் பிள்ளைகள் அனைவரும் பகவானைச் சேவிக்க சென்றுவிட்டனர் என்றும், அதைத் தொடர்ந்து,  பறை கொண்டு பாடப்படும் அத்தகைய பரம்பொருள் எப்படிப்பட்டவன் தெரியுமா? குதிரை வடிவம் கொண்டு வந்த கேசி என்ற அசுரனைப் பிளந்து அழித்தவன்.  அதேபோன்று கொக்கு வடிவம் கொண்டு வந்த பகாசுரனை அவன் வாயைக் கிழித்து கொன்றவன்,  கம்சன் அவையில் ஏவப்பட்ட மல்லர்களான சாணூரனையும், முஷ்டிகனையும் வதம் செய்தவன்.  அப்பேரருளாளனான எம்பெருமான் தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இருக்கக் கூடியவனும், வரந்தருவார்க்குள் எல்லாம் மிகச் சிறந்த தெய்வமான சர்வேஸ்வரன் ஸ்ரீமன் நாராயணனை நாம் சென்று சேவித்தால்,  அவன் மனம் இரங்கி, நமது குறைகளை ஆராய்ந்து  அருள் புரிவான்.  எப்படியென்றால் நாம் அவர்கள் இருக்கும் இடம் சென்று அருள்பாலிக்கக் காத்திருக்க வேண்டியவர்கள், அதையே பெரும்பேறாகக் கருதியிருக்கும் அவர்கள், நாம் இருக்கும் இடம்தேடி வருகிறார்கள் என்றால், அவர்களின் குறைகள்தான் என்னவோ? என்றெண்ணி மனம் இரங்கி நமக்கு அருள்செய்வான்.  அதனால் சீக்கிரம் எழுந்திரு தோழி என எழுப்புகிறார்கள். 

    பாசுர உள்ளுறை

    1. கீழ்வானம் வெள்ளென்று என்று கூறும்பொழுது மேல்வானம் பரமபதத்தில் உள்ள சர்வேஸ்வரனையும், கீழ்வானமான இப்பூமியில் அடியார்கள் வாழ்வதையும் கொண்டு, கீழ்வானம் தூய்மையாக இருந்தால்தானே பரமன்வந்து அமர்வான். கீழ்வானம் வெளுத்தது என்றால்,மோட்ச சிந்தனையைத் தேடும் சீடன் உபாயம் அறியாமல், அகஇருளில் உழலும் இவர்களுக்கு ஆச்சார்ய சம்பந்தத்தினால் சத்வ குணம் தலையெடுப்பதையும், ஞான வெளிச்சம் கிடைப்பதையும் கூறலாம்.
    1. எருமை சிறுவீடு என்ற வரியில், எருமையானது மிக மெதுவாக நகரும்.பசுக்கள் போன்று விரைவாக செல்லாது.  எருமையானது சிறுவீடு செல்வதற்கு முன், சிறு குளம், குட்டை என எல்லாவற்றிலும் விழுந்து பின்னர்ப் போகவேண்டிய இடத்திற்கு செல்லும்.  ஆனால் மிக்குள்ள பிள்ளைகளானவர்கள்  பக்தியோகத்தை அனுசரிக்க தங்களின் தகுதியின்மையை உணர்ந்ததால் சரணாகதி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்து சீக்கிரமாக செல்லும்.  அதாவது தமோ குணம் மிககவர்கள் ஸம்சார பந்தத்தில் உழன்று பின்னர் தமது இறுதிக் காலத்தில் மோட்சத்திற்குச் செல்வர்.  ஆனால் பசுக்கள் போன்ற சுறுசுறுப்பு மிக்குள்ள பிள்ளைகள் சத்வகுணம் பெற்று சீக்கிரமே மோட்சத்தை அடைகிறார்கள். 
    1. கோதுகலமுடைய என்ற வரியில் கிருஷ்ணனால் மிகவும் விரும்பப்பட்ட பதுமை போன்றவளே என்று கூறுகிறாள் ஆண்டாள். பராசர பட்டர் கிருஷ்ணனுடைய குதூகலமே நம்மாழ்வாராக வடிவெடுத்தது என்று இதற்கு உவமை கூறுகிறார்.அதாவது க்ருஷ்ண த்ருஷ்ணா என்றதும் க்ருஷ்ணனிடத்தில் த்ருஷ்ணை, க்ருஷ்ணனுடைய த்ருஷ்ணை.  அதாவது நம்மாழ்வார் எம்பெருமானிடத்தில் குதுகலம் கொண்டார்.  எம்பெருமானும் தன்னிடத்திலே குதுகலம் கொண்டார் என்பதை க்ருஷ்ண, த்ருஷ்ண என்று உவமையாக கூறுவதைக் கொண்டால், தோழியானவள் க்ருஷ்ணன் மீது ஆசை கொண்டாள்.  க்ருஷ்ணனும் தோழிமீது ஆசை கொண்டான் என்று பொருள் கொள்ளலாம்.
    1. இப்பாசுரத்தில் தேவாதி தேவன் என்று பரமாத்மாவை விளிக்கிறாள் ஆண்டாள்.அதாவது நித்யசூரிகளுக்கெல்லாம் மேலானவர்.  வரந்தருவோர்க்கெல்லாம் மேலானவர் என்ற பொருளில் விளக்குகிறார்.  கீதையில் பரமாத்மா, ”தனஞ்செயனே, என்னைக் காட்டிலும் மேலானது வேறொன்றுமில்லை. நூலிலே மணிக் கோவை போல அண்டங்கள் அனைத்தும் சர்வேஸ்வரன் என்ற நுலான சூத்திரத்தால் என்மீதுதான் கோக்கப்பட்டு இருக்கின்றன”.   எனவே அப்படிப்பட்ட பரமாத்மாவை நாம் பற்றினால் நம் குற்றம் குறைகளைக் கருணையுடன் ஆராய்ந்து பெருங் கருணையுடன் அருளுவான்.  இங்கு ஆராய்தல் என்பது கோபியரின் கர்ம, ஞான, பக்தி யோகங்களை அல்ல.  தாஸ்ய பாவமான பரிபூரண சரணாகதியே ஆகும். 
    1. போவான் போகின்றாரை என்ற வரியில், போவதற்காக போகின்றவர்கள்,அதாவது பரமனைக் காணப் போவதான செயலே போதுமானது.அதுவே இலக்கு.  உபாயமும், உபேயமும் அவனே. இதற்கு பெரியவாச்சான் பிள்ளை, போவான் போகின்றவர்கள், அர்ச்சிராதி மார்க்கம் போலே, அக்ரூராயனம் போலே, திருவேங்கட யாத்திரை போலே போவதையே பிரயோஜனமாகக் கொண்டவர்கள் என்கிறார்.  அதாவது அர்ச்சிராதிகதி என்பது ஸ்ரீவைகுண்டத்திற்கு போவதைப்போலே, அக்ரூராயனம் என்பது கண்ணனைப் பார்க்க ஆயர்பாடிக்கு போவது போலே, திருங்கட யாத்திரை   என்பது  திருமலைக்கு யாத்திரை செல்வது போலே என   வியாக்யானம் அருள்கிறார்.
    1. கீழ்வானம் வெள்ளென்று என்பது சூரிய உதயத்தின்போதுதான் இருக்கும். அதுபோல கலியுகத்தின் தொடக்கத்தில் நம்மாழ்வார் அவதரித்த பின்னர்தான் அடியார்கள் ஞானஒளி பெற்றனர்.அதுவரை அஞ்ஞான ஒளியில் அகங்கார, மமகாரத்துடன் இருந்தனர்.  அதே போன்று புளிய மரத்தடியில் உதித்தவரான நம்மாழ்வார் நீண்டநாள் எழுந்திராமல் இருந்து, மதுரகவியாழ்வாரால் எழுப்பப்பட்டவர்.  அதேபோன்று அனைத்துத் திவ்ய தேசங்களிலும் இவர் மட்டும் அமர்ந்திருக்க, ஏனைய ஆழ்வார்கள் அர்ச்சாவதாரமாக நின்றபடியே சேவை சாதிப்பர். அதனைக் குறிக்கும் விதமாக எழுந்திராய் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் கொள்ளலாம். 

    முடிவுரை 

    கலியுகமான இக்காலத்தில் சரணாகதி மார்க்கம் ஒன்று மட்டுமே இறைவனை அடையும் வழியாகும்.  இப்பாசுரம் விளக்குவது போல சத்வ குணம் ஓங்கினால் மெய்ஞ்ஞானம் பிறக்கும்.  அஞ்ஞானம் தானாக விலகிச் சென்றுவிடும்.  அஞ்ஞானம் விலகினால் பகவான் அருள் கிடைக்கும்.  இதற்குப் பிராட்டியார் அருள்  வேண்டும்.  அதனால் சேர்ந்து நாம சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.  அப்படி நாம சங்கீர்த்தனம் செய்யச்  செய்ய நமது அகங்கார, மமகாரங்கள் எல்லாம் நம்மைவிட்டுச் செல்லும். இதுவே இப்பாசுரம் உள்ளுறையாக நமக்கு அருளும் அறிவுரையாகும்.  பின்பற்றி உய்வோம்.                              

                 எம்பெருமானார் திருவடிகளே சரணம்!!
                 வரவரமுநியே நம!!

     

     

    Share
  • தமிழா! தமிழா!!

     
    °°°°°°°°°°°°°°°°°°°°

    தமிழா! தமிழா!! நீ இதுவரை
    அடிமைப்பட்டது போதும்! நீ
    அவதிப்பட்டது போதும்! போதும்!!
    அச்சப்பட்டது போதும்! நீ
    அறியாமைப்பட்டது போதும்! போதும்!!

    உன்னுள் ஓடும் குருதியனைத்தும்
    உறிஞ்சப்பட்டது போதும்! வலிகள் உன்னால்
    உணரப்பட்டது போதும்! போதும்!! நீ என்றுமே
    நசுக்கப்பட்டது போதும்!
    நலிவுபட்டது போதும்! போதும்!!

    சாதிமதச் சாக்கடையால் கண்கள்
    கட்டப்பட்டது போதும்! தலைகள்
    வெட்டப்பட்டது போதும்!போதும்!! கரங்களிரண்டும்
    கறைப்பட்டது போதும்! கீழோனென்று உன்னால்
    வெறுக்கப்பட்டது போதும்! போதும்!!

    மீனவச்சொந்தம் மாற்றானால்
    கொல்லப்பட்டது போதும்!
    கொடுமைப்பட்டது போதும்! போதும்!!
    விரட்டப்பட்டது போதும்!
    வஞ்சிக்கப்பட்டது போதும்! போதும்!!

    சொந்த மண்ணில் நீ
    சுட்டு வீழ்த்தப்பட்டது போதும்!
    சுரண்டப்பட்டது போதும்! போதும்!!
    சிதைக்கப்பட்டது போதும்! நாடின்றி
    சிதறப்பட்டது போதும்! போதும்!!

    இதுவரையும் தமிழா நீ
    ஒடுக்கப்பட்டத் தளையறுக்க
    விடுக்கப்பட்ட கோரிக்கைகட்கு செவி
    மடுக்கப்படாத நிலையெண்ணி
    வருத்தப்பட்டது போதும்! போதும்!!

    இனியேனும்
    தமிழன் என்ற உணர்வு கொண்டு
    தரணியெங்கும் தலை நிமிர்ந்து
    ஒன்றுபடுவாய் தமிழா! தமிழா!!
    துன்பப்பட்டது போதும் தமிழா! எதையும்
    வென்றெடுப்பாய் தமிழா! தமிழா!!

    – ஆ.செந்தில் குமார்.

    Share
  • சிதம்பரத்துக்குக் கப்பல் திருவாதிரை 02.01.2018

    reginald-cooray02

    திருவாதிரைக்குச் சிதம்பரம் அருள்மிகு நடராசப் பெருமான் கோயிலுக்கு ஈழத்துச் சைவர்கள் காங்கேயன்துறைத் துறைமுகத்திலிருந்து அண்மையில் உள்ள தமிழகத் துறைகளுக்குக் கப்பல் வழி செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு 2016 மார்கழியில் யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் விழாவில் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.

    மிக ஆர்வத்துடன் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்கள் என் வேண்டுகோள ஏற்றார்கள். இலங்கை அரசின் அனைத்து மட்டங்களிலும் அவரது கடும் முயற்சியால் 20.12.2016இல் இலங்கை அரச அநுமதி பெற்றார்கள்.

    பின்னர் இலங்கை அரசு இந்திய அரசுக்கு எழுதி ஒப்புதல் கேட்டது. 21.12.2017இல் இந்திய அரசின் ஒப்புதலை இலங்கை அரசுக்குத் தெரிவிக்க, இலங்கை வெளிவிவகார அமைச்சும் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்களுக்கு அறிவித்தது.

    திருவாதிரைக்குச் சிதம்பரத்துக்குக் கப்பல் வழிபோக நான் வேண்டுகோள் விடுத்தேனாயினும் அனைத்து உரிமங்களையும் பெற்று இலங்கை இந்துக்களுக்கு நல்வாய்ப்பாக அமைய முயன்றவர் நல்லுள்ளம் கொண்ட வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்களே.

    இலங்கை அரசின் அலுவலகங்களிலும் இந்திய அரச அலுவலகங்களிலும் அநுமதிக்குரிய ஆவணங்கள் அலுலவலர்களின் மேசைகளில் தங்காது விரைந்து பயணிக்க நான் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்களுக்கு ஒத்துழைத்தேன்.

    கப்பல் பயண ஒழுங்குகளை ஒருங்கிணைக்கும் பணியில் வடமாகாண ஆளுநர் மேதகு ரெஜினால்டு கூரே அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். 2.1.2018 திருவாதிரை நாளன்று சிதம்பரத்துக்கு இலங்கை அடியார்கள் போகும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளோம். அருள்மிகு நடராசப் பெருமானை அவனருளாலே அவன்தாள் வணங்கும் வாய்ப்பைப் பெறுவோம்.

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    மார்கழி 9, 2048 (24.12.2017)

    Share
  • புதிய நியதி : பெரு வெடிப்பு நிகழவில்லை ! அதற்கு முன்பே, பிரபஞ்சம் உருவாக மூலத்தோற்றக் காரணிகள் இருந்துள்ளன

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++++++

    காலக் குயவன்
    ஆழியில் பானைகள்  செய்ய
    களிமண் எடுத்தான் முன்னோடிக்
    கருந்துளைச் சுரங்கத்தில் !
    பெரு வெடிப்பில் பிரபஞ்சம்
    பிறந்த தென்றால்
    பெரு வெடிப்புக்கு மூலாதாரக்
    கரு எங்கே
    கர்ப்ப மானது ?
    கருவின்றி, தூண்டலின்றி
    உந்துவிசை யின்றி உண்டாகுமா ?
    அருவமாய்க் கரும்பிண்டம்
    கடுகு  அளவில்
    அடர்த்தியாய் இருந்ததா ?
    பெருவெடிப் பின்றித்
    தாவிப் பாய்ந்து விரிவதா  
    பிரபஞ்சம் ?
    கருவை வடிவாக்க உந்துவிசை
    உருவான தெப்படி ?
    உள் வெடிப்பு தூண்டியதா
    புற வெடிப்பை ?
    பிரபஞ்சம் தோன்றப் புலப்படாத
    கருஞ்சுரங்கம் முற்பிறவிக்
    கருந்துளையா ?

    ++++++++

    • நமது பிரபஞ்சம் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) உதித்ததே தவிரப் பெரு வெடிப்பில் (Big Bang) தோன்றவில்லை !  அதாவது முதலில் குவாண்டம் ஈர்ப்பாற்றல் நிகழ்த்திய விந்தை விளைவுகளால் உள் வெடிப்பு தூண்டிப் புற வெடிப்பில் (An Implosion Triggering an Explosion) உண்டானது.
    • மார்டின் போஜோவால்டு,  (Martin Bojowald, Asst Professor of Physics, Penn. State, USA) (Authour of Big Bounce Theory) (July 2007)
    • மூல முடத்துவ நிலையை [Singularity] நீக்கியோ,  அதாவது மூலப் பெரு வெடிப்புக் கோட்பாடை நிராகரித்தோ, பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்க வந்தால், தாவிப் பாய்ந்த கோட்பாட்டு அகிலம்  ஒன்று  [Bouncing Universe] உருவானது பற்றி அறிய வருகிறது.  பிரபஞ்சக் காலவெளி ஆரம்பத்தில்,  முடத்துவ நிலையின்மை [Absence of Singularity], மாற்று நிலை தாங்கிய, பூர்வீகச் சுருக்க நிலை இருப்பைக் [Previous Contraction Phase] காட்டுகிறது.   அந்த சுருக்க நிலை இப்போதும் இருந்து கொண்டு பிரபஞ்சம் விரிந்து கொண்டே போகலாம் .

    ஜூலியானோ சீஸர் சில்வா நிவேஸ்  [பிரஸேலியன் பௌதிக விஞ்ஞானி]

    unnamed (1)

     

    “எனது வெளியீட்டுத் தாள் ஓர் புதிய கணித மாடலை அறிமுகப் படுத்துகிறது.  துகளியல் நிலையில் (Quantum State) “பெரும் பாய்ச்சல்” மூலம் (Big Bounce) பயணம் செய்யும் பண்பாடுகளின் புதிய விளக்கங்களை அதிலிருந்து பெற்றுக் கொள்ளலாம், அந்தக் கோட்பாடு ஆரம்ப காலத்துப் பெரு வெடிப்பில் உண்டானதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நமது பிரபஞ்சத்தின் மரபுக் கருத்தை நீக்கி அமர்ந்து கொள்ளும்.  ஆயினும் அந்தப் பண்பாடுகள் சிலவற்றில் உறுதி யில்லாமை எப்போதும் இருக்கும்.  காரணம் எனது கணிப்புகளில் பெரும் பாய்ச்சல் பயணம் நிகழும் போது எல்லை மீறிய துகளியல் விசைகள் (Extreme Quantum Forces) விளைவிக்கும் ஒருவித “அகிலவியல் மறதி” (Cosmic Forgetfulness) எழுகிறது !

    மார்டின் போஜோவால்டு.

    Image result for bouncing universe

    கடந்த 50 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் பலர் பெரு வெடிப்புக் கோட்பாட்டைப் பிரபஞ்சத் தோற்றத் துவக்கமாய் ஏற்றுக் கொண்டிருந்தாலும், அது விஞ்ஞானிகள் இடையே முழு இசைவு உடன்பாடாய்க் கருதப்பட வில்லை.  இப்போது விஞ்ஞானிகள் பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத் தோற்ற உபக்காரணிகள் [Vestiges] இருந்துள்ளன என்று யூகிக்கிறார்.  இப்புதிய கருத்தைப் பிரேசில் ஆராய்ச்சிக் குழுவினர், தற்போது  [General Relativity & Gravitation Publication] [நவம்பர் 27, 2017]  வெளியிட்டுள்ளார்.  அவர்கள் ஆரம்ப காலப் பிரபஞ்சக் காலவெளி முடத்துவத்தை  [Cosmological Spacetime Singularity]  நீக்கிவிடும்படி அறிவிக்கிறார்.  அதாவது தற்போதைய பிரபஞ்ச விரிவுக் கட்டத்துக்கு முன்பு ஓர் சுருக்க நிலை [Contraction Phase] இருந்துள்ளது என்று தர்க்கம் செய்கிறார். அதாவது தற்போதைய பிரபஞ்சம் உருவாகும் முன்பே, அதற்கு வேண்டிய மூலாதார உபக்காரணிகள் [Ingredients] யாவும் அண்டவெளியில் இருந்துள்ளன.

    பிரேசில் விஞ்ஞானி ஜூலியானோ நிவேஸ் பெரு வெடிப்பு ஆரம்ப காலத்தைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்.  காலத்துக்கு ஆரம்பம் இல்லை.  தற்காலப் பிரபஞ்ச விரிவுக்கு முன்பே பிரபஞ்சச் சுருக்கம் [Expansion was preceded by Contraction]  என்பது  இருந்துள்ளது.  பிரபஞ்சப் பெரு வெடிப்பே நிகழ வில்லை என்று அழுத்தமாகக் கூறுகிறார்.  அத்துடன் தற்போதைய பிரபஞ்சத்தின் அதிவிரைவு விரிவு முந்தைய சுருக்க நிலை இருந்துள்ளதை நிராகரிக்க வில்லை.  பிரபஞ்ச விரிவு நிலை முந்தைய சுருக்க நிலைக் கட்டத்தை அழிக்கவும் இல்லை என்று கூறுகிறார்.

    1920 ஆண்டுகளில் பெரு வெடிப்பு நியதியின் மூலாதார ஆய்வுகள் அமெரிக்க வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள் காலத்தில் ஆரம்பமாயின.  அவர்தான் முதன்முதலில் ஒளி மந்தைகள் [Galaxies] யாவும் ஒன்றை விட்டு ஒன்று அதிவேகத்தில் விலகிச் செல்கின்றன என்று தொலைநோக்கி மூலம் கண்டறிந்தவர்.  1940 ஆண்டுகளில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்  பெரு வெடிப்புக்குப் பிறகுப் பிரபஞ்சம் எப்படி விரிந்து செல்கிறது என்று  பிரபஞ்சப் பரிணாமக் கோட்பாடை  [Evolution of the Universe]   ஈயற்றினார்.   அந்த மாடல் மூன்று வித விளைவுகளை உண்டாக்க வாய்ப்பளிக்கும்.

    1. விளிம்பற்ற அதிவேகப் பிரபஞ்ச விரிவை உண்டாக்கும்.

          2.  நிரந்தரமாய் பிரபஞ்சத்தை விரிவு நிலையில்முடக்கும். 

          3.  அல்லது பிரபஞ்சத்தை நிறை ஈர்ப்பியல் கவர்ச்சியால் தலைகீழ் இயக்கத்தில் பெரும்பிடியால் [Big Crunch] நெருக்கி விடும்.

    பிரேசில் விஞ்ஞானி ஜூலியானோ நிவேஸ் கூறும் புதிய கோட்பாடு இதுதான் :

    1.  தாவிப் பாயும் பிரபஞ்சவியல் கோட்பாடு []  இறுதியில் விளையும் பெருங்கவர்ச்சி [] நிரந்தரமாய்த் தொடர்ந்து தோன்றும்  பிரபஞ்சங்களைத் தோற்றுவிக்கும் தீவிர வெப்பத் திணிவை உண்டாக்கி வரும்.
    2. ஒரு புதிய தலைகீழ் இயக்கத்தில் பெருங்கவர்ச்சிக்குப் பிறகு துவங்கிப் பிரபஞ்சம் விரிந்து  அடுத்த பாய்ச்சலுக்குத் தயார் ஆகிறது.
    3.  பாயும் பிரபஞ்சத்துக்குக் கருந்துளைகள் ஆரம்ப கால விரிவுக்குத் தொடர்க் களஞ்சியம். கருந்துளைகள் ஒருவித அகில அண்டங்களே  [Cosmic Objects].
    4. பூத விண்மீன் ஒன்று வெடித்து எச்சமான உள்வெடிப்புக் கரு சுருங்கிப் பெருந்திணிவுக்  கருந்துளை ஆவது ஒருவித முடத்துவ [Singularity] விளைவே.

    fig-1a-cosmic-history

    “ஸ்டீஃபன் ஹாக்கிங், நீல் டுராக் (Stephen Hawking & Neil Turok) இருவரும் வானியல் விஞ்ஞான நோக்குகளில் கிடைத்த எண்ணிக்கையை விட 20 மடங்கு சிறிய பிண்டத் திணிவைக் (Matter Density) கொண்ட ஒரு பிரபஞ்சத்தை ஊகித்து முன்னறிவிக்கிறார்கள்.  ஹாக்கிங் தன் போக்கில் அடிப்படைக் கணித மூலமாக அணுகி அதில் மிகையாக நம்பிக்கை வைக்கிறார்.  முதலில் அது சரியாகத் தோன்றவில்லை எனக்கு. . . . ஆனால் ஹாக்கிங் கூர்மையான சிந்தனை உள்ளவர்.  பன்முறை அவர் செய்த ஆய்வுகளில் விந்தையான முடிவுகளைக் கண்டிருக்கிறார்.  முதலில் அவை தவறாகத் தோன்றின எனக்கு !  பல தடவைகள் அவரது முடிவுகளே செம்மையானதாய்ப் பின்னால் நான் அறிந்து கொண்டேன்.

    ஆன்ரி லின்டே (Andrei Linde Pysics Professor, Stanford University)

    “பிரபஞ்சத்தில் நாம் ஆழ்ந்து புரிந்து கொள்ள இயலாதது என்பது நாம் அதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்பதே.”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    “பெரு வெடிப்பு நியதியில் உள்ள இடைவெளித் துளைகளை அகிலத்தின் உப்புதல் கொள்கை (Cosmic Inflation Concept) அடைத்து நமது பிரபஞ்சத்தைப் பலவற்றுள் ஒன்றாக மாற்றி விட்டது.  மேலும் விஞ்ஞானிகளுக்கு உப்புதல் கொள்கை பல்வேறு பிரபஞ்சங்களைப் (Multiverse) பற்றி உரையாட மன உறுதி தந்துள்ளது.  அதாவது பிரபஞ்சத்தில் பிரபஞ்சங்கள் (A Universe of the Universes) இருப்பது”

    ஆடம் ஃபிராங்க் (Astronomy Magazine Editor, Physicist)

    “அனைத்து அகிலவியல் உப்புதல் நியதிகளும் (Cosmic Inflation Theories) விண்வெளியின் ஒரு புள்ளியை இழுத்துக் கொண்டு அதைச் சுமார் 10^50 மடங்குப் பேரளவில் ஊதி விடுகிறது.”

    மாரியோ லிவியோ (Mario Livio)

    “பிரபஞ்சத்தின் பல்வேறு பகுதிகள் உஷ்ணத்தில் செம்மையாகச் சீர்மை நிலையடைந்து (Well Synchronized in Temperature), ஒப்புக் கொள்ளப்பட்ட பெரு வெடிப்பு மாடலை விளக்குகிறது.”

    ஷான் கார்ரல் (Sean Carroll)

    fig-1c-timeline-of-the-universe“இந்தப் பிரபஞ்சத்தைப் படைக்க எந்த விதமான விருப்பத் தேர்வு (Choice) கடவுளுக்கு இருந்தது ?”

    ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

    புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது.

    விஞ்ஞான மேதை ஜான் ஹெர்ச்செல் [1792-1871]

    விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன! அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க இயற்கை ஒருபோதும் நம்மை விடுவதில்லை!

    ஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி)

    பெருவெடிப்புக்கு முன்பே சில கருந்துளைகள் இருந்தன

    2012 ஜூலை 13 ஆம் தேதி வெளியான ஒரு விஞ்ஞான அறிவிப்பில் “பெருவெடிப்புக்கு முன்பே சில கருந்துளைகள்  இருந்தன என்னும் ஒரு புதிய  கருத்து வெளியாகி உள்ளது.  அகிலவெளி நிபுணர் (Cosmologists) பெருவெடிப்புக்கு முன்னர் என்ன இயக்கங்கள் இருந்தன வென்று ஆழ்ந்து ஆராய்ந்த போது அத்தகைய ஒரு மர்மமான, புதிரான  முடிவு கூறப் பட்டுள்ளது.   கனடா ஹாலிபாக்ஸ்ஸில் உள்ள டல்ஹௌஸி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அலன் கோலி  (Alan Coley), லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக் கழகத்தின் பெர்னார்டு கார் (Bernard Carr) ஆகிய இருவரும், பெரு வெடிப்புக்கு முன் நிகழ்ந்த பெரு முறிவில் (Big Crunch) சில முன்னோடிக் கருந்துளைகள் (Primordial Black Holes) உருவாகி இருக்கலாம் என்றொரு புதிய கோட்பாடை அறிவித்துள்ளார்.   அதாவது பெருவெடிப்பு என்பது ஒரு தனித்துவ நிகழ்ச்சி இல்லை;   பிரபஞ்ச முறிவில் ஒற்றைப் புள்ளியாய்ச் சுருங்கிப் பிறகு வெடித்து விரியும்.  அப்படி அது மீண்டும், மீண்டும் ஏற்படும் ஒரு சுழல்  நிகழ்ச்சி என்று அறிவிக்கிறது..

    சில தருணங்களில் ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள ஒருசில கருந்துளைகள் தான் இம்மாதிரி விதிகட்குக் கட்டுப்படா தவை.  மேலும் அவை பிரபஞ்ச சுருக்க முறிவில் எப்படியோ தப்பி விடுகின்றன.   நமது சூரியன் நிறை முதல்  ஒருசில 100 மில்லியன் கிலோ கிராம் நிறைவரை உள்ள சிறு கருந்துளைகள் இந்த விதத்தைச் சேர்ந்தவை.

    இந்தப் புதிய கோட்பாடுக்கு ஆதரங்கள் என்ன ?   நமது பூமியும், மற்ற பிரபஞ்ச அண்டங்களும் சில சமயங்களில் காரணம் அறியப்படாத மூலச் சேமிப்பிலிருந்து காமாக் கதிர்த் தாக்குதலால் (Bursts of Gamma Rays) பாதிக்கப் படுகின்றன.   அலன் கோலி, பெர்னார்டு கார் ஆகியோர் கருத்துப்படி முன்னோடிக் கருந்துளைகள் நொடித்துப் போய் சக்தி இழந்து தேயும் வேளைகளில் இவ்விதக் காமாக் கதிர்கள் வெளியாகும் என்பது அவரது கோட்பாடு.   இந்தச் சின்னஞ் சிறு கருந்துளைகள் மிகக் குன்றிய காலத்திலே ஆவியாகிப் போய்ச் சிதைவாகி காமாக் கதிர்களாய்த் தீவிர வெடிப்பில் மறைந்து விடுகின்றன.  நாம் அடிக்கடி விண்வெளியில் நோக்கும் இந்த காமாக் கதிர் வெடிப்புகளே இவையாக இருக்கும் என்று சில விஞ்ஞானிகள் விளக்குகிறார்.

    முன்னோடிக் கருந்துளைகள் என்பவை எந்த வகைக் கருந்துளைகள் ?

    நாம் சாதாரணமாக அறிந்திருக்கும் கருந்துளைகள் ஒரு சூப்பர்நோவா (Supernova) உண்டாகும் போது உருவாகின்றன.   ஆனால் முன்னோடிக் கருந்துளைகள் என்பவை பிரபஞ்சப் பெருவெடிப்பு நேர்ந்த சமயத்தின் ஆரம்ப நிலைச் சக்தியில்  தோன்றிப் பிறகு விரிந்து பரவிச் செல்பவை.    அலன் கோலி, பெர்னார்டு கார் கோட்பாட்டின்படி இந்த முன்னோடிக் கருந்துளைகள் பிரபஞ்சச் சுருக்க முறிவின் (Collapsing Universe) போது, பெரு நசுக்கலில் (Big Crunch) உண்டாகி பிறகு வெளியேறி  ஒற்றைப் புள்ளி முனை முடக்குவ (Pinpoint Singularity) நிலைக்கு இழுக்கப் பட்டவை என்று அறியப் படுகின்றன.

    பெருவெடிப்புக்குப் பிறகு முன்னோடிக் கருந்துளைகள் உருவாகும் புதிய பிரபஞ்சத்தோடு இரண்டறக் கலந்து கொள்ளும்.   இதில் உள்ள சிரமம் என்ன வென்றால் பெருவெடிப்புக்கு முன் தோன்றிய முன்னோடிக் கருந்துளை களுக்கும், பின் தோன்றிய முன்னோடிக் கருந்துளைகளுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கண்டறிவது.

    ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நியதி

    பிரபஞ்சம் யுக யுகங்களாக நீடித்து வந்திருப்பதை நாமெல்லாம் அறிவோம்.  ஆனால் அந்த மட்டமான அறிவோடு நமது ஆர்வ வேட்கை நின்று விடுவதில்லை.  அதன் தோற்றத்தைப் பற்றியும், தோற்ற மாற்றத்தைப் பற்றியும் மாற்றத்தின் பண்பாடுகள் பற்றியும் நமக்குப் பல்வேறு வினாக்கள் தொடர்ந்து எழுகின்றன.  நமது பிரபஞ்சம் எப்படித் தோன்றியது ?  நமது முதிர்ந்த பிரபஞ்சத்துக்கு எத்தனை வயதாகிறது ?  எப்படி அதில் பிண்டமும் சக்தியும் (Matter & Energy) உண்டாயின ?  அவையெல்லாம் எளிய வினாக்களாகத் தோன்றினாலும் அவற்றின் விடைகள் மிகவும் சிக்கலானவை !  உலகப் பெரும் விஞ்ஞானிகள் பலரின் எதிர்ப்புக்கும் தர்க்கத்துக்கும் உட்பட்டவை !  நிகழ்காலம் கடந்த காலத்தின் நிழலாக இருப்பதால் நம் கண்முன் காண்பாதிலிருந்து நாம் காணாத முந்தையக் காட்சிகளை ஓரளவு அறிய ஏதுவாகிறது !  ஆனால் அவற்றில் பல விஞ்ஞானிகளின் கருத்துக்கள், கோட்பாடுகள் உறுதியற்ற ஊகிப்புகள்தான் (Speculations).

    பிரபஞ்சம் எப்படிப் படைக்கப் பட்டது ?  பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை அது மெய்யாக வரையறைக்கு உட்படாதது (Infinite) என்ற கருத்துக்கள் ஒரு காலத்தில் நிலவி வந்தன !  மேதைகளும், மதமும் வலியுறுத்திய பூமி மையக் கொள்கையி லிருந்து பரிதி மையக் கொள்கைக்கு வந்து சுமார் நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டன !  ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் ஊகித்த “பெரு வெடிப்புக் கோட்பாடு” (Big Bang Theory) அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபணமாகி 20 ஆம் நூற்றாண்டிலே உலக விஞ்ஞானிகள் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது.  பெரு வெடிப்புக் கோட்பாடை ஏற்றுக் கொண்ட பிறகு பிரபஞ்சத்துக்குத் தோற்ற ஆரம்பம் தொடங்கி காலக் கடிகார முள் நகரத் துவங்கியது.  பிரபஞ்சம் வரையறையற்றது என்னும் கருத்து மறைந்து போனது.  பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் முடிவும் ஊகிக்கப்பட்டு அதன் தோற்ற வளர்ச்சி வரலாறுகளும் எழுதப்பட்டன !

    fig-1f-content-of-the-universe

    சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (துல்லியமாக 13.7 பில்லியன் ஆண்டுகள்) ஓர் அசுரப் பெரு வெடிப்பில் பிரபஞ்சம் தோன்றி விரிய ஆரம்பித்தது.  அந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நிலையில் விண்வெளியில் இருந்த அனைத்துப் பிண்டமும் சக்தியும் ஒற்றைப் பிண்டமாய் அடங்கிக் கிடந்தன.  ஆனால் அந்த பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு என்ன இருந்தது என்பது சுத்த யூகிப்பாய் அமைந்து முற்றிலும் அறியப்படாமலே தொங்கிக் கொண்டிருந்தது !  அந்தப் பெரு வெடிப்பு மரபு வெடிகுண்டு போல் வெடிக்காது உட்பிண்டங்கள் உருமாறி ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டும் ஒளிவீசி நகர்ந்து கொண்டும் பலூனைப் போல் விரிந்து பெருகி வருகிறது பிரபஞ்சம் !  அதாவது பெரு வெடிப்பு பிரபஞ்சத் தோற்றத்துக்கு வித்திட்டது என்பது நிகழ்கால முடிவு !

    வேறோர் பிரபஞ்சத்துக்கு ஏற்பட்ட சீர்குலைவுப் பயணத்தின் பெரும் பாய்ச்சலில் (Bib Bounce) தற்போது நாம் வாழும் பிரபஞ்சமாய்ப் பிறந்திருப்பதாகத் தெரிகிறது என்னும் புதிய நோக்குக் கோட்பாட்டைப் பென்சிவேனியா மாநிலப் பலகலைக் கழகத்தின் துணைப் பேராசிரியர் மார்டின் போஜோவால்டு கணினி மாடல் ஒன்றைப் படைத்துக் கண்டுபிடித்திருக்கிறார்.

    fig-5-cobe-cosmic-background-explorer

    பிரபஞ்சத்தின் அரங்குகளை ஆராயும் கோப் விண்ணுளவி

    நாசா சமீபத்தில் அனுப்பிய “கோப் விண்ணளவி” (COBE Cosmic Background Explorer) பிரபஞ்சத்தின் வெளிப்புற நீட்சிகளில் உள்ள “அகிலவியல் நுண்ணலைகளை” (Cosmic Microwaves) உணர்ந்தறியச் சென்றது.  அந்த நுண்ணலைகள் பிரபஞ்சத் தோற்றத்தின் ஆரம்பக் கட்டங்களில் இருந்த ஒருமைப்பாடுடன் (Homogenity) மகத்தான முறையில் சமநிலையில் பரவி இருந்ததைக் கண்டுள்ளது.  மேலும் பிரபஞ்சம் வெப்ப நிலையிலிருந்து குளிர்ந்து தணிவு நிலை பெற்றுத் தொடர்ந்து விரிவாகி வருவதைக் கண்டு பிடித்திருக்கிறது. விரிவடையும் போது உண்டாகும் உஷ்ண மாறுபாடுகளையும் கண்டுள்ளது.  அந்த உஷ்ணத் திரிபுகள் ஏற்ற இறக்கங்கள் பிரபஞ்சப் பெரு வெடிப்பு ஆரம்பக்கால நிலைகளை அறிய உதவுகின்றன !

    நாசா கோடார்டு விண்வெளிப் பயண மையம் (NASA Goddard Space Fight Center) தயாரித்த துணைக்கோள்தான் கோப் விண்ணுளவி.  பூர்வக் காலத் தோற்றப் பிரபஞ்சத்தின் பரவிய உட்சிவப்பு & நுண்ணலைக் கதிர்வீச்சை (Diffuse Infrared & Microwave Radiation) அளந்து உளவிடவே அது பூமியைச் சுற்றி விண்வெளிக்குப் பயணம் செய்ய 1989 நவம்பர் 18 ஆம் தேதி அனுப்பப்பட்டது.  அதில் முக்கியமாக மூன்று கருவிகள் இருந்தன.

    1.  DIRBE – Diffuse Infrared Background Experiment : அகிலவியல் உட்சிவப்பு பின்புலக்
    கதிர்வீச்சை அளக்கும் கருவி.

    2.  DMR – Differential Microwave Radiometer : அகிலவியல் நுண்ணலைக் கதிர்வீச்சு மாறுபாடுகளை அளக்கும் கருவி.

    3.  FIRAS – Far Infrared Absolute Spectro-Photometer : நெடுந்தூர உட்சிவப்புத் தனித்துவ ஒளிப்பட்டை ஒளி அளப்புமானி

    பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்னால் நேர்ந்தது என்ன ?

    பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக் கழகத்தின் பௌதிகத் துணைப் பேராசியர் மார்டின் போஜோவால்டு ஒரு புதிய கணித மாடலைப் படைத்து “முடிச்சுத் துகளியல் ஈர்ப்புக் கோட்பாடு” (Loop Quantum Gravity Theory) ஒன்றில் ஆழ்ந்து சிந்தனை செய்தார்.  அது ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியையும் துகளியல் யந்திரவியலையும் (Relativity Theory & Quantum Mechanics) இணைத்தது.  அந்தக் கணிதச் சமன்பாட்டில் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலம் (Time T=0) என்று நிரப்பினால் பிரபஞ்சத்தின் தோற்றக் கொள்ளளவு பூஜியமில்லை என்பது தெரிய வந்தது.  மேலும் அடர்த்தி முடிவில்லாமை அல்ல (Density of the Universe is NOT Infinite) என்றும் தெளிவானது.  அதாவது அவரது புதிய கணித மாடல் பிரபஞ்சத்தின் தோற்ற கால நிலையை ஆராய உதவியது.

    fig-4-dark-matter-the-elementary-particle

    முன்பே இருந்த முடிச்சுத் துகளியல் கோட்பாட்டைப் புதிய கணித மொழியில் போஜோவால்டு எளிதாக்கினார்.  ஆனால் அவர் பயன்படுத்திய கணிதச் சமன்பாட்டு விதத்தில் ஒரு மகத்தான நிகழ்ச்சி பிரமிப்பை உண்டாக்கியது.  அதாவது தற்போதுள்ள நமது பிரபஞ்சத்துக்கும் முன்பாக வேறொரு பிரபஞ்சம் இருந்திருக்கிறது என்பதைக் காட்டி யுள்ளது.  இது சற்று சிக்கலான சிந்தனைதான்.  ஏனெனில் பிரபஞ்சப் பெரு வெடிப்பில் கால வெளி அந்தக் கணத்தில் தோன்றின என்பது அறியப் படுகிறது.  போஜோவால்டு கணிப்பு மெய்யானால் அது இதற்கு முந்தி இருந்த ஒரு பிரபஞ்சத்தை எடுத்துக் காட்டுகிறது.  அது எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டுள்ளது.  ஆனால் அது சிறுத்துக் குறுகிப் போய் பேரசுரத் திணிவில், பேரளவு உஷ்ணத்தில் மிகக் மிகக் குள்ளி காலவெளிக் கடுகாய்க் (Ultra-dense, Ultra-Hot & Ultra-Small Ball of Space Time) கிடக்கிறது !  ஏதோ ஓர் கட்டத்தில் எப்படியோ அந்த உஷ்ணத் திணிவுக் கடுகைத் “துகளியல் ஈர்ப்பாற்றல்” (Quantum Gravity) இழுத்துச் சுருக்கி வைத்துக் கொண்டது.

    fig-3-in-search-of-gods-particle

    இதை வேறு விதக் கண்ணோட்டத்தில் பிரபஞ்ச விளைவுகளைப் படிப்படியாகப் பின்னோக்கிப் பார்த்துக் கால மணி பூஜியத்துக்கு (Time T=0) நெருங்கினால் போஜோவால்டு கணித்த முந்தைய பிரபஞ்சத்தின் காணாத தோற்றம் தெரிகிறது.  போஜோவால்டு அந்த பூஜிய காலமணி நிகழ்ச்சியை “பெரும் பாய்ச்சல்” (Big Bounce) என்று குறிப்பிடுகிறார்.  அதாவது முந்தைய பிரபஞ்சம் அந்தப் பூஜிய கால மணியில் சீர்குலைந்து மறுபடியும் ஒரு புது முகப் பிரபஞ்சமாக, நமது பிரபஞ்சமாகக் குதித்தது என்று போஜோவால்டு கூறுகிறார்.  அவரது கணிசச் சமன்பாடு களில் பூர்வீகப் பிரபஞ்சத்தின் வடிவம் எத்தனை பெரியது என்பதைக் கணக்கிட முடியவில்லை.  ஆகவே போஜோவால்டு கோட்பாட்டில் அத்தகைய “உறுதியில்லா ஊகிப்புகள்” (Uncertain Speculations) இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    big-bang-cosmology

    குவாண்டம் ஈர்ப்பு நியதி (துகளியல் ஈர்ப்பு நியதி) என்ன கூறுகிறது ?

    கால-வெளிப் பிணைப்பு ஒற்றைப் பரிமாணக் குவாண்ட நூலிழைகளால் பின்னிய (One Dimensional Quantum Threads) ஓர் “அணு வடிவமைப்பைக்” (Atomic Geometry) கொண்டுள்ளதாகக் “குவாண்டம் ஈர்ப்பு நியதி” கூறுகிறது.  கால மணி பூஜியத்தில் பூர்வீகப் பிரபஞ்சம் முடிவில்லாமையில் புகுந்திடாது நமது விரியும் பிரபஞ்சமாகத் தாவிப் பிறந்தது.  குவாண்டம் ஈர்ப்பு நியதி அந்தப் “பெரும் பாய்ச்சலுக்கு” (Big Bounce) முன்பு சிறுத்துப் போன கால-வெளி வடிவமைப்புப் (Space-Time Geometry) பிரபஞ்சத்தைக் காட்டுகிறது.

    போஜோவால்டு மேலும் ஒரு புதிய முடிவைக் கண்டறிந்தார்.  பூர்வீகக் குவாண்ட ஈர்ப்புப் பிரபஞ்சம் தாவிச் செல்லும் பயணத்தின் போது அமைப்பு அங்கங்களில் குறைந்தளவு ஒன்று (One of the Parameters) தப்பிப் பிழைக்காமல் போகும் !  அதாவது அடுத்தடுத்துத் தாவிப் பிறக்கும் சந்ததிப் பிரபஞ்சங்கள் முன்னதைப் போல் பின்னது முழுமை அடைந்திருக் காது என்பதே அவர் மேலும் அறிந்து கொண்டது.  எப்போதும் ஒரே மாதிரி வாரிசுப் பிறப்புப் பிரபஞ்சம் தோன்றாமல் தடுக்கப்படுவதற்குக் காரணம் “அகிலவியல் மறதியே” (Cosmic Forgetfulness) என்று போஜோவால்டு கூறுகிறார்.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Big Bang Happen ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40711151&format=html[பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது ?]
    20 (a) COBE Space Probe to Glimpse infancy of the Universe – News from Princeton University (June 18, 2001)
    21. Dark Matter Mystery May Call for Revision of Laws of Physics (August 7, 2007)
    22. PhysOrg.com : Probing Question : What Happened Before the Big Bang ?
    23 Sceince Daily : What Happened Before the Big Bang ? (July 3, 2007)
    24 The Big Bang By : Chris LaRocco & Blair Rothstein
    25 PhysOrg.com – What Happened Before the Big Bang ? (July 1, 2007)
    26. Astronomy Magazine – What Happened Before the Big Bang ? By : Philips Plait (July 1, 2007)
    27 What Happened Before the Big Bang ? By : Paul Davis
    28 (1) How Did the Universe Begin ? (2) It Started with a Bang ? (3) Creating a Universe Creation Theory (4) Hartle-Hawking Universe Model – No End of Universe Creation Thories (5) Turok’s Inflationary Theory Work – Reforming the Inflationary Theory.  Website University of Victoria, B.C. Canada.

    29.Discover http://discovermagazine.com/2004/feb/cover/article_print   (July 13, 2012)
    30.  Scientific American – Follow the Bouncing Universe By : Martin Bojowald [Oct 2008]
    31. Astronomy Magazine – Cosmos Before There Was Light – Seeing the Dawn of Time By : Adam Frank (January 2007)

    32   Was there a Black Hole before the Bib Bang ?   May 1, 2011

    33.   http://www.theatlantic.com/technology/archive/2012/01/what-happened-before-the-big-bang-the-new-philosophy-of-cosmology/251608/  (Jan 19, 2012)

    34. Daily Galaxy : Some Black Holes Existed Prior to the Big Bang  (Jan 13, 2012)

    35. https://cosmosmagazine.com/space/recreating-beginning-time  [June 29, 2015]

    36. https://thesciencepage.com/vestiges-exist-of-a-universe-prior-to-the-big-bang-physicists-see-a-starkly-different-beginning-to-the-cosmos/

    37.  http://www.dailygalaxy.com/my_weblog/2017/11/vestiges-of-a-universe-previous-to-the-big-bang-exist-physicists-see-a-starkly-different-beginning-t.html  [November 27, 2019]

    (தொடரும்)

    ******************
    S. Jayabarathan (jayabarathans@gmail.com) ( December 23 , 2017) [ R-1]

    Share