Blog

  • குறுந்தொகை நறுந்தேன் – 16

    -மேகலா இராமமூர்த்தி

    தலைவன் மீண்டும் பொருள்தேடுவதற்காகத் தன்னைப் பிரிந்துசெல்ல விழைகின்றான் எனும் உண்மை புலப்படவே தலைவியின் மனத்தில் மீண்டும் கவலை வலை பின்னலாயிற்று.

    பொருளின்றி இனி நெடுங்காலம் வளமாய் வாழவியலாது எனும் எண்ணம் தலைவனின் உள்ளத்தை அலைக்கழித்துக்கொண்டிருந்தது.

    அவ்வேளையில் தலைவிபேணும் இல்லறத்தை அருகிருந்து காண வந்திருந்தாள் அவள் ஆருயிர்த்தோழி. கவலையினால் இருண்டிருந்த தலைவி முகம் தோழியின் வரவுகண்டு சற்றே மலர்ந்தது. விரைந்து வாயிலுக்குச் சென்று அவளைக் கட்டியணைத்து அகத்தினுள் அழைத்துவந்தாள்.

    வீட்டினுள் வந்த தோழி, தலைவனைக் கண்டு நலம் விசாரித்தாள். தலைவனும் அவளை முகமலர்ச்சியோடு வரவேற்றான்.

    பிறகு தலைவி தோழியை அழைத்துக்கொண்டு அடுக்களைப் பக்கம் சென்றாள். “எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது உன் மணவாழ்க்கை?” என்று மெதுவாக ஆரம்பித்தாள் தோழி.

    “நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கின்றது….ஆனால்…” என்று தலைவி இழுக்கவும், ”ஆனால் என்ன?” என்றாள் தோழி தலைவியின் முகத்தைக் கூர்ந்துநோக்கியபடி.

    ”ஒன்றுமில்லை…” என்று தலைவி மழுப்பவே, ”ஒன்றுமில்லை என்று நீ சொல்லும் தோரணையே ஏதோ இருக்கின்றது என்பதைக் காட்டிக்கொடுக்கிறதே…என்னிடம் எதற்கு மறைக்கவேண்டும்? நடந்ததைச் சொல்!” என்று தூண்டினாள் தோழி.

    cactus”காலத்தில் பெய்தலை உடைய மழை பெய்யாதுநீங்கிய தனிமைமிகு பாலைநிலத்தில், கவைத்த முள்ளினையுடைய கள்ளியின் காய் வெடிக்கும்போது விடும் கடிய ஒலியானது, நெருங்கிய மென்சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய சோடிப் புறாக்களை நீங்கசெய்கின்ற அருவழிகள் கடத்தற்கரியனவென்று கருதாமல் பொருளீட்டும் பொருட்டுத் தலைவர் நமைத்துறந்து பிரிவாராயின் இவ்வுலகத்தில் நிச்சயமாகச் செல்வமே உறுதிப் பொருளாவது; அருள் தன்னை ஏற்பார் யாருமற்ற அநாதையானது” என்றாள் தலைவி; அவள் கண்களில் நீர் துளிர்த்தது.

    பெயன்மழை  துறந்த  புலம்புறு  கடத்துக்
    கவைமுட்  கள்ளிக்  காய்விடு  கடுநொடி
    துதைமென்  தூவித்  துணைப்புற  விரிக்கும்
    அத்தம்  அரிய  என்னார்  நத்துறந்து
    பொருள்வயிற்  பிரிவா  ராயினிவ்  வுலகத்துப்
    பொருளே  மன்ற  பொருளே
    அருளே  மன்ற  ஆருமில்  லதுவே.   (குறுந்: 174 – வெண்பூதியார்)

    இதே பொருளமைந்த மற்றொரு பாடலும் தலைவி கூற்றாகக் குறுந்தொகையில் இடம்பெற்றிருப்பது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.

    அருளும் அன்பும்  நீக்கித் துணைதுறந்து
    பொருள்வயிற் பிரிவோர்  உரவோ  ராயின்
    உரவோர்
     உரவோர்  ஆக
    மடவ
     மாக  மடந்தை  நாமே.  (குறுந்: 20 – கோப்பெருஞ்சோழன்)

    பாண்டிநாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு (முகத்துக்கு முகம்) பாராமலேயே அகநட்பு பாராட்டிய சோழமன்னன் கோப்பெருஞ்சோழன், அரச புலவனாகவும் திகழ்ந்துள்ளமையை இப்பாலைப் பாடல் புலப்படுத்துகின்றது. இப்பாடலேயன்றி, மருதத்திணையில் ஒரு பாடல் #53, குறிஞ்சித் திணையில் ஒரு பாடல் #129, மற்றொரு பாலைப் பாடல் #147 என 4 பாடல்கள் கோப்பெருஞ்சோழனின் பெயரால் குறுந்தொகையில் காணக்கிடைப்பது சோழனின் கவிபாடும் திறமைக்குத் தக்க சான்றுகளாகும்.

    ஈதொப்ப,

    ”…அருளி லாளர் பொருள்வயி னகல
    எவ்வந்
    தாங்கிய இடும்பை நெஞ்சத்து
    யானெவன்
    உளனோ தோழி….” (அகம்: 305) எனும் பாடலும் தலைவனின் அருளற்ற பொருள்வயிற் பிரிவை எண்ணித் தலைவி தோழியிடம் கவலும் பாடலே.

    சரி… தலைவி தோழி உரையாடலை விட்ட இடத்திலிருந்து நாம் தொடர்ந்து செவிமடுப்போம் வாருங்கள்!

    தலைவன் மீண்டும் பொருள்தேடச்செல்ல உத்தேசித்துள்ளான் என்பதைத் தலைவி வாயிலாய் அறிந்த தோழி,

    ”பெண்ணே! ஆடவர்க்கு வினைதான் உயிர் என்று சொல்லத் தொடங்கவும், எங்கே தலைவன் பொருள்தேடிப் போவதை இவள் நியாயப்படுத்த முனைகிறாளோ என்று ஐயுற்ற தலைவி அவளை அச்சத்தோடு நோக்க, அவள் மனத்தைப் படித்தறிந்த தோழி, ஆனால் தம்இல்லம் கடவாது மனையுறைகின்ற மகளிர்க்கோ அந்த ஆடவர்தானே உயிர்? இதனை நம்மிடம் சொன்னவரே தலைவர்தான். அப்படியிருக்க உடலாகிய உனைநீங்கி உயிராகிய அவர் எங்ஙனம் பிரிவார்? ஒருநாளும் பிரியார்!” என்றுகூறித் தலைவியின் விழிநீரை வழித்தெறிந்தாள்.

    வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
    மனையுறை
    மகளிர்க்கு ஆடவர்  உயிரென
    நமக்குரைத்
     தோருந்  தாமே
    அழாஅல்
     தோழி அழுங்குவர் செலவே.     (குறுந்: 135 – பாலைபாடிய பெருங்கடுங்கோ)

    ”தலைவிமீது கொண்ட காதல்நீங்கி நான் பொருளைநாடிப் பிரிவது அவள் சாதலுக்கு வழிவகுக்கும்” என்று தலைவன் தன் நெஞ்சுக்கு உரைப்பதுபோன்ற ஓர் அகப்பாடலும் இங்கே எண்ணிப்பார்க்க ஏற்றது.

    ….நோங்கொல் அளியள் தானே யாக்கைக்கு
    உயிரியைந்
    தன்ன நட்பின் அவ்வுயிர்
    வாழ்தல்
    அன்ன காதல்
    சாதல்
    அன்ன பிரிவரி யோளே.  (அகம்: 339 – நரைமுடி நெட்டையர்/நிறைமுடி நெட்டையார்)

    ஆக, தான் பிரிவதால் தலைவியின் உடலும் உயிரும் கெடும் என்பது தலைவனுக்குத் தெரியாமலில்லை. அது தெரிந்தபின்னும் அவன் துணிந்தே அவளைப் பிரிந்துசெல்கின்றான் என்பதை அறிக.

    தலைவிக்கு ஆறுதல்மொழி பகர்ந்து அவளைத் தேற்றிய தோழி, தலைவனின் உளக்குறிப்பை உய்த்துணர அவனிருக்கும் அறைநோக்கிச் சென்றாள்.

    அங்கே அலைபாயும் மனத்தோடு குறுக்கும் நெடுக்கும் உலவிக்கொண்டிருந்த தலைவன் தோழியைக் கண்டதும், நடைபயில்வதை நிறுத்திவிட்டு அவளை வரவேற்றான்.

    தலைவனின் முகத்தை உற்றுநோக்கிய தோழி அதில் தெரிந்த சிந்தனைக் கோடுகளை கவனித்தாள்.

    துணிவை வரவழைத்துக்கொண்டு ”ஐய! உம்மையே காப்பாக எண்ணித்தானே என்னருமைத் தோழியை இல்லறம்பேண உம்மோடு அனுப்பி வைத்தேன். நீர் இப்போது அவளைப் பிரிந்து மீண்டும் பொருள்தேட விழைவதாய் அறிகின்றேன். அது மெய்தானா?” என்றாள்.

    தலையசைப்பில் தன் ஆமோதிப்பைத் தெரிவித்தான் தலைவன்.

    அதுகண்ட தோழி, “கண்ணியை அணிந்த கொம்பையும், தன்னினத் தலைமையும் உடைய நல்ல மலை எருதானது, செவ்விய தண்டுகளையுடைய அறுகின்  நீண்ட கொத்தைக் கடித்துத் தின்னும் மடப்பம் பொருந்திய கண்ணையுடைய மலைப் பசுவைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு, புல்லிய அடியையுடைய உகாஅய் மரத்தின் வரி நிழலில் தங்குகின்ற கடத்தற்கரிய இன்னா அருஞ்சுரத்தை இனிய துணைவியை நீத்துக் கடத்தல் உமக்கு இனிமையுடைத்தோ பெரும?” என்றாள் அகவருத்தம் முகத்தில் தோன்ற.

    கண்ணி  மருப்பின்  அண்ணல்  நல்லேறு
    செங்கோற்  பதவின்  வார்குரல்  கறிக்கும்
    மடக்கண்
     வரையா  நோக்கி  வெய்துற்றுப்
    புல்லரை  யுகாஅய்  வரிநிழல்  வதியும்
    இன்னா  அருஞ்சுரம்  இறத்தல்
    இனிதோ  பெரும  இன்துணைப்  பிரிந்தே. (குறுந்: 363 – செல்லூர்க் கொற்றன்)

    தோழியின் கேள்விக்குப் பதிலேதும் அளிக்கவில்லை அந்தப் பெருமான்.

    [தொடரும்]

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171220 -Tiruppavai 05 -Mayan -lr (Mayan-manivannan-Manivilakku-Kudal vilakkam (shows the world to yashoda)-Damodara(when he is tied up the soul is free) Theeyinil doosagum (sins become dust.) etc., watercolour 24x32 cms
    171220 -Tiruppavai 05 -Mayan -lr (Mayan-manivannan-Manivilakku-Kudal vilakkam (shows the world to yashoda)-Damodara(when he is tied up the soul is free) Theeyinil doosagum (sins become dust.) etc., watercolour 24×32 cms

    கயிற்றுதரக் கண்ணன்மேல்(தாமோதரர்) காதல்கொண்(டு) அன்று
    இயற்றினாய் பாடல் எமக்காய் -பயிற்றுவித்த
    தாதையுடன்(அப்பா பெரியாழ்வார்) சென்றந்த கீதையோன் கைப்பிடித்த
    கோதைக்கை கோகிலமே காப்பு….!

    ”எத்தனுக்(கு) எத்தனந்த ஏரார்ந்த கண்ணியவள்
    பெத்தெடுக் காதஅப் பிள்ளையை -முத்துடை
    பந்தலுக்குக் கீழே பதியாய்ப் பிடித்திழுத்து
    குந்தவைத்தக் கையிரெண்டும் காப்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171215 -Periyazhwar Tirumozhi 1-6-1 Uyya Ulagu-lr -watercolour - 24x32cms
    171215 -Periyazhwar Tirumozhi 1-6-1 Uyya Ulagu-lr -watercolour – 24x32cms

    கடவுள் மடியில் கிடக்கும் வரையில்
    அட!உள் வெளியேது அஞ்சேல்! -கடலுள்ளே
    பன்னகத்தில்(பாம்பில்) யோகம் பயிலும் பரம்பொருளாம்
    கன்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!

    Share
  • சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்

    தன்வந்திரி பீடத்தில்

    சனிப்பெயர்ச்சி மஹா யாகமும்

    காலச்சக்ர பூஜையும்

    IMG_20171219_114410

    இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று 4ம் தேதி மார்கழி மாதம் செவ்வாய் கிழமை 19.12.2017 காலை சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு

    இடப்பெயர்ச்சியானதை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் காலை 06.00 மணிக்கு கோ பூஜை, 07.00 மணிக்கு யாகசாலை பூஜை, 08.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 09.00 மணிக்கு கலச பூஜை போன்ற பூர்வாங்க பூஜைகளுடன் தன்வந்திரி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், நவகிரக ஹோமம், மற்றும் சனி தோஷ நிவர்த்தி பூஜையுடன் சனிபெயர்ச்சி யாகம் நடைபெற்று 27 நக்ஷத்திரங்களுக்கு உரிய விருட்சங்களுக்கும் 9 நவகிரக விருட்சங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்று வன்னி விருட்சத்திற்கு சிறப்பு பூஜையுடன் காலச்சக்ர பூஜையும் நடைபெற்றது.

    IMG-20171219-WA0019

    இதனை தொடர்ந்து சனியால் உண்டான பாதிப்புகள் குறைய ஊனமுற்றோர்க்கு உதவி, முதியோர்க்கு அன்னதானம், வஸ்திர தானம், எள்ளு தானம்,நல்லெண்ணைய் தானம், மற்றும் இரும்பு தானம், வழங்கப்பட்டது. இதில் ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்கள் மற்றும் சனிதிசை,சனிபுத்தி நடப்பவர்கள் சங்கல்பம் செய்துகொண்டனர். இந்த யாகத்தில் ஆற்காடு மஹாலக்ஷ்மி நர்சிங் கல்லூரி சேர்மன் திரு D.L. பாலாஜி அவர்கள், திரு. ஜகத் ஜீவன் ராம், கோவை கிரிஜா சம்பத் குமார், தன்வந்திரி பீட அறங்காவலர்கள், மற்றும் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திர, கர்நாடக பக்தர்கள் பங்கேற்றனர்.

    இந்த யாகத்தில் கலந்துகொண்டவர்களுக்கு ஸ்வாமிகள் அருளாசி வழங்கி மகா யாகத்தில் வைத்து பூஜிக்கப்பெற்ற தன்வந்திரி பகவான் டாலர், புகைப்படம், ஹோம பிரசாதத்துடன் 2018 தினசரி காலண்டர் வழங்கி ஆசிர்வதித்தார். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிறைவாக சென்னை பிரபல ஜோதிடர் திரு ஆதித்ய குருஜி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் -40

    க. பாலசுப்பிரமணியன்

    உள்ளத்தின் உள்ளே இருப்பவனே…

    திருமூலர்-1-3-3-1

    இறையின்பத்தை அனுபவிக்கத் துடிக்காத மாந்தர்கள் கிடையாது. சிலர் தங்கள் பார்வைகளாலும், சிலர் தங்கள் அறிவின் மூலமாகவும், சிலர் தங்கள் அனுபவங்களின் மூலமாகவும், இன்னும் சிலர் தங்கள் அனுபூதிகள் மூலமாகவும் இறைவனை நாடத் துடிக்கின்றனர். சிலர் மலைகளின் உச்சியில் கல்லில் கடவுளைத் தேடுகின்றனர். சிலர் கடல், குளம், நதிகள் இவற்றின் கரைகளில் அந்த ஆனந்த மூர்த்தியைத் தேடி வழிபட நினைக்கின்றனர். சிலர் மந்திரங்கள் சொல்லி அதன் மூலமாக அடையத் துடிக்கின்றனர். இன்னும் சிலரோ இசையின் மூலமாக அந்த நாதத்தின் மூலவனை நாட விழைகின்றனர். அவன் உண்மையில் எங்கு இருக்கின்றான்?

    என்ன விந்தை! அவன் யார்யார் எவ்வாறு விரும்புகின்றனரோ அவ்வாறே அவர்களுக்குத் தோன்றுகின்றான். அவர்கள் விரும்பியபடியே அவன் வந்தடைகின்றான். இது எப்படி நடக்கின்றது?

    உண்மையில் உள்ளத்தின் உள்ளே இருக்கின்ற அவன் கூப்பிட்ட குரலுக்கு வருபவன். அன்போடு, பணிவோடு, அறத்தோடு அவனை நாடினால் அவன் நிச்சயமாகத் தோன்றுவான். இப்படிப்பட்டவனை நாம் எதற்கு மலை கடல் மற்றும் வேறு பல இடங்களில் தேட வேண்டும் ?

    திருமூலர் கூறுகின்றார்:

    உள்ளத்தின் உள்ளே உள் பலதீர்த்தங்கள்

    மெல்லக் குடைந்துநின் றாடார் வினைகெடப்

    பள்ளமும் மேடும் பரந்து திரிவரே

    கள்ள மனமுடைய கல்வி யிலோரே !

    தன் உள்ளங்களுக்குள் தேடுபவர்களுக்கு உள்ளத்திலேயே நின்று அருளுகின்ற பெருந்தகை வேண்டுவோர்க்கு வேண்டியபடி வருபவன். இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இவ்வாறு அவனைப் போற்றுகின்றார் :

    ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்

    சேயானை சேவகனைத் தென்னன் பெருந்துறையின்

    மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை

    நாயென நந்தம்மை ஆட்கொண்ட நாயகனை

    தாயான தத்துவனை தானே உலகேழும்

    ஆயானை ஆள்வானை  பாடுதுங்காண் அம்மானாய்!

    இவ்வாறு இறைவனின் அருளை நாடும் மாணிக்கவாசகருக்கு அவன் பேரொளியின் அனுபவம் எப்படியிருந்தது? இதோ, அவரே கூறுகின்றார்:

     ஊனாய் உயிராய் உணர்வாய்என் நுட்கலந்து

    தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்

    வானோ ரறியா  வழியெமக்குத் தந்தருளுந்

    தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்

    ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்குள்

    கோனாகி  நின்றவர் கூறுதுங்காண் அம்மானாய் !

    இதே அனுபவ நிலையை நாம் பத்திரகிரியாரிடமும் பார்க்கின்றோம். தன்னையே அறியாத  நிலையில் தடுமாறும் மனதைப்  பார்த்து அவர் கேட்கின்றார் :

    ஊனாகி யூனி  லுயிராகி யெவ்வுலகுந்

    தானாகி நின்ற தனையறிவ தெக்காலம் ?

    என்னைவிட்டு நீங்காம  லென்னிடத்தில் நீயிருக்க

    உன்னைவிட்டு நீங்கா தொருப்படுவ தெக்காலம் ?

    உள்ளத்தின் உள்ளே இருந்துகொண்டு அவன் என்னதான் செய்கின்றான்? அவன் செய்யும் மாயத் தந்திர வேலைகள் என்னென்ன? பதில் நமக்கு கிடைக்கின்றது பட்டினத்தாரிடமிருந்து:

    உள்ளார்க்கு முள்ளாண்டி யூருமில்லான் பேருமில்லான்

    கள்ளப் புலனருக்கக் காரணமாய் வந்தாண்டி.

    அப்பிறப்புக் கெல்லாம் அருளா யமர்ந்தாண்டி

    இப்பிறப்பில் வந்தா னிவனாகு மெய்ப்பொருள்காண்

    எத்தனை ஆழமான சிந்தனையில் நம்பிக்கையில் அனுபவ நிலையில் சொல்லப்பட்டவை இந்தச் சொற்கள்.

    இந்தக் கருத்தையே இன்னும் பாராட்டும் வண்ணம் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறுகின்றார்: 

    கறந்தபால் கன்னலொடு  நெய்கலந்தால் போலச்

    சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

    பிறந்த பிறப்பறுக்கு மெங்கள் பெருமான் “

    இறைவனைத் தங்கள் உள்ளே நிறுத்தி ஆனந்த நிலையில் அடியார்கள் அனுபவங்களைச் சொல்லிக் கேட்க நமது சிந்தனைகள் மேலும் வளம்பெருமன்றோ ?

    தொடருவோம்

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -5

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருநாகை (அருள்மிகு அழகியன் -சௌந்தரராஜப் பெருமாள் )

    Koodal-Azhagar-Perumal-Vishnu-Temple1st1-1397192

    நீலவண்ணப் பீலியழகு சிகையழகு மலரழகு

    நீலவிழி தவழுகின்ற நிலவழகு இமையழகு

    நிலைதேடி உருண்டோடும் கருவிழிக் கலையழகு

    நினைவழகு நினைக்கும் காலத்தின் கருவழகு !

     

    தோளழகு துவளாமல் துணைநிற்கும் துளசியழகு

    துடிக்கின்ற மார்பினிலே துணைகொண்ட திருவழகு

    துய்யாமல் துய்க்கின்ற தோரணையில் துயிலழகு

    தோத்திரங்கள் சொல்லழகு சொல்லுண்ட பொருளழகு

     

    கைகொண்ட சக்கரமும் களமொலிக்கும் சங்குமழகு

    கரையில்லா அருளழகு கலிநீக்கும் தாளழகு

    கணத்தினிலே கைகொடுக்கும் கண்ணன் நட்பழகு

    காலமெல்லாம் போற்றிடவே புவிபெற்ற வாழ்வழகு !

     

    பேரழகே நீநின்றால் பேரருளே உனைக்கண்டால்

    பேரின்பம் கிடைக்காதோ வேறின்ப வாழ்வெதற்கு ?

    பேரிடரால் யுகம்மாறப் பெருமாளே நீநின்றாய்

    பேதமின்றி சத்தியத்தில் திரேதத்தில் துவாபரத்தில் !

     

    கரையில்லா அன்போடு பெருகிடும் காவிரிக்

    கரைதன்னில் கனிவோடு குறைதீர்க்கும் துறைவனே !

    கதியென்று உனைத்தேடிக் காலடியில் நின்றோமே

    கணநேரம் எனைக்காணக் களிப்போடு வருவாயோ?

     

    நின்றாலும் நடந்தாலும் அமர்ந்தாலும் கிடந்தாலும்

    நிலையான உன்னெழிலுக்கு ஈடில்லை நீர்வண்ணா !

    நினைவெல்லாம் உன்னுருவே நிதியாக இருந்திட்டால்

    நிலையாத வாழ்விற்கு ஈடேது மணிவண்ணா !

     

     

     

    Share
  • பெண் எனும் பிரபஞ்சம்..!

    பெருவை பார்த்தசாரதி

    விண்ணில் காணும் கார்மேகத்தையும் வெண்ணிலவையும்..
    வியந்து நோக்கும்போது என்னுளவளே தெரிகின்றாள்.!
    மண்ணில் உலவும் அனைத்துயிரிலும் அன்புணர்வுகள்..
    மலர்வதைப் பார்க்கின்றேன்!….அவளின் கருத்தரிப்பில்.!
    தண்ணீரில் மிதக்கும்தாமரையும் அல்லியுமலர்வது அவளின்..
    தளிர்நடை கண்டபிறகுதானென கவிதையும் பாடுவேன்.!
    மண்டலத்தில் மாறாத வாசமனைத்துமவள் சொந்தமோ?.
    பெண்ணவள் பிரபஞ்ச மனைத்திலும் நிறைந்திருப்பாள்.!

    மண்ணிலவதரித்த அழகான மனுஷியர்களங்கே கூடுவார்..
    மானுடர் நிறையுமேடையும் அண்டமும் இதைக்காணும்.!
    பெண்தானுலகிலேயே அழகுப் பண்டமெனக் கூடிப்பேசுவர்..
    பொன்னுமுத்துமணியாப் பேரழகி யாரெனறிய முனைவர்.!
    பெண்ணுக்குள் மறைந்திருக்கும் ரகசியத்தை? அழகியர்தன்..
    பேச்சில் நடையழகில் நாடுபுகழச்செய்வர்!.நடப்புவருடம்.!
    பெண்ணெனும் பிரபஞ்சழகியைப் பெற்றெடுத்த பெருமை..
    பாரதமென!..பாருலகு அறியவைத்தார் மானுஷிசில்லார்.!

    இரும்புமனுஷி எனவெப்போதும் இவரைப் புகழுவார்கள்..
    இழந்தும் இன்றுவரை இவர்தான் பெண்சிங்கமென்பார்.!
    பெரும்பேரன்பு இவர்மீது கொண்டவர்கள் ஏழரைகோடி..
    பெற்றவளைவிட்டு இவரையே தாயாகக் கொண்டார்கள்.!
    அருளும் அன்னதானமெனும் அருங்கொடை தந்ததால்..
    அலையுமேழையர் வயிற்றுப் பசியறியா உணர்வுற்றனர்.!
    பருவமங்கைமுதல் பிரகாசித்து பரலோகம் செல்லும்வரை..
    பிரபஞ்சமே புகழப் பெருமையுற்றவளொரு பெண்தான்.!

    தீவிரவாதத்துள் அமிழ்ந்திருந்த அத்தீயவர்களுக் கெதிராக..
    தீக்குரல்கொடுத்தவள் குண்டுகளைப் பரிசாகப் பெற்றாள்.!
    பாவியரின் கொடுஞ் செயலவளைப் பள்ளத்தாக்கிலிருந்து..
    பார்புகழும் ஐநாசபைவரை அழைத்துப் புகழ்சேர்த்தது.!
    ஜீவிதத்திற்குப் பெண்கல்வியும் சமத்துவமும் அவசியமென..
    சீராகயுழைத்து சிறப்புற்ற நோபல்பரிசினை வென்றாள்.!
    மாவீரத்துக் கடையாளமாய் மாலாலாவெனும் மகத்தான..
    முத்திரையை இளவயதுமங்கை பிரபஞ்சத்தில் பதித்தாள்.!

    ============================================

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::11-12-17

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171219 -tiruppavai 04_lr -24x32cms -(Andal appeals to the Krishna, the Lord of Varuna, to shower bountiful rains. Reference also to the Acharya, akin to the rain bearing cloud, not to hold back anything that they can explain.-Uthamur swami.)
    171219 -tiruppavai 04_lr -24x32cms -(Andal appeals to the Krishna, the Lord of Varuna, to shower bountiful rains. Reference also to the Acharya, akin to the rain bearing cloud, not to hold back anything that they can explain.-Uthamur swami.)

    எங்கிருந்தோ வந்தென் இதயம் புகுந்தானை,
    சங்கிருக்கும் கையானை சாரங்கனை -திங்கள்நன்
    மார்கழியில் பாடி மணம்புரிந்த ஆண்டாளே,
    நேர்வழியில் எம்மை நடத்து….கிரேசி மோகன்….!

    Share
  • இந்திய மக்கள் நலம்பெற வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    பிரதமர் மோடி அவர்களுக்கு உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம். கட்சியையும் தாண்டி தனிப்பெரும் ஒரு தலைவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையே இந்த வெற்றி காட்டுகிறது. சென்ற முறை அடைந்ததைவிட குறைவான இடங்களைப் பெற்றாலும் இந்த வெற்றி பாராட்டுதலுக்குரியதே. பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பாக மக்கள் வாக்களிப்பார்கள் என்ற மாயையை உடைத்தெறிந்து கிடைத்த இந்த வெற்றி மேலும் சிந்திக்கவைக்கத்தக்கதே. பல தொகுதிகளில் வாக்களிப்பட்ட நோட்டோ எண்ணிக்கை எதிர் கட்சியினருக்கு வாக்களிக்கப்பட்டிருந்தால் இந்த வெற்றி கிடைக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். தற்போது மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளெல்லாம் சிற்சில மாற்றங்கள் செய்தாலே பொருளாதாரத்திற்கும், நாட்டு மக்களுக்கும் பயன் தருவதாக அமைவதால் மக்களின் நம்பிக்கையை மேலும் பெறக்கூடும். நோட்டோ வாக்களித்தவர்களின் நிலையை மாற்றி அவர்களுக்கு இந்தியப் பொருளாதாரத்தின்மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்பட்டால் அருதிப் பெரும்பான்மை மக்களின் ஆதரவு பி.ஜே.பி. கட்சிக்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, பெரும்பான்மையான மக்கள் 70 விழுக்காட்டிற்கும் அதிகமாக பிரதமர் மோடி அவர்களை தனிப்பெரும் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். 29 மாநிலங்களில் 19 மாநிலங்கள் பிரதமரின் ஆளுமையை ஏற்றுள்ளனர் என்பது எதிர்கால செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய செய்தி என்பதில் ஐயமில்லை. வெற்றி அதிகரிக்கும் அதே வேளையில் பொறுப்புகளும் கூடுகிறது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் மக்கள் நலம் சார்ந்ததாகவும், வாழ்வாதாரம் பாதிக்காமல், ஏற்றம் பெறும் வகையிலும் இருக்க வல்லமையின் உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!

    எதிர்க்கட்சியான காங்கிரசிற்கும் 41.4% மக்கள் வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சி என்பதாலேயே பிரதமர் கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களையும் எதிர்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையும் மக்கள் கொண்டுள்ளனர். தற்போது ஏற்பட்டிருக்கும் முதிர்ச்சியான செயல்பாடுகள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் இணைந்து செயல்படுவதையே மக்கள் பெரிதும் எதிர்பார்த்து இருக்கின்றனர் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

    Share
  • இந்த வார வல்லமையாளர் (253)

    இவ்வார வல்லமையாளராக இயக்குநர் சமுத்திரகனியை தேர்ந்தெடுக்கிறோம்.

    மதுரையில் மலையாக குவிந்திருக்கும் குப்பைகளை குறித்த செய்தி சமூக ஊடகங்களில் வெளியானது. அதை வல்லமையிலும் மீள்பதிவு செய்திருந்தோம்.

    அதன்பின் விழித்துக்கொண்ட மாநகராட்சி “தூய்மை தூதுவர்கள்” எனும் திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்றுவதை முன்னெடுக்கும் வகையிலான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி, நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து, ரேடியோ தொகுப்பாளர் ரமணா ஆகியோர் தூய்மைத் தூதுவர்களாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

    இந்த நிகழ்வில் பேசிய சமுத்திரக்கனி “நமக்குப் பிரச்னை என்றால் மட்டுமே நாம் சத்தம் போடும் காலம் போய் விட்டது. தற்போது எல்லோருக்கவும் குரல் கொடுக்க வேண்டிய அளவுக் குப்பைகள் நம்மை சூழ்ந்துவிட்டது. முன்பு நமது முன்னோர்கள் காலத்தில் நாம் பயன்படுத்திய பொருளின் எச்சத்தை வீட்டுக்குப் பின்னால் போட்டு, அந்தக் குப்பை உரமாக்கி வயலுக்குப் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த நிலை மாறிவிட்டது. வரும் காலத்தில் உணவுக்காகத்தான் உலகச் சண்டை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஒருவன் வரும் காலத்தில் நான்கு இட்லி வைத்திருந்தால், அதைப் பிடுங்கித் தின்னும் காலம் வரப்போகிறது. நம் முன்னோர் விட்டுச் சென்ற பல பொக்கிஷங்களை நாம் காணாமல் செய்துவிட்டோம், அதை மீட்க வேண்டும். அனைவரும் ஒன்று படுவோம் பாரம்பர்யத்தை மீட்போம்’’ என்றார்.

    இவர் விழிப்புணர்வு ஊட்டும் படங்களை எடுப்பதிலும் திறமையானவர். இவர்நடித்த விசாரணை படம் போலிஸின் பிடியில் சிக்கி பொதுமக்கள் படும் அவதிகளை சுட்டிகாட்டியது. அதற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இவரது அப்பா படம் ஒரு தந்தையின் கடமையை மிக அழகாக எடுத்துரைத்த படம்.
    சுற்றுசூழலை மேம்படுத்தும் பணியை இவர் திறம்பட ஆற்றுவார் என நம்பியும், வருங்கால இளைஞர்களுக்கு சுற்றுபுறசூழலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும் இவரது தேர்வு அமையும் என வல்லமை நம்புகிறது.

    வல்லமையாளர் சமுத்திரகனிக்கு நம் நல்வாழ்த்துகள்

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • மார்கழி மணாளன் ( மூன்றாம் பகுதி) -4

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருவாலி -திருநகரி  (அருள்மிகு அழகிய சிங்கர்)

    sri-azhagiya-singar-triplicane-2

    கண்களில் கனலும் கைகளில் நகமும்

    உள்ளத்தில் சினமும் உறுமிடும் குரலும்

    ஒப்பிலா வீரமும் ஒன்றிய சிங்கமாய்

    உருவமே எடுத்தாய் அழகிய சிங்கா !

     

    தூண்களைப் பிளந்து தோன்றிய ஒளியே

    தானெனும் அகந்தையை அடக்கிய அரியே !

    தாயெனும் கருணை நெஞ்சினில் நின்றும்

    தருமங்கள் காக்க நெருப்பென வந்தாய் !!

     

    முன்னும் பின்னும் முடிவாய் பிரித்து

    முகத்தினில் குருதியால் முடிவுரை எழுதி

    மூலவன் அமர்ந்த திசையினை நோக்கி

    முப்புரி அமரரும் மோனத்தில் நின்றார் !

     

    சினம்காக்க சினம்காக்கச் சேர்ந்தனர் அமரரும்

    சேவடி விடுத்தே சிந்தையை  அணைத்துச்

    சேர்ந்தே அமர்ந்தாள் சீர்மிகு செங்கமலத்தாள்

    சிதையாத கருணையைச்  சிங்கமே தந்தாயே !

     

    நலம்காக்க நலம்காக்க நானிலமே வேண்டிட

    நிலையாத சினம்விட்டு நீலமேகன் அருளிட

    நினையாத துயர்கூட நிலம்விட்டு நீங்கிடும்

    நினைவெல்லாம் சிங்கனின் சேவடி நின்றிடும் !

     

    வந்திட்ட துயரெல்லாம் வரதனே நீக்கிடுவாய்

    வாராத துயரெல்லாம் வருமுன்னே விலக்கிடுவாய்

    வந்தனை செய்கின்றேன் வாழ்வெல்லாம் துணையிருக்க

    வருவாயே அருள்வாயே  வரலட்சுமி மணாளனே !

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 139இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    cat and child

    பூனையும் குழந்தையும் கொஞ்சிமகிழும் அழகுக்காட்சி நெஞ்சைக் கவர்கின்றது. இந்த அரிய காட்சியை அற்புதமாகப் படம்பிடித்துவந்திருக்கும் திரு. எஸ்.எம்.கே.வுக்கும், இதனைப் படக்கவிதைப் போட்டிக்குப் பரிந்துரைத்திருக்கும் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி.

    உறவுகளையும் நட்பையும் தகுதி அடிப்படையில் தெரிவு செய்யும் பெரியோர் மத்தியில், உயிர்களிடத்தில் பேதமின்றிப் பரிவுகாட்டும் கள்ளமற்ற வெள்ளை மனம் பிள்ளைகளுடையது!

    பாலுளம் படைத்த அப்பிஞ்சுகளை நஞ்சாக்கும் திருப்பணியைப் பெற்றோரும் சுற்றமும் செய்யாதிருக்கவேண்டும்!

    இனி, கவிஞர்கள் கவிபாடும் நேரம்!

    *****

    ”வீட்டுப் பூனையையும் காட்டுப் புலியையும் பேதம்காட்டாமல் நேசிக்கும் பிள்ளைகளுக்கு உணவோடு வேண்டாத பழக்கங்களையும் சேர்த்து ஊட்டுகின்றானே பாவி மனிதன்!” என உளம் நோகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வளர்வது…

    அஞ்சுவதில்லை
    பிஞ்சுக் குழந்தை,
    அதற்கு
    புலிக் குட்டியும்
    பூனைக் குட்டியும் ஒன்றுதான்..

    பிள்ளை வளர
    உணவு ஊட்டுவதனுடன்,
    உதவாத பழக்கங்களையும்
    ஊட்டிவிடுகிறானே மனிதன்..

    விளைவு-
    அச்சமும் பேதங்களும்
    பிள்ளையின்
    வெள்ளை உள்ளத்தைக்
    கொள்ளைகொண்டுவிடுகின்றன,
    வளர்வது
    பிள்ளையின் உடல்தான்-
    உள்ளமல்ல..

    மாறுவாயா மனிதா
    இனியாவது…!

    *****

    ”தன் சின்னச் சின்ன ஆசைகளைப் பட்டியலிட்டு, கூண்டுக்கிளியாய் அடைபட்டிருக்கும் தனக்கு அந்த ஆசைகள் கைகூடும்வரை, இந்தப் பூசையே (பூனை) துணை” என்றுரைக்கும் குழந்தையைக் காண்கின்றோம் திருமிகு. ஹேமா வினோத்குமாரின் கவிதையில்.

    நின்னை பிரியோன்!!

    சிறுபிள்ளையென்று செல்கிறாயோ??
    விளையாட மறுக்கிறாயோ??
    அம்மா வைகிறாள்!!
    அப்பா கோபிக்கிறார்!!
    தாத்தாவும் தமையனும் தண்டிக்கிறார்கள்!!
    புறம் செல்லாமல் அடைபட்டேன்
    கூண்டிற்கிளியாய்!!
    புறம் சென்றால் கால் பழுக்கும்
    பாட்டியின் கடுஞ்சொல். !!
    புழுதிமண்ணில் தவழ ஆசை!!
    ஏர்மாட்டின் பின்செல்ல ஆசை!!
    சேற்றுமண்ணோடு விளையாட ஆசை!!
    குஞ்சுக்கோழிகளைக் கொஞ்ச ஆசை!!
    இவ்வனைத்தும் நிறைவேற வேண்டும்
    என்று நினைவெல்லாம் ஆசை!!
    இவ்வனைத்திற்கும் அப்பால்
    உன்னைக் கொஞ்சி மகிழ ஆசை!!
    மேற்சொன்ன ஆசை எப்போதோ??
    கூண்டிற்கிளியாய்!!
    ஆசைகளுடன்!!
    நீயாவது விலகாதே!!
    ஆசை நிறைவேறும் மட்டும்!!
    அதுவரை!!

    நின்னை பிரியோன்!!

    *****

    ”பயமறியாத இளங்கன்று பேதமறியாது உயிர்களை அரவணைக்கின்றது. அன்பின் வழியதன்றோ உயிர்நிலை!” என்று அன்பின் இன்றியமையாமையை அகிலத்துக்கு உணர்த்துகின்றார் திரு. பழ.செல்வமாணிக்கம். 

    அரவணைப்பு:

    பூந்தளிர் அணைப்பில் ஒரு பூனை இங்கே!
    சாந்தமாய் இருக்குது தன் குணம் மறந்தே!
    இளங் கன்று பயமறியாது!
    பிள்ளைக்கு பேதம் தெரியாது!
    அன்பின் பிடியில் அகப்படும் மலையே!
    அன்பின் விளைவில் அனைத்தும் நலமே!
    அன்னையின் அணைப்பில் பிள்ளை மகிழும்!
    பிள்ளையின் அணைப்பில் அகிலம் மகிழும்!
    நீரின் அணைப்பில் பயிர்கள் வாழும்!
    ஆண்டவன் அணைப்பில் உலகம் வாழும்!
    காற்றின் அணைப்பில் சீவன் வாழும்!
    அணைப்பில்லா உலகம்!
    உயிரில்லா மெய்யாகும்!
    மணமில்லா மலராகும்!
    இ!சையில்லா பாட்டாகும்!
    ஒளியில்லா விளக்காகும்!
    மழையில்லா பயிராகும்!
    அன்பில்லா தாயாகும்!
    அரவணைத்து வாழ்ந்திட்டால்!
    உலகம் உன் வசமாகும்!
    கணவன், மனைவி அரவணைத்து சென்றிட்டால்!
    இல்லறம் இனிதாகும்!
    அண்ணன், தம்பி அரவணைத்து வாழ்ந்திட்டால்!
    குடும்பம் சிறந்தோங்கும்!
    மாமியார், மருமகள் அரவணைத்து இருந்திட்டால்!
    சொர்க்கம் வீட்டிலே உருவாகும்
    அவனின்றி ஓர் அணுவும் அசையாது!
    இது ஆன்றோர் மொழி!
    அரவணைப்பின்றி உலகம் மகிழாது!
    இதுவே இன்றைய வாழ்வின் வழி!

    *****

    ”சாதியற்ற சமூகத்தைப் படைக்கவும், சமநீதியற்ற சமூகத்தை உடைக்கவும் நாம் இணைந்து பாடுபடுவோம்” என்று புரட்சிசெய்யப் பூனையைத் துணைக்கழைக்கும் பாப்பாவைக் காண்கிறோம் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனின் பாட்டில். 

    பாப்பா பாட்டு

    என்னிடம் வாருங்கள் பூனையாரே
    நாம் அனைவரும் ஒன்றென பாரதி சொன்னாரே

    காக்கை குருவி எங்கள் சாதியெனப் பாடினாரே
    சாதிகள் இல்லை என்றென்னிடம் கூறினாரே

    என்னிடம் வாருங்கள் பூனையாரே
    பேதமின்றி வாழ்ந்திடக் கற்றோரே

    இணைந்திருவரும் பாடம் புகட்டலாம்
    வேற்றுமையும் பாகுபாடும் தவறென உணர்த்தலாம்

    என்னிடம் வாருங்கள் பூனையாரே
    நானில மனிதருக்கு நல்வழி புகட்டிடுவீரே

    எந்நிற மிருப்பினும் யாவும் ஒரே தரமென்று
    எந்நிலையிலும் தன்னிலை மாறாமல்
    என்றும் எங்கும் கூடி வாழும் பூனையாரே

    எம் மனிதருக்கும் அதை உணர்த்திட வாரீரே
    மதம் நிறம் மொழியென அவர் பாடும்
    வேற்றுமை கீதங்கேட்டு பாரதத்தாய் வருந்துவதைப் பாரீரே..

    என்னிடம் வாருங்கள் பூனையாரே
    மனிதரிடம், சாதிகள் இல்லையென உணர்த்துவீரே
    பாகுபாடு கூடாதென தெளிய வைப்பீரே

    என்னிடம் வாருங்கள் பூனையாரே
    நாம் அனைவரும் ஒன்றென பாரதி சொன்னாரே!!

    *****

    ஆசையுடன் மழலையர் விளையாட ஏற்றது மீசை வைத்த பூனைக்குட்டி; பாரதியின் ஏட்டில், மருதகாசியின் பாட்டில் துள்ளி இடம்பிடித்தது இந்தப் பூனைக்குட்டி; பாய்ந்து இரையைப் பிடிக்கவும் செய்யும்; சாய்ந்து மழலை மடியில் உறவாடவும் செய்யும்” என்று இனிய பூனைக்கதையொன்றைத் தன் கவிதையில் சொல்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    குழந்தையும் பூனையும்..!

    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றென..
    ……………கவியரசின் மனதிலன்று தத்துவமே பிறந்தது.!
    மழலை பேசும்அழும் விழும்எழும்.!…வீட்டில்..
    ……………பழகும் பிராணியோடு பயமின்றி விளையாடும்.!
    அழுக்காக்கிக் கொள்ளும் உடம்பையும் சட்டையும்..
    ……………அழுக்கதன் மனதிலொரு போது மில்லையாம்.!
    பழுத்த பெரியோர்களைப் பழமைபேசச் சொல்லி.!
    ……………குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும்.!.
    ஆசையுடன் வளர்ப்பதற்கும் பழகு தற்கும்..
    ……………ஐந்தறிவு ஜீவிகளும் பலவுண்டு நம்மிடையே.!
    மீசைவச்ச பூனைக்குட்டியும் அதிலே ஒன்றாம்..
    ……………மியாமியா வெனக்கத்தும்! நம்காலடியில் சுற்றும்.!
    தோசைபோல ஒட்டிக் கொள்ளும் நம்மடியில்..
    ……………தொட்டு வருடினால் மனதுக்கு இதமளிக்கும்.!
    ஆசைநாயகிக்கு அருமைப் பரிசாக அப்பூனையை..
    ……………அயல்நாட்டில் வழங்கும் வழக்கமும் உண்டாம்.!..

    வானூர்திபோல சிறிதுதூரம் வேகமாக ஓடியே..
    ……………வகையாய் இரையை வாயால் பிடிக்கும்.!
    தானும் புலிக்குச் சற்றும் சளைத்தவனில்லை..
    ……………எனச்சீறிப் பாய்ந்துதன் பல்லைக் காட்டும்.!
    ஊனுண்ணும் பாலூட்டி,!..சஷ்டியின் வாகனமது!..
    ……………உபத்திரவம் மனிதர்க் கென்றும் செய்யாது.!மீனுணவை விரும்பி உண்ணும் மிச்சமதை..
    ……………தானீன்ற குட்டிக்குப் பகிர்ந்து கொடுக்கும்.!..

    காட்டில் உலவும் புலியுமிதற்கொரு உறவாகும்..……………கனிவுடன் பழகும் ஆபத்தில்லா அழகுப்பூனை.!
    வீட்டில் நமக்குப் பொழுதுபோகும் தன்னிடம்..
    ……………மாட்டிய எலியைக் கவ்வித்தூக்கியே பந்தாடும்.!
    பாட்டில் பாரதியு மிதற்கொரு இடமளித்தான்..
    ……………பூனையின் பலநிறம் சொல்லும் தத்துவத்தாலே.!
    ஏட்டில் எழுதிய மியாவ்மியாவ்ப் பாடலின்றும்..……………என்றும் ஒலிக்கிறது மருதகாசியின் நினைவாக.!

    *****

    ”காலை நேரப் பரபரப்பில் தாய்க்கும் தந்தைக்கும் குழந்தையிடம் பாசம் காட்ட நேரம் வாய்க்கவில்லை; அன்புக்கு ஏங்கும் குழந்தை பூனையைக் கொஞ்சி நெஞ்சம் ஆறுகின்றது” என்கிறார் மரு. எஸ். பார்த்தசாரதி. 

    காலத்தை வெல்ல வேண்டுமே !
    கால்களில் காகமும் குருவியும் —
    காலையில் கிழக்கு நோக்கி
    பணிக்குப்பறக்கும் தந்தை –
    வேகுமோ அரிசியும் பருப்பும்
    வேகத்தில் நடக்கிறது சமையல் –
    அவகாசம் கொடுக்காத அவசரம் –
    வேலைக்கு நேரமாகிறதே –
    மேற்கே பறக்கும் தாய் –
    ஓ ! குட்டிப்பூனையே !
    அந்தக்குழந்தை
    அன்பு காட்ட ,
    பாசம் பொழிய ,
    உன்னைத்தவிர யாரிருக்கார்
    இந்த பொருள் சார் உலகில் ?

    *****
    பூனையும் குழந்தையும் பரிவோடு இணைந்திருக்கும் காட்சியை, அதில் தெரியும் அன்பின் மாட்சியை அழகுறப் பதிவுசெய்திருக்கும் கவிஞர் பெருமக்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய் நான் தெரிவுசெய்திருப்பது அடுத்து…

    குழந்தை மனம்

    பூனையின் பட்டுடல் தொட்டப்
    பூங்கரம் கொண்டு மொட்டு
    விரிந்திடும் மலரைப் போன்று
    வியந்திடுமன்றோ குழந்தை மனம்! – அதை
    பட்டம் பதவி பணமென்ற
    பகட்டுக ளனைத்தும் சேர்ந்தாலும்
    எட்டிப் பிடிக்க இயன்றிடுமா
    எந்திர வாழ்க்கை மனிதனுக்கு?

    வண்ணத்துப்பூச்சி பறப்பதைக் கண்டும் – வானில்
    விண்மீன் இருப்பதைக் கொண்டும்
    மிதக்கும் வட்ட நிலவினைப்போல
    முகம் மகிழ்ச்சியடையும் மழலைக்கு! 
    அரும்பாடு பட்டு உழைத்து
    அங்கம் நோக ஈட்டியவெல்லாம்
    தங்கமனம் கொண்ட குழந்தையின் 
    தகுதிக் கென்றும் ஈடாமோ?

    இருப்பதைக்கொண்டு மகிழும் இதயம்
    இன்முகத்தோடு இருந்திடும் என்றும்
    சற்றும் தளரா சுறுசுறுப்பு – வெறுப்பைச்
    சடுதியில் மறந்திடும் குழந்தைமனம்!
    தரங்கெட்ட குறுகிய நோக்கம்
    தகுதியற்ற கோணல் புத்தி
    செல்லும் குறுக்கு வழிகளெல்லாம் – மனிதா 
    செம்மை வாழ்வைக் கொடுத்திடுமா?

    குழந்தைமை ஒரு வரம்! ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் இறையடியாரைப் போல் குழந்தையின் உலகில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் எனும் பேதமில்லை! ”எத்துணைப் பொருட்செல்வத்தை வாரிவாரிக் குவித்தாலும் மழலையின் பொன்மனத்துக்கு அவை ஈடாகுமா?” என்று கவிஞர் கேட்கும் கேள்வி நம்மைச் சிந்திக்க வைக்கின்றது.

    பூனையைத் தொட்டு மகிழும் பூந்தளிரின் மகிமையைச் சொல்லோவியமாய்த் தீட்டியிருக்கும் திரு. ஆ. செந்தில் குமார் இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்பினைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டும் வாழ்த்தும்!

     

     

     

    Share
  • சனிப்பெயர்ச்சி மஹா யாகம்

    தன்வந்திரி பீடத்தில்

    19.12.2017-அன்று காலை

    சனிப்பெயர்ச்சி மஹா யாகம்

    இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற 4ம் தேதி மார்கழி மாதம் செவ்வாய் கிழமை 19.12.2017 காலை 8.59 மணி முதல் 10.10க்குள் சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப் பெயர்ச்சி ஆகிறார்.

    இடப்பெயர்ச்சியை முன்னிட்டு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக மக்களின் நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி 19.12.2017 காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சனிப்பெயர்ச்சி மஹா யாகம் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து சனியால் உண்டான பாதிப்புகள் குறைய நடைபெறும் ஊனமுற்றோர்க்கு உதவி, முதியோர்க்கு அன்னதானம், வஸ்திர தானம், எள்ளு தானம்,நல்லெண்ணைய் தானம், மற்றும் இரும்பு தானம், வழங்கப்பட உள்ளது. இந்த தானங்களில் பங்கேற்க விரும்பும் நபர்கள் கைங்கர்யம் செய்து பயன் பெறலாம். மேலும் தன்வந்திரி பீடத்தில் ஸ்வாமிகளின் ஆசிகளுடன் கடந்த 13 ஆண்டுகளாக குரு பெயர்ச்சி, இராகு-கேது பெயர்ச்சி, சனி பெயர்ச்சி யாகங்களும், நூற்று கணக்கான யாகங்கள் பக்தர்கள் பயன்பெறும் விதத்தில் நடைபெற்று வருகின்றன என்பது குருப்பிடத்தக்கதாகும்.

    அவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் :

    ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்கள் மற்றும் சனிதிசை,சனிபுத்தி நடப்பவர்கள்.

    சனிப்பெயர்ச்சி பலன்களை பொறுத்தவரை பழைய நூல்களில் 3,6,11ல் சனி வருவதை மட்டுமே நன்மை செய்யும் என சொல்லப்பட்டுள்ளது. மற்ற எல்லா ஸ்தானத்துக்கும் பகை, தீமைதான். அஷ்டமசனி, ஏழரைசனி, கண்டகசனி ,விரய சனி, பாதசனி அதிக பாதிப்பைதரும்

    ஜாதகத்தில் கிரகங்களின் பலத்தை பொறுத்துதான் சனியோ, குருவோ பலனை தர முடியும். யோகமான திசாபுத்தி நடந்தால் கல்யாணம் ,காதுகுத்து வீடுகட்டுதல் என சுப செலவாக மாற்றி சுப விரயமாக ஏழரை சனி மாற்றி விடும்.

    இந்த யாகத்தில் கலந்துகொள்வதற்கு ஒரு நபர் ஒரு ராசிக்கு சங்கல்ப காணிக்கை ரூ 500/- வீதமும் செலுத்தி கலந்து கொள்பவர்களுக்கு மகா யாகத்தில் வைத்து பூஜிக்கப்பெற்ற ,தன்வந்திரி பகவான் டாலர், மற்றும் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் புகைப்படம், ஹோம பிரசாதத்துடன் வழங்கப்படும்..

    இந்தப் பிரசாதங்கள் கூரியர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். சனிபெயர்ச்சியில் தங்கள் பெயரை பதிவு செய்து பயன்பெறகேட்டுக் கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்,

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,

    கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,

    வாலாஜாபேட்டை-632513

    தொலைபேசி : 04172-230033 / 09443330203

    www.danvantritemple.org | www.danvantripeedam.blogspot.in

    Email : danvantripeedam@gmail.com

    Share
  • தமிழ் ஹைக்கூ – 100 – அன்பின் அழைப்பு

     

    ‘தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு விழா’

     

    Haiku 100 copy

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    Tiruppavai 03 -Uththama -raw -watercolour -24x32cms (The glory of Uththama.  Like a good monsoon, the generosity of wise men to impart knowledge, results in unhindered wealth and prosperity.)
    Tiruppavai 03 -Uththama -raw -watercolour -24x32cms (The glory of Uththama. Like a good monsoon, the generosity of wise men to impart knowledge, results in unhindered wealth and prosperity.)

    ”கிளிப்பிள்ளை போலவள் கீசுகீசு பாட்டை
    களிப்புடன் ஓதுவான் கண்ணன் -தளிப்புன்னில்
    அக்காரச் சோறுண்ன அந்தரங்கன் கைப்பிடித்து
    உக்கார வைத்தோளை உன்னு”….கிரேசி மோகன்….!

    Share