Blog

  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -9

    க. பாலசுப்பிரமணியன்

     

    திரு நாவை – அருள்மிகு நவமுகுந்தப் பெருமாள்

    attabhuyakaran1-small

    எட்டாமல் அலைகடலில் கிட்டாமல் கிடந்தாலும்

    எட்டாம் பிறையில் இருட்டறையில் பிறந்தாலும்

    எட்டுமுறை வீழ்ந்தே ஒன்பதாய் நின்றவனே

    எண்ணத்தில் நிற்பவனே நாரணனே நவமுகுந்தா!

     

    கருநாக விரிப்பினிலே கண்மூடி அயர்ந்தவனே

    கருடனின் மேலமர்ந்து காத்திட விரைபவனே

    கருணையால் கல்லிருந்த அகலிகைக்கு அருளியவனே

    கருமத்தால் ஜடாயுவுக்கு விடுதலை அளித்தவனே

     

    அலர்மேல் மங்கையவள் அன்போடு துணையிருக்க

    அசையாத விழியோடு  அமரர்கள் பார்த்திருக்க

    ஆதிசேடன் குடைபிடிக்க அமர்ந்தாயே அழகாக

    அடியார்கள் குறைகேட்க அருளாளா வைகுந்தா

     

    சூதாடும் என்நெஞ்சம் சுற்றியுள்ள பொருள்களோடு

    சொந்தமென ஏற்றிருக்கும் சுமைதாங்கி வலியோடு

    சோதனைகள் எதிரகொள்ளும் வந்தவினை விட்டுவிட்டு

    சோகக்கதை மாற்றிவிட்டு சுதர்சனனே காத்துவிடு !

     

    என்னமொழி  சொன்னாலே இதயத்தைத் தொட்டிடலாம்

    சொல்லமொழி ஏதுமின்றி சொல்லாமல் தவிக்கின்றேன்

    தாய்மொழியில்  கவிதையொன்று கண்ணீரில் குளித்திருக்க

    எந்தமொழி இனிவேண்டும் அங்கமொழி அறியாயோ ?

     

    பொன்னங்கி உனக்குடுத்தி பூவாலே அலங்கரிப்பார்

    முத்தங்கி உனக்குடுத்தி முக்கனிகள் படைத்திடுவார்

    நூலங்கி உனக்குடுத்தி நூதனமாய் பார்த்திருப்பார்

    சொல்லங்கி வடித்துடுவேன் சொந்தமென வந்துவிடு !

     

     

    Share
  • மெர்ரி கிறிஸ்மஸ்….!

    images (2)
    “வாசஸ் தலமான நாசரத்தில் தோன்றிய
    பூசைக்(கு) உரிய பிதாமகரே -ஜீசசே
    இந்தநாள் உந்தன் இணையடி போற்றுகின்றோம்
    சொந்தமாவீர் சொர்க்கம் சகம்”..

    வானம் உகந்தநாள் வையம் புகுந்தநாள்
    ஞானம் நமக்குள் நுழைந்தநாள் -பூணும்
    சிலுவையில் மாந்தர் சுமையை சகித்து
    நிலமிசை நின்றவன் நாள்….

    MERRY CHRISTMAS….
    ———————————–

    “ஏசுநாதர் பேசினால் என்னதான் பேசுவார்!
    ‘ஊஸிமுனை செல்லுமோ ஒட்டகம்!, -காசினால்
    கொள்வாயோ கைலாசம்! ,வெல்வாயோ வைகுண்டம்!,
    செல்வாயோ சொர்க்கம் (என்று) சிரித்து!”…..கிரேசி மோகன்….

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -8

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருக்கருகம் – அருள்மிகு கருணாகரப் பெருமாள்

    G_T1_2077

    நிலங்களில் பொழிந்திடும் நீருடைக் கார்மேகம்

    நிறத்தினில் கருமையே நெஞ்சத்தில் கருணையே

    நிலவிடும் எண்ணத்தில் கண்ணனின் வண்ணமே

    நிழலென இருந்தும் கருணையில் வருணனே !

     

    கடலுள்மீனாய் நுழைந்தாய் மறைகளைக் காக்க

    காட்டுப்பன்றி வந்தாய் புவியினை மீட்க

    கடைந்திடக் கடலை ஆமையாய் அமைந்தாய்

    கருணையின் வடிவங்கள் காட்டிய கண்ணா !

     

    அழகிய திருவடி அண்டங்கள் அளந்திட

    அழகிய சிங்கனாய் இரணியன் அழித்திட

    அழகிய தோளில் கலப்பையை ஏந்தியே

    அருளினை வழங்கிய அச்சுதா வாழி !

     

    தோளுடை வலிமைக்குத் தோழன் பலராமன்

    தூதுவன் அறிவுக்குத் துவாபரச் செல்வன்

    தருமத்தின் பொருளாய் தயரத இராமன்

    தன்னிகர் இல்லாத் தாமரை மணாளன் !

     

    எத்தனை வடிவங்கள் எடுத்தாலும் கண்ணா

    சிந்தனை அனைத்தும் அடியவர் அன்றோ ?

    வந்தனை செய்திடும் உள்ளங்கள் அனைத்திலும்

    விந்தையே! பிறந்தாய் வடிவங்கள் புதிதாய் !

     

    அலைகடலில் அயர்ந்தாலும் அண்டங்கள் காப்பவனே

    அலைகின்ற நெஞ்சுக்கு அமைதியைத் தருவாய் !

    அடியார்கள் துயர்நீக்க அவனியெல்லாம் செல்பவனே

    அழையாதும் வந்திடுவாய் அந்தரங்கம் அறிந்தவனே!

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    திருப்பாவை : 07

    171222 - Tiruppavai 07 -lr -wacol -24x32cms Keechu, Keechendru… wake up, O friend, you’re glowing in Krishna anubhava — Come you should lead us by singing the glories of Keshava, the Lord who killed the asura Keshi.
    171222 – Tiruppavai 07 -lr -wacol -24x32cms
    Keechu, Keechendru… wake up, O friend, you’re glowing in Krishna anubhava — Come you should lead us by singing the glories of Keshava, the Lord who killed the asura Keshi.

    குதிரையைக் கொன்றவர் கோகுலம் காக்க,
    மதுரையை ஆள்கின்ற மன்னர் -புதிரவர்,
    கோயிலுக்குப் போகாமல் கும்பகர்ணன் போலுறங்காய்,
    வாயில் கதவை விரி …. கிரேசி மோகன்….!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 102

    வோல்வோ அருங்காட்சியகம், கோத்தபெர்க், சுவீடன்

    முனைவர் சுபாஷிணி

    உலகின் உயரிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதோடு அவ்வுயரிய தொழில்நுட்பத்தைப் பொதுமக்களும் பயன்படுத்தும் ஒரு நாடு; உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் 6வது இடத்தைப் பிடிக்கும் நாடு; குறைந்த மக்கள் தொகை; தூய்மை; தரமான சுகாதாரம்; மக்கள் வாழ்வதற்கு விரும்பி ஏற்கும் ஒரு நாடு என்ற பெருமைகள் கொண்டது சுவீடன்.

    unnamed (1)

    ஸ்கேண்டினேவிய நாடுகள் குழுவில் ஒன்றாக இடம்பெறுகிறது சுவீடன். நார்வே டென்மார்க் பின்லாந்து ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்ட நாடு. ஐரோப்பிய நாடுகளில் ஆங்கில மொழி பயன்பாட்டை இரண்டாம் மொழி என்ற நிலையில் வைத்திருக்கும் நாடு என்பதும் இதன் சிறப்பு. இதற்கும் மேலாக வாகன உற்பத்தியில் தனித்துவத்துடன் இயங்கும் ஒரு நாடு என்ற பெருமையும் கொண்டது. வோல்வோ கார் என்றால் நம் நினைவுக்கு வருவது சுவீடன் தானே!. ஆம் இந்த வோல்வோ கார் பிறந்தது சுவீடனின் கோத்தபெர்க் நகரில் தான்.

    2016ஆம் ஆண்டு எனது அலுவலக பணி நிமித்தமாக கோத்தபர்க் நகரில் நிகழ்ந்த ஒரு வார கால மாநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. வோல்வோ கார் நிறுவனத்தின் தாயகம் கோத்தபெர்க் நகரம் தான் என முன்னரே நான் அறிந்திருந்ததால் இந்த வாய்ப்பைத் தவற விடாமல் இங்கு அமைந்திருக்கும் வோல்வோ வாகன அருங்காட்சியகத்திற்குச் சென்று வந்தேன். இங்குச் செல்வதற்கு எனக்கு மற்றுமொரு காரணமும் இருந்தது. அது என்னவெனில் நான் முதன் முதலில் கார் ஓட்டப்பழகிக் கொண்ட காலத்தில் நான் வாங்கிய இரண்டாவது கார் ஒரு பழைய வோல்வோ வாகனம். கடல் நீல வர்ணத்தில், ஏறக்குறைய 14 ஆண்டு பழமையான வாகனம் அது. ஏறக்குறைய நான்கைந்து ஆண்டுகள் இந்த வாகனம் என் பயன்பாட்டில் இருந்தது. தூரப் பயணங்கள் மேற்கொள்வதற்கு ஏற்ற வசதியானதொரு வாகனமாக அது இருந்தது. அந்த நினைவும் என் மனதில் பசுமையாக இருந்தது.

    unnamed (2)

    வோல்வோ அருங்காட்சியகம் உள்ள பகுதிக்குச் செல்வதற்குப் பேருந்து எடுத்துத் தான் சென்றிருந்தேன். அது கடற்கரையைச் சார்ந்த துறைமுகப் பகுதி. ஏறக்குறைய 3 மணி நேரங்கள் இருந்து இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகச் சுற்றிப்பார்த்தேன். வோல்வோ என்றால் நான் அன்றாட பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் வாகனங்கள் மட்டுமே என்ற என் சிந்தனையை மாற்றியது இந்த அருங்காட்சியகத்திற்கான என் பயணம். ஏனெனில் வோல்வோ நிறுவனத்தாரின் கனரக தொழில்நுட்பம் என்பது பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் மட்டுமன்று, கனரக வண்டிகள், லாரிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள், விமானப்படை விமானங்கள், என பலதரப்பட்டவையாக இருப்பதை இந்த அருங்காட்சியகம் சென்றிருந்த போது அறிந்து கொள்ள முடிந்தது.

    வோல்வோ பிறந்தது 1927ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி. ஏனெனில், அன்றுதான் வோல்வோ தொழிற்சாலையில் “ஜேக்கப்” முழுமையாக்கப்பட்டு இந்த கோத்தபெர்க் தொழிற்சாலையிலிருந்து வெளியிடப்பட்டது. வோல்வோ கார் உற்பத்தி பற்றிய எண்ணம் முதன் முதலில் Assar Gabrielsson மற்றும் Gustaf Larsson ஆகிய இருவருக்கும் எழுந்தது. இந்தக் கனவு நிஜமாகியது. 4 சிலிண்டர்கள் கொண்ட OV4, PV4 வகை வாகனங்களை இந்தத் தொழிற்சாலையில் வடிவமைத்து உருவாக்கினர். 1929ஆம் ஆண்டு 6 சிலிண்டர் கொண்ட இயந்திரத்துடன் PV651 வகை வாகனத்தை உற்பத்தி செய்தனர். இது வாகன உற்பத்தியில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்ததோடு இருவருக்கும் மிகப் பெரிய இலாபத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.

    unnamed (3)
    1932ஆம் ஆண்டில் 10,000 வாகனங்களை உற்பத்தி செய்து வாகன தொழில்நுட்பத்தில் தன் தனித் திறமையை வெளிப்படுத்தியது வோல்வோ. இவ்வகை வாகனங்களைப் பணம் படைத்தவர்கள் மட்டுமே வாங்கக்கூடியதாக இருந்தமையால் பலதரப்பட்ட மக்களிடமிருந்து எளிய மக்களும் வாங்கிப் பயன்படுத்தி மகிழும் வண்ணம் குறைந்த பட்ஜெட் வாகனங்களை உற்பத்தி செய்யுமாறு பொது மக்களிடமிருந்து கோரிக்கை எழுந்தது. இதன் பலனாக 1936ஆம் ஆண்டில் வோல்வோ தயாரித்து வெளியிட்டதுதான் PV51 மாடல் வகையிலான கார்கள்.

    இரண்டாம் உலகப்போர் வாகன உற்பத்தியைப் பாதிக்கச் செய்தது. ஆயினும் 1944ஆம் ஆண்டின் இறுதி வாக்கில் வோல்வோ அதன் PV444 வகை வாகனங்களை உற்பத்தி செய்து வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம் இவையே சிறிய இரகத்திலான வோல்வோ கார்கள். இந்த இரகக் கார்கள் ஏற்படுத்திய அலை 1960 வரை ஓயவில்லை எனலாம். அந்த அளவிற்கு இந்த இரக வோல்வோ வாகனங்கள் பொது மக்களால் விரும்பி வாங்கப்படும் வாகனமாகத் திகழ்ந்தது. இப்படிப் பலப்பல புதுமைகளை ஏற்படுத்தி மக்களின் தேவைக்கேற்பவும் தொழில்நுட்பத் தேவைக்கேற்பவும் தனது வாகனங்களை வெளியிடுவதில் வோல்வோ சலிக்கவில்லை எனலாம். 1927 ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி முதல் 2017 நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை வோல்வோ கார் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 19,971,128 ஆகும்.

    unnamed (4)

    வோல்வோ நிறுவனமும் தொழிற்பேட்டையும் அமைந்திருக்கும் கோத்தபர்க் நகரின் துறைமுகப்பகுதியில் தான் வோல்வோ அருங்காட்சியகம் இருக்கின்றது. இந்த அருங்காட்சியகம் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பக் கால உற்பத்தியிலிருந்து அதி நவீன தொழில்நுட்பம் பொருந்திய வாகனங்கள் என இங்கே நூற்றுக்கணக்கான வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வோல்வோ நிறுவனம் முதலில் வெளியிட்ட Volvo ÖV4 வகை வாகனமும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்படியும் ஒரு அருங்காட்சியகமா என வருவோரைத் திகைக்க வைக்கும் ஒரு பிரம்மாண்டம் இந்த வாகன அருங்காட்சியகம்.

    unnamed (5)

    இங்கு வரிசை வரிசையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களைப் பார்த்து அவற்றின் தகவல்களை வாசித்து அறிந்து கொண்டே வரும்போது அலுப்பு ஏற்பட்டால் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளவும் ஆங்காங்கே நாற்காலிகளை வைத்திருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி வோல்வோ நிறுவனத்தின் ஆரம்பக்கால முயற்சிகள், வெளியீடுகளை விவரிக்கும் காட்சிப்படங்கள் ஒரு சிறிய பகுதியில் திரைப்படமாகவும் காட்டப்படும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். ஆக அலுப்பே ஏற்படாமல் நிதானமாக பார்த்து இரசித்து வரலாம்.

    வாகன உற்பத்தியில் இன்று முன்னிலை வகிக்கும் நாடுகளாகத் திகழ்பவை ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கொரியா போன்ற நாடுகளாகும். இந்த வரிசையில் சுவீடனும் இடம் பெறுகின்றது. வாகன உற்பத்தியில் மக்களின் தேவைக்கேற்பவும் கால சூழலின் தேவைக்கேற்பவும் தொழில் நுட்பத்தில் மாற்றங்களைச் செய்து புதிய வடிவங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடிய விலையில் வாகனங்களில் புதுமைகளைச் செய்ய வேண்டிய தேவை வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு இன்று இருக்கும் கட்டாயத் தேவை. இதனை நன்கு கருத்தில் கொண்டு மின்சாரத்தில் இயங்கும் வாகனம், தானியங்கி வாகனம், என காலத்திற்கேற்ற வகையில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே வருகின்றது வோல்வோ. கடுமையான போட்டி நிலவும் இந்த வாகன உற்பத்தித் தொழிலில் இன்றும் முக்கிய இடத்தை வகிக்கின்றன வோல்வோ கார்கள். பலரால் விரும்பி வாங்கப்படும் ஒரு வாகனமாக இது திகழ்கின்றது.

    பொது மக்கள் வாங்கிப் பயன்படுத்தும் கார்கள் மட்டுமன்றி தனது பயணத்தைக் கடல் மற்றும் விமானப் போக்குவரத்து துறைகளிலும் செலுத்தியுள்ளது வோல்வோ. வோல்வோவின் சிறிய வடிவிலான நீர்மூழ்கி ஆய்வுக் கப்பல்கள் சிலவற்றை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்திருக்கின்றனர். அதோடு பனி அடர்ந்த பகுதிகளில் பயணிக்கும் வாகனங்களையும் வோல்வோ நிறுவனம் தயாரிக்கின்றது.

    சுவீடன் நாட்டிற்குச் செல்பவர்கள் தவறாமல் பார்த்து வர வேண்டிய ஒரு முக்கிய இடமாக இந்த அருங்காட்சியகம் அமைகின்றது. இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட செலுத்த வேண்டிய கட்டணம், திறந்திருக்கும் நேரம், சிறப்புக் கண்காட்சிகள் பற்றிய செய்திகள் அதன் அதிகாரத்துவப் பக்கமான http://www.volvomuseum.com/ என்ற பக்கத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…(257)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். போனவார மடலில் தொடங்கிய எனது பயணத் தொடர்ச்சியோடு இவ்வார மடலில் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன். ஆமாம் சென்ற வார மடலில் நாம் எமது “கப்பல் சுற்றுலாவில்” பங்கேற்பதற்காக “மயாமி” கப்பற் தளத்தை வந்தடைந்தோம் என்று குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கப்பல் பயணம் இருக்கிறதே அதுவும் ஒரு விமானப் பயணம் போன்றதே! நாம் எமது பிரயாணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பிப்பதன் முன்னரே இணையவழியாக அக்கப்பற் பயணத்துக்கான “போர்டிங் பாஸ்”இனைப் பெற்றுக்கொண்டதோடு மட்டுமில்லாமல் எமது பயணப் பொதிகளில் இடுவதற்கான பெயர் ஆகிய விபரங்களடங்கிய பட்டியலையும் பெற்றுக் கொண்டோம்.

    அங்கு வண்டியில் இருந்து இறங்கிய நாமனைவரும் மிகவும் ஆரவாரமாக எமது பொதிகளை கொண்டு அருகிருந்த ஒரு பணியாளை அணுகினோம். அப்பணியாள் அனைவரது பொதிகளையும் ஒரு தள்ளு வண்டியில் ஏற்றிவிட்டு எம்மைக் கப்பலுக்குள் நுழைவதற்கான நிர்வாகங்களை கவனிக்கும்படியும், நாம் கப்பலுக்குள் நுழைந்து எமக்குக் கொடுக்கப்பட்ட எமது அறையினுள் சென்ற பின்பு அவரவர் பெட்டிகள் அவரவர் அறைகளுக்கு முன்னால் கொண்டு தரப்படும் என்றும் கூறினார். நாமனைவரும் எமது நுழைவு விதிகளைப் பூர்த்தி செய்துகொண்டு உற்சாகத்துடன் எம்மைச் சுமந்து செல்வதற்காகக் காத்து நிற்கும் அந்தப் பெரிய அடுக்குக் கப்பலினுள் ஒவ்வொருவராக நுழைந்தோம்.

    அப்பாடா ! கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்துடன் கூடிய ஓர் அழகிய மாபெரும் மாளிகையினுள் நுழைவது போலிருந்தது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அனைவரும் அவசரம் அவசரமாகத் தமக்குத் தரப்பட்டுள்ள அறைகளை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். நானும் என் மனைவியும் எமது அறையைத் தேடிக் கண்டுபிடித்து திறந்து கொண்டு உள்ளே நுழைந்தோம். ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றின் அறையைப் போல கோலாகலமாகக் காட்சியளித்தது அவ்வறை. இனிவரும் ஏழு நாட்களும் இதுதானே எமது இல்லம் ! அடுத்தடுத்த மூன்று அறைகளும் எம்மோடு இணைந்து வந்திருந்த மற்றைய நண்பர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களும் அங்கு வந்து சேர்ந்து மகிழ்ச்சியுடன் எம்முடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அடுத்தது என்ன பசி வயிற்றைக் கிள்ளியது; அனைவரும் எமது வயிற்றைக் குளிர வைப்பதற்காகப் புறப்பட்டோம். நாமிருந்தது எட்டாவது அடுக்கு. ஒன்பதாவது அடுக்கில் உள்ள ரெஸ்டாரண்டில் உணவு எடுத்துக் கொள்ளலாம் என்று ஒலிபெருக்கி அறிவித்துக் கொண்டிருந்தது.

    வித விதமான பலநாட்டு உணவுவகைகள் ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்தன. பிறகென்ன…ஒரு வெட்டு வெட்டி முடித்தாயிற்று. அன்றைய பொழுது எமது பெட்டிகளைத் திறந்து எமது அறையினை வசதி செய்து கொள்வதில் கழிந்து போயிற்று. சரியாக மாலை நாலு மணிக்கு எம்மைச் சுமந்து கொண்டு கப்பல் சுற்றுலாவை ஆரம்பித்தது. எமது அறையோடு சேர்ந்திருந்த பால்கனியில் வந்து நின்று கப்பல் பிராயாண ஆரம்பத்தைக் கண்டு களித்தோம். எமது பிரயாண அட்டவணையின் பிரகாரம் அடுத்தநாள் முழுவதும் எமது பிரயாணம் கடலில் தான். ஆனால் கப்பலினுள் பல் பகுதிகளில் பலவகையான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. கப்பல் சுற்றுலாவுக்குப் பொறுப்பாக இருக்கும் அக்கப்பற் சிப்பந்தி ஒருவர் அனைவருக்கு கப்பலின் விதிகளையும், மற்றும் தேவையான முக்கிய விடயங்களையும் பற்றிய ஒரு விரிவான உரையையும் தந்தார்.

    அடுத்தநாள் காலை கப்பல் “கொஸ்மொல்” எனும் தீவையடைந்தது. இத்தீவு மெக்சிகோ நாட்டிற்குச் சொந்தமான தீவாகும். காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு ஏற்கனவே கப்பலின் மூலமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு சிறிய சுற்றுலாவில் பங்கேற்றோம். அழகிய காட்சிகளைக் கொண்ட இத்தீவில் கடற்கரையோரமாக ஒரு சிறிய படகுப் பிரயாணத்தையும், அதைத் தொடர்ந்து சிலமணிநேரம் கடற்கரையோரமான பொழுது போக்கினையும் நடத்தினோம். மாலை மூன்று மணியளவில் திரும்பவும் கப்பலுக்குள் ஏறினோம். 6 மணியளவில் கப்பல் மீண்டும் தனது பிரயாணத்தைத் தொடங்கியது.

    அதற்கு மறுநாள் காலை ” பெலீஸ் ” எனும் தீவையடைந்தோம். இத்தீவு 1981ஆம் ஆண்டு வரையும் இங்கிலாந்து நாட்டின் கீழ் இருந்த தீவாகும். அழகிய பச்சைப் பசலேன்ற காட்சிகளைக் கொண்ட இத்தீவில் எம்மை பண்டைய “மாயன்” காலக் கண்டுபிடிப்புக்களான புராதனக் கண்டுபிடிப்புகள் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு “மாயன்” கால மன்னர்களைப் பற்றியும், அவர்களது ஆட்சிகுறை பற்றியும் ஒரு சிறிய விளக்கமளித்தனர்.அன்றைய மக்களின் கலாசார விழுமியங்களின் அடையாளங்கள் பிரமிப்பூட்டின. அங்கு பலரும் பல நினைவுப் பரிசில்களை அங்கு சுற்றுலாப்பயணிகளுக்காகவே திறக்கப்பட்டிருந்த சிறிய கடைகளில் வாங்கிக் கொண்டனர். மீண்டும் கப்பலையடைந்து மற்றொரு இரவுப் பயணம் ஆரம்பமானது.

    கடலின் மீது நகர்ந்து கொண்டிருக்கும் அக்கப்பலினுள் இருந்து கடலை நோக்கினால் அன்றி நாம் பிரயாணித்துக் கொண்டிருக்கிறோம் எனும் உணர்வே தோன்றாத வகையில் எதுவிதமான் ஆட்டங்களும், குலுக்கல்களும் இல்லாமல் கப்பல் பிரயாணித்துக் கொண்டிருந்தது. ஆமாம் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு தீவில் நாமனைவரும், வசிப்பது போன்றே இருந்தது. அடுத்தநாள் காலை எமது தரிப்பிடம் “மகோகனி பே” எனும் தீவாகும். இத்தீவு “கொண்டூரஸ் (Honduras)” எனும் நாட்டிற்குச் சொந்தமான தீவாகும். அழகிய விசிறி வாழைமரங்கள், தென்னை மரங்கள் என எமது பின்புல நாடுகளின் அத்தனை வகையான மரங்களையும் உள்ளடக்கியிருந்தது அத்தீவு. அழகிய பறவைகள் அங்குமிங்கும் இனிய கீதங்கள் இசைத்துக் கொண்டிருந்தன. எமது பிரயாணத்தில் அன்று மட்டும் வருணபகவான் தனது அருளைத் தாராளமாக வழங்கி எம்மைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அன்று மாலை தனது அடுத்த கட்டத்தை நோக்கி எமது கப்பல் எம்மைச் சுமந்த வண்ணம் நகர்ந்தது.

    அடுத்தநாள் காலை எமது கடைசித் தரிப்பிடமான “கேமன் ஐலன்ட்” எனும் தீவை அடைந்தோம். இத்தீவு இன்றும் இங்கிலாந்து மகாராணியாரைத் தமது தலைவியாகக் கொண்டுள்ளது. பல மாபெரும் செல்வந்தர்கள் தமது நாட்டின் வரிகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இந்நாட்டு வங்களில் தமது செல்வத்தை சேமித்து வைத்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்நாட்டில் வங்கிகள் அதிக அளவில் இருக்கின்றன. பல இங்கிலாந்து செல்வந்த வியாபாரிகளுக்குச் சொந்தமான விடுமுறை பங்களாக்கள் இங்குண்டு. இங்கும் நீரிலும், நிலத்திலும் பயணிக்கக்கூடிய வாகனமொன்றில் எமக்கு ஒரு சுற்றுலா வசதி செய்து தந்தார்கள். பல அழகிய காட்சிகளையும், கடலில் நீந்தி மகிழும் மீனினங்களையும் கண்டு மகிழ்ந்தோம். அன்றிரவு மீண்டும் புறப்பட்ட அக்கப்பல் அடுத்தநாள் முழுவதும் கடலில் பயணித்து எம்மை மீண்டும் நாம் ஆரம்பித்த “மியாமி” நகருக்கு இட்டுச்சென்றது.

    அழகிய ஒருவாரச் சுற்றுலாவில் பல புதிய நாடுகளின் பகுதிகளைக் கண்டு ரசித்துவிட்டு அனைவரும் ஒன்றாக அவ்வவுஸ்திரேலிய நண்பரை அனுப்பிவிட்டு மீண்டும் இங்கிலாந்தை வந்தடைந்தோம். 2017க்குள் நுழைந்த நாம் பல புதிய அனுபவங்களின் சொந்தக்காரர்களாகி ஒருவாறு தேவமைந்தன் யேசுநாதரின் பிறந்தநாளாம் கிறீஸ்துமஸ் பண்டிகையை நோக்கி நெருங்கி விட்டோம்.

    மாட்டுத் தொழுவமொன்றில்
    மாறா மனித சமுதாயத்திற்காக
    மானிட உருவில் பிறந்த
    மகத்தான தேவமைந்தன் யேசு

    அன்பின் பிள்ளையாய்
    அருளின் பிறப்பிடமாய்
    மனிதர்கள் பாபச்சுமையை
    மரணித்தில் சுமந்தார் யேசு

    கேட்டுப் பெறுவதும் அருளைத்
    தட்டித் திறப்பதும் கடமையென
    தரணியைக் காக்க வந்த தனயன்
    தங்கமென மிளிர்ந்த இறைமைந்தன்

    பொறுமை ஒன்றே மனிதர்க்குப்
    பெருமை என்பதனை வலுவாய்
    போதித்த இயேசுபிரானின்
    பிறந்தநாளில் யாசிக்கின்றோம்

    இன்றும் , இனியும் அனைவரும்
    இன்பமும், மகிழ்வும் கண்டே
    இகத்தினில் வாழ்ந்திட மனதால்
    இன்புற வாழ்த்துக்கள் பொழிகின்றேன்

    அனைத்து கிறீஸ்தவ நண்பர்களுக்கும் அன்பான நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    சக்தி சக்திதாசன்

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -7

    க. பாலசுப்பிரமணியன்

     

    அஷ்டபுயக்கரம் – (அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் )

    201712140929347662_adikesavaperumal-temple_SECVPF

    கோகுலத்தில் உறியுடைத்து வெண்ணையுண்ட கரமொன்று

    கோதையர்கள் துணிகளையே கவர்ந்திட்ட கரமொன்ற

    குலம்காக்கக் காளிங்கனின் வால்பிடித்த கரமொன்று

    குழலூதி கோவினங்கள் அழைத்திட்ட கரமொன்று

     

    குலமகள் பாஞ்சாலியின் இனம்காத்த கரமொன்று

    குருட்சேத்திரத்தில் தேரோட்டித்  துணைதந்த கரமொன்று

    குற்றுயிரான கர்ணனிடம் கொடைகேட்ட கரமொன்று

    குசேலனின் குறைதீர்க்க கருணைகொண்ட கரமொன்று ‘

     

    கோதண்ட இராமனாய் வில்லெடுத்த கரமொன்று

    கோபத்தில் இரணியனைக் கூரிட்ட கரமொன்று

    குறையெல்லாம் தீர்த்திடுமே கோவிந்தன் அருட்கரமே

    குறையாத நலம்பெருக்கிக் குலம்காக்கும் திருக்கரமே

     

    அத்தனை கரங்களும் அன்புடன் அணைத்திடுமே

    அட்டபுயத்திலோ அச்சுதன் எடுத்தது ஆயுதமே

    அம்போடு வில்லும் அரிவாளும் கதையும்

    அரக்கனை அழித்திட சங்கோடு சக்கரமும்.

     

    படைப்பவனின் வேள்வியினை அழித்திடவே பாரதியும்

    பகைகொண்ட நெஞ்சோடு பாம்பினையே அனுப்பிவிட

    பரந்தாமன் ஆயுதங்கள் அரக்கனையே அழித்துவிட்டுப்

    பகலவனாய் ஒளிபெருக்கப் பகைமறந்தாள் பாரதியும் !.

     

    ஊழ்வினையால் உருவத்தில் யானையாய் முனிவனும்

    ஊழ்கழிக்கத் தாமரையால் தாமோதரனைப் போற்றிடவே

    தாள்பணிந்த யானையின் கால்பிடித்த முதலையின்

    நாள்முடிக்க ஓடிவந்தான் உலகாளும் பரந்தாமன் !

     

    கரம்கூப்பி வேண்டுகின்றேன் கண்ணனே காத்திடுவாய்

    காரிருள் வாழ்க்கையிலே கதிரொளியாய் வந்திடுவாய்

    காததூரம் நீயிருந்தும் காதுகொடுத்தே  கேட்டிடுவாய்

    காலங்கள் கடந்தவனே கற்பனைக்கும் இனியவனே !

     

     

     

    Share
  • உன்னை ஊடுருவி நோக்குகிறேன்!

     

    உன்னை ஊடுருவி நோக்குகிறேன்!

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++

    unnamed

    உன்னை ஊடுருவி நோக்குகிறேன் !

    சென்ற தெங்கே சொல் ?

    உன்னை அறிந்ததாய் எண்ணினேன்,

    உன்னைப் பற்றி

    என்ன தெரியும் எனக்கு ?

    வேறாகத் தெரிய வில்லை !

    ஆயினும்

    மாறி விட்டாய் நீ !

    உன்னை ஊடுருவி நோக்குகிறேன் !

    முன்பு போல் இல்லை நீ.

    உன்னுதடுகள் ஏதோ முணுமுணுக்கும்,

    என் செவிகள் கேளா !

    மென்மை யானது உனது குரல் !

    ஆயினும்

    தெளிவாய் இல்லை வார்த்தைகள் !

    வேறாகத்

    தெரியவில்லை நீ !

    திருவிளை யாடலை நானும்

    கற்றுக் கொண்டேன் !

    உன்னை ஊடுருவி நோக்குகிறேன் !

    மாறி விட்டாய் நீ.

    ஏன் என்று சொல்,

    என்னை நீ

    ஏன் முறையாய் நடத்த வில்லை ?

    காதலுக்கு கெட்ட பழக்கம்

    உண்டு;

    காணாமல் போகும் இரவில் !

    பழைமை வாதியாய்

    நீ என்னை,

    நினைத்து வருகிறாய் !

    ஒரு காலத்தில் மேல் நிலையில்

    இருந்தவள் நீ,

    ஆனால் அப்படி நீ இன்றில்லை.

    ஒரு முரண்பாடு

    கீழ்நிலையில் மாறி விட்டாய்

    நீ யென்று

    உன்னை ஊடுருவிச் சொல்கிறேன் !

    ++++++++++++++++

    Share
  • பெண் குழந்தையைப் பேணுவோம்

     
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

    சின்னஞ் சிறிய செல்லக் கிளியே
    உணர்ந்து கொள்ளம்மா – உலகை
    உணர்ந்து கொள்ளம்மா!

    அன்னை தந்தை வாரி அணைத்தால்
    அமைதி அடையுமே – உள்ளம்
    அமைதி அடையுமே! – ஓர் அன்னியன் அப்படிச் செய்தல் தவறென
    உணர்வு சொல்லுமே – உன்
    உணர்வு சொல்லுமே!

    கொடிய நோக்கம் கொண்டோன் என்றால்
    சொல்லி விடம்மா – தாயிடம்
    சொல்லி விடம்மா! – உடனே
    அவனை விட்டு தூர விலகி
    ஓடி விடம்மா – நீ
    ஓடி விடம்மா!

    உரிய பருவம் அடையும் போது
    மாற்றம் நிகழுமே – உடலில்
    மாற்றம் நிகழுமே! – இது
    இயற்கை அளிக்கும் இனிய பரிசு
    அஞ்சி விடாதே – நீயும்
    அஞ்சி விடாதே!

    உன்னத உடலை மறைத்துக் கொள்ளவே
    ஆடை அணிகலன் – உனக்கு
    ஆடை அணிகலன்! – அதை
    உணர மறந்து கவர்ச்சிப் பொருளாய்
    ஆகி விடாதே – நீ
    ஆகி விடாதே!

    கொடிய உலகின் தன்மையைப் புரிந்து
    நடந்து கொள்ளம்மா – நீயும்
    நடந்து கொள்ளம்மா!
    கடிய பாதை அனைத்தையும் கடந்து
    வெற்றி கொள்ளம்மா – உலகை
    வெற்றி கொள்ளம்மா!

    – ஆ. செந்தில் குமார்.

    Share
  • உறவாகிய யோகமும் போகமும் உயிராளீ

    -முனைவர் இரா. மதன் குமார் 

    முன்னுரை

    உயிர்கள், சார்ந்ததன் வண்ணமாய் விளங்கவல்லவை. அவை, மும்மலங்களின் தொடர்பால், நிலையில்லாத உடம்பே, தாம் என மயங்குகின்றன; உடம்பின் வழியே  பெண்ணின்பமே பெரிதென அழிகின்றன. உயிர்கள் இவ் அறியாமை நீங்கி, கண்டு, கேட்டு, உண்டு, உய்த்து, உற்று அறிதலாகிய பேரறிவு ஐந்தாலும்,   தலைவனாகிய இறைவனை உணர்ந்து, ‘திருவடி இன்பமே பேரின்பம்’ என்னும் ஞானநிலையினை எய்தவேண்டும். அதற்கு, ‘உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்’ என்னும் பெருநிலையில், புலன்இன்பங்களைப் பேரின்ப நெறிக்குரியதாகப் பண்படுத்திக் கொள்ளவேண்டும். அளவுகடந்த புலனின்ப நாட்டத்தை, இறைவன்பால் மடைமாற்றம் செய்கின்ற முயற்சியாகவே, சமயக்குரவர், சந்தானக் குரவர் முதலான அருளாளர்கள், தமது திருப்பதிகங்களில் அகத்துறையினையும் பாடுபொருளாகக் கொண்டு பாடியுள்ளனர்.  அவ்வகையில், ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்களுள் ஒருவராகிய திருமாளிகைத் தேவரது, ‘உறவாகிய யோகமும்’ என்ற திருப்பதிகம் பேரின்பப் பெருநெறி காட்டுகின்ற திறத்தை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    அருள்துறையுள் அகத்துறை

    திருமாளிகைத்தேவர்தம் அருளியல் வாழ்வானது, தில்லைத்திருத்தலத்துடன் மிகநெருங்கிய தொடர்புடையது. அவர் அருளியதாக உள்ள நான்கு திருப்பதிகங்களும், தில்லைத் திருத்தலத்திற்கு உரியவையாக விளங்குகின்றன.  அவற்றுள் மூன்றாவது திருப்பதிகம், அகத்துறைப் பொருண்மையில் அமைந்துள்ளது. இத்திருப்பதிகத்தில், ‘காமப்பகுதி கடவுளும் வரையார்’ என்கின்ற நோக்கில்,  இறைவனுக்கான அருள்துறையினைப் பாடுவதற்கு அகத்துறையும் பாடுபொருளாக அமைந்துள்ளது. அகத்துறை வழியே அருள்துறையைப் பாடுங்கால், சிற்றின்பநிலைப் பொருண்மைகள், திருவருள் தொடர்புடைய தத்துவநிலைகளாக, உள்ளுறைப் பொருள் தருவனவாக அமைகின்றன.

    இத்திருப்பதிகத்துள், தலைவனாக,  பரம்பொருளாகிய சிவபெருமானும், தலைவியாக,  பக்குவ ஆன்மாவும் வைத்து உணரப்பெறுகின்றனர். பதிகப் பொருண்மை அளவில், மணிவாசகப்பெருமானால் தில்லையில் அருளிச்செய்யபட்டதாகிய, ‘கீர்த்தித் திருஅகவல் மற்றும் போற்றித் திருஅகவல்’ முதலான திருப்பதிகப் பொருண்மைகள், சிவனார் பெருந்திறமாக விரித்துரைக்கப்பெற்றுள்ளன.

    நாதாந்தத்துக் குணக்குன்று

    பெருமானே, அண்டத்திலும், பிண்டத்திலும் நாதாந்தக் கூத்தாடி அனைத்தையும் இயக்குகின்றான். அத்துடன், தத்துவங்களின் முடிவாகிய நாததத்துவத்தையும் கடந்த பரத்துவம் கொண்டும் விளங்குகின்றான்.  “நாதாந்த நாடகத்தை நன்றாய் அருள்செய்தீர்” (உண்மை விளக்கம்: பாடல்:39) எனப் பெருமானின் தத்துவாதீதப் பரத்துவம் போற்றப்பெறும். ஓயாத அவனது அருள்கூத்தினாலேயே, அண்டம், பிண்டம் ஆகியவை இயங்குகின்றன. ஞானாகாசப் பெருவெளியில் அணுவுக்கும் அணுவாக இருந்து ஆடி ஆட்டுவிக்கின்ற பெருமான், அனைத்துயிர்களிலும் உயிர்ப்பாக இருந்து அவற்றையும் ஆட்டுவிக்கின்றான்.

          “தில்லை மூதூர் ஆடிய திருவடி
           பல்லுயிர் எல்லாம் பயின்றனவாகி
           எண்ணில் பெருங்குணம் எழில்பெற விளங்கி…” (திருவாசகம்: கீர்த்தித் திருஅகவல்: அடிகள்: 1-3) என்பது, மணிவாசகரின் அருள்வாக்கு.   இவ்வாறு, அருமையாம் பெருந்திறமும், எளிமையாம் கருணைத்திறமும் ஒருங்கே விளங்குகின்ற பெருமானை மேலும் போற்றுபவராக மணிவாசகர்,
    “அருமையில் எளிய அழகே போற்றி”   (திருவாசகம்: போற்றித் திருஅகவல்: அடி: 126) எனக் குறித்தருளியுள்ளார்.

    குணமும் குறியும் கடந்த பெருமான், தன்னை உயிரறிவுக்கு உணர்த்தி அருளவேண்டி, குறித்த குணமும், குணப்பொருளாகவும் எழுந்தருள்கின்றான். எனவே திருமாளிகைத்தேவர், பெருமானை இத்திருப்பதிகத்தின், அனைத்துத் திருப்பாடல்களிலும் ‘குணக்குன்றே’ என விளித்து மகிழ்ந்துள்ளார். அத்துடன், பெருமானின் அருமை, எளிமை ஆகிய இருவேறு பெருங்குணங்களையும் நமக்கு உணர்த்தத் திருஉள்ளம் கொண்டுள்ளார். அத்திருக்குறிப்புடன், ‘கயிலை மலைப்பெருமானே, தில்லையில் அருள்கூத்தனாக விளங்குகின்றான்’ என்று அருளிச்செய்துள்ளார். மேலும், கயிலை மலையில், பெருமான்,  உமையம்மைக்கு, ஆகமப் பொருளை உபதேசித்தருளிய பாங்கினையும், காடுறை வேடனென உமையோடும் கானகத்தில் நடந்தருளிய அருங்கருணையையும், சங்காரகாரணனாகிய பெருமானின் பரத்துவத்தை விளக்குகின்ற திருநீற்றுப்பொலிவழகையும் இப்பதிகத்துள் எடுத்தாண்டுள்ளார்.

    உறவாகிய யோகமும் போகமுமாய் உயிராளீ

    இத்திருப்பதிகமானது, ‘உறவாகிய யோகமும்’ எனத் தொடங்குகிறது. ‘ உறவு – யோகம் – போகம் – உயிராளீ’ என்பது பதிகத்தின் முதற்தொடராகும். உறவாவது, உயிர், ஞானநெறி வழியே இறைவனுடன் கொள்கின்ற பிரிவறியாத திருவருளுறவாகும்; திருவருளுறவின் வழியே இறைவன் மீதான பற்று நீங்காது, அவனுடன் ஒன்றியிருத்தலே யோகமாகும்; போகமாவது, இன்பம் நுகர்தல். அந்நிலையானது,

                “வாக்கிறந்த அமுதம் மயிர்க்கால் தோறும்
                தேக்கிடச் செய்தனன்…
                அற்புதமான அமுத தாரைகள்
                ஏற்புத் துளைதொறும் ஏற்றினன்” (கீர்த்தித் திரு அகவல்: அடிகள்170-171, 175-176) என்றமைகின்ற பேரின்ப அனுபவமாகும். இவ்வாறு, உயிர்களின் உறவாகவும், யோகமாகவும், போகமாகவும் இருந்து,  உயிர்களை ஆள்கின்ற பசுபதியாக பெருமானைப் போற்றித் திருமாளிகைத்தேவர்,  இப்பதிகத்தைத் தொடங்கியுள்ளார்.

    புரம் செற்ற சிலைகொண்ட வில்லாளி
    தனது மகளது நிலைக்கு இரங்குகின்ற செவிலித்தாயின் கூற்றுகளாக அமைந்துள்ள இப்பாடல்களில், அருச்சுனருக்குப் பாசுபதப் படைக்கலம் அருளவேண்டி, வேடுவக்கோலம் ஏற்றுவந்து, பெருமான் புரிந்த திருவிளையாடல் போற்றியுரைக்கப்பெற்றுள்ளது. இவ்வரலாற்றினைக் குறிக்கின்ற முதலாவது திருப்பாடலில், பெருமான், முப்புரத்தை எரிஅம்பு செலுத்தி அழித்தொழித்த வில்லுடன், கானகத்தில் பன்றியை வீழ்த்தத் துரத்தி நடந்ததாகக் குறிக்கப்பெற்றுள்ளது.

                 “சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்
                  சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற
                 மறவா”  (உறவாகிய யோகமும்: பாடல்: 1)

    என்றமைந்த தொடர்களில்,  ‘முப்புர அழிப்புக்காக, பெருமான் கைக்கொண்ட வில்லுடன், அருச்சுனருக்கும் அருளவந்ததன் காரணத்தைத் திருமாளிகைத்தேவர் உள்ளுறைப் பொருளாக விளக்கியுள்ளார். “முப்புராதியர்கள், பெறுதற்கு அரிய பேற்றினைப்பெற்ற ஆணவத்தால் பெருமானை மறந்து, மண்ணுயிர்களுக்குத் தீமையினை மட்டுமே செய்து துன்புறுத்திவந்தனர். பெருமான் அவர்களது அறியாமையினை அகற்றி அருளவேண்டி, எரியம்பினை எய்து முப்புரங்களை அழித்தொழித்தார். அது பெருமானது மறக்கருணைக்குச் சான்றெனலாம். முப்புராதியர்கள் தாம்பெற்ற உயர்ப்பேற்றினை மறந்ததும் அன்றி, தமக்கு அவ் உயர்ப்பேற்றினைத் தந்தருளிய பெருமானையும் மறந்து மயங்கினர்.

    பேறு தந்தருளிய பெருமானை மேன்மேலும் மறவாது வழுத்துதல், நம்மைக் குறையாத திருவுடையாராக விளங்கச்செய்யும். ஆனால், மலமறைப்பாகிய அறியாமையில் ஆழ்ந்த முப்புராதியரிடத்தில், ‘தாம் பெற்ற பேற்றிலும் இனிப் பெறத்தக்க பேறு எவையும் இல்லை’ என்று மயங்குகின்ற அறியாமையே விளைந்தது. அதனால் அவர்கள், ‘சிறவாதவர்’ என்று ஆசிரியரால் இகழ்ச்சிப்பொருளில் சுட்டப்பட்டுள்ளனர்.  அத்தகைய இகழ்ச்சிச் சுட்டு, மனித உயிர்களாகிய நமக்கும் பொருந்துவதாகும். காரணம், நமக்குப் பெருமானால் அருளப்பெற்ற பிறப்பின் பெரும்பயனை நாம் உணராமல், வாழ்நாளை வீணே கழிக்கின்றோம். அத்தகைய அறியாமையினை உணர்த்தி, பெருமானைப் பற்றி உய்ய, அருச்சுனனின் பக்தித்திறத்தையும், பெருமான் அவர்க்கு இரங்கியருளிய திறத்தையும் பதிகப்பொருண்மையாக, திருமாளிகைத்தேவர் எடுத்தாண்டுள்ளார்.

    நெடும்பகல் நடந்த வேடர்

    அடியவர்’ என்பதை மறந்தவர்களுக்காக நிகழ்த்திய முப்புர எரிப்பில், பெருமானின் அளப்பரும் வீரத்தின் வெளிப்பாடாகிய மறக்கருணை வெளிப்பட்டது எனலாம். ஆனால், அருச்சுனரோ, பக்குவநிலை கொண்ட அடியவராகப் பெருமானை நோக்கித் தவமியற்றினார். அதனால், அருச்சுனருக்கு அருளவேண்டிப் பெருமான், காடுறை வேடனென வந்தருளினார். அந்நிலையில், அவர்தம் தாயின் நேர் தயாகுணமும், தாம் புண்சுமந்தேனும் அடியவர்க்கு அருள்கின்ற அருட்கருணையும் விளங்கக்காணலாம்.

    “முகாசுரன் என்னும் அசுரன் அருச்சுனரைக் கொல்லவந்த வேளையில், அவ்அசுரனிடமிருந்து அருச்சுனனைக் காப்பதற்கு பெருமானே, வேடுவக் கோலம் தாங்கினார். அவர் வேடுவக்கோலம் தாங்கி, தாம் மட்டும் தனியே நடவாமல், வேடுவச்சியாக அம்மையையும் உடன்அழைத்துவந்து, திருவடிகள் நிலந்தோயும் வண்ணம், நெடும்பகல் நடந்தார்” எனத் திருமாளிகைத்தேவர் பெருமானின் வேடுவத் திருவிளையாடலைக் குறித்தருளியுள்ளார்.

                “வண்டார் குழல்உமை நங்கை முன்னே
                  மகேந்திரச் சாரல்  வராகத் தின்பின்
                 கண்டார் கவலவில் லாடி வேடர்
                  கடிநா யுடன்கை வளைந்தாய்”   (உறவாகிய யோகமும்: பாடல்:6)

    காடாடு பல்கணம் சூழக் கேழற்
                  கடும்பின் நெடும்பகல் கான்நடந்த
                  வேடா”         (உறவாகிய யோகமும்: பாடல்:2)

    கானகத்தில் நெடும் பகல்பொழுது முழுவதும் கழிய நடந்தநிலையில், பெருமானின் எளிவந்த கருணை விளங்குகிறது.

    அருச்சுனருக்கு அருளவேண்டி, அன்று கானகத்தில் திருவடிதோய நடந்த பெருமான், இன்று தனக்கு அருளவேண்டிப்  பலகாலும் வருந்தி அழைத்தும் வாரமையைக் கண்டு, தலைவி ஆற்ற இயலாமல் புலம்புவதாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

              “சேவேந்து வெல்கொடியானே என்னும்
                   சிவனே என் சேமத் துணையே என்னும்
              மாவேந்து சாரல் மகேந்திரத்தின்
                   வளர்நாய காஇங்கே வாராய் என்னும்”                 (உறவாகிய யோகமும்: பாடல்: 8)

    நாதாந்த பதம் நல்கும் தனிநாயகன்

         பெருமானது வேடுவக் கோலப்பொலிவழகு, திருமாளிகைத் தேவரின் சொல்லோவியமாக, வேடன் ஒருவனையே நமது கண்முன்னர் கொண்டுவந்து நிறுத்துகின்ற சிறப்புடையது. ‘சுடுகாட்டின் பல்பூதங்களும், வேற்றுருக் கொண்டுப் பெருமானைப் பின்தொடர்ந்தன;  வேடுவனாகிய பெருமான், விரைந்து பறை ஒலிக்கவும், அம்பினை விரைந்து செலுத்தவல்ல வலிய வில்லையும், அம்பையும்  கையில் ஏந்தியதுடன், குறுவாளும் உடன்இருக்க, கல்லைச் செலுத்தப் பயன்படுவதாகிய கவண்கருவி ஆகியவற்றுடன்,  வெற்றிக்குரிய ஆரவாரம் சிறிதும் குறையாமல், சீழ்க்கை ஒலி எழுப்பிப் பன்றியின் பின்னால் விரைந்து நடந்தார். அவர், இடுப்பில் புலித்தோலாடையினைப் புனைந்தும், திருவடியில் தோல் செருப்பினை அணிந்தும் வந்தார்’ என்று பெருமானின் வேடுவக்கோலப் பொலிவழகு, திருப்பதிகத்தின் ஏழாம் திருப்பாடலில் சிறப்புறச் சுட்டப்பெற்றுள்ளது.

    நாததத்துவத்தையும் கடந்த அரும்பொருளாகிய பெருமான், தன் அடியவருக்கும் அத்தகைய பெருநிலையினை அருளவல்லவர். வேண்டுவார் வேண்டுவதை ஈவதையே இயல்பெனக் கொண்ட பெருமானிடத்தில், நாதாந்த பெரும்பேற்றினை விழைந்தவர், திருமாளிகைத்தேவர். அன்று அருச்சுனருக்கு எளிவந்த கருணையுடன் நாடிவந்து அருளியவகையில், தமக்கும் நாதாந்த பெரும்பதத்தை அருள, பெருமான் இரங்கியருளவேண்டும் என்ற வேண்டுதலே,

               “கடுப்பாய்ப் பறைகறங் கக்கடுவெஞ்
    சிலையும் கணையும் கவணும் கைக்கொண்
      டுடுப்பாய தோல் செருப் புச்சுரிகை
    வராகம்முன் ஓடு விளிஉளைப்ப
                              நடப்பாய் மகேந்திர நாத நாதாந்தத்
    தரையாஎன் பார்க்குநா தாந்தபதம்
                              கொடுப்பாய் என் னும் குணக் குன்றே என்னும்
    குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே”                (உறவாகிய யோகமும்: பாடல்: 7) என்னும் திருப்பாடலாக அமைந்துள்ளது.

    குருவாக வந்தருளாயோ

    நாதாந்தப் பெரும்பேற்றினை அருளவேண்டிய திருமாளிகைத்தேவர், ‘குருவே சிவம் எனக் கூறினன் நந்தி’ என்னும் பெருமொழிகளை நினைகின்றார். கயிலையில்,  மலைமகளுக்குக் குருவாகி, ஆகமப்பொருளை அன்று விரித்துரைத்த பெருமான், திருமால் முதலான தேவர்களுக்கும் குருவாக விளங்கியவர்.

                 “மகேந்திரப் பொன்மலையில் மலைமகளுக்கருளும் குரு” (உறவாகிய யோகமும்: பாடல்: 10)

                 “சுடர்நீள் முடிமால் அயன் இந்திரன் முதல் தேவர்க்கெல்லாம் குரவா”                                                     (உறவாகிய யோகமும்: பாடல்: 9) என்று பெருமானின் ஞானாசிரியநிலையைப் போற்றுகின்றவேளையில், அவரே  தனக்கும் குருவாக எழுந்தருளுதற்குப் பேராவல் கொள்கின்றார். ‘பசுபதியாகிய பெருமானைப் பற்றுதற்கு பசுநூல் ஓதுவிக்கும் அறியாமை மிக்க குருவால், உயிரறிவு எள்முனை அளவும்கூட விளக்கம்பெறாது’ என்பது அவர்தம் ஞானத்தெளிவு. அத்தகைய கீழோரைக் கண்ணால் காண்பதையும், அவருடன் உரையாடுவதையும் தாம் புரியேன்’ என்பதனைத் திருமாளிகைத்தேவர்,

     “கயவரைப் பசுநூல் கற்கும்
     பிச்சரைக் காணா கண்வாய்
           பேசாதப் பேய்க ளோடே”                             (இணங்கிலா ஈசன்: பாடல்: 9)

    என உறுதிபடச் சாற்றியுள்ளார்.  பற்றாகவும், பற்றப்படுகின்ற பொருளாகவும், அதனைப் பற்றுதற்குரிய வழியாகவும், வழித்துணையாகவும், பெருமானே விளங்குகின்ற நிலையினைத் திருமந்திரம், ‘காண வல்லார்க்குக் கண்ணின் மணி’ (திருமந்திரம்: 2823) என உணர்த்துகிறது. அவ்வகையில், பெருமானே தமக்குக் குருவாக இரங்கியருளவேண்டும் என்பதனைத் திருமாளிகைத்தேவர்,

               “நெறியே என்னும் நெறிநின்றவர்கள்
                           நினைக்கின்ற நீதிவே தாந்தநிலைக்
                       குறியே”     (உறவாகிய யோகமும்: பாடல்: 4)                          என்றும் குறித்தருளியுள்ளார்.

    உமையம்மைக்கும், தேவர்களுக்கும், சனகாதி முனிவர்களுக்கும் அமைந்த அருள்பக்குவநிலையால், அவர்கள் பெருமானையே குருவாகப் பெற்றுய்ந்தனர்; அத்தகைய பக்குவநிலையில், பெருமானையே நினைந்துருகி, அவனது பெரும்பெயராம் திருவைந்தெழுத்தை ஓதிக் கரைந்து, குறையாத பேரன்பில் பெருகி, பிறவிப்பிணி தீர்க்கின்ற திருநீற்றுப் பொலிவுடன் திகழ்வதாகிய தம் பக்குவநிலையினைத் திருமாளிகைத்தேவர் அகத்துறைப் பதிகத்தில் உள்ளுறைப்பொருளாகக் குறித்தருளியுள்ளார்.

                    “உற்றாய் என் னும் உன்னை யன்றி மற்றொன்
                 றுணரேன் என் னும் உணர் வுள்கலக்கப்            பெற்றாய ஐந்தெழு த்தும்பிதற்றிப்
                             பிணிதீர் வெண் ணீறிடப் பெற்றேன் என்னும்
                சுற்றாய சோதி மகேந்திரம் சூழ
                    மனத்திருள் வாங்கிச்சூ ழாத நெஞ்சில்
                குற்றாய் என் னும் குணக் குன்றே என்னும்
                    குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே”                 (உறவாகிய யோகமும்: பாடல்:11)
    என்றமைந்த திருப்பாடல், பேரருள் விழைவில் தன்வயமிழந்த தலைவியின் நிலையாக, திருமாளிகைத்தேவரின் அருள்பக்குவநிலைக்குச் சான்றாகிறது.

    பேரருள் திளைப்பில் சீவன்முத்தநிலை

     ‘சிவமே பெரும்பொருள்’ என்றும், ‘திருவருளே பெரும்பொருள்’ என்றும் தெளிந்தவராகிய திருமாளிகைத்தேவர், திருவருள் நிலைப்புக்குக் காரணமாகிய அடியார் இணக்கத்தையே விழைகின்றார். அதனால், ‘பூசுவதும் திருநீறு, பேசுவதும் பெருமானின் திருப்புகழாம்’ என்று விளங்குகின்ற உயர்அடியார் உடனான இணக்கத்தையே நாடுபராக,  ‘திருநீறிடா உருத்தீண்டேன்’ என்று குறித்தமைகின்றார்.

    அடியார்களுடனான இணக்கம், தம்மைச் சிறுபொருளாகக் கருதி, தான் என்கின்ற ஆணவச் செயல்பாட்டை மறக்கச்செய்யும்; தம்மை மறந்து, பெருமானையே பெரும்பாருளாகக் கருதி அவரைப் பற்றுகின்றநிலையில் பித்தேறி, உயிர் தனது சுற்றுப்புறத்தை முற்றிலும் மறக்கும். தானும் சிவமும் ஒன்றாக, ஏகபோகமாகக் கலந்த பேரின்பநிலையாக அது விளங்கும். அப் பெருநிலையில், பெருமான் உவப்பவையே தனக்கும் உவப்பாகக்கொண்டு, காண்பன யாவற்றையும் சிவமாகக் கண்டும், பூண்பன யாவற்றையும் சிவமாம் தன்மைக்குரியதாகப் பூண்டும், தன்னைச் சிவமாகவே உணர்கின்ற பேறும் உயிர்க்கு வாய்க்கும். அத்தகைய பெருநிலை கைவரப்பெற்றவராகத் திருமாளிகைத்தேவரும் விளங்கினார். அவர்தம் அருளனுபவப் பேறு,

                “திருநீறிடா உருத் தீண்டேன்”    உறவாகிய யோகமும்: பாடல்: 10) என்ற உறுதிமொழியாக, அடியார் கூட்டத்துடனான அரும்பேற்றுக்கு வழிகாட்டுகிறது.

    மேலும், ‘உற்றாய் என்னும்’ என்ற பதினொன்றாம் திருப்பாடலில், ‘செம்மை மனத்துத் திருஅடியார்’ எனத் தலைவி விளங்குவதன் அடையாளமாக அவள், ‘திருநீற்றுக் கவசம் புனைந்துள்ளாள்’ எனச் சுட்டப்பெற்றுள்ளது. அத்துடன், திருநீறு புனையாதவரைப் பாவி எனக் கருதுகின்ற குறிப்பும் அமைந்துள்ளது. திருமாளிகைத்தேவர், ‘பெருமானின் திருமேனி, திருநீறால் பொலிந்திலங்குகின்ற பேரழகைத் தம் அகக்கண்ணால் கண்டின்புற்றவர்’  எனலாம். அவ்அருளனுபவப் பதிவே, அவர் பெருமானை, ‘நீறணி பவளக்குன்றமே’ (ஒளிவளர் விளக்கே:பாடல்: 6) என்று போற்றிப்பாடியுள்ள நிலையாகும். பெருமானிடத்தில் பொலிகின்ற திருநீறு முதலான சிவச்சின்னங்கள்  மக்கள்தம் அறியாமைநோய்க்கு மருந்தாகின்ற திறத்தை, திருஞானசம்பந்தர் முதலானோர் திறம்பட உணர்த்தியுள்ளனர். அந்நெறிவழியே திருமாளிகைத் தேவரும், ‘அரனடியார்கள், உலகின் தீமைகளை நசித்து ஒழிக்கவேண்டித் திருநீறு தரிக்கின்றார்கள்’ என ஏற்றிப் போற்றியுள்ளார்.

                      “தீய நசிக்க வெண்ணீறதாடும் நமர்கள்”                              (இணங்கிலா ஈசன், பாடல்: 5)

    அரனடியார்களது பெருநோக்கத்தை உணராத மக்கள், திருநீறு முதலான சிவச் சின்னங்களையும் தரிக்க வாய்ப்பற்று, பெருமானை உணர்கின்ற பெருநெறிக்குத் தலைப்படுவதும் அரிதாகும். அவர்கள் திருநீறு பொலிகின்ற அரனடியார்களை, அரனாகவே கண்டு வழிபடுகின்ற பக்குவநிலைக்கும் தலைப்படார். மக்கள், அடியார் கூட்டத்துடனான இருப்பினாலும்,  திருநீறு முதலான, சிவவேடப் பொலிவினாலும், பக்திநெறியில் மேம்பட்டுய்ய வேண்டும். இவ்அருநெறியினை உணர்த்தவே தலைவி, திருநீறு தரியாதவரைத் தான் ஒருபோதும் நாடேன்’ என்று உறுதிபடக் கூறுவதாகத் திருமாளிகைத் தேவரால் விளக்கப்பட்டுள்ளது.  

    முடிவுரை
    ‘உறவாகிய யோகமும்’ என்று தொடங்குகின்ற இத்திருப்பதிகமானது, ஐந்து பேரறிவும் பேரின்ப நெறியில் செல்ல வழிகாட்டுவதாகும். அனைத்து திருப்பாடல்களும் தில்லை அம்பலவனுக்காகத் தலைவி இரங்குகின்ற நிலையினைக் குறிப்பதாக அமைந்துள்ளன. பசுக்களாகிய ஆருயிர்கள், பதியாகிய பெருமானை அடைவதற்குக் கொள்கின்ற பேரின்பஆவலை இத்திருப்பாடல்கள், பேரின்பப் பொருள்கொண்டு விளக்குகின்றன.

    தில்லை அம்பலவன், ஆருயிர்க்கு நாதாந்தப் பெரும்பேறு நல்கவல்ல நாதாந்தக் கூத்தினை ஆடியருள்கின்றான். பெருமானின் பெருங்கருணைத் திறமே, அவனது கூத்தாக அமைகிறது எனத் திருமந்திரம், பெருமானது திருக்கூத்துக்கான தத்துவத்தை விளக்கியருளும். அத்தகைய தத்துவத்தை மேலும் எளிமையுற விளக்கவேண்டியே திருமாளிகைத்தேவர், அம்பலத்துக் கூத்தனாகிய பெருமான், அருச்சுனருக்கு அருளவேண்டி, வேடுவக்கோலம் தாங்கி வந்ததாக  இப்பதிகத்தில் எடுத்தாண்டுள்ளார். அத்திருப்பாடல்களின் வழியே புலனாகவல்ல பெருமானின் வேடுவக்கோலம், உள்ளக்கிழியில் அவன் உருவைப் பலகாலும் எழுதிப்பார்த்து, பெருமானே, ‘புவன போகமும், யோக வெள்ளமும்’ என உணரச்செய்யும்; அவ் அன்பின் விரிவு,  அண்டத்திலும், பிண்டத்திலும் பெருமான் இருந்தாடுகின்ற பெருங்கூத்தினை, அகக்கண் கொண்டு தொழுதுய்ய வகைசெய்யும்.

    ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்:

    1. ஒன்பதாம் திருமுறை, டாக்டர் இராச. வசந்தகுமார் (ப.ஆ), பன்னிரு திருமுறை ஆய்வுமையம்,

    கற்பகம் உயர்கல்விக் கலைக்கழகம், கோயம்புத்தூர் -21. முதல் பதிப்பு: ஏப்ரல்: 2016.

    1. திருவாசகம், சைவசித்தாந்தப் பெருமன்றம், சென்னை. நான்காம் பதிப்பு: 1999.
    2. திருமந்திரம், சிவ ஆ.பக்தவச்சலம் (ப.ஆ), “தமிழ் வேதம்” மாத இதழ், குடியாத்தம்.        வெளியீடு: 2007.

    *****

    கட்டுரையாளர்,
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    கற்பகம் உயர்கல்விக் கலைக்கழகம்,
    கோயம்புத்தூர் – 21.

     

    Share
  • சிதறும் சிறகுகள்

     

    அன்பு செலுத்துவதை
    வினோத குற்றமாய்
    நீ கருதுகிறாய்..!
    நீ வினோதமானவளென்பதாலே
    உன் மீது அன்பு செலுத்த நேர்கிறது.
    ——-
    தண்டனையாக
    இரண்டு நாட்கள் பேசாமலிரு என்கிறாய்.
    ம்ம்ம்
    இரண்டு நாட்கள் உயிரை விட்டுவிடென
    நீ சொல்லி இருக்கலாம்..!
    ———
    கடந்தக்கால ரணங்களை
    மறக்க
    நீ நடத்தும் நிகழ்கால செய்கைகள்
    எதிர்கால ஆபத்து என்கிறேன்.
    என் தோள் சாய்ந்து
    உனை காப்பாத்து என்கிறேன்.
    நீயென் அறிவுரையை
    காதலென திட்டுகிறாய்.
    காதலென்றாலும் அது தீட்டில்லையடி..!

    ஒன்று மட்டும் மறவாதே
    மறுமணத்தை வலியுறுத்திய
    பெரியாரின் பேரன் நான்,,!

    ——
    உன் விருப்பம் வேண்டாமா என்கிறாய்.
    நிச்சயமாக
    விருப்பமற்று விளைச்சல் ஏதுமில்லை.
    காத்திருக்கிறேன்
    எப்போது விருப்பம் கொள்வாய்…
    என் மீது…
    என் மீது மட்டும்..?
    அப்போது சொல்….

    மின் மயான
    தகன மேடையில்
    எரிந்துச் சாம்பலாகுமே
    அப்போதும் கூட
    நீ விரும்பினால் போதும்
    எரியும் என்னுடல்
    கொஞ்சம் குளிரும்..


    பெண்ணுரிமை ஆராதனைச் செய்பவன்
    ஒரு போதும்
    என்னுரிமை
    உன்னுரிமையில் தலையிடாது,

    —-
    சரி விலகி போ என்கிறாயா..?
    விலகி போகிறேன்.
    ஆனால்
    உன் நினைவுகளை
    நான் என்ன செய்ய…?

    —-
    முதலில் நீ சாதிக்க வழி தேடு என்கிறாய்.

    என் சாதனையே நீதானம்மா…!


    ம்ம்ம் உன்னிடமிருந்து விலகுவதுதான்
    உன் அடியாழ விருப்பமெனில்…
    இதோ விலகுகிறேன்

    உன்னிடமிருந்து

    விழி ஒளியில்
    கத்தி செய்துக்கொடு..
    இருதயத்தை வெட்டிக்
    கொடுத்து போகிறேன்.


    உன்னை அடைந்தே தீருவேனென
    நான் அடம்பிடிக்கவில்லை.
    உன்னை அடைவதில் தான்
    நான் தீருவேன்…!

    ”நான் இப்படித்தான்
    பிடித்தால் பழகு
    பிடிக்கலானா விலகு”
    என்கிறாய்…

    உன்னிடம் பிடித்ததே
    இந்த திமிர் தான் தேவதையே!

    -இரா.சந்தோஷ் குமார்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    திருப்பாவை -6

    171221 - Tiruppavai 06 - Hear the birds, wake up! #watercolour #KrishnaforToday lr
    171221 – Tiruppavai 06 – Hear the birds, wake up! #watercolour #KrishnaforToday lr

    ‘அழகாண்டாள் பாட்டு அழகாண்டாள் பக்தி
    பழகாண்டாள் போல்நீயும் பண்பு, -கழுகாண்டான்,
    கண்முன்னே தோன்றியுனைக் கல்யாணம் செய்திடுவான்
    பெண்கள்நாம் புருஷோத் தமர்க்கு’’….கிரேசி மோகன்….

    Share
  • தமிழ் இசைக் கல்வெட்டு

    பவள சங்கரி

    கொங்கு நாட்டின் மிகச்சிறப்பான ஒரு விசயம் என்றால் அது உலகின் முதல் தமிழ் இசைக்கல்வெட்டு!

    isai1

    isai
    ஈரோடு மாவட்டம், ஈரோடு – காங்கேயம் பாதையில் 12 கல் தொலைவில், அரச்சலூரில், அவல்பூந்துருத்திக்கு அருகில் அமைந்துள்ள பாண்டியர் குழி என்ற இடத்தில் உள்ள கற்குகையில் அமைந்துள்ளது அற்புதமான இந்த தமிழ் இசைக் கல்வெட்டு . இதன் அருகில் ஒரு, ஆண், பெண் உருவங்கள் பொறிக்கப்பட்ட கல்லும் உள்ளது. இதனைப்பற்றிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்கிறார் கல்வெட்டறிஞர் புலவர் இராசு அவர்கள்.

    IMG_20171221_132623484

    இந்தக் கல்வெட்டை முதலில் 1961 ஆம் ஆண்டில் கண்டு பிடித்தவர் கல்வெட்டறிஞர் புலவர் இராசு அவர்கள். கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கண்டறியப்பட்ட இந்தத்.தமிழ் கல்வெட்டு தொன்மைக்கால தமிழி எனும் எழுத்து பிற்காலத்தில் வட்டெழுத்தாக உருமாற்றம் பெற்றுள்ளதையும், , இசைத்தாள வரிசையைப் பதியும் முதல் ஆவணமாகவும் திகழ்கிறது. சங்ககாலத்திலேயே தமிழர்கள் தமிழிசைக் குறியீடுகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பதும் உறுதியாகிறது. இது சிலப்பதிகாரம் சொல்லும் சதுரப்பாலையைச் சார்ந்த இசைக்குறிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

    IMG_20171221_125239428

    பல்லடம் – காளிவேலம்பட்டியைச் சேர்ந்த தூரன் சு. வேலுச்சாமி என்பவர் இதனை ஆவணப்படமாக எடுக்க முயற்சி எடுத்துக்கொண்டுள்ளதும், இவர் ஏற்கனவே பெரியார் மற்றும் ராமானுஜர் ஆகிய திரைப்படங்களுக்கு களப்பணிகள் செய்துள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. என் ‘கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்’ என்ற நூல் பற்றிய சுவையான கலந்துரையாடலும் சிறப்பாக அமைந்தது.

    Share
  • அம்மன்!

    “செத்தால் மெய் சிலிர்க்கும்
    சுட்டால் (காட்டில் ) “நான்” பிறக்கும்
    இத்தால் சந்தேகம்
    இயல்பே உன்தேகம்

    அகந்தை பாடலும் ,சுகம்தை ஆடலும்
    புகுந்திட ஆன்மன் வரார்
    சரணாகதியோ ! மரணாகதியோ !
    சற்றே கண் அயர்ந்தால்
    உறுமோ சரணம் ! வருமோ மரணம் !
    உறக்கத்தை ஆள் நெஞ்செ ….!

    Share
  • மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -6

    க. பாலசுப்பிரமணியன்

     

    திருவஹீந்திரபுரம் (அருள்மிகு தேவநாதப் பெருமாள் )

    perumal

     

    கண்ணயர்ந்து பொழுதினிலும் கருணைதரும் கண்ணனைக்

    காலமெல்லாம் தொழுதிடவே கருநாகன் சேடனுமே

    காவிரிக் கரைதன்னில் ஆலயமே எழுப்பிடவே

    கானிருந்த முனிவரெல்லாம் கைகூப்பி நின்றனரே

     

    பாம்பணைமேல் படுத்தவன் பள்ளி எழுந்தான்

    பக்தர்களைக் காத்திடவே பேரொளியாய் நின்றான்

    பார்வையிலே மூவராகப் பிரிந்த தத்துவமே

    பாங்குடனே ஒன்றாகித் தந்தருளும் தரிசனமே !

     

    மரணத்தை வென்ற மார்க்கண்டேயன் மனம்மகிழ

    மாதவனும் வந்தானே தெய்வ நாயகனாய் !

    மாமுனியாம் மணவாளரும் மனமுருகி வேண்டிடவே

    மாலனும் மனமிசைந்து மகிழ்வோடு நின்றானே !

     

    அழகுக்கு அழகளிக்கும் ஆனந்தன் தேவநாதன்

    அழகுடன் ஆதிசேடன் ஆலயத்தில் நின்றான்

    அளவில்லா தாகத்தில் அச்சுதனும் நீர்வேண்ட

    ஆதிசேடன் வாலசைக்க வளர்ந்ததோர் கங்கையம்மா !!

     

    வான்பறந்த கருடனுமே மாமுனியின் கமண்டலத்தை

    வலுவாகத் தள்ளிடவே வளர்ந்ததங்கே வற்றாதநதியே !

    வந்தவினை தீர்ந்திடுமே வைகுந்தன் பார்வையிலே

    வந்தவரை வரதனவன் வளம்பெறுக வாழ்விப்பான் !

     

    சங்கோடு சக்கரத்தைக் கையேந்தி அவனிருக்க

    அங்கத்தை மலரோடு துளசியும் அலங்கரிக்க

    செங்கமலத் தாயும் மலர்மார்பில் உடனிருக்க

    மங்கலமே உன்னெழிலே மாதவனே போற்றிடுவேன் !

     

     

     

    Share